Jump to content

ஹிட்லர் சர்வாதிகாரியானது எப்படி?


Recommended Posts

1. ஹிட்லரின் விடுதலையும் அரசியல் தந்திரமும்!

ஹிட்லர் ஜெர்மனி தேசத்தின் ராணுவத்தில் சேர்ந்து முதல் உலகப்போரில் பங்கேற்றவன். ஜெர்மனியின் தோல்விக்கு யூதர்கள்தான் காரணம் என்று முடிவெடுத்தவன். முதல் உலகப்போர் முடிந்ததும் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தனர்.
 

hitler

 

 

உழைக்காமலும், யுத்தத்தில் பங்கேற்காமலும் உட்கார்ந்து தின்று கொழுத்த கூட்டம் என்று யூதர்களை நினைத்தான் ஹிட்லர். அப்போதைய ஜெர்மனி அரசை கைப்பற்றினால் சிதறிய பழைய பிரஷ்யா தேசத்தை அமைத்து, அகண்ட ஜெர்மனியை உருவாக்க முடியும் என்று ஹிட்லர் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தான்.

ஜெர்மன் தேசிய வெறியை ஊட்டுவதில் அவனுடைய பேச்சாற்றலும், அவனைப் பற்றிய போலி பிம்பமும் உதவியாக இருந்தது. அவனுக்கு உரை எழுதிக்கொடுக்கவும், பிரச்சாரங்கள் மூலம் அவனுடைய பிம்பத்தை காப்பாற்றவும் கோயபல்ஸ் என்ற பொய்த்தொழில் அமைச்சர் இருந்தார்.

ஜெர்மன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களைக் கொண்டு சிறிய கட்சியைத் தொடங்கிய ஹிட்லர், மக்களை எப்படி திசைதிருப்பி, நாட்டின் சர்வாதிகாரியானான் என்பதை மட்டும் சுருக்கமாக சொல்ல நான் எழுதிய ஹிட்லர் என்ற புத்தகத்தின் குறிப்பிட்ட சில அத்தியாயங்களை தருகிறேன்… இந்தியாவின் இன்றைய நிலையில் ஹிட்லரின் தந்திரங்களை அறிந்துகொள்ள இது உதவும் என்று நினைக்கிறேன்…

                                                     1.ஹிட்லரின் விடுதலையும் அரசியல் தந்திரமும்!
 

1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி. பவேரியா அரசாங்கத்தை கவிழ்க்க ஹிட்லர் திட்டமிட்டு அது தோல்வி அடைந்ததால் கைது செய்யப்பட்டு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால், 263 நாட்களிலேயே அவருக்கு விடுதலை உத்தரவு கிடைத்தது.

“உங்களுக்கான விடுதலை உத்தரவு வரும். அடுத்த இரண்டு ஆண்டுகள் உங்கள் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். மியூனிக் நகருக்கு பயணம் செய்ய அனுமதி உத்தரவு வழங்கப்படும். நாளை காலை எட்டுமணிக்கு சிறையிலிருந்து வெளியேறிவிட வேண்டும்”

1924 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு ஆறு நாட்களுக்கு முன் ராணுவ தலைவரின் அலுவலகத்திலிருந்து ஹிட்லருக்கு அழைப்பு வந்தது. அவர்தான் ஹிட்லரிடம் இப்படிக் கூறினார்.

ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஹிட்லர், 263 நாட்கள்தான் சிறையில் இருந்திருக்கிறார். எதற்காக முன்கூட்டியே அவரை விடுதலை செய்தனர் என்பதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை.

அடுத்தநாள் காலை எட்டுமணி 10 நிமிடம்.
 

hitler prison


ஹிட்லரும், ருடால்ப் ஹெஸும் சிறையிலிருந்து நீண்ட கோட்டும், தொப்பியும் அணிந்து பேப்பர் கட்டுகளுடன் சிறையிலிருந்து வெளியேறினர். அரை கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றனர். அங்கே ஹிட்லரின் கட்சி ஆட்கள் மெர்சிடெஸ் கார் ஒன்றுடன் காத்திருந்தனர்.

அந்தக் காரில் இருவரும் மியூனிக் நகருக்கு புறப்பட்டனர். அவர்களுடன் வந்த மூவரில் ஒருவர் ஹிட்லரின் தோழி, இல்ஸே புரோல்.

பின்னர், இவரைத்தான் ருடால்ப் ஹெஸ் திருமணம் செய்துகொண்டார்.

மதியம் மியூனிக் நகருக்கு வந்து சேர்ந்தனர். அவருடைய நண்பர்களுக்கு இது பெரிய வெற்றி. வெற்றியைக் கொண்டாட விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஹிட்லர் தனது வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக அன்றுதான் மது அருந்தினார்.

ஹிட்லர் சிறையிலிருந்த போது நாஜி கட்சிக்கு அரசு தடை விதித்திருந்தது. கட்சிப் பத்திரிகையும் மூடப்பட்டது. தலைவர் இல்லாத நேரத்தில் கட்சிக்குள் கோஷ்டிகள் உருவாகி இருந்தன.

ஹிட்லர் சிறையிலிருந்த சமயத்தில் அவருடைய சகோதரி ஏஞ்சலா ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஹிட்லருடைய தந்தையின் முதல் மனைவியின் மகள் இவர். லின்ஸ் நகரில் இருந்த சமயத்தில்,வீட்டை விட்டு வெளியேறியவர்.

தனது சகோதரன் ஹிட்லர் மிகப்பெரிய தலைவனாக மாறியிருப்பதை ஆஸ்திரிய செய்தித்தாள்களில் பார்த்துத் தெரிந்துகொண்டிருந்தாள்.

புரட்சியையும், அதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டதையும் அறிந்து அவள் கடிதம் எழுதியிருந்தாள்.

அதற்கு அவர் பட்டும்படாமலும் பதில் எழுதியிருந்தார். அடுத்து அவள் எழுதிய கடிதத்திற்கு பதில் எழுதவில்லை.

சிறையிலிருந்து வெளியேறிய ஹிட்லர் மக்கள் வாழ்க்கை முறை முற்றிலும் மாறியிருப்பதைக் கவனித்தார். அவர்கள் சந்தோஷமாக இருந்தார்கள். எல்லோரும் வேலைக்கு போய் சம்பாதித்தனர்.

ஹிட்லர் சிறைக்கு போவதற்கு முன் ஒரு தபால் ஸ்டாம்ப் வாங்குவதற்கு ஐந்தாயிரம் கோடி மார்க் தரவேண்டியிருந்த தரித்திர நிலை இப்போது இல்லை.

மார்க் பழைய மதிப்பைப் பெற்றிருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகம் மக்கள் மத்தியில் வெளிப்படையாக தெரிந்தது. தன்னால் மட்டுமே ஜெர்மனியின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், ஜெர்மானியர்களின் வேலையையும் பாதுகாப்பையும் உத்தரவாதப் படுத்தமுடியும் என்றும் ஹிட்லர் பேசிவந்தது கண்ணெதிரே பொய்யாகிப் போனது எவ்வாறு?

அவருக்கு புரியவில்லை.

“எப்படி... இது எப்படி சாத்தியம்? நான் சிறையில் இருந்த போது என்ன நடந்தது?”

நண்பர் ஹன்ப்ஸ்டாங்கிலிடம் கேட்டார் ஹிட்லர்.

“நீங்கள் அமெரிக்காவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஜெர்மனியின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அவர்கள்தான் ஏராளமான முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டியுள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் 50 சதவீதம் குறைந்துள்ளது. வறுமை பெருமளவு நீங்கிவிட்டது.”

என்றார் ஹன்ப்ஸ்டாங்கில்.

“நமது விவகாரங்களில் அமெரிக்கர்கள் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? இதை நாம் எப்படி திருப்பித் தரவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்?”

ஆத்திரமாக கேட்டார் ஹிட்லர்.

ஜெர்மனியால் இதைத் திருப்பித்தர முடியாது என்பது அமெரிக்காவுக்குத் தெரியும். முதல் உலக யுத்தத்தில் ஜெர்மனி தோற்பதற்கு அமெரிக்க யூதர்கள்தான் காரணம் என்று ஜெர்மானியர்கள் இன்னமும் நம்புகிறார்கள். அவர்கள் கொள்ளையடித்த ஜெர்மானிய சொத்துக்களை இப்படி முதலீடு செய்து பரிகாரம் தேடிக்கொள்ள விரும்புகிறார்கள்.

தவிர, யூதர்களை விரட்டுவதே லட்சியமாக கொண்டு தொடங்கப்பட்ட ஒரு கட்சிக்கு பெருகிவரும் மக்கள் செல்வாக்கை அனுமானிக்க முடியாத அளவுக்கு அமெரிக்கர்கள் முட்டாள்களா என்ன?

ஹிட்லரின் வளர்ச்சியையும், யூதர்கள் மீதான வெறுப்பையும் தணிக்க வேண்டுமெனில், ஜெர்மன் பொருளாதார நிலை மேம்பட்டால்தான் முடியும். தாங்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்ற மனநிலையை தோற்றுவிக்க வேண்டும். ஹிட்லரால்தான் முடியும் என்ற எண்ணம் மக்கள் மத்தியிலிருந்து விலக வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம்.

வெளிப்படையாக தெரியும் இந்த உண்மையை ஹிட்லரால் இப்போது பேச முடியாது. அவரது கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்சிக்குள் பழைய தலைவர்கள் இருந்தாலும் அவர்களுக்குள் ஒற்றுமை குறைந்திருக்கிறது. இவற்றிலிருந்து கட்சியை மீட்க வேண்டும். தனது தலைமையை வலுப்படுத்த வேண்டும்.

நாஜிகள் இன்னும் தங்கள் நிலையில் உறுதியாக இருக்கிறாரகள் என்பதை கட்சிக்காரர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கட்சியை வழிநடத்த பத்திரிகை வெளிவர வேண்டும். கட்சியின் நிதிநிலை வேறு மோசமாக இருக்கிறது.

என்ன செய்யலாம்?

1925 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பவேரியாவின் பிரதமரைச் சந்தித்தார். நாட்டின் ஜனநாயக விதிகளுக்கு உட்பட்டு கட்சியை நடத்த விரும்புவதாக அப்போது உத்தரவாதம் அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக கட்சிக்கும் பத்திரிகைக்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. பீப்பிள்ஸ் அப்சர்வர் என்ற தனது கட்சிப்பத்திரிகையில் பிப்ரவரி 26 ஆம் தேதி ஒரு தலையங்கம் எழுதினார்.

புதிய தொடக்கம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்தத் தலையங்கத்தில், அடுத்தநாள் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் குறித்து தகவல் வெளியிட்டிருந்தார்.

அதன்படி, 27 ஆம் தேதி நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஹிட்லர் பேசும் மிகப்பெரிய கூட்டம் மியூனிக் நகரில் நடைபெற்றது. ஆனால், ஹிட்லர் மாறவில்லை.

யூதர்களையும், மார்க்சிஸ்ட்டுகளையும் விட்டு வைக்க மாட்டோம் என்று உணர்ச்சி வயப்பட்டு ஆவேசமாக  பேசினார்.

இதையடுத்து, அவர் பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு மீண்டும் இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

கட்சியை ஜெர்மன் முழுவதும் புதிதாக கட்டமைக்கும் வேலையில் ஈடுபடத் தொடங்கினார். அரசாங்க அமைப்பைப் போலவே கட்சியையும் அமைத்தார். கட்சியை இரு பிரிவுகளாக பிரித்தார்.

பிஓ1 என்ற முதல் பிரிவு ஜெர்மனியின் குடியரசைத் தூக்கி எறியும் உத்வேகம் கொண்ட உறுப்பினர்களை உள்ளடக்கியது.

பிஓ2 என்ற இரண்டாவது பிரிவு, தற்போதுள்ள குடியரசுச் சட்டங்களுக்கு உட்பட்டு புதிய அரசு அமைக்கும் நோக்கம் கொண்டது. ஆனால், தேவைப்படும்போது, குடியரசை தூக்கி எறிந்துவிடும் வகையில் தயாராக இருக்க வேண்டும்.

இந்த இரண்டாவது பிரிவில், வேளாண்துறை, தொழில்துறை, பொருளாதாரத் துறை, உள்துறை, வெளியுறவுத்துறை, நீதித்துறை, இனம் மற்றும் கலாச்சாரத்துறை, பிரச்சாரத்துறை என பல பிரிவுகள் அமைக்கப்பட்டன. அனைத்தும் நாஜிகளின் கொள்கைகளை எப்படி அமல்படுத்துவது என்று கற்பிக்கப்ப்டடு வளர்க்கப்பட்டன.

ஜெர்மனியை 34 மாவட்டங்களாக பிரித்து அனைத்துக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். பிறகு வட்டங்கள், நகரங்கள், வார்டு கிளைகள், தெருக்கிளைகள் என்று அடிமட்டம் வரை பிரிக்கப்பட்டு அதிகாரம் பலருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

15 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களுக்கும், 10 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கும், டீன் ஏஜ் பெண்களுக்கும், மகளிருக்கும் தனித்தனிப் பிரிவுகள் அமைக்கப்பட்டன.

கட்சியின் சுப்ரீம் லீடராக ஹிட்லர் மாறினார்.

பிரவுன் கலர் சீருடை அணிந்த தனது அதிரடிப்படைப் படையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் உறுப்பினர்களைக் கொண்டு ஹிட்லர் தனக்கான பாதுகாப்புப் படையை அமைத்தார். அவர்களுக்கு கருப்புச் சீருடை வழங்கப்பட்டது. அதன் தலைவராக ஹென்ரிச் ஹிம்லர் நியமிக்கப்பட்டார்.

இவ்வளவு இருந்தும் கட்சி அமைதியாக இருக்க நேர்ந்தது. ஜெர்மனி மீது அமெரிக்காவும், நேசநாடுகளும் கூடுதல் அக்கறை காட்டின. அதன் பொருளாதார நிலையை சீரமைக்காவிட்டால் நாஜிகளின் கை ஓங்கிவிடும் என்று அவை பயந்தன.

நகராட்சி கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், நீச்சல்குளங்கள், விமான நிலையங்கள் என்று உள்கட்டமைப்புக்காகவும் அமெரிக்கா நிதியுதவி செய்தது. மக்கள் வாழ்க்கை எளிதாகிப் போனது. முதல் உலகப்போரில் முக்கிய தளகர்த்தராக இருந்த பால் வான் ஹின்டென்பர்க் ஜெரமனியின் புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

அமெரிக்காவிடமும், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நேச நாடுகளிடமும் அவர் ஏராளமான தொகையை கடனாகப் பெற்றார். நாட்டின் பொருளாதார நிலை சீராகியது. நாஜிகள் ஹிட்லர் இல்லாமல், பிரச்சாரத்திற்கு பிரச்சினை இல்லாமல் அமைதியாக இருந்தனர்.
 

troops of hitler

 


ஆனால், கட்சியின் வருமானம் அதிகரித்தது. உறுப்பினர்கள் எண்ணிக்கை பிரமிக்கத் தக்க வகையில் உயர்ந்தது.

ஜெர்மனி இப்போது கடன் வாங்கிய பணத்தைக் கொண்டு காலத்தை ஓட்டுகிறது. இதுவும் குறிப்பிட்ட காலம் வரைதான் நீடிக்கும். யூதர்கள் மற்றும் மார்க்சிஸ்ட்டுகள் மீதான வன்மம் இன்னமும் மக்கள் மனதில் இருக்கிறது. தற்காலிகமாக இது அடக்கப்பட்டுள்ளது.

விரைவில் நேரம் வரும். அப்போது அதை வெடிக்கச் செய்துவிட முடியும் என்று ஹிட்லர் நம்பினார்.

https://www.nakkheeran.in/360-news/thodargal/history-hitlers-independence-and-political-ideology

Link to comment
Share on other sites

இன்று மீண்டும் ஹிட்லர் போன்ற ஒருவர் உருவாகும் சாத்தியம் உள்ளதா? 

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் மீண்டும் தேசியவாதம் (populism) தலைதூக்குகின்றது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

2 ஹிட்லரின் வெற்றியும் தோல்வியும்!

நாடாளுமன்றத்தில் நாஜிக் கட்சிக்கு 107 இடங்கள் சும்மா கிடைத்துவிடவில்லை. அவ்வளவும் பொய்களை விதைத்து கைப்பற்றியவை. மக்கள் மத்தியில் இனவெறியை விதைத்து அறுவடை செய்தவை. இதில் கோயபல்சுக்கு முக்கிய பங்கு உண்டு. இல்லை, அவனுக்குத்தான் முக்கிய பங்கு. ஹிட்லரின் பேச்சுக்களை தயாரித்துக் கொடுத்தவன் அவன்தான். பிரச்சாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்தவன் அவன்தான். இறைத்தூதர் போன்ற இமேஜை உருவாக்கியவன் அவன்தான்.

history hitlers independence and political ideolog success and failure part 2

 


 

யூதர்களை தாக்குவதும், கம்யூனிஸ்ட்டுகளை கலவரத்திற்கு தூண்டுவதும், நாட்டின் பொருளாதார நிலை குறித்து மக்கள் மத்தியில் பீதியை கிளப்புவதும் அவனது அன்றாட வேலையாக இருந்தது. அதில் அவன் வெற்றி பெற்றான். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இரண்டே ஆண்டுகளில் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை நடத்துவதற்கு காரணமாக இருந்தவனே அவன்தான்.

ஜெர்மனின் தேசிய வங்கி திவாலாகப் போகிறது என்று, தினந்தோறும் எழுதியும் பேசியுமே, நன்றாக இயங்கிய அந்த வங்கியை திவாலாக்கியவன். அமெரிக்காவின் பங்குச் சந்தை வீழ்ச்சியை ஆதாரமாக வைத்து, அவன் புனைந்து வெளியிட்ட கதைகள் பீதியூட்டக் கூடிய வகையில் இருந்தன.

நாட்டின் சரிந்து வரும் பொருளாதாரத்தை சீரமைக்க முடியாமல் அரசு திணறியது. குடியரசுத்தலைவராக இருந்த ஹின்டன்பர்க் வேறு வழியின்றி புரூனிங் என்பவரை பிரதமராக்கினார். கத்தோலிக்க ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அவர் பொருளாதார நிபுணர். அவரும் செய்வதறியாது கையைப் பிசைந்துகொண்டு நின்றார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை.

ஒவ்வொரு கட்சியும் தங்கள் திசையில் பிரதமரை இழுக்க முயன்றால் அவர் எந்தப்பக்கம்தான் போவார்?

வேறு வழியில்லாமல், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தும்படி குடியரசுத்தலைவருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

எல்லாம் கோயபல்ஸ் கைங்கர்யம்தான்.

1930 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஹிட்லரின் பிரச்சாரத்தைக் கேட்க மக்கள் கூட்டம் அலைபாய்ந்தது. நீண்ட நேரம் காத்திருந்தார்கள். மேடையில் ஏறியவுடன் விரக்தியுடன் பேச்சைத் தொடங்குவார். கொஞ்சமாக குரலை உயர்த்துவார். திடீரென ஆவேசப்படுவார். ஜெர்மனியைக் காப்பாற்ற தன்னால் மட்டுமே முடியும் என்று இரண்டு கைகளையும் விரித்து வானைப் பார்த்துக் கத்துவார். கூட்டம்  பரவசமடையும். கரகோஷம் செவிப்பறையை கிழிக்கும்.
 

history hitlers independence and political ideolog success and failure part 2



சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் வாக்குறுதிகள் வைத்திருப்பார். மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், பெண்கள், விவசாயிகள் என்று பாரபட்சமில்லாமல் அனைவருடைய வாழ்க்கையையும் வளப்படுத்த தன்னிடம் திட்டங்கள் இருப்பதாக பட்டியலிடுவார்.

ஜெர்மனியை என் கையில் ஒப்படைத்தால், பாலாறும் தேனாறும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் என்று அடித்துக் கூறுவார்.

அந்த வாக்குறுதிகள் ஓரளவு பலன் கொடுத்தன. முதன் முறையாக ஜெர்மன் நாடாளுமன்றத்தில் நாஜிக் கட்சி 107 இடங்களைப் பெற்றது. ஹிட்லர் பெருமிதமடைந்தார். தனது எண்ணம் ஈடேறப்போகிறது என்று நம்பத் தொடங்கினார்.

பத்திரிகைகள் தேடி வந்து பேட்டி கண்டன. மக்கள் அவருடன் கைகுலுக்கக் காத்திருந்தனர். எங்கே திரும்பினாலும் புகழ் வெளிச்சம் அவர்மீதே படர்ந்தது.

அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்திற்கு நாஜிகள் வந்தனர். பிரவுன் கலர் சீருடையில் அவர்கள் வந்து ஹிட்லர் வாழ்க என்று ஆஜர்படுத்திக் கொண்டனர்.

முதல் சிறிய வெற்றியே நாஜிக் கட்சியின் அதிரடிப்படை மற்றும் இளைஞர் அணியினரை ஆட்டம்போட வைத்தது. அவர்கள் யூதர்களின் கடைகள், உணவு விடுதிகளை அடித்து நொறுக்கினர். எனவே, அந்த அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிரடிப்படையினரின் சீருடையில் வந்தனர்.

புதிய அரசுக்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லை என்பதை அவர்கள் சூசகமாக தெரிவித்தனர்.
 

history hitlers independence and political ideolog success and failure part 2




அந்தத் தேர்தலுக்குப் பின் ஜெர்மன் தொழிலதிபர்கள் ஹிட்லர்மீது போட்டி போட்டு பணத்தை வாரிக் கொட்டினர். அடுத்து நாஜிகள்தான் ஜெர்மன் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்று அவர்கள் முடிவே செய்து விட்டார்கள்.

ராணுவத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவும் ஹிட்லருக்கு கிடைக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.

ஜெர்மன் ராணுவத்தில் நாஜிக் கொள்கைகளை புகுத்த முயன்றதாக மூன்று இளம் வீரர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர்கள் மீதான விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்காக ஹிட்லர் ராணுவ நீதிமன்றத்திற்கு வந்தார்.

இப்போதுள்ள ராணுவத்தை அகற்றும் எண்ணமே நாஜிக் கட்சிக்கு இல்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெர்மனின் ராணுவம் நவீனப்படுத்தப்படும். உலகின் எங்குமில்லாத வலிமையுடன் பொலிவு பெறும். வெர்சைல்ஸ் உடன்படிக்கையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

ஹிட்லரின் வாக்குமூலம் அதிகாரிகளுக்கு நிம்மதி அளித்தது. இதைத்தான் அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.

அப்போது ஹிட்லருக்கு 39 வயதுதான் ஆகியிருந்தது. தனது போராட்டத்திற்கு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை மனதில் நிறைந்தவுடன், இன்னும் இளைஞனாக மாறிவிட்டார்.
 

history hitlers independence and political ideolog success and failure part 2


அதிலும் ஜெலியை பார்க்கும் போதெல்லாம் அவர் டீன் ஏஜ் பையன் மாதிரி ஆகிவிடுகிறார். அவளுடன் ஊர்சுற்றுவதை விரும்பினார். அவளும் சக்தி வாய்ந்த மனிதராக போற்றப்படும் ஹிட்லரின் விருப்பத்துக்கு உரியவளாக இருப்பதை பெருமையாக நினைத்தாள்.

இருவரும் போகும் போது ஹிட்லரிடம் கோரிக்கை மனுக்களை கொடுப்பார்கள். ஆட்டோகிராப் புக்கில் கையெழுத்துக் கேட்பார்கள். எப்போதும் அவரது ஏவலுக்கு காத்திருக்கும் தொண்டர்கள். பணிவான சேவகம் என்று எல்லாமே ஜெலியை கவர்ந்திருந்தன.

ஆனால், தன்னைவிட வயதில் மூத்த ஹிட்லரைக் கவர்ந்தது போலவே, ஏராளமான இளைஞர்களும் ஜெலியை ரசித்தனர். அவளுக்கும் அதுபோன்ற இளைஞர்களுடன் பழக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கு ஹிட்லர் அனுமதிக்க மாட்டார்.

அவளுக்கு பாதுகாப்பாக நியமிக்கப்பட்ட எமில் மௌரிஸ் என்ற இளைஞனுடன் சில நாட்கள் தொடர்பு வைத்திருந்தாள். ஆனால், ஒருநாள் அவன் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.

யார் அவனைச் சுட்டது என்பதே அவளுக்குத் தெரியவில்லை.

ஜெலியை யாரும் பார்க்கக் கூடாது என்று பொறாமைப்படும் அளவுக்கு சென்ற ஹிட்லர், தான் மட்டும், தனது அந்தரங்க புகைப்படக்காராகப் பணிபுரிந்த ஹெய்ன்ரிச் ஹாப்மேனின் உதவியாளரான 17 வயது ஈவா பிரவுன் என்ற பெண்மீது மையல் கொண்டிருந்தார்.

1931 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி, ஈவா பிரவுனை சினிமா தியேட்டருக்கு அழைத்துச் சென்றார். அத்தனை பார்வையாளர்கள் மத்தியில், தனது நெருக்கமான கட்சித்தலைவர்களின் குடும்பத்தினர் அருகிருக்க, ஈவா பிரவுனுடன் அவர் சினிமா பார்த்தார்.

“இதுபோன்ற அடுத்த சந்திப்புக்காக நான் காத்திருக்கிறேன்” என்று அவள் ஹிட்லருக்கு குறிப்பு அனுப்பியிருந்தாள்.

ஹிட்லரின் இந்தத் திசைமாற்றம் ஜெலிக்கு வெறுப்பூட்டியது. அவரும் தொடுவதில்லை. பிறருடனும் பழக விடுவதில்லை. தன்னை அடிமையைப் போல நடத்துகிறார் என்று கருதினாள்.

ஈவா பிரவுன் எழுதிய கடிதம் ஜெலியின் கைக்குக் கிடைத்தது. கடுமையான ஆத்திரமடைந்தாள். தனது அடிமைத்தனத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.

அடுத்த நாள் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் எழுந்தது.
 

history hitlers independence and political ideolog success and failure part 2

 

“எனக்கு இங்கிருக்க பிடிக்கவில்லை. நான் வியன்னாவுக்கே போய்விடுகிறேன். எனக்கு அனுமதி கொடுங்கள்.”

“நான் உன் பாதுகாவலன். உனக்கு எது நல்லது என்பது எனக்குத் தெரியும். நீ வியன்னாவுக்கு போகக் கூடாது”.

“அப்படியானால், அடுத்த பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் நீங்கள், எனக்கு ஏதேனும் ஒரு முடிவைச் சொல்லுங்கள்”.

“அதுதான் சொல்லிவிட்டேனே. நீ வியன்னாவுக்கு போகக்கூடாது”.

ஹிட்லர் வேகமாகக் கிளம்பி கீழே வந்து காரில் ஏறினார். மாடியின் ஜன்னல் வழியே ஜெலி எட்டிப் பார்த்தாள்.

“முடிவாய் என்ன சொல்கிறீர்கள்?”

“போகக்கூடாது”

ஹிட்லர் காரில் போய்விட்டார். மியூனிக் நகரிலிருந்து புறப்பட்ட ஹிட்லர், அடுத்தநாள் காலை ஹாம்பர்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இடையில் ஒரு டாக்ஸி அவரது காரை வழி மறித்தது. ஹிட்லரின் நண்பர் ருடால்ப் ஹெஸ் தொலைபேசியில் இருப்பதாக தகவல் சொல்லப்பட்டது.
 

history hitlers independence and political ideolog success and failure part 2

 



அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றுக்கு விரைந்த ஹிட்லர் தொலைபேசியை எடுத்தார்.

“ஜெலி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாள்”

ருடால்ப் ஹெஸ் தெரிவித்த தகவல் ஹிட்லரை அதிர்ச்சியடையச் செய்தது. அவருடைய காதல் தோற்றுவிட்டது. முதல்முதலாய் தான் நேசித்த பெண் செத்துவிட்டாள் என்ற செய்தி அவரை பெரிய அளவில் பாதித்தது.

அதன் பிறகு அவர் முன்பு போல இல்லை என்று ஹெர்மன் கோயரிங் கூறுவார்.

அது நிஜம்தான். ஹிட்லர் ஜெலியை மறக்கவே இல்லை. அவளது பிறந்தநாள் மற்றும் இறந்தநாளில்  அவளுடைய புகைப்படத்திற்கு மலர் அலங்காரம் செய்து சோகமாக இருப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

ஆனால், ஜெலி இறந்தபோது, அவளை ஹிட்லர்தான் சுட்டுக் கொன்றுவிட்டதாக சில செய்தித்தாள்கள் வதந்தியைப் பரப்பின.

ஜெலி தற்கொலை செய்து கொண்டபோது, அருகில் இருந்த டேபிளில் ஈவா பிரவுன் ஹிட்லருக்கு எழுதிய குறிப்பு சுக்கலாகக் கிழிக்கப்பட்டுக் கிடந்தது மட்டுமே, ஹிட்லர் மீதான குற்றச்சாட்டை பொய்யாக்க உதவியது.

https://www.nakkheeran.in/360-news/thodargal/history-hitlers-independence-and-political-ideolog-success-and-failure-part-2

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

3 ஹிட்லரின் பதவிவெறி பதற்றம்!

எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு. கூச்சல் குழப்பம். நாடாளுமன்றம் தினமும் அமளி துமளிப்பட்டது.  அரசு இயந்திரத்தை முடக்குவதே நாஜிகளின் நோக்கமாகி விட்டது.

70 லட்சம் பேருக்கு வேலையில்லை. ஆயிரக்கணக்கான சிறுதொழில்கள் மூடப்பட்டன. பொருளாதார மந்தம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாகி விட்டன. ஒவ்வொரு வீட்டிலும் பசி அழையா விருந்தாளியாகப் படுத்திருந்தது.

வெளியே மக்கள் வறுமையில் சிக்கி, நொந்து நூலாகிக் கொண்டிருந்தனர். வேலையில்லா திண்டாட்டம் வாழ்க்கையை மூச்சுத் திணறவைத்தது. யார் முகத்திலும் தெளிச்சியில்லை. எங்கும் சோர்வு. பதற்றம். கம்யூனிஸ்ட்டுகளுடன் மோதுவதே நாஜிகளின் வேலையாகி விட்டது.

தெருக்களில் எப்போது சண்டை வெடிக்கும். எத்தனை பேர் சாவார்கள் என்பது நிச்சயமில்லாமல் ஒவ்வொரு நாளும் கழிந்தது.

history hitlers independence and political ideolog part 3

 


மக்களுக்கு நல்லது செய்யும் எந்த முயற்சியையும் அவர்கள் நிறைவேற்ற அனுமதிப்பதில்லை. ஆபாசமாகவும், ரவுடித்தனமாகவும் அவையை ஸ்தம்பிக்கச் செய்வதே வேலையாகி விட்டது.

ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிட்டது. அவர்களுடைய நோக்கமே குடியரசை சீர்குலைப்பதுதான் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

இந்தக் கூத்துகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் குடியரசுத் தலைவருக்கான தேர்தலை நடத்த வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

மன்னராட்சிக் காலத்தில் ராணுவ தளபதியாக இருந்த ஹிண்டன்பர்க் குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். அவரது பதவிக்காலம் 1932ல் முடிவுக்கு வருகிறது. இப்போதே, அவருக்கு வயது 84 ஆகி விட்டது. இன்னொரு முறை பதவிக்கு வந்தால் அவருடைய பதவிக்காலம் முடியும் போது, அவருக்கு 92 வயதாகிவிடும்.

ஏற்கெனவே அவர் உடல்நிலை சரியில்லை. துடிப்பாக செயல்படவும் முடியவில்லை. நாட்டின் நெருக்கடி அவரை பாடாய் படுத்தி வந்தது. மீண்டும் அவர் தேர்தலில் நிற்க விரும்பவில்லை. ஆனால், அவருக்குப் பதிலாக வேறு யார் நின்றாலும் குழப்பம்தான் மிச்சமாகும் என்று பிரதமர் புரூனிங் கூறினார்.

நாஜிகளின் செல்வாக்கு நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. ஹிட்லரின் ஆதரவு இருந்தால், ஹிண்டன்பர்கின் பதவிக்காலத்தை நீடித்துவிடலாம் என்பது புரூனிங்கின் திட்டம்.

1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹிண்டன்பர்க்கை சந்தித்தார் ஹிட்லர். அவருடைய நம்பிக்கையைப் பெற்று பிரதமராவது அவரது எண்ணம். தன்னுடைய எண்ணத்தை... இல்லையில்லை... ஆசையை, ஹிண்டன்பர்கிடம் தெரிவித்தார் ஹிட்லர்.

ஆனால், ஹிண்டன்பர்கிற்கு ஹிட்லரைப் பிடிக்கவில்லை. அவருடைய செயல்பாடுகள், குடியரசுத் தத்துவங்களுக்கு மாறாக இருப்பதை அனுபவரீதியாக அவர் தெரிந்து வைத்திருந்தார்.

ஹிட்லரை பிரதமராக நியமிக்க முடியாது என்று கூறிவிட்டார். மக்கள் நலனில் அக்கறை இருப்பது உண்மையானால், நாடாளுமன்றத்திலும், வெளியிலும் அவருடயை கட்சியினரைக் கட்டுப்பாடாக நடந்துகொள்ளும்படி செய்ய வேண்டும் என்று அறிவுரை வேறு சொன்னார்.

history hitlers independence and political ideolog part 3




ஹிட்லர் வெளியேறிவிட்டார். பின்னர், அங்கிருந்தவர்களிடம் ஹிண்டன்பர்க் இப்படிச் சொன்னார்...

“போஸ்ட் மாஸ்ட்டருக்குத்தான் இவர் லாயக்கு”

ஆனால், நிலைமையின் தீவிரத்தை அவர் யோசிக்கவில்லை. ஹிண்டன்பர்க் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடாவிட்டால், நாட்டில் குழப்பம்தான் மிஞ்சும் என்பது புரூனிங்கிற்கு தெரிந்தது.

எனவே, ஹிட்லரை சமாதானம் பேச வரும்படி அழைக்க முடிவு செய்தார்.

1932 ஜனவரி மாதம் பிரதமர் புரூனிங்கிடமிருந்து ஹிட்லருக்கு ஒரு தந்தி வந்தது. குடியரசுத்தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

“இப்போது அவர்கள் என் பாக்கெட்டில். தங்கள் பேச்சுவார்த்தையில் என்னையும் கூட்டாளியாக அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது”

ருடால்ப் ஹெஸ்ஸிடம் கூறினார் ஹிட்லர்.
 

history hitlers independence and political ideolog part 3

 




ஆனால், பேச்சுவார்த்தை சுமூகமாக இல்லை. பிரதமர் பதவியைத் தரமுடியாது. ஜெர்மன் குடியுரிமை இல்லாத ஹிட்லர் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று ஹிண்டன்பர்க் உறுதியாக கூறிவிட்டார்.

ஹிட்லர் தடுமாறிவிட்டார். ஏதேனும் செய்ய வேண்டும். நான்கு ஆண்டுகள் ஜெர்மன் ராணுவத்தில் சேர்ந்து, உயிரை துச்சமாக நினைத்து போர்க்களத்தில் போராடிய எனக்கு ஜெர்மன் குடியுரிமை இலலையா? ஜெர்மானிய தேவதை இதைப் பொறுத்துக் கொள்ளமாட்டாள். குமுறினார் ஹிட்லர்.

ஆனால், நல்லவேளையாக புரூன்ஸ்விக் மாநிலம் நாஜிக் கட்சியின் கையில் இருந்தது. அந்த மாநில அரசு ஹிட்லரை ஜெர்மன் குடிமகனாக அங்கீகரித்து விட்டது.

இனி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட எந்தத் தடையும் இல்லை.

ஹிண்டன்பர்க்கிற்கு மக்கள் செல்வாக்கு இருந்தது. நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளும் அவரை ஆதரிப்பதாக உறுதியளித்தன. ஹிட்லரின் வளர்ந்துவரும் செல்வாக்கு அவருக்கு எதிராக எல்லோரையும் திருப்பியிருந்தது. அவர் வேறு யாரிடமும் உதவி கேட்பதாக இல்லை. தன்மீது மட்டும் நம்பிக்கை வைத்து எத்தனை பேர் வாக்களிக்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட அவர் முடிவு செய்திருந்தார்.

எதிர்க்கட்சிகள் வற்புறுத்தியதால் ஹிண்டன்பர்க் தேர்தலில் நிற்க ஒப்புக்கொண்டார்.

தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது.

ஜெர்மன் அதுவரை கண்டிராத வகையிலான பிரச்சார யுக்திகள். நாடுமுழுவதும் நாஜிகள் சூறாவளியாக சுழன்றனர். எங்கு நோக்கினாலும் ஹிட்லரின் படங்கள்தான். பிரமாண்டமான ஊர்வலங்கள். நாடுமுழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான இடங்களில் ஆரவாரமான ஊர்வலங்கள்.

ஒரேநாளில் ஏழெட்டு இடங்களில் ஹிட்லர் பேசினார்.  ஆனால், அவருக்கு ஹிண்டன்பர்க்கை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை. தனது கட்சியின் தளத்தை விரிவுபடுத்துவதற்கு இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவே அவர் விரும்பினார்.

கோயபல்ஸுக்கு வெற்றிபெற்று விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அவர் புதிய புதிய பிரச்சார யுக்திகளை கடைப்பிடித்தார். ஹிட்லரின் பொதுக்கூட்ட பேச்சுகள் செய்திப்படங்களாக ஒளிப்பதிவு செய்யப்பட்டு உள்ளடங்கிய கிராமங்களில் பொதுமக்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டன. இது அப்போது புதிது. ஏராளமானோர் அந்த படங்களைப் பார்த்தனர்.

ஆனால், 1932 மார்ச் மாதம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், இருவருக்குமே பாதிக்கு மேற்பட்ட வாக்குகள் கிடைக்கவில்லை. ஜெர்மன் குடியரசுத்தலைவர் தேர்தலில், மொத்தம் பதிவான வாக்குகளில் பாதிக்கு மேல் பெற்ற வேட்பாளர்தான் வெற்றி பெற்றவராக கருதப்படுவார்.

ஹிண்டன் பர்கிற்கு 49 சதவீத வாக்குகளும், ஹிட்லருக்கு 30 சதவீத வாக்குகளும் கிடைத்திருந்தன. பதிவான வாக்குகளில் ஹிட்லருக்கு 1 கோடியே 13 லட்சம் வாக்குகளும், ஹிண்டன்பர்கிற்கு 1 கோடியே 85 லட்சம் வாக்குகளும் கிடைத்தன.

history hitlers independence and political ideolog part 3

 




எனவே, இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடைபெற்றது. மீண்டும் பிரச்சாரம் தொடங்கியது. ஹிட்லருக்கு பெரிய பெரிய தொழில் அதிபர்கள் பண உதவி செய்தனர். யூத தொழில் அதிபர்களும் இதில் இருந்தனர்.

ஜெர்மன் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக விமானத்தில் பறந்து சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட தலைவர் ஹிட்லர்தான்.

நாட்டின் எந்த மூலையில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தாலும் அங்கு விமானத்தில் பறந்து சென்று பேசினார்.

வாக்குறுதிகள்...வாக்குறுதிகள்...வாக்குறுதிகள்.

கொஞ்சம் கூட சளைக்காத பொய்கள். வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப்போகிறார் என்ற ரகசியத்தை மட்டும் அவர் சொல்வதே இல்லை. ஆனால், கம்யூனிஸ்ட்டுகளுக்கும், யூதர்களுக்கும் நன்றாகவே புரிந்திருந்தது.

என்னிடம் ஜெர்மனியைத் தாருங்கள். உலகிலேயே மிகவும் கவுரவமிக்க நாடாக மாற்றிக் காட்டுகிறேன் என்று ஹிட்லர் பேசுவதன் உள்ளர்த்தம் அவர்களுக்கு மட்டுமே புரிந்தது.

இரண்டாவது சுற்றுத் தேர்தல் முடிவில் ஹிண்டன்பர்க் 53 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஹிட்லர் 36 சதவீத வாக்குளைப் பெற்றார். ஹிண்டன் பர்கிற்கு 1 கோடியே 93 லட்சம் வாக்குகளும், ஹிட்லருக்கு 1 கோடியே 34 லட்சம் வாக்குகளும் கிடைத்திருந்தன.

பெரிய சாதனைதான் இது. இந்தத் தேர்தலில் ஒரு உண்மையை ஹிட்லர் தெளிவாகத் தெரிந்து கொண்டார். தனக்கு வாக்களித்தவர்கள் அனைவரும் ஜெர்மன்

தேசியவாதிகள் என்றும் தனக்கு வாக்களிக்காதவர்கள் யூதர்களும், கம்யூனிஸ்ட்டுகளும், குடியரசு ஆதரவாளர்களும் என்பதை புரிந்துகொண்டார்.

இவர்களை எப்படித் திருத்துவது? முதலில் எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.

ஆனால், குடியரசுத்தலைவர் தேர்தல் முடிந்தவுடனேயே நாஜிகள் வழக்கம்போல் தங்கள் வெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிட்டனர்.

பிரதமர் புரூனிங், அரசியல் சட்டத்தின் 48 வது பிரிவைப் பயன்படுத்தி, அவசரச் சட்டங்களால் ஆட்சியை நடத்தத் தொடங்கினார். முதலில் அவர், நாஜிக் கட்சியின் அதிரடிப்படைக்கும் இளைஞர் படைக்கும் தடைவிதித்தார்.

அவர்கள் பொங்கினர். உடனடியாக தடையை எதிர்த்து போராட வேண்டும் என்று ஹிட்லரை வற்புறுத்தினார்கள்.

 ஹிட்லர் அனுபவப் பட்டிருந்தார். ஜெர்மன் ராணுவம், சக்திவாய்ந்த தொழில் அதிபர்களின் துணையின்றி எதுவும் செய்யமுடியாது என்பதைத் தெரிந்து வைத்திருந்தார். அவர்கள், நாஜிக்கட்சியின் அதிரடிப்படையை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறாரகள். அல்லது அதைக் கண்டு பயப்படுகிறாரகள் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.

 எப்படிப்பார்த்தாலும் குடியரசின் ஆயுள், கடைசி காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதியாகிவிட்டது. காலம் வரட்டும். பொறுத்திருப்போம் என்று காத்திருந்தார் ஹிட்லர்.

 
ரொம்ப நாள் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை.

 அடுத்த மாதத்திலேயே, ராணுவத்தில் செல்வாக்குப் பெற்ற உயரதிகாரியான, ஸ்லெய்ச்சர் வழியாக சந்தர்ப்பம் வந்தது.

 வெர்செய்ல்ஸ் ஒப்பந்தப்படி ஜெர்மன் ராணுவத்தில் ஒரு லட்சம் வீரர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும்.

 ஆனால், ஹிட்லரின் அதிரடிப்படையில் ஆயுதம் ஏந்திய 4 லட்சம் வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்தப் படைக்கு எர்னஸ்ட் ரோம் என்பவன் தலைவராக இருந்தான். மியூனிக் புரட்சியின்போது, பவேரியாவின் ராணுவ தலைமையகத்தை கைப்பற்றியிருந்தவன் இவன்தான்.

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து கிடந்தது. அதைச் சீரமைக்க ஒத்துழைப்புக் கொடுத்தால் மக்கள் நிம்மதியாக அவர்களுடைய வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். அவர்களுடைய வெறுப்புத் தீயில் குளிர்காய முடியாது என்பது ஹிட்லருக்குத் தெரியும்.

அதேசமயம், தனது தலைமையின் கீழ் உள்ள அதிரடிப்படையை முடக்கிய அரசு உத்தரவை எதிர்த்து வன்முறைப் போராட்டத்தில் இறங்கி, வீதிகளில் ரத்த ஆறு ஓடும்படி செய்ய வேண்டும் என்று ரோம் நினைத்தான். ஹிட்லரின் அனுமதியை வேண்டி நின்றான்.

 
ஹிட்லர் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அந்தச் சமயத்தில்தான், ஜெர்மனி ராணுவத்தின் செல்வாக்குப் பெற்ற உயர் அதிகாரியான ஸ்லெய்ச்சர், ஹிட்லரைச் சந்திக்க விரும்பினான். வரட்டும் பேசிப்பார்க்கலாம். வருகிற எந்த வாய்ப்பையும் தட்டிக்கழித்து விடக்கூடாது என்று ஹிட்லர் திட்டமிட்டார்.

 
“கன்சர்வேடிவ் தேசிய அரசு அமைவதற்கு நாஜிக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும். அப்படி ஆதரவளித்தால், அதிரடிப்படைக்கும், இளைஞர் அணிக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும். பிரதமர் புரூனிங் தூக்கியெறியப்படுவார். நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மறு தேர்தலுக்கு உத்தரவிடப்படும்”

 
இதுதான் ஸ்லெய்ச்சரின் பேரம்.

 ஹிட்லர் ஒப்புக்கொண்டார். முதலில் ராணுவ தளபதி குரோனரை பதவி விலக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

 “அதற்கென்ன செய்துவிட்டால் போச்சு”

 ஹிட்லரை அவன் குறைவாக எடைபோட்டு விட்டான். ஸ்லெய்ச்சரின் ஆதரவாளர்களும், நாஜிக் கட்சியினரும் ராணுவ தளபதி குரோனருக்கு எதிராக பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை வீசினர். நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. நாட்டின் அரசியல் நெருக்கடியைச் சமாளிக்கும் ஆற்றல்  இல்லாதவர் என்றும் குரோனர் பதவி விலக வேண்டும் என்றும், ஒற்றைக்காலில் நின்றனர்.

குரோனர், குடியரசுத்தலைவர் ஹிண்டன்பர்கிற்கு நம்பகமானவர். நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

ஆனாலும் என்ன செய்வது? எதிர்ப்பு வலுத்த நிலையில் அவரைப் பதவி விலகும்படி குடியரசுத்தலைவர் கேட்டுக்கொண்டார்.

 நாஜிக் கட்சிக்கு முதல் வெற்றி. அடுத்த குறி பிரதமர் புரூனிங்.

தேர்தல் முடிந்த இரண்டு ஆண்டுகள் முடிந்தும் கூட பிரதமராக அவர் சாதித்தது என்ன? என்ற கேள்வி மக்கள் மத்தியில் வலுவாக எழுந்திருந்தது. அல்லது அத்தகைய கேள்வியை எழுப்பி அதை நிலை நிறுத்துவதில் நாஜிக் கட்சியினர் வெற்றி பெற்றிருந்தனர்.

குடியரசுத்தலைவர் ஹிண்டன்பர்க்கும் புரூனிங் மீது அதிருப்தி அடைந்திருந்தார்.

 புரூனிங் தன்னை ஒரு மார்க்சிஸ்ட் அளவுக்கு மாற்றிக் கொண்டிருந்தார். அரசுக்கு செலுத்த வேண்டிய கடனைச் செலுத்தாமல் மேட்டுக்குடியினர் பலர், திவால் நோட்டீஸ் அளித்திருந்தனர். அவர்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பறிமுதல் செய்து, அவற்றை கிராமப்புற விவசாயிகளுக்கு பகிரந்தளிக்கும் திட்டத்தை அவர் பரிந்துரை செய்திருந்தார்.

 
இந்நிலையில், மேட்டுக்குடியினரும், தொழிலதிபர்களும் இணைந்து, பெருமளவு பணம் போட்டு, குடியரசுத்தலைவர் ஹிண்டன்பர்கிற்கு அழகிய பண்ணை ஒன்றை வாங்கிக் கொடுத்தனர். அந்தப் பண்ணையில் ஈஸ்டர் விடுமுறையைக் கழிக்கப் போயிருந்த அவர், நிலச்சுவான்தார்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு விருந்து அளித்தார்.

 புரூனிங்கின் செயல்பாடுகள் குறித்து தங்கள் குமுறலை அவர்கள் கொட்டித் தீர்த்தனர்.

 மே மாதம் 29 ஆம் தேதி புரூனிங்கை அழைத்தார் ஹிண்டன்பர்க்.

 “தயவுசெய்து உங்கள் ராஜினாமா கடிதத்தை தருகிறீர்களா?”

 மறுவார்த்தை பேசாமல், தலைவலி தீர்ந்தது என்று புரூனிங் பதவி விலகினார்.

 ஹிட்லரும், ஸ்லெய்ச்சரும் சந்தித்த 20 நாட்களில் இத்தனை அதிரடி மாற்றங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன.

இப்போது, அரசின் முழுக்கட்டுப்பாடும் ஸ்லெய்ச்சரின் கையில்.

சரி, அடுத்த பிரதமர் யார்?

 பிரென்ஸ் வான் பாப்பென் என்ற மேட்டுக்குடி முதலாளியை பிரதமராக நியமித்தார் ஹிண்டன்பர்க். அவருக்கு எதுவும் தெரியாது. தன்னைப்போன்ற மேட்டுக்குடியினர் சிலரை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார்.

 “பாப்பெனுக்கு நீங்கள் ஆதரவு அளிக்கிறீர்களா ஹிட்லர்?”

“ஆம்”

 பிரதமராக பொறுப்பேற்றவுடன், ஜீ¨ன் மாதம் 4 ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

15 ஆம் தேதி நாஜிக் கட்சியின் அதிரடிப்படை மற்றும் இளைஞர் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, ஸ்லெய்ச்சர் உத்தரவிட்டார். ஆம். ஹிட்லருக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார்.

 ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.

 “ரத்த ஆறு ஓடட்டும். ரத்த ஆறு ஓடட்டும்.

குண்டாந்தடிகள் தாக்கினாலும்

எதிர்கொள்வோம், எதிர்கொள்வோம்

ஜெர்மன் குடியரசைத் தகர்ப்போம்”

 இப்படி பாட்டுப்பாடி கோஷமிட்டு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர் நாஜிகள்.

 அவர்களுடன் மோதிப்பார்த்துவிட கம்யூனிஸ்ட்டுகள் தயாராக இருந்தனர். நாஜிகளின் அதிரடிப்படையினருக்கு ஜெர்மன் காவல்துறை பாதுகாப்பு அளித்தது.

 கம்யூனிஸ்ட்டுகளின் பலத்தை மட்டுப்படுத்துவதற்கு குடியரசுத்தலைவர் ஹிண்டன்பர்கின் துணையும் இருந்தது.

 ஜீ¨லை 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை.

 பிரஷ்யா மாநிலத்தில் உள்ள ஹம்பர்க் நகரில் நாஜிகள் மிகப்பெரிய ஊர்வலத்தை நடத்தினர்.

 அந்த மாநிலம் கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்தது. நாஜிகளுக்கு காவல்துறை பக்கபலமாக இருந்தது. ஊர்வலத்தை தடுக்க முயன்ற கம்யூனிஸ்ட்டுகளை நாஜிகள் கண்மூடித்தனமாக சுட்டனர். 19 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர். ரத்த ஞாயிறு என்று இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டனர்.

 நிலைமையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தினார் பிரதமர் பாப்பென்.

48 வது பிரிவைப் பயன்படுத்தி ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார். பிரஷ்யாவையும் சேர்த்து நெருக்கடி நிலை கமிஷனராக தன்னைப் பிரகடனப் படுத்திக்கொண்டார்.

உங்கள் முடிவு தற்காலிகமானதுதான். எனது கட்சியின் செல்வாக்கு உங்களை விழுங்கிவிடும். நீங்களே முன்வந்து என்னை பிரதமராக்கும் காலம் வந்துவிட்டது என்றார் ஹிட்லர்.

 ஜூலை தேர்தல் பிரச்சாரத்தில் முன்னெப்போதும் காணாத மக்கள் எழுச்சியை ஹிட்லர் பார்த்தார். இறைத்தூதர் இமேஜ் அதிகரித்திருந்தது. அவருடைய பொதுக்கூட்டங்களில் லட்சம் பேர் பங்கேற்பது சாதாரண விஷயமாகிவிட்டது.

தேர்தல் முடிந்தபோது, மொத்தமுள்ள 543 இடங்களில் 230 இடங்களை நாஜிக் கட்சியினர் கைப்பற்றியிருந்தனர். அதாவது, அவர்களுடைய ஆதரவு இல்லாமல் யாரும் அரசு அமைக்க முடியாது.

உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார் ஹிட்லர். இதோ தனது கனவு நனவாகப் போகிறது.

https://www.nakkheeran.in/360-news/thodargal/history-hitlers-independence-and-political-ideolog-part-3

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.