Jump to content

பெரியார்: புனிதங்களை சுட்டுப் பொசுக்கியவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார்: புனிதங்களை சுட்டுப் பொசுக்கியவர்

சுனில் கில்னானிவரலாற்றாசிரியர்
பெரியார்: புனிதங்களைச் சுட்டுப் பொசுக்கியவர்

இந்தியாவில் உள்ள பெண்களையெல்லாம் சேர்ந்து ஒரு நாடாக கருதிக்கொள்வோம். இந்திய பெண்கள் குடியரசு என அதனை அழைப்போம். 60 கோடி பேரை கொண்டிருக்கும் அந்த நாடு, உலகின் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும். 2014ஆம் ஆண்டின் ஐ.நா. மனித உரிமைக் குறியீட்டு தரவரிசையின்படி அந்த நாடு மியான்மருக்கும், ருவாண்டாவுக்கும் இடையில் இருக்கும்.

இந்திய பெண்கள் குடியரசில் குழந்தைகள் சராசரியாக 3.2 ஆண்டுகளே பள்ளிக்குச் செல்வார்கள். கிட்டத்தட்ட மொசாம்பிக் நாட்டின் நிலைதான் இருக்கும். தனிநபர் வருவாயை வைத்துப் பார்த்தால் ஐவரி கோஸ்டும், பாபுவா நியூ கினியாவும் இந்த நாட்டிற்கு மேலே இருக்கும். 2000வது ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மும்மடங்காகப் பெருகியும் இந்திய பெண்களின் நிலை மேம்படவில்லை.

உண்மையில் இந்தியப் பெண்களின் திறமையை இந்த அளவுக்கு நெருக்காத, சுதந்திரமான சூழலோடு ஒப்பிட வேண்டுமென்றால் அதற்கு ஒரு வெளிநாட்டைத் தேட வேண்டியதில்லை.

தென்னிந்திய மாநிலங்களில் வளர்ச்சிக் குறியீடுகளும் சுதந்திரமும் வடஇந்திய மாநிலங்களைவிட நீண்ட காலமாகவே சிறப்பானதாக, வேறுபட்டதாக இருக்கிறது. வட இந்தியாவில் பெரும்பாலான பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் முடிந்துவிடுகிறது. தென்னிந்தியாவில் 15 சதவீதத்திற்கும் குறைவான பெண்களுக்கே 18 வயதுக்கு முன்பாக திருமணமாகிறது.

இதன் விளைவாக பல வட இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டால் தென்னிந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் பாதிதான். பெண்களின் கல்வியறிவு, பணியிடத்தில் வேலை பார்க்கும் பெண்களின் சதவீதம் போன்றவையும் வட இந்தியாவோடு ஒப்பிட்டால் அதிகம். இந்தியாவின் முக்கியமான சமூக, பொருளாதார பிளவாக கருதப்படும் வட இந்திய - தென்னிந்திய பிளவுக்கு இந்த வேறுபாடுகளே முக்கியக் காரணம். சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பாகப் பிறந்த, பள்ளிப் படிப்பை முடிக்காத ஈ. வி. ராமசாமி நாயக்கரும் இதற்கு ஒரு முக்கியக் காரணம்.

ராமசாமி நாயக்கர் இந்தியாவில் பிராமண எதிர்ப்புச் செயல்பாட்டாளராகவும் பகுத்தறிவுவாதியாகவும் சமரசங்களற்ற கடுமையான பேச்சாளராகவும் அறியப்பட்டவர். காந்தியின் காங்கிரசில் இணைந்தவர். ஆனால், பிறகு மகாத்மாவின் பெரும் எதிரியாக மாறியவர். 1920களின் மத்தியில் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிய ராமசாமி நாயக்கரை அவருடைய தொண்டர்கள் மகத்தான மனிதன் என்ற பொருள்படும் 'பெரியார்' என்ற சொல்லால் அழைத்தனர். மகத்தான ஆத்மா என்ற காந்தியைக் குறிக்கும் சொல்லுக்கு, பதில் சொல்லும்வகையில் இந்தச் சொல் உருவாக்கப்பட்டதாகச் சொல்லலாம்.

பெரியார் ஒருபோதும் தேர்தலில் நிற்கவில்லையென்றாலும் நவீன தமிழ் அரசியலில் ஒரு அழுத்தமான தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். இவருடைய இயக்கத்திலிருந்து தோன்றிய கட்சிகளே 1960களில் இருந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்கின்றன. தேசிய அளவிலும் தமிழ்மொழிக்கு ஆதரவான அவரது குரலும் இந்தி திணிப்பிற்கான அவரது எதிர்ப்பும் 1947க்குப் பிந்தைய இந்தியாவின் மொழி பன்மைத்துவம் குறித்த பார்வையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

பெரியார்: புனிதங்களைச் சுட்டுப் பொசுக்கியவர்

ஜாதி குறித்த இவரது பார்வையே, இந்தியக் குடியரசின் ஆரம்ப நாட்களில் இடஒதுக்கீட்டிற்குக் காரணமாக அமைந்தது. குடும்பத்தில் ஆணே பெரியவன் என போற்றப்பட்ட தேசத்தில், அந்த காலகட்டத்தில் மிக வலுவாக பெண்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர் பெரியார். பெண் விடுதலையைப் பற்றி பேசும்போது ஆண்களிடம் பொதுவாகத் தென்படும், மேலாதிக்க உணர்வின்றி அதைச் செய்தார்.

தங்களைத் தியாகம் செய்யும் பெண்களை கற்புக்கரசிகளாகப் போற்றும் சமஸ்கிருத புராணங்களின் முட்டாள்தனத்தை பெரியார் கேலிசெய்தார். பெண்கள் கல்வி கற்பதையும் காதல் திருமணம் செய்வதையும் அந்தத் திருமணம் ஒத்துவரவில்லையென்றால் விவாகரத்து செய்வதையும் பெண்களுக்குச் சொத்துரிமை அளிப்பதையும் பெரியார் ஆதரித்தார்.

இதையெல்லாம்விட. பெண்களின் பாலியல் தேர்வையும் கருவுருதல் குறித்த உரிமையையும் அவர் ஆதரித்தார். உரிமைகள் தங்களுக்கு தானாக வழங்கப்படுமென பெண்கள் வெறுமனே காத்திருக்கக்கூடாது என்றார் பெரியார்.

பெண்களுக்கு விடுதலை வேண்டுமென்றால் ஆண்மை அழிய வேண்டுமென ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் பெரியார். 'எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதார்களுக்கு சமத்துவம் கிடைக்குமா என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாய்விட்டாலும் கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம்." என்கிறார் அவர்.

பழங்கால வீராங்கனைகள், சக்திவாய்ந்த பெண் தெய்வங்கள், குறைந்த மகப்பேறு விகிதம் ஆகியவை ஏற்கனவே இருந்த ஒரு பிராந்தியத்தில் பெரியார் தன் கருத்தை முன்வைத்தார். இவரது கருத்துகள் 20ஆம் நூற்றாண்டில் வட இந்திய மாநிலங்களுக்கும் தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையிலான பிளவை இன்னும் ஆழமாக்கின. முரட்டுத்தனமான இந்த சிலை உடைப்பாளரை, கடுமையான நாவன்மை உடையவரை பற்றி நான் மேலும் மேலும் வாசிக்கும்போது என் மனதில் ஒரு கேள்வி எழுகிறது: இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற ஆளுமைகள் இருந்திருந்தால், இந்தியப் பெண்கள் குடியரசு இன்னும் சிறப்பாக இருந்திருக்குமல்லவா?

'கடவுள் இல்லை... கடவுள் இல்லை...

கடவுள் இல்லவே இல்லை!

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்...

கடவுளை பரப்பியவன் அயோக்கியன்...

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!'

என்ற முழக்கங்களோடுதான் தன் சுயமரியாதைக் கூட்டங்களைத் துவங்குவதை பெரியார் பல தசாப்தங்களுக்கும் மேலாக வழக்கமாகக் கொண்டிருந்தார். கறுப்புச் சட்டை அணிந்து, வழுக்கைத் தலையுடன் பராமரிக்கப்படாத தாடியுடன் உள்ள பெரியாரின் அருகில் ஒரு நாய் அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். பிராமணர்கள் நாய் தூய்மையில்லாதது எனக் கருதுவதால் அதனை அவர் தன் அருகில் வைத்திருந்திருக்கக்கூடும். பல வழிகளில் பெரியார் தீவிரமாகப் பேசியவர் என்றாலும், மக்களுக்குப் புரியாத, குழப்பமான மொழியில் பேசியவரில்லை. மதம் மற்றும் ஜாதியில் துவங்கி பகுத்தறிவுக்குப் புறம்பான எல்லாவற்றையும் அவர் கண்டித்தார்.

பெரியார்: புனிதங்களைச் சுட்டுப் பொசுக்கியவர்படத்தின் காப்புரிமைARUNKUMARSUBASUNDARAM

காந்தி பிறந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு பெரியார் பிறந்தார். சென்னை மாகாணத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்திருந்த நெசவுத் தொழிலுக்குப் பேர்போன ஈரோட்டில் வளர்ந்தார். வர்த்தகர்களும் விவசாயிகளும் அடங்கிய அவரது ஜாதி, ஜாதிப் படிநிலையின்படி ஒரு இடைநிலைச் ஜாதி. வர்த்தகரான அவருடைய தந்தை, சற்று வசதியானவர் என்பது அவருக்கு பாதுகாப்பாக அமைந்தது. நல்ல வீடு, பணியாளர்கள் என்ற சூழலில் வளர்ந்த அவரால், கலகக்காரராக இருக்க முடிந்தது ஆச்சரியமல்ல.

ஆரம்ப காலத்தில் பெரியாரின் தந்தை, அவருக்கு சமஸ்கிருத பாணியிலான வாழ்க்கை முறையைக் கற்றுக்கொடுக்க பல சாதுக்களையும் பிராமண குருக்களையும் நியமித்தார். ஆனால், அவர்களை பெரியார் கேள்விகளால் துளைத்தெடுத்தார். அவர்கள் வீட்டிற்கு வருவதை நிறுத்திக்கொண்டனர். அவர்களுடைய போதனைகள் இளம் வயதுப் பெரியாரை வசீகரிக்கவில்லை. ஆனாலும் இந்துக்களின் புனித நகரான காசிக்கு யாத்திரை செல்லுமளவுக்கு பெரியார் இந்துவாகத்தான் இருந்தார். இங்கே நடந்த சம்பவங்கள் அவரது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தன. அதைப் பற்றி அவர் தொடர்ந்து குறிப்பிட்டுவந்தார்.

பிராமணர்களுக்கு தன்னுடைய தந்தை பெரும் விருந்தளித்ததை எதிர்த்து எப்படி காசிக்குப் போனார், அங்கிருந்த பண்டிதர்கள் காசு பிடுங்குவது எப்படி தனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது, பிராமணரல்லாதாரிடம் அவர்கள் எவ்வளவு வெறுப்புடன் நடந்துகொண்டார்கள் என்பதையெல்லாம் அவர் தொடர்ந்து சொல்லிவந்தார். அவருடைய ஜாதியின் காரணமாக காசியிலிருந்த கடைகள் எதிலுமே அவருக்கு உணவு கிடைக்கவில்லை. ஒரு தருணத்தில் இறந்தவருக்காகப் படைக்கப்பட்ட இலையில் எஞ்சியிருந்தை உண்டு, பசியைத் தீர்த்துக்கொண்டார்.

எல்லோரும் கருதுவதைப்போல, இந்த அனுபவங்கள் உடனடியாக அவரது வாழ்வை மாற்றிவிடவில்லை. ஆனால், பிராமணர்களுக்கு எதிராக சிறிய நெருப்பொன்று அவருக்குள் பற்றி எரிய ஆரம்பித்தது. அந்த வயதில்தான் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தார். சுயமாகக் கற்க ஆரம்பித்தார்.

இந்த காலகட்டத்தில் நடந்த ஒரு முக்கியான நிகழ்வை கேம்பிரிட்ஜைச் சேர்ந்த தென்னிந்திய வரலாற்றாசிரியரான டேவிட் வாஷ்ப்ரூக் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, 1880களிலிருந்தே சென்னையிலிருந்த அறிவுஜீவிகள் இந்து நம்பிக்கைகளையும் சடங்குகளையும் நவீன அறிவியல் பார்வையுடன் இணைக்க முடியுமா என்று தீவிரமாக விவாதித்துவந்தனர்.

அந்த காலகட்டத்தில்தான் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிராக உருவெடுத்த அன்னி பெசன்டின் பிரம்மஞான இயக்கம் பிராமண இந்து மதத்திற்கு ஒரு அறிவியல் ரீதியான பார்வையைத் தந்தது. இது தென்னிந்தியாவில் இருந்த மேல் ஜாதி இந்துக்களுக்கு ஒரு வரமாக அமைந்தது. இனிமேல் அவர்கள் தங்களுடைய சடங்கு சம்பிரதாயங்களையும் ஜாதி அமைப்பையும் ஒரு நவீன பார்வையில் முன்வைத்து வாதாட முடியும்.

பெரியாரைப் பொறுத்தவரை, காப்பாற்றிக் கொள்ள அவருக்கென ஜாதிப் பெருமிதம் ஏதும் இல்லை. அதனால், பகுத்தறிவின் பாதையில் தீவிரமாக நடைபோட ஆரம்பித்தார் பெரியார். 'கடவுளோடு எனக்கு என்ன விரோதம்? அவரை நான் ஒரு முறைகூட சந்தித்ததில்லை என கேலியாக சொல்வார் பெரியார்' என்கிறார் பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிவரும் பேராசிரியர் ஏ.ஆர். வேங்கடாசலபதி.

பெரியார்: புனிதங்களைச் சுட்டுப் பொசுக்கியவர்

பெரியார் பகுத்தறிவுப் பாதையில் இயங்குவதற்கு அவருடைய பொருளாதாரச் சூழலும் உதவியது. பிரமணீயத்திற்கு எதிரான ஒரு மரபை நாம் ஏற்கனவே மகாவீரரிடமும் புத்தரிடமும் பார்த்திருக்கிறோம். அவர்கள், தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களில்லை. மாறாக, ஜாதி அடுக்கில் மேல்நிலையில் இருந்ததோடு, செல்வமும் கொண்டிருந்தவர்கள். இருந்தபோதும் இந்தியாவின் மிகப் பழமையான ஜாதிப் படிநிலையை எதிர்த்துப் போராட அவர்கள் முன்வந்தார்கள்.

தன் இருபதுகளிலும் முப்பதுகளிலும் பெரியார் தெருவில் இறங்கி கலகக்குரல் எழுப்புபவராக இல்லை. காசியிலிருந்து அவர் ஊர் திரும்பிய காலகட்டத்தில் உருவாகியிருந்த தேசிய அலையிலும் அவர் ஈர்க்கப்படவில்லை. மாறாக, திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய குடும்பத் தொழிலை விருத்திசெய்து, அதனை கோயம்புத்தூரின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமாக மாற்றினார். அவருடைய நிர்வாகத் திறமையின் காரணமாக 1918ல் ஈரோடு நகராட்சியின் தலைவராகவும் தேர்வுசெய்யப்பட்டார்.

கேரளாவில் உள்ள கோட்டயம் தற்போது இந்தியாவின் மிகவும் முற்போக்கான இடங்களில் ஒன்று. எழுத்தறிவு விகிதம் இங்கே 90 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பே இது புகையிலை இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த மாவட்டத்தின் வைக்கம் நகரில் மிகப் பழமையான சிவன் கோவில் ஒன்று ஊரின் மையத்தில் அமைந்திருக்கின்றது. இந்தக் கோவிலை நம்பூதிரி பிராமணர்கள் நிர்வகித்துவந்தனர். நாற்பதை நெருங்கிக் கொண்டிருந்த பெரியாரை அந்தக் கோவிலுக்குச் செல்லும் சாலைகள்தான் அரசியலை நோக்கி நகர்த்தின.

இந்த மகாதேவர் கோவிலுக்குள் மட்டுமல்ல, அந்தக் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளிலும் தாழ்த்தப்பட்டோர் நுழையக்கூடாது என நம்பூதிரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இது பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்தது. திருவிதாங்கூர் மாகாணத்தில் 1920களின் துவக்கத்திலேயே கோவில்களில் நுழைய எல்லா இந்துக்களையும் அனுமதிக்க வேண்டுமெனக் கோரி தாழ்த்தப்பட்டோர் இயக்கங்கள் போராடிவந்தன. இல்லாவிட்டால் தாங்கள் கிறிஸ்தவ மதத்திற்கோ, இஸ்லாத்திற்கோ மாறிவிடுவதாக அவர்கள் கூறினர். இந்த இயக்கத்தின் மையப்புள்ளியாக வைக்கம் கோவில் உருவெடுத்தது. 1924வாக்கில் காந்தி இதில் ஈடுபட ஆரம்பித்தார். தீண்டாமை குறித்த ஒரு போராட்டத்தை முதன்முதலாக அவர் துவங்கியது அப்போதுதான்.

பெரியார்: புனிதங்களைச் சுட்டுப் பொசுக்கியவர்படத்தின் காப்புரிமைTWITTER

அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் உயர் பதவிகளில் பிராமணரல்லாத வெகு சில தமிழ்த் தலைவர்களே இருந்தது காங்கிரஸ் கட்சிக்கு சங்கடத்தை உருவாக்கியிருந்தது. பிராமணர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் கட்சி என்ற பெயரை உடைக்க, புதிய தலைவர்களை அந்தக் கட்சித் தேடிக்கொண்டிருந்தது. செல்வம்மிக்க, தன்னம்பிக்கைமிக்க பெரியார், வைக்கம் போராட்டத்திற்கு சற்று முன்பாக கட்சியில் சேர்க்கப்பட்டார்.

வைக்கம் போராட்டத்தை வழிநடத்த அப்போது காங்கிரசிற்கு ஒரு பிராமணரல்லாத தலைவர் தேவைப்பட்டார். பெரியார் சரியாக அந்தப் பாத்திரத்தில் பொருந்தினார்.

மிகுந்த நம்பிக்கையுடனேயே தேசிய அரசியலில் ஈடுபட்டார் பெரியார். தன்னைப் போலவே இடைநிலைச் சாதியைச் சேர்ந்த காந்தி, பிராமண ஆதிக்கத்தில் உள்ள காங்கிரஸ் தலைமைக்கு எதிராக இருப்பார் எனக் கருதினார் பெரியார். தேசியவாதத்தையும் ஜாதிச் சமத்துவ நிலையையும் இணைக்க முடியும் என அவர் கருதினார்.

ஆனால், வைக்கம் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளைத் திறந்துவிட்டால் போதும் என்பதுதான் காந்தியின் பார்வையாக இருந்தது. கோவிலுக்குள் அனைவரையும் அனுமதிக்க வேண்டுமென்ற போராட்டக்காரர்களின் கோரிக்கையை பெரியார் ஆதரித்தார். இந்தப் போராட்டத்தில் அவர் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரியார் சிறையில் இருக்கும்போது காந்தி, நம்பூதிரி பிராமணர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தாழ்த்தப்பட்ட ஜாதியினர் 'அவர்களுக்கு விதிக்கப்பட்ட கர்மாவை அனுபவிக்கின்றனர்' என அங்கிருந்த பிராமணர்களில் ஒருவர் சொன்னார். காந்தி அதை ஏற்றுக்கொண்டார். ஆனாலும், "கடவுளின் இடத்தை எடுத்துக்கொண்டு, அவர்களது தண்டனையை அதிகரிக்க நாம் யார்?" என்று கேள்வியெழுப்பினார்.

1925ல் திருவிதாங்கூரின் புதிய மகாராணி ஒரு ஏற்பாட்டிற்கு வந்தார். அதாவது, கோவிலைச் சுற்றியுள்ள சாலைகள் சிலவற்றில் எல்லோரும் செல்லலாம். ஆனால், பிரதான வாயிலுக்குள் பிராமணர்கள் மட்டுமே செல்லலாம் என்பதுதான் அந்த ஏற்பாடு. 1936வரை ஒடுக்கப்பட்ட ஜாதியினர் கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு நடத்த அனுமதிக்கப்படவில்லை.

வைக்கத்தின் ஆச்சாரக் கோட்டையில் ஒரு ஓட்டையை ஏற்படுத்தியதால், காங்கிரசைப் பொறுத்தவரை வைக்கம் சத்தியாகிரகம் ஒருவகையில் வெற்றிதான். ஆனால், பெரியாரைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய ஏமாற்று வேலை. காந்தி, ஒடுக்கப்பட்ட ஜாதியினரை விற்றுவிட்டார் எனக் கருதினார் பெரியார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரசை விட்டு விலகினார். காந்தியை அவர் மன்னிக்கவேயில்லை. தன் குடும்பச் சொத்தைவைத்து சுய மரியாதை இயக்கத்தை துவங்கினார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட திராவிட மொழிகளைப் பேசும் தென்னிந்தியாதான் அவரது களமாக இருந்தது. அவருடைய செயல் திட்டங்கள் பல சமயங்களில் காந்தியின் செயல்திட்டங்களுக்கு மாறானதாக இருந்தது.

(தொடரும்)

(கட்டுரையாளர் புகழ்பெற்ற இந்திய வரலாற்றாசிரியர். லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் இயக்குனர். அரசியல் துறை பேராசிரியர். நவீன இந்தியாவை உருவாக்கிய மகத்தான ஐம்பது ஆளுமைகளின் வரலாற்றைச் சொல்லும் இவருடைய Incarnations: India in 50 Lives புத்தகத்தில் பெரியார் குறித்து எழுதப்பட்ட, Sniper of the sacred Cow கட்டுரை பெரியாரின் பிறந்த நாளை ஒட்டி தமிழில் இங்கே வழங்கப்படுகிறது. Allen Lane ஆங்கில நூலை வெளியிட்டது. இந்தப் புத்தகத்தை தமிழில் சந்தியா பதிப்பகம் வெளியிடுகிறது. இந்தக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு: முரளிதரன் காசி விஸ்வநாதன்)

https://www.bbc.com/tamil/india-49718507

Link to comment
Share on other sites

மானுட சமத்துவத்திற்காக ஓய்வின்றி உழைத்த பெரியாரின் கோட்பாடுகள் ஈழத்தமிழரிடத்தே முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டது மிகவும் துர்ப்பாக்கியமானது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரும் ஒரு புனிதப் பசு ஆக்கப்பட்டுவிட்டாரா?

சுனில் கில்னானிவரலாற்றாசிரியர்
பெரியார்படத்தின் காப்புரிமைTWITTER

காந்தியும் அவரது தொண்டர்களும் வெண்ணிற ஆடையை உடுத்தியபோது, தன் தொண்டர்கள் கறுப்பு நிற ஆடையை உடுத்த வேண்டுமெனக் கூறினார் பெரியார். தன்னைப் பின்பற்றுவோரின் மத நம்பிக்கைகளை காந்தி, தடவிக்கொடுத்தபடி கடந்துசென்றார்.

பெரியார் தன் பேச்சைக் கேட்க வந்தவர்களின் மத நம்பிக்கையையும் ஜாதிப் பழக்கவழக்கங்களையும் தூற்றினார். அவர்களை முட்டாள்கள் என்றார். அவர்களின் கடவுள்களை செருப்பால் அடிக்கப்போவதாகச் சொன்னார். காந்தி, தேசிய இயக்கத்தைக் கட்டியெழுப்ப விரும்பினார். பெரியாருக்கு திராவிட தென்னிந்தியா போதுமானதாக இருந்தது.

பெரியாரின் சிந்தனைகளுக்கான தத்துவ மூலம் எது என்பதைக் கண்டறிவது மிகச் சிக்கலானது. பெரியாரின் கடிதங்கள், காகிதங்கள், குறிப்புகளை வைத்து பல ஆண்டுகள் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி, பெரியாரைப் பொறுத்தவரை தன்னுடைய சொந்தக் கருத்தாக இல்லாதவற்றை மேற்கொள்காட்டிச் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்கிறார்.

ஆனால், பெண்ணுரிமை, பெண் விடுதலை குறித்த பெரியாரின் சிந்தனைகளுக்கு 1927ல் வெளியான சர்ச்சைக்குரிய ஒரு புத்தகம் காரணமாக அமைந்தது. காந்திக்கும் காங்கிரசிற்கும் சுத்தமாகப் பிடிக்காத புத்தகம் அது.

அந்தப் புத்தகம் அமெரிக்க பத்திரிகையாளரான கேத்தரீன் மேயோ எழுதிய 'மதர் இந்தியா' எனும் நூல். இந்து சடங்கு சம்பிரதாயங்கள் எப்படியெல்லாம் பெண்களைச் சுரண்டுகின்றன என்பதை இந்தப் புத்தகத்தில் வெளிப்படுத்தியிருந்தார் கேத்தரீன் மேயோ.

பெரியார்

குழந்தைத் திருமணம், பாலியல் நோய்கள், விதவைகள் நடத்தப்படும்விதம் குறித்த புள்ளிவிவரங்களுடன் இந்தக் கருத்தை அவர் முன்வைத்தார். பதினான்கு வயதுக்கு முன்பாக பெண்கள் திருமணம் செய்துகொடுக்கப்படும் பாரம்பரியத்தை அரசு ஏற்பது குறித்தும் அவர் தனது புத்தகத்தில் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரத்தில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென சில காங்கிரஸ் தலைவர்கள் விரும்பினார்கள் என்பது உண்மைதான். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து இம்மாதிரி கருத்து வெளிவந்தது, இந்திய சுயாட்சி என்பது பெண்களுக்கு மிக மோசமான விஷயமாக அமையும் என்பதைப் புலப்படுத்தியது.

கேத்தரீன் மேயோ பிரிட்டிஷ் உளவாளி என்ற சந்தேகம் பல இந்தியர்களுக்கு இருந்தது. காங்கிரஸ் தலைவர்களைப் பொறுத்தவரை இந்து மதம்தான் பெண்களின் மிகச் சிறந்த பாதுகாப்பு என்றார்கள்.

மதர் இந்தியாவில் சொல்லப்பட்ட கருத்துகளை பெரியார் வேறு மாதிரி பார்த்தார். இந்து மதத்தின் மீதான தாக்குதல் அவருக்கு மகிழ்ச்சியளித்தது என்றாலும் இந்த சர்ச்சையினால் மேலே வந்த சமூகப் பிரச்சனைகளையும் ஐரோப்பாவில் உருவாகியிருந்த பெண்ணிய இயக்கங்களைப் பற்றியும் அவர் அறிந்துகொண்டார்.

1920களின் பிற்பகுதியிலிருந்தே இந்தியப் பெண்களின் உரிமை குறித்த விவகாரம் சுயமரியாதைப் பிரசாரத்தின் முக்கியமான பகுதியாக இருந்தது. தன்னுடைய உரைகளிலும் தன்னுடைய வாரப் பத்திரிகையிலும் நேரடியாகவும் போலிப் பூச்சுகள் இன்றியும் இவற்றை முன்வைத்தார் பெரியார்.

பெரியார்

பெரியாரின் உணர்ச்சிகரமான பேச்சு வழக்கிலான உரைகள் அவரை நகர்ப்புறத்தினரைத் தாண்டி, தமிழ் நிலமெங்கும் கொண்டு சேர்த்தன.

1928-29ல் கிராமப்புற ஆண்களும் பெண்களும் சுயமரியாதைத் திருமணங்களைச் செய்துகொள்ள ஆரம்பித்தனர். பெரும்பாலும் காதல் திருமணங்களான இவை, பிராமண பூசாரிகளும் மந்திரங்களும் இன்றி நடத்தப்பட்டன.

பல நாட்கள் நடக்கும் விமரிசையான திருமணங்களுக்குப் பதிலாக, பெரியார் முன்வைத்த திருமணம் எளிதாகவும் வேகமானதாகவும் இருந்தது.

சடங்குகளுக்காக வாரி இறைக்கப்படும் பணத்தை அந்தத் தம்பதிக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் கல்விக்கு செலவழிக்கலாம் என்றார் பெரியார். அதே நேரம், பாலியல் உறவு என்பது வெறுமனே குழந்தை பெற்றுக்கொள்வதற்காகத்தான் என்று போலித்தனமாக இந்தத் திருமணங்களில் முன்வைக்கப்படவில்லை.

பெரியார் கடைசியாக பேசியது என்ன? - கி. வீரமணி பேட்டி

சுய மரியாதை இயக்கத்திற்கு அதிகாரபூர்வமாக ஐந்து கொள்கைகள் இருந்தன: கடவுள் ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டும், காந்தி ஒழிய வேண்டும், காங்கிரஸ் ஒழிய வேண்டும், பிராமனர் ஒழிய வேண்டும் என்பவையே அவை.

ஆணாதிக்கத்தை ஒழிப்பது என்பது கூடுதல் லட்சியம்தான். ஆனால், காலம் செல்லச்செல்ல பெண்ணும் மாப்பிள்ளையும் சமமாக நடத்தப்படும் சுயமரியாதைத் திருமணங்கள் மிக முக்கியமானவையாக, திருப்புமுனைத் தருணங்களாக அமைந்தன.

பிராமணர்கள் நடத்தும் சடங்குகளை மையமாக வைத்து எழுந்திருந்த இந்து சமூகத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வழியாக இவை அமைந்தன.

பெரியாரின் கொள்கைகளை கிராமம் கிராமாக பரப்ப இவை பயன்பட்டன. தர்க்கரீதியான, பகுத்தறிவின் அடிப்படையிலான விவாதங்கள், ஆண் - பெண் இடையில் ஒளிவுமறைவற்ற பேச்சுகளுக்கு இவை வழிவகுத்தன.

பெரியாரைப் பொறுத்தவரை ஜாதிக்குள்ளேயே வீட்டார் பார்த்து, செய்துவைக்கும் திருமணங்கள் பெண்களின் கல்வியின்மைக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.

யாருக்கோ திருமணம் செய்துகொடுக்கும்போது, பெண்கள் ஏதும் தெரியாதவர்களாக இருப்பதை பெற்றோர் விரும்பினார். விளையாட்டுகளில் பங்கேற்பதன் மூலம் பெண்கள் அறிவு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டுமென பெரியார் கூறினார்.

இந்தப் பெண்கள் வளர்ந்து திருமணம் செய்யும்போது - அவர்களே தேர்வுசெய்த ஆணைத் திருமணம் செய்வது சிறந்தது - குழந்தை பிறப்பைக் கட்டுப்படுத்த அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமென பெரியார் விரும்பினார்.

இது மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காகச் சொல்லப்பட்ட கருத்து அல்ல. இது ஆண் - பெண்களின் உடலமைப்பு, பாலியல் நடவடிக்கைகள் ஆகியவை வாழ்வின் பிற அம்சங்களிலும் எப்படி எதிரொலிக்கும் என்பதை வைத்துச் சொல்லப்பட்ட கருத்து.

வட இந்திய மாணவர்கள் பெரியார் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

பெரியார் நெறிமுறைகளற்ற வாழ்க்கை முறையை, ஒழுக்கக்கேட்டை ஊக்குவிப்பதாக தமிழ் இதழ்கள் எழுதின. ஒரு திருமணத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் சொன்னார் பெரியார்:

"'மனைவி, கணவனை மதிக்க வேண்டும் என்றால் ஏன் கணவன், மனைவியை மதிக்கக் கூடாது? மனைவிதான் புகுந்த வீட்டின் உறவுகளை மதிக்க வேண்டுமென்றால் ஏன் மனைவி வீட்டு உறவுகளை, கணவன் மதிக்கக் கூடாது? மனைவி, கணவனுக்குச் செய்வதை கணவன், மனைவிக்குத் திருப்பிச் செய்ய முடியாது என்றால் பெண் என்பவள் வீட்டு வேலைக்கும், உடல் சுகத்துக்கும் மட்டுமே ஆனவள் என்று ஆகவில்லையா? இப்படிப்பட்ட திருமணங்கள் நாட்டில் அரை நொடிகூட நீடித்திருக்க அனுமதிக்கக் கூடாது".

1920ல் கம்யூனிஸ ரஷ்யாவில் நடந்துகொண்டிருந்த சமூக மாற்றங்களின் மீது ஆர்வம் கொண்டார் பெரியார். 1931ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவர் ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டார். அவர் கிட்டத்தட்ட ஒரு வருடம் வெளிநாட்டில் செலவழித்தார்.

அண்ணாவும், பெரியாரும்படத்தின் காப்புரிமைARUNKUMARSUBASUNDARAM

இது இந்திய பொதுப் புத்தியிலிருந்து மேலும் அவரை விலகச்செய்தது. பெர்லினில் அவர் நிர்வாண முகாம்களுக்கும் சென்றார். தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலில் அந்தப் படம் இடம்பெற வேண்டுமெனவும் கூறினார்.

அவர் நாடு திரும்பும்போது, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கருத்தடை சாதனங்கள் ஆகியவையே இந்தியாவை முன்னேற்றும் என்ற நம்பிக்கை அவருக்குள் ஆழமாக பதிந்திருந்தது.

விவாகரத்து தொடர்பான சோவியத்தின் கொள்கைகள், குழந்தைகளைப் பாதுகாப்பதில் அரசின் ஆதரவு ஆகியவை குடும்பம் என்ற அமைப்பை எப்படி மாற்றுகின்றன, குடும்பம் என்ற அமைப்பின் தேவையை எப்படிக் குறைக்கின்றன என்பதைக் கவனிப்பதில் அவர் ஆர்வம் காட்டினார்.

அவர் அங்கே எதிர்கொண்ட வேறு சில பொருளாதாரக் கொள்கைகளும் அவருக்கு ஆர்வமூட்டின. அவர் திரும்பிவரும்போது, தொழிலாளர்களுக்கு சம்பளம் தருவதற்குப் பதிலாக லாபத்தில் பங்களிக்க வேண்டும், அவர்களை அந்தத் தொழிற்சாலையின் பங்காளிகளாக்க வேண்டுமென்ற சிந்தனையை முன்வைத்தார். தன் குடும்பத் தொழில்களில் அவற்றை அறிமுகப்படுத்தினார்.

அரசியல் பதவிகளில் ஆர்வம்காட்டாமல், மக்களின் மனநிலையில் தாக்கம் செலுத்தி, சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவதில் பெரியார் தன் பெரும் எதிரியான காந்தியைப் பின்பற்றினார் என்று சொல்லப்படுவதுண்டு.

1948ல் பெரியார் தன்னைவிட வயதில் மிக இளைய பெண்ணை - மணியம்மையை - திருமணம் செய்தபோது அவருடைய ஆதரவுதளம் வெகுவாகக் குறைந்தது.

பெரியார்படத்தின் காப்புரிமைTWITTER

சுய மரியாதை இயக்கத்தின் ஒரு பிரிவினர் இந்தத் திருமணத்தை கடுமையாக எதிர்த்தனர். அதில் சூழ்ச்சி இருப்பதாகக் கூறினர். பிறகு அவர்கள் பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினர்.

தி.மு.கவும் அதிலிருந்து பிறந்த மற்றொரு திராவிடக் கட்சியான அ.தி.மு.கவும் இப்போது அரை நூற்றாண்டிற்கும் மேலாக தமிழக அரசியலை ஆதிக்கம் செய்கின்றன.

சுதந்திர இந்தியாவின் தேர்தல் அரசியலில் பெரியார் ஒரு குறிப்பிடத்தக்கத் தாக்கத்தைச் செலுத்தினார். பல ஆண்டுகள் முக்கிய வேட்பாளர்களுக்காக அவர் பிரசாரம் மேற்கொண்டார். மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கு அவரை 'கிங் மேக்கராக'க் காட்டியது.

இதனால், அரசின் மீதும் சட்டமன்றங்களின் மீதும் வெளியிலிருந்து அவரால் அழுத்தம் கொடுக்க முடிந்தது. எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், இப்படி அதிகாரம் செலுத்துவது அவருக்கு வசதியாகவே இருந்தது.

அம்பேத்கரைப் போல, பெரியார் தன் கருத்தாக்கங்களை இந்தியா முழுமைக்கும் முன்வைக்கவில்லை. தென்னிந்தியாவின் திராவிடக் கலாசாரத்திலேயே அவரது வேர்கள் ஆழப்பதிந்திருந்தன. அந்தக் கலாசாரத்தில் அவருடைய சிந்தனைகள் தீவிரமாக ஊறியிருந்தன.

ஆனால், புனிதங்களைச் சுட்டுப் பொசுக்கிய அவரே ஒரு புனிதப் பசுவாக உருமாறினார். 1948ல் நடந்த திருமணத்திற்குப் பிறகு, அடுத்த இருபதாண்டுகளுக்கு பெரியாரை ஒதுக்கிவைக்க முயன்ற அரசியல்வாதிகள் பிறகு வேறு மாதிரி நடந்துகொண்டனர்.

பெரியார்

1973ல் அவர் மரணமடைந்தபோது, "எல்லா பெரிய அரசியல் கட்சிகளுமே தாங்கள் பெரியாரின் பாரம்பரியத்தையே பின்பற்றுவதாகச் சொல்லின. இத்தனைக்கும் அவர் விரும்பாத பல காரியங்களை அவர்கள் செய்துவந்தனர்" என்கிறார் டேவிட் வாஷ்ப்ரூக்.

மக்கள்தொகை ஆய்வாளர்களும் மருத்துவ - அறிவியல் வரலாற்றாசிரியர்களும் தென்னிந்தியப் பெண்கள் முன்னேற்றத்திலும் சுகாதார மேம்பாட்டிலும் பெரியாரின் பங்களிப்பு மிகைப்படுத்திச் சொல்லப்படுவதாக நியாயமாகவே கருதுகிறார்கள். பெரியார் பிறப்பதற்கு முன்பாகவே தென்னிந்தியாவில் ஏற்படத் துவங்கியிருந்த மாற்றங்களே இதற்குக் காரணம் என்கிறார்கள் அவர்கள்.

ஆனால், முதலாம் உலகப்போருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் இடையில் தமிழகத்தில் மக்கள்தொகை வெகுவாகச் சரிந்ததற்கு கருத்தடை முறைகள் குறித்த அவரது தீவிரப் பிரசாரம் முக்கியக் காரணம்.

வேறு எந்தப் பங்களிப்பும் இல்லையென்று வைத்துக்கொண்டாலும்கூட, அவர் தன் சிந்தனைகளை விவாதத்திற்குக் கொண்டுவந்தார். மக்களின் மனதில் பதிய வைத்தார். கிராமப்புறங்களிலும் நகர்ப்புறத்திலும் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக பெரும் செல்வாக்குப் படைத்திருந்த பெரியாரின் பிரசாரங்களுக்கும் பெண்களின் முன்னேறத்திற்கும் தொடர்பே இல்லை என்று சொல்வது, பெரியாரைப் போலவே சொல்வதென்றால் - முட்டாள்தனமானது.

தமிழகத்திற்கு வாய்த்த மகத்தான பாரம்பரியத்தையும் மீறி, தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றம் தற்போது தேக்கமடைந்திருக்கிறது. ஆனால் காலம்காலமாக ஏழ்மையாக இருந்த வட - கிழக்கு பழங்குடியின மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றன. 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி பார்த்தால், மிகச் சிறிய மாநிலமான சிக்கிம், பெண்கள் எழுத்தறிவில் தமிழகத்தைத் தாண்டி நிற்கிறது.

பெரியார் சிலை

எழுத்தறிவு விகிகத்தில் ஆண் - பெண் இடையிலான வித்தியாசம் குறைவது, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் ஆண் - பெண் வித்தியாசம் குறைவது போன்றவற்றுக்கு பல காரணங்கள் இருக்கும்.

ஆனால், நீடித்த, தீவிரமான பிரசாரம் இவற்றில் மிக முக்கியமானது. பெண்ணுரிமைக்காகப் போராடுபவர்கள் தேர்தல் சமயத்தில் குரல்கொடுக்காமல், பெரியாரைப் போல தொடர்ந்து மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும். மக்களிடம் சென்று பேசுவது உடனே வெற்றியைத் தந்துவிடாது. ஆனால், நீண்ட கால நோக்கில் இந்தியப் பெண்கள் குடியரசில் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

(கட்டுரையாளர் புகழ்பெற்ற இந்திய வரலாற்றாசிரியர். லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் இயக்குநர். அரசியல் துறை பேராசிரியர். நவீன இந்தியாவை உருவாக்கிய மகத்தான ஐம்பது ஆளுமைகளின் வரலாற்றைச் சொல்லும் இவருடைய Incarnations: India in 50 Lives புத்தகத்தில் பெரியார் குறித்து எழுதப்பட்ட, Sniper of the sacred Cow கட்டுரை பெரியாரின் பிறந்த நாளை ஒட்டி தமிழில் இங்கே இரண்டு பாகங்களாக வழங்கப்படுகிறது.

முதல் பாகம் பெரியார்: புனிதங்களை சுட்டுப் பொசுக்கியவர் என்ற தலைப்பில் வெளியானது. இது இரண்டாவது மற்றும் இறுதி பாகம்.

Allen Lane ஆங்கில நூலை வெளியிட்டது. இந்தப் புத்தகத்தை தமிழில் சந்தியா பதிப்பகம் வெளியிடுகிறது. கட்டுரையின் மொழிபெயர்ப்பு: முரளிதரன் காசி விஸ்வநாதன்)

https://www.bbc.com/tamil/india-49728753

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.