அதிபர் வேட்பாளராக களமிறக்கப்படுகிறார் முன்னாள் இராணுவத் தளபதி?

mahesh-senanayake-300x200.jpg

அதிபர் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை வேட்பாளராக களமிறக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக,  தேசிய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்கக் கூடிய ஒரு வேட்பாளர் குறித்தும்,  அரசியல்வாதி அல்லாத ஒரு வேட்பாளரை நிறுத்துவதன் நன்மை தீமைகள் குறித்தும் தேசிய மக்கள் இயக்கம் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவிடம் கேட்டபோது, அவ்வாறான முடிவை தான் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

“நேரம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். நாட்டின் அரசியல் முறையில் மாற்றம் இருக்க வேண்டும். இந்த சிக்கலை தீர்க்க உதவ நான் தயாராக இருக்கிறேன். இருப்பினும், தேர்தலில் போட்டியிட நான் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

நாட்டின் அரசியல் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படும் புலமையாளர்களைக் கொண்ட தேசிய மக்கள் இயக்கம், முன்னதாக, முன்னாள் சட்டமா அதிபர் காமினி விஜேசிங்கவை அதிபர் வேட்பாளராக களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.