Jump to content

சீதனம் வேண்டாம் - சிறுகதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

thaamboolam-muthal-thirumanam-varai_755.

 

மகளின் திருமணம் கூடி வந்ததில் வாணிக்கு மனதில் நின்மதி குடிகொண்டது. மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி பல்கலைக்கழகம் அனுப்பி வைத்து மூத்த மகளும் இரண்டாவது மகளும் வேலையும் செய்யத் தொடங்கியாயிற்று. ஆனாலும் இன்னும் வாணியால் நின்மதியாக இருக்க முடியவில்லை. பிள்ளைகளைக் கலியாணம் கட்டிக்கொடுத்தால்த்தான்  ஒரு பெரிய பாரம் குறைஞ்ச மாதிரி. படிச்சு முடிக்கும் வரைக்கும் கூட பிள்ளைகள் இருவரும் யாரையாவது காதலிக்கிறேன் என்று கொண்டு வந்தால் என்ன செய்வது என்ற பயம் கூடவே ஓடிக்கொண்டே இருந்ததுதான். காதலிக்கிறது தப்பில்லை. ஆனால் வெள்ளையையோ அல்லது காப்பிலியையோ அல்லது வேற படிக்காமல் ஊர் சுத்துற எங்கட காவாலியள் யாரின் வலையில் பிள்ளைகள் விழாமல் இருக்கவேணும் எண்டு வேண்டாத  தெய்வங்கள் இல்லை. பிள்ளைகளுக்கும் சாடைமாடையாக ஒழுங்காய் இருக்கவேணும் எண்டு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிச் சொல்லி நல்லகாலம் அவர்கள் இருவரும் யாரிடமும் மாட்டுப்படேல்லை.

இது தானாக வந்த சம்மந்தம். வீட்டுக்குக் கடைசிப் பெடியன். தகப்பன் இல்லை சீதனம் எதுவும் கேட்க மாட்டினம் என்று நண்பி குடுத்த சாதகத்தை வாங்கிப் பொருத்தம் பார்த்த வாணிக்குச் சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை. 80 வீதம் பொருத்தம். இதை விட்டுடாதேங்கோ என்று  பொருத்தம் பார்த்த அய்யர் சொன்ன உடனேயே தொலைபேசி இலக்கம் வாங்கி பெடியனின் தாயுடன் கதைத்துவிட்டாள் வாணி. மகளின் படத்தை அனுப்பச் சொன்னதும் வற்சப்பில் அனுப்பி அது தாய்க்குப் பிடிச்சு பிறக்கு மகனுக்கும் பிடிச்சு பெடியன்ர படத்தையும் அனுப்பி மகள் பார்த்துப் பிடிச்சிருக்கு என்ற பிறகு நேர்ல தாயும் மகனும் வர பையனைப் பார்த்து  வாணிக்கு நின்மதி வந்தது. சிலபேர் படத்தில வடிவாயிருப்பினம். நேர்ல பார்க்க சப் என்று இருக்கும்.

என்ன இருந்தாலும் மூத்த மருமகன் எல்லே. களையாக இருந்தாலும் படிப்பு கொஞ்சம் சுமார் தான். அவசரப்படாதையென்று கணவன் கூறியதை வாணி ஏற்கவில்லை. எங்கட பிள்ளையும் பிஸ்நெஸ் மானேஜ்மென்ட் தானே படிச்சவள். பெடியன்ர பக்கம் பிரச்சனையில்லை. இதையே செய்வம் என்று ஒருவாறு கலியாணக்காட் அடிக்கிற வரையும் வந்தாச்சு. பெடியன் ரெஸ்க்கோவில மனேச்சராய் இருக்கிறான். அது காணும். வேலை வெட்டியில்லாத பெடியளுக்கே எங்கடை ஆட்கள் பிள்ளையளைக் கலியாணம் கட்டிக்குடுக்கினம். அதுக்கு இது எவ்வளவோமேல் என்று மனதையும் ஆறுதல்படுத்தி கணவனின் வாயையும் அடைத்து விட்டாள். உங்கை எத்தினை குமர்ப்பிள்ளைகள் முப்பது முப்பத்தைந்து கடந்தும் கலியாணம் கட்டாமல் இருக்குதுகள். அப்பிடிப் பார்க்கேக்குள்ள பெடியன் நல்ல பெடியனாத் தெரியிறான் என்று மனதுள் கூறிக்கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிக்கிறாள்.  

அவள் காலையில் பத்து மணிமுதல் பள்ளி ஒன்றில் டின்னர் லேடியாக வேலை செய்வது. பின்னர் மாலை மூன்றுமணிக்கு இந்த வேலை முடிய  ஐந்து மணியிலிருந்து பதினொருமணிவரை சான்விச் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை. கணவனும் அங்கேயே வேலை செய்வதால் இரவுவேலை முடிய கணவனுடனேயே வீட்டுக்கு வருவதில் எந்தப்பிரச்சனையும் இல்லை. எதுக்கு இரவிரவா வேலை செய்யிறாய். பின்னேரம் பிள்ளையளுடன் இரன் என்று கணவன் கூறியதையும் கேட்கவில்லை. வீட்டு மோற்கேஜ் இன்னும் ஒண்டரைலட்சம் இருக்கு. அதையும் கட்டி முடிச்சிட்டா நின்மதியாக இருக்கலாம் என்பதும் பிள்ளைகளின் திருமணத்துக்கு எப்பிடியும் ஒரு ஐம்பதாவது வேணும் என்னும் அவளின் கணக்கும் எவ்வளவு சொல்லியும் கணவனுக்குப் புரியாதது கவலைதான்.

ஒருவாறு இரண்டு நகைச் சீட்டுப் போட்டுப் போட்டு ஏற்கனவே கொஞ்ச  நகைகள் வாங்கி வைத்திருக்கிறாள். மக்களின் சம்பளமும் இவள் கட்டுப்பாட்டில் தான். அந்தவரை பிள்ளைகளை தான் நன்றாக வளர்த்திருப்பதாக இறுமாப்பு இவளுக்கு. கலியாணக் காட் தெரிவு செய்யவே நாலு நாட்கள். சிம்பிளாய் இருக்கட்டும் என்று பார்த்தால் மகள் தெரிவு செய்த ஒரு காட் இரண்டு பவுன்ஸ் முடியுது. ஒருதடவை  சொல்லிப் பார்த்தபின் விட்டுவிட்டாள். சரி ஒருதடவை தானே திருமணம். தங்கள் விருப்பத்துக்குச் செய்யட்டுமன் என்று மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டாள். சின்ன ஒரு மண்டபத்தில் செய்யலாம். ஒரு இரண்டாயிரத்துள் முடிக்கலாமென்று பார்த்தால் மாப்பிள்ளையின் தாய்  தங்களுக்கு ஒரு ஐநூறு பேராவது வருவினம். கொஞ்சம் நல்ல கோலா எடுங்கோ எண்டதில் பெடியனும் பெட்டையும் அலைந்து திரிந்து எடுத்த கோல் ஏழாயிரம். என்ன இவ்வளவு அதிகமா இருக்கே என்றதற்கு இரண்டு நாட்களுக்கு இது மலிவு அம்மா என்று மகள் சொன்னதைக் கேட்டு நெஞ்சே அடைத்துவிட்டது வாணிக்கு. எதுக்கம்மா இரண்டு நாட்கள் என்றதற்கு அதுதான் இப்ப பாசன். முதல் கிழமை பதிவுத் திருமணம் முடிய எல்லாருக்கும் பார்ட்டி எங்கட விருப்பப்படி.. அடுத்த கிழமை அய்யரோட எங்கட கல்சர்ப்படி உங்கடை ஆசைக்கு வெட்டிங் அம்மா என்று மகள் கொஞ்சலாகக் கூறியதில் எதுவும் சொல்லமுடியாமல் தலையை மட்டும் ஆட்டவேண்டியதாகிவிட்டிது.  எங்களுக்கும் ஒரு ஐநூறு சனமாவது வரும்தான். பதினைந்து வருடங்களாக இங்க குடுத்ததுகளை  வாங்கத்தானே வேணும் என்பதாய் மனதை சமாதானம் செய்து கொண்டாள். ஏன் அவள் உந்த எடுப்பு எடுக்கிறாள் என்று கணவர் சினக்க அந்தாளையும் ஒருவாறு சமாதானம் செய்தாயிற்று.

இன்று மூன்றாவது நாளாக சேலை எடுப்பதற்காய் அலைந்தாயிற்று. ஆயிரம் பவுண்ட்ஸ் சேலைவரை பார்த்தும் மகளுக்குப் பிடிக்கவில்லை என்பது சினத்தைத்தான் வரவழைத்தது என்றாலும் எதுவும் செய்ய முடியாது பார்த்துக்கொண்டே இருக்க மட்டும் தான் முடிந்தது. மண்டப அலங்காரம், வீடியோ, உணவு, கேக் அது இது என்று எல்லாம் பாத்துப்பார்த்தது ஓடர் செய்து முடிய கிட்டத்தட்ட முப்பதினாயிரம் பவுன்சுக்குக் கிட்ட முடிய வாணிக்கு மலைப்பாகத்தான் இருந்தது.

 கலியாணம் பேசி முடிஞ்சு இரண்டு பக்கத்தாரும் இருந்து கதைத்தபோது  சீதனம் எதுவும் எங்களுக்கு வேண்டாம். கலியானச் செலவையும் நாங்கள் அரைவாசி பொறுக்கிறம் என்று வாயால் சொன்னதோடு சரி. அதுக்குப் பிறகு மறந்துபோய்த் தன்னும் எதுவுமே அவர்கள் கதைக்கவில்லை. செலவுக்கணக்கை அவைக்குக் காட்டுவமோ அப்பா என்று மனிசனிட்டைக் கேட்டதுக்கு சும்மா பேசாமல்விடு என்றதில் இவளும் அதுபற்றி மகளிடம் கூடக்  கதைக்கவில்லை. என்ன இருந்தாலும் வீட்டில் முதல் திருமணம் என்பதும் ஐநூறு பேர்ல நானூற்றைம்பது பேராவது கட்டாயம் வருவினம். எப்பிடியும் ஒரு இருபதாயிரம் சேரும். ஒரு ஐயாயிரத்தை எடுத்துக்கொண்டு மகளின்ர பேர்ல போட்டுவிடுவம். பிறகு அவை வீடு வாங்க உதவும் என்று மனதில் எண்ணியபடியே கலியாண வேலையில் மூழ்கிப் போனாள்.

அப்பப்பா ஒரு கலியாணத்தை நடத்தி முடிக்க எவ்வளவைச் செய்யவேண்டி இருக்கு. முந்தியெல்லாம் ஒரு அய்யரே வந்து எல்லாவற்றையும் செய்திட்டுப் போவார். இப்ப ஐயர்மாருக்கு ஒரு சிண் வேறை. இரண்டு பேருக்கும் தட்சணை தனித்தனி. அதுக்காக அய்யர் இல்லாமல் கலியாணம் செய்ய ஏலுமே என்றும் மனத்தைத் தேற்றி மாப்பிளை பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி முடியத்தான் வாணிக்கு பெரிய நின்மதி ஏற்பட்டது.

கிட்டத்தட்ட சொன்ன எல்லாருமே வந்திருந்து மணமக்களை வாழ்த்தியது அதைவிட பெரிய நின்மதி. சாப்பிட்டு முடியவே சிலர் வேலைக்குப் போகவேணும் என்று இவளிடம் என்வலப்பைக் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டினம். நிண்டு படம் எடுத்துவிட்டுப் போங்கோ என்று இவள் சொன்னாலும் இன்னும் வீடியோக்காரர் பெண்ணையும் மாப்பிள்ளையையும் தனியா வைத்துப் படம் எடுத்து முடியவில்லை. சனங்கள் வேற சாப்பிட்டு முடிய தாமே வரிசையில் நிற்கவாரம்பிக்க இவள் ஆக்கள் வெயிற் பண்ணீனம். கேக்கை வெட்டிப்போட்டு பிறகு ஆட்கள்போனப்பிறகு இவையை வைத்து எடுங்கோவன் என்றதையும் வீடடியோக்காரர் கேட்கவில்லை.

ஒருவாறு எல்லாரும் மணமக்களுடன் நின்று படம் எடுத்து முடிய வாணியின் குடும்பம் சகோதரர்கள் என்று ஒரு ஐந்து மணிக்கு திருமண வீடு நிறைவுக்குவர மணவறையில் பக்கத்தில் பரிசுகள் பணம் வைத்தபடி கொண்டுவரும் காட்டுகள் என்பவற்றைப் போடுவதற்கு அழகிய வேலைப்பாட்டுடன் வைக்கப்பட்டிருந்த மொய்ப் பெட்டிக்குக் காவலாக வாணி தனது மகனைக் காவலுக்கு வைத்திருந்தாள். ஆனால் இப்போது பார்க்க மாப்பிள்ளையின் தாயார் அப்பெட்டிக்குப் பக்கத்தில் போய் இவள் மகனிடம் எதோ சொல்லிவிட்டு பெட்டியைத் தூக்கிக்கொண்டு போய் தான் இருந்த கதிரையில் வைக்க சுள் என்று கோபம் தலைக்கு எற இவள் செய்வதறியாது திகைத்து நிக்கிறாள்.

கணவனைத் தேடிப்பிடித்து நீங்கள் போலிக் கேளுங்கோ அப்பா என்று சொல்ல எனக்கு ஏலாது. கொஞ்சம் அமைதியாய் இரு. அவையிண்ட ஆட்களும் தானே காசு குடுத்திருப்பினம். அதை எடுத்துப்போட்டு எங்கடையைக் குடுத்துவிடுவினம். எல்லாத்துக்கும் முன்னதுறதுதான் உன்ர வேலை என்று சொல்ல அவளுக்கும் அது நியாயமாகப் பட தன்னை எண்ணி வெட்கம் ஏற்பட்டது அவளுக்கு.  

திருமணம் முடிந்து ஒருவாரம் மாப்பிளை வீட்டிலேயே மக்களும் தங்கிவிட இவள் மகளைப் பார்க்கும் ஆவலில் போன் செய்து என்னம்மா இண்டைக்காவது நீங்கள் வாறியளோ என்று கேட்க இரண்டுநாள் கழித்து வருகிறோம் என்று மகள் கூற எத்தனை நாட்கள் வளர்த்து ஆளாக்கியும் கணவன் வந்ததும் எப்படி பிள்ளைகள் பெற்றோரை மறந்துவிடுகிறார்கள் என்று தவிப்போடு கணவனிடம் சொல்ல, அவள் மட்டும் இல்லை நீயும் அப்பிடித்தானே என்று கணவனின் கூற்றில் உண்மை இருக்க வேறு வழியின்றி இரண்டு  நாட்கள் மக்களின் வரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

காலையில் மலர்ந்த முகத்துடன் மகளைக் கண்டதும் எல்லா ஆதங்கங்களும் ஓடி ஒழிய கட்டி அணைத்தவளிடம் அம்மா இதை முதலில் பிடியுங்கோ. மாமி இதை உங்களிடம் குடுக்கச் சொல்லித் தந்தவ. பிறகு நான் மறந்திடுவன் என்று கூறி மகள் குடுத்த என்வலப்பை திறந்து பார்த்தவள், அதற்குள் ஒரு வெள்ளைத் தாளில் இவள் சொல்லித் திருமணத்துக்கு வந்தவர்கள் பெயர்கள் மட்டும் நிரையாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டு கோபம், அவமானம், கண்ணீர்  என்பவற்றை ஒருங்கே அடக்கியபடி வாங்கோ பிள்ளையள் முதல்ல சாப்பிடுவம் என்றபடி குசினிக்குச் செல்லலானாள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு சிறுகதை.....யூரோப் திருமணங்களை ஊன்றிக் கவனித்து எழுதி இருக்கின்றீர்கள் சகோதரி.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகதை. யதார்தமானதும் கூட.

ஆனால் பிள்ளைகளை இப்படி வளர்த்தால். இப்படித்தான் முடியும். பிள்ளைகளின் சம்பாத்தியத்தையும் தானே நிர்வகிக்கும் அளவுக்கு எல்லாவற்றையும் தன்கையில் வைத்திருக்கும் தாய்கு, பிள்ளைகள் கலியாணம் முடித்து தனிவழியே போகும் போது அதிர்சி ஏற்படுவது தவிர்கவியலாதது.

இப்படி வளர்க்கபடும் பிள்ளைகள் கலியாணம் முடித்த பின்னும் தாய் தந்தையரை பணக் எடுக்கும் ஏடிஎம் போல பாவிப்பதும் இதனால்தான்.

16 வயது முதலே. உழைப்பு, சேமிப்பு, சொந்த காசை மேலாண்மை செய்ய பழக்கப் பட்ட பிள்ளைகள் இப்படி வருவது குறைவு, என் அவதானத்தில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, suvy said:

நல்லதொரு சிறுகதை.....யூரோப் திருமணங்களை ஊன்றிக் கவனித்து எழுதி இருக்கின்றீர்கள் சகோதரி.......!  😁

அண்ணா மீண்டும் ஒருதடவை கடைசிப் பந்தியை வாசித்துவிடுங்கள். நான் எழுதாமல் விட்ட ஒரு வசனத்தைச் சேர்த்துள்ளேன்.

36 minutes ago, goshan_che said:

நல்லகதை. யதார்தமானதும் கூட.

ஆனால் பிள்ளைகளை இப்படி வளர்த்தால். இப்படித்தான் முடியும். பிள்ளைகளின் சம்பாத்தியத்தையும் தானே நிர்வகிக்கும் அளவுக்கு எல்லாவற்றையும் தன்கையில் வைத்திருக்கும் தாய்கு, பிள்ளைகள் கலியாணம் முடித்து தனிவழியே போகும் போது அதிர்சி ஏற்படுவது தவிர்கவியலாதது.

இப்படி வளர்க்கபடும் பிள்ளைகள் கலியாணம் முடித்த பின்னும் தாய் தந்தையரை பணக் எடுக்கும் ஏடிஎம் போல பாவிப்பதும் இதனால்தான்.

16 வயது முதலே. உழைப்பு, சேமிப்பு, சொந்த காசை மேலாண்மை செய்ய பழக்கப் பட்ட பிள்ளைகள் இப்படி வருவது குறைவு, என் அவதானத்தில்.

மன்னியுங்கள் கோசான் மீண்டும் ஒருதடவை கடைசிப் பந்தியை வாசிக்கமுடியுமா? ஒரு வசனம் எழுதாது விட்டதில் கதையின் போக்கே மாறிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அண்ணா மீண்டும் ஒருதடவை கடைசிப் பந்தியை வாசித்துவிடுங்கள். நான் எழுதாமல் விட்ட ஒரு வசனத்தைச் சேர்த்துள்ளேன்.

மன்னியுங்கள் கோசான் மீண்டும் ஒருதடவை கடைசிப் பந்தியை வாசிக்கமுடியுமா? ஒரு வசனம் எழுதாது விட்டதில் கதையின் போக்கே மாறிவிட்டது. 

சுமே அன்ரி,

தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் ஒரு இலக்கிய புதுமையை படைத்துள்ளீர்கள். ஒரு வசனத்தை சேர்ப்பதால்/விலக்குவதால் கதையின் போக்கை இரு வேறுபட்ட திசைகளில் போகச் செய்வதெல்லாம் ஜீனியஸ் டச் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை ... தற்காலத்தில் இப்படியும்  நடக்கலாம் . உண்மையில்  திருமணத்தில் சேரும் காசு யாருக்கு ...போக வேண்டும். ? மண மகனின் மண மகளின் பெற்றோர் கொடுத்ததை தானே திரும்பி கொடுத்து இருப்பார்கள். எனது எண்ணப்படி ..மணமக்களுக்கு தான் சேர வேண்டும் அவர்கள் புதுவாழ்வு தொடங்க.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் பேச்சுத் திருமணங்களை கண்முன்னே கதை கொண்டுவந்திருக்கு. சம்பிரதாயம் என்ற பெயரில் சாதகம் பார்க்கும் மூடத்தனமும், கலியாணம் என்றாலே ஆடம்பரமும் நிறைந்துள்ள கலியாணங்கள்தான் நம்மவர் திருமணங்கள். 

கடைசி பந்தியில் வசனம் மாற்றமுன்னரும் வாசித்திருந்தேன். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

சுமே அன்ரி,

தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் ஒரு இலக்கிய புதுமையை படைத்துள்ளீர்கள். ஒரு வசனத்தை சேர்ப்பதால்/விலக்குவதால் கதையின் போக்கை இரு வேறுபட்ட திசைகளில் போகச் செய்வதெல்லாம் ஜீனியஸ் டச் 😂


நீங்கள் ஜீனியஸ் என்பதை நான் மறந்துவிட்டேன்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிலாமதி said:

கதை அருமை ... தற்காலத்தில் இப்படியும்  நடக்கலாம் . உண்மையில்  திருமணத்தில் சேரும் காசு யாருக்கு ...போக வேண்டும். ? மண மகனின் மண மகளின் பெற்றோர் கொடுத்ததை தானே திரும்பி கொடுத்து இருப்பார்கள். எனது எண்ணப்படி ..மணமக்களுக்கு தான் சேர வேண்டும் அவர்கள் புதுவாழ்வு தொடங்க.
 

 இரு பகுதியினரும் கலந்து பேசி மணமக்களுக்குக் கொடுக்கலாம் அல்லது பெண்ணின் பக்கம் வந்ததை அவர்களுக்கு கொடுத்துவிட்டு தமதை தாமே வைத்திருக்கலாம்.மணமகனின் தாயின் செயல்தான் பண்பற்றது. திருமணச் செலவில் பாதியையும் கொடுக்காது சேர்ந்த பணம் எல்லாவற்றையும் தாமே எடுப்பது எந்த விதத்தில் நியாயம்.?

11 hours ago, கிருபன் said:

புலம்பெயர் நாடுகளில் பேச்சுத் திருமணங்களை கண்முன்னே கதை கொண்டுவந்திருக்கு. சம்பிரதாயம் என்ற பெயரில் சாதகம் பார்க்கும் மூடத்தனமும், கலியாணம் என்றாலே ஆடம்பரமும் நிறைந்துள்ள கலியாணங்கள்தான் நம்மவர் திருமணங்கள். 

கடைசி பந்தியில் வசனம் மாற்றமுன்னரும் வாசித்திருந்தேன். 😁

 நேற்று யாழ்கள நட்பு ஒருவர் தொலைபேசியில் கதைக்கும்போது  நான் எழுதியது பற்றி விளங்காமல் கதை த்தார். நான் நினைத்தேன் சிலவேளை நான் எழுதியது மற்றவர்களுக்கு விளங்கவில்லையா என்று. 😀வேறு ஒன்றும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:


நீங்கள் ஜீனியஸ் என்பதை நான் மறந்துவிட்டேன்.😀

இதற்குரிய fees ஐ. நீங்கள் எனக்கு தரவேண்டியதில் இருந்து கழிக்கவும்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இதற்குரிய fees ஐ. நீங்கள் எனக்கு தரவேண்டியதில் இருந்து கழிக்கவும்.😂

அதுக்கென்ன 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே உங்கள் உறவினர்கள் யாரோ வீட்டில் நடந்ததை இங்கே எடுத்து விட்டிருக்கிறியள்.
பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பொதுவானதாகத்தான் இதுவரையில் இருக்கிறது 
எமது சமூகம் ஆணாதிக்க சிந்தனையின் வடிவமைப்புதான் என்றாலும் 
அதே ஆண்கள் தமக்கு பெண் பிள்ளைகள் பிறக்கும்போது அதை வட்டியுடன் கொடுத்து விடுகிறார்கள் 
இந்த பெண்கள் இதற்கு முந்தைய நாட்களில் அதை உழைப்பதும் இல்லை என்பதால் 
அந்த வலியை உணர சந்தர்ப்பம் இருப்பதில்லை. 
சீதன கொடுமை என்றால் கூட பொதுவாக மாப்பிள்ளையின் தாயாரால்தான் அது முண்டுகொடுத்து 
முன்னெடுக்க படுவதை பொதுவாக காணலாம்.

இனி பெண்கள் தாமும் வேலைக்கு சென்று உழைக்க தொடங்கும்போதுதான் 
பணத்தின்  உழைப்பின் பெறுமதி தெரிந்துகொண்டு ஒரு சம நிலையை பெண்கள் 
பேண தொடங்குவார்கள் என்று எண்ணுகிறேன்.

எல்லாம் ஒரு வட்ட சாலையாக இருப்பதால்  மகிழ்ச்சி 
ஊரில் சாதியை சொல்லி அடுத்தவனை சொறிஞ்சு வாழ்ந்த பலர் 
யுத்த காலத்தில் எல்லா இடமும் கையேந்தி நின்றதை பார்த்து இருக்கிறேன். 
சொல்லிகாட்டி சூடு சுரணை வரும்படி செய்ய மனது துடிக்கும் .....  அதல்லாம் மனிதர்களுக்குத்தானே 
இருக்கும் என்றுவிட்டு போய்விடுவதுண்டு. 
எல்லாம் அடுத்தவனை சுரண்டி வாழலாம் எனும் எண்ணத்தில் பிறப்பது 
இயற்கை புரிந்து தனக்கும்  உழைத்து இயற்கைக்கும் உண்மையாய் இருப்பவர்கள் மட்டுமே நிம்மதியாக வாழுவார்கள். மற்ற எல்லா வினையும் ஊரை சுத்தி ஒரு நாள் சொந்த வீடு வந்தே சேரும். 

வாணியின் திருமணத்தில் வந்த பணம் அவர் கணவர் வீட்டுக்கு தானே போயிருக்கும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

சுமே உங்கள் உறவினர்கள் யாரோ வீட்டில் நடந்ததை இங்கே எடுத்து விட்டிருக்கிறியள்.
பாராட்டுக்கள்.

ஓமண்ணா எனக்குத் தெரிந்தவர்கள் தான்

 

7 hours ago, Maruthankerny said:

இது பொதுவானதாகத்தான் இதுவரையில் இருக்கிறது 
எமது சமூகம் ஆணாதிக்க சிந்தனையின் வடிவமைப்புதான் என்றாலும் 
அதே ஆண்கள் தமக்கு பெண் பிள்ளைகள் பிறக்கும்போது அதை வட்டியுடன் கொடுத்து விடுகிறார்கள் 
இந்த பெண்கள் இதற்கு முந்தைய நாட்களில் அதை உழைப்பதும் இல்லை என்பதால் 
அந்த வலியை உணர சந்தர்ப்பம் இருப்பதில்லை. 
சீதன கொடுமை என்றால் கூட பொதுவாக மாப்பிள்ளையின் தாயாரால்தான் அது முண்டுகொடுத்து 
முன்னெடுக்க படுவதை பொதுவாக காணலாம்.

இனி பெண்கள் தாமும் வேலைக்கு சென்று உழைக்க தொடங்கும்போதுதான் 
பணத்தின்  உழைப்பின் பெறுமதி தெரிந்துகொண்டு ஒரு சம நிலையை பெண்கள் 
பேண தொடங்குவார்கள் என்று எண்ணுகிறேன்.

எல்லாம் ஒரு வட்ட சாலையாக இருப்பதால்  மகிழ்ச்சி 
ஊரில் சாதியை சொல்லி அடுத்தவனை சொறிஞ்சு வாழ்ந்த பலர் 
யுத்த காலத்தில் எல்லா இடமும் கையேந்தி நின்றதை பார்த்து இருக்கிறேன். 
சொல்லிகாட்டி சூடு சுரணை வரும்படி செய்ய மனது துடிக்கும் .....  அதல்லாம் மனிதர்களுக்குத்தானே 
இருக்கும் என்றுவிட்டு போய்விடுவதுண்டு. 
எல்லாம் அடுத்தவனை சுரண்டி வாழலாம் எனும் எண்ணத்தில் பிறப்பது 
இயற்கை புரிந்து தனக்கும்  உழைத்து இயற்கைக்கும் உண்மையாய் இருப்பவர்கள் மட்டுமே நிம்மதியாக வாழுவார்கள். மற்ற எல்லா வினையும் ஊரை சுத்தி ஒரு நாள் சொந்த வீடு வந்தே சேரும். 

வாணியின் திருமணத்தில் வந்த பணம் அவர் கணவர் வீட்டுக்கு தானே போயிருக்கும்? 

 மாப்பிளையின் தாய் எடுத்துக்கொண்டு இவர்கள் பக்கம் இருந்து வந்து எல்வலப் கொடுத்தவர் பெயரையும் தொகையையும் மட்டும் மருமகளிடம் எழுதிக் கொடுத்திருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல...கதை...சுமே..!

நான் பிறந்த எனது இனத்தின்...பார்வைகளும்...நம்பிக்கைகளும்...மிகவும் சுயநலம் படித்தவை..!

இந்த நம்பிக்கையில் இருந்து கொஞ்சம் விலகிச் செல்ல என்னும் போது...இடையில் ஏதோ ஒரு சம்பவம் வந்து..அந்த நம்பிக்கையை வலுப்படுத்தும்!

அதைப் போலவே உங்கள் கதையும்..!

சிந்து வெளியிலிருந்து....துரத்தப்பட்டு...ஓட இடமில்லாமல்....இலங்கையில் ஒதுங்கிய இனமென்பதால்..அந்தச் சுய நலக் குணம் வந்திருக்கலாமோ ..என்னவோ..!

இந்தக் காலத்தில்....எல்லாவற்றையும்...மற்றவர்களை...நம்பாமல்...முன் கூட்டியே ..பேசி முடிவு செய்வதே..புத்தி சாலித்தனம் போல உள்ளது! முடியுமால்...எழுத்தில் வாங்குவது...இன்னும் நல்லது!

தொடர்ந்தும் உங்கள் படைப்புக்க்களைத் தாருங்கள்! 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு குடுத்த மொய்ப்பணம் வேண்டுமென்றால் பிள்ளைக்கு பூப்புனித நீராட்டு விழா செய்யுங்கோ.....அல்லது பெரிய ஹோல் எடுத்து உங்களுக்கே பிறந்தநாள் விழா செய்யுங்கோ,அதை விட்டுட்டு திருமணம் இரு பகுதியும் குடுக்கும் பணம்தான் வரப்போகுது.அதை மணமக்களிடம் குடுத்து, அதன்பின் வரும் சம்பந்தப்பட்டவர்களின் விழாக்களுக்கு நீங்களே சென்று மொய் கொடுக்கவேண்டும் என்று சொல்லி விடலாம்..... சில சமயம் இதில் வரும் பணத்தை நம்பித்தான் அவர்கள் ஹோல், வீடியோ,மேளம் இன்னோரன்ன செலவுகளுக்கு அட்வான்ஸ் மட்டும் குடுத்து ஒழுங்கு செய்திருப்பினம். அதை முன்பே பேசி சரி செய்து கொள்ள வேண்டும். அதுதான் முறை....!

இங்கு பாரிஸில் இப்பொழுது புது வழக்கம் ஒன்று  (ட்ரெண்ட்) உருவாகியுள்ளது. அதாவது மணமக்களின் உறவினர்களோ அல்லது நண்பர்களோ அன்று மட்டும் விதம் விதமான பெறுமதியான கார்கள் எல்லாம் வாடகைக்கு எடுத்து வந்து ஊர்வலமாக  விலாசம் காட்டுவார்கள். பின்பு இவர்களும் அவர்களுக்கு வரும்போது செய்ய வேண்டும்.......!  

சகோதரி எழுதியது வெறும் ஜூ ஜூ பி ....இதைவிட அப்பனான விடயங்கள் எல்லாம் நடக்குது.....வேறொரு ஐ.டி எடுத்துதான் எழுதவேண்டும்......!     😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகதை  சுமே

கதையல்ல  நிஐம் தான்

 

புத்தி  சொல்வதும்

தீர்ப்பு  சொல்வதும் சுலபம்

அந்தந்த இடத்திலிருக்கும் போது

எல்லோரும்  வேண்டும்

அதிலும்  பிள்ளை வாழப்போகுமிடம்  என்பதால் 

கண்கணைக்கூட  கட்டுப்படுத்த  வேண்டி  வரும்  என்பதை  அழகாக  சொல்லியுள்ளீர்கள்

இதற்கெல்லாம்  அடிப்படைக்காரணம்

பற்றாக்குறையும் பகட்டு  விழாக்களும் தான்

விரலுக்கேற்ற  வீக்கம்  என்பதை  மனதிலிருத்தி  வாழ்ந்தால்  எல்லாம் சுபம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

நல்ல...கதை...சுமே..!

நான் பிறந்த எனது இனத்தின்...பார்வைகளும்...நம்பிக்கைகளும்...மிகவும் சுயநலம் படித்தவை..!

இந்த நம்பிக்கையில் இருந்து கொஞ்சம் விலகிச் செல்ல என்னும் போது...இடையில் ஏதோ ஒரு சம்பவம் வந்து..அந்த நம்பிக்கையை வலுப்படுத்தும்!

அதைப் போலவே உங்கள் கதையும்..!

சிந்து வெளியிலிருந்து....துரத்தப்பட்டு...ஓட இடமில்லாமல்....இலங்கையில் ஒதுங்கிய இனமென்பதால்..அந்தச் சுய நலக் குணம் வந்திருக்கலாமோ ..என்னவோ..!

இந்தக் காலத்தில்....எல்லாவற்றையும்...மற்றவர்களை...நம்பாமல்...முன் கூட்டியே ..பேசி முடிவு செய்வதே..புத்தி சாலித்தனம் போல உள்ளது! முடியுமால்...எழுத்தில் வாங்குவது...இன்னும் நல்லது!

தொடர்ந்தும் உங்கள் படைப்புக்க்களைத் தாருங்கள்! 

 

 

நன்றி புங்கை. இது கொஞ்சம் சென்சிரிவான விடயம். பெண்ணின் வீட்டார் திருமணம் முடியும் மட்டும் வயித்தில நெருப்பைக்கட்டியது போல் தான் இருப்பார்கள். எதிர்த்து ஏதும் கதைதத்தால் கலியாணம் குழம்பிவிடுமோ என்ற பீதி இருந்துகொண்டே தான் இருக்கும்.

2 hours ago, suvy said:

உங்களுக்கு குடுத்த மொய்ப்பணம் வேண்டுமென்றால் பிள்ளைக்கு பூப்புனித நீராட்டு விழா செய்யுங்கோ.....அல்லது பெரிய ஹோல் எடுத்து உங்களுக்கே பிறந்தநாள் விழா செய்யுங்கோ,அதை விட்டுட்டு திருமணம் இரு பகுதியும் குடுக்கும் பணம்தான் வரப்போகுது.அதை மணமக்களிடம் குடுத்து, அதன்பின் வரும் சம்பந்தப்பட்டவர்களின் விழாக்களுக்கு நீங்களே சென்று மொய் கொடுக்கவேண்டும் என்று சொல்லி விடலாம்..... சில சமயம் இதில் வரும் பணத்தை நம்பித்தான் அவர்கள் ஹோல், வீடியோ,மேளம் இன்னோரன்ன செலவுகளுக்கு அட்வான்ஸ் மட்டும் குடுத்து ஒழுங்கு செய்திருப்பினம். அதை முன்பே பேசி சரி செய்து கொள்ள வேண்டும். அதுதான் முறை....!

இங்கு பாரிஸில் இப்பொழுது புது வழக்கம் ஒன்று  (ட்ரெண்ட்) உருவாகியுள்ளது. அதாவது மணமக்களின் உறவினர்களோ அல்லது நண்பர்களோ அன்று மட்டும் விதம் விதமான பெறுமதியான கார்கள் எல்லாம் வாடகைக்கு எடுத்து வந்து ஊர்வலமாக  விலாசம் காட்டுவார்கள். பின்பு இவர்களும் அவர்களுக்கு வரும்போது செய்ய வேண்டும்.......!  

சகோதரி எழுதியது வெறும் ஜூ ஜூ பி ....இதைவிட அப்பனான விடயங்கள் எல்லாம் நடக்குது.....வேறொரு ஐ.டி எடுத்துதான் எழுதவேண்டும்......!     😁 

அது மட்டும் இல்லை அண்ணா. திருமணம் முடிய மூன்றாம் நாள் ஸ்பெயினில் ரிசெப்சன். என் மகளின் நட்பில் ஒன்று கடந்த வாரம் நூறு பேரை அதற்கு அழைத்திருந்தார்கள். உந்த விசர்க் கூத்துக்கு எல்லாம் ஏன்  போகிறீர்கள் என்று நல்ல எச்சுக் கொடுத்தேன்.   

50 minutes ago, விசுகு said:

நல்லகதை  சுமே

கதையல்ல  நிஐம் தான்

 

புத்தி  சொல்வதும்

தீர்ப்பு  சொல்வதும் சுலபம்

அந்தந்த இடத்திலிருக்கும் போது

எல்லோரும்  வேண்டும்

அதிலும்  பிள்ளை வாழப்போகுமிடம்  என்பதால் 

கண்கணைக்கூட  கட்டுப்படுத்த  வேண்டி  வரும்  என்பதை  அழகாக  சொல்லியுள்ளீர்கள்

இதற்கெல்லாம்  அடிப்படைக்காரணம்

பற்றாக்குறையும் பகட்டு  விழாக்களும் தான்

விரலுக்கேற்ற  வீக்கம்  என்பதை  மனதிலிருத்தி  வாழ்ந்தால்  எல்லாம் சுபம்

உண்மைதான் அண்ணா. ஒரு திருமணம் பேசிச் செய்து முடிப்பது மிக்க கடினமான வேலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகள் தந்த உறவுகள் புங்கை, ஜெகதா துரை, கிருபன், நுணா, நந்தன், ஈழப்பிரியன் அண்ணா, குமாரசாமி, தமிழினி, சுவி அண்ணா ஆகிய உறவுகளுக்கும் கருத்துக்களை எழுதிய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பச்சைகள் தந்த உறவுகள் புங்கை, ஜெகதா துரை, கிருபன், நுணா, நந்தன், ஈழப்பிரியன் அண்ணா, குமாரசாமி, தமிழினி, சுவி அண்ணா ஆகிய உறவுகளுக்கும் கருத்துக்களை எழுதிய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி.

மன்னிக்கோணும்......நான் ஆள் மாறி பச்சைய குத்திப்போட்டன். நான் இன்னும் கதையை வாசிக்கவேயில்லை.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

மன்னிக்கோணும்......நான் ஆள் மாறி பச்சைய குத்திப்போட்டன். நான் இன்னும் கதையை வாசிக்கவேயில்லை.:cool:

சரி அப்ப கூச்சப்படாமல் பச்சையை திருப்ப எடுத்துக்கொள்ளுங்கள். நான் கோபிக்க மாட்டேன்.😎

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 9/29/2019 at 9:29 PM, குமாரசாமி said:

மன்னிக்கோணும்......நான் ஆள் மாறி பச்சைய குத்திப்போட்டன். நான் இன்னும் கதையை வாசிக்கவேயில்லை.:cool:

வ‌ண‌க்க‌ம் ஜ‌யா :,, இங்கை ஒருவ‌ர் ? உங்க‌ளின் ப‌ழ‌மொழிக‌ளை சுட்டு கொண்டு வ‌ந்து த‌ன‌து முக‌நூலில் போடுவார் ? கேட்டால் சொல்லுவார் த‌ன‌து சொந்த‌ த‌யாரிப்பாம் ? உண்மையை சொல்லு த‌ம்பி என்றால் """ க‌ட‌சியில் உண்மையை ஒத்து கொள்ளுவார் யாழில் சுட்ட‌ ப‌ழ‌மொழிக‌ள் தான் ? யோசிச்சு பாருங்கோ அது யாரா இருக்கும் என்று ?

Link to comment
Share on other sites

On 9/27/2019 at 4:34 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஓமண்ணா எனக்குத் தெரிந்தவர்கள் தான்

 

 மாப்பிளையின் தாய் எடுத்துக்கொண்டு இவர்கள் பக்கம் இருந்து வந்து எல்வலப் கொடுத்தவர் பெயரையும் தொகையையும் மட்டும் மருமகளிடம் எழுதிக் கொடுத்திருந்தார்.

தற்குள் ஒரு வெள்ளைத் தாளில் இவள் சொல்லித் திருமணத்துக்கு வந்தவர்கள் பெயர்கள் மட்டும் நிரையாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டு கோபம், அவமானம், கண்ணீர்  என்பவற்றை ஒருங்கே அடக்கியபடி வாங்கோ பிள்ளையள் முதல்ல சாப்பிடுவம் என்றபடி குசினிக்குச் செல்லலானாள். 

 

இப்ப தான் விளங்கிச்சு ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாட்களில் எம்மவர் மத்தியில் இப்படி எத்தனையோ எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நான் அவதானித்தவரை பெண்ணும் மாப்பிள்ளையும் (காதலித்து திருமணம் செய்பவர்கள்) தாமே திட்டமிட்டு தமது பொருளாதார தேவைக்கேற்ப அழைக்கும் எண்ணிக்கையையும் செலவுகளையும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஒழுங் கமைப்பதை காணக்கூடியதாய் உள்ளது. சுமே மிக அழகாக கதை சொல்லியுள்ளார். அதிகம் எழுத நேரமின்மையால் எழுத முடியவில்லை. திருமணத்தில் சேரும்பணம் புதுமணத் தம்பதிகளுக்கு  சேருவது சிறந்தது என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.