Jump to content

'அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்':


Recommended Posts

'அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்': நூலுரையாடல்

 
'Fear: Trump in the White House' என்கிற நூல் வெளிவந்து ஓராண்டு கூட ஆகவில்லை. 2 மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்துவிட்டது. இதில் முதல் ஒரு மில்லியன் முதல் வாரமே விற்றது. இப்போது அடுத்த தேர்தலுக்கு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் இந்த நூலைப் பற்றிய பேச்சு மீண்டும் கூடும். டிரம்ப் அரசு எப்படிப் பட்டது, டிரம்பும் டிரம்பின் ஆட்களும் எப்படிப் பட்டவர்கள் என்பதை அவர்களுடனேயே பேசி வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வேலையைச் செய்திருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் பாப் வூட்வர்ட் (Bob Woodward).

பாப் வூட்வர்ட் யார்?

இவர் ஓர் எழுபது வயதுக்கும் மேலான, அமெரிக்க அரசியலைப் பழம் தின்று கொட்டை போட்ட, இதுவரை ஒன்பது அதிபர்களின் தூக்கத்தைக் கெடுத்த, முதிய-முதிர்ந்த பத்திரிகையாளர். ஏற்கனவே அமெரிக்காவின் பல பெரும் பெரும் பிரச்சனைகளைப் பற்றி விலாவாரியாக எழுதிக் கொட்டியவர். இதுவரை அவர் எழுதியுள்ள 18 நூல்களில் 12 அந்தந்தக் காலத்தில் விற்பனையில் முன்னணியில் இருந்தவை. கிட்டத்தட்ட அமெரிக்காவில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் எல்லா விருதுகளையும் பெற்றவர். இதழியல் துறையில் உள்ளே நுழைகிற ஒவ்வோர் அமெரிக்கரும், "யார் போல வர விரும்புகிறாய்?" என்று கேட்டால் இவர் பெயரைத்தான் சொல்வார்களாம். அப்படிப் பட்டவர்.

நமக்கு, இதைப் படிக்கும் போது, அப்படி இந்தியாவில்-தமிழ் நாட்டில் யாரும் இருக்கிறார்களா என்ற கேள்வி வருவதும் மிக இயல்பானதுதானே! வெளிநாடுகளுக்கு வரும் இந்தியர்கள்-தமிழர்கள் இங்குள்ள வசதிகளைப் பார்த்துவிட்டு, 'இது போல நம் நாட்டிலும் வந்தால் நன்றாக இருக்குமே!', 'அப்படி வரவிடாமல் தடுப்பது எது?' என்று தம்மைத் தாமே கேட்டுக்கொள்வதும் கூட அவர்கள் நாடு திரும்பியதும் வெவ்வேறு விதங்களில் வெளிப்படத்தான் செய்யும். அப்படி வெளிநாடுகளில் வந்து படித்துவிட்டுத் திரும்பும் ஒரு சிறு கூட்டம், அரசியலைத் தன் துறையாக-தொழிலாகத் தேர்ந்தெடுத்துத் தன் செல்வாக்கைச் செலுத்துவதாகவும் இருக்கிறது. அப்படியானவர்கள் அறிமுகம் செய்த எத்தனையோ மாற்றங்கள் நமக்கும் நம் மக்களுக்கும் எவ்வளவோ பயன்பட்டிருக்கத்தானே செய்கின்றன! அது வசதிகளில் மட்டும் என்றில்லாமல், பழக்கவழக்கங்களில்-பண்பாட்டில்-தொழில் செய்யும் முறையில் என்று எல்லாவற்றிலும் மாற்றங்களை அறிமுகப்படுத்தி இருக்கத்தான் செய்கிறது. இதழியல் துறையில் உள்ள ஒருவர் இதைப் படிக்கும் போது, 'இப்படி நாம் இருக்கிறோமா?' என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்ள வைக்கும். நம்மைப் போன்றவர்கள் படிக்கும் போது, 'இந்தத் துறையில் இருக்கும் நம்மவர்கள் இப்படி இருக்கிறார்களா?' என்றுதானே கேட்கத் தூண்டும்! அதற்கெல்லாம் மேல், அடுத்த வீட்டு அம்மாவை-அப்பாவை-பிள்ளைகளைப் பற்றி யாரேனும் பெருமையாகப் பேசும் போது நம் வீட்டிலும் இப்படிப் பெருமையாகப் பேசிக்கொள்ளும் விதத்தில் யாரேனும் இருக்கிறோமா அல்லது இருப்பவர்களை அந்தந்த விஷயத்தில் அவர்களுக்கு அருகில் வைத்தாவது பார்க்க முடியுமா என்றுதானே எண்ணிப் பார்ப்போம்! அப்படியான சிந்தனைதான் இதுவும்.
 
கூடிய விரைவில் வல்லரசாகப் போகும் நாட்டில் இது கூடவா இல்லாமல் இருப்போம்! கண்டிப்பாக இருக்கத்தான் செய்வார்கள். அப்படியானால் அது யார்? குல்தீப் நாயரா? என். ராமா? பிரணாய் ராயா?

வெற்றிகரமாகத் தன் மூன்றாம் நூற்றாண்டில் உயிரோடும் உயிர்ப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க மக்களாட்சி வரலாற்றிலேயே தன் பதவியைத் துறக்க நேர்ந்த ஒரே அதிபர் நிக்சன். அவரை அந்த நிலைக்குத் தள்ளியது, எழுபதுகளில் அமெரிக்காவை உலுக்கிய வாட்டர்கேட் ஊழல். அந்த ஊழல் பற்றி இவர் எழுதிய நூல்தான் நிக்சனை வீட்டுக்கனுப்பி இவருக்குப் புலிட்சர் விருது பெற்றுக் கொடுத்தது. அதன் பின்பு இன்னொரு முறையும் அதே விருதைப் பெற்றவர் இவர். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே, துறையில் நுழைந்த தொடக்க காலத்திலேயே, இப்படி உலகின் கவனத்தைத் திருப்பிய ஒருவர் தன் எழுபதுகளில் எப்படிப் பட்டவராக இருப்பார் என்பதை நீங்களே புரிந்துகொள்ளலாம். "மோசம் போவதற்கு வயதென்ன இருக்கிறது!" என்கிறீர்களா? நாம் பார்க்கும் உலகில் நடப்பவற்றை வைத்துப் பார்த்தால் அதுவும் சரிதான் என்றே படுகிறது. இவரும் அப்படிப்பட்டவரா என்பதை நீங்களே தேடித் தெரிந்துகொள்ளுங்கள்.
 
இந்த நூல் பற்றிய பல சுவாரசியமான தகவல்களில் ஒன்று, நூல் வெளியாவதற்குச் சில நாட்கள் முன்பு, டிரம்ப் வூட்வர்டைத் தொலைபேசியில் அழைக்கிறார். "நம் உரையாடலைப் பதிவு செய்துகொள்ளலாமா?" என்று அவரிடமே அனுமதி பெற்றுக்கொண்டு அதையும் பதிவு செய்து வெளியிட்டுவிடுகிறார் ஆசிரியர். 
 
அந்த உரையாடல் இப்படிப் போகிறது...
 
"என்னைப் பற்றி ஏதோ நூல் வெளியிடப் போகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். இது எனக்குத் தெரியவே வரவில்லை. உண்மையிலேயே இது மிகவும் மோசம். யாருமே என்னிடம் இது பற்றிச் சொல்லவில்லை. உங்களுக்கே தெரியும், உங்களிடம் நான் வெளிப்படையாகத்தான் நடந்துகொள்வேன். நீங்களும் எப்போதுமே நியாயமாகத்தான் நடந்துகொண்டுள்ளீர்கள்."
 
"இந்த நூலுக்காக உங்களுடன் உரையாட வேண்டும் என்று எவ்வளவோ முயன்று பார்த்தேன். முடியவில்லை."
 
"அப்படியா? எனக்குச் சொல்லவே இல்லை இவர்கள். யாரிடம் கேட்டீர்கள்?"
 
"இரண்டரை மாதங்களுக்கு முன்பு கெல்லியன் கான்வேயிடம் பேசினேன். மதிய உணவுக்குச் சந்தித்து உரையாடினோம்." 
 
இவர் வெள்ளை மாளிகை ஆலோசகர். இந்தப் பெயரை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். இதோ சில நிமிடங்களில் அதிபரின் அறைக்குள் வரப்போகிறார். அல்லது ஏற்கனவே அறைக்குள்தான் நின்று கொண்டிருக்கிறாரோ என்னவோ!
 
"வெள்ளை மாளிகை உதவி ஊடகச் செயலாளர் ராஜ் ஷாவிடமும் அனுமதி கேட்டிருந்தேன். அவரும் ஒன்றும் சொல்லவே இல்லை."
 
"நிறையப் பேருக்கு என்னிடம் வந்து பேசவே பயம், அல்லது பணியில் மும்முரமாக இருந்திருப்பார்கள்." 
 
தன்னுடன் இருப்பவர்கள் தன்னைக் கண்டு பேசக்கூட அஞ்சுபவர்கள் என்று சொல்வது அமெரிக்கா போன்ற நாட்டில் அதிபராக இருக்கிற ஒருவர் தன்னைத் தானே காலி செய்துகொள்கிற உளறல். இந்த நூலே அச்சம் பற்றியதுதானே. "எங்கள் ஊரில் இதற்கெல்லாம் விசில் பறக்கும்" என்கிறீர்களா? "தலைவன் டா... தலைவி டா... சிங்கம் டா..." என்று மீம் போடும் ஒரு கூட்டம் அமெரிக்காவிலும் துணிந்து வெளியே தலைகாட்டத் தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன என்பது பல மூன்றாம் உலக நாட்டுத் தலைவர்களுக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் பெரும் நற்செய்திதான்.
 
"செனட்டர் யாரிடம் பேசினீர்கள் என்றீர்கள்?" (மீண்டும் தூண்டிலை நோக்கியே வருகிறது மீன்!)
 
"செனட்டர் கிரஹாமிடம் பேசினேன். உங்களிடம் இது பற்றிப் பேசியதாகச் சொன்னாரே!" (அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்)
 
"ஆமாமா, ஒரு முறை ஒரு சந்திப்பின் போது சுருக்கமாகச் சொன்னார். உண்மைதான். உண்மைதான்."

...

"இந்த நூல், இந்த உலகத்தின் மீதும் உங்கள் நிர்வாகத்தின் மீதும் உங்கள் மீதுமான கடுமையான பார்வையாக இருக்கும்."
 
"ஓ, அப்படியானால் அது ஓர் எதிர்மறை நூலாகத்தான் இருக்கப்போகிறது என்று நினைக்கிறேன். ஆனால் உங்களுக்குத் தெரியும், இதற்கெல்லாம் ஏற்கனவே கிட்டத்தட்ட 50% பழக்கப்பட்டுவிட்டேன்."
 
"இதோ கெல்லியன் அறைக்குள் வருகிறாள். அவளிடம் பேசுங்கள். அவளிடமே கேளுங்கள். என்னிடம் சொல்லவே இல்லை."
 
"நானும் அனுமதி கேட்டேன். ஆனால் பாருங்கள், அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார்கள். நானும் ஓரளவுக்குத்தானே போக முடியும். முடிவு எடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களின் பார்வைக்கு வைத்தேன். ஆனால்..." - இது கெல்லியன்.
 
"யார் அவர்கள்?"
 
(கேள்விக்கு பதிலில்லை)

"இதோ அதிபரிடமே திரும்பக் கொடுக்கிறேன்."
 
"பாப், என்னையே நீங்கள் நேரடியாக என் அலுவலக எண்ணுக்கு அழைத்திருக்கலாம். என்னிடம் ஒரு செயலாளர் இருக்கிறார். இரண்டு-மூன்று பேர் இருக்கிறார்கள்."
 
"நானும் பல முறை முயன்றேன்."

...
 
"பிழை மிகுந்த நூல் ஒன்று வரப்போகிறது. அது மிகவும் தவறு."
 
"இல்லை, நூல் பிழையற்றதாக இருக்கும். சத்தியமாகச் சொல்கிறேன்."
 
"ஓ! சரி, பிழையற்றது என்றால் அது என்ன சொல்லவா? அமெரிக்க அதிபராக இதுவரை வேறு எவர் செய்ததைவிடவும் சிறப்பாக நான் என் வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். அது மட்டும் என்னால் சொல்ல முடியும். அப்படித்தான் நிறையப்பேர் உணர்கிறார்கள், என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளுங்கள், அடுத்த சில ஆண்டுகளில் பார்ப்பீர்கள். அப்படித்தான் நிறையப்பேர் உணர்கிறார்கள், பாப்."

இதுவும் நாம் தமிழ் நாட்டில் பார்த்திருக்கிறோம். "இதற்கு முன்பு இருந்த முதலமைச்சர்கள் எல்லோரைவிடவும் நான் சிறப்பாகச் செயல்படுகிறேன்" என்கிற கதையெல்லாம் ஏற்கனவே கேள்விப்பட்டவர்கள் என்ற வகையில், அமெரிக்காவே நம்மைவிட இருபது ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறதோ என்றும் தோன்றித் தொலைத்துவிடுகிறது. இது வரலாறு படிக்காததால் வரும் வினையா அல்லது தான் மட்டுமே உலகம் என்கிற சிந்தனைப்பாடுகளால் வரும் பிரச்சனையா?
 
"நம் நாட்டின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் நம் அதிபர் என்பதால் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்."
 
"சரி, பாப். மிகவும் நன்றி. உண்மையிலேயே பாராட்டுகிறேன். பார்ப்போம்."
 
இப்படியாக முடிந்துவிடுகிறது உரையாடல். இந்த உரையாடலை மட்டும் மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். அண்ணல் எப்பேர்ப்பட்ட தில்லாலங்கடி என்பது இப்போதே புரிந்துவிடும். 
 
சரி, நூலுக்குள் போவோம்...
 
நூலின் பெயர், 'Fear' ('அச்சம்'). அவ்வளவுதான். 'Trump in the White House' ('வெள்ளை மாளிகையில் டிரம்ப்') என்பது சிறிய உருவில் அச்சிடப்பட்டிருக்கும் துணைத் தலைப்பு.

சரி, நூலுக்கு இந்தப் பெயர் எப்படி வந்தது?

தேர்தலுக்குச் சற்று முன்பு நூலின் ஆசிரியர் டிரம்பிடம் செய்த நேர்காணல் ஒன்றில், "உண்மையான அதிகாரம் என்பது - அந்தச் சொல்லைப் பயன்படுத்தக் கூட எனக்கு விருப்பம் இல்லை - அச்சம்" என்று அவர் உதிர்த்த தத்துவ முத்து ஒன்றிலிருந்துதான் இந்தப் பெயர் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருடைய நடவடிக்கைகளுக்கும் ஆட்சி முறைக்கும் அச்சாணியாக இருக்கும் நம்பிக்கை இதுதானோ என்ற கேள்வியை அழுத்தமாகப் பதிய வைப்பதில் நூலின் பெயர் வெற்றி பெற்றிருக்கிறது.

தன்னுடைய கடந்த ஐந்து நூல்களைப் போலவே, இந்த நூலுக்காகவும், அத்தனை பணிகளையும் தனக்காக உடனிருந்து செய்த தன் உதவியாளர் ஈவ்லின் எம். டஃபியைப் பற்றிய பாராட்டுக் குறிப்போடு நூல் தொடங்குகிறது.

அடுத்த பக்கத்தில் வாசகர்களுக்கான குறிப்பில், எப்படி ஒவ்வொருவரையும் சந்தித்து உரையாடி, உரையாடல்களைப் பதிவு செய்து, ஆவணங்களைச் சேர்த்து, தகவல்களை உறுதி செய்து, அவற்றை இந்த நூலுக்குள் கொண்டுவந்தார்கள் என்று சொல்கிறார். அதன் முடிவில், இந்த நூலுக்காக டிரம்பை நேர்காணல் செய்ய முயன்றும் அவர் அதற்கு மறுத்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
 
ஏழைகளுக்குப் பணக்காரர்களைப் பிடிக்காது, பணக்காரர்களுக்கு ஏழைகளைப் பிடிக்காது என்பது போல, அறிவாளிகளுக்கு முட்டாள்களைப் பிடிக்காது, முட்டாள்களுக்கு அறிவாளிகளைப் பிடிக்காது என்பதும் உலக வரலாற்றில் நேர்ந்த பல முக்கியத் திருப்பங்களுக்குக் காரணமான அடிப்படைகளில் ஒன்றுதானே! தம் அரசாங்கம் எப்போதும் அறிவாளிகளால் அல்லது அப்படிப் பாசாங்கு செய்துகொள்கிறவர்களால் நடத்தப்பட்டதுதான், அது எப்போதும் தம் போன்ற எளிய மக்களுக்கு எதிரானதாகவே இருப்பதற்குக் காரணம் என்று எண்ணிய எளிய மக்கள், தம் நாட்டின் அறிவாளி வர்க்கத்துக்குப் புகட்டிய பாடம்தான் சென்ற அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் என்பது எல்லாம் முடிந்த பிறகு செய்யப்படும் ஆய்வுகளின் முடிவாகச் சொல்லப்படும் பல்வேறு கதைகளில் ஒன்று. அதற்கு அப்படியே நேரெதிரான ஒரு பார்வை, எப்போதும் அறிவாளிகளே தலைமையேற்று நடத்திய - முன்னின்று பங்களித்த, சில நூற்றாண்டு காலப் பழமையும் பெருமையும் கொண்ட மக்களாட்சி அரசாங்கம் என்கிற ஓர் அமைப்பு, தன் கண் முன்னாலேயே ஒரு மூடனின் கையில் சிக்கிச் சீரழிவதைப் பார்த்துக் காணச் சகியாத அறிஞர்களில் ஒருவர் அதை அம்பலப்படுத்த முயன்றதன் விளைவுகளில் ஒன்றுதான் இந்த நூல் என்பது.

மீண்டும் மீண்டும் இந்த நூல் சொல்வது, இதுவரை அமெரிக்காவை ஆண்ட எந்த அதிபரைவிடவும் பன்மடங்கு மூடர்-கோமாளி இப்போது அந்தப் பேரிடத்தில் அமர்ந்திருப்பவர் என்பதே. அதை நேரடியாக ஆசிரியரின் கருத்தாகச் சொல்லாமல் பல சான்றுகளோடு கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பவரின் அருகில் இருப்பவர்களின் வாயிலிருந்தே வரவைத்திருப்பதுதான் இந்த நூலின் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுவது. வெள்ளை மாளிகை போன்ற ஓர் அதிகார அரங்கத்தில் இருப்பவர்கள் இவ்வளவு மிக முக்கியமான தகவல்களை வெளியில் சொல்லியிருக்கிறார்கள் என்பதே ஒரு பெரும் வியப்புக்குரிய கதையாக இருக்கிறது. இவர்களையெல்லாம் தேச விரோதிகள் என்று சொல்லி உள்ளே தள்ளும் வசதிகள் இல்லாத நாடா அமெரிக்கா? நூலுக்காக அவர்கள் எல்லோரோடும் உரையாடி உரையாடிப் பல மணி நேர உரையாடல்களைப் பதிந்து வைத்துக்கொண்டிருக்கிறார் ஆசிரியர். மேலும் டிரம்பின் ஆட்களிடமிருந்தே கைப்பற்றிய பல ஆவணங்களும் கோப்புகளும் நாட்குறிப்புகளும் குறிப்பாணைகளும் டிரம்பே தன் கைப்பட எழுதிய குறிப்பும் கையில் வைத்துக்கொண்டிருக்கிறார்.

நாம் எல்லோருமே நம் குடும்ப-பணியிட வட்டத்தில் இப்படியான ஒருவரை அல்லது இந்த ஒருவரையே பல தனித்தனி மனிதர்களிடம் பார்த்திருப்போம். "காசு மட்டும் இல்லை என்றால், இவனையெல்லாம் நாய் கூட மதிக்காது. எப்படியோ பணம் சம்பாதிக்கிற நுணுக்கங்களை மட்டும் நன்றாகப் படித்து வைத்துக்கொண்டிருக்கிறான். மற்ற எதிலுமே துளி கூட அறிவு கிடையாது" என்போம். காலையில் பேசுவதை அப்படியே மதியம் மாற்றிப் பேசுவார். மதியம் பேசியதை மாலை மாற்றிவிடுவார். கெட்டவார்த்தைகள் நிறையப் பேசுவார். அவை நாகரிகம் என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்பவராக இருப்பார். ஆனால் அந்தந்த நிமிடம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள - பிறரின் நல்லெண்ணத்தைப் பெற, என்ன பேச வேண்டுமோ - செய்ய வேண்டுமோ அதைச் சரியாகப் பேசுவார்-செய்வார். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று எண்ணும் வேளையில், மண்டையில் நங்கென்று ஒரு குட்டு விழும்; எங்கே காதோடு அறைந்துவிடுவாரோ என்று பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் வேளையில் ஓடிவந்து கட்டியணைத்து ஒரு முத்தம் கொடுப்பார். இப்படி எவராலும் கணிக்க முடியாத மனிதராக இருப்பதாலேயே, எப்போதும் அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். அதில் அவரால் பாதிக்கப்பட்டோரே கூட இருப்பர். தன்னைச் சுற்றியுள்ள எல்லோருமே எப்போதும் தமக்குள் அடித்துக்கொண்டு சாகிற மாதிரி ஏதாவது இங்குமங்கும் இழுத்துவிடுகிற வேலை செய்பவராக இருப்பார். "என்னப்பா, இவன் இப்படிச் சொல்கிறான். நீ அப்படிச் சொல்கிறாய்!" என்று இழுத்துவிட்டுவிட்டு, சண்டை முற்றி அடிதடியாகும் போது, "சரி, சரி, அதோ அந்தப் பக்கமாகப் போய் அடித்துக்கொண்டு சாகுங்கள்!" என்று அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்.
 
முடிவு எடுப்பதிலும் அப்படியே. 'உலகத்தில் நாம் பார்த்த எல்லா மூளைகளும் எப்படி இயங்குகின்றன, எந்த வினைக்கு எப்படி எதிர்வினையாற்றும் என்று புரிந்துகொள்ள முடிகிறதே! ஆனால் இந்த மூளை மட்டும் எப்படி இயங்குகிறது, என்ன செய்தால் எப்படி எதிர்வினை ஆற்றும் என்று புரிந்துகொள்ளவே முடியவில்லையே!' என்று எல்லோரையும் வியப்பிலேயே வைத்திருப்பார். இப்படிப் போட்டதை அப்படிப் போட்டு, அப்படிப் போட்டதை இப்படிப் போட்டு, இதை எடுத்து அங்கே போட்டு, அதை எடுத்து வேறெங்கோ போட்டு என்று தினுசு தினுசாக அந்தந்த நிமிடத்துக்கென்று எந்த அடிப்படையிலும் இல்லாமல் அவர்களுக்கு மட்டும் தெரிந்த ஏதோவொரு கணக்குப்படி ஏதேனும் செய்வார். ஆனாலும் அவருக்கு எல்லாம் சரியாக நடந்துகொண்டுதானிருக்கும் அல்லது அவரின் சொதப்பல்களையெல்லாம் மாங்கு மாங்கென்று உழைத்து வேறொரு பெருங்கூட்டமே சரி செய்துகொண்டே பின்னால் ஓடிவரும். அப்படியான ஒரு நபர்தான் இந்த நூலின் நாயகர்.
 
"உலகத்தின் மிகத் தொன்மையான மக்களாட்சி என்று சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிற நாட்டின் தலைமைப் பொறுப்பில் எப்படியான ஒருவரைக் கொண்டுவந்து அமர்த்தியிருக்கிறோம் என்று பாருங்கள், மக்களே!" என்று வூட்வர்ட் கொண்டுவந்து இறக்கியிருக்கும் அதிர்ச்சியும் அது ஏற்படுத்தியிருக்கும் எதிர்மறை எண்ணங்களும் ஒருபுறம் என்றால், 'இதை இவ்வளவு பச்சையாக எழுத முடிகிற அளவுக்கு அந்த மக்களாட்சியில் இடம் இருக்கிறதே, அப்படியானால் அதன் நிறுவனங்கள் இன்னும் வலுவாகத்தானே இருக்கின்றன!' என்கிற நம்பிக்கையையும் வைக்கிறது இந்த நூல்.
 
வட கொரியாவில் இருந்து ஓர் ஏவுகணையை ஏவினால் அது 38 நிமிடங்களில் அமெரிக்காவின் மேற்குக் கடலோரப் பகுதியில் இருக்கும் லாஸ் ஏஞ்சலஸைத் தாக்கிவிடும். அப்படி ஒரு வேளை ஏதேனும் ஏவப்பட்டால், தென் கொரியாவுடனான தன் நெருக்கத்தாலும் வெளியுறவுக் கொள்கையாலும் தென் கொரிய மண்ணிலேயே அமெரிக்கா நிறுவியுள்ள தன் வசதிகளைக் கொண்டு, ஏவப்பட்ட ஏழாவது வினாடியிலேயே அதனைக் கண்டுபிடிக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது அமெரிக்கா. கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கோரஸ் (KORUS) என்கிற புகழ்பெற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலான - தென் கொரியாவுடனான இந்த உறவை முறித்துக்கொண்டால், இன்று தென் கொரியாவிலிருக்கும் வசதிகளை அப்படியே காலி செய்துகொண்டு, தன்னுடைய எல்லைக்குள்ளேயே இருக்கும் அலாஸ்காவில் இருக்கும் வசதிகளையே சார்ந்து இருக்க வேண்டியதிருக்கும். அப்படிச் செய்யும் போது, கண்டுபிடிக்கும் நேரம் 15 நிமிடங்களாகிவிடும். ஏழு வினாடி எங்கே? 15 நிமிடங்கள் எங்கே? இது, அந்த ஏவுகணையை வீழ்த்துவதற்கு அமெரிக்க இராணுவத்துக்குப் போதுமான நேரம் கொடுக்குமா?
 
இது எது பற்றியும் கவலைப்படாமல், "சித்தப்பன் குடும்பத்துக்கு நாம் எதுக்கு இம்புட்டுச் செலவழிக்கணும்?" என்று தென் கொரியாவுடனான உறவை முறித்துக்கொள்ளும் முடிவு ஒன்றைத் தானே எடுத்துவிடுகிறார். அதைத் தென் கொரிய அதிபருக்குக் கடிதமாக எழுதி, கையெழுத்துப் போட அண்ணாரின் மேசையில் வைக்கப்பட்டிருந்த தாள் ஒன்றை (ஒற்றைத் தாள்தான்), அவரின் உடன் இருக்கும் பொருளியல் ஆலோசகரே எடுத்து ஒளித்து வைக்கும் கதையோடு தொடங்குகிறது நூலின் முன்னுரை. கையெழுத்திடப்படாத இந்தக் கடிதத்தின் நகலும் நூலில் உள்ளது என்றால் நம்புவீர்களா? இது போலப் பல அதிர்ச்சிகள் நிறைந்ததுதான் இந்த நூல்.
 
உலகத்தின் தலைவிதியைத் தன் கைப்பிடியில் வைத்திருக்கும் அதிகார பீடமான வெள்ளை மாளிகை, அதன் வரலாற்றிலேயே, இதற்கு முன்பு இப்படியான எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யப்படும் கொள்கை முடிவுகளையும் பார்த்ததில்லை, அவற்றையும் எடுத்து ஒளித்துவைத்து விளையாடும் வேடிக்கைகளையும் பார்த்ததில்லை. இது ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, பல முறை மீண்டும் மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் அரங்கேறும் வெள்ளை மாளிகை விளையாட்டாகிவிட்டது என்கிறது நூல்.
 
வெளியுறவு, தேசப் பாதுகாப்பு சார்ந்த எல்லாக் கொள்கைகளிலும் இதே போடுதான். "அவர்களுக்கு எதற்கு நம் பணத்தைக் கொண்டு போய்க் கொட்ட வேண்டும்?" என்ற 'நியாயமான' கேள்வியைக் கேட்டு அதைத் துண்டிப்பது ஒன்றே கொள்கையாகக் கொண்டவர். பெரும்பாலும் இராணுவத்தில் பணி புரிந்தவர்கள் அதிபராவதைப் பார்த்த நாடு, முதன்முறையாக ஒரு வியாபாரியை அந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறது. அதற்கான 'விலை'யைக் கொடுத்துத்தானே ஆக வேண்டும்! இராணுவத்தில் மட்டுமே இருந்து பழகியவர்களிடம் வணிகம், பொருளியல், மக்கள் நலன் பற்றியெல்லாம் பேசிப் புரிய வைக்க முடியாது என்கிற தெளிவையும் ஓரிடத்தில் கொடுக்கும் நூல், வியாபாரம் மட்டுமே செய்துகொண்டிருந்த ஒருவரைக் கொண்டுவந்து இத்தகைய உயரிய பணியில் வைத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் விரிவாகச் சொல்கிறது. 
 
"இது என் காசு... அது உன் காசு... என்ன கதை வேண்டுமானாலும் சொல், முடிந்தால் உன்னிடம் இருப்பதைப் பறிக்கப் பார்ப்பேனே ஒழிய, என் காசு பத்துப் பைசா கூட உனக்குக் கொடுக்க மாட்டேன்" - இதுதான் அவருடனான எல்லா உரையாடல்களிலும் மீண்டும் மீண்டும் வரும் முடிவு. இந்த அடிப்படையிலேயே இதுவரை அமெரிக்கா கையெழுத்திட்டுள்ள எல்லா ஒப்பந்தங்களிலிருந்தும் வெளியேற முயல்கிறார். இதில் பெரிதும் மண்டை காய்ந்து போபவர் அவருடைய பொருளியல் ஆலோசகரே. பொருளியலின் அடிப்படைகளைப் பல முறை ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போலச் சொல்லிக் கொடுக்க முயன்றும் முடியாமல் வெறுத்துப் போய் ஒரு கட்டத்தில் அவரே வெளியேறிவிடுகிறார். "பொருளியல் பற்றிய உங்கள் பார்வைகள் எல்லாமே ஒரு மாதிரியாகவே இருக்கின்றனவே. இவற்றைவிட்டு ஏன் வெளியே வர மறுக்கிறீர்கள்?" என்று மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கூத்தாடும் போதும், மனிதன் இறங்கிவரவேயில்லை. "வர மாட்டேன். ஏனென்றால், இப்படித்தான் நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணிக்கொண்டிருக்கிறேன். அப்படியான என் நம்பிக்கைகளை நான் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்" என்பதுதான் அவர் அடம் பிடித்துக்கொண்டு வைக்கும் ஆணித்தரமான வாதம். 
 
இந்த வாதம் தனிமனித நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் என்றால் அதில் எவருக்கும் எந்தப் பிரச்சனையும் இருக்கப் போவதில்லை. ஆனால், இது ஒரு நாட்டின் அல்லது உலகின் அல்லது இன்னும் சொல்லப் போனால் மனித குலத்தின் இருப்பு பற்றிய பிரச்சனை. அதில் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ வித்தகர்களின்-வல்லுனர்களின் அறிவும் ஆற்றலும் படிப்பினைகளும் உட்சென்றிருக்கின்றன. இது பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாத ஒருவன் திடீரென்று உள்ளே நுழைந்து, "இவை எல்லாம் பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் முழுதையும் மக்கள் என்னிடம்தான் கொடுத்திருக்கிறார்கள். அதனால் நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள். உங்கள் பேச்சைக் கேட்பதற்கு நான் இங்கில்லை" என்று சொல்லும் போது, அதை அருகிலிருந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கும், அவர்கள் மூலம் வெளியில் இருந்து தெரிந்துகொள்கிற நம் போன்றவர்களுக்கும், மக்களாட்சியின் எல்லைகள் பற்றிய கேள்விகள் வரத்தானே செய்யும்!
 
தலைவனுக்கு இருக்கும் இன்னொரு பிரச்சனை - எதையும் எவரும் விரிவாக அல்லது அறிவுபூர்வமாக விளக்கிப் பேசத் தொடங்கினாலே இவருக்குப் பொறுமை தொலையத் தொடங்கிவிடும். அது, பொருளியலோ உலக அரசியலோ தேசப் பாதுகாப்போ, எந்த மண்ணாங்கட்டியாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். "வந்தியா... சுருக்கமாச் சொல்லிட்டுப் போயினே இரு... வழவழன்னு பேசுன... மருவாதி கெடையாது..." என்கிற கொள்கை கொண்டவர். இப்படியொரு காட்சி நூலில் விவரிக்கப்படுகிறது. அப்படியே கற்பனை செய்து பாருங்கள். ஒரு நாள், தேசப் பாதுகாப்பு ஆலோசகர் ஏதோ ஓர் ஆலோசனைக்காக இவருடைய அலுவலகத்துக்கு வருகிறார். அவரைக் கண்டதும், "என்னது, திரும்பவும் நீயா?" என்று பார்த்திபனைக் கண்டு வடிவேலு அலறுவது போல அலறுகிறார் இவர். அந்த அளவுக்கு!
 
2010-ஆம் ஆண்டில் ஒரு நாள், டிரம்புக்கு நெருக்கமான இருவர் இப்படிப் பேசிக்கொள்கிறார்கள். "ஏய், நம்ம டிரம்ப் அதிபர் தேர்தல்ல போட்டி போடப் போறாம்ப்பா!" என்கிறார் ஒருவர். "எந்த நாட்டுல?" என்கிறார் இன்னொருவர்.

இப்படியாகத் தொடங்குகிறது உலகத்தைப் புரட்டிப் போட்ட அந்தப் பயணமும் இந்த நூலின் முதல் அத்தியாயமும்.

முதலாமவர், ஆறு ஆண்டுகள் கழித்து அதே டிரம்பின் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்குத் துணை மேலாளராக இருந்த டேவிட் போசி. "போயா, யோவ். ஏதாவது நடக்கிற கதையைப் பேசுவியா?" என்பது போலத் தட்டி உதறிய இரண்டாமவர் யார் என்றால், தேர்தல் பணிகள்  மொத்தத்தையும் முதன்மை நிர்வாக அதிகாரியாக (Chief Executive Officer) இருந்து வெற்றி ஈட்டிக் கொடுத்த ஸ்டீவ் பேணன். இவர் வெற்றிக்குப் பின் ஏழு மாதங்கள் டிரம்பின் முக்கிய ஆலோசகராகவும் பணி புரிந்தார். பின்னர் தாக்குப் பிடிக்க முடியாமல், தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடியும் போனார்.

என்னதான் ஊழலாலும் தனிமனித ஒழுக்கக் கேடுகளாலும் சரிந்து வீழ்ந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட காலம் வரை, தமிழ் நாட்டு அரசியலில் நுழைகிற எவருக்கும் அடிப்படைத் தகுதியாக ஓரளவு அறிவு என்று ஒன்று இருக்க வேண்டியதிருந்தது. ஒரு கட்டத்தில், அதுவும் கேலிக்கூத்தாகி எந்தக் கோமாளியும் அமைச்சராகலாம் - முதலமைச்சராகலாம் என்ற நிலையும் வந்தது. இதுதான் நம் மக்களாட்சியின் உண்மையான வெற்றி என்போரும் நமக்கு மத்தியிலேயே இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தக் கூத்துகளையெல்லாம் பார்த்துவிட்டு, இன்று இந்தியாவிலேயே முதலமைச்சர் ஆகும் ஆசை கொண்ட அதிகபட்ச மூடர்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் ஆகியிருப்பது போல, யார் வேண்டுமானாலும் அதிபராக முடிகிற நாடுதான் அமெரிக்கா என்று அமெரிக்க அரசியலில் காலடி எடுத்துவைக்கும் எந்தக் கடைக்கோடித் தொண்டனுக்கும் நம்பிக்கை கொடுக்கும் அரும் பணியை இந்த நூல் செய்துகொண்டிருக்கிறது என்றும் சொல்லலாம். இந்தத் தேர்தலிலேயே அது பற்றிப் பேசுகிறார்கள் - "முன்பெல்லாம் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கென்று ஒரு தகுதி-தராதரம் இருக்கும். இந்த முறை பார்த்தால், யார் யாரோ வந்து நானும் போட்டியிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு நிற்கிறார்கள்."
 
அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருடன் பணி புரிவோரே அவரை "முட்டாள்" என்றும் "பைத்தியம்" என்றும் "ஐந்தாம்-ஆறாம் வகுப்பு மாணவனுக்கு இருக்கும் அறிவு கூட இல்லாதவர்" என்றும் "பெரும் பொய்யன்" என்றும் சொல்கிறார்கள். இந்த நூல் வெளிவந்த பின்பு, அப்படியெல்லாம் சொன்னவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லோருமே இவற்றை மறுத்திருக்கிறார்கள். அந்த மறுப்புகளை எப்படிப் புரிந்துகொள்வது என்பது உங்கள் விருப்பம். டிரம்பும் தன் பங்குக்குத் தன் சட்டத்துறைத் தலைவரை "மனநிலை பிறழ்ந்தவன்" என்கிறார். நூல் வெளிவந்த பின்பு, இவரும், நான் அப்படிச் சொல்லவே இல்லை, யாரையும் நான் அப்படிப் பேசுவதே இல்லை" என்று மறுக்கத்தான் செய்திருக்கிறார். "ஆமாடா, சொன்னேன். அதுக்கு என்னங்கிற இப்போ?" என்கிற காலமும் அமெரிக்க வரலாற்றில் வரலாமோ என்னவோ, யார் கண்டது!

இதெல்லாம் கிடக்கட்டும். நூல் முழுக்கவும், படிக்கும் போது, 'இந்த மனிதனுக்குக் கெட்டவார்த்தை போடாமல் பத்து நிமிடம் கூடப் பேச முடியாதா?' என்கிற உணர்வுதான் நமக்கு ஏற்படுகிறது. அப்பப்பா, எப்பேர்ப்பட்ட மக்களாட்சியாக இருக்க வேண்டும் இது!

ஆனால் இன்னொரு புறம், அதுதான் அவரை மக்களிடம் மிகவும் நெருக்கமாக்கியது என்கிறார்கள். 'பெரிய வெண்ணெய் போலப் பேசுபவர்களையே பார்த்துப் பழகிவிட்டோம். நம்மைப் போல இயல்பாகப் பேசுபவர் ஒருவர் - நம்மில் ஒருவர் வந்திருக்கிறார். இம்முறை நம் வாய்ப்பை அவருக்குக் கொடுப்போமே!' என்று இறங்கி அடித்ததில்தான் இங்கு வந்து நிற்கிறது.

'இப்படிச் செய்து பார்த்தால் என்ன! அப்படிச் செய்து பார்த்தால் என்ன!' என்று சோதனை முயற்சிகள் செய்து பார்க்கும் பண்பு, வித விதமான உணவுகள் செய்து போடும் ஒரு சமையற் கலைஞருக்கு அல்லது புதிய புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி ஆராய்ச்சி செய்யும் ஒரு விஞ்ஞானிக்குச் சரியாக இருக்கலாம். அதுவே ஓர் அணு உலை இயக்குபவருக்கோ  விமான ஓட்டிக்கோ சரியாக இருக்குமா? இந்தப் பணிகளில் நிறுவப்பட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதுதானே பாதுகாப்பு! ஒரு நாட்டின் தலைவன், அதுவும் உலக நாடுகளையெல்லாம் தன் தலைமையின் கீழ் வைத்துக்கொள்ள விரும்பும் ஒரு நாட்டின் தலைவன், எப்படி இருக்க வேண்டும்? சமையற் கலைஞர்-விஞ்ஞானி போலா? அணு உலை இயக்குபவர்-விமான ஓட்டி போலா?
 
"சரி, போய்ப் பேசித்தான் பார்ப்போமே!" என்று பேணனும் போசியுடன் சேர்ந்து டிரம்பைச் சந்திக்கப் போகிறார். அப்போது, போசி பல அறிவுரைகள் வழங்குகிறார். எந்த அரசியல் அறிவும் இல்லாத ஒருவர் இம்மாம் பெரிய ஆசைப் பட்டுவிட்ட பின்பு உடனடியாகச் செய்ய வேண்டிய வேலைகள் என்ன - சரி செய்துகொள்ள வேண்டிய கோளாறுகள் எவை என்று விளக்குகிறார். இதோ அந்த உரையாடலிலிருந்து சில முத்துக்கள்...

"அரசியல் விவகாரங்களில் உங்களுக்குச் சில பிரச்சனைகள் இருக்கின்றன."
 
"எந்த விவகாரத்திலும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எதைப் பற்றிச் சொல்கிறீர்கள்?"
 
"முதலில், குடியரசுக் கட்சியில் ப்ரோ-லைஃபுக்கு எதிரான எவரும் (அதாவது, கருக் கலைப்பை ஆதரிக்கும் எவரும்) இதுவரை முதல்நிலைத் தேர்தலில் வென்றதே இல்லை. நீங்களோ ப்ரோ-சாய்ஸ் (அதாவது, கருக் கலைப்பை ஆதரிப்பவர்)!"
 
"அப்டின்னா என்ன அர்த்தம்?"
 
"அப்டின்னா... கருக் கலைப்பை ஆதரிப்பவர்களுக்கு, ப்ரோ-சாய்ஸ் வேட்பாளர்களுக்கு, நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் கருத்துக்கள் வெளியிட்டுள்ளீர்கள். நீங்கள் ப்ரோ-லைஃபாக - கருக் கலைப்பை எதிர்ப்பவராக இருக்க வேண்டும்."
 
"நான் கருக் கலைப்பை எதிர்க்கிறேன். நான் ப்ரோ-லைஃப்."
 
"ம்ம்ம், பழைய சான்றுகள் வேறு மாதிரியாக இருக்கின்றனவே."
 
"அதெல்லாம் சரி பண்ணிக்கலாம். எப்படிச் சரி பண்ணனும்னு மட்டும் நீங்கள் சொல்லுங்கள். நான் - அதுக்கு என்ன பெயர் சொல்கிறீர்கள்? ப்ரோ-லைஃப். அதான் நான். ப்ரோ-லைஃப். நான்தான் சொல்றனே."
 
"அடுத்த பெரிய விஷயம், உங்கள் வாக்களிப்பு வரலாறு."
 
"என் வாக்களிப்பு வரலாறா? என்ன சொல்ல வருகிறீர்கள்?

"எவ்வளவு அடிக்கடி நீங்கள் வாக்களிக்கிறீர்கள் என்பது பற்றி..."

"எதைப் பற்றிப் பேசுகிறீர்கள்?"

"ம்ம்ம், குடியரசுக் கட்சியின் முதல்நிலைத் தேர்தல் பற்றி..."

மிகவும் நம்பிக்கையோடு, "ஒவ்வொரு முறையும் நான் வாக்களிப்பேன். 18-20 வயதிலிருந்து ஒவ்வொரு முறையும் வாக்களித்திருக்கிறேன்."

"அது சரியல்ல. நீங்கள் வாக்களித்திருக்கும் விவரங்கள் அடங்கிய வெளிப்படையான பதிவேடு உள்ளது." கத்தையாகக் கையில் பதிவேடுகளை வைத்துக்கொண்டிருந்தார் சட்டமன்றப் புலனாய்வாளர் போசி.

"நான் எப்படி வாக்களிப்பேன் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது."

"இல்லை, இல்லை, இல்லை, எப்படி வாக்களிப்பீர்கள் என்று சொல்லவில்லை. எவ்வளவு அடிக்கடி வாக்களிக்கிறீர்கள் என்பது பற்றிச் சொல்கிறேன்."

அரசியல் தொழிலின் அடிப்படைகள் கூடத் தெரியாத பேர்வழி என்பது பேணனுக்குப் புரிந்துவிடுகிறது.

"ஒவ்வொரு முறையும் வாக்களித்திருக்கிறேன்," அழுத்தமாகச் சொல்கிறார் டிரம்ப்.

"உங்கள் வாழ்க்கையிலேயே ஒரே ஒரு முறை தவிர முதல்நிலைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்ததே இல்லை," பதிவேட்டைக் காட்டிச் சொல்கிறார் போசி.

"ங்கோ... அது பொய். சுத்தப் பொய். வாக்களிக்க நேர்ந்த ஒவ்வொரு முறையும் வாக்களித்திருக்கிறேன்."

"நீங்கள் ஒரே ஒரு முதல்நிலைத் தேர்தலில் மட்டுமே வாக்களித்திருக்கிறீர்கள். 1988-இலோ என்னவோ நடந்த குடியரசு முதல்நிலைத் தேர்தலில்..."

ஒரு துளி சலனம் கூட இல்லாமல், அப்படியே 180 டிகிரி திரும்பி, "நீங்கள் சொல்வது சரிதான். ரூடிக்காக வாக்களித்தேன். 1989-இல் நடந்த முதல்நிலைத் தேர்தலில் கியூலியாணி மேயருக்குப் போட்டியிட்டார். அதுவும் இதில் இருக்கிறதா?"

"ஆமாம்."

"அதெல்லாம் சமாளிச்சிருவேன்."

"இன்னொரு பெரிய பிரச்சனை இருக்கிறது."
 
"என்னது அது?"

"ம்ம்ம், நீங்கள் இதுவரை கொடுத்துள்ள நன்கொடையில் 80% மக்களாட்சிக் கட்சிக்குக் கொடுத்ததாக இருக்கிறது." போசியைப் பொருத்தமட்டில் இதுதான் டிரம்ப் சமாளிக்க வேண்டிய மிகப்பெரிய பிரச்சனை.

"அதெல்லாம் புல்ஷிட்."

"வெளியிடப்பட்ட ஆவணங்கள் இருக்கின்றன."

"என்னது, இதற்கும் ஆவணங்கள் இருக்கின்றனவா!" - டிரம்ப் ஆடிப் போய்விடுகிறார்.

"நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கொடுத்துள்ள ஒவ்வொரு நன்கொடைக்கும்..." அரசியல் நன்கொடைகள் அனைத்தும் வெளியில் அறிவிக்கப்பட வேண்டியது நடைமுறையில் உள்ள நியமம்.
 
"நான் எப்போதுமே சரியாகப் பிரித்தே கொடுத்திருக்கிறேன்."

"ஓரளவுக்கு நன்றாகவே கொடுக்கிறீர்கள். ஆனால் 80% மக்களாட்சிக் கட்சி நன்கொடை. சிகாகோ, அட்லாண்டிக் சிட்டி..."

"அதெல்லாம் நான் பண்ணிதான் ஆக வேண்டும். எல்லா நகரங்களையும் இந்த மக்களாட்சிக் கட்சிப் பயலுகதான் நடத்துகிறார்கள். அங்கெல்லாம் நான் ஓட்டல் கட்ட வேண்டும். இவர்களைத் தடவிக் கொடுத்துத்தான் போக வேண்டும். இவர்களெல்லாம் என்னிடம் வந்தவர்கள்."

இது போன்று, முட்டாள்களே நிறைந்திருக்கும் ஒரு நாட்டில் கூட எளிதில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு ஓரங்கட்டப்பட வாய்ப்பிருக்கிற மாதிரியான எத்தனையோ பழைய சிக்கல்களைக் கொண்ட ஒரு மனிதன் எப்படி இறுதியில் வெற்றி வாகை சூடினான் என்று விரிகிறது நூலின் முதல் பகுதி.
 
நம்மூரில் போலல்லாமல், அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டும். இது யாருக்கு வாக்களிப்பது என்று மக்கள் முடிவு செய்வதைத் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. தனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அரசியலையே சுவாசித்து வளர்ந்த ஹிலாரி கிளிண்டனோடு விவாதித்து வெற்றி பெரும் அளவுக்குத் தலைவனிடம் சரக்கு இல்லை என்பது மட்டுமில்லை பயம். இந்த விவாதத்தில் இவர் போய்ச் சொதப்புகிற சொதப்பலில் உள்ளதும் அத்துக்கொண்டு போய்விடுமோ என்று பயந்து நடுங்கித் தயார் செய்கிறார்கள் மனிதரை. ஆனால் எதிர்பார்த்ததைவிட நன்றாகவே முடிந்துவிடுகிறது. இந்த நேரத்தில்தான் இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பெண்களைப் பற்றி இழிவாகப் பேசியது (தான் எப்படி எந்தப் பெண்ணிடமும் எதுவும் செய்துகொள்ள முடிகிற 'ஆண்மகன்' என்று உளறிக்கொட்டிய பேச்சு) வெளிவந்து இவரின் அணியினருக்குத் தூக்கத்தைக் கெடுக்கிறது. நன்கொடை கொடுத்தவர்கள் எல்லோரும் ஒவ்வொன்றாக விலகத் தொடங்குகிறார்கள். அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை பார்த்திராத மாதிரியான தோல்வியை டிரம்ப் காட்டப் போகிறார் அல்லது அவர் தேர்தலைவிட்டே விலகுகிறார் என்கிற நிலையில் வந்து நிற்கிறது சிக்கல். டிரம்பைக் கழற்றிவிட்டுவிட்டு குடியரசுக் கட்சியின் அடுத்த இடத்தில் இருந்த வேட்பாளரை இறக்கிவிடலாமா என்று சிந்திக்கும் அளவுக்கு சூழ்நிலை மோசமாகிறது.

அதை அப்படியே மிக எளிதாக ஹிலாரிக்கு எதிராகத் திருப்பிவிடுகிறார்கள். "நான் பேசத்தான் செய்தேன். இவருடைய கணவரோ எத்தனையோ பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளவே செய்தவர். அந்தப் பெண்களையெல்லாம் வாயடைக்க முயன்றவர் - மிரட்டிப் பணிய வைத்தவர் இவர். பெண்ணே பெண்ணுக்கு எதிராகச் செயல்பட்ட கொடுமையைக் கேளீரோ!" என்று அடித்தது பெண்களையே ஹிலாரிக்கு எதிராகத் திருப்பியது. பில் கிளிண்டனின் தவறுகளுக்கு ஹிலாரியை அடித்த அதே வேகத்தில், டிரம்பின் சேட்டைகளுக்கு மக்களிடம் மன்னிப்புப் பெற அவரின் மனைவியைப் பயன்படுத்துகிறார்கள். பில் மற்றும் ஹிலாரி கிளிண்டனால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்று நான்கு பேரைக் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். அப்படியே பெண்களின் வாக்குகள் ஹிலாரிக்கு எதிராகத் திரும்புகிறது. இது நாம் தமிழ் நாட்டில் பார்த்ததுதான். ஒருவர் பெண்களின் மனதை வென்றுவிட்டால் அதன்பின் அவரின் வெற்றியை எவரும் தடுக்க முடியாது. அப்படியான வேலையைச் சரியாகச் செய்ய முடிந்ததும் இவரின் வெற்றிக்கு முக்கியக் காரணிகள். இந்தத் தேர்தலில் இவருடைய ஆலோசகர்கள் அதை மிக அருமையாக முன்னகர்த்துகிறார்கள். "இந்தத் தேர்தல் உன்னைப் பற்றியதாகவே இருக்கக் கூடாது. ஹிலாரியைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். அவர் ஏன் இதற்குச் சரிப்பட்டு வர மாட்டார் என்று மட்டுமே பேச வேண்டும். நீ ஏன் இதற்குப் பொருத்தமான ஆள் என்று நம்மால் ஒரு போதும் நிரூபிக்கவே முடியாது" என்று திட்டமிட்டே இறங்கி அடிக்கிறார்கள்.
 
"தேர்தலுக்கு முன் கண்டதெல்லாம் காமெடியே இல்லை. இப்பப் பாரு வேடிக்கையை..." என்று கலங்கடிக்கின்றன அதன் பிறகு வரும் கதைகள்.
 
"சரி, வெற்றி பெற்றுவிட்டீர்கள். நீங்கள்தான் அடுத்த அதிபர். உங்கள் அணியைத் தேர்வு செய்யுங்கள்" என்றால், ஒரு பட்டியல் வருகிறது. அதில் பாதுகாப்புத் துறை போன்ற ஒரு மிக முக்கியமான துறையின் பொறுப்பு யாருக்கு என்று பார்த்தால் எவருக்குமே தெரியாத எவரோ ஒருவருடைய பெயர். அவர் யார் என்று கேட்டால், அவர்தான் அண்ணாச்சிக்குத் தேர்தல் நன்கொடை அதிகம் கொடுத்தவராம். மண்டை காய்ந்துவிடுகிறார்கள்.

இதெற்கெல்லாம் நடுவில் அமெரிக்கத் தேர்தல் முறைமையின் மீது அமெரிக்க மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டும் என்ற திட்டத்தோடு ரஷ்யா இந்தத் தேர்தலில் பல உள்ளடி வேலைகள் செய்தது என்கிற குற்றச்சாட்டு வேறு. அது பெரிதாக உருவெடுக்கிறது. ரஷ்யாவோடு இவர் வைத்திருக்கும் நல்லுறவும் மக்களின் சந்தேகத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது. அது போலவே சீனாவையும் வில்லனாகவே பார்த்துவிட்ட அமெரிக்கர்களுக்கு இவர் அவர்களோடு நல்லுறவு பேணுவது பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது. "எனக்குச் சீன அதிபரைப் பிடிக்கும். அவருக்கு என்னைப் பிடிக்கிறது" என்று சிறுபிள்ளை போலப் பேசுவதை, சீன அதிபர் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறார் என்று அமெரிக்காவில் எண்ணுகிறார்கள்.
 
நம் போன்றவர்களுக்கு நினைத்துப் பார்க்கவும் மனம் கூசுகிற மாதிரியான இன்னொரு சம்பவம் பற்றியும் இந்த நூல் பேசுகிறது. ஒபாமா பெயரைக் கேட்டாலே மனிதனுக்கு மண்டை முட்டிக்கொண்டு வருமாம். அதனால் ஒபாமாவின் திட்டங்கள் ஒவ்வொன்றையும் குறிவைத்து முடக்குவதிலேயே ஏகப்பட்ட நேரத்தை விரயம் செய்திருக்கிறார். இதைத் தமிழ் நாட்டில் ஒருவர் செய்தார். வாக்குக்கு நூற்றி ஐம்பது ரூபாய் என்று கணக்குப் போட்டு வாங்கிக்கொண்டு வாக்களிக்கிற நமக்கு இது சாதாரணமான விஷயம்தான். அதைப் பெருமையாகப் பேசிக்கொள்கிற கூட்டம் கூட நம்மில் இருக்கிறது. ஆனால் அதை ஓர் அமெரிக்க அதிபர் செய்வது அவர்களைப் பொருத்தமட்டில் பேரவமானம். இதுவே பேரவமானம் என்றால், இப்போது நீங்கள் படிக்கப் போவதை என்னவென்று சொல்வது! இவர் அதிபர் ஆகும் முன்பே நடந்த சம்பவம் இது. ஏதோ ஓர் அழகிப் போட்டியைப் பார்ப்பதற்காக ரஷ்யா போகிறார் டிரம்ப். அப்போது, ரஷ்யாவில் ஒபாமா தன் அரசுமுறைப் பயணத்தின் போது அதற்கு முன்பு தங்கியிருந்த ஓட்டலில், அதே அறையை வாடகைக்கு எடுத்து, தன்னோடு இரண்டு விபச்சாரிகளையும் அழைத்துக்கொண்டு போய், ஒபாமா குடும்பத்தோடு தங்கியிருந்த அந்தப் படுக்கையில் அவ்விரு விபச்சாரிகளையும் சிறுநீர் கழிக்கவைத்து வேடிக்கை பார்த்து, மகிழ்ந்து குதூகலிக்கிறார். அந்த அளவுக்கு இவருக்கு ஒபாமாவைப் பிடிக்காதாம். இத்தோடு சேர்த்து டிரம்புக்கு ரஷ்யாவுடன் இருக்கும் உறவு பற்றியும் ஏகப்பட்ட கேள்விகள் வைக்கப்படுகின்றன. அதற்கு என்ன காரணம் தெரியுமா? இந்தக் கோமாளித்தனம் அனைத்தையும் ரஷ்யப் பாதுகாப்புத் துறை படம் பிடித்து வைத்திருக்கிறது. அவை ரஷ்ய அதிபர் புடினின் கைகளிலேயே இருக்கலாம், அதை வைத்துக்கொண்டு அவர் இந்த மாமனிதனை ஆட்டிப் படைக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.
 
மற்ற எல்லா நாடுகளை விடவும் இன்றைக்கு அமெரிக்காவுக்கு இருக்கும் மிகப்பெரிய தலைவலி வட கொரியாதான். ஊரில் ஒரு பலமான ரவுடி இருப்பான். அவனுக்குப் போட்டியாகச் சில பலமான ரவுடிகள் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் பலமும் முதலாமவனுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனாலும் அவன் சுள்ளான் மாதிரி இருக்கும் வேறொரு புது ரவுடிக்கு அதிகம் பயப்படுவான். ஒரே காரணம், அவனிடம் என்னதான் இருக்கிறது என்று யாருக்குமே தெரியாமல் இருக்கும். அவனும் தன்னிடம் அது இருக்கிறது இது இருக்கிறது என்று பயமுறுத்துகிற மாதிரி ஏதேனும் தகவல்களைக் கசியவிட்டுக்கொண்டே இருப்பான். ஆனால் உண்மையிலேயே அவனிடம் அதெல்லாம் இருக்கிறதா இல்லையா என்று மட்டும் உறுதி செய்யவே முடியாது. அப்படியான சுள்ளானாக இருக்கிறது வட கொரியா. இந்த நூலைப் படிக்கும் போது, அமெரிக்கா ஏன் மற்ற நாடுகளும் மக்களாட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது என்ற கேள்விக்கு நமக்குப் புதியதொரு ஞானோதயம் பிறக்கிறது. தன் போலவே மக்களாட்சி நடக்கிற ஒரு நாடு ஒரு காலத்திலும் தனக்கு அச்சுறுத்தல் இல்லை. ஏனென்றால், எவ்வளவுதான் ஒளித்துவைக்கப்பட்ட இரகசியங்கள் என்று இருந்தாலும் ஒரு மக்களாட்சியில் அதையெல்லாம் மீறி எவ்வளவோ முக்கியத் தகவல்கள் பொதுவெளிக்கு வந்துவிடுவதைத் தடுக்க முடிவதில்லை. இந்த நூலே அதற்கொரு எடுத்துக்காட்டு. ஆனால் ஒரு சர்வாதிகார ஆட்சியில் அது வெளியே தெரியாமலே பார்த்துக்கொள்கிறார்கள். அதனால் அப்படியான ஆட்சிகள் ஒரு போதும் எவராலும் நெருங்க முடியாதவையாகவே இருக்கின்றன. எனவே இந்த மக்களாட்சிக் காவலன் நாடகமே அச்சத்தின் அடிப்படையிலானதோ என்றும் தோன்றுகிறது.
 
போகிற போக்கில், அமெரிக்கா எப்படியெல்லாம் வட கொரிய அதிபரையும் சிரிய அதிபரையும் போட்டுத்தள்ளத் திட்டமிட்டது என்பதையும் தெரிந்துகொள்ளலாம். இதையெல்லாம் கிம் ஜோங் உன் படித்துக்கொண்டிருப்பார். ஆனால் அவர் எப்படி இங்கே உள்ளவர்களைப் போட்டுத்தள்ளத் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார் என்பது இங்கே யாருக்குமே தெரியாது. அதுதான் நாம் மேலே சொன்னது.
 
கடந்த சில ஆண்டுகளில் சமூக ஊடகங்களின் தாக்கம் எங்கும் அதிகமாகிவிட்டது உண்மைதான். உலகெங்கும் உள்ள தலைவர்களும் அறிஞர்களும் கலைஞர்களும் அவற்றைப் பெரிதளவில் பயன்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில், இப்படியானவர்கள் எல்லோரும் உலகத்தைவிட்டு மிகவும் விலகி இருப்பவர்கள் என்ற கருத்து இருந்தது. எளிய மக்களோடு எந்தப் புழக்கமும் இல்லாமல் இவர்கள் எப்படி அவர்களுக்கு எது வேண்டும் என்று சரியாகப் புரிந்துகொள்ள முடியும் என்ற நியாயமான கேள்விக்குச் சரியான பதில் இருக்கவில்லை. ஆனால் சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின், களத்தில் இறங்கி மக்களோடு மக்களாகப் பழக முடியாதவர்கள் கூட அவர்களோடு தொடர்ந்து நிகழ்த்தும் இணைய உரையாடல்கள் மூலமாகத் தங்களை மக்களுக்கு நெருக்கமானவர்களாகக் காட்டிக்கொள்ள முடிகிறது. அப்படி சமூக ஊடகங்களைத் தன் வெற்றிக்கும் புகழுக்கும் பெரிதும் பயன்படுத்தியவர்களில் முக்கியமான ஆள் இவர். ஆனால் எல்லாவற்றுக்கும் எல்லை என்று ஒன்று இருக்கத்தானே வேண்டும். ஓர் அரசின் கொள்கை முடிவுகளையோ தேசப் பாதுகாப்பு பற்றிய உரையாடல்களையோ அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் முன்பு பொதுவெளியில் போட்டு உடைப்பது எப்படிச் சரியாகும்? அதை இந்த மனிதர் திரும்பத் திரும்பச் செய்கிறார். இந்த விளையாட்டின் உச்சகட்டக் கூத்துதான் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடன் அணுகுண்டுகள் பற்றிச் சண்டை போட்டு வேடிக்கை காட்டியது. அவர், "என் மேசையில்தான் அணுகுண்டுகளை ஏவும் பொத்தான் இருக்கிறது" என்பதும், இவர், "என் மேசையிலும் அந்தப் பொத்தான் இருக்கிறது. என் அணுகுண்டுகள் உன்னுடையவற்றைவிடப் பெரியவை - ஆற்றல் மிக்கவை" என்பதும், அவர், "பயந்து போன நாய் மாதிரிக் குரைக்காதே" என்பதுமாக உலக அரசியல் நாகரிகத்தின் அதலபாதாளத்தை உலகம் பார்த்தது. இதற்கு அமெரிக்க மக்களே உள்ளே வந்து, "யாருப்பா இந்தக் குழந்தை? அது கையில் இருக்கும் பொம்மையைப் பிடுங்கிக்கொண்டு அதைத் தூங்க வையுங்கள்" என்று பதில் அடித்ததும் சாதாரணப்பட்ட அவமானம் இல்லை.

இதே போல, ஒபாமா திருநங்கையர் இராணுவத்தில் பணிபுரியும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டுப் போனார் என்பதால், அதைத் தூக்கிவீச வேண்டும் என்று யாரிடமும் சொல்லாமல் இவரே ட்விட்டரில் தன் புதிய கொள்கையை அறிவித்துவிடுகிறார். பாதுகாப்புத் துறை கொதித்துப் போய்விடுகிறது. கேட்டால், மீண்டும் அதே கதை. "அரசு செலவில் பால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காகவே அவர்கள் இராணுவத்தில் வந்து சேர்கிறார்கள். இதை நான் அனுமதிக்க மாட்டேன்" என்கிறார். "எல்லாம் சரிண்ணே. அதைப் போய் ட்விட்டரில் போட்டா எப்படி?" என்று சொல்லிச் சரிக்கட்டி வழிக்குக் கொண்டுவருகிறார்கள்.

சமூக ஊடகங்களில் ஒரு நாயைப் போல இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு கண்ணில் தட்டுப்படுகிறவர்களையெல்லாம் குரைப்பதும் விரட்டுவதுமாக ஒரு பெருங்கூட்டம் உருவாகி வருகிறது. அப்படியானவர்களுக்கு உலகின் உச்சபட்ச அதிகாரத்தைக் கொண்ட ஒருவர் தம்மைப் போலவே இருப்பது கண்டு பெருமையாகத்தான் இருக்கும். கண்டு மகிழ்ச்சி அடைந்து குதிக்கத்தான் செய்வார்கள். ஆனால் காலங்காலமாக அந்தப் பொறுப்பைப் பெருமரியாதையோடு கண்டு வணங்கியவர்கள் எப்படிப் பார்த்துப் பொறுத்துக்கொண்டிருப்பார்கள்!

"அச்சம்தான் உச்சபட்ச அதிகாரம்" என்று அவர் வாயாலேயே அருளியதை வைத்துத்தான் இந்த நூலின் தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது. அதனால் பிறரையும் பிற நாடுகளையும் மிரட்டுவதும் உருட்டுவதும் அந்த அச்சத்திலேயே தன்னை முன்னகர்த்திக்கொள்வதுமாக இவருடைய அரசியல் ஓடுகிறது. இவருக்கு ஒரு பேரச்சம் இருக்கிறது. அது என்னவென்றால், பத்திரிகையாளர்களைச் சந்திப்பது. அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் மனிதர் காற்சட்டையில் உச்சாப் போகாதது மட்டும்தான் இன்னும் நடக்கவில்லை. தன்னை மறந்து கத்துவதும் உளறுவதும் பிதற்றுவதும் வாடிக்கையாகிப் போய்விட்டது. அவர்களும் இதைப் புரிந்துகொண்டு ஆட்டம் காட்டத் தொடங்கிவிட்டார்கள்.
 
எவர் பேசுவதும் புரிந்து தொலைக்க மறுக்கிறது. அதனால் அவர்கள் எல்லோரையும் முட்டாள், மூடன் என்று திட்டித் தொலைக்க வேண்டியிருக்கிறது. சுய புத்தியும் இன்றி சொல் புத்தியும் இல்லாத ஒருவரிடம் மாட்டிக்கொண்டு காலத்தைத் தள்ள முடியாமல் தப்பி ஓடுகிறார்கள் துறை வல்லுநர்கள். அவ்விடங்களைத் தனக்கு வேண்டியது போல ஆடி அலங்கரிக்கும் ஆட்களைக் கொண்டு நிரப்புகிறான் தலைவன். தன் தகுதிக்கு மீறியவற்றைத் தனக்குத் தந்து அலங்கரிக்கும் தலைவனுக்கு விசுவாசத்தோடு இருக்கும் பொருட்டு, அவர்களும் அவனுடைய காமெடிகளுக்கெல்லாம் ஒத்து ஊதுகிறார்கள். இப்படியாக நகைச்சுவைப் படம் ஓட்டிக்கொண்டிருக்கிறது உலகின் அதி பயங்கர அதிகார மையம்.

இடையிடையில் தலைவனின் நிறைகளையும் கோடிட்டுக் காட்டும் படி சில நிகழ்வுகள் வருகின்றன. ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை வெளியேற்ற வேண்டுமென்பதில் மீண்டும் மீண்டும் தீவிரம் காட்டுகிறார். நம் பிள்ளைகளை எதற்கு அங்கே பலி கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார். அது நாட்டின் - உலகின் நலனுக்கு நல்லதில்லை என்று பாதுகாப்புத் துறையினர் கருதுகின்றனர். ஆனாலும் இந்த விஷயத்தில் இவரின் பிடிவாதம் பலருக்கு வியப்பைத் தருகிறது. அது அவரைப் பற்றிய பிம்பத்துக்கு எதிரானதாக இருக்கிறது. அதுதானே அவர்! ஆனால் அங்கிருந்து அவர்களின் வளங்களை அள்ளிக்கொண்டு வர வேண்டும் என்கிற பேராசை ஒன்றையும் அவ்வப்போது வெளிப்படுத்துகிறார். அதுவும் அவர்தானே!
 
ஒரு தலைவன் எல்லாத் துறைகளிலும் வித்தகனாக இருக்க வேண்டும் என்பதில்லை எதிர்பார்ப்பு. ஒவ்வொரு துறைக்கும் எவரைப் பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்கிற முடிவெடுக்க முடிகிற - அவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கேனும் அடிப்படை அறிவாவது இருக்க வேண்டும். அது கூட இல்லாத ஒருவர்தான், "என் கையில்தான் எங்கள் நாட்டின் மொத்த அணுகுண்டுகளின் பொத்தான் இருக்கிறது. ஒரு நொடிதான். லைட்டா ஒரு அமுக்கு அமுக்குனேன், நீங்கள்லாம் அம்புட்டுத்தான். அம்பேல்!" என்று பள்ளிச் சிறுவன் போல உதார் விட்டுக்கொண்டு, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே இப்போதைய தலைவனாக இருக்கிறார் என்கிற இந்த நிலையை எவ்வளவு தீவிரமாக அல்லது எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

* 2019 ஆகஸ்ட் கணையாழி இதழில் வெளிவந்தது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.