Jump to content

அசுரன்: சினிமா விமர்சனம்


Recommended Posts

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை படங்களுக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனும் நடிகர் தனுஷும் இணைந்திருக்கும் நான்காவது படம். எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலின் திரைவடிவம்தான் அசுரன்.

1960களில் நடக்கிறது கதை. தன் அண்ணனைக் கொலை செய்த வடக்கூரானை (ஆடுகளம் நரேன்) கொலை செய்கிறான் 15 வயதுச் சிறுவனான சிதம்பரம் (கென் கருணாஸ்). வடக்கூரானின் ஆட்களும் காவல்துறையும் தேட ஆரம்பிக்க, சிதம்பரமும் அவனது தந்தை சிவசாமியும் (தனுஷ்) காட்டுக்குள் தப்பிச் செல்கிறார்கள். மிகவும் பயந்தவராகவே தன் தந்தையை அறிந்திருந்த சிதம்பரத்திற்கு காட்டுக்குள் பதுங்கியிருக்கும்போதுதான் அவரது மறுபக்கம் தெரிகிறது. இந்தக் கொலை வழக்கிலிருந்தும் வடக்கூரான் குடும்பத்தின் பகையிலிருந்தும் சிதம்பரத்தின் குடும்பம் எப்படி மீள்கிறது என்பது மீதிக் கதை.

வெற்றி மாறனின் படங்களில் பெரும்பாலானவை தீராப் பகையையும் துரோகத்தையும் பழிவாங்குவதையும் மனம் திடுக்கிடும் வகையில் சொல்லிச் செல்பவை. இந்தப் படமும் அதேபோலத்தான். ஒரு நாவல் திரைப்படமாகும்போது, அதன் மையப் புள்ளியிலிருந்து விலகி, வேறொரு கதையாக மாறிவிடும். ஆனால், பூமணியின் வெக்கையை கிட்டத்தட்ட அதே உக்கிரத்துடன் திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

ஒரு கொலையைச் செய்துவிட்டு சிதம்பரமும் சிவசாமியும் காட்டுக்குள் நுழைய, மெல்ல மெல்ல ஒரு கரிசல்காட்டு வாழ்க்கையை திரையில் விரிக்கிறார் வெற்றிமாறன். வெக்கை நாவலின் ஆசிரியரான பூமணி ஒரு முறை அந்த நாவலைப் பற்றிப் பேசும்போது, "கொலை செய்தது சிதம்பரம். காட்டுக்குள் திரிந்தது நான்" என்றார். இப்போது அந்தக் காட்டுக்குள் ரசிகர்களையும் அழைத்துச் சென்றிருக்கிறார் வெற்றிமாறன். அவரது மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். ஏன் மிகச் சிறந்த படமாகக்கூட ஒருவர் கருதலாம்.

சிவசாமி பாத்திரத்திற்கு தனுஷ் மிகச் சிறந்த தேர்வு. பல காட்சிகளில் தன் முந்தைய உயரங்களைத் அனாயாசமாகத் தாண்டிச் செல்கிறார் அவர். குறிப்பாக, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி மஞ்சு வாரியர் கேட்கும்போது, தனுஷின் முகத்தில் இருக்கும் பரிதவிப்பு, அட்டகாசம்.

கொலை செய்துவிட்டு தந்தையுடன் தப்பிச் செல்லும் சிறுவனாக வரும் கென் கருணாஸ், ஒரு மிகச் சிறந்த அறிமுகம். 16 வயதுச் சிறுவனுக்கே உரிய படபடப்பு, கோபம், பயம் எல்லாவற்றையும் தொடர்ந்து முகத்தில் தக்கவைக்கிறார் கென்.

பசுபதி, நரேன், பிரகாஷ் ராஜ், மஞ்சு வாரியர், அம்மு அபிராமி என ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பொருத்தமான ஆளைப் பார்த்துத் தேர்வுசெய்திருக்கிறார் இயக்குநர்.

அசுரன்படத்தின் காப்புரிமைINDIAGLITZ/ASURAN

ஜி.வி. பிரகாஷின் இசை படத்தில் மிகப் பெரிய பலங்களில் ஒன்று. படத்தின் தீவிரத்தை இவரது இசை இன்னும் பல மடங்கு அதிகரிக்கிறது. 'கத்தரிப் பூவழகி' பாடல், கொடும் பாலைவனத்தில் பெய்யும் பெரு மழையைப் போல இருக்கிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவும் அபாரம்.

பல கொலைகளுக்குப் பிறகும், பிரச்சனைகளுக்குப் பிறகும் இறுதியில் ஒரு நம்பிக்கைக் கீற்றை விதைக்கிறது படம். 'பிறகு', 'வெக்கை' என பூமணியின் எல்லா நாவல்களிலும் அடிப்படையான அம்சம் இதுதான். பிரச்சனைகள், அழிவுகளைத் தாண்டியும் மனித வாழ்க்கை முன்னோக்கிச் செல்லும் என்பதற்கான நம்பிக்கையை அவரது கதைகள் கொடுத்துக்கொண்டே இருக்கும். வெற்றி மாறனின் இந்தப் படமும் அதே நம்பிக்கைக் கீற்றுடன் முடிகிறது.

ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது ஒன்று திரைக்கதைக்காக நாவல் மாற்றப்பட்டு முற்றிலும் அடையாளம் தெரியாமல் போய்விடும். அல்லது அப்படியே படமாக்கப்பட்டு பார்க்கச் சகிக்காமல் இருக்கும். ஆனால், ஒரு நாவலை சிறந்த திரைக்கதையாக்கும் சூத்திரத்தை இந்தப் படத்தில் முன்வைத்திருக்கிறார் இயக்குநர். அந்த வகையிலும் இது முக்கியமான படம்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-49931644

Link to comment
Share on other sites

Dhanush-Asuran.jpg
 

அசுரன்- திரைப்பட விமர்சனம்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘அசுரன்’ எப்படி என்று பார்ப்போம்.

தனுஷ் குடும்பத்திற்கும், ஆடுகளம் நரேன் குடும்பத்திற்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சினையில் தனுஷின் மூத்த மகன் கொலை செய்யப்பட, அதற்கு பழிவாங்குவதற்காக தனுஷின் இளைய மகனான கென், நரேனை கொலை செய்துவிடுகிறார். இதனால் தனுஷின் குடும்பத்தை வேறோடு அறுக்க நரேனின் ஆட்கள் கிளம்ப, அவர்களுக்கு காவல் துறையும் துணை போகிறது. அவர்களிடம் தப்பிக்க மகனுடன் காட்டில் பதுங்கும் தனுஷின் மறு உருவம் தெரிய வருவதோடு, அதுவரை வன்முறையை தவிர்த்து சமாதானத்தை நாடிய தனுஷ், தனது குடும்பத்திற்காக மீண்டும் கத்தியை கையில் எடுக்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் அத்தனையும் அதிரடி நிறைந்த சரவெடியாக திரையில் விரிகிறது.

வெக்கை நாவல் எந்த அளவுக்கு பரபரப்பாக இருக்குமோ அதைப்போலவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், வெக்கை நாவலை முழுமையாக படமாக்காமல், அதன் அடிநாதத்தை, தனது கற்பனை கதையுடன் சரியான புள்ளியில் இணைத்து ஒரு முழுமையான மண் சார்ந்த படத்தையும், அதன் மூலம் வன்முறை எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பதையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

40 க்கு மேற்பட்ட வயதுடைய கதாபாத்திரத்தில் தனுஷ் கச்சிதமாக பொருந்தி போகிறார். தனது பாடி லேங்குவேச் மற்றும் கண் மூலம் சின்னசாமி என்ற கதாபாத்திரத்தை நம்முள் கடத்திவிடுபவர், இளம் வயது தோற்றத்தில் காட்டும் வீரியம் மூலம் நம்மை மெய்சிலிரிக்க வைத்துவிடுகிறார்.

தனுஷின் மனைவியாக வரும் மஞ்சு வாரியர், திருநெல்வேலி தமிழ் பேச சில இடங்களில் கஷ்ட்டப்பட்டிருந்தாலும் கரிசல் மண்ணின் பெண்ணாக மனதில் ஒட்டிக்கொள்கிறார். தனுஷின் மூத்த மகனாக நடித்திருக்கும் டிஜே அருணாசலமும், இளைய மகனாக நடித்திருக்கும் கென் கருணாஸும், கதாபாத்திரத்திற்கு ஏற்ற கச்சிதமான தேர்வாக இருக்கிறார்கள்.

வழக்கறிஞராக வரும் பிரகாஷ்ராஜ், பசுபதி, போலீஸ் இன்ஸ்பெக்டரான இயக்குநர் பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன் என அனைத்து நடிகர்களும் மண் சார்ந்த மக்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆக்‌ஷன் காட்சிகளில் வீசப்படும் வெடிகுண்டின் சத்தம், ஆக்‌ஷன் காட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட பின்னணி இசை, தனுஷ் காட்டில் பதுங்கி செல்வது என்று அனைத்து ஏரியாவிலும் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை மிரட்டல்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் நம்மையும் கோவில்பட்டியில் பயணிக்க வைத்துவிடுகிறார். பறந்து விரிந்த காட்டுக்குள் தனுஷ் சுற்றி திரியும் போது நாமும் ஏதோ காட்டுக்குள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இவரது ஒளிப்பதிவு ஒரு முழுமையான பீரியட் படம் பார்த்த அனுபவத்தையும் கொடுக்கிறது.

பீட்டர் ஹெய்னின் ஆக்‌ஷன், ஆர்.ராமரின் படத்தொகுப்பு, ஜாக்கியின் கலை, பெருமாள் செல்வத்தின் உடை வடிவமைப்பு என அனைத்துமே படத்தை வேறு ஒரு உயர்த்திற்கு எடுத்துச் செல்லும் விதத்தில் அமைந்திருக்கிறது.

வெற்றிமாறனின் பெஸ்ட் படம் என்று சொல்லும் அளவுக்கு படம் தொடங்கியதில் இருந்து முடிவு வரை, படு பரபரப்பாக நகர்கிறது. அதிலும், நரேனை கென் வெட்டிய பிறகு வேகம் எடுக்கும் படம், தனுஷ் கத்தி எடுக்கும் போது பரபரப்பின் உச்சத்திற்கே சென்றுவிடுகிறது.

தலித் மக்களின் பஞ்சமி நிலங்களை மேல்தட்டு மக்கள் பறித்துக்கொண்டனர் என்பதை தைரியமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், ஜாதி பிரிவினை குறித்து அளவோடு பேசினாலும் அதை அழுத்தமாகவும், நியாயமாகவும் பேசியிருக்கிறார்.

நிலம் ஒவ்வொரு மனிதனின் உரிமை, அதை பறிக்க நினைத்தால் எதிர்த்து போராட வேண்டும், என்று சொல்லும் இயக்குநர் வெற்றிமாறன், வன்முறை காட்சிகளோடு கதையை நகர்த்தினாலும், படம் முழுவதும் வன்முறை வேண்டாம், என்பதையும் அழுத்தமாகவே வலியுறுத்தி வருகிறார்.

மொத்தத்தில், ‘அசுரன்’ அதிரடி நிறைந்த சரவெடியாக இருக்கிறது.

-ரேட்டிங் 4/5

https://chennaionline.com/tamil/அசுரன்-திரைப்பட-விமர்சன/

Link to comment
Share on other sites

நேற்ற கொழும்பில் இப் படத்தை பார்த்தேன்.  வெற்றிமாறனின் இன்னொரு அருமையான அரசியல் படைப்பு.

தனுஷ்....இதுக்கு மேலாக இன்னொரு படத்தில் இவரால் நடிக்க முடியுமா என ஒவ்வொரு படத்திலும் கேள்வி கேட்க வைத்தாலும் இந்தப் படத்தில் அதை நூறு தடவை கேட்க வைக்கின்றார்.

இப் படம் பேசும் அரசியல் தேசங்களை தாண்டி, மொழிகளை தாண்டி, உலகம் முழுக்க இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும், ஒடுக்குமுறையில் இருந்து வெளியே வர போராடும் வர்கத்தின் சவால்களையும் தெளிவான திரைக்கதையில் சொல்லியுள்ளார் வெற்றிமாறன்.

தரமான சினிமா பார்க்க விரும்புகின்றவர்கள் தவற விடக்கூடாத சினிமா..

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திரை விமர்சனம்: அசுரன்

518858.jpg

சிவசாமி (தனுஷ்) குடும்பத்தின ரிடம் இருக்கும் சிறு நிலத்தை தன் தம்பி வெங்கடேசன் தொடங்கப்போகும் சிமென்ட் தொழிற்சாலைக்காக வாங்கத் துடிக்கிறான் வடக்கூரான் நரசிம்மன் (ஆடுகளம் நரேன்). சாதுவான சிவசாமியோ, அது அவரது மனை விக்கு அவளது அண்ணன் தந்த நிலம் என்பதால் விற்க மறுக்கிறார். இதில் ஏற்பட்ட தகராறு காரண மாக சிவசாமியின் மூத்த மகன் முரு கனை ஆள்வைத்துக் கொன்றுவிடு கிறான் நரசிம்மன். இதை நேரில் பார்த்த சிவசாமியின் இரண்டாவது மகன் சிதம்பரம் (கென் கருணாஸ்), நரசிம்மனையே கொன்றுவிடுகி றான். இதனால் சிவசாமியின் குடும்பத்தையே அழிக்க நரசிம் மன் குடும்பம் அலைகிறது. அவர் களுக்கு பயந்து மனைவி பச்சை யம்மாளையும் (மஞ்சு வாரியர்), குழந்தையையும், மைத்துனரான முருகேசன் (பசுபதி) பொறுப் பில் விட்டுவிட்டு சிதம்பரத்துடன் காட்டுக்குள் நுழைகிறார் சிவசாமி. போலீஸாரும் கொலையாளியைத் தேடுகிறார்கள். சிவசாமி போலீஸி டம் மாட்டினாரா? தன் குடும் பத்தைக் காப்பாற்றினாரா என்ப தற்கு விடை சொல்கிறது ‘அசுரன்’.

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வட சென்னை’ வரிசையில் 4-ம் முறையாக ‘அசுர’னில் இறங்கி அடித்திருக்கிறது வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி. 80-களில் தொடங் கும் கதை 60-களில் பின்னோக்கி பயணித்து மீண்டும் 80-க்குள் வந்து படத்தை நிறைவுசெய்திருக்கும் விதமும், ஒரு படத்துக்குள் இரு பீரியட் கதைகளைச் சொன்ன விதமும் ரசிக்கவைக்கின்றன. ஒடுக்கப்பட்ட மக்களை நுட்பமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆதிக்க வர்க்கத்தினரையும், அவர்களது சாதிய வன்மத்தையும் படம் உரக்கப் பேசியிருக்கிறது.

எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிப்படையா கக் கொண்டு, மணிமாறனும் வெற்றி மாறனும் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். அடித்தட்டு மக்கள் பக்கம் நின்று அவர்களது நியா யத்தை துணிச்சலுடன் பேசியிருக் கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

சிவசாமி கதாபாத்திரத்தில் படத்தை முழுவதும் தாங்கிப் பிடிக் கிறார் தனுஷ். பிள்ளைகளுக்குப் பாசமான அப்பா, குடும்பத்தைக் காக்கப் போராடும் குடும்பத் தலை வன், பிளாஷ்பேக்கில் அழகான காதலன், சாதிய துவேஷங்களை எதிர்க்கும் ஆக்ரோஷமான இளை ஞன் என ஒவ்வொரு காட்சியிலும் தனுஷ் மிளிர்கிறார். ஆரம்ப காட்சி களில் அவரது உடல்மொழியும் ஒப்பனையும், ஐம்பதைத் தொடும் அந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருந்தாததுபோல் தோன்றினா லும், போகப் போக தனது நடிப்பால் ஈடுகட்டிவிடுகிறார் தனுஷ்.

மஞ்சு வாரியர் உடை, தோற்றம், நடிப்பு எல்லாம் பொருந்துகிறது. குரலில்தான் வட்டாரத்துக்குப் பொருந்தாத அந்நியத் தன்மை! தனுஷின் மூத்த மகனாக டிஜே அரு ணாச்சலமும், தனுஷை கையாலா காத அப்பாவாக நினைக்கும் இளைய மகன் கதாபாத்திரத்தில் கென் கருணாஸும் கச்சிதமா கப் பொருந்தியுள்ளனர். பசுபதி, ‘ஆடுகளம்’ நரேன், பாலாஜி சக்தி வேல், பிரகாஷ்ராஜ் என எல்லோ ரும் தெக்கத்தி மனிதர்களாகவே மாறியுள்ளனர்.

வேல்ராஜின் ஒளிப்பதிவு தேரிக் காட்டையும் கரிசல் பூமியையும் துல்லியமாகப் படம் பிடித்திருக் கிறது. காட்சிகளில் பயன்படுத்தப் பட்ட இருள், ஒளி ஆகியவற்றின் மூலம் கதாபாத்திரங்களின் மன நிலையை தத்ரூபமாகவே வெளிப் படுத்துகிறது ஒளிப்பதிவு.

‘‘அவனுக்கு நாய் போச்சுன்னு கஷ்டமாயிருக்கு.. எனக்கு நாயோட போச்சேன்னு ஆறுதலாயிருக்கு..’’, ‘‘காடு இருந்தா எடுத்துக்கிடுவா னுவ.. ரூபா இருந்தா புடுங்கிக்கிடு வானுவ.. ஆனா, படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது..’’ போன்ற வசனங்களி லும், பெண் குழந்தையைத் ‘தாய்’ என அழைக்கும் நுட்பத்திலும் கவனிக்க வைக்கிறார்கள் வசனம் எழுதிய சுகாவும், வெற்றிமாறனும்.

பாடல்களைவிட பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ் கவனம் ஈர்க்கிறார். காலகட்டத்தை சித்தரிப் பதில் கலை இயக்குநர் குறிப்பிடத் தக்க வகையில் பங்களித்துள்ளார்.

தவிர்க்கமுடியாத சூழலிலேயே சிவசாமி வன்முறையை தேர்ந் தெடுப்பதாகக் காண்பித்தாலும், வன்முறைக் காட்சிகள் படம் பிடிக் கப்பட்ட விதமும், திரைக்கதையில் அவை இடம்பெறும் விதமும் வன் முறையைக் கொண்டாடுவதாக அமைந்துவிடுகின்றன. கெட்ட வார்த்தைகளும் தாராளம்! இது போக இளைஞன் தலையில்லாமல் கிடக்கும் காட்சி, துண்டிக்கப்பட்டுக் கிடக்கும் கை..! (பெற்றோர் துணை யுடன் சிறுவர்களும் பார்க்கலாம் என்று பரிந்துரைக்கும் யு/ஏ சான்றிதழைத் தணிக்கை வாரியம் வழங்கியிருக்கிறது).

உறவுகளின் அன்பைச் சொல் லும் ஒரு நாவலை சினிமாத்தனத் துக்கு மாற்றியதில் இயக்குநர் வெற்றிமாறன் ஜெயித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மனிதர்கள் செருப்பு அணியக்கூட முடியாமல் இருந்த சாதிய ஒடுக்குமுறையையும், அந்த மக்களின் கண்ணீர்க் கதையையும் சரியாகவே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். கல்வி மட்டுமே அந்த மக்களுக்கு விடியல் தரும் என்பதையும் ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால், வழக்கமான சினிமா உத்திகளையே பின்பற்றிய வகை யில், வெற்றிமாறனும் சில ‘கிளிஷே’க்களுக்கு தப்பவில்லை. ஈட்டியில் ஒரே குத்தில் வில்லன் சாகி றான். நாயகனுக்கு நெஞ்சில் ஈட்டி பாய்ந்தாலும் உயிரோடு எழுந்து சரணடையப் போகிறான். பீரியட் படம் என்பதைக் காட்டுவதற்காக பழைய போன், சுவர் விளம்பரங் கள் என வழக்கமான உத்திகளையே காட்டுவதும் அலுப்பூட்டுகிறது.

அனைத்தையும் மீறி, ‘அசுரன்’ - வன்முறைக் கறைபடிந்த ஒடுக் கப்பட்டவர்களின் நாயகன்தான்.

 

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/518858-asuran-review.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசுரன்

வா. மணிகண்டன்


சமீபத்தில் ஒரு திருமண விழாவில் இளைஞனொருவன் அருகில் அமர்ந்திருந்தான். ‘எப்படிங்கண்ணா புக் ரிலீஸ் பண்ணுறது?’ என்று ஆரம்பித்தான். கவிதை எழுதுவானோ என்று நினைத்து சற்று தள்ளி அமர்ந்தேன். சாதியப் பெருமைகளை புத்தகமாக எழுதப் போகிறானாம். இப்படி நிறையப் பேர் சுற்றுகிறார்கள். கிடா வெட்டுவது கூட அவர்களுக்கு சாதியப் பெருமைதான். ‘என்ன மாதிரியான பெருமைகள்’ என்றால் ஐம்பது வருடங்களுக்கு முன்பாக எப்படி கெளரவமாக இருந்தோம் என்று எழுதுவதாகச் சொன்னான். அவனிடம் என்ன பேசுவது என்று கொஞ்ச நேரம் குழப்பமாக இருந்தது.  உண்மையில் அவன் பெருமைகள் என்று நினைத்துக் கொண்டிருப்பது அன்றைக்கு அப்பட்டமாக வெளிப்பட்ட சாதிய வெறி. அக்கம்பக்கத்தில் கேள்விப்படும் நான்கைந்து சாதிகளைத் தவிர அவனுக்கு பெயர் கூடத் தெரியவில்லை. அவன் பேசுவது அத்தனையும் செவிவழிச் செய்தி- செவிவழி என்பதைவிட வாட்சாப் வழிச் செய்தி.

 

தமிழகத்தின் சாதியச் சிக்கல்களைப் புரிந்து கொள்ளாத இளந்தலைமுறையினர் மிகப்பெரிய கூட்டமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மேம்போக்காகத் தெரிந்ததெல்லாம் எங்கள் தாத்தா காலத்தில் அடங்கியிருந்தவர்கள் தங்களது அப்பன் காலத்தில் திமிர் பிடித்தவர்களாகிவிட்டார்கள் என்பதுதான். அவர்களை பழையபடி மீண்டும் அடக்கி வைப்பதுதான் தங்களின் வாழ்நாள் லட்சியமாகச் சொல்லிக் கொண்டு வாட்ஸாப்பில் வாசித்துக் கொண்டிருப்பவர்கள். சிலர் கைகளில் சாதியப் பெருமைகளைப் பச்சை குத்திக் கொள்கிறார்கள். மற்றவர்கள் நெஞ்சுக்குள் குத்திக் கொள்கிறார்கள். 

 

இங்கே நிலம்-அரசியல்-சமூகம்- பொருளாதாரம் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. நிலத்துக்கான அரசியல், அரசியலுக்கான பொருளாதாரம், பொருளாதாரத்துக்கான நிலம் என எந்தவொன்றையும் இன்னொன்றோடு தனித்தனியாகவும் பொருத்திப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் எல்லாவற்றையும் இணைத்துப் புரிந்து கொள்ளத் தொடங்கும் போதுதான் தமிழகத்தின் வரலாற்றின் ஒரு நுனியை எட்டிப்பிடிக்க முடியும். இத்தகைய விரிவான புரிதலானது பரவலாக, வெகுஜன மட்டத்தில் உண்டாகாமல் ‘சமத்துவ சமூகம்’ அவ்வளவு சுலபமாக அமைந்துவிடாது. ஆனால் அத்தகைய புரிதல்களுக்கான வாய்ப்புகளே உருவாக்கப்படுவதில்லை. இங்கே இது வரை நடந்த போராட்டங்கள், விழிப்புணர்வு இயக்கங்கள், சட்டங்கள் யாவும் பிற சாதியினர் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கவும், ஆதிக்கம் செலுத்தினால் எதிர்த்து நில் என்பதையும் சாதித்திருக்கும் அளவுக்கு பரவலான மனநிலை மாற்றங்களை உருவாக்கியிருக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். 

 

ஆனாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகாலமாக புரையோடிக் கிடக்கும் சாதியக் கட்டமைப்புகள் கொண்ட இந்தியா போன்ற தேசத்தில் தமிழகம் இந்த அளவுக்கு முன்னேறி வந்திருப்பதே பெரிய சாதனைதான் என்றாலும் நாம் முன்னே பயணிக்க வேண்டியது வெகுதூரம் பாக்கியிருக்கிறது. 

 

சாதிய அடுக்குகள், அவற்றோடு பிணைந்திருக்கும் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் நிலம் சார்ந்த கண்ணிகளை மேம்போக்காகவாவது புரிந்து கொள்ளாமல் சாதி வெறியேற்றுகிறவர்களுக்கு ஒரு கூட்டம் இரையாகிக் கொண்டிருக்கும் போதுதான் அசுரன் மாதிரியான படங்களின் தேவை உருவாகிறது. இன்றைக்கும் கூட சாதி வெறி அடங்கிவிட்டது என்று சொல்லிவிட முடியுமா என்ன? நீறு பூத்த நெருப்புதான் அது. உள்ளே கனன்று கொண்டேயிருக்கிறது. ஆனால் துணிந்து எரிந்துவிடாது. எதிர்தரப்பினர் விழித்துக் கொண்டார்கள். படித்து விவரம் தெரிந்தவர்கள் ஆகிவிட்டார்கள். மிரட்ட எத்தனித்தால் எதிர்ப்பார்கள். அவர்களின் இந்த எதிர்ப்புதான் சாதிய உணர்வு கொண்டவர்களை நிலை கொள்ளாமல் தவிக்க வைக்கிறது.

 

காலங்காலமாக அடங்கியே கிடந்தவர்களுக்கு அப்படி என்ன திமிரு என்று கேள்வி எழுப்புகிறவர்களுக்கும்,  ‘அவர்கள் ஆடுகிற ஆட்டத்தையெல்லாம் நாங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்கணுமா?’ என்று கண்மூடித் தனமாக கேள்வி கேட்கிறவர்களுக்கும் என்ன சொல்வது?  

 

கட்டப்பஞ்சாயத்து, நாடகக் காதல், ரவுடியிசம் என்றுதானே இருக்கிறார்கள் என்பதை பெரிய குற்றச்சாட்டாக வைக்கிறார்கள். சாதிக்காரர்கள் நான்கு பேர் சந்தித்தால் இதைத்தான் பிரதானமாகப் பேசுகிறார்கள். பிற சாதிகளில் இதெல்லாம் நடப்பதில்லையா என்று கேட்டால் நடக்கும். ஆனால் அது அடுத்தவர்களை உறுத்தாது. அதுவே தாத்தா காலத்தில் செருப்பு கூட போட அனுமதியற்றவர்கள் இன்றைக்கு மிரட்டுகிறார்கள், எதிர்க்கிறார்கள் என்றால் அது உறுத்தும். அதுதான் ஒரு தரப்பின் இரத்தத்தைக் கொதிக்கச் செய்துவிடுகிறது. பி.சி.ஆர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று ஒவ்வொரு சாதிக் கூட்டத்திலும் பேசுகிறார்கள். ஆனால் பி.சி.ஆரின் தேவை எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. 

 

இங்கே என்னதான் சட்டம் இருந்தாலும் கூட ரயில் தண்டவாளத்தில் கிடத்தப்படுகிறார்கள். டி.எஸ்.பிக்கள் கூட மர்மமாகச் சாகிறார்கள். இத்தகைய செய்திகளை எவ்வளவு நாட்களுக்கு நினைத்துக் கொண்டிருக்கிறோம்? அதிகபட்சம் ஒரு வாரம். அந்த வாரத்து ஜுவி, ரிப்போர்ட்டர், நக்கீரனில் கட்டுரை வெளியானவுடன்  ‘இப்படியெல்லாம் செஞ்சாத்தான் பயமிருக்கும்’ என்பதோடு அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

 

asuran-65.jpg

 

அசுரன் படம் பார்க்கும் போது படத்தோடு சேர்ந்து இப்படித்தான் ஏதோ மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. 

 

பூமணியின் வெக்கை, வெற்றிமாறன், தனுஷ், சுகா, ஜி.வி.பிரகாஷ் என எல்லோரும் கச்சிதமாகக் கலந்திருக்கிறார்கள். பொதுவாக, திரையரங்குக்குள் சென்று பார்க்க வேண்டுமெனில் வண்ணமயமான படமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவேன். ஆடல், பாடல், கொண்டாட்டமாக இரண்டரை மணி நேரங்களைக் கழித்துவிட்டு வர வேண்டும் என்று நினைப்பேன். தமிழ் சினிமா நாயகர்கள் எதிரியை அடிக்க இடைவேளை வரை காத்திருக்க மாட்டார்கள். நான்காம் காட்சியில் விசிலடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் தனுஷ் காத்திருப்பார். கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன்னை ஏற்றியும் இறக்கியும் கூட்டியும் குறைத்தும் உருமாறும் தனுஷ் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். 

 

முதல் பத்தியில் குறிப்பிட்ட, புத்தகம் எழுத விரும்பும் பையனைப் போலவே பாரம்பரியத்தைக் காட்டுகிறேன், சமூகக் கட்டமைப்பை யதார்த்தமாகக் காட்டுகிறேன் என்று குறிப்பிட்ட சாதியப் பெருமைகளை வண்ண வண்ணக் காட்சிகளுடன் முன் வைத்து ஹீரோயிசத்தை அளவுக்கதிமாகத் தூக்கிப் பிடித்து சாதிய உணர்வுகளைத் தூண்டுகிற படங்களின் காலத்தில் அசுரன் தேவையானதாக இருக்கிறது. அசுரன் படத்திலும் கூட சில நம்ப முடியாத காட்சிகள் உண்டு. ஒற்றை ரூபாய் பெரிய பணமாக இருந்த காலத்தில், செருப்பு அணியவே அனுமதிக்கப்படாத காலத்தில் - முதலாளிக்காக சாராயம் காய்ச்சுகிறவன்- அவனது திறமை என்னதான் மதிக்கப்பட்டாலும் ஊருக்குள் அவ்வளவு கெத்தாக அனுமதித்த ஊரா நம் ஊர் என்று கேள்வி எழாமல் இல்லை. இருந்துவிட்டுப் போகட்டும்.

 

யதார்த்தத்தைப் பேசுவதாகக் கருதி வன்மத்தை ஊட்டாமல், வெறுப்பை ஏற்றாமல் ‘நமக்கு முன்னால் இருக்கும் பெரிய சிக்கலின் ஒரு பிடி இது’ என்று காட்டுகிற அசுரன் போன்ற படங்கள் வணிகரீதியிலும் வெற்றி பெறுவது மிக அவசியம். அப்படி வெற்றியடைந்திருப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது
 

http://www.nisaptham.com/2019/10/blog-post_18.html

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2019 at 6:09 AM, நிழலி said:

நேற்ற கொழும்பில் இப் படத்தை பார்த்தேன்.  வெற்றிமாறனின் இன்னொரு அருமையான அரசியல் படைப்பு.

தனுஷ்....இதுக்கு மேலாக இன்னொரு படத்தில் இவரால் நடிக்க முடியுமா என ஒவ்வொரு படத்திலும் கேள்வி கேட்க வைத்தாலும் இந்தப் படத்தில் அதை நூறு தடவை கேட்க வைக்கின்றார்.

இப் படம் பேசும் அரசியல் தேசங்களை தாண்டி, மொழிகளை தாண்டி, உலகம் முழுக்க இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும், ஒடுக்குமுறையில் இருந்து வெளியே வர போராடும் வர்கத்தின் சவால்களையும் தெளிவான திரைக்கதையில் சொல்லியுள்ளார் வெற்றிமாறன்.

தரமான சினிமா பார்க்க விரும்புகின்றவர்கள் தவற விடக்கூடாத சினிமா..

ஒரு சாதி இன்னொரு சாதிக்கு குனிந்து கொண்டுதான் இருக்கணுமா என கேள்விகள் கேட்டாலும் இந்தியாவால் ( தமிழ்நாட்டால் ) இதிலிருந்து மீண்டுவர முடியாது 

நேற்று ஒரு முகநூல் நண்பரின் பதிவைப்பார்த்தேன்  சவக்காலை சடலம் அடக்கப்படும் இடத்தில் கூட இந்த இந்த சாதியினர்தான் அடக்கம் செய்யலாம் என மதில் சுவரில் கொட்டை எழுத்தாக எழுதப்பட்டிருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தனுசின் மூத்த மகனாக நடித்திருப்பவர் இலங்கை தமிழனா?

Link to comment
Share on other sites

18 hours ago, ரதி said:

இதில் தனுசின் மூத்த மகனாக நடித்திருப்பவர் இலங்கை தமிழனா?

கருணாசின் மகன் என்று படித்த நினைவு மூத்தவரா இளையவரா தெரியல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, அபராஜிதன் said:

கருணாசின் மகன் என்று படித்த நினைவு மூத்தவரா இளையவரா தெரியல 

அது இரண்டாவது மகன் ...சூப்பர் நடிப்பல்லவா! அந்த பெடியன் ...முதலாவது மகனாக நடித்தவர் இலங்கையை சேர்ந்தவராம் என்று கேள்விப்பட்டேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/30/2019 at 6:29 AM, ரதி said:

இதில் தனுசின் மூத்த மகனாக நடித்திருப்பவர் இலங்கை தமிழனா?

அவரது பெயர் டீஜேய் அருணாசலம். லண்டனில் பிறந்த இந்தியத் தமிழர்.

https://www.famousbirthdays.com/people/teejay.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

அவரது பெயர் டீஜேய் அருணாசலம். லண்டனில் பிறந்த இந்தியத் தமிழர்.

https://www.famousbirthdays.com/people/teejay.html

நன்றி 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎3‎/‎2019 at 10:54 AM, ரஞ்சித் said:

அவரது பெயர் டீஜேய் அருணாசலம். லண்டனில் பிறந்த இந்தியத் தமிழர்.

https://www.famousbirthdays.com/people/teejay.html

இவர் புலத்தில் பிறந்த ஈழத்தவர் என்று சொல்கிறார்கள் .. Teejay என்ற பெயரில் நிறைய யூ ரியூப் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

இவர் புலத்தில் பிறந்த ஈழத்தவர் என்று சொல்கிறார்கள் .. Teejay என்ற பெயரில் நிறைய யூ ரியூப் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்

 

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, லண்டனில் பிறந்த தமிழராம்.ஈழத்தமிழர்களுடனும் தொடர்பிருக்கலாம்.

எங்கு பிறந்தாலென்ன, தமிழர் தமிழர்தான். அதற்காகப் பெருமைப்படலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, லண்டனில் பிறந்த தமிழராம்.ஈழத்தமிழர்களுடனும் தொடர்பிருக்கலாம்.

எங்கு பிறந்தாலென்ன, தமிழர் தமிழர்தான். அதற்காகப் பெருமைப்படலாம். 

அதில்லை ரஞ்ஜித் சில பேர் தாங்கள் ஈழத்தவர் என்று தெரிந்தால் முன்னேற சான்ஸ் கிடைப்பதில்லை என்பதற்காக தமிழகம் என்று சொல்வார்கள். இவர் பெற்றோர் தமிழகமாயிருந்தால் தமிழகத்தில் தனது பெற்றோர் எந்த இடம் என்று சொல்லி இருப்பார் ..மற்றும் படி தமிழன் எங்கேயிருந்தும் முன்னேறினால் சந்தோசம் ...தமிழை வளர்ப்பதற்காக இவரை பாராட்டலாம் 
 

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அகன்ற திரையில் பார்க்கவில்லை. அமேசன் பிரைமில் சிறந்த தரத்தில் (4K) நேற்றுத்தான் அசுரன் படம் பார்த்தேன். நடிப்பு, இயக்கம் எல்லாம் மிகவும் சிறப்பாகவும், முழுமையாகவும் அமைந்துள்ள தமிழ்ப்படம் இப்படி வருவது குறைவு. வருடத்திற்கு 250 சராசரிப் படங்களை எடுப்பதை விட அசுரன் போல படங்களை வாரம் ஒன்றிற்கு வெளியிட்டாலே போதும்👍🏾

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அசுரன், ஆனால் அதைமட்டும் பற்றியதல்ல..

இளங்கோ-டிசே

1.jpg

மேஸன் பிரைமில் 'அசுரன்' வந்துவிட்டது என்பதறிந்து நேற்று நள்ளிரவிலேயே பார்க்கத் தொடங்கினேன்.. இதுவரை இதுகுறித்து நிறைய விமர்சனங்கள் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றை வாசிக்காமலே தவிர்த்திருந்தேன். எனக்கான பார்வையை நானே உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காய் திரைப்பட விடயங்களில் நான் இவ்வாறு அடிக்கடி செய்வதுதான்.
அசுரனில் தனுஷின் நடிப்புப் பற்றியும், வெற்றிமாறனின் நேர்த்தியான நெறியாள்கை குறித்தும் ஏற்கன‌வே எழுதப்பட்டிருக்கும் விமர்சனங்களில் விதந்தேந்தப்பட்டிருக்குமென‌ நினைக்கின்றேன். ஆகவே அவற்றைச் சிலாகிப்பதை  இங்கே நான் தவிர்க்கின்றேன். நாவலிலிருந்து திரைக்கதைக்கு மாற்றுவது குறித்த்தும், சிறந்த படைப்பாளிகளை/படைப்புக்களை திரைக்குக் கொண்டு வருவதோ குறித்தும், அவற்றின் சிக்கல்கள்/தடுமாற்றங்கள் குறித்தும் பிறகொருபொழுது பேசலாம்.
 

3.jpg

மலையாளத்தில் அண்மையில் வந்த 'ஜல்லிக்கட்டி'ல் ஹரீஸ் போன்ற எழுத்தாள‌ர்களை எப்படி அற்புதமாகப் பாவிக்கின்றார்கள்  என்பதை மட்டும் ஒரு சிறுகுறிப்பாய விடுகின்றேன். கடந்தவருடம் நான் கேரளாவில் நின்றசமயந்தான் இதே ஹரீஸின் 'மீச' நாவல் வெளிவராது இந்த்துத்துவசக்திகள் தடுத்து நிறுத்த பெரும் சர்ச்சைகள் நடந்ததது என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும்.

இவ்வாறு சிக்கலுக்குள்ளானவரை தம் திரைக்குப் பாவித்தது என்பதே ஓர் 'அரசியல் அறிக்கை'தான். மலையாளச் சூழலில் எழுத்தாளர்களும், திரைப்பட நெறியாளர்களும் எவ்வாறு அரசியல்மயப்பட்டிருக்கின்றார்கள், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கின்றார்கள்/ஊடாடிக்கொள்கின்றார்கள் என்பதற்காய் இதைச் சொல்கின்றேன்.

நமது சூழலில் அரிதாக திரைக்குள் நுழையும் எழுத்தாளர்களும் வெகுசன சினிமாவுக்கு திரைக்கதை எழுதி, அதை நியாயப்படுத்துவதையும், இந்த இலக்கிய திரைப்பட‌ இடைவெளியைக் குறைப்பதற்குப் பதிலாக இலக்கியத்தைப் போல சினிமா இல்லை என்று அடிக்கடி எழுதி, தங்களுக்கான இருப்பை நிரூபிப்பதற்காய் இன்னும் இந்த‌ விரிசலை அதிகரித்தபடியும் இருக்கின்றார்கள் (இதை ஏற்கனவே ஒரு பதிவில் விரிவாக‌ எழுதியிருக்கின்றேன்).

ஆகவேதான் அசுரன் ஒரு கொடூரவாழ்வின் நிஜமுகத்தைத் திரைக்குக் கொண்டுவரும்போதும், அங்கே 'வெகுசன' சினிமாவுக்கான சமரசங்கள் இருக்கவேண்டும் எனச் சொல்கின்றார்கள். இந்தளவாவது திரையில் வருகின்றதே என திருப்திப்பட்டுக்கொள்ளவேண்டுமென எங்களுக்கு அறிவுரை சொல்கிறார்கள்.
 

2.jpg

அசுரனின் கதையே ஒருவகையில் நிலத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டமே. ஒருவகையில் நமது ஈழப்போராட்டம் கூட நிலமீட்புப் போராட்டந்தான். எனக்கு முன்பு இருந்த தலைமுறைக்கு அது மொழிக்கான போராட்டமாகவோ, தரப்படுத்தலுக்கான போராட்டமாகவோ இருந்தாலும், என்னைப் போன்றவர்களுக்கு அது நிலமீட்புப் போராட்டமாக இருந்தது. ஆகவேதான் நாம் 'இந்த மண் எங்களின் சொந்த மண்/ இதன் எல்லையை மீறி வந்தவன் யார்' என்ற பாடலிலும், 'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்/ நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்' என்று வார்த்தைகளிலும் நாம் எமது போராட்டத்தை நிலமீட்பாகப் பார்த்தோம்.

என்னுடைய குழந்தை/பதின்மப் பருவத்தில் இலங்கை இராணுவம்/பொலிஸ் என்பவற்றையே பார்க்காதால் போராளிகள் என்பது எமது நிலங்களைப் பாதுகாப்பவர்களாக, இராணுவ முகாங்களை அழித்து வெற்றிகொண்டபோது அவர்கள் எங்களுக்கு மீட்பர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். வன்முறை நமக்குள் திணிக்கப்பட்டது என்றாலும், வேறு வழியின்றி வன்முறையே எமக்குரிய முதற் தெரிவாக இருந்தபோதும் (அல்லது அதற்கு முன் தலைமுறையால எந்தத் தெரிவுகளுமின்றி எமக்கு கையளிக்கப்பட்டபோதும்), வன்முறை நமக்கு இறுதியில் எதைத் தந்தது என்பதற்கு வரலாற்றின் சாட்சிகளாக நாங்களே இருக்கின்றோம்.

ஆகவேதான் அசுரன் காட்சிப்படுத்திய ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை, நிலத்தை மீட்பதற்கான அவர்களின் தத்தளிப்புக்கள் என்பவற்றை நெருக்கமாக உணர்ந்து பார்த்தபோதும், முக்கிய பாத்திரத்தை சாகச நாயகனாக்கியபோது, அதுவும் வன்முறையினூடாக அதை நிகழ்த்தியபோது படத்திலிருந்து வெளியேற்றப்பட்டவனாக உணர்ந்தேன். இந்த 'வன்முறை' சாகச நாயகனாக்கும் முயற்சியிலிருந்து சுசீந்திரனின் 'மாவீரன் கிட்டு' கொஞ்சம் தப்பியிருக்கின்றது  என்றே சொல்வேன்.

இவ்வாறான கதைகளினூடாக தமிழ்த்திரை யதார்த்ததிற்குள் நகரும்போது, ஏற்கனவே இருக்கும் திரைக்கதை சொல்நெறிகளினூடாக அணுகமுடியாது என்பதை, வெற்றிமாறன் உணராமல் இருந்ததாலேயே அருமையான ஓர் படத்தை இழந்துவிட்டிருக்கின்றார் என்றே தோன்றியது. அதுவும் முக்கியமாக வன்முறையை கையாளும் விதத்தால்/காட்சிப்படுத்தலாலும், ஒருவர் சாகசத்தால் எதிரிகளைப் பழி வாங்கும்போதும்கூட‌ -,பரியேறும்பெருமாள் நமது மனதில் ஏற்படுத்திய உறுத்தல்களினதோ/ குற்ற உணர்வின் எந்தத் துளியையும்- அசுரன் எனக்குள் விட்டுச் செல்லவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.

இதே இடத்தில் இன்னொரு விடயத்தைக் குறித்தாக வேண்டும். அசுரன் படம் வந்த கையோடு ஜெயமோகன் ஏற்கனவே எழுதிய கதையான 'குருதி'யை திரும்பப் பகிர்ந்துகொண்டார். அவரின் வழமையான வாசகர்கள் எப்படிப் புகழ்ந்துரைந்திருப்பார்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்தக் கதையை அசுரன் படம் வந்ததன் பின் அல்ல, அது வெளிவந்த காலத்திலேயே வாசித்து, ஜெமோவின் பாணியில் சொல்வதால் எனக்கான கருத்தைத் 'தொகுத்து' வைத்திருந்தேன். இப்படி ஒரு துண்டு நிலத்துக்காய் பழிவாங்கு என்று உசுப்பிக் கதையெழுதுகின்ற ஜெமோவால் எப்படி எங்களின் ஈழப்போராட்டத்திற்கான காரணத்தையோ  அல்லது வன்முறையைக்  கையிலெடுத்ததையோ எந்தக் காலத்திலும் விளங்கிக் கொள்ளமுடியாதுபோனது என்று யோசித்திருக்கின்றேன்.

போரிலிருந்து அல்லது இப்படி சாதியால் ஒடுக்கப்பட்டு மேலெழுந்து வருபவர்க்குத் தெரியும், மண்மீட்பை விட உயிர்களுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கின்றதென்று, ஆனால் இறுதியில் எதையும் செய்யமுடியாக் கையாலாக நிலையிலேயே எதிர் வன்முறையைப் பாவிக்கின்றார்கள் என்பது பற்றியும் அவர்களே நன்கும் அறிவார்கள்.

அப்படி வந்தவர்கள் திருப்பி அடிப்பதைவிட, ஏன் எங்களை அடிக்கின்றீர்கள் என ஆதிக்க/இனவெறிச் சக்திகளிடம் மன்றாடவும், அவர்களின் மனச்சாட்சியையும் உலுக்குவதையுமே தம் கலை இலக்கியங்களினூடாக செய்வதற்கு அதிகம் விரும்புகின்றவர்களாக இருப்பார்கள் என்பதே யதார்த்தமானது.

அசுரனை இரவு பார்த்துவிட்டு முதலில் வாசித்த கட்டுரை டி.தர்மராஜினதுடையது.  அதில்  அசுரன் தொட மறந்த/மறுத்த புள்ளிகளை அவர் அற்புதமாகத் தொட்டிருக்கின்றார். இறுதியில் அவரின் இந்த வார்த்தைகளையே இங்கு விட்டுச் செல்கின்றேன்.

"...ஏனென்றால், ஒடுக்கப்பட்டோரின் வன்முறை என்பது சாகசம் அல்ல என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.  அது உயிர் வாழ்வதற்காகச் செய்யப்படும் கடைசி யத்தனம்.  அவர்கள் அவதார புருசர்களைப் போல அந்த வன்முறைக்குப் பழகியவர்கள் இல்லை.  அதனால், தப்பும் தவறுமாகவே வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள்."
......................................

(1) டி.தர்மராஜ்ஜினது கட்டுரை: https://tdharumaraj.blogspot.com/2019/10/uncut.html?spref=fb&fbclid=IwAR1Be9uOdepIrbF2NsMhzKzDWn1QKLDuMkZ5AH0B1PfyCjvYW6qABNWilMI

(2) ஜெயமோகனின் 'குருதி' கதை: https://www.jeyamohan.in/34372

(Nov 08, 2019)

 

http://djthamilan.blogspot.com/2020/04/blog-post_23.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
    • இது ஒட்டு மொத்த‌ இந்திய‌ அள‌வில் தேர்த‌ல் ஆணைய‌த்தை கைக்குள் வைத்து பிஜேப்பி செய்யும் தேர்த‌ல் மோச‌டி இப்ப‌டி குள‌று ப‌டி செய்து தேர்த‌லில் வெல்வ‌தெல்லாம் ஒரு வெற்றியா......................இது ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌க்கும் தேர்த‌ல் கிடையாது................இந்திய‌ அள‌வில் தாங்க‌ள் 400 இட‌ங்க‌ளின் வென்று ஆட்சி அமைப்போம் என்று சொன்னார்க‌ளே / ஆனால் இப்ப‌டி குள‌று ப‌டி செய்து அமைப்போம் என்று ஆர‌ம்ப‌த்தில் சொல்ல‌ வில்லை இப்ப‌ பிடிப‌ட்டான் மோடி என்ற க‌ள்ள‌ன்......................தேர்த‌ல் ஆணைய‌த்தையும் ஈவிம் மிசினையும் ந‌ம்பி தான் த‌மிழ் நாட்டு பிஜேப்பி அண்ணாம‌லை அதிக‌மாய் பொங்கி எழுகிறார்....................இதெல்லாம் ஒரு தேர்த‌ல்.............................த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சிக‌ளை நினைக்க‌ ப‌ரிதாவ‌மாய் இருக்கு....................................
    • "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை"     பண்டைய சுமேரியாவில் பொதுவாக பெண்களின் வேலை அல்லது பங்கு வீட்டு பணிகளில் இருந்தே வருகிறது. கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற்பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi] ஒன்று "மது" பெண் தெய்வமான நின்காசியையும் [Ninkasi: “வாய் நிரப்பும் பெண்மணி] மது வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் [recipe for brewing] பாராட்டுகிறது. பொதுவாக மது வடிப்போர் /காய்ச்சுவோர் அங்கு பெண்களாக இருந்தார்கள், அதிகமாக நின்காசியின் பெண் குருவே இவர்கள். மேலும் முன்பு, துணை உணவாக மது, வீட்டில் பெண்களால் வடிக்கப்பட்டது அல்லது காய்ச்சப்பட்டது. எனவே வீட்டு பணிகளுடன் மேல் அதிகமாக அவர்கள் தாம் வடித்த ஒரு வகைச் சாராயத்தை /பீர் மது பானத்தை [beer] விற்கவும் முடியும். அதாவது பெண்கள் தவறணை காப்பாளராகவும் இருக்க முடியும். மேலும் அந்த துதி பாடல் சேர்மானங்களையும் செய்முறையையும் விளக்கமாக கொண்டுள்ளது. உதாரணமாக புளிக்கச் செய்யப் பயன் படும் பொருள் முதல், ஊற வைத்தல், நொதித்தல், வடித்தல் என்பனவற்றின் விபரங்களை தருகிறது.     "நின்காசி, நியே மாவை [dough] ஒரு பெரிய வாரி [shovel] மூலம் குழியில் கலாவுகிறாய்- பார்லி ரொட்டியையும் [bappir] தேனையும் [இந்த தேன் பேரீச்சம் பழம் சாறாக இருக்கலாம்? வாசனை சுவை கொடுப்பதற்கு இங்கு பேரீச்சம் பழம் சேர்க்கப்படுகிறது?]   நின்காசி, நியே பார்லி ரொட்டியை பெரிய சூளையில் வேக வைக் கிறாய்- உமி தானியங்ககளை [hulled grains] ஒரு ஒழுங்காக குவித்து [வடித்தலின் போது "பப்பிர்" [bappir: பார்லி ரொட்டி] ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுகிறது. ஒன்று சர்க்கரை உற்பத்திக்கான மாப்பொருளை தருகிறது. மற்றது அரைத்தலுக்கான புரதங்களையும் சுவைகளையும் தருகிறது]   நியே பார்லி முளை தானியத்திற்கு [malt] தண்ணீர் விடுகிறாய்- பெரும் அதிகாரம் உள்ளவர்களையும் உன் மேன்மை பொருந்திய நாய் காத்து தள்ளி விடுகிறது நின்காசி, நியே பார்லி முளை தானியத்தை சாடியில் ஊற வைக்கிறாய்- அலைகள் ஏறுகின்றன, அலைகள் இறங்கு கின்றன [இந்த அசைவு மறை முகமாக அரைத்தலை குறிக்கலாம் ? அப்பொழுது முளை தானியமும் பப்பிரும் மேல் அதிக பார்லி உடன் சேர்க்கப் படுகிறது? அத்துடன் இந்த மசியல் அதிகமாக சூடாக்கி இருக்கலாம்?]   நின்காசி, நியே சமைத்த கூழாகிய களியை [cooked mash] நாணல் பாயில் பரப்புகிறாய்- சூடு தணிகிறது, குளிர்ச்சி வெற்றி கொள்கிறது [இது இரண்டு நோக்கங்களை நிறைவேற்றி இருக்கலாம். ஒன்று பாவித்த தானியத்தின் உமியை அகற்றவும் மற்றது திரவம் வடியவும் இது உதவி இருக்கலாம்? அது மட்டும் அல்ல, சாராயத்துக்கான மாவூறல் நன்கு குளிர்ச்சியாக இருந்தால், நொதித்தல் அல்லது புளித்தல் திறமையாக நடை பெரும். ஏன் என்றால் உயர் வெப்பம் மாவை புளிக்க வைக்க உதவும் பொருளின் [yeast / புளிச்சொண்டியின்] ஆற்றலை குறைத்து விடும் என்பதால்]   நியே உனது இரு கையாளும் சாராயத்துக்கான இனிக்கும் மாவூறலை [great sweet wort] வைத்து இருக்கிறாய் - அதை தேனுடனும் திராட்சை ரசத்துடனும் வடிக்கிறாய் [இது உண்மையில் தேனா? அல்லது பேரீச்சம் பழம் சாறா? என்பது ஒரு கேள்விக் குறியே. அது மட்டும் அல்ல, திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையின் தோலில் இயற்கையாகவே "ஈஸ்ட்" ['yeast'] காணப்படுகிறது. ஆனால் ஒயினில் [wine] அப்படி அல்ல. அங்கு "ஈஸ்ட்" இன் செயற்படு அற்று காணப்படுகிறது. ஆகவே இது திராட்சை ரசமாக இருக்க முடியாது. அது அதிகமாக திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையாக இருக்கலாம்?]   நின்காசி, வடி கட்டும் பெரும் மரத்தொட்டி ஒரு இன்பமான ஒலியை தருகிறது- நீ சேகரிக்கும் பெரும் மரத்தொட்டியில் [large collector vat] சரியாக வைக்கிறாய்" [இந்த இன்பமான ஒலி அதிகமாக, சொட்டு சொட்டாக மரத் தொட்டிக்குள் வடியும் பீர் மது பானத்தின் சத்தமாக இருக்கலாம்?]   அது மட்டும் அல்ல, இந்த துதி பாடலில் இருந்து நாம் எப்படியான பாராட்டுதலை அல்லது புகழ்ச்சியை ."பீர் மதுபான பெண் தெய்வம்" பெற்றால் என அறிய முடிகிறது. மேலும் நின்காசிக்கும் பீர் மது பானத்திற்கும் உள்ள தொடர்பு மிகவும் பலமானது என்பதையும் அறிய முடிகிறது. உதாரணமாக மேலும் இரண்டு புகழ்ச்சியை கிழே தருகிறோம்.   "நின்காசியே, நியே, வடித்த பீர் மது பானத்தை மரத் தொட்டியில் இருந்து ஊற்றுகிறாய். அது டைகிரிஸ், யூபிரட்டீஸ் ஆறு மாதிரி வேகமாய்ப் பாய்கிறது [Ninkasi, you are the one who pours out the filtered beer of the collector vat, It is [like] the onrush of Tigris and Euphrates]"   மற்றது   "குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோ நிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards] [and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என நின்காசியை புகழ்தல் ஆகும்.   மேலும் மெசொப் பொத்தேமியாவில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 1800 ஆண்டை சேர்ந்த களி மண் பலகை கல் ஒன்று ஒரு பெண் தனது கணவனுடன் ஒன்று கூடும் போது, சாடி ஒன்றில் இருந்து. பீர் மது பானம் குடிப்பதை தெளிவாக வரைந்து காட்டுகிறது.   “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” (குறள் 926)   என்று கூறுகிறார் வள்ளுவர்.அதாவது, உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர் என்கிறார். என்றாலும் நாம் சங்க இலக்கியத்தை பார்க்கும் போது, அங்கு மது பானம் பண்டைய தமிழர் வாழ்வில், ஆண் பெண் இரு பாலாரிடமும், ஒரு முக்கிய பங்கு வகுத்ததை காண முடிகிறது.  துணை உணவாக மது புலவர்களுக்கு வழங்கி அரசனும் சேர்ந்து உண்டு மகிழ்ந்ததை, புகழ்பெற்ற சங்க புலவர் ஒளவையார், தனது புறநானுறு 235 இல்,   "சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;"   என்று எடுத்து உரைக்கிறார். அதாவது, சிறிதளவு கள்ளைப் பெற்றால் அதியமான நெடுமான் அஞ்சி அதை எமக்குத் தருவான்; பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்; என்கிறார் ஒளவையார். மேலும் அகநானுறு 336:   "தெண் கள் தேறல் மாந்தி மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇப் பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும்"   என கூறுவதையும் காண்க, அதாவது, தெளிந்த கள்ளினைக் குடித்து, பெண்கள், நுண்ணிய தொழில் நலம் வாய்ந்த அழகிய குடத்தினை வைத்து விட்டு, தம் கணவரது நற்பண் பில்லாத பரத்தைமைகளைப் பாடி, விரிந்த பூங்கொத்துக்களை உடைய காஞ்சி மரத்தின் நீழலில் குரவை [கைகோத்து ஆடப்படும்] ஆடுதலைச் செய்யும் மகளிர் என்கிறது. அது மட்டும் அல்ல, பெரும்பாணாற்றுப்படை [275-281] இல், மதுவின் செய்முறை விளக்கப்பட்டு இருப்பதுடன், பட்டிணப் பாலை [106 -110] இல், கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் மதுவை அருந்தி மயக்கத்தில் கொண்டாடியதையும் நாம் காணலாம்.   "அவையா அரிசி அம்களித் துழவை மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் பூம்புற நல் அடை அளைஇ தேம்பட எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி" -பெரும்பாணாற்றுப்படை(275-281)   அதாவது, குற்றாத தவிடெடுபடாத அரிசியைக் அழகினையுடைய களியாகத் துழாவிக் சமைத்த கூழை, வாயகன்ற தாம்பாளத்தில் [தட்டில்] உலர வைப்பார். நல்ல நெல் முனையை இடித்து அக் கூழிற் கலப்பர். அக் கலவையை இனிமை பிறக்கும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரின் வேகவைத்து நெய்யரியாலே வடிக்கட்டி, விரலாலே அலைத்துப் பிழியப்பட்ட நல்ல வாசனையுள்ள கள் என்கிறது.   "துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டுநீக்கித் துகிலுடுத்தும் மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும் மைந்தர்கண்ணி மகளிர் சூடவும் மகளிர்கோதை மைந்தர் மலையவும்" - பட்டிணப்பாலை[106-110]   அதாவது, தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர், தாம் முன்பு அணிந்திருந்தப் பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு மதுவினை குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 18 ஏப்ரல் 2024, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனில் ரஷ்ய ராணுவ வீரர்களின் இறப்பு எண்ணிக்கை இப்போது 50,000ஐ கடந்துவிட்டதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்யா இரண்டாவது ஆண்டிலும், இறைச்சி அரவை (Meat Grinder) உத்தி என்றழைக்கப்படும் அதன் தாக்குதல் உத்தியின்படி – அதாவது யுக்ரேனிய படைகளை வலுவிழக்கச் செய்வதற்காக கூட்டம் கூட்டமாக ராணுவ வீரர்களை களமிறக்கும் ரஷ்யாவின் உத்தி – பல ராணுவ வீரர்களை போருக்கு அனுப்பியது. அதன் விளைவாக ஏற்பட்ட ரஷ்ய வீரர்களின் இறப்புகள் முதல் ஆண்டைவிட தற்போது கிட்டத்தட்ட 25% அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. பிபிசி ரஷ்ய சேவை, சுயாதீன ஊடக குழுவான மீடியாசோனா மற்றும் தன்னார்வலர்கள், பிப்ரவரி 2022 முதல் இந்த இறப்புகளைக் கணக்கெடுத்து வருகின்றனர். புதைவிடங்களில் உருவாக்கப்பட்ட புதிய கல்லறைகளில் இருந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் அவர்களுக்கு இந்தக் கணக்கெடுப்பில் உதவின. அலுவல்ரீதியிலான அறிக்கைகள், செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் ஆகியவை மூலம் திறட்டப்பட்ட தகவல்களையும் எங்கள் குழுக்கள் இதில் பயன்படுத்தின. எங்கள் கண்டுபிடிப்புகளின்படி, ரஷ்ய வீரர்களில் சுமார் 27,300க்கும் மேற்பட்டோர் போரின் இரண்டாவது ஆண்டில் இறந்துள்ளனர். இது, பிராந்தியத்தைக் கையகப்படுத்தும் முயற்சியில் எவ்வளவு பெரிய மனித இழப்பு ஏற்பட்டுள்ளன என்பதைப் பிரதிபலிக்கிறது. பிபிசியின் செய்திக்கு பதிலளித்திருக்கும் ரஷ்யா, மாஸ்கோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம்தான் இதுதொடர்பான தகவல்களைத் தர முடியும் என்று கூறியுள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேனிய படைகளை வீழ்த்துவதற்கும், ரஷ்ய பீரங்கிகளுக்கு அவர்களது இருப்பிடங்களை அம்பலப்படுத்துவதற்கும் ரஷ்யா இடைவிடாமல் ராணுவ வீரர்களை முன்னோக்கி அனுப்பும் இந்த உத்தியை விவரிக்க மீட் கிரைண்டர் (meat grinder) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. மொத்த ரஷ்ய வீரர்களின் இறப்பு எண்ணிக்கை, 50,000க்கும் அதிகமானது. செப்டம்பர் 2022இல் ரஷ்யாவால் இதுவரை வழங்கப்பட்ட இறப்பு எண்ணிக்கைகளின் அதிகாரபூர்வ தரவுகளைவிட இது 8 மடங்கு அதிகம். ரஷ்யா தரப்பில் ஏற்பட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கை உண்மையில் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும். எங்கள் பகுப்பாய்வில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மற்றும் கிழக்கு யுக்ரேனில் உள்ள லுஹான்ஸ்கில் ஏற்பட்ட வீரர்களின் இறப்புகள் குறித்து எதுவும் சேர்க்கப்படவில்லை. அதுவும் சேர்க்கப்பட்டால், ரஷ்யா தரப்பில் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். "சிறப்பு ராணுவ நடவடிக்கை" அரசு ரகசியங்களை உள்ளடக்கிய சட்டங்கள் மற்றும் தகவல்களைப் கொண்டிருப்பதால், உயிரிழப்புகள் பற்றிய தகவல்களை "பாதுகாப்பு அமைச்சகம்தான் வழங்க முடியும்" என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். இதற்கிடையில், யுக்ரேன் தனது போர்க்களத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் அளவு குறித்து அரிதாகவே கருத்து தெரிவிக்கிறது. பிப்ரவரியில், அதிபர் வோலொதிமிர் ஸெலென்ஸ்கி, 31,000 யுக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார். ஆனால், அமெரிக்க உளவுத்துறையின் தரவுகள் அடிப்படையிலான மதிப்பீடுகள், மேலதிக இழப்புகள் இருப்பதாகக் கூறுகின்றன.   ரஷ்யாவின் மீட் கிரைண்டர் உத்தி பிபிசி மற்றும் மீடியாசோனாவிடம் இருக்கும் இறந்த வீரர்களின் சமீபத்திய பட்டியல், ரஷ்யாவின் மாறிவரும் போரின் முன்களத் தாக்குதல் தந்திரங்களில் இருக்கும் அப்பட்டமான மனித இழப்புகளைக் காட்டுகிறது. யுக்ரேனின் டொனெட்ஸ்க் பகுதியில் ஒரு பெரியளவிலான தாக்குதலைத் தொடங்கியதால், 2023 ஜனவரியில் ரஷ்ய ராணுவம் தரப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது. ரஷ்யர்கள், வுஹ்லடேரி நகரத்தைக் கைப்பற்றப் போரிட்டபோது, அது “சாரைசாரையாக வீரர்களை முன்னோக்கி அனுப்பும் பயனற்ற தாக்குதல்களை” பயன்படுத்தியதாக போர் ஆய்வுக்கான நிறுவனம் (ISW) தெரிவித்துள்ளது. “சவாலான நிலப்பரப்பு, போர்த்திறன் இல்லாமை, யுக்ரேனிய படைகளுக்கு அதிர்ச்சி அளிக்கத் தவறியது” என இந்தத் தாக்குதல் அதிக போர் இழப்புகளுக்கும் ஆனால் சிறிய அளவிலான ஆதாயங்களுக்கும் வழிவகுத்தது. வரைபடத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க உச்சம் 2023 வசந்த காலத்தில் பாக்முத் போரின்போது நிகழ்ந்திருப்பதைக் காணலாம். கூலிப்படை குழுவான வாக்னர், ரஷ்யா அந்நகரத்தைக் கைப்பற்ற உதவியது. வாக்னரின் அப்போதைய தலைவரான யெவ்ஜெனி ப்ரிகோஜின், அந்த நேரத்தில் அவரது குழுவின் இழப்புகள் 22,000 என மதிப்பிட்டார். கடந்த இலையுதிர்க்காலத்தில் கிழக்கு யுக்ரேனிய நகரமான அஃப்டிஃப்காவை ரஷ்யா கைப்பற்றியது ராணுவ வீரர்களின் இறப்புகள் மீண்டும் அதிகரிக்க வழிவகுத்தது.   கல்லறைகளைக் கணக்கெடுத்தல் பிபிசி மற்றும் மீடியாசோனாவுடன் பணியாற்றும் தன்னார்வலர்கள் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா முழுவதும் 70 புதைவிடங்களில் புதிய ராணுவ கல்லறைகளைக் கணக்கெடுத்து வருகின்றனர். இந்தப் புதைவிடங்கள் கணிசமாக விரிவுபடுத்தப்பட்டிருப்பதை வான்வழிப் படங்கள் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, மாஸ்கோவின் தென்கிழக்கில் உள்ள ரியாசானில் அமைந்திருக்கும் போகோரோட்ஸ்காய் கல்லறையின் இந்தப் படங்கள், ஒரு புதிய பகுதி அங்கு தோன்றியிருப்பதைக் காட்டுகிறது. தரையில் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள், இந்தப் புதிய கல்லறைகளில் பெரும்பாலானவை யுக்ரேனில் கொல்லப்பட்ட வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் சொந்தமானவை எனத் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் இறந்த வீரர்களில் ஐந்தில் குறைந்தபட்சம் இரண்டு பேர், படையெடுப்புக்கு முன்பு நாட்டின் ராணுவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்தவர்கள் என்று பிபிசி மதிப்பிடுகிறது. “கடந்த 2022ஆம் ஆண்டின் படையெடுப்பின் தொடக்கத்தில், சிக்கலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யா தனது தொழில்முறை துருப்புகளைப் பயன்படுத்த முடிந்தது. ஆனால், அந்த அனுபவமிக்க வீரர்கள் பலர் இப்போது இறந்திருக்கக்கூடும் அல்லது காயமடைந்திருக்கலாம்,” ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை ஆய்வாளர் சாமுவேல் க்ரானி-இவான்ஸ் விளக்குகிறார். மேலும், குறைந்த அளவு பயிற்சி அல்லது ராணுவ அனுபவமே உள்ளவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் கைதிகள் போன்றவர்கள் அவர்களுக்குப் பதிலாக போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். தொழில்முறை ராணுவ வீரர்கள் செய்யக்கூடியதை இவர்களால் செய்ய முடியாது எனக் கூறும் க்ரானி-இவான்ஸ், “இதன் பொருள், அவர்கள் தந்திரோபாயரீதியாக மிகவும் எளிமையான விஷயங்களைச் செய்ய வேண்டும். அதாவது பொதுவாக பீரங்கிகளின் உதவியோடு யுக்ரேனிய ராணுவ நிலைகள் மீது முன்னோக்கிச் சென்று தாக்குதல் புரிய வேண்டியுள்ளதாகத் தெரிகிறது,” எனக் கூறினார்.   வாக்னர் படையில் சேர்க்கப்பட்ட சிறைக் கைதிகள் சிறைச்சாலையில் செய்யப்படும் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு இந்த மீட் கிரைண்டர் உத்திக்கு மிக முக்கியமானது. மேலும் எங்கள் பகுப்பாய்வு அவர்கள் இப்போது முன்வரிசையில் விரைவாகக் கொல்லப்படுவதாகத் தெரிவிக்கிறது. ஜூன் 2022 முதல் சிறைச்சாலைகளில் ஆட்சேர்ப்பைத் தொடங்க வாக்னர் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினுக்கு ரஷ்யா அனுமதியளித்தது. பின்னர் வீரர்களாக மாறிய கைதிகள், ரஷ்ய அரசின் சார்பாக ஒரு தனியார் ராணுவத்தின் ஒரு பகுதியாகப் போரில் களமிறங்கினர். இடைவிடாத சண்டை உத்திகள், மிருகத்தனமான உள் நடவடிக்கைகளுக்குப் பெயர்போன தனியார் ராணுவமாக வாக்னர் இருந்தது. அவர்கள் உத்தரவின்றிப் பின்வாங்கிய வீரர்களை அந்த இடத்திலேயே தூக்கிலிடலாம். இந்தக் குழு பிப்ரவரி 2023 வரை கைதிகளில் இருந்து தனது படைக்கு ஆட்சேர்ப்பு செய்தது. பிறகு ரஷ்யாவுடனான அதன் உறவு மோசமாகத் தொடங்கியது. ப்ரிகோஜின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யாவின் ஆயுதப் படைகளுக்கு எதிராகக் கலகம் நடத்தினார். பின்னர் அதைக் கைவிட்டார். மேலும் திரும்பிச் செல்ல ஒப்புக்கொள்வதற்கு முன்பு மாஸ்கோவை நோக்கி முன்னேற முயன்றார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அவர் விமான விபத்தில் கொல்லப்பட்டார். முன்வரிசையில் கொல்லப்பட்ட 9,000 ரஷ்ய சிறைக்கைதிகளின் பெயர்களை எங்கள் சமீபத்திய பகுப்பாய்வு மையமாகக் கொண்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES அவர்களில் 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு, அவர்களின் ராணுவ ஒப்பந்தம் தொடங்கும் தேதிகள் மற்றும் அவர்கள் எப்போது கொல்லப்பட்டார்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம். வாக்னரின் கீழ், அந்த முன்னாள் கைதிகள் சராசரியாக மூன்று மாதங்கள் மட்டுமே உயிர் பிழைத்திருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். இருப்பினும், மேலே உள்ள வரைபடம் குறிப்பிடுவது போல, பாதுகாப்பு அமைச்சகத்தால் அதற்குப் பின்னர் பணியமர்த்தப்பட்டவர்கள் சராசரியாக இரண்டு மாதங்கள் மட்டுமே பிழைத்திருந்தனர். பாதுகாப்பு அமைச்சகம் பொதுவாக புயல் படைப்பிரிவுகள் (Storm platoons) என்றழைக்கப்படும் ராணுவப் பிரிவுகளை உருவாக்கியுள்ளது. இது கிட்டத்தட்ட முழுக்க முழுக்க குற்றவாளிகளால் ஆனது. வாக்னரின் கைதி படைப்பிரிவுகளைப் போலவே, இந்தப் பிரிவினரும் போரில் முன்களத்தில் பலியிடப்படுவதற்கான ஒரு சக்தியாகவே கருதப்படுகின்றனர். “இந்தப் புயல் வீரர்கள், வெறும் சதைப்பிண்டம் மட்டுமே” என்று புயல் உறுப்பினர்களுடன் இணைந்து போராடிய ஒரு சராசரி சிப்பாய் கடந்த ஆண்டு ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார். சமீபத்தில், புயல் வீரர்கள் அஃப்திஃப்காவை பிடிக்கப் பல மாதங்கள் நீடித்த போரில் முக்கியப் பங்கு வகித்தனர். இந்த நகரம் எட்டு வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவிடம் வீழ்ந்தது. அதோடு பாக்முத்திற்கு பிறகு புதினுக்கு மூலோபாய ரீதியாகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் ஒரு மிகப்பெரிய போர்க்கள வெற்றியை இது பிரதிநிதித்துவப்படுத்தியது.   பட மூலாதாரம்,REUTERS பயிற்சியின்றி போர்க்களத்தின் முன்வரிசைக்கு அனுப்பப்பட்ட கைதிகள் வாக்னர் கூலிப்படையின் கீழ், வீரர்களாக மாறிய சிறைக்கைதிகளுக்கு போரில் களமிறக்கப்படுவதற்கு முன்பாக 15 நாட்கள் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு நேர்மாறாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சேர்க்கப்பட்டவர்கள் சிலர் ஒப்பந்தம் போடப்பட்ட இரண்டே வாரங்களில் முன்வரிசையில் கொல்லப்பட்டதைக் கண்டோம். பிபிசி இறந்த மற்றும் உயிருடன் இருக்கின்ற ராணுவ வீரர்கள் சிலரது குடும்பத்தினரிடம் பேசியது. சிறையில் ஆட்சேர்ப்பு செய்தபோது படையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய ராணுவப் பயிற்சி போதுமானதாக இல்லையென்று அவர்கள் கூறினர். கடந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி சிறையில் தனது கணவர் அமைச்சகத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கணவரை இழந்த ஒரு பெண் எங்களிடம் கூறினார். மேலும், அவர் ஒப்பந்தம் போடப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு போரில் முன்வரிசையில் சண்டையிட்டார். “அவர்கள் கூறியதன்படி சில வாரங்களுக்கு பயிற்சிகள் இருக்கும் என்று நான் உறுதியாக இருந்தேன். குறைந்தபட்சம் ஏப்ரல் இறுதிவரை பயப்பட ஒன்றுமில்லை என நினைத்தேன்.” தனது கணவர் தன்னிடம் பேசுவார் எனக் காத்திருந்ததாகவும் ஆனால் அவர் ஏப்ரல் 21 அன்று கொல்லப்பட்டதாகத் தெரிய வந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.   மற்றொரு தாய் கூறுகையில், போர்க்களத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த தனது மகனின் மரணம் குறித்துத் தெரிவிக்கத் தனது கணவரைத் தொடர்புகொள்ள முயன்றபோதுதான் தனது கணவரும் சிறையில் இருந்து போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தாம் அறிந்ததாகக் கூறினார். இரட்டைக் குழந்தைகளின் தந்தையான தனது மகன் வாடிம், இந்த ராணுவ ஆட்சேர்ப்புக்கு முன்னதாக எந்த ஆயுதத்தையும் ஏந்தியதில்லை என்று அவரது தாய் அல்ஃபியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறினார். மகனின் மரணம் குறித்துத் தனது கணவர் அலெக்சாண்டரிடம் அவரால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவர் சண்டையிடுவதற்காக “போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்று அவர் கூறுகிறார். வேறொரு கைதியின் தொலைபேசி அழைப்பு மூலமாகத்தான் தன் கணவர் சென்றிருப்பது அவருக்குத் தெரிய வந்தது. அலெக்சாண்டர் யுக்ரேனில் வளர்ந்ததாகவும் அங்கு குடும்பம் நடத்தியதாகவும் அல்ஃபியா கூறுகிறார். மேலும், பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதற்காக ரஷ்யா யுக்ரேனை ஆக்ரமித்தது “பொய் என்று அவருக்குத் தெரியும்” எனவும் அவர் தெரிவித்தார். அவரது மகன் இறந்து ஏழு மாதங்களுக்குப் பிறகு கணவர் அலெக்சாண்டரும் போரில் கொல்லப்பட்டதாக அல்ஃபியாவுக்கு தெரிவிக்கப்பட்டது.   ‘இறப்பதற்குத் தயாராக இருங்கள்’ வாக்னர் கூலிப்படைக்கு வேலை செய்யும்போது, சிறைக்கைதிகள் பொதுவாக ஆறு மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஒப்பந்த காலத்தின் இறுதியில் அவர்கள் உயிர் பிழைத்தால் அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படும். ஆனால், கடந்த செப்டம்பரில் இருந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட கைதிகள் அவர்கள் இறக்கும் வரை அல்லது போர் முடியும் வரை, இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரைக்கும் போரில் சண்டையிட வேண்டும். சரியான சீருடைகள், காலணிகளை வாங்குவதற்கு உதவுமாறு உறவினர்களிடம் கேட்ட கைதிகள் பற்றிய கதைகளை பிபிசி சமீபத்தில் கேட்டுள்ளது. கைதிகள் சரியான உபகரணங்கள், மருத்துவப் பொருட்கள் அல்லது கலாஷ்னிகேவ் துப்பாக்கிகள் கூட இல்லாமல் சண்டைக்கு அனுப்பட்ட செய்திகளும் உள்ளன. ரஷ்ய போர் ஆதரவாளரும் பதிவருமான விளாதிமிர் க்ரூப்னிக் தனது டெலிகிராம் சேனலிலி, “பல வீரர்களிடம் போருக்குப் பொருத்தமற்ற துப்பாக்கிகள் இருந்தன,” என்று எழுதியுள்ளார். “முதலுதவிப் பெட்டி, அகழி தோண்ட மண்வெட்டி, உடைந்த துப்பாக்கியுடன் முன்வரிசையில் ஒரு சிப்பாய் என்ன செய்ய முடியும் என்பது பெரிய மர்மம்” எனக் குறிப்பிடுகிறார் அவர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES க்ரூப்னிக், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு யுக்ரேனை தளமாகக் கொண்டவர். சில துப்பாக்கிகள் “முற்றிலும் உடைந்து இருப்பதைக் கண்டறிந்தபோது, அவற்றை மாற்றுவது சாத்தியமற்றது” என்று தளபதிகள் கூறியதாக அவர் கூறுகிறார். “அந்தத் துப்பாக்கி ஏற்கெனவே அந்த நபருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மேலும் கடுமையான ராணுவ அதிகாரத்துவத்தால் அதுகுறித்து எதுவும் செய்ய முடியவில்லை,” என்று அவர் குறுப்பிடுகிறார். முன்னாள் கைதிகளும் தங்கள் தோழர்கள் தம் உயிர்கள் மூலம் இந்தப் போருக்காகச் செலுத்தியுள்ள அதிக விலையை விவரித்துள்ளனர். “நீங்கள் படையில் இப்போது பதிவு செய்தால், இறப்பதற்குத் தயாராக இருங்கள்” என்று புயல் வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கான ஆன்லைன் குழுவில் செர்கேய் கூறுகிறார். இந்தத் தளத்தில் அவர்கள் பற்றிய தகவல் பகிரப்படுகிறது. அவர் அக்டோபர் முதல் புயல் படையில் சண்டையிட்டு வரும் முன்னாள் கைதி எனக் கூறுகிறார். இந்தத் தளத்தைச் சேர்ந்த மற்றோர் உறுப்பினர், ஐந்து மாதங்களுக்கு முன்பு 100 வீரர்களைக் கொண்ட புயல் படைப்பிடிவில் தாம் சேர்ந்ததாகவும் இப்போது அதில் உயிருடன் இருக்கும் 38 வீரர்களில் தானும் ஒருவர் எனவும் கூறுகிறார். “போரில் நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும், மறுபிறவியைப் போல் உள்ளது” என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c2e074ry91ro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.