கடந்த கால யுத்தத்தின் போது தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து புலமைப்பரிசில் 183 புள்ளிகள் பெற்று  சாதித்த மாணவன் கோபிநாத் கோபிதன்  தான் ஒரு வைத்தியராக வந்து இந்தப் போரில் துன்பங்களை அனுபவித்த மக்களுக்காக வைத்திய சேவையை ஆற்ற வேண்டும் என்பதே தனது இலட்சியம் என தெரிவித்திருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற செல் வீச்சு தாக்குதலில் தந்தையை இழந்த நிலையில் தந்தையின் முகத்தை கூட தெரியாது தாயின் அரவணைப்பில் வாழ்ந்து சிறப்பாக கல்விகற்று  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார் கோபிநாத் கோபிதன்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு மேற்கு  பகுதியில் வசித்து வருகின்ற கோபிநாத் கோபிதன் என்ற  மாணவன்  கடந்த 2009 ஆம் ஆண்டு தாயின் கருவறையில் இருந்த வேளையிலேயே மாத்தளன் பகுதியில், எறிகணை தாக்குதலில் தன்னுடைய    தந்தையை  பறிகொடுத்த நிலையில் பிறந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்த சிறுவன் விசுவமடு விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றி நேற்று வெளியாகிய யாகிய பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 183 புள்ளிகளை பெற்று பாடசாலையில் இரண்டாம் நிலையில் சித்தியடைந்த மாணவனாக சாதித்திருக்கிறார்.

தனது கணவனை 2009 இல் பறிகொடுத்த  கோபிநாத் கோபிதனுடைய தாயாரான கோபிநாத் சாரதா, 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கணவனை பறிகொடுத்த நிலையில் குறித்த மகனை பிரசவித்து சொல்லொணாத் துன்பங்களுக்கு மத்தியில் கூலித்தொழில் செய்து  தனது மகனை  கற்பித்த நிலையில் தனது மகன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமையினை இட்டு மனமகிழ்வு  அடைவதோடு அவனது  எதிர்கால இலட்சியம் நிறைவேற தனது பூரண ஆதரவை வழங்குவதாக தெரிவித்து இருக்கிறார்

அதேபோன்று குறித்த மாணவன் தான் ஒரு வைத்தியராக வந்து இந்தப் போரில் துன்பங்களை அனுபவித்த மக்களுக்காக வைத்திய சேவையை ஆற்ற வேண்டும் என்பதே தனது இலட்சியம் என தெரிவித்திருக்கிறார்

https://www.virakesari.lk/article/66373