(ஆர்.யசி)

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினையில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்தும் தற்போது எழுந்துள்ள புதிய பிரச்சினைகள் குறித்தும் முதலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் இடையில் பேசிய பின்னரே பிரதான வேட்பாளர்களிடம் பேசவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

selvam.jpg

இம்முறை ஜனாதிபதி தேர்தல் எமக்கு சாதகமாக அமைய வேண்டும் எனவும் அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு உயரிய அழுத்தங்களை கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 

பிரதான அரசியல் கட்சிகள் தமது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது எடுத்துள்ள நிலைப்பாடுகள் குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்தும் வினவிய போதே அவர் இவற்றைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று கூடியது. இதன்போது ஜனாதிபதி தேர்தலில் நாம் என்ன செய்யவேண்டும் என்ற விடயங்கள் குறித்து ஆராய்ந்தோம்.

 இதில் இத்தனை காலமாக தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் நாம் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற கோரிக்கைகள் மற்றும் தற்போதுள்ள புதிய பிரச்சினைகள் என்பன குறித்து தமிழ் தேசிய கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தனித்தனி நிலைபாடுகளை ஆராய்ந்த  பின்னர் கூட்டமைப்பாக நாம் ஒரு நிலைப்பாட்டை எடுத்த பின்னர் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் சகலருடனும் பேசுவதாக தீர்மானம் எடுத்தோம். 

சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாராகவே உள்ளோம். இந்த பேச்சுவார்த்தைகளில் நாம் முன்வைக்கும் கோரிக்கைகளை  ஏற்றுக்கொள்ளக்கூடிய தரப்பினர் யாராக இருந்தாலும் அவர்கள் வாக்குறுதிகளை வழங்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் நாட்டு மக்கள் முன்னிலையிலும் வாக்குறுதிகளை வெளிப்படுத்துகின்ற நிலையில் நாம் அந்த தரப்பை ஆதரிக்க முடியும்.

 கடந்த காலங்களில் நாம் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டுள்ளோம் ஆனால் இம்முறை தேர்தலில் அது நடக்கக் கூடாது என அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/66518