கட்சியைக் காட்டிக் கொடுத்து விட்டார் சிறிசேன – சந்திரிகா குற்றச்சாட்டு

chandrika-300x200.jpg

தனிப்பட்ட நலன்களுக்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்று கட்சியின் முன்னாள் தலைவியான சந்திரிகா குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களுக்கு அனுப்பியுள்ள பகிரங்க கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“நாட்டின் அதிபர் உள்ளிட்ட சந்தர்ப்பவாத தலைவர்கள், கட்சியின் 95 வீதமான அமைப்பாளர்களின் கருத்துக்களை நிராகரித்து, தனிப்பட்ட இலாபத்துக்காக சதிகாரர்களுடன் ஒரு உடன்பாட்டுக்குச் சென்றுள்ளனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி. ஜனநாயகத்தை மதித்து- ஆதரித்த ஒரு கட்சியாக இருந்து வருகிறது.

எங்கள் கட்சி கொலைகாரர்கள், மோசடி செய்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு இடமளிக்கவில்லை.

மீண்டும் அநீதி ஆட்சி செய்வதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி அனுமதிக்காது.

அதிபர் தேர்தலில் எமது கட்சி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தாமல் போனது வரலாற்றில் இதுவே முதல்முறை.

நாங்கள் அதிபர்களை, பிரதமர்களை உருவாக்கியிருக்கிறோம். சுதந்திரக் கட்சிக்கு  நேர்ந்த கதியைப் பார்த்து என் இதயம் அழுகிறது.

இத்தகைய உடன்பாடுகள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க வழிவகுக்கும். சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் அனைவரும், எதிர்வரும் அதிபர் தேர்தலில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

இந்த கட்சியை அழிக்க எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக நாம் எழ வேண்டும்.

கட்சியையும் அதன் கொள்கைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தைத் தொடங்கியவர்களுக்கு எனது உறுதியான ஆதரவை வழங்குகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/10/15/news/40656