அவுஸ்திரேலியாவில் முக்கிய பத்திரிகை நிறுவனங்கள் தங்களது முதல் பக்கங்களை கறுப்புநிற மை பூசி இருட்டடிப்பு செய்து வெளியிட்டுள்ளன.

australia-newspapers.jpg

போர்க்குற்றங்கள்,  அவுஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் ஆஸ்திரேலிய பத்திரிகைகளில்  சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தின. 

இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிகை நிறுவனமான அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஏபிசி) மற்றும் நியூஸ்  கார்ப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் பத்திரிகையாளர் வீடு ஆகிய இடங்களில் கடந்த ஜூன் மாதம் அவுஸ்திரேலிய பொலிஸார்  சோதனை களை மேற்கொண்டனர்.

அவுஸ்திரேலிய அரசின் இரு முக்கிய விவகாரங்களை வெளியிட்டதால் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பத்திரிக்கை நிறுவனங்கள் குற்றம்  சாட்டின. 

இந்நிலையில், பத்திரிகைகளுக்கு அரசாங்கம் ஆதரவளிப்பதாகவும் ஆனால் சட்டம் அனைவருக்கும் ஒன்றே என அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ‘இரகசிய கலாச்சாரம்’ உருவாகி வருவதாகவும்  ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதன்பின்னணியிலேயே அவுஸ்திரேலியாவில் இன்று முக்கிய பத்திரிகைகள் அனைத்தும்  தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கறுப்புநிற மை பூசி மறைத்து வெளியிட்டு எதிர்ப்புகளை வெளிக்காட்டியுள்ளன.

பத்திரிகைகளின் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலியாவின் பல்வேறு வானொலிகளும் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

நியூஸ் கார்ப் அவுஸ்திரேலியா பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மைக்கேல் மில்லர், அவரது பத்திரிகை, தி  அவுஸ்திரேலியன் மற்றும் தி டெய்லி டெலிகிராப் உள்ளிட்ட பத்திரிகைகளில் அச்சிடப்பட்ட கறுப்பு நிற முதல் பக்கத்தின் படத்தை தனது டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் ஏபிசி நிர்வாக இயக்குனர் டேவிட் ஆண்டர்சன் தெரிவிக்கையில், அவுஸ்திரேலியா உலகின் மிக ரகசியமான ஜனநாயகமாக மாறும் அபாயம்  உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, இந்த சம்பவம் குறித்து  அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவிக்கையில்,

“ஊடக அமைப்புகளுக்கு என்ன வேண்டும்? கடந்த  இரண்டு தசாப்தங்களாக இயற்றப்பட்ட கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் புலனாய்வு பத்திரிகை துறைக்கு அச்சுறுத்தலை  ஏற்படுத்தியுள்ளன. இது பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை சிறிது சிறிதாக பாதிப்படைச்செய்துள்ளது.

பத்திரிகை சுதந்திர விசாரணையின் முடிவுகள் அடுத்த வருடம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அத்துடன் பத்திரிகை சுதந்திரம் அவுஸ்திரேலியாவின் ஜனநாயகத்திற்கு முக்கியமானது, ஆனால் சட்டத்திற்குட்பட்டது. அதில் நான்,  பத்திரிகையாளர், வேறு யாராக இருந்தாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/67293