Jump to content

தமிழ்நாடு தினம்: தமிழுக்கென்று தனி மாநிலம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு தினம்: தமிழுக்கென்று தனி மாநிலம்!

522865.jpg

மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மொழியின் அடிப்படையில் சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு நவம்பர் 1, 1956 முதல் தனித்தியங்கத் தொடங்கின. அதேநாளில், தமிழகமும் தனி மாநிலமானது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகள் கன்னியாகுமரி என்ற மாவட்டமாகத் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்த மாநிலங்கள் இந்நாளை விசேஷமாகக் கொண்டாடிவரும் நிலையில், தமிழ்நாடு அரசும் இந்த ஆண்டு முதல் நவம்பர் 1-ம் தேதியைத் தமிழ்நாடு தினமாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளது.

சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்த மாநிலங்களில் தனி மாநில அந்தஸ்தைப் பெற்றதற்காகக் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. அன்றைய சென்னை மாநிலம், தமிழ் பேசும் சில பகுதிகளைப் பக்கத்து மாநிலங்களுக்கு விட்டுக்கொடுக்க நேர்ந்ததால், அது தமிழகத்தில் வருத்தத்தையே ஏற்படுத்தியிருந்தது. பழைய எல்லைப் பிரச்சினைகள் தற்போது விவாதிப்பதற்கு இல்லை என்பதோடு, தமிழகம் தனி மாநிலமானதும் கொண்டாடப்படுவதற்குரிய நிகழ்வு என்பதைத் தமிழ்நாடு அரசு வெளிப்படுத்துகிறது.

மொழிவாரி மாநிலங்கள்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு சென்னை மாகாணம் உருவாக்கப்பட்டது. ஹைதராபாத் நீங்கலான ஆந்திரம், மைசூர் நீங்கலான கன்னடம், கேரளத்தின் மலபார் பகுதிகள் ஆகியவையும் சென்னை மாகாணத்துடனேயே இணைக்கப்பட்டிருந்தன. இந்திய விடுதலைப் போராட்டம் வெற்றியை நோக்கி நகர ஆரம்பித்த காலத்திலேயே மொழிவாரி மாநிலங்களுக்கான குரல்களும் எழத் தொடங்கிவிட்டன. தென்னிந்தியாவில் விசால ஆந்திரம், சம்யுக்த கன்னடம், ஐக்கிய கேரளம் ஆகியவற்றுக்குத் தனித்தனி இயக்கங்கள் தொடங்கப்பட்டன.

1937-ல் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திர, கர்நாடக மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியது. 1938-ல், வார்தாவில் கூடிய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம், விடுதலைக்குப் பிறகு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படும் என்று உறுதியளித்தது. அதே ஆண்டில், பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தைத் தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து, சி.பா.ஆதித்தனார், கி.ஆ.பெ.விசுவநாதம், ம.பொ.சிவஞானம் ஆகியோர் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தினர். விடுதலைக்கு முன்பு மொழிவாரி மாநிலக் கொள்கையை வலியுறுத்திய காங்கிரஸ் கட்சி, விடுதலைக்குப் பின்பு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. மொழிவாரி மாநிலங்கள் நாட்டின் ஒற்றுமையைக் குலைத்துவிடுமோ என்ற அச்சம்தான் அதற்கான முக்கியக் காரணம்.

சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை ஆந்திரத்தைத் தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அரசமைப்பு நிர்ணய அவையின் ஆலோசகரான பி.என்.ராவ், எஸ்.ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, டி.பிரகாசம் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர்.

மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிப்பது குறித்து 1948-ல் அரசமைப்பு நிர்ணய அவையால் நியமிக்கப்பட்ட என்.கே.தார் ஆணையம், அம்முடிவு நாட்டின் ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கக்கூடும் என்று கருத்துத் தெரிவித்தது. தார் ஆணையத்தின் முடிவுக்குக் கடும் அதிருப்தி நிலவிய நிலையில் ஜவாஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகியோரைக் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி நியமித்தது. மூன்று தலைவர்களைக் கொண்ட அந்தக் குழுவும் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படக் கூடாது என்றே பரிந்துரைத்தது. ஆனாலும், ஆந்திர மாநிலத்தை மட்டும் உடனடியாகப் பிரிக்க வேண்டும் என்று கூறியது.

திராவிட நாடு கேட்டு தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த போதும் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கும் விவகாரத்தில் அதற்கு ஆதரவாகத் தீவிர குரல் கொடுத்தது அண்ணாவின் திமுக. மொழிவாரி மாநிலங்கள் அமைப்பு, தமிழ் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டல் இந்த இரண்டு விஷயங்களுக்காகவும் அது தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது. ஆந்திரப் பிரிவினைக்கான குரல்கள் தீவிரமடைந்த நிலையில் நேரு, படேல், பட்டாபி குழுவின் பரிந்துரையின்படி, சென்னை மாநிலத்திலிருந்து ஆந்திரத்தைப் பிரிப்பது குறித்து இறுதி முடிவெடுப்பதற்காக சென்னை மாநில அரசால் பி.எஸ்.குமாரசாமி ராஜா தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டது.

குழு உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடுகள் எழுந்த நிலையில், தனி மாநிலம் வேண்டி ஆந்திரத்தில் போராட்டங்கள் தீவிரமானது. சென்னையைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் வேண்டும் என்று 1952-ல் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் தொடங்கினார். அவருடைய மரணம், ஆந்திரத்தில் நடந்துவந்த போராட்டங்கள் மேலும் தீவிரமானதையடுத்து, ஆந்திர மாநிலக் கோரிக்கையைப் பிரதமர் நேரு உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

சென்னை யாருக்கு?

ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும் என்று அறிவித்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அம்மாநிலத்தின் தலைநகர் எது என்று அறிவிக்கவில்லை. அதையே வாய்ப்பாகக் கொண்டு ‘மதராஸ் மனதே’ என்ற முழக்கத்தை வைத்தார்கள் ஆந்திரத் தலைவர்கள். சென்னை இரு மாநிலங்களுக்கும் தற்காலிகத் தலைநகராக இருக்க வேண்டும், மத்திய அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்ட தனிப் பிரதேசமாக இருக்க வேண்டும் என்று பல்வேறு விதமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

சென்னை தமிழகத்தின் தலைநகரமாகவே தொடர வேண்டும் என்பதை விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே வலியுறுத்திவந்தார் தமிழரசுக் கழகத் தலைவரான ம.பொ.சிவஞானம். ஆந்திரத் தலைவர்களின் கோரிக்கையை அடுத்து, சென்னையைக் காக்கும் தீவிரப் போராட்டத்தில் இறங்கினார் அவர். 1953-ல் சென்னை மாநகராட்சியின் சிறப்புக் கூட்டத்தில் சென்னை தமிழகத்துக்கே உரியது என்ற தீர்மானத்தை முன்மொழிந்து, அதை ஒருமனதாக நிறைவேற்றச் செய்தார்.

அப்போதைய சென்னை மாகாண முதல்வராகப் பதவி வகித்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும் சென்னை தமிழகத்துக்கே உரியது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதைத் தெரிவித்தார். பிரதமர் நேருவைச் சந்தித்த ராஜாஜி, சென்னையை ஆந்திரத்தின் தற்காலிகமான தலைநகராகச் செயல்பட மத்திய அரசு அனுமதித்தால், முதல்வர் பதவியிலிருந்து தான் விலக நேரும் என்று அறிவித்தார். சென்னையை ஆந்திரத்தின் தற்காலிகத் தலைநகராக அறிவிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு ஆயிரக்கணக்கில் தந்திகள் அனுப்பப்பட்டன. தமிழகத்தின் எதிர்ப்பை அடுத்து மத்திய அரசு தன் முடிவை மாற்றிக்கொண்டது. 1953 அக்டோபர் 1-ல் உருவான ஆந்திர மாநிலத்தின் தலைநகராக கர்நூல் அறிவிக்கப்பட்டது.

அதற்கடுத்து, சென்னையின் வளர்ச்சியில் ஆந்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதால், தமிழகம் ஆந்திரத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மத்திய அரசு நியமித்த வாஞ்சு கமிட்டி இழப்பீடாக இரண்டு கோடி முப்பது லட்சம் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதை எதிர்த்து சென்னை சட்டமன்ற மேலவையில் கடுமையாக விவாதித்தார் ம.பொ.சிவஞானம். இதற்கு முன்பு அசாம், ஒரிசா, பஞ்சாப் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது இழப்பீடு அளிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார். அவருடைய வாதத்தை முதல்வர் ராஜாஜியும் ஏற்றுக்கொண்டார்.

சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் பிரிந்து சென்ற நிலையில், தென்கன்னடமும் மலபாரும் தொடர்ந்திருந்தன. அதேநேரத்தில், தென்திருவிதாங் கூரைச் சேர்ந்த தமிழர்களிடத்தில் மொழியின் அடிப்படையில் சென்னை மாகாணத்துடன் இணைய வேண்டும் என்ற குரலும் எழுந்தது. தமிழர்களின் தொடர் போராட்டங்கள், உயிரிழப்புகளுக்குப் பிறகு தமிழர்கள் அதிகளவில் வசித்துவந்த தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை ஆகிய சில பகுதிகள் தமிழகத்துடன் இணைந்தன. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பசல் அலி ஆணையத்தின் பரிந்துரையின்படி இந்த இணைப்புகள் நடந்தேறின.

ஆனால், தமிழர்கள் வசித்த மற்ற பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை வனப்பகுதி மற்றும் நெய்யாற்றின் கரை ஆகியவை தமிழகத்தோடு இணைக்கப்படவே இல்லை. தொல்தமிழகத்தின் வட எல்லையாகவும், வடஆற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்துவந்த வேங்கடத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்கும் முயற்சியும் தோல்வியில்தான் முடிந்தது. தமிழ்நாட்டின் பகுதிகளை உள்ளடக்கிய சித்தூர் மாவட்டத்தை ஆந்திரத்துடன் இணைத்ததை எதிர்த்து, தமிழரசுக் கழகமும் திமுகவும் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போராட்டத்தின் விளைவாக, 1960-ல் ஆந்திரத்திடமிருந்து திருத்தணி மீட்கப்பட்டது.

தமிழ்நாடு பெயர் மாற்றம்

தமிழுக்கென்று தனி மாநிலம் அமைந்தாலும், அதற்கு சென்னை மாநிலம் என்ற பெயரே தொடர்ந்தது. 1956-ம் ஆண்டிலேயே சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழறிஞர்களும் தொடர்ந்து இந்தப் பெயர் மாற்றத்தை வலியுறுத்தினர் என்றாலும், சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பெயர் மாற்றத் தீர்மானம் தோல்வியைத் தழுவியது.

பெயர் மாற்றத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்ட சங்கரலிங் கனார் 78-ம் நாளில் உயிர்விட்டார். எந்தக் கோரிக்கைக்காகத் தியாகி சங்கரலிங்கனார் தனது உயிரை விட்டாரோ அதை அண்ணா முதல்வராகப் பதவியேற்றபோது நிறைவேற்றிவைத்தார். 1967 ஜூலை 15 அன்று பெயர் மாற்றத் தீர்மானத்தை முன்மொழிந்தார் அண்ணா. 1968 ஜனவரி 15 அன்று தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது.

விடுதலைக்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தில் தமிழ்நாடு தனது மொழி, இன உரிமைக்காகக் கட்சி பேதமின்றி பெரும் போராட்டங்களை நடத்தியிருக்கிறது. தியாகங்களையும் புரிந்திருக்கிறது. அதன் விளைவாகவே இன்றைய தமிழ்நாடு இந்த உரிமைகளைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும்தான் அந்த தியாகங்களுக்கான சரியான மரியாதை.

வடக்கெல்லைப் போராட்டம்

விடுதலைப் போராட்ட வீரரும் தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம், சுதந்திர சோஷலிஸ தனிக் குடியரசு என்ற கொள்கையை முன்வைத்து 1946 நவம்பர் 21-ல் தமிழரசுக் கழகத்தைத் தொடங்கினார். ‘தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்க தமிழரசு வேண்டும், சுதந்திர அரசியலை நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை தமிழருக்கு உண்டு’ என்பது தமிழரசுக் கழகத்தின் முக்கியக் கொள்கையாக இருந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு, வடவேங்கடம் தென்குமரியே தமிழகத்தின் வடக்கு தெற்கு எல்லையாக இருக்க வேண்டும் என்று போராட்டத்தைத் தொடங்கி நடத்தினார் ம.பொ.சி. தனது ‘தமிழ் முரசு’ இதழில் திருவிதாங்கூரைத் தமிழகத்துடன் இணைத்து நில வரைபடம் ஒன்றை வெளியிட்டதோடு, அப்போராட்டத்தில் ஈடுபட்ட திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கத்துக்கும் உறுதுணையாக நின்றார்.

தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் திருத்தணியை மீட்டதில் ம.பொ.சி.யின் பங்கு மிக முக்கியமானது. ஆந்திரத்துடன் சித்தூரை இணைத்ததை எதிர்த்து, வடக்கு எல்லைப் பாதுகாப்புக் குழுவுக்குத் தலைமையேற்றார் ம.பொ.சி. சித்தூர், புத்தூர், திருத்தணி ஆகிய ஊர்களில் அவர் முன்னின்று நடத்திய பொது வேலை நிறுத்தமும் கடையடைப்பும் மறியல்களும் மத்திய அரசுக்குக் கடும் சவாலை ஏற்படுத்தின. ம.பொ.சி.யின் மீது கடும் கோபத்துக்கு ஆளான பிரதமர் நேரு, வார்த்தைகளை அள்ளி வீச, ம.பொ.சி.க்கு ஆதரவாகத் தமிழகமே திரண்டெழுந்தது. நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில், முதல்வர் ராஜாஜியின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அரசு தமிழக - ஆந்திர எல்லைச் சிக்கலைத் தீர்க்க பதாக்கர் ஆணையத்தை நியமித்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரைப்படி தமிழகத்துடன் திருத்தணி இணைக்கப்பட்டது.

தெற்கெல்லைப் போராட்டம்

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னர் 1920-ம் ஆண்டு வாக்கிலேயே காங்கிரஸ் கட்சி மொழிவழிப் பிரதேசங்களின் அடிப்படையில் செயல்பட ஆரம்பித்தது. 1945-ல் காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை உள்ள பகுதிகளை ஐக்கிய கேரள மாகாணமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்படத் தொடங்கியது. திருவிதாங்கூர், கொச்சி, மலபார் பகுதிகளை உள்ளடக்கியதாக இது இருந்தது.

கேரளப் பிரதேச காங்கிரஸ் கட்சியும், கொச்சி சமஸ்தானத்தைச் சேர்ந்த காங்கிரஸ் இயக்கமான பிரஜா மண்டலமும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த காங்கிரஸ் இயக்கமும் இக்கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தன. ஐக்கிய கேரளக் கோரிக்கையில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் தென்திருவிதாங்கூர், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளும் இருந்தன.

எனவே, அக்கோரிக்கையை நாகர்கோவிலைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான பி.எஸ்.மணி கடுமையாக எதிர்த்தார். அவரது முன்முயற்சியால் திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் தொடங்கப்பட்டது. பின்பு, அது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்று பெயர் மாறியது. மார்ஷல் நேசமணி, நதானியல், பி.சிதம்பரம் பிள்ளை, காந்திராமன் உட்பட பல தலைவர்கள் இவ்வியக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டனர்.

திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கத்துக்குக் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், நாடகக் கலைஞர் ஔவை டி.கே.சண்முகமும் நிதியுதவிபுரிந்து ஆதரித்தனர். இதற்கிடையே தேவிகுளம் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த தமிழர்கள் தாக்குதல்களுக்கு ஆளாகினர். தமிழர்களின் போராட்டங்கள் தீவிரமானது. துப்பாக்கிச் சூட்டில் 11 தமிழர்கள் பலியானார்கள். கைது நடவடிக்கைகளும் தொடர்ந்தன. பத்தாண்டு கால இடைவிடாத போராட்டத்தின் பலனாகத்தான் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதியளவேனும் தமிழகத்தோடு இணைந்தது.

தமிழ் இந்து

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.