Jump to content

இச்சா நாவல் அறிமுகம் - ஷோபாசக்தி உரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

பொயற் ஐயாவும் இடையில் கூட்டத்தை தன் கையில் எடுக்கப்பார்த்தார் (24 ஆவது நிமிடத்தில் இருந்து). ஆனால் ஷோபாசக்தி ஒரு மாதிரி தனது கலந்துரையாடலுக்குள் கொண்டுசேர்த்துவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுத்த சாதி வெறியினை வெளிப்படுத்தும்.. பித்தலாட்டக் கலந்துரையாடல்.

வெளிப்படையாகவே வெள்ளார் உச்சரிப்பும்.. அவர்கள் மீது.. பார்பர்ணிய சித்தாந்தத் திணிப்பும்..

தமது தவறான சிந்தனையோட்டங்களுக்கு சுயநியாயம் கற்பிக்க நடத்தப்படும்.. தமிழகம் நோக்கிய பயணங்களில்.. புலம்பெயர் புண்ணாக்குகளின் திருகுதாளங்களுக்கு இந்தக் கலந்துரையாடல் நல்ல உதாரணம்.

எமது வரலாற்றை.. ஒழுங்கானவர்கள் எழுதாவிட்டால்.. இப்படியான ஒழுக்கவீனர்கள் தான்.. எழுத நேரிடும். கவலைக்கிடம். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று கிழக்கு இலண்டன் பகுதியில் ஈழத்தமிழர்களில் எனது ஆதர்ச எழுத்தாளர் தோழர் ஷோபாசக்தியின் “இச்சா” நாவல் அறிமுக விழாவில் அவரின் கையெழுத்துடன் நாவலை வாங்கியதும் ஓரிரு வார்த்தைகள் பேசியதும் மறக்கமுடியாத தருணங்கள்😀

large.F2A910C8-58A9-4BEE-9473-7F4B88D353EF.jpeg.6ff5ff5e3fe13b1ce4ff7225e541feb7.jpeglarge.ABA66930-4C16-447C-AF09-B3A2F313E9D0.jpeg.9b21b8803515cb318d4c8b68c2dff96c.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் எனும் இச்சை

526695.jpg

இச்சா
ஷோபா சக்தி
வெளியீடு : கருப்புப் பிரதிகள்
ரூ. 270/-
8610242696

துயரம், இழப்பு, மரணம், சித்ரவதைகள், ரத்தக் கோரங்கள் நிகழ்ந்த பிறகு சொல்லப்படுகையில் அவை எத்தனை கொடூரமானதாக இருந்திருந்தாலும் அவை கதையாய், காவியத்தின் சுவையாய் ஆகிவிடுகின்றன. காலத்தின் தொலைவில் நினைவெல்லாம் துய்க்கும் பொருளாகிறது. தீவிரமும் அதேவேளையில், சுவாரசியமும் பொதுத்தன்மையும் கொண்ட சர்வதேசக் கதையாக தமிழ் நவீன இலக்கியம் மாறுவதற்கு இனப் படுகொலையும் யுத்தமும் தேவையாக இருந்திருக்கிறது. அந்தக் கதையாடலின் நட்சத்திரமாக எழுந்த கதைசொல்லி ஷோபா சக்தி. தமிழ் நவீன இலக்கியத்தில் அவலத்தின் அத்தனை லட்சணங்களையும் கொண்டு யுத்தச் சுவையைத் தனது தனித்தன்மையான அழகியலாக ஆக்கியவர். யுத்தம் என்ற பெரிய பாம்பின் வாயாகத் திகழும் காமம், வாலான மரணத்தைக் கவ்வ முயன்றுகொண்டேயிருக்கும் படைப்புதான் ‘இச்சா’. காவியச் சுவைகள் என்று ஒன்றைக்கூட விடாமல், நகைச்சுவை வரை அனைத்துக் குணங்களையும் சேர்த்து ஷோபா சக்தி சமைத்த துல்லியமான சர்வதேச உணவு ‘இச்சா’.

இதற்கு முந்தைய ‘பாக்ஸ்’ நாவலில் இலங்கையின் ஒரு கற்பனைப் பிராந்தியத்தை வைத்துக் கதைசொன்ன ஷோபா சக்தி, இதில் கற்பனை மொழியான ‘உரோவன்’ மொழியில் ‘ஆலா’ எழுதியிருக்கும் குறிப்புகளின் மொழிபெயர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு நாவலைப் படைத்துள்ளார். ‘இச்சா’, புராணிகக் கதைகளும் கதாபாத்திரங்களும் தலையிட்டுக் கொண்டேயிருக்கும் நாட்டார்புலப் பின்னணி கொண்ட துப்பறியும் நாவல். யுத்தம், வன்முறை, காமம் சார்ந்த பொன்மொழிகள் நூறையாவது இந்த நாவலிலிருந்து பொறுக்கியெடுத்துவிட முடியும். தமிழ், இந்திய, சிங்களத் தொன்மங்கள், பழமொழிகள், நாட்டார் பாடல்கள் கதாபாத்திரங்களிலும் நீண்டு நிழலையும் சுமைகளையும் விட்டுள்ள தடயங்களைப் பார்க்க முடிகிறது.

வெள்ளிப்பாவை என்ற ஆலா

‘இச்சா’, இலங்கையில் இரண்டாயிரத்துக்குப் பிறகு புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலிருந்த போர்நிறுத்த காலகட்டம் முடிந்த இறுதிப் போர் தொடங்கும் காலகட்டத்தில் மையம் கொள்கிறது. கிறிஸ்துவின் கடைசி இரவில் தொடங்கும் கதை, உலகெங்கும் நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களில் மையம்கொண்டு, உலகம் முழுக்க அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட மக்கள் அனைவரும் வாதைப்பட்ட இயேசுவாக மாறும் சித்திரம் ஒன்றை ஆசிரியர் வரைகிறார். 

இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த ஈஸ்டர் ஞாயிறில் நின்று தன் இலக்கை நோக்கி நாவல் நிலைகொள்கிறது. இலங்கையில் தாயை விட்டுவந்திருக்கும் கதைசொல்லி, அம்மாவையோ உறவினர்களையோ தொடர்புகொள்ள இயலாமல் அலைக்கழிந்துகொண்டிருக்கும்போது, குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் புகைப்படத்தில் மர்லின் டேமி என்ற வெள்ளைப் பெண்ணின் புகைப்படத்தைப் பார்க்கிறான். கதைசொல்லிக்கு அறிமுகமான அந்த மர்லின் டேமிதான், ஆலா சிறையிலிருந்து ‘உரோவன்’ மொழியில் எழுதிய குறிப்புகளைக் கொடுத்தவள். 1989-ல் ஒரு அடைமழைக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இலுப்பங்கேணியில் பிறந்த வெள்ளிப்பாவை என்ற ஆலா, பாலினரீதியாகவும், சாதியம், இனவாதம், அரசு பயங்கரவாதம் என அனைத்துவகையிலும் சிறுவயதிலிருந்து சந்தித்த துயரங்களையும் அதிலிருந்து தப்புவதற்குச் செய்த முயற்சிகளையும் ‘இச்சா’ அதிநுட்பத்துடன் சொல்கிறது.

சிறையிலிருந்து விடுதலை பெறாமலேயே இறந்துபோகிறாள் ‘ஆலா’. ஆனால் அவள் குறிப்புகளில் சிறையிலிருந்து விடுதலையடைந்து, ஐரோப்பா போய் ஒரு குழந்தைக்குத் தாயான பிறகே இறக்கிறாள். மரணம் மகத்தான சம்பவமாக இருக்க வேண்டுமென்று நினைத்த ஆலாவுக்கு அப்படி நிகழவில்லை. ஆனால், அவளது அழிந்த உடலையும் ஆன்மாவையும் அவள் எழுத்துகளாக மாற்றி அமரத்தன்மையை அடையும் முயற்சியே அவளது குறிப்புகள்.

இலங்கைத் தமிழர் வாழ்வென்பது, சிங்களர்களின் வாழ்வோடு இணக்கமாக இருந்ததன் அடையாளங்களையும் பொதுவில் பகிர்ந்துகொண்ட வெகுஜனப் பண்பாட்டுக் குறிப்புகள் வழியாக, ஆலாவின் குழந்தைப் பருவம் நமக்கு முன் உருக்கொள்கிறது. சிங்கள இனவாதம், தமிழ் கிராமங்களில் சிங்களர்களின் ஆக்கிரமிப்பு, புலிகளின் ஆயுதப் போராட்டம் வலுவடைவதில் கழியும் ஆலாவின் வாழ்க்கையில், குடிக்கத் தண்ணீர் கேட்டு காட்டுக்குள் புலி இளைஞர்கள் குறுக்கிடுகின்றனர். ஆலாவின் வாழ்க்கை மட்டுமல்ல, இளுப்பங்கேணி என்ற கிராமத்தினுடையதும் அந்த நாளில் புரட்டிப் போடப்படுகிறது. ஆலா, பெண் ஆயுததாரியாக ஆகும் நிலையில் நாவல் இடைவேளையில் வேகமெடுக்கிறது.

ஆண்களிடம் மட்டுமல்ல பெண்களிடமும்

ஆயுத பாவிப்பு, வன்முறை, போராளித்துவம் மீதான ஈர்ப்பு எப்படிச் செயல்படுகிறது; பாலுறவு இச்சையின் ஆற்றலிலிருந்து அது எப்படியான ரசவாதத்தை மேற்கொள்கிறது என்பதை ‘ஆலா’வின் தொடக்கக் கால போராளி வாழ்க்கையிலும், தளபதி சுல்தான் பப்பாவினுடனான லட்சியக் காதலிலும் விரிவாகவே நாவலாசிரியர் நிகழ்த்தியும் பேசியும் விடுகிறார். உடலின் எல்லைகளை உணர்த்தும் மனத்தின் புனைவுகளும் லட்சியங்களும் சிதைந்துபோகும் சிறைக்கொடுமைகள் இந்த நாவலிலும் விரிவாகப் பேசப்படுகின்றன.

‘ஆலா’வின் குறிப்புகள் சிறையோடு முடியவில்லை; நிக்கோஸ் கசன்சாகிஸின் ‘இயேசுவின் கடைசி சபலம்’ படைப்பை ஞாபகப்படுத்துவது. ஐரோப்பாவுக்குத் திருமணம் வழியாகத் தப்பித்துச் சென்றதாக ஆலா எழுதியிருக்கும் புனைவுதான் இந்த நாவலைத் தப்புவிக்கிறது. இறந்த காலம், அதன் நினைவுப் பதிவுகள், அவற்றிலிருந்து உருவான ஆளுமைத் தாக்கத்திலிருந்து மனிதனால் விடுதலையடைய முடியுமா? அவள் ஏன் தன் கற்பனையிலும் அத்தனை இடர்மிகுந்த ஒரு வாழ்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

காதல், வீரம், தியாகம், அன்பு, மனிதாபிமானம் எல்லாவற்றையும், “உயிருள்ள ஆலாப் பறவையொன்றை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று கடைசியில் கேட்பதன் மூலம் ஆலா என்னும் பறவையின் சிறகுகளைக் கற்பனைகளாக மாற்றிவிடுகிறான் கதைசொல்லி. பறக்காதது அனைத்தும் துயருறுவதாக, துயரைப் படைக்க வல்லதாக உள்ளது. லட்சியத்துக்கும் லட்சியமின்மைக்கும் இடையில் நாவல் முழுக்கவும் மனிதர்கள் பயணித்துக்கொண்டிருக்கின்றனர். இனம், அடையாளம், மொழிவாதம், நடத்தைகள், குறிப்பாக பாலியல் நடத்தைகள் என்று கெட்டிப்பட்ட கருத்துருவாக்கங்களிலும் தொடர் பழக்கங்களிலும் தீமையை நோக்கிச் சரிந்துகொண்டிருக்கின்றனர்.

ஷோபா சக்தியின் முந்தைய நாவல்கள் எதுவும் தராத மன அழுத்தத்தை, இருள் மூட்டத்தை, செயல் உறைந்த நிலையைத் தருவதாக இந்த நாவல் இருக்கிறது. நாவலாசிரியனின் நோக்கமும் இதுவாக இருக்கலாம்.

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

 

https://www.hindutamil.in/news/literature/526695-icha-book-review-2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

நேற்று கிழக்கு இலண்டன் பகுதியில் ஈழத்தமிழர்களில் எனது ஆதர்ச எழுத்தாளர் தோழர் ஷோபாசக்தியின் “இச்சா” நாவல் அறிமுக விழாவில் அவரின் கையெழுத்துடன் நாவலை வாங்கியதும் ஓரிரு வார்த்தைகள் பேசியதும் மறக்கமுடியாத தருணங்கள்😀

large.F2A910C8-58A9-4BEE-9473-7F4B88D353EF.jpeg.6ff5ff5e3fe13b1ce4ff7225e541feb7.jpeglarge.ABA66930-4C16-447C-AF09-B3A2F313E9D0.jpeg.9b21b8803515cb318d4c8b68c2dff96c.jpeg

 

முதலே யாழில் ஒரு அறிவித்தல் போட்டு இருக்கலாமே!...எனக்கொரு புத்தகம் வாங்கினீங்களா?

 

மட்டுவில் இருந்த ஒரு பேமசான டீச்சருக்கு பெயர் "இச்சா"...ரகுநாதனுக்கு நினைவு இருக்குதா  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

 

முதலே யாழில் ஒரு அறிவித்தல் போட்டு இருக்கலாமே!...எனக்கொரு புத்தகம் வாங்கினீங்களா?

 

யாழில் போடவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் விளம்பரம் முகப்புத்தகத்தில் இருந்ததால் படத்தை ஒட்டமுடியவில்லை.

இச்சா ஒரு பிரதிதான் வாங்கினேன்.  பெளசரிடம் கேட்டால் வீட்டிற்கே பார்சல் பண்ணி அனுப்புவார்.

 ஐரோப்பிய ,அமெரிக்க நாடுகளுக்குள் ,லண்டனில் அமைந்துள்ள எமது படிப்பக நிலையத்தால்,இந்த நூல்களை வான் வழி பொதிச் சேவை மூலம் அனுப்பி வைக்க முடியும். இலங்கை மற்றும் மத்திய கிழக்கிலுள்ள வாசகர்கள்  நூல்கள் தேவைப்படின் தொடர்பு கொள்ளுங்கள். எம்மிடம் உள்ள நூல்களின் விபரம் தேவையானோரும், நூல்கள் தேவையானோரும் கீழ்வரும் தொலைபேசி, மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள் .Mobile 0044 (0) 7817262980 . Email. eathuvarai@gmail.com.பிரித்தானியாவில் உள்ளவர்கள் 317, 1st Floor, High Street north, Eastham,LONDON, E12 6SL எனும் முகவரியில் திங்கள்,செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் பெற்றுக் கொள்ளலாம்.—

http://eathuvarai.net/?page_id=205

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

யாழில் போடவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் விளம்பரம் முகப்புத்தகத்தில் இருந்ததால் படத்தை ஒட்டமுடியவில்லை.

இச்சா ஒரு பிரதிதான் வாங்கினேன்.  பெளசரிடம் கேட்டால் வீட்டிற்கே பார்சல் பண்ணி அனுப்புவார்.

 ஐரோப்பிய ,அமெரிக்க நாடுகளுக்குள் ,லண்டனில் அமைந்துள்ள எமது படிப்பக நிலையத்தால்,இந்த நூல்களை வான் வழி பொதிச் சேவை மூலம் அனுப்பி வைக்க முடியும். இலங்கை மற்றும் மத்திய கிழக்கிலுள்ள வாசகர்கள்  நூல்கள் தேவைப்படின் தொடர்பு கொள்ளுங்கள். எம்மிடம் உள்ள நூல்களின் விபரம் தேவையானோரும், நூல்கள் தேவையானோரும் கீழ்வரும் தொலைபேசி, மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள் .Mobile 0044 (0) 7817262980 . Email. eathuvarai@gmail.com.பிரித்தானியாவில் உள்ளவர்கள் 317, 1st Floor, High Street north, Eastham,LONDON, E12 6SL எனும் முகவரியில் திங்கள்,செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் பெற்றுக் கொள்ளலாம்.—

http://eathuvarai.net/?page_id=205

நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/25/2019 at 3:38 AM, ரதி said:

 

முதலே யாழில் ஒரு அறிவித்தல் போட்டு இருக்கலாமே!...எனக்கொரு புத்தகம் வாங்கினீங்களா?

 

மட்டுவில் இருந்த ஒரு பேமசான டீச்சருக்கு பெயர் "இச்சா"...ரகுநாதனுக்கு நினைவு இருக்குதா  

 

இருக்கிறது. அவவுக்கு ஈச்சா டீச்சர் என்பது செல்லப்பெயர். இயற்பெயர் ஈஸ்வரியாகக் கூட இருக்கலாம். உயர்தரத்தில் உயிரியல் படிப்பித்தவர், நான் அவரிடம் படிக்கவில்லை. 

மாணவர்களிடையே பிரபலமானவர். 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இச்சா நாவலை முன்வைத்து ஷோபாசக்தியுடன் ஓர் உரையாடல்.

Post Views 515

interview-iwth-shoba-sakthi.jpg

எழுத்தாளர் ஷோபாசக்தி தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கும் குறிப்பிடத்தக்க ஈழத்தை சார்ந்த படைப்பாளி, இவர் சிறந்த திரைப்பட நடிகரும் கூட…!  

சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் என்கிற எல்லா பிரிவுகளிலும் ஷோபாசக்தி நிறைய எழுதிக் குவித்திருக்கிறார்.  சமீபத்தில் வெளியான அவரின்  ‘இச்சா’ நாவலை முன்வைத்து கனலி கலை இலக்கிய இணையதளம் சார்பாக க.விக்னேஷ்வரன்  நடத்திய ஓர் உரையாடல் இதோ..!


‘இச்சா’ நாவலின் கரு எங்கு, எப்படிபட்ட மனநிலையில் உருவாகியது? இன்று நாவலை நீங்கள் வாசிக்கும் போது அந்த கரு அல்லது எண்ணம் சரியாக வந்துள்ளதாக நினைக்கிறீர்களா? 

‘Dheepan’ திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டபோது, அந்த விழாக்களில் நான் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களதும் பார்வையாளர்களதும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருந்தது. அந்தப் படத்தில் நான் நடிகன் மட்டுமே என்றபோதிலும்,  படம் இலங்கையில் நடந்த யுத்தத்தைப் பின்னணியாகக் கொண்டிருந்ததாலும் நான் ஏற்ற பாத்திரம் புலிப் போராளியின் பாத்திரம் என்பதாலும் படத்தின் கதை ஓரளவிற்கு எனது சொந்த வாழ்க்கையை ஒத்திருந்ததாலும், படத்திற்கு அப்பால் தமிழர்கள் மீதான இனப்படுகொலை – போர்- புலிகள் குறித்தும் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. பெண் போராளிகளது பாத்திரம் குறித்தும் தற்கொலைப் போராளிகள் குறித்தும் என்னிடம் திரும்பத் திரும்பக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அந்தக் கேள்விகளே  என்னை இச்சாவை எழுதத் தூண்டின. 

நாவலை வாசித்தவர்களிடமிருந்து வரும் எதிர்வினைகள் என்னை உற்சாகப்படுத்துகின்றன. எனது மனதில் நினைத்திருந்த கதைகளையும் படிமங்களையும் என்னுடைய போர் எதிர்ப்பு நிலைப்பாட்டையும் சரியான முறையில் வாசகர்களிடம் கடத்தியிருப்பதாகவே பெரும்பாலான எதிர்வினைகளைப் படிக்கும்போது நான் புரிந்துகொள்கிறேன்.

இலங்கையின் நில அமைப்புகள் சிலவற்றை பற்றி இச்சா மிகத்தெளிவாக சொல்கிறது . நாவலை எழுதும் போது அந்த நிலத்தை பிரிந்து வாழும் மன நெருக்கடிகளை எப்படி எதிர் கொண்டீர்கள்? 

சிறுகதை  அல்லது நாவல் எழுதுவது மட்டுமல்ல சினிமாக்களில் நாடகங்களில் நடிப்பதும் கூட எனக்குத் தெளிவான மூளைச் செயற்பாடு மட்டுமே. மன எழுச்சிகளும் உணர்வுத் தழும்பல்களும் என்னுடைய எழுத்தையோ நடிப்பையோ பாதிப்பதில்லை. பாதிக்கவும் கூடாது என்றே நினைக்கிறேன். 

எழுதுவதால் மனதில் நெருக்கடி புதிதாகத் தோன்றுவதில்லை. என் நிலத்தை நான் பிரிந்து வாழும் மன நெருக்கடியும் பதற்றமும் எப்போதும் என்னுடனேயே இருக்கின்றன. உண்மையில் ஒரு கதை அல்லது நாவல் எழுதி முடிக்கையில் அந்த நெருக்கடி அல்லது பதற்றம் மனதில் சற்றுத் தணியவே செய்கிறது.

WhatsApp-Image-2019-12-14-at-4.27.32-AM-

நாவலில் வரும் கேப்டன் ஆலா என்கிற பெண் கதாபாத்திரம் பாதி உண்மை  அல்லது பாதி கற்பனையாக… ஏன் முழுவதும் உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் ஆலாவைப் பற்றி நாவலில் சொல்லாமல் போன சில விடயங்களை சொல்ல முடியுமா? 

எழுத்தாளர் ஜெயகாந்தனின் இந்தக் கூற்றை ஆயிரம் தடவை சொல்லிவிட்டேன். இன்னொருமுறையும் சொல்கிறேன்:

‘என் கதைக்குள் நான் சொல்லாத எதையும் கதைக்கு வெளியே நான் சொல்லிவிட இயலாது.’

இச்சா நாவலில் வலிந்து சில விஷயங்கள் திணிக்கப்பட்டாதாக உணர்கிறேன். முக்கியமாக பேய்களை பற்றியும் பாம்புகளை பற்றி வரும் சில பத்திகளும் அதாவது, நாவலில் வலிந்து எழுதப்பட்ட மாய யதார்த்தவாத பகுதிகள். இவற்றை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

நாவல் நிகழும் களம் மற்றும் மக்கள் சார்ந்தே பேய்களும் பாம்புகளும் மாந்திரீகமும் அங்கே வந்து புகுந்துகொண்டன. நாவலின் முற்பகுதி நிகழும் இலங்கையின் கிழக்குப் பகுதி மாந்திரீகத்திற்குப் பேர்போனது. பழந் தமிழ், பாடும் மீன்கள், சலதேவதைகள், நாக தம்பிரான்கள், கண்ணகி அம்மன் வழிபாடு, கூத்து, நாட்டார் பாடல்கள் எனத் தனித்தன்மை வாய்ந்த நிலமது. 

ஷோபாசக்தியின் மற்ற நாவல்களை விட இந்த நாவலில் விடுதலைப் புலிகள் மீது  குறைவான விமர்சனம் வைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட நாவல் சரியான மையத்தில் பயணம் செய்கிறது. இதை திட்டமிட்டு எழுதினீர்களா? 

‘ம்’ நாவலில் கூட ஒரேயொரு அத்தியாயத்தைத் தவிர புலிகள் குறித்த பேச்சே இருக்காதே.  விமர்சனத்தைத் திட்டமிடாமல் கதையைத்தான் திட்டமிடுகிறேன். இலக்கியத்தில் எனக்குக் கதைதான் முக்கியம். ஒட்டுமொத்தக் கதை வாசகர்களுக்கு அளிக்கும் சித்திரம்தான் என் அரசியல் விமர்சனமே தவிர, வேண்டுமென்றே வலித்து கதையில் ஆங்காங்கே விமர்சனக் கத்திகளைச் செருகி ஒருபோதும் கதையை அலங்கோலம் செய்யேன். அதேபோன்று, அந்தக் கதை நிகழும் போக்கின் குறுக்கே கோத்தபாய வந்தாலும் சரி புலிகள் வந்தாலும் சரி அவர்களை வீழ்த்திவிட்டுச் செல்லவும் தயங்குவதில்லை. 

கேப்டன் ஆலாவின் ஜெயில் அனுபவங்கள், வேதனைகள், ரணங்கள் ஷோபாசக்தியின் அனுபவங்கள் என்றே மனதில் தோன்றுகிறது?  இன்று திருப்பி பார்க்கையில் ஷோபாசக்தி அதை பற்றி நினைக்க விரும்புகிறாரா அல்லது மறக்க விரும்புகிறாரா? 

அதையெல்லாம் எப்படி மறக்க! நான் சாகும்வரை அந்தத் துர்நினைவுகள் என்னுடனேயே இருக்கும். ஆனால் நான் போரின் நடுவிலேயே தப்பியோடிப் புலம் பெயர்ந்துவிட்டேன். அதற்குப் பின்பு இலங்கையில் நிகழ்ந்தவை என் கற்பனைக்குக் கூட எட்டாத கொடுமைகள். நான் நாவலில் சுட்டிய மேற்கொள் போல, உயிர் பிழைத்த நாங்கள் அரைகுறை சாட்சியங்கள்தான். ஆழப் புதைக்கப்பட்டவர்களே முழுமையான சாட்சியங்கள்.

தஸ்தயேவ்ஸ்கி வரிகளும், பைபிள் வரிகளும், சிங்கள செவ்வியில் வரிகள் இச்சா நாவலில் எல்லாம் இடங்களிலும் வருகிறது இது ஷோபாசக்திக்கு இருக்கும் பரந்த வாசிப்பு அனுபவங்களை காட்டுகிறது.? இப்போதும் யாரையெல்லாம் வாசிக்கிறீர்கள்? எப்படிப்பட்ட படைப்புகளை வாசிக்கிறீர்கள்? 

எனக்குத் தமிழ் மொழியில் மட்டுமே வாசிக்கத் தெரியும். இப்போது தமிழ் நூல்களை வாசிப்பதும் ஒரு ரிஸ்க்கான வேலையாகிவிட்டது. சில வருடங்களிற்கு முன்புவரையும் இலக்கியவாதிகளுக்கும் வாசகர்களிற்கும் பதிப்பகங்களுக்கும் எது இலக்கியம் எது இலக்கியமில்லை என்பதில் குழப்பம் இருந்தாலும் எது போலி எழுத்து என்பதில் எந்தக் குழப்பமும் முத்தரப்பிலும் இருந்ததில்லை. அப்போது சுஜாதாவுக்கும்  வாஸந்திக்கும் பாலகுமாரனுக்கும் இலக்கியவெளியில் இடமே கிடையாது.

நமக்கு முந்தைய தலைமுறை இலக்கியவாதிகளிடமும் இலக்கிய விமர்சகர்களிடமும் ஒரு பண்பிருந்தது. தமக்குப் பிடிக்காத ஓர் இலக்கியவாதி எழுதிய சிறந்த இலக்கிய நூலை அவர்கள் பகையுணர்ச்சியால் அநீதியான முறையில் நிராகரிக்கக்கூடும். ஆனால் தமது நண்பர்களோ சகாக்களோ எழுதிய ஒரு மோசமான நூலை ஆகச் சிறந்த இலக்கியம் என அவர்கள் எழுதவேமாட்டார்கள். 

ஆனால் இப்போது வேற லெவல். வெறும் குப்பை எழுத்துகளை வெளியிடும் பதிப்பாளர்களும் குப்பையைக் கொட்டியவரின் சகாக்களான இலக்கியவாதிகளும் அவற்றை ‘உன்னத இலக்கியம்’ ‘உலக மகா காவியம்’ என்றெல்லாம் சொல்லிவிடுகிறார்கள். நாமும் நம்பி புத்தகத்தை வாங்கி ஏமாந்துவிடுகிறோம். எனவே மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருக்கிறது. புத்தக சந்தைக்குள் நடக்கும்போது, கண்ணிவெடி நிலத்தில் நடப்பதுபோன்ற கவனத்துடன் நடக்க வேண்டியிருக்கிறது. 

இந்த விஷப் பரீட்சைக்கு அப்பால், சிறுபத்திரிகைகள் வழியே உருவாகி வந்த எல்லா எழுத்தாளர்களையும் மொழிபெயர்ப்பு நாவல்களையும் தேடித் தேடிப்  படித்துவிடுகிறேன். 

இச்சா’ போன்ற ஒரு நாவலை எழுதி முடித்தபின்பு உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது.?அடுத்த நாவல் பற்றி எண்ணம் மனதில் வந்திருக்கிறதா?

என் மனதில் எப்போதுமே குறைந்தது மூன்று நாவல்கள் ஏறக்குறைய முழு வடிவத்துடனிருக்கும். இப்போதுமுள்ளன. அவை எழுத்தாக மாறும் போதுதான் மனதிலிருந்த நாவல் வடிவத்தின் இலக்கிய யோக்கியதையும் திறனும் தெரியவரும். எனவே அடுத்து எதை எழுதுவது என்ற பதற்றம்தான் இப்போது மனதிலிருக்கிறது. 


உரையாடியவர் : க.விக்னேஷ்வரன்

 

http://kanali.in/interview-with-shoba-sakthi/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஷோபா சக்தியின் “ இச்சா “ – நாவல்

Posted on 25/11/2019

ichchaa_frontimage_472.jpg?w=198&h=300

நடேசன் 

நல்ல நாவலைப்படிக்கும்போது நமக்குள் ஒரு உருமாற்றம் (Metamorphosis) நடக்கிறது என்பார்கள் . அப்படியான ஒரு மாற்றத்தை சமீபத்தில் தோப்பில் முகம்மது மீரானது சாய்வு நாற்காலியையும் ஷோபா சக்தியின் இச்சா நாவலையும் வாசித்தபோது உணர்ந்தேன். 

இந்த உருமாற்றம் மனதில் நடக்கும் . 

எப்படி புரியவைக்கலாம்?

நகரவீதிகளில் நடந்து கொண்டு போகும்போது திடீரென ஒரு பெரிய காட்டுக்குள் இருக்கிறீர்கள் என்றால் அப்பொழுது உங்களது மனதில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்திருக்கிறீர்களா? அதை அனுபவித்திருக்கிறீர்களா?

அதுபோலவே . 

கிட்டத்தட்ட 18 மாதங்கள் முன்பு ஷோபாசக்தியிடமிருந்து குறும்செய்தி வந்தது

“அண்ணன் வணக்கம்.
உங்களது ‘தற்கொலைப் போராளி’ கதையில், வெள்ளைக்காரர் இருந்ததால் போராளியை சுவரோடு மோதி வெடிக்க சொன்னது உண்மையில் நடந்ததா அல்லது நீங்கள் கற்பனையில் உருவாக்கிய சம்பவமா?
அன்புடன்
ஷோபா”

நான் பதிலுக்கு தொலைபேசியில் அந்த சம்பவத்தைப் பற்றிப் பேசினேன். மலேசியன் ஏர்லைன் 370 என்ற சிறுகதைத் தொகுப்பில் வந்த சிறுகதை .

பின்பு 6 மாதங்கள் முன்பாக மீண்டும் ஒரு செய்தி வந்தது.

“ வணக்கம் அண்ணன்,
நான் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் நாவலில் உங்களது ‘தற்கொலைப் போராளி’ கதையிலிருந்து ஒரு சம்பவத்தை எடுத்து என் கோணத்தில் அணுகி ஒரு அத்தியாயம் எழுதப்போகிறேன் இதுபற்றி முன்னொருமுறை உங்களோடு நான் தொலைபேசியில் உரையாடியது உங்கள் ஞாபகத்திலிருக்கும். நாவலின் கடைசிப் பக்கத்தில் ”நொயல் நடேசனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவருடைய கதையொன்றிலிருந்து என் நாவலின் ஒருஅத்தியாயத்தின் முடிச்சவிழ்க்க வழி கிடைக்கப்பெற்றேன்” எனக் குறிப்பிடுவேன். தயவுடன் உங்கள் அனுமதி தேவை.
அன்புடன்
ஷோபா” 

எனது சிறுகதையின் கரு ஷோபாசக்தியின் கையால் நாவலின் பகுதியாக வருவது மகிழ்ச்சியாக இருந்தது . தமிழ் இலக்கியவாதிகள் உப்புக் குறைந்த உணவைத் தின்ற கோழிகளாக ஒருவருக்கொருவர் கொத்தி குருதியில் உள்ள உப்பை ருசி பார்க்கும் தமிழ் இலக்கியப் பரப்பில் என்னிடம் அனுமதி கேட்டது மிகவும் நிறைவாக இருந்தது.

இச்சா நாவல் எனது கையில் கிடைத்தது படித்தேன். 

ஒரு சாதாரண பொழுது போக்கு நாவலுக்கும் இலக்கிய நாவலுக்கும் என்ன வித்தியாசம் என்றால், இலக்கிய நாவல் பாத்திரத்தின் குணாதிசயங்களால் பின்னப்படும். அதேவேளையில் பொழுதுபோக்கு நாவல்கள் சம்பவங்களால் தொடரும்.

பல ஈழத்துத் தமிழ் போர் எழுத்தாளர்கள் விடுதலைப் புலிப்பிரபாகரன் உருவாக்கிய சம்பவங்களை ஏணிக் கயிறாக வைத்து இன உணர்வுடன் தொங்குவார்கள் அல்லது சண்டையை எம்ஜி ஆர் ரஜனிகாந்தின் வழியாக மட்டும் பார்த்த இந்தியத் தமிழர்களுக்காக எழுதுவார்கள். 

இவர்களது நாவல்களில் வரும் பாத்திரங்கள் நமது மனதில் நிற்காது . சம்பவங்கள் எமக்குப் புதிதாக இராது . ஆங்கிலத்தில் இக்பால் அத்தாஸ் மற்றும் டி பி எஸ் ஜெயராஜ் இதைவிட அழகாக எழுதியிருப்பார்கள். பாத்திரங்களை உருவாக்கி அந்தப்பாத்திரங்களது அக உணர்வுகளுக்கும் புறச்செயலுக்கும் என்னகாரணமென எழுதுவது நாவலாசிரியனது பொறுப்பு . இது நான் சொல்லவில்லை – ஆங்கில நாவலாசிரியர் இயன் பொஸ்டரின் (A Passage to India) வார்த்தை . 

தென் கிழக்கிலங்கையின் அம்பாறை பகுதியில் அப்பாவியான இளம் சிறுமியைப் பாத்திரமாக உருவாக்கி இறுதியில் குழந்தையைப் பெற்றுத் தாயாக, புலம்பெயர்ந்த கணவனால் வஞ்சிக்கப்பட்டுகிறாள். துருவத்திலும், பால்டிக் கடலுக்கும் இடையில் அமைந்திருக்கும் ஐரோப்பிய நாடொன்றில் அவள் மரணிக்கும்வரை, அவளது புறச் செயல்களையும் அகச் சிந்தனைகளையும் கொண்டது இந்த நாவல்.

நாவலைத் தொடர்ந்து படிப்பதற்கு ஷோபா சக்தியின் மொழி வழி நடத்துகிறது . சில இடங்களில் அந்த மொழி இதயத்தில் சுருக்கென ஊசி குத்துவதுபோல் இருந்தாலும், அந்த இருளான இடங்களை இனங்காட்ட உதவுகிறது.

இந்த நாவல் இலங்கை அரசினது மற்றைய குடியேற்றங்களில் உள்ள ஊர்காவல் படையினதும் செயல்களை வெளிக்கொணர்வதுடன் நமது சமூகத்தில் இளம்பெண்களை வன்முறைக்குட்படுத்தும் விடயங்கள் வருகிறது. 

நமது சமூகத்தில் உள்ள வன்முறை நாம் பேசவிரும்பாத விடயங்கள். எமது அழுக்கை சுரண்டிக்காட்ட நாம் விரும்புவோமா? என் மனதில் உறுத்தும் விடயம் இது: பாலியல் வன்முறை எங்கும் உள்ளது. காலம் காலமாக நடக்கிறது. ஆனால் எமது சமூகங்களில் மட்டுமே பாவிக்கப்படும் வன்முறையைப் புரிந்து கொள்ளாத அப்பாவிகளாக அந்தச் சிறுமிகள் இருப்பது முக்கியமான விடயம்.
இப்படியான ஒரு நிலை 21 ஆம் ஆண்டிலும் நீடிக்கிறது 

சாதி, பெண்ணடிமைத்தனம் போன்றவை, மனிதர்கள் சகமனிதனின்மேல் பாவிக்கப்படும் வன்முறைகள். ஆனால் அந்த வன்முறைகளை அவற்றால் பாதிக்கப்படுபவர்களே புரிந்து விடாமல் பாரம்பரியம், கலாச்சாரம், மதம் என பூப்போட்டு தைத்த தலையணை உறைகளால் மூடிவைத்திருக்கும் வைத்திருக்கும் எமது முன்னோர் பாராட்டப்படவேண்டியவர்கள்! 

இந்த நாவலில் சிங்களவர்கள் எல்லோரும் குருதியை உறிஞ்சுபவர்கள் தமிழர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்னும் தன்மையற்று வன்முறையை பொதுவாக வைக்கிறது 

ஆனால் ஷோபாசக்தியின் இச்சாவில் வெளிநாட்டில் வாழும் தமிழர்களைக் குறிப்பாக ஊடகம் நடத்துபவர்களை அம்மணமாக்கி இடுப்பில் ஒரு கிளைமோர் குண்டு வைக்கப்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் அவுஸ்திரேலியாவில் தமிழ் வானொலிகளில் இப்படியானவர்கள் இருக்கிறார்கள் . கதை ஐரோப்பாவில் நடப்பதால் அங்குள்ளவர்களை நோக்கியே குறியிருக்கிறது .

நாவல்களது நோக்கம் சமூக சீர்திருத்தம் செய்வதல்ல, என்ற போதிலும் இந்த நாவல் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் தமிழகத்தவருக்கும் மற்றும் எமது அரசியல்வாதிகளுக்கும் பாடத்தை உணர்த்துகிறது. இயக்கத்திலிருந்த போராளிகள் தசையும் இரத்தமும் கொண்டதுடன் அவர்களின் உணர்வுகள் பாசம் ஆசை என்பன எம்மைப் போன்றது. போர் முடிந்து பத்து வருடங்களாகியும் இவர்களது பாதிப்புகளை பலர் உணர்வதில்லை . ஆனால், ஒவ்வொரு வருடமும் கூச்சல் போடுவது மாத்திரம் நிற்பதில்லை 

2010 இல் நடந்த ஒருவிடயம் – அக்காலத்தில் புனருத்தாரண வேலைகளின் ஆணையாளர் ஒருவர் ( சிங்கள இராணுவ பிரிகேடியர்) என்னிடம் முன்னாள் போராளிகளைப் பாடசாலைகளில் இணைத்து படிக்கவைப்பதற்கு ஏனைய பிள்ளைகளின் பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள் . அதனால் அவர்களுக்கு வெளியே ரியூசன் வகுப்புகளை நடத்துவதற்கு ஏதும் ஒழுங்குகள் செய்வதற்கு ஏதேனும் வழிகளில் உதவமுடியுமா.? ” எனக்கேட்டார். 

எப்படியிருக்கிறது எமது சமூக நிலைமை?! 

காஃவ்கா சொல்லியது போல் நல்ல புத்தகங்கள் எமது மனதில் இறுகிய பனியாக உறைந்திருக்கும் . அறியாமையை பிளக்க உதவும் . 

Franz Kafka – A book must be the axe for the frozen sea inside us

 

https://noelnadesan.com/2019/11/25/ஷோபா-சக்தியின்-இச்சா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இச்சா

Posted by: sudumanal on: December 1, 2019

iccha

நாவலின் முடிவும் தொடக்கமும் ஒன்றோடொன்று பிணைந்து கொண்டு ஆலாவின் வாழ்வை வட்டமாக, நாவலின் வடிவமாக வரைகிறது. இந்த வட்டத்துள் ஆலாவின் வாழ்வு சிக்கிச் சுழல்கிறது. நூலாசிரியரின் மொழியாளுமையும் படிமங்களும் வாசகரை இந்த வட்டச் சுழியுள் உள்ளிழுத்துவிடுகிறது. இந்தப் போரானது எப்படி ஒரு விளம்புநிலை மனிதரை வந்தடைகிறது என்பதையும், அது அந்த மனிதர் சார்ந்து மற்றவர்களையும் உள்ளிழுத்து துன்பப்படுத்துகிறது என்பதையும் நாவல் பேசுகிறது.

 

1989 இல் பிறந்த வெள்ளிப்பாவை என்ற கிராமப்புறச் சிறுமியானவள் ஆலா என்ற போராளியாகி, பின் தற்கொலைப் போராளியாக மாறுகிறாள். பின் சிறைசெல்ல நேர்கிறது. அவள் அனுபவிக்கிற அந்த நரக வாழ்க்கையை அவள் சிறைக் குறிப்புகளாக ஒவ்வொரு நாளும் சங்கேத மொழியில் எழுதுகிறாள். இந்த ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய ஏப்ரல் ஈஸ்ரர் குண்டுவெடிப்பில் அந்த முன்னாள் சிறை பொறுப்பதிகாரி இறந்துபோகிறாள். இதற்கு முதல் அவள் பாரிஸ் வந்தபோது “இச்சா” எழுத்தாளரைச் சந்தித்து அந்த குறிப்புகளை ஒப்படைக்கிறார். அதன் சங்கேத சொற்களை உடைத்து அதை தொகுப்பாக்கி வெளியிட்டிருப்பதாக நாவலாசிரியர் ஒரு போர்வையை போர்த்து இந்த நாவலை உருவாக்குகிறார்.

நாவலின் வடிவமும் சோபாசக்தியின் எழுத்தாளுமையும் இந்த நூலில் இன்னொரு பரிணாமத்துக்கு மாறியிருக்கிறது. சோகத்தை கண்ணீராலும், பயத்தை நடுக்கத்தாலும் என வெளிப்பாடுகளை வெவ்வேறு வர்ணிப்புகளில் பலரும் மாற்றிமாற்றி முன்வைத்து மினக்கெடும் ஒரு எழுத்துப் போக்கை விட்டெறிந்து, அதன் ஆன்மாவுக்குள்  ஊடுருவி பேசும் மொழி பல இடங்களில் திரும்பத் திரும்ப வாசித்து பரவசமடைய வைக்கிறது.

//நான் தலைசுற்றிக் குப்புற விழுந்தேன். எனது உடல் தம்பியின் உடலுக்கு மேலால் கிளம்பிப் போவதை உணர்ந்தேன். வாயில் முட்டிய மண்ணை விழுங்கினேன்.//

// தம்பியின் தலையை கழுத்தோடு சேர்த்து பெத்தப்பாதான் பொருத்தித் தைத்தார். பொருத்தப்பட்ட இடத்தை கற்பூரத்தைத் தூள் செய்து பூசி அடைத்தார். எனக்கு இப்போதும் தம்பியை நினைத்தால் கற்பூரமே உறைக்கிறது. எழுதிக்கொண்டிருக்கும் இந்தத் தாளில் இதோ கற்பூரம் நாறுகிறது.//

ஆலா என்ற பெண் போராளியை பெண்நிலையில் நின்று எழுதும் கடுமையான முயற்சியை எழுத்தாளர் மேற்கொண்டிருக்கிறார் என சொல்ல முடியும். ஆங்காங்கு ஆண்மொழி வெளிப்படவே செய்கிறது என்ற போதும், இந்த முயற்சி தூக்கலாகவே வெளிப்பட்டிருக்கிறது. அத்தோடு அம்பாறையை பின்புலமாகக் கொண்ட பேச்சுமொழியை வெளிக்கொணர்வதில் முயன்றிருக்கிறார். அதில் அவர் எந்தளவு வெற்றிபெற்றிருக்கிறார் என்பதை அந்த பிரதேச மக்களின் மொழி பரிச்சயம் உள்ளவர்கள்தான் கூறவேண்டும்.

வெள்ளிப்பாவையின் (ஆலாவின்) அறிமுகமானது அவள் சார்ந்த கிராமிய வாழ்வு, அதன் சமூக பண்பாட்டு அம்சங்கள், சிங்கள மக்களுக்கிடையிலான வாழ்வும் ஊடாட்டமும் என ஒரு வரலாற்றுப் பின்னணி அல்லது புனைவோடு
நகர்கிறது.  வாசிப்பில் ஒரு வேகத்தை எட்டமுடியாத பரப்பாக எனக்கு அது இருந்தது. அடுத்த பரப்பாக அவள் போராளியாக மாறுவது என தொடர்ந்து, சிறை அவளை இல்லாமலாக்குகிற அந்தக் கொடிய கட்டம் வரை வருகிறது. மிக மன எழுச்சியான வாசிப்பை இப் பரப்பு திறந்துவிட்டது. மொழிக் கையாள்கையானது ஆலாவின் ஆன்மாவுக்குள் ஊடுருவி வெளிப்படுத்தும் முறை சோபாசக்தியை தவிர்க்க முடியாத ஓர் எழுத்தாளனாக உறுதிப்படுத்திவிடுகிறது.

ஓர் எழுத்தாளர் என்பவர் மிகப் பெரிய வாசகராக இருப்பது அவசியம். தனக்கு வசதியான அல்லது தனது அரசியலுக்கு ஒத்துப்போகிற எழுத்துகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாசிப்பது என்ற எல்லையை உடைத்தெறிய வேண்டும். பொதுப்புத்தியின் ஜனரஞ்சக கொசுறுத் தத்துவங்களை நாவலில் பொருத்தி எழுதுகிற எழுத்துகள் சலிப்புத் தருவன. அந்த கொசுறுகள் கேள்விகேட்கப்பட வேண்டியவை என்பதை உணராத எழுத்தாளர்கள் நமக்கு வாய்திருக்கிறார்கள். அதற்கு கோட்பாட்டுப் பலமின்மை முக்கிய காரணம். அத்தோடு மேற்கோள்களின் மூலத்தை அறியாமல் தனது அரசியல் பரப்புக்குள் தாம் கொண்டாடுபவர்கள்தான் அந்த மேற்கோள்களை செப்பியதாக நம்பி எழுதுகிற அசட்டுத் துணிவும்கூட வெளிப்பட்டுவிடுகிறது.

இந்த பலவீனங்களைத் தாண்டிய எழுத்துகள் சோபாசக்தியினுடையது. பரந்த வாசிப்பைக் கொண்டிருப்பவர் அவர். இலக்கியம் மட்டுமல்ல,  ஓரளவு அரசியல் கோட்பாடுகள் தத்துவங்கள் குறித்தான வாசிப்பும் அவரது இந்த எழுத்தாளுமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. நுண்மையான வாசிப்பை வாசகரிடம் கோருகிறது.

ஒரு பெண் பாத்திரத்தை தேர்வுசெய்து அவளை ஆளுமை மிக்கவளாகவும், தனித்து முடிவு எடுக்கக்கூடியவளாகவும், உடல்வலு கொண்டவளாகவும், அதேநேரம் மனித இயல்பின் பாலியல் வேட்கையை அவளிடமிருந்து ஒளித்து ஒரு ‘வகைமாதிரிப் பெண்ணாக’ அல்லது ஆணாதிக்க மனோபாவத்தின் பாலியல் பண்டமாக இல்லாமல் எழுத்தாளர் கையாண்டிருப்பது குறித்துக்கொள்ள வேண்டியது.

தனது உடலை அவள் வித்துடலாக புனையவில்லை. அர்த்தமுள்ள ஒரு ‘வீரச் சாவுக்கான’ உடலாக பார்க்கிறாள். (இந்த வீரச் சாவு என்பது ஒன்றும் இயக்கம் கடந்த சிந்தனைக்கு வெளியில் இல்லை). இரு அமைச்சர்களை அழித்தொழிக்கும் தற்கொலைத் தாக்குதலின் அந்த இறுதிக் கணத்தில் தலைமையால் எடுக்கப்படுகிற முடிவானது அவளை பின்வாங்கச் சொல்கிறது. அந்த ‘வீரச் சாவு’ (அழித்தொழிப்பு) தவிர்க்கப்பட்டு, அவள் இப்போ அந்தப் பாலத்தின் வெறும் மதிலோடு மோதும்படி கட்டளையிடப்படுகிறாள். அவள் அதைச் செய்தாளில்லை.

வாழ்தல் அல்லது இருப்பு என்பது தன்னைச் சூழவுள்ள நிலைமைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைப்பதில் இருக்கும் பக்குவத்துடன் சம்பந்தப்பட்டது. ஆளுமையுடன் சம்பந்தப் பட்டது. அது சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தனது கிராமத்தில் வெறும் நான்கு தமிழ்க் குடும்பத்துக்குள் ஒருவராக இருந்தபோதும் சரி, (சிங்கள) ஊர்வகாவல் படையின் அட்டகாசத்துள் வாழ்ந்தபோதும் சரி, இயக்கத்தில் இருக்கும்போதும் சரி, சிறையில் இருக்கும்போதும் சரி, புகலிட (புனைவு) நாட்டில் அரசியல் தஞ்சம் கோரி குடும்ப வாழ்வு வாழ்ந்த போதும் சரி ஆலா தனது இருத்தலுக்காக ஆளுமையுடன் போராடுகிறாள்.

வேர்கள் நாவலில் வரும் குன்ரா கின்ரேயின் பாத்திரம் போல தனது இயல்பான செழுமையான பண்பாட்டு வாழ்வுக்குள் வாழ்ந்து துள்ளித் திரிந்த சிறுமியின் வாழ்வு எதிர்பாராத திருப்பங்களுக்கும் திகிலுக்கும் உள்ளாகிறது. வெள்ளையர்களினால் அடிமையாகப் பிடித்துச் செல்லப்பட்டதோடு முறித்தெறியப்பட்ட கின்ரேயின் இயல்பான வாழ்வுபோல இலங்கையை ஆட்டிப்படைத்த அரசியல் கொந்தளிப்புகளால் இச் சிறுமியின் வாழ்வு முறித்தெறியப்படுகிறது.

நூலின் ஆரம்பம் ஒரு புனைவு மொழியை “உரோவன்” என்ற பெயரில் அறிமுகமாக்கி, (இச்சா உட்பட) சில சொற்களை புனைந்து, அதற்கு தமிழ் அர்த்தத்தையும் புனைந்து, இதெல்லாம் தெரியாவிட்டால் நாவலை விளங்கிக்கொள்ள முடியாது என்ற தோரணையில் வாசகருக்கு ஒரு போலி அச்சத்தை உருவாக்குகிறது. நாவலை வாசித்து முடிக்கிறபோது -பொய் மீதான- இந்த அச்சம் செத்துப்போய்விடுகிறது. ஓரிடத்தில் ‘உரோவன்’ வசனத் தொகுதியே ‘புனையப்படுகிறது’. அவை தமிழ்ப் படுத்தவே தேவையில்லை என்ற நிலையானது அதை புனைவாக அன்றி தேவையற்ற பொய்யாக அறிவிக்கிறது. BOX நாவலிலும் வன்னிக் காட்டுக்குள் உள்ள மூலிகைச் செடிகள் என சுமார் 30 க்கு மேற்பட்ட பெயர்கள் ‘புனையப்பட்டன’.

கவிதைக்குப் பொய் அழகு என கவிஞர் வைரமுத்து ஒருமுறை சொன்னார். பொய் என்பதையும் இலக்கியத்தில் புனைவு என்பதையும் போட்டுக் குழப்புகிற இந்த நிலை பல எழுத்தாளர்களிடமும் இருக்கிறது. சோபாசக்தியும் அதற்கு விதிவிலக்கில்லை என்பதை உரோவன் சொல்லிச் செல்கிறது.

முடிவில் தனது புனைவுலகத்துள்ளிருந்து நூலாசிரியர் வெளிவந்து தனது நிஜ நண்பரை சந்தோசப்படுத்தும் சோபாசக்தியாக எந்த இலக்கிய அழகியல் கதவால் வந்தார் என்பதை யோசித்தபோது கொஞ்சம் துருத்தலாக இருந்தது.

ஆலா ஊர்காவல் படையால் பிடிக்கப்பட்டு மரணத்தின் விளிம்புக்கு அழைத்துச் செல்லப்படும்போது எதிர்ப்பட்ட (புலிப்போராளிச்) சிறுவனின் பிஸ்ரல் அவளை மரணத்திலிருந்து விடுவிக்கிறது. புலிப் பெண் போராளியின் துவக்கு ஆலாவை பாலியல் ரீதியிலான குடும்ப வன்முறையிலிருந்து விடுவிக்கிறது. ஆயுதம் மீது அவளது காதலும் நம்பிக்கையும் நாட்டப்படுகிறது. போராளியாகிய பின் அந்த குறளியை (ஆயுதத்தை) அவள் தனது அங்கமாக உணர்கிறாள். தனது புகலிட (புனைவு) நாட்டில் அவளின் முடிவும் அந்தக் குறளியோடுதான் நிகழ்கிறது. ஒரு திரைப்படம் போல அந்த சாகசக் காட்சி நாவலின் ஓட்டத்தை விழுங்கிவிடுகிறது.

அவளது முடிவு அவ்வாறுதான் நடந்ததா அல்லது சிறையிலேயே நடந்ததா என வாசகர்கள் இப்போ தெரியத் தேவையில்லை. வாசியுங்கள்.

என்னைப் பொறுத்தவரை சிறையிலிருந்து அவள் பொதுமன்னிப்புப் பெற்று பின் புகலிட நாட்டுக்கு வந்து வாழ்வது வரையான எழுத்துலகம் தனிச் சிறுகதையாக நாவலின் பின்னிணைப்பாக தொங்கிக்கொண்டிருக்கிறது என்பேன். ஒரு புத்தியுள்ள வாசகர் நாவலை ஆலாவின் சிறைவாழ்வோடு மூடிவைத்துவிடுவார் என எழுத்தாளர் எழுதத் தவறியிருக்கலாம். ஆனால் நாவலை வாசித்து முடித்தபோது அதை நான் கண்டெடுத்தேன்.

– ரவி

 

https://sudumanal.com/2019/12/01/இச்சா/?fbclid=IwAR2iYcKz13-nvPhwfEFZ7GU7zuCtgURYcmznjQdkik60lj78CE7_UsomPGc#more-2990

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

…… இவ்வாறாக ‘இச்சா-’வுகளோடு தொடங்கும் ஒரு நாவலுக்கான அறிமுகமும்…….,

-அசுரா-

ietcha-10015281-550x550h.jpg
தரமான இலக்கியப் புனைவுகளில் எப்போதும் ஜதார்த்தத்தின் வலிமைகள் கண்காணா நிழலாக படர்ந்திருக்கும். மனித நேயம் என்பது கடவுளின் கிருபையினாலோ, அல்லது மரபு வழி தொடர்ச்சியினாலோ எம்மை வந்தடைவதல்ல. மனிதத் தன்மை, மனிதத் தன்மை அல்லாதது என நாம் எமக்குள் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கின்றோம். இவை வெறும் சொல்வழக்கல்ல. இவை பகுத்தாய்வுக்குரியது. நாமேதான் மனித நேயத்தையும், மனிதநேயமற்றதையும் உருவாக்கும் வல்லமை கொண்டவர்கள். நியாயத்தின் தத்துவ எல்லை என்பது மனிதத்தின் தேடலோடு தொடர்புகொண்டதல்ல. நியாயம் சட்டத்துக்கு வளைந்து கொடுப்பது. நாங்கள் மனிதர்கள், பிரக்ஞை பூர்வமானவர்கள். கற்பனை என்பது எமக்குள் நிகழாது போனால், எமக்கான சுய பிரக்ஞை அற்றவர்களாவோம். கற்பனை, சுயபிரக்ஞை எனும் இரண்டும் ஒன்றாக இணைந்தவை. கற்பனை எமக்குள் நிகழாது போனால் நாம் நிகழ்காலத்துள் சிறைப்பட்டவர்களாவோம். சிந்திப்பதற்கும் தகுதியற்றவர்களாவோம். மனிதநேயத் தோற்றுவாயின் ஆதிமூலமே கற்பனைதான். 

இவ்வாறாகவே கற்பனைப் புனைவு மிகுந்த இலக்கியமும், அதன் படைப்பாளுமைகளும், மனிதத்தை நோக்கி மனதநேயத்தை வாடிவிடாது துளிர்க்கவைக்கும் மழைத் துளிகளாக எம்மை நனைத்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்து இலக்கிய படைப்பாளிகளான சோ தர்மன். எஸ். ரா. ஜெயமோகன், ஜே. பிராசிஸ் கிருபா. இமயம் போன்றவர்கள் மனித நேயத்தை கண்டடையும் கற்பனையின் ஆழத்துக்குள் என்னை இழுத்துச் செல்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஆயினும் மேற்குறிப்பிட்ட எந்த படைப்பாளியையும் நான் நேரில் அறியாதவன், அறிமுகமாகாதவன். 

நான் பழகிய, பல்வேறு தருணங்களில் ஒன்றாக சமூக அரசியல் பணிகளிலும் இணைந்து பணியாற்றிய சோபாசக்தியினால் அண்மையில் வெளிவந்த ‘இச்சா’ நாவலுக்குள் நுழைந்த ஒரு கட்டியக்கார கலைஞனின் கூற்றாக கருதவேண்டியதே மேற்குறிப்பிட்ட இரண்டு பந்திகளும். சோபாசக்தி புனைவுத் தளத்தில் மிதமிஞ்சிய தாராளவாதி. கற்பனைச் சித்தரிப்பிலோ கறாரான-கடும் ‘சோசலிஸ்ட்’!

புனைவென்பது சோபாசக்தியின் பிறப்பின் இயல்போடு ஒட்டிப் பிறந்தது. இதை நான் பலதடைவை அரங்கங்களில் உரையாற்றும்போதும் நண்பர்களுடன் பேசும்போதும் நினைவுபடுத்தி வருபவன். சொந்த அனுபவங்களை புனைவு மொழிக்குள் இழுத்துக் ‘கட்டுவதற்கான’ பணிகளுக்கே படைப்பாளிகள் பல்வேறு சிரமங்களுக்குட்பட்டு வருவதை அறிவோம். தமது புனைவுத் தளத்திற்குரிய பிரதேசங்களையும், அதன் கதாபாத்திரங்களையும் நேரில் சென்று அறிந்து பழகி தகவல்களை சேகரிப்பது என பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் படைப்பாளிகள். ‘கொரில்லா’ தவிர்ந்த அவரது மூன்று நாவல்களும் எந்தவிதமான சொந்த அனுபவங்களுமற்று, பிறர் மூலமாக கேட்டறிந்து தனது ‘தாராளவாத’ புனைவுத்திறன்களால் எழுதப்பட்ட நாவல்களாகும். அதில் எனக்கு மிக வியப்பை தருவது ‘ம்’ நாவலும் ‘இச்சா’ நாவலும். 

எமக்கு தெரிந்த படைப்பாளி, எமக்கு தெரிந்த பிரதேசம். அங்கு வாழும் மக்கள். எமக்கு தெரிந்த அரசியல். அதிலும் எமக்கான சார்புநிலை, சார்புநிலையற்ற அரசியல். எனும் மன இறுக்கங்களுடன் புனைவிலக்கிய வாசிப்பை எதிர்கொள்வதில் நெருக்கடிகள் அதிகம். இவைகள் புனைவிலக்கிய வாசிப்பில் எமக்கு நிகழும் சிக்கலில் பிரதானமானது. இதனை இலக்கிய வாசிப்பின் மீதான ஒரு சவாலாகவும் கருதலாம்.

மேலும் இலக்கிய பிரதிகள் மீதான அக்கடமிக்கல் ஆய்வுமுறை எனும் ஒரு போக்கும் மதிக்கப்பட்டு வருகிறது! இவ்வாறான இலக்கிய ஆய்வுமுறை எனக்கு உவப்பானதாக அமைவதில்லை. வாசகர்களின் சுயபிரக்ஞை பூர்வமான கற்பனைக்கு இடையூறாக அமைந்துவிடக்கூடியது அக்கடமிக்கல் ஆய்முறை. தங்கள் அணுக்கத்துக்குரிய கல்வி-அறிதல்களாலும், தமக்கு ஏற்புடைய கொள்கைகள், கோட்பாடுகளோடுமான நெருக்கத்தை கண்டறியும் ஒரு ஆய்வுமுறையாகவே அக்கடமிக்கல் ஆய்வுமுறையை நான் அவதானிக்கின்றேன். தரமான ஒரு இலக்கியப்பிரதியானது ஒவ்வொரு வாசகர்களுக்கும் உள்ளார்ந்த ஆழ்மனச் சிறுகுகள் முளைத்து அங்கும் இங்குமாக பறந்து செல்ல வேண்டியது. பிரதிக்குள் மூழ்கியே நாம் முத்துக்களை சேகரிக்கவேண்டும். துரதிருஷ்டவசமாக எமது வாசிப்பின் பிரதானநோக்கமாக இருப்பது எமக்கான, எமது ‘முத்துக்களை’ (கருத்துக்கள்) பிரதிக்குள் தேடும் ஆவலாகவும், அதனூடாக படைப்பாளியை இனம்காண்பதுமே வாசிப்பின் நோக்கமாக கருதப்படுகிறது.

மேலும் ஒரு துயரத்தையும் குற்ற உணர்வையும் பகிர்ந்துகொண்டு ’இச்சா’ நாவல் குறித்து மேலதிகமாக பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். எமக்கு தெரிந்த எம்மோடு பழகிய சோபாசக்தியின் இந்த நாவலானது பாரிஸ் தெருவோரத்தில் வைத்து கையளிக்கப்பட்டு அறிமுகமாகியிருக்கிறது. அந்நாவல் குறித்த எந்தவோரு பிரத்தியேகமான அறிமுகமும் வாசிப்பு விமர்சனமும் இல்லாது பாரிஸ் தெருவோரத்தில் நிகழ்ந்து முடிந்திருக்கிறது. நான் தேடிவாசிக்கும் அவலுள்ள ஒரு சிற்றறிவாளன். எனினும் இச்செயலானது பாரிசில் வாழ்ந்துவரும் இலக்கிய படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் கறைபடிந்த ஒரு அவமானமாகவே கருதுகின்றேன். முதலில் லண்டனிலும், பின்பு சுவிசிலும் ‘இச்சா’ நாவலின் அறிமுக விமர்சனங்களை ஏற்பாடு செய்த ஆர்வலர்களுக்கு எனது பாராட்டுக்கள். 

‘இச்சா’ ‘ஆலா’. இவை பிரதியின் பிரதான சொற்கள். இச்சொற்களுக்கான புரிதலை கண்டடைவதும் உள்வாங்குவதும் வாசகர்களின் கற்பனைத்திறனோடு பொருந்தக்கூடியது. இவைகளுக்கான புரிதல்களை நாம் கூகிளில் தேடிக்கண்டடைவதாக இருந்தால்!! கலை இலக்கிய அழகியலின் மதிப்பு என்ன ஆவது!!

‘’இந்த திறக்கப்படாத அன்பின் சிப்பியைத் திறக்கும் திறவுகோல் உங்களிடம் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆழ்கடலின் புதிரும், அமைதியும் வசீகரமும் சத்தமும் மர்மமும் இருளும் அலைவீச்சும் சிப்பியை ஒன்றும் செய்துவிட முடியாது, ஏனெனில் சிப்பியின் உயிர்மூச்சு முத்து. அதன் வளர்ச்சி. இந்த சிப்பிக்குள்தான் எங்கள் தாத்தா இருக்கிறார். அவரை உயிர்ப்பிக்க வேண்டும், உலகமக்களிடம் காட்ட வேண்டும். அது ஒரு உன்னத படைப்பாளியினால், சிருஷ்டி கர்த்தாவால் மட்டுமே முடியும் என்று நம்புகின்றேன், தயவு செய்து மறுத்துவிடாதீர்கள்.‘’என ஒரு டையறியை தேவதச்சன் எனும் ஒரு கதாபாத்திரத்திடம் வேறொரு கதா பாத்திரம் கையளிக்கும் அதில் திறக்கப்படாத அன்பின் சிப்பி என எழுதப்பட்டிருக்கும். இந்த அன்பின் சிப்பியை உங்களைப்போன்ற ஒரு இலக்கிய படைப்பாளியால்தன் திறக்க முடியும் தயவு செய்து மறுத்துவிடாதீர்கள் என அப்பாத்திரம் தேவதச்சனிடம் வேண்டிக்கொள்ளும். சோ தர்மனின் ‘அன்பின் சிப்பி’ எனும் சிறுகதையில் வரும் சம்பவம் இவை. இச்சா நாவலில்வரும் மர்லின் டேமியிடமிருந்து கதைசொல்லி வாங்கிய ‘பொன்வண்டை’ (பென்ரைவர்) சோ தர்மனின் ‘அன்பின் சிப்பி’ எனும் டையரியோடு நினைவுபடுத்தியது. 

வெள்ளிப்பாவை எனும் ஆலா ஒரு அவலக் குறியீடு. தன்முன்னால் ஒளிர்வது தனது நம்பிக்கை, எதிர்பார்ப்பு இலட்சியங்களுக்கு வழிகாட்டும் சூரியனின் ஒளி என நம்பி நெருப்பினுள் வீழ்ந்து கருகிப்போன விட்டில் பூச்சிகளில் அதுவும் ஒன்று. சிங்கள-தமிழ் அதிகார இனவாத மையங்களின் அபிலாசைகளுக்கும் விரோதங்களுக்கும் இரையாகிப்போன ஒரு குஞ்சுப் பறவை. இவ்வாறான சம்பவங்களை ஒரு வரலாறாக வாசிக்கும் போதும் சுயசரிதையாக வாசிக்கும் போது கிடைக்காத பன்முகப் பரவசத்தை இலக்கியப் புனைவத்திறனூடாகவே தரிசிக்கமுடியும். அதனை அவரவர் தமது உள்ளார்ந்த கற்பனைத்திறனூடாக பல்வேறு நிலைகளில் தரிசிக்க முடியும். இவ்வாறு வாசக மனங்களில் தோன்றும் தரிசனங்களை தனது பிரதிகளில் ஊன்றிவிட்டு மறைந்துவிடக்கூடியவன் தேர்ந்த படைப்பாளி. சோபாசக்தியும் இதில் சளைத்தவர் அல்ல. ஆனால் ‘இச்சா’ வில் ஏன் என்னால் படைப்பாளியை ‘சாகடிக்க’ முடியவில்லை! 

வாழ்வின் அனுபவங்களில் எவ்வித முதிர்ச்சியும் இல்லாத இவ்வாறான அபலைப் பெண்களின் மீதான ஒரு குறியீடாகவும் நாம் இச்சா எனும் சொல்லை உள்வாங்கும் சாத்தியமும் நிகழ்கிறது. இது வெறும் யுத்தத்தை நம்முன்னால் தோற்றுவிக்கும் ஒரு பிரதியல்ல. கதைசொல்லியின் ஆலா பறவையின் சிறகுகள் இரண்டிலும் ஒவ்வொரு கண்கள். நாம் இந்நாவலினூடாக பறந்து செல்லும்போது எமது சிறகுகளில் பல கண்கள் திறந்து கொள்வதை உணரமுடியும். சிங்கள-தமிழ் அரசியல் அதிகாரத்தின் இருப்பு. அதை எதிர்கொள்ளும் இரண்டு தரப்பு போராட்ட சக்திகளின் இனவாதப் போக்கு. சிங்கள கிராமத்து மக்களின் மனநிலை. அவர்களோடு இணைந்து வாழும் தமிழ் சமூக உறவுகளுக்கிடையிலான புரிதல்களும் வெறுப்புகளும். கிழக்கு மாகாணத்திலுள்ள இலுப்பங்கேணி வாழ் தமிழ் சமூகத்தின் கலை-வாழ்வியல்-கலாசார-பண்பாடுகள். ஒரு உருவகமான (வாமன்) யாழ்ப்பாணிய மனநிலை. யுத்தத்திற்குப் பின்பான புலிகளின் உயர்மட்ட தலைமைகளின் நிலைப்பாடுகள். ஐரோப்பிய வெள்ளை சமூகத்தில் நிலவும் நிறவாதம். இவைகள் அனைத்தையும் எமது வாசிப்பு மனச் சிறகுகளில் முளைத்த கண்களால் பார்த்து பறந்து பறந்து செல்லும்போது நினைவு மீழ்கிறது…., இந்த அனுபவங்கள் அனைத்தையும் எமக்குள் இறக்கிவைத்த இந்த ‘ஆலா’ எனும் ஒரு குஞ்சுப் பறவையே பனிபடர்ந்த மலை ஒன்றில் செத்துக் கிடப்பதாக.

பப்லோ பிக்காஸோ: ‘’ஜனங்கள் தம்முன்னே எதிர்ப்படும் ஒவ்வொன்றிலும் அர்த்தத்தைக் காண விழைவதே, நம் காலத்தின் ஆகப் பெரும் நோயாகும்‘’ 

எனும் வாக்கியத்தின் பின் வரும் சித்தரிப்புக்களே ஆலா பறவைக்கு நிகழ்ந்த துயரத்திற்கு நிகராக எனக்கும் நிகழ்ந்தது. உள்ளார்ந்த ஆழ்நிலை உணர்வுகளோடு சிறகடித்து பறந்த எனது கற்பனைச் சிறகும் இறுதியில் முறிந்த நிலையில் தரையில் வீழ்ந்து விட்டதாக உணருகின்றேன். இவ்வாறான கதைசொல்லியின் ஒரு ஒப்புதல் வாக்குமூலப் புனைவை கதைசொல்லியின் நிர்ப்பந்தப் புனைவாக கருதவேண்டியதற்காகவே பப்லோ பிக்காஸோவின் வாக்கியம் அமைந்திருப்பதாக கருதலாமா! என்றும் சிந்திக்க தோன்றுகிறது. 

வாசக மனக்கிளர்ச்சியின் பரவசத்தை தீண்டி அலைந்து மகிழ்வதை சாத்தியமாக்குவது, அழகியல் கற்பனைச் சித்தரிப்புக்களாகும். சோபசக்தியின் கதா பாத்திரங்களின் அகமன சித்திரிப்புக்கள் பெரும்பாலும் இரண்டு வரி மூன்று வரிகளுக்குள் அடங்கிவிடும். அதை உணர்ந்து கொண்டதனாலேயே கற்பனைச் சித்தரிப்பில் சோபாசக்தி கறாரான ‘சோசலிஸ்ட்’ என்றேன். நாவலின் பின்பகுதிகளும் மர்லின் டேமியிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆலா வின் குறிப்புகளிலிருந்தே புனைந்திருக்க வேண்டிய மர்மச் சித்தரிப்பாக அமைந்திருக்கக்கூடாதா என்று உணருகின்றேன். அதை சோபாசக்தி இரண்டு மூன்று வரிகளால் சாத்தியமாக்கக்கூடியவர். ஒய்த்தா மாமி வெள்ளிப்பாவையை சிங்கள கிராமத்தினூடாக அழைத்துச் செல்லும்போது முஸ்லிம்பெண்ணாக வெள்ளிப்பாவையை அலங்கரிக்கின்றார். புலிகளின் பிரதேசத்திற்கு வரும்போது அவதானமாக தமிழ் பெண்ணாக மாற்றுவதன் பின்னாலுள்ள அரசியல் எமக்கு உணரவைக்கப்படுகிறது. தமிழ் அடையாளம் சிங்கள பிரதேசத்தில் ஆபத்தாகவும், முஸ்லிம் அடையாளம் புலிகளின் பிரதேசத்தில் ஆபத்தானதாகவும் கருதக்கூடியதான அனுபவத்தையும் எமக்குத் தருகிறது. ‘காலை விடிந்தபோது, பரேமதாசாவின் படமிருந்த கற்பலகையின் கீழே சந்துல் சகோதரயாவின் நிர்வாண உடல் கிடந்தது. சகோதரயாவின் தலையை வெட்டி அவரது பாதங்களில் வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.’ இதில் எந்த ஜனநாயக விரோத அரசாக இருந்தாலும் அதன் இருப்பிற்கு அச்சுறுத்தல் என கருதுமாயின் இவ்வாறுதான் நடந்து கொள்ளும் என்பதான எமது அனுபவங்களும் இதனூடாக மேலெழுகின்றது. பதுமர் குடி கிராமத்தின் தமிழ் சமூகம் சிங்கள சமூகத்தோடு நெருக்கமான உறவாகக் கலந்திருந்தற்கான ‘சகோதரயா’ எனும் சொல்லின் அழுத்தம் எம் உணர்வுகளோடும் நெருங்குகிறது. ‘சுனாமி என்பது சிங்களப் பெயரா? எந்த அழிவு வந்தாலும் அது சிங்களவரால்தான் வரும் என நினைக்கக் கூடிய போராளி அவள்.’ இவ்வாறான வரிகளில் சிங்கள சமூகத்தின் மீதான இனவாத வெறுப்பு எவ்வாறு திணிக்கப்பட்டு உருவாகின்றார்கள் குழைந்தைப் போராளிகள் என்பதற்கான பொருளைக் கண்டடையும் சாத்தியமும் உள்ளது. நாவலின் பாத்திரங்களின் அகமனச் சித்தரிப்புக்களை இவ்வாறாகவே இரண்டு மூன்று வரிகளுக்குள் சிக்கனமாக நெரிக்கி வைப்பது சோபாசக்தியின் பாணி. நாவலின் பிரதான கதைசொல்லியின் ‘இறுதி வாக்குமூலத்’ தகவல்களையும் இரண்டொரு சித்தரிப்பு வரிகளாக புதைத்திருந்தால் வாசகர்களின் கற்பனை சிறகுகள் அவரவர் திசைகளில் பறப்பதற்கு உதவியாக இருந்திருக்குமா என்பது எனது தவிப்பாக உள்ளது. அவ்வாறு நிகழ்திருந்தால் படைப்பாளியை இந்நாவலிலும் என்னால் ‘சாகடிக்க’ முடிந்திருக்கும். 

விசாரனைக் கைதிகளையே இதுவரையில் விடுதலை செய்யாத சிங்களப் பேரினவாத அரசு கரும்புலியான ஆலாவை எப்படி விடுதலை செய்யும் சாத்தியமுள்ளது? இது ஒரு வகையில் சிங்களப் பேரினவாத அரசானது கரும்புலியான ஒருவரையே வடுதலைசெய்யும் அளவிற்கு ஒரு மனிதாபிமான அரசாக காட்டமுனையும் உள்குத்தாக இருக்காதா! என குறுக்கு மறுக்காக புனைவியலக்கியங்களை வாசிக்கும் அரசியல் கண்டுபிடிப்புள்ள மனங்களும் தமிழ் தேசியவாத வாசிப்பு மனங்களும் இந்நாவலை தடைசெய்யக்கோரும் பதாகைகள் எழுவதை தடுப்பதற்கான உத்தியா!! இவ்வாறான வாசிப்பு மனமுள்ளவர்களையும் தடவிச்செல்லும் உத்தியாகவா பப்லோ பிக்காஸோவின் வாக்கியங்களோடு நிறைவடைகிறது நாவலின் பின்பகுதி!! 

எனது புனைவிலக்கிய வாசிப்பின் சுய-பிரக்ஞை கற்பனைச் சிறகு பறறக்கும் சக்தியை இழந்த துயரத்தில் இவ்வாறு அபத்தமாகவும் சிந்திக்க தோன்றுகிறது.

இல்லை…, இதுவும் புனைவுப் பாதையினால் வழிகாட்டும் ஒரு ‘உத்திமுறை’ எனவும் சாதிக்கலாம்! எனது இலக்கிய புனைவிலக்கிய வாசிப்பின் மனமானது அழகியல் சித்தரிப்பு மிகுந்த மேகக் குவியல்களுக்குள்ளால் வரையறுக்கப்பட்ட திசைகளையும் கடந்து ஒரு சுதந்திர ‘ஆலா’ பறவையாக பறப்பதற்கே விரும்புகிறது. 

படைப்பாளி தனது கற்பனைக்குள் இழுத்துவந்து சேமித்துச் சேகரித்து ஒரு நாவலை எழுதி முடிப்பதற்கான நேரமும் அதற்கான உழைப்பும் எமது வாசிப்பின்போது கவனம் கொள்வதில்லை. இரண்டு நாள் வாசிப்பில் ஒரு நாவலை வாசித்துப் புரிந்துகொள்ளும் ஒரு வாசகன் தனது கருத்தை சொல்வதில் இருக்கும் பெறுமதி என்ன? இந்த எனது குறிப்பானது ’இச்சா’ நாவலை இரண்டுதரம் வாசித்தற்கான ஒரு அறிமுகமும், எனது உணர்வு நிலை மட்டுமானதே.

சிரியக் குழந்தையான அய்லான் குர்தியின் மரணம், சாட்டி கடற்கரையில் மிதந்து வந்த பிரேதம், இலங்கையில் ஈஸ்டர் பெருநாளின்போது நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட மரணங்கள், பனி நிலத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆலா வின் மரணம் எனும் ‘இச்சா’-வுகளால் விரிந்து பன்முக பாதைகளால் பயணிக்கும் இந்நாவலை மீண்டும் ஒரு முறை வாசிக்க தயாராகின்றேன்.

தமிழில் முதல் முறையாக தரிப்புக் குறிகள் பிரஞ்சு இலக்கிய மொழிகளுக்குரிய தரிப்புக் குறிகளாக பயன்படுத்தியிருப்பதாகவும் அவதானிக்கின்றேன். வாழ்த்துக்கள்.
 

http://www.thuuu.net/?p=2818

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிமை

வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போல
தன்னோர் அன்ன இளையர் இருப்ப
பலர்மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பத்
தூவெள் அறுவை போர்ப்பித் திலதே.

 ஔவையார்

மேலுள்ள பாடல் ஒரு புறநானூற்றுத் தாய் காலில்லாத கட்டிலில் (பாடையில்) கிடத்தப்பட்டுள்ளத் தன் மகனைப் பார்த்து அழும் அரற்றல். 

சிறுவர்களை கால்கழிக் கட்டிலில் கிடத்திக் கொண்டிருந்த போர் பல நூற்றாண்டுகள் கழித்துச் சிறுமிகளையும் கிடத்தியதன் சித்திரத்தை ‘இச்சா’ அளிக்கிறது. 

வீரம், போர், தியாகம் போன்றவற்றிற்கு இன்றைய வாழ்க்கையில் உண்டாகிவிட்டிருக்கும் அர்த்தமின்மையை , பொருத்தமின்மையை நம் கண் முன் நிறுத்துகிறது. 

Icha.jpg?resize=323%2C323&ssl=1

ஆலா என்னும் விடுதலைப் புலி தற்கொலைப் படைப் போராளியின் புனைவுச் சித்திரம்தான் இந்நாவல். ஒரு மகிமையான வாழ்விற்கு ஆசைப்படும் வயதில் மகிமையான சாவு ஒன்றுதான் ஆலாவிற்கு லட்சியமாய் இருக்கிறது.

ஓடு ஓடு என்று அதை நோக்கி ஓடுகிறாள் ஆனால் சாவில் சற்று மகிமை மங்குமோ எனும் சந்தேகம் கொள்கையில் அற்பமான சாவிற்கு, அற்பமான வாழ்வு மேலென வாழ்வைத் தேர்ந்தெடுக்கிறாள். 

வியட் தாங்க் குயென் எழுதிய 2015 ஆண்டிற்கான புலிட்சர் பரிசு வென்ற சிம்பதைஸர் எனும் நாவலுக்கும்இச்சாவிற்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன.

சிம்பதைஸர் கதையின் நாயகன் ஓர் உளவாளி, எதிரி என அடையாளம் காட்டப்பட்டவர்களுடன்தான் தன் பாதி வாழ்வைக் கழிக்கிறான். அவனும் ஆலாவைப் போல மைய நீரோட்டத்தில் இருந்து வந்தவன் அல்லன், எதிரி எனும் அடையாளப் படுத்தபட்டவர்களுக்கு இடையே வளர்ந்தவன். எதிரி என்னும் கூட்டமாக இல்லாமல் தனி மனிதர்களாய் அவன் முன் வரும்பொழுது அவரவர் தனிப்பட்ட குணங்கள்தான் அவன் கண்ணில் படுகிறது. நல்லவன் எங்கிருந்தாலும் நல்லவனே, வாக்குமூலம் எழுதும்போதுகூட அதை அவனால் சொல்லாமலிருக்க முடிவதில்லை. ஆலாவும் சிங்களத்தி என்றே அழைக்கப்படுகிறாள். அவளுக்கு சிங்கள றங்கணி அக்காவும், இயக்க அக்காக்களும் வேறு வேறு அல்லர். அவள் கடையின் சிங்கள முதலாளி ஒரு சொக்கத்தங்கம் எனச் சொல்வதில் அவளுக்குத் தயக்கம் எதுவும் இல்லை.

வேறு ஒரு சூழலில் அவள் சிங்கள சுமன்லாலை மணந்து கொண்டு அம்பாறையிலேயே அவளளவில் ஓர் மகிமையான வாழ்வை வாழ்ந்திருக்கவும் கூடும்.

இரு நாவல்களும் போர்கள் கட்டியெழுப்பும் கருப்பும் வெளுப்புமான கற்பிதங்களைக் கலைத்துப் போட்டுப் போரின் நிதர்சனங்களைப் பேசுகின்றன.

போர் வியட்நாமாய் இருந்தாலும், இலங்கையாய் இருந்தாலும் உருவாக்கும் சூழல் ஒன்றே. சாமான்யர்களின் வாழ்க்கையை சிதறடிக்கிறது, மக்கள் உயிரையும், உணர்வுகளையும் வைத்து செல்வம் கொழிக்கும் சந்தர்ப்பவாத வியாபாரிகளை உருவாக்குகிறது, மெல்லுணர்வுகளை மழுங்கடிக்கிறது, பல்லாயிரம் ஆண்டுகளாய் செங்கல் செங்கலாய் அடுக்கிக் கட்டிய மானுடம் என்னும் விழுமியத்தை அடித்தளமில்லாமல் அடித்து நொறுக்கி மீண்டும் விலங்காக்கி நிர்வாணமாய் நிற்க வைக்கிறது. 

மனிதர்கள் எனச் சொல்லிக் கொள்ளத் தேவைப்படும் அனைத்து அடிப்படைகளையும் முற்றாக இழந்து பெறப்படும் போர் வெற்றியைப் போல் வேறோர் அபத்தம் உண்டா எனும் கேள்வியை வாசிப்பவர் மனதில் இரு நாவல்களும் விதைக்கின்றன. 

போர் வன்முறை மட்டுமன்று, இச்சா வன்முறையின் அனைத்து ரூபங்களையும் நம் முன் பரப்பி வைக்கிறது. 
கிழவர்களின் பாலியல் வன்முறை , கணவர்களின் பெண்ணை உடைமையாக்கத் துடிக்கும் உளவியல் வன்முறைகள் போன்றவை போர் வன்முறையைவிட உக்கிரமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

ஷோபாவை அவருடைய பகடிக்காகவும், ஒரு விஷயத்தை முற்றிலும் வேறொரு கோணத்தில் அணுகும் புதுமைக்காகவுமே நான் விரும்பி வாசிப்பதுண்டு. இந்நாவல் மூலம் அதிலிருந்து மேலேழுந்து வேறொரு தளத்திற்குச் சென்றிருக்கிறார். அவருடைய கருப்பு நகைச்சுவையும், கசப்பு மண்டிய பகடிகளும் மிக அரிதாகவே இச்சாவில் வருகிறது. 

வாழ்வு வாழப்படுவதாலேயே மகிமை கொண்டதாகிறது அதற்கு மேலதிக மேற்பூச்சுகள் எதுவும் அவசியப்படுவதில்லை. சாவு அனைத்து மகிமைப்படுத்துதலுக்கு பிறகும் குழிக்குள் உறையும் வெறுமை மட்டுமே. எனவே எங்காவது , எவ்விதமாவது ஒரு சிறு வாழ்வை வாழ விடுங்கள் என இறைஞ்சுகிறது இந்நாவல். 
இதுவரைத் தன் கதைகளில் தள்ளி நின்று பகடி செய்யும், கை கொட்டிச் சிரிக்கும் கலகக்காரன் ஷோபா சக்தி இந்நாவலின் மூலம் அள்ளி அணைக்கும், ஊர்க் குழந்தை அனைத்தையும் தன் குழந்தையாய்ப் பாவிக்கும் பேரன்னையாக உருமாறியிருக்கிறார். 

இன்றைய பிளவுபட்ட நோக்குகள் பெருகி, பேருருவமெடுத்து நிற்கும் உலகில் இச்சா போன்ற அடிப்படை மானுட விழுமியங்களை, அனைத்து வேற்றுமைகளுக்கு நடுவிலும் அடையப்படக்கூடிய ஒற்றுமைகளைப் பற்றி பேசும் நாவல் நமக்கு இன்றியமையாத தேவை என்றே நான் நினைக்கிறேன். 

தமிழ் நாவல்களுக்கு புலிட்சர் அல்ல, புளிப்பு மிட்டாய்கள்கூட கொடுக்கப்படுவதில்லை. ஆயினும் புலிட்சர் வாங்கிய நாவலுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாத, பல இடங்களில் அதனினும் மேம்பட்ட தரத்தில் எழுதப்பட்ட நாவல் இச்சா என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. 

புறநானூற்று ஔவையில் இருந்து இன்று ஷோபா சக்தி வரை உலகத் தரத்தில் எழுதும் தமிழ் படைப்பாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதில் மெய்யாகவே நாம் பெருமிதம் கொள்ளலாம்.

 

https://solvanam.com/2019/12/29/மகிமை/

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

களியோடை

சிவா கிருஷ்ணமூர்த்தி

இச்சா– நாவல் ஷோபா சக்தி / 2019/ கருப்புப் பிரதிகள்/ ரூ 290/-

 

 

%E0%AE%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%

சில மாதங்களுக்கு முன்னர் பிபிஸியின் வியட்நாம் போரைப் பற்றிய விவரமான 10 பகுதிகள் கொண்ட ஆவணப்படத்தைப் பார்த்தேன்.

அதில் பல்வேறு பேட்டிகள் – அமெரிக்கர்கள், வடவியட்நாம் வீரர்கள், தென் வியட்நாம் வீரர்கள் என்று பலருடைய பேட்டிகள் இருக்கின்றன.

ஒரு அமெரிக்க வீரர் – இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய குடும்பத்திலிருந்து வந்தவர், ஜாப்பானிய ஜாடையுடன் – ஒரு சம்பவத்தை விவரிக்கிறார்.

வியட்நாம் காடுகளில் கொரில்லாக்களைத் தேடி அலையும் பணியில் ஒரு கிராமத்தின் எல்லைக்கு வருகிறார்கள். ஒரு குடிசையிலிருந்து அரிசி சோறு மணக்கும் வாசனை வருகிறது. 

நம் அமெரிக்க/ஜப்பானிய வீரர், தன் வாழ்நாளில் எப்போதும் தனது உணவில் பகுதியாக சோற்றை உண்டு வந்தவர், தற்போது வியட்நாமில் போர் சூழ்நிலையில் சோற்றை சாப்பிட்டு வெகு நாளாகிய நிலையில், இந்த வாசனை அமிர்தமாக இருக்கிறது.

அந்த குடிசைக்குள் போய் பார்க்கிறார்கள் – இரு வயதான பெண்கள், ஓரிரு குழந்தைகள் மட்டுமே இருக்கிறார்கள், சமைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மொழி பெயர்ப்பாளரிடம் சொல்கிறார் – என்னுடைய ராணுவ பங்கீட்டில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் உணவையும் இவர்களிடம் கொடுத்து விடுகிறேன் – அந்த சோறையும், காய்கறிகளையும் எனக்கு தந்துவிடச்சொல் என்று.

சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது சக போர் வீரர் சொல்கிறார் – அவர்களைது உணவை உனக்குத் தந்துவிட்டால் அவர்கள் எங்கு போவார்கள்?

“கிட்டதட்ட ஒரு டஜன் நபர்களுக்கான உணவு செய்திருக்கிறார்கள், அவர்களுக்கு இது போதாதா?”

சட்டென அவர்கள் உணர்கிறார்கள் – அங்கு இருப்பது அந்த பாட்டிகளும் குழந்தைகளும் மட்டுமில்லை…

உடனடிச் சோதனையில் குடிசைப் பின்புறம் பதுங்கு குழியைக் கண்டுப்பிடிக்கிறார்கள்.

பிறகென்ன, வழக்கமாக என்ன செய்வார்களோ அதைச் செய்கிறார்கள் – குழியில் குண்டுகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து உடல்களை வெளியே எடுத்து ஊர் மத்தியில் போடுகிறார்கள்.

யார் யாரெல்லாம் உடல்கள் மேல் விழுந்து அழுகிறார்களோ அவர்களை விசாரிப்பதாக (உறவினர்கள்) திட்டம்.

பயந்தது போலவே அவர்களுக்கு அரிசிச் சோறு கொடுத்த பெண்களின் குடும்ப ஆண்கள்…

இதைச் சொல்லும் போது அந்த அமெரிக்க/ஜாப்பனியருக்கு சற்றே, சற்றேதான் குரல் கம்முகிறது…

மொத்த வியட்நாம் போரும் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. முதலாம், இரண்டாம் உலகப்போர்கள், இன்றுவரை பல்வேறு வடிவங்களில் – புனைவு, அபுனைவு, கவிதை, இசை – ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆனால் இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் இத்தனை அருகில் இருக்கும் இலங்கையின் இரத்தம் தோய்ந்த வரலாறு இன்னமும் முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது.

“இச்சா” நாவல், ஆலா என்ற புனை பெயர் கொண்ட பெண் கரும்புலியை மையப்படுத்திய நாவல். பல்வேறு நாட்டுப்புற கதைகள், பேய்க்கதைகள், கண்ட, கேட்ட பல்வேறு ஊர் மனிதர்கள், உறவினர்கள் என்று பல்வேறு கிளைகளுடன் விரிகின்ற புதினம்.

அப்படி விரியும் போதே எப்படி தமிழ், சிங்களம் என்ற பிரிவினை குடியிருக்கும் ஊரில், ஆற்றில், பரம்பரையில் அழுந்திப் படிகிறது என்பதும் சொல்லப்படுகிறது.

கதை, கொஞ்சம் கொஞ்சமாக சிங்களத்தை நன்கு படித்து, சிங்களத்தி என்றே அழைக்கப்படுகின்ற கதை நாயகி புலிகளின் படைகளில் சேர்ந்து ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறார் என்று நகர்கிறது.

தன்னைச் சுற்றி நடக்கும் தற்கொலைகளை கண்டு வெறுத்து, தனது சாவிற்கு ஓர் அர்த்தம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்ஆலா. 

“இந்த உயிர் பேராற்றலுள்ளது. இந்த ஆற்றலை திருட்டு நாய் இருட்டில் கஞ்சி குடிப்பது போல் சாவு குடித்துவிடக்கூடாது”

அதனாலேயே தனக்கு கொடுக்கப்பட்ட “கட்டளையை” – மனித வெடிகுண்டாக, வெடிக்க வைக்கும் போது தலையை மார்பினை நோக்கி குனிந்து – அப்போதுதான் முகம் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது – பெருமையாக முன்னெடுத்துப் போகிறார்.

ஆனால் ஊழ் வேறு மாதிரியாக இருக்கிறது…வேறு யாருக்கும் சேதமாகாமல் ஒரு “எச்சரிக்கை” வெடியாக, சுவரை மட்டும் தகர்க்க, தன்னைத் தர அவருக்கு மனம் ஒப்பவில்லை…

ஆலாவின் தகப்பனார் ஊர் கூத்தில் ஆடுகின்ற பாத்திரங்கள் அனைத்தும் மனம் கனப்பவை.

கண்டி மந்திரியின் மனைவியை – ராஜ குற்றத்திற்காக அரசன், அவளது பச்சிளங்குழந்தையை உரலில் போட்டு இடிக்குமாறு பணிக்கிறான். அந்த உரலை இடித்துக்கொண்டே அப்பா/மந்திரியின் மனைவி பாடுகிறார்.

“அமிர்த சுகிர்த அழகொளிர் விளக்கே

அகக்கடலில் சுமந்த அருமைப் பாலகியே

பொன்னின் மேனிதன்னை உரலில்

பூணின் உலக்கை கொண்டு

ஊணும் பாதி தந்த பாலும் வாயிலோட

அம்மா குத்தி இடித்தாளோ உரல்”

நல்ல தங்காளில் நல்ல தங்காள்… தன் கைகளில் சிக்கி விடாமல் ஓடுகின்ற பிள்ளைகளை துரத்திப்பிடித்து ஒவ்வொருவரையாக கிணற்றில் போடுகிறார்…கிட்டதட்ட அவரது குடும்பத்தினர், உறவினர்கள், பாதிக்கப்பட்ட அனைத்து உயிர்களுமே இப்படி உரலில் இடிபட்ட, கிணற்றில் வீசப்பட்ட குழந்தைகளாக தோன்றுகிறது…

அக நானூறு பாடல் தொகுப்பில் உவகை பெய்தற்றே என்ற  பாடலை சில வாரங்களுக்கு வாசிக்க நேர்ந்தது.

தலைவன் தலைவியை மணம் செய்து கொள்ளப்போகும் செய்தியை தலைவிக்கு தோழி சொல்கிறாள்.

அந்த உவகையை பற்றி விவரிக்கும் போது,

கொடிய கோடையில், ஏரிகள் நீரின்றி வரள, பறவைகள் தங்க இடமின்றிச் செல்ல, இந்த வெப்பம் மிகுதியான சூழ்நிலையில், குளங்கள் நிறையுமாறு ஓர் அதிகாலையில் பெய்த மழையால் ஊர் மக்களுக்குள்ளும் பெய்த உவகை எல்லாம் ஒரு சேர என்னுள் பெய்ததது போலிருந்தது என்று அந்த பாடல் சொல்கிறது.

ஆலா என்கிற வெள்ளிப்பாவையைப் பற்றி படிக்கும் போது, அவளது களியோடை ஆற்றுக் கரை கிராமத்தை, சுற்றத்தை, மொழி சாதி பாகுபாட்டினால் சந்திக்க நேரிட அவலங்களை அறிய அறிய அவர்கள் அனைவரின் அழுகை, சோகம் எல்லாம் வாசிக்கிறவர்களுக்குள்  ஒரு சேர பெய்தது போல் இருக்கிறது…

***

 

https://solvanam.com/2020/01/26/களியோடை/

 

பி.கு. சொல்வனம்ப் விமர்சனக்குறிப்பில் பாவிக்கப்பட்ட படம் யாழில் நான் இணைத்தது😀

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

இச்சா: குரூரங்களில் வெளிப்படும் இச்சை

by லதா • November 1, 2020 

spacer.png

 

பெற்றோர், சமூகம், கல்வி, அறிவு என தன்னைச் சூழ்ந்துள்ள எதுவுமே தனக்குப் பாதுகாப்பு தரப்போவதில்லை என்பதை கள்ளமற்றவளாக வளரும் ஒரு சிறுமி அறியும் தருணம் அவளுக்கு இந்த வாழ்க்கை என்னவாக அர்த்தப்படும்? அதுவரை அவளுக்குச் சொல்லப்பட்ட விழுமியங்களும் மானுட உச்சங்களும் என்ன பதிலை அவளுக்குக் கொடுக்கும்? பதில்களற்ற திக்குகளில் அர்த்தமற்ற கேள்விகளைச் சுமந்து திரியும் ஆலா மரணத்துடன் ஆடும் பகடையாட்டமே ‘இச்சா’.

ஈழப்போர்ச் சூழலில், கிராமப் பகுதியில் வளர்ந்த வெள்ளிப்பாவை எனும் சிறுமி, சூழ்நிலை காரணமாக புலிகள் இயக்கத்தில் சேர்க்கிறார். திறமையும் ஆர்வமும் துடிப்பும் மன வலிமையும் உடல் வலிமையும் கொண்ட அந்தச் சிறுமி கேப்டன் ஆலாவாக, கரும்புலியாக உருவெடுக்கிறாள். 18வது வயதில் தற்கொலைத் தாக்குதலுக்குத் தேர்வு பெற்று அதற்கான  கடும் பயிற்சிகளிலும் ஆயத்தங்களிலும் ஈடுபடுகிறாள். கடைசி நேரத்தில், யாருக்கும் எந்தச் சேதமும் ஏற்படுத்தாமல் ஒரு வெறும் சமிக்ஞையாக அவளது மரணம் நிர்ணயிக்கப்படுகிறது. சாதனையை நிகழ்த்தப்போகும் மனநிலையில் இருந்த ஆலாவால் அதற்கு உடன்பட முடியவில்லை. குண்டை வெடிக்கச் செய்யாமல் கைதாகிறாள்.  இலங்கை வரலாற்றிலேயே ஆக அதிக காலம் சிறைத் தண்டை பெற்ற பெண்ணாக,  300 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறாள்.  மிக குரூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாகி, அநாதரவாக தனது 26 வயதில் உயிரிழக்கிறாள். கடந்த ஆண்டு வெளிவந்த இச்சா நாவலின் இந்த மையக் கதை புதிய ஒன்றல்ல. இதுபோன்ற கதைகளை, ஈழப்போரில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு இடங்களிலும்   நடந்த போர்கள் குறித்த செய்திகளிலும் ஆவணப் படங்களிலும் புதினங்களிலும் வாசித்திருக்கலாம். ஆனால், இந்தக் கதையல்ல நாவல். ஷோபாசக்தி காட்சிப்படுத்தும் வாழ்க்கையும், முன்வைக்கும் யதார்த்தங்களும், அவரது சமூக, அரசியல் நோக்குகளும் இவற்றின் வழியாக வாசகர் உணரக்கூடிய ஒரு கண்டடைதலே நாவல்.

“கடவுள் ஆண்களையும் பெண்களையும் படைத்தார். ஆனால் சாமுவெல் கோல்ட் (Samuel Colt)   இருபாலரையும் சமமாக்கினார்” என்பது அமெரிக்காவில் புழங்கும் ஒரு சொல்மொழி. சாமுவெல், 18ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் கைத்துப்பாக்கியை வர்த்தகரீதியாகத் தயாரித்து சந்தைவிற்பனைக்குக் கொண்டு வந்தவர் .

முதியோர், பெண்கள், குழந்தைகள் போன்ற வலிமையற்றவர்களுக்கு அல்லது ஆணாதிக்க சமூகத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களுக்கு  போரும்  நெருக்கடிநிலைகளும்  மேலும் வேதனைகளையும் வலிகளையும் தந்தாலும், ஏதோ ஒரு வகையில் சமநிலையையும் பலத்தையும் தருகிறது. அது பெரும்பாலும் ஆயுதத்தாலும் அதிகாரத்தாலும் நிகழ்கிறது. அல்லது மேலாதிக்கத்திலிருப்பவர்களின் இயலாமையில் நடக்கிறது.  ஒரு துயரமான யதார்த்தநிலை இது.

“துப்பாக்கியோடு இருக்கும் என்னை எவரும் பணியவைக்கவோ, அவமானப்படுத்தவோ, அழவைக்கவோ முடியாது. வலது கையில் துப்பாக்கியை வைத்திருப்பவள் இடது கையில் சாவை வைத்திருப்பாள் என்பது உண்மைதான். ஆனால், துப்பாக்கி வைத்திருப்பவள் உடலை அவளது அனுமதியின்றி யாரும் தீண்டப்போவதில்லை. துப்பாக்கி வைத்திருப்பவளின் சாவு ஒருபோதும் அவமானகரமானதாக நிகழப்போவதில்லை,” என்பது ஒரு பதின்மவயதினளின் நம்பிக்கையாக வேரூன்றுவதற்கு அவள் வாழும் அந்தத் தருணம் மட்டுமே காரணமாக இருப்பதில்லை. பெண் வழிச் சமூகம், ஆண் வழிச் சமூகமாக மாற்றப்பட்ட காலத்திலிருந்து சமூக இயங்குநிலையில் பெண்களின்  வளர்ப்புக்கும் வாழ்வுக்கும் அளிக்கப்பட்டு வரும் உணர்வும் அறிவுரீதியான சமநிலையின்மையும் எப்படி பின்னணியாக இருக்கிறது என்பதை இந்நாவலில் வார்த்தைகளாகவும் சம்பவங்களாகவும் கதையாடலுக்குள் விவரிக்கிறார் எழுத்தாளர்.

தன்னைக் கொல்ல வந்தவர்கள் முன் நடுங்கிக்கொண்டிருந்த காட்டுச் சிறுமியான ஆலா, துப்பாக்கியை ஏந்தியதும் அச்சத்தை அறவே துறந்தவளாகிறாள். துப்பாக்கி வெடிக்கும்போது ஏற்படும் மனக்கிளர்ச்சி, அவளுக்குத் தனது இருப்பை உறுதிசெய்கிறது. அவளுள் தைரியத்தையும் அவள் ஆன்மாவிற்கு ஒளியையும் நிம்மதியையும் இறுதி வரையில் அவளுக்கு துப்பாக்கியே கொடுக்கிறது. அவளைவிட வயதிலும் வலிமையிலும் கூடிய ஆடவர்கள் அவளைக் கொடூரமாகக் கொல்ல இருந்த தருணத்தில்,  எல்லா முயற்சிகளும் தோற்றுப்போய் இனி தப்பிக்கவே வழியில்லை என கையறு நிலையில் அவள் நின்றபோது, ஒரு சாதாரண சிறுவனின் துப்பாக்கி அவளைக் காப்பாற்றுகிறது.

தாத்தா கொடுக்கும் பாலியல் துன்புறுத்தலின் அவமானத்துடன், அவரைக் கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டோமோ என்ற பயமும் சேர்ந்து, செய்வதறியாது நடுங்கிக்கொண்டிருந்த அவளுக்கு இரு இளம் போராளிப் பெண்களின் துப்பாக்கி தைரியம் தருகிறது. குடும்பத்தையும் நாட்டையும் வாழ்வையும் சிதைத்த சூழலிலிருந்து விடுபடவும் விடுதலையடையவும்  துப்பாக்கியை அவள் துணையாகக் கொள்கிறாள். அவளுக்குத் துப்பாக்கியும் அதன் வெடிப்பும் புதிய பொருளைக் கொடுக்கின்றன. அந்தப் பொருள்தான் நாவலெங்கும் வெவ்வேறு படிமங்களாகப் படர்ந்து வாசகரை அசைக்கிறது.

வீட்டின், சமூகத்தின், நாட்டின் சூழ்நிலைகளால் பயம், அச்சம், தனிமை, காதல், நிச்சயமின்மை என எதிர்மறையான உணர்வுகளால் அலைக்கழிக்கப்படும் தன்னந்தனியாகிவிட்ட ஒருவருக்கு, எந்நேரத்திலும்  பாதுகாப்புத் தேவைப்படுகிறது. சூழலோ, மனிதர்களோ தரமுடியாத பாதுகாப்பை ஆயுதம் தருகிறது.  குளிக்கும்போது, கழிவறைக்குப் போகும் எந்நேரத்திலும் தனக்குப் பெருந்துணையாக துப்பாக்கியைச் சுமந்துகொண்டே இருக்கிறாள் ஆலா. துப்பாக்கி பறிக்கப்பட்ட நிலையிலும், தனக்குப் பாதுகாப்பாக எப்போதும் ஆயுதம் இருப்பதாகவே கற்பனை செய்துகொள்கிறாள். கிழிந்து நைந்த ஓர் எளிய போர்வையை  தன்னைக் காக்கும் ஆயுதமாகக் கொள்கிறாள். எந்நேரமும் அதைப் போத்திக்கொண்டிருக்கிறாள்.  நினைவிலி நிலையில் தனக்கு ஆயுதம் கிடைப்பதாகவும் அதன்மூலம் தான் விடுதலை பெறுவதாகவும் நம்பத் தொடங்குகிறாள்.

இலங்கைப் போரில் ஈடுபட்ட பெண் குழந்தைப் போராளிகளை நேர்காணல் செய்தும், அவர்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டும் Yvonne E. Keairns என்பவர் எழுதிய ‘The Voices of Girl Child Soldiers’ எனும் ஆய்வறிக்கையை குவெக்கர் ஐக்கிய நாடுகள் அலுவலகம் 2003ல் வெளியிட்டது. அதில் சொல்லப்பட்ட முடிவுகளில் முக்கியமான மூன்றில் ஒன்றானது: ‘பெண்கள் தங்களை பயன்படுத்தியவர்கள், தவறாக நடந்துகொண்டவர்களை பழிவாங்குவதற்கோ பதிலடி கொடுப்பதற்கோ வழி தேடுவதில்லை. தாங்கள் பங்களிப்பதற்கான வழிகளையே அவர்கள் நாடுகிறார்கள். தங்கள் இழந்ததை ஈடுசெய்யும் வகையில் தங்கள்  வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் ஆக்ககரமானதாகவும் ஆக்குவதற்கான வழியைத் தேடுகிறார்கள்’ என்பதாகும்.

உலகின் எந்த இடத்திலும் போராளியாகும் பெண்களின் மனநிலை மட்டுமல்ல, வாழ்க்கையின் அவிழ்க்க முடியாத சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் பெண்களின் மனநிலையும் இவ்வாறாகத்தான் இருக்கிறது.

தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க ஆலா தன் மரணம் அர்த்தமுள்ளதாக, ஏதோ ஒரு வகையில் பங்களிப்பதாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறாள்.  இறுதியறுதியான அந்த ஒற்றை இலக்கும் சாத்தியமில்லாததாகும்போது அவள் செயலற்றுப் போகிறாள். மரணம் எனும் விடுதலையைத் தேர்வு செய்யாமல், எத்தகைய துன்பத்துக்கும் தயாராகத் தன்னை ஒப்புக்கொடுக்கிறாள். உடல், மனம், ஆன்மா என எல்லாவற்றாலும் வேதனையை அனுபவிக்கிறாள். ஆனாலும் தன் வாழ்வும் சாவும் அர்த்தமுள்ளதாகவே அமையும் என்ற நம்பிக்கையை அவள் கடைசி வரையில் இழக்கவில்லை. அந்த நம்பிக்கையே அவளது கற்பனைச் சித்திரத்தில் வெளிப்படுகிறது. போலியான ஒரு மனிதனின் ஏமாற்றுத்தனங்களைத் தோலுரித்து அவனை வெற்றிகொள்வதாக அவள் தனது மரணத்தை அர்த்தமுள்ள ஒன்றாகக் கற்பனை செய்கிறாள்.

மனம், உடல், சிந்தனை

உடல், மன ரீதியான சித்திரவதைகள், அளவுக்கதிகமான போதை மருந்துகள், எல்லாவற்றுக்கும் மேலாக  அர்த்தமற்றுப்போன இலட்சியமும் இலக்கும் மனதைப் பேதலிக்க வைக்கும். மனம் தன்னிச்சையாகத் திரிந்து பிறழ்வதிலிருந்து தப்பிக்க, அதன் கவனத்தை உடல் மீது செலுத்துவது ஓர் உத்தி. அதிகபட்சமான துன்புறுத்தல்களை எதிர்கொள்ளத் தயார்ப்படுத்தப்படும் போர்வீரர்களுக்கு இத்தகைய பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கும். உடலை உய்ப்பதன் மூலம் உணர்வுகளை உசுப்பி, உயிருக்கு வலுவூட்டும் ஆலா, அப்போராட்டத்தில் களைத்துப் போகும் தருணத்தில் அதைவிட அதிக வலுவைத் தரக்கூடிய ஒன்றைத் தேடுகிறாள். அது, வரலாற்றில் இதுவரையில்லாத அதிகபட்சமான 300 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை பெற்ற முதல் பெண்ணான தனக்கு கிடைக்கக்கூடிய ‘விடுதலை’ என்பதைக் கண்டறிகிறாள். அதற்கான ஓர் எளிய காட்சியை அவளது மனம் உடனடியாக வரையத் தொடங்குகிறது. அவளது அரசாங்கம், அவளது இனம், அவளது மக்கள், அவளது போராட்டம், இயக்கம், அவளைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் என எல்லாருமே அவளைக் கைகழுவிவிட்ட நிலையில், யதார்த்த வாழ்வில் கிடைக்கப்போவதில்லை என முடிவான கௌரவமான, கம்பீரமான ஒரு முடிவை அவளின் மனம் கற்பனை செய்கிறது.  ஒரு போராட்டத்தையே நாடும் அவளின் மனஅழுத்தநிலை, அந்த விடுதலையையும் போராட்டமானதாகக் கற்பனை செய்கிறது. அல்லது அதற்குள்ளும் ஒரு போராட்டத்தை விரும்புகிறது.

சக சிறைவாசியான கேஷாயினி மூலம் அறிந்த வெளிநாட்டு வாழ்க்கையையும் அதன் சிக்கல்களையும் தனது கற்பனையில் மேலும் சவால் மிக்கதாக்கி, அச்சூழலில் தன்னை வைத்துப் பார்க்கிறாள் ஆலா. அதில் அவள் எதிர்கொள்ளும் சவாலும் போராட்டங்களும் அவளின் மன உளைச்சலுக்கு மருந்தாகின்றன. எல்லா மனிதர்கள் மீதும் நம்பிக்கையற்ற, எல்லாவற்றையும் சந்தேகப்படும், போராட்டத்தையே விரும்பும் போராளிகளின் மனநிலையை ஆலாவின் கற்பனை மூலம் காட்சியப்படுத்தியிருப்பது சிறப்பானதொரு உத்தி. போர், இயற்கைப் பேரிடர், தனிப்பட்ட கொடுமைகள் போன்ற மோசமான பாதிப்புகளுக்குள்ளாகும் பெண்ணின் மனநிலையை புலம்பல்கள், விவரிப்புகள் எதுவுமின்றி, அவளது கற்பனைமூலமே விவரிக்க எழுத்தாளுமையுடன் உளவியல் அறிவும் தேவைப்படுகிறது.

சராசரி மனிதர்களின் மனத்தை நினைவு, உபநினைவு, நினைவிலி (consciuous, sub-conscious and un-conscious) ஆகிய மூன்று அடுக்குகளாகப் பிரிக்கிறார்  சிக்மண்ட் ஃப்ராய்ட்.  இதில் நினைவிலி மனதின்  செயல்பாடாக கனவைப் பார்க்கும் அவர், கனவுகளில்தான் மனிதன் உண்மையாக இருக்கிறான் என்கிறார். இந்தக் கனவை, Displacement, Projection,  Symbolization, Condensation Rationalization என ஐந்து வகைகளாகப் பிரிக்கும் ஃப்ராய்டு, இவற்றுக்கு அடிப்படையாக  நிறைவேறாத ஆசைகளையும் பாலியலையும்  சொல்கிறார்.

அவரின் மாணவரான கார்ல் குஸ்தாவ் யுங்  மனித மனம் கூட்டமைப்பின் பாகம் என்கிறார். கூட்டு நினைவு, கூட்டு நினைவிலி (collective consciousness and collective unconsciousness) தன்மைகளில் மனம் இயங்குகிறது என விளக்குகிறார்.

இந்த அடிப்படையில் ஆசைகளும் நிராசைகளும் நிரம்பிய சாராசரிப் பெண்ணான ஆலாவின் நினைவிலி மனமும் அதன் செயல்பாடும் ஒரு கூட்டு நினைவு, நினைவிலியின் வெளிப்பாடாகவே இருக்கிறது. கடும் பயிற்சி பெற்ற கரும்புலியான கேப்டன் ஆலாவை, தனக்குக் கீழே கொண்டு வர வாமன் எனும் தனி மனிதனும் சமூகமும் செயல்படுவதென்பது ஆலாவின் வெறும் கற்பனையல்ல, அத்துணை காலமும் அவள் அறிந்த வாழ்க்கை அது. ஒரு பெண்ணை வீழ்த்த, சிறுமைப்படுத்த முதலில் ஆண்கள் கையெலெடுக்கும் ஆயுதம் உடல். ஆக அதிக தண்டனைபெற்ற, அதிபயங்கரமான  போராளியாக வர்ணிக்கப்பட்ட அவளை, விசாரணைகளும் சிறையும் சித்திரவதைகளும்  வெற்றிகொள்ள முடியாத அவளது உறுதியைக் குலைக்க  முதலில்   கணவன் எனும் உரிமையைப் பெறுகிறான்.  அவள்  உடலைத் தன்னுடைமையாக்கி, வன்புணர்ச்சி செய்து அதன் மூலம் எதிர்க்க முடியாத, வெல்ல முடியாத எதையெல்லாமோ வென்றதாக வெறிக்களிப்பை அடைகிறான். தன்னெஞ்சறித்த அந்தக் களிப்பை தன்னிடம் மறைக்க மீண்டும் மீண்டும் குளித்து குளித்து தன்னைச் சுத்தப்படுத்திக்கொள்வதாக எண்ணிக்கொள்கிறான். தன் மனதின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதாக வானொலியில் வாழ்வுகொடுத்த கதையை, தன் ‘உயர் சிந்தனையை’ மணிக்கணக்காக விவரிக்கிறான். தன் மனதின் கேள்விகளைப் புறக்கணிக்கப் பழகியதும், அவளது வலி எங்கே என்பதை அறிந்து தாக்குகிறான். பின்னர் மெல்ல மெல்ல அவளது மனதின் அடுக்குகளை வதைத்து, அவளை வெறுமையாக்கும் முயற்சியில் திட்டமிட்டுச் செயல்படுகிறான். தன்னை யார், எப்போது, எப்படியெல்லாம் தாக்க முடியும் என யோசித்து யோசித்து, அதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டே இருக்கும் ஆதிமனிதனின் இயல்பான உள்ளுணர்வுடன் அவளின் போர்க்கால அனுபவமும் வெவ்வேறு சாத்தியப்பாடுகளை அவளது இறுதிக்கணம் வரையில் முன்வைத்தபடியே இருக்கின்றன.

ஆலாவைப் பொறுத்தவரையில், அவள் அதுநாள் வரையிலான தனது வாழ்வை இன்னொரு காட்சியாக உருவகித்து, அதில் தனக்கானதொரு வெற்றியையும் வைக்கிறாள்.

நாவல் தன்னிலையில், காப்பாற்றி, கை தூக்கிவிடும் என நம்பியிருந்த வெளிச்சக்திகள் எவ்வாறு நம்பவைத்து புதைகுழிக்குள் தள்ளியது என்பதை விவரிக்கும் ஒரு சிறுபெண்ணின் கனவுச் சித்திரத்தின் படிமங்களைத் தொங்க விடுகிறது.

புனைவுக்குள் ஆலா

இருபத்தியேழு ஆண்டு காலம் வாழ்ந்த ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கை அனுபவங்களும் எண்ணப் போக்குகளும் அவதானிப்புகளும் அகத் தூண்டல்களும் எவ்வளவு இருக்கமுடியுமோ அந்தளவுக்கு மட்டுமே சொல்லையும் பொருளையும் கொண்டிருப்பது இப்புனைவின்  வெற்றி. எடுத்துக்காட்டாக, நன்னித்தம்பியின் பாலியல் துன்புறத்தல்களை ஒரு சிறுமியின் நோக்காகவே, எழுத்தாளரது அறிவின் எந்தக் குறிக்கீடும் இல்லாமல் பதிவு செய்திருப்பது.

அதேபோல சமூகத்தில் ஒத்த வர்க்க நிலையைச் சேர்ந்த மக்களுக்கிடையான நட்பும் கருணையும் உறவும் பொறாமையும் இன, மத பேதங்களைக் கடந்தது என்பதை பிரசார தொனியின்றி, காட்சிகளால் கட்டமைத்திருப்பதையும் குறிப்பிடலாம்.

மற்றது, வெளிநாட்டு, உள்நாட்டு அரசியல், பொருளியல் கொள்கைகளுடன் கேந்திர அரசியல் காய் நகர்த்தல்களால், இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையிலான  உறவுநிலையானது எவ்வாறு நகர்கிறது என்பதன் காட்சிப்படுத்தல். இதை வெகு கவனமாக இயல்பான ஊடாட்டங்களாக வெளிப்படுத்தியுள்ளார்.

பிள்ளையார் கோயிலில் 400 தமிழ் மக்களைக் கொண்ட ஊர்க்காவற்படைத் தலைவர் முகமது ரியாஸ் புலிகளால் கொல்லப்படுகிறான். அதேநேரத்தில், சுல்தான் பப்பா, உம்மா என்றும் போராளிகள் பெயர் வைத்துக்கொள்கிறார்கள். 1990களில் யாழ்ப்பாணத்தில்  தமிழாக்கச் சீர்த்திருத்தம் வந்த பின்னரே இயக்கப் பெயர்களும் நல்ல தமிழ்ப் பெயர்களாகின.

சிங்களவனால் மகனின் தலை துண்டாடப்பட்ட தாய்க்கு உறுதுணையாய் உடனிருக்கிறது ஒரு சிங்களக் குடும்பம். கணவன், பிள்ளைகள், ஊர், உறவு என எல்லாவற்றையும் இழந்த நிலையில் அந்தத் தாய்க்குத் துணையாகிறார் மற்றொரு சிங்களவர்.

தேனும் எருமைத்தயிரும் தினையும் குரக்கனும் மான் இறைச்சியும் காட்டுப் பன்றியும் களியாற்று மீனும் தின்று சோம்பேறிகளாகவும் மந்தமாகவும் இருந்த பதுமர்களை சிங்களவர்களின் உழைப்பு உசுப்பி விடுவது ஒரு காலம் என்றால், அந்தத் தமிழ் மக்களின் வீடுகளை எரித்து ஊரைவிட்டுத் துரத்துவது இன்னொரு காலமாக இருக்கிறது. பஞ்சம் பிழைக்க வந்த குடிகள், பழங்குடிகளை விரட்டுவதை சூழலின் தூரிகையாலே வரைந்துவிடுகிறார்.

ஆங்கிலேயர் தங்களது 200 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில், ஆசிய நாடுகளில் சாதித்த மிகப் பெரிய விஷயம், ஆங்கில மொழி, கலாசாரம் சார்ந்த உயர்வு மனப்பான்மையை இப்பிரதேச மக்கள் மனங்களின் அடி ஆழத்தில் ஏற்படுத்தியது.  ஆங்கிலத்துடன், ஆளும் இனத்தின் மொழி மீதும்  இத்தகைய உயர்வெண்ணம் இன்றளவும் ஆசிய மக்களிடம் உள்ளது. இலங்கை மக்களும் இதற்கு விலக்கானவர்களல்ல.

சிங்களம் புழங்கும் தமிழ் மக்களிடத்தே, தமிழ் படிக்காததால் சிங்களத்தி என்று கேலி செய்யப்பட்ட ஆலா, சிங்களம் தெரியாத வடக்கு மக்களால் உயர்வோடு பார்க்கப்படுகிறாள். எளிதில் உயர் இடத்துக்குச் செல்கிறாள். நீராமகளிர் பாடல்களைப் பாடி வளர்ந்த ஆலாவிடம் எல்லாரும் சிங்களப் பாடல்களைப் பாடச் சொல்லிக்கேட்கிறார்கள்.

தற்கொலைத் தாக்குதலுக்குக் கிளம்பும் ஆலாவும் செம்பியனும் இறுதி விருந்தில், இடி, காற்றோடு வேகமாக வரும் மழையைப் பார்த்து பயப்படும் சிறுமி பாடுவதாக அமைந்த ‘அக்கே அக்கே அர பலான்னனகோ’ எனும் சிங்களப் பாடலைப் பாடி, புலித்தலைவர் உட்பட எல்லாரையும் நெக்குருக வைக்கின்றனர்.

 இலங்கைத் தமிழர்கள்

யாழ்ப்பாணத் தமிழர், மலையகத் தமிழர், கொழும்புத் தமிழர், கரையோரத் தமிழர், மட்டக்களப்புத் தமிழர், தமிழ் முஸ்லிம்கள் என இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு பிரிவினரதும் பாரம்பாரியங்களும் மொழியும் வழமைகளும் மாறுபட்டவை, தனித்தன்மையானவை.

இந்நாவலில், முக்கியமாக மட்டக்களப்புத் தமிழ் மக்களின் சமூகவியல் வரலாற்றையும் வாழ்வையும் பதிவு செய்திருக்கிறார் ஷோபாசக்தி.

இலங்கையின் கிழக்குப் பகுதியான மட்டகளப்பு மாந்திரீகத்திற்குப் பேர் பெற்றது. கண்ணனி அம்மன் வழிபாடு அங்கு பரவலானது. விவசாயம், கூத்து, நாட்டார் பாடல்கள், சல தேவதைகள், நாக தம்பிரான்கள் என்று இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கைக்குப் பழகியவர்கள். பாயோடு ஒட்ட வைப்பவர்கள், சோம்பேறிகள் என்று இவர்களை மற்றப் பகுதித் தமிழர்கள் சொல்வதும் உண்டு.

ஈழப் போரில் களத்தில் நின்று போராடியவர்களிலும் உயிரைக் கொடுத்தவர்களிலும் பெருமளவினரான இப்பகுதி மக்களைப் பற்றிய ஓரளவு முழுமையான சித்திரத்தைத் தருகிறது இந்த நாவல்.

எஸ்.பொன்னுதுரைக்குப் பிறகு, தொன்மைச் சிறப்பை இன்னமும் தக்கவைத்திருக்கும் மட்டக்களப்புத் தமிழின் அழகை பரந்த வாசகப் பரப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார் ஷோபாசக்தி. எஸ்.பொவிடம் அந்தத் தமிழ் தன்னியல்பில் உணர்ச்சிவசப்பட்டிருக்கும். ஷோபாவிடம் கட்டுப்பட்டு நிற்கிறது.

குறளி, தூவல், ஆலா என பல நல்ல தமிழ்ச் சொல்லாடல்களும், அனுமான் கொத்திய விறகு, குன்றிமணிக்கும் குண்டியிலே கறுப்பு, உண்மையைச் சொல்வதற்கும் தரையில் உட்காருவதற்கும் தயங்கத் தேவையில்லை, படுத்துக்கொண்டே பிரார்த்தனை செய்தால் கடவுளும் உறங்கிக்கொண்டேதான் கேட்பார், புத்தியுள்ள மூளைக்கு நான்கு கைகள், பேச்சு வெள்ளியென்றான் மௌனம் தங்கத்துக்குச் சமம், வேரில் நின்றால்தான் தல விருட்சம், விழுந்து போனால் விறகு, உருளுகிற கல்லில் பாசி இருக்காது போன்ற பழமொழிகளும் வாசிப்பனுபவத்தை இனிமையாக்குகின்றன.

இதில் ஷோபாசக்தியின் பகடியும் எள்ளலும் நாவலின் புறச் சித்திரிப்புகளை அக உணர்வுகளை அலச வைக்கின்றன.

வேலாயுதம் அம்மாச்சி, ஜப்பான் போகமுடியாமல் ‘ஜப்பான் மருந்து’ குடித்து இறந்து போவது அனுமானிக்க முடியாத விதி என்னும் ஒற்றை வரியில் இலங்கையில் வெளிசக்திகளின் தாக்கமானது அரசியல் நிலைப்பாட்டுக்கும் அப்பால் எவ்வாறு மக்களிடமும் படிந்துள்ளது என்பதை சொல்லிச் செல்கிறார்.

“சம்பூரில் அனல் மின்னிலயம் கட்டும்திட்டம் புலிகள் இருந்தவரையில் சாத்தியமில்லாததால், சம்பூரில் போரை இந்தியா தொடங்கியிருக்கிறது. லட்சுமணன் கோட்டை அவர்கள் இன்னொருமுறை தாண்டமாட்டர்கள். ஆனால் அனுமானை அனுப்புவார்கள்,” என்ற வரிகளும் சட்டம், உலக போர்விதிகள் எல்லாவற்றையும் உதறிவிட்டு,  கைதிக்கு போதை ஏற்றி புலன் விசாரணை செய்யும் இந்திய அதிகாரியும் ஈழப் போரின் கத்திப்பிடியை மின்னலாகக் காட்டிச் செல்கின்றன.

புலம்பெயர் சமூகத்தின் பிரதிநிதியான வாமனும் அவரது ‘உறவு’ தலைப்புகளில் வரிசையாக வரும் நிகழ்ச்சிகள் பற்றிய கிண்டலும் உச்சம்.

நாவலின் வடிவம்

மிகவும் திட்டமிட்டு, செறிவாக்கப்பட்ட வடிவம் சில தருணங்களில் வாசிப்பவரை படைப்புடன் ஒன்றவிடாமல் செய்துவிடுகிறது என்றாலும் மேற்கத்திய நவீன படைப்புகளின் வெற்றிக்கு இந்த வடிவ நேர்த்தியும் படைப்பிலக்கியத் தொழில்நுட்பமும் முக்கிய பங்காற்றுகின்றன. எந்த இடத்திலும் இடறிவிடாமல், வாசகருக்குக் கேள்வி எழா வண்ணம் ஒவ்வொரு சொல்லையும் தேர்ந்து கோத்துள்ளார் ஷோபா. கருத்துகளையும் பார்வைகளையும் பாத்திரங்கள் வழியாக, வாசகரின் பார்வையில் சட்டென்று தெரியாவண்ணம் திறமையாக அவர் வெளிப்படுத்துகிறார். எடுத்துக்காட்டாக, ஈழப் போரில் இந்தியாவின் பங்கு, புலம்பெயர் ஈழ சமூகத்தின் ஈழம், தமிழ் மொழி சார்ந்த செயல்பாடுகள், ஆதரவு நாடுகள்  பற்றி விமர்சனப் பார்வைகளைச் சொல்லலாம்.

கனவுகளில், நாம் அறியாத மொழிகளும் ஊரும் சித்திரமாக வருவதைப்போல, வெளிநாடுகளுக்குச் செல்லாத, வெளிநாட்டு மொழிகளை அறிந்திராத ஒரு பெண், தானே ஒரு புதிய மொழியை உருவாக்கிக்கொள்கிறாள். அந்த மொழியாக்கம் நாவலுக்கு பெரிய அளவில் பங்களிப்புச் செய்யவில்லை என்றாலும், வாசிப்புக்கு எவ்விதத்திலும் இடையூறு செய்யாதவாறு மிகக் கவனமாக அதனைக் கையாண்டு இருக்கிறார். இதில், உயிர்வாழ்வின் நம்பிக்கையனைத்தையும் இழந்த நிலையில் துளிர்க்கும் ஒரு சிறு பற்றுக்கோடான கற்பனைகூட எந்த அளவுக்கு உயிர்சக்தியைத் தரவல்லது என்பதை மிக நுட்பமான உளவியல் அவதானிப்புடன்  பதிவு செய்துள்ளார்.

உச்சபட்சமான அல்லல்களையும் அவதிகளையும் அவமதிப்பையும் இழப்புகளையும் எதிர்கொள்ள கடுஞ்சிறையில் அடைக்கப்பட்ட ஓர் இளம் பெண்ணால் என்னதான் செய்ய முடியும்? பேரதிர்ச்சிக்குப் பிறகான மனஉளைச்சல் (Post-traumatic stress disorder, PTSD) எனப்படும் மனப் பாதிப்பை வாசகர்களிடம் கடத்த, சொற்களை விழுங்கிவிட்டு வடிவத்தை கையில் எடுத்து, அதை தேர்ந்த கலைநுட்பத்துடன்  படைப்பாக்கியிருக்கிறார் ஷோபா சக்தி.

 

பெண் எனும் இச்சா சக்தி

இந்திய சிந்தாந்த மரபின்படி இச்சை எனும் ஆசையின் விழைவானது ஒரு சிறு புற காரணியிலிருந்து உயிர்வாழும் பெரும் அக உந்துதலைப் பெற்று, எல்லாத் துயரங்களையும் கடந்து விடுகிறது என்பதை பெண் எனும் படிமமாகச் சொல்லிச் செல்கிறது இந்நாவல்.

பல்வேறுபட்ட பெண்களின் பார்வையிலும் மனநிலையிலும் போர்களும் அடக்குமுறைகளும் உயிர்ப்பிடிப்பை  மேலும் வலுவாக்குவதை நாவலின் நாயகியான ஆலாவில் தொடங்கி, அவள் அம்மா, அப்பச்சிகள், சித்தி, மல்காந்தி ஆச்சா, தாரணி, செந்தூரி உம்மா, லொக்குநோனா, மர்லின் டேமி, றங்கனி, திரேசா அம்மா, கேஷாயினி, சாருலதா என நாவலில் வரும் அத்தனை பாத்திரங்களிலும் காணலாம்.

spacer.png

இச்சை அகத்தை உறுதியாக்குகிறது, அது சில நேரங்களில் ஆங்காரமாகவும் சில நேரங்களில் அழுத்தமாகவும் சில நேரங்களில் அசரவைக்கும் திறனாகவும் வெளிப்படுகிறது.  வீட்டிலிருந்தாலும் காட்டில் உழைத்தாலும் போர்களத்தில் நின்றாலும் பாலியல் தொழில் செய்தாலும் காதலிலும் காமத்திலும் மூழ்கிக் கிடந்தாலும் சிறையில் அடைபட்டிருந்தாலும் எப்படியிருந்தாலும் எல்லாப் பெண்களுமே வலிமைகொண்டவர்களாக வலம் வருகிறார்கள். சுல்தான் பப்பா மீதான இச்சை ஆலாவை சிறைக்கொடுமையிலும் சிதைந்துவிடாமல் காக்கிறது என்றால், உயிர்வாழ்தல் மீதான இச்சை அவள் அம்மாவுக்கு எல்லாவற்றையும் இழந்தநிலையிலும், மீண்டும் ஓர் உயிரைப் பிறப்பிக்கும் மனவலுவைத் தருகிறது.  “இந்த உயிர் பேராற்றலுள்ளது. இந்த ஆற்றலை திருட்டு நாய் இருட்டில் கஞ்சி குடிப்பது போல் சாவு குடித்துவிடக்கூடாது” என்று ஆலாவின் வரிகளில் இந்த உறுதிப்பாட்டைச் சொல்லிவிடலாம்.

இப்பெண்கள் உலகில் எந்தப் பகுதியின் போர்ச்சூழலுக்கும் பொருந்தக்கூடியவர்கள்.

ஆனால், இந்தப் பெண் பாத்திரங்களின் உயர்வுநவிற்சித் தன்மை அவர்களை நெருங்கிச் செல்ல முடியாது செய்துவிடுகிறது. தமிழ்ப் பெண்கள், சிங்களப் பெண்கள், சிறையில் இருப்பவர்கள், சிறையதிகாரிகள், போராளிகள் என எல்லாப் பெண்களுமே ஏதோ ஒரு விதத்தில் உறுதி மிகுந்தவர்களாகவும் தியாகிகளாகவும் நியாயப்படுத்தப்படக் கூடியவர்களாகவும் ஒரு வகையில் பரிதாபத்திற்குரியவர்களாகவும் இருக்கிறார்கள். வீரம், பரந்துபட்ட சமூகநோக்கு, கீழ்மைகள்- மேன்மைகள் எதிலும் அவர்கள்  ஆண்களுக்கிணையானவர்களாக இல்லை. கொஞ்சம் இயல்பாக இருப்பது வாமனின் அக்கா, கியோமோ நோனா என ஒரிருவர்தான். நாவலில் வரும் பெண்களின் அறியாமையும் ஒரு வகையில் மெல்லிய பரிதாபத்திற்குரியதாகவே காட்டப்படுகிறது. ஆணின் பார்வை, ஆணாதிக்க சிந்தனையின் பிரதிபலிப்பாக இந்தப் பார்வையைக் கொள்ளலாம். பெண்களைப் படையில் சேர்க்க பிரசாரம் செய்பவர்கள் மானத்தையும் கற்பையும் பாதுகாக்க போராட்டத்தில் இணையச் சொல்கிறார்கள். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களின் கதைகளைச் சொல்லி அவர்களுக்கு பயமேற்படுத்தி, அந்த பயத்தை தங்களுக்கு சாதமாக்கிக்கொள்கிறார்கள். அப்பணியையும் பெண்களே செய்கிறார்கள்.

லட்சியவாதமும் மிகை உணர்ச்சியும் மிக்க ஜனரஞ்சகப் படைப்புகளில் தனியுரிமை, விடுதலை, வீரம், தியாகம் போன்ற கோஷங்கள் காதையடைக்கிறது என்றால், இரக்கத்தையும் கருணையையும் பரிதாபத்தையும் கண்ணுக்குத் தெரியாத திரையாகத் தொங்கவிடும் இத்தகைய பின்நவீனத்துவ சிந்தனை அயர்ச்சியைத் தருகிறது.

தன் மரணத்தை தியாகமாகவோ, வீரமாகவோ மாற்றுவது ஒன்றே கொலைக்களத்தில் நிற்கும் ஓர் எளிய பலி பெறக்கூடிய உச்சபட்ச வெற்றி எனில், தன் தலையை முதலில் வெட்டுமாறு முன்வந்து நின்ற மந்திரிகுமாரி சாமிலிதேவியைப் போலவே, தற்கொலைப் போராளியாக முன்வந்து நிற்கிறாள் ஆலா.

உணர்வுநிலை சார்ந்த சிந்தனையும், சுய பகிடியும், சமூக எள்ளலும் நிறைந்த முற்றும் முழுதான தமிழ் மனத்தின் வெளிப்பாடு ஆலாவும் சாமிலிதேவியும். ஒருத்தி சிங்களத்தி, மற்றவள் தமிழச்சி. ஆனால்,  அந்நியர் அல்லது ஆளும் வர்க்கத்தால் எழுதப்படும் வரலாற்றில் இருவருமே பேரினவாதத்தின் பலிகடாக்கள் என்பதை உணர்வுபூர்வமாகவும் தர்க்கபூர்வமாகவும் நிலைநிறுத்துவதன் மூலமாகவே, அச்சிந்தனையைக் கலைத்துப்போடுகிறார் நாவலாசிரியர்.

மட்டக்களப்பின்  கிராமம் ஒன்றில் வளர்ந்த  பதுமர்குடிப் பெண்ணான ஆலாவுக்கு தனது பிரதிபிம்பமாகத் தெரிவது, தமிழனால் கொல்லப்பட்ட ஒரு சிங்கள மந்திரிகுமாரி என்று சொல்வதன் மூலம் இலங்கையின் பெரும்பான்மை – சிறுபான்மை குறித்து இதுகாலம் வரையில் நிர்மாணிக்கப்பட்டு வந்துள்ள மனப்போக்கை ஐயப்பட வைக்கிறார்.

அதேவேளையில், பெரும் சித்திரங்களாக விரியக்கூடிய பல காட்சிகளின் எல்லைகளைக் குறுக்கி விடும்போது ஒரு குறைபாடாகவும் மாறிவிடுகிறது. ஜப்பானுக்கு கிளம்பி கடைசியில் ஜப்பான் மருந்து குடித்து தற்கொலை செய்துகொள்ளும் வேலாயுதத்தின் மனநிலை, கஞ்சா போதையுடனும் கைத்திறனுடனும் உலவிய  ஆலாவின் தம்பி விபுலின் பார்வை, விபுல் தலை வெட்டப்பட்டுக் கிடந்ததும் பாட்டனாரே அவனது தலையை உடம்போடு சேர்த்து தைத்து வைத்ததும், மனநிலை பேதலித்த அப்பா, சிங்களக் கணவரோடும் வயிற்றில் கருவோடும் சிறையில் மகளைக் காணும் தாய் என்று பல காட்சிகள் ஓர் அப்பாவிச் சிறுமியின், இளம் பெண்ணின் பார்வைக்கு அப்பாலும் விரிந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

இலங்கை சமூகமும் ஈழப்போரும்

இலங்கையின் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் குறித்து வெளியுலகில் பகிரப்படும் கருத்துகள் சூழல்நிலை சார்ந்தவை. சில, பல தருணங்களுக்கு மட்டுமேயானவை. பகமையோடும் நட்போடும் ஒன்றாகவே வாழும் இச்சமூகங்களுக்கிடையிலான உறவுகள், ஊடாட்டங்கள் குறித்த ஒரு முழுமையான பார்வையைத் தருவதில் ஓரளவு இந்நாவல் வெற்றி கண்டுள்ளது.

காலனித்துவ காலத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகளின் பிரதிநிதிகளாக, தங்கள் மீது ஆதிக்கம் செலுத்திய இலங்கை/யாழ்ப்பாணத் தமிழர்களிடத்தில் மலேசிய, சிங்கப்பூர் தொழிலாள வர்க்கத்தினருக்கு நூற்றாண்டு காலமாக ஒருவித விலகலும் வெறுப்புமே உருவாகி இருந்தது. கங்காணிகளாகவும் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பதவிகளிலும்  உயர்நிலையில் இருந்த அவர்களை தங்களது தேவைகளுக்காக சந்திக்க வேண்டி இருந்தாலும், தங்கள் கோயில் வட்டாரத்திலும் வசிப்பிடங்களிலும் அண்டவிடாத அவர்களிடம் ஒட்டு உறவு இல்லாமலேயே தமிழகத்தில் இருந்து இங்கு குடியேறிய பெரும்பாலான தமிழர்கள் இருந்து வந்தனர். அதனால் ஈழம், ஈழத் தமிழர்கள் பற்றிய முழுமையான சித்திரமோ அவர்களது போராட்டம் குறித்த ஆழமான புரிதலோ பொதுவாக இங்கு வாழும் மற்ற தமிழர்களிடம் ஏற்படவில்லை. ‘கறுப்புத்துரை’களாக விளங்கிய யாழ்ப்பாணத் தமிழர்களும் மலையாளிகளும்  ஏற்படுத்திய ஆறா வடுக்களின் தழும்புகள்  தொழிலாள சமூகத்தில் இன்னும் நினைவுகளாகப் படிந்திருக்கின்றன. ஆனாலும், 1980களுக்குப் பிறகு உக்கிரமடைந்த ஈழப்போரும் விடுதலைப் புலிகளும் தங்கள் பாட்டி, தாத்தாக்களை எட்டி உதைத்த யாழ்ப்பாணத்து தோட்டத்துக்  கங்காணிகள் மீது இருந்த கோபங்களை மறக்கச் செய்தனர்.  உலக அரங்கில் தமிழர்களைப் பற்றிப் பேச வைத்தவராக, தமிழ் மொழிக்கும் தமிழர்களும் உலகில் ஓர் தனி இடத்தைப் பெற்றுத் தரப் போராடிய தலைவராக இன்றுவரையில் பிரபாகரன் கொண்டாடப் படுகிறார்.

இதற்கு, உலகளாவிய நிலையில் அரசியல், பொருளியல், சமூகவியல் சார்ந்த தனித்த அடையாளத்தையும் இடத்தையும் அடைய வேண்டுமென பல்லாண்டு காலமாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தினிடம் ஊறிச் செரித்துள்ள எண்ணம் முக்கிய காரணம் எனலாம். இந்த லட்சியவாத எண்ணத்தை மேலும் வலுவாக்க, ஊடகங்களும் கல்வியும் வரலாற்று அறிஞர்களும்  போலவே படைப்பிலக்கியங்களும் பங்காற்றின. இத்தகைய மைய நீரோட்டத்தில் இருந்து விலகித்தான் ஷோபா சக்தி போன்ற நவீன எழுத்தாளர்கள் உருவாகிறார்கள்.

ஈழத் தமிழ் மக்களின் அறமும் அநீதியும் அன்பும் பகைமையும் மகிழ்ச்சியும்  துயரமும் துரோகமும் பொறாமையும் வாதையும் வலியும் சாதிகளும் வர்க்கங்களும் என எல்லாமும் நிறைந்த ஒரு நீண்ட வரலாற்றையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் இதுபோன்ற கலை, இலக்கியங்களே பெருமளவில் பொது மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன எனலாம்.

வரலாற்றில் காத்திரமான பகுதியை நவீன எழுத்தாளன் கையில் எடுப்பது ஏன்? அன்றாட செய்திகளை வாசிக்கும் மனிதர்களின் எண்ணற்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வதும் தனது புரிதலை ஒரு விவாதப்பொருளாக்குவதும் ஒரு படைப்பாளியின் பணியாவதில்லை. அல்லது மக்களை ஒத்த மனநிலைக்கு ஒன்று திரட்டுவதும் அவன் கடமையல்ல.

ஷோபா சக்தி ஈழப்போர் சூழலை மட்டுமே தனது புனைவுக்குள் கருவாகக் கொண்டிருக்கிறார் என்றும் அதன் வழி அவர் அந்நிலத்தில் சஞ்சரிக்கிறார் என்றும் கூற்றாகவோ, குற்றச்சாட்டாகவோ சொல்லப்படுவதுண்டு. பூமிக்கு அந்நியமாகப் பறக்கும் கருடனை குறி வைக்க ஒருவன் தன் தோட்டத்தில் விளைந்த மூங்கிலில் அம்பு செய்வது குற்றமாகாது. ஷோபா சக்தியின் ‘இச்சா’ ஈழ மண்ணில் அவருக்கு அறிமுகமான மனிதர்களிடம் தொடங்கி உலகம் முழுமைக்குமான குரலாக ஒலிப்பதுதான் அவரை நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய ஆளுமையாக்குகிறது.

ஓர் எளிய பெண்ணைத் தற்கொலைப் போராளியாக்கும் சமூக, அரசியல் சூழல், அதற்கான மனவலுவை தரும் சுயமும் புறமும் சார்ந்த அகவேட்கை, சிறு பெண்ணின் அசைக்கமுடியாத அந்த வல்லுறுதியையும் அர்ப்பணிப்பையும் அர்த்தமற்றதாக்கும் நுண்ணரசியல், இதனால் ஒரு தொன்மையான சமூகம் இழந்துவிட்ட மீட்டெடுக்க முடியாத சுயம், இதுவே நாவலின் மையக் கரு. இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கில் 1956ஆம் ஆண்டு நிகழ்ந்த தமிழ் மக்களின் மீதான தாக்குதலில் தொடங்கி 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் ஊழிக்காலம் வரையிலான காலகட்டம் நாவலின் பின்புலம்.

இந்தப் பின்புலமும் நிலமும் பின்னுக்குச் சென்று, மானுடன் மெல்ல மெல்ல முன்னிலைக்கு வருவதுதான் ஷோபா சக்தியின் கலைப்படைப்பின் திறம் எனலாம்.

நாட்டார் கதை : ‘கண்டி அரசன்’ கூத்து 

இச்சா நாவலெங்கும் அடிநாதமாக அரசியல், உளவியல் படிமமாக வருவது கண்டி அரசன் கூத்துக் கதை.

அந்நியருக்கு எதிர்ப்புக்கொடி தூக்கிய பூலித்தேவன், கட்டபொம்மன், சிவகங்கைச் சகோதரர்கள் உள்ளிட்ட பாளயக்காரர்களையும் பண்டாரவன்னியனையும் கண்டி அரசனையும் ஒரே சமூகமாகப் பார்க்க முடியாமல் செய்ய, திட்டமிட்ட மனத்தடைகள் தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கப்பட்டு வந்துள்ளதைப்போன்றே, பெரும்பான்மை – சிறுபான்மை பற்றிய கருத்தாங்களும் இலங்கையில் உருவாக்கப்பட்டு வந்துள்ளன.

இலங்கையின் மத்திய பகுதியான கண்டியை ஆண்ட (1780 – ஜனவரி 30, 1832) கடைசித் தமிழ் மன்னனான நாயக்கர் பரம்பரையில் வந்த ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன், நாடு பிடிக்க வந்த கிழக்கிந்திய கம்பெனியின் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து வெற்றிகொண்டவன். இவனைத் தமிழனென்று தமிழர்களும் சிங்களவன் என்று சிங்களவர்களும் தெலுங்கன் என்று இன்னும் சிலரும் சொல்வார்கள். இதுவரை நிறுவப்பட்ட வரலாற்றின் அடிப்படையில் அவன் மதுரை நாயக்கர் பரம்பரையில் வந்த கண்ணுச்சாமி என்ற தமிழன். இந்துவாக இருந்து பௌத்த மதத்தை தழுவியவன்.  கண்டியைக் கட்டியெழுப்பி, மக்களின் வாழ்வை உயர்த்தியவன். இவனது ஆட்சிக் காலம் குழப்பங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்ததாக இருக்கிறது. இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றிய பிரிட்டிஷ்ஷார், கண்டியை குறிவைக்கிறது. போரில் பிரிட்டிஷ் படை தோற்கிறது. விக்கிரம சிங்கனை அரசனாக்கி, போருக்குத் தூண்டிய பிலிமத்தயாவோ எனும் மந்திரி, மன்னனைக் கவிழ்க்க பலமுறை சதிச்செயலில் ஈடுபட்டதற்காகக்  கொல்லப்படுகிறான். அவனது மருமகனான எஹெலபோல மந்திரியாகிறான்.  அவனும் மன்னனுக்கு எதிராகச் செயல்பட்டு குழப்பங்களைத் தூண்டி விடுகிறான். குழப்பங்கள் அடக்கப்பட அவன் தப்பி ஓடுகிறான். சிங்களவர்கள் அதிகம் வாழ்ந்த கண்டிப் பகுதியில் தமிழ் மன்னன் அவனுக்கு சிங்கள மந்திரி.  பிரிட்டிஷ்  1815ல் கண்டியைக் கைப்பற்றி, ‘கண்டி  ஒப்பந்தத்தின்’ மூலம் கண்டி அரசைத் தன்வசமாக்குகிறது.  தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்  1832ஆம் ஆண்டு அங்கேயே உயிரிழந்தான். தற்காலத்தில் இந்தச் சிறையில் இலங்கைப் போராளிகள் பலரும் இருந்திருக்கிறார்கள் என்பதும் ஒரு வரலாறு.

விக்கிரம ராஜசிங்கன்  வேலூர் சிறையில் இறந்த அந்த காலகட்டத்தில், அவனைக்  காமுகனாகவும், மக்களைக் கொடுமைப்படுத்துபனாகவும் சித்திரித்து ஒரு கூத்துக் கதை எழுதப்படுகிறது. அந்தக்காலகட்டத்தின் மக்களிடம் பிரபலமான சமூக ஊடகம் தெருக்கூத்து. கண்டி அரசன் கொடுங்கோலனாக இருக்கிறான், மக்களைக் கொடுமைப்படுத்துகிறான். மன்னனுக்கு பயந்து மந்திரி எஹெலபோல தப்பியோடுகிறான். மன்னன் அவன் மனைவியையும் மக்களையும் கண்டி அரண்மனையில் கொடுமையான முறையில் கொன்றொழிக்கிறான் என்பது கூத்திக் கதை. ஒரு காலத்திலும் எரிந்த கட்சிக்கு, எரியாத கட்சியைப் பற்றி வேறு மாதிரி  சொல்லத் தைரியம் வந்ததில்லை. தமிழ் – சிங்கள மக்களிடையே வெறுப்புணர்வையும் வரலாற்றுத் திரிபையும் ஏற்படுத்தும் ‘கண்டி ராசன்’ என்ற இந்தக் கூத்து,  மதுரை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என வெவ்வேறு இடங்களிலும் எழுதப்பட்டு கிட்டத்தட்ட இருநூற்றாண்டு காலமாக சிங்கள மக்களிடத்திலும் தமிழர்களிடத்திலும் பிரபலமான கூத்தாக வலம் வந்தது.

இந்தக் கூத்தின் உச்சம், மன்னனின் முதலமைச்சர், எஹெலபோலவின் மனைவி தனது பச்சிளங்குழந்தையை உரலில் போட்டு இடிப்பது.  சிறு வயதினரான அவளது இரு ஆண் பிள்ளைகளின் தலைகள் முதலில் துண்டிக்கப்படுகின்றன. பின்னர் பிறந்து 10 நாளே ஆன பச்சிளங்குழந்தையை, அரண்மனை முற்றத்திலிருந்த உரலில் தானே போட்டு, அதன் தலையை அவளே உலக்கையால் குற்றி நொறுக்க வேண்டுமென ஆணையிடுகிறான் கண்டி அரசன். மந்திரி  மனைவி தனது குழந்தையை உரலில் போட்டு, அழுது புலம்பி, பாடியவாறே உலக்கையால் குற்றுவாள். இந்தக் காட்சியே நாடகத்தின் நாடியாக இருக்கும். இதைப் பார்ப்பதற்காகவே மக்கள்  கூடுவர். (தமிழகத்திலும் மேடையேற்றுப்பட்டு வந்த கொடுமைக்காரனான கண்டி அரசன் கூத்தை, நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் புதையல் படத்தில் இடம்பெறச் செய்திருப்பார்.)

பொதுவாக, தமிழ் மரபில் எழும் நாட்டார் கதைகள் ஆளும் வர்க்கத்தால்/சமூகத்தால் ஒடுக்கி அழிக்கப்பட்ட அல்லது தானாகவே அழித்துக்கொண்ட தோற்றுப்போனவர்களை, அவர்கள் கொள்ளைக்காரராக, கொலைபாதகராக இருந்தாலும் தெய்வமாக்கிக் கொண்டாடும். ஆனால், இந்த நாட்டார் கதையின் அடிப்படையே மாறுபட்டிருப்பதை, தமிழ்ச் சிந்தனையை மாற்ற விரும்பிய மேற்கத்திய முன்னோட்ட முயற்சியாகப் பார்க்கலாம். இந்த முயற்சி இன்றுவரையிலும் தொடர்கிறது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது.

கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்களை எதிர்த்த பாளையக்காரர்களும் கண்டி அரசனும் ஒன்றல்ல என்ற எண்ணத்தை உருவாக்கி, யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் மிடையே ஓர்   இடைவெளியும் மேல் கீழ் மனோபாவமும் ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் (இது குறித்து மிக விரிவாகப் பேச வேண்டும்) பங்காளிகளாக, சண்டையும் சமாதானமுமாக வாழ்ந்து வந்த இலங்கை சமூகங்களுக்கிடையே கடக்க முடியாத மனக்கசப்பு வளர்க்கப்பட்டிருப்பதையும் வெளிப்படுத்தும் அரசியல் படிமமாக இக்கூத்தை நாவலில் பார்க்கலாம். சிங்களத்தாய்க்கும் பிள்ளைகளுக்கும் கொடுமை விளைவிக்கப்பட்ட இந்தச் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் கண்டி அரண்மனை, கண்டி ஏரி அருகேயுள்ள கண்டிச் சிறைச்சாலையிலிருந்து ஒரு தமிழ் பெண் தன் கதையைச் சொல்லவைத்திருக்கும் ஷோபா சக்தியின் பகடியை, ஒரு குறுகலான தளத்துக்குள் வைத்துப் பார்க்க முடியாது. கதைக் களத்திலிருந்து விலகி,  ஆலாவுக்கும் அவள் வாழ்ந்த காலத்தின் அக உணர்வுகளுக்கு அப்பால், புறச்சூழலில் நடந்த மாற்றங்களையும் உட்படுத்திய ஓர் அகன்ற பார்வையில் பார்க்க வைக்கிறார்.

மந்திரி மனைவி தனது பச்சிளங் குழந்தையை உரலில் போட்டு அழுதுகொண்டே இடிப்பதைப் பார்ப்பதில் ஏற்படும் அவலருசியாலேயே காலங்காலமாக மக்கள் அக்கூத்தைப் பார்த்து ரசிப்பதைப்போல, ஆலா, சிங்களவர்களால் இழுத்துச் செல்லப்படுவதை  ஊர் மக்களும்; அவளின் துடிதுடிக்கும் வலியை விசாரணையாளர்கள், சிறை அதிகாரிகளும்,  அவளின் கொடும் வதையை இயக்கமும்; வன்புணர்தலில் தொடங்கி, தனிமைச் சிறையில் அடைத்தும், மனப் பிறழ்வை ஏற்படுத்தியும் பிள்ளையிடமிருந்து பிரித்தும் களிப்படையும் வாமனனும்; வெளி உலக கூட்டு சக்திகளால் அனுபவித்த வாதைகளுக்கும் மேலே சென்று, கற்பனையாக அந்தரங்கமான உறவுக்குள் தனிமனிதனாலும் எண்ணங்களின் சாத்தியத்துக்கு எட்டும் மட்டும் துன்புறுத்தலை அனுபவிக்கும் ஆலாவும் ரணத்திலும் ரத்தத்திலும் மரணத்திலும்  கிளர்ச்சியும் பரவசமும் அடையும் நம் மனதின் குரூரங்கள்  என்பது, ‘இச்சா’ நாவலில்  வாசகன் தன்னைக் கண்டடையும் இடம்.

நிகழ்வுகளாலும் ஓர்மைகளாலும் மேலும் மேலும் நிரம்பித் ததும்பும் இந்த வாழ்வு,  அப்படியான அகப் பார்வையைகளையும் அழகுணர்வுகளையும்  உள்வாங்கித்தான் இத்தனை வளர்ந்து  கொண்டிருக்கிறது. தனிமனிதர்களும் சமூகமும் சமூகக்குழுமங்களும் அகத்தினால் புறத்திலும்; புறத்தினால் அகத்திலும் பல சிடுக்குகளில் சிக்கி திண்டாடும் இந்த வாழ்வில், ரசிக்கத் தக்கதாக  குரூரங்களே ஆகிவருகின்றன. உடல் புண்ணை நக்கிச் சுவைக்கும் புலியாக, மனத்தின் புண்களுக்குள் உழன்று உழன்று சுகம் காண்பதிலிருந்து விடுபட, சுயவிசாரணைகளும் அக தரிசனங்களும் தேவைப்படுகின்றன. சொற்களினதும் படைப்புகளினதும் தேவை அதிகரிக்க வேண்டியதும், அவை நம்மை தேடலை நோக்கி நகர்த்த வேண்டிய கட்டாயமும் இதனால்தான்.

 

http://vallinam.com.my/version2/?p=7202

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.