ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியா பிரஸ்தாபிக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வு ஒன்றை இந்தியா ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. இதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு செய்யும் என்று தமிழ் மக்கள் முழுமையாக நம்புகின்றார்கள்.

vikki.jpg

என தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கேள்வி:- இந்திய வெளிநாட்டமைச்சர் இலங்கைக்கு பயணம் செய்து புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை சந்தித்து சென்றிருப்பது குறித்தும் இந்த சந்திப்பின் பின்னர் கோத்தாபய இந்தியாவுக்கு பயணம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்தும் உங்களின் கருத்து என்ன?

பதில்:- ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ பதவி ஏற்ற மறுநாளே இந்திய வெளிநாட்டமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கொழும்பு வந்து சந்தித்து சென்றிருக்கின்றமை அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமானது என்றே நான் கருதுகின்றேன். தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் போன்ற விடயங்களில் இந்தியாவுக்கு பலத்த கரிசணை உண்டு. அதன் நிகழ்ச்சித் திட்டங்களில் இலங்கையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதில் இந்தியா கொண்டிருக்கும் ஆர்வத்தை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

அதேவேளை, இலங்கையில் தமிழ் மக்களின் இன பிரச்சினை தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றைக் கொண்டுவருவதில் இந்தியா தனக்கு இருக்கும் கடப்பாட்டை புரிந்துகொண்டுள்ளது. அதன் காரணமாக புதிய ஜனாதிபதிக்கும் புதிய அரசுக்கும் ஆலோசனைகளை இந்தியா கொடுக்கும் என்று நான் ஆழமாக நம்புகின்றேன்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியா பிரஸ்தாபிக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வு ஒன்றை இந்தியா ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. இதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு செய்யும் என்று தமிழ் மக்கள் முழுமையாக நம்புகின்றார்கள்.

ஏற்படுத்தப்படும் எந்த ஒரு தீர்வும் நிலையானதாகவும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும். குறிப்பாகத் தமிழ் மக்கள் தமது பூர்வீகப் பகுதிகளில் தமது பாரம்பரியம், அடையாளம் மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றைத் தாங்களே நிர்வகிக்கும் வகையில் காணி மற்றும் பொருளாதார விடயங்களில் முழுமையான அதிகாரங்களைக் கொண்டிருக்கும் வகையில் தீர்வு அமையவேண்டும்.

தனி ஒரு மதத்துக்கு முன்னுரிமையையும் சிறப்பு சலுகையையுங் கொடுப்பது எந்தளவுக்கு ஏனைய சமூகங்களின் மனித உரிமைகள் மற்றும் கலாசாரங்களைப் பாதிக்கும் என்பவை எல்லாம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். ஆகவே, இறுதி தீர்வு தொடர்பில் எல்லா தமிழ் கட்சிகள் மத்தியிலும் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தும் பொருட்டு கலந்துரையாடல்கள் நடைபெற வழி வகுப்பப்பட வேண்டும்.

ஐந்து கட்சிகளும் தற்போதும் 13 கோரிக்கைகளை வலியுறுத்துவதாக அறிவித்தால் எம்முள் ஒருவர் எமது கருத்தொற்றுமையை புதிய அரசிடமும் இந்தியாவிடமும் வலியுறுத்தலாம் – என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/69442