(எம்.ஆர்.எம்.வஸீம்)

பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.அரசியல் லாபத்துக்காக சிலர் இவ்வாறான வதந்திகளை பரப்பிவருகின்றனர் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Dulles_alagaperuma.jpg

கெக்கிராவ கல்வி வலயத்தில் கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் சிலருக்கு அவர்களின் முகத்திரை காரணமாக பரீட்சைக்கு தோற்றுவதற்கு இடமளிக்கப்படவில்லை என சமூகவலைத்தளங்களில் பரவிவரும் செய்தி தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கெக்கிராவ கல்வி வலயத்தில் முஸ்லிம் மாணவிகள் சிலருக்கு அவர்களின் கலாசார முகத்திரை காரணமாக பரீட்சை மண்டபத்துக்குள் அனுமதிக்கவில்லை என சில சமூவ வலைத்தளங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இந்த செய்தி எனக்கு கேள்விப்பட்டதுடன், பரீட்சைகள் ஆணையாளருடன் தொடர்புகொண்டு இந்த நிலைமையை சரிசெய்யுமாறு தெரிவித்தேன்.

அதன் பிரகாரம் ஆணையாளர் பரீட்சை மத்திய நிலைய பொறுப்பதிகாரியுடனும் கெக்கிராவ வலய பணிப்பாளருடனும் தொலைபேசியில் கதைத்து இதுதொடர்பாக வினவியுள்ளார்.

ஆனால் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியுடன் தொடர்பான எந்த சம்பவமும் அங்கு இடம்பெறவில்லை என்றும் , இம்முறை பரீட்சைக்கு தோற்றியுள்ள தமிழ், சிங்கள,முஸ்லிம் அனைத்து மாணவர்களும் எந்த தடங்களும் இன்றி பரீட்சைக்கு தோற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்கள் யாருக்கும் பரீட்சை நிலையங்களுக்குள் நெருக்கடிகள், தடங்கல், அச்சுறுத்தல்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதுடன் இவ்வாறான தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பொய் தகவல்களை தெரிவிப்பது குறுகிய அரசியல் லாபத்துக்காக, பரீட்சை மற்றும் மாணவர்களை தங்களின் பக்கம் இழுத்துக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சியாகும். மக்கள் இவ்வாறான பொய் பிரசாரங்களை நிராகரிப்பார்கள்.

அத்துடன் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கல்விப்பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் என அச்சப்பட்டபோதும் மாணவர்கள் எந்த பாதிப்பும் இன்றி இதுவரை பரீட்சைக்கு தோற்றிவருகின்றார்கள்.

மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை. பரீட்சையும் எந்த பாதிப்பும் இன்றி இடம்பெற்று வருகின்றது என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/70408