Jump to content

தமிழ்க் கட்சிகள் பாடும் ‘பழைய பல்லவி’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கட்சிகள் பாடும் ‘பழைய பல்லவி’

புருஜோத்தமன் தங்கமயில்   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 07:26


ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புகள் அடங்குவதற்குள், பொதுத் தேர்தலுக்கான களம் விரிந்திருக்கின்றது. ஏப்ரல் மாத இறுதியில், பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. இவ்வாறான சூழலில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பும், தேர்தல்களை இலக்கு வைத்து, வழக்கமாகப் பாடும் பழைய பல்லவிகளைப் பாட ஆரம்பித்திருக்கின்றது.

ஒரு பல்லவி, ‘ஒற்றுமை, ஒரே தெரிவு, சர்வதேசத்துக்கான செய்தி’ என்று ஆரம்பிக்கும். இன்னொரு பல்லவி, ‘மாற்றுத்தலைமை, பூகோள அரசியல்’ என்றவாறு ஆரம்பிக்கும். இந்தப் பல்லவிகள், தமிழ் மக்களுக்குக் கடந்த பத்து ஆண்டுகளாகப் பழக்கமானவை; கிட்டத்தட்ட சலித்துப்போன பல்லவிகள் ஆகும்.

முள்ளிவாய்க்காலுக்குள் வைத்து, தோற்கடிக்கப்பட்ட ஒரு சமூகமாக - இனக்கூட்டமாக, ‘மீண்டு மீள எழுதல்’ என்பது, மிகுந்த திட்டமிடலோடும் அர்ப்பணிப்போடும் நிகழ்த்தப்பட வேண்டியது. 
துரதிர்ஷ்டவசமாகத் தமிழ்த் தேசியத் தலைமைகளாகத் தங்களை வரிந்து கொண்டவர்களிடம், அதற்கான திட்டமிடலும் இல்லை; அர்ப்பணிப்பும் இல்லை. 

இவ்வாறான நிலையிலும், தமிழ்த் தேசிய அரசியலை மக்கள் தாங்கிப்பிடிப்பது, கடந்த காலப் போராட்டங்களின் நீட்சியாக இருக்கும் ‘ஓர்மம்’ சார்ந்தது. அதுதான், ஒற்றுமையாக நின்று, ஒரே தெரிவை நோக்கி வாக்களிக்கவும் வைத்திருக்கின்றது. 

அப்படியான சூழலில், மக்களின் எதிர்பார்ப்புகளையும் அவர்களின் எதிர்காலத்தையும் சரியாகக் கையாள வேண்டிய பொறுப்பு, அரசியல் தலைமைகளுக்கு உண்டு.  ஆனால், அதைத் தவிர்த்துவிட்டு, தேர்தல்கால புளித்துப்போன வார்த்தைகளோடு, ஒலிவாங்கிகளின் முன் நின்று, ஓங்கிக் கத்துவதால், யாருக்கு என்ன இலாபம்?

ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களின் தெரிவு வெளிப்படையானது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த, அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும், கிட்டத்தட்டத்  தமிழ் மக்களின் நிலைப்பாடுகளுக்கு இசைவாகவே நின்றன. 

ஆனால், தேர்தல் முடிவுகள், தமிழ் மக்களின் தெரிவுக்கு எதிர்மாறாக வந்திருக்கின்ற நிலையில், அதை எதிர்கொள்வதற்கான தைரியத்தையும் முன்னேற்பாடுகளையும் தமிழ்த் தலைமைகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். 

ராஜபக்‌ஷக்கள் ஆட்சிக்கு வந்தது முதல், அறிவிக்கப்படாத சுய தணிக்கையை, ஊடகங்கள் தொடங்கி, தனிப்பட்ட நபர்கள் வரையில் செய்யத் தொடங்கிவிட்டனர். அதற்கு அரசியல் தலைவர்களும் கட்சிகளுக்கும் கூட, விதிவிலக்கல்ல. இது, ஒரு மோட்டுத்தனமான அரசியலின் தொடர்ச்சியாக நிகழ்வதாகும்.

எங்களுக்கு முன்னாலுள்ள தெரிவில், நாங்கள் விரும்பாத தெரிவொன்று நம்மை ஆட்கொள்ளப் போகின்றது என்றால், அதை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் குறித்து, சிந்தித்து வைத்திருக்க வேண்டும். அது, தற்பாதுகாப்பு என்கிற ஒரு நிலையைக் கடந்து செல்ல முடியாது. மாறாக, அதை எதிர்கொள்வதற்கான கட்டங்களை வகுத்துக் கொள்வதிலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும். 

ராஜபக்‌ஷக்களின் வருகைக்குப் பின்னரான இன்றைய சூழலை, எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடங்கி, எந்தத் தமிழ்க் கட்சியிடமும் எந்தத் தெளிவும் இல்லை. போகிற போக்கில், நடக்கும் சம்பவங்களுக்கு ஏற்ப, பிரதிபலித்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலையே காணப்படுகின்றது.

சம்பவங்களுக்குப் பிரதிபலிப்பது மனித இயல்புதான். ஆனால், ஓர் இனக்கூட்டத்தின் அரசியல் என்பது, சம்பவங்களுக்குப் பிரதிபலிப்பதோடு மாத்திரம் முடிந்துவிடக்கூடாது. 

ஏனெனில், அரசியல் என்பது, முக்காலத்தையும் கணிக்கும் ஒருவித கருவி. அந்தக் கருவியைச் சரியாகக் கையாளத் தெரியவில்லை என்றால், அரசியல் அநாதைகளாக வேண்டிய நிலைவரும். அது, அந்த அரசியலைப் பின்பற்றும் சனக்கூட்டத்தை, நடுத்தெருவில் நிறுத்தும். அப்போது, அந்தச் சனக்கூட்டத்தை நோக்கி, யார் யாரோவெல்லாம் அதிகாரம் செலுத்த முனைவார்கள்.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான நாள்களில், கூட்டமைப்பும் எம்.ஏ. சுமந்திரன், சி.வி.கே. சிவஞானம் உள்ளிட்ட அதன் தலைவர்களும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். 

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை என்பது, காலத்தின் தேவையின் போக்கில், ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால், அது, தேர்தல்களை மாத்திரம் இலக்கு வைத்து, நிகழ்த்தப்படும் நாடகமாக மாறும்போதுதான், பிரச்சினை ஆரம்பிக்கின்றது. 

ஒற்றுமை என்பது, ஒரே தரப்பு ஆளுமை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் சார்ந்ததாக இருக்க வேண்டியதில்லை. கூட்டமைப்பின் நிலைபெறுகை என்பது, அனைத்துப் பங்காளிக்கட்சிகள், அமைப்புகளின் சமவகிபாகத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால், கூட்டமைப்பு என்பது, தமிழரசுக் கட்சி என்கிற ஏகநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

தனித்த கட்சியாகத் தமிழரசுக் கட்சி, தன்னை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது குறித்தோ, அதற்காகச் செலவிடும் நேரம் குறித்தோ, விமர்சனம் வெளியிட முடியாது. ஆனால், ஒரு கூட்டணிக்கான தார்மிகங்களை உண்மையிலேயே, தமிழரசுக் கட்சி, தன்னோடு கொண்டு நடக்கின்றதா என்றால், ‘இல்லை’ என்பதே பதில். இந்தப் பதில், என்றைக்குமே உவப்பான ஒன்றல்ல.

இன்னொரு பக்கம், கூட்டமைப்பு என்கிற அடையாளத்தை, ஒரு கவசமாகக் கையாண்டுகொண்டு, மக்களை ஏமாற்றிவிடலாம் என்று, தமிழரசுக் கட்சியும் அதன் தலைமைத்துவ பீடமும் கருதுமாக இருந்தால், அது என்றோ ஒருநாள் தலைகுத்தாக விழவைத்துவிடும். எப்போதுமே, ‘ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூ சக்கரைதான்’. 

ஆனால், உண்மையான சர்க்கரையின் சுவையை, மக்கள் ஒருநாள் கண்டுணரும் போது, இலுப்பைப்பூவின் நிலை என்னாகும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியானநிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும், சரிப்படுத்திக் கொள்ள வேண்டியதும் தமிழரசுக் கட்சியின் முன்னாலுள்ள பெரிய கடப்பாடு ஆகும்.

கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி தவிர்ந்த, ஏனைய இரு பங்காளிக் கட்சிகளினதும் ஒரே எதிர்பார்ப்பு, கட்சியின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். அதுதவிர, அந்தக் கட்சிகளுக்கு என்றோர் அரசியல் நிலைப்பாடோ, எதிர்காலத் திட்டமோ இல்லை. “சம்பந்தன் ஐயா சொன்னால் சரி! அவர் சரியாக முடிவெடுப்பார்” என்பதுதான், அந்தக் கட்சிகளின் ஒற்றை வாக்கு. 

வேண்டுமென்றால், செயற்குழுவைக் கூட்டி, மணித்தியாலக் கணக்கில் பேசிவிட்டு, தமிழரசுக் கட்சி அறிவிக்கும் முடிவை, ஆதரிக்கும் முடிவாக வெளியிடுவார்கள். அந்தக் கட்சிகளின் செயற்குழுக் கூட்டங்களும் அதன் பின்னரான ஊடகச் சந்திப்புகளும் பத்திரிகைகளின் பக்கங்களை நிறைப்பதற்கு உதவி இருக்கின்றனவே தவிர, வேறு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியதில்லை.

‘மாற்றுத்தலைமை, பூகோள அரசியல்....’ பல்லவிக் காரர்களிடமும் இப்போது, குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. இரு குழுக்களாகப் பிரிந்திருக்கிறார்கள். ஒரு குழு, சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றது. இன்னொரு குழு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பின்னால் நிற்கின்றது. கூட்டமைப்புக்கு எதிரான அனைத்துத் தரப்புகளும், இந்த இரண்டு குழுக்களுக்கும் பின்னால் நிற்கின்றன என்பதுதான் சிறப்பம்சம். 

ஆனால், மக்கள் யாரின் பின்னால் நிற்கிறார்கள் என்பது குறித்தெல்லாம், இந்தத் தரப்புகள் யோசிப்பதில்லை. வேறு வழியில்லாமல், கூட்டமைப்புக்கு எதிராக ஒரு கட்டம் வரையில், கஜேந்திரகுமாரை மாற்றுத் தலைமையாக முன்னிறுத்திய கூட்டம், விக்னேஸ்வரனைக் கண்டதும், அவரை நடுத்தெருவில் நிறுத்தியது. இப்போதும், பொதுத் தேர்தலுக்கான பலமான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில், தொடர் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றது.

கூட்டமைப்புக்கு எதிரான, உண்மையான மாற்றுத்தலைமை, தான்தான் என்று கஜேந்திரகுமார் அண்மையில் உரிமை கோரியிருக்கின்றார். விக்னேஸ்வரன் பின்னால் சென்று விட்டவர்களோ, வரும் பொதுத் தேர்தலில் எப்படியாவது, கஜேந்திரகுமாரைத் தாண்டி வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்கிற ஒற்றை நிலையை நோக்கிச் செயற்படுகிறார்கள். 

அதன்மூலம், கூட்டமைப்புக்கு மாற்று யார் என்கிற உரித்தை எடுத்துக் கொள்ளும் போட்டியில் முன்னேற முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால்,  இந்தக் குழுவால் நல்லூரையும் யாழ். நகரையும் தாண்டி எங்கும் நகர முடியாது என்பதுதான் வேதனையாது. 

ஏனெனில், அரசியல், குறிப்பாக தேர்தல் அரசியல் என்பது, அதிக உடல் உழைப்பைக்கோரும் விடயம். விக்னேஸ்வரன் பின்னால் இருப்பவர்கள், உடலில் வியர்வை வெளியேறாது வேலை செய்ய விரும்புவர்கள் ஆவர். அவர்களால், கொழுத்தும் வெய்யிலில் மக்களிடம் நேரடியாகச் சென்று வாக்குக் கேட்கும் வேலையையேல்லாம் செய்ய முடியாது.

இவர்களோடு ஒப்பிடுகையில், கஜேந்திரகுமாரின் பின்னால் இருக்கும் இளைஞர்கள், யாழ்ப்பாணத்துக்கு உள்ளாவது வேலை செய்வார்கள். இந்த இரண்டு தரப்பினரும் சேர்ந்துதான், மாற்றுத் தலைமை வெளியை நிரப்பப் போகிறார்கள்.

வழக்கம்போல, இம்முறையும் பழைய பல்லவியோடு வரும் இந்தத் தரப்புகள் பெரிய மாற்றங்கள் எதையும் நிகழ்த்தப்போவதில்லை என்பது மக்களுக்குத் தெரியும். அப்போது, குறைந்த பாதிப்பை வழங்கும் தரப்பை, ஜனாதிபதித் தேர்தலில் தேர்தெடுந்ததுபோல, பொதுத் தேர்தலில், இருப்பதில்  சிறந்ததைத் தெரிவு செய்வார்கள். அது, கூட்டமைப்புக்கு மீண்டும் வசதியாக மாறும். அவ்வளவுதான்!
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்க்-கட்சிகள்-பாடும்-பழைய-பல்லவி/91-242367

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.