Jump to content

புத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் | கனலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் - பகுதி 1 | கனலி

book-recommendations-by-writers1.jpg

கனலி கலை – இலக்கிய இணையதளம் வாசிப்பு பழக்கத்தை தொடர்ந்து  ஊக்குவிக்கும் விதமாக அவ்வப்போது  புதிய புதிய  முயற்சிகளை முன்னெடுக்க விரும்புகிறது . அந்த வகையில் மலர்ந்திருக்கிற  புத்தாண்டு 2020 ல்  எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஓவியர்கள் உள்ளிட்ட படைப்பாளிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களிடம் கேள்வி ஒன்றை  முன் வைத்தோம்.

“இந்த புத்தாண்டில் யாருக்காவது புத்தகம் பரிசளிக்க அல்லது பரிந்துரைக்க விரும்பினால், அது எந்த புத்தகமாக இருக்கும்?  ஏன் அந்த புத்தகம் ?”

இந்த கேள்விக்கான பதிலாக நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளர்கள் புத்தகங்களை பரிந்துரை செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக  இந்த பரிந்துரைகளை பட்டியலாக வடிவமைத்தப் போது மிகப்பெரிய நூல் பரிந்துரைப் பட்டியலாக ஆவணமாகியது . படைப்பாளர்கள் பரிந்துரைத்த ஒவ்வொரு புத்தகமும்  வாசகர்களுக்கும்.. புதிதாக வாசிக்க வரும் இளைய தலைமுறையினருக்கும் புத்தாண்டு பரிசாக  பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறோம்.

புத்தகங்கள் பரிந்துரைத்த படைப்பாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் கனலி கலை – இலக்கிய இணையதளக்குழுவின் மனமார்ந்த நன்றி.

அனைவருக்கும்  புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தக பரிந்துரைகள் இதோ…!

எழுத்தாளர் வண்ணநிலவன்:

எல்லா காலங்களிலும் வாசகர்களுக்கு டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’ நாவலை பரிந்துரை செய்கிறேன். ஒவ்வொரு முறையும் மனதளவில் ஒவ்வொரு மனிதரும் புத்துயிர்பு பெற கட்டாயம் இந்த பேரிலக்கியத்தை வாசிக்கவும்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன்:

இந்த புத்தாண்டில் நான் நண்பர்களுக்கு எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய மனைமாட்சி நாவலை பரிந்துரை செய்கிறேன்.

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எழுத்தாளர் எஸ்.சங்கரநாரயணன்

புத்தாண்டுப் பரிசாக நான் மகிழ்ச்சியுடன் அளிப்பது..

தந்திர வாக்கியம் – நாவல்
எழுதியவர் : எம்.ஜி.சுரேஷ்
வெளியீடு ‘சொல்லங்காடி’ சென்னை.

ஒரு ஐ. டி. வளாகத்துக் கதையாகத் துவங்கி, தமிழ் ஆதிகுடி பெண் ஒருத்தியுடன் நாயகனது காதல் என வேர்களை நோக்கி ஒரு எடுப்பு கொடுத்து, நாயகனது தந்தைக்கு நாயகன், சீன யாத்ரிகனின் குறிப்புகள் அடங்கிய பழைய நூலைத் தேடியளிப்பதாக வளர்ந்து, உதிரி உதிரியாகச் சொல்லப் பட்ட கதை. புராதன பிரமைகளைக் கட்டவிழ்க்கிறது நாவல். அரசனின் அந்தப்புரத்து மகராணியர் என்கிற சித்திரத்தை அவர் துலக்கிக் காட்டும் இடம் கலவரப் படுத்துகிறது. எதிரி நாட்டை வென்றதும் அவனது அந்தப் புரத்தில் இருந்து தோற்றுப்போன அரசனின் ஆசைமனைவிகள், பஞ்ச பராரிகளாய் பட்டினியால் எலும்பும் தோலுமான உடலுடன், விடுதலைப்பட்ட ஆவேசத்துடன் வெளியேவரும் காட்சி தமிழுக்குப் புதியது. களப்பிரர் காலம் வரலாற்றின் இருண்ட காலம், என்று இருப்பதைப் பொற்காலமாக நிருவி மிகப் பெரும் கான்வாசில் இயங்கும் கதை. நிகழ் இறந்த எதிர்காலம் என முக்காலப் பரிமாணத்துடன் நாவலின் சிந்தனைப் பயணம் பிரமிக்க வைக்கிறது. எம்.ஜி. சுரேஷின் கடைசி நாவல். மதிப்பீடுகள், தத்துவ தரிசனங்கள் வட்டப் பாதை கொண்டவை என்கிற பதிவாகவும் இதை அவதானிக்கலாம்.

80778512_2778551705538102_91605871827196

எழுத்தாளர் வெளி ரங்கராஜன்:

சமகால தத்துவ சிந்தனையாளரும்,நியாஸில் தத்துவம் பயில்விப்பவரும்,ஹெக்கோடுவில் உள்ள நிநாசம் அமைப்பின் நாடக செயல்பாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான சுந்தர் சருக்கையின் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட `இரண்டு தந்தையர்` நாடகத் தொகுப்பையே நான் பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.

இவற்றை மிகவும் சரளமாகவும்,உயிர்ப்பான மொழிப்பிரயோகத்துடனும் தமிழாக்கம் செய்திருப்பவர் சீனிவாச ராமானுஜம். அகம்/புறம் சார்ந்த பண்பாட்டு முரண்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தாது நிலவிவரும் இந்திய/தமிழ்ச் சூழலில் நம்முடைய கலாச்சார மற்றும் சிந்தனைத் தளத்துடன் நெருங்கிய தொடர்புகள் கொண்ட கணிதமேதை ராமானுஜன்,அறிவியலாளர் ஐன்ஸ்டீன்,மகாத்மா காந்திஆகிய சென்ற நூற்றாண்டின் மூன்று முக்கிய பரிசோதனையாளர்களின் அக/புற வாழ்க்கையின் முரண்பாடுகள் இப்பிரதிகளில் கேள்விக்குள்ளாகும் விதம் மிகுந்த ஈடுபாட்டையும் ஒரு செறிவான வாசிப்பையும் சாத்தியப்படுத்துவதாக உள்ளது.இந்தமுரண்பாடுகள் குறித்த கேள்விகளை மேலும்மேலும் கூர்மைப்படுத்தவேண்டிய தேவைகள் நாளுக்குநாள் பெருகிவரும் ஒரு சூழலில் இப்பிரதிகள் அதிக முக்கியம் வாய்ந்தவையாகின்றன.ராமானுஜன்,ஐன்ஸ்டீன்,காந்தி ஆகிய இந்த பரிசோதனையாளர்களின் குடும்ப வாழ்க்கை குறித்து வெளிச்சத்துக்கு வந்ததும்,வராததுமான பல புனைவுகள் இந்த நாடகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டு அவர்களுடைய அறிவியல்/ஆன்மீக முனைப்புகளுக்கும்,குடும்ப மதிப்பீடுகளுக்கும் இடையிலுள்ள முரண்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த நாடகங்கள் காலம் குறித்த நேர்கோட்டுத்தன்மையிலான புரிதலை கலைத்துப் போடுகின்றன.ஒரு நிகழ்தளத்தில்,மனித உடல்களின் பிரசன்னத்தில் காலத்தின் பல்வேறு மதிப்பீடுகள் உரசிப் பார்க்கப்படும் சாத்தியங்களை இவை முன்வைப்பவை.

 

irandu-thanthaiyar__69716_zoom-197x300.j

எழுத்தாளர் வே.மு.பொதியவெற்பன்:

ய.மணிகண்டனின் ‘மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்’ நூலைப் பரிந்துரைக்கிறேன்.

“புதுத்தமிழ் என்று இலக்கிய வரலாறு அங்கீகரித்துள்ள தமிழ் செல்லப்பாவாலும், க.நா.சு, புதுமைப்பித்தன், மௌனி ,மணிக்கொடியாலும் உருவானதுதான்.
புதுமைப்பித்தனையும் மணிக்கொடியையும் தவிர இங்கு பெயர் குறிப்பிட்ட யாரும் பாரதிதாசனைப் புரிந்து கொள்ளவும் இல்லை, அங்கீகரிக்கவும் இல்லை.
தமிழ் இலக்கிய வரலாற்றை வரையறைப்படுத்த இந்த விஷயங்கள் முக்கியமானவைகளாகும்”- தமிழவன் (‘தீராநதி’)

‘காக்கைச் சிறகினிலே’ இதழில் பாரதிதாசனும் மணிக்கொடி எழுத்து கலைஞர்களும் தொடர்பாக மூலபாட ஆய்வு நெறியியல் கூறுகளுடன் 8 கட்டுரைகளை முன்வைத்தார். இவை பாரதிததாசனியல், மணிக்கொடி, எழுத்து ஆய்வுக்களங்களில் புதியவெளிச்சம் பாய்ச்சின. இதன் வாயிலாக பாரதிததாசனுக்கும் அவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வுகளும், அவர்களுடைய பங்ளிப்புகளும் பாரதிதாசன் மீதான அவர்கள் மதிப்பீடுகளும் துலக்கமுறுகின்றன. இதனால் தமிழவன் தரப்புகள் தகர்ந்தே போயின. இலக்கிய நவீனத்துவம் அறிவொளிமரபு நவீனத்துவமும் சங்கமிக்கும் சங்கு முகமே இந்நூலின் சிறப்பாகும்.

51ew1IMnYL._SR600315_PIWhiteStripBottomL

எழுத்தாளர் எம்.ஏ. சுசிலா

எப்போதும் எல்லாக் காலத்துக்கும் ஏற்றதாக நான் பரிசளிக்க விரும்பும் ஒரே முழுமையான நூல் பாரதி கவிதைகள். முன்னைப் பழமைக்கு முந்தையதற்கும்.. பின்னைப் புதுமைக்கும் ஈடு கொடுத்து என்றும் நிலையாக நிற்பவன் பாரதி என்பதால்.

எழுத்தாளர் பவா செல்லத்துரை:

கல்பட்டா நாராயணன் எழுதி, கே.வி ஷைலஜா தமிழில் மொழிபெயர்த்த “சுமித்ரா” நாவலை இந்த புத்தாண்டில் என் வாசகர்களுக்கு பரிசளிக்க மற்றும் பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.

ஒரு மீனின் துள்ளல் அளவிற்கே உள்ள வாழ்வு சுமித்ரா வுக்கு மட்டுமல்ல நாம் எல்லாருக்குமானது. இந்த சின்ன ஜீவித்தில்தான், எத்தனை சறுக்கல்கள், துரோகங்கள், பெருமிதங்கள், மீறல்கள், எழுச்சிகள் என மனிதவாழ்வை சீட்டுக்கட்டுகளை போன்றே அடுக்கிக் கொண்டே போகலாம்.

கல்பட்டா நாராயணன் ஒரு கவிஞன் என்பதால் சுமித்ரா நாவலை அத்தனை கவித்துவமான சொற்களால் ஒரு பெண்ணின் வாழ்வை நுட்பமான சிற்பம் போல சொற்களால் செதுக்கி இருப்பார். கொஞ்சம் பிசகினாலும் தவறான ஓவியமாகிவிடும் சுமித்ராவை நம் எல்லாருக்கும் பிரியமானவளாக நெருக்கி இருப்பார்.

நாம் வாழவேண்டிய வாழ்வு என சுமித்ரா வாழ்வை பார்த்து நம் எல்லாரையும் ஏக்கம் கொள்ள வைத்திருப்பார் கல்பட்டா நாராயணன்.

நாவலின் துவக்கமே அசாத்தியமானது தினம் தினம் நடைபயிற்சிக்கு போகும் வாசுதேவன் எப்போதும் காலை எட்டரை மணிக்கு நடைபயிற்சி முடிந்து , வீட்டிற்கு திரும்பி வருவார். அன்று எழரை மணிக்கு சுமித்ரா மரணித்து விடுவாள்.

கல்பட்டா எழுதுகிறார் ” அவளுடனான உலகத்தில் ஒரு மணி நேரம் கூடுதலாக வாழ்வதற்கு வாசுதேவனுக்கு வாய்த்திருக்கிறது” என்று.

மகத்தான படைப்பாளிகளுக்கு மட்டும் கைகூடும் இந்த சொற்கள் கல்பட்டா என்கிற கவிஞருக்கும்,அதை சிந்தி விடாமல் தமிழக்கு கொண்டுவந்த ஷைலஜா வுக்கும் வாய்த்திருக்கிறது.

என் வாசகர்களுக்கும், என் நண்பர்களுக்கும் புத்தாண்டு பரிசாக அல்லது பரிந்துரையாக சுமித்ரா நாவலை அளிக்கிறேன்.

எழுத்தாளர் முத்துநாகு:

புத்தாண்டில் நண்பர்களுக்கு எனது பரிந்துரை ‘Castes of mind’

இந்த நூல் இந்திய சமூகத்தில் எப்படி குலம் என்ற சாதி ஒவ்வொரு தனிமனித மூலைக்குள்ளும் உள்ளது என்பதை அறிவியல், சமூக வரலாறு இவைகளை நாம் ஏற்றுக் கொள்ளும்படி ,மறுக்காத அளவிற்கு எழுதப்பட்ட நூல் என நான் நம்புகிறேன்.

எழுத்தாளர் தேவிபாரதி:

அய்ஃபர் டுன்ஷ் எழுதிய அஸீஸ் பே சம்பவம் என்னும் துருக்கிய நாவல், சுகுமாரன் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு வெளியிட்டிருக்கும் இந்தச் சிறிய நாவல் காதலாலும் ஒப்புக்கொடுத்தலாலும் அலைக்கழிக்கப்படும் எளிய மனிதன் ஒருவனைப்பற்றிய கவித்துவம் ததும்பும் கோட்டுச் சித்திரம். நம்மாலும் மற்ற பலராலும் எளிதில் கடந்துசெல்ல முடிந்த வாழ்வைக் கடக்க முடியாமல் திணறும் அந்த மனிதனில் ரகசியமாகவேனும் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். இதற்கப்பால் அது நல்ல வாசிப்பனுபவத்தைத் தரும் படைப்பு, புத்தாண்டில் நான் இதையே பரிந்துரை செய்ய, பரிசளிக்க விரும்புவேன்.

image59-550x550h-185x300.jpeg

எழுத்தாளர் ஜி.குப்புசாமி:

நான் பரிசளிக்க விரும்பும் புத்தகம் ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984. 

இந்நூல் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த சமயத்தில் வெளிவந்தது. எதிர்காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் மூன்று மாபெரும் வல்லரசுகளின் அங்கங்களாக இணைந்துவிட்டிருக்கும் என்று ஆர்வெல் கற்பனை செய்கிறார். அதில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்த தேசத்தில் கதை நடக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறார்கள். வரலாறுகள் அழிக்கப்பட்டு திருத்தியெழுதப் படுகின்றன. மக்களின் பேச்சும் செய்கையும் மட்டுமல்ல, சிந்தனை கூட கண்காணிக்கப்படுகிறது. மக்களுக்கு கற்பனையாக எதிரிகள் உருவாக்கப்பட்டு எந்நேரமும் அவர்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் அரசு ஊடகங்களால் நிகழ்த்தப்பட்டு மக்களுக்கு வெறியேற்றுகிறது. தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருப்பதை ஜார்ஜ் ஆர்வெல் 1940களிலேயே எழுதிவிட்டிருக்கிறார். தீர்க்கதரிசி!

1984_FrontImage_595-195x300.jpg

எழுத்தாளர் சு.வேணுகோபால்:

புதிய வருடத்தில் நான் தஸ்தாயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் என்கிற புத்தகத்தை யாரவது ஒரு நண்பருக்கு பரிசளிக்க விரும்புகிறேன்.

காரணம் தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவல் கடவுளின் இருப்பு குறித்தும். மனிதர்களின் வாழ்க்கை குறித்தும் எனக்கு சரியான புரிதல்களை அளித்துள்ளது.
இந்த புத்தகம் அளவிற்கு வேறெந்த புத்தகமும் எனக்கு அந்த புரிதல்களை தரவில்லை.

image436-550x550h-187x300.jpeg

எழுத்தாளர்அனுராதா ஆனந்த்:

கிரீஷ் கர்னாட் தனது 22 ஆவது வயதில் கன்னடத்தில் எழுதிய மஹாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம் யயாதி. எளிதாக இதன் கதைச் சுருக்கம்…

அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானியை மணம் கொள்கிறான் யயாதி என்னும் மன்னன். ஷர்மிஷ்டா என்ற தேவயானியின் சேடிப் பெண்ணுடனும் உறவு கொள்கிறான் . இதனால் கடுங்கோபமடைந்த சுக்கிராச்சாரியார் இளமையிலேயே முதுமையடையுமாறு யயாதியை சாபிக்கிறார்.பிறகு மனமிறங்கி யயாதியின் மகன்களுள் யாராவது தமது இளமையை உவந்து தந்தைக்கு அளித்தால் சாப விமோசனமடையலாம் என்றும் அனுமதிக்கிறார்.
யயாதி தன் பிள்ளைகளிடம் இளமை வேண்டி கையேந்தி நிற்கிறான். எல்லா பிள்ளைகளும் மறுத்தபின் கடைசியில் ஷர்மிஷ்டையின் மகன் புரு தந்தைக்காக தன் இளமையைத் துறந்து முதுமை கோலம் பூணுகிறான் . பின் இத் தீரா இளமைத் தரும் சலிப்போடும் குற்ற உணர்ச்சியுடனும் வாழ்கிறான் யயாதி.

அக்காலம் தொட்டு இன்று வரையிலும், பல காரணங்களுக்காக , நம் நாட்டில் , இளைஞர்களின் இளமையும் உயிரும் காவு வாங்கப்பட்டுக் கொண்டு தானிருக்கிறது.

இந்நாடகம் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ,நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 2007 யில் கிரீஷ் கர்னாட் தானே இதை ஆங்கிலத்திலும் பெயர்த்தார்.

எழுத்தாளர் பெருந்தேவி:

ரூமியின்  ‘தாகங்கொண்ட மீனொன்று.’ தமிழில் என். சத்தியமூர்த்தி மொழிபெயர்த்தது. இன்றைய சூழலில் ஒரு புறம் சமயத்தின் பெயரில் பாசிஸம் அரங்கேறுகிறது. இன்னொரு புறம் இறைமை, ஆன்மீகம் இவையெல்லாம் கெட்ட வார்த்தைகளாகக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் வன்முறையின் தொடர் அரங்கேற்றம். இந்நிலையில் இலக்கியம் குறிப்பாக கவிதை மட்டுமே என்னைப் போன்றவர்களுக்கு அடைக்கலமாக உள்ளது. ‘துச்சமெனத் தூக்கியெறியப்படும்’ நுண்ணுணர்வுகளுக்கும் மேன்மைகளுக்கும் ஒளிந்துகொள்ள இடம் தருகிறது கவிதை எனும் ‘உயிர்த்துத் தளும்பும் உலகு.’ அத்தகையதோர் அற்புதமான உலகு ரூமி படைத்திருப்பது.

roomi-190x300.jpg

கவிஞர் ஸ்ரீவள்ளி:

திருவாசகம், நாச்சியார் திருமொழி தாண்டி வாசித்தது சொற்பம். ரில்கே, போதலேர் தாண்டி நவீன கவிதை வெளிப்பாடுகளோடு அதிகப் பரிச்சயமில்லை. தமிழில் சமீபத்தில் கவிஞர் சமயவேல் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ஸ்பானியக் கவிஞர் குளோரியா ஃப்யூர்டஸ் கவிதைகள் படிக்கக் கிடைத்தன. வீசு தென்றலைப் போன்ற எளிய, இனிய மொழி.

கவிஞர் மனுஷ்யபுத்திரனின் ’இடமும் இருப்பும்’ படித்திருக்கிறேன். சொல் இறந்து நின்ற தொன்மை கொண்ட பிரபஞ்சத்தில் துகளினும் அற்பமானது நம் இருப்பு. பிரியமே அதை அர்த்தபூர்வமாக்குகிறது. ஆனால், இத்தொகுப்பிலிருக்கும் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் சில்லிட்டுப்போன பிரியங்களின் கோப்பையில் அருகருகே மிதக்கும், உடைந்துபோகும் பனிக்கட்டிகள் நாம் என்பதைத் தவறாமல் நினைவூட்டுகின்றன.

gloria-fyurdas-kavithaigal_FrontImage_26idamum-iruppum-16616-193x300.jpg

எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர் நக்கீரன்

காலம் தொடங்கியபோது இருந்த கோடிக்கணக்கான உயிர்களில் 99.9% உயிர்கள் அழிந்துவிட்டன. இந்த அறிவியல் உண்மை நமக்கு முறையாக கற்றுத்தரப்பட்டிருந்தால் மனித உலகம் வேறு மாதிரி அமைந்திருக்கும். அதிலும் பாடநூல்களின் அறிவியல் எழுத்துமுறை ஒரு வேகாதப் பண்டம். வெளிநாடுகளிலும் இதே கதைதான். இந்தக் குறையைப் போக்கும் விதத்தில் பில் பிரைசன் என்பவரால் எழுதப்பட்டதே, ‘அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு’ நூல்.

இயற்கை அறிவியலை அறிய உலகின் அனைத்துக் கண்டங்களுக்கும் நேரடியாக பயணம் செய்கிறார். 18 நாடுகளில் உள்ள 176 அருங்காட்சியகங்களுக்கும் செல்கிறார். சமகாலத்தில் வாழும் 2000 அறிவியலாளர்களைச் சந்திக்கிறார். இவற்றின் ஒட்டுமொத்த உழைப்பே இந்த நூல். இயற்பியல், வேதியியல், உயிரியல், விண்ணியல், புவியியல், பரிணாமவியல் அனைத்தையும் இவ்வளவு எளிமையாக விளக்க முடியுமா என்று வியப்பை அளிக்கிறது.

anaiththaiyum-kuriththa-surukkamaana-var
 

700 பக்கமும் வாசிக்கையில் ஆலி (ஐஸ்கட்டி)போல உருகி கரைகிறது. Creative Non Fiction வகைமைக்கு நல்ல எடுத்துக்காட்டு. அதனால் ஆங்கிலத்தில் வெளியான ஓராண்டிலேயே பத்து இலட்சம் நூல்கள் விற்பனையாகி சாதனைப் படைத்தது. அறிவியல் உள்ளுக்குள் நுழைய நுழைய, மூட நம்பிக்கைகள் மனசிலிருந்து பாம்புச் சட்டையைப் போல உரிந்து விழும் விந்தையை இந்த நூல் நிகழ்த்துவதால் இதைப் பரிசளிக்க விரும்புகிறேன்.

எழுத்தாளர் அழகிய பெரியவன்:

நான் அண்மையில் படித்த, மனதை நிறைத்திருக்கிற அன்னை நாவலையே பரிசாகத் தர இத்தருணத்தில் விரும்புகிறது மனம். அன்னை கிரேசியா டெலடா என்ற இத்தாலிய எழுத்தாளரால் எழுதப்பட்ட ஒரு சிறிய நாவல். இந்த நாவலுக்காக அவருக்கு 1927 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலக அளவில் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளர் டெலடா தான் என்று நினைக்கிறேன். கிரேசியா இத்தாலிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய தீவில் பிறந்து வளர்ந்தவர். அந்தத் தீவையே கதைக்களமாகக் கொண்டு நாவலை எழுதியிருக்கிறார். கணவனை இழந்த ஒரு ஏழைத்தாய் தன் மகனை மதகுருவாக்க விரும்புகிறார். அப்படியே அவரின் மகன் பால் கத்தோலிக்க மதகுருவாக ஆகிறான். இருவரும் ஒரு மலை கிராமத்தில் வந்து தங்குகிறார்கள். தாய் தன் மகன் மதகுருவாக ஆகிவிட்டதில் மகிழ்ச்சி அடைய, பாலோ தன் இளம் வயதுக்கே உரிய உணர்வில் மூழ்கி அக்கிராமத்தில் இருக்கும் ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டு தடுமாறுகிறான். ஒரு புறம் மனித மனதின் உயர் இலட்சியம். மறுபக்கம் மனித உணர்வின் இயல்பான விருப்பம். இவற்றுக்கு இடையில் நடக்கும் போராட்டம் என நாவல் மனித எண்ணங்களையும் போராட்டங்களையும் மிகத் துல்லியமாகச் சித்தரித்து செல்கிறது. படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு ஆழ்மன வெளிப்பாட்டையும், ஆன்ம உணர்வையும், வாழ்வின் இயங்கியல் சார்ந்த தர்கங்களையும் வழங்கிடும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது இந்த நாவல். இந்த நாவலின் மொழிபெயர்ப்பு பற்றி சொல்லியாகவேண்டும். தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர் தி.ஜானகிராமன் மொழிபெயர்த்தது. மிக இயல்பான உயிரோட்டம் கொண்ட மொழிபெயர்ப்பு.

annai-195x300.jpg

எழுத்தாளர் க.மோகனரங்கன்:

புதிய வருடத்தில் ஒரு புத்தகத்தை பரிசளிக்க வேண்டுமெனில் என் தேர்வு ‘ பாப்லோ நெரூதா கவிதைகள் ‘ .
ஒரு சமூகஉயிரி என்றவகையில் தீவிரமான அரசியல் பார்வையையும் , தனிமனிதன் என்ற நோக்கில் தன் அகக்கொந்தளிப்புகளையும் தனது கவிதைகளில் நேர்மையாக முன்வைத்த நெருடாவின் கவிதைகள் பரவலான வாசக ஈர்ப்பையும் அதேசமயத்தில் மொழியின் மந்திர மயக்கத்தையும் தன்னில் தக்கவைத்திருப்பவை. படித்து முடித்தபிறகு நினைவில் எதிரொலிக்கும் பலவரிகள் , இக் கவிதைகளை மீளவும் வாசிக்கத் தூண்டும்.

pablo-neruda-kavithaigal_FrontImage_926-

எழுத்தாளர்  வாசுதேவன் :

Professor Borges—A Course on English Literature. 1966ல் தன்னுடைய 67 வயதில் அர்ஜெண்டைனா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு ஆங்கில இலக்கியத்தைப் பற்றி போர்ஹெஸ் வகுப்பெடுத்துள்ளார். அவர் உரையாடியது மொத்தமாக ஒரு நூலாக சில வருடங்களுக்கு முன் வெளிவந்துள்ளது. பல தலைப்புகளில் உரையாடியுள்ளார். கிருஸ்துவ கவிதைகள், இங்கிலாந்தில் கவிதையின் வரலாறு, 5-ம் நூற்றாண்டு ஆங்கிலோ-சாக்ஸன் இலக்கியம் ( அவருக்கு விருப்பமான இந்த தலைப்பில் மட்டும் ஏழு உரைகள்), 18ம் நூற்றாண்டு வரை உலக இலக்கிய வரலாறு, ரொமாண்டிக் காலகட்டத்தில் இலக்கியம், சாமுவல் ஜான்சன், வேர்ட்ஸ்வொர்த், கொலிரிட்ஜ் கவிதைகள், விக்டோரியன் கால இலக்கியங்கள், ராபர்ட் ப்ரொனிங் கவிதைகள், வில்லியம் ப்ளேக், ரொசாட்டி, ஆர்.எல்.ஸ்டிவன்சன் என நம்மை அசரவைக்கிறார். அரிய நூல்களை மேற்கோள் காட்டுகிறார். நூல்கள், ஆளுமைகள் மற்றும் வரலாற்று முக்கிய சம்பவங்கள் பற்றிய அடிக்குறிப்புகள் மட்டும் 33 பக்கங்கள் வருகிறது. மேற்கத்திய ஆங்கில இலக்கியத்தின் வரலாறை அறிந்துகொள்ள வேண்டும் என்ற தேடலில் இருக்கும் சீரியஸ் வாசகர்களுக்கு ஒரு அரிய பொக்கிஷம்….

 

borges-201x300.jpg

எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன்:

கவிதைத் தொகுப்பு எனில் பொன்முகலியின் ‘தாழம்பூ‘ (தமிழினி வெளியீடு). மொழி நேர்த்தியும் முற்றிலும் புதிய கவித்துவ நுட்பங்களையும் கொண்ட கவிதைகள்.

நாவல் – குணா கவியழகனின்  ‘கர்ப்ப நிலம்‘. போருக்குப் பிந்தைய ஈழ நாவல்களில் முக்கியமானது.

சிறுகதைத் தொகுப்பு – ராம் தங்கத்தின் ‘திருக்கார்த்தியல்‘. உழைக்கும் சிறுவர்களின் உலகத்தை வெகு நுட்பமாகச் சொல்லும் கதைகளைக் கொண்டது.

karppanilam-195x300.jpg

எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா:

நண்பர்களுக்கு  இந்த புத்தாண்டில் க.நா.சு எழுதிய பொய்த்தேவு நாவலை பரிந்துரை செய்கிறேன்.
காரணம் எப்போதும் க.நா.சு வின் மொழிபெயர்ப்புகள் மற்றும் இலக்கிய விமர்சனங்களை தாண்டி நிச்சயமாக வாசிக்கப்பட வேண்டிய அவரின் நாவல்.

poiththevu-puthuppunal-195x300.jpg

கவிஞர் தேவேந்திர பூபதி:

இந்த புத்தாண்டில் நான் இரண்டு புத்தகங்களை நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.

ஒன்று ஹெர்மன் ஹெஸ்ஸெ எழுதிய ‘சித்தார்த்தன்.’

மற்றொன்று ஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு.’

ஒன்று தத்துவம் சார்ந்து என்னை அலைக்கழித்து செல்லும் நாவல். மற்றொன்று வாழ்க்கை பற்றி திரும்ப திரும்ப கேள்விகளை கேட்டு அலைக்கழித்து செல்லும் நாவல்.

24633837-196x300.jpgkurathi-mudagu-185x300.jpg

எழுத்தாளர்  பாதசாரி விஸ்வநாதன்:

கு.அழகிரிசாமி சிறுகதைகள் தொகுப்பு / காலச்சுவடு /

காரணம் : இந்த வாழ்வை வைத்துக் கொண்டு மனிதன் என்ன செய்வது என்பதை கதை கதையாகச் சொல்கிறார் கு.அ.

ku-azhagirisamy-sirukathaigal-195x300.jp

எழுத்தாளர் ராஜ சுந்தரராஜன்:

சயந்தன் எழுதிய “ஆதிரை“. ‘தமிழினி’ வெளியீடு.

ஈழப் போராட்டத்தின் எல்லாக் கோணங்களையும் பதிவுசெய்துள்ள நாவல்.

புலிகளைப் பற்றிய உயர்வுநவிற்சி அவ்வளவாக இல்லை. போராளிகளின் துரோக முகங்களும் காட்டப்படுகின்றன. பணமுள்ள தமிழர்களை நாடுபெயர அனுமதித்தல், சுயசாதி அபிமானம் காட்டுதல் முதலியனவும் வெளிப்பட்டிருக்கின்றன.

கிட்டத்தட்ட ஒரு பதினைந்து ஆண்டுகால வரலாறு, எதுவும் விலகல் என்று சொல்ல முடியாதபடி, பதியப்பட்டு இருக்கிறது.  ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, வாசிக்கிற இந்தியத் தமிழர்களுக்கும் தோன்றும் ஒரு குற்ற உணர்வு தவிர்க்க முடியாதது.

aathirai-204x300.jpg

எழுத்தாளர் மற்றும் ஒவியர் சீனிவாசன் நடராஜன்:

ஓரான் பாமுக்கின் என் பெயர் சிவப்பு நாவல் ஓவிய கலையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
ஐரோப்பாவில் துருக்கி குறிப்பிடும்படியான இஸ்லாமிய பண்பாட்டு நிலப்பரப்பு.
கீழைத்தேய நாடுகளான நமக்கு ஐரோப்பிய கலாச்சாரத்திற்கும் பாலமாக கிட்டத்தட்ட இரண்டையும் சமன்படுத்தி பார்க்கும் பண்பாட்டுக் கூறுகளை ஆராய்ந்து எழுதப்பட்ட நாவல் ஆகவே நான் இதை பரிசளிக்க மற்றும் பரிந்துரை செய்கிறேன்.
இந்திய மொழிகளில் நேரடியாக எழுதப்பட்ட நாவல்கள் பலவும் இதைத்தாண்டி போயிருக்கலாம்.
ஐரோப்பாவில் கொண்டாடப்படும் என் பெயர் சிவப்பு மானுடத்தில் அறியப்பட வேண்டிய கலை பண்பாட்டுத் தளத்தை கீழைத்தேய நாடுகளில் நின்று பேசுவதுபோல் அமைந்திருப்பதே என்னுடைய தேர்வுக்கு காரணம்.
தமிழில் மொழிபெயர்ப்பு ஜி.குப்புசாமி

sivappu-199x300.jpg

எழுத்தாளர் கே.வி.ஷைலஜா :

பரிந்துரைக்கும் நூல் அன்புள்ள ஏவாளுக்கு. 

ஆலிஸ் வாக்கர் எழுதி  தமிழில் ஷஹிதா மொழிபெயர்த்த இந்த புத்தகத்தை பரிசளிப்பேன். காரணம் கீழே உள்ள  காணொளியில் சொல்லி இருக்கிறேன்.

anbulla-yevaalukku-198x300.jpg

 

 

 

 



கவிஞர் வெய்யில்:

2020 – இந்தப் புது ஆண்டில் என் அன்பிற்குரியவர்களுக்கு நான் பரிசளிக்க விரும்பும் நூல் இது:

கூலித்தமிழ் (கட்டுரைகள்)
மு.நித்யானந்தன்
வெளியீடு: க்ரியா, சென்னை.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்தியாவிலிருந்து இலங்கையின் காப்பித் தோட்டங்களுக்குக் கூலிகளாகச் சென்ற லட்சக்கணக்கான ஏழை மக்களின் பயண அவலத்தை, வேலைக் கொடுமைகளை, அடிமைவாழ்வை, ஆங்கிலேயர்கள் இம்மக்களின்மீது ஏவிய அடக்குமுறைகளை பெரும் சிரத்தையுடன் பல்வேறு தளங்களில்தான் சேகரித்த நூல்கள், நாளிதழ்கள், துண்டுப்பிரசூரங்கள், அகராதிகள், கடிதங்கள், அறிக்கைகள், போன்றவற்றின் ஆதாரங்களோடு விவரிக்கிறார் நூலாசிரியர் நித்யானந்தன்.

இந்தியாவிலிருந்து சென்று, தங்களது நூற்றாண்டுக்காலப் பேருழைப்பால் இலங்கையின் வளர்ச்சியில் பங்கேற்று, இலங்கையின் குடிமக்களாக மாறிய மலையகத் தமிழர்களின் வரலாற்றில் உருவான முதல் இரண்டு நூல்கள்: ‘கோப்பிக்கிருஷிக் கும்மி’, ‘தமிழ்வழிகாட்டி’. இந்நூல்களின் வழியே நமக்குக் கிடைக்கும் வரலாற்றுச் செய்திகள் குறித்து விரிவாக ஆராய்வதோடு மலையகத்தில் எழுதப்பட்ட முதல் நாவல்களான ‘சுந்தர மீனாள் அல்லது காதலின்வெற்றி’, ‘கண்ணனின்காதலி’ குறித்தும் விரிவாகப் பேசுகிறது கூலித்தமிழ்.

coolitamil-210x300.jpg

தமிழ்நாட்டில் வறுமை நிலையை பூதாகரமாக்கி அதேசமயம் மலையகக் காப்பித்தோட்டங்களில் செல்வ வளம் கொழிப்பதாகச் செய்யப்பட்ட உளவியல் பிரச்சாரங்கள், கடல் பயணங்களில், தரைவழிப் பயணங்களில் மக்கள் அனுபவித்த கொடுமைகள், பலியான உயிர்கள், அக்காலகட்டத்தில் இவ்வுண்மை சார்ந்து எழுந்த எதிர்க்குரல்கள், அவர்கள்மீதான அடக்குமுறைகள் போன்ற அரிய தகவல்களைக் கொண்டிருக்கிறது நூல்.

1869-ல் ஆபிரகாம் ஜோசப் எழுதிய ‘கோப்பிக் கிருஷிக் கும்மி’ என்ற நூல் காப்பித் தோட்டங்களில் பயிர் செய்யும் முறையை விவரிக்கும் கும்மிப்பாடல் நூல்தான் என்றாலும், அந்தநூலில் தொனிக்கும் பிரச்சாரக்குரல், வேலைகள் சார்ந்த விவரிப்புகள், மதம் தொடர்பான அறிவுரைகள் என அது அந்த மக்களிடம் செயலாற்றியிருக்கும் பங்கை நூலாசிரியர் பல்வேறு காலகட்டத் தரவுகளோடும் அரசியல் சூழல்களோடும் பொருத்தி, விமர்சன ரீதியிலான பார்வையை முன்வைக்கிறார்.

1877-ல் அதே ஜோசப்பால் எழுதப்பட்ட ‘தமிழ்வழிகாட்டி’ என்ற நூல், கூலிகள் பேசுகின்ற ‘கூலித்தமிழ்’ மொழியை ஆங்கிலத் துரைமார்கள் கற்றறிந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்டது. ஆங்கிலம் வழி தமிழ் போதினியான இந்த நூலில், கூலிகளை அழைப்பதற்கு, கட்டளையிடுவதற்கு, தண்டனை தருவதற்கு, கூலி தருவதற்கு / மறுப்பதற்கு பயன்படுத்தப்படும் சொற்கள், கூலிகளுக்கும் மேனேஜர்களுக்கும் / கூலிகளுக்கும் துரைமார்களுக்கும் நடக்கும் உரையாடல்கள் என நிறைய பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இவ்வுரையாடலின் வழியாக தொழிலாளர்களின் அடிமை நிலையை, ஆங்கிலேயர்களின் எதேட்சதிகார மனநிலையை அவர்களிடம் நிலவிய மத, பொருளாதார, அதிகாரங்களை நாம் புரிந்துகொள்வதற்கு அந்த நூலில் உள்ள தடயங்களைத் தொகுத்துத் தருகிறார் நூலாசிரியர்.

மிக ஆழமாகவும் விரிவாகவும் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. மலையகத் தமிழர்களின் வரலாற்று வேர்களை, அவர்களது ஆரம்பகால இலக்கிய முயற்சிகளை அறிய விரும்பும் ஒருவருக்கு ‘கூலித்தமிழ்’ துயரையும் மகிழ்ச்சியையும் ஆச்சரியங்களையும் ஒருசேர தரும்!


கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்:

குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் – ஏங்கெல்ஸ்

பொதுவாக, நாம் இன்று வாழ்வதைப் போலத்தான் வரலாறு முழுக்கவே வாழ்ந்திருக்கிறோம் என்பதைப் போன்ற மனச்சித்திரம் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. ஆனால், மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனின் பரிணாமம் மேலிருந்து கீழே அருளப்பட்டது அல்ல. கீழிலிருந்து மேலே செல்லும் வளர்ச்சிப்பாதை உடையது. ஆதி கால மானுட வாழ்வு எத்தகையது, குடும்பம் எனும் மீச்சிறு சமூக அளவு எப்போது, எப்படி உருவானது, அரசு என்ற கருத்தாக்கத்தின் பரிணாமம் என்ன? இன்றைய முதலாளித்துவ சமூகம் எப்படி இந்த வளர்ச்சி நிலைக்கு வந்து சேர்ந்தது என்பதை, மார்க்சிய பொருள் முதவாதப் பார்வையோடு முன்வைக்கும் முக்கியமான நூல்.

 

kudumpam-198x300.jpg

பொறுப்புணர்வுள்ள சிவிக் சமூகம் ஒன்றை நோக்கிச் செல்ல மனிதர் கடந்துவந்த பாதை அறிய வேண்டியது அவசியம். அந்த வகையில் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான சமூகவியல் ஆவணம் இந்நூல். புதிய வாசக தலைமுறைக்கான புது மொழி பெயர்ப்பு ஒன்றையும் இந்த நூல் இப்போது கோரி நிற்கிறது என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட நினைக்கிறேன்.

கவிஞர் கதிர்பாரதி:

என்னுடைய புத்தகப் பரிந்துரை : ‘நீலகண்டப் பறவையைத் தேடி‘ – அதீன் பந்த்யோபாத்யாய.

கற்பனாவாத எழுத்துமுறையின் முக்கியமான இந்திய நாவல். தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்திருக்கிறார்.
மனதின் நீட்சி எதுவோ அதுவே கனவின் நீட்சி. மாற்றியும்கூட புரிந்துகொள்ள இதில் இடம் இருக்கிறது… கனவின் நீட்சி உக்கிரம் எதுவோ அதுவே மனதின் நீட்சி. இதுவே நாவல் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கும் அகச்சரடு. பிரிக்கப்படாத இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது லீக் கட்சி, பாக். பிரிவிரினையை முன்வைக்க நிர்பந்திக்கப்பட்ட காலத்தில் நடக்கிற கதை. இந்த நாவல் தமிழக நிலவியலுக்கு மிகவும் நெருக்கமானது. படைப்பு மனநிலையைப் புதுப்பிக்க அல்லது தக்கவைக்க இந்த நாவல் எனக்கு பேருதவியாக இருக்கிறது. நாவலின் முக்கிய பாத்திரமான மணீந்திர நாத் போன்ற ஒரு மனிதர் எங்கள் ஊரில் இருந்தார். மேற்கு சூரியனை ஒருநாள் அவர் சொன்னார்… சோபிதமாகப் பேசும் சூரியன் என்று. அந்தியைப் பார்க்கும்போது எல்லாம் எனக்கு அவரும் மணீந்திர நாத்தும் நினைவுக்கு வருவார்கள். மனித மனதின் மாயத்தன்மை மீது பயணிக்கிற இந்நாவலை வாசிப்புக்குள் நுழைபவர்கள் தவறவிடக்கூடாது எனப் பரிந்துரைக்கிறேன்.

neelakanda-paravaiyai-thedi-1-193x300.jp

கவிஞர் ஜான் சுந்தர்:
அசாத்தியக்கலைஞர் கண்மணி குணசேகரன் அவர்களின் ‘பூரணிபொற்கலை‘ புத்தகத்தையே நான் கொடுப்பேன்.
ஊர் எல்லையில் அமர்ந்திருக்கும் காவல்தெய்வங்களைஎழுப்பி நடமாட வைத்திருக்கும் அந்த புத்தகத்திற்குள் அவ்வளவு புதையல் !
வேடப்பனும், கறுப்பும், குதிரையும், யானையும், துறிஞ்சிமரமும்
புளியமரத்தில் குடியிருக்கும் அமானுடப் பாத்திரங்களும் உங்களை விட்டுவிடும். உங்களால்தான் அவற்றை விடவே முடியாது

 

.poorani-191x300.jpg

எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ்:

புத்தாண்டு நாளில் ஒரு ரஷ்ய மாஸ்டர் – தஸ்தவ்யெஸ்கியின் சூதாடி

தஸ்தவ்யெஸ்கி அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளின் வழியாக வாழ்வின் மிகப் பெரிய சிக்கல்களைத் தன் நாவல்களில் அலசுவது வழக்கம்.

இந்த நாவலின் மையப் புள்ளி சூதாட்டம் என்ற செயல் என்று தோன்றினாலும், தஸ்தவ்யெஸ்கியின் பார்வைக் குவிப்பு மொத்தமும் இந்நாவலில் பணம் உருவாக்கும் அடிமைத்தனத்தின் மீதும் அது மனித உறவுகள்மீது கொண்டுள்ள தாக்கத்தைச் சுற்றியே இருக்கிறது.

பாவம் என்னும் அடிமைத்தனத்திலிருந்து மனிதர்களை மீட்க மீட்பர் ஒருவர் வருவார் என்பது கிறித்துவ சித்தாந்தம். ஆனால் இந்த நாவலில் வரும் அத்தைக் கிழவி போலி மீட்பராகிறாள். பணமிருந்தும் ஜெனரலின் குடும்பத்தைக் கடன் தொல்லையிலிருந்து மீட்க மறுக்கிறாள். தானே சூதாடி அடிமையுமாகிறாள்.

மாறாக சூதாடியாக மாறும் அலெக்ஸெய்யே போலினாவுக்கும் (ஒரு வகையில் ஜெனரலுக்கும்), ப்ளான்ச்சுக்கும் மீட்பராகிறான். ஆனால் பாவத்திற்கு எப்போதும் அப்பாலிருந்த கிறிஸ்து போல் அல்லாமல் அவனே அடிமையாகிறான். தஸ்தவ்யெஸ்கியின் நாவல்களின் வரும் பல பாத்திரங்களைப்போலவே (உதாரணத்திற்கு மிஷ்கின்) அலெக்ஸெய்யும் ஒரு வகையில் அசடனான, குறையுள்ள மீட்பன்.

suuthadi-203x300.jpg
 

அதனால் அவன் போலினாவுக்கும், ப்ளான்ச்சுக்கும் தந்த மீட்பு போலியானதாகுமா என்பது கேள்வி.

‘சூதாடி’ சின்ன நாவல் என்றாலும் காத்திரமானது. தஸ்தவ்யெஸ்கியின் நாவல்களில் வரும் பல முக்கிய அலசல்களை உள்ளடக்கியது.

 எழுத்தாளர் காலபைரவன்:
இந்த புத்தாண்டில் யாருக்காவது ஒரே ஒரு புத்தகத்தை பரிசீலிப்பதாக இருந்தால் தாராசங்கர் பந்தோபாத்யாயா எழுதிய ஆரோக்கிய நிகேதனம் என்னும் நாவலை பரிசளிப்பேன்.
காரணம், அந்த நாவல் இந்திய தன்மையை அதன் வேர்களின் ஊடாக சென்று எழுதப்பட்ட நாவல். மேலும் ஜீவன் மஷாய் எனும் நாவலின் முதன்மையான பாத்திரத்தை எவராலும் சுலபத்தில் புறந்தள்ளிவிட முடியாது. இந்த நாவலின் அடிநாதம் நவீன அறிவியலுக்கும் மரபார்ந்த மருத்துவ முறைகளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தையே பேசுகிறது. நவீனம் என்ற பெயரால் அனைத்தையுமே வியாபாரமாக்கி வாழ்க்கையின் உள்ளார்ந்த அர்த்தங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் மரபின் பிடியை இறுகப் பற்றியிருக்கும் இந்த நாவலையே நான் பரிசளிக்க விரும்புகிறேன்.

arogya-nikethanam-sakithya-academy-198x3

எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன்:
புதிய வருடத்தில் நான் ஒருவருக்கு பரிசளிக்க விரும்பும் புத்தகம்.

இலக்கியத்துக்குள் புதிதாக நுழையும் யாருக்கும் நான் பரிந்துரைக்கும் நூல் எஸ்ராவின் கதாவிலாசம்.

ஐம்பது எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகம் ஒரே தொகுப்பில். வாழ்வில் தனக்கு நேர்ந்த அனுபவங்களோடு ஒரு கதையை தொடர்புபடுத்தி அதன் வழியாக ஒவ்வொரு எழுத்தாளரையும் எஸ்ரா அறிமுகம் செய்திருப்பார். இலக்கியமெனும் மாபெரும் கனவின் கதவுகள் எனக்கு இந்நூலின் வழியாகவே திறந்தன. ஆகவே புதிதாக வாசிக்கும் எவருக்கும் நான் கதாவிலாசத்தையே பரிசளிப்பேன்.

274-201x300.jpg

 கவிஞர் தி.பரமேசுவரி :

ம.பொ.சி எழுதிய ‘எனது போராட்டம்‘ எனும் நூலைப் பரிந்துரைப்பேன். இன்றைய தமிழகம் எப்படி உருவானது என்பதையே அறியாதவொரு தலைமுறை உருவாகி அரசியல் பேசும் சூழலில் எனது போராட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நூலாக நிலைக்கிறது. கல்வி பெற முடியாத வறுமைச்சூழலைக் கடந்து தன்முயற்சியால் கற்ற ஒருவர், அரசியல்திறத்துடன் இலக்கிய மொழியில் எழுதிய நூலிது. முக்கியமான தன்வரலாற்று நூல் மட்டுமல்லாது விடுதலைப் போராட்ட காலத்தையும் அதற்குப் பிறகான எல்லைப் போராட்ட வரலாற்றையும் வெளிப்படுத்தும் நூல். இன்றைய தமிழ்த்தேசீய எழுச்சிச் சூழலில், ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

enathu-poraataam-190x300.jpg

எழுத்தாளர் கே.என்.செந்தில்:

குற்றமும் தண்டனையும் – பியோதர் தாஸ்தயேவ்ஸ்கி

துப்பறியும் நாவலின் கச்சாப்பொருளான கொலையை முன்னிட்டு இந்நாவல் குற்றத்தையும் குற்றவாளியையும் உள்ளோக்கி சென்று ஆராய்கிறது. மலினமானத் தந்திரங்களின் வழியாக வாசகரை ’கட்டிப்போடுவதற்கான’ எவ்வித உபாயங்களையும் அதற்கான வாய்ப்புகள் இருந்தும் நாவலாசிரியர் எங்குமே கையாளவில்லை என்பதாலேயே இப்படைப்பு வெகுசனப்பிரதியின் தன்மையிலிருந்து தன்னைத் துண்டிந்துக் கொண்டு பெரும் இலக்கியப்பிரதியாக வாசகர் முன் எழுகிறது.

பத்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் இந்நாவலை வாசித்த பொழுதை இப்போதும் துல்லியமாக நினைவு கூறமுடிகிறது. ரஸ்கோல்நிகோவ் என்னும் முதன்மை பாத்திரம் வட்டிக்கடைக் கிழவியை கொன்றுவிட்டு அடையும் குற்ற உணர்ச்சியும் அவனுள் நிகழும் நியாய- அநியாய மோதல்களும் தனிமையில் அவன் காணும் உருவெளித் தோற்றங்களும் அலைபாய்தல்களின் துயரங்களையும் கண்டு கிட்டத்தட்ட மனக்கொந்தளிப்புக்கு ஆளானேன். குற்றம் அது சிறிதோ பெரிதோ மனிதர்களுள் நிகழ்த்தும் அகப்போராட்டங்களை பதற்றங்களை கட்டுப்பாடுகளை மீறி மனம் செல்லும் இடங்களை அஞ்சும்படியாக எவ்வாறு இப்படி இந்தச் ’சூதாடி தாடிக்காரன்’ காட்டுகிறான் என்ற வியப்பு நாவலின் பக்கங்கள் முன்னேற முன்னேற அதிகமானபடியே தான் இருந்தது. குறிப்பிடத்தக்க ஆனால் குறைந்த அளவிலான பாத்திரங்களை வைத்துக் கொண்டு அக இருளை பேசுவதன் மூலமும் நாடகீயத் தருணங்களுக்குள் அவர்களை நிறுத்தி உரையாடச் செய்வதன் மூலமும் பெரிய நாவலை எழுதிவிட முடியும் என முதன்முறையாக தாஸ்தவெஸ்கியின் மூலமே அறிந்தேன். கிளைப்பாத்திரங்களில் முழுமை உள்ளது என்ற போதும் அவர்களுக்கான பிரத்யேக வாழ்க்கைப் பின்னணிகள் – தல்ஸ்தோய் போல- தாஸ்தவெஸ்கியால் சொல்லப்படுவதில்லை.


இவரது பிற நாவல்களில் உள்ளது போல காதலின் நாடகீயச் சம்பவங்கள், தனக்கு மட்டுமே உரிமை(possessiveness) கொண்டாடுவதன் வழி ஏற்படும் பழிதூற்றல்கள்,வலிகள். அவர்களுள் நிகழும் மாறாட்டங்கள் இந்நாவலில் இல்லை. ( அசடன் : மிஷ்கின் – நாஸ்டாலியா பிலிப்போவ்னா- அக்லேயே ; கரமஸோவ் சகோதர்கள் : திமித்ரி கரம்ஸோவ் – குருஷென்கா- காத்ரினா இவானோவ்னா). மாறாக அன்பின் சுடராக வரும் சோனியா – ரஸ்கோல்னிகோவ் இடையில் காதலின் தத்தளிப்புகள், சிறிய அளவினான பரஸ்பர காயப்படுத்தல்கள் உள்ளன. குற்றத்தின் மனவிடுதலை தண்டனையை ஏற்பதிலேயே உள்ளது என்ற சோனியாவின் சொற்களுக்குப் பணிந்து நாயகன் சைபீரியச் சிறைக்குச் செல்கிறான். (’புத்துயிர்ப்பி’ல் மாஸ்லவாவுக்கு தன் இழைத்த பாவத்திற்காக சைபீரியச் சிறையை பின் தொடரும் அதன் நாயகன் நினைவுக்கு வருகிறான் அல்லவா?)
குற்றமும் அது நடந்த இடம் அங்கிருந்த மனிதர்கள் , சாட்சிகள், விசாரணைகள் , போலீஸ் அதிகாரிக்கும் ரஸ்கோல்னிகோவ்க்கும் இடையே ‘கொலை’யை முன் வைத்து நிகழும் பேச்சுகள் அவனது சஞ்சலங்கள் என அந்ததந்த துறைகளுக்குரியவர்களுக்கான மிகப்பெரிய கையேடாக இன்றளவும் இந்நாவல் விளங்கிவருவதைப் பலரும் அறிந்திருக்கக் கூடும்.

kuttaramum-thandanaiyum-206x300.jpg
இந்நாவலை வாசித்த பாதிப்பிலிருந்து மீள்வது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் மறுவாசிப்பு செய்த போதும் இந்நாவல் அளித்த அனுபவம் முந்தையதற்குச் சற்றும் குறைந்திருக்கவில்லை. குறிப்பாக ஸ்க்டியானோவின் கனவை வேறு சிலவற்றையெல்லாம் புதிதாகக் கண்டடைந்தேன். அந்த வாசிப்பின் நினைவிலிருந்தே இவ்வளவையும் எழுதியிருக்கிறேன்.
தஸ்தாவெஸ்கியின் பேரிலயக்கங்களுள் ஒன்றான ‘குற்றமும் தண்டனையும்’ நாவலையே இந்த புத்தாண்டுக்கு உவகையுடன் பரிசளிக்க விரும்புவேன்.

எழுத்தாளர் கே. என். சிவராமன்:

வாசுதேவன் எழுதியிருக்கும் ‘மாயன்: ஹூலியோ கொர்த்தஸார்’.

நீங்கள் ஆரம்பநிலை வாசகர் என்றால், இந்த நூல் உங்களை மாபெரும் பிரபஞ்சத்துக்கு அழைத்துச் செல்லும்.

ஏற்கனவே லத்தீன் அமெரிக்க எழுத்துகளுடன் பரீட்சயம் கொண்டவராக நீங்கள் இருந்தால், உங்களுக்குள் அடைப்பட்டிருக்கும் கதவுகளை இப்புத்தகம் திறக்கும்.81724567_2778838558842750_62000835643698

கொர்த்தஸாரின் படைப்புகளை ஆங்கிலத்தில் வாசித்து அறிந்தவராக நீங்கள் இருந்தால், உங்களுக்குள் இருக்கும் முடிச்சுகளை இப்புத்தகம் அவிழ்க்கும்.

ஆம். அந்தளவுக்கு ஹைப்பர் லிங்க் ஆக இந்த அறிமுக நூலை எழுதியிருக்கிறார். ஒன்றைத் தொட்டு மற்றொன்று… அதிலிருந்து பிறிதொன்று… என இந்தத் தனி மரம் மாபெரும் வனமாக காட்சியளிக்கிறது. மொத்தத்தில் ‘மாயன்: ஹூலியோ கொர்த்தஸார்’ நூல், இன்றைய தமிழ்ச் சிறுபத்திரிகை கலைஞர்களுக்கான அரசியல் ஆயுதம்!

இந்த அறிமுக வரிசையை வாசுதேவன் தொடர வேண்டும். தொடர்ந்து வெப்பன் சப்ளை செய்து ஆயுத வியாபாரியாக கோலோச்ச வேண்டும்!

‘மாயன்: ஹூலியோ கொர்த்தஸார்’
வாசுதேவன்
பக்கங்கள்: 156
யாவரும் பதிப்பகம்
விலை: ரூ.200/-

இந்நூல் குறித்து விரிவான பதிவு வாசிக்க Click Here

எழுத்தாளர் அகர முதல்வன் :

தமிழ் மொழியின் சந்தத்தை தனது கவிதைகளில் சந்நதமாய் ஆக்கிவரும் வெய்யிலின் கவிமொழி சமகாலத்தில் ஏற்படுத்தியிருக்கும் வாசக அலையை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். அவரின் கவிதைகளில் உருவாக்கப்படும் காட்சிகள் தொன்மத்தின் ஆணிவேரிலிருந்து வெளிக்கிளம்பி மண்ணின் பிடிமானத்தோடு எழுந்து நிற்கிறது. தமிழ் மொழி கண்டிருக்கும் அசாதாரண கவிதைகளை கொண்டிருக்கும் அக்காளின் எலும்புகள் எனும் வெயிலின் கவிதை நூலை இதுவரைக்கும் நிறையப் பேருக்கு பரிந்துரைத்திருக்கிறேன்.அதுபோலவே கனலி இணையத்தளத்தின் வாயிலாகவும் அதனை செய்ய விளைகிறேன். நன்றி

akkalin-elumbukal-212x300.jpg

கவிஞர் ச.துரை:

என் பரிந்துரை  கிழவனும் கடலும்.

வெறுப்பும் சலிப்பும் ஏற்படுகிற போது இந்த நூலை எடுத்துக்கொள்வேன்.
பிறருக்கு இந்த நூலை பரிந்துரைபதற்கு  முன் இந்நூல் எனக்கு பரிந்துரைக்கபட்ட சம்பவத்தை கூற நினைக்கிறேன். எனக்கு கிழவனும் கடலும் நூலை பரிந்துரைத்த நபர் எழுபது வயது மலையாளி. அவரும் அவரது மனைவியும் தற்கொலை செய்ய இராமேஸ்வரம் வந்திருக்கிறார்கள். துர்தஷ்டவசமாக அவர் மனைவி இறக்க இவர் பிழைத்துக் கொள்கிறார். சிகிச்சைகாக மருத்துவமனையில் இருந்த அவர் அருகில் புத்தகங்களோடு இருந்த  என்னை அழைத்து கிழவனும் கடலும் வாசிச்சுருக்கியா என கேட்டார். நான் இல்லை என்றேன். சாவில் இருந்து மீண்டு  கத்தி கிழித்த கழுத்தின் கட்டுகளோடு  பலமற்று போன நம்பிக்கையிழந்த குரலின் கரகரப்பில் சொன்னார். கண்டிப்பா வாசி அதில் வருகிற கிழவன் நான்தான்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது மனைவி இறந்த சுவடு இன்னும் அழியவில்லை. சுற்றி நான்கைந்து காவல் அதிகாரிகள்  அவரை தற்கொலைக்கு முயற்சிக்க கூடாது என அறிவுறுத்த வந்த தேவாலய கன்னியாஸ்திரி இருவர் என சூழ்ந்திருந்த  அந்த கூட்டத்திற்கு நடுவே இந்நூலை பரிந்துரைக்க என்ன அவசியமிருந்திட போகிறது. வீட்டுக்கு திரும்பிய உடனே வாங்கி வாசித்தேன். அவர் சொன்னது போலவே அந்த கிழவன் அவர்தான்.

எல்லோராலும் இனி தேவையற்றவனாக நிராகரிக்கப்பட்ட பணி ஓய்வு பெற்றவர். தனித்து தன்னை நிரூபிக்க முயன்று தோற்று சலித்துப்போனவர்.

kizhavanum-kadalum-218x300.jpg
அவர் என்னிடம் சொன்னார். அந்த கதையில் வருகிற கிழவன் அந்த மீனோடு போராடுவான். அது மாதிரிதான் எனது மரணத்தோடு நிதானமாக இனி போராட போகிறேன். அந்த வார்த்தைகள் இந்நூலின் வாசிப்பிற்கு பிறகே
புரிந்தது. அடிக்கடி இச்சம்பவத்தையும் நூலையும் பொறுத்திப் பார்ப்பேன். எதுவுமற்று போவதற்கும் தோற்று போவதற்கும் நிராகரிப்புகளை பெற்றுக்கொள்வதற்கும் நிதானம் தேவைப்படுகிறது . தன்னோடான  உரையாடல் தன்னை  நம்பிக்கையுள்ளவனாக மாற்றுகிறது. அதை தத்துவங்களும் நூலும் அனுபவங்களும் கற்றுக் கொடுப்பது மாதிரியே சதைகளை இழந்து வெறும்  எலும்பாய் கரைகண்ட மீனும் கற்றுக்கொடுகிறது.

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன்.:

நண்பர் சுரேஷ் பிரதீப்புக்கு ஜஸ்டின் கார்டனரின் சோபியின் உலகம் நாவலை இந்த புத்தாண்டில் பரிசளிக்க விரும்புகிறேன்.
நாவலை ஆங்கிலத்தில் வாசித்து சில ஆண்டுகள் கடந்த பிறகும் கூட அதன் மீதான பிரமிப்பு நீங்கவில்லை. வடிவம் உள்ளடக்கம் என இரண்டும் கச்சிதமாக ஒத்திசைந்த நாவல். மேற்கின் மெய்யியல் மரபை பதின்மர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட நாவல் எனும் குறிப்பு இப்போதும் திகைப்பைதான் அளிக்கிறது. இதை சுரேஷுக்கு பரிந்துரை செய்ய காரணமும் உண்டு. வலுவான அபுனைவு வாசிப்புடையவர். இந்த நாவல் அபுனைவை எப்படி புனைவாக ஆக்கியது எனும் செய்நேர்த்தி அவருக்கு சுவாரசியமளிக்கும் என நம்புகிறேன்.

sophies-world-204x300.jpg

எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்:

பின்நவீனத்துவ வாதியின் மனைவி. சுரேஷ்குமார இந்திரஜித் 2017 வரை எழுதிய கதைகளில் இருந்து இருபத்தைந்து கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுனில் கிருஷ்ணனால் தொகுக்கப்பட்ட நூல். இந்த நூலை நான் தேர்ந்தெடுப்பதற்கு காரணம் இதன் “பிரபலமின்மை” தான். வாசகர்களிடம் சென்று சேராத ஒரு நூலினை கவனப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. நண்பர்களுடன் சிறுகதைகள் குறித்து பேசும்போது நுண்ணிய சுவைகளை கூர்ந்து அவதானித்தால் மட்டுமே தெரியக்கூடிய நுட்பங்களை கொண்டிருக்கும் சிறுகதைகளை யாரும் அதிகம் வாசிப்பதில்லை அல்லது வாசித்தாலும் அது குறித்து உரையாடுவதில்லை என்பதை உணர்கிறேன். அத்தகைய உரையாடலை சாத்தியப்படுத்தும் நூலாக இத்தொகுப்பு இருக்கும்.

pinnavinavuthavathiyain-manaivi-193x300.
சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவுலகத்தை அவரது சிறந்த கதைகளில் ஒன்றின் தலைப்பைக் கொண்டு வரையறுத்துவிடலாம். மாபெரும் சூதாட்டம். அவரது எழுத்துமுறை அனைத்து தரப்பு வாசகர்களையும் சென்றடையும் தன்மையிலானது அல்ல. சிறுகதையாக வெற்றி பெறுவதற்கான குறைந்தபட்ச உத்திரவாதத்தை தன்னகத்தே கொண்டிருப்பவையும் அல்ல. கதைத்தளத்தில் இருந்து சற்று விலகினாலும் ஒரு சாதாரண சித்தரிப்பாக மட்டுமே நின்றுவிடக்கூடியவை. ஆனால் இந்திரஜித் தொடர்ந்து இந்த சூதாட்டத்தை தன் கதைகளில் ஆடிக்கொண்டு தான் இருக்கிறார். அத்தகைய ஆட்டங்களில் அதிகபட்ச வெற்றிகளை பெற்றவற்றின் தொகுப்பாக பின்நவீனத்துவவாதியினை அடையாளப்படுத்தலாம். ஆசிரியருடனான ஒரு நீண்ட உரையாடலுக்குப் பிறகு சுனில் கிருஷ்ணனால் இக்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழில் சிறுகதை எழுதுதல் அதன் வளமான சிறுகதை மரபின் காரணமாகவே மிகச் சவாலான ஒரு செயலாகி இருக்கிறது. இத்தகைய சூழலில் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் வாசகனுக்கு தனித்துவமான அனுபவத்தை கொடுப்பது என்பது மிக அரிதாகவே நிகழக்கூடியது. அவ்வகையில் பின் நவீனத்துவவாதியின் மனைவி தொகுப்பினை வாசிக்க நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன்:

ஜெயமோகனின் “புறப்பாடு” புத்தகம் எப்போதும் என் அகத்துக்கு நெருக்கமானது. யாருக்காவது புத்தகம் பரிசளிக்கத் தோன்றினால் என் முதல் தெரிவாக எப்போதும் இருப்பது. வெறுமே பயணக் கட்டுரைகள் என்று ஒதுக்கிவிட முடியாதது. ஜெயமோகன் தன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு அலைந்த போது சந்தித்த அலைக்கழிப்பை சொல்கிறார். அகமும் புறமும் ஒன்றாக முயங்கி ஒரு நாவலுக்கான விரிவை அடைகிறது. இந்தியா என்ற மாபெரும் தேசத்தில் கொட்டிக்கிடக்கும் பல்லாயிரம் பண்பாடுகளை, அதன் முரண் இயக்கங்களை, அதன் இடையே இருக்கும் ஒற்றுமைகளைக் கண்டையும் தருணங்கள் அனுபவங்களாக விரிகின்றன. தனியே ஒரு மனிதனின் சொந்த அனுபவங்களாக மட்டுமாக இவை தோன்றுவதில்லை. எல்லோருக்கும் இருக்கக்கூடிய பிரச்சினைகளை வெவ்வேறு அனுபவங்களில் பெற்று அதன் தீர்வை ஒரு மனத்திற்கான அக விடுதலையாக அணுக முனைகிறது. நீங்களும் நானும் வாழ்கையில் சந்தித்த பல்வேறு அகப்போராட்டங்களை இதில் பார்த்துத் திடுக்கிட முடியும். நம்மால் வசப்படாத தீர்வை இதில் வாசித்துக் கண்டடைந்து ஒரு நிறைவை அடையலாம்.

Purappadu-218x300.jpg

எழுத்தாளர் ஆத்மார்த்தி:

மதுரையின் அரசியல் வரலாறு 1868

ஜே.ஹெச் நெல்சன் எழுதிய நூல். தமிழில் வழக்கறிஞர் ச.சரவணன் மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது. மதுரை எப்போதும் அணையாத அடுப்புகளையும் விளக்குகளையும் கொண்ட நகரம். அதன் வரலாறு நெடியது. எழுநூறாண்டு கால சரித்திரத்தின் விள்ளல்களை சம்பவத் தொடர்ச்சிகளின் மூலமாக விவரிப்பதன் மூலமாக மனதில் பதியனிட்டபடி செல்கிறது இந்த நூல். சரிவரச் சொல்லப்படுகையில் யாதொரு புனைவுமின்றி நேரடியான வரலாறு புனைவுக்குச் சற்றும் குறைவற்ற சுவையுடனான வாசக அனுபவத்தை நிகழ்த்த வல்லது என்பதை இந்த நூல் இன்னொரு முறை மெய்ப்பிக்கிறது.இறந்த காலத்தைத் திறந்து பார்ப்பது ஒருவகையில் மர்ம முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்த்துக் கதையறிவதைப் போலத் தான். நுட்பமும் ஆழமும் ஒருங்கே சாத்தியமாகிற தரிசனம் இந்த நூல் வாசிப்பின் வழி அறிவதன் மீதான காதல் கொண்ட யாவர்க்கும் இந்த நூலைப் பரிந்துரைக்க விரும்புகிறேன்.
சந்தியா பதிப்பக வெளியீடு முதற்பதிப்பு 2019 விலை ரூ 360/-

madurai-arasiyal-varalaru-e1577832719511

கவிஞர் மனுஷி:

கனலி முன்னெடுக்கும் இந்த வாசிப்பு செயல்பாடு மகிழ்ச்சியளிக்கிறது.


பொதுவாக யாருக்கேனும் ஒரு புத்தகத்தைப் பரிசளிக்க விரும்பினால் குட்டி இளவரசன் (பிரெஞ்சு நாவல்) அல்லது ஜன்னலில் ஒரு சிறுமி ( ஜப்பானிய நாவல்) இரண்டில் ஏதேனும் ஒன்றைத்தான் முதலில் தேர்வு செய்வேன். வாசிக்கப் பரிந்துரைப்பதாக இருந்தாலும் எனது தேர்வில் முதலில் வந்து நிற்கும் நூல்கள் இவை இரண்டு தான்.


இந்த முறை புதிதாக ஒரு புத்தகத்தைப் பரிந்துரைக்க விரும்புகிறேன். பரிசல் வெளியீடாக வந்துள்ள “மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில்” என்ற கொரிய மொழிக் கவிதைத் தொகுப்பைத்தான். 

பா. இரவிக்குமார் – ப. கல்பனா இருவரது கூட்டு முயற்சியில் வெளிவந்துள்ள இந்நூலைப் பரிந்துரைக்க இரண்டு காரணங்கள். ஒன்று, கவிதைகள் தரும் வாசிப்பு அனுபவம் அலாதியானதாக, வேறொரு பண்பாட்டை, வேறொரு நிலம் சார்ந்த கவிதைகளை வாசிக்கிறோம் எனும் அந்நியத்தன்மை அற்று, வாசிக்கின்ற வாசகர்கள் இக்கவிதைகளோடு இயல்பாக ஒன்றிப் பயணிக்கின்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது இத்தொகுப்பு. இயற்கையும் மனித மன உணர்வுகளும் பாசாங்குத்தன்மை அற்று, ஆன்மாவோடு நெருங்கி உரையாடுகின்றன இக்கவிதைகள்.
இரண்டாவது, தமிழ் நாட்டுக்கும் கொரியாவுக்கும் இடையில் வாழ்க்கை முறையில் நிறைய வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் கொரிய நாட்டுக் கலாச்சாரம், மொழி, அரசியல், கலை, வரலாறு ஆகியவற்றை அறிந்து கொள்ள இக்கவிதைகள் ஒரு கவிதைப்பாலமாக இருந்து செயல்படுகிறது.

malarkal-vittu-sendra-195x300.jpg
தமிழில் கொரியக் கவிதைகள் இத்தொகுப்பில் மூலம் முதன்முறையாக அறிமுகம் ஆகிறது.
இத்தொகுப்பை வாசிக்கையில் எல்லா கவிதைகளும் இல்லை என்றாலும் சுமார் இருபது கவிதைகளாவது நமது வாழ்வனுபவத்தோடு இழையோடுவதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எழுத்தாளர் தமிழ்நதி:

இவ்வாண்டு நான் வாசித்த நூல்களுள் என்னை அதிகமும் சிந்திக்க வைத்த நூலென்றால், வரலாற்றறிஞரும் பேராசிரியருமாகிய யுவால் நோவா ஹராரியால் எழுதப்பட்ட ‘சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ஐக் குறிப்பிட முடியும். மூலமொழி: ஹீப்ரு. இந்நூல், நாகலட்சுமி சண்முகம் அவர்கள் தமிழாக்கம் செய்திருக்கிறார். பதிப்பகம்: மஞ்சுள் பப்ளிகேசன்ஸ். உலகெங்கிலும் முப்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மனிதகுலம் தோன்றியது தொட்டு- அறிவுப் புரட்சி, வேளாண் புரட்சி, அறிவியல் புரட்சி என இன்றுவரையிலான மனிதகுல வரலாற்றின் குறுக்குவெட்டுப் பார்வையாக இந்நூலைக் கொள்ளமுடியும். ஆரம்பத்தில் பிற உயிரினங்களிலிருந்து தன்னைப் பிரித்தறிய முடியாத மற்றொரு உயிரினமாயிருந்தது, இரண்டு கால்களில் எழுந்து நின்று ‘மனிதனாகி’ பிற உயிர்களின்மீது மேலாதிக்கம் செலுத்துமளவு பரிணாம வளர்ச்சி அடைந்ததும், அந்த மேலாதிக்கமானது இயற்கைச் சமநிலையை எவ்வாறு குலைத்ததென்பதும் இந்நூலில் அறிவுபூர்வமாக விளக்கப்பட்டுள்ளது.

இந்நூலை வாசித்து முடித்ததும், ‘மனிதன்’என்ற சொல்லுக்கு நமது மனங்களில் என்னவொரு பொருளை வரித்திருக்கிறோமோ அதுவொரு கற்பனை என்றாகிவிடுகிறது. உலகிலேயே கொடிய விலங்கு மனிதன் என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இதன்பொருள், மனிதகுலம் குகைவாசிகளாக நீடித்திருக்கவேண்டுமென்றில்லை. ஆனால், ‘ஆறறிவின் துணைகொண்டு இதர உயிரினங்களது உரிமைகளைப் பறிக்கிறவனது, இயற்கையைச் சீரழிக்கிறவனது அகராதியில் ஜனநாயகம், அன்பு, கருணை இன்னபிற சொற்களுக்கு என்ன அர்த்தமிருக்கமுடியும்?’ என்ற கேள்வி எழுகிறது.sapiens-a-brief-history-of-humankind-e15

உணவுச் சங்கிலியின் உச்சத்தில் நிற்கிற மனிதன், ஏனைய உயிரினங்களைப் போல இருப்புசார் நியாயங்களோடு இயங்கவில்லை; பிற உயிரினங்களின் வாழ்விடங்களைச் சீரழிப்பது, மிருகவதை செய்வது, சுற்றுச்சூழலைச் சிதைப்பதன் மூலம் இதர ஜீவராசிகளை ஒழித்துக்கட்டுவது, பூமி மாசடைதல், வெப்பமடைதல் இன்னபிறவற்றுக்குக் காரணமாவது என எல்லைமீறிச் சென்றுகொண்டிருக்கிறான் ஆகியன பற்றி இந்நூலில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

இதற்கு மறுவளமாக, அறிவியல் ரீதியான வளர்ச்சி எவ்வாறு மனிதகுலத்தை நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது, நேரத்தை மீதப்படுத்துகிறது, தனிமனித விடுதலையை ஊக்குவிக்கிறது இன்னபிற எண்ணற்ற சாதகங்களைப் பற்றியும் பேசுகிறது.

அரசியல், உளவியல், அறிவியல், பொருளாதாரம், இயற்பியல் என பல்வேறுபட்ட பார்வைகளை உள்ளடக்கிய ‘சேப்பியன்ஸ்’அவசியம் எல்லோராலும் வாசிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

 எழுத்தாளர் லதா அருணாச்சலம்:

எழுத்தாளர் பிரியா விஜயராகவன் எழுதிய அற்றவைகளால் நிரம்பியவள் என்னும் நாவலைப் பரிசளிக்க விரும்புகிறேன். இது நாவல் என்னும் வரையறைக்குட்பட்ட வடிவத்திலிருந்து சற்றே மாறுபட்டது. புனைவுடன் கலந்த auto fiction வகையை சார்ந்தது . இந்த நாவலின் கதாபாத்திரமான டாக்டர் அஞ்சனா தனது பால்யத்திலிருந்து , தற்கால வாழ்க்கை வரை தனக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை வாசகர்களுக்குச் சொல்வதாக அமைந்துள்ளது கதை. அதனூடாக , சிதம்பரம் மருத்துவக் கல்லூரி, சிஷல்ஸ் தீவு, மொரீஷியஸ், கென்யா ,லண்டன் மாநகர் எனப் பல்வேறு களங்களில் பயணிக்கிறது கதை .அதனூடாக அஞ்சானவின் வாழ்வில் நிகழும் சம்பவங்களும், சந்திக்கும் மனிதர்களும் புனைவில் விரிகிறது .மனிதர்களின் மனங்களில் ஒளிந்திருக்கும் பூடகமான உணர்வுகளை, எண்ணங்களை , வக்கிரங்களை எந்தவிதமான பூச்சுகளுமின்றி நேரடியாக வெளிப்படுத்துகிறார்கள் இவர் நமக்கு அறிமுகம் செய்யும் மாந்தர்கள். எங்கோ ஒரு தீவில், கடற்கரையில்
தொன்மை வாய்ந்த கல்லறைகளின் நடுவே அமர்ந்து அங்கு தனது மூதாதையர்களின் வேர்களைத் தேடும் பதிவுகளாகவும், உலகெங்கும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் குற்றங்களையும் அதிலிருந்து மீண்டு வந்து பெண்களின் healing process போன்ற வாழ்க்கையையும் பதிவு செய்யும் எழுத்தாளர் சொந்த நாட்டில் , எத்தனை படித்துப் பட்டம் பெற்றவர்களாக இருந்தாலும் அடையாளங்கள் இன்னமும் சாதியின் அடிப்படையிலேயே உள்ளது என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஒற்றைக் கருதுகோளில் சுற்றாமல் , நாவல் முழுவதும் தனிமனித இழப்புகள், அதன் தாக்கங்களால் விஞ்சி நிற்கும் உணர்வுகள், உலகெங்கும் இடையறாது கேட்டுக் கொண்டிருக்கும் அன்பின் இறைஞ்சல் , பிழைத்தலின் பொருட்டு செய்யப் படும் சமரசங்கள் , காதலின் பல நிலைகள் எனப் பலப் பல கோணங்களில் நிரம்பியிருக்கிறது இந்த நாவல்.

atravaikalaal-nirampiyaval-195x300.jpg
இதன் மற்றொரு முக்கிய அம்சமாக, மருத்துவக் குறிப்புகள் மூலம் உடல் என்பது வெறும் பை என்னும் நிச்சயமான உண்மையை வலுவாக்கி இருக்கிறார். எழுத்தாளர் மருத்துவராக இருப்பதால் இந்தத் தரவுகள் சிக்கலின்றி எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது . மீண்டும் ஒரு அற்புத விஷயத்தை நான் சொல்லாமல் இருக்க முடியாது.. எழுத்தாளர் பிரியாவின் வாசிப்புலகம்.. பல புத்தகங்களிலிருந்து எடுத்தாளப் பட்ட மேற்கோள்களும் , அதன் தொடர்பான செய்திகளும் வாசகர்களை பரந்த வாசிப்புத் தேடலுக்கு இட்டுச் செல்கின்றன.
புதிய வடிவம், கடும் மொழியாக்கத்திற்கு ஆட்படாமல் இயல்பாகப் பொருந்தும் ஆங்கிலச் சொற்கள் மற்றும் அதன் இலகுவான வாசிப்புத் தன்மை..


அனைத்துக் கூறுகளையும் ஆராய்ந்து சொல்வதானால் ‘அற்றவைகளால் நிரம்பியவள் ‘ எனது மனதுக்குள் பிடித்த நாவல். நண்பர்கள் தவறாமல் வாசிக்கவும்.

எழுத்தாளர் வெண்பா கீதாயன்:

கொற்றவை. சிலம்பின் கதையை அடியொற்றிய நவீன காவியம். வாசிக்கும் தருணத்தே பெருங்கனாவென விரியக்கூடியது. இலக்கியம் வாசிக்க விரும்பும் ஒவ்வொருவரும் இலக்கியத்தில் இயங்கும் ஒவ்வொருவரும் தங்களது கட்டாய வாசிப்பில் சேர்க்கவேண்டிய காப்பியம் கொற்றவை. பழம்பாடல்களென்றும் குலக்கதைகளென்றும் எழுந்த மரபின் வழியாகவும் தொன்மங்களின் வழியாகவும் சமகாலத்தைத் தொட்டுச்செல்கிற மொழியும் செறிவும் கொண்டது.

kotravai-194x300.jpg

எழுத்தாளர் கவிபித்தன் :

உன் கழுத்தைச் சுற்றிக்கொண்டு இருப்பது

– சிமாமண்டோ என்கோஜி அடிச்சீ

தற்போதைய மனநிலையில் நைஜீரிய பெண் எழுத்தாளரின் இந்த சிறுகதைத் தொகுப்பை பரிசளிக்க விரும்புகிறேன்.
நைஜீரியாவிலும், அமெரிக்காவிலுமாய் வாழ நேர்கிற நைஜீரியர்களின் வாழ்வியலை அசலாகப் பேசுகின்றன இந்தக் கதைகள்.உள் நாட்டுக் கலவரங்களிலும், புலம்பெயர் வாழ்விலும் அவர்களின் கலாச்சாரம் சிதைவதையும், அதை அந்த மக்கள் ஏற்றுக் கொள்வதையும் பெண்களின் மன நிலையிலிருந்து இந்தக் கதைகள் பேசுகின்றன.

un-kazhuththai-sutrikkondu-iruppathu-e15

எழுத்தாளர் நவீனா:

ரொபர்டோ பெலெனோ எழுதிய 2666 என்னும் 5 பாகங்களைக் கொண்ட நாவலை நண்பர்களுக்கு இந்தப் புத்தாண்டில் பரிசளிக்க விரும்புகிறேன்..

2020 சுமந்துவரவிருக்கும் குறியீடுகளையும், இன்னும் 646 வருடங்களுக்குமான மனித வாழ்க்கையையும் ஏதோ மாயன் நாட்காட்டி போல சொல்லிப் போவதான நாவலில் எங்கும் 2666 என்னும் தலைப்பின் காரணத்தை பெலெனோ குறிப்பிடவில்லை.

சீதாத் குவாரிஸில் (மெக்ஸிகோ நகரம்)நடந்த femicide பற்றிய கதைக்கருவை, (பெண்களின் பிரச்சினைகளை இலக்கிய ஆவனமாக்கிய மிகச்சில ஆண்களில் பெலெனோவும் ஒருவர்) historiographic metafiction வடிவில் bildungsroman narrative – வாக சொல்லப்பட்டிருக்கும் நாவல் இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிலும் இயங்கக்கூடிய எழுத்தாக இன்றளவும் நிற்கிறது.

 

81690528_2776779779048628_36967003461947

லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களில் சிலியில் பிறந்தவராக இருந்தாலும் பெலெனோ மெக்ஸிகோவில் பல ஆண்டுகள் வாழ்ந்தவர் என்பதால், இவரது இறப்புக்குப் பின் பிரசுரிக்கப்பட்ட 2666 சிக்கானோ இலக்கியத்தையும், லத்தீன் அமெரிக்க இலக்கியத்தையும் ஒன்றோடு ஒன்றாய் பிணைக்கும் முயற்சியாக இருக்க வேண்டுமென எனக்குத் தோன்றும்.
(மெக்ஸிக்கோவை மட்டும் லத்தீன் அமெரிக்க எழுத்துக்களில் சேர்த்துக்கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எப்போதும் என் மனதில் இருக்கும், ஒருவகையில் 2666 நாவலின் மீது அதிக ஈடுபாடு ஏற்பட அதுவும் ஒரு காரணம்)

அவரது கனவின் சாட்சியாக நிற்கும் இந்த நாவலின் தலைப்பு ஒரு வருடத்தைக் குறிப்பது தான் என பல இலக்கிய விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன. அவரது ஆமுயுலெட்டில் கூட பெலெனோ ‘2666ன் மெக்ஸிகோ நகர வீதிகள்’ என ஒரு வரியை எழுதியிருக்கிறார்.

இந்த ஆண்டில் அப்படியென்ன மர்மம் புதைந்திருக்கிறதென வாழ்ந்து பார்க்க காலம் நம்மை அனுமதிக்காவிட்டாலும், இந்த நாவலை வாசிப்பதற்காக நம் கைகளில் கொடுத்துச் சென்றிருப்பதற்காக காலத்திற்கு என் நன்றிகள்😊

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன்:

பால்யத்திலிருந்து வளரிளம் பருவத்துக்குள் அடியெடுத்து வைக்கும் புத்தம்புதிய இளைஞனுக்கு இந்நிலத்தையும், அதன் விவசாயக் குடிகளின் வாழ்வையும் அச்சுஅசல் கரிகல்காட்டு மொழியில் பேசும் ”கோபல்ல புரம்” நாவலைப் பரிசளிக்க விரும்புகிறேன். தூர தேசங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்து, தெற்கில் கரட்டுக்காடாய் கிடந்த ஒரு நிலத்தை செம்மைப்படுத்தி, அதை செழிப்பான ஒரு கிராமமாக உருவாக்கும் அம்மக்களின் கதையை அவனுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். ஆசிரியர் மேலே அமர்ந்து கதை சொல்ல, அதை வாசகன் கழுத்து வலிக்க அண்ணாந்து கேட்பது போலின்றி, உற்ற நண்பன் தோளில் கைபோட்டு அணைத்துக் கொண்டு கதை பேசுவது போன்ற உணர்வை நாம் தமிழின் மூத்த கதைசொல்லியான கி.ராஜநாராயணனின் படைப்புகளில் காணலாம். அப்படி கோபல்ல புரம் புத்தகத்தை, ஒரு நாவலாகவோ சம்பவங்களின் கோர்வையாகவோ, ஓர் ஊர் உருவான கதையாகவோ, கோட்டையார் என்பவர்களது குடும்ப வரலாறாகவோ பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால் புதிதாய் நவீன இலக்கியத்தை வாசிக்க வரும் இன்றைய இளைஞனுக்கு முதலில் கி.ரா தாத்தாவையே அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இந்தத் தலைமுறையின் புது இளைஞனின் தொடர் வாசிப்புக்கும் கி.ரா.வே வழிகாட்டியாக இருப்பார் என நம்புகிறேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

 gopalla-grammam-210x300.jpg

எழுத்தாளர் பிரியா விஜயராகவன்:

நான் இந்த வருடம் படித்ததில் பிடித்ததும், பகிர்ந்துக்கொள்ள நினைப்பதும் மணி எம்.கே மணி சார் எழுதியுள்ள “மதுர விசாரம் ? 

மணி சாரின் எழுத்து எனக்கு எப்போதும் நழுவும் விலாங்கு மீன் போன்றது. நான் பொதுவாக 300 பக்கத்தை 3 மணி நேரத்துக்குள் வேகமாகப் படித்துக் கடப்பவள். மணி சாரின் புத்தகப்பக்கத்தை அப்படி நகர்த்திவிடமுடியாது. அவர் எழுதும் ஒவ்வொரு வரிகளிலும், பொங்கியும், இழையோடியும், புதைந்து வரும் உணர்வுகளின் வலி, வீர்யத்தை உள்வாங்கவும், மனதில் உட்காரவைத்து செறிமானம் செய்யவும் நேரமும், தைரியமும், உண்மையும் தேவை.

உலகில் 18, 19 வயது வரை தாய் தந்தையை சார்ந்திருக்கும் ஒரே மிருகம் மனிதன் தான். உள்ளும் வெளியும் நடக்கும் மனித வளர்ச்சியின் & விகாரங்களின் permutation combinationகள், இந்த கதையின் மனிதர்களாக மாற்றி எடுத்திருக்கிறார்.

அன்பின் விஸ்தாரம் எல்லையில்லாதது. மிக தூய்மையானது. உயிர்களின் அன்பும் உடலும் தேடிக்கொண்டிருப்பது அமைதி, அரவணைப்பு, அங்கீகாரமும் தான்.
மாறிக்கொண்டே இருக்கும் சமூக moral சுத்தியலும் உளியும், அதன் வளைந்து நெளியும் உண்மைகளும் பொய்களும் கொண்டு அன்பைச் செதுக்கி முடிக்கையில், கண்முன் நிற்கும் மனிதன் என்ன என்ற கேள்வியை எழுப்பக்கூடியது மணி சாரின் எழுத்துக்கள். மனதின் உள்ளே நடக்கும் சம்பாஷணைகளும், சரி தவறு என்று வெளிப்பார்வைக்குத் தூக்கிப்பிடிக்கும் ஜோடிப்புகளும் இந்த புத்தகத்தில் எழுதியிருக்கும் மனிதர்கள் மூலம் பேசிப் போகிறது.

WhatsApp-Image-2019-12-31-at-11.52.11-PM
 

சத்தியசந்தமாய் என் மனதின் உணர்வும், உண்மையும், காதலும், தேடலும் இது தான் என்ற உண்மையை, வெவ்வேறு காரணங்களுக்காக ஏற்கமுடியாதும், அப்படி ஏற்காது போவதன் வலி வெறுமையும், ஆனால் சமூகமும், குடும்பத்தினரும், சுற்றம்சூழலும் என் உண்மைகள் தெரிந்தால், என்னை எப்படி நினைத்துவிடுவார்களோ என்று, வெளிப்பூச்சாக தன்னை வேறு ஒன்று என்று பொய்யாக முலாம் பூசிக்கொண்டே இருக்கும் மனிதனின் உள், வெளி malalignmentஐ காட்டும் புத்தகம் மதுரவிசாரம்.

பெண் என்பவள் எத்தனை பயங்கரமான அதிஅற்புத புதிரானவள்! அந்த பெரும்புதிர் ஆணை எப்படி பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது. மாபெரும் பேரன்பு மிகுந்த அழகிய கடவுளாகவும், அடுத்த நிமிடம் பொய் கூறி, பசப்பு பேசும் அன்பில்லாத உடல் / மனம் கொண்ட பரத்தையாகவும் மாறியபடியே இருக்கிறாள். Women will always be perceived as a lecherous goddess by men. ஆணுடைய ஆச்சரியமும், பயமும், அது முடுக்கிவிட்ட சாவி கொண்டு நடமாடும் ஆண்களை தான் மணி சாரின் மதுர விசாரம் முழுக்க வாழ்கிறார்கள்.

இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கையில், உண்மையான மனம் சார்ந்த ஈர்ப்பும், அதை மனிதசமூகம் முழுமனதோடு அங்கீகரிப்பதும் எத்தனை பெரிய சவால் என்று பெருமூச்செடுக்கிறேன்.

கவிஞர் பா.திருச்செந்தாழை :

ஜாக் லண்டனின்
 மெக்ஸிகன் ” சிறுகதைத்தொகுதி.
( மொழிபெயர்ப்பு – ராஜேந்திரன், தமிழினி வெளியீடு.)
அடிப்படையில் சிக்கலான,நாடோடிவயமான பால்யத்தைக் கொண்ட ஜாக் லண்டனின் இந்த சிறுகதைத் தொகுதியிலிருக்கும் சிறுகதைகள் அற்புதமான உணர்வெழுச்சியிலிருந்து எழுதப்பட்டவை.
வாழ்வு- நிகழ்வுகள்- தத்துவப்பார்வை என்கின்ற வழக்கமான எழுத்துப்பயணம் போலன்றி ஒரு கற்பனைக்குழிக்குள் திடுக்கிடும்படி விழுகின்ற பேரார்வத்துடன் விரிகின்ற இந்த தொகுதியின் கதைகள் தீவிர அரசியல்பிரக்ஞையை தங்களது சுவாரஸ்யத்தைக் குறைத்துகொள்ளாமல் வாசகன் முன்வைப்பவை.
வன்முறைச்செயல்பாடுகளின் மீது மிகுந்த ஈர்ப்புகொண்ட ஜாக்லண்டன் தனது படைப்புகளில் கருணை என்பதை அவ்வளவு குறைவாக வெளிப்படுத்திக்கொண்ட நபர்.உண்மையில் யதார்த்த உலகில் வெளிப்படுகின்ற கருணையின் அளவும் அதே.
ஆனால் அவ்வளவு சிறிய கருணை ஒரு பாலைவனத்தில் நிலவாய் மாறுகின்ற அனுபவத்தையும் ஜாக் நமக்கு அளிக்கிறார்.
வாழ்க்கை சலித்துவிட்டதாகக் கூறி நாற்பதுவயதில் மரணமடைகிற ஜாக்லண்டனின் கதைகளில் காணுகின்ற படைப்பெழுச்சிக்காக  இதைத் தருகிறேன்.

mexican-e1577836752681.jpeg

எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் :

மங்கோலிய மேய்ச்சல் நில மக்களின் வாழ்வைப் பேசும், சீன எழுத்தாளர் லியு ஜியாமின், ஜியாங் ரோங் என்ற புனைபெயரில் எழுதிய ‘ஓநாய் குலச்சின்னம்’நாவலையே வரும் புத்தாண்டில் நண்பர்களுக்குப் பரிசளிக்க விரும்புகிறேன். இதைத் தமிழில் எழுத்தாளர் சி.மோகன் மிக அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார்.

சீனர்கள் மிகவும் வெறுக்கும் விலங்கென்று ஓநாயைச் சொல்ல முடியும். ஆனால், நாவல் வெளியாகி கிட்டத்தட்ட நாற்பது லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையை அசைத்துப் பார்த்த நாவல் இது.onaai-kulasingam-205x300.jpg

ஓநாய் வேட்டையில் ஆரம்பிக்கும் நாவல் மெதுவாகத் தொடங்கி ஆர்ப்பரிக்கும் அடைமழையென நம்மை உள்ளீர்த்துக்கொள்கிறது. மற்றுமொரு விலங்கு என்ற அளவிலேயே ஒநாயைப் பற்றி அறிந்துவைத்திருக்கும் நம்மைப் போன்று வெப்ப மண்டலங்களில் வாழ்பவர்களுக்கு இந்நாவல் ஓநாய்களைப் பற்றியும் அவற்றின் வழியே மனிதர்களைப் பற்றியுமான மகத்தான சித்திரத்தைக் கையளிக்கிறது. சீனாவின் அரசியல் பின்புலத்தினை கருத்தில் கொண்டு வாசிக்கும் ஒருவனுக்கு இந்நாவல் முற்றிலும் புதியதோர் தரிசனத்தைத் தரும்.

இயற்கையை, அதன் வழியே தம்மோடு சேர்த்துப் பல கோடி உயிரிகளின் சமநிலையைப் போகிற போக்கில் கலைத்துப்போகும் இன்றைய நாளில் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நாவல் என்று இதைச் சொல்லுவேன்.

எழுத்தாளர் விநாயக முருகன்:

ஏழு நதிகளின் நாடு

இது மிக பெரிய உழைப்பை கொட்டி எழுதப்பட்ட புத்தகமாக தோன்றுகிறது. சஞ்சீவ் சன்யால் இந்தியாவின் நிலவியல் அமைப்பை வைத்து இந்தியாவின் வரலாற்றை ஆய்வு செய்துள்ளார். தான் பார்த்த வேலையை கூட விட்டுவிட்டு இதற்காக இந்தியா முழுக்க பயணம் செய்துள்ளார். ஆங்கிலத்தில் மிக பெரிய வரவேற்பை பெற்ற புத்தகம். தமிழுக்கு சிவ.முருகேசன் மொழிப் பெயர்த்துள்ளார்.

81327008_2778804125512860_63296896528401

 எழுத்தாளர் பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்.

How Fascism Works..இந்நூலைப் பரிசளிப்பேன் அதன் காலப் பொருத்தம் கருதி.

80573012_2779209322139007_45099744153997

எழுத்தாளர் சயந்தன்:

ஒருவிதமான மனக் கிளர்ச்சியுடன் பகிர விரும்புவதும், வாசிக்கச் சொல்வதுவும் – சேப்பியன்ஸ் – மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு நுாலையே. கிளர்ச்சியென்று சொன்னேன் அல்லவா. அது உண்மையில் ஒரு பதற்றமே. இதனை வாசிக்கின்ற எவரையும், அவர் மதப்பற்றாளராயிருக்கலாம், மார்க்கஸியராயிருக்கலாம், தேசியவாதியாக இருக்கலாம், யாராகவும் இருக்கலாம், அவர்களை இந்தப்புத்தகம் சலனத்திற்குள்ளாக்கும். தாய்மை என்ற உணர்விற்குப் பின்னாலிருந்த நடைமுறைக்காரணி என்ன என்பதை “அட இவ்வளவுதானா” என்று உணர்த்துவது தொடங்கி கார்ல்மார்க்ஸை கேள்வி கேட்பதுவரை நகைச்சுவையும் சுவாரசியமும் கலந்த மொழியில் யுவால் எழுதுகிறார். – உங்கள் நண்பர்களைச் சீண்டிப்பார்க்கவேனும் இப்புத்தகத்தைப் பரிசளியுங்கள்.

sapiens-a-brief-history-of-humankind-e15

எழுத்தாளர் எம்.கே.மணி:

மதில்கள்.

மொத்த உலகினுடைய மனதை அடைந்து அலட்சியமாக இருக்கும் இருக்கும் ஒருவன் வெகுளித்தனத்தின்ன் எளிமையின் மெய்மையின் அகம் தொட விரும்பும் போது குறுக்கே இருக்கிற மதில் பிடிபடுகிறது. பஷீர் மதிலுகள் என்கிறார். நமக்குள் இருக்கிற அவைகள் தான் பரிணாமமோ, அதன் காரணமோ என்னமோ? எப்போதும் தீராமல் நமது மூச்சுக்காற்றில் சுமையாகி இழுக்கிற அந்த ஆற்றாமைகள் தான் உயிர் வேட்கையின் காரணமோ என்னமோ? மண்ணில் இருந்து கொஞ்சமாவது நம்மை எழும்ப வைக்கக் கூடியது, யாருக்குமே இந்நூலை பரிசளிக்க விரும்புவேன்.image116-550x550h-300x300.jpeg

விஞர் ஜி.கனிமொழி:

Paulo coelho ‘s Alchemist பாவ்லோ கொய்லோ வின் ரசவாதி ..

வாழ்க்கையில் தேடலைத் தெரிவு செய்தலும், அதை நோக்கிய பயணமும்,
அதைக் கண்டடையும்போது நேரும் நிறைவுமாய் அதியற்புதமான படைப்பு. எளிய கதையாயினும், உள்ளிழையில் வேறொரு வெளியில் கிட்டும் ஆன்ம தரிசனம்..

கனவைப் பின்தொடர்தலின் எளிய சூத்திரம்.. இருத்தலின்மை குறித்த இருட்டைக் கலைக்கும் சிறு ஜ்வாலை இப்புத்தகம்..

rasavaathi-300x300.jpg

எழுத்தாளர் ராம் தங்கம் :

அழகிய நாயகி அம்மாள் எழுதிய ‘கவலை‘ நாவல்.

அழகிய நாயகி அம்மாள், எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் தாயார். அம்மா அவர்கள் அடிக்கடி பொன்னீலன் அவர்களுக்கு கதைகள் சொல்வாராம். தன்னுடைய குடும்ப கதைகள், வழிபாட்டு கதைகள், அனுபவ கதைகள் என்று தினமும் கதை பொன்னீலன் வளர்ந்த பிறகும் தொடர்ந்து கொண்டே இருக்குமாம். ஒருநாள் உங்களுடைய கதைகளை கேட்க எனக்கு இப்போது நேரமில்லை என்று பொன்னீலன் சொல்லி இருக்கிறார். உடனே அழகிய நாயகி அம்மாள் எனக்கு கொஞ்சம் பேப்பரும் பென்ணும் தா என்று கேட்டு வாங்கியிருக்கிறார். சரியாக ஒரு வருடம் கழித்து வாங்கிய பேப்பர்கள் அனைத்தையும் எழுதிக் கொடுத்திருக்கிறார். அதை பார்த்து விட்டு தனது பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் பொன்னீலன். அதன்பின் தன்னுடைய நண்பர்களுடன் சொல்லி பகிர்ந்து கொண்டிருக்கும்போது, ஒருவர் பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் காலேஜில் உள்ள நாட்டார் வழக்காற்றியல் பிரிவில் பத்திரப்படுத்தி வைக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். அங்கு கொண்டு சென்றபோது அங்குள்ள பேராசிரியர்கள் இந்த பதிவு நன்றாக இருக்கிறது இதை நாவலாக கொண்டுவருவோம் என்று கவலை என்கிற பெயரில் புத்தகமாக அவர்களை வெளியிட்டுள்ளார்கள். அந்த புத்தகம் இனவரைவியல் சார்ந்த ஒரு முக்கியமான ஆவண பதிவு. சாகித்ய அகாடமி விருது பரிந்துரை வரைக்கும் போய் திரும்பியிருக்கிறது. பொன்னீலன் அவர்கள் இந்தியாவில் தமிழகத்தில் பல விருதுகள் பெற்றிருந்தாலும் அவருக்கு கிடைக்காத ஒரு சிறப்பு அவருடைய அம்மாவுக்கு கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி கவலை நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட முடிவு செய்து அதற்கான வேலைகளை தொடங்கியிருக்கிறது. இதனால் நான் கவலை நாவலை நண்பர் ஒருவருக்கு பரிசளிக்க விரும்புகிறேன்.

kavalai-wrapper-1-copy-193x300.jpg

எழுத்தாளர் கணேஷ்ராம் :

இந்தப் புத்தாண்டில் நான் பரிசளிக்க விரும்பும் புத்தகம் கோணங்கியின் பிதிரா.
பிதிராவில் ஐவகை நிலங்களும் ஐவகை நிலங்களின் தொன்மங்களும் ஊடிழை பிரதிகளாக தோற்றமளிக்கின்றன. இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே விவசாயிகளின் தற்கொலைகளை வேதனையுடன் விவரித்த நாவல் பிதிரா. ஓர் இசைக் கோர்வையை போல அரூப ஓவியங்களைப் போல சுழலும் பிரதிகளின் தொகுப்பே பிதிரா.
விவசாயிகள் நாடோடிகள் நாடகக் கலைஞர்கள் இசைக்கலைஞர்கள் மற்றும் திருநங்கைகள் மற்றும் அடித்தள மக்களின் வாழ்வியலை surreal பரிமாணங்களுடன் விவரித்துக் கொண்டே போகும் முடிவற்ற பிரதிகளின் தொகுப்பே கோணங்கியின் பிதிரா எனலாம். கோணங்கி தன் அபூர்வமான பயணங்களின் ஊடே நிகழ்த்திக் கொண்டிருக்கும் கலைடாஸ்கோப் வர்ணங்களின் நீட்சியாக கிளை விடுகிறது பிதிரா.

pithira-001-300x213.jpg

யாவரும் பதிப்பகம் ஜீவ கரிகாலன் :

உலகின் அனைத்துக் கோட்பா டுகளும், சித்தாந்தங்களும் மறுபரிசீலனை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், மாஸ்டர்களைத் தவிர சமகாலத்தில் வாசிப்பதற்கு எனத் தேர்வு செய்ய என் மனம் நம்பும் நூல் ஒன்றை தான் யாருக்கும் பரிசளிக்க முடியும்.

thurathrisdam-piditha-kappalin-kathai-20
 

எல்லாவிதத்திலும் இந்த யுகத்தின் தேர்வுகளைக் கதைகளாகப் பேசிய துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை ஒரு சிறந்தத் தேர்வு. சிறுகதைகள் என்பதும் கூட தேர்வுக்கு ஒரு காரணம். சிந்தனையைத் தூண்டும் இத்தனை அடர்த்தியான பிரதி புதிய வாசிப்பு அனுபவத்தையும் தரும். “நாளை இறந்து போன நாய்” எனும் கதை அதில் உச்சம்.
 

 

http://kanali.in/book-recommendations-by-writers-part1/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் – பகுதி 2


“இந்த புத்தாண்டில் யாருக்காவது புத்தகம் பரிசளிக்க அல்லது பரிந்துரைக்க விரும்பினால், அது எந்த புத்தகமாக இருக்கும்?  ஏன் அந்த புத்தகம் ?”

இந்த கேள்வியை புத்தாண்டை முன்னிட்டு படைப்பாளர்களிடம் கனலி கலை இலக்கிய இணையதளம் சார்பாக கேட்கப்பட்டன.  நூறுக்கும் மேற்பட்ட படைப்பாளர்கள் அளித்த பரிந்துரைகள் தொகுத்த  கட்டுரையின் இரண்டாவது பகுதி இது…


எழுத்தாளர் அகிலன் : 

யோஸ்டைன் கார்டர் நார்வே மொழியில் எழுதி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ஆங்கிலம் வழி தமிழில் தேர்ந்த மொழிபெயர்ப்பாளர் பேரா. ஆர் சிவகுமார் மொழிபெயர்த்து, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘சோஃபியின் உலகம்’ நூலை நான் என்னுடைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிசளித்திருக்கிறேன்.

sophiyin-ulagam-e1577981289985-201x300.j

மூன்று கோடிப் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ள அற்புதக் காவியம் இந்நூல். ‘நீ யார்?’ ‘இந்த உலகம் எங்கிருந்து வருகிறது?’ எனும் இரு அடிப்படையான கேள்விகளை சோஃபி அமுய்ந்ட்சென் எனும் சிறுமி தனது பதினான்காம் பிறந்தநாளன்று எதிர்கொள்கிறாள். இதற்கான விடை தேடும் முயற்சியே நாவலின் களம். அவளுடைய தேடலின் ஊடே மனிதகுலத்தின் வரலாறும், தத்துவப் போக்குகளும் வாசகர்களுக்கு அறிமுகமாகின்றன,. அலுப்புத் தட்டாத, விறுவிறுப்பான நடையில் நாவல் போகிறது. இதன் உத்தி மிகவும் நேர்த்தியான, வியப்பூட்டும் ஒன்று. மொழிபெயர்க்க மிகவும் சவாலான ஒரு படைப்பு. பேரா. ஆர். சிவகுமார் இதைத் தனக்கே உரிய லாகவத்துடன் மொழிபெயர்த்திருக்கிறார்.

எழுத்தாளர் விஜயராகவன் :

என் மனமார்ந்த நண்பர்களுக்கு புத்தாண்டில் பரிசாக கொடுக்கும் ஒரே ஒரு புத்தகமாக கவிஞரும்  படைப்பாளியுமான பிரான்ஸிஸ் கிருபா அவர்களின்  கன்னி ‘ நாவலை கொடுப்பேன்.

இந்த நாவலின் உட்கருவாக முகிழ்க்கும் காதலையே தமிழ் இலக்கியத்தில் முதன்மையான காதல்கதையாக நான் கருதுகிறேன்.

சொற்களிலிருந்து, அர்த்தங்கள் மௌனத்திற்கு திரும்புவதை கண்டு விம்மும் நிழலுமன்றி ஏதுமற்றவனின் அல்லலை இந்நாவலில் படித்து பித்துபிடித்து போயிருக்கிறேன். இந்நாவலில் பிரான்சிஸ் கிருபாவின் தமிழ் நடை,
சென்ற, இருக்கின்ற, வரப்போகிற  தமிழ் படைப்பாளிகளின் எழுத்திற்கான சவால்.

37781674._SY475_-190x300.jpg

கவிஞர் மெளனன் யாத்ரீகா :

பரிந்துரைக்கும் நூல் :  மசானபு ஃபுகோகா எழுதிய ஒற்றை வைக்கோல் புரட்சி

நஞ்சில்லாத உணவை இந்த உலகத்துக்குக் கொடுக்க இந்த நூலில் குறிப்புகள் உள்ளன. இதை இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இந்த உலகின் மீது வீசும் நஞ்சை திரும்பப் பெற்றுக்கொண்டு இயற்கையான விதைகளை தூவலாம்.

41c3wltZu3L._SX311_BO1204203200_-188x300

எழுத்தாளர் யவனிகா ஸ்ரீராம்:

பரிந்துரை :  கவிஞர் பச்சோந்தியின்  பீஃப் கவிதைகள்

இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் பசு இறைச்சி ஏற்றுமதிக்குத் தடைவிதிக்காமல் அதை உணவுக்காக உண்டு வாழும் உள்ளூர் மக்களை தண்டனைக்கு உட்படுத்துகிறது. புலையர்களும் மிலேச்சர்களும் ஆகப் பழங்குடியினரும் இன்னும் பிறவான மாட்டிறைச்சி உண்பவர்களும் இந்திய தேசத்தின் பிரஜைகள்தான். மேற்கு ஐரோப்பா முழுக்க மாட்டிறைச்சி அடிப்படையில் ஓர் உணவுப் பொருள். அதற்கான பண்ணைக்கும் நவீன இறைச்சிக் கூடங்களும் அதன்வழியே தின்பண்டங்களும் பலமடங்கு உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. ஆக, மேற்சொன்ன புனிதம் யாருக்காக இறைச்சி மேல் சுமத்தப்படுகிறது என்று பார்க்கும் போது அதன் வர்க்க நலம் பல்லிளிக்கிறது. இங்குதான் கவிஞர் பச்சோந்தியின் இந்த முழுத் தொகுப்பும் ஒரு வரலாற்றுப் பின்னணியிலிருந்து எழும்புகிறது. மாடுகளும் மனிதர்களும் உழைப்பின் வழியே ஒடுக்கப்பட்ட நிலம்தான் இந்தியா. துன்பத்தில் உழலும் கன்றினைக் கருணைக் கொலை செய்யும்படி ஏற்றுக்கொண்டவர்தான் நம் தேசத் தந்தை. பச்சோந்தி இந்த மாடுகளின் வாலைப் பிடித்துக்கொண்டு விளையாடிய காலந்தொட்டு தான் பயணிக்கும் நிலமெல்லாம் அவற்றின் கதைகளை விசாரித்து அலைந்து திரிந்து கண்ட அனுபவம்தான் இந்தத் தொகுப்பு. இதில் பல பகுதிகளாக மாட்டின் இருத்தல் பேசப்படுகிறது. மனிதனும் மாடும் இந்த நிலத்தில் வாழ்ந்த சுவடுகளை, வலிகளை, கண்ணீரை, ஒரு கலாச்சாரத்தை அல்லது உயிர்த்திருத்தலைப் பற்றிப் பேசுவதே இத்தொகுப்பு. எண்பது கோடி மக்கள் தொழிற்சாலையால் வெளித்தள்ளப்பட்டு அன்றாட வருவாயையும் குறைந்துபோன நிலையில் வேலை வாய்ப்புகளுமற்று மேய்ச்சல் நிலங்களும் அருகிப் போன பின்பு ஏற்றுமதி செய்யப்படும் மாடுகள் தவிர இருக்கும் மாடுகளை வளர்த்து தங்கள் இறைச்சிக்காக ருசித்து வாழ்வதையே இழிவு செய்யும் தத்துவம் ஏதென்றும் இருப்பின் அது மானுட விரோதம் என்றுதான் சொல்லமுடியும்.

beef-kavidhaikgal--212x300.jpg

பீஃப் கவிதைகள் என்று பெயரிட்டு இத்தொகுப்பை சுற்றுக்குவிட்டிருக்கும் பச்சோந்தி மாடுகளின் குணாம்சம் உள்ள மனிதன் மட்டுமல்ல; அதை நோய்ப்பார்த்து வளர்த்த பாரம்பரியமான பரிவும் நிலத்தின் மீது காலூன்றி நிற்கும் நம்பிக்கையையும் அதின் வழியே பெற்றிருப்பதால்தான் இக்கவிதைகள் பெரும் மாட்டு மந்தையைப் போல் அசைகின்றன.

எழுத்தாளர் கொ.ம.கோ. இளங்கோ: 
கறுப்பின அடிமைகள் மீதான ஒடுக்குமுறைகளை பேசிய கருப்பின அடிமைகள் வரலாறு நாவலின் சுருக்கப்பட்ட வடிவம் டாம் மாமாவின் குடிசை.

tom-mamavin-kudisai-e1577855238861-199x3
விடுதலைக்கான போராட்டம் பற்றிய இந்த கதை விறுவிறுப்பாகவும் சுவாரசியம் நிறைந்ததாகவும் பிரச்சினையை ஆழமாக உணர்த்துவதாகவும் இருக்கிறது
மலையாளத்தில் பி ஏ வாரியார் அவர்கள் எழுதிய டாம் மாமாவின் குடிசை நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் அம்பிகா நடராஜன்.

எழுத்தாளர் கரன் கார்க்கி:

இந்த புத்தாண்டுக்கு நண்பர்களுக்கு பரிசளிக்கவே ,பரிந்துரைக்கவே உலகின் மிகச்சிறந்த பல பத்து நூல்களை சொல்ல முடியும்.

என்றாலும் … 1957 எழுதப்பட்ட “இவான்” என்கிற குறுநாவல் சிறுவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய அவசியமான ஒரு நூலாக கருதுகிறேன். இரண்டாம் உலகப்போரின் துயரை 12 வயது சிறுவன் மூலம் விளாந்தீமிர் பகமோலவ் எழுதிய ரஷ்ய இலக்கியம் என்றாலும், உலகின் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய குறுநாவல்.

போரில் பாஸிச நாஜிப்படையால் பெற்றோரை பறிகொடுத்து அநாதையான பல்லாயிரம் சிறுவர்களில் ஒருவன் தாய் நாட்டுக்காக எதிரிகளின் அரண்களுக்குள் புகுந்து, வேவு பார்த்து அதை ரஷ்யப்படைக்கு தகவல் தருகிற வேலையில் பாசிஸ்டுகளால் கொல்லப்பட்ட சிறுவனின் உண்மை கதை. இந்த புதினத்தை பரிசளிக்கவே நான் விரும்புகிறேன்.

 

ivan-188x300.jpg

இறுதியில் அந்த புதினம் இப்படி முடியும்.
விசாரணையின் போது அவன் எதிர்ப்பு காட்டுகிற முறையில் நடந்துக்கொண்டான், ஜெர்மன் ராணுவம் மற்றும் ஜெர்மன் பேரசின் மீதான தனது வெறுப்பை அவன் மறைக்கவில்லை.
“தலைமை சுப்பரீம் கமாண்டரின், நவம்பர் 11,1942 ஆம் தேதிய கட்டளைப்படி தடுத்து நிறுத்தப்பட்டவன் 25.12.1943 காலை 6.55 மணிக்கு சுட்டுக்கொல்லப்பட்டான். ”

இன்றைய சூழலில் சமூகம் போர் குறித்தும், போரின் துயரம் குறித்தும் , போர் ஏன் நடத்தப்படுகிறது என்பது குறித்தும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.

எழுத்தாளர் மணிமொழி:

பரிந்துரைக்கும் நூல் மீசை என்பது வெறும் மயிர் என்ற தலைப்பு , இந்த புத்தகத்தில் ஏதோ ஒன்றைக் கட்டுடைக்கப் போகிறது என நான் நம்பினேன். அது நிகழ்ந்தும் போனது. மீசைக் கொண்டு ஆண் வர்க்கம் தன்னை ஆண்மை உள்ளவனாக காட்டிக் கொள்ள தடித்த மீசைகளை உருவாக்கிக் கொண்டனர். சாதியின் பெருமையைப் பேச மீசையும் தேவைப்பட்டது. சாதியைத் தொடர்ந்து கேள்வி கேட்கும் பீம்தாஸ் , வாசகர்கள் மத்தியில் கேள்விகளையும் விட்டுச் செல்கிறார். மேன்மையோ கீழ்மையோ இறந்த பின் பிணத்தில் அடிக்கும் துர்நாற்றத்தின் வழி அதை கண்டுப்பிடிக்க இன்னும் ஆய்வாளர்கள் பிறக்கவில்லை. இதையே பல கோணத்தில் நாவல் பேசி கொண்டு நகர்கின்றது. இந்த நாவல் புத்தக அட்டைப்படத்திலிருந்து தொடங்கி நாவலின் கடைசி பக்க அட்டையில் முடிகின்றது.

meesai_novel-300x225.jpg

கவிஞர் வே.நி.சூர்யா:

காரணங்கள் காணாமல் போகும் நிலையையும் கட்புலனாகதவைகளின் மாயக்கரங்கள் நீளும் நிலையையும் அடையமுடியாததை மானுடம் எதிர்கொள்ளும் நிலையையும் பரிசீலித்துப் பார்ப்பவை காஃப்காவின் படைப்புகள். அறியமுடியாமைகளை அறிந்து கொள்ள மனிதன் நிகழ்த்தும் சலிப்பேயில்லா போராட்டத்தை அதன் அபத்தங்களுடனும் கனவுகளுடனும் தோல்விகளுடனும் வரைந்து காட்டுவது அவருடைய விசாரணை நாவல். தொழில்நுட்பங்கள் மாபெரும் அமைப்பாக மாறிவிட்ட இன்றைய காலத்தில் மனிதனிடமிருந்து காரணங்கள் உறிஞ்சி எடுக்கப்பட்டு பிரம்மாண்டமான புரிந்து கொள்ள இயலாமைக்குள் மனிதன் சரிந்துவிழுகிற காட்சியை ஒரு ஆன்மிகத் தோல்வியை முன்பே தீர்க்கதரிசனம் போல உரைத்துவிட்ட படைப்பு விசாரணை நாவல். சில படைப்புகள் காலத்தில் உறங்குவதில்லை. ஏனெனில் அவை நித்தியமான சிக்கல்களை எதிர்கொண்டபடி இருக்கின்றன.. அவ்வகையான படைப்பு காஃப்காவின் விசாரணை நாவல். அவ்வகையில் காஃப்காவின் விசாரணை நாவலை வாசிக்க நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன் .

visaranai-e1577842257418-211x300.jpg

காந்திய செயற்பாட்டாளர் சிவராஜ்:

இப்புதுவருட மலர்வில் நான் யாருக்காவது பரிசளிக்க (அ) பரிந்துரைக்க விரும்புகிற புத்தகம், பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுதிய “இன்றைய காந்திகள்“.

இணையவெளி துவங்கி இருதயங்கள் வரைக்கும் வெறுப்பின் கசப்புரையாடல் மிதமிஞ்சிக்கொண்டிருக்கும் இச்சமகாலத்தில் நம்மை செயல்வேகத்துக்குள் வலிமையாக இழுத்துப்போகும் படைப்புகள் மிகமிக அவசியமாகிறது. அப்படைப்பும் அன்பில் இழையோடியதாக அமைதல்வேண்டும். அமைதிவழியில் செயலூன்றி இன்று இந்திய ஒன்றியத்துக்கான சாட்சிமனிதர்களாக மாறிநிற்கிற பதினொரு காந்தியவாதிகள் பற்றிய வாழ்வுவிபரத்தையும் வரலாற்றுச்சுருக்கத்தையும் கொண்டுள்ளது இப்புத்தகம்.

காந்தியவழி என்பது பழமைதோய்ந்த பாதை என்கிற அரைகுறைப்புரிதலை நீக்கி, நவீன எதிர்காலத்துக்குமான அறிவியல்படைப்புகளுக்கும் எப்படி அறவழிச்சிந்தனைகள் கைகொடுக்கிறது என்பதற்கான இந்திய ஆவணம் இந்நூல். இன்று உலகளாவிய சமூகநலத் திட்டங்களாக அறியப்படும் நிறைய செயல்பாடுகள், இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் ஏதோவொரு காந்தியத்தாக்கத்தால் உந்தியெழுந்த எளிய மனிதர்களால் முன்னெடுக்கப்பட்டவை.

81808346_2778807775512495_40057663817934

 

அமுல் பால்வள நிறுவனர் வர்கீஸ் குரியன், திட்டக்கமிஷன் மூலம் பொருளாதார மாற்றம் கொண்டுவந்த லக்ஷ்மி சந்த் ஜெயின், வெறும்பாதக்கல்லூரியை நிறுவிய பங்கர் ராய், தகவலறியும் உரிமைச்சட்டத்தின் முன்னோடி அருணா ராய், பாலைவனத்தில் நீர்தேக்கிய தண்ணீர்மனிதர் ராஜேந்திர சிங், கிராமப்பெண்களை செவிலித்தாய்களாக்கிய மருத்துவர்கள் அபய் பங் மற்றும் ராணி பங், இமயமலைச்சரிவில் பனிஸ்தூபிகளை உருவாக்கும் சோனம் வாங்ச்சுக், அமைப்புசாரா தொழிலாளிகளுக்கான தொழிற்சங்க நிறுவனர் இலா பட், மனிதாபிமானப் பொருளியியல் அறிஞர் ஜான் ட்ரெஸ், சேவையை ஒளியாக்கி இருளகற்றும் அரவிந்த் கண்மருத்துவக் குழுமம், மானுட அறிவியலின் வழியாக கல்வியை விடுதலைப்படுத்தும் அரவிந்த் குப்த… இப்படியாக பதினோரு செயல்சாட்சிகளின் வரலாற்றுச்சித்திரத்தை இப்புத்தகத்தில் நாம் நெஞ்சுணர முடியும்.

காந்தியம் என்பது இன்னும் நாம் அறியப்படாத நிறைய பக்கங்கள் உடைய ஒரு பெருஞ்சாத்தியம். அச்சாத்தியத்தை அடைவதற்கான சத்தியத்தை இப்புத்தகத்தை நமக்கு நிச்சயம் நல்கும். ஒரு தேசத்தின் சிந்தனைப்போக்கை தங்கள் செயல்வழியே நல்வழிப்படுத்தி திசைப்படுத்துகிற இக்காந்தியர்களின் கதையை வாசிப்பது என்பது, நம்முடைய எதிர்கால இடர்களை கடப்பதற்கான நிகழ்கால சிந்திப்பு போன்றது. இப்புத்தகம் உங்களை இன்னும் தீவிரமாகச் செயல்படவைக்கும். நன்றி.

எழுத்தாளர் விஜய ராவணன்:

பரிந்துரைக்கும் நூல் : வங்கச் சிறுகதைகள்
தமிழில்: கிருஷ்ணமூர்த்தி

துண்டுபட்ட இந்திய சுதந்திரம் மற்றும் வங்காளப்போர் காலக்கட்டங்களில் எழுதப்பட்ட வங்கத்துச் சிறுகதைகளின் தேர்ந்தெடுக்கப்ட்ட தொகுப்புதான் நான் பரிந்துரைக்க விரும்புவது.
அன்றைய சூழலில் வங்காகளத்தில் ஏற்பட்ட சமூதாய மாற்றங்கள், சிக்கல்கள், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பித்தலாட்டம்,பசி, அகதிவாழ்க்கை, ஆயுதபோராட்டம் என இன்றும் நாம் சந்திக்கும் சமூதாயசிதைவுகளை கதைப்பொருளாய் பேசும் இக்கதைகள், ஒவ்வொன்றும் கதைச் சொல்லும் யுக்தியில் தங்களுக்குள் மாறுபட்டவை. எனக்கு இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்திய மணல்வீடு ஹரிகிருஷ்ணன் என்னிடம் சொன்னதை தான் நானும் சொல்லவிழைகிறேன் “கட்டாயம் வாசிக்கவேண்டிய கதைகள்”

vanga-sirukathiakal-188x300.jpg

எழுத்தாளர் உமை :

விமல் குழந்தைவேலின் ‘கசகறணம்’ நாவலை தமிழ்நாட்டின் இலக்கிய வாசகர்கள் எல்லோரும் படிக்க வேண்டும் என பரிந்துரை செய்கிறேன். ஈழ இலக்கியத்தின் போர்காலச் சூழலும், போருக்குப் பிந்தய சூழலும் மீன் சந்தையில் கருவாடு கிடைப்பதைப் போல ஈழ இலக்கியம் என்கிற பெயரில் மலிந்து கிடக்கிறது தமிழ்நாட்டில். ஷோபா சக்தி சொல்வதைப் போல, போர்க்கால சலுகையாக, மானியம் கொடுப்பதைப் போல, எல்லாவற்றையும் நீங்கள் கொண்டாடுகிறீர்கள். உங்களது நல்லெண்ணத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ‘அதற்காக, இப்படியா!’ என்கிற கேள்வி உடன்.

மேலும், ஈழ போர்க்கால இலக்கியத்தின் குப்பைகளை நாங்கள் அறிவோம். அவற்றை நாங்கள் பிரித்து வைத்திருக்கிறோம். வெளியே சொல்லத்தான் பயமாக இருக்கிறது. துரோகி என்கிறார்கள். அதற்காக அப்படியே விட்டுவிட முடியாது. நிற்க!

‘கசகறணம்’ நாவல் போருக்கு முந்தைய எங்கள் வாழ்வின் பதிவுகளைப் பேசுகிறது. அதுவும் கிழக்கு வாழ்வு குறித்து.

இலங்கையின் கிழக்கு மாகாணம் என்பது, எல்லா விதத்திலும், வடக்கில் இருந்து தனித்துவமானதொன்று. எங்களது மொழியும் கலாச்சாரமும் வடக்கைவிடவும் வேறுபட்டது. எங்களுடைய மொழி இன்னும் செழுமையானது. அதற்கு வேறுவிதமான ஒலியும் நயமும் உண்டு. அதை நாங்கள் கொண்டாடுகிறோம். அதைத்தான் விமல் முன்னிறுத்த நாடுகிறார்.

kasakaranam_2-195x300.jpg

சைவர்களும் இஸ்லாமியர்களும் பிட்டும் தேங்காய்பூவும் போல வாழும் இடம் கிழக்கு மண். போருக்கு முன்னர் அந்த இனங்களுக்கிடையே ஒரு நெருக்கமான உறவிருந்திருக்கிறது. அதுவும், அது சிதைந்து உறவுகள், பகைவர்கள் ஆன கதையும் இந்த நாவலில் எழுதப்பட்டிருக்கிறது.

ஷோபாவின் இச்சா நாவலில் சொல்லப்படுகிற ஆலாவினுடைய நிலம்தான் கிழக்கு. ஆனால் ஷோபாவிற்கு அந்த நிலம் செவி வழியேறிய ஞானம் மட்டுமே. எங்கள் விமல் குழந்தைவேலுக்கு, அந்த நிலம் ரத்தத்தில் ஊறிய ஒன்று. அதைப் பிழிந்து பிழிந்து எழுதி இருக்கிறார் இந்த நாவலில். எங்களுடைய மொழியை, பண்பாட்டை, வாழ்வியலை இதைவிட யாரும் சிறப்பாகச் எழுதி விட முடியாது.

நிச்சயம் இந்தப் படைப்பை வாசியுங்கள். எங்களது இலக்கியம் நீங்கள் கொண்டாடுகிற துவக்குச் சத்தமும், கந்தக வாசணையும் மட்டுமல்ல. அது வேறெங்கெங்கோ பரவிக் கிடக்கிறது என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

 எழுத்தாளர் பாத்திமா மாஜிதா:

புது வருடத்தில் பரிசளிக்க விரும்புகின்ற புத்தகம் இஸ்மத் சுக்தாய் கதைகள். சில வேளைகளில் நான் எழுதுவதற்கான விசையும் மன வலிமையும் இந்தப் புத்தகத்திலிருந்துதான் எழுந்து வந்தது.

இஸ்மத் சுக்தாய் இந்திய பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தில் தீவிரமாக இயங்கி வந்தவர். அந்தக் கால சமூக, அரசியல் நடப்புகளை, பெண் சார்ந்த சமூக அசைவுகளை தனக்கேயுரிய எள்ளல் தொனியுடனும் அழுத்தமாகவும் எழுத்தாக்கியவர். உருது இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை விதைத்த இந்தப் பெண் ஆளுமையின் 24 சிறுகதைகளின் தொகுப்பு நூலான இஸ்மத் சுக்தாய் கதைகளை வாசிக்கும் அனுபவம் அலாதியானது.

ismath-195x300.jpg

 

இலக்கியமே பெண்ணிற்கு மறுக்கப்பட்டிருந்த அந்தக் காலச் சூழலில் பாலியல், சமூகப் பிரச்சினை, அரசியல், கடந்த கால அழகை மறைக்கும் உலகம், பெண்களின் பிரச்சினைகள், நடப்பியல் நிகழ்வுகள் முதலான பேசுபொருள்களைத் தம் கதைக்கான களன்களாகக் கைக்கொண்ட துணிச்சல்காரியின் எழுத்தையே இந்தப் புது வருடம் பரிசளிக்கவும் பரிந்துரைக்கவும் விரும்புகிறேன்.

எழுத்தாளர் லஷ்மி சிவக்குமார்:

புதிய ஆண்டில் ஒரு புத்தகத்தை யாருக்காவது பரிசளிக்க அல்லது பரிந்துரை செய்ய விரும்பினால் அது எந்த புத்தகம் மற்றும் ஏன் அந்த புத்தகம்? என்று கேட்டிருந்தீர்கள். நன்றி.

2019 ஜனவரியில் வெளியான என்னுடைய ‘நியமம்‘ நாவல் தான் என் தேர்வு. ஒரு‌ எழுத்தாளன் தன்னுடைய புத்தகத்தைப் பரிசளிக்கவோ, பரிந்துரைக்கவோ விரும்புவது எந்த வகையிலும் சுயவிளம்பரமாகாது. நியமம் ஒரு‌ மருந்துப் பிரதிநிதியின் பார்வையிலிருந்து தன்னிலை விவரிப்பாகச்‌ சொல்லப்பட்டிருந்தாலும், அது அவனுக்குச் சம்பந்தப்பட்டவனது அறமற்ற இயக்கத்தை நோக்கியே பயணிக்கிறது. அந்தப் பயணத்தில் இவர்கள் அனைவருமே நேரடியாகப் பாதிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டுருக்கிறது. குற்றங்கள் பெருகிக்கிடக்கும் இச் சமூகத்தில் அதை அம்பலபடுத்த ஒரு எளிய மனிதனின் பேராசையை முன்னிறுத்தி கதை சொல்வதென்பது புனைவின்‌ சுதந்திரம். குற்றங்கிடங்கான பெருநிறுவன ஆதாரங்களைத் திரட்டமுடியாத சூழலில் இங்கே ஒரு‌ சாமானியன் பெருங்குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறானே ஒழிய அவனும் குற்றமற்றவன் என்று என்னால் வாதாட முடியாது. என்றைக்குமான‌ சூழலும் இப்படித்தான் இருந்திருக்கிறது.

niyamam-300x156.jpg

புனைவென்பது பெரும்பாலும் நடந்த ஒரு சம்பவத்தை முன்னிறுத்தி முன்னும் பின்னுமாக நிகழ்த்தப்படுவதாக இருக்கும் பட்சத்தில். குற்றங்களின் நுண்ணிய பின்விழைவாக ஏற்படப்போகும் இழப்பை முன்கூட்டியே சொல்வதென்பது அரிது. இந்த நாவல் வெளியான நாட்களில் அப்படியொரு விபரீதம் சாத்தனூரைச்‌ சார்ந்த ஒரு‌ கர்ப்பினிப் பெண்ணிற்கு நிகழ்ந்தது. இது நாட்டில் பல்வேறு இடங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விழிப்புணர்வாகவும் மனிதநேயத்தைப் போற்றும் வகையிலும் இந்த‌ நாவல் பரிந்துரைப்பு அவசியமெனக் கருதுகிறேன்.

எழுத்தாளர் விழியன்:

இந்த புத்தாண்டில் என் பரிந்துரை பெனி எனும் சிறுவன். மொழிபெயர்ப்பு யூமா வாசுகி நிச்சயம் ஒவ்வொரு குழந்தைகளும் அவரது பெற்றோர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

beni-walks-on-his-own-e1577850900342-193

எழுத்தாளர் கலையரசி பாண்டியன்:

கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ராஜநாராயணன் அவர்களின் ‘பிஞ்சுகள்,’ என்ற நாவலை, நான் சிறார்களுக்காகப் பரிந்துரைப்பேன்.


இது கையெழுத்துப் பிரதியாக இருந்த போதே, 1978 ஆம் ஆண்டுக்கான ‘இலக்கிய சிந்தனை,’ பரிசைப் பெற்றது.
சங்கக் காலத்திலிருந்து, இயற்கையைத் தெய்வமாகக் கருதி, அதனோடு இயைந்து வாழ்ந்தவர்கள் நாம்; ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்று இயற்கையிடமிருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டோம்; அடுக்கு மாடி குடியிருப்புகளில், எந்நேரமும் செல்போனை நோண்டிக்கொண்டு, பிராய்லர் கோழிகளாக நம் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள்.
சுற்றுச் சூழல் மாசுபட்டு நஞ்சாக மாறியிருக்கும் இன்றைய சூழலில், நம் குழந்தைகளுக்கு இயற்கையைப் பற்றிய புரிதல் ஏற்படுத்துதல் மிகவும் அவசியம்; அவசரமும் கூட. அந்த வகையில், கி.ராவின் பிஞ்சுகள் சுவாரசியமான குறுநாவல்.

pinchukal-200x300.jpg
இதில் வரும் நம் மண் சார்ந்த சிட்டுகளைப் பற்றிய, ஒரு உரையாடலைப் பாருங்கள்;-
“சிட்டுக்கள்ளெதான் எத்தனை வகையிருக்கு?… தேன் சிட்டு, தட்டை சிட்டு,பூஞ்சிட்டு, பட்டுச்சிட்டு, வேலிச்சிட்டு, முள்சிட்டு, மஞ்சள்சிட்டு, செஞ்சிட்டு…..
இந்தச் செஞ்சிட்டு, அசல் குங்கும நிறத்துல இருக்கும்; இந்தக் கருஞ்சிட்டு மாதிரி, அதுவும் அபூர்வமா எப்பவாவது தான் வரும்”.
“மாமா! இந்தப் பறவைகள் தான்,எம்புட்டு அழகா இருக்கு?”
இக்கதையின் நாயகன் சிறுவன் வெங்கடேசு, சிறிய அளவில் பறவைகளை வேட்டையாடினாலும், பறவை முட்டைகளைச் சேகரித்தாலும், பறவைகளின் அழகை ரசிக்க்க் கூடியவனாக, அவற்றின்பால், அன்பு கொண்டவனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளான்.
இயற்கையின் மீது நம் குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படவும், நம் மண் சார்ந்த உயிரினங்களின் தமிழ்ப்பெயர்களை அறிந்து, அவற்றைப் பாதுகாக்கவும், சிறுவர் மட்டுமின்றிப் பெரியவர்களும், அவசியம் வாசிக்க வேண்டிய நூல்

கவிஞர் நேசமித்ரன்:

இது எனது துடிக்கூத்து குறித்து எஸ்.சண்முகம் எழுதித் தந்த குறிப்பு

நாம் எதிர்கொள்பவை மற்றும் கடப்பவை எல்லாம் உள்ளீடற்றப் பொருண்மையை உடையவை. அதன்பின்னே இயங்கும் கார்பரேட் பெருநிறுவனங்களின் வணிகச் சொல்லாடல்கள்; நம் அனுமதியைப் பெற்றே நம்மைக் கையாளுகின்றன. எல்லோரையும் அதிகாரத்தின் அங்கங்களாக மாற்றப்படுவதற்கான நோக்கிலேயே செலுத்தப்படுகின்றன. கட்டமைத்திருக்கும் சொல்லாடல்கள் அனைத்திலும் கண்ணுக்குப் புலப்படாத இறையாண்மையின் அதிகாரக் கரங்களின் பிடிகளில் இயங்குகிறது. அவைகளை அவிழ்க்கும் கவிதையாடல்களை அகப்படுத்தும் பிரதிகளே அரசியல் மொழிக்கான முன் நகர்வுகள் எனலாம். அத்தகைய பிரதியாக்கத்தினைக் கொண்டிருப்பவை நேசமித்ரனின் கவிதைகள்.இதையொருவித Surface Writing என்ற நவீனத்துவத்தின் பிந்தைய வகைமையில் நேசமித்ரன் தனது கவிதைகளை எழுதியிருக்கிறார். மேலும் இதன் மொழியானது பன்மைக் குறிப்பீட்டை வாசகரின் மனதில் மூண்டெழச் செய்வதற்கான வல்லமையை உடையன. அனைத்து அதிகார ஒப்பனைகளையும் கலைத்தழிக்கும் கவித்துவத்தை இத்தொகுயின் கவிதைகள் செய்கின்றன. நம்மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் அடுக்குகளைக் கீழறுப்பு செய்யத் தேவையானக் கவிதையாடல்களை நேசமித்ரன் கவிதைகள் அளிக்கின்றன.

thudikoothu-195x300.jpg

எழுத்தாளர் அமல்ராஜ்:

முரகாமியின் எழுத்தின் வெளிப்பாடு என்பது மிகவும் பரந்தது. அது நம்மை இன்னும் இன்னும் ஆழமான அகத் தேடல்களை நோக்கி இழுத்துக்கொண்டு போவது. அதிலும், ஆச்சரியமான விடயம், மேம்போக்கான வாசகர்களுக்கும், உளவியல் மற்றும் பிரதி சார் நுணுக்கங்களைத் தேடியலையும் வாசகர்களுக்கும் சமமாய் ஈடுகட்டக்கூடிய வித்தை அதனிடம் உண்டு. Norwegian Wood இன் ஆங்கில மொழிபெயர்ப்பும், அந்நாவல் உலகம் பூராவும் கொண்டாடப்படுவதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று எனச்சொல்லலாம். இலகுவான ஆங்கிலமும், புரிந்துகொள்ள லாவகமாக மொழிநடையும் அந்த மொழிபெயர்ப்பின் பாரிய வெற்றிக்கான காரணிகள்.

என்னைப் பொறுத்தவரை, முரகாமியின் பாலியல் பற்றிய நுணுக்கமான புரிதல்களும், மனித உறவுகளுக்கிடையிலான உளவியல் சார் வேற்றுமைகளை விவாதப்பொருளாக வாசகனிடம் தூக்கியெறியும் நுட்பமும், ஜப்பானின் கலாச்சாரக் கட்டுக்களை தனி மனித சுதந்திரம் மற்றும் நிந்தனையற்ற புரிதல்களுடன் முன்வைக்கும் நிதானமும்தான் இந்நூலின் மிகப் பிரதானமான வெளிப்பாடுகள்.

norwegian-wood-194x300.jpg

 

Watanabe, Naoko, Midori போன்ற பிரதான கதாபாத்திரங்களை விட நாவலின் மிக முக்கியமான ‘இலட்சியத்தை நிறைவேற்றும்’ காரணி Reiko என்கின்ற வயலின் ஆசிரியைதான். ஒரு 13 வயது பள்ளிச்சிறுமி எப்படி Reiko வை seduce செய்து உளவியல் தொல்லை கொடுக்கிறாள் என்பதைப் படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அதைப் படிக்கும்போது அதுவொரு white elephant என்கின்ற மேம்போக்கு மனநிலையை அது ஏற்படுத்தாது. புத்திக்கூர்மையுடைய சிறுமியாக இருந்தால் அது யதார்த்தத்தில் சர்வ சாதாரணமாக நடக்கக்கூடிய ஒரு விடயம். இச்சம்பவத்தில் தோண்டியெடுத்துப் புரிந்துகொள்ள ஆயிரத்தெட்டு விடயங்கள் உண்டு. அதில்தான் முரகாமியின் ஒட்டுமொத்த வெளிப்பாடும் நிகழ்கிறது.

Psychiatric Sanatorium பற்றிய ஆச்சரியமான தேடல்களுக்கு விரிவான அடித்தளத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது இந்நாவல். அதுபோல, முரகாமியின் பிரெஞ்ச் இலக்கியம், இசை, உளவியல் நுணுக்கங்கள் மீதான ஆழமான புரிதல், ஜப்பானின் கலாச்சாரத்தை உடைக்காமல் தனி மனித சுதந்திரத்தை அடியில் நிரப்பி கொண்டிழுக்கும் வாழ்க்கை பற்றிய தர்க்கங்கள் நாவலின் முதன்மையான assets எனக் கொள்ளலாம்.

Norwegian Wood ஐ நிற்சயமாக மற்றவர்களுக்கு பரிசளிப்பேன்.

எழுத்தாளர் கோகுல் பிரசாத்:

மகத்தான ருஷ்ய படைப்பாளிகளான தொல்ஸ்தோய்க்கும் தஸ்தாவ்யெஸ்கிக்கும் இடையில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் எனக்குக் குழப்பங்களே இருந்ததில்லை. ஒப்பற்ற உயிர்க் கருணையின் பேரொளியிலேயே உலகியக்கத்தின் உணர்ச்சிப் பெருக்கை, அதன் சீர்குலைவை, ஒழுங்கினை, நலுங்கலை எல்லாம் மினுங்கச் செய்த தொல்ஸ்தோய் தான். அவரது படைப்புலகை கனிவின் ‘உச்சம்’ எனச் சொன்னால் ஏதோ பீடத்தில் ஏற்றி வைத்தது போன்ற விலகலை அளித்து விடுகிறது. அவர் எங்கேயோ உச்சியில் நின்று கொண்டு நம்மைக் குனிந்து நோக்குபவரல்ல. கனிவின் நீர்மையின்பாற் இருண்மையிலும் ஒளியைத் தேடுபவர். திசையறியா காரிருளில் வழிகாட்டி. எலும்பில் ஊடுருவும் வலிக்கு மருந்து.

அந்தப் பெருங்கருணையின் மெய்ஞானத்தை தமிழுக்கு அமுதூட்டிய கு. அழகிரிசாமியின் சிறுகதைகள் முழுத் தொகுப்பினையே எந்தவொரு நல்ல நண்பருக்கும் வாசகருக்கும் பரிசளிக்க விரும்புவேன். காலச்சுவடு வெளியீடு. மொழி, உத்தி, கோட்பாடு என எதுவும் மெய்மைத் தேடலின் ஆவேசத்தின் முன்பு செல்லுபடியாகாது. அதன் விவேகப் பாய்ச்சலை கதையின் ஒவ்வோர் அணுவிலும் பொதிந்து வைத்தவர். பாசாங்கற்ற கதாபாத்திரங்கள் வழியாக மனிதரின் மேன்மையான பக்கங்களை அள்ளியள்ளி எடுத்துரைத்தவர்.

ku-azhagirisamy-sirukathaigal-195x300.jp

வேறெதையுமே வாசிக்காமல் அவரது நூற்றி சொச்சம் கதைகளில் மட்டும் தொடர்ந்து ஆழ்ந்திருந்த பல மணி நேரங்களை இப்போது நினைக்கையிலும் பரவசமாக இருக்கிறது. அவரது கதைகள் நம்மைச் சீண்டுவதில்லை. மாறாக, அழுள்ளத்தில் அமைதியைக் கொண்டு வருகிறது. அவரது ‘வேடிக்கை மனிதர்களை’ எண்ணி புன்னகைக்கும் போதெல்லாம் உடல் சிலிர்க்கிறது. தாயுள்ளத்தின் அரவணைப்பில் கடத்தப்படும் கதகதப்பு. முன்முடிவுகளற்ற சித்தரிப்பில் தெளிந்து வரும் மேதைமை.

அவருக்குப் பிறகு தமிழ்ப் பரப்பில் குழந்தைகளின் உலகை அவரளவுக்கு அணுக்கமாகச் சித்தரித்தவர் சு. வேணுகோபால் மட்டுமே. குழந்தைகள் உலகைக் காட்டிவிட முடிந்தபின் மற்றதெல்லாம் எம்மாத்திரம்? தமிழ்ச் சிறுகதையின் மகத்தான கதைசொல்லி. சாதனையாளர். எல்லோரையும் விட சிறந்தவர். ஆம், புதுமைப்பித்தனை விடவும் சிறந்த எழுத்தாளர் கு. அழகிரிசாமி.

எழுத்தாளர் ரமேஷ் பிரதன்:

டிக்‌ஷ்னரி ஆஃப் கசார்ஸ். இருபது ஆண்டுகளுக்கு முன்பு கதைசொல்லி இதழில் நெடுங்கட்டுரை எழுதியிருக்கிறேன். இப்போது தமிழிலேயே கிடைக்கிறது. அனைவரும் வாசிக்கவேண்டும். பிரதி தரும் வாசிப்பின் திளைப்பு அலாதியானது.

khazargalin-agaraathi-195x300.jpg

எழுத்தாளர் அ.கரீம்:

கடந்த 2019 – ம் ஆண்டில் வெளிவந்த புத்தகங்கள் என்று முடிவு செய்தால் பல புத்தகங்களை பரிந்துரைக்கலாம். நான் எதிர் வெளியீட்டின் இ.பா.சிந்தன் மொழிபெயர்ப்பில் வந்த “நிழல் ராணுவங்கள்” புத்தகத்தை பரிந்துரைக்கிறேன். நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் இந்தியாவுக்குள் ரகசியமாக இயங்கிக் கொண்டு இன்னொரு இந்தியாவை காண முடியும். ஒரு கிரைம் நாவல் படிப்பதைப் போல் ஒவ்வொரு பக்கத்தையும் கடப்பது அதிர்ச்சியாகவும் மன இயலாமையின் நெருக்கடியையும் ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு பக்கத்துக்குள்ளேயும் நமக்கு தெரியாத அல்லது சரியாக கவனிக்காத பேரதிர்ச்சியை அந்த புத்தகம் உள்ளே வைத்திருக்கிறது.  இந்தியா போன்ற பன்முக தேசத்தில் கட்டமைக்கப்படும் அபாயத்தை பல்வேறு தரவுகளின் மூலம் நம்முன் வைக்கும் மிக முக்கியமான புத்தகம் நிழல் ராணுவங்கள். அந்த புத்தகத்தை வாசித்து விட்டால் நம்முன்னே உள்ள சவால்களும் பயணிக்க வேண்டிய திசையையும் சமூக, மனித, தேச பாதுகாப்புக்காக செய்யப்பட வேண்டிய வேலை கடல் போல் உள்ளதை விரித்துக்காட்டும் முக்கியமான வரவு நிழல் ராணுவங்கள்.

nizhal-ranunvangal-196x300.jpg

எழுத்தாளர் கீதா மதிவாணன்:

பெண் ஏன் அடிமையானாள் – பெரியார்

இந்தக் காலத்தில் பெண்கள் படித்து நல்ல பணிகளில் அமர்ந்திருக்கின்றனர், ஆண்களுக்கு நிகராக பற்பல துறைகளிலும் முன்னேறியுள்ளனர், பொருளாதாரத்தில் தங்கள் கால்களில் தாங்களே நிற்குமளவுக்கு பொருளீட்டுகின்றனர், தங்கள் வாழ்க்கைத் துணையைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருக்கின்றனர். இதற்குமேலும் இன்னும் என்னதான் எதிர்பார்க்கிறார்கள் பெண்கள்? என்ற கேள்வியை அனுதினமும் நாம் எதிர்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் உண்மை நிலவரம் என்ன? எத்தனை சதவீதப் பெண்கள் மேற்குறிப்பிட்ட எல்லா உரிமைகளையும் பெற்றிருக்கிறார்கள்? அப்படியே பெற்றிருந்தாலும் அவ்வுரிமைகளை எல்லா காலகட்டத்திலும் எவ்வித இடையூறுமின்றி அவர்களால் முழுமையாக அனுபவிக்கவோ செயல்படுத்தவோ முடிகிறதா? காமுகக் கண்களின் பாலியல் வன்முறைகளிலிருந்து தப்பிக்க இயல்கிறதா? இப்படியான சூழலில் இந்நூல் பரிசளிக்கப்படுவதும் பேசப்படுவதும் அவசியம் என உணர்கிறேன்.

 

pen-yen-adimaiyanal-e1577848254111-194x3

பெண்கல்வி, பணி, கற்பு, காதல், கன்னிமை, திருமணம், கர்ப்பம், கர்ப்பத்தடை, கைம்மை, மறுமணம், விபச்சாரம், சொத்துரிமை, சமூகம், சுயமரியாதை என பெண்ணை அடிமைப்படுத்தும் மற்றும் அடிமைத்தளைகளிலிருந்து விடுவிக்கும் எண்ணற்ற விஷயங்களைப் பற்றித் துணிகரமாகப் பகிர்ந்த பெரியாருடைய சிந்தனைகளின் தொகுப்பே இந்நூல். காலங்கள் மாறினாலும் பெரும்பான்மை மக்களின் பொதுப்புத்தியில் காலங்காலமாய்ப் படிந்துகிடக்கும் பழம்நம்பிக்கைகளை துளியேனும் அசைத்துப்பார்க்க உதவும் அற்புதமான சிந்தனைத் திறவுகோல் இந்நூல்.

கவிஞர் லாவண்யா சுந்தரராஜன்:

க.மோகனரங்கன் மொழிபெயர்ப்பில் தமிழினி வெளியீடாக வந்துள்ள ‘குரங்கு வளர்க்கும் பெண்‘ என்ற சிறுகதை தொகுப்பினை பரிந்துரை செய்வேன். இந்த தொகுப்பில் ஏழு கதைகள் உண்டு. அதில் இரண்டு நெடுங்கதைகள். ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலப்பரப்பில் நிகழும் கதைகள். அவை அனைத்தும் ஆண் பெண் உறவு சிக்கலை நுட்பமாய் சொல்கிறது. நிகழும் நிலப்பரப்பு எதுவாயினும் பசி, துக்கம், அன்பு செய்தல், அவமானம், இயலாமை என்று உணர்வுநிலைகள் பொதுவானதே என்பதை உணர்த்தும் கதைகள்.

mohan-196x300.jpg
 

க. மோகனரங்கன் அவர்களின் மொழிபெயர்ப்பில் இந்த கதைகளை வாசிப்பது சொந்த மொழிக்கதைகளை வாசிப்பது போன்ற உணர்வை தருகின்றது.

கவிஞர்  முத்துராசா குமார்:

தமிழின் மூத்த பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் பேராசிரியர் தொ.பரமசிவன். நாட்டார் தெய்வ வழிபாடுகள், தொன்மம், சடங்குகள், சுற்றுச்சூழல், உணவு, உடை, பண்பாடு, கலாச்சாரம், சாதி, சமயம், கல்வி, நாட்டார் வழக்காற்றியல், தமிழ் இலக்கியம், திராவிடம், தலித்தியம், பெரியாரியம், மார்க்சியம் என்று தொ.ப அவர்களின் ஆய்வுப் படைப்புகளும், பயணங்களும் பிரமிக்கத்தக்கவை.

மக்களின் அன்றாட நுண் நகர்வுகளை ஆதி மரபுகளிலிருந்து கால வரிசைப்படி பிடிக்கும் தொ.ப தனது ஆய்வுகள் அத்தனையையும் ஆதியின் பொடி புள்ளியிலிருந்தே ஆரம்பித்து விடுகிறார். அதற்குண்டான சான்றுகள் ஒவ்வொன்றையும் சமூகத்தின் உள்ளடுக்குகளில் இருந்து நுட்பமாக அகழ்ந்தெடுக்கிறார்.

அந்த வகையில் ‘மானுட வாசிப்பு, தொ.ப.வின் தெறிப்புகள்’ நூல் அவரது ஆய்வுத் தளங்கள் அனைத்தையும் முன்வைத்து, அவருடன் நடத்திய நேர்காணல்களைக் கொண்ட நூல் வடிவம். தற்சமய அரசியல் சூழலில் நமக்குள் பலவகையான கேள்விகள் உடனுக்குடன் எழும். அவை எளிமையாக, தர்க்கப்பூர்வமாக, வாதங்களாக என்று பல குணாதிசியங்களில் இருக்கலாம். அவை அனைத்திற்கும் இந்நூலில் பதில்கள் இருக்கின்றன. தொ.ப சொல்லியிருக்கும் அப்பதில்கள் அசாத்தியமானவை.
manuda-vasippu-204x300.jpg
ஒற்றைக் கலாச்சார திணிப்பு, வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் பூர்வக்குடிகளை அவர்களின் நிலங்களிலிருந்து வெளியேற்றுதல், கல்வி நிறுவனப் படுகொலைகள், சாதிய, மத, பெண் வன்கொடுமைகள், நவீனத் தீண்டாமைகள், அரசியலாக்கப்பட்ட இயற்கை என்று முற்றிலும் அறமற்றுப் போன இன்றைய இந்திய, தமிழக அரசியல் சூழலில் தொ.ப.வின் ஆய்வு எழுத்துகள் அத்தனையும் கடைத்தட்டு மக்களுக்கான அற அரசியலின் பக்கம் நிற்கும் வலுவான அறிவாயுதங்கள்.
விதிப்படியும், இயல்பாகவும் தொ.ப.வின் ஆய்வு முடிவுகள் எளிய மக்களின் அருகாமை நோக்கியே நகர்கின்றன.

தெளிவையும், தேடலையும், பதில்களையும், எதிர் வினைகளையும் தரக்கூடிய தொ.ப அவர்களின் எழுத்துகள் அனைத்தையும் பேணிக் காத்து, படித்து பரவலாக்கி அடுத்த தலைமுறையினருக்கு கைமாற்றிவிட வேண்டியது தமிழ் சமூகத்தின் கட்டாய கடமை.

நூலிலிருந்து….
‘தேசபக்தி என்பது எப்படி கயவர்களின் கடைசி புகலிடம் என்கிறோமோ அப்படி சாதி என்பது பாதுகாப்பற்றவனின் புகலிடம்’ – பேராசிரியர் தொ.பரமசிவன்.
(நூல் : மானுட வாசிப்பு, தொ.ப.வின் தெறிப்புகள் – தயாளன், ஏ.சண்முகானந்தம் – தடாகம் வெளியீடு,)

 கவிஞர் பெரு விஷ்ணுகுமார்:

எனது இரண்டு பரிந்துரைகள்.

1.) வார்த்தைகளின் ரசவாதம்
– பிரம்மராஜன்;

vaarththaiyin-rasavaatham-e1577851776588
 

குறிப்பிட்ட ஒரு முடிவினை எட்டியபின்னும் தீராது எஞ்சியிருக்கும் அடிப்படை கேள்விகளே ஒவ்வொரு காலகட்டத்திற்கும் கவிதை பற்றிய உரையாடலுக்கு மூலகாரணம். கவிதை பற்றிய பலவகை கூற்றுகளையும் கருத்துருக்களையும் ஒன்றுகூட்டி விவாதிக்கும் முயற்சி இந்த புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் நிகழும்.

2.) Periodic Table
– Primo Levi ;

leri-192x300.jpg
 

போர்கால முகாமிலிருந்து வெளியேறிய பிரைமோ லெவி அமெரிக்கா சென்ற பின்பு எழுதிய நாவலாக Periodic Table ஐ கூறுவர். தனிமவரிசை அட்டவணையில் காணப்படும் ஒவ்வொரு தனிமங்களாக எடுத்துக்கொண்டு அந்த தனிமங்களை ஒத்த பண்புகள் கொண்ட மனிதர்களை அவர்களைப்பற்றிய நினைவுகளை கூறுவதே நாவலின் வடிவம். கிட்டத்தட்ட இந்த நாவலுக்கு பிறகுதான் இவர் ஏற்கனவே எழுதிய படைப்புகளும் கவனம் பெற்றதாக கூறப்ப

எழுத்தாளர் கமலகண்ணன்:

செவ்விலக்கிய நூல்கள் பல மனதில் தோன்றினாலும் நவீன தமிழ் இலக்கியத்தின் அளவில் மனதைக் கட்டுப்படுத்தி கொள்கிறேன்.

தமிழின் சிகரங்களுள் ஒன்றான ‘கொற்றவை‘ நாவலை அளித்திடுவேன்.

kotravai-194x300.jpg
புனைவின் செறிவை புனைவின் இனிமையை சாத்தியங்கள் கடந்த தளத்தில் ஏற்படுத்தி மலைப்பை உருவாக்கிய நாவல். சிலப்பதிகாரத்தின் நாவல் வடிவம். நிலக்காட்சிகளின் உளவியலை இத்தகைய நுண்ணிய அவதானிப்பு வழியாக மனதில் பார்ப்பது வேறெந்த புனைவிலும் கண்டிராத உணர்வு. பல இருப்பினும் காரணங்களுள் முதல் தமிழ்.

எழுத்தாளர் ப. தெய்வீகன் :

நான் இந்த புத்தாண்டில் பரிந்துரைக்கும் அல்லது பரிசளிக்க விரும்பும் புத்தகம்

டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனா

anna-karenina-196x300.jpg
உலகை தனது தட்பான கரங்களில் வைத்து வருடிக்கொள்ளும் காதலின் மகத்துவத்தை மிகப்பெரிய காவியமாக சொன்ன நாவல் அன்னா கரீனினா.மானிடச்சிக்கல்களின் அனைத்து ஆள்கூறுகளின் வழியாகவும் காதல் என்ற பெரும் நதி எவ்வளவு மூர்க்கமாக நுழைந்தோடிக்கொண்டிருக்கிறது என்பதை கண்முன்னால் நிகழ்த்திக்காண்பித்திருக்கும் அதிசயம் இந்த நாவல். நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் இந்த நாவலின் பாதிப்பில்லாத படைப்புக்களை காணமுடியாது எவ்வளவு அதிசயமோ அதோபோல டால்டாய் போலொருவர் பெண்ணிற்குள் இவ்வளவு ஆழத்திற்கு இறங்கி ஒரு பிரதியை எழுதியது எவ்வாறு என்பதும் இன்றுவரை அதிசயமே.

எழுத்தாளர் அரிசங்கர்:

பரிந்துரைக்கும் நூல் வால்கா முதல் கங்கை வரை….

volga-muthal-gangai-varai-195x300.jpg
பல்லாயிரம் ஆண்டு மனித சமுதாயத்தின் வரலாற்றை 20 கதைகளின் வழியாக எளிமையாக உணர்த்தும் நூல்… எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல். முக்கியமாக முதல் ஐந்து கதைகளில் மனித வரலாற்றின் ஆரம்ப காலத்தில் பெண்ணின் நிலை… தாய் வழி சமூகம் எவ்வாறு இயங்கியது என்பதை ஒவ்வொரு ஆணும் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்… நான் எப்போதும் பரிசாக கொடுக்க விரும்பும் புத்தகம்..!

எழுத்தாளர் தீபு ஹரி:

புத்தாண்டில் இரண்டு பரிந்துரைகள்.

மணற்கடிகை என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமான நாவல். ஒரு தொழிற் நகரத்தில் குறுகிய காலத்தில் ஏற்படுகிற அசுர வளர்ச்சி, அது மக்களுடைய அக மற்றும் புற வாழ்வில் ஏற்படுத்துகிற கலாச்சார பண்பாட்டு மாற்றங்கள் போன்றவற்றை மிக விரிவாகவும், நேர்த்தியாகவும் பதிவு செய்திருக்கிற ஒரு புதினம். கிட்டத்தட்ட அது தொழிற்புரட்சிக்குப் பிந்தைய திருப்பூரைப் பற்றிய ஒரு ஆவணம் என்று கூட சொல்வேன்.
அதே போல் இந்த வருடம் வெளிவந்த கவிதைத் தொகுப்புகளில் விளையாட வந்த எந்திர பூதம் எனக்கு மிகுந்த புத்துணர்வைக் கொடுத்த ஒரு தொகுப்பு.

6_6868-200x300.jpgmanal-kadikai-183x300.jpg

 

எழுத்தாளர் கறுப்பி சுமதி:

‘A Fine Balance’ – இந்நாவல் அண்மையில் வாசித்த மிகச்சிறந்த நாவல் என்று கூறும் தரத்தோடு இருக்கின்றது. 1975இல் இந்தியாவில் ‘அவசரகால ஆட்சி’ பிரகடனப்படுத்தப்பட்ட போது மும்பையில் வசித்த நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த டயானா எனும் பெண்ணினின் வாழ்வை மையப்படுத்தி அவரது சிறு பிராயத்தில் தொடங்கி முதுமை வரையின் நாவல் நீள்கின்றது. பெண்கள் மேலான ஆண்மையின் அடக்குமுறை அதை எதிர்த்து நிற்கும் டயானாவின் திறமை, பொருளாதார நெருக்கடி, டயானா சந்திக்கும் மனிதர்கள் என்று தன் எழுத்தால் வாசகர்களை பாத்திரங்களுக்குள் கொண்டு சென்றுள்ளார் மிஸ்ரி.
நகர சுத்திகரிப்புத்திட்டம், குடும்பக்கட்டுப்பாடு என்ற பெயரில் வீதியோரப் பிச்சைக்காறர்களையும், பாமர மக்களையும் அரசாங்கம் நடாத்தும் முறை மிகவும் நெகிழ்சி தரும் வகையில் எழுத்தப்பட்டிருக்கின்றது.

A-FINE-BALANCE-193x300.jpg
இந்திராகாந்தியின் அரசியல் காலகட்டத்தில் இந்திய மக்கள் அவர் மேல் கொண்டிருந்த வெறுப்பை மிகத் துல்லியமாகவும் துணிவோடும் தந்திருக்கின்றார் மிஸ்ரி.
மூன்று வருடங்கள் திருமணத்தின் பின்னர் கணவனை ஒரு விபத்தில் இழந்த டயானா, ஆணாதிக்கவாதியான தனது அண்ணனுடன் தங்க நேர்ந்து விடுமோ என்று அஞ்சி, வாழ்வை ஒரு போராட்டம் நிறைந்த சவாலாக எதிர் கொண்டு முன்னேறும் போது டயானாவின் வீட்டின் அறையில் வாடகைக்கு வந்து சேரும் மொனீக் எனும் பல்கலைக்கழக மாணவன், டயானாவின் தையல் வேலைக்கு என வந்து சேரும் ஐவர், ஓம் எனும் கிராமத்தைச் சேர்ந்த தலித் ஆண்கள் இவர்களுடனான டயானாவின் உறவு என கதை நீண்டு செல்கின்றது.

இந்த நாவலை இந்த புத்தாண்டில் நண்பர்களுக்கு பரிசளிக்க அல்லது பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.

எழுத்தாளர் கிருஷ்ண மூர்த்தி:

புத்தாண்டிற்கு நான் பரிசளிக்க விரும்பினால் நட்ராஜ் மகராஜ் நாவலே என் தேர்வாக இருக்கும். வரலாறு மனிதர்கள் மீது உருவாக்கும் அடையாளங்களும் பின் அந்த அடையாளங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டு வாழும் மனிதர்களின் அபத்தமும் எல்லா காலத்திற்கும் பொருந்தும். வரலாறு குறித்த புரிதலை களைத்து போட்டுக்கொண்டே இருக்கும் புதினம் புத்தாண்டில் புதிய வாசலை, புதிய புரிதலை கொடுக்கட்டும்.

natraj-maharaj-206x300.jpg

 எழுத்தாளர் பிரவீன் பஃறுளி:

இந்த புத்தாண்டில் நான் இரண்டு புத்தகங்களை நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன் ஒன்று.

துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை – பாலசுப்ரமணியன் பொன்ராஜ்.

சமகாலத் தமிழ்ப் புனைவில் பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகள் ஏற்படுத்தியிருக்கும் இடையீடு முக்கியத்துவம் வாய்ந்தது. மனிதமையவாதம், சுய அனுபவம், அன்றாடம் என சலிக்கும் யதார்த்தவாதக் குவியல்களுக்கிடையே, தமிழ்ப்புனைவு வெளியில் அவை ஒரு விபரீதத்தையும் திடுக்கிடலையும் நிகழ்த்தியுள்ளன. நமது புழங்கெல்லை என்னும் பரிதாபமான வரையறையை கேலி செய்தபடி வாசிப்பினூடாக அறிவியல், தத்துவம், வரலாறு, என சகல அறிவுத்துறைகளோடும் மேலும் நுகர்வியத்தின் புதிய பண்பாட்டு மற்றும் அறிவுக் களங்களோடும் மூர்ச்சிக்கும் புனைவுச் சாகசங்களை அவை பரிசோதிக்கின்றன. வாசிப்பே உடலாகி அதனூடான பல்வேறு பிரதிகளையே தன் எல்லையற்ற நிலமாக்கும் ஆற்றல் அப்புனைவுகளுக்கு உண்டு. ’அறிவார்த்தம், பரிசோதனை, கனவுத்தன்மை, புனைவதீதம், தடையற்ற சுதந்திரம்’ இக்கதைகளின் தன்னியல்பான அழகுகள். புனைவெழுத்தை கவிதையின் மொழிபுகளுக்கு உருக வைக்கும் அறிநிலைகள் அவற்றில் உண்டு. பழமையடைந்து வரும் ‘அன்பு’, ’நீதியியல்’ போன்றவற்றின் காலாவதித் தேதியை அறிவித்தபடி, வரலாற்றால் ஒட்டுமொத்தமாக வெறுமையாக்கப்பட்டிருக்கும் மனிதனை அவனது உயிர்க்கூறான வேட்கை, வன்முறை, நுகர்விச்சை, இயல்பூக்கங்களோடு அவை பரிசீலிக்கின்றன.

thurathrisdam-piditha-kappalin-kathai-20
, ’துரதிஷ்டம் பிடித்த கப்பலின் கதை தொகுதிக்குப் பின்னர் கல்குதிரையில் ‘பிரமிடுகளை அளக்கும் தவளை’ வெளியானது. அது தமிழில் நிகழ்ந்துள்ள ஒரு மாயாற்புதம் என்றே கூறலாம். புவியீர்ப்புக்கு எதிராகவும் விசைகொள்ளும் ஆற்றலும் வரலாற்றுக்குள் பல்வேறு இணைப்பிரதிகளினூடாக மயங்கிச் செல்லும் அறிவார்த்தத்தின் பெரும்சுழல்களும் அதில் உண்டு.

மற்றொன்று.

ஈட்டி -குமார் அம்பாயிரம்

குமார் அம்பாயிரம் கதைகள் தொல்கதையாடிகளின் மந்திர நாவுகள் கொண்டவை. அவை தொல்கதைகளின் புதைபடிவுகளுக்குள்ளேயே ஆவிகளை உசுப்பியபடி நவீனத்துவம், சமகாலம், வரலாறு போன்ற வரம்புகளுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய வேறொரு ஞாபக வெளியில் புனைவுறுபவை. நிலத்திலும் காலத்திலுமான கோடுகளுக்கு முன்னும் பின்னுமென ஊசலாடிச் செல்லும் தொன்மங்கள் , வழக்காறுகளின் எல்லையின்மையும் நாடோடிக் குணமும் கொண்டவை. நவீனத்துவ அறிமுறைகளால் குருடுமையான நம் புலன்களைக் கழட்டி எறிந்து நமது உடலில் பூடகமான வேறுவித புலன்களைப் பொருத்தக்கூடியவை. அன்றாடம் என்ற நமது அலுப்பூட்டும் தகவல்-விவரண நினைவை ரத்துசெய்து தொன்மம், புனைவுகள் , ஐதீகங்கள், வழக்காறுகள் போன்றவற்றின் தொனிகளை வரித்துக்கொண்டு , நவீனம் கடந்த அறிதிறன்களின் புதிய ஒரு மெய்ம்மை கொண்டதாக அவரது கதைகள் இருக்கின்றன.

 

eeti-194x300.jpg
 

கீழைத்தேய அல்லது உலக தொல்சமூகங்கள் சார்ந்த தனித்த மனமும் அழகியலும் அவற்றை வழிநடத்துகின்றன. இத்தன்மையில் சமகால சித்திரம், நடப்பு அரசியல் கூட அதில் வேறொரு புனைவாக உருமாற்றப்படுகிறது. குமாரின் கதைசொல்லி நடப்பு உலகைப் பற்றி கதைகூறத் தொடங்கும் போது கூட அதன் புற அடையாளங்கள் , தகவல் குறிப்பீடுகள் , தினசரித் தன்மை என்ற மேலோட்டமான படலத்தை நீக்கி அதன் உலகளாவிய மற்றும் காலவரையற்ற பொது நினைவின் புதையுண்ட அடுக்குகளை அது புனைவாக்கம் செய்கிறது.

எழுத்தாளர் ம.நர்மி

தோழர் விக்னேஷ்வரன் வரப்போகின்ற புத்தாண்டில் ஒரே ஒரு புத்தகத்தை யாருக்காவது பரிசளிக்க விரும்பினால் எந்த புத்தகத்தை தருவீர்கள் என கேட்டிருந்தார்.

பா. ராகவனின் “எக்ஸலன்ட் செய்யும் எதிலும் உன்னதம்” என்ற புத்தகத்தை யாருக்காவது பரிசளிக்க விரும்புகிறேன்.

excellent-seyyum-edhilum-unnadham-300x15
 

உண்மையில் புத்தாண்டு என்பது புதுவித எதிர்பார்ப்புகளுடன் கூடிய புத்தம் புதிய 365 நாட்கள். ஆண்டு தொடங்கும் போது எதை எதையெல்லாமோ அந்த வருட முடிவிற்குள் செய்து முடித்துவிட வேண்டும் என்று நினைப்போம். ஆனால் ஏதோ ஒரு வகையில் எல்லாமே தேங்கிவிடும்.

இதிலுள்ள 14 கட்டுரைகள் உன்னதங்களை நோக்கிய உங்கள் பயணங்களில் ஒரு சிறு உதவியையேனும் செய்யும் என நினைக்கிறேன்.

செய்கிற ஒவ்வொரு காரியத்தில் சுமாரான தரம் , நல்ல தரம் எல்லாம் தாண்டி சிறந்ததை எப்படியெல்லாம் செய்யலாம் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்.

எனக்கு இந்த கட்டுரையில் ” யானி ஒரு சாமுராயின் கதை ” மிகவும் பிடித்திருந்தது.

“செயலின் உன்னதம் என்பது
நீங்கள் உங்களை எத்தனைதூரம்
அதில் அர்ப்பணிக்கிறீர்கள்
என்பதில் இருக்கிறது.
கவனம் பிசகாத ,
ஆத்மார்த்தமான முயற்சிகள்
மாபெரும் வெற்றியைத்தவிர
வேறொன்று பெறுவதில்லை..”

– பா. ராகவன்

எழுத்தாளர்ஹேமா:

சமுதாயம் வரையறுத்த வட்டத்திற்குள் அடங்காத விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள, 34 வயது பெண் தன்னந்தனியாக பயணம் மேற்கொள்கிறார்.

குறையில்லை எனினும் திருப்தியற்று சென்று கொண்டிருந்த வாழ்க்கை. அதை உதறும் Elizabeth Gilbert தனது bucket list ஐ நிறைவேற்றிக் கொள்ள முன்பின் சென்றறியாத திசையில் பயணம் மேற்கொள்கிறார்.

eat-pray-love-199x300.jpg
 

தன்னந்தனியாக ரோமுக்கு பயணம், பிடித்த உணவைச் சாப்பிடுதல், ஆன்மீகத்தைத் தேடி 3 மாத இந்திய வாசம், அதனைத் தொடர்ந்து இந்தோனேஷியாவில் எதிர்பாராமல் கிடைக்கும் காதல் என்று அவரது வாழ்க்கை திருப்பங்களுடன் பயணிக்கிறது.

மனத்தடைகளை உடைத்தெறிந்து வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்க வைக்கும் புத்தகம், Elizabeth Gilbert தன் அனுபவங்களைக் கொண்டு எழுதிய Eat Pray love. நண்பர்களுக்கு முக்கியமாக தோழிகளுக்கு நான் பரிசளிக்க விரும்பும் புத்தகம் இது.

எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி :

வழக்கமாகவே ‘வாசிக்கிற’ எனக்குப் புத்தங்கள் பரிசளிக்கும் பழக்கம் அறவே குறைவு. ஆகவே, பரிந்துரைப்பது என்றால் தோழிகளுக்கு ரமேஷ் ரக்‌ஷனின் ‘நாக்குட்டி‘ நாவலையும், தோழர்களுக்கு ஏக்நாத்தின் “மேப்படியான் புழங்கும் சாலை“யையும் பரிந்துரைப்பேன்… 1f642.png

meppadiyaan-puzhangum-saalai-195x300.jpgrasukutty-e1577852913796-192x300.jpg

கவிஞர் கவிதைகாரன் இளங்கோ:

நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘பஞ்சதந்திரக் கதைகள்‘.
(ஒன்பது வயதிலிருந்து பன்னிரெண்டு வயது வரையிலான எந்தக் குழந்தைகளுக்கும் பரிந்துரை செய்வேன். கதை வெளிகளில் அவர்கள் மனம் சஞ்சாரம் செய்ய அதொரு வாய்ப்பாக அமையலாம்) போன வருடம், என் மகளுக்கு அந்த புத்தகத்தை பரிசளித்தேன்.

1196-1000x1000-e1577975042917-217x300.jp

கவிஞர் நிலாகண்ணன்:

துக்கம் என்ற சிறு சொல் எவ்வளவு எடைகூடியது அது கரைக்கமுடியாத ஒரு பாறையைப்போல் அல்லவா பறிகொடுத்தவன் மனதில் ஏறி நிற்கிறது ஆனாலும் அந்தப்பாறை கால ஓட்டத்தில் உப்பாக இளகி கரைந்து போய்விடுகிறது.  – எழுத்தாளர்  எஸ்.ராமகிருஷ்ணன்

நாவல் :  கல்பட்டா நாரயணனின் சுமித்ரா .  தமிழில் : கே.வி ஷைலஜா

இழந்தவரின் நினைவுகள் வேறு வேறு மனங்களிலிலிருந்து துவங்கி அந்த வீடுநோக்கிவருகிறது.
மரணத்தை மிக நெருங்கி உணர்த்துகிறார். வித்யாசமான சொல்லல்முறை மூலம் கல்பட்டா நாராயணன் எழுதியதை தமிழில் கவித்துவம் மாறாமல் கே.வி ஷைலஜா மொழிபெயர்த்துள்ளார். எந்த ஒரு மரணச்செய்தியும் இந்த நாவலை நியாபகப்படுத்த தவறியதேயில்லை எனக்கு.வாசிக்கவேண்டிய நாவல்.

வம்சி வெளியீடு .  விலை: 500 ரூ

80976617_2779260882133851_18253671781787

இளம் எழுத்தாளர் மானசி :

இந்தியா சுதந்திரம் பெற்று விட்டதாய் நம்பப்பட்ட அந்த கால கட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மத அடிப்படையில் பிரிந்த நாட்களை அதே குமுறல்களோடும் குருதி வாடையோடும் பதிவு செய்தவன் மண்டோ.

2019 ன் குழப்பமான, திடுக்கிட்ட, அமானுஷ்யமான மற்றும் பெரும் புரிதலை அனுபவித்த பல தருணங்கள் மண்டோவின் படைப்புகளுடன்தான் கழிந்தன.
சகோதரன் சிற்றரசன் அறிமுகப்படுத்திய சதத் ஹசன் மண்டோ ஒரு பெருத்த ஏகாந்தத்தில் சொற்களின் வழி என்னை வந்தடைந்தவன்.
மண்டோவின் பிரார்த்தனையில் தொடங்கியது அவன் மீதான என் வசீகரம். பின்பு கதைகள், சொற்சித்திரங்கள், வாழ்வனுபவங்கள், கட்டுரைகளென ஒவ்வொன்றும் ஓர் அப்பட்டமான உண்மையை மட்டுமே எனக்கு இசைத்துக் காட்டியது.

manto-padaippugal-195x300.jpg
மண்டோவைப் படித்தபின்தான், மகளை கலவரத்தின் குரூரத்திற்கு பறிகொடுத்த அப்பாவின் மனம் புரிகிறது. ஒரு வேசியின் தோலுக்குள் இருப்பவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தோன்றுகிறது. மனித மனங்களின் பல நிறங்களை கண்முன் நிறுத்தியது மண்டோவின் படைப்புகள்.
சுபைதா, ஜானகி, குஷியா என நீளும் மண்டோவின் கதாபாத்திரங்களை என் மனதுக்குள் அடைகாத்துக் கொள்கிறேன். இன்று பாரதீய ஜனதாவின் அசூசை தரும் குடியுரிமை சட்டத்தை உள்ளடக்கிய பல நடவடிக்கைகளும் அதைத் தொடர்ந்து எழும் கேள்விகளும் கோபமும் போராட்டங்களும் மீண்டும் மீண்டும் எனக்கு மண்டோவையே நினைவுபடுத்துகிறது.

அபத்தங்கள் படிந்த அழுக்கேறிய இந்த சமூகத்தின் அலங்கார உடைகளை கழற்றி எறிந்து நிர்வாணப்படுதுபவன் மண்டோ எனத் தோன்றுகிறது. குடி போதையில் ஏதோ ஒரு வேசியின் தீண்டுதலுக்காய் ரோட்டோரத்தில் நிற்கும் என் மண்டோவை இந்த கணத்தில் இறுக அணைத்து முத்தமிட்டுக் கொள்கிறேன்.


எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ்:

உண்மைய சொல்லனும்னா இந்த வருஷம் நான் குஷ்வந்த் சிங் ஓட எல்லா புக்கையும் யாருக்காவது இந்த 2020ல பரிசளிக்க விரும்புகிறேன்.

அதிலும் குறிப்பா சொல்லணும்னா அவரோட The Company of Women புத்தகத்த அது நிச்சயம் யாருக்காவது பரிசாக கொடுப்பேன்.

Literature is a serious business that does not mean we end making serious stuff.

2020ல இருக்கக் கூடிய அரசியல் சூழலில் நம்ம எல்லார் கிட்டயும் ஒரு இறுக்கம் வந்துடுச்சு.

81350797_625336174946952_296449928655483
 

அதனால நம்மள நாமே மனதளவில் ரிலாக்ஸாகி இருக்கிறதுக்கு குஷ்வந்த் சிங் ஒரு எழுத்து ரொம்ப தேவைப்படுது.

இந்த புத்தகம் முழுவதும் அவருக்கு காமத்தை ரொம்ப அழகா எழுதி இருக்காரு. ஆனா அது மஞ்சள் புத்தகம் போல இருக்காது. அவர் எழுத்தில் ஒரு அழகான கிராஃப்ட் இருக்கும். செக்ஸ கூட ரொம்ப நேர்த்தியா ரொம்ப நகைச்சுவை உணர்வோடு அழகா சொல்லி இருப்பார்.

ரொம்ப நேர்மையான ஒரு புத்தகம். சர்ச்சைக்காக சில பேர் செக்ஸை பத்தி எழுதுவாங்க, செக்ஸ் பத்தி எழுதினா பெரிய ஆளுன்னு நினைச்சு பாங்க அப்படின்னு எழுதுவாங்க, இல்ல தன்னுடைய பெருமைய பீத்திப்பதற்காக செக்ஸை பத்தி எழுதுவாங்க ஆனா அதையெல்லாம் தாண்டி குஷ்வந்த் சிங் ஓட எழுத்து ரொம்ப இயற்கையா எந்த ஊரு பூச்சும் இல்லாமல் செக்ஸ கொண்டாடுற ஒரு மனுஷன் எப்படி அதை எழுத்தில கொண்டாடுவாரோ அப்படி இருக்கும்.

ரசிக்கக் கூடிய புத்தகம். குஷ்வந்த் சிங் வார்த்தையில சொல்லணும்னா – பேனாவுக்கு இன்னும் யாரும் ஆணுறைகள் கண்டுபிடிக்கவில்லை.

எழுத்தாளர் றாம் சந்தோஷ்:

இந்திய தத்துவ ஞானம் ஆக்கியோன் கி லக்ஷ்மணன். எனது எம்ஏ பாடத்திட்டத்தில் இடம் பெற்ற நூல்களில் ஒன்று தத்துவத்தின் மீதும் கோட்பாட்டின் மீதும் ஈடுபாடு கொள்ளச் செய்த மற்றும் தர்க்கம் அல்லது வாதிடும் தன்மை குறித்து நான் கற்றுக்கொள்ள அடிப்படையாக அமைந்த அரிச்சுவடி. வேத உபநிடதங்கள், அவைதிக தத்துவங்கள், ஐவகை தரிசனம், மூவகை வேதாந்தம், சைவ சித்தாந்தம் ஆகிய ஐந்து பகுதிகளைக் கொண்டது. பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு.

Indian_Philosophy-206x300.jpg

எழுத்தாளர் க.வீரபாண்டியன்:

மூக்நாயக்’ அம்பேத்கர் முதன்முதலில் மராத்தி மொழியில் தொடங்கிய மாதமிருமுறைப்பத்திரிக்கை. 2020 இந்த இதழின் நூற்றாண்டு. மராத்தி மொழியில் வெளிவந்த மூக்நாயக்கின் 14 இதழ்களில் வெளிவந்த தலையங்கங்கள் மற்றும் கட்டுரைகள் அடங்கிய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணத் தொகுப்பு இந்நூல். மூக்நாயக் இதழ் 1920ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் நாள் வெளியிடப்பட்டது. கோலாப்பூர் மன்னர் சத்ரபதி சாகுஜி மகாராஜா அளித்த 2500 ரூபாய் நிதியுதவியுடன் துவங்கப்பட்ட இந்த இதழின் முதல் ஆசிரியராக நந்த்ரா பட்கர் (Nandra Bhatkar) அவர்களும், பிறகு தியான்தார் கோலப் (Dyander Gholap) அவர்களும் இருந்தனர்.

mook-nayak-193x300.jpg
அம்பேத்கரின் ஆரம்பகால அரசியல் பார்வைகளையும், விடுதலைக்கு முந்தைய தலித் இயக்கங்களின் செயல்பாட்டையும் அறிந்து கொள்ள வேண்டிய ஒவ்வொருவரும் இந்த நூலை வாசிக்க வேண்டும். திலகர் காலத்து காங்கிரஸ் இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் மீதான பார்வைகள், சுயராஜ்ஜியம் கருத்துருவாக்கத்தின் மீதான விமர்சனங்கள், தீண்டத்தகாதோர் உரிமைகள் என 1920களின் இந்திய அரசியல் வரலாற்றை விமர்சனப் பூர்வமான கண்ணோட்டத்துடன் கருத்துகளைத் தாங்கி வந்த இதழ் என்ற அடிப்படையில் இந்த நூல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 2020ஆம் ஆண்டில் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான நூல் என்பதால் நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.

கோலாப்பூரில் உள்ள டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் சமூக வள்ர்ச்சிக்கான ஆராய்ச்சி நிறுவனத்தைச் சார்ந்த டாக்டர்.பி.ஆர்.காம்ப்ளே என்பவரால் 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த மொழியாக்கம் முதன்முறையாக மராத்தி மொழியிலிருந்து ஆங்கிலத்திற்குச் செய்யப்பட்டது. இப்போது வரை கிடைத்திருக்கும் தரவுகளின்படி, ஆங்கிலத்திலிருந்து இந்த இதழின் முதல் தலையங்கத்தை சுமார் 98 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகத் தமிழில் நான் மொழியாக்கம் செய்தேன். எழுத்தாளர் மதிவண்ணனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘வெள்ளைக்குதிரை’ காலாண்டு இதழில் அந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை வெளிவந்தது. மொத்த நூலையும் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தூல் தமிழில் விரைவில் வெளியிடப்படும்.
கனலி வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

எழுத்தாளர் தெரிசை சிவா:

பரிசளிக்க விரும்பும் புத்தகம் நாஞ்சில் நாடனின் மாமிசப் படைப்பு. 

51c-3xt9aPL-188x300.jpg
தனி மனித வாழ்வில் கடவுளின் அவசியமென்ன? இயற்கையின் கொடையாகிய மழையையும் காற்றையும் பங்கிட முடியாத நாம், நிலத்தை பங்கிட்டுக் கொள்வதற்கான பின்னரசியல் என்ன? தனிமனித விரோதங்களில் கடவுளின் பங்கு என்ன? என பல கேள்விகளுக்கு குறியீடுகளின் கலவையாய் பதிலை தருகிறது நாஞ்சில் நாடனின் இந்த நாவல். நாஞ்சில் மொழியின் எள்ளலும் துள்ளலும் நகைச்சுவையும் வரிக்கு வரி இழைந்தோடுகிறது. மொழி வனப்பின் மூலம் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதன் குணாதிசயங்களுக்கும் கொடுக்கும் ஆசிரியர் கொடுக்கும் சித்திரம் வியக்கவைக்கிறது. மண் சார்ந்த படைப்புகளில் மிக முக்கியமான படைப்பாக போற்றப்பட வேண்டியது நாஞ்சில் நாடனின் மாமிசப் படைப்பு.

கவிஞர் உமா மோகன்:

பிரபஞ்சனின் கதைகளைக் கடந்த சில வருடங்களில் பல நண்பர்களுக்குப் பரிசளித்திருக்கிறேன். அவ்வகையில் சமீபத்திய டிஸ்கவரி வெளியீடான தேர்ந்தெடுத்த பிரபஞ்சன் சிறுகதைகளைக் குறிப்பிடலாம் என்றே இருந்தேன். இப்போது ஒரு யோசனை …பிரபஞ்சன் கதைகளை நான் சொல்வது வழக்கம். இந்தப் புத்தாண்டுக்கான மாற்றமாக கோ.லீலா எழுதிய மறைநீர் புத்தகத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். சுற்றுச்சூழல் விழிப்புணர்வும், நீர் மேலாண்மை , மறைநீர் பற்றிய விரிவான தகவல்களோடு தமிழ் இலக்கியங்களின் நீர் மேலாண்மைக் குறிப்புகளையும் எடுத்தாண்டு சுவாரசிய நடையில் எழுதப்பட்ட நூல்.
dayzero அச்சுறுத்தும் நகரங்களின் பட்டியலில் நம் ஊர் இருக்கிறதா என்று எட்டிப்பார்த்துக் கொண்டு அந்த நாள் எட்டடி இருப்பதால் இப்போதைக்கு இப்படியே இருப்போம் என்ற அலட்சிய சமூகத்துக்கு இந்நூல் அவசியம் தேவை. சின்னஞ்சிறு தீர்வுகள் முதல் கொள்கை வகைத் தீர்வுகள் வரை விளக்கும் நல்ல நூல்.

81789905_794989461015679_838968477407091
மறைநீர் -விலை ரூ .150
ஆசிரியர் :கோ.லீலா
படைப்பு பதிப்பகம்
8,மதுரை வீரன் நகர்,
கூத்தப்பாக்கம்,
கடலூர் -607 002

எழுத்தாளர் பொள்ளாச்சி அபி: 

நூல் : வால்காவிலிருந்து கங்கை வரை

இயற்கையோடு இணைந்த வாழ்ந்த மனிதன்,ஒரு சமூகமாகவும்,நாகரீகங்களை நோக்கி படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டு,பின்னாளில் பேரரசுகளாகவும் மாறிய நிகழ்வையும்,ஆதியில் தாய்வழிச் சமூகமாக இருந்து, பின்னர் படிப்படியாக ஆணாதிக்கச் சமூகமாக மாறுவதும்,அதற்கான கருவிகளாக சடங்குகள், மதம், கற்பு, ஒழுக்கம் என எல்லாவற்றையும் பயன்படுத்துவதையும்..எளிய சிறு கதைகளாக விளக்கும் நூல்.

மனித சமூகத்தின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள ஆர்வமுடைய ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய…என்பதைவிட கற்றுக்கொள்ள வேண்டிய நூல்…!

volga-muthal-gangai-varai-195x300.jpg

கவிஞர் இரா.பூபாலன்:

நான் பரிசளிக்க விரும்பும் புத்தகம் குட்டி இளவரசன். குழந்தைகளின் உலகத்தைப் பெரியவர்கள் புரிந்து கொள்ளவும் பெரியவர்களின் மனநிலையைக் குழந்தைமைக்குக் கொண்டு போகவுமான அற்புதம் செய்யும் ஒரு சிறு புத்தகம் அது.kutti-ilavarsan-195x300.jpg

எழுத்தாளர் சுபா செந்தில்குமார்:

பரிந்துரை : விக்ரமாதித்யன் கவிதைரசனை

கவிதை எழுதுவற்கான உந்துதலோடு வரும் இளம் எழுத்தாளர்களுக்கு கிட்டத்தட்ட தான் எழுதும் எல்லா கவிதைகளிலும் கவித்துவத்தை எட்டிப் பிடித்துவிட்டதாகவே தோன்றும். இன்னொரு புறம் வாசிப்பு அனுபவம் என்பது கவிதையின் வெவ்வேறு முகங்களை அறிமுகம் செய்யும். தான் எழுதிய கவிதைகளுக்கும் தன்னைச் சுற்றி எழுதப்படும் கவிதைகளுக்குமான இடைவெளியைப் புரிந்துகொள்வது என்பது “எது கவிதை?” என்பதை புரிந்துகொள்ள உதவும் ஒரு பெரும் பயணத்தின் தொடக்கம். தன் கவிதைகள் தனக்குத் தரும் கிளர்ச்சி என்பது தண்ணீர் தரும் குளிர்ச்சியைப் போன்றது. அந்தக் குளிர்ச்சியை அனுபவித்தபடி ஓரிடத்தில் நீர்நிலையைப் போல நிலைகொண்டுவிடாமல், ஒரு பெரும் நீரோட்டத்தை அறிமுகம் செய்யும் இந்த நூல், நம் கரங்களைப் பிடித்து பேருருவாய் விரிந்துகிடக்கும் ஆழ்கடலின் கரையில் சென்று நிறுத்துகிறது.

WhatsApp-Image-2020-01-02-at-9.25.26-PM-

எழுத்தாளர் முஹம்மது யூசுப்:

இந்தியாவில் மூன்று மாநிலத்தவர்கள் மீதான கேலி நகைச்சுவைகள் அதிகமாக உண்டு

ஒன்று சர்தார்ஜி ஜோக்

மற்றொன்று பீகாரி ஜோக்

கடைசியாய் மதராஸி ஜோக்

மூவருமே முட்டாள்கள் என்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை கட்டமைப்பை உண்டாக்கும் எழுத்துக்கள். சற்றே உற்று நோக்கினால் ஏதோ நூல் ஒன்று பொதுவாய் தென்படும் இந்த கேலிகளுக்குப் பின்னால். அது மிகப் பெரிய அரசியல்.

karumpunal-300x222.jpg

பீகாரிகளின் கதை என்றதும் ஆவலில் வாசிக்க ஆரம்பித்தேன்  “கரும்புனல்” நாவலை.

நண்பர் சுரேஷ் அவர்களின் கரும்புனல் நாவலை முழுவதுமாக வாசித்து முடித்ததும் பத்து நிமிடம் அப்படியே அமர்ந்திருந்தேன். உண்மையிலேயே தொண்டை வற்றி விட்டது. மிதமான சூட்டில் ஒரு கிளாஸ் நீர் அருந்தி பள்ளி சென்று தொழுது வந்த பின் மனம் பழைய நிலைக்குத் திரும்பியது

பீகாரில் சார்க்கண்ட் எப்படி ஏன் எதற்கு என அது உண்டான கதை, அப்படியே ராஞ்சியில் நிலத்தை அபகரிக்கும் ஊழல் அதன் ஊடே வழிந்து ஓடும் வர்மா சதுர்வேதி பானர்ஜி களின் ஜாதி துவேசம் என கதை கை பிடித்து நம்மை அழைத்துச் செல்கிறது

நிலக்கரி சுரங்கம் அதற்காக நிலத்தை கையகப்படுத்தும் அரசாங்கம், அதற்கு மாற்று நிலம் தருவதில், இழப்பாக பணம் தருவதில்,வேலை தருவதாக வாக்குறுதி தருவதில் இடைய நடக்கும் தரகு வேலை –

இன்னமும் தொடந்தபடி தானே உள்ளது இந்த மோசமான இயங்கு முறை

வயிற்றில் அடிக்கிறாயே என திருப்பிக் கேட்டால் மாவோயிஸ்ட்களாகவும் தீவிரவாதிகளாகவும் அடைப்புகுறிக்குள் சிக்கும் பலகீனமான அப்பாவி மனித எலிக் கூட்டம்

நல்ல நாவல் இந்த புத்தாண்டில் நண்பர்களுக்கு இந்த நாவலை பரிந்துரை செய்கிறேன்.

ஒரு தேர்ந்த scientific thriller எப்டியிருக்க வேண்டுமோ அப்டியிருக்கிறது ‘யூனிட் 109
முதல் நான்கைந்து அத்தியாயங்கள் எங்கும் பிடி கொடுக்காமல் சென்றாலும் அதன் பிறகான பாய்ச்சல் நாவலுக்குள் நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது. தென்றல் தப்பும் கணத்திலிருந்து அசுர வேகம்…

ஒரு சில நாவல்கள் மட்டுமே கதைக்களத்தையும் கேரக்டர்களையும் நம் கண்முன்னே நிறுத்தும், அவ்வகையில் இதுவும் ஒன்று. ஆரம்பத்தில் சில வர்ணனைகள் தேவையில்லாமல் வருகிறதோ எனத் தோன்றினாலும் அதில் மேற்கொண்ட வித்தியாசம் அருமை. இறந்து போன சிறுமியின் உடலைக் கூட அவளின் தலைமுடி உடை என வர்ணித்து சேற்றில் விழுந்து கிடந்த மெழுகுச் சிலைபோல் இருந்தாள் என முடித்தது மனதை வலிக்கச் செய்யாமல் இருக்காது.

unit-109-210x300.jpg

ஆங்காங்கே வலிமையான வசனங்களும், “இங்க நம்பிக்கைக்கு கூட expiry date இருக்கு, அதை மறந்துட்டேன், we can never believe people in power” போல பல இடங்களில், மற்றும் கதைக்குத் தேவையான ஆஸ்கர் வைல்ட், ஐன்ஸ்ட்டின் வாசகங்களும்…

வலிந்து திணிக்காத நகைச்சுவை மிகப் பெரும் ப்ளஸ், விவாகரத்து பெற்ற தம்பதிகள் ஓரிடத்தில் பேசுவது…
“Anyone who comes up on the road can see your big fat ass”
“I know my ass is not as big as your ego”

அமேசான் Pen to Publish போட்டிக்காக வந்தவைகளில் இதுவரை நான் வாசித்ததில் மிகச் சிறந்த தரமான வாசிப்பனுபவம் கொடுத்தது மாயா-வின் ‘யூனிட் 109’. எழுத்தாளர் Malarvizhi Baskaran.

நீண்ட இடைவெளிக்குப் பின் ஸ்டெல்லா ப்ரூஸையும் ஆர்னிகா நாசரையும் ஒருசேர வாசித்தது போன்ற உணர்வு…!

கவிஞர் வேல் கண்ணன்:

தஸ்தாயேவ்ஸ்கியின் ‘ஒரு எழுத்தாளரின் நாட்குறிப்பு’

oar-ezhuththaalarin-naatkurippu-e1577887

அன்றைய அரசியல். பொருளாதார, சமூக சூழ்நிலை அன்று தஸ்தாயேவ்ஸ்கி தனது எழுத்தில் எப்படி பதிவு செய்துள்ளார் என்பதை பற்றி அறிய இந்த புத்தகம் பெரிய உதவியாக இருக்கிறது. மேலும் இதன் வழியே இன்றை நமது சமூக மற்றும் அரசியல் சூழ்நிலைகளை எப்படி உள்வாங்கிக் கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

மொத்தத்தில் மிகச்சிறந்த புத்தகம்.

கவிஞர் தயாஜி:

பரிசளிக்க நினைக்கும் புத்தகம் ப.சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்‘ நாவல்.

51JIHTC7ssL-190x300.jpg
இரண்டாம் உலகப்போரில் காலகட்டத்தில் மலாயாவில் கதை தொடங்குகிறது. இன்றைய மலேசிய மண்ணில் கால் பதித்த நம் மூதாதையர்களின் தியாகத்தையும் இதில் கண்டு கலங்கினேன.
இன்று எத்தனையோ மாற்றங்களையும் ஏமாற்றங்களையும் கண்டுள்ள தமிழ்ச்சமூகம் தன் தொடக்க காலத்தில் சுமந்த வலியையும் இழப்புகளையும் இதன் வழி அறியலாம்.
கூடுதலாக அதன் மொழி, இன்றும் இந்நாட்டில் பல இடங்களில் பேசும் மொழியாகவே இருக்கிறது.

எழுத்தாளர் அகில் குமார்:

urumatram-10000014-550x550h-e15779753282vennira-iravugal-ethir-veliyeedu_FrontIm

மனதின் மிக நுட்பமான பகுதிகளை குறைந்த பக்கங்களிலேயே வாசகனுக்கு உணர்த்திவிடும் காஃப்காவின் உருமாற்றத்தையும், தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளையும் நான் நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன். மனித இருப்பின் முக்கியத்துவத்தை சர்ரியலிசத்தின் துணையோடு உருமாற்றம் கேள்விக்குள்ளாக்கும்போது, மனித உறவு முறைகளின் அசலான முகத்தை யதார்த்தவாத புனைவு முறையில் வெண்ணிற இரவுகள் வெளிப்படுத்துகிறது.

எழுத்தாளர் ஷான் கருப்புசாமி:

யவல் நோவா ஹராரி எழுதிய “ஹோமோ டியஸ்“. மனித குலத்தின் எதிர்காலம் குறித்த பல அனுமானங்களை முன்வைக்கிறார் நூலாசிரியர். அவற்றில் பல அதிர்ச்சியூட்டும் வகையாக இருக்கும். நம் சிந்தனாவாதத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நூல்.

homoders-196x300.jpg

எழுத்தாளர் ஸ்ரீதேவி மோகன்:

காளான் மனசு எனக்கு. பட் பட்னு உடைஞ்சு போற என் மனதை அந்தந்த காலகட்டத்தில் தூக்கி நிறுத்துபவை தன்னம்பிக்கை புத்தகங்கள் தான்.80818900_10222162688242487_3059517801526

அந்த வரிசையில் ” என்னுடைய பாலாடைக் கட்டியை எடுத்துச்சென்றது யார்? ( Who moved my cheese) புத்தகத்தைப் பரிசளிக்க விரும்புவேன். துயரமோ, தோல்வியோ அந்த இடத்திலே தேங்கிவிடாமல் நகர்ந்து விட வேண்டும் என்பதை அப்புத்தகம் வலியுறுத்துகிறது.

கவிஞர் ஜான்ஸி ராணி:

பரிந்துரைக்கும் நூல் : காதுகள் – நாவல்

kathukal-186x300.jpg

1920 ஆம் ஆண்டு பிறந்த எம்.வி.வெங்கட்ராம் தனது வாழ்க்கை வரலாற்று நாவல் என இந்நாவலை சொல்லியிருக்கிறார். சுமார் 25 ஆண்டுகளுக்குமுன் தஞ்சாவூர் மாவட்ட நூலகத்தில் எந்த இலக்கிய பரிச்சயமும் இல்லாத என் பதின்ம வயதில் இக்கதையைப் படித்த அனுபவமும் நான் அப்போதடைந்த பிரமிப்பின் அலைகள் இப்போதும் எனது நினைவுக் கடலில் அலைமோதியபடியிருக்கின்றதென சொல்லலாம். மேஜிக்கல் ரியலிச நாவல்களின் கூறுகளைக் கொண்டதென்றாலும் மனநலத் துறையை சார்ந்த எனக்கு வேறெந்த நாவலும் auditory hallucinations பற்றி இத்தனை விஸ்தாரமாக பேசியதில்லை என்றே தோன்றுகிறது. மனித மனங்களின் பிறழ்வுகளை இலக்கியமாக படைத்திருக்கும் இந்த உன்னத ரசவாதம் போற்றத்தக்கதும் சிறந்த வாசிப்பனுபவத்தையும் அளிக்கக்கூடியதுமாகும். இந்நாவலுக்காக 1993 ஆம் ஆண்டு எம்.வி.வி சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ளார்.


தொகுப்பு : க.விக்னேஷ்வரன்

 

http://kanali.in/book-recommendations-by-writers-part2/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/22/2020 at 11:08 PM, கிருபன் said:

Paulo coelho ‘s Alchemist பாவ்லோ கொய்லோ வின் ரசவாதி ..

வாழ்க்கையில் தேடலைத் தெரிவு செய்தலும், அதை நோக்கிய பயணமும்,
அதைக் கண்டடையும்போது நேரும் நிறைவுமாய் அதியற்புதமான படைப்பு. எளிய கதையாயினும், உள்ளிழையில் வேறொரு வெளியில் கிட்டும் ஆன்ம தரிசனம்..

கனவைப் பின்தொடர்தலின் எளிய சூத்திரம்.. இருத்தலின்மை குறித்த இருட்டைக் கலைக்கும் சிறு ஜ்வாலை இப்புத்தகம்.

இத்தனை நூல்களின் பட்டியலில் இருந்து  நான் வாசித்தது Alchemist மட்டுமே. எங்களில் அனேகம்பேர் Alchemist வாசித்திருப்பார்கள். இந்த நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது மிகவும் நல்லது.

Anna Karenina படமாக கூட வெளிவந்தது என நினைக்கிறேன். Ivaan பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் வாசிக்கவில்லை

குஷ்வந்த சிங் ஒரு சர்ச்சைக்குரிய நாவலாசிரியர், ஒன்றிரண்டு பேட்டிகளை முன்பு வாசித்த நினைவு. 

நூல்களை பற்றிய தகவல்களை இணைத்தமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நூல்களைப் படித்திருக்கின்றேன். சிலவற்றை படிக்கவேண்டும் என்று வாங்கிவைத்திருக்கின்றேன். 😀

ஏற்கனவே படித்தவை

  • ஜெயமோகனின் புறப்பாடு 
  • 1984 (ஆங்கிலத்தில்)
  • வால்கா முதல் கங்கை வரை
  • கர்ப்பநிலம்
  • ஆதிரை
  • விமல் குழந்தைவேலின் ‘கசகறணம்’ 
  • குறத்தி முடுக்கு
  • ஜெயமோகனின் கொற்றவை

படிப்பதற்காக வாங்கியவை

  • தஸ்தாயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்
  • Sophie’s World (English)
  • குற்றமும் தண்டனையும் – பியோதர் தாஸ்தயேவ்ஸ்கி
  • அன்னா கரீனா‘ (English)
  • யவல் நோவா ஹராரியின் Homo Deus (English)
  •  ‘சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு 
  • ஓநாய் குலச்சின்னம்
  • கடலுக்கு அப்பால்
  • பொய்த்தேவு
  • கி.ராஜநாராயணனின் கோபல்ல புரம்
  • Norwegian Wood 
  • The Company of Women
  •  

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.