Jump to content

வன்னிக் கவிதைகள். - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

எனது முதலாவது கவிதை ’பாலிஆறு நகர்கிறது’ (1968. ) இரண்டாவது கவிதை (நம்பிக்கை 1968) இரண்டுமே புரட்ச்சியில் அல்லது தமிழர் விடுதலைப் போராட்டத்தில் வன்னிக்காடு மையமாக அமையும் என்பதை இராணுவ புவியியல் அடிப்படையில் இனம்கண்டு முன் மொழிந்த கவிதைகளாகும்.
.
 
நம்பிக்கை..
வ.ஐ.ச.ஜெயபாலன்.
.
துணை பிரிந்த குயில் ஒன்றின்
சோகம்போல்
மெல்ல மெல்லக் கசிகிறது
ஆற்று வெள்ளம்.
காற்றாடும் நாணலிடை
மூச்சுத் திணறி
முக்குளிக்கும் வரால் மீன்கள்.
ஒரு கோடை காலத்து மாலைப் பொழுது அது.
.
என்னருகே
வெம் மணலில்
ஆலம் பழக் கோதும்
ஐந்தாறு சிறு வித்தும்
காய்ந்து கிடக்கக் காண்கின்றேன்.
என்றாலும்
எங்கோ வெகு தொலைவில்
இனிய குரல் எடுத்து
மாரிதனைப் பாடுகிறான்
வன்னிச் சிறான் ஒருவன்.
.
1968 (வன்னி.இலங்கை)
***
42
.
நகர்கிறது பாலி ஆறு - 50 வருடங்களின் முன்னர் வன்னிக் காடுகள் பொது உடமைப் புரட்சியின் அல்லது தமிழர் விடுதலைப் போராட்டத்தின் மையமாகும் என்பதை முன்னுணர்ந்து எழுதப்பட்ட என் முதல் கவிதை
.
நகர்கிறதுபாலி ஆறு
வ.ஐ.ச.ஜெயபாலன்
.*
அங்கும் இங்குமாய்
இடையிடையே வயல் வெளியில்
உழவு நடக்கிறது
இயந்திரங்கள் ஆங்காங்கு
இயங்கு கின்ற ஓசை
இருந்தாலும்
எங்கும் ஒரே அமைதி
.
ஏது மொரு ஆர்ப்பாட்டம்
இல்லாமல் முன் நோக்கி
பாலி ஆறு நகர்கிறது.
ஆங்காங்கே நாணல்
அடங்காமல் காற்றோடு
இரகசியம் பேசி
ஏதேதோ சலசலக்கும்.
எண்ணற்ற வகைப் பறவை
எழுப்பும் சங்கீதங்கள்.
துள்ளி விழுந்து
'துழும்' என்னும் வரால்மீன்கள்.
.
என்றாலும் அமைதியை
ஏதோ பராமரிக்கும்
அந்த வளைவை அடுத்து
கருங்கல் மறைப்பில்
அடர்ந்துள்ள நாணல் அருகே
மணற் கரையில் இரு மருங்கும்
ஓங்கி முகடு கட்டி
ஒளி வடிக்கும்
மருத மர நிழலில்
எங்கள் கிராமத்து
எழில் மிகுந்த சிறு பெண்கள்
அக்குவேறு ஆணிவேறாய்
ஊரின் புதினங்கள்
ஒவ்வொன்றாய் ஆராய்ந்து
சிரித்து
கேலி செய்து
சினந்து
வாய்ச்சண்டை யிட்டு
துவைத்து
நீராடிக் களிக்கின்றார்
.
ஆனாலும்
அமைதியாய்
பாலி ஆறு நகர்கிறது
அந் நாளில்
பண்டார வன்னியன்
படை நடந்த அடிச் சுவடு
இந்நாளும் இம்மணலில்
இருக்கவே செய்யும்
அவன் தங்கி இளைப்பாறி
தானைத் தலைவருடன்
தாக்குதலைத் திட்டமிட்டு
புளுதி படிந்திருந்த
கால்கள் கழுவி
கைகளினால் நீரருந்தி
வெள்ளையர்கள் பின் வாங்கும்
வெற்றிகளின் நின்மதியில்
சற்றே கண்ணயர்ந்த
தரை மீது அதே மருது
இன்றும் நிழல் பரப்பும்
.
அந்த வளைவுக்கு அப்பால்அதே மறைப்பில்
இன்றும் குளிக்கின்றார்
எங்களது ஊர் பெண்கள்
ஏது மொரு
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
பாலியாறு நகர்கிறது.
.
1968 (வன்னி, இலங்கை)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் கவிஞரே......, 1968 ல் பாலியாறு நகர்ந்தது,  2009 ல் பல்லாயிரமாய் பலி கொண்டு சென்றது.....!

அன்று களி தரும் கவிதையிது 

இன்று கிலி தரும் கவிதையிது.......!   🤔

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.