Jump to content

அடுத்த தேர்தலில் தமிழர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில் தமிழர்கள்

என்.கே. அஷோக்பரன்   / 2020 பெப்ரவரி 24

இன்னொரு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம், நிறைவுக்கு வருகின்றது என்று எதிர்பார்க்கலாம். 

ஆளும் அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைத் தனது விருப்பின்படி கலைக்கக்கூடிய அதிகாரம், நாடாளுமன்றத்தின் பதவிகாலத்தில், நான்கரை வருடங்கள் பூர்த்தியானதன் பின்னரே வரும் என்ற அடிப்படையில், மார்ச் மாதத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் இந்த நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். 

அதன் மூலம், பொதுத் தேர்தலைச் சந்தித்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை, முடிந்தால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதே, ராஜபக்‌ஷக்களின் நிச்சயமான திட்டம் என்பதில் ஐயமேதும் இருக்க முடியாது. 

ராஜபக்‌ஷக்கள் மீண்டும் ஆட்சிப்படியேறிய, ஏறத்தாழ நான்கேகால் மாதங்களில், ஆக்கபூர்வமாக எதுவும் நடந்திராத நிலையில், இலங்கையானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை இணை-அனுசரணை வழங்கியிருந்த இலங்கை தொடர்பான தீர்மானத்திலிருந்து விலகியிருக்கிறது. 

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீதான, யுத்தக் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் நிமித்தமாக அவரும், அவரது குடும்பத்தினரும் அமெரிக்கா செல்வதற்கு, அமெரிக்க அரசு விதித்த தடையின் எதிரொலியாகவே, குறித்த தீர்மானத்திலிருந்து விலகுவதாக, ராஜபக்‌ஷக்கள் தலைமையிலான இலங்கை அறிவித்திருந்தது. 

ராஜபக்‌ஷக்கள் தலைமையிலான இலங்கையின், இராஜதந்திரக் காய்நகர்த்தல்கள், சர்வதேச அளவில் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. குறிப்பாக, மேற்கு நாடுகளுடனான அவர்களது பரஸ்பர அதிருப்தி, நம்பிக்கையீனம் தொடர்ந்து கொண்டிருப்பதை, நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. 

ஆனால், உள்ளூர் வாக்குவங்கியைப் பொறுத்தவரையில், தம்மை நோக்கி வீசப்படும் எல்லாப் பந்துகளையும் அவர்கள் இதுவரை, எல்லைக் கோட்டுக்கப்பால் உந்தியடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். 

மிக முக்கிய தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில், சவேந்திர சில்வா மீதான பிரயாணத் தடையை அமெரிக்கா அறிவித்தது, ராஜபக்‌ஷக்களுக்கு உள்ளூர் வாக்குவங்கி மட்டத்தில் மிகச் சாதகமானதே. 

இது, ராஜபக்‌ஷக்களின் தேர்தல் நலனுக்காக, அமெரிக்கா வேலை செய்கிறதா என்ற ஐயத்தையும், ஏனைய எதிர்க்கட்சியினரிடையே, ஏற்படுத்தாமல் இல்லை. 

எதிர்வரும் தேர்தலில், யுத்த வெற்றி வீரர்களாக மட்டுமல்ல, வல்லரசான அமெரிக்காவையே எதிர்க்கும் மாவீரர்களாக, ராஜபக்‌ஷக்கள் முன்னிறுத்தப்பட்டாலும், நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதுபோலவே, இம்முறை ராஜபக்‌ஷக்கள், தமது வாக்குவங்கி எது என்பதில் மிகத் தௌிவாக இருக்கிறார்கள். 

‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியைத் திருப்தி செய்தாலே போதும்; தாம் தொடர்ந்தும் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்பதே அவர்களது அரசியல் தந்திரோபாயமாக மாறியிருக்கிறது. 

சிறுபான்மையினரை மகிழ்வூட்டும் (minority pleasing) நடவடிக்கைகளைக் கூட அவர்கள் செய்யத் தயாராக இல்லை. கிடைக்கும் திருப்பங்களிலெல்லாம், தமது வாக்குவங்கியைப் பலப்படுத்தம் முயற்சிகளையே அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். 

தமிழில் தேசிய கீதம் பாடாததிலிருந்து, வடக்கில்கூட பெயர்ப்பலகையில் முதலில் சிங்களம் இடம்பெறுமாறு மாற்றியமைத்ததிலிருந்து, ஐ.நா மனித உரிமைகள் தீர்மானத்திலிருந்து விலகியது என, தமது சிங்கள-பௌத்த வாக்குவங்கியைத் திருப்திசெய்வதில், அவர்கள் தௌிவாக இருக்கிறார்கள்.  

மறுபுறத்தில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. 

தலைமைத்துவச் சண்டை என்பது, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. 

இன்று, எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கின்ற நிலையில், எதிர்வரும் தேர்தலை ஐ.தே.க, தனது ஆதரவுக் கட்சிகளுடன் கூட்டணியாகச் சந்திக்க இருக்கிறது. 

இந்தத் தேர்தலுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணியின் பெயர், சின்னம், செயலாளர்கள் என்று எதுவுமே திட்டவட்டமாக இல்லாத குழப்பகர நிலை உருவாகியிருக்கிறது.   

மறுபுறத்தில், இதுவரைகால ரணிலின் அணுகுமுறையிலிருந்து, மாறியதோர் அணுகுமுறையாக, சஜித்தின் அணுகுமுறை அமையும் என்பதற்கான சமிக்ஞைகள் மிகத் தௌிவாகத் தெரிகின்றன. 

சவேந்திர சில்வாவுக்கு எதிரான அமெரிக்காவின் பிரயாணத்தடையைக் கண்டித்து, சஜித் பிரேமதாஸ விடுத்திருந்த அறிக்கையானது, கடந்த தேர்தலில் அவரை ஆதரித்திருந்த தமிழர்களையும் தாராளவாதிகளையும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருந்தமையை நாம் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. 

இதுபற்றி, ஐ.தே.கவின் ஏனைய பிரதான தலைவர்கள், மௌனமாக இருந்த நிலையில், சஜித் மட்டும் கண்டித்தமை, ஏற்கெனவே பலமிழந்துள்ள ஐ.தே.கவின் வாக்குவங்கி, இன்னும் பலமிழந்துவிடுமோ என்ற அச்சத்தை, சிலரிடையே ஏற்படுத்தி இருக்கிறது. 

இருந்தபோதிலும், பெரும்பான்மை, சிங்கள-பௌத்த வாக்குவங்கியைத் திருப்தி செய்தால் மட்டுமே, ஒரு பிரதான கட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். ஆகவே, சஜித்தின் அணுகுமுறையானது மிகச் சரியானது என்ற கருத்துகளையும் சிலர் முன்வைப்பதையும்  அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

ஆகவே, சஜித் பிரேமதாஸவும் பெரும்பான்மையினரை மகிழ்வூட்டும், அதாவது சிங்கள-பௌத்த வாக்குவங்கியை மகிழ்வூட்டும் அணுகுமுறையையே கையாள்கிறார் என்பது, அவர் திரைவிலகி, தலைமைத்துவ முன்னரங்குக்கு வரவர, இன்னமும் தௌிவாகிக் கொண்டேயிருக்கும். 

தமிழ் மக்களும் பொதுத் தேர்தலும்  

இந்தச் சூழலில்தான், தமிழ் மக்களும் இன்னொரு பொதுத் தேர்தலைச் சந்திக்கிறார்கள். 
ஆனால், இம்முறை தமிழ் மக்களின் ‘ஏக’ பிரதிநிதிகள் யார் என்ற போட்டி, பலமுனைப் போட்டியாக மாறியுள்ளது. இந்த இடத்தில்தான், தமிழ் மக்கள் நின்று நிதானமாக யோசித்து, முடிவெடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது எனலாம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனப்படும், தமிழரசுக் கட்சியுடனான, டெலோ, புெளாட்டின் தேர்தல் கூட்டானது, இன்று தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகத் தம்மை முன்னிறுத்தி நிற்கிறது. 

தமிழரசுக் கட்சிக்கு இதுவரை காலமும் இருந்த பெருந்துணை, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆகும். தமிழரசுக் கட்சித் தலைமைகளுக்கு ரணிலுடன் இருந்த நெருக்கமும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருந்த, இயைந்து இயங்கிச் செல்லத்தக்க உறவும், சிற்சில காரியங்களை, அவர்களால் செய்து கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றுத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஆனால், ரணிலிடமிருந்து அவர்கள் தமிழ் மக்களுக்காகப் பெற்றுக்கொண்ட விடயத்தைவிட, ரணிலுக்காக அவர்கள் செய்த விடயங்கள் நிறைய இருக்கின்றன. 

2018ஆம் ஆண்டு, 52 நாள் ஆட்சிக் கவிழ்ப்பின் போது, நாடாளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் தமிழரசுக் கட்சி, ரணிலுக்கும் இந்த நாட்டுக்கும் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. 

ஆனால், அதற்கான நன்றிக்கடனின் பலாபலன், தமிழ் மக்களுக்குக் கிடைத்ததா என்றால், “இல்லை” என்பதே உண்மையாகும். 

அன்று, சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு, டட்லி சேனநாயக்கவின் ஆட்சியைக் காப்பாற்றியது போலவே, இன்று இராஜவரோதயம் சம்பந்தன், எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு, ரணிலின் ஆட்சியைக் காப்பாற்றினார். 

 ஆனால், அதனால் தமிழரசுக் கட்சிக்கோ, தமிழ் மக்களுக்கோ அன்றும் எந்த நன்மையும் நடக்கவில்லை; இன்றும் நடக்கவில்லை. இதைக் குறிப்பிடுவது, அவர்களது முயற்சிகளைக் கொச்கைப்படுத்த அல்ல; மாறாக, வரலாறு மீண்டுகொண்டிருக்கிறது என்பதை உணர்த்தவே ஆகும்.

ஒரே அணுகுமுறையை, மீண்டும் மீண்டும் கையாண்டுகொண்டு, வேறுபட்ட முடிவை எதிர்பார்ப்பது, எங்ஙனம் என்ற கேள்வியும், இங்கு எழாமல் இல்லை. 

அன்று, செல்வநாயகம் எதிர்க்கட்சியில் இருந்து, டட்லிக்கு ஆதரவு வழங்கிய பின், அடுத்த தேர்தலில் சிறிமாவோவும் அவரது தோழர்களும் ஆட்சிக்கு வந்து, அரசமைப்பை மாற்றி, தனிச்சிங்களச் சட்டத்தின் தாற்பரியத்தைப் புதிய அரசமைப்புக்குள்  ஏற்றினார்கள். 

தனிச்சிங்களத்துக்கு,  அரசமைப்பு அந்தஸ்தை வழங்கி, பௌத்தத்துக்கு அரசமைப்பு ரீதியாக முன்னுரிமை வழங்கி, பல்கலைக்கழக அனுமதிகளில் தரப்படுத்தலைக் கொண்டுவந்து முற்றிலும் தமிழ் மக்களின் நலன்களுக்கு விரோதமான நடவடிக்கைகள், நசுக்காக அரங்கேற்றப்பட்டன. 

இது தொடர்பில், எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில்தான், அன்றைய தமிழ்த் தலைமைகள் இருந்தார்கள். அன்று, டட்லிக்குப் பின், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பீடமேறிய ஜே.ஆரின் அணுகுமுறை, டட்லியிலிருந்து வேறுபட்டதாகவும் பெருந்திரள்வாதப் போக்குடையதாகவும், மேற்குலகு சார்புடையதாகவும், திறந்த பொருளாதாரக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகவும், அபிவிருத்தி தொடர்பான பகட்டாரவாரப் பேச்சைக் கொண்டதாகவும் பெரும்பான்மை வாக்கு வங்கியைக் கவர்ந்திழுப்பதாகவும் அமைந்திருந்தது. 
ஏறத்தாழ, இதுபோன்ற ஒரு நிலையைத்தான் இன்றும் நாம் எதிர்கொள்கிறோம்.   

ஆனால், அன்று ஒருவருக்கொருவர் ஆழந்த வைரிகளாக இருந்த தமிழ்த் தலைமைகள், அந்தக் கையறு நிலையை எதிர்கொள்ள, தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கடந்து, ஒன்று பட்டன என்பது, நாம் ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியதொன்று. 

மீண்டும், ஜீ.ஜீ. பொன்னம்பலமும் சா.ஜே.வே. செல்வநாயகமும் ஒன்றிணைந்து, தமிழர் ஐக்கிய முன்னணியாக (பின்னர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி) ஒரு தளத்தில், தமிழ்த் தேசியக் கொள்கையை மய்யமாக நிறுத்தி, தமிழ்த் தேசிய அரசியலை ஒன்றிணைத்தமையானது தன்னலமற்ற, தமது மக்கள் நலன்சார்ந்த பெரும் நடவடிக்கை ஆகும். 

ஆனால், இன்று தமிழ்த் தலைமைகளும் அவர்களது கட்சிகளும் என்ன செய்துகொண்டிருக்கின்றன? 

இருக்கின்ற ஒற்றுமையைச் சிதைத்து, புதிய உதிரிக் கட்சிகளையும் கூட்டணிகளையும் தமது சுயநலத்துக்காகவும் சுயலாபத்துக்காகவும் உருவாக்கிக் கொண்டும், மறுபுறத்தில், விட்டுக்கொடுப்புகள் மூலம் ஒற்றுமையை உருவாக்காமல், கொள்கையிலிருந்து விலகித் தமது தனிப்பட்ட நலன்களுக்காகத் தமிழ் மக்களைத் திக்குத்தெரியாத அரசியல் சூனியத்துக்குள் தள்ளும் கைங்கரியத்தையே தமிழ்த் தலைமைகள் எனப்படுவோர் செய்துகொண்டிருக்கிறார்கள். 

‘கூட்டணி’ என்பது கட்சிகள் ஒன்றிணைவதைக் குறிப்பதாக இருந்தது. இன்று, தனிநபர்கள் ஒன்றிணைவது ‘கூட்டணி’ என்பதாக மாறியுள்ளது. 

தனிநபர் கம்பனிகள் போல, ஆளுக்கொரு கட்சியைத் தொடங்கிக் கொண்டு, கூட்டணி அமைக்கிறார்கள். ஏன், எதற்கு, தமிழ் மக்களுக்கு இதனால் என்ன நன்மை, தமிழ்த் தேசியத்துக்கு என்ன நன்மை என்று சிந்திப்பார்கள் இல்லை. 

இவற்றைச் சுட்டிக்காட்டுவதால், ஒற்றுமை என்பதை அடைந்து கொள்வதற்காக, கொள்கையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதாய் பொருள்கொண்டு விடக்கூடாது. ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்’ என்ற தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகளை நேசிப்பவர்கள், அந்தக் கொள்கையின் அடிப்படையில் ஒரே அணியில் திரள முடியாது இருப்பதற்கு, நிச்சயமாகத் தனிப்பட்டதும் சுயநல காரணங்களுமே தவிர, வேறு என்ன காரணம் இருக்க முடியும்? 

இவர்கள் எவருமே, தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகளை எதிர்க்கவில்லை; ஆதரிக்கிறார்கள் என்றால், எந்த அடிப்படைகளில் தாங்கள் பிரிந்து நிற்கிறோம் என்பதை, தமிழ் மக்களுக்கு இவர்கள் சொல்ல வேண்டுமல்லவா? 

அது, இவர்களின் சுயநலம், பதவி ஆசை என்பவற்றைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?  
(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அடுத்த-தேர்தலில்-தமிழர்கள்/91-245936

Link to comment
Share on other sites

‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியைத் திருப்தி செய்தாலே போதும்; தாம் தொடர்ந்தும் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்பதே அவர்களது அரசியல் தந்திரோபாயமாக மாறியிருக்கிறது.

சிறுபான்மையினரை மகிழ்வூட்டும் (minority pleasing) நடவடிக்கைகளைக் கூட அவர்கள் செய்யத் தயாராக இல்லை. கிடைக்கும் திருப்பங்களிலெல்லாம், தமது வாக்குவங்கியைப் பலப்படுத்தம் முயற்சிகளையே அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.

தமிழில் தேசிய கீதம் பாடாததிலிருந்து, வடக்கில்கூட பெயர்ப்பலகையில் முதலில் சிங்களம் இடம்பெறுமாறு மாற்றியமைத்ததிலிருந்து, ஐ.நா மனித உரிமைகள் தீர்மானத்திலிருந்து விலகியது என, தமது சிங்கள-பௌத்த வாக்குவங்கியைத் திருப்திசெய்வதில், அவர்கள் தௌிவாக இருக்கிறார்கள்

இது தமிழர் தரப்பு பிரிவினை வாதத்திற்கு வலுச்சேர்க்கும் !

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதை ஒன்று; பயணங்கள் வேறுவேறு

என்.கே. அஷோக்பரன்   / 2020 மார்ச் 02 

தமிழர்களும் அடுத்த தேர்தலும் [பகுதி-02]

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியலில், வியத்தகு விடயம் ஒன்றிருக்கிறது. இங்கு ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்ட அரசியல் கட்சிகள் எதுவுமே, சித்தாந்த ரீதியில் தமிழர்களது அடிப்படை அபிலாசைகள் விடயத்தில், திம்புக் கோட்பாடுகளை மறுப்பதில்லை.   

திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையிலான ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்’ என்ற கொள்கைகள், தமிழ்த் தேசியத்தின் அடிநாதமாக மாறியிருக்கின்றன. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அனைத்தும், ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்’ என்று உச்சரித்தாலும், உச்சரிப்பைத்தாண்டி, ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்’ என்பதை, அவர்கள் அணுகும் முறையும் சுவீகரித்துக்கொள்ளும் விதமும் அதற்கு வழங்கும் முக்கியத்துவமும் கட்சிகளிடையே வேறுபாட்டை ஏற்படுத்தி இருக்கின்றன.   

ஒவ்வொரு மதத்துக்கும், அதற்குரிய அடிப்படை வேதமுண்டு. ஆனால், தம்மை அந்த மதத்துக்கு உரியவர்களாக அடையாளப்படுத்திக்கொள்ளும் அனைவரும், அதன் வேதத்தை அணுகும் முறை வேறுபட்டது.   

சிலர், வேத நூலைத் தொட்டு வணங்குவதுடன் நிறுத்திக்கொள்வர்; சிலர், வேத நூலிலுள்ள ஒரு சில வரிகளைப் படிப்பதுடன் நிறுத்திக்கொள்வர்; சிலர், வேதங்களை முழுமையாகப் பாராயணம் செய்வர்.   

இதுபோலவே, இன்றைய தமிழ்த் தேசிய கட்சிகளின் ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்’ தொடர்பிலான அணுகுமுறையும் ஆளுக்காள் வேறுபட்டிருக்கிறது.   

தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்துமே, ‘தாயகம், தேசியம், சுயநிர்யணம்’ என்ற அடிப்படை மந்திரத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும், அந்த மந்திரம் பற்றி அவர்களது அணுகுமுறையும் புரிதலும் அதற்கு வழங்கும் முக்கியத்துவமும் வேறுபட்டன.   

இதுவும், தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைவதில் உள்ள பெருஞ்சவால்மிகு தடையாக மாறியிருக்கிறது.  

2015ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு முன்னர், ‘தமிழ்மிரர்’ பத்திரிகையில் எழுதியிருந்த பத்தியொன்றில், ‘தமிழ் மக்கள் ஒரு தனித் தேசம் என்றும் அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமை உள்ளது என்றும் அவர்களுக்கெனத் தாயக பூமி உள்ளது என்றும் அங்கிகரிக்கப்படத்தக்கதான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே, தமது கொள்கை எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாதிடுகிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஒற்றையாட்சிக்குள் 13ஆம் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வொன்றுக்கே வழிசமைப்பதாகக் குற்றமும் சாட்டுகிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை, அவர்கள் சித்தாந்த ரீதியாக இதைப் பெரிதளவில் மறுப்பதில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, வேட்பாளர்களின் அறிக்கைகள், பேச்சுகள் பலதும் தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம் என்பவனவற்றைத் தாங்கியே வருகிறது. ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும் கூட்டமைப்பை விமர்சிக்கும் ஏனையவர்களினதும் குற்றச்சாட்டானது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, கொள்கையாக இதைப் பிரகடனப்படுத்தினாலும் இதை அடையப் பெறுவதற்கு, எவ்விதமான காத்திரமான எத்தனிப்பையும் செய்யவில்லை என்பதுடன், தென்னிலங்கை அரசியல் சக்திகளினதும் இந்தியா உட்பட்ட சர்வதேச நாடுகளினதும் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப, தமது அரசியலைச் செய்கிறார்கள் என்பதாகும். இந்தக் குற்றச்சாட்டு நெடுங்காலமாகவே முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தமை நினைவுக்கு வருகிறது.   

இன்று, ஏறத்தாழ ஐந்து வருடங்கள் கழித்தும் இந்த நிலையில் மாற்றமில்லை. ஆனால், 2015ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு முன்னிருந்த அரசியல் களத்திலிருந்து, சமகால அரசியல் களம் மாறியிருக்கிறது.  

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் என்பது, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்‌ஷவின் தோல்வியின் பின்னர், இடம்பெற்ற பொதுத் தேர்தலாகும்.   

அன்று, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவோடு ஏற்பட்ட அந்த மாற்றம், சாத்தியமான தீர்வு ஒன்றை அடையப் பெற முடியும் என்ற நம்பிக்கையைத் தமிழ் மக்களிடம் விதைத்திருந்தது.   

அத்தகைய தீர்வு ஒன்று பெறப்பட வேண்டுமானால், அது தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சிப்படியேறிய நல்லாட்சி அரசாங்கத்துடனான இணக்கத்துடனேயே சாத்தியம் என்ற அடிப்படையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அணுகுமுறை அமைந்திருந்தது என்பதுடன், தமிழ் மக்களின் ஆதரவும் அதே அடிப்படையில் அமைந்திருந்தது.   

ஆனால், ‘நல்லாட்சி’ மூலம், தமிழ் மக்கள் எதிர்பார்த்த நன்மைகளைத் தமிழ் மக்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அத்துடன், எவ்வளவு ஆதரவாக நடந்துகொண்டாலும், அரசாங்கத்தின் பதவியைக் காப்பாற்றிக் கொடுத்த போதிலும், தமக்கு வேண்டிய காரியத்தைத் தாம் வலுச்சேர்த்த, தாம் காப்பாற்றிய அரசாங்கத்தின் மூலம் சாதித்துக்கொள்ளத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் முடியவில்லை என்பது துரதிர்ஷ்டமாகவே எண்ண வேண்டியுள்ளது.    

வரலாறு மீளும் என்பது, பொதுவாகக் கூறப்படுகின்ற ஒன்று. இது பற்றிய தன்னுடைய நூலொன்றில் கருத்துரைக்கும் ஜீ.டபிள்யூ. ட்ரொப்ப், ‘எதிர்கால நடவடிக்கைகளுக்கான பாடத்தைக் கடந்தகாலம் கற்றுத்தருகிறது. முன்னர் நடந்த வகையிலான நிகழ்வுகள், மீள நடக்கும்’ என்றும் குறிப்பிடுகிறார்.   

தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது போனாலும், வௌியிலிருந்து அரசாங்கத்தை இரண்டு முறை தமிழர் தரப்புக் காப்பாற்றி இருக்கிறது.   

முதலாவது, 1965 - 1970 டட்லி ஆட்சியில், அதையே மீண்டும் 2015-2019 வரை ரணில் ஆட்சியில், தமிழரசுக் கட்சி செய்திருக்கிறது. இரண்டு சந்தர்ப்பங்களிலும், தமிழ் மக்கள் ‘ஏமாற்றப்பட்டார்கள்’ என்று சொன்னால் அது மிகையல்ல.  

டட்லியின் ஆட்சிக்குப் பின்னர், அரசியல் களம் எப்படி மாறியதோ, அதுபோலவே தற்போது, அரசியல் களம் மாறியிருக்கிறது. மாறிய அரசியல் களத்துக்கு ஏற்ப, தமிழ் மக்களின் அரசியல் அணுகுமுறையிலும் மாற்றம் வருவது, தவிர்க்க முடியாததாகிறது.   

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில், ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் கீழ், இலங்கை இணை-அனுசரணை வழங்கிய, இலங்கை தொடர்பான தீர்மானத்திலிருந்து விலகுவதாக, ராஜபக்‌ஷக்களின் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.   

‘நல்லாட்சி’ அரசாங்கம், குறித்த தீர்மானத்தின் கீழான தனது கடப்பாடுகளை நிறைவேற்றாது, ஒவ்வொரு முறையும் காலநீட்டிப்புக் கேட்டு நின்ற போது, அதற்கு ஆதரவு கொடுத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எனப்படும் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடும் தற்போது மாறியிருக்கிறது.   

இது பற்றி, அண்மையில் சுரேஷ் பிரேமசந்திரன் வௌியிட்ட விமர்சனத்தில், “கடந்த நான்கரை வருட‍ங்களாக, சுமந்திரன் அரசாங்கத்துக்குக் கால அவகாசத்தை வேண்டிக் கொடுத்துக்கொண்டு இருந்தவர், இப்போது திடீரெனப் போய், விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கேட்கிறார். இவ்வளவு காலமும் அவ்வாறான ஒரு தொனியில் அவர் பேசவில்லை. தேர்தல் வருகின்றது என்பதால்தான், இந்தத் தொனி மாறுகின்றது. அதேவேளையில், ஐ.தே.க ஆட்சியிலிருந்தால் ஒரு விதமாகவும் பொதுஜன பெரமுன ஆட்சி என்றால் இன்னொரு விதமாகவும் இந்தப் பிரச்சினையை அவர் கையாள முற்படுகின்றாரா என்ற கேள்வியும் எழுகின்றது. இப்போது சுமந்திரன், ஜெனீவா சென்றிருப்பதும் பத்திரிகைகளுக்குக் கொடுக்கும் அறிக்கைகளும் தேர்தலை நோக்கமாகக் கொண்டதாகவே தெரிகின்றது’ என்று குறிப்பிட்டிருந்தார்.  

தேர்தல் நெருங்கும் வேளைகளில், தமிழரசுக் கட்சியினரின் தமிழ்த் தேசிய ‘ஹோர்மோன்’கள் அதிகமாகச் சுரப்பது, வரலாற்றுக்குப் புதியதொன்றல்ல. செல்வநாயகம் காலம், பின்னர் அமிர்தலிங்கம் காலம் எனப் பகட்டாரவாரப் பேச்சுகளால் மட்டுமே கட்டியெழுப்பப்பட்ட பாசறை அது.   

ஆனால், சுமந்திரனின் கருத்து, மாற்றத்தை வெறும் தேர்தலுக்கான உத்தியாக மட்டும் கருதிவிட முடியாது. அது, மாறியுள்ள அரசியல் களத்தின் விளைவும்தான்.   

“டட்லி சேனநாயக்க நல்ல மனிதன்; அவரோடு இணங்கி, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொண்டுவிட முடியும்” என்று, எப்படிச் செல்வநாயகமும் திருச்செல்வமும் நம்பினார்களோ, அப்படித்தான், “ரணில் விக்கிரமசிங்க நல்ல மனிதன்; அவரோடு இணங்கி, நாம் சில அடைவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று சம்பந்தனும் சுமந்திரனும் நம்பினார்கள்.   

ஆனால், இரண்டு நம்பிக்கைளும் பொய்த்துப்போய் விட்டன. டட்லி சேனநாயக்கவுடனான அணுகுமுறையையே, சிறிமாவுடன் கையாள முடியவில்லை. ஏனென்றால், தமிழ்த் தரப்போடு பேச்சுவார்த்தை நடத்துதல் என்ற எண்ணமே, சிறிமாவிடம் இருக்கவில்லை.   

கிட்டத்தட்ட, இதுபோன்ற சூழல்தான் இன்றும் காணப்படுகின்றது. தமிழ்த் தரப்போடு பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம், இன்றைய சூழலில் ராஜபக்‌ஷக்களிடம் இல்லை. ஆகவே, மாறியுள்ள களச் சூழலை, வேறுவகையாகவே எதிர்கொள்ள வேண்டிய தேவை, தமிழரசுக் கட்சிக்கு இருக்கிறது.  

2015இல், தான் முன்னெடுத்த கைங்கரியத்தில், தமிழரசுக் கட்சி தோல்வி கண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம். ஆங்காங்கே, ஒரு சில நன்மைகள் விளைந்திருக்கலாம். ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைக் காப்பாற்றி, தமிழரசுக் கட்சி தனது, நல்லெண்ணத்தைக் காட்டியிருக்கலாம்; மேற்கையும் இந்தியாவையும் திருப்தி செய்திருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 2015இல் தமிழ் மக்களுக்கு என்ன வாக்குறுதிகள் வழங்கப்பட்டனவோ, தமிழ் மக்கள் எந்த எதிர்பார்ப்பில் வாக்களித்திருந்தார்களோ, அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இந்த நிலையில் எதிர்வரும் தேர்தல், தமிழரசுக் கட்சிக்கு இலகுவானதொன்றாக இருக்காது.  

2015இல் தமிழரசுக் கட்சியின் பிரதான வைரிகளாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இருந்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ‘பூகோள அரசியல்’ அணுகுமுறையை, இலங்கை மீது சர்வதேசக் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மறுத்து, இணக்கமான ‘மென்வலு’ அரசியலை முன்னிறுத்திய தமிழரசுக் கட்சிக்கு, தமிழ் மக்கள் அமோகமான ஆதரவை வழங்கியிருந்தனர்.   

ஆனால், இந்த நிலை இம்முறை தேர்தலில் தொடரும் என்று சொல்ல முடியாது. 2018ஆம் ஆண்டு நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலை அவதானித்தால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாக்குகள், கணிசமானளவில் அதிகரித்திருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.  

இன்றைய அரசியல் களத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சொல்வதற்கு மாறான கருத்தைக் கூட, சொல்ல முடியாத சூழல்தான், தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.   

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஏறத்தாழ ஒரு தசாப்த காலமாகக் கூறிவந்த சர்வதேசக் குற்றவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குள்த்தான் தமிழரசுக் கட்சியும் இன்று தள்ளப்பட்டிருக்கிறது.  

ஆகவே, இந்த இரண்டில் தமிழ் மக்கள் எதைத் தெரிவுசெய்யப் போகிறார்கள் என்பது முக்கியமான கேள்வி. ஆனால், அதைவிட முக்கியமான கேள்வி, அணுகுமுறை ரீதியிலும் நிலைப்பாட்டு ரீதியிலும் தற்போது மிக நெருக்கமான ஒருமைத் தன்மையை வௌிப்படுத்தும் இந்த இரண்டு தரப்பும் ஏன் கைகோர்க்கக் கூடாது என்பதுதான்.   

கொள்கை அதற்குத் தடையாக வராவிட்டாலும், அரசியல் யதார்த்தம் எனப்படும் தனிநபர் விருப்பு வெறுப்புகள் அந்தக் கைகோர்ப்பைத் தடுக்கும்.   

1972ஆம் ஆண்டு, பொன்னம்பலமும் செல்வநாயகமும் மீண்டும் தமிழ் மக்களின் நன்மையை மட்டும் கருதிக் கைகோர்த்தபோது, அவர்கள் தமது வாழ்க்கையின் அந்திமக் காலத்தை எட்டியிருந்தார்கள். ஆகவே, காலத்தின் பண்படுத்தல், தமது தனிமனித விருப்பு வெறுப்புகளைத்தாண்டி செயற்படும் பக்குவத்தை அவர்களுக்கு வழங்கியிருக்கலாம்.  

தமிழரசுக் கட்சிக்கு இன்று, முக்கிய வைரி ஒன்றல்ல; முக்கிய வைரிகள் இரண்டு உருவாகி இருக்கிறார்கள். இரண்டாவதாக, இன்று முளைத்திருக்கும் வைரி, நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி.   

விக்னேஸ்வரனின் கூட்டணியினர், தமிழரசுக் கட்சிக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்களுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக் கட்சிக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்களுக்கும் இந்த இரண்டு தரப்பினரின் கொள்கை நிலைப்பாடுகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை.   

ஆனால், இவை தமிழரசுக் கட்சியோடு ஒன்றுபடுவது ஒரு புறமிருக்க, இந்த இரண்டு தரப்பாலும் ஒருவரோடு ஒருவர் கைகோர்க்க முடியாத நிலை ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஏன், விக்னேஸ்வரனாலும் கஜேந்திர குமாராலும் கூட கைகோர்க்க முடியவில்லை? அதற்குத் தடையாக இருப்பது எது?  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பாதை-ஒன்று-பயணங்கள்-வேறுவேறு/91-246238

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒளித்து ஓடும் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் தேவை

என்.கே. அஷோக்பரன்   / 2020 மார்ச் 09 

தமிழர்களும் அடுத்த தேர்தலும் [பகுதி - 03]

எதிர்பார்த்தது போலவே, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டிருக்கிறது. வேட்பாளர் தெரிவு, வேட்புமனுத் தாக்கல் என்பவற்றுக்குக் கட்சிகள் தயாராகிக் கொண்டிருக்கின்ற வேளையில், பிரசார நடவடிக்கைகளும் ஆரம்பமாகத் தொடங்கி இருக்கின்றன.   

தமிழர்களைப் பொறுத்தவரையில், வடக்கு, கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் கூட்டணியான தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்வரும் தேர்தல் முக்கியமானதொன்றாக அமையவிருக்கிறது. 

தமிழ் மக்களின் வாக்குவங்கி, தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு, எதிர்ப்பு என்ற அடிப்படையிலேயே பெரும்பாலும் வரையறுக்கப்படப் போகிறது. தமிழரசுக் கட்சி மீதான, கடுமையான விமர்சனங்கள் நீண்டகாலமாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளேயும் வௌியேயும் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், தமிழர் வாக்குகளின் பெரும்பங்கை தமிழரசுக் கட்சி பெற்றிருக்கிறது.  

இதுவே, தமிழரசுக் கட்சியினர் தமக்கெதிரான அத்தனை விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கப் பயன்படுத்தும் ஆயுதமாகும். தமிழரசுக் கட்சிக்கு எதிரான கொள்கை, சித்தாந்த ரீதியிலான விமர்சனங்கள் எவ்வாறு அமைந்தாலும், இறுதியில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு, அவர்களுக்குக் கிடைக்கும் போது, அந்த விமர்சனங்கள், அவை எவ்வளவு உண்மையாக இருந்தாலும், யதார்த்தத்தில் வலுவற்றதாகி விடுகின்றன.   

“எம்மீது எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், தமிழ் மக்கள் எமக்கே வாக்களித்து இருக்கிறார்கள்; எமது நடவடிக்கைகளுக்குத் தமிழ் மக்களின் அங்கிகாரம் உண்டு” என்று, தமிழரசுக் கட்சி, தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தும்.   

ஆகவே, தமிழ் மக்களின் வாக்குகளில் பெருமளவைத் தமிழரசுக் கட்சி பெறும்வரை, தமிழ் மக்கள் என்ன காரணத்துக்காகத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்து இருந்தாலும், தமிழரசுக் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ் மக்கள் அங்கிகாரம் அளித்ததாகவே யதார்த்தத்தில் அர்த்தப்படும்.  

ஆகவே, தாம் தமிழ் மக்களின் வாக்குகளில் பெரும்பான்மையளவு வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் வரை, எதுவித விமர்சனங்களையும் மாற்றுக் கட்சிகளின் சாடல்களையும் பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை என்பது, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட பின், தாம் தமிழ் மக்களின் பெயரால் எதையும் செய்யலாம், அதைத் தாம் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் நியாயப்படுத்தலாம் என்பதையும் தமிழரசுக் கட்சியும் அதன் தலைமைகளும் நன்கே உணர்ந்துள்ளன.   

ஆகவேதான், இம்முறை வாக்கு வேட்டையை மய்யப்படுத்திய வேட்பாளர்களை, அவர்களது அரசியல் அனுபவம், தமிழ்த் தேசிய பற்று, உணர்வு, விசுவாசம் என்பவற்றைத் தாண்டி, அவர்கள் வாக்குகளைக் கட்சிக்குக் கொண்டுவருவார்களா என்ற நோக்கில் களமிறக்க இருக்கிறார்கள்.  

மறுபுறத்தில், தமிழரசுக் கட்சி மீதும், அதன் தேர்தல்க் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும், கடுமையான விமர்சனங்களையும் சாடல்களையும் தமிழ்த் தேசியத்தின் பெயரால் முன்வைக்கும் தரப்புகளுக்கும் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் மிக்கதொன்றாகும்.   

இதுவரை, அவர்கள் முன்வைத்த விமர்சனங்களின் நியாயத் தன்மை எவ்வாறு இருந்தாலும், அதை மக்கள் ஆதரவால் வலுப்படுத்த அவர்களால் முடியவில்லை. சுருங்கக் கூறின், அவர்களுக்கான மக்கள் ஆதரவு, தேர்தல் முடிவுகளின் படி மிகக் குறைவானதாகவே இருந்திருக்கிறது.   

ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களுக்கான ஆதரவு கணிசமாக அதிகரித்து இருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக, 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குவீதாசாரத்தைவிட, 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில், அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குவீதாசாரம் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிமுகம், இந்தத் தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.   

ஆனால், தமிழரசுக் கட்சிக்கு மாற்றாக வரவிளையும் இந்தத் தமிழ்த் தேசிய மாற்றுச் சக்திகளிடத்தில் காணப்படும் பெருங்குறைபாடு, அவர்களிடத்தில் ஒற்றுமை இன்மையாகும்.  

இன்றைய சூழலில், தமிழரசுக் கட்சியின் தேர்தல் கூட்டணிக்கு எதிராக, தமிழ்த் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட அமைப்புகளாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் அமைகிறது.   

இந்த இருதரப்புகளும் தமிழரசுக் கட்சி மீது முன்வைக்கும் விமர்சனங்கள், ஒரே மாதிரியானவையே; இந்த இருதரப்பும் முன்வைக்கும் கொள்கையும், தமிழ்த் தேசியவாதமும் ஒரேமாதிரியானவை ஆகும்.   

ஆகவே, இந்த இரண்டு தரப்பும் ஒன்றிணைவதில் கொள்கை ரீதியிலான தடைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், இந்த இரண்டு தரப்பும் ஒன்றிணையும் போது, அவர்களது வாக்குகள் பிளவடையாது. அதன் மூலம், தமிழரசுக் கட்சிக்கு எதிரான, வலுவான மாற்றாக உருவாகுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.   

ஆனால், இந்த இரண்டு தரப்பும் கூட, ஒன்றுடன் ஒன்று முரண்பட்டுக்கொண்டு நிற்பதுதான், தமிழ்த் தேசியத்தின் பெரும் துரதிர்ஷ்டம். தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் கஜேந்திகுமார் பொன்னம்பலத்தாலும் நீதியரசர் விக்னேஸ்வரனாலும் ஏன் கைகோர்க்க முடியவில்லை என்ற கேள்வி, தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் அனைவர் மனதிலும் எழுகின்ற நியாயமான கேள்வியாகும்.  

இதற்கு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்லும் பதில், “தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில், தமது கட்சி இணைவதை, இந்தியா விரும்பவில்லை... கூட்டு என்ற பெயரில், இந்திய பாதுகாப்புப் படை, இலங்கையில் இருந்தபோது, அதற்கு ஓர் ஒட்டுக்குழுவாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அணியின் ஓர் உறுப்பினராகத் தான் விக்னேஸ்வரன் செயற்படுகின்றார். இந்த முயற்சிகள் அனைத்துமே, வேறு தரப்பின் நலன்களைக் கருத்திற்கொண்டு இடம்பெறுகின்றன. இது மக்களின் நலன்களுக்கானது அல்ல. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குக் கிடைக்கக்கூடிய வாக்கு வங்கியை உடைக்க, மக்களைக் குழப்பும் நோக்கத்துடன், அவர்கள் செயற்படுகின்றார்கள்” என்பதாக அமைகிறது.  

ஈ.பி.ஆர்.எல்.எப் வரலாற்றில், படுகொலைகளையும் கொடுமைகளையும் தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்தது என்ற குற்றச்சாட்டு தற்போதும் காணப்படுகிறது. ‘மண்டையன் குழு’ கொலை செய்த தமிழ் இளைஞர்கள், எத்தனை என்றெல்லாம் யோசித்திருந்தால், தமிழ்த் தேசிய அரசியலில் எந்தவொரு ஜனநாயக வழி நின்ற கட்சியும் எந்தவொரு முன்னாள் ஆயுதக் குழுவுடனும் கூட்டணி அமைக்கவே முடியாது என்பதுதான் யதார்த்தம்.   

டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் என இன்று தமிழ்த் தேசிய அரசியலில் ஜனநாயக வழி நிற்கும் முன்னாள் ஆயுதக் குழுக்களெல்லாம், ஆயுத வன்முறையில் ஈடுபட்டவைகள்தான். அதன் நியாய- அநியாயங்கள் ஒருபுறமிருக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஸ்தாபகக் கட்சிகளில் ஒன்றாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உடன் சேர, இன்று கஜேந்திரகுமார் மறுப்பதன் தாற்பரியம் புரிந்துகொள்ளச் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது.   

ஆனால், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் தாம் இணைவதை, இந்தியா விரும்பவில்லை என்ற கஜேந்திரகுமாரின் கருத்து, இங்கு ஊன்றிக் கவனிக்கத்தக்கது.  

இந்தியாவுக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையிலான உறவு, இந்தியாவுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையிலான உறவைப் போன்றது எனலாம்.   இந்தியாவின் முக்கியத்துவத்தை மற்றையவரும், மற்றையவரின் முக்கியத்துவத்தை இந்தியாவும் அறிந்திருந்தாலும் இருதரப்புகளிடையே நம்பிக்கையீனமும் சந்தேகப் பார்வையும் தொடர்ந்து இருந்துகொண்டு வந்தது.   

இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாத தமிழ் இளைஞர் விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகள் இருந்ததைப் போலவே, இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாத அரசியல் தலைவராக கஜேந்திரகுமார் இருக்கிறார்.   

இலங்கையின் ஏனைய தமிழ்க் கட்சிகள், தலைமைகள் எல்லாம் ‘அன்னவர்க்கே சரண் நாங்களே’ என்று இந்தியாவின் செல்வாக்குக்குக் கட்டுப்பட்டு, ஒத்திசைந்து செல்லும் போது, இந்தியாவின் சொல்கேட்கும் பிள்ளையாக கஜேந்திரகுமார் இருக்காதுபோனதுதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அவர் விலகுவதற்கும் வழிசமைத்தது.   

பத்மினி சிதம்பரநாதனுக்கும் செல்வராசா கஜேந்திரனுக்கும் ஆசனம் தரவில்லை என்பதால்த்தான் கஜேந்திரகுமார் வௌியேறினார் என்று கஜேந்திரகுமாரின் வௌியேற்றத்தை ஓர் ஆசனப் பங்கீட்டுப் பிரச்சினையாக மட்டும் காட்டுபவர்கள், பத்மினியும் கஜேந்திரனும் ஏற்கெனவே பதவியிலிருந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் (sitting MPs). அவர்களுக்குத் தமிழரசுக் கட்சி ஆசனம் வழங்க மறுத்தது ஏன் என்று சொல்வதில்லை.  

அதன் பின்னாலுள்ள சூழ்ச்சி, இந்தியாவினுடையதே என்பது, கடந்த ஒரு தசாப்த காலமாகக் கஜேந்திரகுமார் கூறி வருகின்ற கருத்து.  

மறுபுறத்தில், நீதியரசர் விக்னேஸ்வரன் இந்தியாவுடன் மிக நெருங்கிய உறவைக் கொண்டவர் என்பது, அவரது இந்திய விஜயங்கள், இந்தியா பற்றிய அணுகுமுறை என்பவற்றினூடாகத் தௌிவாக உணரக்கூடியதாக உள்ளது. அவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்படுவதற்கான நியாயங்கள், நிறையவே இருந்தாலும் அதை அவர் தவிர்த்தமை, தமிழ் மக்கள் மனதில் பல கேள்விகளை நிச்சயம் எழுப்புவதாகவே இருக்கிறது.   

ஈ.பி.ஆர்.எல்.எப் மீதான கஜேந்திரகுமாரின் வெறுப்பு மட்டுமே, இந்த இருதரப்பும் இணைவதைத் தடுக்கிறது என்றால், அதைக் கஜேந்திரகுமார் விட்டுக்கொடுக்கலாம்; ஆனால், அதையும் தாண்டி, இந்த ஒற்றுமையைச் சாத்தியப்படுத்த, நீதியரசர் விக்னேஸ்வரன் தரப்பும் கஜேந்திரகுமார் தரப்பும் விரும்பவில்லை என்றால், அதற்கான காரணங்களை அவர்கள் தமிழ் மக்களுக்கு மிகத்தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.  

மேலும், தமிழ்த் தலைமைகள் இனியும் தமிழ் மக்கள் முன் ஒளித்து ஓடும் அரசியல் கலாசாரத்தை முன்னெடுக்காது, தமது நிலைப்பாட்டைத் தௌிவாக எடுத்துரைக்கவும் மேலைத்தேய பாணியில் மாற்றுக் கருத்துடைய தலைமைகளுடன் நேரடியான விவாதத்தில் ஈடுபடவும் முன்வரவேண்டும்.   

அத்தகைய விவாதங்கள் இடம்பெறும்போதுதான், இன்று தமிழ் மக்கள் முன் நிற்கும் ஒவ்வொரு தரப்பின் கொள்கை நிலைப்பாடுகள் பற்றி, தமிழ் மக்களுக்குத் தௌிவானதொரு பார்வையும் விளக்கமும் கிடைக்கும்.   

அதை விடுத்துத் தமது மேடைகளில் மட்டும் ஏறி, மாற்றுத்தரப்பைத் தாக்குவதும் தமது அறிக்கைகளில் மட்டும், தமது அரசியலை முன்னெடுப்பதும் ஏற்புடையதொன்றல்ல. நேரடியான விவாதமொன்றுக்குத் தமிழ்த் தலைமைகள் வருமானால், அது இந்த நாட்டுக்குப் புதியதொரு பண்பட்ட அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்திய பெருமையையும் தமிழர்களுக்குப் பெற்றுத்தருவதாக அமையும்.   

அத்துடன், வெற்றுப் பகட்டாரவாரப் பேச்சுகளைத் தாண்டி, ஆரோக்கியமானதொரு கொள்கை நிலைப்பாடு சார்ந்த அரசியல் விவாதத்தையும் தமிழ் மக்கள் கேட்டுணர்ந்து, அதன்படி தமக்கான பொருத்தமான தெரிவை மேற்கொள்ள வழிசமைக்கும். ஆகவே, இம்முறை இத்தகையதொரு பொது விவாத மேடைக்கு தமிழ்த் தலைமைகள் வரவேண்டும்.  

தமிழ்த் தேசிய அரசியல் மிக முக்கியமானதொரு திருப்பு முனையைச் சந்தித்திருக்கிறது. 2015இல் இருந்த நிலைக்கு முற்றிலும் தலைகீழான நிலை இது. ஜனநாயக ரீதியில் புதியதோர் அணுகுமுறையைக் கையிலெடுக்க வேண்டிய அரசியல் தேவை, தமிழ்த் தலைமைகளுக்கு இருக்கிறது.

அந்தவகையில், தமிழ்த் தேசியத்துக்கு வாக்களிக்க எண்ணும் தமிழ் மக்கள், வெறும் வார்த்தைப் பகட்டாரவாரத்துக்குள், தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளை இழுத்தெடுக்கும் கருவியாகத் தமிழ் தேசியத்தைப் பயன்படுத்துபவர்களை அடையாளங்கண்டு நிராகரிக்கவும் வேண்டும். 

அதேவேளை, வெறுமனே அறிக்கை அரசியல் மட்டுமே செய்கின்ற, விளைபலம் ஏதுமற்ற அரசியல் செய்பவர்களையும் நிராகரிக்கவும் வேண்டிய தேவை இருக்கிறது. 

(முற்றும்)   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஒளித்து-ஓடும்-அரசியல்-கலாசாரத்தில்-மாற்றம்-தேவை/91-246571

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.