Jump to content

மரபுரிமை சின்னமாக புங்குடு தீவு பெருக்க மரம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மரபுரிமைச் சின்னமாக புங்குடு தீவு பெருக்கு மரம்: பேராசிரியர் புஷ்பரட்ணம்

image1.jpeg

(மக்களிடம் கையளிப்பதை பெரும் நிகழ்வாக நடாத்த புங்குடுதீவு மக்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் நாட்டின் அசாதாரண சூழ்நிலைக் கருத்தில் கொண்டு அந்நிகழ்வு குறைந்த மக்களின் பங்களிப்புடன் இன்று (20.03.2020) நடைபெற உள்ளது. அதையொட்டியே இக்கட்டுரை வெளிவருகின்றது)

சமகாலத்தில் தமிழ் மக்களின் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு முன்பொருபோதும் இல்லாத அளவிற்கு தமிழ் மக்களிடையே வெளிக்கிழம்பியிருப்பதைக் காணமுடிகிறது.

இதைத் தொடக்கி வைத்ததில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளுக்கும் முக்கிய இடமுண்டு. 2017 ஆம் ஆண்டு சுவிஸ் தமிழ்க் கல்விச்சேவை இணைப்பாளர் திரு. கந்தசாமி பார்த்திபனின் முயற்ச்சியால் தமிழரிடையே மறைந்தைவையும் மறக்கப்பட்டு வருகின்றதுமான ஏறத்தாழ 500க்கு மேற்பட்ட பாரம்பரிய மரபுரிமைச் சின்னங்களின் புகைப்படங்கள் ஆவணப்படுத்தப்பட்டு அவை “தமிழரின் மரபுரிமை அடையாளங்கள்” என்ற பெயரில் தனிநூலாக வெளியிடப்பட்டது.

அந்நூல் இன்று சுவீஸ் நாட்டில் மட்டுமல்ல தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் பல நாடுகளிலும் தமிழ் கற்கும் பிள்ளைகளுக்கும் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தாயகத்திலும் தமது மரபுரிமைகளை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கும் இந்நூலும் ஒரு வழிகாட்டியாக இருந்து வருவதைக் காணமுடிகின்றது.

அண்மையில் சுவிஸ் பருத்தி நகர அபிவிருத்தி சங்கத்தின் நிதி உதவியுடன் தமிழர் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வரும் தெருமூடி மடம் மீள்ளுருவாக்கம் செய்யப்பட்டு பருத்தித்துறை மக்களிடம் கையளிக்கப்பட்டது. தமிழரின் மரபுரிமைச் சின்னங்களுள் மடம் கேணி சுமைதாங்கி என்பவற்றிற்கு தொன்மையான தொடர்ச்சியான வரலாறு உண்டு. இன்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் வணிகத்தின் பொருட்டு அநுராதபுரத்தில் அமைத்த மடம் பற்றி அங்குள்ள கல்வெட்டுக் கூறுகின்றது. அதற்கு தொடர்ச்சியான வரலாறு உண்டு என்பதற்கு தெருமூடி மடமும் சான்றாகும்.

image2-1-1.jpeg

தெருமூடி மடத்தை தொடர்ந்து தற்போது சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் முழுமையான நிதி உதவியுடன் புங்குடுதீவில் உள்ள பெருக்கு மரம் அப்பிரதேசத்தின் மரபுரிமைச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளமை பெருமை தரும் செய்தியாகும்.

தீவகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இப்பெருக்கு மரத்தையும் பார்வையிட்டு வருவதால் அவர்களின் வசதி கருதி பெருக்கு மரத்தின் சுற்றாடலையும் அதையொட்டிய கடற்பரப்பையும் அழகுபடுத்தி அங்கு மலசலகூட வசதியையும் சிறுவர் விளையாட்டு அரங்கையும் அமைத்திருப்பதன் மூலம் இவ்விடத்தையும் சுற்றுலா மையமாக மாற்றியுள்ளனர்.

எதிர்காலத்தில் இவ்விடத்தில் தமிழர்களின் மரபுரிமைச் சின்னங்களை காட்சிப்படுத்தக் கூடிய அருங்காட்சியகம் ஒன்றையும் அமைப்பதற்கும் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தீர்மானித்திருப்பது தமிழ் மக்களுக்கு மேலும் மகிழ்ச்சிதரும் செய்தியாகும். இதன் மூலம் புங்குடுதீவுக்கு மேலும் ஓர் புதிய முகவரி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

தற்போது புங்குடுதீவில் பாதுகாக்கப்பட்டுள்ள பெருக்கு மரம் அடன்சோனியா எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த மரமாகும். இது ஐந்து முதல் முப்பது மீற்றர் உயரத்திற்கு வளரக்கூடியவை. ஏழு முதல் பதினொரு மீற்றர் விட்டம் கொண்டவை. தமது உடற் பகுதியில் சுமார் 120000 லீட்டர் நீரை சேமித்து வைத்து கடுமையான வறட்சியைத் தாங்கும் தன்மை கொண்டது. மடகஸ்கார் போன்ற நாடுகளில் இம்மரத்தின் இலைகளும் காய்களும் உணவுக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வகை மரங்கள் மடகஸ்கார் ஆப்பிரிக்க அரேபியா ஆஸ்திரேலியா போன்ற  நாடுகளுக்குச் சொந்தமானவையாக காணப்பட்டாலும் இலங்கைக்கு இம்மரத்தை அறிமுகப்படுத்தியவர்கள் அரேபிய வணிகராகும். கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி.16ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால இலங்கையின் அயல்நாட்டு வாணிபத்தில் அரேபிய வணிகர் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளனர்.

அவர்கள் வணிகத்தின் பொருட்டு இலங்கையில் தங்கியிருந்த கடற்கரை நகரங்கள் துறைமுகங்களில் இம்மரத்தை நாட்டியுள்ளனர். இவ்வரலாற்றுப் பின்னணி கொண்ட இடங்களிலேயே பிற்காலத்தில் போத்துக்கேயர் ஒல்லாந்தர் தமது கோட்டைகளையும் அமைத்தனர். இதற்கு நெடுந்தீவு மன்னார் காலி முதலான இடங்களில் உள்ள கோட்டைகளும் அவற்றின் அருகேயுள்ள பெருக்கு மரங்களும் சான்றாகும்.

இதனால் புங்குடுதீவில் பெருக்கு மரங்கள் நாட்டப்பட்டமைக்கு அப்பிரதேசத்தின் அமைவிடமும் அதன் வரலாற்றுப் பழமையுமே முக்கிய காரணம் எனலாம். ஏனெனில் தீவகமே வரலாற்றுக்கு முற்பட்டகாலத்தில் இருந்து இலங்கை தமிழக உறவின் தொடக்க வாயிலாகவும் முதற்படியாகவும் இருந்துள்ளது. தமிழகத்தில் காலத்திற்கு காலம் தோன்றி வளர்ந்த பண்பாடு முதலில் தீவகத்திற்குப் பரவி அங்கிருந்தே வடஇலங்கைக்கும் இலங்கையின் ஏனைய இடங்களுக்கும் பரவியதாக வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர்.

யாழ்ப்பாணத்தின் பூர்வீக மக்கள் பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் பொ.இரகுபதி தீவகத்தின் தொன்மையான குடியிருப்பு மையங்களாக காரைநகர்ரூபவ் வேலணைரூபவ் புங்குடு தீவு முதலான இடங்களைக் குறிப்பிடுகின்றார். மகாவம்சத்தில் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே புங்கிடுதீவு “பியங்குதீப(ம்)” எனக் குறிப்பிடுகின்றது. இதில் இருந்து புங்குடுதீவின் வரலாற்றுத் தொன்மை தெரிய வருகின்றது.

கிறிஸ்தவ சகாப்தத்தில் இருந்து தமிழ் நாடு இந்தியா உரோம் அரேபியா சீன முதலான நாடுகளின் வணிகத் தொடர்புகள் புங்குடுதீவு உட்பட தீவகத்தின் கரையோரங்களில் ஏற்பட்டிருந்ததற்கு நம்பகரமான ஆதாரங்கள் உள்ளன.

கி.பி. 14ஆம் நூற்றாண்டில் எழுந்த நம்பொத்த என்ற சிங்கள இலக்கியம் வடஇலங்கையை தமிழ் பட்டினம் (தமிடபட்டின) எனக் குறிப்பட்டு அங்குள்ள முக்கிய வரலாற்று இடங்களைக் குறிப்பிடுகின்றது.

அவற்றுள் கணிசமான இடங்கள் தீவகத்தை குறிப்பதாக உள்ளது. அமரர் பேராசிரியர் வி.சிவசாமி அவர்கள் தனது இளமைக் காலத்தில் தற்போது புங்குடுதீவில் பாதுகாக்கப்பட்ட பெருக்கு மரத்திற்கு அருகில் மேலும் பல பெருக்கு மரங்கள் இருந்ததாகவும்  அவற்றிற்கு அருகில் போத்துக்கேயர் அல்லது ஒல்லாந்தர்கால வெளிச்ச வீட்டின் அழிபாடுகளும் மற்றும் நெடுந்தீவை ஒத்த கல் வேலிகளும் இருந்ததாக என்னிடம் கூறியுள்ளார்.

இவ்வாதாரங்களை வைத்து நோக்கும் போது தற்போது பெருக்கு மரம் காணப்படும் புங்குடுதீவுப் பிராந்தியம் முன்பொரு காலத்தில் மன்னார் காலி போன்ற கடல்சார் தொடர்பின் வணிக நகரமாகவும் துறைமுகமாகவும் இருந்திருக்கலாம் எனக் கூறலாம். ஆயினும் தற்போது அதை அடையாளப்படுத்தி காட்டும் ஒரேயொரு நினைவுச் சின்னமாக பெருக்கு மரத்தையே பார்க்கின்றேன்.

image3.jpeg

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தமது கிராமத்தின் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பதையே முக்கிய இலட்சியமாகக் கொண்டு செயல்படுவதால் எதிர்காலத்தில் யாழ்ப்பாண தொல்லியல் திணைக்கழக உதவியுடன் பெருக்குமரம் அமைந்துள்ள கூற்றாடலில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டால் இவ்விடத்தில் அமையவிருக்கும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவதற்குரிய வரலாற்றுப் பெறுமதியுடைய மரபுரிமைச் சின்னங்கள் கிடைக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்.

பேராசிரியர் ப. புஸ்பரட்ணம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

http://www.vanakkamlondon.com/punkudutheevu-20-03-2020/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.