Jump to content

Covid-19: கொரோனா வைரஸ் உருவாக்கிய புதிய சொல்லாடல்கள்: சுய தனிமைப்படுத்தல், சமூக விலகல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Covid-19: கொரோனா வைரஸ் உருவாக்கிய புதிய சொல்லாடல்கள்: சுய தனிமைப்படுத்தல், சமூக விலகல்
 
கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள விலங்குகள் சந்தையில் விற்கப்பட்ட வெளவால் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.  சீனாவில் ஆரம்பித்து வெகுவேகமாக உலகம் முழுவதும் பரவி தற்போது ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலியில், மையம்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பல ஆயிரக் கணக்கானவர்களைப் பலியெடுத்தும் இன்னும் பல்லாயிரக் கணக்கானவர்களை வதைத்தும் வருகின்றது.  
 
பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க முன்னரே அது மாறும் அளவுக்கு Pandemic ஆக உருவாகியுள்ள கொரோனா தொற்றுப்பரவரலைத் தடுக்கமுடியாமல் உலகநாடுகள் அனைத்தும் திணறுகின்றன.  தொற்றுப்பரவரலைக் குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகளையும்,  சுகாதாரத்தைப் பேண கைகளைச் சுத்தமாகக் கழுவதுல் போன்ற எளிய  வழிமுறைகளையும் கைக்கொள்ளுமாறு கோரிக்கைகள் வருகின்றன.

ஆக சீனாவில் வெளவால் சாப்பிட்டதற்கு உலகமே இப்போது கையை நன்றாக சுத்தம் செய்து கழுவும் நிலை!
 
பல நாடுகளில் மக்கள் பொழுதுபோக்க கூடுமிடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வீட்டிலிருந்து வேலைசெய்யக்கூடியவர்கள் வேலைத்தளத்திற்குப் போகவேண்டாம் என்று சிபார்சு செய்யப்படுகிறது. மக்கள் பீதியடைந்து வீடுகளில் உறைந்துள்ளனர்.  
 
பல நகரங்கள்  மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாவண்ணம் lock-down ஆகியுள்ளன.  இலண்டன் உட்பட பல ஐரோப்பிய நகரங்களில் பல வாரங்கள் வீடுகளுக்குள் இருக்கவேண்டி வரும் என்ற பீதியில் மக்கள் உள்ளனர். அதனால் பலர் பெருமளவு உணவுப் பொருட்களையும், toilet tissue போன்ற "அத்தியாவசியமான" வீட்டுப் பொருட்களையும் பெருமளவில் வாங்கி பதுக்கிக்கொண்டு நிலக்கீழ் எலிகள் போல வாழ ஆரம்பித்துள்ளனர். 
 
Munich இல் வசிக்கும் Austria நாட்டு நண்பர் ஒருவர் Update from the "bunker" என்று தன் அனுபவத்தை விலாவாரியாக எழுதியுள்ளார்.  பீதிக் கொள்முதல் (Panic Buying) தொடங்கியபோது தான் தனது கடைசி toilet roll இல் இருந்ததாகவும் ஒரு pack toilet roll வாங்க மூன்று நாட்கள் பிடித்ததாகவும் எழுதியிருந்தார்.  Toilet roll pack வாங்குமட்டும் எங்களைப் போல கழுவினாயா என்று கேட்டு பதில் எழுதியுள்ளேன் 😂
 
இலண்டனில் தினமும் பெரிய supermarketகளில் தீர்த்தக்கரையில் நிற்கும் கூட்டம் போல மக்கள் வரிசைகட்டி பொருட்கள் வாங்குவதைப் பார்த்து "crazy" என்று சொல்லிக்கொண்டே அவர்களுடன் வரிசையில் நானும் நிற்கின்றேன்.  வரிசையில் நிற்கும்போது இரண்டு மீற்றர் இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், இருமல், தும்மல் துளிகளிலிருந்து தப்புவதும் பெரும்பாடாக உள்ளது.  தெரிந்தவர்களைக் கண்டால் அவர்களுக்கு அருகில் சென்று கதைக்கவேண்டி வருமே என்று காணாத மாதிரி நிற்கவும் வேண்டியுள்ளது.
 
கொரோனாவுக்கு எந்த வயதோ, பாலோ பொருட்டில்லை. எல்லோரையும் தாக்கும்.  வயது முதிர்ந்தவர்கள் அதிகம் பலியாவதால் இளவயதினர் தப்பிவிடலாம் என்று அலட்சியமாக இருப்பது ஆபத்தானது. இளவயதினரின் மரணிக்கும் வீதம் குறைந்தாலும் இளவயதினர் கொரோனா வைரஸின் காவியாக இருந்து பலருக்கு தொற்றை ஏற்படுத்தலாம். அப்படி அன்புக்கினிய முதியோர்களுக்கு பரப்பி அவர்களின் ஆயுளைக் குறைத்து பரலோகம் அனுப்பவும் சந்தர்ப்பம் உள்ளது.
 
இதனால் கொரோனா தொற்றுப்பரவலில் இருந்து எம்மைப் பாதுகாக்கவும், வைரஸ் பரவும் வேகத்தினை குறைக்கவும், அதன் மூலம் வைத்தியசாலைகளில் நிரம்பும் கொரோனாத் தொற்றுள்ள நோயாளர்களைக் குறைக்கவும் இரண்டு முக்கிய உத்திகளை அரசுகள் முன்வைக்கின்றன.
 
1. சுய தனிமைப்படுத்தல் (self-isolation)
 
காய்ச்சல் (நெஞ்சிலும் முதிகிலும் சூட்டை உணர்தல்) , தொடர்ச்சியான புதிய இருமல் இருந்தால் அவை கொரோனா வைரஸின் தொற்றாக இருக்கலாம்.  ஆனால்  தொற்றை உறுதிப்படுத்த வளங்கள் பற்றாக்குறையாக உள்ளதால் இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்கள் தமது வீடுகளில் சுய தனிமையில் இருக்கவேண்டும். தனியொருவராக வீட்டில் இருந்தால் குறைந்தது ஏழு நாட்களும், வேறு பலருடன் கூடி இருந்தால், எல்லோரும் பதினான்கு நாட்களும் சுயதனிமைப்படுத்தலில்  இருக்கவேண்டும்.   ஒருவருக்கு காய்ச்சல், இருமல் தொடங்கி ஏழு நாட்கள் தாண்டியபின்னரும் குணமடையாமல் நிலமை இன்னமும் மோசமானாலே  வைத்திய உதவியை நாடவேண்டும் என்று பிரித்தானிய அரசு சொல்கின்றது.
 
சுய தனிமைப்படுத்தலுக்கு தயார்படுத்த நண்பர்கள், அயலார்களிடம் தொலைபேசி இலக்கங்களைப் பரிமாறி அவர்கள் மூலம் பொருட்களை வாங்கவும், அல்லது online shopping மூலம் வாங்கவும் முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு அரசு கேட்கின்றது.
 
பிரித்தானியாவில் உள்ள பெரிய supermarketகளில் online shoppingக்கு slot book பண்ண முயன்றால் எதுவுமே கிடைக்கவில்லை. ஒரு supermarket இல் ஜூன் மாத இறுதிவரை slot இல்லை. இந்த இலட்சணத்தில் online shopping என்பது வயது முதிர்ந்தவர்களுக்கும், அன்றாடம் காய்ச்சிகளுக்கும், அரச கொடுப்பனவுகளில் இருப்பவர்களுக்கும் பொருத்தமானதல்ல. எனவே, நண்பர்கள், அயலார்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் உதவுவதே உள்ள ஒரே வழி.
 
பிற சமூகங்களுடன் ஒப்பிடும்போது தமிழர்கள் நண்பர்கள், உறவினர்கள் என்று நெருங்கிப் பழகுவதால் சுயதனிமைப்படுத்தலுக்குப் போகவேண்டி வந்தால் உதவுவதற்கு பலர் இருப்பார்கள் என்று நம்பலாம்.
 
2. சமூக விலகல் (social distancing)
 
சமூக விலகல் என்பது புதிய சொல்லாடலாக இருப்பதால் தவறான அர்த்தமும் ஏற்பட வாய்ப்புண்டு.  இணைய அரட்டை ஒன்றில் சமூக விலகல் என்ற சொல்லாடலைப் பாவிக்க, நண்பர் ஒருவர் "நாட்டில் எந்தப் பிரச்சினையை ஒழித்தாலும் யாழ்ப்பாணத்தின் மேலாதிக்கக் கொள்கையை அழிக்கவே முடியாது" என்று கடிந்துகொண்டார்.  இது ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை ஒதுக்கும் சமூக விலக்கல் அல்ல. மக்கள் தாங்களாகவே பிறரை சந்திக்காமல், பிறருடன் பழகாமல் விலகி இருப்பதுதான் சமூக விலகல்.😎
 
சமூக விலகலைப் பற்றி பிரித்தானிய அரசு என்ன சொல்கின்றது?
 
கொரோனா வைரஸ் தொற்றுப்பரவரலைக் குறைப்பதற்கு மக்கள் ஒருவருடன் ஒருவர் பழகுவதைத் தவிர்க்கவேண்டும் என்று கேட்கின்றது. முக்கியமாக வயது முதிர்ந்தோர், குறிப்பாக 70 வயது தாண்டியோர், பலவீனமானவர்கள்,  உடல்நலக் குறைவு உள்ளோர், சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் வீடுகளில் இருக்குமாறும், அப்படியானவர்களை பிறர் சந்திப்பதை தவிர்க்குமாறும் சொல்கின்றது.  மக்கள் ஒருவர் ஒருவரை சந்திப்பதைக் குறைக்க மக்கள் கூடுமிடங்களான உணவகங்கள், pubs, gyms, clubs எல்லாவற்றையும் மூடியுள்ளது.  அத்துடன் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
 
சமூக விலகலில் கடைப்பிடிக்கவேண்டியவை:
 
* கொரோனா வைரஸின் அறிகுறிகள் உள்ளவர்களை முற்றாகத் தவிர்க்கவேண்டும்.
* தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து இயன்றவரை வீடுகளில் இருக்கவேண்டும்.
* வீட்டிலிருந்து வேலைசெய்யக்கூடியவர்கள் மறு அறிவித்தல்வரை வீடுகளில் இருந்து வேலை செய்யவேண்டும்.
* பொது இடங்களில் கூடுவதும், களியாட்டங்களும், நண்பர்களுடான பொழுதுபோக்குகளும் தவிர்க்கவேண்டும்.
* நண்பர்கள், உறவினர்களுடன் தொலைபேசி, Skype போன்ற வீடியோ தொலைபேசும் தொழில் நுட்பங்களுடன் தொடர்பாடலைப் பேணவேண்டும்.
 
 
இந்த சமூக விலகல் காரணமாக உலகின் பல்வேறு நகரங்களில் ஆள் நடமாட்டமே இல்லை. இதில் பெரிய பெரிய சுற்றுலா தலங்களும் அடங்கும்.  பிரித்தானியாவில் தாய்மார்கள் தினமான இன்று (22-மார்ச்) வயது முதிர்ந்த தாய்மார்களை நேரடியாகச் சென்று காண்பதைத் தவிர்க்குமாறும், முடிந்தால் வீடியோ தொலைபேசி மூலம் உரையாடும்படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த சமூக விலகல் காரணமாக கொரோனா வைரஸின் பரவல் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும் என்று யாரும் கூறவில்லை, ஆனால் மக்கள் ஒருவரையொருவர் சந்திப்பது குறைந்தால் கொரோனா வைரஸின் பரவலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தலாம். இதன்மூலம் வைத்தியசேவைகளின் மீதான அழுத்தங்களைக் குறைக்கலாம். வைத்தியசேவைகள் மீதான அழுத்தம் கைமீறியதால்தான் இத்தாலியில் அதிக மரணங்கள் சம்பவித்தன என்பதையும் கவனிக்கவேண்டும்.
 
மனிதர்கள் அடிப்படையில் சமூக விலகலுக்கு பழக்கமற்றவர்கள். எனவே ஒருவரை ஒருவர் சந்திக்காமல் வீடுகளுக்குள் முடங்கியிருப்பதை பல வாரங்களுக்கு தாங்கிக்கொள்வார்களா என்பது தெரியவில்லை. அத்துடன் முடங்கியிருப்பது பொருளாதாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தி, தனிப்பட்டவர்களின் வாழ்விலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தலாம்.  
 
ஆயினும் தடுப்பூசி மூலம் கொரோனாவிற்கு தீர்வு வர பல மாதங்கள் எடுக்கும் என்பதால், அதுவரை சமூக விலகல், சுய தனிமைப்படுத்தல்,  நன்றாக கைகளை சுத்தம் செய்வது போன்றவையே கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழிகளாக உள்ளன.
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.