Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பழனி மலை பூக்காரி | சிறுகதை | பொன் குலேந்திரன்.

download.png

ஆறு படைகளில் மூன்றாம் படைவீடான பழனி மலையை கிரிவலம் வந்த பின்பு, 450 மீட்டர் உயரம் உள்ள மலையை 690 படிகள் எறி பக்தர்கள் கடந்து வர வேண்டும். நடந்து மலையை ஏற முடியாதவர்களுக்கு மலைக்கு மேல் செல்வதற்கு ரோப் கார் வசதியும் இருக்கிறது.

அந்த மலையில் பல பூக்கடைகள் இருந்தாலும் பூக்காரி வள்ளியம்மையிடம் பூ வாங்க வரும் பக்தர்கள் அனேகர். அதுக்கு பல காரணங்கள் இருந்தன. அவைகளில் முக்கியம் அவளின்முத்து சிரிப்பழகு. இரண்டாவது தேன் சொட்டும் பேச்சழகு. மூன்றாவது   கண் சிமிட்டும் போது அவளின் பார்வையின் அழகு, நான்காவது அவளின் இடையழகு, ஐந்தாவது அவள் மாலை கட்டும்  அவளின்   விரல்களின் அசைவின்  அழகு.

ஆறாவது அவளின் நீண்ட கருங் கூந்தல் அழகு. முருகனின் ஆறு படைகளும் அவளுக்குள் அடங்கி   இருக்கிறது என்று அவளிடம் பூ மாலை வாங்கும் பக்தர்கள் சொல்வார்கள்.

வள்ளிக்கு வயசு பதினெட்டு இருக்கும். அவள் கையால் மலர் மாலை, தேங்காய் பழம் வாங்கும் போது அதுக்கு தனி சக்தி உண்டு என்று பக்தர்கள் பேசிக் கொண்டனர். அவளிடம் மாலை மற்றும் பொருட்கள்  வாங்கும் போது பேரம் பேசாமல்  அவள் சொன்ன விலைக்கு வாங்கி படிக்கட்டுகள் ஏறி முருகனுக்கு அர்ப்பணித்து  பூசை செய்தால், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின்  நம்பிக்கை.

அவ்வளவுக்கு வள்ளியின் முகத்தில் ஒரு பிரகாசம் அவர்களுக்கு தெரிந்தது. இவ்வளவு பேரழகியாக  இருந்தும்  இவள் ஏன் பூ  மாலை  கட்டி விற்று கஷ்டப்படவேண்டும்,  சினிமாவில்  நடிக்கலாமே என்று பலர் விமர்சித்தனர். அவளின் அழகுக்கு கூந்தலில் மல்லிகை பூ மாலை எவ்வளவு அழகாக இருக்கும், அவள் ஒரு நாளும் பூ மாலை கூந்தலில் வைப்பதில்லை. ஏன் என்பது பலருக்கு புரியாத புதிர்.

அந்த காரணத்தை அவளிடம் கேட்க வாலிபர்கள் பயந்தனர்.   அவளை சீண்டப் போய், மனதை சுடும் கடும் வார்த்தைகள் அவளிடம் இருந்து அவர்களை தாக்கின. வள்ளியம்மா பிறந்தது பழனிக்கு அருகில் உள்ள புளிய மரங்கள் அதிகம் உள்ள புளியம் பட்டி கிராமம்.

வள்ளியின் தாய் ராஜம்மாவும் பூ வியாபாரம் செய்து வந்தவள். தாயிடம் மாலை கட்டும் கலையை வள்ளி கற்றவள். ராஜம்மா ஒரு விதவை. அவளின் ஒரே மகள் தான் வள்ளியம்மை. அவளின் தந்தை முத்து தனியார் பேரூந்து ஓட்டுனகராக இருந்தவன். குடிகாரன், அதனல் ஒரு நாள் அவன் ஓட்டிய பேரூந்து விபத்துக்கு உள்ளாகி இறந்தான்.

தனக்கு ஒரு அழகிய மகள் பிறப்பாள் என ராஜம்மா கனவிலும் நினைக்கவில்லை. ஒரு சமயம் நாடகக் குழு ஓன்று வள்ளியை நாடகத்தில் நடிக்க விடும்படி கேட்ட போது ராஜம்மா மறுத்து விட்டாள். வள்ளியை ஒரு படித்தவனுக்கும் அதுவும் கை நிறைய சம்பளம் எடுக்கும் ஒருவனுக்கு திருமணம் செய்து வைப்பதே ராஜம்மாவின் திட்டம்.

அவளது தூரத்து சொந்தக்காரப் பையன் மயூரன்   என்பவன் மெச்கானிக்காக துபாயில் வேலை செய்வதை அவள் அறிவாள்.  மயூரன் வள்ளியுடன் ஒரே பாடசாலையில் படித்தவன்.  சிறு வயதில் இருவரும் ஒன்றாக விளையாடியவர்கள்.    அவனை வள்ளிக்கு முடித்து வைக்க ராஜம்மா திட்டம் போட்ருந்தாள். ஆனால்  விதி வள்ளியை சோதித்து விட்டது.

****

அந்த எதிர் பாராத சந்திப்பு நடந்த போது வள்ளிக்கு வயசு   பதுனெட்டு கூட ஆகவில்லை. ஆனால் வள்ளிபன்னிரெண்டில் ருதுவாகிவிட்டாள். புருஷனை இழந்த இராஜம்மாவுக்கு உதவிக்கு இனத்தவர் ஒருவரும் முன் வரவில்லை. மகளை எப்போதும் தன் பாதுகாப்பில் வைத்திருந்தாள். பூ விற்கப் போகும்போது வள்ளியும் அவள் கூடவே போவாள்.

வள்ளி ஒரு நாள் அவள் ஆற்றில் குளிக்கப் போன போது ஆற்றுக்கருகில் உள்ள தன் வயலில் வேலை சரியாக நடக்கிறதா என்று பார்க்க வந்த பண்ணையார் மதனராஜனின்    பார்வையில் வள்ளி விழுந்தாள். இவ்வளவு காலமும் தன் கிராமத்தில் இப்படி ஒரு அழகிய சிட்டு இருக்கிறது என்று தனக்குத் தெரியாதே என்று தன் கணக்குப்பிள்ளைக் கந்தசாமிக்கு சொன்னார்.

பல வருடங்கள் கந்தசாமி பண்ணையாரிடம்   வேலை செய்பவர் அதனால் அவருக்குத்   தெரியும் தன் முதலாளிக்கு   வயது அறுபதுக்கு மேலாகியும் பெண் ஆசை விட்டுப் போகவில்லை என்று. ஏற்கனவே அவர் இருமுறை திருமாணமாகி முதல் மனைவி அவரின் பாலியல் துண்புறுத்தளுக்கு ஆளாகி மூன்று வருடங்களில்  இறந்துவிட்டள்.  தன் மகன் தன்னை கேள்விகள் கேட்க  தொடங்கியதால் அவனை வீட்டை விட்டு  துரத்தி விட்டார்.

அதன் பின் முதல் மனைவியின் தங்கையை மணந்தார். அவளும் வீட்டு தோட்டக்காரனோடு அவருக்குத் தெரியாமல்   ஓடிப் போய் விட்டாள். தன் ஆசையை பூர்த்தி செய்ய ஒரு பெண்ணை தேடித் திரியும் போது தான் வள்ளியின் சந்திப்பு அவருக்கு கிடைத்தது விடுவாரா அந்த பருவமடைந்த அழகிய மலரை. பெண் ஆசை விட்டு போகவில்லை. எவ்வளவு பணம்  வேண்டுமானாலும் தருகிறேன்  உன் மகளை எனக்கு மனைவியாக   தா என்று ராஜம்மாவிடம் பெண் கேட்டார். அவளும் கணவனை   இழந்து   கடனாகியாக  இருந்த நேரம்.

தன் மகளை அவருக்கு தர முடியாது என்று அவளால் சொல்ல முடியவில்லை. வள்ளியை கிழவனுக்கு திருமணம் செய்து வைத்தாள். அறியாத வயதுள்ள வள்ளிக்கு தான் விலை போனது தெரியவில்லை. திருமணம் இரகசியமாக நடந்தது.  ஆண்மை வீரியத்தை கூட்டும்  சித்த மருத்துவ  லேகியம் அருந்தும் பழக்கம் மதனராஜனிடம் இருந்தது. அவர் அதை பெண்களுடன் புணரமுன் எடுப்பது வழக்கம்.

அன்று பண்ணையாருக்கு வள்ளியுடன் முதல் இரவு. அதுவே அவருக்கு கடைசி இரவும் கூட என்பது அவருக்கு தெரியவில்லை.    தாய்  கொடுத்து அனுப்பிய  பழத்தோடு மிரண்ட மான் போல் செய்வது என்ன என்று தெரியாது அறைக்குள் வந்த வள்ளியை அளவற்ற ஆசைகளுடன் இறுக கட்டிப் பிடித்து அவள் உதட்டில்  முத்தமிட  மதனராஜன்  முயன்ற  போது  திடீர்  என்று நெஞ்சு   வலி அவரை  பீடித்து கொன்டது “ஐயோ வள்ளி என் நெஞ்சு   வலிக்குதே   ஏதாவது குடிக்கத்  தா  என்று கதறிய படி அவளிடம் பால் வாங்கி குடிக்க முன்  கட்டிலில் அவர் சாய்ந்தார்.

கண்கள் மேலே சுருண்டன. அவரின் உடல் படிப்படியாக செயல் இழந்தது. உயிர் பிரிந்தது. வள்ளி செய்வது அறியாது பயத்தில் கதறி அழுதபடி கதவை திறந்து உதவிக்கு அழைத்தாள். ராஜம்மாவும் கணக்குபிள்ளையும்  அறைக்குள்  வந்தும்  அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ராஜம்மா மருமகனின் கைநாடியை பிடித்து பார்த்து பண்ணையார் எங்களை விட்டு போயிட்டாரடி என்று கதறி  அழுதாள். வள்ளியும் தாய் அழுவதை பார்த்து அழுதாள். பாலும்    பழமும் தரையில் சிந்தி கிடந்தன. ராஜம்மா மகள் இந்த சிறு வயதில் விதவையாயிட்டாள் என்று நினைத்து அழுதாளா

அல்லது மருமகன் பிரிந்ததையிட்டு  அழுதாளா என்பது கணபதிக்கு   புரியவில்லை.

மரண சடங்கு முடிந்த பின் ராஜம்மாவுக்கு தெரிய வந்தது பண்ணையார் மதனராஜன்    வள்ளிக்கு ஒன்றும் எழுதி வைக்க வில்லை என்று. ஆக ராஜம்மாவின் கடனை தீர்க்கவும் அவள் வாழ்ந்த குடிசையை அடைவில்  இருந்து  மீட்க  வள்ளியை திருமணம் செய்ய முன்  செய்த உதவி மட்டுமே. அவர் தன் சொத்தையும் எல்லாம் முதல் மனைவிக்கு பிறந்து தான் ஊரை விட்டு துரத்தி விட்ட மகன் பெயருக்கும் கோவிலுக்கும் கொஞ்ச பணம் கந்தசாமிக்கும் எழுதி வைத்திருந்தார்.

அதனால் பாவம் அவர் தொட்டு தாலி கட்டிய வள்ளிக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.  ஆக அவளுக்கு கிடைத்தது விதவை என்று  ஊர் கொடுத்த பட்டம்  மட்டுமே.  அன்று முதல் அவள்  கூந்தலுக்கு மாலை  அணிவதில்லை. அனேகமாக  வெள்ளை  சீலை அணிவாள்.  கைகளில் வளையல்கள் இல்லை, காதில் தோடு இல்லை இறைவன் கொடுத்த அழகு மட்டுமே அவளை அலங்கரித்தது. தனக்கு நேர்ந்த நிலையை இட்டு தினமும் வள்ளி மனதுக்குள் பொறுமிக் கொண்டாள். சிறு வயதில் தன்னோடு ஒடி விளையாடி  தனக்கு பிடித்த தன் உறவினன்  மயூரனை மனதில்  நினைத்து கண்ணீர் விடுவாள்.

மகளுக்கு நடந்ததுக்கு தான் காரணம் என கவலை பட்டு   ராஜம்மாளின்  மன நிலை  பாதிக்கப்பட்டது. பூ வியாபரத்துக்கு அவள் போவதை நிறுத்தினாள். பூ மாலை கட்டி கோவிலில் பக்தர்களுக்கு பூ  மாலை விற்கும் தொழிலை வள்ளி செய்தாள்.

****

வள்ளி விதவையாகி  சில வருடங்கள்  சென்றன.  அவள் வாழ்வில் நடந்தது அவளுக்கு கனவு போல் இருந்தது. ராஜம்மா இறந்ததால் பூக்காரி வள்ளி தனித்துப் போனாள். அதிர்ஷ்டம் கெட்டவள, விதவை, முழிவியளத்துக்கு  உதவாதவள் என்ற பட்டங்கள் வள்ளி  மனதை ஈட்டி போல்  தைத்தன. தினமும் பழனி முருகனிடம் தனக்கு ஒரு   வழி காட்டும் படி   வேண்டுவாள்.

அன்று தை பூசத் திருவிழா. பழனியில் தைப்பூசத் திருவிழா. கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பழனி முருகன் கோயிலில் வருடந்தோறும் தைப்பூசத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் தைப்பூச திருவிழா நடந்தது. இந்த தைப்பூசத் திருவிழாவின் போது பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம்.

அதனாலேயே தமிழகத்தில் உள்ள காரைக்குடி தேவகோட்டை, வேலூர், திருச்சி, மதுரை, தேனி, பெரியகுளம், திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, திண்டுக்கல் உள்பட தமிழகத்திலிருந்து பல மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்கள்.

இப்படி வரக்கூடிய பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, மலர் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்து ஆடிப்பாடி பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கும் அந்த திருவிழாவன்று வள்ளிக்கு எதிர்பாராத அளவுக்கு  வியாபாரம்.

“எனக்கு ஒவ்வோன்றிலும் பத்து கஜம் செவ்வந்தி பூமாலையும் மதுரை மல்லி பூமாலையும் தர முடியுமா”  ஒரு ஆண் குரல் கேட்டது.  குனிந்து வேலை செய்து கொண்டிருந்த வள்ளியின் காதுகளில் அக் குரல் விழுந்தது. இந்த இரு பூக்களும் அதுவும் மதுரை மல்லி தனக்கு தெரிந்த ஒருவருக்கு மட்டுமே பிடிக்கும். இது எனக்கு தெரிந்த குரல் ஆயிற்றே என்று தலை நிமிர்ந்து பார்த்தாள்.  அவள் கண்களால் நம்ப முடியவில்லை.

வள்ளி பல காலம் மனதுக்குள் நேசித்த  மயூரன் வெறும் மேலுடனும்  தங்கக் கரை பதித்த  பட்டு  வேஷ்டியுடன்  அவள் முன் நின்றான். அவன் தோற்றம் மாறவில்லை. அவன் அருகே ஓரு பிற நாட்டு மனிதர் ஒருவர் வேஷ்டியுடன் நின்றார்.

“மயூரன் நீயா என்னால் நம்ப முடியவில்லை. உன்னில் அவ்வளவு மாற்றமில்லை. உன் அருகில் நிற்கும் இவர் யார்?”

“வள்ளி சாட்சாத் உன் பள்ளிக்கால நண்பன் மயூ தான் நான். என்னை கவர்ந்த அதே உன் பார்வையில் மாற்றமில்லை வள்ளி. இவர் சாம். என்னுடன் அமெரிக்க ஜிஎம் மோட்டர்  கொம்பனியில்  வேலை  செய்யும் என்ஜனியர். இவரால் தான் நான் அமெரிக்காவில் வேலை கிடைத்து துபாயில் இருந்து  புலம் பெயர முடிந்தது. பக்கத்தில் நின்ற அமெரிக்கனை  பார்த்து, “இவள் என் ஸ்கூல் டைம் கேர்ள் பிரண்ட் வள்ளி” என்றான்  மயூரன்.

“அப்படியா.  உன்   கேர்ள் பிரண்ட் நல்ல வடிவு” என்றான் அமெரிக்க தமிழ் உச்சரிப்பில் சாம்.

“கேட்டாயா வள்ளி அவர்  சொன்னதை  நீ இன்னும் இந்த ஊர் அழகி” என்றான் மயூரன்

வள்ளியின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.

மயூரன் அதை எதிர்பார்க்கவில்லை

“ஏன் அழுகிறாய் வள்ளி என்ன நடந்தது உனக்கு”

மயூ நான் இப்போ ஒரு விதவை. காலம் என்னை ஏமாற்றி விட்டது.

“உனக்கு நடந்ததை சொல் வள்ளி”

தான் விதவையான முழுக் கதையும் வள்ளி சொன்னாள்

“இட் இஸ் எ பிட்டி” என்றான்  சாம்

மயூரன் சில வினாடிகள் சிந்தித்த பின் அவன் கேட்ட மதுரை மல்லி மாலையை  எடுத்து வள்ளியின் கூந்தலில்  சூடினான்.

“சரியான முடிவு மயூ”   என்றான் சாம்.

பழனி முருகன் கோவில் மணி ஓசை கேட்டது.

( யாவும் புனைவு)

– பொன் குலேந்திரன் (கனடா).

http://www.vanakkamlondon.com/palanimalai-pookkaari-pon-kulendiren-04-25-20/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழனிமலை முருகன் என்ற படியால்  வள்ளி அமேரிக்கா போனால் என்ன அவுஸ்ரேலியா போனால் என்ன பரவாயில்லை....திருச்செந்தூராய் இருந்தால் மயூரனை மயூரமே வந்து கொத்தி இருக்கும்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

பழனிமலை முருகன் என்ற படியால்  வள்ளி அமேரிக்கா போனால் என்ன அவுஸ்ரேலியா போனால் என்ன பரவாயில்லை....திருச்செந்தூராய் இருந்தால் மயூரனை மயூரமே வந்து கொத்தி இருக்கும்.....!   😁

எழுத்து நடை ஈழத்து எழுத்தாளர் போல இருக்கு தோழர்.. முயற்சிக்கு வாழ்த்துவம்..👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.