Jump to content

ஈழத்தில் கலைச்சொல்லாக்க மரபு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் கலைச்சொல்லாக்க மரபு

-      கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -

 

அறிமுகம்

“இலங்கையை அறிவியல் தமிழின் தாயகம் எனலாம்” (இராம சுந்தரம்., 1996:112), “விஞ்ஞானத்துறையிலும் அகராதித்துறையிலும் ஈழநாடே தமிழ்நாட்டுக்கு வழிகாட்டியாய் நின்றது”(கணபதிப்பிள்ளை, க., 1996:125)என்றெல்லாம் அறிஞர் கூறும் கூற்றுகள், அறிவியல் தமிழ் வளர்ச்சியில் இலங்கையின் முதன்மைமிக்க பங்களிப்பைச் சுட்டுகின்றன. ‘அறிவியல் தமிழ் வளர்ச்சிக்குரிய முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டதோடு, அவற்றுக்கான அடிப்படைக் கொள்கைகளையும் வகுத்துக்கொடுத்தவர்கள் ஈழத்தவர்களே’ என்பது தமிழ் உலகு ஒப்ப முடிந்த முடிபாகும். ‘ஈழத்தில் கலைச்சொல்லாக்க மரபு’ என்னும் பொருள் பற்றி வரலாற்றுநிலை நின்று நோக்குபோது, தமிழில் பெருவளமும் மிக்க வலுவுமுடைய கலைச்சொல்லாக்க மரபின் தொட்டிலாக ஈழத்தினைச் சுட்டமுடியும். தமிழின் இன்றைய அறிவியல் நிலைப்பாட்டிற்கு ஈழத்தறிஞர் வழங்கிய நன்கொடைகள் ஏராளம். அவற்றுள் முதன்மையானதாகக் கலைச்சொல்லாக்க முயற்சிகளைக் குறிப்பிடலாம். காலனிய காலத்திலிருந்து இன்றுவரை பல்வேறு அறிவியல்துறைகள் சார்ந்தும் ஈழத்தவர்கள் கலைச்சொல்லாக்கச் செயற்பாட்டில் முனைப்புடன் ஈடுபட்டுவருகின்றனர். தனிமனிதச் செயற்பாடு, குழுநிலைச் செயற்பாடு போன்ற அடிப்படையிலும், துறைவாரியான நிலையிலும், நிறுவனங்களின் பங்களிப்பு என்ற வகையிலும், காலகட்ட அடிப்படையிலும் ஈழத்தின் கலைச்சொல்லாக்க மரபு தொடர்பாக விரிவாக ஆராய்வதற்கு இடமுளது. இத்துறைசார்ந்து வரலாற்றுநிலைப்பட்ட ஒரு முன்னோடி முயற்சி என்ற நிலையில், ‘ஈழத்தில் கலைச்சொல்லாக்க மரபு’ பற்றிய ஒரு அறிமுக முன்வரைபாகவே இக்கட்டுரை அமைகிறது. காலனிகால ஈழத்திலும் சுதந்திர இலங்கையிலும் நிறுவன ரீதியான கலைச்சொல்லாக்க முயற்சிகளில் கரிசனைகொள்ளும் இந்த ஆய்வு, காலனிய காலத்தில் கிறீனும் அவரது மருத்துவ மாணவர் குழுவும் நிறுவனநிலைப்பட்டு மேற்கொண்ட கலைச்சொல்லாக்க முயற்சிகளையும் சுதந்திர இலங்கையில் அரச கரும மொழித்திணைக்களத்தின் கலைச்சொல்லாக்க முயற்சிகளையும் அதிகம் கவனத்திற்கொள்கிறது. காலனியகால ஈழத்தில் அறிவியல் நோக்கின் அடிப்படையிலான நூல்களும் கலைக்களஞ்சியங்களும் அகராதிகளும் கிறிஸ்தவ மிஷனரிமாரினால் எவ்வாறு உருவாக்கப்பட்டன, அவர்கள் பின்பற்றிய கலைச்சொல்லாக்க நெறிமுறைகள் எவ்வகையில் அமைந்தன, சுதந்திர இலங்கையில் அரச கரும மொழித்திணைக்களம் மேற்கொண்ட அறிவியல் தமிழ் முயற்சிகள் தமிழ்மொழி வரலாற்றில் எத்தகைய முக்கியத்துவத்தினைக் கொண்டவை, அறிவியல் தமிழ் வளர்ச்சியில் அவை எத்தகைய சாதனைகளை நிகழ்த்தின, அவற்றிற்கு அடிப்படையான கலைச்சொல்லாக்கக் கொள்கை, நெறிமுறைகள் எவ்வகையில் அமைந்தன, நவீன தமிழ்ச் சமூகத்தை நவீன அறிவியல் தமிழ் மொழியின் சமூகமாகக் கட்டமைப்பதில் எவ்வாறு அவை வினையாற்றின போன்ற முக்கியமான புலமைசார் வினாக்களை இந்த அறிமுக ஆய்வு வரித்துக்கொள்கிறது.

 

கலைச்சொல் – கலைச்சொற் களஞ்சியம்

“ஒரு துறையில் உள்ள கருத்துக்களை அல்லது கருத்துத் தொகுப்புக்களைக் குறிக்கப் பயன்படுத்தும் (பொதுப் பொருளில் வழங்காத) அந்தத் துறைக்கே உரிய சொல்” (2008:370-371) எனக் ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ குறிப்பிடுகின்றது. “கலைச்சொல் அல்லது துறைச்சொல் என்பது ஓர் அறிவுத்துறை ஆராய்ச்சியின்போதும் அத்துறைக் கல்வியின்போதும் பயன்படுத்த என ஏற்றுக்கொள்ளப்படும் சிறப்புக் கருத்துக்களை நுட்பமாக வரையறுத்து எடுத்துரைக்கப் பயன்படுத்தும் சொல்லாகும்” (2002:110) என இலங்கை அறிஞர் இ.முருகையன் குறிப்பிடுவார்.

 

ஆங்கிலத்தில் Technical Terms எனக் குறிக்கப்படும் ‘கலைச் சொற்கள்’ அகரவரிசையில் இடம்பெற்று, தொகுதியாக அமையின், ‘கலைசொற் களஞ்சியம்’ (Glossary) எனப் பெயர்பெறும். கலைச்சொற் களஞ்சியத்தைக் ‘கலைச்சொற்றொகுதிகள்’ எனவும் வழங்குவர். மொழியொன்றில் கல்வி, ஆய்வு, பிரயோகம் முதலாய காரணங்களாலும் அவற்றினையொட்டிய தேவைகளாலும் கலைச்சொற்களும் அவை அமைந்த கலைசொற் களஞ்சியங்களும் தோற்றம்பெறுகின்றன. வழக்கிலிருக்கும் சொற்களை அகராதி உள்ளடக்குகிறது எனின், வழக்கில் நிலவவேண்டிய சொற்கள் உருவாக்கம்பெற்று உள்ளடக்கப்பட்டிருப்பது கலைச்சொற் களஞ்சியமாகும். உருவாக்கப்படும் தன்மையுடைய கலைச்சொல், மூலமொழியில் உள்ள பதத்திற்கு நிகராக, பெயர்ப்பு மொழியில் அல்லது இலக்கு மொழியில் தேர்வுசெய்யப்பெற்ற குறித்த பதத்தைப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கும் தன்மை பெற்றது. அகராதி உருவாக்க முயற்சிகளுக்குக் கலைச்சொற் களஞ்சியங்களும் பெருந்துணைபுரிகின்றன.

 

மேனாட்டார் வருகையின் பின்னர் உருவான ஆங்கிலமொழிவழிக் கல்வியும் அதன் பேறாகிய புதிய அறிவியல்துறைகளின் அறிமுகங்களும், தமிழில் அறிவியல் கலைச்சொல்லாக்க முயற்சிகள் நடைபெறவும், அறிவியல் கலைச்சொற் களஞ்சியங்கள் தோற்றம்பெறவும் வழிவகுத்தன.

 

காலனியகால ஈழத்தில் கலைச்சொற் களஞ்சிய முயற்சிகள்

“அறிவுத்தேடல் முயற்சி எக்காரணம் பற்றியேனும் வேற்று மொழியைக் கருவியாகக் கொள்ளும்போது, குறித்த மக்கட் கூட்டத்தினரின் தாய் மொழியிலே கலைச்சொல் ஆக்கம் தேக்கம் அடைகிறது.” (2000:111) “வேற்று நாட்டாரின் ஆட்சி மேலோங்கியிருந்த குடியேற்ற ஆதிக்க காலத்திலே – அதாவது கொலனி ஆதிக்கக் கட்டத்திலே – வேற்றவரின் மொழிகள் ஆட்சியுரிமை பெறுவதும் கல்வி மொழியாவதும் வரலாற்று நிகழ்வுகளாய் இருந்து வந்துள்ளன. இந்த வகையிலேதான், தமிழ்மொழியிலும் இயல்பான கலைச்சொல்லாக்க முயற்சிகள் இடம்பெறாது தடைப்பட்டன. ஆட்சிமொழியாகிய ஆங்கிலத்தையே நெடுங்காலமாகத் தமிழ் மக்கள் தமது கல்விமொழியாக வைத்திருக்கவேண்டியோர் ஆயினர். இதனால் அறிவியல், தொழில்நுட்பம், சமூக விஞ்ஞானங்கள், மெய்யியல் முதலான துறைகளில் நிகழ்கால வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கக்கூடிய அளவிலே மொழியின் சொல்வளம் செம்மையாகப் பெருகவில்லை”(2000:111-112) என்றெல்லாம் கூறுவார், இ.முருகையன்.

 

முருகையனின் மேற்குறித்த கூற்றுக்களை ஒத்த கூற்றுக்களை மொழியியல் அறிஞர் பலரும் முன்வைத்துள்ளனர். இவர்களது கூற்றுக்கள் அரசியலரங்கில் பொருந்துமேயெனினும், மொழி பற்றிய அறிவியல்சார் நோக்கிற்கு உகந்தவையல்ல. சமூகம் ஒன்றில் நவீன அறிவியல் சிந்தனைகளும் அவற்றை வெளிப்படுத்தும் சொற்களும் காலநியதியின் பிரகாரம் நிகழாவிடின், அச்சமூகத்தின் மொழியும் நவீனத் தன்மை பெறாது என்பதே அறிவியலுக்கு உகந்தது. மொழியொன்றில், மாற்றமும் புதுமையும் தேவைக்கேற்ப நிகழாவிடின் மொழியானது வளர்ச்சி குன்றும். எனவே, முன்னர் குறிக்கப்பெற்ற கூற்றுக்கள் மொழித் தூய்மைவாதம், இலக்கணத்தூய்மை வாதம் முதலியவற்றின் தவிர்க்கவியலாத பாதிப்பினால் அறிஞரிடமும் எழுந்தவை எனத் துணியலாம். இன்னும், நவீன மொழியியல் அறிஞர்களின் மொழிசார் சிந்தனையைக்கூட எதிர்மறையாகப் பாதிக்குமளவில், காலத்திற்கொவ்வாத அத்தகைய வாதங்களின் வலிமை இருப்பதையும் அறிந்துகொள்ள முடியும். ஆனால், வரலாற்றுநிலைநின்று நோக்கும்போது உண்மை வேறாக இருக்கிறது.

 

பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்தில், கிறிஸ்தவக் காலனியத்தை நிலைநிறுத்த, தமது கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதை நோக்கமாக வரித்து, இலங்கைக்கு வருகைதந்த அமெரிக்க மிஷனரிமார் பலரும், யாழ்ப்பாணத்தைத் தமது வலுவுள்ள இருப்பிடமாகக் கொண்டனர். அவர்கள், வட்டுக்கோட்டை எனும் ஊரில் மாணவர்களுக்குப் பல்கலைக்கழகக் கல்வியைப் போதிக்கவென உருவாக்கிய யாழ்ப்பாணக் கல்லூரி(1827), ஆசியாவிலேயே நவீன கல்வியின் முக்கியமான கேந்திரநிலையமாக விளங்கியது. குறிப்பாக யாழ்ப்பாணத்திலும், பொதுவாக இலங்கையின் பிறபகுதிகளிலும், மிஷனரிமார் தமது கல்லூரிகளை நிறுவிக் கல்வி விருத்திக்கு உழைத்தனர். பழந்தமிழ்க் கல்வியில் புலமைபெற்ற புலமையாளர்களும் ஆங்கிலப் புலமைபெற்ற மேனாட்டவரும் அக்கல்லூரிகளில் கற்பித்தனர். மிஷனரிக் கல்லூரிகளின் தலைமைப் பீடமெனும் நிலையில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி விளங்கியது.1

 

“ஆங்கிலக் கல்வியையும் தமிழ்க் கல்வியையும் இக்கல்விநிலையத்தில் உயர்ந்த முறையில் மாணவர்களுக்குக் கற்பித்து வந்தனர். இதன் நோக்கம் என்னவெனில், நன்றாக ஆங்கிலம் பயின்ற மாணவர் தமிழிலும் பாண்டித்தியம் பெறுவாராகில், ஆங்கிலத்தில் இருக்கும்  வேதிநூல், பூத நூல், விலங்கியல் நூல், வான நூல், கணிதம் முதலியவற்றைத் தமிழில் நூலியற்றியோ, மொழிபெயர்த்தோ அச்சாத்திரங்களின் அறிவைத் தம் நாட்டவருக்குள் பெருக்குவர் என்று எண்ணியே. இக்கருத்தை மனதில் வைத்துக்கொண்டு, விஞ்ஞான சாத்திரங்களைத் தமிழில் எழுதும் பணியில் மிஷனறிமாரும் இச்செமினெறியில் கற்றுத்தேர்ந்த மாணவரும் இறங்கினர்.” (கணபதிப்பிள்ளை, க. 1996:116)

 

தமிழின் கலைச்சொல்லாக்க முன்னோடி கிறீன்

மேற்குறித்த பின்னணியில்தான், இலங்கையில் அறிவியல் தமிழ் முயற்சிகள் ஆரம்பமாகின. இம் முயற்சிகளின் முன்னோடி அறிஞராக விளங்குபவர், டாக்டர் சாமுவேல் பிஷ் கிறீன் (Dr. Samuel Fisk Green) இவரே தமிழின் கலைச்சொல்லாக்க முன்னோடி என்பது ஆய்வாளர் பலரும் ஒப்ப முடிந்த முடிபு. மருத்துவக் கல்வியை ஆங்கில மொழிவழி தமது மாணவருக்குப் போதித்த கிறீன், ‘தமிழில் போதித்தால் பாடப் பொருள் மேலும் இலகுவாக அவர்களுக்குப் புரியும்’ என்று எண்ணியதன் விளைவே, தமிழில் விஞ்ஞான நூல்களின் தோற்றத்திற்கும் அறிவியல் கலைச்சொல்லாக்க முயற்சிகளுக்கும் அறிவியல்துறைசார் அகராதியாக்க முயற்சிகளுக்கும் வித்திட்டது.

 

கிறீனும் அவரது மாணவர்களும் அவர்களோடு இணைந்து செயற்பட்ட அறிஞர்களும் மேற்குறித்த முயற்சியில் அயராது ஈடுபட்டனர். இவர்களது முயற்சியின் முதன்மை நோக்கம் அறிவியல்துறைசார் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தலாக அமைந்தது.

 

 

இந்த நோக்கத்தின் விளைவாக, இரண வைத்தியம்  - Drultt’s Surgery(1867), அங்காதிபாதம் - Gray’s Anatomy(1872), வைத்தியாகாரம் - Hopper’s Physicians Vedemecum(1872), கெமிஸ்தம் - Well’s Chemistry (1875), மனுஷசுகரணம் - Dalton’s Physiology(1883), இந்து பதார்த்தசாரம் - Warring’s Pharmacopoela of India(1884), வீசகணிதம் – Algebra(1885) முதலாய பல அறிவியல் நூல்கள் தமிழில் வெளியாகின. நூல்மொழிபெயர்ப்புப் பணியுடன் தொடர்புபட்டதாக இவர்களது அகராதி, கலைச்சொல் உருவாக்கப் பணிகள் அமைந்தன.2

 

“தமிழ் மக்களின் பழைய முறையில் நிகண்டு நெட்டுருப் பண்ணித் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளுதல் இயன்றதல்லவென எண்ணினர். ஐரோப்பிய முறையில் தமிழ் மொழிக்கு அகராதி ஒன்றினை ஆக்கினாற் பெரும் பயனைத் தரும் என நினைத்தனர்.” (கணபதிப்பிள்ளை,க.,1996:120)

 

மேற்குறித்த எண்ணத்தின் விளைவாகப் பல அகராதிகள் உருவாகின. ‘யாழ்ப்பாண அகராதி’ முதலாய பல அகராதிகள் இவ்வகையில் உருவாகின. இவ்வாறு வெளியாகிய பல அகராதிகளில் வானநூல், சோதிடநூல், பூதநூல், விலங்கியல்நூல், வேதிநூல், புராணம், தத்துவம், மருத்துவம், அலங்காரம் முதலாய பல்துறைச் சொற்களும் இடம்பெற்றிருந்தன. இவ் அகராதிகளுட் சில தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழி அகராதிகளாயும் அமைந்தன. Materia Medica & Pharmacy, Midwifery, Diseases of Women & Childern, Medical Jurisprudence முதலாய பல நூல்களைக் கிறீன் வெளியிட்டார். இதற்காகக் கலைச்சொல்லாக்கம் பற்றிய நெறிகளை அவர் வகுத்தார் என்பதை மொழியியல் அறிஞர் பின்வருமாறு குறிப்பிடுவர்.

 

“சாமுவேல் பிஷ் கிறீன் வகுத்த கலைச்சொல்லாக்கம் பற்றிய நெறிமுறைகள் அறிவு பூர்வமானவை, இன்றளவும் பயன்பாட்டில் உள்ளவை எனலாம்.

1. தமிழில் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும் - தனிச் சொல்லாகவோ கூட்டுச்சொல்லாகவோ இருக்கலாம்.

2. தமிழில் இல்லாத, இயலாதபோது, வடமொழிச்சொல்லை எடுத்துக் கொள்ளலாம். அப்படி எடுக்கும்போது, அந்தச் சொல்லுக்கான ஆங்கிலப் பொருளை உறுதிசெய்ய, சமஸ்கிருதம் – ஆங்கிலம், ஆங்கிலம் - சமஸ்கிருதம் அகராதிகளைப் பார்க்கவும்.

3. தமிழிலும் சமஸ்கிருதத்திலும் இயலாதபோது, ஆங்கிலச் சொற்களைக் கடன்பெறலாம்.” (இராம சுந்தரம் 1993:113)

 

 

 

கிறீனதும் அவரைச் சார்ந்தவர்களினதும் இந்த முயற்சியைப் பின்னாளில் சுவாமி விபுலானந்தரும் வேறு பல அறிஞர்களும் அறிவியல் ரீதியாக முன்னெடுத்திருந்தனர்.

 

உயர்கல்விக்காக மட்டுமன்றி, தொழில்நிலைசார்ந்து உரையாடி, தமது அதிகாரத்தை நிலைநாட்டவும் மேனாட்டார் அகராதிகளை உருவாக்கியதையும் அறியமுடிகிறது. பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்கென, தென்னிந்தியாவிலிருந்து இலங்கையின் மலையகப் பிரதேசங்களிற்கு அழைத்துவரப்பட்ட தமிழர்களை, தொழில்சார் தேவைகளுக்காக அடிமைகொள்ளும் தன்மையிலான தொடர்பாடலைப் பயிலவும் பயன்படுத்தவும் அகராதிகளை உருவாக்கினர். உதாரணமாக, “இங்கே வா” (INGE VA or Sinnadurai’s Pocket Tamil Guide, 1892),  “கூலித் தமிழ்” (Cooly Tamil, 1915) போன்ற முயற்சிகளைக் குறிப்பிடலாம். இது பற்றி மு. நித்தியானந்தன் விரிவாக விளக்கி எழுதியுள்ளார்.3 பேச்சு மொழி உரையாடலுக்கான இத்தகைய அகராதிகள் தமிழுக்குப் புதியவையாக அமைந்தன.

 

இவ்வாறாக, இலங்கை சுதந்திரம் அடையும்வரையான அறிவியல் தமிழின் நிலவரம், பலமானதொரு அடிப்படையை ஈழத்துத் தமிழ் வளர்ச்சியில் இட்டுநின்றது. இத்தகையதொரு பலமான அடிப்படையும் அதுசார் செயற்பாடுகளின் நீட்சியுமாகவே, இலங்கையில் இன்றுவரை வளர்ச்சிபெற்றுநிற்கும் அறிவியல் தமிழ் முயற்சிகளை நோக்கவேண்டும்.

 

சுதந்திர இலங்கையில் கலைச்சொற் களஞ்சிய முயற்சிகள்

சுதந்திர இலங்கையில், மொழி வளர்ச்சியைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக அரசியலமைப்பு விளங்கியது. கல்வி, நீதி, நிர்வாகம் முதலிய தேவைகளுக்காக இருமொழியிலும் மும்மொழியிலும் அமைந்த  துறைசார் கலைச்சொற் களஞ்சியங்களும் பேச்சுமொழி அகராதிகளும் இவைபோன்ற பிறவும் உருவாக்கப்பட்டன.  இலங்கையின் அரசகரும மொழிச் சட்டத்தினையும் அதனை நடைமுறைப்படுத்த உருப்பெற்ற அரசகரும மொழித்திணைக்களத்தினையும் பற்றி அறிந்துகொள்வது, அரசகரும மொழித்திணைக்களத்தின் சொற்றொகுதிகளின் தோற்றத்தினையும் பயன்நிலை முக்கியத்துவத்தையும் அறிவதற்கு வாய்ப்பாக அமையும்.

 

அரசகரும மொழிச் சட்டமும் அரசகரும மொழித்திணைக்களமும்

‘இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு, அத்தியாயம் – IV,    மொழி’ உரிமை தொடர்பானதாக அமைந்துள்ளது. அந்த அத்தியாயத்தில், ‘அரசகருமமொழி’ எனும் உபதலைப்பில் இடம்பெறும் 18ஆவது உறுப்புரையில், “(1) இலங்கையின் அரசகரும மொழி சிங்கள மொழியாதல் வேண்டும் (2) தமிழும் அரச கரும மொழியாதல் வேண்டும் (3) ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டும் (4) பாராளுமன்ற சட்டத்தின் மூலம் இவ்வத்தியாயத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தேசிய மொழிகள்’ எனும் உபதலைப்பில் இடம்பெறும் 19ஆவது உறுப்புரையில், “இலங்கையில் தேசிய மொழிகள் சிங்களமும் தமிழும் ஆதல் வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1987 – 13ஆம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கும், 1988 – 16ஆம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கும் அமைவானதாக இது அமைந்துள்ளது. மேலும் அரசியலமைப்பின் III ஆவது அத்தியாயத்தில் 12(2)ஆவது உறுப்புரையில் மொழி உரிமையானது அடிப்படை உரிமையாகக் காட்டப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இன்றுள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அரசகரும மொழி, தேசியமொழி, பாராளுமன்றத்திலும் உள்ளூரதிகார சபையிலும் தேசிய மொழிகளைப் பயன்படுத்துதல், கல்விமொழி, நிருவாக மொழிகள், சட்டவாக்க மொழி, நீதிமன்றங்களின் மொழிகள் முதலியவற்றுக்கான போதுமான வசதிகளை அரசு ஏற்பாடு செய்தல் வேண்டும் என்பதும் இச் சட்டத்திற்கு முரண்படும் சட்டங்களின் ஏற்புடைமையின்மையும் அரசின் மொழிதொடர்பான உரிமையும் கடமையும்சார் அடிப்படைகளாகின்றன.  பல்பண்பாட்டுச் சூழலில், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் சனநாயகப் பகிர்வில் இடம்பெறுவதற்கும், மொழிநிலையில் திட்டவட்டமான திட்டமிடுகை நடைபெறுவதற்கும், அதன்பேறாக அகராதிகள், கலைக் களஞ்சியங்கள் வெளிவருவதற்கும் அரசியல்நிலைசார் விமர்சனங்கள் பல இருப்பினும் அரசியலமைப்புச் சட்டமே பெருந்துணையாயிற்று எனலாம்.

 

1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரசகரும மொழிகள் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக 1956.10.01 அன்று அரசகரும மொழிகள் திணைக்களம் தாபிக்கப்பட்டது. எனினும், பின்னர் மாற்றம்பெற்ற சட்டமூலங்களையும் கருத்திற்கொண்டு, இத்திணைக்களம் இயங்கியதென்பது அதன் பயன்மிகு செயற்பாடுகளின்வழி அறியமுடிகிறது. இத் திணைக்களமானது அரசாங்க நிர்வாக புத்தசாசன, சனநாயக ஆட்சி அமைச்சின்கீழ் தொழிற்பட்டுவருவதோடு, அரசகரும மொழிகள் ஆணையாளரின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கிவருகின்றது. இலங்கையில் மொழிக் கொள்கையை வினைத்திறன்மிக்கதாக நடைமுறைப்படுத்தும் வசதிகளை வழங்கும் நிறுவனமாக, அரசகரும மொழித்திணைக்களமே செயற்பட்டு வருகிறது.

 

(1)சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளுக்குமுரிய மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்து அரசாங்கத்திற்கு வழங்குதல், (2) அரசாங்க உத்தியோகத்தர்களின் மொழித் தேர்ச்சியை விருத்தி செய்தல், (3) கலைச் சொற்றொகுதிகளைத் தயாரித்தல், (4) மொழி தொடர்பான பாடப் புத்தகங்களையும் அகராதிகளையும் தயாரித்து வெளியிடல் முதலாய பல பணிகள் இத் திணைக்களத்தின் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன.

 

அரசகரும மொழித்திணைக்களச் சொற்றொகுதிகள்

இலங்கை அரச கரும மொழித்திணைக்களம் இதுவரையும் நூற்றுக்கும் மேற்பட்ட சொற்றொகுதிகளை வெளியிட்டுள்ளதாக அறியமுடிகிறது. இப்போதும் இனிவருங்காலத்திலும் பல சொற்றொகுதிகளை வெளியிடுவதற்கான கொள்கைகளை வகுத்தும் செயற்பட்டும் வருகிறது.4அரசகரும மொழித்திணைக்களத்தின் சொற்றொகுதிகள் (1) நிர்வாகத் தேவைகளுக்கான தமிழ், சிங்கள மொழிமூலத் தேவைகளையும் (2) பாடசாலை, பல்கலைக்கழகக் கல்விக்கான பாடவிதானத் தேவைகளையும் (3) தொழில்நிலைத் தேவைகளையும் பூர்த்திசெய்யும்வகையில் அமைந்தன. இக் கலைச்சொற்களஞ்சியங்கள் தமிழில் “சொற்றொகுதி” எனவும் ஆங்கிலத்தில் “Glossary” எனவும் குறிக்கப்பட்டு வெளியாகின. உதாரணமாக, “விலங்கு வேளாண்மை - சொற்றொகுதி (ஆங்கிலம் - தமிழ்)” எனத் தமிழிலும், “Glossary of Technical Terms in ANIMAL HUSBANDRY (English -Tamil)” என ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டு வெளியாகியதைக் குறிப்பிடலாம்.

 

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் கல்வி, உயர்கல்வி, நீதி பரிபாலனம், நிர்வாகம் முதலியவற்றுக்கான பலமானதும் வளம் மிக்கதுமான மொழித் தளத்தினை அமைப்பதில் இச் சொற்றொகுதிகள் பெரும் பங்காற்றின. உயர்கல்விவரையான அறிவியற் கல்வியைத் தாய் மொழியில் தொடரவும் கருமமாற்றவும் இத்தொகுதிகள் பயன்படலாயின.

 

அரசாங்கம் வெளியிட்ட பாடசாலைப் பாடநூல்கள் பலவற்றில், மாணவர்கள் புரிந்துகொள்வதற்காக, பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்பெற்ற ‘கலைச்சொற்கள்’ எனும் பகுதி, அரச கரும மொழித்திணைக்களம் வெளியிட்ட இத்தகைய சொற்றொகுதிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட கலைச்சொற்களைக் கொண்டு அமைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

கணிதவியல், இனவியல், விஞ்ஞானவியல், தொழிநுட்பவியல், இரசாயனவியல், பிறப்புரிமையியல், தாவரவியல், விலங்கியல், உலோகவேலையியல்,  பயிர்ச்செய்கை, பற்றீரியவியல், பொது உடநலவியல், மனையியல், விலங்கு வேளாண்மையியல், மின்னெந்திரவியல், மருந்தியல், ஒட்டுண்ணியியல், நோயியல், உடற்றொழிலியல், இராசயன எந்திரவியல், உடலமைப்பியல், தகவல் தொழில்நுட்பவியல், உயிரியல், குடிமையியல், மோட்டார் பொறிமுறையியல், நெய்தலியல், மரவேலையியல், சித்திரவியல், விலங்குவளர்ப்பியல், சமூகவியல், புள்ளிவிபரவியல், வரலாற்றியல், தொல்லியல், முகாமைத்துவவியல், புவியியல், புவிச்சரிதவியல், பொருளியல், அச்சியல், சட்டவியல், கணக்குப் பதிவியல், கட்டட அமைப்பியல், கைப்பணியியல், உடற்கல்வியியல், நுண்கலையியல், மெய்யியல், அளவையியல், முதலாய பல அறிவுத்துறைகளுக்கும் தனித்தனியாக, இக்கலைச்சொற்றொகுதிகள் வெளிவந்தன.

 

இருமொழி, மும்மொழிப் புலமைமிக்க துறைசார் வல்லுனர்கள், பேராசிரியர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நிலைப் பணியாளர்கள் முதலியோர் இக்கலைச்சொற்றொகுதிகளின் ஆக்க முயற்சிகளில் வளவாளர்களாக நியமனம் பெற்றிருந்தனர். இச்சொற்றொகுதிகள், வளவாளர் பற்றிய விபரங்களைப் பின்னாளில் அட்டவணையாக மணி வேலுப்பிள்ளை தயாரித்தார். பயன்மிக்க முன்னோடி முயற்சியான இவரது முயற்சி இன்னும் முழுமைபெற வேண்டியது எனினும், வெளிவந்த தொகுதிகள் தொடர்பான ஒரு பொது அறிமுகத்தை இவரது அட்டவணை தரவல்லது.5

 

இச்சொற்றொகுதிகளின் முகவுரைகள் அரசியலமைப்பின் மொழியுரிமை அம்சங்களுக்கு இயைபானதாகவும் சுருக்கமாகவும் அமைந்துள்ளன.

 

சொற்றொகுதிகளின் இலக்குப் பயனாளர்                                                                                       

சொற்றொகுதிகளின் “முகவுரை”யில் குறித்த சொற்தொகுதியின் பயன்பாட்டாளர் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. சில தொகுதிகளிலிருந்தான எடுத்துக்காட்டுகளோடு இலக்குப் பயன்பாட்டாளர்களை அறிந்து கொள்ளலாம்.

 

“உயர்நிலைக் கல்வியைத் தன்மொழியூடாகக் கற்பித்தற் பொருட்டு ஆக்கிய பரிபாடைச் சொற்றொகுதிகளுள் புதிதாக வெளிவருவது இதுவே.”(மின்னெந்திரவியல்:1965), “இது உயர்நிலைப் பாடசாலைத் தகுதிப்பத்திர வகுப்பிற்குரிய சொற்கள் யாவும் கொண்டது.. பாடசாலைப் பாடப்புத்தக எழுத்தாளருக்குப் பயன்பட, ஓரளவு கலைச் சொற்களெனக் கணித்தவையும் சேர்க்கப்பட்டு, அவற்றிற்குவந்த தமிழ்ச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.”(மனையியல்:1959), “இயற்கை விஞ்ஞானப் பாடங்களைப் பட்டதாரி வகுப்புவரை தமிழில் கற்கும் மாணவருக்கும் பிறப்புரிமையியல், குழியவியல் அல்லது கூர்ப்பைச் சிறப்பாகக் கற்கும் மாணவருக்கும் இது பெரிதும் பயனுடையதாயிருக்கும்.” (பிறப்புரிமையியல்-குழியவியல்-கூர்ப்பு:1964), “பல்கலைக்கழக வைத்திய மருந்தியல் நூல்களைக்கற்கும் மாணவர்க்குச் சொற்களை எளிதில் விளக்கும் வகையில் இது அமைந்துள்ளது.”(மருந்தியல் விஞ்ஞானம்:1965), “இலங்கைப் பல்கலைக்கழக விலங்கியற் பகுதியிலும் பயிர்ச்செய்கைப் பகுதியிலும் பற்பல துறைகளிற் பயிற்சிபெறுவோரின் பாடத்திட்டங்களுக்கமையக் கற்கும் நூல்களை விளங்கப் பயன்படும்.”(விலங்கு வேளாண்மை:1965), “பல்கலைக்கழக வைத்தியப் பகுதியில் பற்றீரியவியல் பற்றிப் படிக்கும் மாணவர்க்குத் தேவைப்படும் சொற்கள் பெரும்பாலும் இதனுள் அடங்கியுள்ளன.” (பற்றீரியவியல்:1966), “பயிர்ச்செய்கையைத் தொழிலாகக் கொள்ளும் நோக்கத்துடன் கற்பார்க்கும் இது பயன்படும்.” (பயிர்ச்செய்கை:1958), “உடற்கலைச் சொற்றொகுதியானது பயிற்சிக் கல்லூரிகளிலும் சர்வகலாசாலைகளிலும் உள்ள ஆசிரியர், மாணவர் ஆகியோரின் தேவையைப் பூர்த்திசெய்யுமுகமாக…” (உடற்கலை:1963), “இந்நூலிலே நாம் நெசவுத் தொழில், வலைதற்றொழில் என்பனவற்றிற்காய கலைச்சொற்களை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் உதவுகின்றோம்.” (கைப்பணி:1964)

 

மேற்குறித்த எடுத்துக்காட்டுகளிலிருந்து சொற்றொகுதிகளின் இலக்குப் பயனாளர்களாக, தாய்மொழியைக் கருவியாகக் கொண்ட 1.பாடசாலை மாணவர், 2. உயர்நிலைப் பாடசாலை மாணவர், 3. பல்கலைக் கழக மாணவர், 4. பயிற்சிக் கல்லூரி மாணவர், 5. பாடசாலை ஆசிரியர், 6. பல்கலைக் கழக ஆசிரியர், 7. பயிற்சிக்கல்லூரி ஆசிரியர், 8. பரீட்சை எழுதுவோர், 9. பாடத்திட்டம் தயாரிப்போர், 10. பாடப் புத்தக எழுத்தாளர், 11. நிர்வாகிகள், 12. தொழிற் கலைஞர் 13. பொதுமக்கள் ஆகியோர் அமைந்தனர். அந்தவகையில் கல்வி, தொழில் ஆகியவற்றுக்கும் பொதுப்பயன்பாட்டுக்கும் உரியனவாகச் சொற்றொகுதிகள் அமைய வேண்டும் என்ற நோக்கமே இலக்குப் பயனாளர்களைத் தீர்மானித்தது எனலாம்..

 

மொழிபெயர்ப்புக்காகச் சொற்றொகுதிகளின் உருவாக்கம்

மேலைநாட்டு விஞ்ஞான, அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் நோக்கத்திற்கான முன்னோடி முயற்சிகளாகவே இச்சொற்றொகுதிகள் உருவாக்கி வெளியிடப்பட்டன. இதற்குப் பின்வரும் கூற்றுக்களை உதாரணங்காட்டி விளக்கலாம்.

 

“இது மேலைநாட்டு வைத்தியத்துள் மருந்தியல் பற்றிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தற்கு முதற்கண் செய்துள்ள ஆக்க வேலையாகும்.” (மருந்தியல் விஞ்ஞானம்:1965), “பற்றீரியவியல் பற்றிய இச்சொற்றொகுதி அரசகரும மொழி வெளியீட்டுப் பிரிவினால் மேலைநாட்டு வைத்திய நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்க எடுத்துள்ள முயற்சிகளின் முதற்படியாகும்” (பற்றீரியவியல்:1966)

 

மேற்குறித்த கூற்றுக்கள், பாடசாலை முதல் பல்கலைக்கழகம்வரையான கல்விச்செயற்பாடுகள் தாய்மொழியூடாகவே நடைபெறவேண்டும் எனும் நோக்கம் கருதி, அறிவியல், விஞ்ஞான நூல்களை, ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கவேண்டிய தேவையின் நிமித்தம், பல்துறைசார் அறிவியலுக்கான சொற்றொகுதிகள் உருவாக்கப்பட்டதைத் தெளிவுறக் காட்டுகின்றன.

 

இலண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்த துறைசார் பாடநூல்களை, அப்பல்கலைக்கழகத்தாரின் அனுமதிபெற்று தமிழிலும் சிங்களத்திலும் வெளியிடுவதற்காகவே இச்சொற்றொகுதிகள் உருவாக்கப்பட்டன. மொழிபெயர்த்து வெளியிட்ட நூல்களில் “இம்மொழிபெயர்ப்பு இலண்டன் ஒட்சுவோட்டுப் பல்கலைக்கழக அச்சகத்தாரின் அனுமதி பெற்றது” என்ற தொடர் வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

சொற்றொகுதியாக்கத்திற்கு உதவிய மூலங்கள்

சொற்றொகுதிகளில் சொற்களை உருவாக்கி, உள்ளடக்குவதற்காகச் செயற்பட்ட சொல்லாக்க நிபுணர்குழுக்கள், சொற்களைப் பல்வேறு மூலங்களிலிருந்து எடுத்ததைப் பின்வரும் கூற்றுக்கள் மூலம் அறியமுடிகிறது.

 

“உயர் வகுப்புக்குரிய புவியியற்பாட நூல்களுட் காணும் புவியியற்     கலைச்சொற்கள் இத்தொகுதிகள் இரண்டனுள்ளும் இடம்பெற்றுள்ளன.”(தகவல் தொழில் நுட்பம்:2000), “சென்னைப் பல்கலைக் கழகத்தாரியற்றிய சொற்றொகுதியும் இதற்குதவியுள்ளது.” (புவியியல்:1956), “இந்நூற்குரிய சொற்கள் ஆங்கில நியம மருந்தியல் நூல்களிலிருந்து சேர்க்கப்பட்டவை.”(மருந்தியல் விஞ்ஞானம்: 1965), “இப்போது வழக்கில் இருக்கும் சொற்கள் கைப்பணியாளர்களால் எளிதில் விளங்கத்தக்கன. ஆதலின், அவை தமிழோசை சிதையாவுருவிற் சேர்க்கப்பட்டுள்ளன.”(கைப்பணி:1964), “விலங்குகள், கோத்திரங்கள், உயிரியற் பெயர்கள் யாவும் சருவதேசப் பெயரீட்டு முறையைத் தமிழிலக்கண வரம்பிற்கேற்ப உருப்பெயர்க்கப்பட்டுள்ளன.”(விலங்கியல்: 1957)

 

மேற்குறித்த கூற்றுக்கள், 1. பாடசாலை, உயர்கல்விநிலையப் பாடநூல்களிலிருந்தும் 2. சென்னைப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் வெளியிட்ட சொற்றொகுதிகளிலிருந்தும் 3. குறித்த துறைசார்ந்து ஆங்கிலத்தில் வெளியான தரப்படுத்தப்பெற்ற நூல்களிலிருந்தும் 4. தொழில்நிலை, பொதுமக்களின் பயன்படுநிலை வழக்கிலிருந்தும் சொற்கள் தெரிவு செய்யப்பட்டதையும், அவ்வாறு தெரிவு செய்யும்போது, 1. வழக்கில் அமையும் சொற்களாயின் இயல்பான தமிழ் ஒலி சிதையாமலும் 2. ஆங்கில நூல்களிலிருந்து எடுத்த, உலகளாவியநிலையில் வழங்கும் சொற்களாயின், தமிழ் இலக்கண விதிகளுக்கு ஏற்ப மொழியாக்கம் செய்தும் சொற்றொகுதிகளில் உள்ளடக்கப்பட்டதையும் அறியமுடிகிறது.

 

துறைசார் சொற்றொகுதிகளின் பண்புகள்

சொற்றொகுதிகளுள் சொற்களை உள்ளடக்கும்போது துறைசார் பாடப்பொருள் விளக்கம் அதிக கவனத்திற் கொள்ளப்பட்டதை அறியமுடிகிறது. அந்த வகையில் பின்வரும் ஐந்து அம்சங்களைக் குறிப்பிடலாம்.

 

குறித்த துறைசார் சொற்களை மட்டும் கொண்டிருத்தல்.

உ-ம்: “மருந்தியல் பற்றிய இவ்விஞ்ஞானச் சொற்றொகுதி… பல்கலைக் கழக வைத்தியப் பகுதியில் மருந்தியல் நூல்களைக் கற்கும் மாணவர்க்கு எதிர்ப்படும் சொற்களை எளிதில் விளக்கும் வகையில் இது அமைந்துள்ளது.”(மருந்தியல் விஞ்ஞானம்: 1965)

 

குறித்ததொரு துறையின் “கிளைஞானங்கள்” தொடர்பான சொற்களைக் கொண்டிருத்தல்.

உ-ம்: “மின் எந்திரவியலின் பல்வேறு கிளைக்கலைகளுக்காய அருஞ்சொற்களும் இரேடியோ நுண்கலை, மின் ஒலிபரப்பியல் என்பவற்றுள் வருஞ் சொற்களும் இங்கு அமைந்துள்ளன.”(மின்னெந்திரவியல்:1965)

 

“இது மனையியற் சொற்றொகுதி என்க. இதனுள் தையல் வேலை, சலவைவேலை, சமையல் வேலை, முதலுதவி, பிணியாளரைப் பேணல், குழந்தை விருத்தி முதலிய பகுதிகளின் கலைச் சொற்கள் அமையும்.”(மனையியல்:1959)

 

ஒருதுறையைக் கற்றபின் இன்னொரு துறையைக் கற்பதற்கான ஆரம்பநிலைசார் அறிமுகச் சொற்களைக் கொண்டிருத்தல்.

உ-ம்: “புவியியல் கற்பதற்கு உபயோகமான சில புவிச்சரிதவியல், வளிமண்டலப் பதங்களுஞ் சேர்க்கப்பட்டிருக்கின்றன.”(புவியியல்:1956)

 

சொற்றொகுதி ஆக்கத்தின்போது இடம்பெறாத சொற்களைத் தனித் தொகுதியில் கொண்டிருத்தல்.

“ஏலவே வெளியிடப்பட்ட புவியியற் சொற்றொகுதியில் இடம்பெறாத புவியியல், புவிச்சரிதவியல், புவிவெளியுருவவியல் ஆகியவற்றுக்குரிய கலைச்சொற்கள் இதிலடங்கியுள்ளன. இத்தொகுதியின் பிற்பகுதி இடப்பெயர்களைக் கொண்டுள்ளது.” (தகவல் தொழில் நுட்பம்:2000)

 

துறைசார் பல உட்பிரிவுகள் தெளிவாகப் பிரிக்கப்பட்டு அதற்கமைவான  சொற்களைப் பல தொகுதிகளில் கொண்டிருத்தல்.

 “இப்பொழுது பாடசாலைகளில் கைப்பணிப்பாடம் மிக்க இடம்பெற்று வருகின்றது. இத்தொடரில் எட்டுப்பாடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவை: நெசவுத்தொழில், வனைதற்றொழில், மரவேலை, அரக்குவேலை, உலோகவேலை, தோற்கைத்தொழில், பிரம்புவேலை, மோட்டாரெந்திரவடிவமைப்பு, கயிறுதிரித்தல் என்பனவாகும். இவற்றின் முதலாம் பகுதியாகிய இந்நூலிலே நாம் நெசவுத்தொழில், வனைதற்தொழில் என்பவனவற்றிற்காய கலைச்சொற்களை… உதவுகிறோம்.”(கைப்பணி:1964) “இவ்விரண்டாங் கலைச்சொற்றொகுதியில், மரவேலை, அரக்குவேலை என்பவற்றுக்கான கலைச்சொற்கள் ஒழுங்காகத் தொகுக்கப்பட்டுள்ளன.” (கைப்பணி:1956)

 

சொற்றொகுதிகளுக்கான சொல்லாக்கம் பற்றிய எண்ணக்கரு

அரசகரும மொழித்திணைக்களத்தின் சொற்றொகுதிக்கான சொல்லாக்க எண்ணக்கரு பற்றி கா. சிவத்தம்பி பின்வருமாறு குறிப்பிடுவார்.

 

“ஒவ்வொரு சொல்லுக்குமுரிய எண்ணக்கருவின் இறுக்கப்பெறுமானம் எவ்வகையிலும் பாதிப்படையக்கூடாது. அச்சொல்லைப் பயன்படுத்துபவர் அச்சொற்பொருளின் நுண் கூர்மையையும் சரிதிட்பத்தையும் உணர்ந்துகொள்ளும் வகையில் அவை அமைதல் வேண்டும். நெகிழ்ச்சியினை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை கருத்து மயக்கத்திற்கு இடமளித்தல் கூடாது. இது சவால்கள் மிகநிறைந்த ஒருநிலையினை ஏற்படுத்துகின்றது. இது ஒரு புறத்தில் சரிதிட்பத்தையும் மறுபுறத்தில் நெகிழ்ச்சியையும் ஏற்றுக்கொள்கிற, இருபுறத்தும் கூர்மையுடையதான ஒருநிலைப்பாடாகும்.” (நுண்கலை, இசை அழகியற் கலைச்சொற்றொகுதி: 2006)

 

இக்கூற்றிலிருந்து சொல்லாக்க எண்ணக்கருவின் முக்கியமான அம்சங்களைப் பின்வருமாறு குறித்துக்கொள்ளலாம்.

1.    சொல்லுக்குரிய எண்ணக்கருவும் அதன் இறுக்கமும் சொல்லாக்கத்தில் பாதிப்படையக்கூடாது.

2.    குறித்த சொல்லைப் பயன்படுத்துவோர், அச்சொற்பொருளின் நுண் கூர்மை, சரிதிட்பம் ஆகியவற்றை உணரும்விதத்தில் சொல்லாக்கம் அமைதல் வேண்டும்.

3.    சொல்லாக்கத்தில் கருத்து மயக்கத்திற்கு இடமளிக்காத நெகிழ்ச்சி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

4.    சரிதிட்பமும் நெகிழ்ச்சியும் இணைந்ததாகச் சொல்லாக்கம் அமைதல் வேண்டும்.

 

இத்தகைய நான்கு அம்சங்களைச் சொல்லாக்க எண்ணக்கருவின் கூறுகளாகச் சொல்லாக்கக் குழுவினர்கள் கொண்டிருந்தனர் எனலாம். உதாரணமாகச் சட்டவியல் சொற்றொகுதியில் Habeas corpus என்ற சொல்லினை அவர்கள் மொழியாக்கம் செய்த தன்மையைச் சற்று விபரிக்கலாம்.

 

ஹேபியஸ் கோப்பஸ் (Habeas corpes) என்பது மத்தியகால லத்தீன் மொழிச்சொல். ‘அந்த உடல் இருக்கிறது’ என்பது அதன் நேரடி மொழிபெயர்ப்பு. ஒருவர் சட்ட விரோதமாகத் தடுத்துவைக்கப்படடிருக்கிறார் என்றோ அல்லது நீதிமன்றக் காவலில் சிறைவைக்கப்பட்டிருக்கிறார் என்றோ ஒருவர் முறையிட்டு, பிரஸ்தாப நபரைத் தனது கண்காணிப்பில் வைத்திருப்பவர் (அநேகமாகச் சிறை அதிகாரி) தடுத்துவைக்கப்பட்டிருப்பவரை நீதிமன்றத்தின்முன் கொண்டுவந்து நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று கோரும் உரிமையாகும். இதற்குச் சட்டத்தில் உரிமையுண்டு. இத்தகைய பொருள்தரும் சொல் தமிழகத்தில் ஹேபியஸ் கோப்பஸ் என்றே தமிழில் பெருவழக்காக இன்றும் நிலவ, இலங்கை அரச கரும மொழித்திணைக்கள சட்டவியற் சொற்றொகுதியில் “ஆட்கொணர்வு மனு” எனச் சரிதிட்பமும் நெகிழ்ச்சியும்பெறச் சொல்லாக்கம் பெற்றிருந்தமையும் இன்றுவரை அச்சொல்லே இலங்கைத் தமிழில் பயில்நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

சொற்றொகுதிக்காகச் சொற்களை ஆக்கிய முறைமை

சொற்றொகுதிகளுக்கான சொற்களை ஆக்கும்போது சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. அவற்றைத் தனித்தனியே நோக்கலாம்.

 

தமிழில் உள்ள சொற்களுக்கு முன்னுரிமை வழங்குதல்.

“வழக்காற்றிற் பன்னெடுங்காலமாக இருந்துவருஞ் சொற்கள் பல இத்தொகுதியில் இடம்பெற்றுள.” (உலோகவேலை:1957)

உ-ம்: Abbreviation – குறுக்கம்

 

தமிழில் உரிய சொற்கள் இல்லாதநிலையில் புதுச்சொற்களை உருவாக்குதல்.

“தமிழிலே தக்கவொரு வழக்குச்சொல் கிட்டாதபோதே புதிய சொற்கள் புனையப்பட்டன.” (பொருளியல்:1957) “உவந்த தமிழ்ப்பதம் இல்லாதவிடத்துப் புதுச்சொற்கள் ஆக்கப்பட்டன.” (புவியியல்:1956)

உ-ம்: Absorbing screen – உறுஞ்சுதிரை

 

புதுச்சொல்லாக்கும்போது மூலமொழியில் உள்ள முதற்சொல்லின் பொருள் மாறுபடாதிருத்தல்.

“புதுச் சொல்லாக்கத்தில் முதற்சொல்லின் கருத்து மாறுபடாதவகையில் புதுச்சொல் அமைக்கப்பட்டது.” (கணக்குப் பதிவியல்:1957)

உ-ம்: Accumulation of capital – மூலதனப்பெருக்கம்

சொற்களின் இயல்பான எளிமையை அவதானித்தல்.

“இப்போது நாம் பொதுவாக வழங்கும் சொற்களும் கடினமான சொற்களுக்குமுரிய புதிய ஆக்கச் சொற்களும் தரப்பட்டுள்ளன.” (மின்னெந்திரவியல்:1965)

உ-ம்: Ability - ஆற்றல்,

         Addressing machine – விலாசமிடுபொறி

 

பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ் உருவம் கொடுத்தல்.

“இச்சொற்றொகுதியை யாக்குமிடத்துப் பிறமொழிச் சொற்களுக்குத் தமிழுருவங் கொடுக்கப்பட்டுள்ளது.”(புவியியல்:1956) “பிறமொழிச் சொற்களுஞ் சிறப்புப் பெயர்களும் இத்தொகுதியில் தமிழ் உச்சரிப்புக்கு இணங்கத் திரிந்து எடுத்தாளப்பட்டுள்ளன.” (பொருளியல்:1957)

உ-ம்: Alfalfa meal - அல்பல்பாத் தீன் (நொய்),

         Anaemia – குருதிச்சோகை, அனீமியா

 

வடமொழி எழுத்தைக் கையாளும்போது இரு அம்சங்களைக் கடைப்பிடித்தல்.

1.    கிரந்த எழுத்துக்களை முற்றாக நீக்குதல்.

“பிறமொழிச்சொற்களை எடுத்தாள நேர்ந்தவிடத்துத் தமிழொலிமுறை பேணப்பட்டது. கிரந்தவெழுத்துக்கள் களையப்பட்டன.”(உலோக வேலை:1957)

உ-ம்: Achlorhydria – எக்ளோரைதிரியா, ஐதரோகுளோரிக்கமிலமின்மை

 

2.    அவசியம் கருதிச் சில கிரந்த எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தல்.

“இடுகுறிப்பெயர்களும் சருவதேசச் சொற்களும் உருப்பெயர்க்கும்போது உரியவிடங்களில் ஸ, ஷ, ஜ என்னும் கிரந்த எழுத்துக்கள் மட்டும் வழங்கி உருப்பெயர்க்கப்பட்டுள.” (பற்றீரியவியல்:1966)

உ-ம்:  ஸ -  Alastrim (Kaffir Pox) - அலஸ்திரிமீ

            ஷ - Chancroid - ஷங்கருரு, ஷங்கரோயிட்டு

            ஜ - Aedes aegypti - ஈடீசுஈஜிப்ரை

 

சொற்றொகுதி பற்றிய பிற சிறப்பு அவதானங்கள்

கொள்கை விளக்கம் மாத்திரமன்றிப் பயிற்சி விளக்கமும் கருத்திற் கொள்ளல்.

துறைசார் சொற்களைத் தயாரிக்கும்போது அத்துறையின் கொள்கை விளக்கங்களை (Theory) மட்டும் கருத்திற்கொள்ளாது பயிற்சி விளக்கங்களையும் (Practical) கவனத்திற்கொண்டு சொற்கள் உருவாக்கப்பட்டதை அவதானிக்கமுடிகிறது. உதாரணமாக, உடற்கலை (Physical Education) எனும் பாடத்திற்குரிய பயிற்சியின்போது சொற்களைக் கையாளும்முறைபற்றி பயில்நிலை, இலக்கண வழக்கு, பண்புசார் உரையாடல்நிலைநின்று சிந்திக்கப்பட்டதை இங்கே சான்றுகாட்டலாம்.

 

“இச் சொற்றொகுதி உடற்கலைக்குரிய கலைச்சொற்களைத் தமிழிற் கொண்டுளது. “கட்டளைகள்” யாவும் வியங்கோள் வினைகளாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஈரெண்ணைம்பான் மூவிடத்தும் இவை பொருந்துமாதலின், இன்னும் சுருக்கமும் திட்பமும் உடையவாக்கற் பொருட்டு, இக்கட்டளைச் சொற்கள் இயன்றவரை குறுக்கப்பட்டுள. இக் கட்டளைச்சொற்கள் எவ்வடிவில் அமைதல் வேண்டும் என்பது பற்றிக் கலைச்சொற் குழுவினரிடையே கருத்தொருமிப்பு இல்லாதுபோயிற்று. உறுப்பினர் சிலர் இந்நாளில் வழங்கும் “நட”, “நில்” எனும் வடிவங்களே அமையுமெனக் கருதினர். இலக்கண மரபும் திருந்திய முறையில் விளித்தலும் நாடிய பிறர் “நடக்க”, “நிற்க” எனும் வடிவங்களை அமைவெனக் கொண்டனர். இறுதியில் மந்திரக் குழுவின் தீர்ப்புக்கு இவ்விடயம் விடப்பட்டது. பின்னை வழக்கே ஏற்புடைத்தாமென மந்திரக்குழுவினர் முடிவுசெய்தனர். ஆயின், இக் கட்டளைச் சொற்களைக் கழறும்போது, இறுதியில் நிற்கும் “க”கரவெழுத்தை உறுத்திக் கூறலாகாதென்பதை உணர்த்தும் பொருட்டு அவ்வெழுத்து அடைப்புக் குறிக்குள் இடப்பட்டுளது. உதாரணமாக: நடக் (க) ! என்பதைக் காண்க.” (உடற்கலை:1963)

 

தமிழ்நாடு - இலங்கை வழக்கின் வேறுபாடுகள்

ஓரிரு கலைச்சொற்றொகுதிகளை உருவாக்கும்போது தமிழ்நாட்டு வழக்கு, இலங்கை வழக்கு ஆகியனவும் கவனத்திற்கொள்ளப்பட்டன. அதன்போதான முயற்சியில் தமிழ்க் கலைச்சொற்களுக்கான இலங்கையின் உச்சக்குழு, இலங்கை மட்டத்திலான துறைசார் விற்பன்னர்கள் குழு, தமிழ்நாடு மட்டத்திலான உச்சக்குழு, தமிழ்நாடு மட்டத்திலான துறைசார் விற்பன்னர்கள் குழு ஆகியன அமைக்கப்பட்டுச் சொற்கள் ஆராயப்பட்டு உள்ளடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக; ‘தகவல் தொழில் நுட்பக் கலைச்சொல் அகரமுதலி’(2000) இவ்வாறு உருவாக்கப்பட்டதைக் குறிப்பிடலாம். இதில் வழங்கப்பட்ட தமிழ்ச் சொற்கள் பின்வரும்முறையில் அமைந்திருந்தன.

 

“அ. தனி ஒரு தமிழ்ச்சொல் தரப்பட்டு இருக்குமிடத்து அச்சொல் இரண்டு உச்சக் குழுக்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது கருத்தாகும்.

ஆ. வழக்கு வேறுபாடுகள் உள்ளவிடத்து இலங்கை வழக்கு (இ.வ.) எனவும் தமிழ் நாட்டு வழக்கு (த.வ.) என்றும் குறிக்கப்பெற்றுள்ளன.”(2000:iv)

 

வாசித்தல் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குதல்.

கலைச்சொற்களை வாசிக்கும்போது முதற்சொல்லின்வழியே தோன்றிய துணைச் சொற்களை வாசிக்கும் முறைபற்றிக் கூறப்படுவதை இங்கு குறிப்பிடலாம்.

 

“இக் கலைச்சொற்றொகுதியில் முதற்சொல்லின் வழிவந்த துணைச்சொற்கள் சில தம்மெதிரே முக்காற் புள்ளி கொண்டிருத்தல் காணப்படும். இவ்வாங்கிலச் சொற்களின் தமிழாக்கங்களை வாசிக்கும்போது, துணைச்சொற்களுடன் முதற்சொற்களையும் இணைத்து வாசித்தல் இன்றியமையாதது.” (கணக்கப் பதிவியல்:1957)

உ-ம்:     Account                - கணக்கு, க/கு

            Consignment   - ஒப்படைக் கணக்கு

            Current             - நடைமுறைக் கணக்கு

            Days                 - கணக்கு நாள்கள்

 

குறித்த துறையுடன் தொடர்புபட்ட பிற சொற்றொகுதிகளை நோக்கி வழிகாட்டுதல்.

சொற்றொகுதியொன்றில் குறித்த துறைக்குரிய சொற்கள் பிறதுறையுடன் தொடர்புடையதாயின் அல்லது பிறதுறையுடன் தொடர்புபடுத்திப் பாடப் பொருளை விளங்கவேண்டியதாயின் அதற்கான வழிகாட்டுதலையும் காணமுடிகிறது. பின்வரும் எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிடலாம்.

 

“இத் தொகுதியை அதிகம் பெரிதாக்கா வண்ணம் கட்டடக்கலை பற்றிய சொற்களை மட்டுமே தந்துள்ளோம். இக் கலைசார்ந்த பிற சொற்களும் தேவைப்படின் குடிசார் எந்திரவியல், மின்னெந்திரவியல், பொறிமுறை எந்திரவியற் சொற்றொகுதிகளுட் கண்டு கொள்க.” (கட்டட அமைப்புக் கலை:1968) “ஈண்டுக் குறிப்பிடாச்சொற்களுக்குப் பிற கலைச்சொற்றொகுதிகளையும் வேண்டியவிடத்துப் பயன்படுத்துக.”(பயிர்ச்செய்கை:1958)

 

தொழில்நிலைசார் சொற்றொகுதிகள் பல்வேறு அடிப்படைகளை விளக்குவதாக அமைதல்

தொழில்நிலைச் சொற்றொகுதிகள், குறித்த தொழிலின் படிமுறைகளையும் அவற்றுக்கான முன்னாயத்த நிலைகளையும் விளக்குவதாக அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். இத்தகைய சொற்றொகுதிகளை உருவாக்கும்போது வளவாளர்களிலிருந்து அச்சிடல்வரை விசேட கவனம் செலுத்தப்பட்டதை அறியமுடிகிறது. இதனை அச்சியற் சொற்றொகுதியை அடிப்படையாகக் கொண்டு சிறிது விளக்குதல் பயனுடையதாகும்.

 

 

அச்சியற் சொற்றொகுதி

அச்சியற் சொற்றொகுதியின் நோக்கம்.

இச்சொற்றொகுதித் தேவையின் அவசியமானது, அச்சியற் கல்விநெறியிலும் அச்சுத்தொழிலிலும் நன்கு உணரப்பட்டது என்பதைப் பின்வரும் கூற்றுக் காட்டிநிற்கிறது.

 

“அச்சியல் பற்றிய தன்மொழி நுட்பச்சொற்றொகுதி ஒன்று தேவை என்பது சிலகாலமாக உணரப்பட்டு வந்துள்ளது. நுண்டொழிற் பாடசாலைகளில் அச்சியலை ஒரு பாடமாகத் தன் மொழியிற் கற்பிக்கவும் அச்சுத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தன் அலுவல்களைத் தன்மொழியில் நடத்தவும் அத்தகைய தொகுதி உதவும்”(அச்சியல் 1965:vi)

 

நல்ல பிரதியும் குறைபாடுள்ள பிரதியும் பற்றிய எண்ணக்கரு

அச்சு என்பது ஒரு பிரதியைத் திறம்பட உருவாக்கும் கலை எனும் தெளிவுடன் அச்சிடுநர் செயற்பட வேண்டும். அவரே “நல்ல பிரதி”, “குறையுடைய பிரதி” எனும் அர்த்தங்களைத் தம்மிடம் வரும் பிரதிக்குக் கொடுக்கிறார் என்ற எண்ணக்கருவினை இத்தொகுதி முன்வைக்கிறது. எண்ணக்கரு விளக்கங்கள் வருமாறு;

 

நல்ல பிரதி:

“‘நல்ல பிரதி’ என்பது இலகுவாகக் கையாளவும் வாசிக்கவும் ஏற்றதாய், சகல விவரங்களும் முற்றாய்ப் பொருந்தி அச்சிடுநர்வசம் வரும் பிரதிக்கு அவர் அளிக்கும் பெயராகும்.”(அச்சியல் 1965:vii)

 

குறைபாடுள்ள பிரதி:

“‘அசுத்தமான, குறைபாடுள்ள பிரதி’ அதனைக் கையாளவேண்டிய அனைவருக்கும் தொல்லை தருவது மட்டுமன்றி, தயாரிப்புச் செலவுகள் அதிகரிக்கவும், பிழைகள், சரவைத் திருத்தங்கள் உண்டாகவும் காரணமாவதுடன் சரியான அச்சமைவளிப்பினை வில்லங்கமாயும் ஆக்குகிறது.” (அச்சியல் 1965:vii)

 

எனவே நூலாசிரியர், கையெழுத்துப் பிரதியை அச்சிடலுக்கு ஏற்றவாறு, குறையற்ற முறையில் தயாரித்து, அச்சிடுநரிடம் வழங்கும்போது, அப்பிரதி ‘இலகுவாகக் கையாளவும் வாசிக்கவும் ஏற்றதாய், சகல விவரங்களும் முற்றாய்ப் பொருந்தியிருப்பின், அதற்கு ‘நல்ல பிரதி’ எனும் அர்த்தத்தை அச்சிடுநர் வழங்குகிறார் என்பதை அறியமுடிகிறது.

 

அச்சிடுநரிடம் ஒப்படைக்கும் கையெழுத்துப் பிரதியின் தன்மை

நூலாசிரியர் ஒருவர் தமது கையெழுத்துப் பிரதியை அச்சிடுநரிடம் ஒப்படைக்கும் முன்னர் எவ்வகையில் அப்பிரதியைத் தயாரித்திருக்க வேண்டும் என்பது பற்றிய குறிப்புக்கள் அச்சியல் சொற்றொகுதியில் தெளிவாகவும் விளக்கமாவும் குறிப்பிடப்பட்டுள்ளன. 1. கையெழுத்து எழுதப்படும் தாளின் தன்மை, 2. தாளின் ஒருபக்கத்தில் மாத்திரம் எழுதும் முறை, 3. வரிகளுக்கிடையிலான இரட்டை இடைவெளி, 4. இடப்பக்க ஓரத்தில் போதியளவு இடம் விடுதல், 5. தாள்களில் எண்ணிடல், 6. பின்னைய சேர்ப்புக்களைத் தனியாகக் கட்டி எண்ணிடல், 7. நன்கு வாசிக்கத் தக்க கையெழுத்து, 8. எழுத்துக்களுக்கிடையில் நூலாசிரியரின் இடைச்செருகல், மாற்றங்கள் சரவை திருத்தல் முறைப்படி அமைதல், 9. விளக்கப் படங்கள் தனியாக எண்ணிடப்பட்டு, தனியாக இணைக்கப்படும் அதேவேளையில், அவை எங்கெங்கு வரவேண்டும் எனக் கையெழுத்துப் பிரதியிலும் எழுதியிருத்தல், 10. புத்தகத்தின் உறுப்புக்களை அவற்றின் ஒழுங்கில் அமைத்தல், 11. இலக்கணம், எழுத்துக்கூட்டல், நிறுத்தற்குறிகள் முதலியவை திருத்தமுற அமைந்த நடையைக் கொண்டிருத்தல், 11. சரவைப் பிரதி கிடைக்குமுன் தயாரிக்க இயலாத அட்டவணையும் உள்ளுறைப் பகுதியில் வரும் பக்க எண்களும் தவிர எல்லாம் அடங்கியிருத்தல் முதலாய பண்புகளை அச்சிடுநரிடம் ஒப்படைக்கும் பிரதி கொண்டிருக்க வேண்டும் எனக் கூறப்படுவதுடன் மட்டுமல்லாது இவை தெளிவுக்காக விரிவாகவும் விளக்கப்பட்டுள்ளன.6

 

 

 

 

அச்சிடலுக்கான பொறுப்பை அதிகம் கூறுதல்

நூலாசிரியரும் அச்சிடுநரும் முன்கூட்டியே கலந்து ஆலோசித்து அச்சிடல் செயற்பாட்டில் ஈடுபட வேண்டும் எனக் கூறும் இச் சொற்றொகுதி அவர்களுக்கான பொறுப்பையும் கூறுகிறது. இதனை இருவகைப்படுத்தலாம்.

 

1.    நூலாசிரியரும் அச்சிடுநரும் இணைந்த பொறுப்பு

“அச்சுப்பாணி அல்லது அளவு பற்றி நூலாசிரியர் குறிப்பது அவசியமில்லை. சரிவெழுத்து அல்லது தடிப்பெழுத்து வரவேண்டுமென்று தாம் குறிப்பாக விரும்பும் இடங்களில் மட்டும், உரிய சொற்களின் கீழ் நேர்கோடோ, நெளிகோடோ போட்டுக் காட்டலாம். மிகுதிக்கு ஒப்புக் கொள்ளப்பட்ட அச்சமைவு வழக்கத்தை அச்சிடுநர் கைக்கொள்வார்.” (அச்சியல் 1965:vii)

 

2.    அச்சிடுநரின் தனிப் பொறுப்பு

“கையெழுத்து அல்லது தட்டெழுத்தால் உணர்த்துவதைவிட அதிகமாக அச்செழுத்தால் உணர்த்தலாம்… அச்செழுத்தைப் பலிதமான முறையிற் பயன்படுத்த அனுபவம் தேவை. தெளிவின் பொருட்டு அச்செழுத்தின் மூலவளங்கள் அனைத்தையும் முற்றாக அச்சிடுநர் பயன்படுத்துவார்.” (அச்சியல் 1965:vii)

 

சொற்றொகுதியின் உட்பகுப்பு மூன்று பகுதியாக அமைந்திருத்தல்

1.    கையெழுத்துப் பிரதியைத் தயாரித்தல், சரவை பார்த்தல் முதலியவை

நூலாசிரியனுக்குச் சிறப்பானதும் அச்சிடுநருக்குப் பொதுவானதுமான விடயங்கள் இப்பகுதியில் இடம்பெற்றிருக்கும்.

 

2.    அச்சியற் சொற்றொகுதி

அச்சியலைக் கற்கும் மாணவர், கற்பிக்கும் ஆசிரியர், அச்சுத் தொழிலாளர், நூலாசிரியர் ஆகியோருக்கான விடயங்கள் இப்பகுதியில் இடம்பெற்றிருக்கும்.

 

3.    சரவை வாசிப்பில் இடும் குறிகள்

படி திருத்துவோருக்கான விடயங்கள் இப்பகுதியில் இடம்பெற்றிருக்கும்.

 

சொற்றொகுதியின் பிற்சேர்க்கைகள்

குறித்த சொற்றொகுதி ஒன்றின் பிற்சேர்க்கையாக அத்தொகுதின் பிரதான துறையின் சொற்கள், கிளைஞானங்களுக்குரிய சொற்கள் மாத்திரமன்றிக் கிளைஞானங்களின் கிளைத்துறைகளுக்குமான சொற்களும் பட்டியலாக இணைக்கப்பட்டிருந்தமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, புவிச்சரிதவியல் சொற்றொகுதியில் கிளைஞானங்களுக்குரிய சொற்றொகுதிகள் மட்டுமல்லாது அவற்றின் கிளைத்துறைகளுக்குமான சொற்களும் இணைக்கப்பட்டிருந்தமையைக் குறிப்பிடலாம்.

 

“இத்தொகுதியில் புவிச்சரிதவியற் சொற்களுடன் தொல்லுயிரியல், படையாக்க வரைபு, கனிச நூல், பாறையியல், மணிநூல் முதலிய கிளைஞானங்களுக்குரிய சொற்களும் அடங்கியுள்ளன. கனிசங்கள், உயிர்ச் சுவடுகள், மணிகள் ஆகியவற்றின் பெயர்த்தொகுதிகள் இத்தொகுதியில் பிற்சேர்ப்பாக அமைந்துள.”(புவிச்சரிதவியல்:1968)

 

அச்சியற் சொற்றொகுதியில், ‘சரவை வாசிப்பில் இடும் குறிகள்’ என்ற தலைப்பிலான அட்டவணை பின்னிணைப்பாக அமைந்துள்ளது. படி திருத்தும்போது நிகழும் திருத்தங்களை, ஐம்பத்தைந்தாக வகைப்படுத்தி, திருத்தம் வரிக்குள் நிகழுமாயின் அதற்கான ஐம்பத்தைந்து குறிகளும், ஓரத்தில் நிகழுமாயின் அதற்கான ஐம்பத்தைந்து குறிகளுமாக மொத்தம் நூற்றிப்பத்துக் குறிகளைக் கொண்டிருப்பதும் வியக்கத்தக்கது.

 

 

 

 

 

 

 

மீள்பதிப்புச் சொற்றொகுதிகளின் தன்மை

சொற்றொகுதிகளை மீள்பதிப்புச் செய்யும்போது 1. புதிய சொற்கள் சேர்த்தல், 2. முன்னையதைவிடவும் செம்மையான முறையில் விரிவாக்கல், 3. பொருத்தம் வாய்ந்த சொற்கள் கிடைக்கும்போது பழைய சொற்கள் நீக்கப்படுதல் ஆகிய மூன்று விதிகள் பின்பற்றப்பட்டன. இதற்கு உதாரணமாக, பின்வரும் பகுதியைக் குறிப்பிடலாம்.

 

“இப் பதிப்பில் அனேக புதிய பதங்கள் சேர்க்கப்பட்டு விரிவாக்கப்பட்டுள்ளது. முதற் சொற்றொகுதியிலிருந்த பல பதங்கள் அவற்றினின்றும் கூடிய பொருத்தம் வாய்ந்த புதிய பதங்களிருந்தமையால் மாற்றப்பட்டுள்ளன.” (உடற்கலை:1963)

 

வேண்டுகோள்

உருவாக்கப்பட்ட கலைச்சொற்கள், பரவலான முறையில் புழக்கத்திற்கு வருவதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், தொழில்நிலைப் பணியாளர்கள், எழுத்தாளர்கள் முதலியோர் அவற்றை முனைப்புடன் எடுத்தாளவேண்டும் எனவும் சொற்றொகுதிகளில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. பாடசாலை, உயர்நிலைக் கல்விக்கான பாடப் புத்தக எழுத்தாளரை நோக்கிப் பின்வரும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தமையை இங்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

 

“மிகக் குறுகிய காலத்துள் இக்கலைச்சொற்கள் வழக்கில் வரக்கூடியவண்ணம் புவியியற்பாடப் புத்தகவாசிரியர் எடுத்தாளக்கடவர்” (புவியியல்:1956)

 

முடிவுரை

ஈழத்தில் கலைச்சொல்லாக்க மரபை வரலாற்று நிலைநின்று நோக்கின், கிறீனின் மருத்துவக் குழுவும், இலங்கை அரசகரும மொழித்திணைக்களமும் நிறுவன ரீதியாகக் கனதியான பங்களிப்பை வழங்கியமை தெளிவாகிறது. 1. அறிவியல் தமிழில் கலைச்சொல்லாக்கம் கிறீன் வகுத்த சொல்லாக்கக் கொள்கைளை அடிப்படையைக் கொண்டே அமைவுபெற்றுள்ளது, 2. கிறீனின் கலைச்சொல்லாக்கம் பற்றிய நெறிமுறைகள் அறிவு பூர்வமானவையாகவும் இன்றளவும் பயில்நிலையில் உள்ளவையாகவும் அமைந்துள்ளன, 3. அரசகரும மொழித்திணைக்களம் அறிவியல் தமிழ் வளர்ச்சியில் பெரியதொரு பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது, 4. இத்திணைக்களம் காலனிய இலங்கையில் மிஷனரிகள் வகுத்த கலைச்சொல்லாக்கக் கொள்கையைத் தளமாக்கி, அதனடிப்படையில் சுதந்திர இலங்கையின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் பெரும்பங்கு வகித்துள்ளது ஆகியவற்றை இந்த அறிமுக ஆய்வின் முதன்மை முடிவுகளாகக் குறிப்பிடலாம். அரசகரும மொழித்திணைக்களம் வெளியிட்ட துறைசார் கலைச்சொற்றொகுதிகள் 1. கல்வி, தொழில், நீதி, நிர்வாகக் கட்டமைப்பின் உரையாடல் அர்த்தங்களை உருவாக்கியமை, 2. நவீன தமிழ்ச் சமூகத்தை நவீன அறிவியல் தமிழ் மொழியின் சமூகமாகக் கட்டமைத்தமை, 3. உயர்நிலைக் கல்வி தொடக்கம் தொழில்வரையான விடயங்களில் புலமைசார்நிலையை ஏற்படுத்தியமை, 4. தமிழின் சொல்வங்கிப் பெருக்கத்திற்கு உதவியமை, 5. தமிழில் அறிவியல்சார் நூல்கள் பெருவாரியாக வெளிவரத் தளமாய் அமைந்தமை ஆகியவற்றைத் துணைநிலை முடிவுகளாகவும் குறிப்பிடலாம். இச்சொற்றொகுதிகளின் திருத்தியமீள் பதிப்புக்கள் வெளிவருவது தொடர்பாகப் புலமையாளர் பலரும் அரசுக்குப் பரிந்துரை செய்யின் பல்லின, பன்மொழிச் சமூகம் ஒன்றில், அறிவியல் ரீதியான புலமைநெறியில் துரிதமும் சமமானதுமான வளர்ச்சி ஏற்படும். அச்செயற்பாடு இனங்களுக்கிடையிலான உறவுப்பாலத்தை அறிவுசார் பண்பாடாகக் கட்டமைக்கும் அரியதொரு வாய்ப்புமாய் அமையும்.

 

அடிக்குறிப்புகள்

1.    விரிவுக்குப் பார்க்க: ஜெபநேசன், எஸ். இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்க மிஷனும் (2007), தமிழின் நவீனமயவாக்கமும் அமெரிக்க மிஷனும் (2007), இலங்கையில் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன் (2009) ஆகிய நூல்களைப் பார்க்க.

2.    இவற்றை, க. கணபதிப்பிள்ளையின் ‘விஞ்ஞானமும் அகராதியும்’(1996), இராம சுந்தரத்தின் ‘தமிழில் கலைச்சொல்லாக்கம்’ (1993), மணி வேலுப்பிள்ளையின் ‘தமிழ்ச் சொல்லாக்க முன்னோடிகள்’ (2017) ஆகிய கட்டுரைகளில் கண்டு தெளிக.

3.    விரிவுக்குப் பார்க்க: நித்தியானந்தன், மு. கூலித்தமிழ், சென்னை: க்ரியா, 2014. பக். 83-95. 

4.    Performance Report, Rajagiriya - Bhasha Mandiraya: Department of Official Languages, 2013.

5.    இச்சொற்றொகுதிகளை அடிப்படையாகக்கொண்டு, மணி வேலுப்பிள்ளை என்பார் தயாரித்த, ‘இலங்கை அரசாங்கச் சொற்றொகுதி’ எனும் தலைப்பிலான அட்டவணையில், 65 சொற்றொகுதிகளை சொற்றொகுதிகளின் பெயர், வளவாளர், வளவாளர் பணியிடம் போன்ற தகவல்களினடிப்படையில் காணமுடியும்.

6.    அச்சியற் சொற்றொகுதி, இலங்கை அரசகரும மொழித்திணைக்களம், 1965, பக்.vii-xi.

 

முதன்மை நூற்பட்டியல்

அச்சியற் சொற்றொகுதி, இலங்கை அரசகரும மொழித்திணைக்களம் (இ.அ.க.மொ.தி), 1965

அளவையியற் சொற்றொகுதி, இ.அ.க.மொ.தி.,1964.

 இரசாயனச் சொற்றொகுதி, இ.அ.க.மொ.தி., 1963.

 இனச் சொற்கொத்து – முதற் பாகம், இ.அ.க.மொ.தி., 1970.

 உடற் இனச் சொற்கொத்து – இரண்டாம் பாகம், இ.அ.க.மொ.தி., 1970.

கலைச் சொற்றொகுதி, இ.அ.க.மொ.தி. 1963.

உலோகவேலைச் சொற்றொகுதி., இ.அ.க.மொ.தி. 1957.

கட்டட அமைப்புக்கலைச் சொற்றொகுதி.,  இ.அ.க.மொ.தி. 1968.

கணக்குப் பதிவியற் சொற்றொகுதி., இ.அ.க.மொ.தி. 1957.

கணிதவியற் சொற்றொகுதி., இ.அ.க.மொ.தி., 1955.

கைப்பணிச் சொற்றொகுதி – I., இ.அ.க.மொ.தி. 1964.

கைப்பணிச் சொற்றொகுதி – II., இ.அ.க.மொ.தி. 1956.

சட்டச் சொற்றொகுதி- (தரப்படுத்தப்பெற்றது) பாகம் 1., இ.அ.க.மொ.தி., 1976.

சட்டச் சொற்றொகுதி- (தரப்படுத்தப்பெற்றது) பாகம் 2., இ.அ.க.மொ.தி., 1976.

சட்டச் சொற்றொகுதி- (தரப்படுத்தப்பெற்றது) பாகம் 3., இ.அ.க.மொ.தி., 1978.

தகவல் தொழில் நுட்ப கலைச்சொல் அகரமுதலி., இ.அ.க.மொ.தி. 2000.

தொழில்நுட்பக் கலைச்சொற்றொகுதி – தொடர்பாடல் (மும்மொழி)., இ.அ.க.மொ.தி. 2016.

தொழில்நுட்பக் கலைச்சொற்றொகுதி – விவசாயம் (மும்மொழி)., இ.அ.க.மொ.தி. 2016.

தொழில்நுட்பக் கலைச்சொற்றொகுதி – ஊடகக் கற்கை (மும்மொழி)., இ.அ.க.மொ.தி. 2016.

தொழில்நுட்பக் கலைச்சொற்றொகுதி – தாவரவியல் (மும்மொழி)., இ.அ.க.மொ.தி. 2016.

நுண்கலை, இசை அழகியற் கலைச்சொற்றொகுதி., இ.அ.க.மொ.தி. 2006.

நோயியற் சொற்றொகுதி., இ.அ.க.மொ.தி.,1965.

பயிர்ச்செய்கைச் சொற்றொகுதி., இ.அ.க.மொ.தி. 1958.

பற்றீரியவியற் சொற்றொகதி., இ.அ.க.மொ.தி. 1966.

பிறப்புரிமையியல் - குழியவியல் – கூர்ப்பு., இ.அ.க.மொ.தி. 1964.

புவிச்சரிதவியல் சொற்றொகுதி., இ.அ.க.மொ.தி. 1968.

புவியியற் சொற்றொகுதி - 1., இ.அ.க.மொ.தி. 1956.

புவியியற் சொற்றொகுதி – II., இ.அ.க.மொ.தி. 1958.

புள்ளிவிவரவியல் சொற்றொகுதி., இ.அ.க.மொ.தி., 1968.

பொது உடநலச் சொற்றொகுதி., இ.அ.க.மொ.தி. 1965.

பொருளாதாரக் கலைச்சொல் அகரமுதலி., இ.அ.க.மொ.தி. 2006.

பொருளியற் சொற்றொகுதி., இ.அ.க.மொ.தி. 1957.

மருந்தியல் விஞ்ஞானச் சொற்றொகுதி., இ.அ.க.மொ.தி. 1965.

மனையியற் சொற்றொகுதி., இ.அ.க.மொ.தி. 1959.

மின்னெந்திரவியற் சொற்றொகுதி., இ.அ.க.மொ.தி. 1965.

முகாமைத்துவச் சொற்றொகுதி (மும்மொழி)., இ.அ.க.மொ.தி. 1996.

மெய்யியல் கலைச்சொற்றொகுதி – ஒழுக்கவியல், அளவையியல், அறிவியல்.,

இ.அ.க.மொ.தி. 1960.

மொழியியற் கலைச்சொல் அகரமுதலி., இ.அ.க.மொ.தி. 2006.

விலங்கியல் சொற்றொகுதி., இ.அ.க.மொ.தி. 1957.

விலங்கு வேளாண்மை சொற்றொகுதி., இ.அ.க.மொ.தி. 1965.

 

துணைமை நூற்பட்டியல்

அம்பி., கிறீனின் அடிச்சுவடு – நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழில் விஞ்ஞானம், யாழ்ப்பாணம்: யாழ் இலக்கிய வட்டம். 1967.

 

………, மருத்துவத் தமிழ் முன்னோடி டாக்டர் கிறீன், சென்னை: திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.1945.

 

அரங்கன், கி., தமிழ் மொழியில் கலைச்சொற்களைத் தரப்படுத்துதல் – சில அனுபவங்கள், தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம், 1988.

 

இராசாராம், சு., (ப.ஆ) தமிழ்மொழி அரசியல், நாகர்கோவில்: காலச்சுவடு, 2014.

 

……………….., தமிழ் நவீனமயமாக்கம், நாகர்கோவில்: காலச்சுவடு, 2014.

 

இராமமூர்த்தி, எல்., மொழியும் அதிகாரமும், தஞ்சாவூர்: அன்னம், 2005.

கணபதிப்பிள்ளை,க., ஈழத்து வாழ்வும் வளமும், சென்னை: பாரி புத்தகநிலையம், 1996.

 

சண்முகம், செ. வை., இலக்கண உருவாக்கம், புத்தாநத்தம்: அடையாளம், 2012.

 

சிவலிங்கராஜா, எஸ்., சரஸ்வதி, சிவலிங்கராஜா,. பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க்கல்வி, கொழும்பு –சென்னை: குமரன் புத்தக இல்லம், 2008.

 

செல்லப்பன், இராதா. கலைச்சொல்லாக்கம், சென்னை: அறிவுப் பதிப்பகம், 2006.

 

ஞானப்பிரகாச சுவாமிகள்., தமிழ்ச் சொற் பிறப்பாராய்ச்சி, சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2008.

 

நுஃமான், எம்.ஏ. (ப.ஆ), தொடர்பாடல் மொழி நவீனத்துவம், இலங்கை : இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 1993.

 

பட்டாபிராமன், கா., மொழிப்பயன்பாடு, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2007.

 

முருகையன், இ. மொழிபெயர்ப்பு நுட்பம் – ஓர் அறிமுகம், கொழும்பு – யாழ்ப்பாணம்: பூபாலசிங்கம் புத்தகசாலை, 2002.

 

ராஜலட்சுமி, சோ., தமிழில் மொழியியல் – ஆய்வு வரலாறு – இதழ்கள், சென்னை: காவ்யா, 2014.

 

ஜெபநேசன், எஸ். இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்க மிஷனும், கொழும்பு –சென்னை: குமரன் புத்தக இல்லம், 2007.

 

…………………………...   தமிழின் நவீனமயவாக்கமும் அமெரிக்க மிஷனும், கொழும்பு –சென்னை: குமரன் புத்தக இல்லம், 2007.

 

……………………………  இலங்கையில் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன், கொழும்பு –சென்னை: குமரன் புத்தக இல்லம், 2009.

 

அரசகரும மொழியாகத் தமிழ் – இலங்கை நிலையும் நிலைமைகளும், திருகோணமலை – வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு.

 

தமிழ்மொழிப் பிரயோகம் – கணக்கெடுப்பும் பிரச்சினைகளும் – ஆய்வரங்கக் கட்டுரைகள், திருகோணமலை – வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, 1997.

 

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, சென்னை: க்ரியா. 2008.

 

Ambi., Scientific Tamil Pioneer – Dr. Samuel Fisk Green, Colombo: Dhuhlasi Educational & Cultural Publications.1998.

 

James, Gregory., Colporul: A History of Tamil Dictionaries, Chennai: Cre-A, 2000.

 

Performance Report, Rajagiriya - Bhasha Mandiraya: Department of Official Languages, 2013.

………………………………………………

குறிப்பு: இக்கட்டுரையாக்கத்தில் உதவிய பத்மநாப ஐயர், மு.நித்தியானந்தன், பா. ரா. சுப்பிரமணியன், செ. வை. சண்முகம், பா. அகிலன், மணி. வேலுப்பிள்ளை, வேல்தாஸ் விமலா ஆகியோருக்கு நன்றி உரித்து. – கட்டுரை ஆசிரியர்.

நன்றி: தாய்வீடு - 2020 மே

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.