Jump to content

தடம் அழியா நினைவுடன் …


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தடம் அழியா நினைவுடன் … மே-13

அ . அபிராமி

‘டமார்’ என்ற ஒரு பேரோலி, அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த என்னை திடுக்கிட்டு விழிக்க வைத்தது. பொலுபொலு என்ற சத்தத்துடன் எறிகணைத் சிதறல்கள்  ஆங்காங்கே தகரத்தில் பட்டுத்   தெறித்தன. எறிகணைத் துண்டொன்று மண்மூட்டைக்கு மேல பட்டிருக்க வேணும் , சொர சொர என்று கழுத்துக்கு நேரே மண்ணைக் கொட்டியது. வாய் மூக்கு எல்லாம் ஒரே மண் சடாரென்று எழுந்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன்.

இப்போதும் வானத்தில் எரிந்து கொண்டிருந்தன வெளிச்சக் குண்டுகள். தலைக்கு மேலே நின்று இரைந்தபடி, படம்பிடித்துக் கொண்டிருந்தது ஆளில்லா விமானம். கொஞ்சம் கூட ஓய்வே இல்லாமல் அருகருகே வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்த ரவைகள், மோட்டார் ரக எறிகணைகள். எதுவும் சற்றுக்கூட ஓய்ந்ததாக இல்லை. மணிக்கட்டைப் பார்த்தேன்.நேரம் அதிகாலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

may-13.jpg

”அட நாலு மணிக்குத்தானே காவல் கடமைய மாத்தி விட்டனான். அதுக்குள்ள ஐந்து மணியாச்சா..”

இனி எப்படிப் படுத்தாலும் தூக்கம் வரப்போவதில்லை. தலைக்கு வைத்துப் படுத்திருந்த உடமைப் பையிலிருந்து சீப்பை எடுத்துத் தலையை வாரிக் கட்டிக் கொண்டேன். கீழே விரித்துப் படுத்திருந்த உரப்பையை மடித்து வைத்துவிட்டு முகம் கழுவ வெளியில் வந்தேன். தலையை உரசிக்கொண்டு போவதுபோல் சீறிக் கொண்டு போனது எறிகணை ஒன்று.

”அக்கா… உள்ளவாங்கோ.. கனோனால பொழியப்போறான்…ஓடி வாங்கோ..”

பக்கத்தில் காவல் கடமையில் நின்றவள் இரண்டு மூன்று அடி தள்ளி நின்ற என்னை அழைக்க பத்து வீடு கேட்க கத்தினாள்.அவள் சொல்லி வாய் மூடவில்லை. மூச்சு விடாமல் பொழியத் தொடங்கியது பல்குழல் எறிகணை.

”ம்.. விடியக் காத்தாலேயே தொடங்கீற்றான்… இண்டைக்கு எத்தின பேற்ற உயிரப்பறிக்கப் போறானோ தெரியேல்ல…”

அவள் வாய் முணுமுணுத்தது. அதற்குள் மற்றவள் தேனீரோடு வந்தாள்.

”கிடந்த சீனியப் போட்டுத்தான் தேத்தண்ணி ஊத்திருக்கு. இண்டையோட அதுகும் சரி .”

கிட்டத்தட்ட மூன்று நாலு நாளா இதையேதான் அவளும் சொல்லிக் கொண்டு இருக்கிறாள். ஆனால் விடிந்ததும் எப்படியோ தேத்தண்ணி ஊத்தித் தந்திடுவாள். நாங்கள் இப்போது இருக்கும் இடம் உண்டியல் சந்தியடிக்கு சற்று முன்னதாக இருந்தது. அந்த இடத்துக்கு வந்து இரண்டு நாடக்ள் தான் ஆகியிருந்தது. என்னோடு இன்னும் இரு போராளிகள். இசை செஞ்சோலையில் வளாந்தவள். கவி இரு மாவீரர்களின் சகோதரி.இருவருமே எந்தச் சூழ்நிலையிலும் களமுனைக்கு அனுப்பக்கூடாது என்ற தலைமைச் செயலகத்தின் உறுதி மொழியோடு நிற்பவர்கள்.

எமக்கு முன்னதாக அந்த இடத்தில் இருந்துவிட்டு சென்றவர்கள் அமைத்திருந்த பாதுகாப்பகழி இப்போது எங்களின் பாதுகாப்பிடமாக இருந்தது.

கிழக்கு வானம் மெல்ல வெளிக்கத் தொடங்கியது. ஆங்காங்கே மூட்டை முடிச்சுகளோடு மக்கள் நகரத் தொடங்கியிருந்தார்கள். பணியின் நிமிர்த்தம் முன்னரங்கிற்கு சென்று வர வேண்டிய தேவை எனக்கிருந்தது. புறப்படத் தயாரானேன்.

முன்னரங்கு என்பது பல கிலோ மீற்றர்கள் தள்ளி இருக்கும் இடமல்ல. நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒரு 800 மீற்றருக்கு உடப் ட்ட தூரம்தான். பொடிநடையாப்போனா 4-5 நிமிடத்தில் சென்று விடலாம். ஆனால் வண்டுக்கு மறைப்பெடுத்து, எதிரியின் தாக்குதல்களுக்கு காப்பெடுத்துச் செல்ல ஒரு மணி நேரத்துக்கு மேலாக எடுத்தது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்த தரப்பால் கொட்டகைகள் சுனாமி அழிவுக்குப்பின் கட்டப்பட்ட வீடுகள் என மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருந்த அந்தப் பகுதி இப்போது கொடும் சூறைக்காற்றில் சிக்குண்டு அழிந்த இடமாய்க் காட்சி தந்தது. சாம்பல் மேட்டின் மேல் நிற்பது போன்ற உணர்வு. காப்பகழிகளுக்குள்ளே புதைந்தும் புதைபடாமலும் கிடந்த உடலங்களின் நெடி நெஞ்சை நெருடியது. காகங்கள் அங்கும் இங்குமாய் பறந்து பறந்து மனித உடலங்களை தமக்கு இரையாக்கிக் கொண்டு இருந்தன.

அதற்குள் நின்றுதான் போராளிகள் எதிரியை எதிர்த்துக் களமாடிக் கொண்டிருந்தார்கள். களத்தில் நின்று போராடிக் கொண்டிருந்த போராளிகளின் மனவுறுதியை ஒப்பிட்டுச் சொல்ல எதுவுமே இல்லை.

ஆர்.பீ.ஜீ எறிகணை ஒன்று ஸ்ஸ்ஸ்.. என்ற இரைச்சலுடன் காதை உரசிச் சென்றது.விழுந்து படுத்தேன்.உடலில் ஏதாவது எறிகணைத் துண்டு பட்டிருக்கும் என்று நினைத்தேன்.ஆனால் அப்படி எதுவும் பட்டதாக தெரியவில்லை.

”அக்கா பார்த்து வாங்கோ…, நிமிர்ந்து நடந்தால் தலைதான் பறக்கும்…வென்ரெடுத்து வாங்கோ…”

முன்னரங்கில் நின்ற போராளி உரத்த குரலில் சொன்னான்.

ஒரு மாதிரி வென்ரெடுத்தபடியே முன்னரங்கை அடைந்தேன். குயிலினி என்னைக் கண்டு விட்டு  ஓடிவந்தாள். சுடரொளியின் கையில் பெரிய கட்டுபோடப்பட்டிருந்தது. அவள்தான் எங்களது அணியை வழிப்படுத்திக் கொண்டு இருப்பவள்.

”என்ன சுடர் காயப்பட்டத அறிவிக்கவே இல்லையே.. பின்னுக்கு வந்து மருந்தாவது கட்டியிருக்கலாம் தானே….”

அக்கறையோடு நான் சொன்னேன்.அவள் சிரித்தாள்.

”என்னக்கா..இதெல்லாம் பெரிய காயமே..இதவிடப் பெரிய காயக்காரர் எல்லாம் லைனில நிக்கிறாங்கள். இஞ்ச பாருங்க குறிபார்த்துச் சுட கண்ணிருக்கு..துப்பாக்கி விசை வில்லை அழுத்த வலக்கை விரலிருக்கு ..அதவிட என்னால முடியும் எனகிற மனத்துணிவு இருக்கு.. இதவிட வேற என்னக்கா வேணும்….”

அவளுக்குள் இருந்த ஓர்மம் என்னை நெகிழ வைத்தது. எவ்வளவு தற்துணிவு. எந்தப் படைவலுவாலும் தகர்க்க முடியாத ஆன்ம பலம் என்ற ஆயுதத்தைத் தாங்கி களங்களை நிறைத்து நிற்கும் இந்தக் காவல் தெய்வங்களை இந்த மண் ஒருபோதும் மறந்து போகக்கூடாது. எனக்குள் வேண்டிக் கொண்டேன்.

எனது பணியை முடித்துக் கொண்டு இருப்பிடத்துக்கு திரும்பியபோது நேரம் நண்பகலைக் கடந்து விட்டது.

எங்கும் களீர் பளீர் என்ற சத்தத்துடன் வெடித்துச் சிதறும் இரும்புத் துண்டுகள். எங்கே வீழ்கிறது எங்கே வெடிக்கிறது என்பதைக் புரிந்து கொள்ள முடியாவிடட் லலும் ஒவ்வொரு இடமாய்க் கேடகு; ம் எங்கள் உறவுகளின் அவலக்குரல்கள் அவை எங்கே வீழ்ந்திருக்கிறது என்பதை அடிக்கடி உணர்த்திக் கொண்டிருந்தது. எங்களது இருப்பிடத்தில் இருந்து சற்றுத் தள்ளி இருக்கும் அக்கா தலையை ஒரு துணியால் போர்த்தி மூடிக் கொண்டு குனிந்தபடியே ஓடி வந்தார்.அவருக்கும் எனக்கும் நீண்டநாள் பழக்கம்.

”வெளியில நிக்காதையுங்கோ..உள்ள வாங்க அக்கா..”

அவரையும் எங்கள் காப்பகழிக்குள் அழைத்தேன். இருந்து ஆறுதலாகப் பேசுமளவுக்கு சூழலில்லை.

”சின்னாக்களையும் வைச்சுக் கொண்டு இனி இதில இருக்கிறது கொஞ்சம் கூட பாதுகாப்பில்ல. நாங்க வெளிக்கிடப்போறம். அதுதான் சொல்லீற்றுப் போகலாம் எண்டு வந்தனான்.”

அந்த அக்காவின் முகத்தில் பதற்றம் கவலை என பலவித உணர்வுகள் ஓடிக் கொண்டிருந்தது. எப்போதும் துருதுருவென்று இருக்கும் அவர் விழிகளில் சொல்ல முடியாத சோகங்கள் நிறையவே தேங்கிக் கிடக்கும். ஆனால் இன்று அது வழமைக்கு மாறாக நிறையவே தெரிந்தது.

இந்த நெருக்கடியான சூழலுக்குள் ஐந்து சின்னச் சின்ன குழந்தைகள், கூடவே வயதான அம்மா அப்பா என ஒரு பெரும் குடும்பத்தை தனி ஒருவராகத் தாங்கிக் கொண்டு இருப்பவர் அவர்.

சுற்றுமுற்றும் விழிகளை ஓடவிட்டுவிட்டு இரகசியக் குரலில் என்னோடு பேசினார்.

”இஞ்சே..ராத்திரி பிள்ளைகள் எல்லாம் நித்திரைக்குப் போன பிறகு தங்கச்சியும் அவரும் வந்தவ”

அக்காவின் குரல் உடைந்து விழியோரம் கசிந்தது.

”ஏனக்கா.. ஏன் அழுகிறீங்கள். அழாதையுங்கோ அக்கா ”

அவரை ஆறுதல் படுதத் முயன்றேன்……

தொடரும்

 

https://www.thaarakam.com/news/129061

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்......இடையில இண்டர்வெல் விடாமல் தொடருங்கோ.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடம் அழியா நினைவுடன் … மே-13 – பகுதி 2

”எத்தனை பெரிய ஆக்களாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு அவை அம்மா அப்பாதானே.., அதுகும் சின்னவனுக்கு வடிவா ஒருவயது கூட ஆகேல்ல.., வாயால சொல்லத் தெரியா விட்டாலும் பிள்ளை அம்மான்ர அணைப்பைத் தேடி ஏங்கிறத ஒரு தாயா நான் உணர்ந்திருக்கிறன். பெரியவன் சொல்லவே தேவையில்ல.. அடிக்கடி அம்மா அப்பாவக் கேட்டு அடம்பிடித்து அழுவான்….பச்ச மண்ணுகள் தானே அதுகளுக்கு என்ன தெரியும்…”

may-15.jpg

பேசமுடியாது தடுமாறினார்.

”கொஞ்சம் தண்ணி குடிக்கிறீங்களாக்கா..”

போத்தலில் நிரப்பி வைத்திருந்த தண்ணீர் எடுத்துக் கொடுத்தேன். குடித்துவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினார்.

”இரவு ஒரு ஒன்பது மணி இருக்கும். இரண்டு பேரும்; வந்திச்சினம். எனக்கு மனசெல்லாம் இனம்புரியாத மகிழ்ச்சி. இப்பதான் பிள்ளையல் படுத்தவ. இரண்டுபேரையும் பார்த்தா சந்தோசப்படுவாங்கள். நான் பிள்ளையல எழுப்பீற்று வாறன்…”

ஓடிப் போக முயன்ற என்னை தங்கச்சிதான் தடுத்தாள்.

”வேண்டாமக்கா.., நாங்க பிள்ளைகள் படுக்க முதலே வந்திட்டம். இந்த தரப்பால் ஓட்டைக்குளால எல்லாத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனாங்கள். பிள்ளைகள் நித்திரையாப் போகட்டும் என்று வெளியிலேயே நிண்டிடட்ம்..”

எனக்குத்  தூக்கி வாரிப் போட்டது.

”ஏன்? பிள்ளைகள் பார்த்தா எவ்வளவு சந்தோசப்படுவாங்கள்.”

நான் பிள்ளைகள் நிலையிலிருந்து பேசினேன். அவள் தனது நிலையிலிருந்து பேசினாள்.

”நாங்கள் போகவேணுமக்கா.., பிள்ளையல் எங்களப் பார்த்து நிறைய நாளாயிற்று.., இப்ப பார்த்தா விடமாட்டாங்களக்கா…,நிலமையச் சொல்லிப் புரிய வைக்கும் பக்குவப்படட் வயசு அவன்களுக்கு இல்லை..,ஏற்கனவே அம்மா அப்பான்ர ஏக்கத்தில இருக்கிற பிள்ளைகளுக்கு கொஞ்ச நேர மகிழ்ச்சியக் குடுத்திட்டு அதத் திரும்பவும் பறிச்சிற்றுப் போகக்கூடாது..”

இருவரும் கதைத்துப்பேசி தங்களுக்குள்ள தீர்க்கமான முடிவெடுத்து விட்டுத்தன் வந்திருக்கினம். பிள்ளைகள் அழுது கவலைப்பட்டு மனம் வருந்துவதைப் பார்க்கின்ற தைரியம் அவர்களுக்கும் இல்லை.

வானத்தில் எரிந்து கொண்டிருந்த பரா வெளிச்சத்தில் அவள் முக உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் போர்க்கோலத்தில் கையில் ஆயுதங்கள் தரித்து எப்போதும் போல் கம்பீரமாகவே வந்திருந்தார்கள்.
கையில் இருந்த ஆயுதத்தை காப்பாகப் போடப்பட்டிருந்த மண்மூட்டை மீது பத்திமாக வைத்துவிட்டு காப்பகழிக்குள் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை ”ரோச்லைற்” வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

துயர் நெஞ்சை அடைக்க நான் வெளியால வந்திட்டன்.

”பெற்ற பிள்ளைகள அவர்களுக்கே தெரியாம மறைந்து நின்று பார்க்கிற கொடுமை எந்தப் பெற்றவர்களுக்குமே வரக்கூடாது.”

விம்மி வெடித்த அழுகையை அடக்கிக்கொண்டு தேனீர் தயாரிக்க வந்தேன்.

சத்தமின்றி பின்னாலே அவர்களும் வந்து விட்டார்கள்.

”தேத்தண்ணி ஒன்றும் வேண்டாமக்கா..நாங்க வெளிக்கிடப் போறம்..”

அதற்கு மிஞ்சி அங்கு நிற்பதற்கு இருவராலும் முடியாது என்பது எனக்குத்  தெரியும். அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டு வெளியில் வந்தார்கள். கடைசியா வெளியில வந்து என்னுடைய கையப் பிடித்து,

”அக்கா பிள்ளைகள் பத்திரம்.. திரும்பவும் எல்லாரையும்  பார்க்கிற சந்தர்ப்பம் எப்ப கிடைக்குமோ தெரியாது..நாங்க போயிற்றுவாறம் ..”

அவளது கை எனது கைகளை இறுகப்பற்றிக் கொண்டது. ”அக்கா போயிற்று வாறன்..பிள்ளைகள் கவனம்..”

இப்போதும் அந்தக் குரல் என் காதுகளில் எதிரொலித்தபடி இருக்கு. எப்போதும் கம்பீரமாக இருக்கும் அவளின் குரல் புறப்படும் நேரத்தில் உடைந்திருந்தது. என்னால தாங்க முடியேல்ல. நான் கலங்கினால் அவளும் கலங்குவாள். என்னைத் திடப்படுத்திக் கொண்டேன். ”

 நீ… பிள்ளைகளைப் பற்றி கவலைப்படாத, நானிருக்கிறன், கவலைப்படாம போயிற்றுவா..”

அவளை வழியனுப்பி வைத்திட்டன்.ஆனால் அதில இருந்து என்ர மனசு நிம்மதிய இழந்து தவிக்கிறமாதிரி இருக்கு. அவள் என்ர கையப்பிடித்த பிடியும் அதவிடேக்க இருந்த ஏதோ ஒருவித உணர்வும் இப்பவும் எனக்கு ஒரு மாதிரியாவே இருக்கு. பிள்ளைகளுக்கு முன்னால எதையும் வெளிக் காட்ட முடியேல்ல..

அவரது தவிப்பு எனக்குப் புரிந்தது.எதைச்சொல்லித் தேற்றுவது என்று புரியவில்லை. அவர் புறப்படத் தயாரானார்.

”அக்கா இப்ப நீங்க தைரியமா இருக்கவேண்டிய நேரம்…நீங்க உடைந்து போனா பிள்ளைகளப் பார்க்கிறது யாரு.. எல்லாம் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.கவலைப்படாம போயிற்று வாங்க அக்கா…, தாறு மாறா ரவுண்சுகள் கீசிக்கீசி வருது.. பாத்துப் பத்திரமா போங்கோ…. எதைப்பற்றியும் யோசிக்காதையுங்கோ.. இப்ப உங்கட மூன்று பிள்ளைகளோட தங்கச்சின்ர இரண்டு பிள்ளைகளுமா ஐந்து பிள்ளைகளப் பாதுகாக்கிற பெரும் பொறுப்பு உங்களிட்ட இருக்கு..

”ஏதேதோ ஆறுதல் சொல்லி அவரை அனுப்பி வைத்துவிட்டேன். ஆனாலும் அவர் சொன்ன கதையின் காட்சி என் மனக்கண்ணில் படமாய் வந்து கொண்டே இருந்தது.

நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. தங்கள் குழந்தைகளை விட, தாய்நாட்டைக் காப்பாற்றும் கடமையை நேசிக்கும் அந்த அர்ப்பணிப்பு எந்த அளவுகோலாலும் அளவிட முடியாதது.

இவர்களைப் போல இன்னும் எத்தினபேர்…. தங்கட பிள்ளைகளை பெற்றவர்களிடமும் உறவுகளிடமும் ஒப்படைத்து விட்டு  தாங்கள் வரித்துக் கொண்ட தேசவிடுதலைக் கனவை நெஞ்சினில் சுமந்து களத்தில நிற்கிறார்கள். அவர்கள் மீதான மரியாதை இன்னும் உயாந்தது.

பசி என்ற உணர்வு மரத்துப்போயிருந்தாலும் அடிக்கடி வெளியில் எட்டிப்பார்த்தபடி இருந்தாள் கவி. சாப்பாடு கொண்டு வரும் தம்பியை இன்னமும் காணவில்லை. இந்த குண்டு மழையைக் கடந்து அவனால் மட்டும் எப்படி வரமுடியும்.

”ஐயோ என்ர பிள்ளையக் காப்பாற்றுங்கோ.. என்ர பிள்ளையக் காப்பாற்றுங்கோ..”

கதறிக் கொண்டு ஒரு ஏழு வயது மதிக்கத்தக்க குழந்தையைக் கையில் ஏந்தியபடி ஓடிக்கொண்டு இருந்தார் நடுதத்ர வயது மதிக்கத்தக்க ஒரு தந்தை.அவரது முதுகிலும் இரத்தம் சொட்டிக் கொண்டு இருந்தது. கொஞ்சம் தள்ளி அவரது மனைவியாக இருக்கலாம்.நடக்க முடியாது அந்த இடத்திலேயே இருந்தபடி கதறிக் கொண்டு இருந்தார்.

” பத்து வருசமாத் தவமிருந்து பெத்த பிள்ள..எனக்கு முன்னால என்ர பிள்ளையப் பறிச்சிராத கடவுளே..”

கத்துவதற்குக் கூட திராணி அற்று இருந்தது அந்தத் தாயின் கதறல். ஓடிப்போய் இடுப்பில் கட்டியிருந்த சாரத்தைப் கிழித்து துடைப் பகுதியைச் சிதைத்து கொட்டிக் கொண்டு இருந்த இரத்தத்தைத் தடுத்து முடிந்தவரை கட்டுப்போட்டு விட்டேன். அந்த இடத்தில் அவரை அப்படியே விட்டுவிட்டுப் போக என்னால் முடியவில்லை.

அவரது நல்ல காலமாக இருக்கவேணும்.முன்னரங்கில் விழுப்புண்தாங்கிய போராளிகளை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தில் அவரை ஏற்றி விட்டேன்.

உடலெங்கும் இரத்தம் பிசுபிசுத்தது. அநத் குண்டு மழை நடுவிலும் மறைப்போடு இருந்த கிணற்றில் மளமளவென்று அள்ளிக் குளித்துவிட்டு ஓடிவந்தேன்.

வெளியில் உடுப்புகளக் காயவிடமுடியாது. உள்ளேயே உலரவிடடேன்.அதையும் விட்டால் மாற்று உடுப்பே இல்லாமல் போய்விடும்.

”அக்கா சாப்பாடு வருதாம்..வெளியில நிக்கட்டாம்..”

தொலைத் தொடர்புக் கருவியோடு இருந்த இசை சொன்னாள்.

அதற்குள் சாப்பாட்டோடு அவன் வந்து விட்டான்.

”அக்கா..எங்கட சமையல் கூடத்துக்கல்லோ அடி விழுநத்திட்டு. பாவம் சமைச்சுக் கொண்டு இருந்த ஐயாவும் ஒராள் காயப்பட்டிட்டார். அதுதான் நல்லா நேரம் போயிற்று. இரவு சாப்பாடு வராது..இதை வைச்சே சமாளியுங்கோ…”

அவன் அடுதத் இடத்துக்கு சாப்பாடு கொண்டு போகும் அவசரத்தில் ஓடிவிட்டான்.

சோற்றையும் பருப்புக் கறியையும்; ஒன்றாக கலந்து ஒரு சொப்பின் பையில் கட்டியிருந்தார்கள்.அதுகும் வழமையை விட குறைவாகத்தானிருந்தது. கவி ஓடிவந்து அதை வாங்கினாள்.

” அக்கா முதல் இருக்கிறத இப்ப சாப்பிடுவம்.. இரவப்பற்றி பிறகு யோசிப்பம்..”

அவள்தான் இருந்த மூன்று பேருக்கும் சாப்பாட்டைப் பங்கிட்டாள். உணவின் சுவையைப்பற்றியோ.. இல்லைப் போதும் போதாது பற்றியோ யாரும் எதுவும் மூச்சு விடவில்லை.

பொழுது சாயத் தொடங்கியிருந்தது. அந்த இடத்தை விட்டு  கிட்டத்தட்ட அனைவருமே வெறியேறி விட்டார்கள். வானத்தில் பரா வெளிச்சக் குண்டுகள் ஒளியேற்றத் தொடங்கியிருந்தன.

” அக்கா உங்களக் கதைக்கட்டாம்…”

தொலைத் தொடர்புச் கருவியோடு வந்தாள் இசை.

அந்த இடத்தை விட்டு வெளியேறும்படியான கட்டளை.

எப்போதும் தயாராக இருக்கும் எமது துப்பாக்கிகளோடு எமது உடைமைப் பைகளையும் தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம்.

 தொடரும்…


 

https://www.thaarakam.com/news/129065

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடம் அழியா நினைவுடன் … மே-13 பகுதி -3

Last updated May 13, 2020

இரவு நேரந்தான், ஆனாலும் எல்லாம் பகல்போலதான் இருந்தது. சிறிலங்காப் படைகள் தமது அச்சத்தைப் போக்க இயற்கையின் இருளை மறைத்து வானத்தில் பரா வெளிச்சக் குண்டுகளால் ஒளிப்போர்வையை போர்த்தபடி இருந்தார்கள். வேவுவிமானம்  தலைக்கு மேலால் சுற்றிக்கொண்டுதான் இருந்தது. எதிரியின் படைக்கலங்களிலிருந்து பாய்ந்துவரும் ரவைகளும் எறிகணைகளும் வீழ்ந்த வண்ணம்தான் இருந்தன. மக்களும் பாதுகாப்பைத்தேடிநகர்ந்து கொண்டுதான் இருந்தார்கள். நாங்களும் மெல்ல மெல்ல கால்போன போக்கில் நடந்து வட்டுவாகல் பகுதியை அண்டிய இடத்தை அடைந்திருந்தோம்.

may-14.jpg

அந்தப்பகுதி எமக்கு பழக்கமான இடம்தான். எங்கள் கடற்சண்டையணிகளின் பெரும் தளமாக அது இருந்தது. அடர்நத் பனைமரத் தோப்பு, பற்றைக் காடுகள், மணல்நிறைந்த வெட்டவெளியென பலதரப்படட் நிலப்பரப்பைத் தாங்கியிருந்த அந்த நெய்தல்மண் இப்போது அனைவரையும் சுமக்கத் தொடங்கியிருந்தது.

நாங்களும் அந்த இடத்தில்  பற்றைகளாய் கிடந்த ஒருபகுதியை எமக்கான இடமாக்கி பாதுகாப்பகழியை அகழத் தொடங்கினோம்.

மண்ணை வெட்டுவதற்கான எந்த உபகரணமும் இப்போது எங்களிடம் இல்லை. கையில் எம்பிட்ட தடியொன்றை எடுத்து கிண்டிக்கிண்டி கையாலே மண்ணை வெளியில் எடுத்தோம். அது மணற்பாங்கான இடமாக இருந்ததால் மூன்றுபேரும் முழுமூச்சாக நின்று குறுகிய நேரத்திலே காப்பகழியை அமைத்து விட்டோம்.

பக்கத்தில் ஒரு குழந்தையின் அழுகுரல் நாங்கள் காப்பகழி வெட்டத் தொடங்கிய நேரத்தில் இருந்தே மாறி மாறிக் கேட்டுக் கொண்டு இருந்தது. ஆனால் இப்போது அந்தக் குழந்தையின் குரல் அடைத்துப்போயிருந்தது. களைத்துப்போய் அமைதியாகும் குழந்தை மீண்டும் சிலநொடிகளிலே அழத்தொடங்கிவிடும். ஏன் குழந்தை அழுகிறது? நித்திரைக்கு அழுகிறதா? இல்லைப் பசியால் அழுகிறதா? எதுவும் எங்களுக்குப் புரியவில்லை. அதற்கு மிஞ்சியும் அந்த அழுகுரலைக் கேட்டுக்கொண்டு இருக்க மனம் பொறுக்கவில்லை. குயிலைக் காப்பகழியடியில் இருத்தி விட்டு நானும் கவியுமாய் குழந்தை அழும் இடத்தை அடைந்தோம்.

பாதுகாப்பகழி எதுவுமில்லாமல் பற்றையருகே ஒரு உருவம் குழந்தையை மடியில் வைத்திருப்பது தெரிந்தது. பக்கத்தில் சிறிய உருவம் ஒன்று நிலத்தில் படுத்திருந்தது.

”அக்கா.. அக்கா …”

மெல்லக் குரல் கொடுத்துப் பார்த்தோம் எந்தப் பதிலுமில்லை. கொஞ்சம் உரக்க கூப்பிட்டுப்பார்த்தோம்..

”அக்கா அக்கா…”

”யார் ..என்னையா கூப்பிடுறீங்கள்..”

ஓர் ஆண்குரல். அக்கா என்று நினைத்து அழைத்தால் அது அண்ணாவாக இருக்கே..மனதிற்குள் ஒருமாதிரியாக உணர்ந்தாலும் சமாளித்துக் கொண்டோம்.

”குழந்தையின்ர அம்மா எங்க…, நிறைய நேரமா பிள்ளை அழுது கொண்டே இருக்கே…அதுதான்..”

கேட்க நினைத்ததைக் கேட்டுவிட்டோம்.

”அவா போயிற்றா..எங்க எல்லாரையும் விட்டிட்டுப் ஒரேயடியா போயிற்றா.. விழுந்த செல் எங்க எல்லாரையும் ஒன்றாப் பறிச்சின்ரு போயிருக்கலாம்… இப்ப எங்களத் தவிக்கவிட்டிட்டு போயிற்றா..”

அந்த அண்ணா வாய்விட்டு அழத்தொடங்கி விட்டார். நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அந்தத் துயர் எங்கள் நெஞ்சையும் அடைத்தது. அடுத்துப் பேசமுடியாது அமைதியானோம். அந்த அண்ணாவே தன்னைச் சமாளித்துக் கொண்டு பேசினார்.

”பிள்ள பசியிலதான் அழுகிறாள்.. நாங்க இருந்த இடத்திலேயே எல்லாத்தையும் விட்டிட்டு வந்திட்டம். பிள்ளைக்கு தண்ணி கொடுக்க ‘பால்புட்டி’ கூட எடுத்திற்று வரேல்ல..  பக்கத்தில பிள்ளை அழுகிறதப் பார்த்தவர்கள் தேத்தண்ணி ஆத்திக் கொண்டு வந்து தந்தவை.. பிறந்து பத்து மாதம்தான்.. கப்பால பிள்ளைக்கு வடிவா குடிக்கத் தெரியல்ல.., மூதத்வன் தாய் சிதறிக் கிடந்தத கண்ணுக்கு நேர பார்த்தவன்.. பிள்ளை பயந்து போய் இருக்கு.., என்னோட கூட எதுவும் பேசிறானில்ல.., பயந்து படுத்திருக்கிற பிள்ளையப் பார்க்கிறதா இல்லை பசியில அழுகிற பிள்ளையப் பார்க்கிறதா எதுவுமே புரியாம நான் குழம்பிப் போயிருக்கிறன்….”

விம்மி விம்மி அழும் அந்த அண்ணாவுக்கு ஆறுதல் சொல்ல முடியாதவர்களாக அப்படியே உறைந்துபோய் நின்றோம்.

”..நாங்கள் உண்டியல் சந்திக்கு அங்கால நந்திக்கடல் பக்கமாத்தான் இருந்தனாங்கள்.. பொழுதுசாயிற நேரமா எங்கட பக்கத்தால துடைச்செடுத்திட்டான்…ஒரு மூடின பங்கருக்கதான் நாங்க இருந்தனாங்கள்…, செல் ஒன்று கூவிக்கொண்டு வந்தது.., மடியில வைத்திருந்த பிள்ளையக் காப்பாற்ற பிள்ளைக்கு மேல அவள் விழுந்து படுத்து  ஒரு நொடிக்க கண்ணுக்கு முன்னாலேயே அவள்
சிதறிப்போனாள்..

என்னால நம்பவே முடியல ..எல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு..ஆனா எல்லாம் நடந்து முடிந்து போயிற்று… அவளுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட இன்னும் விடேல்ல.. அந்த பங்கருக்குள்ளேயே அவளப் அப்படியே விட்டிட்டு வந்திட்டன்..”

அவருக்கு சொல்லி அழுவதற்கோ, துன்பத்தில் பங்கெடுத்து ஆறுதல் சொல்வதற்கோ யாரும் இல்லை. முதல்முதலாக தனது துயரை எங்களிடம் தான் பகிர்ந்து கொள்கிறார்.அவரின் ஆற்றாமையை அதன் வலியை எங்களால் உணர முடிந்தது.பொதுவாகவே மற்றவர் துயரைத் தாங்கமுடியாத எங்களால் எம்மையறியாமல் வழிந்தோடும் கண்ணீரைக் கட்டுபப்டுதத் முடியவில்லை..

கவி எனது கைகளை இழுத்துக் கொண்டு சற்றுத் தள்ளி கூட்டி வந்தாள்.

”அக்கா அந்தப்பிள்ளையப் பார்க்க பாவமா இருக்கு.. பச்ச மண் பசியால துடிக்கிது.. கொஞ்ச அங்கர்மாவும் சீனியும் கிடக்கு கொடுப்பமா..”

”இருந்தா ஓடிப்போய் எடுத்தின்ரு வா..”

அடுத்தநொடி அவள் பால்மாவும் சீனியோடும் வந்து நின்றாள். கவி சிறந்த நிர்வாகி. இல்லையில்லை என்று சொல்லிச்சொல்லியே ஒவ்வொருநாளும் தேனீர் தருபவள். அதையும் விட இவ்வளவு மிச்சமாகவும் வைத்திருக்கிறாள். ஆச்சரியமாக இருந்தது.

”அதுசரி அக்கா அழுதுகொண்டு இருக்கின்ற பிள்ளைய வைத்துக் கொண்டு என்னென்று பிள்ளைக்கு பால்மா கரைக்க முடியும்..”

அவள் கேட்பதிலும் நியாயம் இருந்தது. நேரத்தைப் பார்த்தேன் அதிகாலை 3.50 தான் ஆகிறது. அந்த நேரத்திலும் ஆங்காங்கே அடுப்புகள் எரிந்துகொண்டுதான் இருந்தன.பலர் இன்னும் நடமாடிக் கொண்டுதான் இருந்தார்கள்.

”சரி வா பாப்பம்..”

இருவரும் அடுப்பு எரிந்து கொண்டிருந்த ஓர் இடத்தடிக்குச் சென்றோம். மறைப்பு எதுவுமில்லை. வெட்டவெளியான இடத்தில் வடட் வடிவில் மணலை ஒதுக்கி பாதுகாப்பரண் அமைத்திருந்தார்கள். அதற்குள் மூன்று நாலு பேர் படுத்திருப்பது தெரிந்தது. அடுப்படியோடு நிற்பது ஒரு அக்கா என்பது தெளிவாகத் தெரிந்தது. பக்கத்தில் மண்ணரணில் சாய்ந்தபடி ஒருவர் இருந்தார். அந்தக்காவிடம் கேடப்தென்று முடிவெடுத்தோம்.

”அக்கா..”

கவிதான் மெல்ல அழைத்தாள்.

”யாரது..”

பதற்றத்தோடு மண்ணரணில் சாய்ந்திருந்தவர் எழும்பினார்.

” அது நாங்கள்.. ” எங்கள் உடை நாங்கள் யாரென்பதை அடையாளம் காட்டியிருக்க வேண்டும்.

” என்ன தங்கச்சியவை…”

அந்த அண்ணா கேட்டபோது குழந்;தை பசியால் அழுவதைப்பற்றியும் அந்தக்குழந்தையின் தாய் இறந்ததைப்பற்றியும் சொன்னோம்.எங்களிடட் கொஞ்சம் மாவும் சீனியும் கிடக்கு சுடுதண்ணி இருந்தா கொண்டுபோய்க் கொடுகலாம் என்றுதான் வந்தனாங்கள்  நிலமையை அவர்களுக்கு சொன்னபோது அவர்கள் கவலைப்படட் தோடு நின்றுவிடாது அவர்கள் துயரை தம்துயராக நினைத்து உதவவும் முன்வந்தார்கள்.

”குழந்தையின்ர அழுகுரல் ஒன்று மாறிமாறிக் கேட்டுக் கொண்டுதான் இருந்தது.இப்படியென்று தெரியாமப் போச்சே.. நாங்களும் மூன்று குழந்தைகள வைச்சுக்கொண்டுதான் இருக்கிறம்.யாருக்கு எந்த நேரம் என்ன நடக்கும் என்று தெரியாது.., இந்த நேரத்தில சகமனிதனுக்கு சகமனிதன்தான் உதவி செய்யவேணும்..,குழந்தை குடிக்கிற பால்மா எங்களிட்ட இருக்கு.. மீனா நீ பிள்ளைக்கு பால்மாவைக் கரை நான் அவையக் கூட்டீன்ரு வாறன்…”

கருணை உள்ளங்களில்தான் கடவுள் இருப்பார். கடவுளை நேரில் பார்த்த மாதிரி இருந்தது.

”வாங்க தங்கச்சியவை போவம்..”

உற்சாகமாக எழுந்து வந்தார் அந்த அண்ணா.இப்போதும் எங்கள் விழிகள் கனத்தன துயரில் அல்ல அவருக்குள் இருந்த மானிட நேயத்தைப் பார்த்து.

”எனக்கும் ஒரு தங்கச்சி மாலதி படையணியில இருந்தவள். புளியங்குளச் சண்டையில அவள் வீரச்சாவடைந்திட்டாள்..

அந்த அண்ணர் சொல்ல வந்த கதையைச் சொல்ல விடாது தடுதத்து அந்தக் குழந்தையின் அழுகுரல்.

” அட கடவுளே .. அழுதழுது பிள்ளையின்ர குரலே அடைச்சுப் போயிற்ரே..”

கூறிக் கொண்டே வேகமாய் குழந்தை இருந்த இடத்தை அடைந்தார். இருவரும் முன்பின்; அறிமுகமில்லாதவர்கள்தான். ஆனாலும் உரிமையோடு குழந்தையின் தந்தையை அழைத்தார்.

”வாங்க தம்பி எங்கட இடத்துக்குப்போவம்.. பிள்ளை பசியால அழுதழுது களைத்துப் போயிற்று…தனிய உங்களால சமாளிக்க முடியாது.. வாங்க..தம்பி..”

அவரது கையில் இருந்த குழந்தையை வாங்கினார்.

”நீங்க மற்றப் பிள்ளையத் தூக்குங்கோ.. பயப்படாம என்னோட வாங்க.., தங்கச்சியவை சொல்லாட்டா எனக்குத் தெரியாது…,தங்கச்சியவை நீங்க இதிலதானே இருக்கிறீங்கள்?”

எங்கள் பதிலைக் கூட எதிர்பார்க்காது குழந்தையை அணைத்துக் கொண்டு மளமளவென நடக்கத் தொடங்கினார். அந்த அண்ணாவின் பின்னே பிள்ளையைத் தூக்கிக் கொண்டு மற்ற அண்ணாவும் புறபடத் தயாரானார்.

”நன்றி தங்கச்சியவை..பத்திரமா இருங்கோ..” இருவரும் ஒருவர்பின் ஒருவராகச் சென்று கொண்டிருந்தார்கள் மனதில் பெரும் சுமை இறங்கியது போன்ற உணர்வு..

”அட இதக் கொடுகக் மறந்திட்டமே..”

கவி கையில் வைத்திருந்த சீனியையும் மாவையும் காட்டினாள்.

”ஓடிப்போய் கொடுத்திற்று வா.. சிறியவர்களை வைத்திருப்பவர்களுக்கு உதவியா இருக்கும்”

அவள் பின்னால் சென்ற அண்ணனிடம் கொடுத்து விட்டு ஓடி வந்தாள்.

இருவரது மனசிலும் பெரிதாக சாதித்து விடட் திருப்தியும் மனநிறைவும் இருந்தது. கிழக்கு வானில் விடிவெள்ளி பூகக்த் தொடங்கி இருந்தது. மகிழ்வோடு எங்கள் இருப்பிடத்தை அடைந்தோம்.

தொடரும்…

 

https://www.thaarakam.com/news/128848

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடம் அழியா நினைவுடன் … மே 14 – அ. அபிராமி

அதிகாலை 6 மணியிருக்கும்..
எனது பொறுப்பாளரிடம் இருந்து அவசர அழைப்பு.
”களமுனைகளில் நிற்கும் போராளிகளின் விபரங்களோடு உடனடியாக என்னைச் சந்தியுங்கோ”

எந்த நேரத்திலும் எனக்கான அழைப்பு வரும் என்பது தெரிந்திருந்ததால் அதற்கான தயார்ப்படுத்தலோடு காத்திருந்தது நல்லதாப் போச்சு.அழைப்பு வந்த மறுநொடியே
எப்போதும் என்னோடு இருக்கும் தோல் பையையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.

may-145.jpg

”அக்கா தேத்தண்ணி வைக்கப்போறன் குடிச்சிட்டுப் போகலாமே..”

கவி மறித்தாள்;.அந்த இறுக்கத்திலும் சிரிப்பு வந்தது.

”இன்னும் சீனி இருக்கா..”

நான் வியப்போடுதான் கேட்டேன்.

”இண்டைக்கு மட்டும் தொட்டுக் குடிக்கக் காணுமக்கா..”

அவள் நமட்டுச் சிரிப்போடு சொன்னாள்.

”எனக்கு நேரம் போயிற்று..நான் வெளிக்கிடப்போறன்..,நீங்க தேத்தண்ணி வைச்சுக்
குடியுங்கோ. கவனமா இருங்கோ, தாறுமாறாப் பொழியிறான் கண்டபாட்டில வெளியில
வராதீங்க..”

அவர்களிடமிருந்து விடைபெற்றேன். எப்போதும் எனது பயணங்களின் போதெல்லாம்
வழித்துணையாய் என்னைச்சுமந்து பறக்கும் உந்துருளி இப்போது என்னிடம் இல்லை. எத்தனையோ தடவை என் உயிரை அது தன்னுடைய வேகத்தினால் பாதுகாத்துத் தந்திருக்கின்றது.

தேவிபுரம்-கைவேலி வெட்டவெளி, இரணைப்பாலை -பொக்கணை வெளி, வலைஞர்மடம் -இரட்டைவாய்க்கால் வெளியென இராணுவத்தின் பல்குழல் எறிகணைகள் வீழந்து வெடிக்கும்
இடங்களிலெல்லாம் என்னைப் பத்திரமாய்க் காவிவந்து சேர்க்கும். உண்டியல் சந்திக்கு நாங்கள் வந்த அன்றே எறிகணைத் துண்டொன்று பட்டு முன்பக்கத்தால் சிதறி,தலையிழந்த
முண்டமாய்க் கிடந்த என்னுடைய உந்துருளியை இப்போது நினைத்தாலும் கவலையாக இருந்தது. அது
இருந்தால் கூட இப்போது ஓடக்கூடிய நிலமையில் இல்லை.

”ஸ்ஸ்ஸ்..” என்ற சத்தத்தோடு எனக்கு இரண்டடி முன்னே வந்து குத்தியது உந்துகணை ஒன்று.

எனது வாழ்வின் முற்றுப்புள்ளி இந்த இடத்தில்தான் என எண்ணியபடியே கண்களை இறுக மூடிக் கொண்டேன். சாவைப்பற்றிய அச்சம் ஒருதுளியும் எனக்கு இருக்கவில்லை. ஆனால்
விழுப்புண் பட்டுவிடக்கூடாது என்று மட்டும் உள்மனம் வேண்டிக்கொண்டது.சில நொடிகள்
கழிந்தன கண்களை மெல்லத் திறந்தேன்.வீழ்ந்த உந்துகணை வெடிக்காது மணலில் புதைந்து கிடந்தது.

‘அட அதுகூட என்னக் கண்டு பயந்திட்டுப் போல..| எனக்குள் சிரித்துக் கொண்டு விறுவிறுவென மணலில் கால்புதைய நடக்கத் தொடங்கினேன். எனது காலணியும் இன்றோ நாளையோ என்று தனக்கான ஓய்வை எச்சரித்துக் கொண்டு இருந்தது.மணற்பாங்கான இந்த இடத்தால் நடப்பதைவிட பிரதான வீதியைப் பிடித்து நடந்தால் விரைவாகச் சென்று விடலாம்.வீதியைப் பிடித்து நடக்கத் தொடங்கினேன்.

கடற்கரையில் நங்கூரமிட்டிருக்கும் கப்பல்கள் போல வீதியின் மருங்கில் நீள்வரிசை கட்டிநின்றன போக்குவரத்து ஊர்திகள்.அந்த இடங்களை அண்டியும் மக்கள் செறிவாக இருந்தனர்.சில ஊர்திகள் எறிகணைகளால் சிதைந்து கிடந்தன. கொஞ்சம் முன்னே நடக்க நடக்க மக்களின் நடமாட்டம் குறைந்து கொண்டே சென்றது. ஆங்காங்கே ஒருசில போராளிகள் தவிர கிட்டத்தட்ட சூனியப்பிரதேசமாக அந்தப் பகுதி இருந்தது.

நான் நடந்து சென்ற தெருவில் ஒரு வயதான பாட்டியின் உடல் சிதைந்து ஈக்களும் புழுக்களும் மொய்த்துக் கிடந்தது.நெஞ்சை அடைக்கும் துயரோடு அதையும் கடந்து சென்றேன்.அடுத்து நான்
திரும்ப வேண்டிய சந்திக்குக் காலடி எடுத்து வைக்க முதலே அந்த இடத்தின் கோரத்தை சொல்வதுபோல் பிணநெடி மூக்கில் பக்கென்று அடித்தது.

என் முதல் பார்வையிலே கண்ணில் பட்டது அந்தக் காட்சிதான்.சிதைந்து கிடந்த தரப்பால் கொட்டில், உயிர்காக்க அமைத்த காப்பகழி, பாதுகாப்புக்கு அடுக்கியிருந்த மண்மூட்டைகள்
நடுவே பாதிஉடல் காப்பரணுக்குள்ளும் வெளியே தலைப்பகுதி தெரிய ஒரு பெண்ணின் உடல். அதனருகே சுருண்டபடி படுத்திருந்தது ஒரு நாய்க்குட்டி.

அந்தநாய்க்குட்டி நான் நடக்கும் அரவத்தைக் கேட்டு துள்ளிக் குதித்தபடி குரைத்துக் கொண்டு ஓடி வந்தது. இறந்து கிடக்கும் அந்தப் பெண அதன் எஜமானியாக இருக்கலாம். நான் அதன் அருகே
செல்லாததைக் கண்டு மீண்டும் தன் இடத்தில் போய்ச் சுருண்டு படுத்தது. அந்த உடலை வேறு எந்தப் பிராணிகளும் அண்டவிடாது அது பத்திரமாய் நன்றியோடு தன் காவல் கடமையை செய்து கொண்டிருந்தது. துயரில் கண்கள் பனித்தன.

இந்த அவலங்களைத் தாங்கும் சக்தியின்றி, விழிகளை வீதியில் செலுத்தியபடி நடக்கத் தொடங்கினேன்.மிக அருகில் யாரோ நடக்கும் சத்தம் என்னையறியாமலே என் வலக்கை தோல்பைக்குள் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்தது. இடக்கை நான் அணிந்திருந்த குப்பியை எடுத்து வாய்குள் கொண்டுசென்றது.

முன்னெச்சரிக்கையோடே சத்தம் வந்த திசையை மெல்லக் கூர்ந்து பார்த்தேன்.ஒரு ஐயா மண்வெட்டியோடு வந்துகொண்டிருந்தார். பதற்றத்திலிருந்து மெல்ல விடுபட்டேன்.

”இஞ்ச என்னையா செய்யிறீங்க..”

அந்த ஐயாவின் உடல் வியர்த்துப் போயிருந்தது.

”அது பிள்ள.. நேற்று பின்னேரம் செல்விழுந்து என்ர பேரப்போடியன் அந்த இடத்திலேயே போயிற்றான்.என்ர மனிசிக்கு இடுப்புக்கு கீழ அப்படியே சிதறிப் போச்சு.. தலையிலும் பெரிய காயம்.. கண்ணுக்கு முன்னால அவளின்ர உயிர் பிரிந்து   கொண்டு இருந்தது…என்ர பேத்திக்கு காலில பெரிய காயம்..அவள் காப்பாற்றக்கூடிய
நிலையில இருந்தாள். ஒன்றுமே செய்ய முடியாத நிலை..குற்றுயிராக் கிடந்த மனைவியை அப்படியே விட்டிட்டு பேத்தியைத் தூக்கீன்ரு ஓடிப்போயிற்றன்…,ஆனா இரவு முழுக்க ஒரே குற்ற உணர்வா இருந்திச்சு.. அதுதான் விடிஞ்சதும்  டியாததுமாக ஓடிவந்து
இரண்டுபேரையும் ஒரே இடத்தில புதைச்சிற்று வாறன்..”

பேசிக்கொண்டு இருக்கும்போதே அந்த ஐயாவுக்கு மூச்சு வாங்கியது. வலிகளுக்கு மேல் வலிகளைச் சுமந்து வைரம்பாய்ந்திருக்கும் அவருக்கு, வெளியே கண்ணீர் வராவிட்டாலும் அவரது உள்ளம் ரணமாய் கொதிப்பதை என்னால் உணரமுடிந்தது.

”பிள்ளைகளின்ர அம்மா அப்பா எங்க..”கேட்கவேண்டும் போல் வாய்வரை வந்த கேள்வியை எனக்குள் அடக்கிக் கொண்டேன்.

”சரி பிள்ள, பார்த்துப் பத்திரமா போங்க..”

அந்தஐயா விடைபெற்றுக் கொண்டார்.ஆனால் அவரது துன்பச் சுமையையும் சேர்த்து இப்போது நான் சுமக்கத் தொடங்கினேன்.

குற்றுயிராய்க் கிடந்த உறவுகளை எடுத்துச் செல்லவும் முடியாமல் விட்டுப் போகவும் முடியாமல் தவிக்கும் அந்த வலியை இன்னும் எத்தனைபேர் சுமந்திருக்கிறார்களோ தெரியாது.., எண்ணச்சிறகுகளின்  வேகத்தோடே கால்களும் நான் செல்லவேண்டிய இடத்தை அடைந்தது.

சுற்றி எங்கும் கரும்புகையும்,கந்தக நெடிலும், இரத்தவாடையும், பிணமணமுமாய் வயிற்றைக் குமட்டியது. அந்த சூழலுக்குள்தான் தான் பெரும் கிளைபரப்பி விழுதெறிந்து நின்ற ஆலமரத்தின் கீழ் அந்தக் கட்டளை மையம் இயங்கிக் கொண்டிருந்தது. என்னைப் பார்த்தவுடன் பாதுகாப்புக் கடமையில் நின்ற போராளி ஓடி வந்தான்.

”என்ன தம்பி இப்படி மணக்குது ..”

மூக்கைப் பொத்திக் கொண்டே அவனிடம் கேட்டேன்.

”அதக்கா ..பக்கத்திலதான் மருத்துவமனை இயங்கினதாம்..அத அடிச்சு துடைச்செடுத்திட்டான்…நகரமுடியாத ஓடமுடியாத காயங்களோட இருந்தாக்களெல்லாம் அந்தந்த
இடத்திலேயே செத்துச் செத்துக் கிடக்கினமாம்..”

உள்ளம் பதறியது. மருத்தவ மனைகள், பாதுகாப்பு வலயங்களைக்கூட விட்டு வைக்காது கொலைவெறித்
தாண்டவம் புரியும் அரச பயங்கரவாதத்தின் மீது கடும் கோபம் வந்தது. எப்பொழுதுமே தமிழினம் இவர்களை மன்னிக்கக்கூடாது. எனக்குள் சபித்துக் கொண்டேன்.

”அக்கா ஏதாவது சாப்பிட்டீங்களா..?இண்டைக்கு உங்களுக்குத்தர எங்களுட்டும் ஒண்டும் இல்ல..,இந்தா இதத்தான் நாங்களும் சாப்பிட்டனாங்கள்..,நீங்களும் எடுங்கோ அக்கா..”

நாள் முடிந்துபோன உடைத்த சிறிய பிஸ்கட் பையை நீட்டினான்.

”பரவாயில்ல தம்பி..நான் வெளியால போறனான்தானே ஏதாவது சாப்பிடக் கிடைக்கும்..நீங்க இத வைச்சிருங்கோ..ஆபத்துக்கு உதவும்…”

அதற்குள் உள்ளிருந்து ஒருவன் ஓடிவந்தான்.

”அக்கா உங்கள வரட்டாம்..”

அவன் பின்னே நானும் உள்ளே சென்றேன்.

உள்ளே சூசையண்ணா தொலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தார்.

அவர்பேசுவது எனக்குத் தெளிவாக விளங்கியது.

‘ஒருவர் தொலைபேசியில் உரையாடும்போதுஅதைக் கேட்பது அழகில்லை’

என்பதைப் புரிந்து நான் வெளியில் வரத் திரும்பினேன்.
சூசையண்ணா அமரும்படி கையசைத்தார். அமர்ந்து கொண்டேன்.
இப்போது சூசையண்ணாவுடன் எதிர்முனையில் பேசிக் கொண்டு இருப்பவர் யார் என்பது எனக்குத் தெளிவாகத் புரிந்தது.

‘சிறிலங்காப் படைகளின் தாக்குதல்களால் குழந்தைகள் சிறியவர்கள் பெரியவர்கள் என்ற வேறுபாடு இன்றி நொடிக்கு நொடி மக்கள் சாவடைந்து கொண்டு இருப்பதைப்பற்றியும், மருந்தில்லாமல், சாப்பாடு இல்லாமல் உயிரோடு மக்கள் சாவடைந்து கொண்டு இருக்கும் அவலம் பற்றியும் எடுத்துச் சொல்லிக் கொண்டு இருந்தார்… எப்படியாவது எங்கட மக்களப்
பாதுகாப்பா வெளியேற்றுவதற்கு ஏதாவது முயற்சி எடுக்கும்படி அவர் கேட்டுக் கொண்டிருந்தார்…’

மக்களுக்கு ஓர் ஆபத்து என்றால் அவர் எப்படித் துடிப்பார் என்பதை பலமுறை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்.எந்த மக்களின்ர விடுதலைக்காகப் போராடினார்களோ அந்த மக்களை அரச பயங்கரவாதம் கொன்றொழித்துக் கொண்டு இருப்பதை பார்த்து அவர் தவிக்கும் தவிப்பு அவர் பேச்சிலே வெளிப்படையாகத் தெரிந்தது.எப்போதும் கம்பீரமாக பேசும் அவரது பேச்சில் ஒருவித நெகிழ்வு இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

தொலைபேசியை துண்டித்தபின் என்னோடு பேசினார். அவரது பேச்சில் எப்படியாவது மக்களைப் பத்திரமாக பாதுகாத்துவிட வேண்டும் என்ற தவிப்புத்தான் அதிகம் தெரிந்தது. அடுத்து நான் செய்யவேண்டிய பணிகளைத் தெளிவு படுத்தினார்;.நானும் கொண்டு சென்ற சென்ற விபரங்களைப் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.ஏதோ இனம்புரியாத உணர்வு என்னை ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தது.

தொடரும்…

 

https://www.thaarakam.com/news/129072

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடம் அழியா நினைவுடன் … மே 15 -பகுதி – 1 அ. அபிராமி

 

வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. எனது பாதணிகளையும் மீறி சுடுமணல் காலைச் சுட்டுக்
கொண்டிருந்தது. ஆனாலும் அந்த உணர்வே தெரியாது நடந்து கொண்டிருந்தேன். அந்தப்பகுதியில் மக்களின் நடமாட்டம் இல்லை. ஏன் எப்போதும் தலைக்கு மேலே இரைந்தபடி சுற்றிச்சுற்றி வெறுப்பேற்றிக் கொண்டு இருக்கும் வண்டின் சத்தம் கூட இல்லாமல் இருந்தது.

இந்த அமைதி ஆபத்தானது என்பது எனக்கு நன்றாகவே தெரிந்தது.இயன்றவரை வேகமாக
நடக்கத் தொடங்கினேன்.மண்ணும் வியர்வையும் சேர்ந்த கலவையால் உடலெங்கும் பிசுபிசுத்தது.

15-scaled.jpg

”அக்கா பிரதான வீதியால செல்லாதீங்க..

.அது பாதுகாப்பில்லை..

ஏதும்நடந்தாக்கூட தெரியாது..

உள்பாதையால போங்க..”

நான் வெளிக்கிடும்போது பாதுகாப்புப் பணியில் நின்றவன் முன் எச்சரிக்கை செய்து
அனுப்பியிருந்தான்.

அப்போதுதான் நான் நடந்து வந்த பாதையின் பயங்கரம் எனக்குப் புரிந்தது.அதன் பிறகு வந்தபாதையாலே திரும்பிச் செல்லும் துணிச்சல் எனக்கு வரவில்லை. கொஞ்சத்தூரம் கடந்திருப்பேன். மோட்டார் எறிகணைகளாலும் ,ஆர்.பீ.ஜீ உந்துகணைகளாலும் அந்த இடத்தை எதிரி வறுத்தெடுக்கத் தொடங்கினான்.

பற்றைகள் படர்ந்திருந்த மணற்பாங்கான அந்த இடத்தில் பாதுகாப்பகழிகள் எதுவும் இல்லை. என்னையே குறிவைத்துத் துரத்துவதுபோல முன்னுக்கு, பின்னுக்கு, பக்கத்தில் என்று எல்லா இடமும் எறிகiணைகள் வெடித்துச் சிதறிக்கொண்டு இருந்தன.நிலத்தில் விழுந்து படுத்தேன்.அப்படியே படுத்து இருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

”எறிகணைகள் எப்போது ஓய்வது நான் எப்போது நகர்வது ,வேறுவழியின்றி நிலத்தோடு நிலமாய் ‘குரோல்,  இழுத்தபடி நகர்வதும் எழும்பிவென்ரெடுத்து ஓடுவதுமாய் கொஞ்சத்;தூரம் கடந்திருப்பேன்;. எனது பெயரைச்சொல்லி யாரோ அழைத்தார்கள்.குரல் வந்த திசையில் பார்த்தேன்.

திறந்த பாதுகாப்பகழிக்குள் தேவியும், குயிலினியும் இருந்தார்கள். அவர்களைக் கண்டதில்
இனம்புரியாத மகிழ்வு.ஓடிப்போய் அவர்களோடு காப்பகழிக்குள் நானும் அமர்ந்துகொண்டேன். ஆங்காங்கே பாதுகாப்பகழிகளுக்குள் எமது பிரிவில் காயபட்ட போராளிகள்தான்; இருந்தார்கள்.
தேவியும் நானும் ஒரே பயிற்சிமுகாமைச் சேர்ந்தவர்கள்.ஆரம்பத்தில்; பணிகூட இருவருக்கும் ஒரே இடத்தில்தான் இருந்தது.அவள் களமுனையில் விழுப்புண்தாங்கியது எனக்குத் தெரியும், ஆனால் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.குயிலினியும் தலையில் பெரிய கட்டுப் போட்டிருந்தாள்.அவள் இரவுதான் விழுப்புண்தாங்கி வந்திருந்தாள்.

நேற்றில் இருந்துதான் இந்த இடம் மருத்துவப் பிரிவாக இயங்கத் தொடங்கியதாக தேவி
சொன்னாள்.இரண்டுபேரிலுமே குருதி வெளியேறிய சோர்வும் இயலாமையும்
தெரிந்தது.அவர்கள் சாப்பி;ட்டிருக்க மாட்டார்கள் என்பது அவர்களது முகத்தில் தெரிந்தது.

”இன்னும் சாப்பாடு வரவில்லையா ”

என்று கேட்டேன்.

”இல்லை..எடுக்கப் போயிற்று இப்பதான் வந்தவ..”

தேவி சொல்லி முடிக்கமுதலே குயிலினி தொடங்கினாள்.

”நினைக்கவே கவலையாகக் கிடக்கக்கா..எங்கட சமையல் கூடத்தில இருந்து சாப்பாடு எடுத்தின்ரு
வாறவழியில நிறையக் சின்னப்பிள்ளைகள் பசியோட கையில பாத்திரங்களையும் வைச்சுக்
கொண்டு நின்றிருக்கிதுகள்.அந்தப் பிள்கைளின்ர முகத்தப் பார்த்த பிறகு எப்படியக்கா
அந்தச் சாப்பாட்டக் கொண்டுவரமுடியும்? அதுதான்அதில வைச்சே நின்ற பிள்ளைகளுக்குக்
கொடுத்திற்று வந்திட்டினும். அதிலும் கொஞ்சப்பிள்ளைகளுக்கு சாப்பாடு காணாதாம்
அக்கா..,ஏமாற்றத்தோட திரும்பிப்போன அந்தச் சின்னப்பி;ள்ளைகளின்ர முகம்தான்
தன்ர கண்ணுக்கு முன்னால வருகிதென்று சாப்பாடு எடுக்கப்போன மதுவந்தி கண்ணீர் விட்டு
அழுகிறாளக்கா. ஏனக்கா இந்த அரச படைகள் எங்;கட பச்சைமண்ணுகள கொத்துக்கொத்தா குண்டாலும் ,பசியாலும் கொல்லுறதக் கூடவா ஒருத்தரும் தட்டிக்கேட்கேல்ல..”

அவளின் ஆதங்கம் புரிந்தது.தங்களுக்கு பசி என்கிற கவலை அவர்களுக்கு ஒருதுளிகூட
இருக்கவில்லை.மக்கள் படுற அவலம் தான் அவர்களுக்கு பெரும் வேதனையாக இருந்தது.

”தனிய இந்தப் பேரினவாத அரச படைகள் மட்டுமா எங்கள அழிக்கிறான். எங்கட
போராட்டத்தைக் கண்டு மிரண்டு போன எல்லா நாடுகளும் கூட்டுச்சேர்ந்துதான் எங்கட
இனத்தையே அழிக்கிறாங்கள்..பன்னாட்டுச் சட்டதிட்டங்களை எல்லாம் மீறி இனப்படுகொலை
எங்கட மண்ணில நடந்து கொண்டு இருக்கிறது எல்லாருக்குமே தெரியும்..வெளிநாட்டில
இருக்கிற எங்கட சனமெல்லாம் ஒன்று திரண்டுபோய் ஐநா முற்றத்தில எங்கட மக்களைக்
காப்பாற்றுங்கோ என்று தவம் கிடக்கிதுகள். எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு தான் உலக
நாடுகள் இருக்கு..ஆனா போரத் தடுத்து நிறுத்தி மக்களக் காப்பாற்றத்தான் ஒருத்தரும்
முன்வருகினமில்ல…. சரிசரி உங்களோட இருந்தா, நேரம் போறதே தெரியேல்ல நான்
வெளிக்கிடப்போறன்..பத்திரமா இருங்கோ..”

அவர்களிடம் இருந்து விடைபெற்று கொஞ்சத்தூரந்தான் சென்றிருப்பேன்.என் கண்களில்
பட்ட அந்தக் காட்சியால் நான் துடித்துப்போனேன். பெரும் விழுப்புண்களைத்
தாங்கியவர்கள் நடக்க முடியாது நிலத்தோடு நிலமாய் அரைந்து அரைந்து அந்தச்
சுடுமணலில் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.இரண்டுபேர் ஒருவர்க்கு ஒருவர் உதவியபடி
தோளில் கைபிடித்துத் தாங்கியபடி நகர்ந்தார்கள். இன்னுமொரு பெண் சேலைன் கொழுவிடும்
தாங்கியை ஊன்றுகோலாய்க் கையில் பிடித்தபடி மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தாள்.
வாய்விட்டுக் கதறி அழவேண்டும் போலிருந்தது.அவர்கள் நகரும் இடத்துக்கு ஓடிப்போனேன்.
அங்கு யாருக்குமே எனது உதவி தேவைப்படவில்லை.

நிலத்தோடு அரைந்து போன ஒர் அண்ணாக்கு ஒரு கால் துடைப்பகுதியோடு துண்டிக்கப்பட்டிருந்தது. மற்றக்கால் எழுந்து நடக்க முடியாதபடி கட்டுப்போடப்பட்டிருந்து. இன்னுமொரு இளம்பெண் அவருக்கு வயிற்றிலே பெரிய காயம்.எழுந்து நடக்க முடியாது.கைகளை மணலில் ஊன்றி ஊன்றி அரைந்து சென்றாள்.அவளது கை அந்தச் சுடுமணலில் ஊன்றி ஊன்றி கன்றிச் சிவந்திருந்தது. அவள் மறுக்க மறுக்க எனது பாதணிகளைக் கழற்றி அவளது கையில் போட்டுவிட்டேன். மருத்துவமனைத் தாக்குதலுக்குள் இருந்து தப்பிப் பிழைத்த அச்சம் அவர்கள் முகத்தில் இருந்து கொஞ்சமும் விலகவில்லை.

”பிள்ள..,எங்களோடமினக்கெட்டு அநியாயமா காயப்பட்டிராதையுங்கோ.. நீங்க
போங்கோ..”

தொடரும்…

 

https://www.thaarakam.com/news/130132

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடம் அழியா நினைவுடன் … மே 15 -பகுதி – 2 அ. அபிராமி

Last updated May 13, 2020

என்னை விரட்டுவதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள்.நான் நின்றும் அவர்களுக்கு

உதவும் வழிதெரியாது கையாளாகத்தனத்தோடு அங்கிருந்து நகர்ந்தேன்.இப்போது வெறும்
காலில் நடந்தும் நிலத்தின் சூட்டை என்னால் உணரமுடியவில்லை. ஒருவாறு எனது பணிகளை எல்லாம் முடித்தக் கொண்டு எனது இருப்பிடத்தை அடைந்த போது நேரம் மாலை 4 மணியை எட்டியிருந்தது.

என்னைக் கண்டவுடன் கவிக்கும் இசைக்கும் பெரும் மகிழ்ச்சி.

15-1-scaled.jpg

”நீங்க போன நேரத்தில இருந்து ஒரே அடியா இருந்தது. நாங்க பயந்து கொண்டு
இருந்தனாங்கள்..”

இசை சொன்னாள்.

கவி ஓடிப்போய் தேத்தண்ணி வைத்துக் கொண்டு வந்து தந்தாள்.அது பெரும் தெம்பைத் தந்தது.
அன்றைய பொழுதுக்கு வயிற்றுக்குப் போனது அந்தத் தேனீர்மட்டும்தான்.

 உடம்பெல்லாம் மண்ணாக இருந்தது.எப்படியாவது இன்று குளிக்கவேணும்.ஆனால் கிணற்றடியை
அண்டிய இடமெல்லாம் மக்கள் இருந்தார்கள்.கிணற்றைச் சுற்றி அடைத்திருந்ததகரவேலியெல்லாம் எறிகணைகள் பட்டு சிதறிக்கிடந்தது.பொழுது சாயட்டும் பாப்பம்.இப்ப சாப்பாட்டுக்கு எதாவது வழி செய்யவேணும். திரும்பவும் எங்கட சமையல் கூடத்தைத்தேடி புறப்படத் தயாரானேன்.

”எங்கயக்கா.. வெளிக்கிடுறீங்கள்..”

இசை அழுவாரைப்போல கேட்டாள்.

”சாப்பாடு எடுத்திற்று வரப்போறன்..”

வேண்டாமக்கா இருவரும் பிடிவாதமாய் மறுத்தார்கள்.

”பொரிஞ்சு தள்ளுறான்..,வேலையாப்போறது வேற.., உங்களுக்கு புதுக்கிச்சின் எங்க
இருக்கென்றே தெரியாது.இதுக்க எங்கபோய்த் தேடுவீங்க…

சும்மா இருங்கக்கா.. ஏதோ
”படைச்சவன் படி அளக்கத்தானே வேணும்” என்னிட்ட கொஞ்ச மாக்கிடக்கு இரவு நல்ல ரீ
போட்டுத்தாறன் இருங்கக்கா.., இந்தா இவ்வளவாயிரம் சனத்துக்க எத்தினபேர் எத்தினநாளா
சாப்பிடாம இருக்கினமோ தெரியாது..அதவிடுங்கோ எத்தின பச்சமண்ணுகள் சாப்பிடாம
இருக்கோ தெரியாது..,ஒருநாள் சாப்பிடாட்டி நாங்க ஒன்றும் குறையமாட்டம்..பேசாம
இருங்கக்கா..”

கவி பெரிய சொற்பொழிவே ஆற்றி முடித்தாள்.

அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருந்ததால் பேசாமல் இருந்தேன்.இப்போது இருவரிடமும்
ஒரு விடயத்தைக் கேட்டேன். ”இப்ப உங்களுக்கு உருத்தான ஆட்கள் உங்களப் பொறுப்பெடுத்தா அவர்களோட போவீங்களா …” இருவரும் அமைதியாக இருந்தார்கள்.

”கவியின்ர பெரியம்மாவ பக்கத்திலதான் இருக்கினம்..கவியக் கண்டு தங்களோட
வரச்சொல்லிக் கேட்டவ..கவிதான் உங்களக் கேட்கவேணும் என்று சொல்லி அனுப்பினவள்..”

”உங்கள அப்பவே வீட்டபோகச்சொல்லித்தான் தலைமைச் செயலகம் சொன்னது.நீங்கதான்
பிடிவாதமா வீட்ட போக மறுத்தனீங்கள்..அதாலதான் சண்டையில்லாத பணிகளில உங்கள
விட்டது.இப்ப அந்தப்பணிகள் ஒன்றும் இல்லை, அதால நீங்க உங்களப் பத்திரமா பாதுகாக்கக்
கூடியவர்களா இருந்தாப் போறதில எந்தப் பிரச்சனையும் இல்ல..”

அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன்.கவி பெரியம்மாவோடு செல்வதற்கு உடன்பட்டாள்.ஆனாலும்
எங்கள் இருவரையும் விட்டுச்செல்ல மனமின்றித் தயங்கினாள்.

”கவலைப்படாம போயிற்றுவா..இசையையும் பாதுகாப்பா நான்
விட்டிருவன்..என்னைப்பற்றிக் கவலைப்படாத ..”

அவளைத் தேற்றி அவளை பெரியம்மாவிடம் பத்திரமாய் ஒப்படைக்க நானும் இசையும்;
தயாரானோம்.

புறப்படும்போது அவள் பொத்திப் பொத்தி வைத்திருந்த சிறிய பை ஒன்றை இசையிடம்
கொடுத்தாள்.அதற்குள் கொஞ்ச சீனி,தேயிலை, கொஞ்சப் பால்மா இருந்தது.
பாவம்..சாப்பிடாமப் போகப்போறாள் போற இடத்திலும் என்ன நிலமையோ தெரியாது.

”சரி அப்ப கடைசியா ஒரு பால்தேத்தண்ணியக் குடிச்சிற்று வெளிக்கிடுவம்.. அத நானே
ஊற்றித்தாறன்..”

நான் அடுப்பைப் பற்ற வைத்தேன். அம்மா சமைக்க பக்கத்தில இருந்து பார்க்கும் குழந்தைகள்
போல இருவரும் என்னருகே வந்திருந்தார்கள். மூவரும் தேனீரைக் குடித்துவிட்டு
புறப்பட்டோம்.கவியின் பெரியம்மாவிடம் கவியை ஒப்படைத்துவிட்டு திரும்பி வரும்
வழியில் இசைக்குத் தெரிந்த அக்கா ஒருவர் வந்தார்.

”இசை.. இப்பதான் உங்கட அக்காவக் கண்டனான்.அவள் உன்னத்தான் தேடுவதாக சொன்னவள்..”

அந்த அக்கா சொன்ன செய்தி எனக்கு பெருமகிழ்வாக இருந்தது. இசையையும் அவளது
சகோதரியிடம் ஒப்படைத்தால் எனக்கு பெரும் சுமை இறங்கின மாதிரி இருக்கும்.அந்த அக்கா
சொன்ன பக்கமாக தேடத் தொடங்கினோம். பொழுது சாயமுதல் கண்டுபிடித்துவிட வேண்டும்
நாங்கள் தேடத்தொடங்கிய சில நிமிடங்களிலே இசையின் அக்கா எங்களைக் கண்டு
ஓடிவந்தாள்.

இசையையும் அவளது அக்காவிடம் பத்திரமாக ஒப்படைத்துவிட்டு நான் தனியாளாக
வெளிக்கிட்டபோது இசையின் கண்கள் கலங்கின.அவளது முதுகில்தட்டி ஆறுதல் படுத்திவிட்டு நடக்கத்தொடங்கினேன்.

பனைமரங்கள் வடலிகள் எனப் பெரும் தோப்பாய்ச் செறிந்து நின்ற அந்தப்பகுதி
எங்கும் மக்களும் செறிவாக இருந்தனர்.அதற்குள் தான் பாதை பிடித்து நடந்து
கொண்டிருந்தேன்.

அப்போதுதான் வேலைக்கு ஆட்களைப் பிடித்து பாதுகாப்பான காப்பரண் ஒன்றை அமைத்துவிட்டு
அவர்களுக்கான சம்பளம் கொடுத்துக் கொண்டு வெளியில் நின்றவள் என்னைக் கண்டு
கூப்பிட்டாள்.அவளும் நானும் நெருங்கிய தோழிகள்;.அவளை அந்த இடத்தில் கண்டது எனக்கு
பெரும் ஆறுதலாக இருந்தது. கடைசியா பொக்கணையில அவளின்ர குழந்தை தவறியபோது பார்த்ததுக்கு இன்றுதான் மீண்டும்

அவளை நான் சந்திக்கிறன். எனக்கு இப்பவும் நல்ல நினைவா இருக்கு.

”குழந்தைகள் சாவடைஞ்சா அழக்கூடாதாம் அக்கா..,அப்படி அழுதா.. பிள்ளையின்ர ஆத்மா
அந்தரப்படுமாமக்கா..”

அவள் தன்னைவிட்டுப்போன அந்தக் குழந்தைக்காக கண்ணீர்விட்டுக் கதறி அழுதால் பிள்ளைய
அந்தரப்படும் என்று, அழவும் முடியாமல்,அழாமல்; இருக்கவும் முடியாமல் ஒரு தாயாய்
அவள் பட்ட தவிப்பை பார்த்து நாங்களே கண்கலங்கி நின்றதை எப்படி மறக்கிறது.

”உள்ள வாங்கக்கா..என்ன சாப்பிட்டியல்.. ஏதாவது சாப்பிறீங்களாக்கா..”

இதுவும் எந்தநேரத்தில் அவளது வீட்டுக்குப் போனாலும் அவள் கேட்கும் கேள்விதான்.எனது
பதிலை எதிர்பாராது மளமளவென்று தட்டிலே சாப்பாடு போட்டாள்.அவளும் ஒரு
போராளிதானே அவளுக்குப் புரியாததா?

”கையக்கழுவி விட்டு முதல் சாப்பிடுங்கோ அக்கா ..”

தண்ணீரை நீட்டினாள்.நீண்ட நாட்களுக்குப் பிறகு பால்விட்டு சமைத்த ரின்மீன்
குழம்பும்,சுடச்சுட சோறும் சாப்பிட்டேன் தேவாமிர்தமாக இருந்தது.

அவளின் அந்த இடம் பலபேரிற்கு காப்பகமாக மாறிக் கொண்டு இருந்தது.வெளியே தலை
காட்டமுடியாதபடி எறிகணைகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.

பார்க்கும் இடமெங்கும் சுடர்விட்டெரியும் தீயின் நாக்குகளும், நாலாபக்கமும் பரவி வியாபிக்கும்
கரும்புகைகளின் தூசியும் கந்தக நெடிலுமாய் அழிவின் பேரவலத்தை அந்த மண் தாங்கிக்
கொண்டிருந்து.

தொடரும்…
 

https://www.thaarakam.com/news/130139

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடம் அழியா நினைவுடன் … மே 15 -பகுதி –3 அ. அபிராமி

மே-15, உறக்கம் தொலைத்த விழிகள் கந்தக நெடியில் கரித்துப் போயிருந்தன. மரத்துப் போயிருந்த மனித மனங்களிற்கு காலையில்லை, மாலையில்லை,இரவில்லை,பகலில்லை, புலரிப்பொழுதை கூவியழைக்க சேவல்கள் இல்லை,எங்கள் வானில் எந்தப்பறவைகளும் இல்லை.

எங்கள் நிலமெங்கும் கருக்கொண்ட தீ மேகங்கள் நெருப்புமழையைக் கக்கிக் கொண்டிருந்தன.
அன்றைய நாட்களில் மனிதப்பேரவலத்துக்கு முகம் கொடுத்து நின்ற அத்தனை உயிர்களுக்குமே
அடுத்த நொடி என்பதே பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

25-09-2005-malathi-regiment-8.30-12.00-1

அதற்கு இன்று மட்டும் விதிவிலக்கா என்ன?  காலை நேரத்து பூபாளம் தொலைந்த எங்கள்
முற்றத்தில் முகாரியோடே பொழுது புலர்ந்து கொண்டிருந்தது.

நாங்கள் இருந்த இடத்துக்கு முன்னால் ஒரு சிறிய கிணறு இருந்தது. மளமளவென்று அள்ளிக்குளிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அந்தளவுக்கு நிலமை சரியில்லை.எல்லாரும் விழிப்பாகத்தான் இருந்தார்கள். ஒன்றாக வெளியில் சென்று வரமுடியாது. ஒவ்வொருத்தராகத்தான் கடமைகளை முடிக்கலாம்.

எனக்கு வெளியில் செல்லவேண்டிய அலுவல் இருந்ததால் முதலாவது ஆளாக ஓடிப்போய் காலைக்கடனை முடித்துக் கொண்டு ஓடி வந்தேன்.

நான் அணிந்திருந்த ஆடை மிக அழுக்காகி இருந்தது.இருந்த ஒரேயோரு மாற்றுடையை எடுத்து
அணிந்து கொண்டேன். வெளியில் வெளிச்சம் பரவத் தொடங்கியது.

சுற்றி எங்கும் எழும்பிய கரும்புகையால் வானமே கருமேகம் சூழ்ந்து கிடந்தது.ஆனால் அந்த
கருமேகத்திரளுக்குள்ளும் புகுந்து படமேடுத்துக் கொண்டு இருந்தது வேவு விமானம்.

”வண்டைப் பார்த்துக் கொண்டு நின்றால் வேலைக்காகாது,”

எனது உடமைப்பையை முதுகில் அடித்துக் கொண்டு முன்னரங்கிற்குச் செல்லத் தயாரானேன்.இவ்வளவு நாளும் எங்கு வெளிக்கிட்டாலும் உடைமை பையைக் சுமக்கும் வேலை இருக்கவில்லை. கவியும் இசையும் இருந்ததால் அவர்களே அதை
வைத்திருந்தார்கள்.

ஆனால் இப்போது அதையும் காவ வேண்டி இருந்தது.

”ஒயாம அடிச்சுக் கொண்டு இருக்கிறான்.. பாத்துப் பத்திரமாப் போயிற்று
வாங்க..,எல்லா அலுவலையும் முடிச்சிற்று இஞ்ச வாங்கக்கா..”

அவள் வழியனுப்பி வைத்தாள்.

”திரும்பி வந்தால்தான் கண்டு கொள்ள வேண்டும்”

நான் சிரித்துக் கொண்டே இறங்கினேன்.

மூச்செடுக்க முடியாதடி எங்கும் புகை மண்டலம்,இரசாயன நெடிகளைக் காவி வந்தது காற்று.
இப்போது மக்களால் சுவாசிக்கக் கூட முடியவில்லை. உண்ண உணவில்லை, தூக்கமில்லை,இருக்க
பாதுகாப்பான இடமில்லை,காயப்பட்டால் மருந்தில்லை, உறவுகளை இழந்த துயரமும்,வலிகளால்
கதறும் உறவுகளின் வேதனையின் முனகலுமாய் உயிரோடே சாவின் வலிகளைச் சுமந்துகொண்டு
நடைப்பிணமாய் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

ஓரு வயதான அப்பா ஈருருளியில் வைத்து ஒரு 22,23 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை உருட்ட
முடியாது உருட்டிக் கொண்டு சென்றார். அவளது தலையில் பெரிய கட்டுப்போடப்பட்டிருந்தது.
ஆனால் அந்தக்கட்டையும் மீறி உடலெங்கும் இரத்தம் சொட்டிக் கொண்டு இருந்தது. அவளில்
எந்தச் சலனமும் இல்லை பக்கத்திலே அந்தப் பெண்ணைப் பிடித்தபடி ஓர் அம்மாவும் நகர்ந்து கொண்டு இருந்தார்.

”பயப்பிடாத பிள்ள…,

அப்பா இருக்கிறன்..,

என்னபாடுபட்டாவது பிள்ளையக் காப்பாற்றியிருவன்., அப்பா பக்கத்திலதான் இருக்கிறன் தைரியமா இரம்மா..”

மகளுக்கு நம்பிக்கை ஊட்டியபடி பேசிக்கொண்டே வந்தவரது விழிகள் இரண்டும் கண்ணீரால்
நிரம்பி வழிந்தது.அம்மா பேயறைந்தது போல பின்னாலே சென்று கொண்டிருந்தார்.

அந்த அப்பாவின் கண்ணீர் ஒரு மகளாக என்னுடலைப் புல்லரிக்கச் செய்தது. என்னுடைய
பையில் அவசரத்துக்கு உதவுமென்று எப்போதும் இருக்கும் விழுப்புண்களுக்கு கட்டுப்போடும்
துணியை எடுத்துக் கொண்டு அப்பா பின்னே ஒடினேன்.

”கொஞ்சம் நில்லுங்கப்பா..இரத்தம் கசியாம கட்டுப் போட்டுவிடுறன்”

அப்பா வேண்டாமென்று தலையசைத்தார். எனக்கு குழப்பமாக இருந்தது. ஏன் வேண்டாமென்று
சொல்கிறார்.. யோசனையூடே சென்றுகொண்டிருந்தேன். சிலநொடிகள் கழிந்திருக்கும், டமார் என்ற சத்தம் அப்பாவின் ஈருருளி கீழே கிடந்தது.

மகள் அசைவற்றுக் கிடந்தாள்.

” எனக்குத் தெரியுமம்மா..

என்ர பிள்ள என்னவிட்டிட்டு போகப்போறாள் எண்டு..

என்ரபிள்ளையக் காப்பாற்ற முடியாதென்று எனக்குத் தெரியுமம்மா..,

என்ர பிள்ளையல் எல்லாத்தையும் பறிச்சிற்றாங்களே..,

நேற்றுத்தானே இரண்டு பிள்ளைகள அள்ளிப்போட்டிட்டு வந்தனான்..

இண்டைக்கு உன்னையும் கொடுத்திற்றனே..,

என்ர வம்சத்தையே அழிச்சிட்டாங்களே…,

கடவுளே..உனக்குக்கூட கண்ணில்லையா.. ”

அந்தத் தந்தையின் கதறல் ஒலி என் நெஞ்சை நெருடியது. அந்த அம்மா அப்போதும்
பேசாமல் இருந்தார்.

”உன்னப்போல இருந்திருந்தா இந்தக் கொடுமையெல்லாம் தெரியாமலே இருந்திருக்குமே..”

மனைவியைக் கட்டிப்பிடித்து அழுதுதார்.அப்போதுதான் புரிந்தது அந்த அம்மா தன் சுய
நினைவை இழந்திருந்தாரேன்று..

அதையும் கடந்து போய் வீதிக்கு ஏறினேன். மக்கள் தற்காலிகமாக இருந்த இடங்கள்.உடமைகள்
எல்லாம் சிதறுண்டு கிடந்தன. பனைமரங்கள் பலவற்றை தீயின் நாக்குகள் இன்னும் தனக்கு
இரையாக்கிக் கொண்டு இருந்தன.

வீதியின் மருங்கில் நின்ற ஊர்திகள் எரிந்தும் சிதறுண்டும் கிடந்தன.அழிவின் கோரத்தை அப்பட்டமாய் அந்தப்பகுதி பறைசாற்றிக் கொண்டிருந்தது. எனக்கு எதிர் திசையிலிருந்து மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

”அக்கா.. என்ர பிள்ளையப் பாருங்கக்கா…”

அதற்கு மிஞ்சி அவளால் பேசமுடியவில்லை..கதறி அழுதபடி இரண்டு கையிலும் குழந்தையை
எந்தியபடி ஓட்டமும் நடையுமாய் வந்துகொண்டிருந்தாள் ஒரு போராளி.

அவளது கையில் இருந்த குழந்தையைப் பார்த்தேன்..வெள்ளை வெளேரென்று அழகாய்க் கிடந்த
குழந்தை விழிகளை மூடி உறக்கத்தில் இருப்பது போலவே எனக்குத் தெரிந்தது.அந்தக் குழந்தை
இறந்து கிடக்கிறான் என்பதை என்னால் நம்பக் கூட முடியவில்லை.

அவளை மறித்துவைத்து கதைகேட்கும் அளவுக்கு சூழலும் இல்லை.அவள் பேசக்கூடிய நிலையிலும் இல்லை. அவளுக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாதவளாய் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றேன்.

ஏற்கனவே அவளது கணவன் மண்மீட்புப் போரிலே வீரச்சாவடைந்திருந்தான். இப்போது
அவளது குழந்தை.. என்னையறியாமலே விழிகள் கலங்கின.கண்ணீரைத் துடைத்தபடி நடக்கத்
தொடங்கினேன்.

என்னையே இலக்கு வைத்து பின்தொடர்வது போல தலைக்கு மேலே வண்டு சுற்றிக் கொண்டிருந்தது.

வீதியின் வெட்டைப்பகுதியைத் தவிர்த்து கொஞ்சம் உட்பகுதியால் நடக்கத் தொடங்கினேன்.

அந்தப்பகுதி எங்கும் மரங்கள் முறிந்தும், எரிந்தும் சிதறுண்டும்
கிடந்தன. அதுகும் மக்கள் தற்காலிகமாக இருந்துவிட்டுச் சென்ற இடம்தான்.

சீறி வந்த துப்பாக்கிச் சன்னம் எதிரி பக்கத்தில்தான் என்பதை உணர்த்தியது.சுதாரித்துக்
கொண்டேன். முன்னரங்கு என்பது பெரிய மண்காப்பரண் அமைத்து நின்று சண்டை செய்யும்
இடமல்ல.

சாதாரண பாதுகாப்பழிகளுக்குள்ளும், நிலக்காப்பு மறைப்புக்களிலும் நின்றுதான்; போராளிகள் எதிரியின் நகர்வைத் தடுத்து சண்டை செய்து கொண்டிருந்தார்கள்.

அதற்குள் எங்கட பிரிவுக்கார போராளி ஒருவர் என்னைக் கண்டுவிட்டு அழைத்தார். அவர்
50 கலிபர் கனரக ஆயுத நிலையில் நின்று கொண்டிருந்தார்.

”அண்ண..எங்கட பிள்ளைகள் எங்காலப் பக்கம் நிற்கினம்..”

அந்த அந்தப் போராளியிடம் கேட்டேன்.

”இதில கரும்புலிக்காரப் பிள்ளைகள் இரண்டு பேர் நிற்கினம்..

அவைக்குப் பக்கத்தில பூரணியக்காவோட கொஞ்சப் பிள்ளைகள் நிக்கினம்…

அது சரி தங்கச்சி கண்டபாட்டில திரியாதையுங்கோ…,

கண்மண்தெரியாம அவன் அடிக்கிறான்…

அநியாயமா சாகதையுங்கோ..”

தொடரும்…
 

https://www.thaarakam.com/news/130826
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

😢 🙏 உயிருள்ளவரை மறவாதிருப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு ரணங்களையும் வலிகளையும் தாங்கி வந்த தெய்வங்கள்....!  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடம் அழியா நினைவுடன் … மே 15 -பகுதி – 4 அ. அபிராமி

Last updated May 18, 2020

அந்தண்ணா கண்டிப்பு நிறைந்த குரலில் பேசினார்.தலையாட்டிக் கொண்டே அவர் காட்டிய
இடத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன்.

அதற்குள் அவர்கள் என்னைக் கண்டுவிட்டு, மேலே வண்டு நிற்பதைக் காட்டி அங்கால
போகவிட்டு வரும்படி கைச் சைகையால் காட்டினார்கள். நானும் எரிந்தும் எரியாமலும்
தலைசிதறி முண்டமாய் நின்ற பனைமரங்களோடு பனை பரமாய் வண்டு நகரும்வரை நின்று
விட்டு, அவர்கள் இருந்த இடத்துக்குச் சென்றேன்.

Frame-0022-copy.jpg

அவர்கள் இருந்த இடத்தில் நின்ற மரம் பிரிந்து நார்நாராய்த் தொங்கியது. தங்களுக்கு மறைப்பாக பக்கத்தில் சிதறிக்கிடந்த சில மரக் கொப்புகளையும் இழுத்துவந்து போட்டிருந்தார்கள்.

‘என்ன பிள்ள.. இன்னும் இந்த பேட்டி எடுக்கிற, அறிக்கை எடுக்கிற தொழிலக்
கைவிடேல்லையா..”

அந்தக்கரும்புலிக்கார அக்கா என்னைக் கிண்டல் செய்தார்.

”போங்கக்கா..,ஆளணிக்கட்டமைப்பு, களநிலைஅறிக்கை ஒவ்வொருநாளும் நேர
வந்து பார்த்துத்தான் விபரம் எடுத்துக் கொடுக்க வேணும்.. ”
நான் வந்த விடயத்தைச் சொன்னேன்.

அந்த அக்காவோடு இருந்தவள் தனது பொய்க்காலை சரி செய்து கொண்டிருந்தாள். அவளது
காலின் பாதப்பகுதி ஆடிக்கொண்டிருந்தது.

அவளுக்கு நடப்பதற்கு சரியான சிரமமாக இருக்கும் என்பதை பார்த்தவுடன் புரிந்து கொண்டேன்.

”கால் சரியா பழுதாயிற்றுப்போல..”

அவளிடம் கேட்டேன்.

”அதையேன் கேட்கிற, அவளின்ர காலில செல்லுக்கொரு கண்ணு..,நியக்கால்தான் செல்லடியில போயிற்றென்று பார்த்தா..,பொய்க்காலும் செல்லடியில போயிற்றுது.., இப்ப பழுதாப்போயிற்று என்று கழிச்சு வைச்ச கால்தான் கை கொடுக்குது..”

அந்த அக்காதான் சிரித்தபடி பதில் சொன்னார்.

இந்த இறுக்கமான சூழலுக்குள்ளும் சிரித்துப்பேசி மகிழ்வாக இருக்க அவர்களால் மட்டும்தான்
முடியும்.சாவைக் கூட சிரித்தபடி ஏற்றுக் கொள்பவர்கள் ஆச்சே, அவர்களோடு இருந்தால்
பொழுது போவதே தெரியாது.

”அக்கா..வண்டின்ர சத்தம் தூரவாக் கேட்குது,அடுத்த சுற்று வாறதுக்க நான்
வெளிக்கிடப்போறன் ..”

நான் புறப்படத்தயாரானேன்.

”அதுசரி பிள்ள நாங்க செத்தா எங்களப் பற்றி எழுதுவதானே..,அப்ப ஒரு
பின்னிணைப்பு.., இதையும் சேர்த்துவிடு.”

நான் அவரை முறைத்துப் பார்த்தேன்.

” இல்லப்பிள்ள..உண்மையாத்தான் சொல்லுறன்…மக்களிட்டச் சொல்லு எப்பவும் நாங்க
உங்கள இஞ்ச சுமந்திருக்கும் என்று..”

தனது கையால் நெஞ்சைத் தட்டிச் சொன்னார். மக்கள் என்ற சொல் அந்தக் கல்லைக் கூட கசிய
வைத்திருந்தது. அந்த அக்காவின் முகத்தில் தெரிந்த குறும்புத்தனம் இப்போது இல்லை.

”நான் உயிரோட இருந்தா கண்டிப்பா சொல்லுவன் அக்கா..”

அவரது முகத்தைப் பார்க்கும் தைரியம் இன்றி மளமளவென நடக்கத் தொடங்கினேன்.

எத்தனையோ கடல் நடவடிக்கைகளின் போதும், கடற்சண்டைகளின் போதும் சிம்மசொப்பனமாய்
கடல் மடியில் வெடிமருந்துப் படகோடு எதிரியைத் துரத்தியடித்தவர்கள், இன்று
முன்னரங்குகளிலே தமது உடல்களில் வெடிசுமந்து எந்த நேரத்திலும் தம்மை
அர்பணிப்பதற்குத் தயாராகக் காத்திருந்தார்கள். அவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டே
சென்றேன்.

காலில் ஏதோ இடறுப் பட்டது.குனிந்து பார்த்தேன். பனம் பாத்தி போட்டதுபோல்
கொஞ்சம் அகலமாய் மண் உயர்த்திக் கிடந்தது. பக்கத்திலே சிதறிக்கிடந்த தரப்பால்
கொட்டில், சேலைகளில் வெட்டித்தைத்த பைகளில் மண்நிரப்பி மூட்டைகளாய் அடுக்கியிருந்த

பாதுகாப்பரண், எல்லாமே சிதறுண்டு கிடந்தது. இதில் சாவடைந்தவர்களை புதைத்திருக்கலாம். எனது கால்பட்ட இடத்தை தொட்டு வணங்கி விட்டு வேகமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன்.
ஒரு இளவயது பெண் தோளிலே ஒருவரை அணைத்தபடி வந்து கொண்டிருந்தார்.அந்த அண்ணனின் நெஞ்சுப் பகுதியிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. கால்கள் இரண்டிலும் சாக்குக் கட்டியிருந்தது.அவரால் கொஞ்சம் கூட நடக்கமுடியவில்லை.கால்களை இழுத்திழுத்து மெல்ல நடந்து கொண்டிருந்தார்.

”என்னால இனி ஏலாது..,என்னப் பாக்காத..,என்ன விட்டிட்டு நீ போம்மா..”

அந்தப் பெண்ணிடம் தன்னை விட்டுவிட்டு செல்லும்படி அவளின் கணவர் சொல்லிக் கொண்டே
வந்தார்.

”இல்ல..கடைசிவரை நான் உங்கள விட்டிட்டுப் போகமாட்டன் என்ன நடந்தாலும் இரண்டு
பேருக்குமே நடக்கட்டும்..”

அந்தப்பெண் கணவனைக் கூட்டி செல்வதில் உறுதியாக இருந்தார்.
நான் அவர்களை நெருங்கினேன்.

”நான் ஏதாவது உதவி செய்ய வேணுமாக்கா…”

அந்தப் பெண்ணிடம் கேட்டேன்.

”தங்கச்சி ..உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்..இவருக்கு மருந்து கட்ட ஏதாவது உதவி
செய்ய முடியுமா..”

தனது கணவனை பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்க்கத் துடிக்கும் அந்தப் பெண்ணிடம் எங்கள்
மருத்தவப் பிரிவு இயங்கிக் கொண்டிருக்கும் இடத்தைக் காட்டினேன்.

”இந்தா இதில தெரியிற பனங்கூடலுக்கு பக்கத்தில எங்கட மருத்துவப்பிரிவு இருக்கு..அங்க
போனீங்கள் என்றால் மருந்து கட்டிவிடுவினம்…,நீங்க போவீங்களா..?இல்லை வரவா?
என்று கேட்டேன்..”

”பக்கத்திலதானே நாங்கபோயிருவம்..”

அவர்கள் நகர நான் கடற்கரை பக்கமாக இருந்த நிலைகளை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
எனது பணியை முடித்துக் கொண்டு கடற்புலிகளின் தளமமைந்திருந்த பகுதிக்கு
வந்துகொண்டிருந்தேன். அங்கே உழவு இயந்திரப் பெட்டி ஒன்றில் களமுனைகளில்
வீரச்சாவடைந்திருந்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைப்பதற்காய் வைக்கப்பட்டிருந்தது. அந்த
வித்துடல்களைப் பார்ப்பதற்காக பெட்டியடியில் எட்டிப் பார்த்தேன்.

அதுகூட எதிரிக்குப் பொறுக்கவில்லைப் போலும்.அந்த இடத்தையே குறிவைத்து மோட்டார்
எறிகணைகளால் பொழியத் தொடங்கினான். அது படையணித் தளமாக இருந்தால் ஆங்காங்கே
பாதுகாப்பகழிகள் வெட்டப்பட்டிருந்தன.ஓடிப்போய் பக்கத்தில இருந்த பாதுகாப்பகழிக்குள்
குதித்தேன். விடிந்ததில் இருந்து பச்சைத் தண்ணீர் கூட குடிக்கவில்லை.வெறும் வயிறு.வித்துடல்களில் இருந்து வந்த நெடியென எல்லாம் சேர்ந்து வயிற்றைப்பிரட்டத்
தொடங்கியது.

ஒருவாறு அடி கொஞ்சம் குறைய எழுந்து எனது தோழி இருந்த இடம் நோக்கி நகர்ந்தேன்.
விழுப்புண்களின் வலிகளோடு கதறுபவர்களும், இறந்து போன தம் உறவுகளின் உடலங்களை
வைத்து அழுபவர்களுமாய் எங்கள் உறவுகளின் அவலக்குரல்கள் நெஞ்சைப் பிளிய வைத்தது.
இடங்களும் மிகக் குறுகி விட்டிருந்தன. தலை தூக்கமுடியாதபடி நாலாபக்கம் இருந்தும்
எதிரியின் தாக்குதல்கள்.அவ்வளவு அடிக்கும் யார் மிஞ்சுவார்கள் என்பதே
தெரியவில்லை.அன்றைய இரவு இன்னும் பயங்கரமாக இருந்தது.

தொடரும்…


 

https://www.thaarakam.com/news/131120

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடம் அழியா நினைவுடன் … மே 16 – அ. அபிராமி

On May 19, 2020

சுற்றியெங்கும் பல்குழல் எறிகணைகள் வீழ்ந்து வெடித்த வண்ணமிருந்தன. எதிரியின்
நெருக்கம் மிக அருகில் என்பதை வெடித்துச் சிதறும் இரும்புத் துண்டங்கள் புலப்படுத்திக்
கொண்டு இருந்தன. அவளது இருப்பிடம் ஆங்காங்கே எறிகணைகள் பட்டு சிதைந்து
கொண்டிருந்தாலும்; பலரைத் தாங்கி நிழல் கொடுக்கும் ஆலமரமாய் அது இருந்தது.  அந்த
இறுக்கம் நிறைந்த சூழலிலும் தன்னிடம் இருந்த பொருட்களை வைத்து அங்கு இருந்தவர்களுக்கு
அவள் சமைத்து வைத்திருந்தாள்.

25-09-2005-malathi-regiment-8.30-12.00-1

”அக்கா நல்லாக் களைச்சுப்போய் வந்திருக்கிறீங்கள் முதல் சாப்பிடுங்க..”

அவள் எனக்காக சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தாள்.எனக்கும் பசிக் களைதான். ~கை காலைக்
கழுவி விட்டுச் சாப்பிடுவம்| என நினைத்துக் கொண்டு வெளியில்வந்தேன்.

கிணற்றடிப் பக்கமாய் நின்ற பனை மரமொன்று இந்தா விழுகிறன் பிடி என்ற நிலையில் சிதைந்து
தொங்கியது.அதுயாற்ற தலையப் பார்த்துக் கொண்டு இருக்கோ தெரியாது. எண்ணிக் கொண்டே
‘பைவர்கானில்’  வெட்டிச் செய்த வாளியை எடுத்தேன்.

அதைக்கூட செல் விட்டுவைக்கவில்லை.

”என்ர குஞ்சுகள் எங்க..,

ஐயோ ..

என்ர குஞ்சுகள் எங்க..,

பசிக்கிது எண்டுதானே கேட்டனீங்கள்..

அம்மா ரொட்டி சுடத்தானே வெளியில வந்தனான்..

என்ர செல்லங்களே..பசியோடையே போயிற்றீங்களா.. ”

பக்கத்தில் கேட்ட அந்தக் கதறல் ஏதோ செய்ய கிணற்றில் விட்ட வாளியை வெளியே
போட்டுவிட்டு குரல்வந்த பக்கமாய் ஒடிப்போனேன்.

ஓர் இளம்பெண் இரண்டு சிறுவர்களை மடியில் வைத்துக் கதறிக் கொண்டிருந்தாள். குழந்தைகளின் உடல் இரத்தத்தில் தோய்ந்து கிடந்தது. ஒரு குழந்தையின் முகம் பார்க்கக் கூட முடியாதபடி சிதைந்து கிடந்தது.அந்தப் பிஞ்சுகளின் குருதி அந்தத்தாயின் உடலையும் நனைத்திருந்தது.

அந்த இடத்தின் ஆபத்தை உணர்ந்த மக்கள் பக்கத்துக் கொட்டில்களில் இருந்தும் அகப்பட்டதை
எடுத்துக் கொண்டு எஞ்சிய உயிர்களையாவது காப்பற்றும் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

அவளோடு இருந்த பெண் குழந்தைகளின் தாயை அந்த இடத்தை விட்டு வரும்படி கெஞ்சிக்
கொண்டிருந்தாள்.

அது அவளின் உறவுக்காரப் பெண்ணாக இருக்கலாம்..

”நான் வரமாட்டன்..சனமே இல்லாத இந்த இடத்தில என்ர பிள்ளைகள தனிய விட்டிட்டு வரமாட்டன்.. அதுகள் பயப்படுங்கள்..நான் இருக்கிற நம்பிக்கையிலதானே அவர் சண்டையில
நிற்கிறார்..அவருக்கு நான் என்ன பதில் சொல்லுவன்..நான் வரமாட்டன்..,இவ்வளவு
நாளும் பொத்திப் பொத்தி வைச்திருந்திட்டு ஒருநொடிக்க தவற விட்டிட்டனே..”

அந்தப் பெண்;, பிள்ளைகளைப் பறிகொடுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் துடித்துக்
கொண்டிருந்தாள்.

பக்கத்துக் கொட்டகைக்குள் இருந்தவர்களால் அவளை அப்படியே விட்டுவிட்டு செல்ல மனம்
வரவில்லை.

”தங்கச்சி நிலமையப் புரிந்து கொள்ளுங்கோ.., பிடிவாதம் பிடிக்காதையுங்கோ..,பிள்ளைகள் இனித் திரும்பி வராயினும்.பிள்ளைகள எங்கட பாதுகாப்பகழிக்க போட்டு மூடுவம்..நிற்க நேரமில்லை தங்கச்சி.. எங்களுக்காக களத்தில நிற்கிற அந்த போராளிக்காக இந்த உதவியக் கூட செய்யாமப் போனா எங்கட மனச்சாட்சியே எங்கள மன்னிக்காது..”

அவர்பேச்சோடு நிற்கவில்லை மளமளவென் செயலில் இறங்கினார்.அதற்கு மிஞ்சி
அதில் நிற்க முடியாமல் திரும்பினேன்.அதற்குப் பின் யாரால்தான் சாப்பிடமுடியும்;;…?

எறிகணைகள் பட்டு எங்களுக்குப் பக்கத்தில் இருந்த பனங்கூடலும் பொசுபொசுவென்று பற்றி
எரியத் தொடங்கியது.அந்தப் பனங்கூடலுக்குள் அடைக்கலம் தேடி இருந்தவர்களின
கூக்குரல்களும்,அமளிப்பட்டு மக்கள் வெளியேறும் சரசரப்பும் நெஞ்சை உலுக்கியது.

”நாசமாப் போவாங்கள்.. எங்கள உயிரோட கொளுத்திறாங்களே..இந்த நீரோசையைக்
கேட்க யாரும் இல்லையா…” ஒரு வயதான பெண்மணி தன் இயலாமையை திட்டித் தீர்த்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

எதிரியின் குண்டுமழையையும் மீறி, ஆங்காங்கே கேட்கும் நெஞ்சை உருக்கும் அந்த
வெடியதிர்வுகள் என்றென்றும் எம்தேசத்துக்காக,உயிரைவிட மேலாய் நாம் நேசிக்கும் எம்
மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்பதை சொல்வது போல் இருந்தது. பகை நெஞ்சில் தீயை
மூட்டிச் செல்லும் அந்த அக்கினிக் குஞ்சுகள் யாராக இருக்கும்? வெடிசுமந்த பலபேரின்
முகங்கள் மனக்கண்ணில் வந்துபோனது.

உள்மனம் பதைபதைத்தது. உட்பகுதிகளுக்குள் இருந்த மக்களெல்லாம் எறிகணை மழையையும் பொருட்படுத்தாது சாரை சாரையாக பிரதான சாலைப் பக்கமாக நகர்ந்து கொண்டிருப்பது,தீயின் பிரவாகத்திலும், பரா ஒளியிலும்; தெளிவாகவே தெரிந்தது.

அங்கிருந்த இன்னுமொரு தோழி அரைப்பாவாடை சட்டை ஒன்றைத் கொண்டு வந்தாள்.

”இதப் கவனமா வைச்சிருங்கோ..”

அவளே எனது உடமைப் பையிலும் வைத்துவிட்டாள். நான் எதுவுமே பேசாது அமைதியாக
இருந்தேன். நொடிக்கு நொடி நிலமை மாறிக் கொண்டிருந்தது.கடல் பக்கம் இருந்தும் அடிவரத்
தொடங்கியது.

‘கலீர்’ என்ற சத்தத்தோடு தகரத்தில்பட்டுத் தெறித்தது எறிகணைத் துண்டொன்று.

”அம்மா..,என்ர கையெரியுது..நான் காயப்பட்டிட்டன்…”

அவளின் சகோதரியின் குரல். ஓடிப்போய் பார்த்தபோது அவளது கையில் இருந்து இரத்தம்
சொட்டிக் கொண்டிருந்தது.அந்தநொடி அவள் துடிதுடித்துப் போனாள்.அவளது குருதியைத் தடுத்து
கட்டுப்போட மட்டுமே அப்போதைக்கு முடிந்தது. தனது சகோதரியை பாதுகாப்பாக
நம்பிக்கையான ஒருவரோடு அனுப்புவது என முடிவெடுத்தாள்.

அந்த இடமும் பாதுகாப்பற்றதாகவே மாறிக் கொண்டிருந்தது.இராணுவம் மிக அருகில் என்பதை துப்பாக்கி ரவைகள் உறுதிப்படுத்தின. அவளது இடத்தில் இருந்தவர்களும் வெளியேறத்
தொடங்கினார்கள்.அதற்கு பிறகு அங்கு இருப்பது நல்லதல்ல என்பதைப் புரிந்து கொண்டு
நாங்களும் நகரத் தொடங்கியிருந்தோம்.

அந்த இடத்தை விட்டுப்பிரதான வீதிக்கு ஏறினோம். தெருவெங்கும் மக்கள் நிறைந்திருந்தார்கள். அவர்களுக்கு அடுத்தகட்டம் செல்வதற்கான இடமில்லை. ..

விழுப்புண் தாங்கியவர்கள் அனைவரும் அந்த வீதியின் முன்பக்கமாக கொண்டு வந்து
சேர்த்திருந்தார்கள். அவர்களின் வேதனை ஒலி ..

விழுப்புண்களில் இருந்து வரும் வாடை ..இறந்தஉடலங்களில் இருந்து வரும் நாற்றம்..

புதைக்கவும் முடியாமல் விட்டுவரவும் மனமின்றி தவிக்கும் அந்த உறவுகளின் தவிப்பு..எல்லாவற்றையும் இரத்தம் சொட்டும் என் விழிகள் பதிவாக்கிக் கொண்டு வந்தன.

நாங்கள் அந்த வீதியைக்கடந்து நந்திக்கடல் பக்கமாக இறங்கினோம். வழமைக்கு மாறாகஇரத்தச்
சகதியில் எம் இனம் நனைந்து கொண்டிருப்பதைப் பார்த்துப் பொறுக்காத வானமகள் கண்ணீர்
விட்டழுதாள். வீதிகளிலும,; வெட்டவெளிகளிலும், தரப்பால் கொட்டகைகளிலும்,திறந்த
காப்பகழிகளிலும் எல்லாம் இழந்து உயிர்கூடுகளை மட்டும் சுமந்து திரிந்தவர்களை இயற்கையும்
வஞ்சித்தது.

பொழுது வெளுக்கத் தொடங்கியிருந்தது. சீருடையணிந்த போராளிகள் அணியாக நந்திக்கடல்
பக்கமாக நகர்ந்து கொண்டிருந்தனர். விழுப்புண்தாங்கியவர்களை செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக
எடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அரசல் புரசலாக செய்திகள் பரவத்
தொடங்கியிருந்தன. அதனால் விழுப்புண் தாங்கியவர்கள் அனைவருமே வட்டுவாகல் வீதியடிக்கு
கொண்டுவரப்பட்டிருந்தார்கள்.அங்குதான் அவளும் தனது சகோதரியைப் பாதுகாப்பாகக் விட்டு
விட்டு வந்திருந்தாள்.

இப்போதுநந்திக்கடற்கரை பக்கமாக நாங்கள் வந்துகொண்ருந்தோம்;.அந்தப்பகுதியிலும்
பெரும் திரளான மக்கள் இருந்தனர். கடற்கரைக்குச் செல்லும் வீதி அருகில் யாரோ இருந்து
விட்டுப்போன தடயங்களோடு ஒரு காப்பகழி வெறுமையாகக் கிடந்தது.அதுவே எங்களின்;
பாதுகாப்பிடமாக இருந்தது. நாங்கள் நாலுபேர் அதற்குள் இருந்தோம். அதிலிருந்து
பார்த்தால் ஓரளவுக்கு எல்லா இடத்தையும் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஆங்காங்கே
சிறியசிறிய படகுகள் மரங்களின் கீழ் மறைப்பாக விடப்பட்டிருந்தன.

தெரிந்த பல போராளி குடும்பங்களும் அந்தப்பகுதியில்தான் இருந்தார்கள். வானத்தில்
வண்டு ஓயாது சுற்றிக் கொண்டே இருந்தது.எறிகணைகளும் சரமாரியாக வீழ்ந்து கொண்டே
இருந்ததன. வண்டைப் பார்த்துக் கொண்டிருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதுவும்
செய்யமுடியாது.வண்டுக்கு உருமறைப்புகள் செய்தபடி சிலர் நடமாடினர்.

எனது தொலைத்தொடர்புக் கருவி அழைத்தது.நேற்றில் இருந்து அந்த அழைப்புக்காகவே
காத்திருந்த நான் கொஞ்சம் உற்காகமாகவே புறப்பட்டேன்.இனி எனது பணிக்குத் தேவை
ஏற்படாது.என்னிடம் இருக்கும் விபரங்களையெல்லாம் கொடுத்துவிட்டு நான் எங்களணிகளோடு
இணைந்து கொள்ளலாம்.

ஆனால்,அன்று எனது பொறுப்பாளர் அதிக நேரம் பேசவில்லை. எனக்கான அடுத்த கட்ட
பணி என்ன என்பதை அவர் என்னிடம் கூறியபோது நான் அதிர்ந்து போயிருந்தேன்.

சொஞ்சம் கூட அதை நான் எதிபார்க்கவில்லை. எல்லாப்போராளிகளுக்கும் இருக்கும்
சராசரிக் கனவுதான் என்னிடமும் இருந்தது.’இறுதிவரை நின்று போராடுவது முடியாது என்ற
நிலை வரும்போது இயக்க மரபு காப்பது.’

அந்த நிலைப்பாட்டில்தான் நானும் உறுதியாக இருந்தேன்.

ஆனால் நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத இன்னுமொரு பணியை அன்று அவர்
என்னிடம் தந்திருந்தார்.

”இந்த மண்ணும் எங்கட மக்களும் தாங்கிற வலிகள,எங்கட விடுதலைப் போராட்ட வரலாறுகள,
மாவீரர்களின்ர அர்ப்பணிப்புக்கள நீங்க பதிவு செய்யவேணும்..உங்களால அதச் செய்ய
முடியும்..நீங்க செய்யுங்க..,இது அடுத்த தலைமுறைக்கான கடமை..”

மறுத்துப் பேசக்கூட இடமில்லாமல் நான்விரும்பியோ விரும்பாமலோ அந்தக் கட்டளைக்குக்
கட்டுப்பட்டிருந்தேன்.என்னிடம் இருந்த துப்பாக்கி,தொலைத்தொடர்புக்கருவி இரண்டையும்
அங்கேயே ஒப்படைத்துவிட்டு இறுகிப்போன முகத்தோடு வெளியேறினேன்.இனி யாரும்
தொலைத் தொடர்புக் கருவியில் என்னை அழைக்க மாட்டார்கள். நினைத்துப் பார்க்கவே
முடியாமலிருந்தது.

தொடரும்…
 

 

https://www.thaarakam.com/news/131667

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது விடுதலைப் போராட்டம் ஓய்ந்து போகப்போவதில்லை! தடம் அழியா நினைவுடன் … மே 16 – பகுதி 2 அ. அபிராமி

On May 20, 2020

வட்டுவாகல் வீதிக்கு ஏறினேன்.ரவைகள் சீறிச்சீறி வந்து கொண்டிருந்தன. வீதியின் மருங்கில் உழவு இயந்திரப் பெட்டிகளில் சாவடைந்தவர்களின் உடலங்கள்.அந்தப் பெட்டிகளின் கீழே விழுப்புண் தாங்கியவர்களுமாய்ப் பலர் கிடந்தனர். நெஞ்சே பற்றி எரிந்தது.

”தண்ணி…தண்ணி..”

ஈனக்குரலில் யாரோ தண்ணீர் கேட்டுக் கொண்டிருந்தார்கள். திரும்பிப்
பார்த்தேன்.

உழவு இயந்திரப் பெட்டிக்குக் கீழே இருந்துதான் அந்தக் குரல் வந்தது.
ஒருதம்பி கைகளை நீட்ட முயற்சி செய்து கொண்டிருந்தான்..

அது கொஞ்ச உயரத்துக்கு மேலே உயரவில்லை. திரும்பவும் கீழே விழுந்தது. அவன்தான் தண்ணீர் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை புரிந்துகொண்டேன்.அவனுக்குப் பக்கத்தில் இறந்த உடலங்கள் கிடந்தன.

may.jpg

விழுப்புண் தாங்கியவர்களும் இருந்தார்கள். ஓவென்று கதறி அழவேண்டும்
போலிருந்தது.பக்கத்தில் யாரிடமாவது தண்ணீர் இருக்குமா என்று விசாரித்துப்
பார்த்தேன் ஒருவரிடமும் இல்லை.

கிட்டத்தில் கிணறு கூட இல்லை தண்ணீர் எடுத்துவரக்கூடிய இடமும் இல்லை. எல்லாரையும் போலவே பார்த்துவிட்டு உதவமுடியாதவளாய், அவனைத் திரும்பிக்கூட பார்க்கச் சக்தியற்று
வந்துகொண்டிருந்தேன். உள்ளம் நெருப்பாய் கொதித்தது.எப்படி வந்தேன் என்று
தெரியாமலே நந்திக்கடற்கரையடியில் நாங்கள் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டேன்;.

எறிகணைகள் ஓய்ந்தபாடில்லை.நானும் அவளும் இருந்த பக்கமாக ஒரு 60 எம்.எம் மோட்டார்
எறிகணை ஒன்று வந்து குத்தியது. அந்த இடத்திலேயே எல்லாம் முடிந்து விட்டது என்றுதான்
நினைத்தோம். ஆனால் வந்து குத்திய எறிகணை வெடிக்காமல் கிடந்தது.

எனது உடமைப் பையையில்; இருந்த அறிக்கைகள் எல்லாவற்றையும் எரிக்கத் தொடங்கினேன்.
உடமைப்பையில் ஒவ்வொரு இடமாகக் குறைத்துக்குறைத்து இப்போது எஞ்சியது இதுவரை நாளும்
பத்திரமாய் கட்டிக்காத்து வந்த சில புகைப்படங்கள்,எனது நீண்ட நாள் உழைப்பின்
அறுவடையாய் இருந்த கரும்புலிகளது வரலாற்றைத்தாங்கிய நூல்.

அந்த நூலை வடிவமைத்துத் தந்த போராளி எனது கையில் தந்த தரவுகளைச் சேமிக்கும் கருவி (மெமறிஸ்ரிக்),எப்போதும் என்னோடு இருக்கும் கொப்பி,பேனை, இதைத்தவிர எனது தனிப்பட்;ட தேவைக்கான அத்தியாவசிய பொருட்கள,; அதை மிஞ்சி வேறு எதுவும் அந்தப்பையில் இல்லை. சொல்லப்போனால் தோழி தந்த அரைப்பாவாடை சட்டையைத் தவிர வேறு மாற்றுடை கூட என்னிடம் இல்லை.

என்னிடம் என்று சொல்வதை விட அனைவரது நிலையும் அதுவாகத்தான் இருந்தது.
அந்தப் புகைப்படங்களை எடுத்துப்பார்த்தேன்.

‘அண்ணையோட நின்று படமெடுக்க வேண்டும் என்பது எல்லோருடைய கனவு. அந்தக்கனவு பலருக்குக் கிடைக்கும் சிலருக்கு கிடைக்காமலே போய்விடும்.’

ஆனால் எனக்கு பலதடவை வாய்ப்புக் கிடைத்திருந்தது.இப்போது அதைக்கூட வைத்திருக்க முடியாத சூழலில் நான் இருந்தேன.; அந்தப்படங்களை எரிக்க மனம் இடங்கொடுக்கவில்லை. அண்ணாவின் படத்தைக் கிழிக்கவும் என்னால் முடியவில்லை.

நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு எனது படத்தை மட்டும் கிழித்து எரிகின்ற நெருப்பில் போட்டுவிட்டு அண்ணாவின் படத்தை நாங்கள் இருக்கிற பங்கருக்குள்ளே வைத்தேன்.

அடுத்து நான் எழுதிய புத்தகம். அட்டைப் படத்திலிருந்து ஒவ்வொரு தாளாகக் கிழித்துக்கிழித்து எரிகின்ற தீயில் போடுகின்றபோது இதுநாள்வரை ஒவ்வொரு செங்கல்லாய்ச் சேர்த்துச்சேர்த்து நான்கட்டிய கோபுரத்தை ஒரே நாளில் என் கையாலே தகர்த்தெறிவது போலிருந்தது. கையில் இருந்த தரவுகளைச் சேமிக்கும் கருவியை பக்கத்தில் கிடந்த கல்லால் குற்றி தூர வீசினேன்.

எந்தநேரம் என்ன நடக்கும் என்பதை சொல்லமுடியவில்லை. பாதுகாப்பகழிக்குள் இருந்தபடியே
நான் அணிந்திருந்த எனது உடையை மாற்;றினேன். என்ஆளுமை, என்நிமிர்வு, என்அடையாளம் எல்லாமே என்னைவிட்டுப் போவதைப்போலிருந்தது. ஆனாலும் விடுதலைப் போராட்டத்தின் பாதித்தூரத்திலிருந்து பயணித்த நான் இந்தக் கணம் வரை எனது கடமையை சரிவரச் செய்திருக்கிறேன் என்ற திருப்தி மட்டும் முழுமையாக இருந்தது.

பொழுதும் சாயத் தொடங்கியது. எம் இனத்தை அழிப்பதற்காக உலக நாடுகள் எல்லாம் அள்ளிக்
கொடுத்த ஆயுதங்களால் பெருமெடுப்பலான தாக்குதல்களை, நாலா பக்கமிருந்தும் எதிரி
தொடுத்தவண்ணமிருந்தான். இப்போதும் எதிரியை நோக்கி சரமாரியான எதிர்த்
தாக்குதல்கள் நடந்து கொண்டே இருந்தது.

எத்தனை துணிச்சல், எத்தனைவீரம் தாம் சண்டை செய்வது அரச படைகளோடு மட்டுமல்ல, ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கும் பெரும் வல்லரசுப் படைத்திட்டமிடல்களோடும், படைவளத்தோடும் என்பதைத் தெரிந்திருந்தும,; வருடங்களைக் கடந்தும் நீண்ட போரில் நிமிடங்கள் கூட ஓயாது களமாடும் ஒவ்வொரு படையணிகளையும் சேர்ந்த எங்கள் சகோதர சகோதரிகள் இந்தத் தேசத்தின் எல்லைச்சாமிகளாய்த் தெரிந்தார்கள்.அவர்களை என்றும் இந்த மண் நன்றியுடன் தலைவணங்கவேண்டும் என எனக்குள் எண்ணிக்கொண்டேன்.

ஒவ்வொரு கணங்களும் நீண்ட யுகங்களாகமாறிக் கொண்டிருந்தன. வானத்தில் பராவெளிச்சம்
பரவத் தொடங்கியிருந்தது. நாங்கள் இருந்த இடமும் பாதுகாப்பற்றதாய் உணர, சொஞ்சம்
நகர்ந்து இன்னுமொரு காப்பரணுக்குச் சென்றோம்.

இரவிரவாய் நந்திக் கடல் அதிர்ந்து கொண்டிருந்தது. வெளியில் என்ன நடக்கிறது என்பதை
எங்களால் உணர்ந்து கொள்ளமுடியவில்லை. எல்லோர் முகங்களும் பாறைகள் போல் இறுகிக்
கிடந்தன.

அழகே உருவான அவளது முகம் கூட சோபை இழந்து கிடப்பதாக எனக்குத் தோன்றியது.
ஊடகப்பிரிவுக்கு நான் சென்றதிலிருந்து அவளது வளர்ச்சியை திறனை கூடவே இருந்து
பார்த்திருக்கின்றேன். ஊடகத்துறை சார்ந்து அவளுக்கு தெரியாதது என்று எதுவுமே இல்லை.
தனது குரல் ஆளுமையால்,தனது நடிப்புத் திறனால்,தனது படைப்புகளால், தனது
தொகுப்பாற்றலால், தனது படப்பிடிப்பு வல்லமையால் எனப் பல்துறை ஆளுமையை தனக்குள்ளே
தாங்கி நிற்கும்;; அவள், கணவனிடம் இருந்து இன்னும் எந்தத் தகவலும் வராத குழப்பத்தில்
இருந்தாள்.குழப்பத்தோடே நேரங்கள் உருண்டோடின.

அவளது கணவனிடம் இருந்து அழைப்பு வந்தது. அவன்தான் நந்திக்கடலூடாக ஊடறுத்து இறங்கும்
கடலணிகளுக்குப் பொறுப்பாக இருந்தான்.

”என்னைப் பார்க்க வேண்டாம். நீ அக்காக்களோடு வெளிக்கிட்டு போ..”ஆனால் அவள் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அவனோடு நின்றால் அவனையும் பாதுகாக்கலாம் என்பது அவள் எண்ணமாக இருந்தது.

அவனைத் தனியே விட்டுவிட்டு வெளியேறுவதற்கு அவள் மனது ஒருதுளியும் இடங்கொடுக்கவில்லை. ஏற்கனவே இந்தப் போர்ச்சூழலிற்குள்தான் அவள் போதிய மருத்துவ வசதி இன்றி தனது பிஞ்சுக் குழந்தையை இழந்திருந்தாள். இப்போது அவனுக்கும் ஏதும் நடந்துவிடுமோ என்ற அச்சம் அவளுக்குள் இருந்தது.அதனால்; அவன் நிற்கும் இடத்துக்கே தானும் வரப்போவதாக சொன்னாள்.

அவனும் அவளை அழைத்து வர ஆட்கள் வருவார்கள் என்றும் எங்களை வெளியேறிக் கொண்டு
இருக்கும் மக்களோடு சேர்ந்து வெளியேறும்படியும் சொன்னான்.

நாங்களும் அவளை எங்களோடு வரும்படி அழைத்தோம்.

”நான் தனிய வந்து என்ன செய்யிறது எப்படியும் அவரையும் அழைத்துக் கொண்டு
வரப்பார்க்கிறன்.இல்லையென்றால் ஏதோ நடக்கிறது வாழ்வதாக இருந்தாலேன்ன சாவதாக
இருந்தாலேன்ன அது இரண்டு பேருக்குமே ஒன்றாகவே இருக்கட்டும்.. ”’

அவள் தனது பிடிவாதத்தில் உறுதியாக இருந்தாள்.எங்களையும் வெளியே செல்வதற்கு
தொடர்புகளை எற்படுத்தித் தந்துவிட்டு வெளியேறினாள்.நாங்களும் அவளும் செல்லும்
பாதைஒன்றாக இருந்தது.அவள் நந்திக் கடல் பக்கமாகச் செல்ல நாங்கள் வட்டுவாகல் பக்கமாக
நடக்கத் தொடங்கினோம்.

எல்லோர் மனங்களுக்குள்ளும் இனம்புரியாத அச்சமும் பதற்றமும் இருந்தது.
எப்படிப்போகப்போகிறோம்? யாரோடு போகப்போகிறோம்? போனபின்
என்ன நடக்கப்போகிறது? எல்லோருக்குள்ளும் விடைதெரியாத பல கேள்விகள் இருந்தன.
ஆனாலும் அமைதியாய் நகர்ந்து கொண்டிருந்தோம்.

நாங்கள் வெளிக்கிடும் போதும், இறுதிவரை நின்று போராடுவது என்ற ஓர்மத்தோடு
நின்ற போராளிகள் ~கவனமாக போங்கள் இது முடிவல்ல..பெரும் பொறுப்புகளை சுமந்து
செல்கிறீர்கள் உங்களை நம்பித்தான் இங்கு நாங்கள் நிற்கிறோம்…’

என்று எங்களை வழியனுப்பி வைத்த போராளிகளை நினைத்தபடியே நடந்து கொண்டிருந்தேன்.
எதிரியின் மனிதப்பேரவலத்தை சுமந்த மக்கள் தம் உயிர்க்கூடுகளைச் சுமந்தபடி நடந்து
கொண்டிருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து நாங்களும் நடக்கத் தொடங்கினோம்.

17 ஆம் நாள் காலை மெல்ல மெல்ல புலரத் தொடங்கியது. ஒருவரை ஒருவர் முகம்பார்க்கக்
கூடிய அளவுக்கு வெளிச்சம் பரவியிருந்தது. அப்போதுதான் என் நெருங்கிய தோழியைக்
கண்டுவிட்டேன்.சோர்ந்து போயிருந்த மனதுக்குப் பெரும் தெம்பு கிடைத்ததுபோலிருந்தது.
அவளினுடைய அம்மா ஏற்கனவே மூன்று போராளிகளைக் கூட்டிச் செல்ல வேண்டும். அனாலும்
கொஞ்சம் கூட அச்சமின்றி எல்லாப்போராளிகளையும் தான் அழைத்துச் செல்வதாகச்
சொன்னார்.

”பயப்படததையுங்கோ பிள்ளைகள் எல்லாரையும் நான் கூட்டீற்றுப் போறன்..எனக்குப்
பின்னால வாங்கோ…”

அந்த ஒற்றைச் சொல் தந்த நம்பிக்கையில் அம்மாவுக்குப் பின்னாலே சென்று கொண்டிருந்தோம்.வட்டுவாகல் பிரதானசாலையில் இருந்து கொஞ்சம் இறங்கி ஒரு தொடர்
அணியாக நாங்கள் நடந்து கொண்டிருந்தோம்.அவ்வளவு நெரிசலுக்குள்ளும் எங்களணி தனது
தொடரைக் கைவிடவில்லை.

கால்களில் எல்லாம் மக்கள் பாவித்து விட்டுச் சென்ற பொருட்கள் மிதிபட்டன. தரப்பால் கொட்டில்களை இழுத்துக்கட்டிய கட்டைகள் இடித்தன,மக்கள் சேர்த்துச்சேர்த்து வைத்திருந்த
பொக்கிசங்கள் எல்லாம் கால்களில் மிதிபட்டன. அந்த நேரத்தில் கூட எதிரியின் தாக்குதல்கள் தொடர்ந்தபடியே இருந்தன.

தாக்குதலுக்கு காப்பாக மக்கள் இருந்து விட்டுச் சென்ற காப்பகழிகளிகளில் இறங்கியிருந்தோம். அப்போதுதான் காதணி எதுவும் அணியவில்லை என்பதை தோழி நினைவுபடுத்தினாள். என்னிடம் காதணி எதுவும் இல்லை.

பக்கத்தில் இருந்த இன்னுமொரு தோழி ஒரு ‘இமிற்றெசன்’ தோடொன்றைத் தந்தாள். அந்த அமளிக்குள் எனக்கு காதுகுத்து நடந்தது. காதிலிருந்து இரத்தம் வந்தது. உணர்வுகள் மரத்துப்போயிருந்ததால் அந்தவலிகூடத் தெரியவில்லை.

மீண்டும் எழுந்து நடக்கத் தொடங்கினோம்.வீதி நிறைந்த மக்கள் வெள்ளம்.ஆங்காங்கே
ஆதரவற்றுக் கிடந்த உடலங்கள்.

‘காட்டுக்க ஆமிகாரன் நிக்கிறான்’ குசுகுசுப்புகள் எங்கள் காதிலும் எட்டியது. அப்போதுதான் கழுத்தில் கிடந்த குப்பிதகடு நினைவுக்கு வந்தது. கழுத்தில் கிடந்ததைக் கழற்றி கையில் வைத்திருந்தேன்.

இப்போது வட்டுவாகல் பக்கமாக காடுகளோடு காடுகளாய் நின்ற இராணுவத்தினரை நாங்களும்
கண்டு விட்டோம். வீதிகளில் தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் எவரும் ஒருத்தரை ஒருத்தர்
அறிந்தவர்களாகக் காட்டிக் கொள்ளாது சென்று கொண்டிருந்தார்கள்.

இன்னும் சிலர் தங்கள் பிள்ளைகளைத் தேடித்தேடி காண்பவர்களிடம் எல்லாம் விசாரித்துக் கொண்டு திரிந்தார்கள்.எப்படியாவது தங்கள் பிள்ளைகளை கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற
ஏக்கம்,தவிப்பு அவர்களின் முகங்களில் தெரிந்தது.

வீதியில், உழவு இயந்திரப் பெட்டிகளில் விழுப்புண் தாங்கியவர்களை ஏற்றிக் கொண்டு சென்றார்கள்.பாதை திறந்துவிட்டான் என்பதைப் புரிந்து கொண்டோம். கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வட்டுவாகல் ஆலமரத்தடிக்கு வந்து விட்டோம். இப்போது இராணுவத்தினரை நேருக்கு நேர் மிக அருகில் பார்க்கிறோம். இராணுவத்தினர் போராளிகளாக இருந்தவர்களை சரணடையும்படி அறிவித்தல் செய்து கொண்டிருந்தார்கள்.

அவர்களின் முகங்கள் எல்லாம் கோரமும் குரோதமும் நிறைந்திருப்பதாக தெரிந்தது. நாங்கள் வெளியேறிக் கொண்டிருப்பவர்களையே பார்த்துக் கொண்டு மணிக்கணக்கிலே நின்றோம்.இனி நாங்களும் உள்ளே சென்றுதானே ஆகவேண்டும்…கையில் வைத்திருந்த குப்பிதகடுகளை
பனைமரப் பொந்தில் போட்டேன்.

அது என்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது. அது என்னைக் கோழை என்று எண்ணியிருக்கக் கூடும்..

ஆனால் எனது உயிர் இருந்தால் இன்னும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இப்போது எனக்குள் அதிகம் இருந்தது. அதே நம்பிக்கை எல்லோருக்குள்ளும் இருந்தது. எதிர்கால சந்ததிகளைப் பக்குவமாகத் தீட்டுகின்ற பெரும் கடமையும் பொறுப்பும் இருந்தது. நாம் தோற்றுப் போனவர்கள் அல்ல..,தோற்கடிக்கப்பட்டவர்களும் அல்ல..,

எத்தனை நாடுகள் எம்மைக் கூட்டுச்சேர்ந்து அழிப்பது தெரிந்தும் அந்த வல்லாதிக்க சக்திகளை எல்லாம் எதிர்த்து நின்று களமாடும் வீரத்தைக் கொண்டவர்கள். சாம்பல்மேடுகளில் இருந்துதானே பல சரித்திரங்கள் பிறப்பெடுக்கின்றன.

இதோடு எமது விடுதலைப் போராட்டம் ஓய்ந்து போகப்போவதில்லை. போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. எந்த மக்களின் விடுதலைக்காக ஆயுதங்கள் ஏந்தினோமோ அந்தமக்களின் விடுதலையைப் பெற்றுக் கொடுக்கும்வரை தொடர்ந்து உழைக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பையும் கடமையும் தாங்கியவர்களாய் எங்கள் மண்ணிலேயே திறந்தவெளிச் சிறைக் கைதிகளாய் ஒவ்வொரு அடியாய் நகர்ந்து வட்டுவாகல் பாலம் கடக்க கால்களை எடுத்து வைத்தோம்.

மீண்டும் சந்திப்போம்..

 

 

https://www.thaarakam.com/news/132027

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி ...இன்னும் வாசிக்க தொடங்கவில்லை ..இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

இணைப்பிற்கு நன்றி ...இன்னும் வாசிக்க தொடங்கவில்லை ..இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 
 

இன்று சூடாக என்ன இருக்கின்றது என்று பலர் பார்ப்பதனால் வரலாறுகள் மறந்துபோகின்றன. அவற்றை கொஞ்சமாவது நினைவூட்டத்தான் நான் படிப்பவற்றைப் பகிர்கின்றேன்.

நேரம் இருக்கும்போது படியுங்கள்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இன்று சூடாக என்ன இருக்கின்றது என்று பலர் பார்ப்பதனால் வரலாறுகள் மறந்துபோகின்றன. அவற்றை கொஞ்சமாவது நினைவூட்டத்தான் நான் படிப்பவற்றைப் பகிர்கின்றேன்.

நேரம் இருக்கும்போது படியுங்கள்😀

ஜீ

இப்படியான வராலாற்றை கடந்து வந்தவர்களே நடந்ததை, அனுபவித்ததை மறந்துவிட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

ஜீ

இப்படியான வராலாற்றை கடந்து வந்தவர்களே நடந்ததை, அனுபவித்ததை மறந்துவிட்டார்கள்

ஏழு வருடங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்குப் போனபோது அங்கு எஞ்சியிருந்தவர்க “இடையில் 30 வருடத்தைக் காணோம்” என்பது போல 83 க்கு முன்னைய காலத்தவர்கள் போலக் கதைத்தார்கள். அதன் பின்னர் போகவே மனம் வரவில்லை.

அப்படி எல்லோரும் ஏன் ஒரு போராட்டம் நடந்தது என்பதை மறந்து இடையிடையே சடங்காகத்தான் நினைவுகூர்கின்றார்கள். இன்னும் பத்து வருடத்தில் சடங்கும் நின்றுபோய்விடும்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.