Jump to content

இனவெறுப்பு பிரச்சாரத்தால் ஜேர்மனியை நாசி ஜேர்மனியாக்கிய ஹிட்லர் - பகுதி 1


Recommended Posts

தனது இனவெறுப்பு பிரச்சாரத்தால் ஜேர்மனியை நாசிஜேர்மனியாக கருக்கொள்ள வைத்த வரலாற்றை மருதன் எழுதிய  இரண்டாம் உலகப்போர் என்ற நூல் பதிவு செய்துள்ளது. அந்த புத்தகதில் இருந்து சில பக்கங்களை  இங்கு இணைத்துள்ளேன்.    அன்றைய உலக மக்கள் தொகையில் 3 வீத‍த்தை பலிகொண்ட அதாவது  ஏறத்தாள 85 மில்லியன் மக்களை பலிகொண்ட  இரண்டாம் உலக யுத்த‍த்தின் ஆரம்பப்புள்ளியின்  ஒரு சில பக்கங்களை இப்பதிவு கூறுகிறது. 

large.B6759CA9-1C2B-4205-9067-FD7D742D85DD.jpeg.5e59c3e93a0ebf3bb0d497354e43e72d.jpeg

முதல் உலகப்போர் முற்றுப்பெற்ற 1918 ம் ஆண்டு தொடங்கி 1921 வரையான காலகட்டத்தை உடன்படிக்கைக் காலகட்டம் என்று அழைக்க முடியும். ஜேர்மனி மட்டுமல்ல தோற்றுப்போன அத்தனை தேசங்களுடனும் தனித்தனியே ஒப்பந்தங்கள்  போட்டுக்கொள்ளபட்டன.

·        செப்ரெம்பர் 10, 1919 ல் Treaty of Trianon – ஹங்கேரியுடன்.

·        ஜூன் 4 27, 1920 ல் Treaty of Neuilly – பல்கேரியாவடன்

·        ஆகஸ்ட் 10 1927ல் Treaty of Sévres. துருக்கியுடன்

கெய்சல் வில்லியம்ஸ் கிளம்பி போய்விட்டதால், ஜேர்மனியில் மன்னராட்சி முடிவுக்கு வந்து ஜனநாயகம் வந்து சேர்ந்த‍து. ஹிட்லர் விரக்தியின் உச்சியில் இருந்தார். ஜேர்மனியில் மட்டும் மொத்தம் இருபது லட்சம் பேர் இந்த போரில் உயிரிழந்திருந்தனர். இருபது லட்சம் பேரை இழந்தும் கிடைத்த‍து என்ன? தோல்வி, அவமானம் , நெஞ்சைப்பிளக்கும் வேதனை. பிஸ்மார்க்கின் கனவு இதோ சிதைந்து கிடக்கிறது. சிங்கம் போல் கர்ஜிக்காமல், பின்னிரண்டு கால்களுக்கு இடையில் வாலைச் சாதுவாக சுருண்டு கிடக்கிறது ஜேர்மனி.

ஹிட்லர் தனது வாழ் நாளில் வேறு எதற்கும் இத்தனை கலங்கி நின்றதில்லை.  இனி ஜேர்மனி எழுந்திருக்க வாய்ப்பே இல்லை என்று தெரு முனையில் மக்கள் பேசிக்கொண்ட போது அவமானத்தால் குறுகிப்போனார். சிவந்த கண்களுடனும் மார்பு முழுவதும் வன்ம‍த்துடனும் சுற்றி வந்தார்.  இவர்களைப் ப‍ழிவாங்க வேண்டும். ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரையும்.

ஹிட்லரின் ரத்த‍த்தை இரும்பு குழம்பாக மாற்றியது ஜேர்மனி மீது வீசப்பட்ட குற்றச்சாட்டு. எல்லாவற்றிற்கும் காரணம் ஜேர்மனி தான். இந்த போர் மூண்டதற்கு காரணம் ஜேர்மனியின் பேராசை. இப்படியே விட்டால் ஐரோப்பவின் எதிர் காலத்தை பாதிக்கும் என்பதால் நாம் செய்த தியாகம் அது.  எங்களில் பல லட்சக்கணக்கானவர்கள் உயிரழந்திருக்கிறார்கள். பற்பல லட்சம் செலவாகி விட்டது. எங்கள் தேசத்தின் பொருளாதாரம் சரிய ஆரம்பித்து விட்டது. காரணம், ஜேர்மனி. ஆகவே, ஜேர்மனி எங்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும்.

கொதித்துப் கத்தினார் ஹிட்லர். நீங்கள் மட்டும் உத்தமர்களா? ஜேர்மனி நடத்தியது மட்டும் தான் ஆதிக்க போர் என்றால் நீங்கள் நடத்தியது தேசபக்திப்போரா? தோற்றுவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக, இப்படியா அடாவடி செய்வது? நீங்கள் கேட்கும் பெரும் பணத்திற்கு ஜேர்மனி என்ன செய்யும்? உங்களுக்கு ஈவிரக்கமே கிடையாதா? நீங்களும் மனிதர்களா?

கமயூனிஸ்டுகளையும் யூதர்களையும் ஹிட்லரால் மறக்க முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை. ஹிட்லரால் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடிந்த‍து. மன்னர்கள் கம்யூனிஸ்டுகளிடம் பரிவாக இருந்த‍து தவறு. கம்யூனிச சித்தாந்த‍த்தை தேசம் முழுவதும் பரவ விட்டது தவறு. யூதர்கள் பிசாசுகள் என்பதைப் புரிந்து கொள்ளாமல் விட்டது மாபெரும் தவறு.

ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றினார் ஹிட்லர். இது நிரந்தரமல்ல என்று உள்மனம் சொன்னது. கனவு ஒன்று உருவாக ஆரம்பித்த‍து. அதிகாரம் மட்டும் கையில் இருந்தால் தவறுகள் அனைத்தையும் சரி செய்துவிடமுடியும் அல்லவா? தூய ஜேர்மனியை மீட்டெடுக்கு முடியுமல்லவா? பிஸ்மார்க்கின் கனவை மெய்ப்பிக்க முடியும் அல்லவா?

கனவு தான். இருக்கட்டுமே. தோல்வி, தோல்வி என்று இடிந்து கிடப்பதை விட இது எவ்வளவோ மேல் . தன் கனவை வெளியில் சொல்ல பயந்தார் ஹிட்லர். இப்போதைக்கு இது என்னிடம் மட்டும் இருக்கட்டும். சமயம் வாய்க்கட்டும். தொடங்கலாம். ஒரு ஆட்டம் ஆடப் பார்த்து விடலாம். இது தகுந்த தருணம் அல்ல. பொறு மனமே பொறு.

ஐரோப்பா கலைந்து கிடந்த‍துழ இத்தாலியில் பெனிட்டோ முசோலினி 1922 ல் ஆட்சியைக் கைப்பற்றினார். புதிய ரோமானிய சாம்ராஜ்யத்தை இங்கே உருவாக்க போகிறேன. இத்தாலியர்களே என் பின்னால் வாருங்கள் என்று அறைகூவல் விடுத்திருந்தார்.

இராணுவத்தை விட்டு கழண்டு கொண்டு விடலாம் என்று ஹிட்லர் நினைத்து கொண்டிருந்த போது அவர் வேலையை மாற்றினார். ராணுவ வீர்ர்களுக்கு அரசியல் கற்றுக் கொடுக்கும் வேலை. அதுவரை வீர்ர்கள் அரசியல் அறிந்திருக்கவில்லை. மன்னர் அவர்தான் பரம்பொருள். அவர் மூலமாக வரும் உத்தரவுகளை பிசகில்லாமல் செய்து முடிக்கவேண்டியது மட்டுமே அவர்களுகு இடப்பட்டிருந்த பணி. அதை மட்டுமே சீராக செய்து முடித்தால் போதுமானது.

இனி மன்னர் இல்லை. நிலவரம் மாறிக்கொண்டு  இருக்கிறது. ஜேர்மனி பழையை புஷ்டியான தேசமாக இல்லை. இருக்கும் கொஞ்ச நஞ்ச ராணுவமும் ஒழுங்காக இருக்க வேண்டும்.  அரசியல் கற்க வேண்டிது அவசியம். துப்பாக்கிப் பயிற்சி போல இதுவும் ஒரு பயிற்சி. ஹிட்லரை அந்த பணிக்கு எப்படித்  தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. விஷய ஞானம் உள்ளவர், புத்தகங்கள் படிப்பவர், உலக விடயங்கள் பலவற்றைப் பற்றி அவர் வீர தீரமாக உரையாற்றியதை நண்பர்கள் பார்திருக்கிறார்கள். எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு அறிவுஜீவி என்ற அடையாளத்தை பெறுத்தந்திருக்க வேண்டும்.

 

 இனவெறிப் பிரச்சார ஆரம்பம்.

ஹிட்லர் பணியை ஏற்றுக்ககொண்டார். அரசியல் தானே? நானும் அதற்காகத் தான் காத்துக் கொண்டிருந்தேன். ஹிட்லர் பேச ஆரம்பித்தார். தனக்கு தெரிந்த அரசியலை, தனக்கு தெரிந்த இன வெறுப்பை, தனக்கு தெரிந்த லட்சியத்தை, பிஸ்மார்க்கின் கனவை ஆர்வம் பொங்க விவரித்தார். ஜேர்மனி எப்படிப்பட்ட தேசம் தெரியுமா என்று ஆரம்பித்து தேசத்தின் அருமை பெருமைகளை அடுக்கினார். தேசபக்தி என்றால் என்ன தெரியுமா நண்பர்களே என்று கதைப்பிரசங்கம் செய்தார். கம்மியூனிஸ்டுக்களையும் யூதர்களையும் நான் ஏன் வெறுக்கிறேன் தெரியுமா? புள்ளிவிவரங்களோடு விவரித்தார்.

பேசும் போதே சீறினார், பாய்ந்தார், குதித்தார், எம்பினார், முகத்தை கோணலாக்கி பேயாக கத்தினார். சட்டென்று பணிந்து புன்னகை செய்தார். சிலருக்கு சிரிப்பு வந்தாலும் பெரும்பாலானோரை ஹிட்லர் வசியப்படுத்தியது நிஜம். அவர் பேசுவதையும் ரசிக்க ஆரம்பித்தார்கள். பேச்சின் சாரத்தையும் சிறிது சிறிதாக உள்வாங்கிக்கொண்டார்கள்.

ஹிட்லருக்கு ஏக்கமான இருந்த‍து. எப்படியாவது பவேரிய மாநில அரசாங்கத்தை கைப்பற்றவேண்டும்.  அரசாங்கத்தை வீழ்த்த முடியந்தால் நன்றாக இருக்கும். இந்த அரசாங்கத்திற்கு விசாலமாக கனவு காணும் ஆற்றல் இல்லை. நிர்வாக திறன் இல்லை. உபயோகபடாத அரசாங்கத்தை வைத்துக்கொண்டிருப்பது ஆபத்தானது. அவமானகராமானது. தன்னைப்போலவே சிந்ததிக்கும் வேறு சில புரட்சியாளர்களும்( ஆம் தன்னை அப்படித்தான் நினைத்துக் கொண்டார் ஹிட்லர்) பவேரிய மாநிலத்தில் இயங்கிக் கொண்டிருப்பதை ஹிட்லர் அறிந்து கொண்டார். அவர்களுக்கும் ஹிட்லரை தெரிந்திருந்தது. ஹிட்லருடன் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். புதிய அரசங்கத்தை நிர்மாணிக்கலாம். அதற்கு முன்னால் கட்சி ஒன்றைத் தொடங்கிவிடுவோம். கட்சி இல்லாமல் அரசியல் நடத்த‍ முடியாது. புரட்சி நடத்த‍ முடியாது. நம்மிடையே வலுவான அரசியல் சித்தாந்தம் இருந்த்தாலும், ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆயுதங்கள் தேவே. எனவே ராணுவம் தேவை.

 

அரசியலில் இணைவு

சிந்தித்து பார்த்தார் ஹிட்லர். புதுக்கட்சி தேவையில்லை என்று தோன்றியது. இருக்கும் சுண்டைக்காய்க் கட்சிகளுள் ஒன்றை நம் வசமாக்குவ்வோம். ஆராய்ந்து பார்த்து அவர்கள் தேர்ந்தெடுத்த‍து ஜேர்மன் தொழிலளர் கட்சியை (German Worker`s Party) ஐம்பத்து ஐந்தாவது உறுப்பினராக ஹிட்லர் தன் பெயரைப் பதிவு செய்து கொண்டார். பிறகு, ராணுவத்தை தொடர்பு கொள்ள வேண்டும். நமது சித்தாந்த‍த்திற்குள் அவர்களை இழுக்க‍வேண்டும். நம் வசப்படுத்த‍ வேண்டும்.

கட்சியின் நிறுவனர் ஆல்டல் டிரெக்ஸ்லரின் (Anton Drexler) சித்தாந்த‍த்தை கேள்விப்பட்ட ஹிட்லர் ஆச்சரியம் அடைந்தார். யூதர்களை அழிக்க வேண்டும். பரந்து விரிந்த  தூயஜேர்மனியப் பேர‍ரசை நிர்மானிக்க வேண்டும். உலகின் சிறந்த குடிமகன்களாக ஜேர்மனியர் இருக்க வேண்டும். அதுவும் தூய ஜேர்மனியரே இந்த நாட்டை ஆளவேண்டும். டியெற்றிஹ் எக்காட் (Dietrich Eckart) என்பவரின் சிநேகிதமும் கிடைத்த‍து. விஷய ஞானம் கொண்டவர், சிந்தனாவாதி என்று அறியப்படவர். ஹிட்லர் அவரிடம் இருந்து கற்க ஆரம்பித்தார். தான் சிந்திக்கும் முறை சரிதானா என்று அவ்வப்போது உரையாடி சரிபார்த்துக் கொண்டார்.

ஹிட்லர், நீ உரைகள் பல நிகழ்த்தியிருக்கிறாயாம, நம் கட்சியின் சார்பாகவும் பேசு. பொது மக்களை கட்இசக்குள் சேர்க்க உனது உதவி தேவை. தலையைத் தாழ்த்தி ஏற்றுக்கொண்டார் ஹிட்லர். அவர்கள் யூகித்த‍து சரியாகவே இருந்த‍து. ஒரு பகுதியினரிடையே ஹிட்லர் அறியப்பட்டிருந்த‍தால், கூட்டம் வந்த‍து. ஹிட்லருக்கு தெரியும். உயிரைக் கொடுத்து பேசினார். உணர்ச்சிக் கடலில் த‍த்த‍ளித்தார். இமைக்க‍வும் மறந்து கேட்டுக்கொண்டு நின்றார்கள். பிற்காலத்தில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் மக்களை ஈர்க்க தன் வாழ்நாள் முழுவதும் ஹிட்லர் திரும்ப திரும்ப பயன்படுத்திய உத்தி அது. வெறும் பேச்சு. தொடர்ந்து இரண்டு, மூன்று மணி நேரங்கள் ஒரு வாய் தண்ணி கூடப் பருகாமால் உரையாட முடிந்த‍து அவரால்.

ஹிட்லர் தனக்கான இடத்தை கட்சிக்குள் அழுத்தமாக அமைத்துக் கொண்டார். யாராலும் அசைக்க முடியாத ஒரு அடித்தளத்தையும் சத்தம் போடாமல் உருவாக்கிக் கொண்டார். ஹிட்லரைப் போல இன்னொரு துடிப்பான ஆளுமை கட்சிக்குள் இல்லாத‍து அவருக்கு வசதியாகிப் போனது. ராணுவத்தில் இருந்து முறைப்படி விலகிக் கொண்டார். இனி எதற்கு அங்கே வகுப்புகளை எடுத்து நேரத்தை விரயமாக்க வேண்டும்.

ஹிட்லரின் வளர்ச்சி கட்சி வட்டத்திற்குள்  புகைச்சலைக் கிளப்பியது. அவரால் தான் கட்சி வளர்ந்திருந்தது. செல்வாக்கு உருவாகியிருந்த‍து. நிதி சேர்ந்த‍து. ஆனால் கட்சியின் மூத்த உறுப்பினர்களால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மூத்தவர்கள் நாம் எத்தனை ஆண்டுகளாக்க் கொடிபிடித்துப் போராடி இருப்போம். தலைமைக்கு கட்டுப்பட்டு எத்தனை சிரமங்களை அனுபவித்திருப்போம். நேற்று வந்த ஹிட்லரைத் தூக்கி வைத்து கொண்டுடாடுகிறார்களே.

ஒரு காரியம் செய்தார்கள். ஹிட்லரை மட்டுப்படுத்த வேண்டுமானால் மேலும் பல புதிய தலைவர்களை உள்ளுக்குள் கொண்டு வரவேண்டும். ஹிட்லருக்கு போட்டி உருவாக்க வேண்டும். நம்மால் அதைச் செய்ய முடியாது. ஆகவே தேவை கட்சி இணைப்பு. ஆகஸ்பர்க் பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த ஒரு சோஷலிசக் கட்சியுடன் பேசினார்கள். தொழிலாளர் கட்சியுடன் இணைய அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். அடுத்து Anton Drexler உடன் பேசினார்கள். அவருக்கும் இதில் தனை இருக்கவில்லை.

ஹிட்லருக்கு தெரியவந்த போது அவர் அமைதியாக இருந்தார். இணைப்பு எங்கே எப்போது அறிவிக்கப்படபோகிறது என்பதை மாத்திரம் கேட்டுக்கொண்டார். ம்யூனிக் தலைமயகத்தில் நடப்ப‍தாக இருந்த‍து. சென்றரார் மிஸ்ர‍ர் டிரெ்ஸ்லர் நான் கேள்விப்பட்டது உண்மையா? இன்னொரு பொடிக் கட்சியோடு இணையப்போகிறோமா?ஆம் என்றார் டிரெக்ஸ்லர். நல்லது உங்கள் கட்சி நீடூழி வாழட்டும். என்னது உங்கள் கட்சியா? என்னப்பா சொல்லுறாய்? ஹிட்லர் தெளிவாக அறிவித்தார். இனி எனக்கு இங்கு இடமில்லை டிரெக்ஸ்லர். புதிய கட்சிகளுடன்  புதிய தலைவர்களும் கிடைப்பார்கள். அவர்களை வைத்து கட்சியை முனுக்கு கொண்டு வாருங்கள்.

டிரெக்ஸ்லர் கலங்கி விட்டார். நீ இல்லாத கட்சியா? வேண்டாம். வா நீ எது கேட்டாலும் தருகிறேன். ஹி்ட்லர் திரும்பினார். நின்று நிதானமாக கேட்டார். கட்சியின் சேர்மனாக என்னை நியமித்தால் மட்டுமே நான் கட்சியில் நீடிப்பேன். இதோ இந்த இடத்தில் அறிவிக்க வேண்டும். சொல்லிவிட்டு நின்றார். டிரெக்ஸ்லர் யோசிக்கவேயில்லை. சரி நீயே ஏற்று நடத்து ஹிட்லர். உன் அளவுக்கு தெம்பும் திறனும் எனக்கில்லை. எங்களில் யாருக்கும் இல்லை. நான் இப்போதே விலகிக்கொள்ளுகிறேன்.

ஹிட்லர் தன் மீசையைத் தடவிக்கொண்டார். முதல் காரியமாக கட்சிப் பெயரை மாற்றினார்.

ஜேர்மன் தொழிலாளர் கட்சி அல்ல.

தேசிய சோசலிஷ ஜேர்மன் தொழிலாளர் கட்சி அதாவது நாசி.

National Socialist German Workers Party

Die Nationalsozialistische Deutsche Arbeiterpartei ( Nazi)

 

என் கட்சி நான் சூட்டிய பெயர். எனக்கு கட்டுப்பட்டு தலையாட்டும் ஒரு கூட்டம். ஹிட்லர் வாழ்க என்று சொல்ல சொன்னால் அப்படியே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்க ஒரு திருத்தொண்டர்குழு. சர்வாதிகாரம், அடுத்த‍ பாய்ச்சல் எதை நோக்கியது என்பதை ஹிட்லர் மனத்தளவில் முடிவு செய்திருந்தார். பவேரியா மாநிலத்தைக்கைப்பற்ற வேண்டும். அது ஆனபின்னர் ஜேர்மனி. அது போதும். நான் நினைக்கும் வேகத்தில் காரியங்கள் நடந்து முடிந்து விட்டால் என் தேசம் தான் உலகம் முழுவதற்குமான ஆசான், உலகத்தலைவன்.

சிறிது காலம் தான் என்றாலும் பவேரிய ரெஜிமென்டில் பணிபுரிந்த காலத்தில் அங்கே பல நண்பர்களை ஹிட்லர் பெற்றிருந்தார். நண்பர்கள் என்பதை விட ரசிகர்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஹிட்லர் என்ன பேசப்போகிறார் என்று வாய்திறந்து வேடிக்கை பார்க்கும் கூட்டம் அது.  அதே போல், காவல்துறையிலும் நீதித் துறையிலும் கூட சிலரை ஹிட்லர் தெரிந்து வைத்திருந்தார். ஆனால் எல்லோரையும் விட ஹிட்லர் அதிகம் நம்பியது தன்னை மட்டும் தான்.

இதுதான் சரியான தருணம். பவேரியா முழுவதும் பல்வேறு குழுக்கள் புரட்சி பற்றி விவாதித்துக்கொண்டிருந்தன. அரசாங்கத்தைத் தூக்கியடித்து புதிய ஆட்சியை நிர்மாணிப்போம் என்று மைக் பிடித்து பீர் ஹால்களில் (அங்கே பொதுக்கூட்டங்கள் பொதுவாக பீர் ஹால்களில் தான் நடக்கும். மக்கள் பெருமளவில் அங்கு கூடுவார்கள் என்பதால் அந்த ஏற்பாடு) பேசிக்கொண்டு இருந்தார்கள். பவேரியாவின் பிரதமராக இருந்த எய்கூர் ரீட்டர் வொன்  நில்லிங்(Eugur Ritter von Knilling) என்பவர் மீது அத்தனை பேருக்கும் அவ்வளவு நம்பிக்கை. சாதுவான நபர். தொட்டால் சாய்ந்து விடுவார். யார் முந்துகிறார்களோ அவர்களுக்கே அரசாங்கம்.

ஒரு கட்டத்தில், போராட்டம் வன்முறை வடிவம் எடுத்த‍து. கடைகள் சூறையடப்பட்டன. கொலைகளும் விழுந்தன. அவசரநிலைப்பிரகடம் செய்யப்பட்டது. மூவர் கொண்ட ஆட்சிக்குழு உருவாக்கப்பட்டது. தலைமைபொறுப்பு குஸ்தாவ ரிட்டர் கார் (Gustav Ritter von kahr) என்ற மாநில நிர்வாக கமிஷனரிடம் அளிக்கப்பட்டது.

அதிகாரத்தை கைப்பற்றும் முதல் முயற்சி தோல்வி

என்ன செய்யலாம் லுடண்டொர்ஃப் என்றார் ஹிட்லர். எரிக் லுடன்டொஃவ் (Erich Ludendorff) கட்சியில் ஹிட்லருக்கு அடுத்தவர். முன்னாள் ராணுவ அதிகாரி. ஆலோசகர். கர்ரிடம் பேசிப்பார்கலாம் என்று முடிவு செய்தார்கள். தொடர்பு ஏற்பட லுடன்டாஃவ் உதவினார். இருவரும் பேசினார்கள். ஹிட்லரின் கோரிக்கை தெளிவாக இருந்த‍து. கர், எனக்கு உதவி செய்யுங்கள். நான் ஜேர்மன் ஆட்சிபீடத்தை விரைவில் கைப்ற்ற போகிறேன். புரட்சி ஒன்றை நடத்த‍ப்போகிறேன். என்னைபற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நான் சொல்வதை செய்து முடிக்க பல லட்சக்கணக்காக இளைஞர்கள் இருக்கிறார்கள். நீங்களும் என்னுடன் இணைந்தால் உபயோகமாக இருக்கும்.

கர் உடன்பட்டார்.ஹிட்லர் ஜேர்னியை ஆளட்டும். எனக்கு பவேரியா போதும்.

சொல்லிவிட்டாரே தவிர மேற்கொண்டு எந்த வித ஒத்துளைப்பும் அவரிடம் இருந்து வெளிவரவில்லை. நவம்பர் 8,1923 அன்று கர் முனிச்சில் இருந்த ஒரு பீர் ஹாலில் உரையாடிக்கொண்டு இருந்த போது, ஹட்லர் கதவை உதைத்து திறந்து உள்ளே நுழைந்தார். இடைஞ்சலுக்கு மன்னிக்கவும். லுடன்டொர்ஃபுடன் இணைந்து ஒரு புதிய பவேரிய அரசாங்கத்தை ஏற்படுத்தியாகிவிட்டது. அடுத்து பேர்லின். நீங்களும் உங்கள் வசம் இருக்கும் ராணுவமும் என்னுடன் ஒத்துழைக்க வேண்டும். இதை சொல்லும் போது ஹிட்லரின் கையில் துப்பாக்கி இருந்த‍து.

நகரம் முழுவதையும் வசப்படுத்தும் பணியை ஹிட்லரின் படை மேற்கொண்டிருந்த‍து. முக்கிய அரசாங்க அலுவலங்கள் கைப்பற்றப்பட்டன. சில கைதுகள. எதிர்பாராவிதமாக ஒரு கொலை. தொடர்ந்து முன்னேறி ராணுவக அமைச்சகத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று திட்டம். ஆனால் அதற்குள் பவேரிய இராணுவத்தினர் குவிந்துவிட்டனர். நாசிகளை நோக்கி துப்பாக்கிச்சூடும் ஆரம்பித்து விட்டது. ஹிட்லர் கைது செயப்படுகிறார். ஐந்து ஆண்டு சிறைக்காவல். சறுக்கல் தான. ஆனால் அதுபற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் சிறையில் இருந்தபடியே ‘’மையின் காம்ஃப்’’ (Mein Kampf)  புத்தகத்தை எழுத ஆரம்பித்தார் ஹிட்லர்.

சிறையில் இருந்து வெளிவந்த‍தும், அதுவரை உறக்கத்தில் இருந்த நாஜிக்கட்சியை தட்டி எழுப்பினார். ஜேர்மனியின் அவல நிலை குறித்து பிரச்சாரம் செய்தார். வெர்ஸைல்ஸ் ஒப்பந்த‍த்தால் ஜேர்மனி அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்களைப் பட்டிலிட்டார். ஆயிரக்கணக்கில் மக்கள் அவரை நாடி வந்த‍னர். இவர் சொல்வதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். 1928 மே 20ம் திகதி நடைபெற்ற தேர்தலில், நாசிக் கட்சிக்கு எட்டு லட்சம் சொச்சம் வாக்குகளே கிடைத்தன. பெரிதாக மகிழ்ச்சியடைய ஒன்றுமில்லை என்றாலும் மேலும் இனவெறி பிரச்சாரத்தை இளைஞர்களை கவரக்கூடிய முறையில் செய்வதன் மூலம் வாக்கு வீத்த்தை அதிகரிக்கலாம் என்று ஹிட்லர் நம்பினார். மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற துடிப்புள்ள அதேவேளை அதிகம் சிந்திக்காத தான் சொல்வதை வேதவாக்காக நம்பும் இளைஞர் பட்டாளமே தனது சொத்து என்றும் அவர்களுக்கு இன வெறுப்பு பிரச்சாரத்தை ஏற்படுத்துவதன் மூலம் தனது கனவை அடையலாம் என்று  நம்பினார். அவரது நம்பிகை பொய்க்கவில்லை.

அதிகார ஆசையின் அடுத்த முயற்சி

1929 ல்ஐரோப்பா முழுவதையும் அச்சுறுத்திய பொருளாதாரச் சரிவு ஜேர்மனியை விட்டு வைக்கவில்லை. அதிபர் ஹிண்டர்பர்குகு எதிரான அலை வீச ஆரம்பித்த‍து. ஒரு பக்கம் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டம்,மற்றொரு பக்கம் விலைவாசிப் பாதிப்பால் வீதிக்கு வந்த மக்கள் எழுச்சி. விளைவு, பாராளுமன்றம் கலைக்கபட்டது. ஏப்ரல் 1932 ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஹிண்டன்பர்குக்குஎதிராக தேர்தலில் நின்றார் ஹிட்லர்.

மிக்க் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டா் ஹிட்லர். ஜேர்மனியை தன்னைத்தவிர வேறு எவராலும் மீட்டெடுக்க முடியாது என்பதை அழுத்தமாக பதிய வைத்தார். ஹிட்லர், ஜேர்மனி. ஜேர்மனி, ஹிடலர். திரும்ப திரும்ப நாசிகட்சி மேற்கொண்ட பிரச்சாரம் ஹிட்லர் தான் ஜேர்மனி என்ற தோற்றத்தை மக்களிடையே எழுப்ப முயன்றது. நம் பொருளாதாரம் ஏன் இந்த அளவுக்கு வலுவிழந்து கிடக்கிறது? அமெரிக்காவிடம் இருந்து (அதன் முதலாளிகளிடம் இருந்து) ஏழு பில்லியன் டாலர் கடன் பெற்றிருக்கிறது ஜேர்மனி. என்ன அவசியம்? தூய ஜேர்மனியரிடம் இல்லாத வளங்களா? ஜேர்மனியரிடம் இல்லாத நிர்வாத திறமையா? இவ்வாறான தூய ஜேர்மனியன் என்ற உசுப்பேற்றல்கள் இளைஞர் பட்டாளத்தையும் நடுத்தர பாமர மக்களையும்  நன்றாகவே கவர்ந்த‍து.

ஹிட்லர் அடிக்கடி சோசலிசம் என்னும் பத‍த்தைப்பயன் படுத்தினார். பொருளாதாரம் குறித்தும் ஜேர்மனியின் எதிர்காலம் குறித்தும், ஐரோப்பிய வல்லரசுகளைச் சாராமல் இருக்கும் தற்சார்பு பொருளாதாரம் குறித்தும் திரும்ப திரும்ப பேசினார்.  முதல்முதலாக விமானத்தை பிரச்சாரத்திற்காக பயன் படுத்தினார். ஒரே நாளில் இரு நகரங்களில் அவரால் உரையாட முடிந்ததை அதிசயமாக பேசிக்கொண்டனர் மக்கள். மதியம் வரை எங்களிடம் தானே இருந்தாரே! அங்கேயும் வந்தாரா ஹிட்லர்? மிக்க் கடுமையான பிரசாரத்தின் பயனான அந்த தேர்தலில் ஹிட்லருக்கு முப்பதைந்து சதவீத வாக்குகள் கிடைத்தன. தோல்விதான் என்றாலும் ஹிட்லர் யார் என்பதை அடையாளம் காட்டிய தேர்தல் அது.

தேர்தல் முடிந்து கண்மூடி கண் திறப்பதற்குள் மீண்டும் பிரச்சனை. மீண்டும் சலசலப்புக்கள், விவாதங்கள், அதிருப்தி அலை. நடந்து கொண்டிருந்த‍து கூட்டணி அரசாக இருந்த‍தால், அனைத்து கட்சியினரையும் திருப்திப்படுத்த வேண்டிய நிலை. Franz von Papen என்பவரை சான்சிலராக கொண்டு வந்த்தார் ஹிண்டரபர்க். அவருக்கு பெரிய ஆதரவு வட்டம் இல்லை. மீண்டும் குழப்பம். என்ன செய்யலாம்? மீண்டும் தேர்தல்.

அதே 1932 ல் ஆனால் ஜுன் மாதம். இந்த முறை நாஜிகள் 2330 இடங்களை கைப்பற்றியிருந்தனர். நாடாளுமன்றத்தில் பெரிய கட்சி என்ற அங்கீகாரம். துணை சான்சிலர் பதவி அளிக்கிறோம் என்றார் சான்சிலர் பாபென். ஹிட்லர் ஒரு புன்னகையுடன் மறுத்தார். வேண்டாம் எனக்கு சான்சிலர் பதவி போதும். என்ன சான்சிலர் பதவியா என்று அதிர்ந்து பின்வாங்கினார் பாபென். அடுத்ததாக ஹிட்லர் செய்த‍து, பாபெனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த‍து தான். மிகப்பெரிய கட்சியாக நாசி இருந்ததாலும், மிகப் பிரபலமான தலைவராக ஹிட்லர் இருந்த‍தாலும் அவருக்குப் பின்னால் அமைச்சர்கள் அணிவகுக்க ஆரம்பித்திருந்தனர்.

பாபென் தோற்றார். மீண்டும் தேர்தல். மீண்டும் ஹிட்லர். முன்பைக்காட்டிலும் கூடுதல் பலத்துடன்.

ஹிண்டன்பர்குக்கு அப்போதும் ஹிட்லரை சான்சிலராக்குவதற்கு மனமில்லை. பாபேனை நீக்க வேண்டி இருந்த‍து. நீக்கிவிட்டார். மாற்று ஏற்பாடாக, ராணுவத் தளபதி குர்ட் வோன் ஷ்லைஸர்(Kurt von Schleicher) என்பவரை அமர்த்தினார். ஷ்லைஸர் ராணுவத்தளபதி. அவரால் நாட்டை சமாளிக்க முடியும் அதே வேளை ஹிட்லரையும்.  மாதா மாதம் தேர்தல் நடத்திக்கொண்டிருந்தால் ஜேர்மனி விளங்காது.

அதிகார பீடத்தை நோக்கி முன்னேற்றம்

புதிய சான்சிலர் நியமனம் ஹிட்லருக்கு மட்டுமல்ல பாபெனுக்கும் உறுத்தலாக இருந்த‍து. பதவியைக் கைப்பற்ற இருவருமே முயன்று கொண்டிருந்தனர். இருவரும் கூடிப்பேசவும் ஆரம்பித்தனர். பாபென் விட்டுக்கொடுக்க முயன்றார். ஹிட்லரை தன் கைக்குள் போட்டுக்கொண்டு துணை சான்சிலராக வந்து விடலாம். திரை மறைவில் ஆட்சியை நடத்தலாம் என்று கனவு கண்டார். ஹிண்டன்பர்குடன் இதுபற்றி விவாதித்து, தன் முடிவை அவர் மீது திணிக்கவும் செய்தார். ஜனவரி 30, 1933 அன்று ஹிட்லர் சான்சிலர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

பதவி கிடைத்து விட்டாலும் ஹிட்லர் ஆபத்துக்களை உணர்ந்திருந்தார். சான்சிலர்தான் என்றாலும் இப்போது நின்று கொண்டிருப்பது மிகவும் பலவீனமான ஒரு பலகை மீது. எப்போதும் நொறுங்கி விழலாம். இன்னொரு தேர்தல், மற்றொரு தேர்தல், அதற்கு பின்னர் இன்னொன்று என்று காலத்தைக் கழிக்க முடியாது. திரைக்கு முன்னால் திரைக்குப் பின்னால் சூழ்ச்சிகார‍ர்க் ஓயாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  இவர்களை கவனிப்பதையே முழுநேரப் பணியாக‍க் கொள்ள முடியாது. ஒரு அரசியல்வாதியாக மாறுவது அல்ல ஹிடலரின் கனவு.  அவருக்கு தேவை அதிகாரம். சர்வாதிகாரம். அதற்கு முன்னால், ஜனநாயகம் என்று சொல்லிக் கொண்டு நாடாளுமன்றத்தை நிரப்பிக்கொண்டிருக்கும் உதிரி கட்சிகளைத் தவிடு பொடியாக்க வேண்டும்.குறிப்பாக கம்யூனிஸ்டுகளை. தேவை ஒரே ஒரு தேர்தல்.

ஹிட்லர் குறி வைத்திருந்த‍து போருக்கு பிறகு உருவக்க‍ப்பட்ட அரசியலமைப்பு சட்டதில் இருந்த ஒரு அற்புதமான சட்டம், Enabling Act. சான்சிலரின் அதிகாரதை வரையறுக்கும், நிறுவும் சட்டம். அவர் விரும்பிதைப் போலவே சர்வாதிகாரத்தை கொண்டுவருவதற்கான சட்டம். ஒட்டு மொத்த அதிகாரத்தையும் தன்னனிடம் குவித்துக் கொள்வதற்கான ஒரு வழி. புதிய சட்டங்களை நீக்கவும் சான்சிலருக்கு அதிகார் வழங்கும் சட்டம் இது.

மார்ச் 5, 1933 என்று தேர்தலுக்கு நாள் குறிக்க‍ப்பட்டது. மீண்டும் ஒரு சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் ஹிட்லர். திரும்பும் திசையெங்கும் நாஜிக் கட்சியின் ஸ்வஸ்திக் சின்னம். ஹிட்லர் அழைக்கிறார். திரண்டு வா ஜேர்மனி. இந்த முறை, பிரச்சாரத்தோடு வேறு ஒரு ஏற்பாட்டையும் செய்திருந்தார் ஹிட்லர். Reachstag  பாராளுமன்றத்தை கொளுத்துவது. பழியை கம்யூனிஸ்டுகள் மீது போடுவது.

பிப்ரவரி 27, 1933 அன்று கொளுத்தினார்கள். Marinus van der Lubbe என்ற ஒருவர் கட்டடத்துக்குள் சிக்கினார். கைது செய்து விசாரித்த போது அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று தெரியவந்த‍து. ஹிட்லரின் ஏற்பாடு. உடனே ஆரம்பித்து விட்டது நாசிக்கட்சி. கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக விஷப்பிரச்சாரம் அலை அலையாக கிளம்பியது. தேர்தலில் இந்த அலை, பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த‍து. இந்த முறை ஹிடல்ருக்கு 43.9 சதவீதம் கிடைத்திருந்தது. தேவை 51. கலங்கவில்லை ஹிட்லர். சான்சிலர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கூடவே, பலத்த ச‍ச்சரவுகளுக்கு இடையே, Enabling Act   கொண்டு வந்தார்.

சர்வாதிகாரியாதல்

ஜேர்மனியை நிர்வாகம் செய்ய தான் மட்டும் போதும் என்னும் தீர்க்கமான முடிவுக்கு ஹிட்லரல் வந்து சேர்ந்திருந்தார். முழுமுற்றான அதிகாரத்தை தன் காலடியில் குவித்துக்கொள்ள ஹிட்லர் கையாண்ட முறைக்கு Gleichschaltung என்று பெயர். இதன் பெயர் இணங்க செய்வது. கொடி பிடித்து போராடும் எந்த அமைப்பும் ஜேர்மனிக்கு தேவையில்லை. அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்காக நம் சான்ஸிலர் ஹிட்லர் நடத்திய போராட்டமே இறுதிப் போராட்டம்.  அவர் நிகழ்த்தியது தான் இறுதிப் புரட்சி. அரசாங்கத்திற்கு எதிராக ஒலித்த இறுதிக்குரல் அவருடையது தான். இனி, சான்சிலருக்குக்  கட்டுப்பட்டு நடந்தால் போதுமானது. இதை மட்டும் தான் நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறோரம். மற்றதை, ஹிட்லர் பார்த்துக்கொள்வார்.

ஜேர்மன் கம்யூனிச கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. ஹிடல்ரை ஆதரிக்காத சோஷியல் டெமாக்ரடிக் கட்சி துரோகிகளாக காட்டப்படு தடை. தேசத்தின் நலனிக்காகத் தான் மக்களே என்று ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டார் ஹிட்லர். நாசிக்கட்சி ஒன்று போதும் என்றார். தொழிற்சங்கங்கள் கலைக்கபட்டன.

மாணவர்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் ஒர் அமைப்பு ஆரம்பிக்கபட்டது. ஆறு வயது முதலே பயிற்சிகள் ஆரம்பமாகிவிடும். பெண் மாணவர்களுக்குத் தனிப்பிரிவு. Kraft durch Freude என்னும் பொழுது போக்கு அமைப்பில் இருபத்தைந்து மில்லியன் ஜேர்மானியர்கள் இணைந்து கொண்டனர். நாசிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த அமைப்புச்செயற்பட்டது.  ஒரு ஜேர்மானியன் என்ன விளையாட வேண்டும். எப்படி விளையாடவேண்டும் என்பதை கூட அரசாங்கம் தான் தீர்மானிக்கும்.

பெண்களுக்கு நாசிக்கட்சி வழங்கிய அறிவுரை மிகவும் எளிமையானது. நீங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை. அரசாங்கத்திற்கு உபயோகமான காரியங்களை ஆற்றுவதற்கு லாயக்கானவர்கள் ஆண்கள் மட்டுமே, நீங்கள் வீட்டில் கிடந்தால் போதும். ஆண்களுக்கு ஒத்தாசை செய்யுங்கள். குழந்தை பெறுங்கள். செப்ரெம்பர் 1934 ல் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது ஹிட்லர் இப்படிக் குறிப்பிட்டார். பெண்களே உங்கள் உலகம் எது தெரியுமா? உங்கள் கணவன், உங்கள் குழந்தைகள், மற்றும் உங்கள் வீடு.

கட்டுமானமும் ஆரம்பமானது. சாலைகள் அமைக்கும் பணி தொடங்கியது. பாலங்கள் கட்டப்பட்டன. முக்கிய அணைகள் உருவாக்கபட்டன. ரயில்வே பாதைகள் புதிதாக கட்டமைக்கப்பட்டன. ஆட்டோமொபைல் தொழில்நுட்பம் ஊக்குவிக்கப்பட்டது. ஒரு காருக்கான வரைபடத்தை உருவாக்குவதில் ஹிட்லர் பிரத்தியேகமாக பங்கேற்றார். பின்னர், இதை டாக்டர் ஃபெர்டினால் ஃபோர்சே (Dr.Ferdinand Porsche) நடைமுறையில் உயிர்ப்பித்துக் கொண்டு வந்தார். ஹிட்லரின் தொழில் நுட்ப திறனுக்கு இது ஒரு சான்று. வொக்ஸ்வேகன் பீட்டில் (Volkswagen Beetle) என்று அந்த கார் அழைக்கப்பட்டது.  நம்பமுடியாத விலை ஒன்றையும் அவர் அதற்கு நிர்மாணித்தார். தொள்ளாயிரத்தித் தொண்ணூற்றொம்பது மார்க்குகள். இவ்வளவு குறைந்த விலையில்  தனியார் நிறுவனங்களால் காரை உருவாக்க முடியாத பட்சத்தில் அராங்கமே தயாரிப்பை ஏற்றுக்கொளும் என்று அறிவித்தார் ஹிட்லர்.

கட்டடக்கலைஞர்ள் வரவேற்கபட்டனர். ஆல்பரட் ஸ்பீர் நாசி அரசாங்கத்தின்  முதல் கலைஞராக அங்கீகரிக்கபட்டார். எது போன்ற கட்டங்கள் அமைக்கபட்ட வேண்டும் என்பதை ஹிட்லர் முடிவு செய்தார். ஜேர்மன் கலாச்சாரத்தை உயர்த்திப்பிடிக்கும் வகையில் கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. 1936 ம்ஆண்டு ஒலிம்பிக்ஸ் விளையாட்டு பெர்லினில் தொடங்கியது. ஹிட்லர் தொடங்கி வைத்தார்.

வேலையில்லாதவர்கள் என்று ஜேர்மனியில் கிட்டத்தட்ட ஒருவரும் இல்லை என்றது ஒர் அரசாங்கப் பிரச்சாரம். நிஜமாகவே பிரமித்து தான் போனார்கள் மக்கள். ஆயிரம் குறை சொன்னாலும் இந்த சாதனையை ஒப்புக்கொள்ளதானே வேண்டும்? உண்மை தானே? நமக்கு தெரிந்து வேலையில்லாதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன? இந்த மக‍த்தான சாதனைக்குப் பின்னால் இருந்த உண்மை பின்னரே தெரியவந்த‍து. அதாவது ஏற்கனவே பணியில் இருந்த அத்தனை பெண்களும் வீட்டுக்கு அனுப்பி வைக்கபட்டனர். அவர்கள் வேலையைப் பறிமுதல் செய்து, ஆண்களிடம் ஒப்படைத்தார் ஹிட்லர். பெண்கள் வீட்டு வேலை செய்தால் போதுமானது என்று ஏற்கெனவே சொல்லிவிட்டார் அல்லவா?

தொழில் நுட்பரீதியில் ஜேர்மனி பலம் பொருந்திய நாடாக வளரவேண்டும் என்னும் கனவு ஹிட்லரிடம் இருந்த‍து. ஆனால் அதற்கான நீண்டகாலத்திட்டம் எதுவும் அவரிடம் இல்லை. தொழிற்சாலை இல்லையா? எத்தனை செலவாகும்? சரி மூலைக்கு ஒன்று கட்டு. இப்படிப்பட்ட குறுகிய கால திட்டங்களே அவரிடம் இருந்தன. தேவைபடும் பணத்தை உருவாக்கித் தாருங்கள் என்று கட்டளையிட்டிருந்தார். நிதி நிர்வாகம் ஹிட்லரின் நிர்வாகமாகவே இருந்த‍து. கேட்கும் பணம் அச்சடிக்கபட்டது. விநியோகிக்க‍ப்பட்டது.

ஹிட்லர் குறிப்பாக கவனம் செலுத்தியது ராணுவத்தின் மீது தான். பலம். செய்த‍தை சாதித்து முடிக்க வேண்டுமானால் நம் ராணுவம் உலகத்திற்கு சவால் விடும் படி வளரவேண்டும். அதி ந‍வீன ஆயுதங்கள் என்று அறியப்படும் அனைத்தையும் நாம் தருவித்துக் கொள்ள வேண்டும். அல்லது நாமாகவே உருவாக்கிக் கொள்ளவேண்டும்.  நினைவிருக்கட்டும். முதல் உலகப்போரின் முடிவில் நோஞ்சான் தேசமாக ஜேர்மனி சுருங்கிப் போனதிற்கு காரணமே, ராணுவப்பலமின்மை தான்.

ஆயுத‍த்தயாரிப்புகள் ஒரு புறம் மும்முரமாக நடைபெபறு வந்த‍து. ஆனால், வெளிப்புறத்துக்கு ஹிட்லர் தன் சாந்தமான முகத்தையே காட்டினார். வெர்ஸைல்ஸ் ஒப்பந்த‍த்தை கனவிலும் மீறமாட்டேன் என்று உருகினார். மே 17 1933ல், மே 21, 1935, மார்ச் 7, 1936ல் நடைபெற கூட்டங்ககினல் ஹிட்லர் அமைதியையும் சமாதானத்தையும் வலியுறுத்திப் பேசினார். ஒப்பந்தங்களை ஜேர்மனி எத்தனை அக்கறையுடன் பேணிப் பராமரிக்கிறது என்பதை விவரித்தார்.

1933ல் காபினட் முதல் முறையாக கூட்டப்பட்ட போதே ஹிட்லர் தெளிவாக அறிவித்து விட்டார். செய்யவேண்டிய பணிகள் என்று எடுத்துக்கொண்டால் ஏராளம் உள்ளன. அவற்றுள் முதன்மையானது ராணுவ்வளர்ச்சி. அதிகபட்ச  அக்கறையும் கவனிப்பும் ராணுவத்துறை மீது இருந்தாக வேண்டியது அவசியம். இந்த‍த் தேவை பூர்த்தியானால் தான் பிறவற்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நிதி அமைச்சகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த டாக்ட் ஹான்ஸ் லூதர் என்பவரிடம் ஹிட்லர் பேசினார். ராணுவத்திற்கான உங்கள் பட்ஜேட் என்ன? கூட்டிக்கழித்துப் பார்த்துவிட்டு அவர் சொன்னது, 100 மில்லியன் மார்க்குகள். ஹிட்லர் தன் அதிருப்தியைத் தெரிவித்த‍ போது,  இதற்கு மேல் முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டா் அந்த அமைச்சர். உடனே, அவர் மாற்றப்ட்டார். புதிதாக இணைந்த Hjalmar Schacht அடுத்த ஐந்து ஆண்டுகளில் 12 பில்லியன்  மார்க்குகளை ராணுவத்திற்காக ஒதுக்கினார்.

நாசிக்கட்சி அயல்துறை தலைமை அதிகாரி ஆல்ஃபிரட் ரோஸன்பேர்க மே 1933 ல் லண்டன் பறந்து சென்றார். அக்ரோபர் மாதம் 1933ம் ஆண்டு ஹிட்லர் தனது முதல் அடியை எடுத்து வைத்தார்  *லீக் ஒவ் நேஷ‍ன்ஸ் (League of Nations) உலக ஆயுத ஒழிப்பு மகாநாடு(Disarmament talks)  போன்றவற்றிலிருந்து  ஜேர்மனி தன்னைத் துண்டித்துக் கொண்டது.  ஜேர்மனியின் முன்னேற்றதிற்கு இவை தடையாக இருக்கின்றன என்று ஹிட்லர் குற்றம் சாட்டினார். 

* ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க‍த்தற்கு முன்று |''லீக் ஒவ் நேஷனல்'' என்ற அமைப்பே நாடுகளுக்கிடையிலான பிரச்சனைகளுக்கு  இணைப்பு அமைப்பாக செயற்பட்டது. 

பழம் நழுவி பாலில் விழுந்தது போல என்று கூறுவார்களே. அது போல் அடுத்த ஹிட்லர் எதிர்பார்த்த அரிய வாய்ப்பு எதிர்பாராமல் சடுதியாக கிடைத்த‍து ஹிட்ல்ருக்கு. 1934 ஆகஸ்ட் 2 ம் திகதி ஹிண்டன்பர்க் இறந்து போன போது ஹிட்லர் கொண்டாடி இருக்க வேண்டும். ஹிட்லர் அறிவித்தார். நம் அதிபர் இறந்து விட்டார். இனி நானே அதிபர். சான்சிலராகவும் நீடிப்பேன். ராணுவத் தளபதி பொறுப்பையும் அத்தோடு கூட ஏற்கிறேன்.

ஹிட்லர் தயாராகிக்கொண்டிருப்பது அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை என்பது தான் ஆச்சரியம். 

Mussolini_and_Hitler_1940_%28retouched%29.jpg

Die Diktatoren Benito Mussolini und Adolf Hitler in München, 1940

 

நாசிசத்தின் செற்பாட்டு நிலையின் ஆரம்பம்

செலுத்தப்பட்ட அம்பு போல் ஹிட்லர் தன் பாதையில் பறந்து கொண்டிருந்தார். சிறு தயக்கமும் இல்லை அவரிடம். மைய்ன் காம்ஃப் எழுதிய போது எது போல் சிந்தி்த்தாரோ அப்படியேதான் சிந்தித்துக்கொண்டிருந்தார்.  எவற்றை எல்லாம் செய்ய விருப்பம் என்று மைய்ன் காம்ஃப் ல் எழுதி இருந்தாரோ அவற்றைத்தான் செய்ய ஆரம்பித்திருந்தார். ஜேர்மனியின் பெருமையை மீட்டெடுக்கவேண்டும். பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும். ஒப்பத்தம் மேல் ஒப்பத்தம் போட்டு ஜேர்மனியை கழுத்தறுத்து ஐரோப்பிய சக்திகளின் கழுத்தை நெரிக்க வேண்டும். ஆரியகுல பெருமையை உலகுக்கு நிருபிக்க வேண்டும்.  தூய ஜேர்மனியை கட்டி எழுப்பவேண்டும். இது ஒரு கனவு. அடுத்த கனவு யூதர்கள் இல்லாத தூய ஜேர்மனியை கட்டி எழுப்ப வேண்டும். இரண்டையும் ஒன்று சேர தொடங்கியிருந்தார் ஹிட்லர்.

ஜேர்மனியில் இனவெறிப்பிரச்சாத்தின் மூலம்  ஹிட்லர் ஏற்படுத்திய  ஆட்சி மாற்றம் மாபெரும் உலக மக்கள்  அழிவுக்கும் மானுட  சமுதாயத்திற்கு ஒரு பாடத்தையும் கொடுத்த வரலாறாக ஆகியது.  அதன் பின்னரே தூய இனம் என்று தேசியவாத‍த்தை முன்னெடுப்பவர்களை உலகம் எச்சரிக்கையுடன் பயத்துடனும் பார்க்க தொடங்கியது.

 large.5CC4CD5F-5EB4-4D93-8163-CD09F64A9AC5.jpeg.c75e29d4363e484c83ce8b576c4ad262.jpeg1280px-Tarawa_beach_HD-SN-99-03001.JPEG

 

 

வரலாற்று பதிவு மூலம்  நூல்  இரண்டாம் உலகப்போர்.          எழுதியவர் மருதன்                 Edition  May 2009   வெளியீடு கிழக்கு பதிப்பகம்

Link to comment
Share on other sites

2 hours ago, tulpen said:

என் கட்சி நான் சூட்டிய பெயர். எனக்கு கட்டுப்பட்டு தலையாட்டும் ஒரு கூட்டம். ஹிட்லர் வாழ்க என்று சொல்ல சொன்னால் அப்படியே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்க ஒரு திருத்தொண்டர்குழு. சர்வாதிகாரம், அடுத்த‍ பாய்ச்சல் எதை நோக்கியது என்பதை ஹிட்லர் மனத்தளவில் முடிவு செய்திருந்தார். பவேரியா மாநிலத்தைக்கைப்பற்ற வேண்டும். அது ஆனபின்னர் ஜேர்மனி. அது போதும். நான் நினைக்கும் வேகத்தில் காரியங்கள் நடந்து முடிந்து விட்டால் என் தேசம் தான் உலகம் முழுவதற்குமான ஆசான், உலகத்தலைவன்.

ஒரு சனநாயக நாட்டில் ஒரு பலமான எதிர்க்கட்சியும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார அறியும் முக்கியம். இல்லாவிட்டால், மக்களாட்சி அரசியல் அமைப்பும் சர்வாதிகார ஆட்சியாக மாறிவிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ற பதிவுக்கு நன்றி! 

அண்மைக் காலங்களில் ஹிற்லர் கொடுங் கொலைஞனாக இருந்தாலும் அவனிடம் கற்றுக் கொள்ள சில நல்ல விடயங்கள் இருப்பதாக சிலர் இந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கிளம்பியிருப்பதை இணையங்களில் பார்த்தேன். 

தமிழில் இத்தகைய வரலாற்று நூல்கள் வருவது மிக நல்லது! ஆட்கள் வாசிக்கவும் வேண்டும் என்பதே சவால்!

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

ஒரு சனநாயக நாட்டில் ஒரு பலமான எதிர்க்கட்சியும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார அறியும் முக்கியம். இல்லாவிட்டால், மக்களாட்சி அரசியல் அமைப்பும் சர்வாதிகார ஆட்சியாக மாறிவிடும். 

உண்மை ஶ்ரீலங்காவும் இந்த கட்டத்தை நோக்கி நகர்வது போல் தெரிகிறது. 

 

1 hour ago, Justin said:

காலத்திற்கேற்ற பதிவுக்கு நன்றி! 

அண்மைக் காலங்களில் ஹிற்லர் கொடுங் கொலைஞனாக இருந்தாலும் அவனிடம் கற்றுக் கொள்ள சில நல்ல விடயங்கள் இருப்பதாக சிலர் இந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கிளம்பியிருப்பதை இணையங்களில் பார்த்தேன். 

தமிழில் இத்தகைய வரலாற்று நூல்கள் வருவது மிக நல்லது! ஆட்கள் வாசிக்கவும் வேண்டும் என்பதே சவால்!

வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளா விட்டால்  அந்த தவறுகள் மீண்டும் நடைபெற்று அழிவுகளே ஹிட்லரின் பிரச்சார உத்திகள் எவ்வளவு பலம் வாய்ந்தவை  பாமர மக்களை ஈர்த்து அழிவுக்கு இட்டுச் செல்லும் என்பது தற்போதைய காலத்திலும் உலகில் உணரக்கூடியதாக உள்ளது. 

நாசி வதை முகாம் செயற்பாடுகள், முக்கிய போர்க்களங்கள் போன்ற  இந்த  புத்தகத்தில் உள்ள பல விரிவான வரலாற்று தகவல்களை நேரம் வரும் போது தட்டச்சு செய்து இணைக்கிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

சிலர் இந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கிளம்பியிருப்பதை இணையங்களில் பார்த்தேன்.

தூள்பனின் சிவப்பெழுத்தும்  இந்த கறுப்பெழுத்தும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்று சேரவேண்டுமே என்று நினைத்தேன் சேர்ந்துவிட்டது....இனியென்ன அரசியல் அவியல் தான், இப்படி அவித்து அவித்து தான் கூத்தமைப்பு புகைந்து போய் கிடக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, அக்னியஷ்த்ரா said:

தூள்பனின் சிவப்பெழுத்தும்  இந்த கறுப்பெழுத்தும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்று சேரவேண்டுமே என்று நினைத்தேன் சேர்ந்துவிட்டது....இனியென்ன அரசியல் அவியல் தான், இப்படி அவித்து அவித்து தான் கூத்தமைப்பு புகைந்து போய் கிடக்கிறது 

இடம் மாறிப் பதிந்து விட்டீர்களோ? யார் அவித்தது? இதற்கும் கூட்டமைப்பிற்கும் என்ன தொடர்பு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Justin said:

இடம் மாறிப் பதிந்து விட்டீர்களோ? யார் அவித்தது? இதற்கும் கூட்டமைப்பிற்கும் என்ன தொடர்பு?

ஹிட்லருக்கும்  இந்தியாவின் ஒருமாநிலத்தில் சிறிய கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கும்  தொடர்பு வரும் அளவுக்கு நம்மிடையே  அரசியல் ஆய்வு(அவியல்) மேம்படும்போது , இதே போன்றதொரு ஆய்வு(அவியலின்) வின் வருவிளைவு  (Output) தான் கூத்தமைப்பையும் கைகாட்டியதோ..? என்று மெய்சிலிர்த்து வந்த பதிவே இது, இது ஒன்றும் இடம் மாறி பதியப்படவில்லை   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஹிட்லருக்கும்  இந்தியாவின் ஒருமாநிலத்தில் சிறிய கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கும்  தொடர்பு வரும் அளவுக்கு நம்மிடையே  அரசியல் ஆய்வு(அவியல்) மேம்படும்போது , இதே ஆய்வு(அவியலின்) வின் வருவிளைவு  (Output) தான் கூத்தமைப்பையும் கைகாட்டியது என்று மெய்சிலிர்த்து வந்த பதிவே இது, இது ஒன்றும் இடம் மாறி பதியப்படவில்லை   

இன்னும் எனக்கு விளங்கவில்லை!

நான் எழுதியதன் காரணம், சில மாதங்கள் முன்பு நான் பார்த்த ஒரு வீடியோவும் அதன் கீழ் வந்த ஹிற்லர் புகழ் பாடிய பின்னூட்டங்களும். ஹிப்னோடிச மருத்துவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஒரு தமிழ் நாட்டுக் காரர் (பெயர் மறந்து விட்டது), ஹிற்லருக்கும் இந்தியாவுக்கும் ஒரு ஆன்மீகத் தொடர்பு இருப்பதாக ஒரு பேட்டி கொடுத்திருந்தார். கேட்டுப் பார்த்த அளவில் ஹிற்லர் ஒரு அதிசயப் பிறவி என்பது மாதிரி அடித்து விட்டிருந்தார். அதன் கீழ் இருந்த பின்னூட்டங்களோ ஹிற்லரை மேற்கு நாட்டவர் தான் கெட்டவராகக் காட்டுகிறார்கள் என்றொரு தோற்றத்தில் எழுதப் பட்டதாக இருந்தன. கடுப்பில், அந்த வீடியோவை போலிச் செய்திகள் என்ற வரையறையின் கீழ் அகற்றுமாறு முறைப்பாடு செய்தும் அது நீக்கப் படவில்லை! 

இப்ப நீங்கள் சொல்வது யாரை? இதில் கூட்டமைப்பு ஏன் வருகிறது? புரியவில்லை! ஆனால், இதை நான் தொடர்ந்தால் இந்த திரி இதன் பயனை அடையாது என்பது மட்டும் புரிகிறது! எனவே ருல்பனிடம் வரலாற்றை அறிய மட்டும் வந்து போகிறேன்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

இன்னும் எனக்கு விளங்கவில்லை!

நான் எழுதியதன் காரணம், சில மாதங்கள் முன்பு நான் பார்த்த ஒரு வீடியோவும் அதன் கீழ் வந்த ஹிற்லர் புகழ் பாடிய பின்னூட்டங்களும். ஹிப்னோடிச மருத்துவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஒரு தமிழ் நாட்டுக் காரர் (பெயர் மறந்து விட்டது), ஹிற்லருக்கும் இந்தியாவுக்கும் ஒரு ஆன்மீகத் தொடர்பு இருப்பதாக ஒரு பேட்டி கொடுத்திருந்தார். கேட்டுப் பார்த்த அளவில் ஹிற்லர் ஒரு அதிசயப் பிறவி என்பது மாதிரி அடித்து விட்டிருந்தார். அதன் கீழ் இருந்த பின்னூட்டங்களோ ஹிற்லரை மேற்கு நாட்டவர் தான் கெட்டவராகக் காட்டுகிறார்கள் என்றொரு தோற்றத்தில் எழுதப் பட்டதாக இருந்தன. கடுப்பில், அந்த வீடியோவை போலிச் செய்திகள் என்ற வரையறையின் கீழ் அகற்றுமாறு முறைப்பாடு செய்தும் அது நீக்கப் படவில்லை! 

இப்ப நீங்கள் சொல்வது யாரை? இதில் கூட்டமைப்பு ஏன் வருகிறது? புரியவில்லை! ஆனால், இதை நான் தொடர்ந்தால் இந்த திரி இதன் பயனை அடையாது என்பது மட்டும் புரிகிறது! எனவே ருல்பனிடம் வரலாற்றை அறிய மட்டும் வந்து போகிறேன்!  

அப்படியா ....அப்படியானால் தவறுக்கு மனம்வருந்துகிறேன் 
துள்பனின் சிவப்பெழுத்துக்களின் அர்த்தம் உங்களுக்கு புரிந்து, அதன் மூலம் உரியவரை சுட்டத்தான் 
குழு உக்குறிகளை இடுகிறீர்களோ என்று நினைத்துவிட்டேன். எனக்கு அவரது எழுத்துக்களின் அர்த்தம் புரிந்து விட்டது, உங்களுக்கும் அது ஹிப்னாடிச மருத்துவரை பற்றி அல்ல என்றும்  புரிந்திருக்கலாம், என்ன இருவரும் தமிழ்நாட்டுகாரர்கள் என்பது தான் ஒற்றுமையாகி போய்விட்டது. 
அடிக்கடி வந்து செல்லுங்கள் அண்ணை. கருத்துக்களில் பேதம் இருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் உங்களுடன் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

காலத்திற்கேற்ற பதிவுக்கு நன்றி! 

அண்மைக் காலங்களில் ஹிற்லர் கொடுங் கொலைஞனாக இருந்தாலும் அவனிடம் கற்றுக் கொள்ள சில நல்ல விடயங்கள் இருப்பதாக சிலர் இந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கிளம்பியிருப்பதை இணையங்களில் பார்த்தேன். 

தமிழில் இத்தகைய வரலாற்று நூல்கள் வருவது மிக நல்லது! ஆட்கள் வாசிக்கவும் வேண்டும் என்பதே சவால்!

வரலாற்றுநூல்கள் வந்தால் நல்லது 
துரதிஷ்ட்டமாக வதந்தி நூல்கள்தான் வருகிறது.

தமிழில் ஹிட்லர் பற்றி ஏற்கனவே நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருக்கின்றன
பலர் தமக்கு பிடித்த கோலத்தை யார் போடுகிறார்களா அதை வாங்கி புள்ளிவைத்து கொள்கிறார்கள்.

2ஆம் உலக போருக்கு முன்பு ஜெர்மனி தொழித்துறையில் எட்டாத வளர்ச்சி கண்டு இருந்தபோதும் 
விற்பனைக்கான சந்தைகள் ஏகாபத்தியத்தால் மூடப்பட்டு இருந்தது ... ஜேர்மனிய இளைஞர்கள்  
சூடுகொள்ள இதுவே பிரதான காரணம். ஹிட்லரின் பிரச்சாரத்துக்கு அதுதான் துணையாகி இருந்தது. 

இப்போதுகூட இந்தியாவும் பிரேசிலும் பல மருந்து வைகைகளை உற்பத்தி செய்தாலும் கூட 
வெளியில் விற்பனை செய்ய முடியாத மாதிரி ஏகாபத்திய சந்தை இருக்கிறது 

Link to comment
Share on other sites

15 hours ago, tulpen said:

முதல் உலகப்போர் முற்றுப்பெற்ற 1918 ம் ஆண்டு தொடங்கி 1921 வரையான காலகட்டத்தை உடன்படிக்கைக் காலகட்டம் என்று அழைக்க முடியும். ஜேர்மனி மட்டுமல்ல தோற்றுப்போன அத்தனை தேசங்களுடனும் தனித்தனியே ஒப்பந்தங்கள்  போட்டுக்கொள்ளபட்டன.

·        செப்ரெம்பர் 10, 1919 ல் Treaty of Trianon – ஹங்கேரியுடன்.

·        ஜூன் 4 27, 1920 ல் Treaty of Neuilly – பல்கேரியாவடன்

·      ஆகஸ்ட் 10 1927ல் Treaty of Sévres. துருக்கியுடன்

எழுத்துப்பிழை

துருக்கியுடனான ஒப்பந்தம் ஆகஸ்ட் 10 1927  என்பதற்கு பதிலாக 1920 என்று வந்திருக்க வேண்டும். பதிவில் ஒரு சில இடங்களில் எழுத்துப்பிழை உள்ளது. அதற்காக வருந்துகிறேன். 

Link to comment
Share on other sites

2 hours ago, Maruthankerny said:

வரலாற்றுநூல்கள் வந்தால் நல்லது 
துரதிஷ்ட்டமாக வதந்தி நூல்கள்தான் வருகிறது.

தமிழில் ஹிட்லர் பற்றி ஏற்கனவே நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருக்கின்றன
பலர் தமக்கு பிடித்த கோலத்தை யார் போடுகிறார்களா அதை வாங்கி புள்ளிவைத்து கொள்கிறார்கள்.

மருதங்கேணி இவ்வாறான வரலாற்று நூல்களை தமிழில்  படிக்கும் போது இது சரியான பதிவோ என்ற சந்தேகம் வருவது இயற்கை. உங்களுக்கு வந்த அதே சந்தேகம்  எனக்கும் வந்த‍து. அதற்காகவே பல்வேறு ஜேர்மன் தளங்களுக்கு சென்று தரவுகள் சரியானதா என்று சரிபார்த்தேன். நூலில் குறிப்பிடப்படிருக்கும் சில வரலாற்று  இடங்களுக்கு நான் நேரில் சென்றும் இருக்கிறேன். உதாரணமாக  Maginot line,  Auschwitz Concentration camp ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்ற போது நூலின் ஆசிரியர் சகட்டு மேனிக்கு எழுதாமல் மிக சிரமமெடுத்து  பொறுப்புடன் துல்லியமான தகவல்களை கொடுத்திரார் என்பதை என்னால்  நேரடியாக உணர முடிந்த‍து.  நூலின் தரவுகளை நீங்களும் வரலாற்று தளங்களுக்கு சென்று உறுதிபடுத்தி கொள்ளலாம். 

மற்றது இவ்வாறான  பெரிய புத்தகத்தை வாங்கியபிறகு தான் வாசிக்க முடியும்.  கடையிலேயே வாசித்து எனக்கு பிடித்த நூலை வாங்குவது சாத்தியமற்றது. நூலின் இந்த பதிப்பு வெளிவந்த‍து 2009 ம் ஆண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

வரலாற்றுநூல்கள் வந்தால் நல்லது 
துரதிஷ்ட்டமாக வதந்தி நூல்கள்தான் வருகிறது.

தமிழில் ஹிட்லர் பற்றி ஏற்கனவே நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருக்கின்றன
பலர் தமக்கு பிடித்த கோலத்தை யார் போடுகிறார்களா அதை வாங்கி புள்ளிவைத்து கொள்கிறார்கள்.

2ஆம் உலக போருக்கு முன்பு ஜெர்மனி தொழித்துறையில் எட்டாத வளர்ச்சி கண்டு இருந்தபோதும் 
விற்பனைக்கான சந்தைகள் ஏகாபத்தியத்தால் மூடப்பட்டு இருந்தது ... ஜேர்மனிய இளைஞர்கள்  
சூடுகொள்ள இதுவே பிரதான காரணம். ஹிட்லரின் பிரச்சாரத்துக்கு அதுதான் துணையாகி இருந்தது. 

இப்போதுகூட இந்தியாவும் பிரேசிலும் பல மருந்து வைகைகளை உற்பத்தி செய்தாலும் கூட 
வெளியில் விற்பனை செய்ய முடியாத மாதிரி ஏகாபத்திய சந்தை இருக்கிறது 

ஹிட்லர் குறித்து அருமையான ஆங்கில புத்தங்கள் உள்ளன.

தமிழில் மொழிபெயர்க்கும் போது, தமது லோக்கல் audience களுக்காக, சில விசயங்களை அடித்து தூவி விடுவார்கள்.

ரசிகர்ளுக்கான புரிவிப்பதில் ஹொலிவூட் படங்களுக்கும், தமிழ் படங்களுக்கும் உள்ள பாரிய வேறுபாடு போலவே இதுவும். 

இந்தியாவில் யாருமே ஹிட்லர் தான் தமது சுதந்திரத்துக்கு காரணம் என்று சொல்லவே மாட்டார்கள். தெரியாது.

காந்தியின் உண்ணாவிரதம் என்பார்கள். அது சொல்லப்பட்டால், ஹிட்லரை, ஆகோ, ஓகோ என்று எழுதி வைப்பார்கள்.

மேலை நாடுகளில் வாழபவர்கள், எதனை வாசிக்கிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.

உதாரணமாக காச்சல் வந்தால் ஊரில் வாழைப்பழம் சாப்பிடவேண்டாம் என்பார்கள். இங்கே ஒருவர், வெள்ளை டாக்டரிடம் போய், சொல்ல சொல்ல கேளாமல் மகன், காச்சலோட, வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டான் என்று குழற, டாக்டர் அலற.....

இங்கே ஆங்கிலம் படிக்கப்போகும் போது, முதலில் சொல்வது, தமிழ் மூலம் ஆங்கிலம் புத்தகங்களை தூக்கி சுழட்டி எறியுங்கள் என்பதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maruthankerny said:

வரலாற்றுநூல்கள் வந்தால் நல்லது 
துரதிஷ்ட்டமாக வதந்தி நூல்கள்தான் வருகிறது.

தமிழில் ஹிட்லர் பற்றி ஏற்கனவே நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருக்கின்றன
பலர் தமக்கு பிடித்த கோலத்தை யார் போடுகிறார்களா அதை வாங்கி புள்ளிவைத்து கொள்கிறார்கள்.

2ஆம் உலக போருக்கு முன்பு ஜெர்மனி தொழித்துறையில் எட்டாத வளர்ச்சி கண்டு இருந்தபோதும் 
விற்பனைக்கான சந்தைகள் ஏகாபத்தியத்தால் மூடப்பட்டு இருந்தது ... ஜேர்மனிய இளைஞர்கள்  
சூடுகொள்ள இதுவே பிரதான காரணம். ஹிட்லரின் பிரச்சாரத்துக்கு அதுதான் துணையாகி இருந்தது. 

இப்போதுகூட இந்தியாவும் பிரேசிலும் பல மருந்து வைகைகளை உற்பத்தி செய்தாலும் கூட 
வெளியில் விற்பனை செய்ய முடியாத மாதிரி ஏகாபத்திய சந்தை இருக்கிறது 

எழுதுபவர் முதலில் தன் துறையில் நிபுணத்துவம் உள்ளவரா என்று பாருங்கள், இரண்டாவது நூலின் கடைசிப் பக்கங்களுக்குப் போய் உசாத்துணைப் பட்டியலில் முதல் நிலை மூலங்களைப் பட்டியலிட்டிருக்கிறாரா என்று பாருங்கள். எழுத்தாளர் இதெல்லாம் தாண்டி ஒரு அமைப்போடு இணைந்தவராக இருந்தால் திறந்த மனதோடு வாசிக்கலாம், சம்பவங்களை அவர் வியாக்கியானம் செய்யும் போது அவரது சார்புத் தன்மை வெளிவரலாம்! 

ஒரு வரலாற்று எழுத்தாளரின் சார்புத் தன்மை நிகழ்வுகளின் வியாக்கியானத்தை மட்டுமே மாற்றும், சம்பவங்களை மாற்ற இயலாது. இதனால் அந்த எழுத்தைப் படித்தாலும் உங்களுக்கு நட்டம் இல்லை என்றே நினைக்கிறேன். 

நான் சொல்வது புத்தகங்களுக்கு மட்டுமே பொருந்தும். இணையத் தளங்களுக்கு என்ன தராதரம் என்று எனக்கு அறிவில்லை.   

Link to comment
Share on other sites

14 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஹிட்லருக்கும்  இந்தியாவின் ஒருமாநிலத்தில் சிறிய கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கும்  தொடர்பு வரும் அளவுக்கு நம்மிடையே  அரசியல் ஆய்வு(அவியல்) மேம்படும்போது , இதே போன்றதொரு ஆய்வு(அவியலின்) வின் வருவிளைவு  (Output) தான் கூத்தமைப்பையும் கைகாட்டியதோ..? என்று மெய்சிலிர்த்து வந்த பதிவே இது, இது ஒன்றும் இடம் மாறி பதியப்படவில்லை   

அக்னியஷ்திரா,  

இது ஒரு ஆய்வும் இல்லை அவியலும் இல்லை. இது ஒரு வரலாற்றுப் பதிவு மட்டுமே. இந்த நூலில் உள்ள வரலாற்றுச் சம்பவங்களுக்கான ஆதாரங்கள்  உலகில் உள்ள இனையத்தளங்கள்  எங்கும் உலகின்   பல்வேறு மொழிகளில் உள்ளன.  இந்நூலில் பதிப்பு 2009 ம் ஆண்டு மே மாதம். 

இந்நூலில் உள்ள மேலதிக வரலாற்று பதிவுகளை நேரம் கிடைக்கும் போது இங்கு பதிகிறேன். அப்போது கூறுங்கள்  இது ஆய்வா அவியலா என்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

அக்னியஷ்திரா,  

இது ஒரு ஆய்வும் இல்லை அவியலும் இல்லை. இது ஒரு வரலாற்றுப் பதிவு மட்டுமே. இந்த நூலில் உள்ள வரலாற்றுச் சம்பவங்களுக்கான ஆதாரங்கள்  உலகில் உள்ள இனையத்தளங்கள்  எங்கும் உலகின்   பல்வேறு மொழிகளில் உள்ளன.  இந்நூலில் பதிப்பு 2009 ம் ஆண்டு மே மாதம். 

இந்நூலில் உள்ள மேலதிக வரலாற்று பதிவுகளை நேரம் கிடைக்கும் போது இங்கு பதிகிறேன். அப்போது கூறுங்கள்  இது ஆய்வா அவியலா என்று. 

அப்பிடியா...வரலாற்று பதிவில் மருதன் 
சிவப்பெழுத்துக்களாலும் Highlight செய்து தான்  எழுதியுள்ளாரோ ...?
எதற்க்காக அப்படி எழுதியிருப்பார் ...? 

மற்றையது இப்படி ஹிட்லருக்கு அருகிலிருந்து பார்த்தவர்கள் போல் இந்த தமிழ் எழுத்தாளர்கள் எழுதும் வரலாற்று (அடித்து)விடல்களை எல்லாம் நான் வாசிப்பதில்லை .
Hitler A Career 
Hitler's Circle of Evil
Einsatzgruppen
Greatest Events of WW II
The Age of Tanks 
போன்ற Netflix Documentory களை பார்த்து போதுமான அறிவு  ஹிட்லரை பற்றி எனக்கு வந்துவிட்டது,
இதில்  Einsatzgruppen (The Nasi Death Squad) பார்ப்பதற்கு அதீதமான மனத்தைரியம் வேண்டும் ,
Heinrich Himmler (யூத இனவழிப்பின் சூத்திரதாரி) எனும் ஹிட்லரிலும் பார்க்க அதி பயங்கர கொடியவனை பற்றி கானொளி,வரலாற்றாசிரியர்கள்  வாயிலாக அறியலாம்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

மற்றையது இப்படி ஹிட்லருக்கு அருகிலிருந்து பார்த்தவர்கள் போல் இந்த தமிழ் எழுத்தாளர்கள் எழுதும் வரலாற்று (அடித்து)விடல்களை எல்லாம் நான் வாசிப்பதில்லை .
Hitler A Career 
Hitler's Circle of Evil
Einsatzgruppen
Greatest Events of WW II
The Age of Tanks 
போன்ற Netflix Documentory களை பார்த்து போதுமான அறிவு  ஹிட்லரை பற்றி எனக்கு வந்துவிட்டது,
இதில்  Einsatzgruppen (The Nasi Death Squad) பார்ப்பதற்கு அதீதமான மனத்தைரியம் வேண்டும் ,
Heinrich Himmler (யூத இனவழிப்பின் சூத்திரதாரி) எனும் ஹிட்லரிலும் பார்க்க அதி பயங்கர கொடியவனை பற்றி கானொளி,வரலாற்றாசிரியர்கள்  வாயிலாக அறியலாம்.   

யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையில் இருந்து கொஞ்சப்பேர் லண்டன், பாரிஸ், டொரோண்டோ எண்டு வந்து.... தமிழில பேப்பர் வெளியிடுறம் எண்டு பண்ணின அலம்பரைகள்.... சொல்லி வேலை இல்லை.

அதேபோல.... ரேடியோ சிலோன் ஆட்களும் கொஞ்சப்பேர் அந்த மாதிரி தான்.

தங்களது ஆங்கில அறிவை வளர்க்காமல், தமிழில் வண்டி ஓடலாம் என்று பத்திரிகை துறைக்கு வந்து, கடைசீல அவர்களது வெளியீடுகள், இலவசமாகி, விளம்பரத்தில் மட்டும் ஓடி, மா அரிக்கவும், பிரசாதம் சுத்தவும் தான் பயன்பட்டு....இறுதியில் விளம்பரமும் இல்லாமல், நிண்டு போனது.

மறைந்த தராகி சிவராம் ஆங்கிலத்தில் எழுதும் கட்டுரைகளை, வீரகேசரியில் மொழி பெயர்த்து வெளியிடட லட்ஷணத்தினை பார்த்து, அரண்டு போன அவர், கடைசியில் தானே தமிழில் மொழி பெயர்த்து கொடுத்தார்.

தங்களை முழுமையாக தயார் படுத்தாமல், நானும் வாரேன்... கும்பலில் கோவிந்தா போடலாம் என்று வரும் இந்த வகை பத்திரிக்கையளர்களினால், பத்திரிகைககளில் வரும்  தமிழ் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் மீதான ஆர்வம் குறைவு.

நீங்கள் சொன்னது போலவே, நேரடியாக ஆங்கிலத்தில் பார்ப்பது நல்லது. அவர்கள் அவிச்சு இறக்க மாட்டார்கள் (ஏலாது).

பத்திரிகைத்துறைக்கு அதற்குரிய படிப்புகள் உள்ளது. ஊரில், தமிழகத்தில், பத்திரிகையின் முதலாளி, ஆசிரியருக்கு ஒருவரின் அலம்பல் எழுத்துக்கள் பிடித்தால், பிறகென்ன ஊருக்கே பிடிக்கவேண்டியதுதான். 

முன்னர் ஒருமுறை விகடனில் ஹிட்லர் குறித்த குறிப்பு.

ரசியர்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்... ஹிட்லர் தான், மரணித்தவுடன் தன்னை எரிக்க தேவையான பொருட்களை பக்கத்தில் வைத்துக் கொண்டே விஷத்தினை குடிக்கின்றார். அப்படியே நிலத்தில் சாய்ந்து காலை நீட்டிப் படுத்து விடுகின்றார். எங்கிருந்தோ அடித்த காதில், அவரது கேசம் அங்கும் இங்கும் ஆடுகின்றது. 

காதலி இறுதி முத்தம் கொடுத்து நகர்கிறார். காத்திருந்த வீரன், ஹிட்லரின் உயிர் பிரிய, உடல் மீது பெட்ரோலினை...

அப்படியே பக்கத்தில் இருந்து பார்த்தமாதிரி கப்ஸா அடித்து விடுறார்.... (காட்டூனிஸ்ட் மதன்). அதன் பிறகு இப்படி அலம்பரைகளை வாசிப்பதேயில்லை. 

 

Link to comment
Share on other sites

7 hours ago, அக்னியஷ்த்ரா said:

அப்பிடியா...வரலாற்று பதிவில் மருதன் 
சிவப்பெழுத்துக்களாலும் Highlight செய்து தான்  எழுதியுள்ளாரோ ...?
எதற்க்காக அப்படி எழுதியிருப்பார் ...? 

மற்றையது இப்படி ஹிட்லருக்கு அருகிலிருந்து பார்த்தவர்கள் போல் இந்த தமிழ் எழுத்தாளர்கள் எழுதும் வரலாற்று (அடித்து)விடல்களை எல்லாம் நான் வாசிப்பதில்லை .
Hitler A Career 
Hitler's Circle of Evil
Einsatzgruppen
Greatest Events of WW II
The Age of Tanks 
போன்ற Netflix Documentory களை பார்த்து போதுமான அறிவு  ஹிட்லரை பற்றி எனக்கு வந்துவிட்டது,
இதில்  Einsatzgruppen (The Nasi Death Squad) பார்ப்பதற்கு அதீதமான மனத்தைரியம் வேண்டும் ,
Heinrich Himmler (யூத இனவழிப்பின் சூத்திரதாரி) எனும் ஹிட்லரிலும் பார்க்க அதி பயங்கர கொடியவனை பற்றி கானொளி,வரலாற்றாசிரியர்கள்  வாயிலாக அறியலாம்.   

அக்னியஷ்த்ரா, 

இணயங்களில் ஏற்கனவே உள்ள பதிவுகளை கொப்பி பேஸ்ட் செய்து   இணைக்கமல் ஒரு நம்பகமான நூல் பதிவை யாழ் இணையத்தில் இணைக்கும் சிறு  முயச்சியே இது. தமிழை விட ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளில் அறிவியல், வரலாற்றுப்பதிவுகள்  நிறைந்து காணபடுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதில் உங்களுடன் எனக்கு  முரண்பாடு இல்லை. 

இந்நூல் இரண்டாம் உலக யுத்த்தின் வரலாறு பதிவு நான் ஒரு வாசகன் மட்டுமே.  இதில்  உள்ள தரவுகள் தவறாவை என்றால் உங்களால் முடிந்தால் அதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுவதே உண்மையான திறனானய்வாக இருக்கும். அதை விடுத்து எனக்கு எல்லாம் தெரியும் என்று நான் இதை வாசிக்க மாட்டேன் என்று ரென்சன் ஆவதில் எந்த பயனும் இல்லை.  

இந்நூலின் ஆசிரியர் வேறும் பல வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். நூலில் அவர் குறிப்பிட பல வரலாற்று இடங்களுக்கு நான்  விடுமுறை காலங்களில் நேரில் சென்ற போது  அங்குள்ள தடயங்கள், குறிப்புகளின் பிரகாரம்  நூலில் தரவுகளின் உண்மைத்தன்மையை நான் அறிந்து கொண்டேன். இதில் உள்ள தரவுகளின் தவறுகள் இருப்பதாக நீங்கள் கண்டு பிடித்தால் அதை ஆதாரங்களுடன் தெரிவியுங்கள். இருவரும் சேர்ந்து பதிப்பகத்துடனும் நூல் ஆசிரியரிடமும் திறந்த மனதுடன்  தொடர்பு கொண்டு அதை தெரிவிப்போம். எனது நண்பன் அக்னியஷ்த்ராவை விட நீ என்ன கொம்பனா என்ற அந்த நூலை எழுதிய ஆசிரியரிடன் நான் சவால் விட வும் முடியும். 

 

உங்களை போன்ற எல்லாம் தெரிந்த வரலாற்று ஆசிரியர்கள் தமிழில் வரலாற்று நூல்களை எழுதியிருக்கலாம். அல்லது  நீங்கள் வாசித்த ஆங்கில வரலாற்று நூலை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து ஆங்கில மூலத்துடன் சேர்த்து இரண்டையும் இங்கு இணைத்தால்  யாழ்இணைய உறவுகள் வாசகர்களான நாம் மிகவும் மகிழ்வடைவோம். அப்படியான இரு மொழி பதிவின் மூலம் எமது ஆங்கில புலமையையும் உங்கள் புண்ணியத்தில் விருத்தி செய்து கொள்ளலாம். அதை விரைவில் கட்டாயம் செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் அதை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை தூள்பன் 
நான் கேட்டவை ஒன்றும் அவ்வளவு கடினமான கேள்வியல்ல, இப்படி சுத்திவளைப்பதற்கு  

 

On 8/6/2020 at 00:09, tulpen said:

 இனவெறிப் பிரச்சார ஆரம்பம்.

ஹிட்லர் பணியை ஏற்றுக்ககொண்டார். அரசியல் தானே? நானும் அதற்காகத் தான் காத்துக் கொண்டிருந்தேன். ஹிட்லர் பேச ஆரம்பித்தார். தனக்கு தெரிந்த அரசியலை, தனக்கு தெரிந்த இன வெறுப்பை, தனக்கு தெரிந்த லட்சியத்தை, பிஸ்மார்க்கின் கனவை ஆர்வம் பொங்க விவரித்தார். ஜேர்மனி எப்படிப்பட்ட தேசம் தெரியுமா என்று ஆரம்பித்து தேசத்தின் அருமை பெருமைகளை அடுக்கினார். தேசபக்தி என்றால் என்ன தெரியுமா நண்பர்களே என்று கதைப்பிரசங்கம் செய்தார். கம்மியூனிஸ்டுக்களையும் யூதர்களையும் நான் ஏன் வெறுக்கிறேன் தெரியுமா? புள்ளிவிவரங்களோடு விவரித்தார்.

பேசும் போதே சீறினார், பாய்ந்தார், குதித்தார், எம்பினார், முகத்தை கோணலாக்கி பேயாக கத்தினார். சட்டென்று பணிந்து புன்னகை செய்தார். சிலருக்கு சிரிப்பு வந்தாலும் பெரும்பாலானோரை ஹிட்லர் வசியப்படுத்தியது நிஜம். அவர் பேசுவதையும் ரசிக்க ஆரம்பித்தார்கள். பேச்சின் சாரத்தையும் சிறிது சிறிதாக உள்வாங்கிக்கொண்டார்கள்

 

On 8/6/2020 at 00:09, tulpen said:

கட்சியின் நிறுவனர் ஆல்டல் டிரெக்ஸ்லரின் (Anton Drexler) சித்தாந்த‍த்தை கேள்விப்பட்ட ஹிட்லர் ஆச்சரியம் அடைந்தார். யூதர்களை அழிக்க வேண்டும். பரந்து விரிந்த  தூயஜேர்மனியப் பேர‍ரசை நிர்மானிக்க வேண்டும். உலகின் சிறந்த குடிமகன்களாக ஜேர்மனியர் இருக்க வேண்டும். அதுவும் தூய ஜேர்மனியரே இந்த நாட்டை ஆளவேண்டும். டியெற்றிஹ் எக்காட் (Dietrich Eckart) என்பவரின் சிநேகிதமும் கிடைத்த‍து. விஷய ஞானம் கொண்டவர், சிந்தனாவாதி என்று அறியப்படவர். ஹிட்லர் அவரிடம் இருந்து கற்க ஆரம்பித்தார். தான் சிந்திக்கும் முறை சரிதானா என்று அவ்வப்போது உரையாடி சரிபார்த்துக் கொண்டார்.

ஹிட்லர், நீ உரைகள் பல நிகழ்த்தியிருக்கிறாயாம, நம் கட்சியின் சார்பாகவும் பேசு. பொது மக்களை கட்இசக்குள் சேர்க்க உனது உதவி தேவை. தலையைத் தாழ்த்தி ஏற்றுக்கொண்டார் ஹிட்லர். அவர்கள் யூகித்த‍து சரியாகவே இருந்த‍து. ஒரு பகுதியினரிடையே ஹிட்லர் அறியப்பட்டிருந்த‍தால், கூட்டம் வந்த‍து. ஹிட்லருக்கு தெரியும். உயிரைக் கொடுத்து பேசினார். உணர்ச்சிக் கடலில் த‍த்த‍ளித்தார். இமைக்க‍வும் மறந்து கேட்டுக்கொண்டு நின்றார்கள். பிற்காலத்தில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் மக்களை ஈர்க்க தன் வாழ்நாள் முழுவதும் ஹிட்லர் திரும்ப திரும்ப பயன்படுத்திய உத்தி அது. வெறும் பேச்சு. தொடர்ந்து இரண்டு, மூன்று மணி நேரங்கள் ஒரு வாய் தண்ணி கூடப் பருகாமால் உரையாட முடிந்த‍து அவரால்

 

On 8/6/2020 at 00:09, tulpen said:

என் கட்சி நான் சூட்டிய பெயர். எனக்கு கட்டுப்பட்டு தலையாட்டும் ஒரு கூட்டம். ஹிட்லர் வாழ்க என்று சொல்ல சொன்னால் அப்படியே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்க ஒரு திருத்தொண்டர்குழு. சர்வாதிகாரம், அடுத்த‍ பாய்ச்சல் எதை நோக்கியது என்பதை ஹிட்லர் மனத்தளவில் முடிவு செய்திருந்தார். பவேரியா மாநிலத்தைக்கைப்பற்ற வேண்டும். அது ஆனபின்னர் ஜேர்மனி. அது போதும். நான் நினைக்கும் வேகத்தில் காரியங்கள் நடந்து முடிந்து விட்டால் என் தேசம் தான் உலகம் முழுவதற்குமான ஆசான், உலகத்தலைவன்

 

On 8/6/2020 at 00:09, tulpen said:

மிக்க் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டா் ஹிட்லர். ஜேர்மனியை தன்னைத்தவிர வேறு எவராலும் மீட்டெடுக்க முடியாது என்பதை அழுத்தமாக பதிய வைத்தார். ஹிட்லர், ஜேர்மனி. ஜேர்மனி, ஹிடலர். திரும்ப திரும்ப நாசிகட்சி மேற்கொண்ட பிரச்சாரம் ஹிட்லர் தான் ஜேர்மனி என்ற தோற்றத்தை மக்களிடையே எழுப்ப முயன்றது. நம் பொருளாதாரம் ஏன் இந்த அளவுக்கு வலுவிழந்து கிடக்கிறது? அமெரிக்காவிடம் இருந்து (அதன் முதலாளிகளிடம் இருந்து) ஏழு பில்லியன் டாலர் கடன் பெற்றிருக்கிறது ஜேர்மனி. என்ன அவசியம்? தூய ஜேர்மனியரிடம் இல்லாத வளங்களா? ஜேர்மனியரிடம் இல்லாத நிர்வாத திறமையா? இவ்வாறான தூய ஜேர்மனியன் என்ற உசுப்பேற்றல்கள் இளைஞர் பட்டாளத்தையும் நடுத்தர பாமர மக்களையும்  நன்றாகவே கவர்ந்த‍து.

ஹிட்லர் அடிக்கடி சோசலிசம் என்னும் பத‍த்தைப்பயன் படுத்தினார். பொருளாதாரம் குறித்தும் ஜேர்மனியின் எதிர்காலம் குறித்தும், ஐரோப்பிய வல்லரசுகளைச் சாராமல் இருக்கும் தற்சார்பு பொருளாதாரம் குறித்தும் திரும்ப திரும்ப பேசினார்.  முதல்முதலாக விமானத்தை பிரச்சாரத்திற்காக பயன் படுத்தினார். ஒரே நாளில் இரு நகரங்களில் அவரால் உரையாட முடிந்ததை அதிசயமாக பேசிக்கொண்டனர் மக்கள். மதியம் வரை எங்களிடம் தானே இருந்தாரே! அங்கேயும் வந்தாரா ஹிட்லர்? மிக்க் கடுமையான பிரசாரத்தின் பயனான அந்த தேர்தலில் ஹிட்லருக்கு முப்பதைந்து சதவீத வாக்குகள் கிடைத்தன. தோல்விதான் என்றாலும் ஹிட்லர் யார் என்பதை அடையாளம் காட்டிய தேர்தல் அது.

மேலே சிவப்பில்  Quote பண்ணப்பட்டவைகள் எல்லாம் மருதனால் நீங்கள் பிரதி பண்ணிய மூலத்தில் சிவப்பில் 
குறிப்பிடப்பட்டவைகளா ....? அப்படி குறிப்பிடப்பட்டிருந்தால் அதற்கான காரணம் என்னவென்று மருதன் குறிப்பிடுகிறார்....? 
இல்லை இது உங்களால் சிவப்பால் குறிப்பிடப்பட்டதா ...? அப்படியாயின்  ஹிட்லரை பற்றிய வரலாற்றில் சிவப்பால் மேற்குறிப்பிட்ட விடயங்கள் மட்டும் உங்களால் அடிக்கோடிடப்பட காரணம் என்ன ....? 
மூலப்பிரதியை கையில் வைத்திருக்கும்,அதனை பதிந்திருக்கும்  நீங்கள் தான் பதில் தர வேண்டும் 

17 minutes ago, tulpen said:

இதில் உள்ள தரவுகளின் தவறுகள் இருப்பதாக நீங்கள் கண்டு பிடித்தால் அதை ஆதாரங்களுடன் தெரிவியுங்கள். இருவரும் சேர்ந்து பதிப்பகத்துடனும் நூல் ஆசிரியரிடமும் திறந்த மனதுடன்  தொடர்பு கொண்டு அதை தெரிவிப்போம். எனது நண்பன் அக்னியஷ்த்ராவை விட நீ என்ன கொம்பனா என்ற அந்த நூலை எழுதிய ஆசிரியரிடன் நான் சவால் விட வும் முடியும். 

 

21 minutes ago, tulpen said:

உங்களை போன்ற எல்லாம் தெரிந்த வரலாற்று ஆசிரியர்கள் தமிழில் வரலாற்று நூல்களை எழுதியிருக்கலாம். அல்லது  நீங்கள் வாசித்த ஆங்கில வரலாற்று நூலை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து ஆங்கில மூலத்துடன் சேர்த்து இரண்டையும் இங்கு இணைத்தால்  யாழ்இணைய உறவுகள் வாசகர்களான நாம் மிகவும் மகிழ்வடைவோம். அப்படியான இரு மொழி பதிவின் மூலம் எமது ஆங்கில புலமையையும் உங்கள் புண்ணியத்தில் விருத்தி செய்து கொள்ளலாம்

அவசியமற்ற விடயங்களுக்கு தாவுவதை விட்டு கேட்ட கேள்விக்கு பதில் தரலாமே   

Link to comment
Share on other sites

44 minutes ago, அக்னியஷ்த்ரா said:

கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை தூள்பன் 
நான் கேட்டவை ஒன்றும் அவ்வளவு கடினமான கேள்வியல்ல, இப்படி சுத்திவளைப்பதற்கு  

 

 

 

 

மேலே சிவப்பில்  Quote பண்ணப்பட்டவைகள் எல்லாம் மருதனால் நீங்கள் பிரதி பண்ணிய மூலத்தில் சிவப்பில் 
குறிப்பிடப்பட்டவைகளா ....? அப்படி குறிப்பிடப்பட்டிருந்தால் அதற்கான காரணம் என்னவென்று மருதன் குறிப்பிடுகிறார்....? 
இல்லை இது உங்களால் சிவப்பால் குறிப்பிடப்பட்டதா ...? அப்படியாயின்  ஹிட்லரை பற்றிய வரலாற்றில் சிவப்பால் மேற்குறிப்பிட்ட விடயங்கள் மட்டும் உங்களால் அடிக்கோடிடப்பட காரணம் என்ன ....? 
மூலப்பிரதியை கையில் வைத்திருக்கும்,அதனை பதிந்திருக்கும்  நீங்கள் தான் பதில் தர வேண்டும் 

 

அவசியமற்ற விடயங்களுக்கு தாவுவதை விட்டு கேட்ட கேள்விக்கு பதில் தரலாமே   

புத்தகத்தில் உள்ள உள்ளடக்கம்  தான் முக்கியம். அதன் தரவுகளில் தவறு இருந்தால் மட்டும் அதை தெரிவிக்கவும்.  சிவப்பில் இருந்தால் என்ன கறுப்பில் இருந்நாலென்ன. தரவுகளில் தவறு இருந்நால் அதை ஆதாரங்களுடன் தெரிவிக்கவும். அவசியமற்ற விடயங்களுகு நீங்கள் தாவ வேண்டாம். உங்களுக்கு சிவப்பு பிடிக்காவிட்டால் அது உங்கள்ப் பாதித்திருந்தால் கறுப்பாக மாற்றிவிட்லாம்.  விடயதில் உள்ளடக்கத்தில்  தரவுகளில் தவறு இருந்தால் ஆதாரத்துடன் மட்டும் தெரிவிக்கவும். 

7 hours ago, Nathamuni said:

 

தங்களது ஆங்கில அறிவை வளர்க்காமல், தமிழில் வண்டி ஓடலாம் என்று பத்திரிகை துறைக்கு வந்து, கடைசீல அவர்களது வெளியீடுகள், இலவசமாகி, விளம்பரத்தில் மட்டும் ஓடி, மா அரிக்கவும், பிரசாதம் சுத்தவும் தான் பயன்பட்டு....இறுதியில் விளம்பரமும் இல்லாமல், நிண்டு போனது.

நாத முனி நீங்கள் கூறியது போல் தமது ஆங்கில அறிவை வளர்க்காமல் வண்டி ஓட்டலாம் என்று  சிலர் நினத்த‍தால்   ஈழத்தமிழர்கள் அடைந்த இன்னல்கள் ஏராளம் என்ற நான் ஊருக்கு போன போது மக்கள்  பேசிக்கொண்டார்கள். எனக்கும் ஏன் என்று விளங்கவில்லை.  இப்போது நீங்களும் அதையே கூறுகிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

புத்தகத்தில் உள்ள உள்ளடக்கம்  தான் முக்கியம். அதன் தரவுகளில் தவறு இருந்தால் மட்டும் அதை தெரிவிக்கவும்.  சிவப்பில் இருந்தால் என்ன கறுப்பில் இருந்நாலென்ன. தரவுகளில் தவறு இருந்நால் அதை ஆதாரங்களுடன் தெரிவிக்கவும். அவசியமற்ற விடயங்களுகு நீங்கள் தாவ வேண்டாம்.

என்ன பதிலளிக்க முடியவில்லை போல ...😂😂😂
ஹிட்லரை தூக்கிக்கொண்டு வந்து உங்களது தனிப்பட்ட முதுகுசொறிதலுக்கு பாவித்திருக்கிறீர்கள்.
ஆனால் குடுத்தீங்கோ பாருங்கோ ஒரு கனெக்சன் ,அதுக்கு பெயர் தான் அரசியல் அவியல் 
உதை படித்து அறிவை வளர்ப்பவர்கள் வளர்க்கட்டும் அது அவர்களது தனிப்பட்ட  விருப்பம் அதில் தலையிட நான் யார்...?  

இதில் சரி பிழை கண்டு பிடித்து ....? உது பதியப்பட்டதன் நோக்கம் எனக்கு விளங்கி விட்டது 
அதாகப்பட்டது ஊரில் சொல்லும் வசனம்  தான் "புரிஞ்சவன் பிஸ்தா" 

Link to comment
Share on other sites

14 minutes ago, அக்னியஷ்த்ரா said:

என்ன பதிலளிக்க முடியவில்லை போல ...😂😂😂
ஹிட்லரை தூக்கிக்கொண்டு வந்து உங்களது தனிப்பட்ட முதுகுசொறிதலுக்கு பாவித்திருக்கிறீர்கள்.
ஆனால் குடுத்தீங்கோ பாருங்கோ ஒரு கனெக்சன் ,அதுக்கு பெயர் தான் அரசியல் அவியல் 
உதை படித்து அறிவை வளர்ப்பவர்கள் வளர்க்கட்டும் அது அவர்களது தனிப்பட்ட  விருப்பம் அதில் தலையிட நான் யார்...?  

இதில் சரி பிழை கண்டு பிடித்து ....? உது பதியப்பட்டதன் நோக்கம் எனக்கு விளங்கி விட்டது 
அதாகப்பட்டது ஊரில் சொல்லும் வசனம்  தான் "புரிஞ்சவன் பிஸ்தா" 

ஏன் நூலின்  தரவுகளில் தவறுகளை காண  வராலற்று ஆசிரியரான உங்களால் முடியவில்லையா?

நூலின் உள்ளடக்கத்தில் அதன் தரவுகளில்  தவறுகள் இருந்தால் மட்டும் அதனை  ஆதாரங்களுடன் தெரிவியுங்கள். அது மிகவும் சுலபமானது . இணையம் முழுவதும் தரவுகள் உள்ளன. அதை வைத்து நிரூபிக்கலாம்.  அதன் வடிவமைப்பு எந்த எழுத்துரு, அதன் நிறம் பற்றி அல்ல.

தரவுகளில் தவறு காண உங்களால்  முடியாது என்றால்   வரலாறு ஆசிரியரான  நீங்கள் வாசித்த ஆங்கிலபுத்தகத்தை மொழிபெயர்த்து இங்கு  இரு மொழியுடன் இணைக்கும் போது  அதில் சந்திப்போம்.  நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

ஏன் நூலின்  தரவுகளில் தவறுகளை காண  வராலற்று ஆசிரியரான உங்களால் முடியவில்லையா?

 

5 hours ago, tulpen said:

தரவுகளில் தவறு காண உங்களால்  முடியாது என்றால்   வரலாறு ஆசிரியரான  நீங்கள் வாசித்த ஆங்கிலபுத்தகத்தை மொழிபெயர்த்து இங்கு  இரு மொழியுடன் இணைக்கும் போது  அதில் சந்திப்போம்.  நன்றி. 

ஐயோ துள்பன் 
எதற்கப்பா இந்த வேண்டாத வேலை ..வேலியில்  போற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விடுறீங்கோ 
ஹிட்லரை பற்றி எதோ சொல்லுறீங்கோ அதை சிலிர்த்து போய் வாசித்து  பலர் அறிவை வளர்க்கட்டும் நாம் ஒதுங்கிக்கொள்வோம்  என்று பார்த்தால் 
வாண்டடா  வந்து இப்படி மல்லுகட்டுறீங்கள், 
நீங்களாக கேட்டு வாங்கியெடுக்கும் போது என்ன செய்வது ...நேயர்களே பார்த்துக்கொள்ளுங்கோ நம்ம பக்கம் எந்த தப்பும் இல்லை 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 

வரலாற்றை பார்ப்போமா ....?   

Quote

ஒரு காருக்கான வரைபடத்தை உருவாக்குவதில் ஹிட்லர் பிரத்தியேகமாக பங்கேற்றார். பின்னர், இதை டாக்டர் ஃபெர்டினால் ஃபோர்சே (Dr.Ferdinand Porsche) நடைமுறையில் உயிர்ப்பித்துக் கொண்டு வந்தார். ஹிட்லரின் தொழில் நுட்ப திறனுக்கு இது ஒரு சான்று. வொக்ஸ்வேகன் பீட்டில் (Volkswagen Beetle) என்று அந்த கார் அழைக்கப்பட்டது.


In 1934, with many of the above projects still in development or early stages of production, Adolf Hitler became involved, ordering the production of a basic vehicle capable of transporting two adults and three children at 100 km/h (62 mph). He wanted all German citizens to have access to cars.[8] The "People's Car" would be available to citizens of the Third Reich

அதாவது Volkswagen Beetle என்று குறிப்பிட்டுள்ளாரே உங்கடை புத்தக ஆசிரியர் , ஹிட்லர் சம்பந்தப்படும் போது அந்த காரின் பெயர் "People's Car" -Volkswagen மட்டுமே, 

1938 இல் அதன் பெயர் KdF (Kraft durch Freude, or Strength through Joy); from 1938, the Volkswagen was officially named the KdF Wagen.

மூலம் :https://www.bbc.com/culture/article/20130830-the-nazi-car-we-came-to-love

beetle என்பது பிறகு வந்து ஒட்டிக்கொண்டபெயர் 
Erwin Komenda, the longstanding Auto Union chief designer, part of Ferdinand Porsche's hand-picked team,[8] developed the car body of the prototype, which was recognizably the Beetle known today

சரி பாவம் நீங்களும் உங்கடை புத்தக ஆசிரியரும் Benefit of doubt ஐ உங்கடை புத்தக ஆசிரியர் பக்கமே விட்டுவிடுகிறேன் ஒருவேளை புதிய வண்டிக்கு பழைய வண்டிக்கும் வித்தியாசம் தெரியவில்லை போல .
அடுத்த ஓட்டைக்கு போவோமோ .....?

Quote

நம்பமுடியாத விலை ஒன்றையும் அவர் அதற்கு நிர்மாணித்தார். தொள்ளாயிரத்தித் தொண்ணூற்றொம்பது மார்க்குகள்.



உங்கள் புத்தக ஆய்வாளர்  சொன்னது போல் எந்த இணையத்தளத்திலும் இந்த வண்டி தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது மார்க்குகளுக்கு விற்கப்பட்டதாக ஆதாரம் இல்லை 
இந்த வண்டி விற்கப்பட்ட விலை தொள்ளாயிரத்து தொண்ணூறு Reichsmarks  (990)    

அநேகமாக ஜெர்மனியிலிருந்து இந்தியாவரும்போது Exchange rate discrepancy யால்  ஒன்பது மார்க்குகள் கூடி 
விட்டது போல் , இல்லை ஒருவேளை  தமிழ் நாட்டுக்கடையில் பாட்டா செருப்பு வாங்கும் போது இந்த பந்தியை சொருகியிருப்பாரோ. 
The "People's Car" would be available to citizens of the Third Reich through a savings plan at 990 Reichsmarks (equivalent to €3,747 in 2009)—about the price of a small motorcycle (the average income being around 32 RM a week)
மூலம் :விக்கிபீடியா --பெரிதாக நம்பமுடியாது என்பதால் Credible Source கீழே 

The idea had been for a small saloon that could carry a German family of five flat-out at 100kph along the country’s new autobahns. It was to have cost 990 Reich Marks, which represented 31 weeks’ pay for the average German worker in 1936, making it cheaper than the £100 Fords being made in England (31 weeks pay for the average British worker in 1936 was about £100)

மூலம் :https://www.bbc.com/culture/article/20130830-the-nazi-car-we-came-to-love

ஆங்கில உசாத்துணை நூல் 
Productivity Machines: German Appropriations of American Technology from Mass Production to Computer Automation .
Chapter 2 Page 72 By Corinna Schlombs

இந்த லட்சணத்தில் இதனை வாசித்து அறிவை வேற வளர்க்கப்போகிறவர்கள் நிலைமை... அந்தோ பரிதாபம்
சாதா பேர்வழி எனக்கே ஓட்டை இவ்வளவு பெருசா தெரியுதே ,வரலாற்று ஆசிரியர்கள் யாராவது இந்த நூலை  கையிலெடுத்தால் ...துல்ப்ஸ் உங்கள் நிலைமை ....? போதாக்குறைக்கு வாய்ச்சவடால் வேற,  

நீங்கள் தொடர்ந்து ஒ(ஓ )ட்டுங்கோ துள்ப்ஸ் அடுத்தமுறை இன்னு விதம் விதமான கண்ணை குத்தும் நிறங்களில் ஹை லைட் செய்து போடுங்கோ 
போட்ட விடயங்கள் முழு புருடாவாக இருந்தாலும் போட்ட கலரு வாசிப்பவர்கள் கண்ணிலேயே நிற்கும்  ...Continue 😜🤭🤮


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை, ஹிட்லரின் Circle of evils இல்லாமல் அவரால் இந்தளவு வலிமையை அடைந்திருப்பாரோ தெரியாது, அதிலும் அவரது propaganda minister Joseph Goebbelsவினது ஆவேசமான பேச்சுக்கள் மக்களிடம் நன்றாகவே சென்றடைந்தது எனலாம். 

ஆங்கிலத்தில் இருக்கும் நாவல்களை கூட எத்தனை பேர் வாசிப்பார்கள்?, இரண்டாவது எல்லோரிடரும் Netflix இருக்குமா? அப்படி இருந்தாலும் கூட  எத்தனை பேர் Netflixல் இவற்றை பார்க்கப்போகிறார்கள்?. 

தமிழில் வரலாற்று நூல்கள் வருவது குறைவு, ஆகையால் வரலாற்று உண்மைகளை மிகைப்படுத்தாமல் எழுதுபவர்களை ஊக்குவிக்கவேண்டும். அப்படி தகவல்கள் கற்பனையாக இருந்தால் அதை உரியமுறையில் எழுத்தாளர், அதனை திறனாய்வு செய்தவர், எழுத்தாளர் தொடர்புடைய குழுமத்திற்கு அறிவிக்கவேண்டும்.அப்படி செய்யும் போது தவறான தகவல்களுடைய புத்தகங்களும் வெளியே வராது, உண்மையான தரவுகளை வைத்து எழுதுபவர்களும் பாதிப்படையமாட்டார்கள். இது எனது தனிப்பட்ட கருத்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துல்பன்!: DO NOT ENGAGE! 

நேரம் கிடைக்கும் போது தொடருங்கள்!  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.