Jump to content

கொரோனா ஊரடங்கு: இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களின் நிலை என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா ஊரடங்கு: இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களின் நிலை என்ன?

கொரோனா ஊரடங்கு : இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களின் நிலை என்ன ?Getty Images

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகக் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தரப்பினரும் பெருமளவு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். 

அதிலும் குறிப்பாக, பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் தமிழகத்தின் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இருந்தபோதிலும், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் தமிழக அரசு அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலவசமாகக் கொடுத்து உதவுவதால், அன்றாட உணவிற்கு மிகுந்த சிரமம் இல்லாமல் இருப்பதாகக் கூறுகின்றனர் முகாம்களில் வசிப்பவர்கள்.

இதனிடையே, கொரோனா ஊரடங்கு காலத்தில் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் தற்போதுள்ள சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பது குறித்து பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டனர். 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் இருக்கும் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் குணரத்தினம் கூறுகையில், "கடலூர் மாவட்டத்தில் நான்கு இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இதில் எங்களது முகாமில் மட்டும் 169 குடும்பத்தை சேர்ந்த 525 பேர்கள் வசித்து வருகிறோம்" என்றார்.

"கொரோனா ஊரடங்குக்கு முன்பு நாங்கள் அனைவரும் கடலூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களுக்கும் வேலைக்குச் சென்று கொண்டிருந்தோம். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் கடலூர் மாவட்டத்திலேயே எங்களால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. சிலர் மட்டும் முகாமிற்கு அருகாமையில் கிடைக்கும் கட்டட வேலை மற்றும் வயல் வெளிகளுக்கு நீர்ப் பாசனம் செய்யும் வேலைகளுக்குச் சென்று வருகின்றனர்."

"கொரோனா நோய்த் தொற்றினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு, மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் உதவிகள் கிடைத்துள்ளன. குறிப்பாக, தமிழக அரசு சார்பில் மாதம் தோறும் இலவச அரிசி உட்பட அத்திவாசிய சமையல் பொருட்கள் கொடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும், மற்ற தேவைகளை நிறைவேற்றுவதற்காக வேலைக்குச் சென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால், கொரோனா நோய்த்தொற்று குறித்த அச்சம் காரணமாக முகாமிற்குள்ளேயே முடங்கி இருக்கிறோம்."

 

 

பாதிப்புக்குள்ளாகும் முதியவர்கள், ஆதரவற்றோர் 

முகாம்களில் குழந்தைகள் துணையின்றி இருக்கும் முதியவர்கள் மற்றும் கணவனை இழந்து வாழும் பெண்களே இந்த சூழ்நிலையில் பெருமளவு பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்று கூறுகிறார் குணரத்தினம்.

"முதியவர்களைப் பொறுத்தவரைச் சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தகுந்த நேரத்தில் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து வந்தால் மட்டுமே அவர்களின் உடல்நிலை சீராக இருக்கும். அதற்காக அவர்களை அருகே உள்ள பொது மருத்துவமனை அழைத்துச் சென்றால், மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை போல அணுகுவதால், அவர்கள் மேலும் அச்சத்திற்கு ஆளாகின்றனர். இதையடுத்து, வேறு வழியில்லாமல் தனியார் மருத்துவமனைக்கு செல்ல முயன்றாலும் அவர்களிடம் போதுமான பணம் இல்லாமல், சிகிச்சை இன்றி தவிக்கின்றனர்." என்கிறார் அவர்.

கொரோனா ஊரடங்கு குணரத்தினம்

மற்றொரு புறம், கணவனை இழந்த பெண்கள், தற்போதைய நிலையில் வெளியே வேலைக்குச் செல்ல முடியாத காரணத்தினால் அத்தியாவசிய மற்றும் பிள்ளைகளுக்கான செலவினங்களுக்குப் பணமில்லாமல் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்று குணரத்தினம் கூறுகிறார்.

மேலும் அவர், "ஊரடங்கு காரணமாக நான் செய்துகொண்டிருந்த வேலை முழுவதுமாக தடைபட்டுவிட்டது. எனது மனைவி தையல் தொழில் செய்து வந்தார். அதன்மூலமாக வரும் வருமானத்தில் எங்களது குடும்ப தேவைகளை சமாளித்து வந்தோம். ஆனால், தற்போது நோய்த்தொற்று அதிகரித்துள்ள காரணத்தினால், வெளியே இருந்து வருபவர்கள் மூலமாக ஏதாவதொரு வகையில் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால், முகாமில் உள்ள அனைவருக்கும் சிரமம் ஏற்படும் என்பதால் என் மனைவியும் எந்த வேலையும் செய்ய முடியாமல் வீட்டிலேயே இருக்கிறார்." என்கிறார்.

கொரோனா ஊரடங்கு : இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களின் நிலை என்ன ?Getty Images கோப்புக்காட்சி

அதிகரிக்கும் வட்டிச் சுமை 

"முன்னதாக, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தனியார் வங்கிகள் வாயிலாக கொடுக்கப்பட்டு வந்த கடன் மூலமாகத் தான் குடும்பச் சூழலை சமாளித்து வந்தோம். நாங்கள் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது, பெற்ற கடனை மாத தவணையாகச் செலுத்தி வந்தோம். ஆனால், தற்சமயம் இங்கே உள்ள அனைவருமே வெளியே வேலைக்குச் செல்லாமல் முடங்கி இருக்கும் நிலையில், கடனுதவி அளித்த தனியார் வங்கிகள், மாத தவணை சரியாகச் செலுத்தத் தவறினால் பின்னர் கூடுதல் வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்கின்றனர்." என்கிறார் குணரத்தினம்

கூடுதல் வட்டி கட்ட வேண்டிய அச்சத்தின் காரணமாக, வேறு வழியில்லாமல் இருக்கும் நகை மற்றும் பொருட்களை விற்றுதான் தற்போது முகாம்களில் வசிக்கும் மக்களில் பலர் மாத தவணையை செலுத்தி வருவதாக குணரத்தினம் கூறுகிறார்.

"கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக இருந்து வரும் சூழலில், பல தரப்பினர் அரசிற்கு நிவாரண தொகை வழங்கி வருகின்றனர். இதுபோன்ற சூழலில், எங்களால் முடிந்த உதவியை நாங்கள் அனைவரும் அரசிற்குச் செய்ய விரும்பினோம். அதன் அடிப்படையில், எங்களது முகாமில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களால் முடிந்த தொகையை அளிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, மொத்தமாக சுமார் 14,000 ரூபாயை கொரோனா தடுப்பு நிதியுதவியாக தமிழக அரசிற்கு அளிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்" என்று கூறுகிறார் அவர்

'எங்களுக்கு நிரந்தர வேலையே இல்லை'

இவரைத் தொடர்ந்து, புதுச்சேரி அருகே உள்ள விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்புதுப்பட்டு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் சந்திரனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "கொரோனா ஊடரங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் மிகவும் சிரமமாக இருந்தது. பின்னர் அரசாங்கம் மற்றும் தன்னார்வலர்களின் உதவியால் இந்த கடினமாகச் சூழலை ஓரளவு சமாளிக்க முடிகிறது. மேற்கொண்டு செலவினங்களுக்கு வேலைக்குச் சென்றாக வேண்டிய கட்டாயத்திலிருந்தோம். ஆனால், ஊரடங்கு காரணமாக எங்கும் வெளியே செல்ல முடியாமல் தவிக்கிறோம்," என்றார்.

தங்களை போன்றவர்களுக்கு நிரந்தர வேலை என்று சொல்வதற்கு எதுவுமில்லை என்று கூறும் சந்திரன், அன்றாட வாழ்வில் தினக்கூலி வேலையை நம்பியே தங்களது வாழ்க்கை சென்றுகொண்டிருப்பதாக வேதனைப்படுகிறார்.

கொரோனா ஊரடங்கு சந்திரன்

"எங்கள் முகாமிலுள்ள பெரும்பாலானோர் அருகே உள்ள புதுச்சேரிக்கு தான் வேலைக்காகச் சென்று கொண்டிருந்தோம். அதிலும், இந்த மாத தொடக்கத்தில் புதுச்சேரியில் அமலில் உள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு கட்டடம், பைண்டிங் வேலைகளுக்குச் சென்று வந்தோம். ஆனால், புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கடந்த சில நாட்களாக மாநில எல்லைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளதால், நாங்கள் செய்து கொண்டிருந்த வேலைகள் மீண்டும் தடைபட்டுவிட்டன."

"கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலில் நாங்களும் வேறு வேலையை தேடாமல் பாதுகாப்பாக முகாமிற்கு உள்ளேயே இருக்கிறோம். நாங்கள் வசிக்கும் முகாமில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தில், சுமார் 1200க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகிறோம். இங்கே பத்து குடும்பத்திற்கு ஒரு குளியலறை மற்றும் கழிப்பிட வசதி உள்ளது. குறுகிய இடத்தில் நெருக்கமாகச் சூழ்நிலையில் வசித்து வருவதால், கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக வாழ்ந்து வருகிறோம்," என்று கூறுகிறார் சந்திரன்.


 

https://www.bbc.com/tamil/india-53122938

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.