Jump to content

தமிழ் நாட்டுக்கு மதுரையை இரண்டாவது தலைநகரமாக்குவது சாத்தியமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டுக்கு மதுரையை இரண்டாவது தலைநகரமாக்குவது சாத்தியமா?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
மதுரையை இரண்டாம் தலைநகரமாக்குவது சாத்தியமா?

Getty Images

தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டுமென மதுரையைச் சேர்ந்த ஆளும் அ.தி.மு.கவைச் சேர்ந்த அமைச்சர்கள் கூறிவருகின்றனர். ஆனால், இந்தத் திட்டம் சாத்தியமான ஒன்றா?

சில நாட்களுக்கு முன்பாக தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை ஆக்க வேண்டும் என்று ஆளும் அ.தி.மு.கவின் கிழக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக ஆக்கினால், தென் மாவட்டங்கள் வளம்பெறும் என்று தெரிவித்தார்.

மதுரையைச் சேர்ந்த மற்றொரு அமைச்சரான செல்லூர் ராஜுவும் இந்த யோசனையை வலியுறுத்தினார். இதையடுத்து மதுரையைச் சேர்ந்த வணிகர் சங்கங்களும் இதனை ஆதரித்தன. 

அ.தி.மு.கவின் கிழக்கு மாவட்டத்தால் வலியுறுத்தப்பட்டு, வருவாய்த் துறை அமைச்சரால் முன்வைக்கப்படும் இரண்டாம் தலைநகரம் என்பதற்கு என்ன பொருள்? சென்னையில் இருப்பது போல ஒரு தலைமைச் செயலகம், சட்டப்பேரவை ஆகியவற்றை மதுரையிலும் உருவாக்க வேண்டுமா? 

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில் பிபிசியிடம் விரிவாகப் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் ஒரு 'administrative block' ஒன்றை உருவாக்க விரும்புவதாகச் சொன்னார். 

"அதாவது ஒரு நிர்வாக நகரத்தை உருவாக்க வேண்டுமெனச் சொல்கிறேன். தற்போது எல்லா அனுமதிகளுக்கும் சென்னைக்குச் சென்றுகொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இதன் காரணமாகவே, சென்னையைச் சுற்றியே தொழிற்சாலைகள் உருவாகிவருகின்றன. பிற மாவட்டங்களில் தொழிற்சாலைகளைத் துவங்க எவ்வளவோ சலுகைகளை அளித்தும் எல்லோருமே சென்னைக்கு அருகிலேயே தொழிற்சாலைகளைத் துவங்க விரும்புகின்றனர். கன்னியாகுமரியில் வசிக்கும் ஒருவர்கூட அனுமதிகளுக்காக சென்னைக்கு வர வேண்டியிருக்கிறது. 

இதனால் தமிழ்நாட்டின் பிற பகுதிகள் சென்னையைவிட 10 ஆண்டுகள் பின்தங்கியிருக்கின்றன. தமிழ்நாடு அரசில் உள்ள 56 துறைகளுக்குமான முக்கிய முடிவுகள் சென்னையிலேயே எடுக்கப்படுகின்றன. 

நாங்கள் முன்வைப்பது என்னவென்றால் மதுரையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் தொடர்பான முடிவுகளை, அனுமதிகளை பெறும் வகையில் ஒரு நிர்வாக நகரத்தை அமைக்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கான அளவீடுகள் மதிப்பீடுகளுக்கு சென்னைக்கு வர வேண்டியதில்லை என்ற நிலையை ஏற்படத்த வேண்டும்" என தாம் முன்வைக்கும் இரண்டாவது தலைநகரம் திட்டத்தை விவரித்தார் ஆர்.பி. உதயகுமார்.

மதுரையை இரண்டாம் தலைநகரமாக்குவது சாத்தியமா?

 

சென்னைக்கு மாற்றாக மற்றொரு தலைநகரத்தை முன்வைத்து ஒரு விவாதம் 80களிலேயே துவங்கிவிட்டது. 80களின் துவக்கத்தில் எம்.ஜி. ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது, தலைநகரத்தை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றும் திட்டத்தை பரிந்துரைத்தார். தமிழ்நாட்டில் எல்லாப் பகுதிகளில் இருந்தும் திருச்சியை வந்தடைந்துவிடலாம் என்ற எண்ணத்திலும் சென்னையில் அதிகரித்துவரும் நெருக்கடியை மனதில் வைத்தும் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை. 

அதற்குப் பிறகு கோயம்புத்தூர், திருச்சி, மதுரையில் சர்வதேச விமான நிலையங்கள், மதுரையில் உயர் நீதிமன்றத்தின் அமர்வு என வசதிகள் பரவலாக்கப்பட்ட பிறகு இந்தக் கோரிக்கை பெரிதாக எழவில்லை. இந்த மூன்று பெரிய நகரங்களிலும் உள்ள வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் மட்டும் எழுந்தவண்ணம் இருந்தன.

அ.தி.மு.க. அமைச்சர்கள் வைத்த கோரிக்கையை அடுத்து, மதுரையில் உள்ள வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பான சேம்பர் ஆஃப் காமர்ஸ் இந்தத் திட்டத்தை வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறது.

"நாகர்கோவிலில் வசிக்கும் ஒருவர் எந்த ஒரு திட்டத்திற்கும் ஒப்புதல் வாங்க வேண்டுமானால் 800 கி.மீ. பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்திலும் 25,000 சதுர அடிக்கு மேல் கட்டடம் கட்ட வேண்டுமானால் சென்னையில்தான் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் வட பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் உள்ள வளர்ச்சி தெற்குப் பகுதியில் இல்லை. இதற்குத் தீர்வாக, மதுரையை இரண்டாம் தலைநகரமாக்கி, சில அதிகாரங்களை பகிர்ந்துகொள்ளலாம். இதனால், சென்னையில் நெரிசல் குறையும்" என்கிறார் மதுரை சேம்பர் ஆஃப் காமர்சின் தலைவரான ஜெகதீசன்.

தமிழ்நாட்டின் வடக்கு, மேற்கு மாவட்டங்களை ஒப்பிட்டால் தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகளும் வேலை வாய்ப்புகளும் குறைவுதான். தென் தமிழகத்தில் ஏற்பட்ட தொடர் ஜாதி கலவரங்களை அடுத்து 1997ல் அமைக்கப்பட்ட நீதியரசர் மோகன் ஆணையம், தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்புகள் இல்லாததே, ஜாதிக் கலவரங்கள் அதிகம் நடப்பதற்குக் காரணம் என்று குறிப்பிட்டது.

மதுரையில் உயர்நீதிமன்றத்தின் கிளை செயல்பட்டுவரும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பாக மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டது. விமான நிலையத்தின் ஓடுபாதையை மேலும் நீளமாக்கும் முயற்சிகளும் நடந்துவருகின்றன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளும் நடந்து வருகின்றன. ஆகவே, ஒரு தலைநகருக்கான தகுதி மதுரைக்கு இருப்பதாக ஜெகதீசன் சொல்கிறார். 

"மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் கீழ் 14 மாவட்டங்கள் இருக்கின்றன. இந்தப் பதினான்கு மாவட்டங்களில் தமிழ்நாட்டின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வசிக்கிறார்கள். ஆனால் தொழில்வளர்ச்சிக்கான எந்த நடவடிக்கையும் இல்லை. மதுரை - தூத்துக்குடி இன்டஸ்ட்ரியல் காரிடார் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், நடைமுறைக்கே வரவில்லை. மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவித்தால், இவையெல்லாம் மாறும் வாய்ப்பு இருக்கிறது" என்கிறார் ஜெகதீசன்.

மதுரையை இரண்டாம் தலைநகரமாக்குவது சாத்தியமா?
 

தமிழ்நாட்டின் பெரிய மாநகராட்சிப் பகுதிகளில் ஒன்றான மதுரை, சுமார் பதினான்கு லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நகரம். ஆனால், மதுரை நகரத்தைப் பொறுத்தவரை மிகவும் நெரிசலான தெருக்களையும் சாலைகளையும் கொண்ட ஒரு பகுதி. இதனால், மதுரை விரிவாக்கம் குறித்து பேசும்போதெல்லாம் நகரம் இன்னும் நெரிசலாகும் என்ற அச்சம் வருவதைத் தவிர்க்க முடியாது. தவிர, நிர்வாக அலுவலகங்கள், அதை ஒட்டி ஏற்படும் தொழில்வளர்ச்சி ஆகியவற்றுக்குத் தேவைப்படும் நிலம் குறித்த கவலைகளும் இருக்கின்றன.

"மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் 30,000 ஏக்கர் வரை நிலமெடுக்கலாம். திருநெல்வேலி - மதுரை செல்லும் பாதைகளிலும் நிறைய வானம் பார்த்த பூமி உண்டு. இது டெல்டா பிரதேசமல்ல. ஆகவே வளமான பகுதிகள் இங்கு குறைவு. ஆகவே நிலம் ஒரு பிரச்சனையே இல்லை" என்கிறார் ஜெகதீசன்.

ஆனால், இது உண்மையிலேயே மதுரையின் வளர்ச்சிக்காக எழுப்பப்படும் கோரிக்கைதானா என்ற கேள்வியை எழுப்புகிறார் மதுரை மத்தியத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். 

"ஆழ்ந்த முன்யோசனையுடன் இந்தத் திட்டத்தை அவர்கள் முன்வைத்திருந்தால் நாமும் அதைத் தீவிரத்துடன் விவாதிக்கலாம். அ.தி.மு.கவில் உள்ள 60 மாவட்டங்களில் ஒரு மாவட்டச் செயற்குழு நிறைவேற்றிய தீர்மானம் இது. மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதா முன்வைத்த 'விஷன் ஸ்டேட்மென்ட் 2023'ஐ முழுமையாகப் படித்திருந்தால், இப்படி ஒரு யோசனையையே முன்வைத்திருக்க மாட்டார்கள். அந்த திட்ட ஆவணத்தில், 2023க்குள் தமிழ்நாட்டில் சர்வதேசத் தரத்துடன் பத்து நகரங்களை உருவாக்க வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது. 

அதைப் பற்றி எதுவும் பேசாமல் இப்படி ஒரு யோசனையை முன்வைக்கிறார்கள். மதுரையை இரண்டாவது தலைநகரமாக்குவது குறித்து அமைச்சரவைத் தீர்மானம் ஏதும் நிறைவேற்றியிருக்கிறதா,கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதா? எதுவும் இல்லை. முக்கியப் பிரச்சனைகள் குறித்து மக்களைத் திசை திருப்பவே இப்படி சொல்கிறார்கள்" என்கிறார் பழனிவேல் தியாகராஜன்.

மதுரையை இரண்டாம் தலைநகரமாக்குவது சாத்தியமா?

தமிழக முதலமைச்சரிடம் இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுவிட்டதா என்று ஆர்.பி. உதயகுமாரிடம் கேட்டபோது, இப்போதுதான் தீர்மானம் போடப்பட்டிருக்கிறது; அரசிடம் விரைவில் சொல்வோம் என்று தெரிவித்தார் அவர். 

தற்போதைய சூழலில் இது சாத்தியமே இல்லாத யோசனை என்கிறார் பழனிவேல் தியாகராஜன். "மாநில அரசு ஏற்கனவே பெரும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. கடந்த நான்கு மாதத்தில் 37 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள். 85 ஆயிரம் கோடி பற்றாக்குறை வரவிருக்கிறது. ஆகவே திட்டச் செலவுகளை, முதலீட்டுச் செலவுகளைக் குறைக்க வேண்டுமென்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் டெண்டர்கள் விடப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. இப்படியே சென்றால் ஒரு லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும். இந்தச் சூழலில் இரண்டாம் தலைநகரை உருவாக்க முடியுமா?" எனக் கேள்வியெழுப்புகிறார் அவர்.

இம்மாதிரி ஒரு இரண்டாம் தலைநகரை உருவாக்க திட்டமிடலுக்கே ஒரு வருடம் தேவைப்படும். ஆனால், இந்த ஆட்சியில் இன்னும் 8 மாதங்களே மீதமிருக்கின்றன; உண்மையிலேயே இம்மாதிரி யோசனை இருந்தால் 9.5 ஆண்டுகளாக சும்மா இருந்தது ஏன் என்கிறார் பழனிவேல் தியாகராஜன்.

"நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை நியாயமானதா இல்லையா என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும். எப்போது முன்வைக்கிறோம் என்பது முக்கியமல்ல" என பதிலளித்தார் ஆர்.பி. உதயகுமார். 

வரும் வெள்ளிக்கிழமையன்று தென் தமிழக தொழில் வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த தொழில்துறையினரும் வர்த்தகர்களும் மதுரையில் இது தொடர்பான கூட்டம் ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைநகர் விவாதம்: 1981 முதல் இன்று வரை!

spacer.png

 

தமிழகத்தில் இரண்டாவது தலைநகர் என்கிற கோரிக்கை அவ்வப்போது எழுவதும் அடங்குவதுமாக இருந்து கொண்டிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர், மாநிலத்தின் தலைநகர் சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றப்பட வேண்டும் என்று கூறியதை ஒட்டுமொத்த தமிழகமே திரும்பிப் பார்த்தது. கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் நீண்ட தூரம் அலைச்சலுடன் பயணித்து சென்னையிலுள்ள அலுவலகங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, தலைநகர் மாநிலத்தின் மையப் பகுதியில் இருக்க வேண்டும் என்று கூறினார். அவரைப் பொறுத்தவரை அது திருச்சியாக இருந்தது.

அந்த சமயத்தில் தலைநகரை மாற்றும் முடிவுக்கு பல பகுதிகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி, ‘மனித உடலின் மிக முக்கிய பகுதியான மூளை மையப் பகுதியில் இல்லை. அது தலையின் உச்சியில் இருக்கிறது’ என்று கூறி எம்.ஜி.ஆரின் முடிவை எதிர்த்தார்.

1981-82 காலகட்டத்தில் சென்னையில் கடுமையான குடிநீர் நெருக்கடியை ஏற்படுத்திய வறட்சி நிலைமையை காரணம் காட்டி திருச்சியை தலைநகராக மாற்றுவதற்கான திட்டத்தினை முன்னெடுத்தார் எம்.ஜி.ஆர். தலைநகர் விவகாரம் தொடர்பாக அப்போதைய திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் இடையே கடும் வார்த்தைப் போர் மூண்டது. சென்னையில் வறட்சி நிவாரணம் மற்றும் நீர் வழங்கல் நடவடிக்கைகளுக்காக கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் செலவிடுவதற்கு பதிலாக, அந்த பணத்தை வைத்து திருச்சியை தலைநகராக்கிவிடலாம் என எம்.ஜி.ஆர் பரிந்துரைத்தார்.

ஆனால் திருச்சியை தலைநகராக்க குறைந்தது 1,000 கோடி ரூபாய் செலவாகும் என்று குறிப்பிட்ட கருணாநிதி, “வறட்சி நிவாரணத்திற்காக 50 கோடி செலவிட முடியாத அரசு, புதிய தலைநகருக்காக 1,000 கோடி ரூபாயை எப்படி செலவிடும்” என்று கேள்வி எழுப்பினார். மேலும், எம்.ஜி.ஆர் இந்த திட்டத்தில் தீவிரமாக இல்லை, அந்த நேரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சினைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப விரும்புகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

 

துறைமுக வசதிகளைப் பெற கடற்கரைக்கு அருகில்தான் தலைநகரம் இருக்க வேண்டும் என்று சிலர் வாதிட்டபோது “அமெரிக்க தலைநகர் வாஷிங்டன், இந்திய தலைநகர் டெல்லி ஆகிய இடங்களில் துறைமுகங்கள் இல்லை” என்று விளக்கினார் எம்.ஜி.ஆர். தலைநகர் சென்னையில் ஆளும் கட்சியான அதிமுகவிற்கு ஏற்பட்ட தொடர் தோல்விகளும், திமுகவின் வெற்றியும்தான் சென்னையிலிருந்து தலைநகரை மாற்றுவதற்கான எம்.ஜி.ஆரின் உண்மையான காரணம் என்றும் ஒருபக்கம் பேசப்பட்டது.

எனினும், எம்.ஜி.ஆர் தனது திட்டத்தில் விடாப்பிடியாக முன்னேறிச் சென்றார். திருச்சியின் புறநகர் பகுதியான நவல்பட்டில் அரசாங்கத்திற்கு நிலம் உறுதி செய்யப்பட்டதால் தலைநகருக்கு அப்பகுதி அடையாளம் காணப்பட்டது. திருச்சி வந்தால் எம்.ஜி.ஆர் தங்குவதற்கு, உறையூர் கோணக்கரையில் பங்களாவும் கட்டப்பட்டது. ஆனால், இறுதியில் அரசிற்கு வேறு சில பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்ததால் இந்த யோசனை கைவிடப்பட்டது. 1984 ஆவது வருடம் எம்.ஜி.ஆருக்கு உடல்நலமில்லாமல் போனது, பிரதமர் இந்திரா காந்தியின் இறப்பு, தேர்தல் போன்ற காரணங்களால் தலைநகர் திட்டத்தினை நிறைவேற்ற முடியவில்லை.

spacer.png

இதுபோல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைநகரை சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மாற்ற முடிவு செய்தார். இதற்காக கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள திருவிடந்தை பகுதியில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டது. ஆனால், சில மாதங்களிலேயே அத்திட்டம் கைவிடப்பட்டது. 2015ஆம் ஆண்டு பெருமழை, வெள்ளத்தால் சென்னை முழுவதும் மிகவும் பாதிக்கப்பட்ட நேரம், மீண்டும் இரண்டாவது தலைநகரம் அமைக்க வேண்டும் என்ற விவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது தலைநகர் கோரிக்கை மீண்டும் உயிர்பெற்றுள்ளது.

தென் மாவட்ட மக்களின் நலன் கருதி மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டுமென அமைச்சர் உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்.ஜி.ஆரும் மதுரையை தலைநகராக்க விரும்பியதாக கூறி அமைச்சர் செல்லூர் ராஜு இதனை வழிமொழிந்தார்.

இரண்டாவது தலைநகரமாக திருச்சியை ஆக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை எழுப்பி வரும் திருச்சி மக்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்சோதி ஆகியோர் திருச்சியையே இரண்டாவது தலைநகராக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

spacer.png

இந்த நிலையில் திருச்சியை தலைநகராக்க வேண்டும் என அப்போதே இயக்கங்களை நடத்தியவரும், திருச்சியை தன்னுடைய பெயரிலேயே சுமந்துகொண்டிருப்பவருமான காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமியிடம் மின்னம்பலம் சார்பாக சில கேள்விகளை முன்வைத்தோம்.

“இரண்டாவது தலைநகர் திருச்சியா அல்லது மதுரையா என முடிவு செய்ய வேண்டியது அரசாங்கம்தான். அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர் திருச்சிதான் தலைநகருக்கு சரியான இடம் என முடிவு செய்து அந்த காலத்திலேயே கூறினார். எம்.ஜி.ஆர் சொன்னதை அவருடைய வழித் தோன்றலான இப்போது இருக்கும் அதிமுக அமைச்சரவை ஏற்றுக்கொள்கிறதா அல்லது எம்.ஜி.ஆர் திருச்சியை தவறாகச் சொல்லிவிட்டார் என்று கூறுகிறார்களா” என்று ஆரம்பத்திலேயே கேள்விகளால் நம்மை எதிர்கொண்டார்.

எம்.ஜி.ஆருடைய விருப்பம் மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்பதுதான் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தித்திருக்கிறாரே?

“அமைச்சர் செல்லூர் ராஜு மிகப்பெரிய பச்சை பொய்யை சொல்லியிருக்கிறார். தெர்மாக்கோலைக் கொண்டு தண்ணீர் ஆவியாதலை தடுத்து நிறுத்த முடியும் என்ற அசகாய சூரனிடம் இதைத் தவிர வேறு எந்த உண்மையையும் எதிர்பார்க்க முடியாது. திருச்சியைத்தான் தலைநகர் ஆக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் சொன்னது உலகத்துக்கே தெரிந்த உண்மை. அது மிகப்பெரிய விவாதமாக மாறியிருந்தது. அந்த சமயத்தில் செல்லூர் ராஜு அரசியலுக்கு வராமல் சினிமா கொட்டகைகளில் சீட்டு கிழித்துக் கொண்டிருந்திருப்பார்.”

கிட்டத்தட்ட ஆட்சி முடிய இன்னும் 9 மாதங்களே இருக்கும் சூழலில் 10 வருடங்களாக ஆட்சியில் இருந்தவர்கள், இப்போது ஏன் இந்த கோரிக்கையை முன்வைக்கிறார்கள்?

“இது பிரச்சினைகளை திசைதிருப்பும் ஒரு யுக்தியாகவே தெரிகிறது. காரணம், இன்றைக்கு தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் மிகக் கடுமையான சோதனையை எதிர்கொண்டுள்ளனர். தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் குறைந்தபட்சம் இரண்டரை கோடி பேர் அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் சூழலுக்கு வந்துவிட்டனர். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாத தர்மசங்கடமான நிலைமை இருக்கிறது. இந்த பாதிப்புகளில் இருந்து மீள இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் எனத் தெரியவில்லை. உணவுக்கு வழிசெய்யாத அரசு, இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்புவதற்கு எடுத்துள்ள முயற்சி என்று நான் கருதுகிறேன். இவர்களின் நோக்கம் மதுரையை தலைநகராக்க வேண்டும் என்பதல்ல”

எந்த ஊரை தலைநகராக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் இலக்கியங்களில் ஊர் எனப்படுவது உறையூர்தான் என்று எழுதிவைத்திருக்கிறார்கள். அதுகூட வேண்டாம். பூகோள அடிப்படையில் தமிழகத்தின் மையப்பகுதி என்பது திருச்சிதான். மாநிலத்தின் அனைத்து பகுதியிலிருந்து இருந்து வருபவர்களுக்கு திருச்சிதான் மையப்பகுதி. மதுரை எனக்கு வேண்டாத ஊர் என்று சொல்லவரவில்லை, அது முக்கியமான நகரம்தான். ஆனால், தலைநகர் என்ற வசதியைப் பொறுத்து பார்த்தோமேயானால் மதுரையை விட திருச்சிதான் பொருத்தமான இடம்”

மதுரையில் எய்ம்ஸ் வரப்போகிறது, உயர் நீதிமன்றக் கிளை உள்ளது, 150 கி.மீட்டரில் துறைமுகம் உள்ளது என தலைநகராக்குவதற்கான காரணங்களை கூறுகிறார்களே?

“இதுபோன்ற அனைத்தும் சென்னையில் மட்டுமே இருப்பதால்தானே அங்கு பிரச்சினைகள் அதிகமானது. அதனால்தானே தலைநகரை மாற்ற வேண்டும் எனக் கூறுகிறார்கள். தண்ணீர் வசதியைப் பொறுத்தவரை வைகையை விட காவிரிதான் அதிக நீர்பிடிப்புள்ள பகுதி. ரயில்வே, விமான நிலையம் என அனைத்துமே திருச்சியை மையப்படுத்தி உள்ளதே. துறைமுகம் என்று எடுத்துக்கொண்டால் கூட மதுரையிலிருந்து தூத்துக்குடியை விட, திருச்சியிலிருந்து நாகைதான் அருகில் உள்ளது. தலைநகருக்கு அனைத்து வசதிகளும் உள்ள இடம் திருச்சிதான்” என்று திருச்சியை தலைநகராக்க வேண்டும் என்ற வாதங்களை முன்வைத்துள்ளார்.

சென்னையில் அதிகரிக்கும் மக்கள் தொகை நெருக்கம், குடிநீர் பிரச்சினைகள், போக்குவரத்து நெரிசல் ஆகிவற்றை குறைக்க இரண்டாவது தலைநகரம் அவசியமான ஒன்றுதான் என்கிறார்கள் பொதுமக்கள்.

 

https://minnambalam.com/politics/2020/08/19/36/the-tamilnadu-second-capital-issue

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.