Jump to content

வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை.!

IMG-20200916-124911.jpg

பெரிய பரந்தன் கதை

இந்த வரலாற்றை ஏற்கனவே நான் எழுதி வணக்கம் லண்டன் இணையத்தளத்தில் தொடர்ச்சியாக வந்தது. அதனை லண்டனில் இருந்து வெளிவரும் “ஒரு பேப்பர்” பத்திரிகை தொடர்ந்து  பிரசுரித்தது. வணக்கம் லண்டன் இணையத்தளத்தில் வந்ததை வாசித்து அதனை ரசித்த அப்போதைய “சுடரொளி வாரமலர்” ஆசிரியர் மூன்று கிராமங்களின் கதை என்ற தலையங்கத்தை “அது ஒரு அழகிய நிலாக்காலம்” என்ற பெயரில் மாற்றி தொடராக வெளியிட்டார்.

எனது தந்தையும் நானும் பிறந்து தவழ்ந்து வளர்ந்த ” பெரிய பரந்தன்”  கிராமத்தைத் பற்றி முழுமையாக எழுதவில்லை என்ற மனக்குறை எனக்கு இருந்தது. எனவே பெரிய பரந்தன் வரலாற்றை ஒரு கதை வடிவில் எழுதி மூன்று கிராமங்களின் கதையை விரும்பி இரசித்த வாசகர்களுக்கு வழங்கலாம் என்ற எனது விருப்பத்தை ” வணக்கம் லண்டன்” இணையத்தளத்தின் இயக்குனரிடம் தெரிவித்தேன். அவரும் மனமுவந்து சம்மதித்தார்.

இதோ “பெரிய பரந்தன்” கதை

img_1366.jpg

மேற்கே கொல்லனாறு, தெற்கே எள்ளுக்காடு, கிழக்கே நீலனாறு, வடக்கே வடக்குக் காடு என்பவற்றிற்கிடையே அமைந்திருந்த காடு, மீசாலையிலிருந்து வந்த தம்பையராலும், அவரது உறவினர்களாலும், தம்பையரின் உறவினர்களும் இணைபிரியாத நண்பர்களாகவுமிருந்த ஆறுமுகம், முத்தர்  என்பவர்களாலும் வெட்டப்பட்டு கழனியாக்கப்பட்டு பின்னர் வளம் கொழிக்கும் கிராமம் ஆக மாறிய இடமே பெரிய பரந்தன் ஆகும்.

1900 ஆம் ஆண்டளவில் ஒருநாள்….

தம்பையர், ஆறுமுகம், முத்தர், தம்பையரின் நெருங்கிய உறவினர்களாகிய ஐந்து பேர் அடங்கிய இளைஞர் குழு காடு வெட்டத் தேவையான கத்தி, கோடரி, மண்வெட்டி அலவாங்கு, சுட்டியல், முதலியவற்றையும் இரண்டு கிழமைக்கு சாப்பாட்டிற்கு தேவையான அரிசி, மா, பருப்பு, சீனி, உப்பு, தூள், புளி என்பவற்றையும் பொதிகளாக கட்டிக் கொண்டு இரண்டு மாட்டு வண்டில்களில் மீசாலையிலிருந்து அதி காலையில் புறப்பட்டு கச்சாய் துறைமுகத்தை அடைந்தனர். இவர்களில் சிலர் தமது வளர்ப்பு நாய்களையும் வண்டியின் பின்னால் ஓடிவரச் செய்தனர்.

கச்சாய் துறைமுகத்தில் செருக்கன் கிராமத்தைச் சேர்ந்த இருவர் இரண்டு தோணிகளுடன் காத்திருந்தனர். தம்பையரும் குழுவினரும் இரண்டு பிரிவாக இரண்டு தோணிகளிலும் ஏறினர். ஆறுமுகமும் முத்தரும் தம்பையர் ஏறிய தோணியிலேயே ஏறினர். சில நாய்கள் தோணிகளில் ஏறி இருந்தன. சில உரிமையாளர்கள் கயிற்றால் கழுத்தில் கட்டி பிடித்திருக்க தோணியுடன் நாய்கள் நீந்திவர தோணிகள் புறப்பட்டு  சுட்டதீவு துறையை நோக்கி பயணத்தை தொடங்கின.

நாய்கள் களைத்த போதும் குளிரில் நடுங்கிய போதும் உரிமையாளர்கள் அவற்றைத் தூக்கி தோணியில் விட்டனர். வெய்யில் சுள்ளென்று சுடத் தொடங்க தோணிகள் சுட்ட தீவு கரையை அடைந்தன. நாய்கள் சுட்டதீவின் சுடு மணலில் உருண்டு பிரண்டு தம்மை சூடேற்றிக் கொண்டன.

எல்லோரும் பொதிகளை இறக்கி சுட்டதீவு பிள்ளையார் கோயிலின் அருகே இருந்த ஒரு வேப்பமர நிழலில் கொண்டு போய் வைத்தனர். ஆறுமுகம் கோவில் பூசாரிகள் வெட்டி பயன் படுத்திய பூவலில் (பழைய நூல்களில் “கூவல்” என்றும் கேணி போல வெட்டப்பட்ட கிணறுகளை அழைத்தனர்) நீரை அள்ளி ஒரு பானையில் கொதிக்க வைத்தான். அதனுள் தேயிலைத் தூளை போட்டான். பின்புறம் செருக்கப்பட்ட சிரட்டைகளில் தேனீரை வார்த்து ஒவ்வொரு பனங்கட்டி துண்டுடன் எல்லோருக்கும் பரிமாறினான்.

தேனீர் குடித்து களையாறிய தம்பையருடனும் குழுவினருடனும் பிடித்த மீன்களுடன் கரை சேர்ந்திருந்த செருக்கன் மக்கள் உரையாடினார்கள். குழுவினர் தாம் காடு வெட்டி கழனியாக்கி வாழ வந்ததாக கூறினார்கள். செருக்கன் மக்கள் மிகவும் மகிழ்ந்து நல்ல விடயம் என்று பாராட்டினார்கள். தாம் அயற்கிராமமாகிய செருக்கனில் வசிப்பதாகவும் அவர்களுக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் உதவி செய்ய எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறினார்கள். சிறிது தூரம் தெற்கே நடந்து ஒரு சிறிய மரத்தில் ஏறி பார்த்தால் தெற்கில் ஒரு மிகப்பெரிய புளியமரம் தெரியும் என்றும்  அப்புளிய  மரத்தை நோக்கி போனால் பெரிய பரந்தன் காடு வரும் என்றும் கூறினார்கள். குஞ்சுப்பரந்தன், செருக்கன் மக்கள் காட்டில் திசை மாறி தவிக்கும் போது அந்த புளியமரம் தான்  வழிகாட்டி உதவும், அதனால் தாங்கள் அப்புளிய மரத்தை “குறிப்பம் புளி” என்று அழப்பதாகவும் கூறினார்கள்.

தம்பையரும் குழுவினரும் பொதிகளை சுமந்தபடி காட்டுப்பாதையில் நடந்தனர். வழியில் மான்கள், மரைகள், குழுமாடுகளைக் கண்ட நாய்கள் குரைத்தபடி அவற்றை துரத்திப் பார்த்துவிட்டு களைத்தபடி மீண்டும் வந்து குழுவினருடன் இணைந்துகொண்டன. குழுவினரைச்சுற்றி ஓடியபடி வந்த நாய்கள் ஒரு பெரிய உடும்பைக் கண்டன. எல்லாமாக அதை சுற்றி வளைத்தன. அது பயந்து போய் அருகே இருந்த ஒரு புற்றுக்குள் புகுந்தது. முழுவதுமாக உள்ளே நுழைய முடியவில்லை. நாய்களோ விடாது குரைத்தன. ஆறுமுகம் தனது பொதியை இறக்கி வைத்து விட்டு உடும்பை லாவகமாகப் பிடித்து வாலைச்சுற்றி கட்டி கூட வந்த ஒருவரிடம் கொடுத்தான். மதியம் நல்ல சாப்பாடு என்று எல்லோரும் மகிழ்ந்தனர். தம்பையரும் இன்னொருவரும் மச்சம் சாப்பிடுவதில்லை. மற்றொருவர் உடும்பு இறைச்சி மட்டும் சாப்பிடுவதில்லை. அவர்களுக்கு பருப்புக்கறி மட்டும் தான் இன்று. ஏனைய ஐந்து பேருக்கும் பொதிகளை சுமந்து நடந்த களைக்கு முறையான சாப்பாடு காத்திருந்தது.

 சூரியன் உச்சத்தில் வரவும் குழுவினர் குறிப்பம் புளியை அடைந்தனர். புளிக்கு அண்மையாக ஒரு நீர்நிலை நீர்நிறைந்து காணப்பட்டது. அருங்கோடைக்கு காட்டு விலங்குகளும் அங்குதான் நீர் அருந்த வரும் என்பதை குழுவினர் புரிந்து கொண்டனர். நீர் நிலைக்கு கிட்டிய தூரத்தில் காணப்பட்ட காய்ந்த யானை லத்திகள் அது உண்மை தான் என பறை சாற்றின. குறிப்பம் புளிக்கும் நீர்நிலைக்கும் இடையில் காணப்பட்ட ஒரு வெளியான இடத்தில் பொதிகளை வைத்து விட்டு அந்த இடத்தில இருந்த புற்களை செருக்கியும் சிறு பற்றைகளை வெட்டியும் துப்பரவாக்கத் தொடங்கினர். ஆறுமுகம் உடும்பை உரித்து துப்பரவு  செய்தான். தம்பையர் மண்ணிலே இரண்டு அடுப்புக்களை எவ்வாறு வெட்டுவது என்று ஒருவருக்கு காட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். ஒருவர் நீர்நிலைக்கு அருகே ஒரு சிறிய பூவல் வெட்டினார். அதில் நீர் ஊறி சிறிது நேரத்தில் பூவல் நிரம்பிவிட்டது.

IMG-20200916-130652.jpg

ஆறுமுகம் பூவலிலிருந்து நீர் கொண்டுவந்து உடும்புக்கறியைக் காய்ச்ச, முத்தர் ஒரு பானையில் சோறும் ஒரு சிறிய சட்டியில் பருப்புக் கறியையும் காய்ச்சி விட்டார். ஒருவர் காவலிருக்க ஏனையவர்கள் நீர்நிலைக்குச் சென்று தம்மை சுத்தம் செய்து கொண்டு வந்தனர். காவல் இருந்தவர் போய் சுத்தம் செய்து வரும் வரை எல்லோரும் வட்டமாக இருந்து மறு நாள் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டனர். சாப்பிட்டபின் எழுந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தனர், ஒரே காடு தான் தென்பட்டது. பின் இருவர்  மூவராக பெரியபரந்தன் காட்டை சுற்றி பார்க்க சென்றனர். எசமான்கள் கொடுத்த சாப்பாட்டை உண்ட நாய்களும் அவர்களுக்கு துணையாக சென்றன. முயல்கள், நரிகளைக் கண்ட நாய்கள் குரைத்த சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது.

இரவு வந்ததும் தாம் துப்பரவு செய்த வெளியின் நான்கு பக்கமும் பட்ட காட்டு மரங்களைக் போட்டு நெருப்பு எரித்தனர். நெருப்பு வெளிச்சத்திற்கும் சூட்டிற்கும் பயந்து காட்டு விலங்குகள் வரமாட்டா என்பதை குழுவினர் அறிந்து வைத்திருந்தனர். இரவு வந்ததும், மதியம் எஞ்சியிருந்த சோறு கறியைக் குழைத்து தாமும் பகிர்ந்து உண்டு நாய்களுக்கும் வைத்தனர். பிரயாணக் களைப்பு, நடந்த களைப்பு, பொதிகளை சுமந்த களைப்பு, வெளியைத் துப்பரவாக்கிய களைப்பு எல்லாம் சேர பொதிகளைச் சுற்றி வைத்து நாய்களையும் காவல் வைத்து வெளியின் நடுவிலே எல்லோரும் படுத்து உறங்கினர். நாய்கள் சுற்றி சுற்றி வந்து காவல் காத்தன. சிறுத்தைகள் தூரத்தில் உறுமிய சத்தமோ, யானைகள் பிளிறிய சத்தமோ, ஆந்தைகள் அலறிய சத்தமோ, ஏனைய விலங்குகளும் பறவைகளும் போட்ட சத்தமோ அவர்களின் காதுகளில் விழவில்லை. வானமே கூரையாக எல்லோரும் உலகத்தை மறந்து தூங்கினார்கள். முதல் நாள் பொழுது இவ்வாறு கழிந்தது.

(பெரிய பரந்தன் உருவாகிய வரலாறு கதை வடிவில் தொடரும்)

மகாலிங்கம் பத்மநாபன் - ஓய்வு நிலை அதிபர், குமரபுரம், பரந்தன். 

https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 2 | பத்மநாபன் மகாலிங்கம்

thumbnail_PHOTO-2020-09-13-00-27-18.jpg

( இது நூறாண்டுகள் கடந்தும் வாழும் குறிப்பம் புளி மரம். காட்டிலே வழி தவறி தவித்த பலருக்கு வழி காட்டி அழைத்து வந்த புளிய மரம். யுத்த காலத்தில் ஷெல் அடிகளால் கிளைகளை இழந்து, காயம் பட்ட போதும், இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.)

கதை தொடர்ச்சி ..

எல்லோரும் நித்திரை விட்டு எழுந்தனர். காட்டுக்குள் சென்று காலைக் கடன் கழித்து விட்டு வந்து நீர்நிலையில் கால், கை கழுவிக் கொண்டனர். வேப்பம் தடிகளை முறித்து பற்களை விளக்கிக் கொண்டனர். வாய் கொப்பளித்து, முகம் கழுவி புத்துணர்ச்சியுடன் வந்தனர்.

காட்டுச் சேவல்கள் கூவிய சத்தத்திலும் கௌதாரிகள் கத்திய சத்தத்திலும் முதலே எழுந்து விட்ட முத்தர் ஏனையவர்கள் தயாராகி வரும் போது கஞ்சி காய்ச்சி முடித்து விட்டார். எல்லோரும் தமது அழகாக செருக்கப்பட்ட சிரட்டைகளில் கஞ்சியை வார்த்து ஊதி ஊதி குடித்தனர்.

தம்பையர் சிறு வயதில் தந்தையாருடன் பொறிக்கடவை அம்மன் கோவிலுக்கு வரும் போதெல்லாம் செழிப்பான குஞ்சுப்பரந்தன் வயல்களையும் தென்னஞ்சோலைகளையும் பார்த்து மகிழ்வார். அந்த மக்கள் மீசாலை, சாவகச்சேரி, நுணாவில், சங்கத்தானை போன்ற இடங்களில் மிகவும் வசதியாக வாழ்வதை அவர் அவதானித்திருக்கின்றார்.

நீலனாறு, கொல்லனாறு என்பவற்றிற்கிடையே இருக்கும் காட்டையும் பார்த்திருக்கின்றார். இந்தக் காட்டை வெட்டி கழனியாக்கி பெரிய பரந்தன் என்று பெயரும் சூட்டி, தாமும் தனது நெருங்கிய உறவுகளும் செல்வத்துடனும் செல்வாக்காகவும்  ஏன் வாழ முடியாது? என்ற எண்ணம் அடிக்கடி வரும். முதலில் இருந்தது குஞ்சுப் பரந்தன் என்பதால் பிறகு வருவதை பெரிய பரந்தன் என்று அழைக்கும் முடிவை நண்பர்கள் எடுத்திருந்தனர்.

தனது நெருக்கமான நண்பர்களான முத்தருடனும் ஆறுமுகத்துடனும் இது பற்றி அடிக்கடி கதைப்பார். முத்தரும் தம்பையர் போல மட்டுவில் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் சிறுவயதில் படித்தவர். ஆறுமுகம் அதிகம் படிக்காதவராயிருந்தாலும் அனுபவ அறிவு நிரம்ப பெற்றவர். தம்பையரின் கனவு அவர்களையும் தொற்றிக் கொண்டது.

தம்பையர் ஒருமுறை தனது தந்தையாராகிய தியாகருடன் காட்டைச் சுற்றிப் பார்க்கும் போது ஒரு மேட்டுக் காணியையும் அதனருகில் பள்ளக்காணியையும் அவதானித்தார். இப்போது காட்டை சுற்றிப் பார்த்த போது, அது தான் சிறுவயதில் தந்தையாருடன் வந்து பார்த்த இடம் என்பதை புரிந்துகொண்டார். அந்தக் காணியை அவர் தனக்கென தெரிவு செய்து கொண்டார். ஏனையவர்களும் தமக்கு விருப்பமான பகுதியை தெரிந்தெடுத்துக் கொண்டனர்.

forest.jpg

தம்பையருடைய காணியை துப்பரவு செய்து, தாங்கள் யாவரும் தங்கியிருக்க கூடிய ஒரு பெரிய  கொட்டில் போடுவது என்பது ஊரில் இருந்து வரும் போதே தீர்மானித்த விடயம். எனவே மூன்று பேர் கொட்டில் போடும் காணியை துப்பரவு செய்ய, ஏனையவர்கள் வடக்கு காட்டில் கப்புக்கள், வளைத்தடிகள், பாய்ச்சுத்தடிகள் வெட்ட சென்றனர். முத்தர் ஓரளவு தச்சு வேலை தெரிந்தவர் என்பதால் அவர் காட்டிற்கு சென்றவர்களுடன் சேர்ந்து சென்றார்.

தம்பையரும் ஆறுமுகமும் இன்னொருவரும் தம்பையருடைய காணியை துப்பரவு செய்ய சென்றனர். ஆறுமுகத்தாருக்கு இவர்கள் எல்லோருக்கும் சமைக்கும் பொறுப்பும் அன்று வழங்கப்பட்டது. சுழற்சி முறையில் ஒவ்வொருவரும் சமைப்பது என்பதுவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயம் தான்.

ஆறுமுகம் அன்று சற்று முன்னரே சமைக்கச் சென்று விட்டார். அவர் போகும் வழியில் தான் முன்னரே பார்த்து வைத்த, பற்றைகளின் மேல் படர்ந்திருந்த தூதுவளைச் செடியில் சில இலைகளையும் பறித்துச் சென்றார். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு பருப்புக்கறியும் தூதுவளைச் சம்பலும், ஏனையவர்களுக்கு மேலதிகமாக கருவாட்டுக் கறியும் வைத்தார். மத்தியான வேளை தம்பையரும் மற்றவரும் வந்ததும் அவர்களை சாப்பிடும்படி கூறிவிட்டு, ஆறுமுகம் தனது நாயை துணையாக வைத்துக் கொண்டு ஏனையவர்களுக்கான சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வடக்கு காட்டிற்குள் சென்றார்.

man-dog-heaven.jpg

வேறு யாரும் அந்த பகுதியில் இல்லாத படியால் நாய்களின் குரைக்கும் சத்தத்தை வைத்து மற்றவர்களை கண்டு பிடிக்கலாம் என்றும், தவறினாலும் தனது நாய் தன்னை அவர்களிருக்கும் இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதும் ஆறுமுகத்தாருக்கு தெரியும். அந்த நாளில் நாய்கள் தான் மனிதனுக்கு தோழனாக, இருந்து பல தடவைகள் உதவியிருக்கின்றன. சிறிது தூரம் சென்றதும் ஆறுமுகம் கையை வாயில் வைத்து சத்தமாக விசிலடித்தார். உடனே நாய்கள் குரைக்கும் சத்தமும், அதைத் தொடர்ந்து அவர்களில் யாரோ ஒருவர் பதிலுக்கு சீக்காயடிக்கும் சத்தமும் கேட்டன.

வெட்டிய மரங்களையும் தடிகளையும் ஓரிடத்தில் வைத்துவிட்டு, அருகே காணப்பட்ட நீர்நிலையில் மேல் கழுவி ஆறி இருந்தவர்களுக்கு ஆறுமுகத்தின் சாப்பாடு அமிர்தம் போன்று இருந்தது. ஆறுமுகமும் அவர்களோடு சாப்பிட்டார். எல்லோரும் முதல் நாளின் உடும்புக்கறியைப் பற்றி ஆர்வத்துடன் கதைத்தனர். மரங்களையும் தடிகளையும் வெட்ட இன்னும் ஒருநாள் தேவைப்படும் என்று கணித்த ஆறுமுகம் மறுநாள் அவர்களுக்கு ஏதாவது சுவையான கறி வழங்க வேண்டும் என்று மனதில் உறுதி பூண்டார்.

சாப்பாடு கொண்டு செல்லும் போது பாதுகாப்புக்கு ஒரு நன்கு கூராக்கப்பட்ட கத்தியை ஆறுமுகம் கொண்டு சென்றிருந்தார். திரும்பி வரும் வழியில் கட்டுவதற்கு ஏற்ற கொடிகளை வெட்டி எடுத்துக் கொண்டார்.

 நான்கு அடி நீளமான தடிகள் சிலவற்றையும் வெட்டித் தூக்கிக் கொண்டார். அன்று இரண்டு “டார்” அமைப்பதென்று முடிவெடுத்து விட்டார்.

டார் அமைத்தல்

ஆறுமுகம் நான்கு தடிகளைச் சதுரமாக தான் கொண்டு சென்ற தாவரத்தின் கொடியினால் கட்டினார். குறுக்காக அரை அடி இடைவெளியில் தடிகளைக் கட்டினார். பின் அவற்றிற்கு செங்குத்தாக அரை அடி இடைவெளியில் தடிகளைக் கட்டினார். இதே போன்று இன்னொரு சதுர அமைப்பையும் கட்டிக்கொண்டார். கொடிகள் மிகவும் பலம் மிக்கவை. இரண்டு மூன்று கொடிகளை திரித்துவிட்டால் மாடுகளையும் கட்டி வைக்க கூடிய இன்னும் பலமான கயிறு கிடைத்து விடும்.

Screenshot-2020-09-18-11-03-23-451-org-m

கௌதாரிகளும் காட்டுக் கோழிகளும் வரக்கூடிய இரண்டு இடத்தை தேர்ந்தெடுத்தார். சதுரமாக கட்டிய அமைப்பை இரண்டு இடத்திலும் ஒவ்வொன்றாக கொண்டு சென்று வைத்தார். குழைகளை வெட்டி அந்த சதுரத்தின் மேல் பரப்பி கட்டினார். பின் ஈரமான களி மண்ணை குழைகளின் மேல் போட்டு மெழுகி விட்டார்.

இப்போது “டார்” தயார். இனி அதனை பொறிவாக கட்டுவதிலே தான் நுட்பம் உண்டு. ஒரு தடியை சற்றே வெளிப்புறம் சாய்வாக, தட்டி விட்டவுடன் வெளியே விழத்தக்கதாக நட வேண்டும். டாரின் ஒரு பக்கத்தை நிலத்தில் வைத்து எதிர்ப் பக்கத்தின் நடுப்பகுதியை முன்னரே நட்ட தடியுடன் கட்ட வேண்டும். கிட்டத்தட்ட ஒரு கப்பலில் பாயை கம்பத்துடன் கட்டுவது போல.

ஆறுமுகம் தான் அமைத்த டாரை தடியில் கட்டி விட்டார்.

ஆறுமுகம் ஏற்கனவே சிறிது அரிசியை மடியில் கட்டி வந்திருந்தார். அவற்றை இரண்டு பகுதியாக பிரித்து இரண்டு டார்களின் கீழும் தூவி விட்டார். இனி வாய்ப்பைப் பொறுத்தது. கால்களால் கௌதாரிகளோ, காட்டு கோழிகளோ நிலத்தைக் கீறி மேயும் போது அந்த அதிர்வில் தடி வெளிப் புறம் விழ, டார்  அவற்றின் மீது  விழுந்து விடும்.

ஆறுமுகத்தார் சற்று தாமதித்தே வந்ததை அவதானித்த தம்பையர் அவர் மரம் வெட்டுபவர்களுக்கு உதவி விட்டு வருகிறார் என்று எண்ணிக் கொண்டார். காட்டிலுள்ளவர்களோ ஆறுமுகம் உடனே திரும்பி தம்பையருக்கு உதவப் போயிருப்பார் என நினைத்துக் கொண்டனர். ஆறுமுகம் “டார்” பொறி வைத்ததை ஒருவருக்கும் கூறவில்லை.

அடுத்தநாள் காலை கஞ்சி குடித்துவிட்டு காட்டுக்கு போபவர்கள் போய் விட்டார்கள். ஆறுமுகம் தம்பையரிடம் தான் நீர்நிலையின் அருகே வல்லாரைக் கீரை படர்ந்திருக்கக் கண்டதாகவும் அவற்றுடன், முடக்கொத்தான் இலைகளையும் பிடுங்கி வந்தால் இரவில் இரசம் வைத்துக் கொடுக்கலாம் என்றும் வேலை செய்பவர்களின் உடல் உழைவுகள் பறந்தோடி விடும் என்றும் கூறி விட்டு காட்டுக்குள் சென்றார். தான் சொன்னது போல வல்லாரை இலைகளையும் முடக்கொத்தான் இலைகளையும் சேகரித்துக் கொண்டார்.

ஆறுமுகம் சற்று பதற்றத்துடனேயே முதலாவது டார் இருக்கும் இடத்தை அடைந்தார். டார் விழுந்திருந்தது. காற்றிற்கும் விழுந்திருக்கும். விசப் பாம்புகள் நடமாடியும் விழுந்திருக்கலாம். பறவைகளாலும் விழுந்திருக்கலாம்.

பறவைகளாயிருந்தால் டாரை தூக்க உயிருடன் இருப்பவை ஓடிவிடக் கூடும். விச ஜந்துக்களாய் இருந்தால் கையை விட்டுப் பார்க்க கடித்து விடக் கூடும்.

ஆறுமுகத்தார் டாரின் மேலேறி நின்று நன்கு மிதித்தார். ஆறுமுகம் உயரம் பெருப்பமான மனிதர். அவரின் மிதியில் எந்த விலங்கும் இறந்து விடும். ஆறுமுகம் டாரைத் தூக்கினார். அங்கே மூன்று கௌதாரிகள் விழுந்திருந்தன. அடுத்த டாரிலும் இரண்டு கௌதாரிகள் விழுந்திருந்தன. மதியம் வந்து டாரை திருத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

விறு விறுவென்று நடந்து தம்பையர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று நடந்ததைக் கூறி, தான் விரைவில் சென்று சமைக்க வேண்டும் என்று கூறிவிட்டு, இலைகளையும் கௌதாரிகளையும் பத்திரமாக வைத்துவிட்டு பற்றைகளை வெட்டத் தொடங்கினார். தம்பையரோ ஆறுமுகம் கூறியதைக் கேட்டு புன்முறுவலுடன் தலையை ஆட்டினார். தம்பையர் கண்டபடி கதைக்க மாட்டார்.

ஆனால் அவர் ஒரு விடயத்தைச் சொன்னால் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.

ஆறுமுகம் வேளையுடன் சென்று கௌதாரிகளை துப்பரவு செய்து கறி காய்ச்சி, வல்லாரைச் சம்பல் அரைத்து, ஈரச்சேலையில் சுற்றி வைத்திருந்த முருக்கங்காயை சைவர்களுக்காக காய்ச்சி முடிய தம்பையரின் குழுவினரும் வந்து சேர்ந்தனர். அவர்களைச் சாப்பிடச் சொல்லிவிட்டு, ஆறுமுகம் முதல் நாளைப் போலவே காட்டில் இருப்பவர்களுக்கு சாப்பாடு கொண்டு போனார். இன்று கௌதாரிக் கறி என்று அறிந்ததும் அவர்கள் துள்ளிக் குதித்தார்கள். தாங்களும் வந்து உதவி செய்து இன்னும் மூன்று டார்களை அமைப்போம் என்று உற்சாகமாக கூறினார்கள்.

தொடரும்..

https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான பதிவுகள் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 3 | பத்மநாபன் மகாலிங்கம்

ttttt.jpg

மூன்றாம் நாளும் கப்புகளையும் வளைகளையும் பாய்ச்சுத் தடிகளையும் வெட்டினர். தம்பையர் தனது வயலை “தியாகர் வயல்” என்று தனது தந்தையாரின் பெயரில் அழைக்கப் போவதாக கூறினார்.

உடனே இன்னொருவர் “குழந்தையன் மோட்டை” என்று தனது மூதாதையரின் பெயரையும் தனது காணியில் இருந்த நீர் நிலையையும் இணைத்து பெயரிடப் போவாக சொன்னார். மற்றொருவர் “பொந்து மருதோடை” என்று தனது காணியில் நின்ற பொந்துள்ள பெரிய மருத மரத்தையும் தனது காணிக்கு அருகே ஓடிய ஓடையையும் சேர்த்து அழைக்க விரும்பினார்.

இப்போது இரவில் இவ்வாறு பெயர் வைப்பதுடன் தமது காணியை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்ற சிந்தனை ஏற்படக்கூடியதாக தம்பையர் ஏதாவது கூறி உற்சாகப் படுத்தி கொண்டேயிருந்தார்.

பனைகள் வந்த விதம் தெரியவில்லை. ஆனால் தம்பையர் குழு வந்த போது பனங்கூடல்கள் இருந்தன

அடுத்த நாள் மூவர் குறிப்பம் புளிக்கு அருகே இருந்த பனங்கூடலில் சில பனை மரங்களில் ஏறி ஓலைகளை வெட்டிப் போட கீழே நின்ற மற்றவர்கள் அவற்றை பாடாக மிதித்து அடுக்கி வைத்தனர். பனை ஓலைகள் கொட்டில்களை வேய்வதற்கு பயன் படும். இன்று சமையல் பொறுப்பு சைவ உணவு உண்பவருக்கு வந்தது.

அவர் சுட்டதீவிலிருந்து நடந்து வந்த போது வழியில் காட்டில் விளையும் வட்டுக் கத்தரிக்காய்களையும் குருவித் தலைப் பாகற்காய்களையும் கண்டிருந்தார். பாகற்காய் சிறிதாக குருவியின் தலை போன்றிருந்தபடியால் அந்தப் பெயர். அவர் பாகற்காய் குழம்பையும், வட்டுக்கத்தரிக்காயை அடித்து விதைகளை அகற்றி, பின் தேங்காய் எண்ணெயில் பொரித்தும், காட்டில் பறித்த மொசுமொசுக்கை வறையும் ஆக்கியிருந்தார். எல்லோரும் ரசித்து உண்டனர்.

இப்போது காடு பற்றிய பயம் அவர்களுக்கு போய் விட்டது. இடைக்கிடை சிறுத்தைகள் உறுமிய சத்தம் தூரத்தில் கேட்கத் தான் செய்தது. யானைகளும் மனித வாடையை நுகர்ந்து விலகி விட்டன. காடு, தன்னை அறிந்த மக்களுக்கு நீர், உணவு வழங்கி காப்பாற்றும் என்பதையும் உணர்ந்து விட்டனர்.

27246282-768x379.jpg

செருக்கன் மக்களும் தாம் வாக்களித்த படி உதவ முன் வந்தனர். இவர்களின் கோரிக்கைப்படி மூன்று மாட்டு வண்டில்களைக் கொண்டு வந்தனர். வரும்போது அன்று பிடிபட்ட உடன் மீன்களுடன் வந்திருந்தனர். இருவர் அவர்களுக்கும் தங்களுக்கும் சேர்த்து சமையல் செய்ய ஆரம்பித்தனர்.

ஏனைய ஆறு பேரும் கப்புக்கள், வளைகள், பாய்ச்சுத்தடிகள், பனை ஓலைகள் முதலியவற்றை ஏற்றி தம்பையரின் காணிக்கு கொண்டு வந்தனர். மத்தியானம் சாப்பிடும் போது தான் சற்று ஓய்வு. முழுவதையும் ஏற்றி முடிய பொழுதும் சாய்ந்தது. செருக்கன் உறவுகளை நன்றி கூறி அனுப்பி வைத்தனர்.

வெட்டி ஏற்றிவந்த கப்புகள், வளைகள், பாய்ச்சுத்தடிகள் தம்பையரது காணியில் கொட்டில்களை போட்டு, மிகுதியில்  இன்னும் மூவரின் காணிகளில் கொட்டில்களை போடப் போதுமானவை. அடுத்த நான்கு நாட்களும் தம்பையரின் காணியில் யாவரும் படுத்து உறங்கக் கூடிய பெரிய கொட்டில் ஒன்றும், சமைப்பதற்கான கொட்டில் ஒன்றும் போடத் தேவைப்பட்டது.

கொட்டில் போட்டு, வேய்ந்து, உள்ளே மண் போட்டு சமன்படுத்தி அடித்து இறுக்கி, மெழுகி முடித்தார்கள். அன்றிரவு அவர்களின் பொருட்கள் எல்லாம் கொட்டிலுக்கு வந்து சேர்ந்தன. இப்போது ஒரு வீட்டில் வாழுகின்ற பாதுகாப்பு உணர்வு ஏற்பட யாவரும் நிம்மதி அடைந்தனர்.

இப்போது தான் தாங்கள் வெளியில் படுத்த பொழுது பயந்த கதைகளை ஒவ்வொருவரும் கூறினர். இரவில் சரசரத்த சத்தத்தைக் கேட்டு பாம்பு தான் கடிக்க வருகுது என்று ஒருவர் பயந்திருந்தார். கரடி வந்து கண்களைத் தோண்டி எடுத்து விடுமோ என்று இன்னொருவர் பயந்திருந்தார். தாங்கள் பயந்து நடுங்கியதை வெளிக் காட்டாது தாம் பயப்படவே இல்லை என்று வீரம் பேசியவர்களும் இருந்தார்கள்.

எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. காலை கை, கால், முகம் கழுவி திருநீறு பூசும் போது தாங்கள் கோவிலுக்கு போய்க் கனநாளாகின்றது என்று சிலர் முணுமுணுத்தார்கள். இத்தக் குறை அவர்கள் மனதில் வந்து விடக்கூடாது என்பதில் தம்பையரும், முத்தரும், ஆறுமுகத்தாரும் கவனமாக இருந்தார்கள். முத்தர், பிள்ளையார் கோவிலுக்கு என்று ஒரு இடமும் காளி அம்மன் கோவிலுக்கு என்று ஒரு இடமும் தனது காணிக்கு அருகே பார்த்து வைத்திருந்தார்.

அடுத்த நாள் தம்பையர் தான் சமையல் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, கோயில்களுக்கு பார்த்து வைத்த இரு இடங்களையும் பற்றைகளை வெட்டி, செருக்கி துப்பரவாக்க அனுப்பி வைத்தார். அவர்கள் யாவரும் உற்சாகமாக அன்று முழுவதும் அந்த வேலையைச் செய்து முடித்தார்கள்.

ஆற்றிலே ஆண்டாண்டு காலமாக கிடந்து ஆற்று நீரினால் உருமாறி முக்கோண வடிவில் இருந்த ஒரு பெரிய கல்லை ஆறுமுகத்தின் தோளில் தூக்கி வைத்து தம்பையரும் முத்தரும் பிள்ளையாருக்கென ஒதுக்கிய காணிக்கு கொண்டு வந்தனர். அங்கு ஒரு பெரிய பாலை மரத்தின் கீழ் முத்தர் அதனை நாட்டி வைத்தார். வணங்குவதற்காக பிள்ளையார் கோவில் உருவாயிற்று.

இளைஞர்களில் இருவர் திருமணம் செய்யாதவர்கள். ஒருவருக்கு திருமணம் முற்றாகி இருந்தது இன்னும் மூன்று மாதங்களில் திருமணம். மற்றவர் தனக்கு என்று ஒரு காணியை வெட்டி, வாழ்வதற்கு அந்த காணியில் ஒரு கொட்டிலையும் போட்ட பின்னர் தான் அதைப் பற்றி யோசிக்கப் போவதாக கூறினார். தம்பையருக்கு விசாலாட்சியுடன் திருமணமாகி கணபதிப்பிள்ளை என்ற ஒரு மகனும் இருக்கின்றான். ஆறுமுகத்தார் திருமணம் செய்து இரண்டு வருட வாழ்க்கை நிறைவு பெற முன், அவர் மனைவி காய்ச்சலில் மூன்று நாள் தவித்து பரியாரியாரின் வைத்தியம் பலனின்றி இறந்து விட்டா. அவருக்கு இன்னும் அந்த துக்கம் மறையவில்லை. சகோதரிகளுக்காக மனதைத் தேற்றிக் கொண்டு நடமாடுகிறார்.

முத்தரின் மனைவி கர்ப்பிணியாக இருந்தார். பிள்ளைப் பேறுக்கான நாளும் நெருங்கி விட்டது. முத்தர் ஒரு முறை ஊருக்குப் போய் வரத் தீர்மானித்தார். தம்பையர் அவருடன் திருமணமான மற்ற மூவரையும் போய் வருமாறு கூறினார். உணவுப் பொருட்களும் முடிந்து விட்டன. அவற்றையும் எடுத்து வருமாறு கூறினார். திருமணம் முற்றாக்கப்பட்ட இளைஞன் தானும், போய் தாய் தகப்பனைப் பார்த்து வருவதாகக் கூறினான். மற்ற இளைஞன், அவன் தனக்கு முற்றாக்கி வைத்த பெண்ணைப் பார்க்கத் தான் அவசரப்படுகிறான் என்று கேலி செய்தான். தம்பையர் வழமை போல ஒரு புன்முறுவலுடன் அவனையும் போகுமாறு கூறினார்.

தம்பையரும் ஆறுமுகமும் இளைஞனுமாக மற்ற ஐவரையும் வழி அனுப்பி வைத்தனர். ஏற்கனவே செருக்கன் நண்பர்களிடம் சொல்லி வைத்ததால், அவர்களை சுட்டதீவு துறையிலிருந்து கச்சாய் துறைக்கு அழைத்துப் போக தோணிகள் காத்திருக்கும்.

தம்பையரும் குழுவினரும் காடழிப்பதற்கு உடலுழைப்புடன், அக்கினி பகவானையும் பயன் படுத்த தீர்மானித்திருந்தனர். வெட்டிய பற்றைகளையும் மரங்களையும் பெரிய பற்றைகளின் மேல் படினமாக போட்டு வைத்தனர். அவை காய்ந்த பின்னர் நெருப்பு வைத்தால் வெட்டிப் போட்ட பற்றைகளுடன் பெரிய பற்றைகளும் சேர்ந்து விளாசி எரியும். காடு வெட்டுவதன் அரைவாசி வேலையை தீ செய்துவிடும்.

தம்பையரும் ஆறுமுகமும் இளைஞனும் நன்கு காய்ந்திருந்த பற்றைகளை எரிக்கத் தொடங்கினர். அவை விளாசி எரியத்தொடங்கின. எங்கும் தீ. ஒரே புகை மண்டலம். பற்றைகளில் மறந்திருந்த முயல்கள், உடும்புகள், அணில்கள், கௌதாரிகள், கானாங்குருவிகள் முதலிய விலங்குகள் பதறியடித்துக் கொண்டு உயிரைத் காப்பாற்ற ஓடின.

ஐந்தாம் நாள் போனவர்களில் மூன்று பேர் மட்டும் திரும்பி வந்தனர். அவர்களுடன் போன ஐவரும் கூறிய புதினங்களால் துணிச்சல் பெற்ற, மேலும் நான்கு புதியவர்களும் வந்திருந்தனர். முத்தரின் மனைவிக்கு ஆண் குழந்தை கிடைத்துவிட்டது. வைத்திய சாலை நிர்வாகம் உடனே பெயர் வைக்குமாறு கூறியதால், முத்தர் தன்மகனுக்கும் கணபதிப்பிள்ளை என்ற தம்பையரின் மகனது பெயரையே வைத்தார்.

அவர்களது நட்பு அவ்வளவு இறுக்கமானது. முத்தர் சில நாட்கள் கழித்து வருவார். மற்றவரின் குழந்தைக்கு சுகயீனம். பிள்ளைக்கு ஓரளவு சுகமாக முத்தருடன் தானும் வருவதாக கூறி நின்று விட்டார்.

ஏற்கனவே தங்கியிருந்த மூவருடன் இப்போது வந்த ஏழு பேரும் சேர்ந்து பத்துப் பேரும் முதலில் வந்து காடு வெட்டிய எட்டுப் பேரின் காணிகளை நோக்கினர். அவை பெரும்பாலும் துப்பரவாக்கப்பட்டு வெளியாக தெரிந்தன. புதிதாக வந்த நால்வரும் தாங்களும் தொடக்கத்திலேயே வந்திருக்கலாமே என்று ஆவலுடன் பார்த்தனர்.

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.

https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 4 ..

64b83ecb-f622-4f5a-b511-0a8fec34a7b9_S_s

வனம் அதிக வளங்களைக் கொண்டது. விலங்குணவு சாப்பிடுவோருக்கு உடும்பு, முயல், பன்றி, மான், மரை, கௌதாரி, காட்டுக்கோழி, காடை, மயில் என்று பலவற்றின் இறைச்சி. அந்த காலத்தில் அரிய உயிரினங்களை பாதுகாக்கும் சட்டம் கடுமையாக இல்லை.

தாவர உணவு உண்போருக்கு குருவித்தலைப் பாகற்காய், வட்டுக் கத்தரிக்காய், பிரண்டைத் தண்டு, மொசுமொசுக்கை இலை, தூதுவளை, வல்லாரை, முடக்கொத்தான் இலை முதலியன. பழ வகைகளுக்கு பாலைப் பழம், ஈச்சம் பழம், கருப்பம் பழம், விளாம்பழம், நாவற் பழம், துவரம் பழம், புளியம் பழம் முதலியன. சுட்ட தீவு கடற்கரையில் தானாக விளைந்த, வைரம் போல ஒளிரும் உப்பு.

சுட்டதீவிற்கும் குறிப்பம் புளிக்குமிடையில் உள்ள காட்டில் நிறைய புளியமரங்கள் காணப்பட்டன. தம்பையரும் குழுவினரும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் புளியம்பழங்களை பிடுங்கினர். இரவு நேரங்களில் கோதை உடைத்தனர். கொட்டைகளை அகற்றினர். சிறிது உப்புத்தூளை கலந்து உருண்டையாக்கினர். ஒரு வெய்யிலில் காய வைத்து எடுத்தனர். ஊர் போகும் போது எல்லாம்  கொண்டு சென்று உறவினர்களுக்கு கொடுத்தனர். இயற்கை உப்பளத்தில் அள்ளிய உப்பையும் கொண்டு சென்றனர். தேனைக் கொண்டு சென்று, தேவை போக மிகுதியை சாவகச்சேரிக்கு கொண்டு சென்று விற்றனர்.

மயில் இறகு, மான் தோல், சிறுத்தைப் புலியின் தோல், பற்கள், நகங்கள் நல்ல விலை போயின. உறவினர்களுக்கு இறைச்சி வத்தல்களை கொண்டு சென்று கொடுத்தனர்.

மனைவியின் பிள்ளைப் பேற்றிற்காக சென்றிருந்த முத்தர் முப்பத்தொரு நாட்களின் பின்னர் மற்ற தோழருடனும், சில புதிய உறவினர்களுடனும், இரண்டு வண்டில்களில் பழைய கண்டி வீதியால் பெரிய பரந்தன் வந்து சேர்ந்தார். இப்போதைய A9 வீதியால் அல்ல. பழைய கண்டி வீதி என்பது இயக்கச்சியால் வேளர் மோட்டை, பிள்ளை மடம், வெளிறு வெட்டி, அடையன் வாய்க்கால், பாணுக்காடு, ஊரியான், முரசு மோட்டை, பழைய வட்டக்கச்சி, கல்மடு, கொக்காவில் என்று தொடர்ந்து செல்லும். முத்தர் முரசுமோட்டையிலிருந்து குறுக்கு வழியால் வந்தார்.

PHOTO-2020-09-26-01-31-31.jpg

( யாழ்ப்பாண வீதி இயக்கச்சியில் தென் திசையில் திரும்பி பின் ஆனையிறவு சந்தை ஊடாக வேளார் மோட்டை சென்று முரசுமோட்டை செல்லும் பழைய கண்டி வீதி இது. இப்போதைய A9 வீதி அல்ல.)

முத்தர் வரும் போது சில மண் வெட்டிகளை வாங்கி வந்து இல்லாதவர்களுக்கு கொடுத்தார். மண் வெட்டிப் பிடியை அவரவர் காட்டில் வெட்டி போட்டுக் கொண்டனர். புதியவர்கள் தாம் தேர்ந்தெடுத்த காணியில் காடு வெட்டி எரித்தனர். மழைக்கு சில நாட்கள் இருந்த படியால் முதல் வந்தவர்கள் வேறு காணிகளையும் வெட்டிக் கொண்டனர்.

முதல் மழையும் வந்தது. எரித்த சாம்பலுடன் புதிய மண் மழை ஈரத்திற்கு வாசனை வீசியது. இதனைத்தான் மண்வாசனை என்று சொல்வார்களோ. கட்டை பிடுங்காத காணி, மாடுகளில் கலப்பை பூட்டி உழ முடியாது. எல்லோர் காணிகளிலும் ஒரு சிறிய பகுதியை விட்டு விட்டு, நெல் விதைத்து மண் வெட்டியால் கொத்தினார்கள். எல்லோருக்கும் எல்லோரும் கூட்டாகவே விதைப்பு நடந்தது. இனி களை எடுத்தலும், அருவி வெட்டலும், சூடு வைத்தலும், சூடு அடித்தலும் கூட்டாகவே நடக்கும். உழவு இயந்திரம் வந்து சேரும் வரை இந்த ஒற்றுமை உணர்வும், கூட்டாக வேலை செய்தலும் தொடர்ந்தது.

பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்தன. இனித்தான் தம்பையர் குழுவிற்கு பிரதான வேலை இருந்தது. பச்சைப் பசேலென்று பயிர்கள் காட்சியளித்த படியால் அவற்றை மேய்வதற்கு மான்கள், மரைகள், குழுவன் மாடுகள் என்பன வரும். அவற்றை விரட்டி காவல் காக்க  வேண்டும். நெற் கதிர் பால் பிடிக்கும் போது அதனைக் குடிக்க கிளிகள் வரும். கதிர் முற்றிச் சாயும் போது யானை, பன்றி, கௌதாரி, மயில், காட்டுக் கோழி என்பன வரும். அவற்றையும் விரட்ட வேண்டும். சுழற்சி முறையில் காவல் காப்பார்கள். இப்போது தான் நாய்களின் உதவி அவசியமாகும்.

அந்த முறை எல்லோருக்கும் நல்ல வேளாண்மை. நெல்மூட்டைகள் நிரம்பிய வண்டில்கள் அடிக்கடி சுட்டதீவு கடற்கரையை அடைந்தன. அங்கிருந்து தோணிகள் கச்சாய் துறைக்கு ஏற்றிச் சென்றன. தம்பையர் குழுவினர் வீடுகளில் செல்வம் கொழித்தது. கடன்கள் முழுமையாக அடைக்கப்பட்டன.

766fe02529a5e4e044cf759f1455235a.jpg

தம்பையரின் மகன் கணபதிப்பிள்ளை, மட்டுவிலிலிருந்த பண்டிதரின் திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு கல்வி கற்க செல்வதற்கு ஒரு கிழவனாரின் வண்டி ஒழுங்கு படுத்தப்பட்டது. அந்த வண்டியில் தம்பையரின் உறவினர்களின் பிள்ளைகளும் சென்றனர். காலை செல்லும் பிள்ளைகளை மாலை வரை நின்று, அந்த ஐயா பொறுப்புடன் கூட்டி வருவார். பிள்ளைகள் கட்டுச்சோறு கட்டி எடுத்துச் சென்றனர். தம்பையரின் கனவு பலிக்கத் தொடங்கியது.

விதைக்காது விட்ட காணியின் பகுதியில் இருந்த மரங்களின் அடிக்கட்டைகளை மாரி மழை பெய்யப் பெய்ய மண்வெட்டி, கோடரி பயன்படுத்தி அப்புறப் படுத்தி விட்டனர். அரிவி வெட்டிய கையோடு விதைத்த பகுதியிலும் அடிக்கட்டைகள் பிடுங்கப் பட்டன. இனி கலப்பையில் மாடுகளைப் பூட்டி உழுது கொள்ளலாம்.

தம்பையரிடம் எருத்து மாடுகள் இல்லை. மன்னாருக்கு சென்று ஒரு சோடி எருதுகள் வாங்க முடிவு செய்தார். மாடுகள் இல்லாத இன்னும் சிலரும் தாங்களும் வேண்ட விரும்பி அவருடன் இணைந்து கொண்டனர். தட்சினாமருதமடு பகுதியில் உள்ள மாட்டுத் தரகரை தம்பையர் அறிவார். அவரிடம் போய் மாடுகளை, அவர் மூலம் வாங்க எண்ணினார்கள். தரகரிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அவர் மூலம் எருதுகள் வாங்க வருபவர்களை பல பட்டிகளுக்கும் கூட்டிச் செல்வார். மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு தனது வீட்டிற்கு கூட்டி வருவார். நன்கு கள்ளு வாங்கி குடிக்கப் பண்ணி விட்டு, இரவுச்சாப்பாட்டையும் கொடுத்து படுக்க விடுவார். பிரயாணக்களை, மாடு பார்க்க அலைந்த களை, கள்ளினால் உண்டான வெறி மயக்கம் எல்லாம் சேர வந்தவர்கள் மெய் மறந்து தூங்குவார்கள்.

தரகர் நடு இரவு போனவர்களில் ஒருவர் இருவரின் மடியைத் தடவி காசை எடுத்துவிடுவார். ஒருவரும் அவரை குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் ஏனையவர்கள் யாவரின் பணமும் அப்படியே இருக்கும். வரும் வழியில் இந்த விடயத்தை தனது தோழர்களிடம் கூறி எச்சரிக்கை பண்ணி விட்டார். இரவு படுக்கப் போகும் போது, எல்லோரும் பற்றை  மறைவில் ஒதுங்கினர். எல்லோரும் தமது கோவணத்தைக் கழற்றி பணத்தை அதனால் சுற்றி பற்றைக்குள் மறைத்து வைத்தனர். பின் போய் படுத்து நிம்மதியாக படுத்து உறங்கினர்.

தம்பையர் மது அருந்தாதவர். என்ன நித்திரை என்றாலும் சிறு அசுமாத்தத்திற்கும் எழுந்து விடுவார்.  நடுச்சாமத்தில் யாரோ அவரது இடுப்பை தடவுவதனை உணர்ந்தார். நித்திரை போல பாசாங்கு செய்தார். தமக்குள் புன்னகை புரிந்து  கொண்டார். மற்றவர்கள் அருகேயும் நடமாட்டம் தெரிந்தது. சில நிமிடங்களில் நடமாட்டம் நின்று விட்டது.

அதிகாலை காலைக் கடன்கழிக்கச் சென்ற போது அவரவர் உள்ளங்கியையும் பணத்தையும் மீட்டுக் கொண்டனர். தரகர் குளித்து திருநீறு பூசிக் கொண்டு, இவர்களை அழைத்துக் கொண்டு பட்டிகளுக்கு சென்று இவர்கள் பார்த்த வைத்த எருதுகளை விதானையார் வீட்டிற்கு ஓட்டி வரும்படி உரிமையாளரிடம் கூறினார். அது தான் முறை.

விதானையார் முன்னிலையில் இன்ன குறியுள்ள, இன்ன நிற எருதுகளை, இவ்வளவு பணம் பெற்றுக் கொண்டு, இன்னாருக்கு முழுச் சம்மதத்துடன் விற்கின்றேன் என்று எழுதி ஒப்பமிட்டார். தரகர் சாட்சிக்கு கையெழுத்து இட்டார். விதானையார் அங்கீகரித்து ஒப்பமிட்டு தமது பதவி முத்திரையைப் பதித்தார். இந்தக் கடிதத்துடன் வாங்கியவர்கள் இலங்கையின் எந்தப் பகுதிக்கும் போகலாம். இவ்வாறான கடிதம் இல்லாதவிடத்து திருட்டு எருதுகள் என்று பொலிசாரால் கைது செய்யப்படும் அபாயம் உண்டு.

தம்பையரும் தோழர்களும் தரகரிடம் தரகுக் காசைக் கொடுத்து  விட்டு எருதுகளை ஓட்டிச் சென்றனர். போகும் போது சாமத்தில் நடந்ததைக் கூறி யாவரும் சிரித்தார்கள். தம்பையருக்கு தமது பணத்தைக் காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்தார்கள்.

சங்கத்தானையில் தச்சு வேலை செய்பவருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி அவர்களுக்கு கலப்பைகளும் வந்து சேர்ந்தன.

இப்போது யாவரும் தம் தம் காணிகளில் கொட்டில்களை போட்டுக் கொண்டனர். அவரவர் காணிகளை வெட்டிய போதும் அவர்களுக்கு கப்புகள், தடிகள் கிடைத்தன. காணிகள் எரித்த பின் எஞ்சிய தடிகளையும் மரங்களையும் விறகுக்காக அடுக்கி வைத்திருந்தனர். இப்போது சிலர் தமது கொட்டிலில் சமைத்தார்கள்.

Canal_of_a_Paddy_Field-1024x768.jpeg

முத்தரும் ஆறுமுகமும் இன்றும் தம்பையருடன் தான் சமைத்தார்கள். சாப்பிட்டபின் தமது கொட்டில்களை கதவிற்காக கட்டி வைத்த தட்டிகளை கட்டிவிட்டு வந்து, தாய் மனையான தியாகர் வயல் கொட்டிலிலேயே படுத்துக் கொள்வார்கள். நித்திரை வரும்வரை ஆடு புலி ஆட்டம், தாயம் முதலிய விளையாட்டுக்களை விளையாடுவார்கள். சில வேளைகளில் நேரம் பிந்தியும் விளையாடுவார்கள். தம்பையர் அவர்களை அதட்டி படுக்க வைக்க வேண்டும்.

அடுத்த கால போகத்திற்கு அவர்கள் கலப்பைகளில் எருதுகளைப் பூட்டி உழுது விதைத்தார்கள். இம்முறையும் அவர்களுக்கு பொன் போல நெல் விளைந்தது. இப்போது காணிகளின் உயரம், பள்ளம் பார்த்து வரம்புகளும் கட்டினார்கள். வாய்க்கால்களும் அமைத்து விட்டார்கள். நீலனாறு, கொல்லனாறுகளை மறித்து வாய்க்கால்களில் நீர் பாய்ச்சுவார்கள்.

நீலனாறு, கொல்லனாறுகளை மட்டும் நம்பி சிறுபோக வேளாண்மையில் ஈடுபடுவது புத்திசாலித்தனமாக இருக்காது என்று தம்பையர் அடிக்கடி கூறுவார். எட்டாம் வாய்க்காலை நாங்களே வெட்டி, நீர் பாய்ச்ச அனுமதி பெற்று விட்டால் பின்னர் சிறுபோகத்தை தொடர்ந்து செய்யலாம் என்று தம்பையர் விளக்கினார். எட்டாம் வாய்க்காலை வெட்டி இரணைமடு குளத்திலிருந்து வரும் நீரை பாய்ச்சுவது என்று உறுதி கொண்டார்கள்.

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 5

ttttttt-1.jpg

கொல்லனாறு, நீலனாறு என்பவை காட்டாறுகளாகும். பெரிய பரந்தன் விவசாயிக ள் இந்த காட்டாறுகளை மறித்து அணை கட்டி, வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்கு நீர் பாய்ச்சினர். கால போகத்தின் போது மழை நீரும், காட்டாறுகளின் நீரும் தாராளமாக கிடைத்தது.

சிறு போகத்தின் போது சில வேளைகளில் பாய்ந்து ஓடி வரும் நீர், சில சமயம் ஊர்ந்தும் வரும். ஆனபடியால் ஒரு பகுதி வயலில் தான் சிறுபோகம் செய்ய முடிந்தது. இரணைமடு குளத்திலிருந்து வரும் நீரை பாய்ச்சுவதாயின் இது வரை வெட்டப்படாதிருந்த எட்டாம் வாய்க்காலை இவர்கள் வெட்டித் துப்பரவு செய்ய வேண்டும்.

எட்டாம் வாய்க்கால் திருத்தப்பட்டால் முழுக் காணிகளிலும் சிறு போக வேளாண்மை செய்ய முடியும். மாரி காலத்தில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டோடி காட்டினூடாகப் பாய்ந்து கடலில் சேரும்.

Screenshot-2020-10-06-11-47-14-959-org-m

தம்பையரும் முத்தரும் சில காலம், மட்டுவிலில் உள்ள ஒரு ஆசிரியரிடம்  திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஒன்றாக கற்றவர்கள். இவர்களின் இளமைக் காலத்தில் தமிழ் பாடசாலைகள் தோன்றவில்லை. கற்றவர்கள் தமது வீட்டுத் திண்ணைகளில் வைத்து சில பிள்ளைகளுக்கு கற்பிப்பார்கள். அவை திண்ணைப் பள்ளிக்கூடங்கள் என்று அழைக்கப்பட்டன. அக்காலக் கல்வி முறையை ஓரளவு அறிய, இவர்களுக்கு முற்பட்டவரான ஆறுமுகநாவலர் கற்ற முறையை உங்களுக்கு தருகின்றேன்.

ஆறுமுக நாவலர் 1822 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18 ஆம் திகதி நல்லூரில் பிறந்தார். 1879 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 05 ஆம் திகதி இவ்வுலகை விட்டு மறைந்தார். தனது 57 வருட வாழ்கையில் அவர் தமிழையும் சைவத்தையும் வளர்க்க செய்தவைகள் ஏராளம்.

நாவலர் தனது ஐந்தாம் வயதில் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் தமிழையும் நீதி நூல்களையும் கற்றார். ஒன்பது வயதில் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும், பின்னர் அவரது குருவான சேனாதிராச முதலியாரிடமும் உயர் கல்வி கற்றார். பன்னிரண்டு வயதில் தமிழையும் சமஸ்கிருதத்தையும் நன்கு கற்று தேர்ச்சி பெற்றார்.

பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்த “வெஸ்லியன்” ஆங்கிலப்பட பாடசாலையில் ஆங்கிலம் கற்று, தனது இருபதாவது வயதில் அதே “வெஸ்லியன்” ஆங்கிலப் பாடசாலையில்  ஆசிரியராக கடமைக்குச்  சேர்ந்தார். அப்பாடசாலை தான் தற்போது “யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி” (Jaffna Central College) என்று அழைக்கப்படுகிறது.

0?e=2159024400&v=beta&t=lkuLbMo71QDveY3U

தம்பையரும், முத்தரும், ஆறுமுகத்தாரும் உறவினர்கள். மீசாலையிலேயே ஒன்றாக வளர்ந்தவர்கள். இவர்கள் மூவரும் நல்ல நண்பர்களும் கூட. தம்பையர் பெரியபரந்தன் கிராமக் கனவு பற்றி கதைக்கும் போது, அவரது மனைவி விசாலாட்சியும் சம்பாசனையில் அவர்களுடன் பங்கு பற்றுவார். தம்பையர் விசாலாட்சியின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். நேரில் போய் பார்க்காவிட்டாலும் இவர்கள் மூவரும் கதைக்கும் விடயங்களிலிருந்து பெரிய பரந்தன் பற்றிய ஒரு படம் விசாலாட்சியின் மனதில் விழுந்து விட்டது.

பெரிய பரந்தன் பூரண வசதி அடைந்து விட்டது. பலர் வண்டிலும் எருதுகளும் வாங்கி விட்டனர். மீசாலையில் புல்லும் வைக்கலும் இன்றி மெலிந்ததிருந்த பசுமாடுகளை இங்கு கொண்டு வந்து விட்டார்கள். பெரிய பரந்தனுக்கு காணி வெட்ட வராத உறவினர்களும், தங்கள் பசுக்களையும் நாம்பன்களையும் கொண்டு வந்து தங்களுக்கு பொருத்தமான உறவினர்களிடம் வளர்ப்பிற்காக ஒப்படைத்தனர். குறி சுடும் காலத்தில் இங்கு வருவார்கள். ஈன்று இருக்கும் கன்றுகளில் அரைவாசிக்கு உரிமையாளரின் குறியும் மிகுதி அரைவாசிக்கு வளர்ப்பவர்களின் குறியும் இடப்படும்.

மாடுகளிற்கு குறிசுடுதல் என்பது மிகவும் கொடுமையான செயற்பாடு. மனிதன் ஐந்தறிவு மிருகங்களை தனது என்று உரிமை கொண்டாடுவதற்காக இந்த பாவத்தை செய்தான். குறி சுடாமல் விட்டாலும் பிரச்சினையே. ஒரே மாட்டிற்கு பலர் உரிமை கொண்டாட, அது பெரிய சண்டையாக போய் விடும்.

சிலர் பூனகரியிலும் சில பசுக்களை வாங்கிக் கொண்டனர். வலிமை உள்ள இளைஞர்கள் தடம் போட்டு குழுவன் மாடுகளை பிடித்து விடுவார்கள். அவற்றிற்கு குறிசுட்டு விட்டு தமது பட்டியிலிலுள்ள வலிமையான மாடுகளுடன் பிணைத்து விடுவார்கள். சில நாட்களில் அவை நன்கு பழகிவிடும்.

Screenshot-2020-10-06-11-50-27-505-org-m

அந்தக் காலத்தில் காட்டில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த மாடுகளை பிடிப்பது குற்றமல்ல. இன்னும் சொல்லப் போனால் ஆதியில் காட்டில் சுதந்திரமாக திரிந்த மாடுகள், ஆடுகள், எருமைகளை பிடித்து ஆதி மனிதன் பழக்கி வளர்த்தவற்றின் வழி வந்தவையே இன்றைய வீட்டு விலங்குகள். மாடுகளை காட்டில், ‘காலைகள்’ அமைத்து இராப்பொழுதுகளில்  பாதுகாப்பின் நிமித்தம் அடைத்து வைத்தார்கள்.

பெரியபரந்தனில் மோட்டைகள், பள்ளங்கள், நீர்நிலைகள், சிறு குளங்கள் காணப்பட்டன. அதனால் சிலர் எருமைகளையும் வாங்கி வளர்த்தார்கள். எருமைகள் நீர் நிலைகளில்  விரும்பி வாழும் இயல்புடையவை. இந்த எருமைகளை உழவுக்கும், பிரதானமாக சூடு அடிக்கவும் பயன் படுத்தினார்கள். சிலர் எருமைப் பாலையும் கறந்து பயன்படுத்தினார்கள். எருமைத் தயிருக்கு பனங்கட்டி கலந்து சாப்பிட்டவர் அந்த சுவையை வாழ்நாளில் மறக்க மாட்டார்.

சூடு அடிக்க மதுரையில் யானைகளைப் பயன்படுத்தியதாக வரலாறு உண்டு.” மாடு  கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப் போரடித்த மாமதுரை” என்று தொடங்கும் பாடல் பழம் தமிழ் இலக்கியத்தில் உண்டு. உழவுக்கு ஆண் எருமைகளை மட்டும் பயன் படுத்தினர். உழவு இயந்திரம் வந்து சேரும் வரை பெரிய பரந்தன் மக்கள் மாடு கட்டியே போரடித்தனர். போர் என்பது சூடு. வெட்டிய நெற்பயிரிலிருந்து நெல்லை பிரித்தெடுக்கும் வரை மழையில் நனையா வண்ணம் குவித்து வைப்பதையே சூடு என்பார்கள்.

குஞ்சுப் பரந்தனுக்கு பெண்கள், நெல் விதைக்கும் போதும், அரிவி வெட்டி சூடு அடிக்கும் போதும், பொறிக்கடவை அம்மன் பொங்கல், திருவிழாவின் போதும் மட்டும் பிள்ளைகளுடன் வந்து நின்று விட்டு போய் விடுவார்கள். செருக்கனில் இளம் குடும்பங்களிலும், பிள்ளைகள் படிக்கும் வயதை தாண்டி விட்ட குடும்பங்களிலும் தான் பெண்கள் வந்திருந்தார்கள்.

ஏனைய குடும்பங்களின் பெண்கள், பிள்ளைகளின் படிப்பிற்காக ஊரிலேயே தங்கி விடுவார்கள். அவ்வாறில்லாமல் ஆண்டு முழுவதும் பெண்களையும் பெரிய பரந்தனிலேயே தங்கி வாழச் செய்ய வேண்டும் என்பது தம்பையரினதும் நண்பர்களினதும் கனவாக இருந்தது. இதனை நன்கறிந்திருந்த விசாலாட்சி தானும் முழு விருப்பத்துடன் தயாராக இருந்தாள்.

ஏனையவை யாவும் திட்டமிட்டது போல நடந்து விட்டன. மனைவியை அழைத்து வந்து பெரிய பரந்தனில் வாழ்வது என்ற தம்பையரின் எண்ணம் நிறைவேற முன்னர் ‘காய்ச்சல்’ என்ற பெயரில் இயமன் தம்பையரின் உயிரைக் கவர்ந்து சென்று விட்டான். தம்பையருக்கு காய்ச்சல் என்றதும் ஆறுமுகம், முத்தர் மற்றும் உறவினர்கள் உடன் அவரை ஊருக்கு அழைத்துச் சென்று, பரியாரியார் வீட்டில் விட்டு, தாமும் நின்று வைத்தியம் பார்த்தனர். பரியாரியாரும் மூன்று வேளையும் மருந்து கொடுத்து கவனமாக வைத்தியம் செய்தார்.

விசாலாட்சியும் காலை, மதியம், இரவு என மூன்று வேளைக்கும் பரியாரியார் சொன்னபடி பத்திய உணவு சமைத்து எடுத்து வந்து தம்பையருக்கு ஊட்டி விடுவாள். பரியாரியார் கைராசியானவர். எந்த காய்ச்சலையும் தனது மூலிகை வைத்தியத்தினால் குணப்படுத்தி விடுவார். ஆனால் எல்லோரையும் ஏமாற்றி விட்டு காலன் அவரது உயிரைக் கவர்ந்து சென்று விட்டான்.

எல்லோரும் திகைத்து விட்டனர். விசாலாட்சி தனது உலகமே அழிந்து விட்டதனால் பெருங்குரல்  எடுத்து அழுதாள், கதறினாள். ஆறுமுகத்தாரும் முத்தரும் அழுதனர். ஏனையவர்களும் அழுதனர். யார் அழுதென்ன? மாண்டார் மீண்டு வருவாரோ?

ஆறுமுகத்தாரும் முத்தரும் முன்னின்று செத்தவீட்டு ஒழுங்குகளைச் செய்தனர். தம்பையரை வருத்தம் பார்க்க வந்தவர்களில் சிலர் சென்று, பெரிய பரந்தன் உறவுகள் யாவரினதும் பொருட்களுக்கு காவல் நிற்க, ஏனையவர்கள் யாவரும் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வந்து விட்டனர்.

விசாலாட்சி கதறி அழுதபடியே இருந்தாள். தாய் அழுவதைக் கண்ட ஏழு வயதே நிரம்பிய மகன் கணபதிப்பிள்ளை என்ன நடக்கிறது என்று தெரியாது திகைத்துப் போய் இருந்தான். தம்பையரைத் தூக்கிச் செல்ல, துயர் தாங்கமுடியாத விசாலாட்சி மயங்கி விழுந்து விட்டாள்.

தனது தலையை ஏன் மொட்டை அடிக்கிறார்கள், தகப்பனுடன் கூட்டிச்சென்று ஏன் கொள்ளிக்குடம் தூக்க வைக்கிறார்கள், ஏன் கொள்ளி வைக்கச் செய்கிறார்கள் என்பது தெரியாமலேயே கணபதி பெரியவர்கள் சொன்னபடி எல்லாம் செய்தான். தம்பையர் நெருப்புக்கு இரையாவதை பார்க்க சகிக்காத ஆறுமுகம், கணபதியைத் தூக்கி தோளில் வைத்தபடி வீடு நோக்கி நடந்தான்.

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன் 

https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

Link to comment
Share on other sites

ஒரே மூச்சில் இணைத்த பாகங்கள் அனைத்தையும் வாசித்து விட்டேன்... பகிர்வுக்கு மிக்க நன்றி புரட்சி!

வாசிக்க வாசிக்க ஆனந்தமாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான பதிவு  பொக்கிஷமாய் பாதுகாக்க படவேண்டியது .பகிர்வுக்கு மிக்க நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 6 

61326979_2475266612506256_20674227775429

தம்பையரின் இழப்பை விசாலாட்சியினால் தாங்க முடியவில்லை. அவள் பழையபடி இயங்க மிகவும் கஷ்டப்பட்டாள். கணபதியும் சோர்ந்து போய்க் காணப்பட்டான். தம்பையர் கணபதியின் எதிர்காலத்தைப் பற்றி கண்ட கனவுகளை நினைத்துப் பார்த்தாள். அவனுக்காக தன் மனதை தேற்றிக் கொண்டு செயற்படத் தீர்மானித்தாள்.

ஒருவரின் மரணத்துடன் வாழ்வு முடிவதில்லை. எட்டுச் செலவு வரை முத்தரும் ஆறுமுகமும் நின்று எல்லா ஒழுங்குகளையும் முடித்துவிட்டு பெரிய பரந்தனை நோக்கிச் சென்றனர். பெரிய பரந்தனில் எல்லோரும் தம்பையரை தமது வழிகாட்டியாகவும், தலைவனாகவும், பிரச்சனைகள் வந்த போது தோழனாகவும் நினைத்து அவர் காட்டிய வழியிலேயே நடந்தவர்கள்.

அவரது இழப்பு அவர்களை சோர்வு அடையச் செய்தது. தம்பையரின் இடத்தை நிரப்பி பழையபடி எல்லோரையும் இயங்கச் செய்ய முத்தரினதும் ஆறுமுகத்தாரினதும் கூட்டுத் தலைமை தேவைப்பட்டது. தமது கவலையை வெளிக்காட்டாமல் அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

விசாலாட்சி ஒரு நிரந்தர முடிவு எடுக்கும் வரை வண்டிலையும் எருதுகளையும் பராமரிக்கும் பொறுப்பை முத்தர் எடுத்துக் கொண்டார். பசுமாட்டு மந்தையை தான் பார்த்துக் கொள்வதாக ஆறுமுகம் விசாலாட்சியிடம் கூறினார். காணியையும்  விதைத்து இலாபத்தை கொடுப்பதற்கு இருவரும் தயாராக இருந்தனர். ஆனால் அதை அவர்கள் விசாலாட்சியிடம் கூறவில்லை. அதை அவளின் தீர்மானத்திற்கு விட்டு விட்டனர்.

விசாலாட்சி, முத்தரும் ஆறுமுகத்தாரும் உதவி செய்வார்கள் என்பதை அறிவாள். ஆனால் அவர்களிடம் அளவிற்கதிகமாக கடமைப்படுவதை விரும்பவில்லை. இந்த நேரத்தில் அவளது தம்பி முறையான இருவர் அவளிடம் வந்தனர்.

தாங்களும் பெரியபரந்தனில் காணி வெட்டப் போவதாகவும், அது வரை அத்தான் தம்பையரின் தியாகர் வயலில் தங்கியிருந்து, அந்தக் காணியையும் செய்து குத்தகை தருவதாகவும் கூறினர். விசாலாட்சிக்கும் இது நல்ல ஏற்பாடாகப் பட்டது. முத்தரையும் ஆறுமுகத்தையும் கஷ்டப்படுத்தும் தேவை இல்லை. தம்பிமாருக்கு உதவியதாகவும் இருக்கும்.

ஆகவே விசாலாட்சி அதற்கு சம்மதித்தாள். அவர்களும் மகிழ்ச்சியுடன் பெரியபரந்தன் புறப்பட்டுச் சென்றனர். இளங்கன்று பயமறியாது. அவர்களுக்கு கூட்டாக வேலை செய்வது, முத்தரினதும் ஆறுமுகத்தாரினதும் ஆலோசனைகளைப் பெறுவது எல்லாம் தேவையற்ற விடயமாக இருந்தது.

காடு கூட தன்னோடு இணைந்தவர்களுக்கு தான் ஒத்துழைக்கும். ஏனையவர்களைப் புறக்கணிக்கும். தம்பையர் குழுவினர் தமது தேவைக்கு மட்டுமே மரங்களை வெட்டினர். உண்பதற்காக மட்டுமே விலங்குகளைக் கொன்றனர்.

காலபோக வேளாண்மை வெற்றியடைய வேண்டும் என்றால் மழை நீரின் முகாமைத்துவம் நன்கு  தெரிந்திருக்க வேண்டும். இளைஞர்கள் காணி விதைப்பதற்கும் காடு வெட்டுவதற்கும் சம்பளம் பேசி, தமது நண்பர்களான மூன்று பேரை அழைத்துச் சென்றனர். அந்த நண்பர்களும் கமச் செய்கையில் அனுபவமற்றவர்கள். இவர்கள் வரும் வரை முத்தரும் ஆறுமுகமும்  தியாகர் வயலிலேயே சமைத்து, உண்டு, இரவு படுத்தும் உறங்கினர். தம்பையரின் வீடு கேட்பாரற்று போய் விடக்கூடாது என்று கருதியிருந்தனர்.

Screenshot-2020-10-13-12-27-34-124-org-m இளைஞர்கள் வந்த அன்றே அவர்களிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டு, தமது வீடுகளுக்கு சென்று விட்டனர். ஆம், இப்போது வீடு என்று சொல்லக் கூடியதாக எல்லோர் காணிகளிலும் சமையலுக்கு ஒரு சிறிய கொட்டில், மண்சுவர் வைத்து மேலே தட்டி கட்டிய பெரிய வீடு, வருபவர்கள் படுத்து எழும்ப ஒரு பெரிய தலைவாசல் என்பன வந்து விட்டன.

தம்பையர் உயிருடன் இருந்த பொழுதே, பிள்ளையார் மழை வெய்யிலில் பாதிக்கப்படாது இருக்க ஒரு கொட்டிலும், காளிக்கு மூன்று பிரிவாக பிரிக்கப் பட்ட ஒரு மண்டபமும் அமைத்து விட்டனர். பனை ஓலைக் கூரை தான். ஒரு வருட மழையை பனை ஓலைகள் தாங்கின. பின்னர் பனை ஓலையின் மேல் வைக்கலை படினமாக அடுக்கி வேய்ந்து விடுவர். அது மேலும் இரண்டு மழைகளைத் தாங்கும்.

காளியின் முதலாவது சிறிய அடைப்பில் பிள்ளையாருக்காக ஒரு முக்கோண வடிவக் கல் வைக்கப் பட்டது. இறுதியாக உள்ள சிறிய அடைப்பில் காளிதேவியின் கையிலுள்ள சூலத்தைக் குறிக்க ஒரு பெரிய சூலம் நடப்பட்டது. நடுவிலுள்ள பெரிய இடைவெளியில் கிராம மக்கள் வணங்கிய தெய்வங்கள் பலவற்றைக் குறிக்க கற்களும் சிறிய சூலங்களும் நடப்பட்டன. முத்தர் பிரதான பூசாரி. ஆறுமுகம் உதவிப் பூசாரி.

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பிள்ளையாருக்கு பொங்கல் வைக்கப்படும். காளி அம்மனுக்கு விளக்கு வைக்கப்படும். சுட்டிகளில் திரிகள் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபங்கள் ஏற்றப்படும். ஒவ்வொரு தெய்வத்தின் முன்பும்  சுட்டிகள் வைத்து கற்புரமும் கொழுத்தப் படும். அப்போது முத்தர் கலை வந்து ஆடுவார்.

Screenshot-2020-10-13-12-29-07-847-org-m பெரிய பரந்தனிலுள்ள அனைவரும் கோவிலுக்கு வருவார்கள். செருக்கனிலிருந்தும் சிலர் வருவார்கள். அவர்களில் சிலர் நன்கு உடுக்கு (மேளம் போன்ற ஒரு சிறிய தோல் கருவி) அடிப்பார்கள். உடுக்கு அடிக்க அடிக்க முத்தர் வேகம் கொண்டு ஆடுவார்.

காளி கோவில் கொல்லன் ஆற்றங்கரையில் இருந்தது. காளி கோவிலின் அருகே கிழக்குப் பக்கத்தில் ஒரு மேடான பகுதி இருந்தது. தம்பையரின் ஆலோசனைப்படி வண்டில்களில் மண் ஏற்றிப் பறித்து  ஒரு மேடை போல அமைத்திருந்தார்கள். பார்வையாளர்கள் இருக்கும் பகுதி “கூத்து வெட்டை” என்று அழைக்கப்பட்டது.

பெரிய பரந்தனில் அரிவி வெட்டி முடிய, சிறு போகத்திற்கு இடையில் வரும் இடை நாட்களில் பளையிலிருந்து ஒரு அண்ணாவியார் வந்து தங்கியிருந்து கூத்து பழக்குவார். பெரிய பரந்தன், செருக்கன் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அண்ணாவியாரிடம் கூத்து பழகுவார்கள். அண்ணாவியார் சம்பளமாக நெல்லை வாங்கி செல்லுவார்.

விசாலாட்சியின் தம்பிமார் தமக்கென்று காணியைத் தெரிந்தெடுத்து வெட்டினர். அவர்களால் அக்கினி பகவானின் உதவியைப் பெற முடியவில்லை. தம்பையர் குழுவினரைப் போல அரைவாசியை வெட்டி மிகுதிப் பற்றைகள் மேல்  பரவி எரிக்க முடியவில்லை. அவர்கள் வெட்டிக் கொண்டிருக்கும் காணியின் மூன்று பக்கமும் முன்னர் வந்தவர்களின் காணிகள் இருந்தன. அவர்கள் சூடு அடித்த பின்னர் வைக்கலை சூடு போல குவித்து வைத்திருந்தனர்.

புற்கள் இல்லாத பொழுது மாடுகளுக்கு வைக்கல் தான் உணவு. ஒவ்வொரு சூடும் சிறு மலைகள் போல காட்சியளிக்கும். அது மட்டும் அல்ல, அடுத்த போகத்திற்குரிய விதை நெல்லையும் சூடு அடிக்காது சிறு குன்றுகள் போல மழை போகாத வண்ணம் சூடாக  வைத்திருப்பார்கள். இந்த சூடுகள் அடியில் பெரிய வட்ட வடிவமாகவும், மேலே செல்லச் செல்ல குறுகிச் சென்று முடி கூரானதாகவும் இருக்கும். 

Screenshot-2020-10-13-12-30-34-329-org-m 

சூடு வைப்பதும் ஒரு கலை தான். நீர் உள்ளே செல்லாதவாறு இந்த சூடுகள் அமைக்கப்பட வேண்டும். உள்ளே நீர் சென்றால் விதைநெல் மடிநெல் ஆகி விடும். மடிநெல் கறுத்து இருக்கும். சாப்பிடவும் முடியாது. விதைக்கவும் முடியாது. நெல்லை வெட்டிய உடன் விதைக்கக் கூடாது. அதற்கு ஒரு உறங்கு காலம் உண்டு. உறங்கு காலம் கழிந்த பின்னரே எந்த தானியத்தையும் விதைக்க வேண்டும்.

வெளியே மழை பெய்தாலும் சூட்டின் உள்ளே எப்போதும் வெப்பம் சீராக இருக்கும். முதலே சூடு அடித்து சாக்கில் போட்டு வைக்கும் நெல்லின் வெப்ப நிலை மாறுபடும். எனவே முளைதிறன் குறைந்து விடும். சூடு வைத்து தேவை ஏற்படும் போது அடித்து எடுத்து விதைத்த நெல்மணிகள் யாவும் ஒத்தபடி முளைத்து விடும்.

இளைஞர்களுக்கு பிரச்சினை இது தான். அரைவாசி பற்றைகளை, வெட்டாத பற்றைகள் மேல் போட்டு காய்ந்த பின்னர் எரித்தால் அவை விளாசி எரிய, நெருப்புப் பொறி அயலவர்களின் சூடுகளின் மேல் விழுந்தால் அவையும் பற்றி எரிந்து விடும். அதனால் சிறு சிறு குவியலாக குவித்து, அவதானமாக கொஞ்சம் கொஞ்சமாகவே எரிக்க முடிந்தது. ஆகவே காணி வெட்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

மழையும் வந்தது. பள்ளப் பக்கமாக முதலில் விதைக்க வேண்டும், பிறகு மேடான காணியை விதைக்கலாம் என்று முத்தர் முதலியோர்  சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஒரு பக்கத்தில் தொடங்கி ஒழுங்காக விதைத்து வந்தனர். அவ்வாறு விதைத்து வந்து, பள்ளக்காணியை அடைந்த போது மழை நீரால் பள்ளங்கள் நிரம்பி விட்டன. இப்போது மழை நீரை வாய்க்கால் வெட்டி கடத்தும் வேலை மேலதிகமாக வந்து சேர்ந்தது. முத்தர் சொன்னபோது பள்ளக் காணியை விதைத்திருந்தால் அங்கு பயிர்கள் முளைத்து நீர் மட்டம் உயர உயர நெற்பயிர்களும் உயர்ந்து வளர்ந்திருக்கும்.

“வரப்புயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும். நெல் உயரக் குடி உயரும். குடி உயரக் கோன் உயர்வான்” என்று ஔவையார் சொன்னதையும் இளைஞர்கள் ஞாபகம் வைத்திருக்கவில்லை.

மழை பெய்யப் பெய்ய நீரை கடத்திக் கொண்டே இருக்க வேண்டும். பயிர்கள் முளைத்து நீரின் மேல் நீட்டிக் கொண்டிருக்கும் வரை நீரைக் கடத்த வேண்டும். இனி இரவு ஆரம்பிக்கும் பொழுதும் அதி காலையிலும் ஆமைகள் பயிரை வெட்டும். அப்போது மின் விளக்கு (Torch Light) இல்லை. இலாந்தர் வெளிச்சத்தில் ஆமைகளைக் காண முடியாது. அனுபவம் மிக்கவர்கள் ஊரில் இருந்து வரும் போது தென்னம் பாளைகளை கட்டி எடுத்து வருவார்கள்.

ஓய்வாக இருக்கும் போது, சிறிய கீலம் கீலமாக நுனியிலிருந்து அடி வரை வெட்டுவார்கள். பின்னர் நுனியிலிருந்து ஒவ்வொரு அங்குல இடைவெளியில் இறுக்கி கட்டி விடுவார்கள். இவை நன்கு காய்ந்த பின்னர் நுனியில் நெருப்பு வைத்தால் பிரகாசமாக எரியும். இதனைச் சூழ் (torch) என்று கூறுவார்கள்.

கடலில் மீன் பிடிக்கவும் இத்தகைய சூழ்களைக் கொண்டு செல்வார்கள். சூழ் வெளிச்சத்தில் ஆமைகளை இனங்கண்டு பிடிக்கலாம். பயிரை வெட்ட இரண்டு விதமான ஆமைகள் வரும். ஒரு ஆமை பிடித்ததும் எதிரியிடமிருந்து தப்ப ஒரு வித கெட்ட நாற்றமுள்ள வாயுவை வெளிவிடும். அது சிராய் ஆமை. உடனே வெட்டி வரம்பில் தாட்டு விடுவார்கள். மற்ற ஆமை, பாலாமை எனப்படும். சிலர் அதை உண்பார்கள். ஆனால் பெரிய பரந்தன் மக்கள் சாப்பிடுவதில்லை. அதனையும் வெட்டி தாட்டு விடுவார்கள்.

turtlesa.jpg 

தொடர்ந்து பல விலங்குகள் பயிர்களை அழிக்கவும் வரும். நெற் கதிர்களைச் சாப்பிடவும் வரும். பெரிய பரந்தன் மக்கள் குழுக்களாக பிரிந்து இரவுக்கு காவல் காப்பார்கள். காட்டோரம் உள்ள எல்லைக் காணிகளின் வேலியின்  வெளியே பட்டமரக் குற்றிகளைப்  போட்டு நெருப்பு வைப்பார்கள். விலங்குகள் வருகின்ற போது, சத்தமிட்டும், தாரை தப்பட்டை அடித்தும் அவற்றை விரட்டுவார்கள்.

எல்லோருடனும் இணைந்து விலங்குகளை விரட்ட இளைஞர்கள் பழக வேண்டும். அவ்வாறு இல்லாது இளைஞர்கள் நித்திரை கொண்ட ஓரிரவு பன்றிகள் வந்து அவர்களின் பயிரின் ஒரு பகுதியை உழக்கி அழித்து விட்டன. பன்றிகள் மக்கள்  சத்தமிடாத  ஆற்றங்கரையால் வந்துவிட்டன. எல்லோருடனும் சேர்ந்து காவல் காத்திருந்தால் இந்த இழப்பை தவிர்த்திருக்கலாம். யானைகளும் பன்றிகளும் எப்போதும் கூட்டமாகவே வரும். கூட்டமாக வரும் அவை உண்பதை விட உழக்கி அழிப்பது அதிகம்.

“சிறுபிள்ளை வேளாண்மை விளையும் வீடு வந்து சேராது” என்ற பழமொழிக்கு ஏற்ப இளைஞர்கள் பெரும் நட்டம் அடைந்தனர். அவர்களால் விசாலாட்சிக்கும் குத்தகை நெல் கொடுக்க முடியவில்லை. இவ்வாறு ஒவ்வொரு போகத்திலும் ஒவ்வொரு விதமான அழிவு. விசாலாட்சியிடம் தம்பையர் கொண்டு வந்து வைத்திருந்த நெல் மணிகளும் முடிந்து விட்டன. விசாலாட்சி தம்பையர் இருந்த போதும், அவர் பெரிய பரந்தனுக்கு போய்விட கேணியிலிருந்து இரு கைகளிலும் பட்டைகளில் நீர் சுமந்து வந்து மரவள்ளி, கத்தரி, பயிற்றை, பாகல் முதலிய பயிர்களைச் செய்கை பண்ணுவாள்.  ஆழமான கேணியிலிருந்து இரண்டு கைகளிலும், பனை ஓலையினால் ஆன பட்டைகளில் நீர் நிரப்பி அவள் சுமந்து வரும் அழகே தனி தான். இப்போது தோட்டத்தினால் வரும் வருமானமே அவளுக்கு பிரதானமான வருமானமாகிவிட்டது.

அவ்வப்போது தேங்காய், மாம்பழம், பலாப்பழம் விற்றும் சிறு வருமானம் வந்தது. அவற்றை வைத்துக் கொண்டு கணபதியை மட்டுவில் திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தாள். முத்தரும் ஆறுமுகமும் தம்பிமாருக்கு வேளாண்மை சரிவராது என்று தெரிந்து விசாலாட்சியை நினைத்து கவலை கொண்டனர். ஆனால் தாங்கள் ஏதாவது சொல்லப் போக குடும்பத்திற்குள் பிரச்சினை வந்துவிடும் என்று பயந்தனர். மற்ற நண்பர்கள், தம்பிமாரின் பொறுப்பற்ற தன்மையை விசாலாட்சியிடம் வந்து கூறி விட்டனர். தம்பையர் காலத்தில் பொன் விளைந்த பூமியை அவர்கள் சீரழிப்பதாக முறையிட்டனர்.

விசாலாட்சி, ஆறுமுகத்தாரையும் முத்தரையும் அழைத்து விசாரித்தாள். அவர்களும் ஏனையவர்கள் சொல்வது உண்மை தான் என்று கூறினர். இப்போது விசாலாட்சி தம்பிமாரை எவ்வாறு காணியிலிருந்து அகற்றுவது என்று சிந்திக்கத் தொடங்கினாள்.

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன் 

https://vanakkamlondon.com/stories/2020/10/87711/ 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 7

250-2506618_mother-child-silhouette-son-

தம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது முடிந்து ஏழாவது வயது ஆரம்பம்.

தம்பையர் இறந்த பின்னர், விசாலாட்சியின் வாழ்க்கை எப்படி போகப் போகின்றது? என்றும், மிக இளம் வயதில் கணவனை இழந்த அவள், சிறு பிள்ளையை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகின்றாள்? என்றும் விசாலாட்சியின் உறவினர்களும், சினேகிதிகளும் கவலை கொண்டனர். தம்பையரின் ஆண்டுத் திவசம் முடியும் மட்டும் ஒருவரும் ஒன்றும் கதைக்கவில்லை.

ஓராண்டின் பின் சினேகிதிகள் மறுமணம் செய்வதைப் பற்றி, விசாலாட்சியுடன் கதைக்க ஆரம்பித்தனர். உறவினர்கள் சிலரும் அதைப் பற்றி கதைத்தனர். விசாலாட்சிக்கு தம்பையருடன் வாழ்ந்த போது அவரின் அன்பான செயல்கள், பெண்களை மதிக்கும் பண்பு, பிறருக்கு உதவும் மனப்பான்மை, தானும் வாழ வேண்டும் மற்றவர்களையும் வாழ வழிகாட்டல்கள் வேண்டும் என்ற எண்ணம், எண்ணத்திலும் செயலிலும் காணப்பட்ட தூய்மை என்பவற்றை நினைக்கும் தோறும், வேறு ஒருவருடன் வாழும் நினைப்பு அறவே வரவில்லை.

காலம் ஓடியது. தம்பிமாரால் வயலை விதைத்து லாபம் பெற முடியவில்லை. முத்தரும் ஆறுமுகமும் தம்மால் ஆன சிறு சிறு உதவிகளைச் செய்து கொண்டிருந்தனர். முத்தர், பூனகரியில் மொட்டைக் கறுப்பன் நெல் வாங்கி ஊருக்கு கொண்டு வருவார். அவர் மனைவி அதனை அவித்துக் குத்தி, கைக்குத்தரிசியென்று விசாலாட்சிக்கு அனுப்பி வைப்பாள்.

முத்தர் வரும் போதெல்லாம் உப்பு, புளி போன்ற பொருட்களையும் கொண்டு வந்து கொடுப்பார். ஆறுமுகம், தம்பையரின் பசுக்களின் பாலைக் காய்ச்சி, உறைய வைத்து தயிராக்கி, கடைந்து எடுத்த நெய்யை கொண்டு வருவார். தேன் கொண்டு வந்து கொடுப்பார்.

வரும் போதெல்லாம் கணபதிப்பிள்ளைக்கு ஏதாவது தின்பண்டங்கள் கொண்டு வருவார். கணபதிக்கும் ஆறுமுகத்துடன் கதைப்பது மிகவும் பிடிக்கும். தந்தையாருக்கு அடுத்த படி அவனுக்கு ஆறுமுகத்தைப் பிடிக்கும். ஆறுமுகமும், கணபதி காட்டைப்பற்றி, மிருகங்களைப் பற்றி, பெரிய பரந்தனைப் பற்றி, தோணியில் பிரயாணம் செய்வது பற்றி கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் சலிப்பில்லாமல் பதில் சொல்வார்.

விசாலாட்சியின் தம்பிமார் வயலைச் சீரழிப்பதைக் கேள்விப்பட்ட உறவினர்கள் இப்போது “விசாலாட்சி, ஆறுமுகத்தை ஏன் மறுமணம் செய்யக்கூடாது” என்று அவளைக் கேட்டனர். முத்தரும் இதைப் பற்றி விசாலாட்சியிடம் கதைத்தார். “ஆறுமுகம் உண்மையிலேயே நல்லவன். தம்பையரை சொந்த அண்ணனாகவே நினைப்பவன். கணபதியின் மேல் பாசம் உள்ளவன். அவனுக்கு கெட்ட பழக்கம் ஒன்றும் இல்லை. கலியாணம் செய்தால் உன்னையும் கணபதியையும் நல்லாய்ப் பார்ப்பான்.” என்று முத்தர் எடுத்துக் கூறினார்.

ஆறுமுகத்தின் மனைவி இறந்து மூன்று வருடங்கள் முடிந்து, நான்காவது வருடம் தொடங்கி விட்டது. 24 வயதில் மனைவியை இழந்தவர், இப்போது 28 வயதை நெருங்குகின்றார். நல்ல மனிதன், உழைப்பாளி, கடவுள் பற்று உள்ளவன். எப்போவாவது களைத்த நேரத்தில் பனையிலிருந்து உடன் இறக்கிய பனங்கள் கிடைத்தால் குடிப்பார். தென்னங்கள் குடித்தால் வாதம் வரும் என்று அதனைத் தொடுவதில்லை. சாராயத்தை நினைத்துப் பார்ப்பதே இல்லை.

உறவினர்களொடும் ஊர் மக்களோடும் மிகவும் அன்பாகவும் பணிவாகவும் பழகுவார். மற்றவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்வார். கணபதிக்கும் அவரைப் பிடிக்கும். அவரையே மறுமணம் செய்தால் என்ன? என்று உறவினர்கள் ஒருவர் மாறி ஒருவர் கேட்கலாயினர்.

“அடி மேல்  அடி அடித்தால் அம்மியும் நகரும்” அல்லவா? விசாலாட்சி தம்பையர் இறந்து மூன்று வருடங்களில் பின் தான் மறுமணத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கினாள்.

தனக்கும் 26 வயது நெருங்குகின்றது. நெடுக தனியே உழைக்க முடியாது. தம்பையரின் கனவு அழிந்து போவதை அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கணபதிக்காக, தம்பையர் தனது கடுமையான உழைப்பினால் தேடிய சொத்து பாதுகாக்கப்பட வேண்டும். தம்பிமாரை காணியை விட்டு எந்த மனவருத்தமும் இல்லாமல் வெளியேற்ற வேண்டும். ஆறுமுகத்தாரை மறுமணம் செய்தால், தம்பையரின் கனவையும் நிறைவேற்றலாம். கணபதியையும் ஒரு ஒழுக்கமான, மற்றவர்கள் மேல் அன்பு செலுத்துபவனான, பண்பான இளைஞனாக வளர்த்து விடலாம்.

ஆண் தலைமை அற்ற குடும்பங்களில் பிள்ளைகள், தாயாரின் செல்லத்தினால் கெட்டுப் போவதையும் விசாலாட்சி கண்டிருக்கிறாள். உறவினர்களிடம் “நான் ஆறுமுகத்துடன் நேரில் சில விடயங்கள் கதைக்க வேண்டும். அதன் பிறகு தான் அவனுடன் மறுமணம் செய்வது பற்றி நான் தீர்மானிப்பேன்” என்று உறுதியாக கூறி விட்டாள்.

முத்தர் ஆறுமுகத்திடம் “ஆறுமுகம் விசாலாட்சி தனிய இருந்து கணபதியை வளர்க்க கஷ்டப்படுகிறாள். கணபதியிலும் உனக்கு பாசம் தானே. நீ அவளை கலியாணம் செய்தால் என்ன?” என்று கேட்டார்.  ஆறுமுகம் பலர், முன்னர் கேட்ட போது “யோசிப்பம்” என்றவன் முத்தர் கேட்டவுடன் “விசாலாட்சிக்கும் சம்மதம் என்றால் நான் செய்கிறேன்” என்றான். ஆறுமுகம் விசாலாட்சியின் வீட்டிற்கு வந்து, குந்தில் அமர்ந்து கொண்டார்.

தம்பையர் உயிருடன் இருந்த போது, அடிக்கடி அந்தக் குந்தில் வந்திருந்து அவருடன் உரையாடியிருக்கிறார். விசாலாட்சியின் கையால் பலமுறை சாப்பிட்டிருக்கிறார். அப்போது அவளது நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, எதனையும் யோசித்து நிதானமாகப் பேசும் முறை எல்லாவற்றையும் கண்டு அவளின் மேல் மட்டற்ற மரியாதை வைத்திருந்தார். இப்போது ஒரு வித பயத்துடனும் பதட்டத்துடனும் விசாலாட்சி என்ன சொல்லப் போகின்றாவோ? என்று காத்திருந்தார். விளையாடிக் கொண்டிருந்த கணபதியைக் கூப்பிட்டு அருகில் இருத்தி அணைத்துக் கொண்டார்.

வீட்டிற்கு வெளியே வந்த விசாலாட்சி ஆறுமுகம் கணபதியை அணைத்தபடி இருந்ததை அவதானித்துக் கொண்டாள். நேரடியாக விடயத்திற்கு வந்தாள். “ஆறுமுகம்” என்றே வழமை போல பெயர் சொல்லி அழைத்தாள்.  “இஞ்சை பார் ஆறுமுகம், எனக்கு இப்ப கலியாணம் முக்கியமில்லை. கணபதியை நன்றாய் வளர்க்க வேண்டும். தம்பையர் தமது உயிரையும் மதிக்காது, அந்த யானைக் காட்டில் வெட்டி உருவாக்கிய காணியையும் அழிய விடமுடியாது. அதற்கு நீ உதவி செய்வாய் என்று நம்பித்தான் உன்னை கலியாணம் செய்ய யோசித்தேன். நீ, நான் கேட்கும் இரண்டு விடயத்திற்கு சம்மதிக்க வேண்டும். உனக்கென்று பிள்ளைகள் பிறந்தாலும், எனது மகன் கணபதியை வேறுபாடு காட்டாது உன்னுடைய மூத்த மகனாக வளர்க்க வேண்டும். மற்றது உன்னை கலியாணம் செய்த மறு நாளே நான் பெரிய பரந்தன் சென்று, தியாகர் வயலில் தம்பையர் கட்டிய வீட்டில் தான் குடியிருப்பேன். நீயும் இங்கேயும் அங்கேயும் அலையாமல் பெரிய பரந்தனிலேயே இருந்து விடலாம். இதற்கு என்ன சொல்கிறாய்?” என்று கேட்டாள்.

ஆறுமுகத்திற்கு கணபதி மேல் அளவு கடந்த பிரியம். தியாகர் வயலை தான், தனது தாய் மனை என்று எண்ணியிருக்கிறான். கரும்பு தின்ன கூலி வேண்டுமா? ஆறுமுகம் உடனேயே தனது சம்மதத்தை தெரிவித்தான்.

ஆறுமுகத்தாருக்கும் விசாலாட்சிக்கும் நாட்சோறு கொடுப்பதாக உறவினர்கள் தீர்மானித்தார்கள். அப்போது திருமணம் என்பது நாட்சோறு கொடுத்து, பின் தம்பதிகளைத் தனியே விடுவதாகும்.

உறவினர் உடனேயே எல்லா ஒழுங்குகளையும் செய்தனர். நல்ல நாள் பார்க்கப்பட்டது. விசாலாட்சியையும் ஆறுமுகத்தையும் குளித்து வரச் செய்தனர். ஆறுமுகம் வேட்டியைக் கட்டி தோளில் ஒரு துண்டைப் போட்டிருந்தார். விசாலாட்சி புதிதாக வாங்கிய சேலையை கட்டியிருந்தாள். விசாலாட்சியை சோறும் இரண்டு கறிகளும் காய்ச்ச செய்தனர்.

முன் விறந்தை மெழுகப்பட்டது. அதில் நிறைகுடம் வைக்கப்பட்டது. சாணகத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் ஒரு அறுகம்புல் செருகி விட்டனர். சிட்டிகளில் விபூதி, சந்தனம் வைத்தனர். ஒரு சிட்டியில் தேங்காய் எண்ணை ஊற்றி விளக்கு தயாராக இருந்தது. நிறைகுடத்தின் மேல் மஞ்சள் பூசி, நடுவே ஒரு மஞ்சள் கட்டிய கயிறு வைக்கப்பட்டது.

ஒரு பனை ஓலைப் பாய் விரித்து ஆறுமுகத்தையும் விசாலாட்சியையும் இருத்தினர். குடும்பத்தில் வயதில் மூத்த ஒருவர் தீபம் ஏற்றினார். மணமக்களுக்கு வீபூதியைப் பூசி, சந்தனத்தை வைத்து விட்டார். தேவாரம், திருவாசகங்கள் பாடினார். மஞ்சள் கயிற்றை எடுத்து ஆறுமுகத்தின் கையில் கொடுத்தார். கணபதி ஓடி வந்து ஆறுமுகத்திற்கும் விசாலாட்சிக்கும் பின்னால் இருவரினதும் தோள்களைப் பற்றியபடி நின்றான். ஆறுமுகம் விசாலாட்சியின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு கட்டி விட்டான். கணபதிக்கு, ஆறுமுகம் தான் புது தகப்பன் என்று உறவினர்கள் முதலே கூறிவிட்டனர். அவனுக்கு அதில் முழுச் சம்மதம்.

விசாலாட்சியை தலை வாழை இலையில் சாப்பாடு பரிமாறச் செய்து, ஆறுமுகத்தை சாப்பிட வைத்தனர். ஆறுமுகம் கணபதியைக் கூப்பிட்டு அருகில் இருத்தினார். அவனுக்கும் தீத்தி தானும் சாப்பிட்டார். பின் அதே இலையில் உணவு பரிமாறி விசாலாட்சியையும் சாப்பிட வைத்தனர்.

திருமணம் இனிதே நிறைவேறியது. உறவினர்களை பந்தியில் இருத்தி உணவு பரிமாறினர். எல்லோரும் சென்ற பின்னர் ஆறுமுகம் விறாந்தையின் ஒரு பக்கத்தில் பனை ஓலைப் பாயில் படுக்க, கணபதி அவனைக் கட்டிப் பிடித்த படி உறங்கிக் போனான். விசாலாட்சி பொருட்களை ஒதுக்கி வைத்து, மறு நாள் பெரிய பரந்தன் செல்வதற்காக சாமான்களை மூட்டையாக கட்டினாள்.

அந்த நாட்களில் திருமணம் என்பது, செலவில்லாமல் ‘நாட்சோறு’ கொடுத்தலுடன் நிறைவேற்றப்பட்டது. மேடை இல்லை. அலங்காரம் இல்லை. ஐயர் இல்லை. மந்திரம் இல்லை. தங்கம் இல்லை. சீதனம் இல்லை. இரு மனம்  கலந்தால் போதும். அந்த பொற்காலம் மீண்டும் வருமா?

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி.! - 8

thumbnail_5c81cbd3-cc91-41b8-979b-afeee9

திருமணத்தின் அடுத்தநாள் விசாலாட்சி அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வந்து, காலை உணவிற்காக கஞ்சியும், மத்தியானத்திற்கும், இரவிற்கும் கட்டு சாதமும் செய்ய ஆரம்பித்தாள். ஆறுமுகத்தையும் அவரை அணைத்தபடி படுத்திருந்த கணபதியையும் எழுப்பி குளித்து விட்டு வரச் சொன்னாள்.

ஆறுமுகம், கணபதியைக் குளிக்க வார்த்து, தானும் குளித்து விட்டு வந்தான். இருவருக்கும் சிரட்டைகளில் கஞ்சி வார்த்து குடிக்கச் செய்தாள். அப்போது கணபதியை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்லும் கிழவர், மாட்டு வண்டியில் வந்தார். அவருக்கும் கஞ்சி வார்த்துக் குடிக்கச் செய்து தானும் குடித்தாள். குடித்த பின் பாத்திரங்களை கழுவி அடுக்கினாள்.

ஆறுமுகமும் கிழவரும் விசாலாட்சி முதல் நாள் கட்டி வைத்த பொதிகளை வண்டியில் ஏற்றினார்கள். கணபதி சிறு பொதிகளை ஓடி ஓடி எடுத்துக் கொடுத்தான். விசாலாட்சி வீட்டை கூட்டி ஒழுங்குபடுத்தினாள்.

விசாலாட்சி வீட்டை ஒருமுறை சுற்றி பார்த்தாள். தானும் தம்பையரும் ஏழு ஆண்டுகள் குடித்தனம் செய்த வீடு. இனி இந்த வீட்டுக்கு வருவாளோ.. தெரியாது. வீட்டை அழிய விடுவதில்லை என்று தீர்மானித்திருந்தாள். தனது நெருங்கிய சினேகிதி ஒருத்தியை வீட்டை அடிக்கடி கூட்டுவதற்கும் மாதமொருமுறை மெழுகுவதற்கும் ஒழுங்கு செய்திருந்தாள். வேய்தல் போகத்திற்கு ஆறுமுகத்தாரை அனுப்பி வேயச் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

அவர்களை வழியனுப்ப உறவினர்களும் நண்பர்களும் வந்திருந்தனர். அவர்கள் விசாலாட்சியிடம் “வன்னியில் பாம்புகள், கரடிகள், சிறுத்தைகள், யானைகள் இருக்குதாம். கவனமாக இருந்து கொள்” என்று உண்மையான கரிசனையுடன் கூறினார்கள்.

ஆண்கள் “ஆறுமுகம், தனியாக ஒரு பெண் பிள்ளையையும் சிறுவனையும் அழைத்துச் செல்கின்றாய். கவனமாக பார்த்துக் கொள்.” என்று சொன்னார்கள். விசாலாட்சி வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள். ஆறுமுகம், கணபதியை வண்டியில் ஏற்றி விட்டு தானும் ஏறி அவனருகில் இருந்து கொண்டான். விசாலாட்சி திரும்பி ஒரு முறை வீட்டைப் பார்த்தாள். அவள் கண்கள் கலங்கி விட்டன. மற்றவர்கள் அறியாது கைகளால் துடைத்துக் கொண்டாள். வண்டில் சலங்கைகள் ஒலியெழுப்ப வேகமாக ஓடத்தொடங்கியது.

விசாலாட்சி தங்கள் மூவரினதும் வாழ்க்கை எவ்வாறு அமையப் போகின்றதோ என்ற கவலையில் இருந்தாள். கணபதி மிகவும் மகிழ்ச்சியாக பயணம் செய்தான். ஆறுமுகம் நான்கு வருடங்கள் தனியாக கழிந்த வாழ்க்கையில் இப்போது கிடைத்த இந்த சுகமான சுமையை தான் பொறுப்பாக கவனித்து கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

வண்டில் கச்சாய் துறையை அடைந்தது. செருக்கன் நண்பன் தோணியை கொண்டு வந்திருந்தார். விசாலாட்சி தோணியில் ஏறி முன் பக்கமாக இருந்து கொண்டாள். கணபதி தாயாரின் அருகே இருந்து கொண்டான். ஆறுமுகமும் கிழவரும் பொதிகளை வண்டிலால் இறக்கி, தோணியில் ஏற்றினார்கள். ஆறுமுகம், கிழவருக்கு நன்றி கூறி காசைக் கொடுத்தார். விசாலாட்சியும் கணபதியும் நன்றி கூறி அனுப்பினர்.

ஆறுமுகம் தோணியில் ஏறி கணபதியின் பக்கத்தில் இருந்தான். கணபதி அவர்கள் இருவருக்கும் நடுவில் இருந்து கொண்டான். செருக்கனுக்கு போக வந்தவர்களும் தோணியில் ஏறிக் கொண்டார்கள். அவர்கள் பெரிய பரந்தன் சென்று முதல் முதல் வாழப்போகும் பெண்ணை அதிசயமாக பார்த்தனர்.

தோணி ஓடத் தொடங்கியது. ‘ஆலா’ப் பறவைகள் தோணியைத் தொடர்ந்து பறந்து வந்தன. கணபதி அவற்றை அண்ணாந்து பார்த்தான். “கணபதி, தோணியுடன் பயணம் செய்யும்  இவை ‘ஆலாக்கள் ‘ சிலர் இவற்றை ‘கடல் காகம்’ என்றும் கூறுவர்” என்று ஆறுமுகம் சொன்னார். சிறிது தூரம் செல்ல, மிகப் பெரிய பறவைகள் நீந்திக் கொண்டிருந்தன. அந்த பெரிய பறவைகள் மீன்களை பிடித்து அண்ணாந்து வாயை பெரிதாக திறந்து விழுங்கின.

கணபதிக்கு அது வேடிக்கையாக இருந்தது. ஆறுமுகம் “கணபதி, அந்த பெரிய பறவைகளின் பெயர் கூழைக்கடா” என்றார். இன்னும் சிறிது தூரம் செல்ல தூரத்தில் கூட்டமாக நீந்தும் பறவைகளை கணபதி கண்டான். அவை நீரில் மூழ்கி மீனைக் கவ்விக் கொண்டு மேலே வந்தன.

தோணி ஓட்டி “தம்பி, அவை ‘கடல் தாராக்கள்’. நாங்கள் வீட்டில் வளர்க்கும் தாராக்களை விட சிறியவை. அதனால் தான் அவை தூர இடங்களுக்கும் பறக்கின்றன” என்று கணபதிக்கு கூறினான். அப்போது அவர்களை விலத்திக்கொண்டு சுட்டதீவிலிருந்து புறப்பட்ட தோணி ஒன்று சென்றது. அந்த தோணியிலிருந்தவர்கள் ஆறுமுகத்தாரையும் குடும்பத்தவர்களையும் மகிழ்ச்சியுடன் நோக்கி கைகளை ஆட்டியபடி சென்றனர்.

தோணி சுட்டதீவு துறையை அடைந்தது. எல்லோரும் இறங்கினார்கள். 1910 ஆம் ஆண்டு விசாலாட்சியும் கணபதியும் முதல் முதலாக இக்கரையில் கால் பதித்தார்கள்.

முத்தர், தம்பையரின் எருத்து மாட்டு வண்டிலில் வந்திருந்தார். ஆறுமுகமும் முத்தரும் பொதிகளை இறக்கி வண்டிலில் ஏற்றினார்கள். எருதுகள் இரண்டையும் முத்தர் ஒரு மரத்தின் நிழலில் கட்டியிருந்தார். முத்தர் “ஆறுமுகம் முதல் முதல் விசாலாட்சியும் கணபதியும் வந்திருக்கின்றார்கள். கூட்டிச் சென்று கோவிலைச் சுற்றி கும்பிட்டு விட்டு வா.” என்றார்.

ஆறுமுகம், விசாலாட்சியையும் கணபதியையும் கோவில் பூவலுக்கு அழைத்துச் சென்று கை, கால், முகம் கழுவிக் கொள்ளச் செய்தார். தனது தோளில் இருந்த துண்டைக் கொடுத்து துடைக்கச் செய்தார். மூவரும் கோவிலைச் சுற்றி வந்து சேர, முத்தரும் வந்து சேர்ந்தார். முத்தர் தான் கொண்டு வந்த கற்பூரத்தை ஏற்றினார். நால்வரும் கண் மூடி கும்பிட்டனர். எல்லோரும் திருநீறு பூசி சந்தனப் பொட்டும் வைத்தனர். ஆறுமுகம் கணபதிக்கு திருநீறு பூசி ஒரு வட்ட வடிவ சந்தனப் பொட்டும் வைத்துவிட்டான்.

தாயும் மகனும் முத்தருக்கும் ஆறுமுகத்திற்கும் பின்னால், கடலையும் காட்டையும்  ஆச்சரியமாகப் பார்த்தபடி நடந்து வண்டிலை அடைந்தனர். வெள்ளை நிற எருது நின்று கொண்டு அசை போட்டது. மயிலை படுத்திருந்து அசை போட்டது. முத்தர் எருதுகளை தடவி விட்டார். கணபதி ஓடிச்சென்று தானும் எருதுகளை தடவி விட்டான். “கணபதி, இந்த எருதுகளை உன்ரை ஐயா பார்த்து பார்த்து வளர்த்தவர்” என்று முத்தர் சொன்னார். கணபதி மயிலையின் தோளில் முகத்தை வைத்து அணைத்துக் கொண்டான்.

விசாலாட்சி வண்டிலின் முன் பக்கத்தில் ஏறி இருந்து கொண்டாள். ஆறுமுகம், கணபதியை ஏற்றி விட்டு தானும் பின்னால் ஏறி அமர்ந்தான். கணபதி தாயையும் தகப்பனையும் அணைத்தபடி அவர்கள் இருவருக்கும் நடுவில் இருந்தான். முத்தர் வண்டிலில் எருதுகளைப் பூட்டி விட்டு, முன்னால் ஏறி இருந்து வண்டிலை ஓட்டினார்.

வண்டில் காட்டின் நடுவே ஓடியது. வழியில் மயில்கள், மான்கள், மரைகள், குழுவன் மாடுகள் என்பன வண்டிலைக் கண்டு பயந்து சிறிது தூரம் ஓடி, பின் நின்று திரும்பி குறு குறுவென்னு பார்த்தன. “ஒரு நாளும் இல்லாத திருநாளாய் பெண்ணொருத்தி இந்த மண்ணில் வாழ வந்து விட்டாளே” என்று அவை பார்க்கின்றனவோ? என விசாலாட்சி எண்ணிக் கொண்டாள். குரங்குகள் அவர்களைக் கண்டதும் மரத்திற்கு மரம் தாவி ஏறின.

கணபதி,ஆறுமகத்திடமும் முத்தரிடமும் கேள்விகள் கேட்டபடி மகிழ்ச்சியுடன் பயணம் செய்தான். முத்தரும் ஆறுமுகமும் விலங்கியல் ஆசிரியர்களாக மாறி வழியில் கண்ட எல்லா மிருகங்களின் பெயர்கள்களையும் அவற்றின் இயல்புகளையும்

கணபதிக்கு கூறிக் கொண்டே வந்தனர். கணபதி வழியில் ஒரு பெரிய பாம்பைக் கண்டான். “அதன் பெயர் ‘வெங்கிணாந்தி’ என்றும், அது ஒரு சிறிய வகை மலைப் பாம்பு என்றும், அது ஆட்டுக் குட்டிகள், கோழிகள், மான் குட்டிகள, முயல்கள்  என்பவற்றை உயிருடன் விழுங்கி விடும்” என்றும்  முத்தர் கூறினார்.

வழியில் நீலனாற்றின் கிழையாறு ஒன்று குறுக்கிட்டது. வண்டில் ஆற்றில் இறங்கி மறு கரையில் ஏறியது. வண்டில் இறங்கி ஏறிய சத்தத்திற்கும் சலங்கைகளின் சத்தத்திற்கும் பயந்து, மறு கரையில் வெய்யில் காய்ந்து கொண்டிருந்த முதலை ஒன்று பாய்ந்தோடி ஆற்றுக்குள் குதித்தது. கணபதி பயந்து தாயை கட்டிப் பிடித்தான்.

வண்டில் குறிப்பம் புளியை அணுகியது. ஆறுமுகம், விசாலாட்சியிடமும் கணபதியிடமும் புளிக்கும் நீர் நிலைக்கும் இடைப்பட்ட வெளியைக் காட்டி “தம்பையர், நான், முத்தர், ஏனையவர்களுடன் முதல் முதல் தங்கியது இந்த வெளியில் தான்” என்று கூறினார். கணபதி புளியை அண்ணாந்து பார்த்து “எவ்வளவு உயரம்” என்று அதிசயப் பட்டான்.

thumbnail_bccbc14a-0356-47a0-8a86-1716a0

( இப் படத்தில் காணும் நீர்நிலை இன்று வரை காணப்படுகின்றது. மாடுகள், ஆடுகள் தங்கள் தாகம் தீர்க்க இந் நீர்நிலைகளை உபயோகப்படுத்துகின்றன..)

கணபதி பசு மாடுகளை ஒத்த, சற்று பெரிய தோற்றமுள்ள சில மிருகங்கள் நீர் நிலையில் நின்றும், படுத்தபடியும் இவர்களைப் பார்த்துக் கொண்டு இருப்பதைப் பார்த்தான்.  அந்த மிருகங்கள் எல்லாம் சேற்றில் புரண்டு எழுந்ததால் சேற்றின் நிறத்தில் இருந்தன. அவற்றை கணபதி ஆவலுடன் பார்ப்பதைக் கண்ட முத்தர் “அவை எருமை மாடுகள். சேற்றில் உழுவதற்கும், பிரதானமாக சூடு அடிப்பதற்கும் அவற்றை நாங்கள் பயன் படுத்துவோம்” என்று விளங்கப்படுத்தினார்.

வண்டில் ‘ தியாகர் வயலை’ அடைந்தது. விசாலாட்சியும் கணபதியும் முதல் முதலாக தியாகர் வயலில் இறங்கினர். எங்கிருந்தோ நான்கு நாய்கள் வால்களை ஆட்டியபடி ஓடி வந்து அவர்களின் கால்களை நக்கின. அந்த ஐந்தறிவு ஜீவன்களுக்கு அவர்கள் தான் தங்கள் புதிய எசமானர்கள் என்பது புரிந்து விட்டது போலும். பின்னர் கணபதி எங்கு சென்றாலும் அவை அவனுடனேயே திரிந்தன.

விசாலாட்சியும் கணபதியும் வீட்டையும் வளவையும் சுற்றிப் பார்த்தனர். மூன்று கொட்டில்களை கொண்ட தொகுதி. ஒரு பெரிய அறை, மண் குந்துகள் வைத்து, மேலே ஓலையால் அடைக்கப் பட்டிருந்தது. தனியாக ஒரு சிறிய சமையலறை. வருபவர்கள் தங்குவதற்காக ஒரு தலைவாசல். யாவும் அண்மையில் மெழுகப் பட்டிருந்தன. வளவு புற்கள் செருக்கப்பட்டு, துப்பரவாக கூட்டப்பட்டிருந்தது. இரண்டு புதிய பனையோலைப் பாய்கள் கழுவி காயப் போடப்பட்டிருந்தது.

விறகுகள் ஒரே அளவில் வெட்டி அடுக்கப்பட்டிருந்தன. ஒரு மண் குடத்திலும் ஒரு சருவக் குடத்திலும் நீர் நிறைத்து மூடப்பட்டிருந்தது. முத்தர் தனது தம்பிமாரின் உதவியுடன் யாவற்றையும் செய்துள்ளார் என்பதை விசாலாட்சி விளங்கிக் கொண்டாள். ஆறுமுகத்தார் பொதிகளை இறக்கி அறையினுள் வைத்தார். முத்தர் எருதுகளை அவிட்டு தண்ணீர் குடிக்க வைத்து கட்டினார். வண்டிலை அதற்குரிய கொட்டிலினுள்ளே தள்ளி நிறுத்தினார்.

விசாலாட்சி கணபதியை அழைத்துக் கொண்டு பூவலுக்கு போய் கணபதியையும் கை, கால், முகம் கழுவச் செய்து, தானும் கழுவி விட்டு வந்தாள். ஆறுமுகமும் முத்தரும் சுத்தம் செய்து வந்ததும் மூவருக்கும் கட்டுச்சோறு சாப்பிடக் கொடுத்து, தானும் சாப்பிட்டாள். நாய்களுக்கும் சாப்பாடு வைத்தாள்.

மாலை நேரம் வந்த போது தம்பிமார் முதலில் வந்தனர். பின்னர் ஏனைய உறவினர்கள் ஒவ்வொருவராக வந்தனர். தம்பிமார் “அக்கா, நீங்கள் வருவதாக அறிந்ததும் நாங்கள், எங்கள் வீட்டிற்கு போய் விட்டோம். ஆனால் இரவில் இங்கு தான் வந்து படுப்போம். இனியும் உங்களுக்கு ஊர் பழகும் வரையும் இரவில் இங்கு வந்து, தலைவாசலில் படுத்து விட்டு செல்வோம் “என்றனர்.

விசாலாட்சிக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. தம்பிமார் எந்த குறையும் இன்றி தங்களது வீட்டிற்கு போனது ஆறுதலாகவும் இருந்தது. வந்தவர்கள் யாவரும் கணபதியுடன் விளையாடினர். எல்லோருக்கும் தேனீர் ஆற்றி ஒவ்வொரு பனங்கட்டி துண்டுகளுடன் கொடுத்தாள். வந்தவர்கள் விடை பெற்றுச் சென்றனர். விசாலாட்சிக்கு அன்று இனி வேலை ஒன்றும் இல்லை.

இரவுச் சாப்பாட்டிற்கும்  கட்டுச்சோறு இருந்தது. இரவும் வந்தது. எல்லோரும் சாப்பிட்ட பின்னர் படுக்கச் சென்றனர். கணபதிக்கு இனி பள்ளிக்கூடம் இல்லை. அவன் தன் வயது நண்பர்களுடன் இனி விளையாட முடியாது. ஆறுமுகத்தின் வழிகாட்டலும் புதிய மண்ணும் தான் அவனுக்கு அனுபவ அறிவை கொடுக்க வேண்டும். தானும் அவனது வளர்ச்சியில் கரிசனையுடன் இருக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் விசாலாட்சி நித்திரையானாள்.

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - 9

farmer-ploughing-field.jpg

பெரிய பரந்தனில் இறங்கிய மறு நாளிலிருந்து விசாலாட்சியும் கணபதியும் ஊர் வாழ்க்கையுடன் ஒன்றி விட்டனர். காலை எழுந்தவுடன் விசாலாட்சி வீடு கூட்டி, முற்றம் கூட்டி விட்டு, ‘பூவலுக்கு’ போவாள். பனை ஓலைப் ‘பட்டை’ யில் தண்ணீர் அள்ளிக் கொண்டு, அருகில் இருந்த பனங்கூடலுக்கு ஒதுங்குவதற்கு செல்வாள். தூய்மைப் படுத்திக் கொண்டு, கூடலில் நின்ற வேப்ப மரத்தில் ஒரு குச்சியை முறித்து பல் துலக்கிக் கொள்வாள். வாயெல்லாம் கைக்கும். பூவலுக்கு வந்து வாய் கொப்பளித்து, முகம் கழுவிக் கொள்ளுவாள். அவளுக்கு தம்பையர் இருக்கும் மட்டும் “ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்ற மூத்தோர் கூற்றை ஞாபகப் படுத்துவதுண்டு. ஆலங் குச்சியிலும் வேலங்குச்சியிலும் உள்ள கைப்புத் தன்மை வாய்க்குள் இருக்கும் அழுக்குகளை நீக்கி விடும் என்று கூறுவார். ஆனாலும் அவளால் இப்போது தொடர்ந்து வேப்பம் குச்சியினாலோ (வேல்), ஆலங் குச்சியினாலோ பல் துலக்க முடியவில்லை.

கணபதி எவ்வாறு சமாளிப்பான் என்றும் அவள் கவலைப்பட்டது உண்டு. ஆனால் அவன் ஆறுமுகத்தாரைப் பார்த்து சர்வ சாதாரணமாக குச்சியால் பல் துலக்க பழகி கொண்டான். தந்தைமார்களை முன் மாதிரியாக கொண்டு தான் ஆண் பிள்ளைகள் எதையும் செய்வார்கள் என்பதை புரிந்து கொண்டு நிம்மதி அடைந்தாள்.

கால போக சூடு அடித்தபின் வரும் சப்பி நெல்லை எரித்து தனக்கு மட்டும் என்றாலும் உமிச்சாம்பல் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

விசாலாட்சி பூவலில் தனது சருவக் குடத்தை நீரால் நிரப்பி இடுப்பில் வைத்துக் கொண்டு வரவும், ஆறுமுகமும் கணபதியும் காட்டிலே காலைக் கடன் முடித்து, வாய் துலக்கி, நீர் நிலையில் முகம் கழுவி, பின் ‘காலை’ சென்று ஒரு செம்பில் பால் கறந்து கொண்டு, மாடுகளை காட்டில் மேய்வதற்கு கலைத்து விட்டு வரவும் சரியாக இருந்தது. சிறிய கன்றுகளை காட்டில் விடுவதில்லை. ‘காலையில்’ அடைத்தே வைத்திருப்பார்கள். காலையும் மாலையும் ஒவ்வொரு பசுவிலும் சிறிதளவு பால் மட்டும் கறந்து விட்டு, மிகுதியை கன்றுகள் குடிக்க விட்டு விடுவார்கள். கன்றுகள் வாயில் நுரை தள்ள தள்ள குடித்து விட்டு வாலைக் கிளப்பி கொண்டு ஓடி விளையாடுவினம்.

விசாலாட்சி அளவான சூட்டில் பால் காய்ச்சி சிரட்டைகளில் ஊற்றி அவர்கள் இருவருக்கும் கொடுத்து, தானும் குடிப்பாள். பனங்கட்டி கொடுப்பதில்லை. பசுக்கள் காட்டிலே புற்களை மேயும் பொழுது மூலிகைச் செடிகளையும் சாப்பிடுகின்றன. அதனால் பால் சுவையாகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும் இருக்கின்றது. ஊரிலே புற்களுக்கே பஞ்சம். வைக்கோலும் தவிடும் புண்ணாக்கும் தான் வைக்கிறார்கள். பாலில் மணம் குணம் ஒன்றும் இருக்காது. பனங்கட்டி இல்லாமல் குடிக்க முடியாது.

‘காலை’

மாடுகள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் காட்டிலே அடர்ந்த மரங்கள் சில உள்ள மேடான இடத்தை தெரிவு செய்வர். மரங்களைச் சுற்றி இருபத்தைந்து அடி ஆரையுடன் பட்டமரங்களை வட்ட வடிவில் அடுக்குவார்கள். மாடுகள் போய் வருவதற்கு ஒரு பாதை விடுவார்கள். வெட்டிய அலம்பல்களால் அந்த வட்ட வடிவ மரங்களை நரிகள் நுழையாதவாறு அடைத்து விடுவார்கள். ‘காலை’ தயார். இரவில் மாடுகளை ‘காலையில்’ அடைத்து விடுவார்கள்.

மாடுகள் வெளியே போக மாட்டா. நரிகள் உள்ளே வந்து கன்றுகளைக் கடிக்க மாட்டா. சிறுத்தைகள் உள்ளே வருவதை தடுக்க முடியாது. அதனால் வெளியே மூன்று நான்கு இடங்களில் பட்டமரக் குற்றிகளை குவித்து எரித்து விடுவார்கள்.

மேலதிக பாதுகாப்பிற்காக பெரிய பரந்தன் மக்கள் மிக நெருக்கமாக ‘காலைகளை’ அமைப்பார்கள். பொதுவாக மாரி காலத்தில் தான் காலையை அடைப்பார்கள். அலம்பல் தட்டிகள் பல செய்து முடித்த பின்னர் பயிர்ச் செய்கை இல்லாத போது வயலில் பட்டிகளில் அடைக்க முடிவு செய்துள்ளார்கள். எருவை விட மாட்டுச் சலத்தில் தான் தளைச் சத்து கூடுதலாக இருக்கும்.

கணபதி, ஆறுமுகத்தாரின் வழி காட்டலால் பல விடயங்களை கற்றுக் கொண்டு விட்டான். ஆறுமுகம் வரம்பு புல் செருக்க, கணபதியும் ஒரு சிறிய மண் வெட்டியால் செருக்குவான்.

விசாலாட்சி செருக்கிய புற்களை கூட்டி அள்ளி வயலுக்குள் சிறிய சிறிய குவியலாக குவிப்பாள். ஒரு வெய்யிலில் காய்ந்த பின் எரித்து விடுவாள்.

ஆறுமுகம் வேலியில் நின்று வயலுக்கு நிழல் தரும் பூவரசு மரங்களில் ஏறி கிளைகளை வெட்டி வீழ்த்துவார். கணபதி கீழே நின்று, அவற்றை கழித்து தடிகளை புறம்பாகவும் இலைகளைப் புறம்பாகவும் போடுவான். விசாலாட்சி இலைகளை அள்ளிக் கொண்டு போய் வயலில் பரவி விடுவாள். விசாலாட்சி சமைக்கும் போது, ஆறுமுகமும் கணபதியும் வண்டிலில் எருதுகளைப் பூட்டிக் கொண்டு ‘காலைக்கு’ போவார்கள். ஆறுமுகம் அங்கு ஒவ்வொரு நாள் மாலையும் குவித்து வைக்கும் எருக்களை கடகங்களில் நிறைத்து, வண்டிலின் மேலே வைப்பார். கணபதி கடகங்களை இழுத்து உள்ளே சமனாக பரவுவான். நிரம்பிய பின் வண்டிலை தமது வயலை நோக்கி செலுத்துவார்கள். இப்போது கணபதியும் நன்கு வண்டில் ஓட்டப் பழகி விட்டான். எருக்களை கொண்டு சென்று வயலில் பரவுவார்கள்.

கணபதி, ஆறுமுகத்தாரை பார்த்து மச்சம், மாமிசம் சாப்பிடப் பழகி விட்டான். விசாலாட்சி அதனை பொருட்படுத்தவில்லை. தான் மட்டும் தனியே சைவ சாப்பாடு செய்து சாப்பிடுவாள். அதுவும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. சில காலங்களில் பெரிய பரந்தனில் மரக் கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். மெல்ல மெல்ல தானும் மாற வேண்டி வரும் என்பது அவளுக்கு புரிந்தது.

ஆறுமுகத்தார், ‘சிராய் ஆமை’, ‘பாலாமை’ என்பவற்றை சாப்பிட மாட்டார். “அவை அழுக்குகளை சாப்பிடுகின்றன” என்று சொல்லுவார். ஆனால் ‘கட்டுப்பெட்டி’ ஆமையை விரும்பி உண்பார். “கட்டுப்பெட்டி ஆமைகள் புற்களை மட்டும் தான் சாப்பிடுகின்றன” என்று சொல்லுவார். ஆறுமுகத்தார் கட்டுப் பெட்டி ஆமையை மிகவும் சுவையாக சமைப்பார். அவரைப் பார்த்து கணபதியும் சாப்பிடுகின்றான். “நல்ல சுவையான கறி அம்மா” என்று தாயிடம் சொல்லுவான்.

‘கட்டுப்பெட்டி’ ஆமைகள் மிக அழகானவை என்று விசாலாட்சியும் அறிவாள். அழகான நிறத்தில் பெட்டி பெட்டியாக இருக்கும். பறங்கி அதிகாரிகள் இந்த வகை ஆமைகளைக் கொன்றுவிட்டு, உள்ளே இருப்பவற்றை நீக்கிவிட்டு கழுவி காயவைத்து, தமது கந்தோர்களில் மேசைகளின் மேலே அழகிற்காக வைத்திருக்கிறார்களாம் என்று தோழிகள் சொல்லக் கேட்டிருக்கிறாள்.

ஆறுமுகம் மிகவும் உயரம் பெருப்பமான மனிதர். அவருடன் சமனாக மற்றவர்களால் நடக்க முடியாது. கணபதி துள்ளி துள்ளி ஓடி ஓடித் தான் அவருடன் கதைத்தபடி வருவான். இப்போது கணபதியும் ‘டார்’ வைக்கப் பழகி விட்டான். ஆறுமுகமும் கணபதியும் மான்கள், மரைகள் நடமாடும் இடங்களை நோட்டமிடுவார்கள். மாடுகள் மேய்வதற்கு செல்லாத, மனிதர்கள் போகாத இடமாக தெரிவு செய்வார்கள். மான்கள், மரைகள் போகும் பாதையில் ஆழமான சதுர வடிவ குழியை வெட்டி விடுவார்கள். குழியின் மேல் உக்கிய, மெல்லிய தடிகளை குறுக்கும் நெடுக்குமாக போடுவார்கள். அதன் மேல் குழைகளை பரவி விடுவார்கள். கிடங்கு வெட்டியது தெரியாதவாறு தடிகளின் மேலே மண் போட்டு பரவி விடுவார்கள். விலங்குகளுக்கான மரணப் பொறி தயார்.

ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் போய் பார்ப்பார்கள். சில வேளைகளில் மான், மரை, பன்றி விழுவதுண்டு. கஷ்டகாலமாயின் கரடியும் விழுந்து விடும். ஒருவரும் கரடி இறைச்சி சாப்பிட மாட்டார்கள். தோல் மட்டும் பயன்படும். ஆனால் அது போடும் சத்தத்திற்கும், அதனைக் கொல்வதற்கும் எல்லோரும் அஞ்சுவார்கள். ஏனைய விலங்குகள் என்றால் விழுந்த அன்று பெரிய பரந்தனில் எல்லோருக்கும் கொண்டாட்டம் தான். அந்த இடத்தில் பொறி வைத்திருக்கிறது என்று எல்லோருக்கும் முதலே அறிவித்து விடுவார்கள்.

பொறி இருப்பது தெரியாது விட்டால் ஆட்களும் விழுந்து விடுவார்கள். வளர்ப்பு மிருகங்களும் விழுந்து விடக்கூடும். பெரும்பாலும் ஊரே கூடித் தான் இவ்வாறு பொறி வைப்பார்கள். யாராவது ஒருவர் தூரத்தில் ஒரு மரத்தில் ஏறி நின்று அவதானிப்பார். அவர் ஆபத்து ஒன்றும் வராதவாறு தடுத்து விடுவார்.

மழை பெய்யத் தொடங்கியது. இரண்டு கலப்பைகளில் எருதுகளை பூட்டினார்கள். ஆறுமுகத்தார் முன்னே உழுதுகொண்டு போக, கணபதி பின்னே உழுது கொண்டு போனான். இரண்டே நாட்களில் கணபதி உழவு பழகி விட்டான்.

இது முதல் மழை. விதைக்கும் நிலத்தை பண்படுத்தும் உழவு. இந்த உழவு ‘நில எடுப்பு’ எனப்படும். அவசரம் இல்லை. அவரவர் காணியை தாமே உழுவார்கள்.

விதைப்புக் காலம் நெருங்கியது. விதை நெல் சூடுகளை அடித்தார்கள். இதற்கு ஒருவருக்கொருவர் உதவி செய்தார்கள். விதைப்பு இரண்டு வகைப்படும். புரட்டாதி மாதம் புழுதியாக விதைப்பார்கள். நிலத்தில் ஈரம் இருக்காது. மழை வரும்வரை காத்திருந்து, மழை வந்ததும் நெற்கள் முளைக்கும். மற்றது, ஈர விதைப்பு. நிலம் மழைக்கு நனைந்து ஈரமான பின்னர் விதைப்பார்கள். நெல் உடனேயே முளைவிடும். விதைப்பின் பொழுது கூட்டாக வேலை செய்வார்கள்.

இது வரை ஒருவரை சமைப்பதற்கு என்று ஒழுங்கு செய்வார்கள். அவரும் எதையோ அவித்து வைப்பார். பசிக்கு சுவை தெரியாது. ஊருக்கு போனால்தான் ஒழுங்கான சாப்பாடு கிடைக்கும். விசாலாட்சி வந்த மூன்றாம் நாள் ஆறுமுகத்தாரைக் கொண்டு எல்லோரையும் அழைப்பித்து சாப்பாடு கொடுத்தாள். எல்லோரும் உறவினர்கள் என்பதாலும், தம்பையர், ஆறுமுகத்தார், விசாலாட்சி மேலுள்ள அன்பாலும் எல்லோரும் வந்தனர். சாப்பாடு அமிர்தமாக இருந்தது.

உறவினர்கள் யார் வந்தாலும் விசாலாட்சி சாப்பாடு கொடுக்காமல் அனுப்ப மாட்டாள். எல்லோரும் பல சந்தர்ப்பங்களில் விசாலாட்சியின் சமையலை சாப்பிட்டிருக்கிறார்கள். இப்போது கூட்டு விதைப்பு. விதைப்பு காலத்தில் எல்லாருக்கும் தான் சமைத்து தருவதாக, விசாலாட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். அதனால் யாவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். வயல் வேலைகளின் போது அந்த கால மக்கள் சைவ உணவு தான் சமைப்பது வழக்கம்.

இரணைமடு குளத்தின் பத்தாம் வாய்க்கால் குஞ்சுப்பரந்தன் மக்களால் பயன் படுத்தப்படுகின்றது. தம்பையர், பிள்ளையார் கோவில் முன்றலில் எல்லோரும் கூடியிருந்த ஒரு தருணத்தில், “நாங்கள் காட்டாறுகளான கொல்லனாற்றையும், நீலனாற்றையும் மட்டும் நம்பி சிறுபோகச் செய்கையில் ஈடுபட முடியாது. இரணைமடுவிலிருந்து வரும் நீரை, எட்டாம் வாய்க்காலை திருத்தி பயன் படுத்தினால் மட்டுமே சிறுபோகம் செய்ய முடியும்” என்று கூறியிருந்தார். அதன் படி எட்டாம் வாய்க்காலை வெட்டி துப்பரவாக்க அனுமதி கேட்பது என பெரிய பரந்தன் மக்கள் தீர்மானித்தனர்.

பின் முத்தரும் ஆறுமுகத்தாரும் இன்னும் சில உறவினர்களையும் அழைத்துக் கொண்டு இரணைமடுவிற்கு சென்று சம்பந்தப்பட்ட் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆறுமுகத்தார், முத்தர் அம்மான் தலைமையில் எல்லோரும் சேர்ந்து எட்டாம் வாய்க்காலை வெட்டி, துப்பரவு செய்தனர். தம்பையர் இறந்த பின்னர், இது தான் பெரிய பரந்தன் மக்கள் செய்த முக்கியமான சாதனையாகும்.

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன் 

https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான பதிவு. எமது மக்கள் கடந்து வந்த பாதைகளின் சுவடுகள். மிக நன்றாக எழுதப்பட்டுள்ளன. பகிர்வுக்கு நன்றிகள் புரட்சி. தொடந்தும் பதியுங்கள். ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் கவனித்தேன், ஒரே மூச்சில் படித்து முடித்தாயிற்று......எனக்கும் நிறைய காட்டு அனுபவங்கள் இருந்தபடியால் சுவாரஸ்யம் சுப்பராய் இருந்தது......நன்றி தோழர்......!  👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 10

PHOTO-2020-11-07-18-02-21-2.jpg

பெரிய பரந்தன் காடாக இருந்த போது பனை மரம் எப்படி வந்தது? என்று பலர் கேட்டார்கள். பெரிய பரந்தன் காட்டை வெட்டும் போது பனை மரங்கள் இருந்தது உண்மை. ஆயினும் ஒரு சிறிய ஆய்வு செய்தேன்.

1. மூன்று கிராமங்களுக்கு அருகே காடாக இருந்த சிவநகர் இப்போது வளர்ச்சியடைந்த கிராமமாக உள்ளது. அது காடாக இருந்த போது காட்டில் சிதிலமடைந்த செங்கல் கட்டிடம் காணப்பட்டது. வேலாயுதசுவாமி என்னும் சாமியார் சிவநகர் குளத்தின் அருகே ஒரு பிள்ளையார் கோவில் கட்ட சென்ற போது ஒரு மாடு மேய்க்கும் இளைஞன் அதனை கண்டு அவருக்கு சொன்னான். சாமியுடன் வடிவேல்சாமியும் சென்று பார்த்த பொழுது அங்கே அந்த சிதிலமடைந்த செங்கல் கட்டிடத்தினுள்ளே ஒரு சிவலிங்கத்தின் சிலையை கண்டனர். அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தான் இப்போதைய உருத்திரபுரீஸ்வரன் கோவிலை கட்டியுள்ளார்கள். ஆகவே முன்னரும் மக்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள்.

2. தொண்ணூறுகளில் பல்கலைக் கழக பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் பல்கலைக் கழக மாணவர்களுடன் சென்று செருக்கன், குஞ்சுப்பரந்தன் அருகே ஒரு முதுமக்கள் தாழியை கண்டெடுத்தார். மண்ணால் செய்யப்பட்ட பெரிய சாடி போன்ற தாழியினுள்ளே இறந்தவர்களின் உடலையும் உடமைகளையும் வைத்து ஒரு மூடியினால் மூடி மண்ணினடியில் தாழ்ப்பார்கள். அது முதுமக்கள் தாழி எனப்படும். மக்கள் பழங்காலத்தில் அங்கு வாழ்ந்ததால் தான் பனை மரங்கள் அங்கு வந்திருக்க வேண்டும்.

கணபதி வேலை முடிந்ததும் எருதுகளை தந்தையாருடன் சேர்ந்து குளிப்பாட்டுவான். ஆறுமுகத்தார் அவன் மீது காட்டிய அன்பு அவனை வேறு விதமாக சிந்திக்க விடவில்லை. ஆறுமுகத்தாரை “ஐயா” என்று தம்பையரை அழைத்தது போலவே அழைத்தான்.

ஆறுமுகத்தார் கணபதி, தன்னை ஒத்த சிறுவர்களுடன் விளையாட முடியவில்லையே என்று ஏங்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். இரவில் அவனுடன் ‘நாயும் புலியும்’, ‘தாயம்’ முதலிய விளையாட்டுகளை விளையாடுவார். அவனுக்கு உப கதைகளைச் சொல்லுவார். ‘முருகன்’ மாம்பழத்திற்காக ‘பிள்ளையாருடன்’ போட்டி போட்ட கதையை’ கூறுவார். ‘காத்தான் கூத்தை’ பாடிக் காட்டுவார்.

பெரிய பரந்தன் மக்கள் தாடியுடனும், மீசையுடனும் வேடர்கள் போலவே இருந்து விட்டு, ஊர் போகும் சமயங்களில் தலைமுடியை வெட்டி, முகம் வழித்து வருவார்கள். அவர்களது தலையையும் முகத்தையும் விசாலாட்சி அவதானித்தாள். ஆறுமுகத்தாரிடம் “பெரிய பரந்தன் கிராமத்திற்கு என ஒரு முடி வெட்டுபவரை ஒழுங்கு செய்தால் என்ன?” என்று கேட்டாள். ஆறுமுகத்தார் “முத்தரிடமும் ஏனையவர்களுடனும் கதைத்த பின்னர் முடிவு செய்வோம்” என்றார். அவர்களும் சம்மதித்து ஆறுமுகத்தாரிடம் பொறுப்பைக் கொடுத்தனர்.

ஆறுமுகத்தாரும் ஒரு உறவினருடன் ஊர் சென்று, மட்டுவிலிலிருந்து மாதம் ஒருமுறை வந்து, ஒரு கிழமை நின்று எல்லோருக்கும் முடி வெட்டி விட்டு திரும்பிப் போகும் ஒழுங்குடன் ஒரு வயோதிபரை அழைத்து வந்தார்.

அவருக்கு போகத்திற்குப் போகம் எல்லோரும் நெல்மணிகளையே கூலியாக கொடுப்பது என்று பேசியிருந்தார். அந்த வயோதிபரும் ஊர் பொறுப்புகளை மகன்மாரிடம் பகிர்ந்து கொடுத்துவிட்டு வந்திருந்தார்.

அவருக்கு காலை தேனீரும் உணவும் விசாலாட்சி கொடுப்பாள். மதியமும் இரவும் முடி வெட்டச் செல்லும் இடங்களில் கொடுப்பார்கள். இரவு வந்து தியாகர் வயலில் படுத்திருப்பார். அவருக்கு பல உப கதைகள் தெரிந்திருந்தது. அவர் வந்து நிற்கும் நாட்களில் கதை சொல்லும் பொறுப்பு அவருடையது. அவரிடம் கதை கேட்டபடி கணபதி உறங்கி விடுவான். ஆறுமுகத்தார் வந்து அவனை தூக்கி சென்று தங்களுடன் படுக்க வைப்பார்.

காலபோக விதைப்புக்கு உரிய காலம் வந்தது. பிள்ளையார் கோவில் முன்பாக பெரியபரந்தன் மக்கள் யாவரும் ஒன்று கூடினர். வழக்கம் போல முத்தரும் ஆறுமுகத்தாரும் தலமை தாங்கினார்கள். யார் யாருடைய காணிகளில் பள்ளக் காணிகள் உண்டு என யோசிக்கப்பட்டது. அந்த பள்ளப் பகுதிகளை முதல் விதைப்பது என்று தீர்மானித்தார்கள். முத்தரின் காணியிலும் ஆறுமுகத்தாரின் காணியிலும் பள்ளங்கள் இருந்தன. ஆனால் அவர்கள் தங்கள் காணிகளில் இருந்த பள்ள பகுதிகளை மற்றவர்களின் பள்ளங்கள் விதைத்த பின்னர் விதைப்பது என்று முடிவு செய்தனர்.

அடுத்து எல்லோர் காணிகளிலும் உள்ள நடுத்தர காணிகளை விதைப்பது என்றும் பேசிக் கொண்டனர். யாவரினதும் மேட்டுக் காணிகளை இறுதியில் விதைக்கத் தீர்மானித்தார்கள். இப்போது தம்பிமாரும் கூட்டங்களில் கலந்து மற்றவர்கள் எடுக்கும் தீர்மானங்களை ஏற்றுக் கொண்டனர். விதைப்பு முடியும் மட்டும் எல்லோருக்கும் மதியம் சாப்பாட்டை, விசாலாட்சி தானே சமைத்து தருவதாகவும், தேங்காய் திருவுவதற்கு மட்டும் யாரேனும் ஒருவர் உதவி செய்தால் போதும் என்றும் சொல்லியிருந்தார்.

ஒரு நல்ல நாளில் விதைப்பு ஆரம்பமாகியது. எல்லோரும் எருதுகளுடனும் கலப்பைகளுடனும் முதலில் விதைப்பிற்கு தெரிவு செய்யப்பட்டவரின் வயலுக்கு காலை வேளையில் வந்து சேர்ந்தனர். இருவர் விதை கடகங்களில் நெல் நிரப்பிக்கொண்டு, பிள்ளையார் கோவில் இருக்கும் திசையை பார்த்து கும்பிட்ட பின் விதைக்க ஆரம்பித்தனர்.

விதைப்பது என்பது ஒரு கலை. வயலின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே அளவு நெல் விழுதல் வேண்டும். அவர்களின் கடகத்தில் நெல் முடிய முடிய, சிறியதொரு கடகத்தில் நெல் எடுத்துக் கொண்டு ஓடி ஓடிச் சென்று கணபதி அவற்றை நிரப்பி விட்டான்.

ஒவ்வொரு வயலிலும் நெல் விதைத்தவுடன் அந்த வயலை உழத் தொடங்கினர். இவ்வாறு முதலில் ஒவ்வொரு முறை உழுதனர். எல்லா வயல்களும் விதைத்து, உழுத பின்னர் மறுபடியும் அந்த வயல்களை மறுத்து உழுதனர். முன்னர் உழுத திசைக்கு செங்குத்தாக உழுவதை ‘மறுத்தல்’ என்று கூறுவார்கள்.

மறுத்து உழுவதனால் கமக்காரனுக்கு மூன்று விதமான நன்மைகள் கிடைக்கும். முதல் உழவில் மாடுகள் குழப்படி செய்தால் சில இடங்களில் உழுபடாத கள்ள இடைவெளிகள் ஏற்பட்டு விடும். மறுத்து உழுத போது அந்த இடமும் உழுபட்டு விடும். மறுத்து உழும் போது விதைத்த நெல் எல்லா இடங்களுக்கும் சீராக பரவி விடும். இரண்டாம் முறை உழுவதனால் மண் நன்கு உழப்பட்டு நெற்பயிர் வேரோடுவதற்கு ஏற்ப மண் இலகுவாகும் விடும்.

எருது பூட்டிய கலப்பைகளால் வயல்களின் மூலைகளை உழவு செய்ய முடியாது. ஆகையால் நெல்லை விதைத்தவர்கள், ஒவ்வொரு வயல்களினதும் நான்கு மூலைகளிலும் மேலும் சிறிது நெல்மணிகளை தூவி மண்வெட்டியினால் கொத்தி விடுவார்கள். விதைத்து முடிந்ததும் கணபதி தாயாருக்கு சமையல் வேலையில் உதவுவதற்காக ‘தியாகர் வயல்’ நோக்கி ஓடிவிடுவான். தாயாருக்கு பூவலில் தண்ணீர் எடுத்து வந்து கொடுப்பான். கிராமத்தவர்கள் முழுப் பேரும் தேனீக்கள் போல சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள். எல்லோர் வயல்களையும் தமது வயல்கள் போல எண்ணி வேலைகளில் பங்கு பற்றுவார்கள்.

சமையல் முடிந்ததும் விசாலாட்சி ஒரு பெரிய மூடல் பெட்டியில் சோற்றைப் போட்டு மூடுவாள். இரண்டு சிறிய மூடல் பெட்டிகளில் கறிகளைப் போட்டு மூடி, அந்த இரு மூடல் பெட்டிகளையும் ஒரு பனை ஓலைப் பையில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைப்பாள். மூன்று, சிரட்டைகளினால் செய்த அகப்பைகளையும் பையினுள்ளே வைப்பாள். சோற்று பெட்டியை, தலையில் ஒரு சேலைத்துணியினால் செய்த திருகணை  மேல் வைத்து ஒரு கையால் பிடித்துக் கொள்வாள். கணபதி கறிகள் உள்ள பனை ஓலைப் பையை கையில் தூக்கிக் கொள்வான். இருவரும் விதைப்பு நடக்கும் இடம் நோக்கி நடப்பார்கள். கணபதி பாரம் தாங்காமல் அடிக்கடி கைகளை மாற்றி மாற்றி தூக்கிக் கொண்டு நடப்பான்.

விசாலாட்சி ‘தியாகர் வயலை’ விட்டு வருவதைக் கண்டதும், முத்தர் கத்தியை எடுத்துக் கொண்டு பனங்கூடலுக்கு செல்வார். வடலிகளில் குருத்தோலைகளாகப் பார்த்து வெட்டி, கொண்டு வருவார். வந்திருந்து ‘தட்டுவங்கள்’ கோல தொடங்குவார். மறக்காமல் கணபதிக்கு என்று ஒரு சிறிய ‘தட்டுவமும்’ கோலுவார். ஒருவர் பானையையும் மற்றொருவர் ‘தட்டுவங்களையும்’ தூக்கிக் கொண்டு அண்மையிலுள்ள பூவலுக்கு செல்வார்கள். தட்டுவங்களை கழுவிய பின்னர் பானையில் நீர் நிரப்பிக் கொண்டு திரும்பி வருவார்கள்.

கணபதி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தட்டுவம் கொடுத்த பின், தனது சிறிய தட்டுவத்தை எடுத்துக் கொண்டு வருவான்.

விசாலாட்சி ஒரு வசதியான இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு ஒவ்வொருவராக போக, சோற்றையும் கறிகளையும் அகப்பைகளால் போட்டு விடுவாள். அவர்கள் தமக்கு வசதியான இடத்தில் போயிருந்து சாப்பிடுவார்கள். கணபதிக்கு போட்ட பின்பே ஆறுமுகத்தார் தனக்கு வாங்கிக் கொள்வார். தமிழன் கண்டு பிடித்த ஒருநாள் பாத்திரங்கள் இரண்டு. ஒன்று வாழை இலை, சில சமயங்களில் தாமரை இலை. மற்றது பனை ஓலை ‘தட்டுவம்’. பறங்கிகளைப் (Burghers) போல ஒரே தட்டை (Plates) பல காலங்களுக்கு கழுவி கழுவி பாவிக்கும் தேவை இல்லை.

Screenshot-2020-11-10-11-18-20-753-org-m

( அதிகம் பேர் சாப்பிட வேண்டிய சந்தர்ப்பத்தில் பயன்படும் பனையோலையால் செய்யப்பட்ட தட்டுவம்..)

விதைப்பு முடியும் மட்டும் விசாலாட்சியே சமைத்தாள். இவ்வளவு காலமும் விதைப்பு காலத்தில் ஆண்களின் சமையலை சாப்பிட்டவர்களுக்கு விசாலாட்சியின் சாப்பாடு அமிர்தமாக இருந்தது. யாவரும் உறவினர்கள் என்பதனால் ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் எதனையும் எதிர் பார்க்கவில்லை. ஊருக்கு மாறி மாறி சென்று வந்த உறவினர்கள், தேங்காய்களையும் காய் கறிகளையும் கொண்டு வந்து கொடுத்தனர். வேண்டாம் என்று மறுத்த போதும் முத்தர் வற்புறுத்தி அரிசி கொண்டு வந்து கொடுத்தார்.

நெற்பயிர்கள் முளைக்கத் தொடங்கின. அந்த முறை மழை அளவாக பெய்தது. பயிர்கள் வளரத் தொடங்கின. இப்பொழுது வயல்களில் நீர் சேர்ந்தது. நீர் உயர உயர பயிர்களும் உயர்ந்து வளர்ந்தன. இப்போது பயிர்களை வெட்ட’ பாலாமைகளும்’, ‘சிராய்’ ஆமைகளும் வரத் தொடங்கின.

“சிராய் ஆமைகளையும்,பாலாமைகளையும் பிடித்து வெட்ட வேண்டும்.” என்று ஆறுமுகத்தார் கூறினார். உடனே கணபதி “வேண்டாம் ஐயா, ஆமைகளைப் பிடித்து சாக்கில் போட்டு, காட்டில் கொண்டு போய் விடுவோம்” என்றான். விசாலாட்சியும் “கணபதி சொல்லுவது தான் சரி. வீணாக கொல்லுவது பாவம்” என்றாள். இருவரும் சொல்வதைத் கேட்ட ஆறுமுகத்தாரும் சம்மதித்தார்.

ஆறுமுகத்தாரின் கதையைக் கேட்ட முத்தரும் மற்றவர்களும் தாங்களும் சாக்கில் போட்டுக் காட்டில் விடுவதென தீர்மானித்தார்கள். இரண்டு மூன்று வருடங்களாக அந்த ஆமைகளை வெட்டி தாட்டு வந்த மக்கள், கணபதியின் கருத்தைக் கேட்டு அந்த செயலைச் செய்யாது விட்டனர். கணபதி தனது கதைகளாலும், செயல்களாலும் தம்பையரை நினைவூட்டிக் கொண்டிருந்தான். அந்த வருடம் ஆமைகள் பிடிக்கப்பட்டு காட்டில் விடப்பட்டன.

அந்த கால போகத்தின் போது பன்றிக்காவல், யானைக் காவலுக்கு கணபதியையும் ஆறுமுகத்தார் கூட்டிச் சென்றார். கணபதியும் வயல் வேலை முழுவதையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆறுமுகத்தார் விரும்பினார். அந்த நாட்களில் தம்பிமாரில் ஒருவர் விசாலாட்சிக்கு துணையாக வந்து நின்றார். மற்றவர் எல்லா கிராம மக்களுடனும் சேர்ந்து காவல் கடமைக்கு சென்றார். தியாகர் வயல் காட்டின் எல்லையில் இருந்தது. அதனால் கணபதியும் ஆறுமுகத்தாரும் பட்டமரக் கட்டைகளை தூக்கி வந்து பல இடங்களில் குவித்து வைத்தனர்.

இரவு வந்ததும் அந்த குவியலைக் கொழுத்தி விட்டனர். அவை விடியும் வரை எரிந்து, தணல் ஆக இருக்கும். விலங்குகள் அவற்றை விட்டு விலகி ஓடி விடும். ஆனால் யானைகளும் பன்றிகளும் கூட்டமாக வேறு வழியால் வயலுக்குள் புகுந்து விடும். தாரை தப்பட்டை அடித்தும், தீப்பந்தங்களைக் காட்டியும், கூக்குரல் இட்டும் அவற்றைக் கலைத்தார்கள்.

கிராமத்தவர் சிறு சிறு குழுக்களாக பிரிந்து பல இடங்களில் நின்று கலைத்தார்கள். யானைகள் இலகுவில் தோல்வியை ஏற்றுக் கொள்ள மாட்டா. கலைத்தவுடன் காட்டினுள் சென்று சற்று தூரத்தில் முகாமிட்டு விடுவினம். அவை நின்ற படியே நித்திரையும் கொள்ளுவினம். தலைவனான ஆண் யானை சுற்றி சுற்றி வந்து காவல் காக்கும். பகலில் ஈச்சமரங்களை பிய்த்து சாப்பிடுவினம். மறுபடியும் மறுபடியும் இரவில் வயலினிலுள்ளே போக பார்ப்பினம்.

பெரிய பரந்தன் மக்களும் விடாது போராடினார்கள். கடைசியில் யானையிறவில் இறங்கி வடமராட்சி கிழக்கிற்கு போவினம். அங்கே நீர் நிலைகளின் அருகே அவைகளுக்கு மிகவும் பிடித்தமான பிரப்பம் மரங்கள் காத்திருக்கும். பிரப்பம் மரங்களின் தண்டுப் பகுதியை பிரித்து உள்ளே இருக்கும் குருத்தை சாப்பிடுவதை யானைகள் பெரிதும் விரும்பின. அந்த வருடம் யானைகளும் பன்றிகளும் பெரிய பரந்தனில் பயிர்களை அழிக்கவில்லை.

வயல்களுக்கு இயற்கை பசளைகளான எரு, காய்த்த  இலை, குழை என்பனவே போடப்பட்டன. ‘பச்சைப் பெருமாள்’, ‘சீனட்டி’, ‘முருங்கைக் காயன்’, ‘மொட்டைக் கறுப்பன்’ முதலிய பல வகை நெற்கள் விதைக்கப்பட்டன. ‘சீனட்டி’ என்பது குறைந்த கால வயதுடைய நெல். மேட்டுக் காரணிகளுக்கு இதனை விதைப்பார்கள். ‘மொட்டைக் கறுப்பன்’ நெல் கூடிய கால வயதுடையது. வரட்சியை தாங்க கூடியது. இவற்றை நீர் வளம் குறைந்த, வானம் பார்த்த பூமிகளிலேயே விதைப்பார்கள். பூனகரியில் பரவலாக ‘மொட்டைக்கறுப்பன்’ நெல் விதைத்தனர். பூனகரியில் விளைந்த ‘மொட்டைக் கறுப்பன்’ நெல்லிலிருந்து பெறப்படும் அரிசியில் சமைத்த சோறு, காய்ச்சிய கஞ்சி என்பன மிகவும் சுவையானவை. அந்த அரிசியை இடித்து பெறப்படும் மாவிலிருந்து அவிக்கப் படும் ‘பிட்டு’ அதிக சுவையுள்ளது.

பயிர்கள் ஓரளவு வளர்ந்த போது களைகளைப் பிடுங்க வேண்டும். எல்லோரும் எல்லோரினதும் வயல்களையும் சுற்றிப் பார்ப்பார்கள். ஒவ்வொருவரின் வயல்களிலும் சில வயல்களில் மிக அதிக அளவில் புற்கள், களைகள் காணப்படும். நெல் வயலில் நெல்லை விட, முளைக்கும் வேறு பயிர்கள் களைகள் எனப்படும்.

களைகள் அதிகமுள்ள வயல்களில் களை பிடுங்கல் கூட்டாக நடை பெறும். களைகளைப் பிடுங்கும் போது வயல்கள் உழக்கப்படும். இவ்வாறு உழக்குவதால் பயிர்கள் மேலும் செழித்து வளரும். எல்லோருமாகச் சேர்ந்து எல்லோர் வயல்களிலும் உள்ள களைகளைப் பிடுங்கி முடித்து விட்டார்கள். களைகள் பிடுங்கிய வயல்களில் சில இடங்களில் பயிர்கள் அடர்த்தியாகவும், சில இடங்களில் ஐதாகவும் காணப்படும். அடர்த்தியாக உள்ள இடத்தில் உள்ள பயிர்களை களைந்து பிடுங்கி, ஐதான இடத்தில் நட்டு விடுவார்கள்.

களை பிடுங்குபவர்களுக்கும் விசாலாட்சியே மதியம் சாப்பாடு கொடுத்தாள். அனைவரும் உறவினர்கள்.  தியாகர் வயலை தாய் மனையாக நினைப்பவர்கள். இப்போது அவர்கள் வேலை செய்து களைத்திருக்கும் போது, வயிறாற உணவளித்த விசாலாட்சியை தமது தாயாக மதித்தார்கள்.

களை பிடுங்கும் போது வயது வேறுபாடின்றி எல்லோரும் பாட்டு பாடுவார்கள். நல்ல நாட்டார் பாடல்கள் பலவற்றை அவர்கள் பாடுவார்கள். கூட்டமாக பாடும் போது களைப்பு வருவதில்லை. முத்தர் அம்மான் குரல் வளம் உள்ளவர். அவர் பல பாடல்களையும் அறிந்து வைத்திருந்தார். அவர் தனியே பாடும் போது எல்லோரும் அதனை மிகவும் ரசிப்பார்கள். உறவு முறை வேறாக இருந்தாலும், எல்லோரும் முத்தரை ‘அம்மான்’ என்றே மதிப்புடன் அழைத்தனர்.

மனைவிமாரை பிரிந்திருந்த இளைஞர்கள், இணையை பிரிந்திருக்கும் துயரங்கள் கூறும் பாடல்களைப் பாடுவார்கள். விசாலாட்சிக்கு கேட்கக் கூடியதாக பாடமாட்டார்கள். ஆனால் கணபதி கேட்டு விடுவான். தாயாரிடம் போய் “அம்மா, ஏன் அப்படி பாடுகின்றார்கள்?” என்று கேட்பான். விசாலாட்சி அவனிடம் எதையோ சொல்லி சமாளித்து விடுவாள். ஆறுமுகத்தார் வந்ததும் “இவர்கள் ஏன் மனைவிகளை ஊரில் விட்டு விட்டு வந்து இப்படி கஷ்டப்பட வேணும்?” என்று கேட்பாள். “இவங்களில் சில பேருக்கு இந்த மாரி முடிந்து, தை மாதம் பிறக்க பெண்சாதிகளை கூட்டி வரும் எண்ணம் இருக்கு” என்று ஆறுமுகத்தார் பதில் சொல்வார்.

‘கிடைச்சி’, ‘கோரை’, ‘கோழிச்சூடன்’ முதலியவை பொதுவாக காணப்படும் களைகள். கிடைச்சி மரமாக வளர்ந்து பசளையை உறிஞ்சிவிடும். கோரை பெரிதாக பூக்கள் பூத்து நெற்பயிருக்கு சூரிய ஒளி கிடைக்காது தடுத்துவிடும். நெற்பயிருக்கும் இளம் கோழிச்சூடன் புல்லிற்கும் வித்தியாசம் காண்பது கஷ்டம். எவ்வளவு தான் களை எடுத்தாலும் சில களைகள் தவறி விடும். சமையல் வேலை இல்லாத போது, விசாலாட்சி ஆறுமுகத்தாரிடம் கேட்டு அறிந்து, தங்கள் காணியில் தப்பி நிற்கும் களைகளைப் பிடுங்குவாள். கணபதியும் தாயாருடன் சேர்ந்து பிடுங்குவான்.

விசாலாட்சி எல்லா வகையிலும் ஆறுமுகத்தாருக்கு துணையாக இருப்பதை  அவதானிக்கும் மற்றவர்கள், தை மாதம் அரிவு வெட்டு, சூடு அடித்தலின் போது தமது மனைவிகளை அழைத்து வருவது என தீர்மானித்துக் கொண்டனர்.

 

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்  

https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 11

mcms-1.jpg

பெரியபரந்தனில் தனிப் பெண்ணாக தான் இருக்கிறேன் என்று எந்த சந்தர்ப்பத்திலும் விசாலாட்சி நினைக்கவுமில்லை, கவலை கொள்ளவும் இல்லை. வந்து குடியேறியவர்கள் அவரது உறவினர்களும், தம்பையரின் உறவினர்களும் தான். ஆனால் கணபதி வேறு சிறுவர்கள் இல்லாமல், வயதில் பெரியவர்களுடன் மட்டும் பழகுவதால் தனது இளமைக்குரிய சந்தோசங்களை இழக்கிறானே? என்று கவலைப்பட்டதுண்டு. மார்கழி மாதம் கதிர்கள் முற்றி நெற்பயிர்கள் தலை சாய்க்கத் தொடங்கின.

முதலில் முத்தர் தனது மகன் கணபதிப்பிள்ளையையும் மனைவியையும் அழைத்து வந்தார்.  இப்போது அவனுக்கு பள்ளிக்கூடத்தில் விடுமுறை. அவன் வந்ததிலிருந்து “அண்ணா”, “அண்ணா” என்று கணபதியுடனேயே திரிந்தான். தைப்பொங்கல் முடிய அவனை கூட்டிச் சென்று, அவனது பள்ளிக்கூடம் விடும் பொறுப்பை மனைவியின் பெற்றோரிடம் விடுவதற்கு ஒழுங்கு செய்து கொண்டு வந்திருந்தார். அவரைத் தொடர்ந்து தான் காணி வெட்டி, வீடு கட்டிய பின், கல்யாணம் செய்து அந்த வீட்டிற்கு தனது மனைவியை கூட்டி வந்து வாழ்வது என்று முடிவு செய்திருந்த இளைஞன் தனது மனைவியை அழைத்து வந்தான். அவன் கல்யாணம் செய்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டது. இப்போது தான் அவனது எண்ணம் நிறைவேறியது.

அடுத்ததாக தம்பையரின் ஒன்று விட்ட தமையன்மார் இருவரும், ஒன்று விட்ட தம்பியார் ஒருவரும் அவ்வாறு அழைத்து வந்தனர். ஒரு தமயனின் ஒரே மகள் பொன்னாத்தை. பொன்னாத்தை, கணபதியையும் விட மூன்று வயது மூத்தவர், கணபதிக்கு ‘அக்கா’ முறை. நல்ல சூடிகையான பெண்.

இன்னொரு தமையனின் மகன் வீரகத்தி, கணபதியையும் விட மூத்தவர்.  அதனால் ‘அண்ணன் ‘ முறை. வீரகத்தி மட்டும் தான் தகப்பனுடன் வந்திருந்தான். அவனது தாயார் சொந்த காரணத்தால் அவனுடன் வரமுடியவில்லை. தம்பையரின் தம்பியாரின் மகன் செல்லையா கணபதிக்கு ‘தம்பி’ முறை.

கணபதி முதலில் பெரிய பரந்தனுக்கு வந்ததாலும், வயதில் மூத்தவர்களுடன் பழகியதால் ஏற்பட்ட பெரிய மனித தோரணையாலும், இயல்பாகவே தம்பையரிடமிருந்து வந்த தலைமை தாங்கும் பண்பினாலும் வந்த மூவருக்கும் தலைவனாகவும் வழிகாட்டியாகவும் மாறினான். இவர்களை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றான். மாலை நேரத்தில் அவர்களுடன் தட்டு மறித்தல், ஒழித்து பிடித்தல் முதலிய விளையாட்டுக்களை விளையாடினான்.

வேலை நேரத்தில் தகப்பனுக்கும் தாய்க்கும் உதவி செய்வதை மறக்கவில்லை. கணபதியைப் பார்த்து அவர்களும் தமது வீட்டிலும் வயலிலும் பெற்றோருக்கு உதவுவதில் ஊக்கம் காட்டினர்.

கணபதியில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு ஆறுமுகத்தார் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் இளங்கன்று பயம் அறியாது. ஏதாவது ஆபத்தில் சிக்கிவிடும் என்று பயந்தார். எனவே கணபதி, பொன்னாத்தை, வீரகத்தி, செல்லையா நால்வரையும் அழைத்து “பிள்ளைகளே, வரம்புகளில் பாம்புகள் இருக்கும். கவனமாக இருக்க வேண்டும். காட்டிற்குள் பெரியவர்கள் துணையில்லாமல் போக கூடாது. தனியன் யானை, தனியன் பன்றி மிகவும் ஆபத்தானவை. அவை தமது கூட்டத்தினால் விரட்டப்பட்டு தனியாக வாழ்பவை. காண்பவர் யாவரையும் தாக்கும் இயல்பு உள்ளவை.

சில வேளைகளில் சிறுத்தைகளும் வரும். தற்செயலாக நீங்கள் காட்டிற்குள் தனியாக அகப்பட்டுவிட்டால் பயப்படக் கூடாது. பற்றைகள் இல்லாத வெளியில் உள்ள ஒரு சிறிய மரத்தில் ஏறி எல்லா திசைகளிலும் பாருங்கள். குறிப்பம் புளி மரம் தெரியும். அதை நோக்கி நடந்து வந்தால் கிராமத்திற்கு வந்து விடலாம்.” என்று கூறினார். ஒரு பக்கத்தில் ஒதுங்கி நின்று பார்த்த முத்தர் மகனைப் பார்த்து “சின்னக்கணபதி, நீயும் கவனமாக இருக்க வேண்டும் ராசா” என்றார்.

முத்தர் தனது நண்பரிடம் “ஆறுமுகம், எங்கள் ஊரில் ஒரு பள்ளிக்கூடம் எப்போது வரப் போகிறது? அப்படி ஒரு பள்ளி வந்தால் எவ்வளவு நல்லது. என்னைப் போல இன்னும் சிலருக்கு பெண்சாதிகளை கூட்டி வருவதற்கு விருப்பம். பிள்ளைகளின் படிப்பை நினைத்து தயங்குகிறார்கள்.” என்றார். தம்பையர் இருந்த போது கலியாணம் பேசி முற்றானவர், இப்போது இரண்டு சிறிய பிள்ளைகளுக்கு தகப்பன். அவரால் மனைவியை அழைத்து வர முடியவில்லை.

பெண்கள் எல்லாரும் காலை தமது குடும்ப வேலைகளைச் செய்து, மத்தியான சாப்பாடு சமைத்து எல்லோரும் சாப்பிட்டு முடிய, விசாலாட்சியிடம் வந்து விடுவார்கள். விசாலாட்சி பெட்டி, நீத்துப் பெட்டி, கடகம், பாய் முதலியவற்றை பனை ஓலையில் இழைக்க பழக்குவார்.

3593f77b-palmyra.jpg

அவர்களில் சிலருக்கும் சில பன்ன வேலைகள் தெரிந்திருந்தது. பொழுது பயனான முறையில் போனதோடு, தமது வீட்டிற்கு தேவையான பொருட்களையும் செய்து எடுத்துச் சென்றனர்.

கணபதி, வீரகத்தியுடனும் செல்லையாவுடனும் நெற்கதிர்களை சாப்பிட  பகலில் வரும் காடை, கௌதாரி, புறா, மயில் முதலியவற்றை விரட்டச் செல்வான். சின்னக்கணபதியும் அவர்களின் பின்னால் ஓடுவான். ஓடி ஓடி எல்லோர் காணிகளிலும் பறவைகளை மணி அடித்தும், சத்தம் போட்டும் கலைப்பார்கள்.

போகும் இடங்களில் பெண்கள் இவர்களைக் கூப்பிட்டு மோர் அல்லது எலுமிச்சம் கரைசல், புழுக்கொடியல் முதலியவற்றை கொடுப்பார்கள். சிறுவர்கள் ஓட, அவர்களுக்குப் பின்னால் அவர்களது நாய்களும் குரைத்தபடி ஓடும்.

சிறுவர்களின் மகிழ்ச்சி பெரியவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும். இவர்களை அவதானித்த முத்தர் “இப்போது தான் எமது கிராமத்துக்கு உயிர் வந்திருக்கிறது. தம்பையர் விரும்பிய விடயங்கள் எல்லாம் நடக்கின்றன” என்று ஆறுமுகத்தாரிடம் கூறி மகிழ்வார்.

பெண்கள் எந்த தேவைக்கும் விசாலாட்சியிடம் வருவார்கள். தாம் ஆற்றுத் தண்ணீரில் குளித்தல் பிரச்சினை இல்லையென்றும், ஆனால் எவ்வளவு தான் தோய்த்தாலும் ஆடைகளில் ஒரு மங்கல் நிறம் நிரந்தரமாகவே வந்து விடுவதாகவும் சொன்னார்கள். ஊரில் என்றால் இடைக்கிடை ‘சலவை தொழிலாளி’ யிடம் கொடுத்தால் அவர் நல்ல வெள்ளையாக வெளுத்து வருவாரென்றும் கூறினார்கள். விசாலாட்சி இந்த பிரச்சினையை ஆறுமுகத்தாரிடம் கலந்து பேசினாள். “பெரிய பரந்தனுக்கென்று ஒரு சலவைக் தொழிலாளி குடும்பத்தை அழைத்து வந்தால் என்ன?” என்று கேட்டாள்.

ஆறுமுகத்தாரும் “கொல்லனாறு ஓரிடத்தில் வளைந்து பாய்கிறது. அந்த இடத்தில் அது ஆழமாகவும் அகலமாகவும் உள்ளது. அவ்விடத்தில் எப்போதும் தண்ணீர் இருக்கும். அதன் தெற்கு பக்கத்தில் குஞ்சுப் பரந்தன் பகுதியில் ஒரு பற்றைக் காடு இருக்கிறது. அந்த காட்டை வெட்டி அதில் இரண்டு கொட்டில்கள் போட்டுவிட்டால் வரும் சலவைத்தொழிலாளி ஒன்றில் தங்கி, மற்றதில் உடுப்புகளை தோய்க்கலாம். அவர் காணியைத் துப்பரவாக்கி வயலும் செய்யலாம், ஆற்றில் உடுப்புகளையும் தோய்க்கலாம். காணி அவருக்கே சொந்தமாகி விடும்.

குஞ்சுப் பரந்தன், செருக்கன் மக்களுக்கும் அந்த இடம் கிட்ட உள்ளது. அவர்களும் அவரிடம் வருவார்கள். எதற்கும் நான் முத்தரிடமும் மற்றவர்களிடமும் கதைத்துப் பார்க்கிறேன்.” என்றார்.

முத்தருக்கும் மற்றவர்களுக்கும் இந்த யோசனை நன்கு பிடித்து விட்டது. முத்தருக்கும் மகனை கூட்டிச் சென்று மாமனார் வீட்டில் படிக்க விடும் வேலை இருந்தது. அது போல இன்னும் இருவருக்கும் ஊரில் வேலை இருந்தது.

முத்தர் “நாங்கள் போய் எங்கள் அலுவல் முடிய, மூன்று பேரும் கல்வயலுக்கு போய் கதைத்து வருகிறோம். முடிந்தால் ஒருவரை அழைத்து வருகிறோம்” என்று சொன்னார். இளைஞர் ஒருவர், கள்ளுக் குடிப்பதில் அதிக ஆர்வமுள்ளவர் “என்ன முத்தர் அம்மான், எல்லோரையும் கூட்டி வருகிறீர்கள். ஒரு சீவல் தொழிலாளியையும் ஒழுங்கு செய்தால் என்ன?” என்று கேட்டார்.

அவருக்கு ஆதரவாக பலர் கதைத்தனர். எல்லோரும் வாய் விட்டு சிரித்தனர். அந்த இளைஞரின் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முத்தர் முன்பு கட்டுப்பாடாக கள்ளு குடித்தவர் தான். இப்போது கோவிலில் பூசை செய்வதால் கள்ளு குடிப்பதையும் மச்சம், மாமிசம் சாப்பிடுவதையும் படிப்படியாக குறைத்து விட்டார். முத்தர் “சலவைத் தொழிலாளிக்கும், சீவல் தொழிலாளிக்கும் காணியை வெட்டி துப்பரவாக்குங்கள். நாங்கள் எப்படியும் யாரையாவது அழைத்து வருவோம்” என்றார்.

முத்தர் ஊருக்கு சென்று முதலில் தன் மகனை மாமனார் வீட்டில் விட்டார். பின் நண்பர்களுடன் மட்டுவிலுக்கும் வரணிக்கும் சென்றார். ஒரு சலவைத் தொழிலாளியையும் சீவல் தொழிலாளியையும் கண்டு கதைத்தார். முத்தர் அவர்களிடம் “உங்களுக்கு நாங்கள் குடியிருக்கப் பொருத்தமான காணிகள் பார்த்து வைத்திருக்கிறோம். காணிகளை வெட்டுவதற்கும் கொட்டில்களைப் போடுவதற்கும் உதவி செய்வோம். காணி துப்பரவாக்க தொடங்கி விட்டார்கள். உங்களுக்கு கூலியாக போகத்திற்கு போகம் நெல் தருவோம். நீங்களும் காணியைத் திருத்தி வயல் செய்யலாம்” என்று கூறினார். அவர்களும் சம்மதித்து முத்தர் திரும்ப போகும் போது, உடன் வருவதாக கூறினார்கள்.

அவர்கள் கூறியபடியே முத்தர் புறப்படும் நாளில் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு முதலில் வண்டில் பயணமும், பின்பு தோணி பயணமும், சுட்டதீவு துறையிலிருந்து மீண்டும் வண்டில் பயணமும் முன் எப்போதும் செய்யாத பயணங்களாக அமைந்தது. அவர்கள் பெரிய பரந்தனுக்கு போய் சேர்ந்த போது அந்த ஊர் மக்கள் எல்லோரும் கூடி நின்று அன்புடன் வரவேற்றது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்  

https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 12

PHOTO-2020-11-22-09-12-19.jpg

அன்று காலை ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் வீட்டிற்கு வெளியே வந்து நின்று பார்த்தனர். முன்பு எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்று காட்சியளித்த பெரிய பரந்தன் இப்போது மஞ்சல் போர்வை விரித்தாற் போல தெரிந்தது. எல்லோர் வயல்களிலும் நெல் விளைந்து முற்றி விட்டது.  நெற்கதிர்கள் நாணமடைந்த பெண்கள் போல தலை சாய்த்தபடி நின்றன.

ஆறுமுகத்தார் “விசாலாட்சி, இந்த தைப்பூசத்திற்கு ‘புதிர்’ எடுத்து விட்டால் அரிவு வெட்டை தொடங்கலாம்” என்று சொன்னார்.

‘புதிர் எடுத்தல்’ என்பது விவசாயிகள் தமது நெற்பயிர்களை எவ்வித சேதாரமும் இல்லாது காத்து தந்த தேவதைகளுக்கு, நன்றி செலுத்தும் செயற்பாடு. நன்கு முற்றி விளைந்த நெற்பயிர்களில் சிலவற்றை ஒரு நல்ல நாளில் வெட்டி எடுத்து வந்து பிரதான அறையின் வாசல் நிலையில் கட்டி விடுவார்கள். பின் சில கதிர்களை வெட்டி வந்து படங்கின் மேல் ஒரு மரக்குற்றியை வைத்து, கதிர் பகுதியை அதன் மேல் அடித்து நெல் மணிகளைப் பிரித்து எடுப்பார்கள்.

‘படங்கு’ என்பது பல சாக்குகளை பிரித்து, பின் பிரித்த பகுதிகள் பலவற்றை ஒன்றாக இணைத்து தைத்த ஒரு பெரிய பாய் போன்ற பொருளாகும். பிரித்த நெல்மணிகளை உரலில் இட்டு, உலக்கையால் இடிப்பார்கள். அப்போது அது உமி வேறு, அரிசி வேறாக பிரிந்து விடும். பக்குவமாக புடைத்து புதிய அரிசியை பெறுவார்கள்.

‘புதிர் காய்ச்சி படைத்தல்’ ஒவ்வொரு விவசாயியாலும் தனித்தனியாக செய்யப்படும். பொதுவாக தைப்பூசத்தில் புதிர் காய்ச்சினாலும், சிலர் தாங்கள் நல்ல நாள் என்று கருதிய நாட்களில் முந்தி பிந்தியும் படைப்பார்கள். ‘புதிர்’ அன்று புத்தம் புதிய அரிசியில் சோறாக்கி, அறு சுவை கறிகளும் சமைக்கப்படும்.

Screenshot-2020-11-24-11-42-20-167-org-m

ஆறுமுகத்தார் பகல் பொழுதிலேயே வயலை சுற்றிப் பார்த்து வயலின் நடுவே ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தார். அந்த இடத்தை செருக்கி துப்பரவாக்கினார். பின் ஒரேயளவான மூன்று தடிகளை வெட்டி எடுத்து வந்து முக்காலி போல கட்டி, நட்டு விட்டார். முக்காலியின் மேலே ஒரு கடகத்தை விளாது தாங்க கூடியதாக மூன்று தடிகளும் நீட்டிக் கொண்டிருந்தன. அன்று இரவு விசாலாட்சி புதிர் சோறு காய்ச்சினாள்.

தங்கள் காணியில் ஏற்கனவே புதிர் காய்ச்சிய கிராமத்தவர்கள் உதவிக்கு வருவார்கள். தங்கள் காணியில் புதிர் காய்ச்சி சாப்பிடாதவர்கள் வேறு இடங்களில் சாப்பிடமாட்டார்கள். ஒரு கடகத்தில் தாமரை இலைகளை அடுக்கி அவற்றின் மேல் முதலில் சோறு இட்டு, பின் கறிகளையும் பழ வகைகளையும் போட்ட விசாலாட்சி, படையல்கள் மேல் இலைகள் போட்டு மூடி விட்டாள். ஞாபகமாக ஒரு கரித்துண்டையும் மூடிய இலைகளின் மேல் வைத்தாள். கெட்ட தேவதைகளிலிருந்து காப்பாற்றுவதற்கு கரித்துண்டு வைப்பது கிராமத்தவர்கள் வழக்கம்.

கணபதி ஒரு கையால் பந்தத்தை ஏந்திய படி மறு கையால் மணி ஒன்றை அடித்தபடி முன்னுக்கு சென்றான். ஆறுமுகத்தார் கடகத்தை ஏந்தியபடி அடுத்ததாக சென்றார். மற்றவர்கள் பின்னாலே போனார்கள். ஆறுமுகத்தார் கடகத்தை முக்காலியின் மேல் விழாது வைத்தார். படையலை மூடியிருந்த இலைகளை எடுத்து கால் மிதிபடாத இடத்தில் போட்டார். கணபதி பந்தத்தை ஒருபக்கத்தில் நட்டுவிட்டான். கூட சென்றவர்கள் மேலும் இரண்டு பந்தங்களை கணபதியின் பந்தத்தில் கொளுத்தி மற்ற இரண்டு பக்கங்களிலும் நட்டனர்.

ஆறுமுகத்தார் ஒரு சிட்டியில் திருநீறு இட்டு அதன் மேல் கற்பூரத்தை வைத்து எரித்துவிட்டார். கணபதி தொடர்ந்து மணியடித்தபடி எல்லாவற்றையும் அவதானித்து கொண்டு நின்றான். ஆறுமுகத்தார் நான்கு திசைகளையும் பார்த்து “கூ”,”கூ”,”கூ” என்று கூவி விட்டு திரும்பி பாராமல் வீடு நோக்கி நடந்தார். கணபதி மணி அடிப்பதை நிறுத்திவிட்டு உடன் சென்றான். மற்றவர்களும் அமைதியாக திரும்பி நடந்தனர். கூவி அழைப்பதன் மூலம் நான்கு திசை தேவதைகளும் வந்து படையலை உண்பார்கள் என்பது ஐதீகம்.

சிறிது நேரம் பொறுத்து கற்பூரம் எரிந்து முடிந்து, தீப்பத்தங்களும் அணைந்த பின் ஆறுமுகத்தார் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு சென்று தெளித்த பின் கடகத்தை எடுத்து வந்தார். வாழைப்பழங்களின் தோலை உரித்து படையலின் மேல் வைத்தார். நன்கு பிசைந்து குழைத்தார். குழையலை உருட்டி உருண்டையாக்கி எல்லோருக்கும் ஒவ்வொரு உருண்டை கொடுத்தார். கடைசியாக ஒரு உருண்டை குழைத்து தானும் சாப்பிட்டார். மிகுதியில் நான்கு நாய்களுக்கு ஒவ்வொரு உருண்டையும் இரண்டு எருதுகளுக்கு ஒவ்வொரு உருண்டையும் செய்தார். நாய்களுக்கு வைத்து விட்டு, எருதுகளுக்கானதை எடுத்துச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக தீத்தி விட்டார். நெல் விளைந்ததில் எருதுகளுக்கும் பாதுகாத்ததில் நாய்களுக்கும் பங்கு உண்டு.

அரிவு வெட்டிற்கு ஆட்கள் போதாது. மீசாலையிலிருந்து சிலர் உதவிக்கு வந்தார்கள். அவர்கள் தமது உறவினர்கள் வீட்டில் தங்கினார்கள். பூனகரியிலிருந்து மூன்று வண்டில்களில் ஆட்கள் வந்தார்கள்.

அவர்கள் தியாகர் வயலில் தலைவாசலில் படுத்து எழும்பினார்கள். வண்டில்களை மர நிழல்களில் நிறுத்திவிட்டு, எருதுகளை பகலில் காட்டுக் கரையில் மேய கட்டினார்கள்.

முதல்நாள் மத்தியானம் ஒரு பானையில் சோறு காய்ச்சி வைக்கும் விசாலாட்சி, இரவில் அதில் தண்ணீர் ஊற்றி வைத்து விடுவாள். காலை உணவாக இந்த பழஞ்சோற்றில், வெங்காயம், பச்சை மிளகாய், மோர் சேர்த்து, பழஞ்சோற்று தண்ணியை விசாலாட்சி அவர்களுக்கு கொடுத்தாள். ஆறுமுகத்தாரும் கணபதியும் அவர்களுடனேயே வட்டமாக இருந்து குடித்தார்கள். எல்லோரும் ‘பிளா’க்களிலே பழஞ்சோற்று தண்ணியை குடித்தார்கள்.

குடித்த பின்னர் கழுவி வெவ்வேறு இடங்களில் தொங்க விடுவார்கள். சிலருடைய பிளாக்கள் கிழிந்து விடும். அவர்களுக்கு மட்டும் புதிய பிளாக்கள் இழைக்கபடும். எஞ்சிய பழம் சோற்று தண்ணியை விசாலாட்சி தானும் குடித்து நாய்களுக்கும் வைப்பாள். செருக்கனிலிருந்தும் சிலர் உதவிக்கு வந்தார்கள். அவர்கள் காலை உணவை உண்ட பின்னரே வெட்டிற்கு வந்தார்கள். மீசாலையால் வந்தவர்கள், பூனகரியிலிருந்து வந்தவர்கள், செருக்கன் ஆட்கள், எல்லோரும் ஒவ்வொருவரின் காணியில் வேலை செய்த நாட்கள் தனித்தனியாக கணிக்கப்படும்.

Screenshot-2020-11-24-11-42-46-678-org-m

சூடுகள் யாவும் அடித்த பின்னர், அவர்கள் வேலை செய்த நாட்களுக்கு கூலியாக நெல்லை அந்தந்த விவசாயிகள் அளந்து கொடுப்பார்கள். அரிவு வெட்டு வழமை போல் கூட்டாகவே இடம் பெறும். இம்முறை பெண்கள் வந்துவிட்டபடியால், யாருக்கு அரிவு வெட்டு நடக்கிறதோ அவர்கள் வீட்டிலேயே எல்லோருக்கும் சமையல் இடம் பெறும். மற்ற பெண்கள் உதவிக்கு போவார்கள். விசாலாட்சி எல்லோர் வீட்டு சமையலுக்கும் உதவிக்கு போவாள். பாத்திரங்கள் பற்றாக்குறையாயின் கொடுத்து மாறுவார்கள்.

அருவியை வெட்டி ‘உப்பட்டி’, ‘உப்பட்டி’ ஆக பரவி போடுவார்கள். ஒரு சூடு வைக்கும் அளவிற்கு வெட்டியதும், காய்ந்து போன கதிர்களை கூட்டி கயிறுகளால் கட்டு கட்டாக கட்டுவார்கள். ஒவ்வொருவரின் காணியிலும் ஒரு மேடான பகுதியை விதைக்காது வைத்திருப்பார்கள். சூடு வைக்கும் இடத்திலேயே, சூடு அடித்தலும் நடைபெறும். அங்கு படங்குகளை விரித்து வைத்தார்கள்.

சூடு வைக்கும் இடத்தில் முத்தரும் ஆறுமுகத்தாரும் தயாராக நிற்பார்கள். கட்டுக்களை ஒருவர் தூக்கி விட, ஏனையவர்கள் தலையில் சுமந்து கொண்டு வந்து படங்கில் போடுவார்கள். முத்தரும் ஆறுமுகத்தாரும் நெற்கதிர்களால் சூட்டின் அடி தளத்தை வட்ட வடிவமாக வைப்பார்கள். நெற்கதிர்களின் கதிர்கள் உள்ள பக்கம் உள்ளேயும் அடிப் பக்கம் வெளியேயும் இருக்குமாறு, நெற்கதிர்களை அடுக்க அடுக்க சூடு உயர்ந்து கொண்டு போகும்.

மெலிந்த தோற்றமுடைய முத்தர் இப்போது மேலே ஏறி நின்று அடுக்குவார். உயரம் பெருப்பமான ஆறுமுகத்தார் கீழே நின்று கட்டுகளை அவிழ்த்து நெற்கதிர்களை மேலே எறிவார். சூடு வட்ட வடிவமாகவும், மேலே போகப் போக குறுகியும் சரியான படி வருகிறதா என்று பார்ப்பதும் ஆறுமுகத்தாரின் கடமை. முத்தர் வைக்க வைக்க ஆறுமுகத்தார் கீழே நின்று ஒரு கை பிடி உள்ள பலகையினால் தட்டி தட்டி அதை சரிப் படுத்துவார். எங்கே கூடுதலாக வெளித்தள்ளுகிறது, எங்கே உள்வாங்குகின்றது என்பதையும் அவ்வப்போது முத்தருக்கு சொல்லி சரியாக வைக்க செய்வதும் ஆறுமுகத்தாரின் பொறுப்பு.

இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து சூடு வைப்பதன் மூலம் மழை நீர் உள்ளே நுழையாது செய்யலாம். சிறிது நெற்கதிர்களை அடித்து வைக்கல் பெற்றார்கள். வைக்கலை முறுக்கி கயிறு போல திரித்தார்கள். இவ்வாறு இரண்டு வைக்கல் புரிகள் செய்தார்கள். ஆறுமுகத்தார் சூட்டின் அடியில் கையால் துளைத்து ,அதற்குள் வைக்கல் புரியின் ஒரு பக்கத்தை நன்கு செருகி விட்டு, மற்ற முனையை முத்தரிடம் எறிந்தார். முத்தர் வைக்கல் புரியினை சூட்டின் முடியினூடாக இறுக்கி மறுபக்கம் எறிந்தார். ஆறுமுகத்தார் அதைப் பிடித்து மறு பக்கம் செருகி விட்டார். இவ்வாறு மற்ற வைக்கல் புரியை குறுக்காகவும் கட்டினார்கள். இவ்வாறு கட்டுவதால் சூடு சரியாமல் இருக்கும். இது வரை முத்தரும் ஆறுமுகத்தாரும் இணைந்து வைத்த சூடுகள் எதுவும் பிழைத்ததில்லை.

நெல்கதிர் கட்டுகளை போட்ட படங்கில் இரண்டு அல்லது மூன்று புசல் நெல்மணிகள் விவசாயிகளுக்கு கிடைக்கும்.

விசாலாட்சியும் மற்ற பெண்களும் சற்று தூரத்தில் நின்று அவதானித்தார்கள். நெற் கதிர்களை கட்டி தலையில் சுமந்து ஆண்கள் வரிசையாக வருவது இவர்களைப் பொறுத்தவரை புதுமையானது. இவர்கள் இப்படி பெரிய நெற் செய்கையை முன்பு கண்டதில்லை. பெரிய பெரிய கட்டுகளை எப்படித் தான் சுமக்கிறார்களோ என்று தங்களுக்குள் கதைத்துக் கொண்டார்கள்.

கட்டாக கட்டும் போது நெற்கதிர்கள் தவறி விடுதல் சாதாரணமானது. கணபதியும் நண்பர்களும் ஓடி ஓடி அப்படி தவறிய கதிர்களைப் பொறுக்கி கட்டுபவரிடம் கொடுத்தார்கள். அவர்களுக்கும் சிறிய காட்டுகளாக கட்டி சுமக்க விருப்பம். பிஞ்சு கழுத்துகள் நொந்து விடும், அதனால் பிற்காலத்தில் வருத்தங்கள் வரும் என்று சொல்லி பெரியவர்கள் அனுமதிக்கவில்லை.

எல்லோருடைய வயல்களிலும் நெற்கதிர்கள் வெட்டி, சூடு வைத்த பின்னர் சூடு அடிக்க தொடங்குவார்கள். ஒவ்வொருவரின் சூடுகளையும் கூட்டாகவே அடித்தார்கள்.

சூடு வைத்த இடமே சூடு அடிக்கும் ‘களம்’ ஆக இருக்கும். ‘களத்தில்’ முதலில் ‘களமரத்தை’ நடுவார்கள். ‘களமரம்’ உயரமாக உருளையானதாகவும் அதன் மேல் முனை கூரானதாகவும் இருக்கும். ‘களமரத்தை’ சுற்றி வட்ட வடிவில் படங்குகளை அடுக்கினார்கள். பின் ‘சூட்டை’ விழுத்தி ‘களமரத்தை’ சுற்றி மலை போல குவித்தார்கள்.

நன்கு பழகிய பெண் எருமையை ‘களமரத்தில்’ கட்டினார்கள்.  அவ்வாறு கட்டும் போது பெண் எருமையை கட்டிய கயிறு சுழலக்கூடியவாறு கட்டினார்கள். பின்பு பல ஆண் எருமைகளை ஒன்றின் அருகே மற்றது வரும்படி பிணைத்தார்கள். பெண் எருமை சுற்ற தொடங்க, எல்லா ஆண் எருமைகளும் சேர்ந்து சுற்றுவினம். ஒரு கடிகாரத்தில் நிமிடம் காட்டும் கம்பி சுற்றுவது போல எருமைகள் எல்லாம் ஒன்றாக சுற்றுவினம். சிறுவர்கள் எருமைகளின் பின்னாலே நின்று கலைத்தார்கள். சிறுவர்கள் களைத்த பின் அல்லது நித்திரையான பின் பெரியவர்கள் மாறி மாறி எருமைகளை பின்னால் நின்று கலைத்தார்கள்.

பெண் எருமைகளை பெரிய பரந்தன் மக்கள் உழுவதற்கு பயன் படுத்துவதில்லை. ‘சூடு’ அடிக்கும் போது மட்டும் மற்ற எருமைகளுக்கு வழிகாட்ட ஒரு பெண் எருமையை பயன்படுத்தினார்கள். எருமைகள் பல முறை சுற்றிவரும் போது அவற்றின் காலடியில் மிதிபட்டு நெல்மணிகள் வைக்கலை விட்டு பிரிந்தன.

எருமைகள் அடிக்கடி சாணாகம் போடுவினம். சிறுவர்கள் சாணாகம் வைக்கல் மேல் விழுந்து விடாது பக்குவமாக ஓடி ஓடி ஒரு சிறிய ‘கடகத்தில்’ ஏந்தினார்கள். வழமையாக மாலை நேரத்தில் தான் சூடு தள்ளுவார்கள். இரவு இரவாக சூடு அடிபடும். வைக்கல் சுணையானது, அதனால் பகலில் சூடு அடிக்கும் போது மனிதர்களின் மேலில் கடி உண்டாகும். ‘பறங்கி’ வியாபாரிகளிடம் வாங்கிய ‘இலாந்தர் ‘ (lamps) விளக்குகளை கொளுத்தி வெளிச்சம் வரும்படி நான்கு மூலைகளிலும் நட்டிருந்த தடிகளில் கட்டி விட்டார்கள். முற்காலத்தில் ‘சூள்’ அல்லது ‘பந்தம்’ கொழுத்தி இருக்க கூடும்.

பல இடங்களிலும் பார்வையிட்டு, எல்லா இடங்களிலும் நெல்மணிகள் வைக்கலை விட்டு நீங்கியதை உறுதி செய்த பின்னர் வைக்கலை உதறி உதறி தனியாக பிரித்து வெளியே நாற்புறமும் போட்டார்கள். வைக்கல் முழுவதையும் பிரித்து எடுத்த பின்னர், நெல் மணிகள் மேல் இருந்த கூழங்களை பொறுக்கி எடுத்தார்கள். பின்னர் நெல்மணிகளை ஒன்றாக குவித்தார்கள். தேவையற்ற படங்குகளை மடித்து ஒரு பக்கத்தில் அடுக்கினார்கள். சற்று ஓய்வு எடுத்தார்கள்.

பெண்கள்  தேத்தண்ணீர் கொண்டு வந்து ‘களத்தின்’ வெளியே நின்று கொடுத்து விட்டார்கள். இரவில் பல முறை தேத்தண்ணீர் கிடைக்கும். காலை நேரத்தில் எல்லோருக்கும் பச்சை அரிசி பொங்கலும் சம்பலும் வழங்கப்படும்.

நெல்லை சப்பி நெல், சிறு கூழங்கள், கஞ்சல்கள் நீங்க தூற்றுதல் வேண்டும். அனுபவம் உள்ளவர்கள் நால்வர், காற்று வீசும் திசை பார்த்து வரிசையாக நின்று தூற்ற, ஏனையவர்கள் ‘குல்லங்களில்’ அள்ளி அள்ளி கொண்டு வரிசையில் நின்று கொடுத்தார்கள். ‘சுளகு’ களை களத்தில் ‘குல்லம்’ என்றே அழைத்தனர்.

தூற்றுதல் முடிய ‘நெல்மணிகளை’ ‘கடகங்களில்’ இட்டு தலையில் வைத்து அவரவர் வீடுகளுக்கு கொண்டு செல்வார்கள். வீட்டில் ஒரு தனி அறையில் இரண்டு மூன்று ‘கோற்காலிகளின்’ மேல் படங்கினால் தைத்த பெரிய பைகள், ஈச்சம் தடிகளினால் பின்னிய பின் களிமண், சாணகம் கலந்து மெழுகிய கூடைகள் இருக்கும். அவற்றில் நெல்மணிகளை கொட்டி நிரப்பினார்கள். வரிசையாக ‘கடகங்களில்’ நெல் கொண்டுவரும் போது கமக்காரனின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்து இருக்கும். நான்கு மாத உழைப்பின் பலன் அல்லவா?

நான்கு கால்களில் மேல் நான்கு மரச்சட்டங்களை அடித்து இடை நடுவே வேறொரு சட்டத்தை அடித்து ‘கோற்காலிகள்’ அமைப்பார்கள். கீழே இடைவெளிகள் இருக்கும். எலிகளும் அவற்றை பிடிக்க வரும் ‘நாகம்’, ‘சாரை’ இனப் பாம்புகளையும் கண்டு விரட்ட கோற்காலியின் கீழ் உள்ள இடைவெளி பயன்படும்.

எஞ்சிய நெல்மணிகளை சாக்குகளில் போட்டு வண்டில்களில் ஏற்றி வந்து அடுக்கினார்கள். அரை வயிறன்களை அள்ளி வந்து கோழிகளுக்காக சேமித்துக் வைத்தார்கள். வைக்கலை சூடாக குவித்து வைப்பார்கள். புற்கள் குறைந்த காலத்தில் எருதுகளுக்கும் பசுக்களுக்கும் உணவு அதுவே.

எல்லோருக்கும் சூடுகள் அடித்து முடிந்ததும் ஒவ்வொரு கமக்காரனும் அரிவி வெட்டி, சூடு அடிக்க வந்தவர்களுக்கு நெல்மணிகளை அளந்து வழங்கினார்கள். நான்கு பக்கத்திலும் அடியிலும் பலகைகளால் ஆன ‘புசல்களால்’ நெல் அளக்கப்பட்டது. பூனகரியிலிருந்து வந்தோர் தமது வண்டில்களில் நெல் மூட்டைகளை ஏற்றி விட்டு, எல்லோரிடமும் பிரியாவிடை கூறிவிட்டு, வண்டில்களின் பின்னால் நடந்து சென்றனர்.

அவர்கள் புறப்படும்போது கணபதியும் நண்பர்களும் கண்கள் கலங்கி அழுதார்கள். முப்பது, நாற்பது நாட்கள் கூட இருந்து பழகியவர்கள் அல்லவா? சூடு அடிக்கும் களத்தில் ‘நொடிகள்’ போட்டு அவிழ்த்தவர்கள், தாங்கள் அனுபவப்பட்ட ‘பேய்’ க் கதைகளை கூறி பயம் கொள்ள செய்தவர்கள், அரிவி வெட்டும் நாட்களில் சேர்ந்து தாயம் விளையாடியவர்கள் பிரிந்து போகும் போது சிறுவர்கள் கவலை கொள்வது இயல்பு தானே?

images+%25281%2529.jpg

செருக்கனில் இருந்து வந்தோர், நெல்மணிகளை அளந்து வைத்து விட்டு தமது ஊர் சென்று வண்டில்கள் கொண்டு வந்து ஏற்றி சென்றனர். மீசாலையால் வந்தவர்களின் நெல் மூட்டைகளை பெரிய பரந்தன் மக்கள் தமது வண்டில்களில் ஏற்றிச் சென்று, சுட்டதீவு துறையில் தோணிகளில் ஏற்றிவிட்டு வந்தனர். அப்போது சிறுவர்களும் வண்டில்களில் ஏறிச்சென்று தோணி புறப்பட்டதும் கைகளை காட்டி வழியனுப்பி விட்டு வந்தனர். பெரியவர்களுக்கு ஒரு போக நெற் செய்கை நன்கு நடைபெற்றது மகிழ்ச்சியைத் தர, சிறுவர்களுக்கு பிரிந்து போனவர்களை நினைத்து சிறிது நாட்களுக்கு மனக் கவலை இருந்தது.

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்  

https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13

PHOTO-2020-11-29-11-26-36-2.jpg

பெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது. அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து தொடங்கிய கண்டிவீதி இயக்கச்சி, ஆனையிறவு, பரந்தன் சந்தி, கரடிப்போக்கு, கிளிநொச்சி, முருகண்டி, ஊடாக மதவாச்சி வரை சென்று பின்னர், முன்னர் இருந்த கண்டிவீதி உடன் இணைந்தது. புதிய பாதை கண்டி வீதி என்று அழைக்கப்பட்டு, இப்போது A9 வீதி என்று அழைக்கப்படுகின்றது. ஆனையிறவில் அப்போது புகையிரதப்பாதையில் ஒன்றும் தரை வழிப்பாதையில் ஒன்றுமாக இரண்டு பாலங்கள் அமைக்கப்பட்டன.

வண்டில்கள் பாலத்தில் செல்லும் போது எருதுகள் மிரண்டு அடம் பிடித்தன. நெல், வைக்கல் கொண்டு செல்பவர்கள் துணிவு பெற்று பாலத்தின் மேல் செல்ல தொடங்கினர். சுட்டதீவில் ஒரு முறையும் கச்சாயில் ஒருமுறையும் நெல்லையும் வைக்கலையும் இறக்கி ஏற்றுவது சிரமத்தைக் கொடுத்தது. ஆனால் மக்கள் பரந்தன்சந்தி, ஆனையிறவு, இயக்கச்சி, புதுக்காட்டு சந்தி, பளை, முகமாலை, எழுதுமட்டுவாள், மிருசுவில், கொடிகாம்ம், பின்னர் மீசாலை என்ற சுற்றுப் பாதையை விரும்பாது சுட்டதீவு துறை, கடல்பயணம், கச்சாய், மீசாலை என்ற கிட்டிய பாதையை பயன்படுத்தவே விரும்பினர்.

கால போகம் செய்து முடிக்கப்பட்ட பின்   முடிவெட்டும் தொழிலாளிக்கும், சலவைத் தொழிலாளிக்கும், சீவல் தொழிலாளிக்கும் பேசியபடி கூலியாக நெல்மணிகளை அளந்து கொடுத்தார்கள். முன்பு எல்லோரும் ஒரு பெரிய பானையை வைத்து தியாகர் வயலில் தைபொங்கல் பொங்கியவர்கள், இந்த வருடம் பெண்கள் வந்து விட்டதனால் அவரவர் வீட்டிலேயே பொங்குவதென்று தீர்மானித்தார்கள். விவசாயிகள் பயிரை செழித்து வளர செய்த சூரியனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பொங்கல் பொங்கி சூரிய உதயத்தின் போது படைத்தார்கள்.

மனைவியரை இன்னும் அழைத்துவராதவர்கள் பொங்கலுக்கு ஊருக்கு சென்றுவிட்டனர். பொங்கல் முடிய தன் மகனை மாமன், மாமியிடம் விடுவதாக திட்டமிட்டிருந்த முத்தர் பள்ளிக்கூடம் தொடங்கி விட்டது என்று அறிந்ததும் திரும்ப கொண்டு சென்று விட்டு விட்டார். பொங்கலுக்கு கட்டாயம் கூட்டி வருவேன் என்று மகனுக்கு கூறியபடி முத்தர் கணபதிப்பிள்ளையை மீசாலை சென்று மூன்று நாள் விடுமுறையில் கூட்டி வந்திருந்தார். எல்லோர் வீடுகளிலும் முற்றத்தில் கோலம் போட்டு நிறைகுடம் வைத்து பொங்கல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

சின்ன கணபதிக்கு பொங்கலை விட கணபதி, வீரகத்தி, செல்லையா, பொன்னாத்தையுடன் விளையாடுவது கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்தது. இரண்டு நாட்களும் அவனது பொழுது அவர்களுடன் கழிந்தது. பள்ளி செல்வதற்காக ஊருக்கு வெளிக்கிட்ட போது “போக மாட்டேன்” என்று அடம் பிடித்து அழ தொடங்கினான். கணபதி பெரிய மனித தோரணையுடன் அவனை அணைத்து, கண்ணீரை துடைத்து “சின்ன கணபதி, படிப்பு முக்கியம். நீ படித்து முடித்து விட்டு இங்கு தானே ஐயா, அம்மாவுடன் வந்து இருக்கப் போகின்றாய்” என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான்.

ஆறுமுகத்தாருடன் இன்னும் மூன்று பேர் வண்டில்களில் நெல் மூட்டைகளை ஏற்றி கண்டிவீதியால் கொண்டு சென்று மீசாலை, சாவகச்சேரியில் விற்று விட்டு, திரும்ப வரும் போது கிடுகுகளை வாங்கி ஏற்றிவர முடிவு செய்தார்கள். பொன்னாத்தையை விசாலாட்சிக்கு உதவியாக வந்து நிற்கும்படி ஆறுமுகத்தார் கேட்டார். அவளும் சம்மதித்து தகப்பன், தாயிடம் அனுமதி பெற்று வந்து விட்டாள்.

தம்பிமாரில் ஒருவரை இரவு வந்து துணையாக படுக்க ஒழுங்கு செய்தார். விசாலாட்சியிடம் “விசாலாட்சி, நான் கணபதியையும் கூட்டி செல்கிறேன். அவனும் எவ்வளவு நாட்கள் தான் பெரிய பரந்தனை மட்டும் சுற்றி சுற்றி வருவான். கணபதி நாலு ஊரைப் பார்த்து அறியட்டும்.” என்று கூற அவளும் சம்மதித்தாள்.

கணபதி வண்டியில் ஏறி நெல்மூட்டைகளின் மேல் இருந்து கொண்டான். துணைக்கு இன்னொருவர் ஏறி அவனை அணைத்தபடி இருந்தார். விசாலாட்சி அவனிடம் “கணபதி, கவனமாக வண்டில் சட்டத்தை பிடித்துக் கொண்டு இரு” என்று கூறி அனுப்பி வைத்தாள்.

ஆறுமுகத்தாரின் வண்டில் முன்னே செல்ல, மற்ற மூவரினதும் வண்டில்கள் வரிசையாக அணி வகுத்து பின்னால் சென்றன. விசாலாட்சி, வேட்டி மட்டும் கட்டி, சால்வையால் தலைப்பா கட்டி வண்டிலில் நிமிர்ந்து இருந்து ஓட்டிய ஆறுமுகத்தாரையும், ஊர் பார்க்கும் மகிழ்ச்சியில் தாயாருக்கு கைகாட்டி விடை பெற்ற கணபதியையும், பின்னால் வரிசையாக சென்ற வண்டில்களையும் மறையும் வரை கண் கொட்டாது பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் காதுகளில் வண்டில்களின் மணிச் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அவள் கணபதியைப் பிரிந்து முன்பு ஒரு நாளும் இருந்ததில்லை.

வண்டில்கள் அரசினர் போட்ட கிரவல் பாதையில் செல்லாது, குறிப்பம் புளி அருகே காட்டினூடகச் சென்ற மண் பாதையில் சென்றன. பாதை குண்டும் குழியுமாக இருந்தது. முயல்களும், கௌதாரிகளும், கானாங்கோழிகளும் குறுக்கால் ஓடின.

(குறிப்பு: 1954 ஆம் ஆண்டில் தான் குமரபுரம் குடியேற்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டு காடுகள் வெட்டி கழனிகள் ஆக்கப்பட்டன. அதன்பிறகு தான் காஞ்சிபுரம் கிராமம் உருவானது. அதுவரை அது பெரும் காடு)

கிழக்கு திசையில் ஓடிய வண்டில்கள், பரந்தன் சந்தியில் ஏறி வடக்கு திசையில் ஓடின. ஆனையிறவு வரை காடுகள் தான். பின்னர் கடல் நடுவே இருந்த பாதையில் ஓடி பாலத்தை அடைந்தன. பின் வண்டிலில் வந்த ஒருவர் ஆறுமுகத்தாரின் வண்டிலின் முன்பு போய் பாதையைப் பார்த்து நின்றபடி பின் பக்கமாக வண்டிலின் நுகத்தை இரண்டு கைகளாலும் பிடித்து எருதுகளுக்கு வழிகாட்டி அழைத்துச் சென்று பாலத்தைக் கடந்து விட்டு விட்டு வந்தார். அவர் இவ்வாறே மற்ற மூன்று வண்டில்களையும் பாலத்தை கடக்க உதவினார்.

ஆனையிறவில் தூரத்தில் ஒரு சிறிய கட்டிடம் தெரிந்தது. அங்கு வெள்ளைக்காரத் துரைகள் வந்து தங்கி செல்வதாக மீன் பிடித்துக் கொண்டு நின்றவர்கள் கூறினார்கள். கடலின் நடுவே இருந்த பாதையால் சென்றது, பாலத்தின் மேல் சென்றது, மீனவர் பிடித்து பனையோலை கூடையில்   போட்ட மீன்கள் துள்ளி குதித்தது எல்லாம் கணபதிக்கு புதுமையாக இருந்தன. கடலின் கரையோரம் மீனவர்களின் தோணிகள் தரையில் இழுத்து, கவிழ்த்து விடப்பட்டிருந்தன.

இயக்கச்சியில் பாதை மேற்கு பக்கமாக திரும்பியது. திரும்பிய மூலையில் ஒரு கடை இருந்தது. இரண்டொரு மனிதர்களுடைய நடமாட்டம் தெரிந்தது. மக்கள் குடியிருப்புக்கள் உள்ளுக்குள் சிறிது தூரம் தள்ளி இருக்க வேண்டும். வண்டில்கள் ஓடும் போது பளை வருவதற்கிடையே ஆங்காங்கு கொட்டில் வீடுகள் காணப்பட்டன. மக்கள் தென்னங்கன்றுகளை நடுவதில் ஈடுபட்டிருந்தனர். புகையிரத வீதியில் மனிதர்கள் நின்று ஏதோ செய்து கொண்டிருந்தார்கள்.

பளையில் ஒரு தேநீர்க்கடையும், ஒரு பலசரக்குக் கடையும் காணப்பட்டன. இரண்டு மூன்று வண்டில்கள் நிறுத்தப்பட்டிருந்தன. எருதுகள் அவிழ்த்து மேய்வதற்காக கட்டப்பட்டிருந்தன. வண்டில் தொடர்ந்து ஓடியது. எழுது மட்டுவிலில் வண்டில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, எருதுகளை அவிழ்த்து அருகே காணப்பட்ட ஓடையில் நீர் குடிக்க செய்து மரநிழலில் மேய கட்டினார்கள். பெரியவர்கள் ஒரு பெரிய வாகை நிழலில் வட்டமாக இருந்து கதைத்தார்கள். கணபதி அங்கும் இங்கும் நடந்து வேடிக்கை பார்த்தான். பெரியவர்களை விட்டு தூரத்திற்கு அவன் செல்லவில்லை. ஒரு வேப்ப மரத்தில் ஏறி இறங்கி விளையாடிய மந்திகள் அவனைப் பார்த்து பல்லைக் காட்டி “ஈ, ஈ” என்றன. கணபதி சற்று பயந்து திரும்பி பெரியவர்கள் இருந்த மரத்தடிக்கு சென்றான்.

அவர்களில் சிலர் சுருட்டை பற்றவைத்து குடிக்க, சிலர் வெற்றிலை பாக்கு போட்டனர். சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் எருதுகளை மீண்டும் வண்டில்களில் பிணைத்தார்கள். வண்டில்கள் மீண்டும் ஓடத் தொடங்கின.

மிருசுவில் தாண்டி கொடிகாமத்தில் கண்டி வீதியில் இரண்டு கடைகளும் பருத்தித்துறை போகும் வீதியில் ஒரு கடையும் காணப்பட்டன. அந்த கடைகளில் ஒரு பகுதி பலசரக்கு விற்குமிடமாகவும் மற்ற பகுதி தேனீர், வடை விற்கும் இடமாகவும் இருந்தன.

சந்தியில் ஒரு மூலையில் ஒரு பெரிய மரத்தின் கீழ் மூன்று நான்கு பெண்கள் கடகங்களிலும் பெட்டிகளிலும் மரக்கறிகளை விற்பதற்காக வைத்திருந்தனர். இன்னொரு அம்மா பனங்கட்டி குட்டான்கள், ஒடியல்கள், புழுக்கொடியல்கள் என்பவற்றை வைத்திருந்தார்.

வரும் வழியில் கள்ளு கொட்டில்களில் ஆண்கள் சிலர் குந்தியிருந்து பிளாக்களில் கள்ளு குடிப்பதை கணபதி கண்டான். மீசாலை வந்ததும் இவர்களின் இடத்திற்கு மாவடி பிள்ளையார் கோவில் தாண்டி போக வேண்டும். கண்டி வீதியால் தெற்கு புறமாக திரும்பி, பின் கிழக்கு பக்கமாக பாதை சென்றது. அந்த பாதையில் செல்வதற்கு முன்னர் புகையிரதப் பாதையை கடக்க வேண்டி வந்தது. வண்டில் தண்டவாளங்களின் மேல் ஏறி இறங்கியது கணபதிக்கு வேடிக்கையாக இருந்தது.

போகும் வழியிலே நெல் கேட்டவர்களுக்கு வண்டில்களில் வைத்தே நெல்மணிகளை அளந்து விற்றார்கள். பின்னர் அடுத்த நாள் காலையில் மீசாலை சந்தியில் சந்திப்பதாக கூறி பிரிந்து சென்றார்கள். ஆறுமுகத்தாரும் கணபதியும் முன்பு தம்பையரும் விசாலாட்சியும் வாழ்ந்த வீட்டிலேயே அன்று தங்கினார்கள். உறவினர்கள் சிலர் வந்து சுகம் விசாரித்தார்கள். கணபதியையும் அருகே அழைத்து தடவி தடவி கதை கேட்டார்கள். போட்டி போட்டுக் கொண்டு சாப்பாடுகள் கொண்டு வந்து தந்தார்கள்.

ஆறுமுகத்தாரிடம் “கணபதி நன்கு வளர்ந்து விட்டான் என்றும், பெரிய பரந்தன் வெய்யிலில் கொஞ்சம் கறுத்தாலும் நன்றாக இருக்கிறான் என்றும், விசாலாட்சி சுகமாக இருக்கிறளா? ஏதாவது விசேஷம் உண்டா” என்றும் கேட்டார்கள். வீடு நன்கு மெழுகப் பட்டு, கூட்டி துடைக்கப்பட்டிருந்தது. மிகுதி நெல்லை அங்கு வைத்தே வாங்கி விட்டார்கள்.

சாவகச்சேரியில் கூடிய விலைக்கு வாங்கியவர்களுக்கு குறைந்த விலையில் ஊரிலேயே வாங்கியது மகிழ்ச்சியை கொடுத்தது. மதியம் சாப்பிட்டு விட்டு சற்று நேரம் உறங்கியவர்கள், கிடுகுகள் உள்ள இடத்தை விசாரித்து, அங்கு சென்று கிடுகுகள் வாங்கி வண்டிலில் அடுக்கி கட்டிய பின்னர் வீட்டிற்கு வந்தார்கள்.

விசாலாட்சி தனது உறவினர்களுக்கும் தோழிகளுக்கும் கொடுக்கும்படி இறைச்சி வத்தல், புளி, தேன், நெய் முதலியவற்றை அனுப்பியிருந்தாள்.  அவற்றை அவர்களிடம் சேர்ப்பித்தனர். பின் எருதுகளை தண்ணீர் குடிக்க வைத்து, வண்டிலின் கீழே தொங்கிய சாக்கில் அடுக்கி வைத்திருந்த வைக்கல் கட்டுகள் சிலவற்றை அவிழ்த்து உதறி எருதுகளுக்கு போட்டனர். இரவு உறவினர்கள் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு விறாந்தையில் பாயை விரித்து பிரயாணக் களைப்பு தீர நன்கு உறங்கினர்.

காலை எழுந்து காலைக்கடன் முடித்து, குளித்து விட்டு வந்த போது உறவினர்கள் தேநீரோடும், விசாலாட்சிக்கும் மற்றவர்களுக்கும் கொடுப்பதற்காக கறுத்தக் கொழும்பான் மாம்பழம், முருக்கங்காய் கட்டு, குரக்கன் மா, ஒடியல் மா, புழுக்கொடியல் முதலியவற்றுடனும் வந்திருந்தனர். அவற்றை பெற்றுக் கொண்ட ஆறுமுகத்தார் எருதுகளை தண்ணீர் குடிக்கச் செய்து வண்டிலில் பூட்டினார். ஆறுமுகத்தாரும் கணபதியும் விடை பெற்று மீசாலை சந்திக்கு வந்த போது மற்ற மூன்று வண்டில்களில் வந்தோர் தங்களுக்காக காத்திருப்பதை கண்டனர். எல்லோரும் பெரிய பரந்தனுக்கு பயணம் செய்தனர்.

காலம் வெகு விரைவாக ஓடியது. இப்போது கணபதி பதினாறு வயது இளைஞன். வயதிற்கு மிஞ்சிய வளர்ச்சி. சிறு வயதிலிருந்தே வயல் வேலைகள் செய்த படியால் நல்ல உடற்கட்டைக் கொண்டிருந்தான். தாயார் விசாலாட்சி நல்ல வெள்ளை நிறமானவள், ஆனால் கணபதி தகப்பனாரின் மாநிறத்தையும் அவரின் உயரத்தையும், கூடுதலாக அவரின் சாயலையுமே கொண்டிருந்தான். தம்பையரைப் போலவே குடுமி வைத்திருந்த கணபதியின் கூந்தல் பெண்களின் கூந்தல் போல அடர்த்தியாக இருந்தது. மீசை அரும்பத் தொடங்கி விட்டது. தலைமயிரை குடுமியாக கட்டி, நான்கு முழ வேட்டியை மடித்து கட்டி, சால்வையை தோளில் போட்டு அவன் நடந்து வரும் அழகை மீசாலையிலும் பெரிய பரந்தனிலும் இருந்த முறைப்பெண்கள் வேலி மறைவில் நின்று பார்த்து ரசித்தனர்.

இதுவரை உறவினர்களுக்கு இடையே தான் திருமணம் செய்வது அவர்களின் வழக்கம் என்பதால், தங்களை விட்டு இவன் எங்கு போய்விடப் போகிறான் என்ற நம்பிக்கையும் கொண்டனர்.

கணபதி பெரிய பரந்தனில் எல்லோர் வீட்டுக்கும் செல்லப்பிள்ளை. அவனது நல்ல பழக்க வழக்கங்கள் அவன் மீது எல்லோருக்கும் மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. எட்டாம் வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீரை எந்த ஒழுங்கில் பாய்ச்சினால் நல்லது என்பதிலும் ஒருவரின் வயலும் தண்ணீரில்லாமல் வாட விட்டுவிடக் கூடாது என்பதிலும் கணபதி தெளிவான அறிவைத் கொண்டிருந்தான். தனது வயலுக்கு முதலில் பாய்ச்ச வேண்டும் என்று அவசரப்பட மாட்டான்.

குஞ்சுப் பரந்தனில் உடையார் குடும்பத்தைக் சேர்ந்த ஒருவர் கமவிதானையாக துரைமார்களால் நியமிக்கப்பட்டிருந்தார். குஞ்சுப் பரந்தனில் இருந்த பெரும் பான்மையானவர்கள் உறவினர்களாகும். அப்படி இருந்தும் பத்தாம் வாய்க்காலிலிருந்து அந்த கமவிதானையார் ஒழுங்காக தண்ணீரை பங்கிடுவதில்லை என்ற முறைப்பாடு அடிக்கடி துரைமார்களுக்கு கிடைத்தது. எவ்வித நியமனமும் இன்றி கணபதி சிறப்பாக எல்லோருடைய ஆதரவுடன் எட்டாம் வாய்க்கால் நீரை பாய்ச்சுவதற்கு உதவி செய்து வந்தான்.

மீசாலை செல்லும் போதெல்லாம் ஆறுமுகத்தாரை எல்லோரும் கேட்கும் விசேஷம் எதுவும் இருக்கா என்ற கேள்விக்கு விடையாக விசாலாட்சி கருத்தரித்தாள். உரிய காலம் வந்த பொழுது பரந்தனில் யாரையும் ஒழுங்கு செய்யாது, தனக்கு கணபதி பிறந்த பொழுது பிரசவம் பார்த்த கிழவியையே அழைத்து வரும்படி விசாலாட்சி ஆறுமுகத்தாரிடம் கேட்டுக் கொண்டாள்.

சில நாட்களுக்கு முன்னரே மீசாலை சென்று சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரசவம் பார்த்து வரும்படி ஆறுமுத்தார் வற்புறுத்திய போதும் ஏனோ விசாலாட்சி அதனை மறுத்துவிட்டாள். ஆறுமுகத்தாரையும் கணபதியையும் தனியே விட்டு விட்டு போகவும் அவளுக்கு விருப்பம் இல்லை. ஆறுமுகத்தாரும் மீசாலை சென்று மருத்துவம் பார்க்கும் அந்த அம்மாவைக் கூட்டி வந்தார். 1916 ஆம் ஆண்டு ஆறுமுகத்தாருக்கும் விசாலாட்சிக்கும் ‘மீனாட்சியம்மாள்’ என்ற மகள் பிறந்தாள்.

மருத்துவமாது குழந்தையை தூய்மை செய்து எடுத்து வந்து கணபதியின் கைகளிலேயே பிள்ளையைப் கொடுத்தாள். மகிழ்ச்சியோடு குழந்தையை வாங்கிய கணபதி “தங்கச்சி” என்று அன்புடன் அழைத்தான்.

...

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 14

PHOTO-2020-12-07-15-50-26-1.jpg

சிங்கள மக்கள், இலங்கை தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள், இந்திய வம்சாவழி தமிழர்கள், செட்டிமார், போத்துக்கீசப் பறங்கியர், டச்சுக்காரப் பறங்கியர், காபீர்கள் என்போர் இலங்கையில் வாழ்ந்தனர்.

போத்துக்கீசப் பறங்கியர் (Portuguese Burghers) என்பார் போத்துக்கீச ஆண்களுக்கும் சிங்கள அல்லது தமிழ் பெண்களுக்கும் பிறந்தவர்கள். இவர்கள் கத்தோலிக்க சமயத்தை சார்ந்தவர்கள். போத்துக்கீச கிரியோல் மொழி, ஆங்கிலம், சிங்களம் அல்லது தமிழ் பேசக் கூடியவர்களாக இருந்தனர்.

டச்சுக்காரப் பறங்கியர் என்போர் டச்சுக்கார்ர் சிங்களவர், தமிழர், போத்துக்கீசர் பறங்கியர்களுடன் சேர்ந்து கலப்பினமாக மாறியவர்களாகும். இவர்கள் சீர்திருத்த திருச்சபையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளை பேசினார்கள்.

பெரும்பான்மையான போத்துக்கீசப் பறங்கியரும் டச்சுக்காரப் பறங்கியரும் பிற்காலத்தில் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குடியேறி விட்டனர்.

நேரமும் காலமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எட்டாம் வாய்க்காலில் வரும் நீரையும் கொல்லனாறு, நீலனாறு என்பவற்றை அணை கட்டி மறித்துப் பெறும் நீரையும் பயன்படுத்தி காலபோகம், சிறுபோகம் மட்டுமல்லாது இடைப்போகமும் விதைத்து பெரிய பரந்தன் மக்கள் செல்வந்தர்கள் ஆனார்கள்.

மாட்டு மந்தையும் பெருகி விட்டது. எருமை மாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

நீரை கணபதி சிறத்த முறையில் பங்கீடு செய்து ஒருவருக்கும் குறை வராது பார்த்துக் கொண்டான். கணபதிக்கும் பத்தொன்பது வயது ஆகிவிட்டது. வழமை போல இளைஞர்கள் பொறி வைத்து மான், மரை, பன்றிகளை வேட்டையாடினர். எல்லோர் வீடுகளிலும் இறைச்சி வத்தல்கள் காய்ந்தன.

கணபதி தனது ஓய்வு நேரங்களை தங்கச்சியாருடன் விளையாடுவதிலேயே கழித்தான். கணபதியின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் மற்றோரு நிகழ்வும் நடந்தது.

தாயார் விசாலாட்சி மீண்டும் கர்ப்பவதியானார். இம்முறையும் ஆறுமுகத்தார் மீசாலைக்கு போய் அதே மருத்துவச்சியையே அழைத்து வந்தார். மருத்துவச்சியும் ஒரு மாதம் வரை தியாகர் வயலில் தங்கி இருந்து விசாலாட்சிக்கு தேவையான யாவற்றையும் செய்தார்.

ஒருநாள் அதிகாலையிலேயே விசாலாட்சிக்கு வயிற்றுக்குத்து தொடங்கி விட்டது. சில மணி நேர போராட்டத்தின் பின் ஆறுமுகத்தாருக்கு ஒரு ஆண் பிள்ளையை பெற்றுக் கொடுத்தாள். இம்முறையும் கணபதியே முன்னுக்கு போய் தம்பியாரை கைகளில் வாங்கி கொண்டான். கணபதி “தம்பி”, “தம்பி” என்று குழந்தையுடனேயே திரிந்தான். ஆறுமுகத்தார் மகனுக்கு “பேரம்பலம்” என்று பெயர் வைத்தார். தனி ஒருவனாக இருந்த கணபதி முதலில் தங்கை மீனாட்சியம்மாளும் இப்போது தம்பியும் கிடைத்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

குஞ்சுப்பரந்தன் கமவிதானையின் தண்ணீர் பங்கீடு பற்றி தொடர்ந்து இரணைமடு நீர் விநியோக அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் சென்றன. குஞ்சுப்பரந்தன் பிரச்சினையை தீர்ப்பதற்காகவும், பெரிய பரந்தனுக்கு ஒரு கமவிதானையை நியமிப்பதற்காகவும் ஒரு அதிகாரி குதிரையில் வந்தார். அவர் ஒரு போத்துகீசப் பறங்கியர். அவருக்கு ஆங்கிலத்துடன் சிங்களம், தமிழ் மொழிகளையும் பேசத் தெரியும்.

குஞ்சுப் பரந்தனுக்கு போய் விசாரித்து கமவிதானையை எச்சரித்து விட்டு, பெரிய பரந்தனுக்கு வந்தார். கணபதி பெரியபரந்தன் வாய்க்கால்களை எல்லாம் சுற்றிக் காட்டி, தண்ணீர் பாய்ச்சும் முறை பற்றி எல்லாம் அவருக்கு விளக்கினான். கணபதியின் தோற்றமும், அவன் நீர் பாய்ச்சுவதில் காட்டிய ஆர்வமும், பெரிய பரந்தன் மக்கள் அவன் மேல் வைத்திருந்த நம்பிக்கையும் அவரைக் கவர்ந்தன.

அவனை பெரிய பரந்தன் கமவிதானையாக நியமித்து, மறுநாள் இரணை மடுவிலுள்ள கந்தோரில் வந்து அதற்கான கடிதம் பெறும் படி கணபதிக்கு கூறி விட்டு தனது குதிரையில் ஏறி போய் விட்டார். சிவப்பு நிறமான அந்த உயர்சாதி குதிரையில் அவர் பாய்ந்தேறி இருந்து குதிரை சவாரி செய்தது பெரிய பரந்தன் மக்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

‘கமவிதானை’ பதவி என்பது ‘விதானை’ பதவி போல அதிகாரம் மிக்க பதவியில்லை. நீர் பாய்ச்சல் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்ப்பது மட்டுமே கமவிதானையின் பணியாகும்.

ஆங்கிலேய ஆட்சியாளர் முழு நிர்வாக பொறுப்புகளுக்கும் இங்கிலாந்தில் இருந்து ஆட்களை கொண்டு வரமுடியாது. எனவே தமக்கு அடுத்த பதவிகளில் பறங்கியரையே நியமித்தனர். பறங்கியரும் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்டனர். நீர்ப்பாசன அதிகாரியான இந்த பறங்கியர் மிக நல்லவர். ஊர் மக்களுடன் அன்பாக பழகினார்.

இந்த அதிகாரிகள் போக்கு வரத்திற்கு குதிரைகளை பிரதானமாக பயன்படுத்தினர். பறங்கி அதிகாரி இரணைமடுவில் இருந்த ஒரு தங்குமிடத்தில் தனது மனைவியுடன் தங்கியிருந்தார். தங்குமிடம் கந்தோருக்கு அருகிலேயே இருந்தது.

அடுத்த நாள் ஆறுமுகத்தார் கணபதியைக் கூட்டிக்கொண்டு இரணைமடுவுக்கு போக ஆயத்தமானார். அப்போது விசாலாட்சி ஒரு புதிய அடுக்குப் பெட்டியில் மரை இறைச்சி வத்தலை கொண்டு வந்து கொடுத்து “பெரியவர்களைப் பார்க்க போகும் போது வெறுங்கையுடன் போவது முறையில்லை. இந்த வத்தலை கொண்டு போங்கள்” என்று சொல்லி கொடுத்து விட்டாள்.

ஆறுமுகத்தாரும் கணபதியும் வண்டிலில் புறப்பட்டு இரணைமடு நீர்ப்பாசன கந்தோரை அடைந்தனர். அவர்கள் இருவரையும் பணியாளர்கள் ஒரு வாங்கில் இருக்கச் செய்தனர். சிறிது நேரத்தில் அதிகாரி வந்து, கணபதியை தனது அறைக்கு அழைத்து, அவனிடம் ஒரு கையொப்பத்தை பெற்ற பின்னர் நியமனக் கடிதம் வழங்கினார்.

ஆறுமுகத்தார் தயங்கி தயங்கி வந்து இறைச்சி வத்தலை கொடுத்தார். பெட்டியின் மூடியைத் திறந்து பார்த்து மகிழ்ச்சியடைந்து விசிலடித்த அதிகாரி பணியாளரைக் கூப்பிட்டு “இதனைக் கொண்டு போய் ‘சென்சோரா’ விடம் கொடு என்றார். (போத்துக்கீசர் ஆண்களை ‘சென்சோர்’ (senhor) என்றும் பெண்களை ‘சென்சோரா’ (senhora or senhorita) என்றும் அழைத்தனர்).

அந்த பறங்கியர் பின்னர் கணபதியைப் பார்த்து “கணபதிப்பிள்ளை, உனக்கு துவக்கினால் சுடத்தெரியுமா?” என்று கேட்டார்.

கணபதி “இல்லை, சென்சோர், நாங்கள் பொறி வைத்து தான் வேட்டையாடுவது வழக்கம்” என்று கூறினான். அதிகாரி “சரி, நான் நாளை முதல் பெரிய பரந்தன் வந்து உனக்கு துவக்கினால் சுடப் பழக்குவேன். தயாராக இரு.” என்றார்.

அதற்கு கணபதி “சென்சோர், வியாழன், வெள்ளி இரு நாட்களும் நான் மிருகங்களை கொல்ல மாட்டேன். மற்ற நாட்களில் உங்களிடம் சுடப் பழகுகிறேன்.” என்றான். அவனது நேர்மையான பேச்சு பறங்கியரை மிகவும் கவர்ந்தது. அடுத்தநாள் ஒரு செவ்வாய் கிழமை, எனவே அன்று பழகுவதாக தீர்மானித்தார்கள்.

போத்துக்கீசர் காலத்து பாடல் ஒன்றின் சில வரிகள். அந்தோனி என்பவன் தனது தொப்பியினால் எதையோ மறைக்கிறான். அதை அவதானித்த போத்துக்கீசன் கேள்வி கேட்க, அந்தோனி பதில் சொல்வதாக வருகிறது.

“என்ன பிடிக்கிறாய் அந்தோனி. எலிப்பிடிக்கிறன் சென்சோரே. பொத்திப் பிடி, பொத்திப்பிடி அந்தோனி. பூறிக்கொண்டோடுது சென்சோரே”.

அடுத்தநாள் பறங்கியர் சொன்னதைப் போலவே ஒரு துவக்குடன் (துப்பாக்கி) தனது குதிரையில் வந்து இறங்கினார். அது ஒரு பதினாறாம் நம்பர் துவக்கு. பன்னிரண்டாம் நம்பர், இருபதாம் நம்பர் துவக்குகளும் உண்டு. துவக்கின் குழாயின் சுற்றளவை பொறுத்து துவக்குகளுக்கு நம்பர் உண்டு. குதிரையை தியாகர் வயலில் மேயக் கட்டிவிட்டு இருவரும் வடக்கு காட்டினுள் சென்றார்கள்.

கணபதி குறிப்பம் புளியை காட்டி, அதன் பயன் பற்றி கூறினான். பறங்கியர் துவக்கை எவ்வாறு திறந்து தோட்டாவை உட்செலுத்துவது என்பதை கணபதிக்கு முதலில் காட்டிக் கொடுத்தார்.

“கணபதி தோட்டாக்களில் பல வகை உண்டு. ஒரு பெரிய குண்டு மட்டும் உள்ள குண்டு தோட்டா யானை, காட்டெருமை என்பவற்றை சுட பயன்படும். நான்கு நடுத்தர குண்டுகள் உள்ள எஸ்ஜி (SG) தோட்டா மான், மரை, பன்றி, மாடுகளை சுட பயன்படும். பதினாறு சிறிய குண்டுகள் உள்ள நான்காம் நம்பர் தோட்டா முயல், மயில், கௌதாரி, காட்டுக்கோழி  முதலியவற்றை சுட  பயன்படும்” என்றார்.

“கணபதி, துவக்கின் குழாயினுள் தோட்டாவை செலுத்திய பின்னர், துவக்கின் சோங்கை உனது தோளுடன் அழுத்தி பிடித்துக் கொள். துவக்கின் குதிரையை இது போல பின்னால் இழுத்து விட்டால் தான், நீ சுடுவதற்கு வில்லை இழுக்க குதிரை போய் தோட்டாவின் நடுப்பகுதியிலுள்ள வெடிக்கும் பகுதியில் வேகமாக அடிக்கும். அது வெடிக்கும் விசையில் தோட்டாவிலுள்ள குண்டுகள் குழாய் வழியே தள்ளி செல்லப்பட குண்டுகள் நீ குறிபார்த்த இலக்கைப் போய்த் தாக்கும். சுடும் போது குழாயின் தொடக்கத்தில் உள்ள சிறிய குழி, குழாயின் நுனியில் ஒட்டியிருக்கும் சிறு குண்டு, நீ சுட இலக்குப் பார்க்கும் விலங்கு என்னும் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.” என்று பறங்கியர் வேட்டையின் பால பாடத்தை கணபதிக்கு கற்பித்தார்.

வேட்டையின் போது கால்களை மெதுவாக எடுத்து வைத்து சத்தமின்றி விலங்கை அணுக வேண்டும் என்பதை கணபதி அறிவான். பறங்கியர் மெதுவாக கணபதியை பின் தொடர்ந்தார். ஓரிடத்தில் நான்கு பேடுகளும் ஒரு சேவலும் கொண்ட காட்டுக் கோழி கூட்டம் ஒன்றை இருவரும் கண்டனர். பறங்கியர் “கணபதி, ஒரு காலை நிலத்தில் ஊன்றி மறுகாலின் முழங்காலை மடித்து இருந்து ஆறுதலாக குறி பார்த்து சுடு” என்றார்.

இவர்களைக் காணாத கோழிகள் நன்றாக கிழறி கொத்தி எதையோ உண்டன. கணபதி நிதானமாக குறி பார்த்து சுட்டான். சேவலும் இரண்டு பேடுகளும் சூடு பட்டு இறந்தன. மற்ற இரண்டு பேடுகளும் தப்பி ஓடி விட்டன.

காட்டை நன்கு சுற்றி பார்த்து, வேறு எந்த விலங்குகளும் கிடைக்காது திரும்பி வரும் போது கணபதியின் கண்களில் ஒரு முயல் பட்டது. இம்முறை நின்றபடி குறி பார்த்து சுட்டான். முயல் இரண்டு முறை துடித்து இறந்தது.

கணபதி ஒரு பனயோலைக் குருத்தை வெட்டி, கோழிகளையும் முயலையும் அதனால் சுற்றி கட்டி பறங்கியரிடம் கொடுத்து அனுப்பினான். கோழிகளை அல்லது முயலை எடுக்கும் படி பறங்கியர் வற்புறுத்தியும் கணபதி ஏற்க மறுத்து விட்டான். துவக்கையும் எஞ்சிய தோட்டக்களையும் கணபதியை பாதுகாப்பாக வைத்திருக்கும் படி கூறிவிட்டு விலங்குகளை குதிரையின் பின் பக்கத்தில் கட்டி விட்டு, அவர் குதிரையில் ஏறி சென்றார்.

தொடர்ந்து ஒரு கிழமை பயிற்சியின் பின்னர் கணபதி சிறந்த வேட்டைக்காரனாக மாறிவிட்டான். இரவில் டோர்ச் லைற் வெளிச்சத்தில், வெளிச்சம் விலங்கின் கண்களில் படும் போது விலங்குகள் சில கணங்கள் அசையாது நிற்கும். அப்போது விரைவாக குறி பார்த்து சுட்டு விட வேண்டும்.

இரவு வேட்டையையும் இரண்டு நாட்கள் கணபதிக்கு பழக்கினார். இரண்டாம் நாள் தொடக்கம் கணபதிக்கும் வேட்டையில் பங்கு கிடைத்தது. கணபதி அவற்றை ஊர் மக்களுக்கும் கொடுப்பது வழக்கம்.

கணபதி நன்கு தேர்ச்சி பெற்றதும், அதிகாரி கணபதியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். துவக்கையும் தோட்டாக்களையும் கணபதி பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். டோர்ச் லைற்றையும் அவ்வாறே. சனிக்கிழமை இரவு கணபதி தனது தோழர்களுடன் வேட்டைக்கு போக வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை காலை பறங்கியர் வருவார்.  முயல்களானால் இரண்டு முயல்களையும் மான், மரை, பன்றியானால் முன்கால்களுடன் சேர்ந்த அரை பங்கு இறைச்சியை அதிகாரிக்கு கொடுத்து விட்டு, மிகுதியை கணபதி எடுக்கலாம். இடையில் வேட்டையாடி கிடைப்பதை கணபதியே எடுக்கலாம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் பறங்கியர் தமது குதிரையில் விரைந்து வருவார். கணபதியும் இறைச்சியுடன் காத்திருப்பான். பறங்கியருக்கு விருப்பம் என்பதனால் வத்தல்களையும் கொடுப்பான். கணபதிக்கும் பறங்கியருக்கும் இடையே இனம், மதம், பெரியவர் சிறியவர் என்ற பேதங்கள் மறந்து ஒரு நல்ல நட்பு மலர்ந்தது.

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் - ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 15

PHOTO-2020-12-13-16-53-39-2.jpg

பொறிக்கடவை அம்மாளின் திருவிழாக்கள், வேள்வி விழா என்பது குஞ்சுப் பரந்தன், செருக்கன், பெரிய பரந்தன் என்ற மூன்று கிராம மக்களுக்கும் பிரதானமான விழாக்கள். பூனகரி, மீசாலை, கச்சாய் மக்களும் வந்து கலந்து கொள்ளுவார்கள்.

தமிழர்களின் ஏனைய பண்டிகைகளை விட மூன்று கிராம மக்களுக்கு இந்த நாட்களே புத்தாடை அணிந்து, உறவினர்களை வரவேற்று, உபசரித்து கூடி மகிழும் நாட்கள் ஆகும். இளைஞர்கள் காவடி எடுத்து, வேட்டியை மடித்து கட்டி, பறை மேளத்தின் அடிக்கு இசைவாக வெறும் மேலுடன், வியர்வை வழிய வழிய ஆடுவார்கள்.

யுவதிகள் தமக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று நேர்த்தி வைத்து, விரதம் பிடித்து பாற்செம்பு எடுப்பார்கள். அழகாக ஆடை உடுத்தி பாற்செம்பு எடுக்க வரும் பெண்களின் அழகு இளைஞர்களின் கண்களில் படும். நல்ல உடற்கட்டுடன் மேள அடிக்கு இசைவாக, அழகாக ஆடும் இளைஞர்களை கன்னிப் பெண்கள் பார்க்காதவர்கள் மாதிரி கடைக் கண்களால் பார்ப்பார்கள்.

கணபதி துள்ளித் துள்ளி ஆடினான். சுழன்று சுழன்று ஆடினான். மேளம் அடிப்பவர்கள் கணபதி ஆடுகிறான் என்றால் தாங்களும் ரசித்து, ரசித்து இசையை மாற்றி, மாற்றி தமது பறை மேளத்தில் எத்தனை விதமாக அடிக்கலாமோ அத்தனை விதமாக தமது திறமை அனைத்தையும் பயன்படுத்தி அடித்தார்கள். கணபதியும் அவர்களுக்கு ஈடு கொடுத்து ஆடினான். அவனது ஆட்டத்தை மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி நின்று பார்த்து மகிழ்ந்தார்கள்.

அம்மன் வேள்விக்காக மீசாலையில் இருந்து வந்த குடும்பங்களின் தலைவர்கள் தங்கள் மகளுக்கு, மகனுக்கு மாப்பிள்ளை, பெண்பிள்ளை பார்த்து ஒழுங்கு செய்யும் சம்பவங்களும் இடம் பெற்றன. அம்மனின் வேள்வி பங்குனி மாத இறுதி திங்கள் அல்லது அதற்கு முந்திய திங்கள் இடம் பெறும். மாதம் முழுவதும் மூன்று கிராமத்து மக்களும் மச்சம், மாமிசம் சாப்பிட மாட்டார்கள்.

திங்கட்கிழமை விரதம் இருந்து, அறு சுவை உணவு தயாரித்து வைத்துவிட்டு, அம்மன் கோவில் போய் அம்மனை வணங்கி விட்டு வந்து விரதம் முடிப்பார்கள். வேள்வியின் அன்று ஆறுமுகத்தாரின் அழைப்பை ஏற்று மீசாலையில் இருந்து வந்தவர்களும் அநேக பெரிய பரந்தன் மக்களும் மதிய உணவை தியாகர் வயலில் வந்து சாப்பிட்டார்கள். விசாலாட்சிக்கு ஊர் பெண்களும் மீசாலையால் வந்த பெண்களும் உணவு தயாரிக்க உதவினார்கள்.

விசாலாட்சி இரண்டு கிழமைகளுக்கு முன்னரே நெல் அவித்து குற்றி வைத்து, மிளகாய் வறுத்து தூள் இடித்து வைத்து, அரிசி ஊறப் போட்டு மா இடித்து வைத்து எல்லா வேலைகளையும் முடித்திருப்பாள். ஊர் பெண்கள் யாவற்றிற்கும் உதவி செய்தார்கள். எல்லாம் உரலில் இடப்பட்டு உலக்கைகளாலேயே இடிக்கப்பட்டன. ஒரு உரலில் இரண்டு பெண்கள் கைகளை மாறி மாறி போட்டு உலக்கைகளால் இடிப்பது கண் கொள்ளாக் காட்சியாகும். பெண்கள் ஊர்ப் புதினங்களை பேசி மகிழ்வதும் இந்த நாட்களில் தான்.

கணபதியை பலர் மாப்பிள்ளை ஆக்க விரும்பினர். ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் யாரிடமும் பிடி கொடுத்து பேசவில்லை. அவனுக்கு இருபத்தொரு வயது முடியட்டும் என்று காத்திருந்தார்கள்.

கணபதி வேள்விக்கு ‘சேன்சோராவுடன்’ வந்து காவடி ஆட்டங்களையும் பார்த்து, தங்கள் வீட்டில் சாப்பிட்டு போகும் படி பறங்கி அதிகாரியை கேட்டிருந்தான். கணபதியே எதிர்பாரா வண்ணம் பறங்கியர் இரண்டு குதிரைகளில் மனைவியுடன் வந்து காவடி ஆட்டம், பாற்செம்பு எடுத்தல் எல்லாவற்றையும் ரசித்து பார்த்துவிட்டு, தியாகர் வயலுக்கு வந்து பந்தியில் வாழையிலையில் எல்லோரையும் போல இருந்து சாப்பிட்டுவிட்டு, கணபதியிடம் விடைபெற்று சென்றார். கணபதி பறங்கியர் தன்னை மதித்து, தனது அழைப்பை ஏற்று வந்ததை நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைந்தான்.

கணபதிக்கு பத்தொன்பது வயது முடிந்து இருபது வயதாகிவிட்டது. வயல் வேலை, கமவிதானை வேலை இல்லாத போது தங்கையுடனும் தம்பியுடனும் விளையாடுவதில் பொழுதை போக்கினான். சில இரவுகளில் தோழர்களுடன் வேட்டைக்கும் போனான். அதனால் ஞாயிறு பறங்கியர் வரும் போது இறைச்சியுடன் வத்தல்களையும் கொடுக்க கூடியதாக இருந்தது.

தோட்டாக்கள் முடிந்த போதும், டோர்ச் லைற் பற்றறி பலவீனமான போதும் பறங்கியர் கொண்டு வந்து புதியவற்றைக் கொடுப்பார். “மாதமொருமுறை ஆங்கில அதிகாரிகள் மேற்பார்வைக்கு வரும் போது நாங்கள் சீமைச் சாராயத்துடன் ‘சென்சோரா’ விதம் விதமாக சமைக்கும் இறைச்சி கறி, வத்தல் கறியுடன் சாப்பாட்டு விருந்து வைப்போம். அவர்கள் அவற்றை விரும்பி உண்பார்கள்” என்றும், “கணபதி, அவர்கள் திரும்ப செல்லும் போது நீ தந்ததாக கூறி வத்தல் கொடுத்து விடுவோம்” என்றும் பறங்கியர் கணபதிக்கு கூறியிருந்தார்.

கணபதியைக் கண்ட போதெல்லாம் முறைப் பெண்கள் அவனுடன் வெட்கப்பட்டு கதைப்பார்கள். அவர்கள் வெட்கப்படுகிறார்கள் என்பது கணபதிக்கு புரியவில்லை. தனி பிள்ளையாக பதினாறு ஆண்டுகள் வளர்ந்த படியாலும், தனக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்கை அது வரை இல்லாத படியாலும், கணபதி உறவுக்கார ஆண்களையும் பெண்களையும் சகோதரங்களாகவே கருதினான். அதனால் அந்த பெண்களை வித்தியாசமாக ஒருநாளும் கணபதி எண்ணியதில்லை.

இப்போது நெல், வைக்கல் ஏற்றிச் செல்வதற்கும், திரும்ப கிடுகுகள் ஏற்றிவரவும் கணபதி தனியே தான் செல்கிறான். ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் அவன் பொறுப்பான பிள்ளை என்பதால் வேறு இரண்டு மூன்று வண்டில்களுடன் சேர்ந்து போய்வர அனுமதித்தார்கள். கணபதி மீசாலை செல்லும் போதெல்லாம் இரவு தங்க வேண்டி வந்தால், தான் பத்து வயது வரை வாழ்ந்த வீட்டிலேயே தங்கினான்.

ஆறுமுகத்தாரும் கணபதியும் போகத்திற்கு போகம் வந்து நின்று கறையான்களை எல்லாம் தட்டி சுத்தம் செய்து புதிதாக கூரையையும் மேய்ந்து, வீடு அழியாமல் பார்த்துக் கொண்டனர்.

விசாலாட்சியின் உறவுப் பெண் இப்போதும் வந்து கூட்டி, மெழுகி செல்கிறா. விசாலாட்சி காலபோகத்திலும் சிறுபோகத்திலும் அந்த பெண்ணுக்கு நெல் அனுப்ப தவறுவதில்லை. விசாலாட்சி ஏனோ பெரிய பரந்தன் போன பின் இது வரை மீசாலைக்கு வந்ததில்லை.

இம்முறை அந்த காணியில் முற்றிய கறுத்தக் கொழும்பான் மாங்காய், பலா காய், தேங்காய்களை பிடுங்கி வருமாறு கணபதியிடம் விசாலாட்சி கூறியிருந்தாள். வேலைகள் முடிந்ததும் கணபதி மாங்காய்கள், பலாக்காய்களை பிடுங்கி சாக்கில் கட்டி வைத்து விட்டான். தேங்காய் பிடுங்குபவர் மறு நாள் காலமை வெள்ளனவாக வந்து தேங்காய் பிடுங்கி, உரித்தும் தருகிறேன் என்று கூறிவிட்டார்.

மறுநாள் காலை மற்ற மூன்று வண்டில்களுடன் உறவினர்கள் கணபதியை அழைத்துச் செல்ல வந்து விட்டனர். அவர்களை போகுமாறும் தான், அவர்கள் கரந்தாய் குளத்தருகே எருதுகளை அவிழ்த்து தண்ணீர் காட்டி, ஆற விடும்போது விரைவாக வந்து சேர்ந்து கொள்வேன் என்றும் கூறி அனுப்பி விட்டு, தான் தேங்காய்களை உரிக்கத் தொடங்கினான். தேங்காய் பிடுங்குபவரும் தென்னைகளில் ஏறி அவற்றை பிடுங்கி விட்டு தானும் சேர்ந்து உரிக்கத் தொடங்கினார். இருவரும் தேங்காய் உரித்து முடிய சிறிது நேரம் சென்று விட்டது.

கணபதி மாங்காய், பலாக்காய், தேங்காய்களை வண்டிலில் ஏற்றி எருதுகளுக்கும் தண்ணீர் காட்டி, அவற்றை வண்டிலில் பூட்டி, தேங்காய் பிடுங்குபவருக்குரிய தேங்காய்களை கொடுத்து விட்டு விடை பெற்று வேகமாக சென்றான். மீசாலைச் சந்தி, கொடிகாமச் சந்தை, மிருசுவில் சந்தி, எழுதுமட்டுவாள் சந்தை, முதலிய இடங்களில் சன நடமாட்டம் இருந்த படியால் அந்த இடங்களில்  வேகமாக வண்டிலை ஓட்ட முடியவில்லை.

ஒருவாறு முகமாலை தாண்டி, பளை நெருங்க வெய்யிலும் ஏறி விட்டது. எருதுகளும் அவசரம் அவசரமாக ஓடி வந்தபடியால் களைத்து விட்டன. ஒரு வளைவில் இருந்த காணியின் முன், வீதியின் கரையோரம் இருந்த ஒரு மரநிழலில் வண்டிலை நிறுத்தி எருதுகளை விட்டு மேய விட்டான்.

அப்போது ஆறுமுகத்தாரின் வயதை ஒத்த ஒருவர் அந்த காணியின் அடி வளவில் இருந்து வந்து கணபதியையும் வண்டிலையும் எருதுகளையும் பார்த்தார். எருதுகளை அவருக்கு பிடித்து விட்டது. அவரிடமும் வண்டிலும் எருதுகளும் இருந்தன. அவர் கணபதியைப் பார்த்து,

“தம்பி எங்கே இருந்து வருகிறாய். எருதுகள் நன்கு களைத்து விட்டன, கொஞ்சம் ஆற விடு. எங்கடை பூவலிலை தண்ணீர் குடிக்கவிடு.” என்றார். கணபதியும் தான் அவசரமாக வந்த காரணத்தை சொன்னான்.

அவர் தனது கொட்டில் வீட்டை பார்த்து “மீனாட்சி, மீனாட்சி” என்று கூப்பிட்டார். அப்போது ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க பெண் கொட்டிலின் வெளியே வந்தாள். அவள் பின்னால் ஒரு பத்து வயது சிறுவனும் வந்தான். “மீனாட்சி, இந்த எருதுகளை தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். பெரிய சட்டியையும் கடகத்தையும் எடுத்து வா” என்றார். அவள் அவற்றை எடுக்க கொட்டிலின் உள்ளே சென்றாள்.

அவர் கணபதியைப் பார்த்து “இந்த எருதுகளை எங்கே வாங்கினீர்கள்” என்று கேட்டார். கணபதி “இந்த எருதுகளை ஐயா வன்னியில் நாம்பன் கன்றுகளாக வாங்கி வந்து உழவு, வண்டில் ஓட்டம் எல்லாம் பழக்கினவர். அவர் இவற்றின் சாப்பாட்டிலும் நல்ல கவனமாக இருந்தவர்” என்று சொன்னான். அவன் பணிவுடன் பதில் சொல்லிய விதம், அவனது தோற்றம் எல்லாம் அவன் நல்ல குடும்பத்து பிள்ளை என்று அவருக்கு உணர்த்தியது.

அந்த பாவாடை சட்டை அணிந்த பதினாறு வயது மதிக்கத்தக்க பெண், ஒரு நான்கு மூலைகளிலும் கயிறு கட்டிய கடகமும், பெரிய சட்டியும் கொண்டு ஓடி வந்தாள். அவள் தான் மீனாட்சி என்று கணபதி புரிந்து கொண்டான். அவள் பின்னால் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் ஓடி வந்தான். அவள் கொண்டு வந்த கடகத்திற்கு அடியில் ஐந்தாவது மூலை ஒன்றையும் கணபதி கண்டான். அந்த பெண் தனது அடர்த்தியான கூந்தலை இரட்டை பின்னலாக பின்னியிருந்தாள்.

அவள் சட்டியை வைத்து விட்டு, ஐந்து மூலை கடகத்தை பூவலில் விட்டு தண்ணீர் அள்ளி பெரிய சட்டியில் ஊற்றினாள். மீண்டும் கடகத்தை விட்டு தண்ணீர் அள்ளி வைத்துக் கொண்டு கணபதியைப் பார்த்தாள்.

அப்போது தான் சுய உணர்வு வந்த கணபதி விரைந்து சென்று ஒரு எருதை அவிழ்த்து கூட்டி வந்தான். எருது அவள் ஊற்ற ஊற்ற தண்ணீரை குடித்தது.

“வாயில்லாத சீவனுக்கு சரியான தண்ணீர் விடாய்” என்று அவள் தனக்கு தானே கூறிக்கொண்டாள். அவள் தன்னை குறை சொல்வதாக எண்ணிய கணபதி “காலமை அவசரமாக வெளிக்கிட்டபடியால், அது குடித்த தண்ணீர் போதவில்லை.” என்றான். அவள் பதிலெதுவும் சொல்லவில்லை. தண்ணீர் அள்ளுவதிலேயே கவனமாக இருந்தாள்.

வயிறு நிறைந்த எருது தலையை நிமிர்த்தி தனக்கு போதும் என்று சொல்வது போல தலையை இருபுறமும் ஆட்டியது.  கணபதி அந்த எருதை கொண்டு சென்று கட்டி விட்டு, மற்ற எருதை அவிட்டுக் கொண்டு வந்தான். அவன் அந்த பெண்ணை பார்த்தபடியே எருதை நடத்தி வந்தான். அவன் பார்வை அந்த பெண் மேல் வைத்தபடி நடந்து வந்ததால் வழியில் இருந்த கல்லை கவனிக்கவில்லை. கல்லில் கால் தடுக்கி விழப்பார்த்தான். அப்போது அவள் ‘களுக்’ என்று சிரித்த சத்தம் கேட்டு கணபதி அவளைப் பார்த்தான். அவளது பல் வரிசை ஒழுங்காக, அழகாக பளிச்சென்று இருந்தது.

அவள் சிரித்த பொழுது அவள் முகம் அழகாக மலர்ந்ததை கணபதி பார்த்தான். அவள் கணபதி பார்ப்பதைக் கண்டு சிரிப்பதை நிறுத்தி கொண்டாள். ஆனால் கணபதியின் மனத்தில் நிலைத்து நின்று கொண்டாள்.

கணபதிக்கு தனது மனதை புரிந்து கொள்ள முடியவில்லை. சிவப்பு நிறத்தில் அழகாக இருந்த முறைப் பெண்களை சகோதரிகளாக மதித்த கணபதியை கறுப்பு நிறமான மீனாட்சி மீண்டும் மீண்டும் நினைக்க வைத்தாள். கறுப்பாக இருந்தாலும் நல்ல முக வெட்டுடனும் உயரமான மெல்லிய உடல் வாகுடனும் மீனாட்சி, கணபதியின் கண்களுக்கு தேவதையாக தெரிந்தாள்.

பெரியவர் தன் பெயர் முருகேசர் என்றும், தன் மனைவி தவறிய பின்னர் தனது மகள் மீனாட்சியும், மகன் கந்தையாவும் தான் தனக்கு உயிர் என்றார். கணபதியின் பெயரை விசாரித்தார். கணபதி “என் பெயர் கணபதிப்பிள்ளை, பெரிய பரந்தன் ஆறுமுகத்தார் எனது ஐயா. நாங்கள் வயல் தான் செய்கிறனாங்கள். வழக்கமாக ஐயாவும் கூட வருவார்.  தம்பியும் தங்கையும் சின்னப் பிள்ளைகள். அவர்களை இரவு முழுவதும் அம்மா சமாளிக்க மாட்டா. அது தான் நான் தனியாக வந்தனான்” என்றான்.

“கூட வந்தவர்கள் கரந்தாய் குளத்தடியில் நிற்பார்கள். நான் போய் அவர்களுடன் சேர வேணும். ஆனையிறவுக்கு அங்காலை ஊர் போகும் வரை ஒரே காடுகள்.  பின்னேரத்தில் சிறுத்தைப் புலிகளும் சில நேரம் ஊசாடும். நாங்கள் சேர்ந்து போனால் பயமில்லை” என்றும் கூறினான்.

“சரி, இந்த சாக்கிலை இரு. ஒரு இளநீர் வெட்டி வருகிறேன், குடித்து விட்டு வெளிக்கிடு” என்று முருகேசர் சொன்னார்.

மீனாட்சி கணபதி சொன்னவற்றை கேட்டுக்கொண்டு வேலி மறைவில் நின்றாள். கந்தையா, கணபதிக்கு கிட்ட போய் “சிறுத்தை புலி பெரிதா? ஆட்களையும் சாப்பிடுமா?” என்று கேட்டான்.

“சில புலிகள் பெரிது தான். கூட்டமாக ஆட்கள் போனால் ஓடி விடும். தனியாக போனவர்கள் சில பேரை கடித்து இருக்கிறது. அவர்கள் கத்தி சத்தம் போட பயந்து ஓடி விடும்” என்று கணபதி சொன்னான்.

தற்செயலாக திரும்பி வேலியோரம் நின்ற மீனாட்சியை பார்த்த கணபதி அவளது பெரிய உருண்டைக் கண்கள் பயத்தில் மேலும் பெரிதாக விரிந்திருந்ததை கண்டான். கணபதி பார்ப்பதைக் கண்டு அவள் தலையை குனிந்து கொண்டாள். முருகேசர் கொண்டு வந்து கொடுத்த இளநீரை குடித்து முடித்த கணபதி, அவருக்கு நன்றி கூறி விடைபெற்று எருதுகளை வண்டிலில் பூட்டிக் கொண்டு வேகமாக வண்டிலை ஓட்டினான்.

தண்ணீர் குடித்து களைப்பாறிய எருதுகள், கணபதியின் அவசரத்தை புரிந்து கொண்டது போல வேகமாக ஓடின. எருதுகள் ஓட ஓட, கணபதியின் எண்ணங்களும் ஓடின. மீனாட்சி சிரித்த போது அவள் முகம் மலர்ந்ததையும், அவள் கண்கள் பயத்தால் விரிந்ததையும் எண்ணிப் பார்த்தான்.

தான் முதல் முதலாக ஒரு பெண்ணை இப்படி பார்த்ததை, ஐயாவும் அம்மாவும் என்ன சொல்வார்களோ என்று நினைத்தும் கணபதி பயந்தான். ஆனால் அந்த பயத்தையும் மீறி அவனுக்கு மீனாட்சியின் நினைவு வந்தபடியே இருந்தது.

கரந்தாய் குளத்தில் கூட வந்தவர்கள் இல்லை. கணபதி வண்டிலை தொடர்ந்து செலுத்தினான். இயக்கச்சியை அண்மித்த போது தூரத்தில், இயக்கச்சி வளைவில் மூன்று வண்டில்களும் தெற்கு பக்கமாக திரும்புவதைக் கண்டு நிம்மதியடைந்தான்.

அந்த நிம்மதி நிலைக்கவில்லை, மீனாட்சியின் அழகிய முகமும், அவளது பயந்த கண்களும் நினைவில் வந்து நிம்மதியை குலைத்துக் கொண்டு இருந்தன.

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் - ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 16

nnnuooo.jpg

“மாடு” என்றால் பசுக்கள், எருதுகள், எருமைகள் மட்டுமல்ல, “மாடு” என்றால் செல்வம் என்ற கருத்தும் உண்டு. ஆபிரிக்கா தேசத்தில் கூடுதலான மாடுகள் வைத்திருப்போரையே தமது பெண்களுக்கு மாப்பிள்ளையாக தெரிவு செய்தார்கள். தம்மால் முடிந்த எண்ணிக்கையான மாடுகளை பெண்ணின் தந்தையிடம் கொடுத்து, பெண்ணை திருமணம் செய்து கொண்டார்கள்.

பெரிய பரந்தன் மக்கள் தமக்கு கூடுதலான விளைச்சல் வந்த போது மாடுகளை வாங்கினார்கள். எருதுகள், பசுக்கள், எருமைகளையே செல்வமாக கருதினார்கள். பொன், தங்கம், நகைகள் பற்றியெல்லாம் சிந்தித்ததில்லை. கிடைத்ததை வைத்துக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வாழ்ந்தார்கள்.

தங்களுக்குள் போட்டி, பொறாமை இன்றி மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். நிறைய குழந்தைகளை பெற்றுக் கொண்டார்கள். தம்மால் இயன்ற அளவிற்கு பிள்ளைகளுக்கு கல்வி புகட்டினார்கள், சிறுவயதிலேயே வயல் வேலைகளை பழக்கினார்கள், ஆடுகள், மாடுகள், எருமைகளை நேசித்து வளர்க்க பழக்கினார்கள், கடவுள் பக்தியுடன், கடவுளுக்கு பயந்து ஒழுக்கமாக வாழப் பழக்கினார்கள்.  

பங்குனி மாதம் முதற்கிழமை பெரிய பரந்தன் மக்கள், தமது குல தெய்வமான காளிக்கு பொங்கல் செய்வதற்காக முத்தர், ஆறுமுகத்தார் தலைமையில் பிள்ளையார் கோவில் முன்றலில் கூடினார்கள். கடவுள் பக்தியில் ஆண்களை விட பெண்களே தீவிரமாக இருப்பார்கள். கூட்டத்திற்கு பெண்களும் வந்திருந்தார்கள். அடுத்த வெள்ளிக்கிழமை பொங்குவதென்று தீர்மானித்து ‘வழந்துக்காரரிடம்’ கூறினார்கள்.

பங்குனி மாதம் இரண்டாம் வியாழக்கிழமை குழந்தையன் மோட்டை பிள்ளையார் கோவிலில், ஒரு பெரிய பானை வைத்து பொது ‘வழந்தாக’ பொங்குவதென்றும், வெள்ளிக்கிழமை பிள்ளையார், காளி, வீரபத்திரன், வைரவர் முதலிய தெய்வங்களுக்கு காளி கோவிலில் ஒவ்வொரு  ‘வழந்துக்காரனும்’ தனித்தனி ‘வழந்து’ வைத்து  பொங்குவதென்றும், நேர்த்தி வைத்தவர்கள் பக்கப் பானை வைத்து பொங்குவதென்றும் முடிவு செய்தார்கள். (வழந்து—>பானை | பக்கப்பானை—> சற்று சிறிய பானை | வழந்துக்காரன்—>தொடர்ந்து பொங்குபவன் | பக்கப் பானை வைப்போர் —> நேர்த்தி வைப்பதை பொறுத்து ஆண்டுக்கு ஆண்டு மாறுவார்கள்)

அடுத்த புதன் கிழமை அதிகாலை ஐந்து பண்ட வண்டில்கள் மீசாலை செல்வதென்றும், வியாழக்கிழமை பண்ட வண்டில்கள் திரும்பி வந்துவிட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த முறை இரண்டு சோடி மூப்பனார்களை அழைக்க வேண்டும் என்றும், கடவுள்களுக்கு சாத்துப்படி சாத்துபவர்களை கூப்பிட வேண்டும் என்றும் பெண்கள் கோரினார்கள். எல்லோரும் சம்மதித்தார்கள். (சாத்துப்படி—>கல்லாலும் சூலங்களாலுமான தெய்வங்களை மலர்கள், செயற்கை மலர்கள், வண்ண சேலைகள் கொண்டு அலங்கரிப்பது) (மூப்பனார் —> பறை மேளம் அடிப்பவர் |ஒரு சோடி—> ஒரு பெரிய மேளமும் தொந்தொடி அடிக்கும் சிறிய மேளமும் |பண்டம்—> பொங்கலுக்குரிய பொருட்கள்) பண்டம் சேகரிப்பவர்களை விட  மேலும் இருவர் சென்று மூப்பன் மாரையும் சாத்துப்படி சாத்துபவனையும் அழைத்து வருவதென்று தீர்மானித்தார்கள்.

முத்தர் ஒரு வண்டிலில் சாவகச்சேரி சென்று கற்பூரம், சாம்பிராணி, வெற்றிலை, பாக்கு, மண்பானைகள் (பெரிதும் சிறிதும்) வாங்கி வருவதென்று முடிவு செய்தார்கள்.

புதன் கிழமை காலை கணபதியின் வண்டில் முதலில் வந்து நின்றது. ஏனைய வண்டில்கள் பின்னுக்கு வந்து வரிசையாக நின்றன. வண்டில் ஓட்டிகள் எல்லோரும் தலைப்பா கட்டியிருந்தார்கள். முத்தர் ஒரு தட்டில் கற்பூரத்தை கொழுத்தி பிள்ளையாருக்கு காட்டினார். பின் வண்டில்கள் யாவற்றிற்கும் காட்டி, பண்டம் சேகரிக்க செல்வோருக்கு திருநீறு பூசி சந்தன பொட்டும் வைத்து விட்டார். பின்னர் எருதுகளுக்கும் திருநீறு பூசி சந்தன பொட்டும் இட்டு விட்டார்.

முத்தரும் ஆறுமுகத்தாரும் கணபதியின் வண்டிலில் ஏற, ஏனையவர்கள் மற்ற வண்டில்களில் ஏறினார்கள். அணிவகுத்து சென்ற வண்டில்களை பெரிய பரந்தன் மக்கள் கை காட்டி வழியனுப்பி வைத்தார்கள்.

வியாழன், வெள்ளி பொங்கல் முடியும் மட்டும் முத்தரும் ஆறுமுகத்தாரும் உணவு சாப்பிட மாட்டார்கள். இளநீர், பழரசம், தேனீர் மட்டும் குடிப்பார்கள். வண்டில்கள் மீசாலை நோக்கி ஓடின.

வண்டில்கள் பளை சந்தையை தாண்டி, கணபதி முன்னர் எருதுகளை ஆற விட்ட மரத்தடியைக் கண்டதும் கணபதியின் மனதை அறிந்தவை போல எருதுகள் மெதுவாக சென்றன. கணபதியின் கண்கள் மீனாட்சியை தேடின. வண்டில்களைக் கண்டதும் மீனாட்சி ஓடி வந்து வேலி மறைவில் நின்று பார்த்தாள். கணபதியின் கண்கள் தன்னை தேடுவதைக் கண்டு உவகை கொண்டாள். கணபதிக்கு மேலும் தாமதிக்க பயம். வண்டிலில் ஆறுமுகத்தார் மட்டுமில்லை, முத்தரும் இருந்தார். வேகமாக எருதுகளை ஓட விட்டான். மீனாட்சி அவர்கள் தனது வீட்டைக் கடந்து போன பின் வெளியே வந்து, வாசலில் நின்று வண்டில்கள் மறையும் மட்டும் பார்த்துக் கொண்டு நின்றாள்.

மீசாலை, கச்சாய் எங்கும் பண்ட வண்டில்கள் போயின. காளியின் பக்தர்கள் தேங்காய், இளநீர், மாம்பழம், பலாப்பழம், வாழைக்குலை என்பவற்றை கொண்டு வந்து கொடுத்தார்கள். தேங்காய்களையும் இளநீர்களையும் ஒரு வண்டிலிலும், மாம்பழங்களை ஒரு வண்டிலிலும், பலாப்பழம், வாழைக்குலை என்பவற்றை மூன்றாவது வண்டிலிலும் ஏற்றினார்கள். நான்காவது வண்டில் மூப்பனார்களையும் மேளங்களையும் ஏற்றுவதற்கு மட்டுவிலுக்கு சென்றது. ஐந்தாவது வண்டிலில் முத்தர் ஏறி சாவகச்சேரி நோக்கி சென்றார்.

ஒருவர் சாத்துப்படி சாத்துபவனுடன் ஒரு வண்டில் பிடித்து, சாத்துப்படிக்கு தேவையான பொருட்களை ஏற்றி கொண்டு கச்சாய் துறைக்கு சென்று, ஒரு தோணியில் பொருட்களுடன் ஏறி சுட்டதீவிற்கு சென்றார்.

அங்கு வந்து காத்திருந்த வண்டிலில் ஏறி அன்றே பெரிய பரந்தனை அடைந்தனர். சாத்துப்படிக்காரன் உடனே தனது வேலைகளை ஆரம்பித்து விட்டான். ஆறுமுகத்தாரும் கணபதியும் அன்று இரவு தங்களது வீட்டில் தங்கினார்கள்.

மறுநாள் காலை கணபதியும் ஆறுமுகத்தாரும் மீசாலை சந்திக்கு சென்று காத்திருந்தார்கள். மற்றைய வண்டில்கள் ஒவ்வொன்றாக வந்தன. மட்டுவில் சென்ற வண்டிலில் நான்கு மூப்பனார்களும் தமது மேளங்களுடன் வந்து சேர்ந்தனர். கடைசியாக முத்தர் சாவகச்சேரியில் வாங்கிய பண்டங்களுடன் சின்னகணபதியையும் ஏற்றி வந்தார்.

வண்டில்கள் ஐந்தும் பெரிய பரந்தனை நோக்கி ஓடின. பளையை அண்மித்த பொழுது இவர்கள் தலைப்பா கட்டி சந்தன பொட்டு வைத்து, மீசாலை செல்வதை அவதானித்திருந்த முருகேசர் தனது வளவு வாசலில் இரண்டு இளநீர் குலைகளுடன் காத்திருந்தார்.

அவற்றை தேங்காய்களின் மேல் ஏற்றிய கணபதி தனது ஐயாவை முருகேசருக்கும், முருகேசரை தனது தகப்பனுக்கும் அறிமுகப்படுத்தினான். மீனாட்சியும் கந்தையனும் பின்னால் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். மீனாட்சியின் பெரிய கண்களை கண்டு ஒரு கணம் தடுமாறிய கணபதி, உடனே வேறுபக்கம் திரும்பி வண்டிலில் ஏறி பெரிய பரந்தனை நோக்கி ஓட விட்டான்.

பிள்ளையார் கோவிலுக்கு அருகே பூவரசம் மரங்கள், புளியமரம், வாகை மரங்களால் சூழப்பட்ட ஒரு வெளியான காணி பண்ட மரவடியாக தொடர்ந்து இருந்து வந்தது. (பண்டங்கள் இறக்கி வைப்பதற்காக உள்ள இடம் ‘பண்டமரவடி’ என்று அழைக்கப்பட்டது).

ஊர்மக்கள் அந்த இடத்தை துப்பரவாக்கி, இரண்டு பந்தல்கள் போட்டிருந்தார்கள். ஒரு பந்தல் பண்டம் இறக்கி வைப்பதற்கு, மற்றது சமைப்பதற்கு. பெரிய பரந்தன் மக்கள் எல்லோருக்கும் வியாழன் காலை தொடங்கி, வெள்ளி மத்தியானம் வரை பண்டமரவடியில் தான் சாப்பாடு. ஆண்கள் ஆடு, மாடுகளை அவிழ்த்து கட்டி ஒழுங்குபடுத்தி விட்டு வந்தார்கள்.

பெண்கள் அதிகாலையில் குளித்து விட்டு பண்ட மரவடியில் வந்து சமையலை ஆரம்பித்து விட்டார்கள். காலை வேளைக்கு கஞ்சி, மத்தியானத்திற்கு பல மரக்கறிகளுடன் சாப்பாடு சமைத்தார்கள். தேவையான பாத்திரங்களையும் அரிசி, மரக்கறி, உப்பு, தூள் முதலியவற்றை தமது வீடுகளிலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். பண்ட வண்டில்கள் வரும்போது அவர்களுக்கான மத்தியான உணவு காத்திருந்தது. முத்தருக்கும், ஆறுமுகத்தாருக்கும் தேனீர் கொதித்துக் கொண்டிருந்தது.

இரண்டு நாட்களும் பண்டமரவடியில் முதல் பந்தியில் சிறுவர்களும், அடுத்து ஆண்களும், கடைசியாக பெண்களும் கதைத்து பேசி ஒன்றாக இருந்து சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்.

முத்தரும் ஆறுமுகத்தாரும் பண்டம் தூக்கும் இளைஞர்களும் மீண்டும் ஒரு முறை கொல்லனாற்றில் குளித்துவிட்டு வந்தனர். பண்டங்களுக்கு முன்னே நின்று ஆறுமுகத்தார் மணியடிக்க முத்தர் தீபம் காட்டினார். பின்னர் முத்தர் பண்டங்களை ஒவ்வொன்றாக தூக்கி இளைஞர்களின் தோள்களில் வைத்தார். பெரிய பானையை தூக்கி ஆறுமுகத்தார் தோளில் வைத்தார். முத்தர் மணியை அடித்துக் கொண்டே முன் செல்ல மூப்பன்மார் மேளம் அடித்தபடி அடுத்துவர, பிள்ளையாரின் பொங்கலுக்கு தேவையான பண்டங்களுடன் ஏனையவர்கள் பின் தொடர்ந்தனர்.

சில பெண்கள் மட்டும் காளிக்கான பண்டங்களுக்கு காவல் இருந்தார்கள். முன்னே சென்ற முத்தர் பிள்ளையாருக்கு தீபங்களையும் கற்பூரத்தையும் ஏற்றினர். மூப்பனார்கள் மேளம் அடித்துக் கொண்டே இருந்தார்கள். முத்தர் பானையை இறக்கி, ஏற்கனவே தீ மூட்டப்பட்டிருந்த அடுப்பை மூன்று முறை சுற்றிவிட்டு வழந்தை அடுப்பில் வைத்தார். உடனே ஆறுமுகத்தார் வழந்தினுள் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதன் மேலே சிறிதளவு பாலை ஊற்றினார். முத்தர் ஒரு சிறங்கை அரிசி எடுத்து அடுப்பை மூன்ற முறை சுற்றி பானையில் இட்டு விட்டு, பின் மிகுதி அரிசியையும் பானையினுள் போட்டார்.

இளைஞர்கள் தமது பண்டங்களை இறக்கி வைத்துவிட்டு கோவில் வேலைகளை பார்த்தனர். பெண்கள் ஒரு பக்கத்தில் அடுப்பை மூட்டி, பண்டமரவடியில் அரைத்து எடுத்து வந்த உழுந்தில் வடை சுட்டு, மோதகமும் அவித்தனர்.

பொங்கல் முடிய முத்தரும் ஆறுமுகத்தாரும் வேறு சில ஆண்களுடன் காளி கோவிலுக்கு ‘சுருள்’ போட சென்றனர். ‘சுருள் போடுதல்’ என்பது காளி கோவிலில் விளக்கு வைத்தல் ஆகும். விளக்கு வைக்கும் போது முத்தர் கலை வந்து ஆடினார்.

அந்த வருட பொங்கல் எவ்வித குறையுமின்றி நடைபெற காளியின் அனுமதி கிடைத்தது. சுருள் முடிந்து வந்தபின்னர் இளைஞர்கள் பொங்கல், வடை, மோதகம், வாழைப்பழம், பலாப்பழ துண்டுகள், வெற்றிலை, பாக்குகளை படைத்தனர். தீபங்கள் மீண்டும் ஏற்றப்பட்டன. கற்பூரங்கள் கொளுத்தப்பட்டன. முத்தர் பிள்ளையாருக்கும் படையலுக்கும் தீபம் ஏற்றி, கற்பூரம் காட்டி, பூக்களால் பிள்ளையாருக்கு பூசை செய்தார்.

சின்ன கணபதி தேவாரங்களை பண்ணோடு பாடினான். பின்னர் கோவிலின் முன்வாசலிலே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட இளநீர்களுக்கு அருகில் சென்ற முத்தர் தண்ணீர் தெளித்துவிட்டு ஆறுமுகத்தாரை பார்த்தார். ஆறுமுகத்தார் ஒரு கூரான கொடுவாக்கத்தியினால் இளநீர்களை வரிசையாக வெட்டினார். இதனை ‘வழி வெட்டுதல்’ என்று கூறுவார்கள். வழி வெட்டிய பின்னர் முத்தர் வந்து தண்ணீர் தெளித்துவிட்டு பிள்ளையாரை விழுந்து வணங்க, மற்றவர்களும் வணங்கினார்கள்.

இளைஞர்கள் பொங்கல், வடை, வாழைப்பழங்கள், பலாப்பழ துண்டுகள் என்பவற்றை எல்லோருக்கும் தாராளமாக கொடுத்தார்கள். பிள்ளையார் கோவிலில் இருந்த பாத்திரங்களை பண்டமரவடிக்கு எடுத்து சென்றார்கள். ஒருவருக்கும் இரவு சாப்பாடு தேவைப்படவில்லை. எல்லோர் வீட்டு நாய்களும் பண்டமரத்தடியில் காவலிருந்தன. விசாலாட்சி மத்தியானம் சமைத்ததில் மீதமிருந்த சோறு,கறி யாவற்றையும் குழைத்து நாய்களுக்கு வைத்தாள். பாத்திரங்களை கழுவி வைத்த பெண்கள் கூத்து வெட்டையை நோக்கி சென்றனர். முத்தர், ஆறுமுகத்தார், அவர்கள் வயதை ஒத்த சில ஆண்கள் பண்டமரவடியில் காவல் இருந்தனர்.

மக்களை மகிழ்விக்க காளி கோவிலின் அருகே இருந்த கூத்து வெட்டையில் கணபதியின் தம்பி முறையான செல்லையர், அவனது மைத்துனர் முறையான வல்லிபுரம், பெரிய பரந்தன் இளைஞர்கள், செருக்கன் இளைஞர்கள் எல்லோரும் காத்தவராயன் கூத்து ஆடுவதற்காக தம்மை அலங்கரித்துக் கொண்டு இருந்தார்கள். செல்லையா சற்றே உயரம் குறைந்தவராக, காதில் ‘கடுக்கன்’ போட்டிருந்தார்.

நடுத்தர உயரமான வல்லிபுரம் குடுமி வைத்த தலையுடன் ‘கடுக்கனும்’ போட்டிருந்தார். ‘உடுக்கு’ அடிப்பதற்கு இரண்டு செருக்கன் இளைஞர்கள் ‘உடுக்குகளுடன்’ வந்திருந்தார்கள். பளையில் இருந்து வந்திருந்த அண்ணாவியார் பொங்கலுக்கு இடைஞ்சல் இல்லாமல் வேளைக்கு முடிக்க கூடியதாக காத்தவராயன் கூத்தை சுருக்கி, பகலில் ஒரு முறை ஆடப் பழக்கியிருந்தார்.

சாத்துப்படி சாத்துபவர் வேலைகளை முடித்திருந்தார். சிறுவர்கள் அவரின் வேலைகளை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுருளுக்காக ஒரு வேட்டியை மேலே கட்டியிருந்த கட்டாடியார், வெள்ளிக்கிழமை வந்து மேற் பக்கம் முழுவதும், இரண்டு பக்கங்கள், பின்புறம் எல்லாம் வெள்ளை கட்ட வேண்டும்.

முத்தர் ஆறுமுகத்தாரிடம் “ஏன் இன்னும் பீப்பா  கட்டாடியார் வரவில்லை.” என்று கேட்டார். ஆறுமுகத்தாரும் “அவரது மகன் வந்து விட்டான், கட்டாடியாரும் பின்னால் வாறாராம்” என்றார். கட்டாடியாரை அவரின் வயிற்றின் மேல் இருக்கும் ‘வண்டி’ காரணமாக எல்லோரும் ‘பீப்பா கட்டாடியார்’ என்று செல்லமாக அழைப்பதுண்டு. அவர் தனது மகனை முதலிலேயே அனுப்பி விட்டார். மகனும் தென்னம் ஈக்குகளை சிறிதாக முறித்து, அவற்றின் இரு முனைகளையும் ஒரு வில்லுக்கத்தியால் சீவி கூராக்கி கொண்டிருந்தார். பீப்பா கட்டாடியார் வெள்ளை வேட்டி மூட்டை உடன், கள்ளு குடிக்க கள்ளு கொட்டிலுக்கு போயிருந்தார். அவருக்கு வெள்ளை கட்டாமல் காளி கோவிலில் பொங்கல் வேலை தொடங்காது என்று தெரியும்.

கட்டாடியாருக்கு வருடத்தில் இரு நாட்கள் தான் ஊரவர்கள் கூடுதலான மரியாதை கொடுத்தார்கள். ஒன்று காளி கோவில் பங்குனி பொங்கல். மற்றது கார்த்திகையில் வரும் மடை. இரண்டு பிளா கள்ளு குடித்ததும், இன்று பொங்கலில் தனக்கு உள்ள முக்கியத்துவத்தை பெரிய பரந்தன் மக்களுக்கு  புரிய வைக்க வேண்டும் என்று தீர்மானித்து, காலத்தை தாமதித்தார்.

சிறிது கால தாமதமாக சென்று தனது கடமையைச் செய்ய எண்ணியிருந்தார். அவர் தாமதிக்க தாமதிக்க கள்ளுகாரனும் பிளாவில் கள்ளை ஊற்றிக் கொண்டிருந்தார். பீப்பா கட்டாடியாருக்கு அவர் தீர்மானித்த அளவை விட வெறி கூடிவிட்டது. அவரால் எழும்பி நடக்க முடியவில்லை. ஆறுமுகத்தார் “பொன்னையா அண்ணை இன்னும் கட்டாடியாரை காணவில்லை. முத்தர் இரண்டு முறை கேட்டு விட்டார். நீங்கள் ஒருக்கால் போய் கூட்டி வாருங்கள்” என்று பொன்னையரை அனுப்பி வைத்தார்.

பொன்னையருக்கு கட்டாடியார் எங்கே இருப்பார் என்று தெரியும்.  நேரே கள்ளுக் கொட்டிலுக்கு போய் பார்த்து, கட்டாடியாரின் நிலையை புரிந்து கொண்டார். “கட்டாடியார் எழும்பும் நேரம் போட்டுது” என்று கூப்பிட்டு பார்த்தார். கட்டாடியார் எழும்புவார் போல் தெரியவில்லை. வேட்டி மூட்டையை தூக்கி ஒரு தோளில் போட்டுக் கொண்டு, மறு கையால் கட்டாடியாரை தூக்கி அணைத்து கோவில் வரை அழைத்து வந்தார்.

இப்போது கட்டாடியாருக்கு சற்று வெறி குறைந்து விட்டது. பொன்னையருக்கு தான் வேட்டி மூட்டையை தூக்கி கொண்டு கோவிலினுள்ளே செல்வதற்கு தயக்கமாக இருந்தது. கட்டாடியாரைப் பார்த்து “இந்தாரும் கட்டாடியார், இனி வேட்டி மூட்டையை தூக்கி வாரும்” என்றார். அப்போது பீப்பா கட்டாடியார் சற்று கோபமடைந்தவராக    “இஞ்சேரும் பொன்னையர், இவ்வளவு தூரம் தூக்கி வந்த உமக்கு கோவிலுக்குள்ளே கொண்டு போக பஞ்சியோ?” என்று கேட்டார்.

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் - ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 17

PHOTO-2020-12-28-19-07-23-1.jpg

வன்னியிலும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிலும் பரம்பரை பரம்பரையாக ஊர் பூசாரிகளே பூசை செய்தார்கள். வன்னியில் பிரபலமாக, ‘பொறிக்கடவை’, ‘வன்னிவிளாங்குளம்’, ‘புளியம் பொக்கணை’, ‘வற்றாப்பளை’ முதலிய இடங்களில் இருந்த ஆலயங்களில்  தெய்வங்களுக்கு பரம்பரை பூசாரிகளே பூசை செய்தார்கள். செல்வச்சந்நதி கோவிலில் முருக கடவுளுக்கு பரம்பரையாக வந்த ‘கப்பூகர்’ என்ற பூசகர்கள் வெள்ளைத்துணியால் வாயை கட்டி பூசை செய்தார்கள். கதிர்காம கந்தனுக்கு வேடர் வழியில் பரம்பரையாக வந்த ‘கப்புறாளை’ என்ற பூசகர்கள் வாயை துணியினால் கட்டி பூசை செய்தார்கள். பின்னர் படிப்படியாக சில கோவில்களில் கும்பாபிசேகம் நடை பெற்று ஆகம முறைப்படியான பூசைகளை அந்தணர்கள் செய்யும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

வியாழன் இரவு ‘காத்தவராயன் கூத்தை’ இளைஞர்கள் ‘கூத்து வெட்டையில்’ ஆடினார்கள். எல்லோருக்கும் நன்கு தெரிந்த கதை. பக்கப்பாட்டு பாடும் போது எல்லோரும் சேர்ந்து பாடினார்கள். காத்தான் ஒவ்வொரு படியாக சோகமாக பாடி கழு மரம் ஏறிய போது, அவன் தப்பிவிடுவான் என்று தெரிந்த போதும் கண் கலங்கினார்கள். சொர்க்கத்திற்கு போகலாம் என்று ஆசைகாட்டி, காத்தான் வழிப்போக்கனை ஏற்றிவிட்டு தான் தப்பிய போது விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

வழிப்போக்கனை காளியம்மன் காப்பாற்றிவிடுவாள் என்று தெரிந்தமையால் அவனது தற்காலிக வேதனையைக் கண்டு மக்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள். கூத்து முடிந்ததும் பெண்கள் அவசரம் அவசரமாக வீடு சென்று குளித்து வேறு உடைகளை அணிந்து, ‘பண்டமரவடிக்கு’ சமையல் செய்வதற்காக விரைந்தனர். ஆண்களும் சிறுவர்களும் சற்று பிந்தி பண்டமரவடியை அடைந்தனர்.

பீப்பா கட்டாடியார் வெறி முறிந்து, தனது மகனின் துணையுடனும், தாமாகவே முன் வந்து உதவிய இளைஞர்களின் உதவியுடனும் வெள்ளை கட்டி முடித்தார். சில இளைஞர்கள் வண்டில்களில் காட்டுக்குள் போய் விறகுகள் வெட்டி வந்து, வழமையாக தீக்குளிக்கும் இடத்தில் சீராக அடுக்கி எரிக்க தொடங்கினர். தீக்குளிக்கும் நேரம் வந்த போது நெருப்பு தணல் செந்தணலாக தகதகவென்று சூடாக இருந்தது.

வெள்ளிக்கிழமை இரவு முத்தர் விளக்கு காட்டி தூக்கிவிட, வழந்துக்காரன் ஒவ்வொருவரும் வரிசையாக தங்கள் பானையை தூக்கினார்கள். முத்தர் முன் செல்ல, மூப்பனார்கள் மேளம் அடித்தபடி அடுத்து செல்ல, மற்றவர்கள் யாவரும் தொடர்ந்து காளி கோவிலை நோக்கி சென்றார்கள். அங்கு ஒன்பது ‘வழந்துகளும்’ சில பக்கப் பானைகளும் வைத்துக் பொங்குவதற்காக அடுப்புகள் வரிசையாக வெட்டப்பட்டிருந்தன.

முத்தர் முதலாவது வழந்துப் பானையை முதலில் அடுப்பில் வைக்க, அடுத்து ஆறுமுகத்தார் வைக்க, தொடர்ந்து ஏனையவர்கள் பானைகளை அடுப்பில் வைத்தனர். எல்லோரும் பானைகளை தண்ணீரால் நிரப்பி மேலே சிறிதளவு பால் விட்டு விட்டு அடுப்பினுள் வைத்திருந்த விறகுகளின் மேல் கற்பூரத்தை கொளுத்தி வைத்து விறகுகளில் நெருப்பை மூட்டிவிட்டனர்.

முத்தரின் வழந்தை சின்னக்கணபதியும், ஆறுமுகத்தாரின் வழந்தை கணபதியும், ஏனையவர்கள் தமது வழந்துகளையும் சுள்ளிகளை வைத்து நன்கு எரித்தார்கள். யாரின் வழந்து முதலில் பொங்கி சரிக்கும் என்பதில் ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்து வந்தது. வழமையாக கணபதியின் வழந்து தான் முதலில் பொங்கி சரிப்பது வழக்கம். இந்த முறை சின்னக்கணபதியின் வழந்து முதலில் பொங்கி சரிக்க வேண்டும் என்று கணபதி காளி அம்மனை வேண்டிக் கொண்டான்.

முதல்முதல் பொங்கும் சின்னக்கணபதி மனம் வருந்தி விடக் கூடாது என்பதற்காக கணபதி அவனது வழந்திற்கும் சுள்ளிகளை வைத்து நன்கு எரிய விட்டான். கணபதியின் வேண்டுதலை அம்மன் ஏற்றது போல சின்னக்கணபதியின் வழந்தே முதலில் பொங்கி சரிந்தது. பொங்கி சரிந்ததும் எல்லோரும் தெய்வத்தை நினைத்து, வேண்டி, அரிசியை போட்டனர்.

வல்லிபுரம், வீரகத்தி, செல்லையா முதலியோர் வாழைப்பழங்கள், மாம்பழங்கள், பலாப்பழ துண்டுகள், வெற்றிலை, பாக்குகளை தலை வாழை இலைகளில் எல்லா தெய்வங்களுக்கும் படைத்தனர்.  வைரவருக்கு வடை மாலை சாற்றுவதற்காக பெண்கள் ஒரு கரையில் நெருப்பு மூட்டி வடை சுட்டனர். பொங்கி முடிந்ததும் முத்தரும் ஆறுமுகத்தாரும் தொடங்கி வைக்க கணபதியும் சின்னக்கணபதியும் மற்ற இளைஞர்களுடன் சேர்ந்து பொங்கலையும் எல்லா தெய்வங்களுக்கும் படைத்தனர். வல்லிபுரம் வடை மாலையை எடுத்துச் சென்று வைரவருக்கு சாற்றினார்.

முத்தர் எல்லா தெய்வங்களுக்கும் தீபங்களை ஏற்றி, கற்பூரங்களை கொழுத்தி விட்டு, முதலில் பிள்ளையாரை வணங்கி விட்டு பின் காளியின் முன் சென்று வணங்கினார். உடனே நான்கு மூப்பனார்களும் மேளங்களை அடிக்கத் தொடங்கினார்கள். மேளம் அடிக்க அடிக்க முத்தர் கலை வந்து ஆடத் தொடங்கினார். ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு விதமாக ஆடினார். வல்லிபுரம், செல்லையா முதலியோரும் வெவ்வேறு தெய்வங்களுக்கு ஆடினார்கள்.

முத்தர் காளி அம்மனின் வெவ்வேறு வயதையும் விளக்குவது போல இளம் காளியாக ஆடும் போது நிமிர்ந்து நின்று ஆவேசமாக ஆடினார், காளி கிழவியாக வந்த போது கூனியபடி கம்பு ஊன்றி மென்மையாக ஆடினார். கற்பூரம் முடிய முடிய இளைஞர்கள் புதிதாக கற்பூரங்களை இட்டார்கள். எண்ணெய் முடிய முடிய எண்ணையை ஊற்றினார்கள். மூப்பனார்கள் உருவேற்றுவதற்காக விதம் விதமாக இடைவிடாது அடித்தார்கள். ஆடிக்கொண்டிருந்த, முத்தர் ஆடியபடியே ஓடிச் சென்று எரிந்து செந்தணலாக இருந்த தீக்குள் இறங்கி பூக்களின் மேல் ஆடுவது போல ஆடினார். அவரைத் தொடர்ந்து ஆறுமுகத்தார், வல்லிபுரம், செல்லையா, வீரகத்தி முதலியவர்களும் தீ குளித்தார்கள். நேர்த்தி வைத்தவர்கள் யாவரும் தீக்குளித்தார்கள்.

தீக்குளியல் முடிய முத்தர் உட்பட ஆடியவர்கள் எல்லோரும் சற்று ஆறினார்கள். பின் இளைஞர்கள் பானையில் தண்ணீர் அள்ளி வந்து முத்தரின் தலையில் ஊற்றி முழுக வார்த்தார்கள். மூப்பனார்கள் மறுபடியும் மேளங்களை மென்மையாக அடிக்க, முத்தர் கலை வந்து காளியாச்சியாக சற்று மென்மையாக ஆடிய படி பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் தண்ணீர் தெளித்து திருநீறு பூசி ‘கட்டு’ சொன்னார். (பக்தர்களின் குறையை கூறி அதற்கு பரிகாரம் சொல்லுதல் ‘கட்டு’ சொல்லுதல் எனப்படும்.)

தண்ணீர் ஊற்றிக் கொடுப்பதற்கு ஆறுமுகத்தார் செம்பில் தண்ணீருடன் முத்தரின் அருகிலேயே நின்றார். ஒருவரையும் தவறவிடாது கட்டு சொன்ன பின்னர் மேளம் வேகமாக அடிக்க வேகமாக ஆடிய முத்தர் விழப்பார்த்தார். ஆறுமுகத்தார் ஓடிச் சென்று முத்தர் கீழே விழாது தாங்கி பிடித்துக் கொண்டார். அதன் பின் கோவில் வாசலில் நீண்ட வரிசையில் அடுக்கி, அவற்றின் மேல் ஒவ்வொரு வெற்றிலையும், வெற்றிலையின் மேல் ஒவ்வொரு எலுமிச்சம் பழமும் வைக்கப்பட்டிருந்த இளநீர்கள் அருகே முத்தர் சென்றார். ஆறுமுகத்தார் நன்கு கூராக்கி தீட்டிய கொடுவாக்கத்தியினால், முத்தர் தண்ணீர் தெளிக்க தெளிக்க ஒவ்வொரு இளநீராக வெட்டினார்.

விடியற்காலையில்’ வழிவெட்டு’ முடிந்ததும் தெய்வங்களுக்கு தண்ணீர் தெளித்த முத்தர் எல்லோருக்கும் திருநீறு கொடுக்க, ஆறுமுகத்தார் சந்தனம் கொடுக்க, சின்னக்கணபதி பூக்களை வழங்க, கணபதி தீர்த்தம் கொடுத்தான். வல்லிபுரம், செல்லையா, வீரகத்தி முதலியோர் பழவகைகளையும் பொங்கலையும் சேகரித்து எல்லோருக்கும் வழங்கினார்கள்.

பிரசாதம் வழங்கி முடிந்ததும் அந்த வருட பொங்கல் இனிது நிறைவு பெற்றது. அடுத்த வெள்ளி நடக்கப் போகின்ற எட்டாம் மடையையும், அன்று உண்ணப் போகும் மோதகங்களையும் நினைத்தபடி சிறுவர்கள் வீடு நோக்கி நடந்தனர்.

காளி கோவில் பொங்கல், பொறிக்கடவை அம்மனின் வேள்வி என்பன முடிந்த பின், கோவிலுக்கு வந்த உறவினர்கள் கேட்டுக் கொண்ட படி, கணபதி வண்டிலில் நெல் மூட்டைகளை ஏற்றி கொண்டு மீசாலை நோக்கி சென்றான்.

பளையை தாண்டிய போது முருகேசர் வீட்டில் மீனாட்சி கிணற்றில் தண்ணீர் அள்ளி தங்கள் எருதுகள் குடிப்பதற்கு ஊற்றிக் கொண்டு இருந்தாள். கந்தையன் எருதுகளை பிடித்துக் கொண்டிருந்தான். கணபதியைக் கண்ட மீனாட்சி இயல்பாக வந்த புன்னகையை மறைத்துக் கொண்டு தலையை கவிழ்த்தபடி தண்ணீர் அள்ளுவதிலேயே கவனமாக இருந்தாள். கந்தையன் ஒரு கையால் எருதுகளை கட்டிய கயிற்றை பிடித்த படி, மறுகையால் கணபதியை நோக்கி கையை ஆட்டினான். கணபதியும் பதிலுக்கு கையை ஆட்டி விட்டு வண்டிலை வேகமாக ஓட்டினான்.

நெல் மூட்டைகளை விற்று, கிடுகுகளை அடுக்கி ஏற்றி கொண்டு தோழர்களுடன் மீண்டும் பெரிய பரந்தனுக்கு திரும்பினான்.

வழியில் முருகேசர் காத்திருந்தார்.  கணபதி அவரை கண்டதும் வண்டிலை நிற்பாட்டினான். முருகேசர் அவனைப் பார்த்து “தம்பி நாங்கள் சாப்பாட்டுக்கென்று வைத்திருந்த நெல் முடியப் போகுது. எங்களுக்கு நான்கு மூட்டை நெல்லும், வண்டிலில் மிகுதி இடத்தில் கொஞ்ச வைக்கல் கத்தைகளையும் கொண்டு வந்து தர முடியுமா? காசு இப்போதே தந்து விடுகிறேன்” என்றார்.

கணபதிக்கு ‘பழம் நழுவி பாலில் விழுந்தது போலாயிற்று’. கிடைத்த சந்தர்ப்பத்தை விடுவானா? மீனாட்சியை அருகில் பார்க்கலாம். முடிந்தால் கதைத்தும் பார்க்கலாம். அவன் முருகேசரைப் பார்த்து “ஐயா காசு இப்ப தர வேண்டாம். நான் நெல்லையும் வைக்கலையும் கொண்டு வந்து தந்து விட்டு வாங்கிறன்.” என்று சொல்லி விட்டு தோழர்களின் வண்டில்களை தொடர்ந்து வேகமாக வண்டிலை ஓட விட்டான். அவனுக்கு மீனாட்சி எங்கேயும் வேலி மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருப்பாள் என்று தெரியும். கந்தையனை காணவில்லை, பள்ளிக்கூடம் போயிருப்பான் என்று எண்ணினான்.

அடுத்த முறை நெல் கொண்டு போகும் நாளும் வந்தது. தோழர்கள் தமது வண்டில் நிறைய நெல் மூட்டைகளை ஏற்றி அடுக்கினார்கள். கணபதி நான்கு மூட்டை நெல்லை ஏற்றிவிட்டு மிகுதிக்கு வைக்கலை எந்தளவுக்கு ஏற்ற முடியுமோ, அந்த அளவுக்கு ஏற்றினான்.

முருகேசர் நெல் மூட்டைகளையும் வைக்கல் கத்தைகளையும் கேட்டிருந்த விடயத்தை ஆறுமுகத்தாரிடம் கணபதி கூறியிருந்தான். ஆனால் பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகத்தார், கணபதியின் நடவடிக்கைகளில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தார். வழக்கமாக கூடுதலாக பாரம் ஏற்றினால் எருதுகள் பாவம் என்று கூறும் கணபதி, இன்று கூடுதலான வைக்கல் கத்தைகளை ஏற்றினான். எதுவென்றாலும் கணபதி தனக்கு மறைக்க மாட்டான் என்று ஆறுமுகத்தாருக்கு தெரியும். தகப்பனின் பார்வையிலிருந்த வேறுபாடு கணபதிக்கும் புரிந்தது.

“ஐயா, மற்றவர்கள் மீசாலைக்கு போய் நாளைக்கு தான் திரும்பி வருவார்கள். நான் நெல்லையும் வைக்கலையும் பளையில் இறக்கி, கிடுகுகளை ஏற்றிக்கொண்டு இன்று மத்தியானத்திற்கிடையில் திரும்பி வந்துவிடுவேன். கொஞ்சத்தூரம் போறபடியால் கொஞ்சம் கூடுதலான வைக்கலை ஏற்றினேன்” என்று சமாளித்தான்.

தோழர்கள் கணபதியை பளையில் விட்டு விட்டு மீசாலை நோக்கி சென்றனர். கணபதி வண்டிலை நேரே முருகேசரின் வீட்டு முற்றத்தில் கொண்டு போய் நிறுத்தினான். திடீரென்று கணபதியைக் கண்டதும் மீனாட்சி என்ன செய்வதென்று தெரியாது திகைத்துப் போனாள்.

அப்போது பின் வளவிலிருந்து வந்த முருகேசர் “வைக்கல் கத்தைகளை இவ்விடத்தில் அடுக்குவோம்” என்றவர், மீனாட்சியைப் பார்த்து “மீனாட்சி, தம்பிக்கு கொஞ்சம் பாற்கஞ்சி காய்ச்சு” என்று சொன்னார். வண்டிலை முட்டுக்கொடுத்து நிறுத்திய கணபதி, எருதுகளை தூரத்தில் கொண்டு போய் கட்டினான்.

கணபதி வண்டிலிலிருந்து வைக்கலை இறக்கிப் போட, முருகேசர் எடுத்துக் கொண்டு போய் அடுக்கினார். பின்னர் நெல் மூட்டைகளை இருவருமாக இறக்கி வீட்டினுள் கொண்டு போய் ஒரு மூலையில் வைத்தனர்.

முருகேசர் “தம்பி கை காலை கழுவி விட்டு வந்து இந்த சாக்கில் இரும்” என்று சொல்லி விட்டு களைத்துப் போன கணபதியின் எருதுகளை கொண்டு போய் தண்ணீர் குடிக்க வைத்தார்.

பின்னர் வண்டிலை இழுத்துக்கொண்டு போய் நிறுத்தி வைத்து, கிடுகு கட்டுகளை வண்டிலில் ஏற்றி கட்டினார். கணபதி முகம் கை கால்கள் கழுவி சால்வையால் துடைத்துக் கொண்டு வந்து முருகேசர் போட்டு விட்ட சாக்கில் இருந்தான்.

அவனது போதாத காலம் சாக்கு குசினிக்கு நேரே இருந்தது. மீனாட்சி குனிந்தும் நிமிர்ந்தும் சமையல் செய்வதைக் கண்டு திகைத்துப் போனான். பார்வையை காணியின் முன் பக்கம் திருப்பினான். அப்போது தான் முருகேசரும் மீனாட்சியும் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள் என்பது விளங்கியது.

வேலிக்கரையில் நான்கு ஒரே அளவான மரத்துண்டுகளை நட்டு, அவற்றில் இரண்டு தடிகளை குறுக்காக கட்டி, அவற்றின் மேல் ஆறு நீளமான மெல்லிய தடிகளை கிடையாக கட்டி ஒரு மேசை போல செய்திருந்தார்கள். அந்த மேசையின் ஒரு புறம் சிறிய துண்டுகளாக வெட்டி நன்கு காய வைத்த தென்னம் மட்டைகளை கட்டுக் கட்டாக அடுக்கி வைத்திருந்தார்கள். பொச்சுமட்டைகள் சிலவற்றை அடுக்கி வைத்திருந்தார்கள். மிகுதி கீழே குவித்து வைக்கப்பட்டிருந்தது. உரித்த தேங்காய்கள் சிலவற்றை குவித்து வைத்திருந்தார்கள். 

கிடுகுகளை கட்டு கட்டாக கட்டி வேலியில் சரிவாக நிறுத்தியிருந்தார்கள். வீதியில் போறவர்களுக்கு யாவும் கண்ணில் படும்.

கஞ்சியை காய்ச்சி ஒரு சிரட்டையில் எடுத்து வந்த மீனாட்சி, கஞ்சியை கணபதியிடம் கொடுத்தாள். அவன் பார்வை போன இடத்தைப் பார்த்தவள், கணபதியைப் பார்த்து “கிடுகுகளை வாங்க வண்டில்களில் வரும் யாழ்ப்பாணத்தார் அடுப்பு எரிப்பதற்கு தென்னம் மட்டைகளையும் பொச்சுமட்டைகளையும் வாங்கிச் செல்வார்கள். யாழ்ப்பாணத்தில் காடுகள் குறைவு. விறகுகளுக்கும் தட்டுப்பாடு. தேங்காய்களும் இங்கு மலிவு” என்றாள்.

கஞ்சி சூடாக இருந்தது. ஊதி ஊதி குடித்த கணபதி மீனாட்சியைப் பார்த்து “கஞ்சி நல்ல சுவையாக இருக்கிறது. நான் இது போல கஞ்சியை முன்னர் ஒரு நாளும் குடிக்கவில்லை” என்றான். வெட்கத்துடன் சிரித்த மீனாட்சி “நான் கொஞ்ச கஞ்சியை ஒரு செம்பில் விட்டு தாறன். கொண்டு போய் உங்கடை அம்மாட்டை குடுங்கோ. குடித்து விட்டு என்ன சொல்லுறா பார்ப்பம்” என்றாள்.

கணபதி தனது பொய்யை மீனாட்சி கண்டு பிடித்து விட்டாளே, இவள் சரியான வாயாடி தான் என்று எண்ணினான். ஒரு நாளும் பொய் சொல்லாத தான் முதல் முதலில் மீனாட்சியிடம் சொன்ன பொய்யை நினைத்து கணபதி வெட்கிப் போனான். (காதலே பொய்யில் தொடங்கி, பொய்களால் வளருகின்றது என்பதை கணபதி அறிய மாட்டான்).

கதையை மாற்ற நினைத்த கணபதி “எங்கே கந்தையனை காணவில்லை” என்றான். சுய நிலையடைந்த மீனாட்சி “அவன் பள்ளிக்கூடம் போட்டான்.  அவனை பள்ளிக் கூடம் போகப்பண்ணுவதும் படிக்கப்பண்ணுவதும் சரியான கஷ்டம்” என்றாள்.

கதையை எப்படி தொடர்வது என்று தெரியாது தவித்த கணபதிக்கு உதவுவது போல கிடுகு கட்டுகளை ஏற்றிவிட்டு முருகேசர் வந்து சேர்ந்தார்.

நெல் மூட்டைகளின் விலையையும் வைக்கல் கட்டுகளின் விலையையும் கேட்டு அறிந்த முருகேசர், கிடுகு கட்டுகளின் விலையை கணபதிக்கு சொல்லிவிட்டு, கணபதிக்கு கொடுக்க வேண்டிய மிகுதிக்காசை எடுக்க வீட்டினுள் சென்றார். கணபதியுடன் தனியே நின்ற மீனாட்சி அவனைப் பார்த்து புன்னகையுடன் “ஏன் கதையைக் காணோம். சொல்லுறதுக்கு ஒரு பொய்யும் இல்லையா” என்று கேட்டாள்.

இம்முறையும் கணபதியை காப்பாற்ற முருகேசர் மிகுதி காசைக் கொண்டு வந்து கணபதியிடம் கொடுத்தார். கணபதி காசை இடுப்புப்பகுதி வேட்டியில் செருகினான். முருகேசரிடம் விடை பெற்ற கணபதி ஒருமுறை மீனாட்சியை நிமிர்ந்து பார்த்து விட்டு எருதுகளை வண்டிலில் பூட்டிக்கொண்டு பெரிய பரந்தனை நோக்கி ஓடவிட்டான்.

வண்டிலை விட வேகமாக கணபதியின் எண்ணங்கள் ஓடின. வைக்கல் ஏற்றி கட்டிய போது ஆறுமுகத்தார் பார்த்த பார்வையில் தென்பட்ட மாற்றம் அவனை கவலை கொள்ள செய்தது. அது வரை ஒரு பெண்ணுடனும் கணபதி முகம் பார்த்து கதைத்ததில்லை. இன்று மீனாட்சியுடன் கதைத்து விட்டான். அவளிடம் பொய் சொன்னதையும் அவள் கேலி செய்ததையும் நினைத்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டான்.

அவனது மனநிலையை புரிந்து கொண்ட மாதிரி எருதுகள் மிதமான வேகத்தில் ஒரே சீராக ஓடின. அவற்றிற்கு பாதை நன்கு தெரிந்திருந்த படியால் திரும்ப வேண்டிய இடங்களில் திரும்பி, நேரான பாதைகளில் நேராக ஓடின. கண்கள் திறந்தபடி இருந்தாலும் கணபதிக்கு எந்த இடத்தில் போய்க் கொண்டு இருக்கிறான் என்பது மூளையில் பதியவில்லை.

திடீரென்று எருதுகள் ஓடுவதை நிறுத்தியவுடன் திடுக்கிட்டு பார்த்தான், வண்டில் தியாகர் வயல் வந்து சேர்ந்திருந்தது. ஒரு வயதேயான பேரம்பலத்தை கையில் வைத்துக்கொண்டு ஆறுமுகத்தாரும், மீனாட்சியை கையில் பிடித்த படி விசாலாட்சியும் கணபதியையும் வண்டிலையும் பார்த்தபடி நின்றார்கள்.

 

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் - ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 18

899olm.jpg

இறைவன் மனிதனை அனைத்தும் உண்ணியாக படைத்தான். அதனால் தாவர உணவுகளுடன் விலங்கு உணவுகளையும் உண்டான். விவசாயத்துடன், மீன்பிடி, மந்தை வளர்ப்பு, வேட்டை என்பவற்றை தொழிலாக கொண்டிருந்தான். ஆதியில் மனிதர்கள் கூட்டமாக சென்று தடிகளாலும் கற்களாலும் விலங்குகளை அடித்தும், எறிந்தும் கொன்றார்கள். பின்னர் நாய்களை துணையாகக் கொண்டு வேட்டை ஆடினார்கள். அதன் பின்னர் பொறி கிடங்குகளை அமைத்தும் தாவரத்தின் கொடிகளால் சுருக்குப் பொறி வைத்தும் வேட்டையாடினார்கள்.

காலம் மாற விலங்குகளை கொல்ல அம்பும் வில்லும் பயன்படுத்தினார்கள். சீனர்கள் வெடிமருந்து கண்டு பிடிக்க, மேலைத்தேசத்தவர்கள் துவக்கு தயாரிக்க வேட்டை முறை மாறியது. துவக்கை பயன்படுத்தி தேடி வேட்டையாடவும், தங்கி வேட்டையாடவும் தொடங்கினான். ‘தங்கு வேட்டை’ இரண்டு விதம். காட்டில் கோடையில் சில நீர் நிலைகளில் மட்டுமே தண்ணீர் இருக்கும். அங்கு சிறுத்தை, கரடி, பன்றி, மான், மரை, குழுமாடு, நரி, யானை முதலிய விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும்.

சுற்றிவர மரங்கள் இல்லாத போது காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் நான்கு முழம் நீளம், நான்கு முழம் அகலம், நான்கு முழம் ஆழமான கிடங்கு வெட்டி தடிகளை குறுக்கும் நெடுக்குமாக அடுக்கி, குழைகளால் மூடி, கிடங்கு தெரியாது பரவி மண் போட்டு மூடி விட்டு அந்த கிடங்கில் தங்கி வேட்டையாடுவார்கள். காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் உயரமான மரங்கள் இருந்தால், அவற்றில் பரண் அமைத்து இரவில் பரணில் தங்கி வேட்டையாடுவார்கள்.

பறங்கியர் முதல் கிழமை வந்த போது கணபதியிடம் “கணபதி, அடுத்த கிழமை இரண்டு ஆங்கில துரைமார்கள் தாங்களும் வேட்டைக்கு வருவதற்கு ஆசைப்படுகிறார்கள். அதற்கு ஒழுங்கு பண்ண முடியுமா?” என்று கேட்டிருந்தார்.

கணபதி “சென்சோர், அவர்கள் மரத்தில் ஏறுவார்களா? ஏறுவார்களாயின் நாங்கள் மரத்தில் ‘பரண்’ அமைத்து வைக்கிறோம். பரணில் இருந்து வேட்டையாடலாம்” என்றான்.

“கணபதி, அவர்கள் ஏறுவார்கள். மற்றது அவர்களிடம் கதைக்கும் போது என்னை கூப்பிடுவது போல ‘சென்சோர்’ என்று கதைக்காதே. அவர்களை நாங்கள் ‘சேர்’ (ஐயா) என்று தான் கதைப்போம்.” என்று பறங்கியர் சொல்லிவிட்டு குதிரையில் ஏறி சென்றார்.

கணபதியும் அவன் தோழர்களும் காட்டில் அலைந்து திரிந்து பொருத்தமான நீர் நிலையை தெரிவு செய்தார்கள். சுற்றிவர பற்றைகள் இருந்த ஒரு உயரமான மரம் பரண் அமைக்க தோதாக இருந்தது. தூர உள்ள காட்டிற்கு சென்று ஏழு எட்டு நீளமான தடிகளையும், பத்து பன்னிரண்டு சற்று நீளம் குறைந்த தடிகளையும் வெட்டி எடுத்து வந்தார்கள். இருவர் மரத்தில் ஏறி இடைஞ்சலாக இருந்த சில கிளைகளை வெட்டி நீக்கி விட்டு, நீளமான தடிகளை அடுக்கி கட்டினார்கள்.

பின்னர் சற்று நீளம் குறைந்த தடிகளை குறுக்காக கட்டினார்கள். அவற்றின் மேல் இலை குழைகளை பரவி கட்டினார்கள். ஏற்கனவே நான்கு சாக்குகளில் வைக்கலை நிரப்பி எடுத்து வந்திருந்தார்கள். வைக்கலை இலைகளின் மேல் பரவி விட்டார்கள்,’பரண்’ தயார்.

வரும் துரைமார் மரத்தில் ஏற வசதியாக ஒரு ஏணியையும் அமைத்து, மரத்தில் சாய்வாக கட்டி விட்டார்கள். பரணும் ஏணியும் வெளியே தெரியாதவாறு மறைத்தார்கள். வெட்டி போட்ட கிளைகள், தடிகளை அள்ளி தூரத்தில் போட்டு மறைத்தார்கள். தங்கள் காலடி பட்ட இடங்களை எல்லாம் கிளைகளால் கூட்டி மறைத்தார்கள். இனி இருவர் மட்டும் சனிக்கிழமை காலமை வந்து சரி பார்ப்பதாக தீர்மானித்து திரும்பி வீட்டிற்கு சென்றனர்.

சனிக்கிழமை பின்னேரம் மூன்று குதிரைகளில் பறங்கியரும் இரண்டு வெள்ளை துரைமாரும் வந்தார்கள். பறங்கியர் வழமை போல அரைக் கால்சட்டையும் சேட்டும் போட்டு, வழமையான சப்பாத்தை போட்டுக் கொண்டு வந்தார்.

வெள்ளைக்கார துரைமார் முழங்காலளவு சப்பாத்து போட்டு நீளக்கால் சட்டை, தடித்த சேர்ட் அணிந்து வந்திருந்தார்கள். அவர்களது இடுப்பில் அகலமான ‘பெல்ற்’ (Belt) கட்டி ‘பெல்ற்’ இல் தோட்டாக்களை செருகியிருந்தார்கள். இருவரும்   ஒவ்வொரு துவக்குகளை வைத்திருந்தார்கள்.

பறங்கியர் சொல்லியபடி அன்று பின்னேரம் இறக்கிய ‘கள்ளை’ ஒரு முட்டியில் வாங்கி, மூடி வைத்த கணபதி, மூன்று புதிய பிளாக்களையும் கோலி வைத்திருந்தான். பறங்கியர் கண்ணைக் காட்ட, கணபதி பிளாக்களில் கள்ளை ஊற்றி முதலில் துரைமார்களுக்கும், பின்பு பறங்கியருக்கும் கொடுத்தான். கள்ளு குடித்து முடிந்ததும், குதிரைகளை தியாகர் வயலில் பாதுகாப்பாக கட்டி விட்டு காட்டிற்குள் சென்றார்கள்.

கணபதியும் மூன்று தோழர்களும் வழிகாட்டி கொண்டு முன்னே சென்றார்கள். அப்போது துரைமார்களில் ஒருவர்   ‘சிகரெட்’ ஐ பற்ற வைத்து ஒரு இழுவை இழுத்து வெளியே விட்டார்.

கணபதி பறங்கியரிடம் “மிருகங்கள் வாசனையை வெகு தூரத்திலிருந்து மணந்து ஓடி விடும். வேட்டை முடிந்த பின்னர் புகைப்பது தான் நல்லது” என்று சொன்னான். பறங்கியர் “The animals will smell the smoke, please stop smoking” என்று தன்மையாக சொல்ல, அவர் ‘சிகரெட்’ ஐ நிலத்தில் போட்டு மிதித்து அணைத்து விட்டார்.

பின்னர் யாவரும் பரண் இருந்த மரத்தை நோக்கி நடந்து சென்றார்கள். தோழர்கள் இருவர் முதலில் ஏறி பாம்புகள் ஏதாவது வந்து வைக்கலுக்குள் இருக்கிறதா என்று தட்டி பார்த்தார்கள். பின்னர் பறங்கியரும் அவரைத் தொடர்ந்து துரைமாரும் ஏறினார்கள். கணபதி தோழனை ஏறச்செய்து, ஒரு மரக்கிளையால் தங்கள் கால் அடையாளங்களை அழித்துவிட்டு தானும் ஏறி பறங்கியரின் அருகே இருந்து கொண்டான். துரைமார் பறங்கியரின் மறு பக்கத்தில் இருந்தனர். கணபதியுடன் ஒரு தோழனும், துரைமார்களுக்கு மறுபக்கம் இரண்டு தோழர்களுமாக இருந்தனர். பறங்கியரின் துவக்கை கணபதி வைத்திருந்தான்.

நிலவு வரும் வரை அமைதியாக காத்திருந்தார்கள். வேட்டையின் வெற்றி காத்திருத்தலிலேயே உள்ளது. நுளம்புகளின் தொல்லையை தாங்கி கொண்டார்கள். கணபதியும் தோழர்களும் காட்டை சுற்றிப் பார்த்து, வழியில் கண்ட செருக்கன் மக்களை விசாரித்து யானைகளின் நடமாட்டம் இல்லை என்று முதலே அறிந்திருந்தார்கள்.

செருக்கன் நண்பர்கள் “சிறுத்தைகள் அடிக்கடி திரிகின்றன.  நாய்கள், ஆடுகள், கன்றுக்குட்டிகளை சில நேரங்களில் கொண்டு போய் விடுகின்றன” என்று எச்சரித்திருந்தார்கள். கரடிகளின் பயமும் இருந்தது. நிலவும் வந்தது. நீரின் பளபளப்பு தெரிந்தது.

முதலில் ஒரு பன்றி ஐந்தாறு குட்டிகளுடன் வந்து நீர் அருந்தியது. குட்டிகளுடன் வந்த பன்றியை சுடும் பழக்கம் இல்லை. அடுத்து நரி ஒன்று தயங்கி தயங்கி வந்து நீர் குடித்து விட்டு சென்றது. ஒரு பெரிய நாக பாம்பு நீர் நிலையின் ஒரு பக்கம் இறங்கி மறு பக்கமாக நீந்தி சென்று ஓடி மறைந்தது.

அடுத்ததாக சில பெண் மான்கள் அச்சமின்றி வந்து நீர் குடித்தன.  பாதுகாவலனாக கலைமான் ஒன்று பற்றை மறைவில் நான்கு பக்கமும் அவதானித்தபடி நிற்பது அவற்றிற்கு தெரியும். ஆங்கிலேயர் சுட ஆயத்தமாகி குறி பார்த்தார். கணபதி ஆங்கிலேயரின் கையை பிடித்து தடுத்தான், அவர் குறி பார்ப்பதை நிறுத்திவிட்டு கணபதியை கோபமாக பார்த்தார்.

கணபதி சற்று பொறுக்குமாறு கையை காட்டினான். பெண்மான்கள் தண்ணீர் குடித்து முடிய கலைமான் வருமென்று கணபதி அனுபவத்தால் அறிந்திருந்தான். பெண்மான்கள் பற்றைகளுக்குள் மறைய, அவர்களின் பாதுகாப்பிற்காக பற்றை மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த கலை மான் (Deer Buck) தானே தலைவன் என்ற இறுமாப்புடன் நீர்குடிக்க இறங்கியது.

இப்போது கணபதி துரையின் கையில் தட்டினான். ஓரளவு நீர் குடித்த  கலை மான்  ஒருமுறை நிமிர்ந்து பார்க்க, வெடி தீர்ந்தது.

துரையின் குறி அவ்வளவு துல்லியமாக இருந்தது. சரிந்து விழுந்த மான் ஒருமுறை கால்களை ஆட்டியது. அவ்வளவு தான், மானின் உயிர் பிரிந்து விட்டது. வெடிச்சத்தத்திற்கு மிருகங்கள் பல ஓடும் சத்தம் கேட்டது. இந்த நீர் நிலைக்கு மிருகங்கள் ஒன்றும் இனி இன்று வரமாட்டாது. இன்றைய தங்கு வேட்டை முடிவுக்கு வந்தது.  

யாவரும் பரணில் இருந்து கீழே இறங்கி மான் விழுந்த இடத்திற்கு சென்றனர். கணபதி கலைமானின் முன் கால்கள் இரண்டையும் பிணைத்து கட்டினான், பின்னர் பின்கால்கள் இரண்டையும் அவ்வாறே பிணைத்தான். முன்னரே எடுத்து வந்த ஒரு நீளமான தடியை, தோழனொருவன் கலைமானின் பிணைத்த கால்களுக்கிடையே செருகினான். தடியின் முன் பக்கம் ஒருவரும் பின்பக்கம் ஒருவருமாக தோழர்கள் மானை தோளில் தூக்கி கொண்டு நடக்க ஏனையவர்கள் தொடர்ந்து சென்றார்கள்.

நடந்து செல்லும் போது கணபதி பறங்கியரிடம் “நாங்கள் கூடியவரை பெண் மானை சுடுவதில்லை. பெண்மான்கள் சில வேளைகளில் கரு தரித்தவையாக இருக்கும். அத்தோடு கலை மானில் இறைச்சியும் அதிகம்” என்றான்.

பறங்கியர் துரைமார்களிடம் “They don’t shoot a female deer because they may be pregnant, and the deer Buck has more meat” என்று சொன்னார். இப்போது தான் கணபதி பெண் மானை சுட வேண்டாம் என்று ஏன் தடுத்தான் என்பது துரைமார்களுக்கு விளங்கியது.

பெண்மானை சுட குறிபார்த்த துரை “Oh, I see” என்று கணபதியை பார்த்து சிரித்தார்.  மானை சுட்ட துரை “I shot the buck, so the ‘ antler’ is mine. I will put the ‘antler ‘on the wall of my sitting room.” (நான் தான் கலை மானை சுட்டேன் அதனால் மான் கொம்பு எனக்குத் தான். நான் முன்னறையின் சுவரில் தொங்க விடுவேன்) என்றார். அதற்கு மற்றவர் “No, no. It belongs to me because I arranged this hunting expedition ” (இல்லை, இல்லை அது எனக்கு தான் உரியது, நான் தான் இந்த தங்கு வேட்டையை ஒழுங்கு செய்தேன்) என்று மறுதலித்தார்.

துரைமார்கள் பிரச்சனை படுவதைத் கண்ட கணபதி “என்ன பிரச்சனை” என்று பறங்கியரிடம் விசாரித்தான். “அவர்கள் மான் கொம்பிற்கு பிரச்சனை படுகிறார்கள்” என்று சொல்லி சிரித்தார் பறங்கியர். அப்போது கணபதி தன்னிடம் வீட்டில் ஒரு மான் கொம்பு இருப்பதாகவும் அதனை அவர்களுக்கு தருவதாகவும் கூறினான். பறங்கியர் “Kanapathi has an ‘antler’ at his house. He will give it to you” என்று சொன்னார். உடனே இரண்டு துரைமாரும் “Thank you, Thank you” என்று சொல்லி கணபதியின் கையை பிடித்து குலுக்கினார்கள்.

தியாகர் வயல் சென்றதும் கணபதி ஒரு கலை மானின் கொம்பை கொண்டு வந்து துரைமாருக்கு கொடுத்தான். பின்னர் தங்கை, தம்பியின் நித்திரையை குழப்பாமல், தகப்பனை எழுப்பி சொல்லிவிட்டு, வண்டிலில் எருதுகளை பூட்டிக் கொண்டு வந்தான்.

தோழர்கள் மானை வண்டிலில் ஏற்றினார்கள். இரண்டு தோழர்களை வீடு சென்று ஆறும்படி கூறிய கணபதி, ஒரு தோழனுடன் இரணைமடுவை நோக்கி வண்டிலை செலுத்த, பறங்கியரும் துரைமாரும் முன்னுக்கு குதிரைகளில் சென்றனர்.

இரணைமடுவை வண்டில் சென்று அடைந்ததும் பறங்கியர் தனது பணியாளர்களை கூப்பிட்டு மானை இறக்கச் செய்தார். சென்சோரா கணபதிக்கும் தோழனுக்கும் தேனீர் கொண்டு வந்து கொடுத்தார். கணபதியும் தோழனும் விடை பெற்று பெரிய பரந்தன் செல்ல ஆயத்தமாகினர்.

துரைமார் வந்து அவர்கள் இருவருக்கும் கை கொடுத்து நன்றி கூறி விட்டு சென்றனர். பறங்கியர் வந்து “கணபதி, உனக்கும் தோழர்களுக்கும் மிகவும் நன்றி. துரைமார்களுக்கு நல்ல சந்தோசம்.” என்று சொல்லி அனுப்பி வைத்தார். கணபதி தட்டி விட, கழுத்தில் கட்டிய மணிகள் மென்மையாக ஒலிக்க எருதுகள் வண்டிலை இழுத்தபடி ஓடின.

தியாகர் வயலை அடைந்த கணபதி எருதுகளை அவிட்டு கட்டி, வண்டிலை கொட்டிலில் விட்டு விட்டு தோழனுடன் பூவலுக்கு சென்று குளித்து விட்டு வீட்டிற்கு வந்தான். காத்துக் கொண்டிருந்த தங்கை மீனாட்சி “அண்ணா” என்று ஓடி வந்து கட்டிப் பிடித்தாள். தம்பி பேரம்பலம் தூக்கி வைத்திருந்த தாயாரிடம் தன்னை தமயனிடம் கொண்டு போகும்படி கையை காட்டினான்.

கணபதி தங்கையை ஒரு கையால் அணைத்தபடி பேரம்பலத்தை மறு கையால் தூக்கி கொண்டான். பேரம்பலம் தமயனின் கன்னத்தில் முத்தமிட்டான். விசாலாட்சி “நீ, வேட்டை, வேட்டை என்று இரண்டு நாட்கள் அவர்களுடன் விளையாடவில்லை. அதனால் அவர்கள் தவித்துப் போனார்கள்.

சரி, நீ அவர்களுடன் விளையாடிக்கொண்டிரு, நான் உங்களிருவருக்கும் கஞ்சி கொண்டு வருகிறேன்.” என்று கூறிவிட்டு உள்ளே போனாள். அப்போது பால் கறந்து கொண்டு வந்த ஆறுமுகத்தார் “துரைமார்களுக்கு சந்தோசமா? எல்லா நாட்களிலும் மான் கிடைப்பதில்லை. நல்ல காலம் உன்னை நம்பி வந்த துரைமார்கள் ஏமாறாமல் வேட்டை கிடைத்தது” என்றார்.

கணபதி அன்று முழுவதும் எங்கும் செல்லாது தம்பி, தங்கையுடன் விளையாடி பொழுதை போக்கினான். “மீனாட்சி தங்கை தம்பியை எப்படி நடத்துவாள் என்றும் கந்தையனை பொறுப்பாக பார்க்கும் அவள் என்ரை தம்பி தங்கையையும் நல்லாய் பார்ப்பாள் என்றும் எண்ணிய கணபதி “ஐயா, அம்மாவிடம் மீனாட்சி பற்றி எப்படி கதைக்கப் போகிறேன்” என்பதை நினைத்து சிறிது அச்சமும் கொண்டான்.

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் - ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

https://vanakkamlondon.com/stories/2021/01/97412/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர கடவுளே, இதை படிக்கப் படிக்க நினைவுகள் எல்லாம் அந்தக் காலத்துக்கே சென்று விடுகிறது. நானே அவர்களில் ஒருவனாக மாறிப் போகிறேன்......நன்றி தோழர்.......!   🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.