Jump to content

வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 19

mmmoop.jpg

மாற்றம் ஒன்றே மனித வாழ்வில் இடையறாது நிகழ்வது. வாழ்வியல் முறை, தொழில்துறை, பண்பாடுகள், கலைகள், அணியும் உடை, உண்ணும் உணவு, வைக்கும் பெயர்கள் முதலிய யாவற்றிலும் கால ஓட்டத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. மாற்றங்கள் சில சமயங்களில் நல்லவையாகவும் வேறு சில சந்தர்ப்பங்களில் தீயவையாகவும் இருந்திருக்கின்றன. தமிழர்களின் பெயர் வைக்கும் முறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. பெரும்பான்மையினர் சைவசமயத்தை கடைப்பிடித்ததனால் கணபதிப்பிள்ளை, வேல்முருகன், ஆறுமுகம், மீனாட்சி, விசாலாட்சி, சரசுவதி முதலிய பெயர்களை வைத்தார்கள். பின்னர் மூதாதையர் கடவுள்களின் பெயரை தான் வைத்தார்கள் என்று உணராமல் அவர்கள் வைத்த பெயர்களையும், அன்பின் நிமித்தம் தமக்கு பிடித்தவர்களின் பெயர்களையும் வைத்தார்கள்.

வெள்ளைக்கார துரைமார் வைத்த Mr.Black, Mr.White போன்ற பெயர்களை தமிழாக்கம் செய்து கறுப்பையா, வெள்ளைத்துரை முதலிய பெயர்களையும் வைத்தார்கள். இடையில் சில காலம் தனித்தமிழ் பெயர்களை விரும்பி வைத்து மகிழ்ந்தார்கள். இப்பொழுது எண்சாத்திரத்தில் நம்பிக்கை வைத்து நாவினால் உச்சரிக்க முடியாத பெயர்களை வைக்கின்றார்கள்.

கணபதிக்கு இருபத்திரண்டு வயதாகிவிட்டது. அவன் மீசாலை போகும் போதும் வரும் போதும் வழியில் வண்டிலை மறித்து மீனாட்சியுடன் கதைப்பதும், கதைக்காத நேரத்தில் தலையை மட்டும் ஆட்டி சிரித்து விட்டு செல்வதும் வழமையாகி விட்டது. கணபதி மறிக்க மறந்தாலும் எருதுகள் தாமாகவே மீனாட்சி வீட்டின் முன் நின்றுவிடும்.  கணபதி வண்டிலை விட்டு இறங்கியதில்லை, மீனாட்சியும் வேலியைத் தாண்டி வந்ததில்லை.

இப்போதெல்லாம் கணபதி பளையை தாண்டியதும் சீக்காய் (விசில்) அடிப்பான். மீனாட்சி அடி வளவில் நின்று செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டு விட்டு ஓடி வந்து வேலியை பிடித்தபடி நிற்பாள். கணபதியும் மீனாட்சியும் சங்கோசமின்றி கதைத்தாலும், பெரும்பாலும் பார்வைகளால் மட்டுமே அவர்கள் காதல் வளர்ந்தது.

கணபதிக்கு தங்கை மீதும் தம்பி மீதும் உள்ள பாசத்தையும், தந்தையார் மீது வைத்திருக்கும் பெரும் மதிப்புடன் கூடிய அன்பையும், தாயாரிடம் இருந்த  அளவில்லா அன்பையும் அவன் கதைகளில் இருந்து மீனாட்சி தெரிந்து கொண்டாள்.

மீனாட்சி, தனது தம்பியான கந்தையன் பிறந்த சில நாட்களில் தாயார் இறந்துவிட்டதையும், அதன் பின் தகப்பன், வேறு திருமணம் செய்யாது தாயாகவும் தகப்பனாகவும் தங்களிருவரையும் வளர்த்த கதையையும் கூறியிருந்தாள். கணபதி “எங்கள் விடயத்தை ஐயா விளங்கிக் கொள்ளுவார், அம்மாவுக்கு என்மீது சரியான அன்பு இருக்குது. ஆனால் அம்மா எதிலும் உறுதியானவா, அதனால் என்ன சொல்லுவாவோ என்று கொஞ்சம் யோசனையாக இருக்குது.” என்று கூறியிருந்தான். அதற்கு மீனாட்சி “உங்கடை ஐயாவோடை கதையுங்கோ. அவர் ஒரு வழி சொல்லுவார். வேறு ஆட்கள் சொல்லி அவர் அறியிறதை விட நீங்கள் நேரே சொல்லுறது தான் நல்லது” என்று கூறினாள்.

கணபதி வயல் செய்கையை தகப்பனுடன் சேர்ந்து வழமை போல செய்து வந்தான். தோழர்களுடன் வேட்டைக்கு போவதும் தொடர்ந்தது. இப்போதெல்லாம் செருக்கன் நண்பர்களும் கணபதியுடன் வேட்டைக்கு செல்கிறார்கள்.

பறங்கியர் தவறாது ஞாயிற்றுக் கிழமைகளில் தனது குதிரையில் சவாரி செய்து வருவார். இடைக்கிடை அவரும் கணபதியுடன் வேட்டைக்கு செல்வார். அப்படி செல்லும் போது அவரும் கணபதியின் போக்கில் ஏதோ ஒரு மாற்றத்தை கண்டார்.

“கணபதி என்ன விசயம், முந்தின உசாரைக் காணவில்லை” என்று கணபதியிடம் கேட்டார். தோழர்கள் மீனாட்சியின் கதையையும் கணபதி தாய், தகப்பனிட்ட சொல்ல பயப்படுவதையும் கூறிவிட்டார்கள். “Oh love”  என்று விசில் அடித்து சிரித்த பறங்கியர்

“கணபதி உன்ரை ஐயா ஒரு நல்ல மனிதர். அவருடன் நான் கதைத்திருக்கிறேன், அம்மா ஒரு புன் சிரிப்புடன் போய்விடுவா. நீ மினக்கெடாமல் ஐயாவிடம் சொல்லு. மற்றாக்கள் சொல்ல முன் நீ சொல்லிவிடு” என்று கூறினார்.

வண்டிலில் மீசாலை செல்வதும், வருவதும் தொடர்ந்தது. தோழர்கள் கணபதியின் காதலைப் பற்றி ஊரில் ஒருவரிடமும் சொல்லவில்லை. அவன் அவர்களின் நன்மை தீமைகளில் எல்லாம் முன்னுக்கு ஓடி வந்து செய்பவன். இப்போதும் அவனது ஆலோசனையின் படி தான் கூரை மரங்களை மாற்றி, பனை மரம் போட்டு, பனையோலைக்குப் பதிலாக எல்லோரும் கிடுகுகளால் வேய்கிறார்கள்.

நெல்லையும் வண்டில்களில் அதிகம் ஏற்றமுடியாது. நெல்லை அடிக்கடி கொண்டு போய் விற்றுவிட்டு, கிடுகு வாங்கி வருவது வசதியாக போய் விட்டது. போகும் போதும் வரும் போதும் கணபதி சீக்காய் அடிப்பதையும் மீனாட்சி ஓடி வந்து வேலியில் நிற்பதையும் கண்டு அவர்களுக்கு மகிழ்ச்சி தான். கணபதி மீனாட்சியை பார்த்து வரும்வரை அவனுக்காக காத்திருப்பார்கள். கணபதியும் அவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதில்லை.

ஊரில் கணபதி மீனாட்சி பற்றி அரசல்புரசலாக கதைக்க தொடங்கி விட்டார்கள். கணபதி இனியும் தாமதிப்பது சரியில்லை என்று புரிந்து கொண்டான். ஒருநாள் பின்னேரம் காட்டிலுள்ள ‘காலையில்’ மாடுகளை அடைக்கும் போது கணபதி ஆறுமுகத்தாரின் அருகே சென்று தயங்கி நின்றான். அவன் ஏதோ சொல்ல வருகிறான் என்பது ஆறுமுகத்தாருக்கு விளங்கியது.  அவரும் அவனிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணர்ந்தேயிருந்தார்.

“என்ன கணபதி என்னிடம் கதைக்கிறதுக்கு உனக்கு என்ன பயம். பயப்படாமல் சொல்லு.” என்றார்.

கணபதி “இல்லை ஐயா, உங்களுக்கு பளையிலிருக்கும் முருகேசரைத் தெரியும் தானே. அவற்றை மகள் மீனாட்சியுடன் கதைக்கிறனான். எனக்கு உங்கடையும் அம்மாவினதும் சம்மதம் தான் முக்கியம்” என்று மென்று விழுங்கினான்.

ஆறுமுகத்தார் கணபதியின் நிலையை புரிந்து கொண்டார். அவன் மீதுள்ள பாசத்தினால் அவனது தயக்கத்தைக் கண்டு பரிவுடன் “கணபதி, ஒரு பெண்ணிடம் கதைத்து விட்டால் பிறகு அவளை எக்காலத்திலும் எவருக்காகவும் விட்டுவிடக் கூடாது. எனக்கு உன்ரை சந்தோசம் தான் முக்கியம். அம்மா தான் என்ன சொல்வாவோ தெரியாது. விசாலாட்சி உன் மேல் உயிரையே வைத்திருக்கிறா.  உனக்கு தம்பையரின் உறவில் உள்ள முறைப் பெண்களில் ஒருத்தியைச் செய்ய வேண்டும் என்று என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறா. ஆனால் அவ ஒருநாளும் உன்ரை விருப்பத்திற்கு மாறாக நடக்கமாட்டா. கொஞ்சம் பொறு நான் விசாலாட்சியிடம் கதைக்கிறேன்” என்றார்.

இதற்கிடையில் கணபதிக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வுகளும் பெரிய பரந்தனில் நடந்தன. கணபதியின் ஒன்றுவிட்ட சகோதரியான பொன்னாத்தைக்கு திருமணம் நிச்சயமானது.

மாப்பிளை மீசாலையை சேர்ந்தவர். கணபதியும் தோழர்களும் பொன்னாத்தையின் வீட்டு கூரைக்கு பனை மரத்தை போடுவித்து, பளையிலிருந்து கிடுகு வாங்கி வந்து வேய்ந்தார்கள்.  வளவின் பதிவான பகுதிகளுக்கு வண்டிலில் மண் ஏற்றி வந்து பறித்து, பரவி விட்டார்கள். பனை ஓலை வெட்டி, ஆடுகள் கூட நுழைய முடியாது வேலியை அடைத்தார்கள்.

நல்ல நாள் பார்க்கப்பட்டது. மாப்பிள்ளை முதல் நாளே வந்து தியாகர்வயலில் குடும்பத்துடன் தங்கினார். அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்தில் மாப்பிள்ளை மஞ்சள் கயிற்றை பொன்னாத்தை கழுத்தில் கட்டினார். பெண்கள் விசாலாட்சியின் மேற்பார்வையில் சமைத்திருந்தார்கள். ஒரு தலை வாழை இலையில் அறுசுவை உணவை படைத்து முதலில் மாப்பிள்ளையையும் பின் பொன்னாத்தையையும் சாப்பிட வைத்தார்கள். நாட்சோறு கொடுத்தல் இனிது நிறைவேறியது.

மற்றவர்கள் பந்தியிலிருந்து சாப்பிட்டு விட்டு விடை பெற்றார்கள். ஒரு வருட முடிவில் பொன்னாத்தை ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுத்தாள். பொன்னாத்தையும் கணவரும் கணபதியின் மீதான அன்பினால் தங்கள் மகனுக்கும் கணபதிப்பிள்ளை என்றே பெயரிட்டார்கள்.

இப்போது பெரியபரந்தனில் மூன்று கணபதிகள் வந்து விட்டனர். அதனால் முத்தரின் மகனை முத்தர்கணபதி என்றும், பொன்னாத்தையின் மகனை பொன்னாத்தைகணபதி என்றும் அழைக்கத் தொடங்கினார்கள்.  செருக்கனில் பிறந்த ஒரு ஆண் பிள்ளைக்கும் கணபதிப்பிள்ளை என்று பெயரிட்டதனால் அவனை செருக்கன்கணபதி என்று அழைத்தார்கள்.

முத்தர்கணபதி தமிழ், சைவம், வாழ்வதற்கு தேவையான கணிதம் என்பவற்றை கற்றிருந்தான். சமஸ்கிருத சுலோகங்கள் சிலவற்றையும் அறிந்திருந்தான். நாயன்மார்கள் நால்வரினதும் வரலாற்றையும் தேவாரங்கள், திருவாசகங்களையும் கற்றிருந்தான். அவற்றை பண்ணோடு பாடுவான். தொல்காப்பியம், நிகண்டு, அகநானூறு, புறநானூறு, திருக்குறள், இராமாயணம், மகாபாரதம், நாலடியார், நல்வழி என்று என்னென்னவோ கற்றிருந்தான்.

ஆங்கில பாடசாலை செல்லாத காரணத்தால் English (ஆங்கிலம்) கற்கவில்லை. கணபதி, முத்தர்கணபதி கற்ற கல்வியை ஊருக்கு பயன்படுத்த எண்ணி, ஆறுமுகத்தாரும் முத்தரும் இருக்கும் போது ஒரு நாள்   “எங்கடை ஆட்கள் பலர் படிக்கவில்லை. வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வருபவர்களை கொஞ்சம் முன்னுக்கு வரப்பண்ணி முத்தர்கணபதியைக் கொண்டு இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றிலிருந்து சில கதைகளையும் நால்வர் வரலாற்றையும் கூற வைக்கலாம்.

தேவார, திருவாசகங்களை பண்ணோடு பாட பழக்க சொல்லலாம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்” என்று கேட்டான். படித்த பிள்ளை தனியே கமவேலையை மட்டும் செய்யாமல் இப்படி ஏதாவது செய்தால் அவன் படித்த படிப்பும் பிரயோசனப்படும் என்று எண்ணிய அவர்கள் சம்மதித்தார்கள். முத்தர்கணபதி வெள்ளிக் கிழமை எல்லாருக்கும் கதை சொல்வதுடன், சனிக்கிழமை சிறுவர்களுக்கு அன்றாட வாழ்வில் பயன்படும் அளவிற்கு கணக்கையும் தமிழையும் கற்பித்தான்.

மீசாலைக்கு செல்ல வேண்டி வந்தபோது கணபதி மீனாட்சியிடம் “நான் ஐயாவிடம் எங்கள் விசயத்தை சொல்லி விட்டேன். அதற்கு ஐயா ‘அவசரப்படாமல் இரு. நான் அம்மாவிடம் ஆறுதலாக கதைக்கிறேன்’ என்று சொன்னவர்” என்றான். உடனே மீனாட்சி கையை கூப்பி, கண்களை மூடி “காளியாச்சி, நீ தான் எங்களுக்கு வழிகாட்ட வேணும்” என்று வேண்டினாள்.

கணபதி சென்றவுடன் தனிமையில் இருந்த விசாலாட்சியிடம் ஆறுமுகத்தார் “விசாலாட்சி, உன்னுடன் ஒரு விசயம் கதைக்க வேணும், பதற்றப்படாமல் கேள். எங்கடை கணபதி பளையில் ஒரு பெண்பிள்ளையுடன் கதைக்கிறான். ‘நீ அவனை படிப்பை விட்டுவிட்டு வா, பெரிய பரந்தனுக்கு போவோம்’ என்று சொன்னவுடன்  மறுபேச்சில்லாமல் வந்தவன். இன்று வரை என் பேச்சையும் உன் பேச்சையும் தட்டி நடக்காத பிள்ளை. பெரிய பரந்தனுக்கு அதை செய்ய வேண்டும், தங்கைக்கும் தம்பிக்கும் இதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டவன், இப்போது தான் முதல் முதலாக தனக்கென ஒன்றுக்கு ஆசைப்பட்டிருக்கிறான். அதுவும் என்னிடம் ‘உங்களுக்கும் அம்மாவுக்கும் சம்மதமில்லாத ஒன்றை நான் செய்ய மாட்டேன்’ என்று அவன் தயங்கி தயங்கி சொல்ல எனக்கு கண்கள் கலங்கி விட்டது. நீ என்ன சொல்லுறாய்?” என்றார்.

கணபதி ஒரு பெண் பிள்ளையிடம் கதைக்கிறான் என்று கணவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த விசாலாட்சி, என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து போனாள்.

ஆறுமுகத்தார் தொடர்ந்து “விசாலாட்சி, என்னை கலியாணம் கட்ட சொல்லி உன்னை எல்லோரும் வற்புறுத்த, உன்னை கலியாணம் செய்ய சொல்லி முத்தர் என்னை கேட்க ஒரு வித தயக்கத்துடன், தியாகர்வயலை அழியவிடக்கூடாது, கணபதியை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் இருவரும் சம்மதித்தோம். தம்பையர் என்ரை உயிர் சினேகிதரென்பதால், உன்னுடன் மிகவும் மதிப்பாக பழகிய எனக்கு, கலியாணம் முடிந்த பிறகும் சில நாட்களுக்கு உன்னோடு பழக மனம் இடம் தரவில்லை. தம்பையரை கலியாணம் செய்து, வாழ்ந்து அவரின் நல்ல குணங்களால், அவர் மீது உயிரை வைத்திருந்த நீயும் என்னை புருசனாக ஏற்க தயங்கினாய். நீ எனது நல்லது கெட்டதில் பங்கு பற்றி, நாங்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து சில வருடங்கள் வாழ்ந்த பிறகு தான் எங்களால் ஒன்று சேர முடிந்தது.”என்றார்.

ஆறுமுகத்தார் மேலும் “விசாலாட்சி, எங்களுக்கு பிடிக்கேல்லை என்றால் கணபதி, நாங்கள் காட்டும் பெண்ணை கலியாணம் செய்வான். அவன் அந்த பெண்ணுடன் புருசன் பெண்சாதியாக நடக்க எவ்வளவு காலம் ஆகுமோ? தெரியாது. கணபதி மனம் மாறும் மட்டும் வருபவள் பொறுத்து இருப்பாளா? அடுத்தது பளையால் போய் வரும் போது ஒரு பெண்ணை ஏமாற்றி விட்டேனே என்று ஒவ்வொரு முறையும் செத்து செத்து பிழைப்பான்.” என்று கூறினார்.

“ஐயோ என்ரை பிள்ளை” என்று சொல்லி சத்தம் போட்டு அழுதபடி விசாலாட்சி ,ஆறுமுகத்தாரின் கையை பிடித்துக் கொண்டாள். தகப்பன்ரை கையை தாய் பிடித்துக் கொண்டு அழ, மீனாட்சி “அம்மா” என்று ஓடி வந்து தாயை கட்டிப் பிடித்தாள். பேரம்பலம் தடுமாறி நடந்து வர ஆறுமுகத்தார் அவனை தூக்கி கொண்டார். பிள்ளைகளை பார்த்ததும் விசாலாட்சி கண்களை துடைத்துக் கொண்டாள்.

அப்போது அவர்களுக்கு தூரத்தில் ஆரோ சத்தமாக கதைத்த படி வரும் சத்தம் கேட்டது. விசாலாட்சியின் தம்பிமாரும் மற்ற உறவினர்களும் கூட்டமாக வருவதை இருவரும் கண்டனர். வந்தவர்கள் ஆறுமுகத்தாரை கண்டதும் திகைத்துப்போய் நின்றார்கள். அவர்கள் விசாலாட்சியிடம் தான் கதைக்க வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்த ஆறுமுகத்தார் பேரம்பலத்தை தூக்கிய படி மீனாட்சியை மற்ற கையால் பிடித்துக் கொண்டு பின்பக்கம் சென்றுவிட்டார்.

கூட்டமாக இவர்கள் வந்ததை கண்டு   ஓடி வந்த முத்தரை ஆறுமுகத்தார் தன்னிடம் வரும் படி கையை காட்டினார். வந்தவர்கள், “அக்கா, எங்கள் குடும்பத்தில் ஒருவரும் புறத்தியில் செய்ததில்லை. கணபதி என்ன புதுசாக தொடங்குறான், இதை விடக்கூடாது” என்றார்கள்.

ஒருவர் மாறி ஒருவர் சத்தமாக கதைத்தார்கள். முத்தர் அவர்களுக்கு பதில் சொல்ல திரும்பினார். ஆறுமுகத்தார் அவரது கையை பிடித்து நிறுத்தி “முத்தர் அம்மான், பொறுங்கோ. விசாலாட்சி என்ன சொல்லுறா என்று பார்ப்பம்.” என்றார். அப்போது விசாலாட்சி எல்லாரையும் கையை காட்டி மறித்தாள். அவளது குரல் சாந்தமாக, அதே வேளை உறுதியாக ஒலித்தது.

“தம்பிமார், நீங்கள் எங்கடை குடும்பத்தில் இருக்கிற கரிசனையாலும் கணபதியில் உள்ள உண்மையான அன்பாலும் தான் கதைக்கிறீங்கள் என்று எனக்கு விளங்குது. ஆனால் இவ்வளவு நாளும் உங்கடை வீடுகளில் ஏராளம் கலியாணங்கள் நடந்திருக்கு. ஒன்றுக்கும் எங்கள் யோசனையை நீங்கள் வந்து கேட்டதில்லை. ஆறுமுகத்தாரும் நானும் ஒரு நாளும் தலையிட விரும்பினதும் இல்லை.  நீங்கள் கலியாண வீடு என்று சொன்னதும் ஆறுமுகத்தாரும் கணபதியும் ஓடி வந்து, முறிந்து முறிந்து எல்லா வேலையையும் சந்தோசமாக செய்தார்கள். இப்ப நீங்கள், நாங்கள் கேட்காமலே யோசனை சொல்ல வந்து விட்டீர்கள்.

இஞ்சை பாருங்கோ, கணபதியின்ரை கலியாணத்தைப் பற்றி நீங்கள் கதைக்கேலாது. ஆறுமுகத்தாரும் நானும் கணபதியும் தான் அதைப் பற்றி தீர்மானிக்க வேண்டும். இப்ப நீங்கள் எல்லாரும் போட்டு வங்கோ. இந்த கதையை இதோடை விடுவம்.” என்றாள்.

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் - ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.

https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 20

yyyyy.jpg

இலங்கையில் ஆதியில் இயக்கர், நாகர், வேடர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. விஜயனும் தோழர்களும் வந்த வரலாறும் உண்டு. மகிந்தரும் சங்கமித்தையும் வெள்ளரசு மரக்கிளையை கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து சேர, சோழ, பாண்டியர்கள் படையெடுத்து வந்த கதைகளும் உண்டு. இலங்கை அரசர்கள் திருமணத்திற்காக பாண்டிய அரச குடும்பங்களிலிருந்தும், நாயக்கர்கள் குலத்திலிருந்தும் பெண் எடுத்ததாகவும் கதைகள் உள்ளன. அராபியர்களும் வியாபாரத்திற்காக வந்துள்ளனர். ஐரோப்பியரும் வந்துள்ளனர். இவை இலங்கை மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, உலக தொடர்பு முதலியவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தின.

போர்த்துக்கீசர் காலம்…..கி.பி 1505—>1658.

டச்சுக்கார்ர் காலம்……..கி.பி 1640—>1796.

ஆங்கிலேயர் காலம்………கி.பி 1797—>1948.

போர்த்துக்கீசர் இருக்கும் போதே டச்சுக்கார்ர்கள் வேறொரு பகுதியில் இறங்கி விட்டனர்.

றெயில்வே றோட்டுக்கள்,

காங்கேசன்துறை வரை கி.பி 1905 இலும்

தலை மன்னார் வரை கி.பி 1914 இலும்

மட்டக்களப்பு   வரை கி.பி. 1928 இலும.

திருகோணமலை வரை கி.பி 1928 இலும்

கண்டி வரை கி.பி 1867 இலும் போடப்பட்டன.

நான்கு சில்லுகளில் ஓடக்கூடிய பாவனைக்குரிய கார்கள்,

ஜேர்மனியில் கி.பி 1885 இலும்

அமெரிக்காவில்    கி.பி 1890 இலும்

இங்கிலாந்தில்     கி.பி 1892 இலும்

தயாரிக்கப்பட்டு பாவனைக்கு விடப்பட்டன.

மாமன்மாரும் உறவினரும் தனது திருமணத்தைப் பற்றி தாயாருடன் கதைத்ததை அறியாத கணபதி அடுத்த நாள் தான் மீசாலையால் திரும்பியிருந்தான். வழமை போல குளித்து விட்டு வந்து தம்பி, தங்கையுடன் விளையாடி, மத்தியானம் சாப்பிடும் வரை விசாலாட்சி ஒன்றும் கதைக்கவில்லை.

இந்த முறை போகும் போதும் வரும் போதும் மீனாட்சியுடன் கதைக்க முடியவில்லை. அவளைப் பார்த்து சிரித்து தலையாட்டி விட்டு வந்தது கணபதிக்கு போதுமாயிருந்தது. அந்த நினைப்புடன் பிள்ளைகளுடன் மகிழ்வாக விளையாடிக் கொண்டிருந்த கணபதி, தாயார் வந்து அருகில் இருந்ததை கவனிக்கவில்லை. விசாலாட்சி தோளில் கையைப் போட்டு அணைத்தபடி “கணபதி” என்றதும் தான் சுய நினைவிற்கு வந்து “என்ன அம்மா” என்று கேட்டான்.

விசாலாட்சி, “கணபதி, நீயே விரும்பும் அளவிற்கு மீனாட்சி நல்லவளா? உனக்கு ஒரு நல்ல பெண்ணை கட்டி வைக்க வேண்டும் என்று நெடுக நான் காளியாச்சியை கும்பிட்டபடி தான். தம்பையரின் பகுதியில் செய்தால் சொந்தம் கெடாது என்று நினைத்தனான் தான். ஆனால் உன்ரை மனதிற்கு பிடிக்காத பெண்ணை செய்யச் சொல்ல மாட்டன். உன்ரை மனதுக்கு பிடித்தவள் கட்டாயம் நல்லவளாய் தான் இருப்பாள். உன்ரை கொப்பர் தான் நீ மீனாட்சியை செய்ய வேண்டும் என்று என்னட்டை கேட்டவர். முத்தருக்கும் நல்ல விருப்பம். இரண்டு பேரும் நல்ல நாள் பார்த்து முருகேசரிட்டை போய் கதைக்க போயினம்.” என்றாள்.

தாயார் சம்மதம் சொன்னதும் கணபதியின் நெஞ்சை அதுவரை அடைத்துக் கொண்டிருந்த பாரம் விலகியது போல இருந்தது. கணபதி தாயாரின் கைகளிரண்டையும் தனது கைகளால் பற்றிக் கொண்டு “அம்மா” என்றான். அவனுக்கு மகிழ்ச்சியில் வேறு வார்த்தைகள் வரவில்லை, ஆறுதலான பெருமூச்சு மட்டும் வெளிப்பட்டது. மகிழ்ச்சியில் மீனாட்சியிடம் உடனே போய் சொல்ல வேண்டும் என்னும் எண்ணமும் எழுந்தது. அதே நேரம் தாயார் “மீனாட்சி நல்ல பெண்ணாய் தான் இருப்பாள்” என்று சொன்னதை கேட்ட கணபதி ‘பொல்லாத வாய்க்காரி’ என்று நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

மீசாலையிலிந்த வைத்தியர் குடும்பத்திலிருந்து வந்த ஒரு இளைஞன் பெரிய பரந்தனில் காடு வெட்டி, தனது காணியின் கொல்லனாற்றங் கரையில் ஒரு வைரவர் கோவிலை உருவாக்கியிருந்தார். பின்னர் ஏனோ அவர் தனது காணியில் கட்டை பிடுங்கி வயல் செய்யவில்லை.

வருடம் தோறும் ஒரு முறை வந்து வைரவருக்கு பொங்கல் வைத்துவிட்டு செல்வார். இப்போது அவர் ஓரளவு வைத்தியத்தில் திறமை பெற்று விட்டார். கணபதி தனது தோழர்களுடன் மீசாலை செல்லும் ஒவ்வொரு முறையும் அவருடன் போய் கதைப்பது வழக்கம். அவருடைய உறவினர்களும் மீசாலையில் வைத்தியத் தொழிலையே செய்தனர்.

பெரிய பரந்தனில் மக்களும் நிறைய வந்து விட்டனர். குஞ்சுப் பரந்தனிலும் செருக்கனிலும் வைத்தியர் இல்லை. எல்லோரும் கை வைத்தியம் செய்து, மாறாத போது வைத்தியத்திற்கு மீசாலைக்கு போய் வரும் நிலமை. கணபதி அவரிடம், “அண்ணை, நீங்கள் எங்கள் ஊருக்கு வந்தால் நாங்கள் எல்லா உதவிகளும் செய்வோம். நீங்கள் மூன்று கிராம மக்களுக்கும் வைத்தியம் செய்யலாம்.” என்று கூறுவான்.

வைத்தியரும் பெரிய பரந்தன் வந்து வயலை திருத்த தொடங்கினார். தாங்கள் அவருக்கு கூறியவாறு கணபதியும் தோழர்களும் அவர் வீடு போடுவதற்கும், வீட்டு வளவை சுற்றி காட்டில் வெட்டி எடுத்து வந்த அலம்பல்களால் அழகான வேலி அமைப்பதற்கும் உதவி செய்தனர்.

வைத்தியர் தனது காணியில் தூதுவளை, பிரண்டை, மோசுமொசுக்கை, முசுட்டை, குறிஞ்சா, முடக்கொத்தான், சிறு குறிஞ்சா, கொவ்வை முதலிய கொடிகளையும் துளசி, கீழ்க்காய்நெல்லி என்று ஏதேதோ மூலிகைச் செடிகளையும் மாதுளை, தோடை, எலுமிச்சை, செவ்விளநீர் மரங்களையும் சிறிது காலத்திலேயே வளர்த்து ஒரு மூலிகை தோட்டம் உருவாக்கி விட்டார். இப்போது எல்லோரும் அவரிடமே வைத்தியம் பார்க்கிறார்கள்.

ஒரு புதன் கிழமை காலமை ஆறுமுகத்தாரும் முத்தரும் பளைக்கு போக ஆயத்தமாகினர். கணபதி வண்டிலில் எருதுகளைப் பூட்டினான். தங்கை மீனாட்சி தானும் வரப்போவதாக வண்டிலில் ஏறி விட்டாள். தூரத்தில் முத்தர்கணபதி ஓடி வருவது தெரிந்தது. முத்தர்கணபதி “நல்ல காரியத்திற்கு செல்லும் போது நான்கு பேர் போக கூடாது என்று என்ரை வாத்தியார் சொல்லுறவர். என்னையும் சேர்த்தால் ஐந்து பேர்.” என்றான்.

பத்து மணியளவில் முருகேசர் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். எல்லோரும் வீட்டு திண்ணையில் விரித்த பாய்களின் மேல் இருந்தனர். கந்தையன் வந்து முத்தர்கணபதியுடனும் தங்கையுடனும் கதைத்துக் கொண்டிருந்தான். முருகேசர் எல்லோருக்கும் இளநீர் வெட்டி குடிக்க கொடுத்தார். மீனாட்சி கதவு மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். இளநீர் குடித்து முடிந்ததும் பெரியவர்கள் மூவரும் பின் வளவில் சென்று, முருகேசரின் தோட்டத்தைப் பார்த்தபடி கதைத்தனர்.  

கணபதிக்கு மீனாட்சியை கலியாணம் செய்வதைப் பற்றி முத்தர் கதையை தொடங்கினார். முருகேசர் “எனக்கும் அவர்களின் விசயம் தெரியும். கணபதி நல்ல குடும்பத்து பிள்ளை, எல்லை மீற மாட்டான், மீனாட்சியும் தன்ரை நிலையிலிருந்து மாற மாட்டாள். அவள் என்னிடம் நேரடியாக சொல்லவில்லை, தாய் இருந்திருந்தால் அவளிட்டை சொல்லியிருப்பாள். என்னட்டை என்னெண்டு அவள் நேரில் சொல்லுவாள்? கந்தையன் அவள் சொல்ல யோசிக்கிறதை பற்றி சொன்னான். எனக்கு என்ரை பிள்ளை மீனாட்சியை கணபதிக்கு கட்டி வைக்க நல்ல விருப்பம். நீங்கள் நல்ல நாளை சொன்னால் அன்றைக்கு நாட்சோறு குடும்பம்.” என்றார்.

மீனாட்சி எட்டி எட்டி பார்ப்பதை கண்ட முத்தர்கணபதி நிலமையை புரிந்து கொண்டு, தங்கை மீனாட்சியையும் கந்தையனையும் “வாருங்கள் இன்று வீதியால் நிறைய வண்டில்கள் போகுது. என்னவெண்டு பார்ப்பம்.” என்று சொல்லி முன் வாசலுக்கு கூட்டிச் சென்றான்.

தனித்திருந்த கணபதியும் மீனாட்சியும் மனம் விட்டு கதைத்தனர்.

கணபதி “ஐயாவும் அம்மாவும் உன்னை நான் கலியாணம் செய்வதற்கு சம்மதித்து விட்டார்கள்.” என்று தொடங்கினான்.

அதற்கு மீனாட்சி “விளங்குது. அதாலை தானே பொம்பிளை கேட்டு வந்திருக்கிறார்.” என்று புன்னகையுடன் சொன்னாள். கணபதி அடுத்து என்ன கதைக்கிறது என்று தெரியாது தடுமாறினான். “உங்களை கலியாணம் செய்ய எனக்கு நல்ல சந்தோசம். நீங்கள் பிழையாய் நினைக்காட்டி, உங்களிட்டை இரண்டு விசயம் கதைக்கோணும்.” என்று தயங்கினாள்.

கணபதியும் “நான் உன்னை ஒரு நாளும் பிழையாய் நினைக்க மாட்டன் மீனாட்சி. நீ பயப்படாமல் கேள்.” என்றான். அதற்கு மீனாட்சி “நீங்கள் மச்சம், மாமிசம் சாப்பிடுவீர்கள என்று எனக்கு தெரியும். நான் சைவ சாப்பாடு தான் சாப்பிடுறனான். ஐயா சில நேரம் அந்த சின்ன கொட்டிலுக்கு உள்ளே வைத்து ஏதோ சமைப்பார். கந்தையனும் சாப்பிடுவான். அந்த மணம் எனக்கு பிடிக்காது. உங்கடை வீட்டை வந்த பிறகு என்னை மச்சம் சாப்பிடச் சொல்லி கட்டாயப் படுத்தக் கூடாது. வேணும் எண்டால் உங்களுக்கு நான் சமைத்து தருவன்.” என்று மீண்டும் தயங்கினாள்.

கணபதிக்கு சிரிப்பு வந்தது, “மீனாட்சி, நீ அம்மாவுக்கு ஏற்ற மருமகள் தான். அம்மா எங்களுக்கு சமைத்து தருவா, ஆனால் தான் சாப்பிட மாட்டா. நீ மச்சம் சமைக்க வேண்டாம். நான் நல்லாய் சமைப்பன்.” என்றான்.

கணபதி “மீனாட்சி வேறையும் ஏதோ கதைக்கோணும் என்றாய். அது என்ன?” என்று கேட்டான். “இல்லை, இவன் கந்தையனை இங்கை தனிய விட்டிட்டு வர எனக்கு மனமில்லை. ஐயா வண்டிலைப் பூட்டிக் கொண்டு வெளிக்கிட்டால் சில நேரம் மத்தியானம் சாப்பாட்டுக்கும் வரார். அவன் தனியத்தான் நிக்க வேணும். அது தான் அவனையும் எங்களோடை கூட்டிக்கொண்டு போனால் என்ன?” என்று மீனாட்சி யோசனையோடு கேட்டாள்.

அப்போது கணபதிக்கு, ஆறுமுகத்தார் தாயாரோடு தன்னையும் பத்து வயதில் பெரிய பரந்தனுக்கு கூட்டி வந்தது தான் ஞாபகம் வந்தது.

அதனால் கணபதி “மீனாட்சி, அவனை கூட்டிக் கொண்டு போறதிலை எனக்கும் விருப்பம் தான். ஆனால் அவனது படிப்பு குழம்பி விடுமோ என்று தான் யோசனையாய் இருக்கு.” என்று சொன்னான்.

மீனாட்சி கணபதியை அன்போடு பார்த்து “உங்களை உங்கடை, ஐயா பத்து வயதில் தானே பெரிய பரந்தனுக்கு கூட்டி வந்தவர். அவர் உங்களை நல்ல மனுசனாய் வளர்த்திருக்கிறார். கந்தையனுக்கு இப்ப பன்னிரண்டு வயது ஆகிறது. ஏழாம் வகுப்பு வரை படித்து விட்டான், அது போதும் அவனுக்கு. உங்களைப் பார்த்து அவனும் ஒரு நல்ல மனுசனாய் வரோணும், கமவேலைகளையும் பழக வேணும்.” என்று சொன்னாள்.

“உங்கடை ஐயா சம்மதித்தால் நாங்கள் அவனையும் கூட்டிக் கொண்டு போவம்.” என்று கணபதி சொல்ல மனதில் இருந்த பாரம் குறைந்ததால் அவளது முகம் முழு நிலாவைப் போல மலர்ந்தது.

ஆறுமுகத்தாரும் முருகேசரும் முத்தரும் திரும்பி வந்து திண்ணையில் இருந்தனர்.

அப்போது முத்தர், முருகேசரைப் பார்த்து ” நாங்கள் கதைத்த படி அடுத்த மாதம் வருகின்ற மூன்று நல்ல நாட்களில் ஒரு நாளை மீனாட்சியுடன் கதைத்து எங்களுக்கு அறிவியுங்கோ. நாங்கள் நாட்சோறு குடுக்க ஆயத்தமாய் வருகிறோம், இப்ப நாங்கள் போட்டு வாறம்.” என்று கூறி வெளிக்கிட ஆயத்தமானார்.

அப்போது வீட்டை விட்டு வெளியே வந்த மீனாட்சி, ஆறுமுகத்தாரையும், முத்தரையும் பார்த்து “போட்டு வாருங்கோ மாமா, போட்டு வாருங்கோ முத்தரம்மான்” என்று முறை போட்டு வழியனுப்பி வைத்தாள். கந்தையனும் முத்தர்கணபதியும் தங்கை மீனாட்சியும் புதினம் பார்ப்பதை விட்டு விட்டு ஓடி வந்தனர்.

முத்தர்கணபதி மீனாட்சியைப் பார்த்து “போட்டு வாறம் அக்கா” என்றான். “ஓம், போட்டு வாருங்கோ” என்ற மீனாட்சி, விடை பெற வந்த கணபதியின் தங்கை மீனாட்சியின் கையை பிடித்து அணைத்து தலையை கோதி விட்டு “நீங்களும் போட்டு வாங்கோ குட்டி மச்சாள்” என்றாள்.

பார்த்துக் கொண்டு நின்ற ஆறுமுகத்தாருக்கு மனம் குளிர்ந்து விட்டது. அவர் எல்லோரிடமும் விடை பெற்று வீதியை நோக்கி நடந்தார். கணபதி மீனாட்சியைப் பார்க்க அவள் புன்னகைத்து கண்களாலேயே அவனுக்கு விடை கொடுத்தாள்.

கணபதி வண்டிலில் எருதுகளை பூட்டிக் கொண்டு எல்லோரும் ஏறிய பின் புறப்பட்டான். போகும் வழியில் முத்தர், ஆறுமுகத்தாரைப் பார்த்து “உனக்கு நல்ல மருமகள் தான் வரப்போறாள். நீயும் விசாலாட்சியும் தேடினாலும் இப்படி ஒரு பிள்ளையை கொண்டு வந்திருக்க மாட்டியள்” என்றார்.

ஆறுமுகத்தாரும் மனதிற்குள் ‘மீனாட்சி முறை சொல்லி கதைத்து எல்லாரையும் வசியம் பண்ணி விடுவாள் போல இருக்குது. கொஞ்சம் கறுப்பென்றாலும் இலட்சணமான பிள்ளை. கணபதி அதிகம் கதைக்க மாட்டான். இவள் அவனுக்கும் சேர்த்து கலகலப்பாய் கதைப்பாள் போல இருக்குது’ என்று நினைத்துக் கொண்டார். (காந்தம் ஒன்றின் ஒத்த முனைகள் ஒன்றையொன்று தள்ளும் என்பதும் எதிர்முனைகள் ஒன்றையொன்று கவரும் என்பதும் அந்த நாளில் மக்கள் அறிய மாட்டார்கள்)

பொம்பிளை பார்த்து நாளும் குறித்து வரச்சென்ற எல்லாரும் முகமலர்ச்சியுடன் வருவதைக் கண்ட விசாலாட்சி, அவர்கள் இறங்குவதற்கு முன்னமே “என்ன பொம்பிளையை பார்த்தீங்களா? கணபதிக்கு பொருத்தமாயிருக்கிறாளா? என்று துருவி துருவி கேட்டாள். அதற்கு ஆறுமுகத்தார் “எங்கடை குடும்பத்திற்கு பொருத்தமான நல்ல பிள்ளை.” என்றார்.

ஆறே வயதான மீனாட்சி “என்ரை மச்சாள், என்ரை மச்சாள்” என்று கத்திக் கொண்டு நித்திரையாய் இருந்த பேரம்பலத்திடம் ஓடினாள்.

பரந்தனிலிருந்து நேராக பெரிய பரந்தன் எல்லை, செருக்கன் எல்லை வழியாக, காட்டினூடாக சென்று குடமுருட்டி ஆற்றினருகே சென்று பின் திரும்பி நேராக சாமிப்புலம், நல்லூர் வழியாக பூனகரி சென்ற வண்டில் பாதையை தான் பெரிய பரந்தன் மக்கள் பயன்படுத்தினர்.

கரடிப்போக்கிலிருந்து நேராக பெரிய பரந்தன் காடு வழியாக பெரியபரந்தனையும் குஞ்சுப் பரந்தனையும் ஊடறுத்து செருக்கனின் முன் புறமாக சென்று குடமுருட்டியில் பழைய பாதையுடன் இணைந்த வண்டில் பாதையும் உருவாகியது. இரண்டு பாதைகளும் நீலன் ஆற்றையும் கொல்லன் ஆற்றையும் கடந்து தான் போக வேண்டும்.

ஆங்கில அரசாங்கம் இரண்டு ஆறுகளுக்கும் இவ்விரண்டு பாலங்களை அமைதப்பதற்கு பொறியியலாளர்களை அனுப்ப, அவர்கள் அளவீடுகளை செய்து கற்களையும் பதித்தனர்.  பின்னர் சிக்கனம் கருதி பரந்தனிலிருந்து பெரியபரந்தன் காட்டினூடாக குறுக்கே ஒரு புதிய பாதையை அமைத்து, கரடிப்போக்கிலிருந்து வந்த பாதையுடன் இணைத்து (இணைத்த இடம் இப்போது ஓவசியர்சந்தி என்று அழைக்கப்படுகிறது) புதிய பாதையை உருவாக்கினார்கள். அந்த புதிய பாதையை கிரவல் போட்டு சீராக்கினார்கள். புதிய பாதைக்கு இரண்டு பாலங்களையும் கட்டினார்கள்.

கல்வயலைச் சேர்ந்த ஒருவருக்கு பெரிய பரந்தனில் புதிய பாதையின் அருகில் ஒரு காணி இருந்தது. அவர் அதனை விற்று விட்டு ஊரோடு போக விரும்பினார். ஆறுமுகத்தார் அந்த காணியை வாங்கி கணபதியின் பெயரில் எழுத விரும்பினார்.

“விசாலாட்சி, கணபதி பத்து வயதில் என்னுடைய கையை பிடித்துக் கொண்டு வந்து, உழைக்க தொடங்கினவன், இன்று வரை தனக்கென்று எதையும் எதிர்பாராது உழைக்கிறான். நாங்கள் அந்த காணியை அவன் பெயரில் வாங்குவோம்.” என்று விசாலாட்சியிடம் கேட்டார்.

விசாலாட்சியும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தாள். கணபதியின் பெயரில் காணி வாங்கி எழுதப்பட்டது.

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் - ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.

https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 21

uuuuioio.jpg

யானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா? விலங்குகளின் தவறுகள் காரணமா? சிந்தித்து பார்ப்பவர்களுக்கு மனிதன் தான் இந்த முரண்பாடுகளுக்கு காரணம் என்பது புரியும். திட்டமிடப்படாத காடழிப்பினால் விலங்குகள் வாழுகின்ற, உணவு தேடி உலாவி திரிகின்ற காடுகள் யாவும் மனிதனால் அழிக்கப்பட்டு விட்டன. பின் அவை எங்கு தான் செல்வது? பொறுப்பானவர்கள் தான் மிக விரைவில் தீர்வு காண வேண்டும்.

ஆதியிலும் காடு சார்ந்த இடங்களில் மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் நிலமைகள் இருந்தன. இப்பொழுது போல பெரிய இழப்புக்கள் இல்லை, இயற்கை சமநிலை இருந்தது. காட்டு பிரதேசங்களில் வாழும் மக்களிடையே இந்த சந்திப்புகள் பற்றிய கதைகள் பல உண்டு.

ஒரு பெரிய வேட்டைக்காரன் இளைஞர்களின் வேட்டை பற்றிய அறிவை அறிய எண்ணினான். அவர்களைப் பார்த்து “ஒருவன் வேட்டைக்குப் போன போது பன்றி ஒன்றின் உறுமல் சத்தம் கேட்டு பதுங்கி பதுங்கி அதனை சுடுவதற்கு சென்றான். ஒளித்திருந்து பன்றியை குறி பார்த்த போது, ஒரு கொழுத்த தனியன் பன்றி, மேலே ஒரு மரக்கிளையை பார்த்து உறுமுவதைக் கண்டான். நன்கு அவதானித்த பொழுது மரக்கிளையில் சிறுத்தை ஒன்று பன்றியைப் பார்த்து சீறியபடி இருப்பதைக் கண்டான். எதனை வேட்டைக்காரன் சுடுவான்?” என்று கேட்டான்.

சிலர் “பன்றியை விட சிறுத்தை ஆபத்தானது. அதனால் அதைத் தான் சுடுவான்.” என்றனர். மற்றவர்கள் “தனியன் பன்றி மிகவும் ஆபத்தானது. ஆட்களை மூர்க்கமாக தாக்கி குற்றுயிரும் குறையுயிருமாக்கி விடும், அதனால் பன்றியைத் தான் முதலில் சுடுவான்.” என்றனர். வேட்டைக்காரன் சிரித்து “அவன் புத்திசாலியாக இருந்தால் சிறுத்தையைத் தான் முதலில் சுடுவான். சூடு பட்டதும் பன்றியை பார்த்து கோபத்துடன் பாய தயாராக இருந்த சிறுத்தை கடைசி முயற்சியாக பன்றி மேல் ஆக்குரோசமாகப் பாய்ந்து அதை கவ்விபடி உயிரை விடும். அதனால் பன்றியும் இறந்து விடும்.”என்றார்.

முருகேசர் முறைப்படி தனது உறவினர்கள் நண்பர்களான சிலருடன் வந்து ஆறுமுகத்தாரிடமும் விசாலாட்சியிடமும் நாட்சோறு கொடுப்பதற்கு ஏற்ற நாளை கூறி,

“நீங்கள் மாப்பிள்ளையுடன் காலையில் வந்து விடுங்கள். நாங்கள் எல்லா ஒழுங்குகளையும் செய்து வைத்திருப்போம்” என்று சொல்லி விடை பெற்று சென்றார்.

தியாகர் வயலில் பெண்கள் எல்லோரும் கூடி நெல் அவித்தல், மா இடித்தல், பலகாரம் சுடுதல் என்று இரண்டு மூன்று நாட்கள் தடல்புடலாக இருந்தது.

கணபதி, மீனாட்சியை திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் மனைவிகளும் சந்தோசமாக வந்து வேலைகள் செய்தனர். அவர்களது புருசன்மார் சிலர் முறுக்கி கொண்டனர். அதற்கு பெண்கள் எல்லோரும் ஒரே குரலில் “ஊரில் இருந்து நாங்கள் வன்னிக்கு வந்த முதல் நாளிலிருந்து விசாலாட்சி அக்கா எங்களுக்கு செய்த உதவிகளை நீங்கள் மறக்கலாம், நாங்கள் மறக்க முடியாது. அவர்களுக்கு பதிலுக்கு உதவி செய்ய இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது.” என்று கூறிவிட்டு வந்து விட்டனர்.

நாட்சோறு குடுப்பித்து, பெண்ணையும் கையோடு அழைத்து வருவதற்காக ஏழு வண்டில்களில் கிராம மக்கள் புறப்பட்டனர். விசாலாட்சியின் தம்பிகள் இருவரும் வரவில்லை, அவர்களின் மனைவிகள் வந்தனர்.

கணபதியின் நண்பர்களும் முத்தர்கணபதியும் வண்டில்களை ஓட்டி செல்ல தயாராக இருந்தனர். ஆண்கள் யாவரும் வெள்ளை வேட்டி கட்டி தோளில் சால்வை போட்டிருந்தார்கள். சால்வை ஆண்களுக்கு ஒரு வித கம்பீரத்தைக் கொடுத்தது. கை, கால், முகம் கழுவும் போது துடைப்பதற்கு சால்வையை பயன்படுத்தினார்கள். வெய்யிலில் செல்லும் போது தலைப்பாகை கட்ட சால்வை உதவியது, இரவில் குளிரும் போது சால்வையை போர்வையாக போர்த்தினா ர்கள்.

குளித்து விட்டு வேட்டி கட்டி வந்த கணபதிக்கு, ஆறுமுகத்தார் தலைப்பாகை கட்டி விட, விசாலாட்சி திருநீறு பூசி, சந்தன பொட்டு வைத்து, அழகு பார்த்து நெற்றியில் முத்தமிட்டாள். “என்ரை ராசா, ஐயாவுடன் போய் மருமகளை கூட்டிக் கொண்டு வா. நான் இங்கு இருந்து வரும் விருந்தாளிகளுக்கு சாப்பாடு செய்து காத்திருப்பன். சந்தோசமாய் போய் வா அப்பன்” என்று கூறி விசாலாட்சி வழி அனுப்பி வைத்தாள்.

விசாலாட்சி என்று பெரிய பரந்தனில் காலடி வைத்தாளோ, அன்றிலிருந்து அவள் வெளி இடங்களுக்கு போவதில்லை என்பதை அறிந்த ஆறுமுகத்தாரும் கணபதியும் அவரை வரும்படி வற்புறுத்தாது விடை பெற்று சென்றனர். அவர்கள் சென்று வண்டிலில் ஏறியதும் உறவினர்களும் ஏறினர்.

ஏழு வண்டில்களும் அணி வகுத்து, எருதுகளின் கழுத்தில் இஸ்லாமிய வியாபாரிகளிடம் வாங்கி கட்டிய சலங்கைகள் ஒலிக்க வரிசையாக பளையை நோக்கி சென்றன. வண்டில்கள் ஓட ஓட கணபதியின் மனதில் நினைவுகளும் ஓடின.

மீனாட்சி வேண்டி கேட்டுக் கொண்ட இரண்டு விடயங்களும் அவனது மனதில் காட்சியாய் விரிந்தன. தாயாரைப் போல அவளும் மச்சம் சாப்பிடுவதில்லை, அதனால் அவனுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. கந்தையனைக் கூட்டி வந்து தங்களுடன் வைத்திருப்பது அவனுக்கும் விருப்பம் தான்.

தன்னிடம் அவள் வினயமாக கேட்ட விதம் அவனுக்கு சிரிப்பை உண்டாக்கியது. எதையும் துணிச்சலாக கதைக்கும் மீனாட்சி தம்பிக்காக தயங்கி தயங்கி கதைத்தாள். தகப்பனும் தாயும் ஒன்றாக இருந்த சந்தர்ப்பத்தில் கணபதி “மீனாட்சி கந்தையனையும் எங்களுடன் கூட்டி வந்து வைத்திருப்பம்.” என்று கேட்டவள். நானும் சம்மதித்து விட்டேன் என்றான். அதற்கு ஆறுமுகத்தார் “கட்டாயம் கூட்டிக் கொண்டு வா. நாங்கள் குடிக்கும் கஞ்சியையோ கூழையோ அவனும் எங்களோடை சேர்ந்து குடிக்கட்டுமே.” என்றார். விசாலாட்சி புன்முறுவலுடன் “நாங்கள் தியாகர்வயலுக்கு வந்த போது மூன்று பேர் மட்டும் தான். மீனாட்சியும் பேரம்பலமும் பிறந்த பின்னர் ஐந்து பேர் ஆனோம். மருமகள் மீனாட்சியும் கந்தையனும் வந்துவிட்டால் ஏழு பேராய் ஆகிவிடும். வீடும் கலகலப்பாய் மாறிவிடும், கட்டாயம் கூட்டிக் கொண்டு வா” என்றாள்.

தகப்பனும் தாயும் கந்தையனை கூட்டி வருமாறு சொல்லியது நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்த கணபதிக்கு, மாமன்மாரை நினைத்து சிறிது கவலையும் ஏற்பட்டது. அவர்கள் தாயாரிடம் வந்து வாக்குவாதப்பட்டதை அறிந்து தாயாரிடம் “என்னம்மா? அவைக்கு ஏன் இவ்வளவு கோபம்.” என்று கேட்டான்.

அகற்கு அம்மா “கணபதி, நீ கவலைப்படாதை. அவர்களின் அறிவு அவ்வளவு தான். எத்தனை நாட்களுக்கு தான் கோபிப்பார்கள். கலியாணம் முடிய எல்லாம் சரி வரும்” என்று கூறியிருந்தாள்.

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த கணபதி வண்டில்கள் நிற்பதை கண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். வண்டில்கள் எல்லாம் முருகேசர் வீட்டு வாசலில் நின்றன. முருகேசரும் உறவினர்களும் “வாருங்கோ, வாருங்கோ” என்று வரவேற்றபடி விரைந்து வந்தனர்.

எல்லோரும் நேரே கிணற்றடிக்கு சென்று கை கால் கழுவி விட்டு வீட்டுக்குள் சென்றனர். வீட்டுக்கு முன்னால் ஒரு சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. பனை ஓலை பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. எல்லோரும் சென்று அமர்ந்தார்கள். முருகேசரின் உறவுக்கார பெண்கள் எல்லோருக்கும் பால் தேனீர் கொடுத்தனர். சரியான நேரம் வர கணபதியை அழைத்து நிறைகுடத்தின் முன் இருத்தி விட்டு, மீனாட்சியை கூட்டி வரும்படி முத்தர் சொல்ல, பெண்கள் மீனாட்சியை அழைத்து வந்தனர்.

வரும் போது மீனாட்சி தனது பெரிய கணகளால் நிமிர்ந்து ஒருமுறை கணபதியை பார்த்தாள், ஒரு கணம் புன்னகை தோன்றி மறைந்தது. மீனாட்சி பதுமை போல நடந்து வந்து தலை குனிந்தபடி கணபதியின் அருகில் இருந்தாள். சேலை கட்டி வந்த மீனாட்சியை கணபதியும் பார்த்தான், பார்த்தவன் மீனாட்சியின் வடிவைக் கண்டு திகைத்துப் போனான்.

முத்தர் நிறைகுடத்தின் மேலிருந்த மஞ்சள் கயிற்றை எடுத்து கொடுக்க, கணபதி ஒரு பரவச நிலையில் மீனாட்சியின் கழுத்தில் கட்டினான்.

பெண்கள் தலை வாழை இலையில் உணவைப் படைத்தனர். கணபதி முதலில் சாப்பிட, அதே இலையில் மீனாட்சி சாப்பிட்டாள். பின்னர் வந்தவர்களுக்கு எல்லாம் பந்தியில் சாப்பாடு வழங்கப்பட்டது.

நாட்சோறு கொடுத்தல் சந்தோசமாக நடந்து முடிந்தது. முத்தர் எல்லோரையும் புறப்படும்படி கூற எல்லோரும் வெளிக்கிட்டனர். கணபதி முதலில் மீனாட்சியை கையை பிடித்து வண்டிலில் ஏற்றினான். பின்னர் கந்தையனை கூப்பிட்டு ஏற்றி விட்டு தானும் ஏறினான். முருகேசரும் உறவினர்களுமாக மூன்று வண்டில்களில் வந்தனர். பத்து வண்டில்களும் பெரிய பரந்தனை நோக்கி விரைந்தன. பிரயாணத்தின் போது கணபதி கந்தையனிடம் ஊர்களின் பெயர்களைக் கூறினான்.

மீனாட்சியும் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு தெரியும். ஆனையிறவு பாலம் வந்த போது முன்பு எருதுகள் அதன் மேல் ஏற பயந்த கதையை சொன்னான். பெரிய பரந்தன் காட்டை கடக்கும் போது, அந்த காட்டில் தான் சிறுத்தைகள் உலாவுவதாக சொன்னான். அப்போது அவனுக்கு ஆறுமுகத்தார் தன்னை பத்து வயதில் கூட்டி வந்தது நினைவிற்கு வந்தது. இன்று தான் பன்னிரண்டு வயதில் கந்தையனை கூட்டி செல்கிறான். ஐயா தன்னை வளர்த்தது போல தானும் கந்தையனை வளர்க்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

மாப்பிள்ளை பொம்பிளையை விசாலாட்சி உறவினர்களுடன் சேர்ந்து வரவேற்றார்.

கணபதி மீனாட்சியியுடன் தகப்பன், தாய் இருவரது கால்களிலும் விழுந்து வணங்கினான். கணபதியின் நண்பர்கள் காட்டுத்தடிகளால் கொட்டகை போட்டு, படங்கினால் கூரை போட்டிருந்தார்கள். விருந்தினர்கள் யாவரும் பாய்களில் இருந்தனர். சிறிது நேரம் ஓய்வின் பின்னர் பந்தியில் எல்லோரையும் இருத்தி சாப்பாடு வழங்கப்பட்டது. கணபதியின் மாமன்மார் தயங்கி தயங்கி வந்து இரண்டாம் பந்தியில் இருந்து சாப்பிட்டு விட்டு விசாலாட்சியிடம் ஒன்றும் கதைக்காமல் சென்றுவிட்டனர். மூடல் பெட்டிகளில் பலகாரங்கள் வைத்து மூடப்பட்டிருந்தது.

எல்லோருக்கும் வெற்றிலை பாக்கு வழங்கப்பட்டது. சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் முருகேசரும் உறவினர்களும் விடை பெற்றனர். விசாலாட்சி பலகாரப்பெட்டியை கொண்டு வந்து கொடுத்தார். வெளிக்கிட முன்பு முருகேசர் கந்தையனைக் கூப்பிட்டு “கந்தையா, அத்தான் அக்கா சொல்லுறதை கேட்டு நடக்க வேணும். பெரியாட்களிட்டை மரியாதையாக நடக்க வேணும்.” என்று கூறினார்.

பந்தியில் மற்றவர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட போது, கட்டாடியார், சீவல்தொழிலாளி, சிகையலங்கரிப்பவர், யாவருக்கும் அதே பந்தியில் ஒரு பக்கத்தில் இருத்தி உணவு பரிமாறப்பட்டது.

பெண்கள் யாவரும் மீனாட்சியை சூழ்ந்து கொண்டனர். மீனாட்சியும் அவர்களுடன் நீண்ட நாட்கள் பழகியவள் போன்று சந்தோசமாக கதைத்தாள். கறுப்பாக இருந்தாலும் மிக அழகாக இருந்த அவளை, அவளின் அழகுக்காக மட்டுமில்லை, அவளின் எல்லோருடனும் அன்பாக பேசிப்பழகும் நல்ல குணத்திற்காகவும் தான் கணபதி விரும்பியிருக்கிறான் என்பதை எல்லோரும் உணர்ந்தனர்.

முத்தரின் மனைவி, மாமன்மாரின் மனைவிகள், பொன்னாத்தை முதலியவர்களைப் பற்றி கணபதி கூறியிருந்ததால் அவர்களை விசாரித்து அறிந்தபின் முறை சொல்லியே அவர்களுடன் கதைத்தாள். பெண்கள் யாவருக்கும் மீனாட்சியை நன்கு பிடித்து விட்டது.

வந்து இரண்டு மூன்று நாட்களுக்குள் மீனாட்சி, விசாலாட்சியிடமிருந்து சமையல் பொறுப்பை ஏற்று கொண்டு விட்டாள். முடிந்த அளவு மற்ற வேலைகளையும் தானே செய்தாள்.

விசாலாட்சிக்கு வேலைகள் எதுவும் செய்யாமல் இருக்க முடியவில்லை. மீனாட்சி அவளிடம் “மாமி, நான் வந்துவிட்டேன், நீங்கள் இவ்வளவு நாளும் வேலை செய்தது போதும்.  இனி நீங்கள் ஆறுதலாக இருங்கள்.” என்று சொல்லி விட்டாள்.

கோவில்கள், விசேசங்களின் போது ஊரவர்கள் வீடுகளுக்கு போய் உதவி செய்தல் தவிர வேறு எங்கும் போகாத, விசாலாட்சி இப்போது மாலை நேரங்களில் எல்லோர் வீடுகளுக்கும் போய் வந்தாள். “மீனாட்சி என்னை ஒரு வேலையும் செய்ய விடுறாள் இல்லை.” என்று முக மலர்ச்சியுடன் அவர்களிடம் சொல்லும் போதே மருமகளிடம் அவளுக்கு உள்ள அன்பை யாவரும் புரிந்து கொண்டனர்.     

கந்தையனை படிப்பை நிறுத்தி அழைத்து வந்தது கணபதிக்கு கவலையாக இருந்தது. தங்கை மீனாட்சியும் பள்ளிக்கூடம் போகமலிருக்கிறாள். முத்தர் கணபதி எழுத, வாசிக்க, கணக்குகள் பார்க்க சொல்லி கொடுக்கிறான் தான். பெரிய பரந்தனிலும் செருக்கனிலும் சில பிள்ளைகள் பள்ளிக்கூடம் போறதில்லை. குஞ்சுப்பரந்தன் பிள்ளைகள் அனைவரும் ஊரில் தங்கி சங்கத்தானை பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர்.

எல்லா பிள்ளைகளுக்கும் அந்த வசதி இல்லை. முத்தர்கணபதியுடனும் நண்பர்களுடனும் கணபதி இதைப்பற்றி கதைத்திருந்தான். ஒருநாள் பறங்கியர் வந்த போது கணபதி “செஞ்சோர், எங்கள் ஊர் பிள்ளைகள் படிக்க என்ன செய்யலாம்?” என்று கேட்டான்.

பறங்கியர் “எல்லா ஊருக்கும் ஒரு பள்ளிக்கூடம் வேணும், உங்கடை மூன்று ஊரிலும் கொஞ்ச பிள்ளைகள் படிக்கிறேல்லை போலை இருக்குது. நீ இதைப்பற்றி ஒரு கடிதம் எழுதி ‘கவர்மென்ட் ஏஜன்ற்’ (Government Agent) இடம் நேரே கொடு. நீ தமிழ்பாஷையிலை எழுது, அவருக்கு விளங்கப்படுத்த ஆட்கள் இருப்பார்கள், அவர்கள் வாசித்து காட்டுவார்கள். இப்ப இருக்கிற ‘கவர்மென்ட் ஏஜென்ற் ‘நல்லவர்” என்று கணபதியிடம் சொன்னார். கடிதம் எழுதும் முறையையும் பறங்கியர் சொல்லிக் கொடுத்தார்.

தோழர்களுடன் கணபதி கதைத்த போது பறங்கியர் சொன்னது போல ‘கவர்மென்ட் ஏஜென்ற்’ இற்கு கடிதம் எழுதி மூன்று கிராம மக்களிடமும் கையெழுத்து வாங்கும் பொறுப்பை முத்தர்கணபதியும் சில தோழர்களும் ஏற்றனர்.

அவர்கள் சொன்னதைப் போல முத்தர்கணபதியும் தோழர்களும் கடிதம் எழுதி, ஊரவர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு வந்து கணபதியிடம் கொடுத்தனர். அதில் கையெழுத்துக்களை விட கைவிரல் அடையாளங்களே கூடுதலாக இருப்பதைக் கண்ட கணபதி கவலையடைந்தான்.

முத்தரிடமும் ஆறுமுகத்தாரிடமும் சொல்லிவிட்டு, கணபதி தோழர்களுடன் ‘கவர்மென்ட் ஏஜென்ற்’ இடம் சென்று நேரில் அந்த விண்ணப்பத்தை கொடுத்தான். மொழி பெயர்ப்பவர் வாசித்து சொல்ல கேட்ட ‘கவர்மென்ட் ஏஜென்ற்’ கையெழுத்துகளுக்கு பதிலாக கை அடையாளங்கள் கூடுதலாக இருப்பதைக் கண்டு அவர்களின் மேல் கருணை கொண்டார்.

“கணபதி, நீ போ, எங்கடை அதிகாரி  வந்து உங்கடை ஊரை சுற்றிப் பார்த்து, உங்களோடை கதைப்பார். அவர் திருப்திப்பட்டால் உங்களுக்கு பள்ளிக்கூடம் வரும்.” என்று கூறினார். ஊர் திரும்பிய கணபதியும் தோழர்களும் அதிகாரி எப்போது வருவார் என்று காத்திருந்தார்கள்.

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் - ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.

https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 22

uiuiuio.jpg

தென் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வியாபாரம் செய்ய வந்த செட்டிமார், சுட்டதீவு துறைக்கு அருகே நெல் வேளாண்மை செய்யக் கூடிய நிலம் உள்ளது என்று அறிந்து, அங்கு வந்து கடல் நீர் உட்புகா வண்ணம் பெரிய வரம்புகளை அமைத்து விவசாயம் செய்தார்கள். செட்டிமார் அமைத்த அந்த வரம்புகள், அவர்கள் நெல் வேளாண்மை செய்ததற்குரிய சாட்சியாக இன்றும் உள்ளன. செட்டிமார் கடற்கரையில் ஒரு பிள்ளையார் கோவிலை அமைத்து வழிபட்டு வந்தார்கள். அவர்கள் இந்தியாவிற்கு திரும்ப வேண்டி வந்த போது யாவற்றையும் கைவிட்டு சென்றார்கள்.

பிள்ளையார் கோவிலுக்காக கட்டிய கொட்டில் சிதிலமடைந்து விட்டது. 1880 ஆம் ஆண்டளவில் திரு. முதலிச்சின்னர் என்பவரும் அவரது அண்ணன் தம்பிமாரும், மீன் பிடிக்க கச்சாய் துறையிலிருந்து தோணியில் புறப்பட்டார்கள். கடுமையாக வீசிய காற்றினால் அவர்களது தோணி சுட்டதீவு கரையை அடைந்தது. காற்றின் வேகம் குறைந்த போது அவர்களின் கண்களில் சிதிலமடைந்த கோவில் தென்பட்டது.

திரு. முதலிச்சின்னரும் அவரது அண்ணன் தம்பிகளும் கரையில் இறங்கி ஆராய்ந்த போது பிள்ளையாரைக் கண்டார்கள். தாங்கள் வணங்கும் பிள்ளையார் தான் தங்களை கரைக்கு அழைத்து வந்து, தனது நிலையை காண வைத்தார் என்பதை புரிந்து கொண்ட அவர்கள் கச்சாயிலிருந்து கிடுகு, பனைமரம் முதலியவற்றைப் கொண்டு வந்து கோவிலைப் புனரமைத்து கச்சாயிலிருந்து வந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், விளக்கு வைத்து, பூசை செய்து வழிபட்டு வந்தார்கள்.

அவர்களுக்கு பின்னர் அவர்களின் பிள்ளைகள் பூசை செய்தார்கள். பூசையை ஒழுங்காக செய்ய எண்ணிய திரு. சின்னர் முருகேசு, அவரின் தம்பிமுறையான திரு. பரமர் கந்தையா (சுழியர்), திரு. பரமர் கணபதிப்பிள்ளை (ஓணார்) என்பவர்கள் குஞ்சுப் பரந்தனுக்கு வடக்கு பகுதியில் செருக்கன் கிராமத்தின் அருகில் காணியை வெட்டி, நெல் வேளாண்மை செய்ய தொடங்கினார்கள்.

செருக்கனில் அவரது உறவினர்கள், பிடித்த மீன்களைக் காய வைத்து கருவாடு ஆக்குவதற்காகவும், நெல் வேளாண்மை செய்வதற்காகவும் முன்பே பூனகரியால் வந்து குடியேறி இருந்தனர். திரு. முருகேசரின் மறைவிற்கு பின்னர் அவரது மகன் செல்லத்துரை (1929 ஆம் ஆண்டில் பிறந்தவர்) முருகேசரின் தம்பி முறையினரான திரு. பரமர் கந்தையா, திரு. பரமர் கணபதிப்பிள்ளை, ஆகியோருடன் இருந்து வளர்ந்தார். சிறிய தந்தைமாருடன் வாழ்ந்த திரு. செல்லத்துரை அண்ணாவியார் உரிய வயது வந்தபின்னர் சிறிய தந்தைமாருடன் சேர்ந்து பூசை செய்து வந்தார்.

ஆனி மாதம் பொங்கல் பக்தர்கள் சூழ சிறப்பாக நடை பெறுவது இன்று வரை வழக்கமாக உள்ளது. செட்டிமார் தொடங்கிய கோவில் என்பதால் வாரிச்செட்டி மடம் பிள்ளையார் என்று கோவிலை அழைப்பதாக, திரு. செல்லத்துரை அண்ணாவியார் கோவில் வரலாறு பற்றி கேட்ட போது கூறினார்.

கணபதி, மீனாட்சியின் இல்லற வாழ்வு மிக மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. விசாலாட்சியின் தம்பிமார் வயல் வேலை சம்பந்தமாக தியாகர் வயலுக்கு வந்து ஆறுமுகத்தாருடன் மட்டும் நின்றபடி கதைத்து விட்டு சென்று விடுவார்கள்.

தனது மாமியாருடன் அவர்கள் கதைக்காமல் சென்றதை அவதானித்த மீனாட்சி, அடுத்தமுறை அவர்கள் வந்து நின்று கதைத்த பொழுது அவர்களிடம் “பெரிய மாமா, சின்ன மாமா, ஏன் நின்று கதைக்கிறியள். உள்ளே வந்திருந்து கதையுங்கோ, நான் தேத்தண்ணி போடுறன், குடிச்சிட்டு போகலாம்” என்று உரிமையுடன் கூறி விட்டு, தேநீரும் கொண்டு வந்து விட்டாள்.

அவர்கள் மறுக்க முடியாமல் மீனாட்சி விரித்த பாயில் இருந்து தேநீரைக் குடித்தார்கள். விசாலாட்சி ஒரு புன்சிரிப்புடன் மருமகளின் செய்கையை பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் போகும் போது மீனாட்சியைப் பார்த்து “பிள்ளை, தேத்தண்ணி நல்லாயிருந்தது” என்று கூறி விட்டு, விசாலாட்சியிடம் வந்து தயங்கி தயங்கி “அக்கா, போட்டு வாறம்” என்று சொல்லிச் சென்றார்கள். ஆறுமுகத்தார் விசாலாட்சியை பார்த்து சிரித்தார். அவர்களிருவருக்கும் பெரிய நிம்மதியாக இருந்தது.

கணபதி மனதில் சந்தோசமாக இருந்தாலும் மீனாட்சியிடம் “உனக்கு என்னை விட உன்ரை மாமா, மாமி, மச்சாள், மச்சானில் தான் பாசம் கூட. நீ என்னைப்பற்றி யோசிக்கிறேல்லை” என்று வேணும் என்று வம்புக்கிழுப்பான். அதற்கு அவள் “உங்களுக்கு நான் என்ன குறை வச்சனான்” என்று பதிலுக்கு சிணுங்குவாள்.

கணபதி உடனே “மீனாட்சி நான் சும்மா தான் சொன்னனான்.” என்று சமாளிப்பான். கணபதி, தன்ரை ஐயா எப்பிடி தனக்கு வேலைகளை பழக்கினாரோ, அதே மாதிரி, கந்தையனை கூட்டிச் சென்று தன்னுடன் சேர்ந்து வேலைகளை செய்ய பழக்கினான்.

மீனாட்சி மாமியாருடன் பிள்ளையார் கோவிலுக்கும், காளி கோவிலுக்கும் இயலுமான எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் போவாள். முத்தர்கணபதி சொல்லும் கதைகளை கேட்கவும் மீனாட்சியும் போவாள். மீனாட்சி வந்த பின்னர் கோவிலில் கதை கேட்கும் பெண்கள் தொகை கூடியது. அவர்கள் வராவிட்டாலும் மீனாட்சி அவர்களின் வீட்டிற்கு போய் கூட்டி வந்து விடுவாள். அவளுக்கு அனேகமான கதைகள் தெரிந்திருந்தன.

முத்தர்கணபதியிடம் அவள் கேட்கும் கேள்விளால் அவன் திக்குமுக்காடிப் போவதும் உண்டு. முத்தர்கணபதி தனக்கு நன்கு தெரிந்தாலும், மீண்டும் ஒருமுறை புத்தகத்தை வாசித்து விட்டு தான் வருவான். மகாபாரத கதை சொல்லும் போது, துரோணர் அரசகுமாரன்களுக்கு வில்வித்தை பழக்கும் போது தூர நின்று பார்த்த வேடர் குலத்தைச் சேர்ந்த ஏகலைவன், அருச்சுனரை போல சிறந்த வில் வீரனாக இருப்பதைக் கண்டு, அவனது வலது கை பெருவிரலை குரு தட்சணையாக கேட்ட இழிவான செயலைப் பற்றி அவள் கேட்கும் போது, தனது வாத்தியார் சொன்ன பதிலைக் கூறினாலும், முத்தர்கணபதிக்கும் துரோணர் செய்தது பிழையாகவே தோன்றும். கணபதியிடம் “எனக்கு நல்லாய் தெரிந்த கதைகளையும், மீனாட்சி அக்கா வரத் தொடங்கிய பிறகு வாசித்து விட்டுத் தான் வாறனான். எனக்கும் திருப்பி திருப்பி வாசிக்க புதுப்புது விசயங்கள் தெரியுது.” என்று சொல்லுவான்.

“நீங்கள் பள்ளிக்கூடம், பள்ளிக்கூடம் என்று அதே யோசனையில் திரியிறியள். என்னை ஒரு இடமும் கூட்டிக்கொண்டு போறேல்லை.” என்று மீனாட்சி வம்புக்காக, ஒரு நாள் குறைபட்டுக் கொண்டவள் போல நடித்தாள்.

அதற்கு கணபதி “மீனாட்சி, நானும் கந்தையனும் படிப்பை நிப்பாட்டினது பள்ளிக்கூடம் இல்லாதபடியால் தான்.  என்ரை ஐயா தன்ரை அனுபவப் பாடங்களை எனக்கு சொல்லித் தந்தவர். அதாலை நான் நல்லாய் இருக்கிறன். அவரை மாதிரி எல்லாரும் இல்லைத் தானே. என்ரை தங்கச்சி பள்ளிக்கூடம் போகாமல் இருக்கிறாள். பேரம்பலமும் படிக்க வேணும். என்ரை தம்பி, தங்கச்சி மட்டுமில்லை, செருக்கனிலையும் பெரிய பரந்தனிலையும் படிக்காமல் கன பிள்ளைகள் இருக்கினம். பள்ளிக்கூடம் ஒன்று வந்தால் நல்லது தானே.” என்றவன், அடுத்த வெள்ளிக்கிழமை சுட்டதீவு பிள்ளையார் கோவிலுக்கு போவதற்கு ஒழுங்குகள் செய்து விட்டான்.

மீனாட்சி கண்டி வீதியால் வந்தபடியால் சுட்டதீவு கோயிலுக்கு போனதில்லை. மாமியாரும் கணபதியும் மீசாலையால் தோணியில் வந்து இறங்கியதும், சுட்டதீவுக் கோவிலில் கும்பிட்டதை மீனாட்சி அறிந்திருந்தாள். அவள் சொல்லாவிட்டாலும் அங்கு போக அவள் விரும்புறாள் என்பது கணபதிக்கு தெரியும்.

ஆறுமுகத்தார், விசாலாட்சி, முத்தர், அவரின் மனைவி, முத்தர்கணபதி, பொன்னாத்தை, பொன்னாத்தையின் கணவனும் மகனும், கணபதி, மீனாட்சி, கணபதியின் தோழர்கள் எல்லோரும் பொங்கல் பானை, பொங்குவதற்குரிய சாமான்கள் எல்லாவற்றையும் மூன்று வண்டில்களில் ஏற்றி கொண்டு காட்டு வழியால் போனார்கள்.

காட்டு வழியால் போகும் போது கணபதி முதல் முதல் வந்த போது பார்த்த காட்சிகள் எல்லாவற்றையும் மீனாட்சியும் பார்த்தாள்.

கணபதியிடம் “எனக்கு ஒரு மான் குட்டியும் ஒரு மயில் குஞ்சும் பிடித்து தாருங்கோ. நான் கவனமாக வளர்ப்பன்.” என்று கேட்டாள். அதற்கு கணபதி “எங்கடை ஆட்கள் எல்லாத்தையும் வளர்த்து பாத்திட்டினம். மான் குட்டிகள் சில நாட்கள் வளருவினம். ஆனால் தங்கடை கூட்டத்தை விட்டு பிரிந்த ஏக்கத்தை மறக்கமாட்டினம். அந்த ஏக்கத்திலேயே செத்து போவினம்.

மயில் முட்டைகளைக் கொண்டு வந்து கோழிகளில் அடைவைப்பினம். பொரித்த மயில் குஞ்சுகள் கொஞ்ச நாள் கோழியையே தாயென்று நம்பி வளருவினம். வளர்ந்த பின்னர் மயில் கூட்டத்தைக் கண்டதும் அவையோடை பறந்து போய் விடுவினம். குழு மாடுகள் மட்டும் பட்டி மாடுகளோடை சேர்ந்து வாழ பழகிவிடுவினம். அதனால் மான், மயில்களை காட்டிலேயே வளர விடுவது தான் சரி.” என்றான்.

அடர்ந்த காட்டினூடாக போன வண்டில்கள், இப்போது தாழை, கள்ளி, நாகதாளி, குடல்வேல், கற்றாழை முதலிய தாவரங்கள் இருந்த பற்றைக் காடுகளினூடாக சென்றன. தாழம்பூக்கள் வாசனை வீசின. மீனாட்சி அவற்றிற்கு ஆசைப்பட்டாள். தாழம்பூ வாசனைக்கு நாகபாம்புகள் வந்து இருக்கும், அதனால் மற்றவர்களை வண்டிலால் இறங்க விடாமல், கணபதி தான் இறங்கி மிகவும் கவனமாக அவற்றைப் பிடுங்கி மீனாட்சி, கந்தையன், சின்னமீனாட்சி, தன்ரை அம்மா எல்லாருக்கும் கொடுத்தான். மீனாட்சி தாழம்பூக்களை முகர்ந்து பார்த்துவிட்டு “அருமையான வாசம்” என்றாள்.

மேலும் சென்ற போது பார்த்த நாகதாளிகளில் சென்னிறமான பழங்கள் காணப்பட்டன. நாகதாளி பழங்கள் மிகவும் சுவையானவை, அவற்றைப் பிடுங்குவதற்கு முட்கள் தடையாக இருந்தன. குரங்கு ஒன்று ஒரு வளர்ந்த மரத்தின் கிளையை வாலால் சுற்றி பிடித்தபடி, பின் கால்களாலும் அந்த கிளையை பற்றிக் கொண்டு தலை கீழாக தொங்கியவாறு முன் கால்களால் நாகதாளி பழத்தை பிடுங்கி சாப்பிட்டது.  

அதை பார்த்த மீனாட்சியும், சின்னமீனாட்சியும், கந்தையனும் கை தட்டி சிரித்தார்கள். பற்றைக் காடுகள் முடிய வெள்ளை மணல்கள் தோன்றின. மணற்பரப்பின் நடுவே பிள்ளையார் கோவில் இருந்தது. பூசாரியார் அவர்களை வரவேற்றார். எல்லோரும் மகிழ்ச்சியாக பொங்கினார்கள். பூசாரியார் அவற்றை சாமிக்கு படைத்து, தீபம் காட்டி, பூசை செய்ய எல்லோரும் கும்பிட்டார்கள். பூசாரியார் கொடுத்த திருநீற்றை பூசி, சந்தனப்பொட்டு வைத்து, அவர் கொடுத்த பிரசாதங்களை வாங்கி கொண்டார்கள்.

மீனாட்சி, மாமியாரும் கணபதியும் முதல் முதல் வந்து இறங்கிய துறைமுகத்தை பார்க்க விரும்பினாள். பெரியவர்களை கோவிலில் ஆறுதலாக இருக்க விட்டு விட்டு, மற்றவர்கள் நடந்து கடற்கரையை அடைந்தார்கள்.

துறைமுகத்தில் கரையில் நட்டிருந்த மரக்கட்டைகளில் கயிறுகளால் கட்டப்பட்ட தோணிகள் சில கடல் அலைகளினால் ஆடிக் கொண்டிருந்தன. தோணிகளின் மேல் ஆலா பறவைகள் வந்து, இருந்து சிறகை விரித்து கொத்தியபடி இருந்தன.

கடற்கரையில் முத்தர்கணபதி சின்னமீனாட்சிக்கும் கந்தையனுக்கும் மணல் வீடு கட்டி பழக்கி கொண்டிருந்தான். கணபதி பேரம்பலத்தை தோளில் வைத்த படி, மீனாட்சியுடன் கடலுக்குள் இறங்கி முழங்கால் அளவு தூரத்திற்கு நடந்து சென்றான். மீனாட்சி ஒரு கையால் சேலையை உயர்த்தி பிடித்தபடி மறு கையால் கணபதியின் தோளை பிடித்து கொண்டு சேர்ந்து நடந்தாள்.

மீன் குஞ்சுகள் அவள் காலைக் கடித்தன, அவள் கூச்சத்தினால் சிரித்து கத்தியபடி துள்ளி குதித்தாள். அவளுக்கு எல்லாமே புதிய அனுபவங்களாக இருந்தன.

அடுத்த நாள் கணபதி முதல் வேலையாக இரண்டு இரண்டு பொச்சுமட்டைகளை ஒன்றாக இணைத்து கூடுகள் போல கட்டி, வீட்டின் பல பகுதிகளில் மழைத் தூவானம் படாத இடத்தில் தொங்க விட்டான். இரண்டு மூன்று நாட்களில் அடைக்கலம் தேடுவதைப் போல, சிட்டு குருவிகள் வந்து குடியேறி விட்டன. ஆண்குருவிகள் பெரியதாகவும் முகத்தில் கரும் அடையாளத்தோடும் இருந்தன. பெண்குருவிகள் சிறிதாகவும் அழகானவையாகவும் இருந்தன.

மீனாட்சி காலமையும் மின்னேரமும் அவற்றிற்கு அரிசிக் குருணிகளை போட்டு, அவை தமது சிறிய சொண்டுகளால் கொத்தித் தின்னும் அழகை பார்த்து இரசிப்பாள். அவற்றை ‘சிட்டுக்குருவிகள்’ என்று அழைக்காமல் ‘அடைக்கலம் குருவிகள்’ என்றே அழைப்பாள். அவள் சிட்டு குருவிகளுடன் கதைப்பதைப் பார்த்த கணபதி “மீனாட்சி, உன்னை பார்க்கவும் சிட்டு குருவி மாதிரி தான் இருக்கு.” என்று சொல்லி சிரித்தான்.

சில மாதங்களின் பின்னர் முருகேசர் பிள்ளைகளை பார்க்க வந்தார். வரும் போது வண்டிலில் தேங்காய்களும் தேங்காய் எண்ணையும் கொண்டு வந்தார். முகத்தில் தாடியுடன் கொஞ்சம் சோர்வாக காணப்பட்டார்.

கந்தையன் ஓடிப் போய் “ஐயா” என்று கட்டிப் பிடித்தவன் “நான் எருதுகளை அவிட்டுக் கட்டுவன், நீங்கள் உள்ளுக்க போங்கோ” என்று சொல்லி விட்டு சாமான்களை இறக்கி வைத்து விட்டு, வண்டிலை நிழலில் நிறுத்தி, எருதுகளை அவிட்டு கொண்டு போய் வாய்க்கால் கரையில் கட்டினான்.  பளையில் புற்களை தேடித் தேடி மேய்ஞ்ச எருதுகள், வன்னியின் பசுமையான புற்களை கண்டதும் காணாததை கண்டது மாதிரி ‘அவக்’,’அவக்’ என்று மேய்ந்தன.

முருகேசரை ஆறுமுகத்தார், விசாலாட்சி, கணபதி எல்லோரும் முகம் மலர்ந்து வரவேற்றார்கள். வந்தாரை வாழ வைக்கும் வன்னி அல்லவா? வந்தவர் சம்பந்தியும் கூட. மீனாட்சி தேநீர் ஆற்றி வந்து கொடுத்தாள்.

தகப்பனை அந்த கோலத்தில் பார்க்க வந்த அழுகையை அவள் அடக்கி கொண்டாள். “என்ன ஐயா உங்கடை கோலம்” என்றவளுக்கு அவளை அறியாமலே கண்ணீர் வந்தது. முருகேசர் “எனக்கு என்ன குறை அம்மா. நான் நல்லாய் தானே இருக்கிறன்” என்றார்.

ஆறுமுகத்தார் “வராதவர் வந்திருக்கிறீங்கள். ஒரு கிழமையாவது இஞ்சை எங்களோடை நின்று விட்டு தான் போக வேணும்” என்று மறித்து விட்டார். மீனாட்சியை சைவ கறிகளுடன் சமைக்க சொல்லிய ஆறுமுகத்தார், மரை வத்தல் கறியை தானே காய்ச்சினார். எப்பவேனும் கள்ளு குடிக்கும் ஆறுமுகத்தார் அன்று முருகேசருக்காக ஒரு முட்டி பனம் கள்ளும் எடுப்பித்து விட்டார்.

சமையல் முடியும் மட்டும் சம்பந்திகள் இருவரும் ஒரு பூவரசமர நிழலில் இருந்து கதை பேசி கள்ளு குடித்தார்கள். நீண்ட நாட்களின் பின்னர் மகளின் சமையலையும் மரை வத்தல் கறியையும் நன்கு சுவைத்து சாப்பிட்ட முருகேசர், பின்னர் தலைவாசலில் மீனாட்சி விரித்த பாயில், தலைக்கு அணையாக அவள் மடித்து வைத்த சாக்கில் தலை வைத்தபடி நிம்மதியாக பொழுது சாயும் வரை நித்திரை கொண்டார்.  

முருகேசர், வீட்டிற்கு கட்டுவதற்கு ஒரு நாலு முழ வேட்டியையும், ஒரு மாற்று வேட்டியையும் மட்டும் கொண்டு வந்திருந்தார். அவை ஒரு கிழமையென்ன ஒரு மாதம் நின்றாலும் அவருக்கு போதும். கட்டிய வேட்டியையும் நாலு முழத்தையும் குளிக்க முன்னம், சால்வையை கட்டி கொண்டு தோய்த்து காய வைத்து விடுவார். குளித்தாப்பிறகு நாலு முழத்தை கட்டிக் கொண்டு சால்வையை அலம்பிவிடுவார். அந்த கால ஆண்கள் இவ்வாறு, தாமே தங்கள் உடுப்புக்களை தோய்த்துக் கொள்ளுவார்கள். தங்கள் மனைவி, மகள் தோய்க்க வேணும் என்று நினைப்பதில்லை.

“நீங்கள் இஞ்சை கனநாள் நின்றால் தோட்டத்துக்கு தண்ணீர் இறைக்கிறது ஆர்” என்று மீனாட்சி கேட்டாள். அதற்கு அவர் “மீனாட்சி, நீயும் கந்தையனும் இருக்கேக்கை நீங்கள் பார்த்து கொள்ளுவீங்கள்.  நான் இறைக்காமல் வேலை என்று போனால் நீங்கள் இறைப்பீங்கள். ஆடு, மாடு வராமல் பாப்பீங்கள். நாங்கள் ஒரு நாளும் மரக்கறி வாங்கிறேல்லை. இந்த முறையும் நல்ல தோட்டம். ஒரு நாள் நான் தேங்காய் கொண்டு சந்தைக்கு போக, மாடுகள் வந்து எல்லாத்தையும் திண்டிட்டு போட்டுதுகள்.” என்றவர், “நீங்கள் நெடுக எனக்கு காவலிருக்கேலுமே. சிறகு முளைத்தால் பறக்கத்தானே வேணும்.” என்றார்.

தொடர்ந்து “பிள்ளை, எங்கடை முத்தத்து மாவிலை இந்த முறை நிறை காய். முற்றினாப் பிறகு பிடுங்கிக் கொண்டு உங்களிட்டை வரலாமென்று தான் இருந்தனான். அதையும் போன கிழமை குரங்குகள் வந்து, புடுங்கி நாசமாக்கியிட்டுதுகள்.” என்றார். தகப்பனாரின் கஷ்டங்களை கேட்க மீனாட்சிக்கு சரியான கவலையாய் போய் விட்டது.

கந்தையன் தகப்பனை காட்டில் இருந்த தங்களின் காலைக்கு கூட்டிக் கொண்டு போய் காட்டினான். “ஐயா, எனக்கு இப்ப பசுக்களிலை பால் கறக்க தெரியும்” என்றான். தான் அத்தானுடன் போய் எல்லா வேலையும் பழகுவதைச் சொன்னான்.

கந்தையன் “ஐயா, உங்களுக்கொண்டு தெரியுமே. எங்கடை அத்தானுக்கு கோபமே வராது. எல்லாத்துக்கும் வாய்க்குள்ளை ஒரு சிரிப்பு தான். எங்களை எண்டில்லை ஒருத்தரையும் கோபிக்க மாட்டார்.” என்றான்.

மகளும் மகனும் சந்தோசமாய் இருக்கிறதை கேட்ட முருகேசருக்கு பெரிய நிம்மதியாய் இருந்தது. ஆறுமுகத்தாருடன் எல்லா இடங்களுக்கும் போய் வந்தது, தனது மருமகனை ஊர் சனம் எல்லாரும் மதிப்பாக கதைத்தது, கந்தையனோடை ஊர் சுத்திப் பார்த்தது, ஒவ்வொரு நாளும் விதம் விதமாய் சாப்பிட்டது என்று எப்படி ஒரு கிழமை போய்ச்செண்டு முருகேசருக்கு தெரியவில்லை. சிகையலங்கரிப்பவர் ஏதோ நெடுக பழகியவர் போல முருகேசரை கூப்பிட்டு இருத்தி தலை மயிரை வெட்டி, முகம் வழித்து விட்டது முருகேசருக்கு வியப்பாய் இருந்தது.

இப்போது அவர் முகத்தில் களை வந்திருப்பதை பார்த்து மீனாட்சி நிம்மதியடைந்தாள். அவர் போக வெளிக்கிட கணபதி கைக்குத்தரிசியை கொண்டு வந்து வண்டிலில் ஏற்ற, ஆறுமுகத்தார் மரை வத்தலை ஒரு உமலில் (பனையோலையால் இழைத்த பை) கொண்டு வந்து கொடுக்க, விசாலாட்சி நெய்யும், தேனும் கொண்டு வந்து கொடுத்தாள்.

கந்தையன் எருதுகளை வண்டிலில் பூட்டி விட முருகேசர் எல்லோருக்கும் சொல்லி வெளிக்கிட்டார்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சி ஓடிப் போய் “ஐயா” என்று அழுதபடி தகப்பனை அணைத்துக் கொண்டு அவரின் தோளில் சாய்ந்தாள்.

“அழாதை மீனாட்சி. நான் எங்கை தூரவே போறன், உதிலை பளை தானே. நினைத்தவுடன் வந்து விடலாம்” என்று முதுகில் தட்டிக் கொடுத்தார். முருகேசர் வண்டிலில் ஏறி எல்லோருக்கும் சொல்லி விட்டு எருதுகளை ஓட விட்டார்.

மீனாட்சி சத்தமாய் “ஐயா, ஒழுங்காய் சமைத்துச் சாப்பிடுங்கோ” என்றவள் வண்டில் மறையும் வரை கண்களை கண்ணீர் மறைக்க பார்த்து கொண்டு நின்றாள்.

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் - ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.

https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 23

thumbnail_PHOTO-2021-02-05-12-03-15-1.jp

( வட மாகாணத்தில் உள்ள பழைய பாடசாலைகள் விபரம்.

    Jaffna Central College…. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி….. 1816 ஆம் ஆண்டளவிலும்

    St.John’s College………. பரி. யோவான் கல்லூரி……………. 1823ஆம் ஆண்டளவிலும்

    Hartley College…………. ஹாட்லி கல்லூரி………………….. 1838 ஆம் ஆண்டளவிலும்

    St.Patrick’s College…… சென். பற்றிக்ஸ் கல்லூரி………….. 1850ஆம் ஆண்டளவிலும்

    Jaffna College………….. யாழ்ப்பாணக் கல்லூரி……………… 1871ஆம் ஆண்டளவிலும்

 மிசனரிகளால் (Missionaries) ஆரம்பிக்கப்பட்டது என்று எனது சிற்றறிவிற்கு எட்டியவரை எழுதியுள்ளேன். தவறுகளிருந்தால் திருத்தி உதவுக.

   Jaffna Hindu College  யாழ்ப்பாணம் இந்து கல்லூரி Mr. Wilłiams Nevins Muthukumaru Sithamparapillai திரு. வில்லியம்ஸ் நெவின்ஸ் முத்துக்குமாரு சிதம்பரப்பிள்ளை என்பவரால் 1887 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

மூன்று கிராமங்களுக்கும் பொதுவான பாடசாலை, பிரதான கல்லூரிகளுக்கு பின் கிட்ட தட்ட அரை நூற்றாண்டுகளின் பின்னரே ஆரம்பிக்கப்பட்டது என்பதை கூறுவதற்காகவே இவற்றின் வரலாறை எழுத எண்ணினேன்.)

Romaine_Hall,_Jaffna_Central_College..jp

யாழ்ப்பாண மத்திய கல்லூரி (Jaffna Central College)

மூன்று கிராமத்தின் மக்களும் பாடசாலை கட்டுவதற்காக அதிகாரி வருவார் வருவார் என எதிர்பார்த்து காத்திருந்தார்கள். நம்பிக்கையை மட்டும் கை விடவில்லை. விசாரித்து சொல்லும்படி கணபதி இடையில் பறங்கியரிடம் கேட்டுக் கொண்டான். பறங்கியரும் யாழ்ப்பாணம் போன போது விசாரித்து விட்டு வந்தார்.

அவர் கணபதியையும் தோழர்களையும் பார்த்து “கணபதி, ஆங்கிலேயர்களுக்கு அவசியமாக தேவைப்படுவது அவையின் ஆட்சியை கொண்டு செல்ல கிளாக்குகள் தான். அவர்களை மிசனரிமாரின் பள்ளிக்கூடங்கள் தேவையான அளவு படிப்பித்து அனுப்புகினம். கிராமங்களில் பள்ளிக்கூடம் கட்ட அவையளுக்கும் விருப்பம் தான். அவையள் பள்ளிக்கூடங்களைக் கட்ட அனுமதி கொழும்பிலிருந்து தான் வரோணும். அவை கட்ட வேண்டிய பள்ளிக்கூடங்களின் விபரங்களை அனுப்பியிருக்கினம்.

பெரிய பரந்தன் கிராமத்தின் பேரும் அதில் இருக்குது. அனுமதி வந்தாப்பிறகு சனத்தொகையை பார்த்து, கூடின ஆக்கள் உள்ள ஊருக்கு தான் முதல் கட்டுவினம். உங்களுக்கு வர கொஞ்சம் சுணங்கும்” என்றார்.

காளி அம்மனுக்கு ஒரு பொங்கலும் ஒரு மடையும் வந்து போய் விட்டன. அவர்கள் எதிர்பாராத ஒரு நாளில், குஞ்சுபரந்தனில் இருந்த விதானையார் வீடு வீடாக சென்று,

“பள்ளிக்கூடம் கட்டுறதைப் பற்றி கதைக்க ஒரு ஆங்கிலேய அதிகாரி யாழ்ப்பாணத்திலிருந்து வாறார். நீங்கள் எல்லாரும் வரோணும். அவர்கள் ஆம்பிளையள், பொம்பிளையள், பிள்ளையள் எல்லாரையும் வரட்டாம். குஞ்சுப்பரந்தன் சந்தியில் கூட்டம்” என்றார்.

மூன்று கிராம மக்களும் குஞ்சுப் பரந்தன் சந்தியில் கூடி விட்டார்கள். குறித்த நேரத்தில் அதிகாரி தனது உதவியாளருடன் குதிரை வண்டிலில் வந்தார்.

கூட்டத்தைப் பார்த்து வணக்கத்தை தெரிவித்த அந்த ஆங்கிலேய அதிகாரி,

“படிக்கிற வயது உள்ள பிள்ளைகள் கையை தூக்குங்கோ” என்று கேட்டார்.

பிள்ளைகள் கைகளை உயர்த்த உதவியாளர் கைகளை எண்ணி “முப்பத்தேழு பேர்” என்றார். அதிகாரி “சரி, எங்கை பள்ளிக்கூடம் கட்டுறது” என்று கேட்டார். விதானையார் “இந்த சந்தியிலை கட்டலாம்” என்றார்.

அதற்கு அதிகாரி “இந்த இடத்தில் ஒரு வீடுகளையும் காணேல்லை. பள்ளிக்கூடத்திற்கு பாதுகாப்பில்லை, வேறிடத்தை சொல்லுங்கோ. இடம் இந்த பூனகரி வீதியிலை இருக்கோணும்” என்றார். பெரிய பரந்தன் மக்கள் கணபதியைப் பார்க்க, அவர்களைப் பார்த்து தலையை அசைத்த கணபதி எழும்பி “ஐயா, என்ரை காணி இந்த வீதியிலை தான் இருக்குது. நான் என்ரை காணியிலை பள்ளிக்கூடம் கட்ட தேவையானதை தாறன். பாதுகாப்புக்கு நான் ஒரு கொட்டிலை என்ரை காணியிலை போட்டுக் கொண்டு வந்து இருப்பன். காட்டுக் கரையிலே இருக்கிற பெரிய பரந்தன் பிள்ளையளுக்கு ஒன்றரைக் கட்டை தூரம். குறுக்கு பாதையால் வந்தால் செருக்கன் பிள்ளையளுக்கு இரண்டு கட்டை தூரம். குஞ்சுப்பரந்தனிலை, பொறிக்கடவை அம்மன் கோயிலெடியிலை இருக்கிற பிள்ளையளுக்கும் ஒன்றரைக் கட்டை தூரம். எல்லாருக்கும் ஒரேயளவான தூரம். அதிலை கட்டினால் நல்லது” என்றான்.

மூன்று கிராம மக்களும் சம்மதம் தெரிவித்தார்கள். அதிகாரி ஏற்றுக் கொண்டு “நான் போய், சேவையரை அனுப்புறன். அவர் வந்து கணபதியின் காணியில் பள்ளிக்கூடத்திற்கு தேவையான காணியை அளந்து, வேலி அடைக்க ஒழுங்கு செய்வார்” என்று கூறினார்.

கணபதியைக் கூப்பிட்டு தனது வண்டிலில் ஏற்றி, குஞ்சுப் பரந்தனில் பொறிக்கடவை அம்மன் கோவில் வரைக்கும், செருக்கனில் கிராம ஆரம்ப எல்லை வரைக்கும், கணபதி பள்ளிக்கூடம் கட்ட தருவதாக சொன்ன காணி, பெரிய பரந்தனில் தியாகர் வயல் மட்டும் என எல்லா இடமும் சென்று பார்வையிட்டார்.

வயல்களுக்கு நடுவே நான்கு பக்கமும் அலம்பலால் அடைக்கப்பட்ட சீரான வேலிகளுக்குள் கிடுகுகளாலும், பனை ஓலைகளாலும் வேயப்பட்ட வீடுகளைக் கண்டார்.

வேலிக்கு உள்ளே நான்கு பக்கமும் இப்போது தான் பாளை விடுகின்ற செழிப்பான இளம் தென்னைகளையும் கண்டார். கணபதி சொல்லியது உண்மை தான் என்பதை புரிந்து கொண்டார். திரும்பி வந்ததும் குஞ்சுப் பரந்தன் விதானையார், தான் வாங்கி வைத்திருந்த உடன் இறக்கிய கள்ளை கொடுத்து அவர்களை உபசரித்தார்.

போகும் போது கணபதியைக் கூப்பிட்ட அதிகாரி “கணபதிப்பிள்ளை, நீ ஊர் மக்களைப் பற்றி தான் கூடுதலாக யோசிக்கிறாய். நீ சொன்ன யோசனையை எல்லாரும் மறுப்பின்றி ஏற்றார்கள். உன்ரை காணியைத் தருவதற்கும் நீ யோசிக்கவில்லை, கேட்டதும் தாறன் எண்டிட்டாய். நீ நல்லாய் இருப்பாய்.” என்று அவனை தோளில் அணைத்த படி கூறினார். (அதிகாரியின் எல்லா பேச்சு வார்த்தைகளும் உதவியாக வந்தவரின்ரை மொழி பெயர்ப்பில் நடந்தன)

அதன் பின் பாடசாலை சம்பந்தமான லேலைகள் மிக வேகமாக நடந்தன. சேவையர் வந்து முக்கால் ஏக்கர் காணியை அளந்து வேலிகளை அமைக்க உத்தரவிட்டார்.  வேலியடைக்கப்பட்டது.

கணபதியும் தான் சொல்லியபடியே ஒரு கொட்டிலைப் போட்டு, பனை மரக் கூரை போட்டு கிடுகுகளால் வேய்ந்து, அரைக் குந்து வைத்து, தட்டிகளையும் கட்டி அடைத்துக் கொண்டு, ஒரு நல்ல நாளில் மீனாட்சியுடன் குடி வர திட்டமிட்டான்.

மீனாட்சி, மாமனையும் மாமியையும் விட்டு விட்டு வர விருப்பமில்லாமல் அழத்தொடங்கி விட்டாள். விசாலாட்சி “மீனாட்சி, உன்னை போக விட எனக்கு மட்டும் விருப்பமா? என்ன செய்கிறது, கணபதி பொறுப்பை எடுத்து விட்டான். எங்கை தூரத்திற்கா போகப்போறாய், பக்கத்திலை தானே, நானும் அடிக்கடி வருவன், நீயும் நினைத்தவுடன் வரலாம், இப்ப போட்டு வா.” என்றாள். சின்னமீனாட்சி “நானும் மச்சாளுடன் போவன்” என்று சொல்லி விட்டு மீனாட்சியுடன் போய் விட்டாள்.

வெளிக்கிடும் போது கணபதி பரணில் ஏறி ஒரு சீலைத் துணியால் சுற்றப்பட்டு, மேலே சாக்கு துண்டால் சுற்றப்பட்ட, மயில் இறகு கட்டு எடுத்து தூசி தட்டி மார்போடு அணைத்த படி கொண்டு வந்து மீனாட்சியிடம் “மீனாட்சி, பத்திரமாக வைத்திரு ” என்று சொல்லி கொடுத்தான்.

“மீனாட்சி, அது கணபதிக்கு ஆறு வயதில் பெரிய பரந்தனிலிருந்து தம்பையர் கொண்டு போய் கொடுத்தது.” என்று ஆறுமுகத்தார் ஒரு சோகமான சிரிப்புடன் சொன்னார். அவரால் தனது உயிர் நண்பனின் இழப்பை இன்னும் மறக்க முடியவில்லை.

பேரம்பலம் பகல் முழுக்க அவர்களுடன் தான் நிற்பான். இரவும் போக மாட்டேன் என்று அடம் பிடிப்பான். ஆறுமுகத்தார் வந்து தூக்கி தோளில் வைத்துக் கொண்டு தியாகர் வயலுக்கு போவார்.

கந்தையனை “தம்பி நீ, மாமா, மாமியுடன் நில், அவையளை தியாகர்வயலில் தனிய விட முடியாது” என்று மீனாட்சி சொன்னதால் அவன் தியாகர்வயலில் மாமன் மாமியுடன் தங்கி விட்டான். பேருக்கு தான் பிரிவு, மாறி மாறி கணபதி அல்லது மீனாட்சி பகல் பொழுதை தியாகர் வயதிலேயே கழித்தனர்.

வயல் வேலைக்காக கணபதி கந்தையனுடனும் ஆறுமுகத்தாருடனுமே சென்று வந்தான். 1924 ஆம் ஆண்டு கட்டிட வேலைகள் ஆரம்பமாகியது. ஒரு அறையுடன் கூடிய பெரிய மண்டபம் பாடசாலைக்காக கட்டப்பட்டது. பாடசாலையை விட ஆசிரியர் குடியிருப்பு பெரிதாக இருந்தது. முன் விறாந்தை, பின் விறாந்தையுடன் இரண்டு பெரிய அறைகள். முன் விறாந்தையின் ஒரு பக்கம் சாமான் அறையும், மற்ற பக்கம் கொஞ்சம் கூடுதலாக நீட்டப்பட்டு சிறிய இடை வெளியும் விடப்பட்டு சமையல் அறையும் கட்டப்பட்டன. சமையலறைக்கு முன் சிறிய இடைவெளி சாப்பாட்டு மேசை வைப்பதற்காக விடப்பட்டிருக்கலாம்.

ஆங்கிலேயர் எல்லா வசதிகளுடனும் வாழ்ந்து பழகியவர்கள், அதனால் அந்த ஏற்பாடு. வந்திருந்த ஆசிரியர்கள் ஒருவரும் சாப்பாட்டு மேசையிலிருந்து சாப்பிடுபவர்களல்ல, நிலத்தில் சப்பாணி கட்டிக் கொண்டு இருந்து சாப்பிடுபவர்கள். ஆனால் அம்மி, ஆட்டுக்கல் வைத்து அரைக்கவும் உரல் வைத்து இடிக்கவும் அந்த இடைவெளி பயன்பட்டது உண்மை.

பாடசாலைக் கட்டிடம் செங்கற்களால் கட்டப்பட்டது. பெரிய பரந்தனில் முதலாவது கட்டுக்கிணறு பாடசாலையிலேயே அமைக்கப்பட்டது. பாடசாலைக்கு ஒன்றும் ஆசிரியர் தங்கும் விடுதிக்கு ஒன்றுமாக இரண்டு மலசல கூடங்களும் கட்டப்பட்டிருந்தன.

ஒரு நாள் கணபதி தான் புதிதாக வாங்கி பழக்கும் நாம்பன் மாட்டு சோடியை வீட்டிற்கு முன்னால் தண்ணீர் பாயும் வாய்க்காலில் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் போது வந்த விசாலாட்சி “என்ன கணபதி, மீனாட்சியை காணேல்லை, எங்கை போட்டா” என்று கேட்டா.

அதற்கு கணபதி “அம்மா, மீனாட்சி அலுப்பாயிருக்குதெண்டு உள்ளுக்கை படுத்திருக்கிறா. போய் பாருங்கோ” என்றான். உள்ளுக்குள் போன விசாலாட்சி, மருமகளிடம் மெல்லிய குரலில் ஏதோ கேட்பதும் அதற்கு வழமையாக உரத்து கதைக்கும் மீனாட்சியும் மெல்லிய குரலில் பதிலளிப்பதுமாக கன நேரம் கதைத்தார்கள்.

கணபதிக்கு பதட்டமாக இருந்தது, நாம்பன்களை இடி கட்டையில் கட்டி விட்டு வந்து குட்டி போட்ட பூனை போல வீட்டைக் சுத்தி சுத்தி வந்தான். விசாலாட்சி “என்ன மீனாட்சி படுத்திருக்கிறாய். நீ சுறுசுறுப்பாக ஓடித்திரியும் பிள்ளையாச்சே. என்னம்மா காய்ச்சலா?” என்று நெத்தியில் தொட்டு பார்த்தபடி கேட்டா.

தாயின் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்த மீனாட்சிக்கு மாமியாரின் அன்பு கண்ணீரை வரவழைத்து விட்டது. அவள் “எனக்கு காய்ச்சல் இல்லை மாமி. இப்ப இரண்டு மூன்று நாளாய் காலமைகளிலை ஓங்காளிக்குது. வாய் கைக்குது, மாங்காய் கடித்து தின்னோணும் போலை இருக்குது” என்றாள்.

விசாலாட்சிக்கு புரிந்து விட்டது, “என்ன பிள்ளை, ஒழுங்காய் முழுகிறாயா.” என்று கேட்டாள். மீனாட்சி “இல்லை மாமி, இரண்டு மாதமாய் முழுகவில்லை” என்றாள். முகம் மலர்ந்து சிரித்த விசாலாட்சி, “பிள்ளை நீ, எங்களுக்கு பேரப்பிள்ளை பெற்றுத்  தரப் போறாய், நல்ல சந்தோசம். கணபதியிட்டை மாங்காய் பிடுங்கி தரச்சொல்லுறன். நீ இனிமேல் கொஞ்ச நாளைக்கு சமைக்காதை. நான் சமைத்து கந்தையனிட்டை அனுப்புறன். கணபதி வாற நேரமும் கொண்டு வருவான். நான் இடைக்கிடை இஞ்சை வந்து சமைக்கிறன். நாளைக்கு காலமை புளிக்கஞ்சி காய்ச்சி அனுப்புறன், குடிச்சு பார்” என்றாள்.

விசாலாட்சி வெளியே வர, பின்னால் மீனாட்சியும் வந்தாள். கணபதியைப் பார்த்து சிரித்த மீனாட்சி வெட்கத்துடன் மாமியாரின் ஒரு தோளை கையால் பிடித்துக் கொண்டு, மற்ற தோளில் முகத்தை வைத்து கொண்டாள். திகைப்புடன் பார்த்துக் கொண்டு நின்ற மகனைப் பார்த்து “தம்பி, மீனாட்சி உன்னை தகப்பனாக்கப் போறாள். நீ இனிமேல் அவளைக் கவனமாக பார்க்க வேணும்” என்று விசாலாட்சி சந்தோசமாக சொன்னாள்.

கணபதியின் முகம் மலர்ந்தது, மீனாட்சியை ஓடிப் போய் கட்டிப்பிடிக்க வேணும் போல இருந்தது. தாயாரின் முன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

கேள்விப்பட்டு சந்தோசத்தோடை மருமகளை பார்க்க ஓடி வந்த ஆறுமுகத்தார் “பிள்ளை, இனி நீ கடுமையான வேலையொன்றும் செய்யாதை. பாரம் தூக்காதை, குனிந்து நிமிர்ந்து வேலை செய்யாதை. சின்ன சின்ன வேலைகளை செய்தால் காணும்.” என்றார்.

உடனேயே, மறு நாள் மீசாலைக்குப் போக இருந்தவரை தேடிச் சென்று “தம்பி, நாளைக்கு போற வழியிலை மறித்து முருகேசரிட்டை ஒருக்கால் மீனாட்சி சுகமில்லாமல் இருக்கிற விசயத்தை சொல்லிவிடு” என்றார்.

மூன்றாம் நாள் காலமை, கொடிகாமச் சந்தையிலை வாங்கிய கப்பல் வாழைப்பழ குலையோடு முருகேசர் மகளை பார்க்க வந்தார். மகளோடை நின்று மத்தியானம் சாப்பிட்டு விட்டு “பிள்ளை, உடம்பை கவனமாக பார்த்துக் கொள். உன்ரை மாமாவும் மாமியும் கணபதியும் வடிவாய்ப் பார்ப்பினம்” என்று சொன்னவர் கந்தையனைக் கூப்பிட்டு “கந்தையா அக்காவுக்கு உதவியாய் இரு” என்று கூறி விடை பெற்று சென்றார்.

ஆசிரியராகவும் அதே வேளை தலமை ஆசிரியராகவும் சேவையாற்றுவதற்கு ஒரு ஆசிரியர் யாழ்ப்பாணத்திலிருந்து வந்தார். அவருடன் அவரது மனைவி பிள்ளைகளும், அவரது பராமரிப்பில் இருந்த தந்தை, தாயும் வந்தனர். பல ஆண்டுகள் பரந்தன் கிராம பாடசாலை ஒரு ஆசிரியர் பாடசாலையாகவே இருந்தது.                                                                                      

1925 ஆம் ஆண்டு தை மாதம் வைபவ ரீதியாக பரந்தன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

முதலில் வந்த ஆங்கிலேய அதிகாரியுடன் இன்னும் சில அதிகாரிகள், இரண்டு குதிரை வண்டில்களில் முதல் நாளே யாழ்ப்பாணத்திலிருந்து வந்து, ஆனையிறவில் இருந்த பங்களாவில் தங்கி ஓய்வெடுத்து விட்டு, காலையில் வந்தார்கள். அதிகாரியுடன் அவரது மனைவியும் வந்திருந்தார்.

விசாலாட்சி தலைமையில் ஊர் பெண்கள் சமையல் செய்தார்கள். “எண்ணையையும் மிளகாய்தூளையும் குறைத்து பாவிக்க வேணும்” என்று தான் அறிந்ததை விசாலாட்சி சொல்லி கொடுத்தா. மீனாட்சிக்கு இறைச்சி காய்ச்சும் மணம், மீன் பொரிக்கும் மணம் ஒத்துக் கொள்ளாது அதனால், அவள் மற்ற வேலைகளை செய்தாள்.

ஆங்கிலேய அதிகாரி தனது மனைவியுடன் நாடாவை வெட்டி சம்பிரதாயப்படி பாடசாலையை திறந்து வைத்தார். யாவருக்கும் இளநீர் குடிக்க கொடுக்கப் பட்டது. அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசினார்கள்,

அவற்றை உடன் வந்த மொழி பெயர்ப்பவர் உடனுக்குடன் தமிழில் கூறினார். பாடசாலைக்கு கொண்டு வரப்பட்ட கதிரை, மேசைகளை அடுக்கி வாழையிலையில் சாப்பாடு பரிமாறப்பட்டது. மொட்டைக் கறுப்பன் அரிசி சோறும், கத்திரிக்காய் போட்ட மரை வத்தல் கறியும், மீன் பொரியலும், அவித்த முட்டையும், பால் சொதியும் சமைத்திருந்தார்கள். வாழையிலையில் சாப்பிடுவதை ஆங்கிலேயர்கள் ரசித்தார்கள். உறைக்க உறைக்க சாப்பிட்டவர்கள், கடுமையாய் உறைத்த பொழுது பால் சொதியை விட்டு சாப்பிட்டார்கள்.

அதிகாரி போகும் போது தலைமை ஆசிரியரையும், கணபதியையும் கூப்பிட்டு கைகளை குலுக்கி விடை பெற்றார். அவரது மனைவியும் மற்ற அதிகாரிகளும் சாப்பாட்டை பாராட்டி விடை பெற்றனர்.

ஆசிரியர் கிராமத்து மக்களின் செய்கைகளால் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார். அவருக்கு தேவையான அரிசியை அவர்களே கொண்டு வந்து கொடுத்தார்கள். சனி, ஞாயிறு நாட்களில் காட்டு இறைச்சி கொண்டு வந்து கொடுத்தார்கள்.

மரக்கறிகளையும் காட்டில் பறிக்க கூடிய கீரை வகைகளையும் கொண்டு வந்து கொடுத்தார்கள். காலையிலும் மாலையிலும் பசுப்பால் கொண்டு வந்தார்கள். ஆசிரியர் குடும்பமே கிராமத்து மக்களின் உதவிகளால் சந்தோசமாக இருந்தார்கள்.

ஆசிரியர் சுயமாகவே சேவை மனப்பான்மை உடையவர். கிராம மக்களின் அன்பினால் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் சேர்ந்து கொண்டது. ஐந்து வயதை அடைந்த பிள்ளைகளை ஆரம்ப வகுப்பிலும், ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது வயது பிள்ளைகளையும் வரப்பண்ணி இன்னொரு வகுப்பிலும் சேர்த்து அவர்களுக்கு ஆறு மாதம் வரை காலை, மாலை இரண்டு வேளையும் படிப்பித்தார்.

ஆறு மாதங்களின் பின்னர் ஆறு, ஏழு, எட்டு வயது பிள்ளைகளின் தரங்களை மதிப்பிட்டு, அவர்களை இரண்டாம் மூன்றாம் வகுப்புகளுக்கு ஏற்றி விட்டார். அவரின் அயராத முயற்சியினால் பிள்ளைகளின் கல்வியறிவில் மாற்றங்கள் தெரிந்தது.

கணபதியின் தங்கை மீனாட்சி மூன்றாம் வகுப்பிற்கு ஏற்றி விடப்பட்டாள். ஆரம்ப வகுப்பில் சேர்ந்து படித்த பேரம்பலத்திடம் குழப்படிகள் குறைந்தன.

காலை பாடசாலை ஆரம்பிக்கும் போதும் பாடசாலை விடும் போதும் மணி அடித்தவுடன் தேவாரங்களை பாட வைத்தார். முத்தர் கணபதியிடம் படித்த வயது கூடியவர்கள் எல்லாரும் மூன்றாம் வகுப்பில் விடப்பட்டனர். முத்தர்கணபதி திண்ணைப்பள்ளியில் படித்த விபரத்தை அறிந்த ஆசிரியர் அவனைக் கூப்பிட்டு கதைத்தார்.

அவன் தமிழிலும் சமயத்திலும் தேர்ச்சியடைந்து இருப்பதை தெரிந்து கொண்டார். “கணபதிப்பிள்ளை நல்லது, நீ தமிழிலும் சமயத்திலும் திறமையாக உள்ளாய். இப்போது எண் கணிதம், சரித்திரம், சுகாதாரம், ஆங்கிலம் என்ற பாடங்களும் மூன்றாம் வகுப்பிலிருந்து படிப்பிக்க வேணும். அதை நான் பார்த்து கொள்ளுவேன். நீ சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் காலை வேளையில் மூன்றாம் வகுப்பு பிள்ளைகளுக்கு ஒழுங்காக, குறித்த நேரத்தில் வந்து தமிழையும் சமயத்தையும் சொல்லிக் கொடுப்பாயா? இன்னொரு விசயம், நீ பிள்ளைகளை பேசவோ அடிக்கவோ கூடாது. நாங்கள் அன்பாக கதைத்து தெரியாதவற்றை ஆறுதலாக விளங்கப்படுத்தினால் அவர்களும் விரும்பி படிப்பார்கள்.” என்று கேட்டார்.

முத்தர்கணபதியும் சம்மதித்தான். அவனும் ஒருவரையும் கோபிப்பதில்லை, கடிந்து பேசுவதுமில்லை. ஆசிரியர் தனது பிள்ளைகளையும் பரந்தன் அ.த.க. பாடசாலையிலேயே சேர்த்து விட்டார்.

மூன்று கிராமத்து மக்களும் தமக்கு இருந்த ஒரே ஒரு மனக்குறையும் நீங்கியதை எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். கணபதி பள்ளிக்கூடம் அமைக்க பட்டபாட்டை நினைத்து அவனை மனதுக்குள் பாராட்டிக் கொண்டார்கள்.

பாடசாலை ஒரு புறம் வளர்ச்சியடைய கணபதியின் வாழ்க்கையிலும் பல மறக்க முடியாத சம்பவங்கள் இடம் பெற்றன. மீசாலைக்கு போய் திரும்பி வந்த உறவினர் ஒருவர் கணபதியையும் மீனாட்சியையும் சந்தித்து “கணபதி, உன்ரை மாமா முருகேசர் நாளைக்கு வந்து உங்களோடை ஏதோ முக்கிய விசயம் கதைக்க வேணுமாம். சொல்லி விட சொன்னார்” என்றார்.

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் - ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.

https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 24

80da4949-3fa8-4ea5-8bc5-acf9cad31630.jpg

கல்வியைப் பற்றி திருவள்ளுவர்:

“கற்க கசடறக் கற்றவை கற்ற பின்

நிற்க அதற்குத் தக” என்றார்.

சுப்பிரமணிய பாரதியார்:

“அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டலிலும்

ஆலயம் பதினாயிரம் கட்டலிலும்

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவூட்டல் சிறந்தது” என்றார்.

“கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற பழமொழியும் தமிழில் உண்டு.

இவ்வாறு உள்ள போது மக்கள் தமது பிள்ளைகள் கற்க வேண்டும் என்று தானே நினைப்பார்கள்.

தமது பிள்ளைகள் எழுத, படிக்க தெரியாதவர்களாக இருந்து விடுவார்களோ என்று பயந்து இருந்த மூன்று கிராம மக்களுக்கும் இப்போது நிம்மதி. தமது குடும்பங்களை ஊரில் விட்டு விட்டு தனியே இருந்த குஞ்சுப்பரந்தன் ஆண்கள் சிலரும் படிப்படியாக தங்கள் குடும்பங்களை கொண்டு வந்தார்கள்.

மீனாட்சியுடன் மகிழ்ச்சியாக இருந்த கணபதி வாழ்வில் மிகவும் நிம்மதி தரக்கூடிய ஒரு நிகழ்வும் கவலை தரும் ஒரு நிகழ்வும் பெரும் மகிழ்ச்சி தரும் ஒரு நிகழ்வும் இடம்பெற்றன. இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை.

கொடிகாமச் சந்தையில் ஒரு அம்மா வியாபாரம் செய்வது வழக்கம். அந்த அம்மாவிற்கு நாப்பது வயது இருக்கும். அந்த அம்மாவின் புருசன் யாழ்ப்பாணச் சந்தையில் கடை வைத்து வியாபாரம் செய்ததால், மிகவும் சந்தோசமாக வாழ்ந்தா, ஆயினும் குழந்தைகள் இல்லாத குறை மட்டும் இருந்தது.

சில வருசங்களுக்கு முன்னர் கணவன் இறந்து விட, அவருக்கு உதவியாக இருந்த சகோதரியின் கணவர் கடையை தொடர்ந்து நடத்தினார். கிராமங்களில் இருக்கும் நேர்மை, ஒழுக்கம் என்பன ஐரோப்பியர்களுக்கு மத்தியில் வாழ்ந்த நகர மக்களிடம் குறைந்து கொண்டே வந்தது.

தமது சொந்தக்காரன் தானே என்று அந்த அம்மாவும் அசண்டையாக இருந்து விட்டா. கேட்கும் இடங்களில் எல்லாம் கை நாட்டு போட்டு விட்டா. கடையின் உரிமையை சகோதரியின் புருசன் எடுத்து விட்டார். அந்த அம்மாவிற்காக கதைக்க போனவர்களிடம், அவான்ரை புருசன் கடையின் பேரில் கடன் வாங்கி இருந்ததாகவும், அந்த கடனை தான் கட்டி கடையை மீட்டதாகவும், அந்த காசை அம்மா தந்தால் கடையை திருப்பி கொடுத்து விடுவதாகவும் கூறிவிட்டான்.  காசுக்கு அம்மா எங்கே போவா.                                                        

பட்டினத்தார் “இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாயும் வேண்டாள், செல்லாதவன் வாயில் சொல்” என்று பாடியதைப் போல் ஆனது அந்த அம்மாவின் நிலை.

சகோதரியின் புருசனுடன் பிரச்சினை என்றதும் மற்ற உறவுகளும் அந்த பெண்ணை கை விட்டு விட்டன. கொடிகாமத்திலிருந்த ஒரு ஒன்று விட்ட தம்பி அம்மாவை கூட்டி வந்து தன்னுடன் வைத்திருந்தான்.

அவனுக்கும் பிள்ளையள் அதிகம், வறுமை, அதனால் அந்த அம்மா தம்பியாரைக் கூப்பிட்டு “தம்பி, உனக்கும் பிள்ளை குட்டியள் இருக்கு. நான் உனக்கு பாரமாய் இருக்கிறது சரியில்லை, உன்ரை காணியில் ஒரு மூலையிலை எனக்கு ஒரு கொட்டில் போட்டு தா. எனக்கு சந்தை பொம்பிளைகளோடை கதைத்து ஒரு மூலையிலை இடம் பிடித்து தா. நான் தேங்காய், மாங்காய் வித்து என்ரை பாட்டை பார்த்துக் கொண்டு இருப்பன். உன்ரை காணியில் இருந்தால் தனிய எண்ட பயமுமில்லை” என்று சொல்லி தன்ரை சீலைத் தலைப்பில் முடிந்து வைத்திருந்த காசை, கொட்டில் போடுவதற்காக கொடுத்தா. இப்ப அந்த கொட்டிலில் இருந்து சந்தைக்கு போய் வாறா.

அவான்ரை கதை தெரிந்த படியால் முருகேசர் அவாக்கு தான் தன்ரை தேங்காய்களை கொடுப்பார். அவ கொட்டில் மேய கிடுகுகளை கேட்ட போது, கொண்டு போய் இறக்கி விட்டார்.

பிறகு கண்டபோது “என்னணை கொட்டில் மேய்ஞ்சு போட்டியா?” என்று கேட்டார்.

அதுக்கு அந்த அம்மா “எங்கை மேய்ஞ்சது முருகேசு, தம்பி தான் மேய்ஞ்சு தரோணும் அவனுக்கும் ஒரே வேலை.” என்றா. முருகேசர் பார்க்கும் போதே கூரை எல்லாம் கழண்டு பெய்யுற மழை முழுக்க கொட்டிலுக்குள்ளை தான் பெய்யும் போலை இருந்தது. அவர் அந்த அம்மாவை கன நாளாய் பார்த்து வாறார், அவ சிரித்தாலும் அழுற மாதிரி தான் இருக்கும். இரக்கப்பட்ட முருகேசர் “நான் மேய்ஞ்சு தரட்டா?” என்று கேட்டார்.

“உன்னாணை ஒருக்கால் மேய்ஞ்சு தா. நான் உன்ரை கூலியைத் தந்திடுவன்” என்று சொன்னா.  முருகேசர் அடுத்த நாள் காலமை போய் மேய்ஞ்சு கொடுத்தார். அந்த அம்மா மேய்ஞ்ச காசை கொண்டந்து நீட்டினா. முருகேசருக்கு காசு வேண்ட விருப்பம் இல்லை.

“எனக்கு காசு வேண்டாம், ஒரு மனுசருக்கு உதவி செய்யிறேல்லையே, நீயே வைத்திரு” என்று சொல்லி விட்டார்.

அந்த அம்மாவின் தம்பி அவ தன்னட்டை கதைக்கிற மாதிரி, முருகேசரிட்டையும் வாரப்பாடாய் கதைக்கிறதை அவதானித்து, முருகேசரைப் பற்றி விசாரித்தான். அவருக்கு ஒரு மகளும் மகனும் தான் பிள்ளைகளெண்டும், மகன் பிறந்த வீட்டுக்கை மனிசி செத்துப்போச்சு எண்டும், அவர் வேறை கல்யாணம் செய்யாமல் பிள்ளைகளை வளர்த்தவர் எண்டும் சொன்னார்கள்.  இப்ப மகளை வன்னியில் கட்டி கொடுத்திட்டு தனிய இருக்கிறார் எண்டும் கேள்விப்பட்டான்.

தமக்கையிட்டை கதைச்சுப் பார்த்தான், அவ “எனக்கு இனி என்னடா கல்யாணம். அதோண்டும் வேண்டாம், என்னை இப்படியே இருக்க விடு” எண்டு சொன்னவ “அந்த மனுசனை பார்த்தால் நல்ல மனுசன் போலை தான் கிடக்கு” என்றா. தம்பியாருக்கு தமக்கைக்கும் சம்மதம் தான் எண்டு விளங்கியது

முக்கியமான விடயத்தை கதைக்க வருவதாக முன் கூட்டியே அறிவித்த மாமன் முருகேசர் ஒரு நாள் வந்தார். முகம் தெளிவாக காணப்பட்டாலும் அவரிடம் ஒரு பதட்டமும் இருந்தது.

வந்து மகளை சுகம் விசாரித்து, வந்த களைப்பிற்கு மகள் கொடுத்த மோரை குடித்தவர் கணபதியிடம் தயக்கத்துடன் “தம்பி, நான் தேங்காய் கொடுக்கிற அம்மா, நாப்பது வயது இருக்கும். நான் வாடிக்கையாய் அந்த அம்மாட்டை தான் தேங்காய் கொடுக்கிறது. அந்த அம்மா மிகவும் நல்லவ, அவான்ரை தம்பியார் என்னட்டை வந்து தமக்கையை கட்டினால் என்ன? என்று கேட்டான்.” என்றவர், “நான் பிள்ளையளிட்டை கேட்டுப் போட்டு தான் மறுமொழி சொல்லுவன் எண்டிட்டன்.” என்று அந்த அம்மாவின் கதையையும் கூறினார்.

பின்பு “நீங்கள் தான் எனக்கு எல்லாம், நீங்கள் சொல்லுறபடி செய்கிறன்.” என்று ஒருவாறு சொல்லி முடித்தார். அவரது பதட்டத்தைக் கண்டு என்னவோ ஏதோ என்று நினைத்திருந்த கணபதி நிம்மதியடைந்து “மாமா, இதுக்கு ஏன் இவ்வளவு பதட்டப்படுறியள், கேட்க எனக்கு நிம்மதியாக இருக்கு. மீனாட்சிக்கு நெடுக உங்களை தனிய விட்டிட்டு வந்த கவலை, இதை கேட்டு அவளுக்கும் நிம்மதியாக இருக்கும்” என்றான்.

கணபதி இப்படி தான் சொல்லுவான் என்பது மீனாட்சிக்கு, அவனுடன் வாழ்ந்த நாட்களில் கண்ட அவனது குணத்தினால் நன்கு தெரியும். முருகேசரை ஓடிப் போய் கட்டிப்பிடித்து “ஐயா ஐயா, எனக்கு நல்ல சந்தோசம்.” என்றாள்.

தகப்பனை தனியாக தவிக்க விட்டு விட்டு வந்தேனே என்று கவலைப்பட்டு கொண்டிருந்தவளுக்கு நெஞ்சிலிருந்த பாரம் விலகியது போல இருந்தது. முருகேசர் வந்திருப்பதை அறிந்த ஆறுமுகத்தார் விசாலாட்சியுடனும் கந்தையனுடனும் வந்தார். கந்தையன் ஓடிப்போய் தகப்பனை “ஐயா” என்று சொல்லி கட்டிப் பிடித்தான்.

விசயத்தை கேள்விப்பட்ட ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் சந்தோசப்பட்டார்கள். ஆறுமுகத்தார் “முருகேசர், நீங்கள் அந்த அம்மாவை செய்யிறது தான் சரி. வயது போன காலத்தில் தலையிடி, காய்ச்சல் வந்தால் தைலம் தடவி விடவும், ஏலாமல் படுக்கையில் கிடந்தால் கஞ்சி காய்ச்சி தரவும், ஆறுதலாய் கதைக்கிறதுக்கும் தான் ஒரு துணை தேவை, நீங்களும் எவ்வளவு நாள் தனிய இருப்பியள். மீனாட்சிக்கு உங்களை தனிய விட்டிட்டு வந்த கவலை இப்பவும் மாறேல்லை.” என்று அவரது கைகளைப் பிடித்துக் கொண்டே கூறினார்.

‘எங்கே மகளை கட்டி கொடுத்தாப் பிறகு, வயது போன காலத்திலை முருகேசருக்கு இப்படி ஒரு ஆசை வந்திருக்கக்கூடாது எண்டு நினைப்பினமோ’ என்று பயந்திருந்த முருகேசருக்கு பயம் விலகி பெரிய நிம்மதி வந்தது.

நாட்சோறு கொடுக்கும் நாளை சொல்லி விடச் சொல்லி, தானும் கணபதியும் முதல் நாளே வந்திருந்து நல்லபடியாக நடத்தி கொடுப்பதாகவும், மீனாட்சி கர்ப்பிணியாக இருப்பதால் வண்டிலில் அவ்வளவு தூரம் பிரயாணம் செய்யக்கூடாது என்றும் சொல்லிய ஆறுமுகத்தார், கந்தையனையும் அவருடன் கூட அனுப்பி வைத்தார்.

மீனாட்சி “ஐயா, நான் வராட்டி என்ன, இவரும் மாமாவும் வருவினம். கந்தையனும் உங்களோடை கூட நிப்பான். எல்லாம் முடிய சின்னம்மாவை கூட்டிக் கொண்டு வந்து எனக்கு காட்டுங்கோ ஐயா” என்று அன்பாக சொல்லி வழியனுப்பி வைத்தாள்.

குறித்த நாளுக்கு முதல் நாளே மீனாட்சியுடன் விசாலாட்சியையும் பேரம்பலத்தையும் விட்டு விட்டு, கணபதியுடனும் சின்ன மீனாட்சியுடனும் போய் நின்று ஆறுமுகத்தார், முருகேசரின் நாட்சோறு கொடுத்தலை நல்லபடியாக நடத்தி வைத்தார்.

முத்தரும் தனது இளமைக்கால சினேகிதனுடன், முருகேசரின் நாட்சோறு கொடுத்தலுக்கு போய் வந்தார். கணபதி வரும் போது கந்தையனையும் கூட்டி வந்தான். பின்னர் ஒரு நல்ல நாளில் முருகேசர் தன்ரை புது மனைவியுடன் வந்தார். சின்னம்மா, இளமையாகவும் நல்ல நிறமாகவும் வடிவான மனிசியாகவும் இருந்தா. பார்த்த உடனேயே மீனாட்சிக்கு பிடித்து விட்டது.

மீனாட்சி ஓடிச்சென்று “சின்னம்மா வாருங்கோ” என்று சொல்லி சிறிய தாயாரை அணைத்து கூட்டி வந்தாள். சின்னம்மா, மீனாட்சியுடனும் விசாலாட்சியுடனும் நன்கு கதைத்து பழகினா. மீனாட்சி “சின்னம்மா, எனக்கு நல்ல சந்தோசம், நானும் ஐயாவை தனிய விட்டிட்டு வந்திட்டன், அவர் நேரகாலத்துக்கு சாப்பிடுறேல்லை. இனி நீங்கள் பார்த்து கொள்ளுவீங்கள்.” என்று சிறிய தாயை அணைத்தபடி சொன்னாள்.

இரண்டு நாட்கள் பெரிய பரந்தனிலை முருகேசருடன் நின்ற சின்னம்மா, “மீனாட்சி உனக்கு நாள் நெருங்க சொல்லியனுப்பு. நான் வந்து பிள்ளைப்பேறு முடிஞ்சு நீ எழும்பி ஊசாடும் வரைக்கும் உன்னோடை நிற்பன். விசாலாட்சி அம்மா நல்லாய் பார்ப்பா எண்டு எனக்கு தெரியும். அவரோடை நானும் வந்து நின்று கூடமாட உதவி செய்வன்” என்று கூறி விடை பெற்றாள்.

கணபதியின் மகிழ்ச்சியை குறைக்கிற ஒரு செய்தியை பறங்கியர் கடைசியாக வந்த போது கூறினார். “கணபதி, எனக்கு அடுத்த மாதம் தொடக்கம் மட்டக்கிளப்புக்கு இடமாற்றம் வந்திட்டுது. அடுத்த கிழமையோடை இஞ்சை எல்லா கணக்குகளையும் வாற புதாளிட்டை ஒப்படைச்சு போட்டு நாங்கள் போக வேணும். போறதுக்கிடையிலை வாற ஞாயிற்றுக்கிழமை வருவன், கவலைப்படாதை. உடன் பிறந்தது போலை பழகீட்டம், எனக்கும் கவலை தான். சென்சோராவிற்கும் கவலை தான். என்ன செய்கிறது, எல்லாருக்கும் நடக்கிறது தான் எங்களுக்கும் நடக்குது.” என்று பறங்கியர் கூற, கணபதிக்கு கண்கள் கலங்கி விட்டன.

பறங்கியர் அவனுடன் அண்ணன் தம்பி போல பிழங்கியவர். பெரிய பரந்தன், மீசாலை என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்ற, கணபதிக்கு பறங்கியர் ‘கணபதி, இவற்றை விட வேறு உலகமும் இருக்குது, அங்கே வேறு பல நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.’ எண்டதை சொல்லி சொல்லி அவனது அறிவை விசாலமாக்கியவர். அவர் போறது மிகவும் கவலை தரும் விசயம் தான். ஆனால் ஏழு வயதில் பெத்த தகப்பனை பறிகொடுத்த துக்கத்தை தாங்கிய கணபதி, இந்த துக்கத்தையும் தாங்கி கொள்வான்.

தான் சொன்னது போல பறங்கியர் அடுத்த ஞாயிற்றுக்கிழமை சென்சோராவுடன் குதிரை வண்டிலில் வந்தார்.

கணபதியும் தோழர்களும் காடு முழுவதும் அலைந்து திரிந்து ஒரு கலை மானை வேட்டையாடியிருந்தனர். கணபதி துவக்குக்கு எண்ணெய் போட்டு நன்கு துடைத்து வைத்திருந்தான். மிகுதி தோட்டாக்களையும் ரோர்ச் லைற்றையும் எடுத்து வைத்திருந்தான். பறங்கியருக்கு பனம் கள்ளும், சென்சோராவிற்கு சுண்ட காய்ச்சிய பாலும் வைத்திருந்தான்.

பறங்கியர் கள்ளை அருந்த, சென்சோரா மீனாட்சி கொடுத்த பாலை குடித்தார். வேட்டையாடிய மானை சாக்கால் சுற்றி குதிரை வண்டிலில் ஏற்றினார்கள். விசாலாட்சி ஒரு புதிய மூடல் பெட்டியில் மரை வத்தலை வைத்து கொண்டு வந்தார். அதைப் பார்க்க கணபதிக்கு தான் முதல் முதல் தகப்பனோடை பறங்கியரின் அலுவலகத்திற்கு போன நினைவுகள் வந்தது. நேத்து மாதிரியிருக்கு, ஆனால் ஏழு வருடங்கள் ஓடி விட்டன.

பறங்கியர் போக வெளிக்கிட கணபதி துவக்கு, தோட்டாக்கள், ரோர்ச் லைற் என்பவற்றை கொண்டு வந்து வண்டிலில் ஏற்ற ஆயத்தமானான். விரைந்து வந்து கணபதியின் தோளில் பிடித்த பறங்கியர் “கணபதி, அப்பிடி எண்டால் எங்களை இண்டையோடை மறக்கப் போறியோ. துவக்கையும் தோட்டாவையும் உள்ளுக்கை வை. எங்கடை ஞாபகமாக வைத்திரு, நான் ஒரு புது தோட்டாப் பெட்டியும் ஐந்து புது பற்றிகளும் உனக்கு தர கொண்டந்தனான். நாங்கள் இப்ப போனாலென்ன, இரணைமடுவுக்கு வரவேண்டி வந்தால் உங்களிட்டை கட்டாயம் வருவம். முக்கியமாய் சின்ன கணபதியை வந்து பார்க்க வேணும்” என்று மீனாட்சியை பார்த்து சிரித்த படி சொன்னார்.

ஆறுமுகத்தாரை பார்த்து “போட்டு வாறன் ஐயா” என்றவர் விசாலாட்சியைப் பார்த்து “போட்டு வாறன் அம்மா” என்றார். கணபதிக்கும் தோழர்களுக்கும் கைகளை குலுக்கி விடை பெற்றார்.

சென்சோரா எல்லாருக்கும் புன் சிரிப்புடன் தலையை ஆட்டிவிட்டு, குதிரை வண்டிலில் ஏறி கையை ஆட்டிய படி சென்றார். கணபதி தனது தோழர்களுடன் கண்கள் கலங்க குதிரை வண்டில் போய் மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றான்.

மீனாட்சிக்கு பிள்ளை பெறும் காலம் நெருங்கியது. சொன்னது மாதிரி சின்னம்மா வந்து விட்டா. இப்ப மீனாட்சிக்கு வாய்க்கு ருசியான சாப்பாடு செய்யும் பொறுப்பு சின்னம்மாவிற்கு வந்து விட்டது. ஆறுமுகத்தாரும், விசாலாட்சியும் கந்தையனும் ஒவ்வொரு நாளும் காலமையும் பின்னேரமும் வருவார்கள். சின்ன மீனாட்சி தொடர்ந்து கணபதி வீட்டிலேயே நின்றாள்.

பேரம்பலம் பள்ளிக்கூடத்திற்கு காலமை வருபவன், இரவு விருப்பமில்லாமல் தியாகர் வயலுக்கு போவான். (‘சின்னம்மா’ மீனாட்சிக்கும் கந்தையனுக்கும் தான் சின்னம்மா. ஆனால் இப்ப பெரிய பரந்தனில் உள்ள எல்லோருக்கும் அவ சின்னம்மா தான். இனிமேல் பிறக்கப் போற கணபதியின் பிள்ளையளும் பேரப்பிள்ளையளும் ‘சின்னம்மா’ எண்டு தான் கூப்பிட போயினம், அந்த அளவுக்கு எல்லாரையும் அன்பினால் கவர்ந்த மனிசி அவ)

மீசாலையிலிருந்து மருத்துவச்சி கிழவியும் வந்திட்டா. மீனாட்சிக்கு ஒரு நாள் இரவு சாமத்தில் வயித்து குத்து தொடங்கி விட்டது. மீனாட்சி வேதனை தாங்க முடியாமல் துடித்தாள். கணபதி அவளை விட அதிகம் துன்பப்பட்டான்.

மருத்துவச்சி அம்மாவிடம் அடிக்கடி “பிள்ளை பிறக்க கன நேரம் ஆகுமா?” என்று கேட்ட படி இருந்தான். அதிகாலை மீனாட்சி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். மருத்துவச்சி அம்மா “நல்ல நீளம் பெருப்பமான பொடியன். அது தான் தாயை இந்த பாடு படுத்தினவன்” என்று சந்தோசமாக சொல்லி மகனை கணபதியிடம் கொடுத்தார்.

தங்கையையும் தம்பியையும் முதல் முதல் வாங்கிய மாதிரி, தான் பெற்ற மகனையும் வாங்கி வாஞ்சையுடன் அணைத்த கணபதி, தன்ரை தகப்பனிட்டை “ஐயா, இந்தாங்கோ உங்கடை பேரனை பிடியுங்கோ” என்று சொல்லி ஆறுமுகத்தார் கையில் மகனைக் கொடுத்தான்.

கணபதி தன்ரை மகனுக்கு ‘மகாலிங்கம்’ என்று பெயர் வைத்தான்.

1925 ஆம் ஆண்டு வைகாசி மாதம் ஐந்தாம் திகதி மகாலிங்கம் பெரிய பரந்தனில் பிறந்தான்.

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் - ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன

https://vanakkamlondon.com/stories/2021/02/101804/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 25

iiiiiiib.jpg

கிராம வாழ்க்கை சிறந்ததா? நகர வாழ்க்கை சிறந்ததா? என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் “நகர வாழ்க்கையே சிறந்தது” என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை பார்த்தவர்கள், எருமைகளையும் மாடுகளையும் ஆடுகளையும் மழையிலும் வெய்யிலிலும் மேய்ப்பவர்களைக் கண்டவர்கள், இன்டர்நெட் ((Internet) தொடர்பு கிடைக்காது என்பதை அறிந்தவர்கள், நீச்சல் குளத்திலும் (swimming pool), குளியலறையிலும் (bath room) குளித்தவர்கள், கை தொலை பேசி (mobile phone), கொம்பியூட்டர் (computer) பாவித்தவர்கள் கிராம வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள். இயற்கையான குளங்களிலும் ஆறுகளிலும் நீச்சலடித்து குளித்தவர்களுக்கும், உடன் கறந்த பாலை குடித்தவர்களுக்கும், உடன் பிடித்த மீன்களை சமைத்து உண்டவர்களுக்கும், உடன் வேட்டையாடிய இறைச்சியை சுவைத்தவர்களுக்கும், இயற்கையான காற்றை சுவாசித்தவர்களுக்கும் தான் கிராமத்தின் அருமை புரியும்.

நாமிருவர் நமக்கிருவர்’ என்று பிறக்கும் பிள்ளைகளை கட்டுப்படுத்தியவர்கள் நகரத்தில் தான் அதிகமாக இருந்தார்கள். ‘இறைவன் தருவதை ஏற்றுக் கொள்வோம்’ என்று பிறக்கும் குழந்தைகள் எல்லோரையும் கிராமத்தவர்கள் அன்புடன் வளர்த்து ஆளாக்கினார்கள். கிராமத்தில் இளம் வயதிலேயே திருமணம் செய்து விடுவதனால் ‘தாயும் மகளும், மாமியும் மருமகளும்’ ஒரே நேரத்தில் குழந்தைகளை பெற்றுக்கொள்ளுதல் இயல்பாக நடந்தது. படிப்பு, வேலை என்று காலத்தைக் கடத்தி, கரு அதிகமாக உருவாகும் காலத்தைக் கடந்து திருமணம் புரிபவர்கள் நகரத்தில் அதிகம். முதல் பிள்ளை வளர்ந்த பின்னர் அடுத்த பிள்ளையை பெறுவது நாகரீகம் இல்லையென எண்ணுபவர்களும் நகரத்தில் அதிகம்.

.......................................

கணபதியினதும் மீனாட்சியினதும் வாழ்க்கை சீராக போய் கொண்டிருந்தது. மகாலிங்கனும்   வளர்ந்து கொண்டு வந்தான். அவனுக்கு தாய் தகப்பன், பேரன் பேர்த்தி, சின்னமீனாட்சி, பேரம்பலம், இடைக்கிடை வந்து போகும் சின்னம்மா எல்லோரும் கொடுத்த செல்லத்தினால் கொஞ்சம் குழப்படிகாரனாகவே வளர்ந்தான். மூன்றாவது வயதிலேயே ஐந்து வயது பிள்ளை அளவு தோற்றம், கொஞ்சம் குண்டாகவும் இருந்தான்.

வழமை போல ஆறுமுகத்தார் “அவன் வளர்ந்தபின் திருந்தி விடுவான்” என்று கூறி விடுவார்.  கணபதியின் தாயார் விசாலாட்சி மீண்டும் கர்ப்பிணி ஆனார். அவரது நாற்பத்தைந்தாவது வயதில், 1929 ஆம் ஆண்டு தனது கடைசி மகனான நல்லையாவை கடும் சிரமத்தின் பின்னர் பெற்றெடுத்தார். நல்லையா தாயைப்போல நல்ல நிறமாக இருந்தான். மகாலிங்கன் தன்னிலும் நான்கு வயது குறைந்த சிறிய தகப்பனிடம் பழக பழக கொஞ்சம் சண்டித்தனம் குறைந்தது.

1910 ஆம் ஆண்டு தியாகர்வயலுக்கு வந்த விசாலாட்சி, அடுத்த ஆண்டு தொடக்கம் மீசாலையிலிருந்து பொறிக்கடவை அம்மனின் பங்குனி வேள்விக்கு வருபவர்களுக்கு மதிய உணவு கொடுப்பது வழக்கம்.  மீனாட்சி, கணபதியை திருமணம் முடித்து வந்த பின்னரும் அந்த நிகழ்ச்சி தியாகர்வயலிலேயே தொடர்ந்தது.

மீனாட்சி மாமியாருடன் சமையல் வேலைகளில் உற்சாகமாக பங்கு பற்றினாள். மகாலிங்கன் பிறந்த பிறகு அது கணபதி வீட்டுக்கு மாறியது. உறவினர்களுக்கு மதிய உணவாக தொடங்கிய அது ஒவ்வொரு பங்குனி வேள்விக்கும், பூனகரி வீதியால் கோவிலுக்கு போறவர்களுக்கும் வருபவர்களுக்கும் கொடுக்கப்படும் அன்னதான நிகழ்வாக மாறியது.

பங்குனி மாதம் வெய்யில் காலம் என்பதால் கணபதி, ஒரு தண்ணீர் பந்தல் போட்டு பக்தர்களுக்கு மோரும் தண்ணீரும் வழங்குவான்.

அன்னதானம் மீனாட்சி பொறுப்பெடுத்து செய்ய, விசாலாட்சியும் சின்னம்மாவும் உதவிக்கு வருபவர்களாக மாற்றமடைந்தது. (இன்று வரை அந்த அன்னதான நிகழ்வு, இடையில் வந்த இடப்பெயர்வுகள் நீங்கலாக, ஏனைய காலங்களில் மிகவும் சிறப்பாக, நான்காவது தலைமுறையினரால் நடத்தப்படுகிறது.)

மகாலிங்கனுக்கு ஐந்து வயதாவற்கு இன்னும் ஐந்து மாதங்களிருக்கும் போதே 1930 ஆம் ஆண்டு தை மாதம் பரந்தன் அ.த.க.பாடசாலையில் ஆசிரியர் அவனை ஆரம்ப பிரிவில் சேர்த்துக் கொண்டார். மகாலிங்கன் பாடசாலையில் சேர்ந்த அதே நாளில் ஆறுமுகத்தார், ஐந்தாம் வகுப்பு சித்தியடைந்த பேரம்பலத்தை மீசாலைக்கு கூட்டி சென்று அங்கு ஒரு பாடசாலையில் ஆறாம் வகுப்பில் சேர்த்து, அவனை ஒரு உறவினர் வீட்டில் தங்க ஒழுங்கு செய்து விட்டு வந்தார்.

ஆறுமுகத்தாருக்கு தனது சொந்தக்காரன் மகனை பொறுப்புடன் பார்த்துக் கொள்ள சம்மதித்தது நிம்மதியாக இருந்தது. ஒவ்வொரு முறையும் மகனை பார்க்க போகும் போது அரிசி, இறைச்சி வத்தல், தேன், நெய் என்பவற்றை தாராளமாக கொண்டு போய் கொடுப்பார். மகாலிங்கனின் செல்லமாக வளர்ந்த குழந்தைகளுக்குரிய செயல்கள் தொடர்ந்தன.

யாராவது ஒரு பெரிய மாணவன் சிறிய மாணவனை அடிப்பதைக் கண்டால், மகாலிங்கன் அந்த பெரிய மாணவனுக்கு அடி போட்டு விடுவான். ஆசிரியர் அவனை கூப்பிட்டு “மகாலிங்கம், நீ அவனுக்கு அடித்தாயா?” என்று விசாரிக்கும் போது “ஓம் ஐயா அடிச்சனான்” என்று பயம் இல்லாமல் பதிலளிப்பான்.

ஆசிரியர் “ஏன் அடித்தாய்?” என்று கேட்க “அவன் சின்னப் பொடியனுக்கு அடிச்சவன். அது தான் நான் அவனுக்கு அடிச்சனான்” என்று சொல்லுவான். ஆசிரியர் “மகாலிங்கம் இனிமேல் யாராவது அடிபட்டால் என்னட்டை வந்து சொல்லு. நீ அடிச்சது பிழை, கையை நீட்டு” என்று சொல்லி கையை நீட்டச் செய்து அடிமட்டத்தால் உள்ளங்கையில் இரண்டு அடி அடித்தார். மகாலிங்கனுக்கு அந்த அடி நோகாது, கைகள் இரண்டையும் தடவி விட்டு, ஒன்றும் நடக்காத மாதிரி போய் இருந்து விடுவான்.

கூடப் படிப்பவனுக்கு ‘சிலேற்’ பென்சில் இல்லையென்றால் தனது சிலேற் பென்சிலின் பாதியை உடைத்து கொடுத்து விட்டு வந்து, தனக்கு புதிய பென்சில் வேண்டும் என்று அடம் பிடிப்பான். வகுப்பு தோழனின் சிலேற் கீழே விழுந்து உடைந்து விட்டால், தனது சிலேற்றின் விளிம்பில் இருக்கும் மரச்சட்டத்தை கழற்றி விட்டு சிலேற்றை சரி பாதியாக உடைத்து ஒரு பாதியை அவனுக்கு கொடுத்து விட்டு, மற்ற பாதியிலை தான் எழுதுவான்.

மீனாட்சி ” தம்பி, என்ன சிலேற்றை கீழே போட்டு உடைச்சு போட்டியா?” என்று கேட்டால், “இல்லை அம்மா, வகுப்பிலை எனக்கு பக்கத்திலை இருக்கிற பொடியன்ரை சிலேற் உடைஞ்சு போச்சுது. அது தான் நான் பாதியை உடைச்சு அவனுக்கு குடுத்தனான்” என்பான். “அதுக்காக உன்ரை சிலேற்றை உடைப்பாயா?” என்று மீனாட்சி பேச, கணபதி “மீனாட்சி, பிள்ளை உண்மை சொன்னவன். அவனைப் பேசாதை. அவன் வளர்ந்த பிறகு இப்படி செய்ய மாட்டான்” என்று மீனாட்சிக்கு சொல்லி விடுவான்.

மாதம் ஒரு முறை பாடசாலை உபகரணங்களான ‘சிலேற்’, ‘சிலேற் பென்சில்’, ‘அப்பியாசப் புத்தகம்’, கடதாசியில் எழுதும் ‘பென்சில்’, பென்சில் சீவி, அழி இறப்பர் முதலியவற்றை ஒரு பெட்டியில் வைத்து, தலையில் சுமந்து வரும் முஸ்லீம் வியாபாரியிடம், முன்பு பேரம்பலத்திற்கும் சின்னமீனாட்சிக்கும் வாங்கியது போல, கணபதி தன் மகனுக்கும் வாங்குவான். அவர்கள் அவற்றை பல நாட்கள் வைத்து பயன்படுத்தினார்கள், ஆனால் மகாலிங்கனுக்கு ஒவ்வொரு முறை வியாபாரி வரும் போதும் வாங்கி கொடுக்க வேண்டும்.

மகாலிங்கன் எந்த அளவுக்கு குழப்படிகாரனாக இருந்தானோ அந்த அளவுக்கு படிப்பில் கெட்டிக்காரனாகவும் இருந்தான். கணக்கு பாடமும் தமிழும் சமயபாடமும் அவனுக்கு நல்ல விருப்பமான பாடங்களாக இருந்தன. தேவாரங்களை நன்கு பண்ணோடு பாடுவான்.

கணபதியின் மைத்துனரான வல்லிபுரம் பளையிலிருந்து வந்த அண்ணாவியாரிடம் நன்கு பழகி தேர்ச்சி பெற்றிருந்ததால், இப்போது தானே இளைஞர்களையும் சிறுவர்களையும் பழக்கி கூத்துக்கள் ஆட வைத்தார். அவர் தனது தகப்பன் மாதிரி குடுமி வைத்திருந்தாலும் காதுகளில் கடுக்கனும், கை விரல்களில் மோதிரங்களும் போட்டிருந்தது மகாலிங்கனுக்கு வேடிக்கையாக இருக்கும்.

பெரிய பரந்தனில் ஒருவரும் தங்க நகைகள் போட மாட்டார்கள், கூடுதலாக மீசாலையிலேயே வளர்ந்த வல்லிபுரம் நகைகள் போட்டு பழகிவிட்டார். மகாலிங்கன் தேவாரங்களை நன்கு பாடுவதைக் கண்ட வல்லிபுரம், மருமகன் முறையான அவனை காத்தான் கூத்தில் பால காத்தானாக ஆட வைப்பார். மகாலிங்கனின் பாடலும் ஆடலும் எல்லோரையும் கவர்ந்தது.

பாடசாலையில் ஐந்தாம் வகுப்புக்கு மேல் இல்லை என்பதால், சின்னமீனாட்சி பத்து வயதில் படிப்பை நிப்பாட்டி விட்டு, மூன்று வருடங்களாக விசாலாட்சிக்கு உதவியாக வீட்டில் உதவிகள் செய்து கொண்டிருக்கிறாள்.  தம்பி நல்லையாவை பார்ப்பது அவள் பொறுப்பாகி விட்டது. மகாலிங்கனும் படிப்பு இல்லாத போது தியாகர்வயலுக்கு யாருடனாவது போய்விடுவான். தாய், தகப்பனை விட மகாலிங்கனுக்கு பேரன் பேர்த்தியில் தான் விருப்பம் அதிகம்.

அதனால் சில வேளைகளில் தனியாகவும் தியாகர் வயலுக்கு ஓடி விடுவான். கணபதியும் மீனாட்சியும் அவனைக் காணாது பயந்து போய் தேடுவார்கள். எங்கேயாவது பாம்பு, பூச்சிகளிடம் சிக்கி விடுவானோ என்ற பயம் அவர்களுக்கு.

மீனாட்சி மகனை தேடி தியாகர்வயலுக்கு ஓடுவாள். வைத்தியர் வீட்டைக் கடக்கும் போது வைத்தியர் “பிள்ளை பயப்படாதை அவன் தியாகர்வயலுக்கு போனவன். நான் கவனமாய் போ தம்பி எண்டு சொல்லி விட்டனான்.” என்று ஆறுதல் சொல்லுவார். மகன் தியாகர்வயலில் நிற்பதை கண்ட பிறகு தான் மீனாட்சிக்கு மூச்சு வரும். “ஏனடா, சொல்லாமல் வந்தனி” என்று மீனாட்சி கேட்ட போது “நீங்கள் தனிய போகாதே எண்டு சொல்லி மறிப்பீங்கள். அது தான் நான் சொல்லாமல் வந்தனான்” என்று பதில் சொல்லுவான்.

கிராமங்களில் இரண்டு எருதுகளை பூட்டிய வண்டில்கள் தான் இப்போதும் போக்கு வரத்து சாதனங்களாக இருந்தன. நகரத்தில் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் குதிரை வண்டில்களை பயன்படுத்தினர்.

1893 ஆம் ஆண்டு அளவில் நகரங்களில் செல்வந்தர்களை ஏற்றி இறக்குவதற்கு மனிதர்களால் இழுத்து செல்லப்படும்  ரிக்சா (rickshaw) க்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டன. சாமான்களை ஏற்றி இறக்குவதற்கு, நகரில் வாழ்பவர்களால் ஒரு எருது மட்டும் பூட்டி ஓடும், ஒற்றைக்கரத்தை வண்டில்கள் பயன் படுத்தபட்டன.

கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் புகையிரதங்கள் பரந்தன் வரை போய், அங்கிருந்து ஆனையிறவு, பளை, எழுதுமட்டுவாள், மிருசுவில், கொடிகாமத்தின் ஊடாக மீசாலை நிலையம் சென்று, பின்னர் தமது பிரயாணத்தை காங்கேசன்துறை வரை தொடர்ந்தன.

பெரிய பரந்தன், செருக்கன், குஞ்சுப்பரந்தன் மக்கள் எருதுகள் பூட்டிய வண்டிலில் பரந்தன் சந்தி வரை சென்று புகைவண்டியில் ஏறி மீசாலை செல்லத் தொடங்கினர். இப்போது சுட்டதீவு பாதையின் தேவை பெருமளவில் குறைந்தது. ஆறுமுகத்தார் றெயினில் தான் பேரம்பலத்தை மீசாலையில் பாடசாலையில் சேர்ப்பதற்கு கூட்டி சென்றார்.

பரந்தன் சந்தியில் புகையிரத நிலையம் வந்தவுடன், நிலைய உத்தியோகத்தர் விடுதிகளும் வந்து விட்டன. பரந்தன் சந்தியிலிருந்து பூனகரி போகும் வீதியில் காரைதீவிலிருந்து (இப்போது காரை நகர்) வந்த கோவிந்தர் என்பவர் ஒரு பகுதி பலசரக்குக் கடையாகவும், மறு பகுதி தேனீர் கடையாகவும் உள்ள ஒரு கடையை போட்டிருந்தார். அதே போல இன்னொருவர் முல்லைத்தீவு போகும் வீதியில் அதே போன்ற ஒரு கடையை போட்டிருந்தார். பரந்தன் சந்தி இப்போது கொஞ்சம் சனப்புழக்கம் உள்ள இடமாக மாறியது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஆசிரியர்களும் றெயினில் பரந்தன் வரை வரலாயினர். கிராம மக்கள் வண்டிலில் சென்று ஆசிரியர்களை அழைத்து வருவது வழமையாக ஆகி விட்டது.

இப்போதெல்லாம் முருகேசரால் விற்பனை செய்வதற்காக தேங்காய்களை வாங்கி உரிப்பது, கிடுகு பின்னுவது என்பவற்றை செய்ய முடியவில்லை. அவற்றால் இலாபமும் அதிகமில்லை, வண்டிலை மட்டும் ஓட்டி திரிவார். சின்னம்மாவிற்கும், அவரை விட இளைய பெண்களுடன் போட்டி போட்டு வியாபாரம் செய்ய முடியவில்லை.

சின்னம்மாவிற்கு யாழ்ப்பாணத்தில், நகரில் இருந்து தூரத்தில் உள்ள கிராமத்தில் ஒரு சிறிய காணித்துண்டு இருந்தது. சின்னம்மா, “என்ரை காணியை வித்து, என்னட்டை இருக்கிற கொஞ்ச காசையும் போட்டு யாழ்ப்பாணத்திலை ஒரு காணியை வாங்குவம். அந்த காணிக்கு முன்னால் ஒரு சின்ன கடையை கட்டி, வீட்டுடன் இருந்து சிறிய அளவில் வியாபாரம் செய்வம்” என்று முருகேசரிடம் கேட்டாள்.

முருகேசர் “சரி, காணியை வாங்கி, கடையும் போடலாம். நான் அங்கை வந்து என்னத்தை செய்யிறது” என்று கேட்டார். அதற்கு சின்னம்மா “இப்ப யாழ்ப்பாண பசாரில் (bazaar–market–சந்தை) நிறைய கடைகள் வந்தாச்சு. கொழும்பு றெயினில் கடைகளுக்கு சாமான்கள் வருகுது. ஸ்ரேசன் இலிருந்து வண்டில்களில் தான் சாமான்களை ஏத்தி பறிக்கிறான்கள். நீங்களும் எங்கடை வண்டிலில் சாமான் ஏத்தி பறிச்சால் நல்ல காசு கிடைக்கும்.” என்றாள். முருகேசர் “சரி அம்மா, நாங்கள் மீனாட்சியிட்டையும் மருமகனிட்டையும் ஒருக்கால் சொல்லிப் போட்டு செய்வம்” என்றார்.

(றெயின்–train–தொடர் வண்டி–புகையிரதம்)

முருகேசரும் சின்னம்மாவும் தங்கள் பேரனான மகாலிங்கனை பார்க்க ஒருநாள் வந்தார்கள். வந்தவர்கள் இரண்டு நாட்கள் மகளுடன் தங்கி நின்று, எல்லா இடங்களுக்கும் போய் வந்தார்கள். திரும்பி போக வெளிக்கிட்டவர்கள் கணபதியிடமும் மீனாட்சியிடமும் தாங்கள் யாழ்ப்பாணத்தில் காணி வாங்கி போக நினைப்பதை சொன்னார்கள்.

கணபதி “மாமா, உங்களுக்கும் சின்னம்மாவுக்கும் என்ன வசதியோ, அதன் படி செய்யுங்கோ.” என்று தனது விருப்பத்தை  தெரிவித்தான். அவர்களை வழியனுப்ப வந்த ஆறுமுகத்தார் “முருகேசர், உங்களிட்டை இருக்கிற காசில் சின்ன காணியை வாங்கினால், வீடு கட்ட, கடை கட்ட, கடைக்கு முதல் போட காசு வேணும் தானே. பளையிலை இருக்கிற வீட்டோடை காணியை வித்தால், வாங்கிற காணியை பெரிசாகவும் வாங்கலாம், மற்ற செலவுகளுக்கும் காணும்.” என்று தனது ஆலோசனையைச் சொன்னார். அதற்கு முருகேசர் “இல்லை, பளைக் காணியையும் வீட்டையும் கந்தையனுக்கு குடுக்கலாம் என்று இருக்கிறம்.” என்று சம்பந்தியின் ஆலோசனையை மறுக்கிறேனே என்ற தயக்கத்துடன் கூறினார். எல்லாற்றை கதைகளையும் கேட்டுக் கொண்டிருந்த கந்தையன் “ஐயா, தியாகர்வயலுக்கு பக்கத்திலை வெட்டு படாமல் ஒரு காடு இருந்தது. அதை அத்தான் கூட்டிக் கொண்டு போய் எனக்கு காட்டினவர், நெல்லு விதைக்க ஏற்ற நல்ல மண். அத்தானும் நானுமாய் வெட்டத் தொடங்கி, அரைவாசிக்கு மேலை வெட்டிப் போட்டம். ஆறுமுகம் மாமாவும் சில நேரம் வந்து வெட்டி தாறவர். மிச்சத்தையும் வெட்டினாப்பிறகு குஞ்சுப்பரந்தன் விதானையாரிட்டை கூட்டிக் கொண்டு போய்,  என்ரை பேரிலை பதிஞ்சு தாறன் எண்டு அத்தான் சொன்னவர். எனக்கு அது காணும், நானும் அத்தானோடை சேர்ந்து இஞ்சை இருந்து வயல் செய்யப்போறன். நீங்கள் பளை வீட்டையும் காணியையும் மாமா சொன்ன மாதிரி வில்லுங்கோ” என்றான்.

முருகேசரும் சின்னம்மாவும் காணிகளை விற்று, யாழ்ப்பாணத்தில் நாவலர் பள்ளிக்கூடத்திற்கு  கிட்டவாய் ஒரு காணியை வாங்கி, அந்த காணியில் ஒரு சின்ன வீட்டையும் சிறிய கடையும் கட்டி, பால் காய்ச்சுவதற்கு ஆறுமுகத்தாரிடமும் கணபதியிடமும் வந்து நேரில் கூப்பிட்டு விட்டு போனார்கள்.

அவர்கள் போகும் போது கந்தையனையும் கூட்டி கொண்டு போனார்கள். வீட்டிற்கு பால் காய்ச்ச கணபதியும் மீனாட்சியும் மகாலிங்கனுடன் ஆறுமுகத்தாரையும் சின்ன மீனாட்சியையும் கூட்டிக் கொண்டு, பரந்தன் சந்தியிலிருந்து றெயினில் போய் வந்தார்கள்.

மகாலிங்கனுக்கு முதல் முதல் றெயின் பயணமும், யாழ்பாணம் பசாரும் புதுமையாக இருந்தன. கந்தையனுக்குமே யாழ்ப்பாண மக்களின் பழக்க வழக்கங்கள் வித்தியாசமாகவே பட்டது. சிலர் வெள்ளைக்கார ஆட்கள் மாதிரி நீளக் கால்சட்டை, சேர்ட் போட்டிருந்தார்கள். தனது தகப்பனையும் அத்தானையும் போல வேட்டி கட்டுபவர்களும் இருந்தார்கள். சாறங்கட்டி சேர்ட் போட்டு, தலையில் குஞ்சத்தோடை புது விதமான தொப்பி போட்ட முஸ்லீம் மக்களையும் கண்டான்.

யாழ்ப்பாணத்தில் கோவில்களும், தேவாலயங்களும், மசூதிகளும் பெரிசு பெரிசாக இருப்பதையும் கண்டான். குதிரை வண்டில்களிலும் ரிக்சாக்களிலும் வெள்ளைக்கார ஆண்களும் பெண்களும் தொப்பிகளுடன் பயணம் செய்வதையும் கண்டான். அவன் தகப்பனுடனும் சின்னம்மாவுடனும் இரண்டு கிழமைகள் நின்று விட்டு பரந்தனுக்கு வந்து சேர்ந்தான்.

யாழ்ப்பாணத்தின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து ஒரு முதியவர் வருடத்திற்கொரு முறை பெரிய பரந்தனுக்கு வந்து, எல்லா மக்களுக்கும் கைரேகை பார்த்து பலன் சொல்லுவார். கிராம மக்கள் சாஸ்திரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள். சிலர் அவரைக் கொண்டு தங்களினதும் பிள்ளைகளினதும் சாதகங்களை எழுதுவிப்பார்கள். அவர் தியாகர்வயலில் தங்கி எல்லார் வீடுகளுக்கும் போய் சாஸ்திரங்கள் சொல்லிவிட்டு, இரவு படுக்கைக்கு தியாகர்வயலுக்கு வந்து விடுவார். கந்தையன் அவருடனே எல்லா இடங்களுக்கும் போய் வருவான். அவனுக்கும் சாஸ்திரங்களை கற்று அவரைப் போல ஒரு சாஸ்திரியாராக வரவேண்டும் என்ற ஆசை உண்டானது.

கணபதியிடம் “அத்தான், சாஸ்திரியாரிட்டை சாஸ்திரம் படிக்க எனக்கு விருப்பம். சாஸ்திரியார் இந்தியாவுக்கு போய் ஒரு குருவோடை தங்கி நின்று படிச்சவராம். தன்னோடை ஊருக்கு வந்து ஒரு வருடம் தங்கி நின்று படிக்கட்டாம். இப்ப இன்னுமொரு பொடியன் படிக்க சேர்ந்திருக்கிறானாம்.” என்று தயங்கிய படி கேட்டான். கணபதி “கந்தையா கொஞ்சம் பொறு. மீனாட்சியிட்டை கதைக்கிறன், மாமாவும் சம்மதிக்க வேணும்” என்றான்.

கணபதி சொன்னதைக் கேட்ட போது, மீனாட்சி “ஐயோ வேண்டாம், அவனை தனிய விட ஏலாது. ஐயாவும் ஒத்துக் கொள்ள மாட்டார்.” என்றாள்.

கந்தையனின் விருப்பத்தை கேள்விப்பட்ட ஆறுமுகத்தார், கணபதி வீட்டுக்கு ஒரு நாள் வந்தார். அவர் மீனாட்சியிடம் “பிள்ளை, கந்தையன் சாஸ்திரம் படிக்க ஆசைப்படுறான். அவன் இன்னும் என்ன சின்னப் பிள்ளையே? அவன்ரை விருப்பத்தை ஏன் தடுப்பான்? நான் நாளைக்கு பேரம்பலத்தை பார்க்க மீசாலைக்கு போறன். அப்படியே யாழ்ப்பாணம் போய் முருகேசரிட்டையும் சின்னம்மாட்டையும் கதைச்சுக் கொண்டு வாறன்.” என்றார்.

அடுத்த நாள் ஆறுமுகத்தாரை வண்டிலில் ஏற்றிக்கொண்டு, பரந்தன் சந்திக்கு போய், றெயினில் ஏற்றிவிட்டு வந்த கந்தையன் “மாமாட்டை ஐயா என்ன சொல்லுறாரோ” என்ற யோசனையில் காத்திருந்தான்.

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் - ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன

https://vanakkamlondon.com/stories/2021/02/102691/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 26

IMG-20210302-104824.jpg

முன்னர் எட்டாம் வகுப்பில் சித்தி அடைந்தவர்களுக்கு கனிஷ்ட பாடசாலை சான்றிதழும் (Junior school certificate, J.S.C), பத்தாம் வகுப்பில் சித்தி அடைந்தவர்களுக்கு சிரேஷ்ட பாடசாலை சான்றிதழும் (Senior school certificate, S.S.C), பன்னிரண்டாம் வகுப்பில் சித்தி அடைந்தவர்களுக்கு உயர்தர பாடசாலை சான்றிதழும் (Higher school certificate , H.S.C) வழங்கப்பட்டன. கிராமத்து மாணவர்கள் ஜே.எஸ்.சி யுடன் படிப்பை நிறுத்தி விடுவார்கள்.

சுவாமி விவேகானந்தர் இலங்கைக்கு மூன்று முறை வருகை தந்திருக்கிறார்.  சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் பொழுது யாழ்ப்பாணத்திற்கும் வந்திருக்கிறார்.

1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி ஐரோப்பாவிலிருந்து திரும்பும் போது கொழும்பிற்கு வந்து, அங்கிருந்து இந்தியா திரும்பி விட்டார்.

மகாராணி எலிசபெத் அம்மையார் இலங்கைக்கு இரண்டு முறை வருகை தந்தார். யாழ்ப்பாணத்திற்கு ஒரு முறையும் வரவில்லை.

1954 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 21 ஆம் திகதி, அவரது 28 ஆவது பிறந்த நாள் இலங்கையில் கொண்டாடப்பட்டது. 1981 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இரண்டாம் முறை வருகை தந்தார்.

1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மகாத்மா காந்தி யாழ்ப்பாணம் வந்தார். மகாத்மா காந்தி ஒரு முறை மட்டுமே இலங்கைக்கு வந்தார்.

1992 ஆம் ஆண்டு தை மாதம் எட்டாம் திகதி நான் இந்த பாடசாலையின் அதிபராக பொறுப்பெடுத்த பொழுது சம்பவ திரட்டில் பதிய வேண்டி வந்தது. அப்போது பழைய சம்பவ திரட்டு புத்தகத்தையும் எடுத்து பார்த்தேன்.

அதில் ஒரு அதிபர் காந்தி மகானை பார்க்க யாழ்ப்பாணம் போன விபரம் இருந்தது. இரண்டு மூன்று முறை ‘மகாலிங்கம் வயித்து குத்து என்று சொல்லி அனுமதி பெற்று வீடு சென்று விட்டான்’  என்ற பதிவுகளை கண்டேன். அடக்க முடியாத சிரிப்பு வந்தது. அதனை திரு. மகாலிங்கம் அவர்களிடம் காட்ட முடியாத நிலமை. அவர் ஏற்கனவே இறைவனிடம் சேர்ந்து விட்டார்.

எங்கள் அப்போதைய கோட்ட கல்வி அதிகாரி திரு.தம்பிராசா குருகுலராசா வந்த பொழுது பதிவுகளை காட்டினேன். “இவை பொக்கிசங்கள். போட்டோ பிரதி எடுத்து பாதுகாக்க வேண்டும்” என்றார்.  அந்த அளவிற்கு அந்த புத்தகம் 67 ஆண்டுகளில் நலிந்து காணப்பட்டது. என்னால் அந்த காலத்தில் அதனை செய்ய முடியவில்லை என்பது கவலையான விடயம். நாட்டில் நடந்த போரின் போது அந்த புத்தகங்கள் அழிந்து விட்டன..  😢

……....…..............................................

dfdfdfdfd.jpg

பரந்தனில் றெயினில் ஏறிய ஆறுமுகத்தார் மீசாலை ஸ்ரேசனில் (station–நிலையம்) இறங்கினார். முருகேசர் வீட்டிற்கு கொடுக்க வேண்டிய பொருட்களை ஸ்ரேசனடி கடையில் வைத்து விட்டு, பேரம்பலம் நின்று படிக்கும் வீட்டாருக்கு கொடுக்கும் பொருட்களுடன் புகையிரதப் பாதை வழியே நடந்து உறவினர் வீட்டை அடைந்தார். போகும் வழியில் மீசாலை ஸ்ரேசனுக்கு முன் பக்கம் பல கடைகள் வந்து விட்டதை பார்த்தார். பலசரக்குக் கடைகள், தேனீர் கடைகள், சட்டி பானைக் கடைகள் எல்லாம் இருந்தன.

அன்று சனிக்கிழமை என்றபடியால் பேரம்பலம் வீட்டில் நின்றான். அயல் பிள்ளைகளுடன் விளையாடப் போய் விட்ட பேரம்பலத்தை கூப்பிட்டார். விளையாடி களைத்த பேரம்பலம் ஓடி வந்து, தகப்பனை அணைத்தபடி இருந்து கொண்டு, வீட்டில் உள்ள எல்லோரையும் பற்றி கேட்டான். மகனது படிப்பை பற்றி விசாரித்த ஆறுமுகத்தார் அவன் சந்தோசமாக இருப்பதைக் கண்டு நிம்மதி அடைந்தார்.

மகன் தங்கி படிக்கும் வீட்டாரிடம் விடை பெற்று ஸ்ரேசனை நோக்கி நடந்தார். கடையில் வைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு றெயினை எதிர்பார்த்து காத்திருந்தார். காத்திருப்பது கிராம மக்களுக்கு இயல்பானது. நகரத்தின் பரபரப்பு இன்னும் அவர்களை நெருங்காத காலமது.

ஆறுமுகத்தார் யாழ்ப்பாண ஸ்ரேசனில் இறங்கினார். ஸ்ரேசன் வாசலில் ஒரு பக்கம் வண்டில்களும் மறு பக்கம் ரிக்‌ஷாக்கள், குதிரை வண்டில்கள், கூரையில்லாத நான்கு சக்கர கார்களும் நின்றன.  றெயினில் முதலாம் வகுப்பு பெட்டியிலிருந்து இறங்கிய ஆங்கிலேயர்களும் பறங்கியரும் சில பெருங்குடி மக்களான (Elite people) தமிழர்களும் அந்த ரிக்‌ஷாக்களிலும் குதிரை வண்டில்களிலும் கார்களிலும் ஏறி பிரதான வீதி (Main Street) க்கும் அதன் குறுக்கு விதிகளுக்கும் (Cross Roads) சென்றதை ஆறுமுகத்தார் அவதானித்தார்.

அவர்கள் பெரும்பாலும் சுண்டிக்குளி தொடக்கம் மத்திய கல்லூரி வரையான பிரதான வீதியின் இரு மருங்கும் தான் வாழ்கிறார்கள் என்பதை ஆறுமுகத்தார் அறிய மாட்டார். அவர்களின் ஆடை அணிகலன்கள் ஆறுமுகத்தாரை வியக்க வைத்தன. ஸ்ரேசனிலிருந்து இருந்து பொடிநடையாக சந்தைக்கு அருகில் இருந்த சத்திரத்தடிக்கு நடந்தார்.

சத்திரத்தடியில் எருதுகளை அவிட்டு கட்டி விட்டு வரிசையாக நிறுத்தப்பட்ட வண்டில்கள், கை பிடி நிலத்தில் இருக்குமாறு சரித்து வரிசையாக நிறுத்தப்பட்ட ரிக்‌ஷாக்கள், சுமைகளை தூக்கும் வேலை செய்யும் நாட்டாமைகள் எல்லாரும் காத்திருந்தார்கள்.

சத்திரத்தினருகே ஒரு கல்லால் கட்டப்பட்ட கிணறும் இருந்தது. சத்திரத்து வாசலில் ரிக்‌ஷக்கார, வண்டில்கார ஆட்களும் நாட்டாமைகளும் தரையில் கரியினால் கீறப்பட்ட கட்டங்களில் நாயும் புலியும், தாயம் போன்ற விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

கடை முதலாளிகளும் ஏனையவர்களும் அடிக்கடி வந்து தமக்கு தேவையானவர்களை கூட்டி சென்றார்கள். முருகேசர் ஒரு பக்கம் நாலைந்து நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தவர், ஆறுமுகத்தாரைக் கண்டதும் ஓடி வந்து “என்ன ஆறுமுகத்தார் இவ்வளவு தூரம்?” என்று கேட்டு அணைத்துக் கொண்டார்.

ஆறுமுகத்தார் முருகேசரிடம் “கந்தையன் ஒரு சாஸ்திரியின் வீட்டில் அவருடன் தங்கி நின்று, சாஸ்திரம் படிக்க விரும்புறான். உங்கடை விருப்பத்தை அறிய வந்தனான்” என்றார். “ஆறுமுகத்தார், நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம். வராதவர் வந்திருக்கிறீங்கள். வீட்டை வந்து சாப்பிட்டிட்டு தான் போக வேணும்” என்றவர் ஓடிப்போய் மற்ற வண்டில்காரனிட்டை “சம்பந்தி வந்திருக்கிறார். நான் வீட்டை போறன். என்னை தேடி வாறாக்களுக்கு நீ ஏத்திக் குடு” என்று சொன்னவர் எங்கேயோ ஓடிப் போய் ஒரு போத்தல் சாராயம் வாங்கி வந்தார்.

இருவரும் வண்டிலை பூட்டிக் கொண்டு முருகேசரின் வீட்டை நோக்கி சென்றனர். வழியில் விலத்தேலாமல் வண்டில்களும், குதிரை வண்டில்களும், மனிதரால் மனிதரை வைத்து இழுக்கும் ரிக்‌ஷாக்களும் சென்றன. இடைக்கிடை மேல் கூரையில்லாத கார்களும் வெளியே பூட்டியிருந்த ‘கோன்’ ஐ கையால் அமத்தி “பாபு பாபு” என்று ஏனையவர்களை விலத்தி தருமாறு அடித்தபடி சென்றன.

வீடு வந்து சென்றபின் ஆறுமுகத்தாரை கை, கால் அலம்பி இருக்கும் படி கூறிவிட்டு ஒரு வளர்ப்பு சேவலை துரத்தி பிடித்து, உரித்து, வெட்டி ஒரு சட்டியில் வைத்தார். முகம் கழுவி வந்தவரிடம் சின்னம்மா மீனாட்சியை, மகாலிங்கனை, கந்தையனை, ஏனையவர்களை பற்றி எல்லாம் விசாரித்தா.

தானும் கை, கால் கழுவி விட்டு சாராய போத்தலுடனும் இரண்டு கிண்ணங்களுடனும் வந்த முருகேசர், சின்னம்மாவை சமைக்கும் படி கூறி விட்டு, ஒரு வேப்பமரத்தடிக்கு ஆறுமுகத்தாருடன் சென்று அமர்ந்தார்.

சாராயப்போத்தலை கண்ட ஆறுமுகத்தார் “இப்ப உதெல்லாம் வேண்டாம், வேலை கிடக்கு. நான் வீட்டை போகோணும்” என்று மறுத்தார். அதற்கு முருகேசர் “இரவு தபால் கோச்சியிலை போகலாம். நான் ஏத்திக் கொண்டு போய் விடுவன். நாளைக்கு காலமை பொல பொலவென்று விடிய நீங்கள் பரந்தன் ஸ்ரேசனிலை இறங்கி விடலாம்” என்றவர் தொடர்ந்து “ஆறுமுகத்தார், இஞ்சை தென்னங் கள்ளு என்றால் தாராளமாக வாங்கலாம், பனங்கள்ளு வாங்க கொஞ்ச தூரம் போகவேணும். தென்னங்கள்ளை நீங்கள் குடிப்பதில்லை என்று எனக்கு தெரியும். அது தான் சாராயம் வாங்கி வந்தனான்.” என்றார்.

முன்பு பெரிய பரந்தனில் பூவரச மர நிழலில் இருந்து இருவரும் கள்ளு குடித்த நினைவு ஆறுமுகத்தாருக்கு வந்தது. இருவரும் பல கதைகளை பேசியபடி சாராயத்தில் தண்ணீர் கலந்து குடித்தனர்.

அடுத்த நாள் காலமை பரந்தன் ஸ்ரேசனிலை ஆறுமுகத்தார் இறங்கும் போது இருள் விலகவில்லை. நடந்து போய் கோவிந்தரின் கடை வாசலில் நான்கு கட்டைகளின் மேல் ஒரு பலகை வைத்து கட்டிய வாங்கில் இருந்தார். வேப்பம் குச்சியினால் பல் துலக்கி, வாய் கொப்பளித்து முகம் கழுவும் கோவிந்தரை கண்டார்.

சால்வையால் முகம் துடைத்தபடி வந்த கோவிந்தர் “என்ன ஆறுமுகத்தார் இன்றைக்கு விடியக்காலமை வந்திருக்கிறியள்.” என்று கேட்க ஆறுமுகத்தார் தான் யாழ்ப்பாணம் போய் வந்த கதையைச் சொன்னார்.

கோவிந்தர் “நீர் உதிலை கிணத்திலை போய் முகம் கழுவி விட்டு வாரும். நான் தேத்தண்ணி போடுறன்” என்றார். கிணத்தடியில் நின்று பார்த்த போது கோவிந்தரின் மாட்டு பட்டியை கண்டார்.

நாலு பக்கமும் அலம்பல் வேலியால் அடைத்த பட்டியில் பசுக்களும் நாம்பன்களும் நின்றபடியும் படுத்தபடியும் அசை போட்டபடி இருந்தன.

 பக்கத்தில் ஒரு சிறிய பட்டியில் பெரிதும் சிறிதுமான கன்றுகள் நின்று “ம்மா, ம்மா” என்று தாய் பசுக்களை தேடி கத்தின. அவற்றிற்கு மட்டும் வெய்யில், மழை படாதவாறு ஒரு கொட்டில், பனை ஓலையில் வேயப்பட்டிருந்தது.

கிணத்தடியால் ஆறுமுகத்தார் வரவும் கோவிந்தர் இரண்டு தகர பேணிகளில் வெறும் தேனீரோடு வரவும் சரியாக இருந்தது. கோவிந்தர் ஒரு பேணியையும் ஒரு துண்டு பனங்கட்டியையும், ஆறுமுத்தாரிடம் கொடுத்து விட்டு வாங்கில் அவருக்கு பக்கத்தில் இருந்து, தனது தேநீரை அருந்தினார். ஆறுமுகத்தார் “என்ன கன்றுகள் கத்துகினம். இன்னும் பால் கறக்கவில்லையா?” என்று கேட்டார்.

அதற்கு கோவிந்தர் “இப்ப பால் கறக்க போனால் ஒரே நுளம்புக்கடி. அது தான் கொஞ்ச நேரம் போகட்டும் என்று பார்க்கிறன்” என்ற கோவிந்தர் “அது சரி ஆறுமுகத்தார், குஞ்சுப்பரந்தனில் கொல்லனாற்றங்கரையில் ஒரு வயல் காணி விற்க போயினமாம். அது கணபதியின் காணிக்கு பக்கத்திலை இருக்குது என்றார்கள். அதை வாங்குவம் என்று பார்க்கிறன். எதேனும் வில்லங்கம் வருமா?” என்று கேட்டார்.

“தாராளமாய் வாங்குங்கோ. ஒரு பிரச்சனையும் வராது. காணிக்கார பொடியன் சாவகச்சேரியிலை நல்ல நில புலம் உள்ள இடத்திலை கலியாணம் கட்டி விட்டான். அதையும் பார்த்து இதையும் பார்ப்பது கரைச்சல் என்று தான் விற்கிறான்.” என்று ஆறுமுகத்தார் சொன்னார்.

இது வரை தென்மராட்சி மக்கள் மட்டுமே வாழ்ந்த மூன்று கிராமங்களில் முதல் முதல் காரைநகர் மக்களின் வரவு கோவிந்தரினால் ஆரம்பிக்கப்பட்டது. பெரிய பரந்தனையும் குஞ்சுப்பரந்தனையும் கொல்லனாறு தான் பிரித்தது. பூனகரி வீதிக்கு வடக்கில் கொல்லனாற்றின் ஒரு பக்கத்தில் பெரிய பரந்தனில் கணபதியின் காணி இருந்தது.  பூனகரி வீதியின் வடக்கில் கொல்லனாற்றின் மறு பக்கத்தில் குஞ்சுப்பரந்தனில் கோவிந்தர் காணி வாங்கி குடியேறினார்.

இருவரின் காணியும் அருகருகே இருந்தன. கோவிந்தருக்கும் கணபதியாருக்கும், கோவிந்தர் முதல் முதல் குடி வந்த போது இருந்த நட்பு இன்று வரை அவர்கள் இருவரின் பரம்பரையினருக்கும் இடையில் நிலவுகிறது.

கோவிந்தரைத் தொடர்ந்து பூனகரி வீதியின் வடக்காகவும் நீலனாற்றிற்கு மேற்காகவும் பெரிய பரந்தனில், காரைநகரில் இருந்து மலேயா போய் உத்தியோகம் பார்த்து, ஓய்வு பெற்று திரும்பி வந்த திரு நாகலிங்கம் அவர்கள் காணியை வாங்கி ஒரு நெல் குத்தும் ஆலையை (Rice mill) பூனகரி வீதிக்கு அருகே போட்டார். இது வரை உரலில் இட்டு உலக்கையால் நெல் குத்தி வந்த மூன்று கிராம பெண்களும் நாகலிங்கம் மில்லினால் பயன் பெற்றனர்.

ஒரு ஊர் சிறப்படைய வேண்டும் என்றால் அங்கு ஒரு பாடசாலை வரவேண்டும். “கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று அறிஞர்கள் சொன்னதற்கு காரணம் உண்டு. பழைய காலத்தில் கோயில்கள் கலைகளை, ஒழுக்கத்தை, கல்வியை வழங்கின.

நாட்டுக்கூத்து, பரத நாட்டியம், கர்நாடக இசைக் கச்சேரிகள், கதா காலாட்சேபங்கள் (இசைச் சொற்பொழிவுகள்) முதலியன கோயில்களில் நடைபெற்று, மக்களை அறிவுடையவர்களாக மாற்றின. இன்று அந்த கடமைகளை பாடசாலை ஆற்றுகின்றது.

பாடசாலை சிறப்படைய வேண்டும் என்றால் சமூகம், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் கூட்டு முயற்சி தேவை. ஆசிரியர் இவற்றை நன்கு உணர்ந்தவர். ஆதலால் கிராம மக்கள் வயல் வேலைகள் முடித்து இருக்கும் போது அவர்களை அழைத்து, திருக்குறள், பாரதியார் பாடல்கள், தேவாரம், திருவாசகம் பற்றி எல்லாம் கூறுவார்.

தேவாரம், திருவாசகம், பாரதி பாடல்களை எல்லாம் நன்கு பாடிக்காட்டி கருத்தையும் சொல்லுவார். மகாலிங்கனும் அவர் பாரதி பாடல்களை பாட கேட்டு கேட்டு தானும் நன்கு பாடுவான். அவனுக்கு ஆசிரியர் பாடிய பாடல்களில் வரும் “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை.” என்ற வரிகள் மிகவும் பிடிக்கும். எந்த நேரமும் அதனை முணுமுணுத்துக் கொண்டு இருப்பான்.

றெயினில் வந்த ஆறுமுகத்தார் நிலம் வெளிக்க நடந்து, வீட்டிற்கு போய் சேர்ந்தார். கந்தையன் தகப்பன் சம்மதம் கொடுத்ததை அறிந்து சந்தோசப் பட்டான்.

கணபதி, தனது மச்சானை, அரிசி, நெய், தேன் என்பவற்றுடன் சாஸ்திரியார் வீட்டிற்கு கூட்டி சென்று தங்கியிருந்து சாஸ்திரம் படிக்க ஒழுங்கு செய்து விட்டு திரும்பி வந்தார்.

மகாலிங்கன் எண்களைக் கூட்டல், கழித்தல், தமிழ் பாடத்தை வாசித்தல், தேவாரம் பாடுதல் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினான். மகாலிங்கன் மூன்றாம் வகுப்பில் கற்றுக் கொண்டிருக்கும் போது, முதலாவது ஆசிரியர் மாறிப் போக,  இருபத்தொரு வயதேயான காரைநகரை (காரைதீவு) சேர்ந்த இளைஞரான திரு வைத்தீஸ்வரக்குருக்கள், ஆசிரியராக பொறுப்பேற்றார்.                                                                                    

பாடசாலை திறப்பு விழாவை சிறப்பாக செய்து அனுபவப்பட்ட மூன்று கிராம மக்கள் பழைய அதிபருக்கான பிரியாவிடை நிகழ்வையும் புதிய அதிபருக்கான வரவேற்பு நிகழ்வையும் ஒன்றாக செய்தனர். கணபதியார், முத்தர்கணபதி போன்றோர் முன் நின்று செயற்பட்டனர். மகாலிங்கன் கண்ட முதல் நிகழ்வு என்ற படியால் சினேகிதர்களுடன் சேர்ந்து சந்தோசமாக கொண்டாடினான்.

வைத்தீஸ்வரக்குருக்கள் தனியே ஆசிரியர் விடுதியில் தங்கி, தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டு, கற்பித்தலையும் செய்து வந்தார். மகாலிங்கனின் கெட்டித்தனத்தையும் துடிதுடிப்பான செயல்களையும் அவதானித்தார். முதலாவது ஆசிரியர் செய்தது போல மகாலிங்கனுக்கு எந்த விதமான சலுகைகளையும் காட்டவில்லை. எல்லாரையும் அன்பாய் கற்பித்த போதும், எல்லார் மீதும் கண்டிப்பாகவும் இருந்தார்.

வைத்தீஸ்வரக்குருக்கள் ஒரு காந்தியவாதி. அவர் சாதி, சமய வேறுபாடுகளை விரும்பாதவர். பிராணமணராய் பிறந்த சுப்பிரமணிய பாரதியார் எவ்வாறு வேற்றுமைகளை வெறுத்தாரோ, அவ்வாறே பிராணமணரான வைத்தீஸ்வரக்குருக்களும் வெறுத்தார். வைத்தீஸ்வரக்குருக்களின் வரவு மூன்று கிராம மக்களிடம் மேலும் நல்ல மாற்றத்தை கொண்டு வந்தது.

மகாலிங்கனை சரியான பாதையில் செல்ல வழி வகுத்தவரும் இவர் தான். முதலே எல்லாப் பாடங்களையும் செய்து முடித்து விடும் மகாலிங்கனை சும்மா இருக்க விட மாட்டார். மேலதிகமாக கணக்குகள் கொடுப்பார், அவன் அவற்றையும் செய்து முடித்து விட்டு சும்மா இருப்பான்.

வைத்தீஸ்வரக்குருக்கள் ஒரு புதிய வழியை கண்டு பிடித்தார். இப்போது நான்கு வயதிலேயே பிள்ளைகளை ‘அரிவரி’ என்ற வகுப்பில் சேர்க்கும் பழக்கம் வந்து விட்டது. ஒரே ஆசிரியர் எல்லாப் பிள்ளைகளுக்கும் ‘அ’, ‘ஆ’, ‘1’, ‘2’ சொல்லி கொடுப்பது கொஞ்சம் கஷ்டம். இவர் ஐந்தாம் வகுப்பு மாணவர்களை பிள்ளைகளுக்கு கை விரலைப் பிடித்து மர நிழலில், மண்ணில் எழுதிப் பழக்க பயன்படுத்தினார்.

மகாலிங்கனையும் அவர்களுடன் சேர்ந்து அரிவரி பிள்ளைகளுக்கு எழுத்துக்களை பழக்க வைத்தார். ஒவ்வொரு நாளும் எத்தனை பேருக்கு ‘அ’ பழக்கினது, ‘ஆ’ பழக்கினது என்று ஆசிரியருக்கு சொல்ல வேண்டும்.

மகாலிங்கனுக்கு இது கொஞ்சம் சலிப்பை தந்தது. அதனால் தனது பாடங்கள் முடிந்ததும் ஆசிரியரிடம் “ஐயா, எனக்கு வயிறு குத்துது. வீட்டை போகவேணும்” என்று சொல்லி அனுமதி பெற்று வீடு சென்று விட்டான். அந்த கால தலமை ஆசிரியர்களுக்கு சம்பவதிரட்டு புத்தகத்தில் பாடசாலையில் நடக்கும் சம்பவங்களை தவறாது பதிந்து வைக்கும் பழக்கம் உண்டு. அன்று ஆசிரியர் “மகாலிங்கன் வயித்து குத்து என்று சொல்லி விட்டு, வீட்டை போய் விட்டான்” என்று சம்பவ திரட்டு புத்தகத்தில் பதிவு செய்தார்.

பழைய தலமை ஆசிரியர், தனது காலத்தில் மகாத்மா காந்தி யாழ்ப்பாணத்துக்கு 1927 ஆம் ஆண்டு வந்த போது, குஞ்சுப் பரந்தன் விதானையாரிடம் பாடசாலை பொறுப்பை கொடுத்து விட்டு, ஐந்தாம் வகுப்பில் படித்த மாணவர்களுடன் காந்தியாரின் பேச்சை கேட்க சென்ற விபரத்தை சம்பவத்திரட்டு புத்தகத்தில் பதிந்து வைத்திருந்தார்.

முருகேசரும் சின்னம்மாவும் மகாலிங்கனைப் பார்க்க அடிக்கடி வந்து போனார்கள். சின்னம்மா வரும் போது அவனுக்கு பிடித்தமான பலகாரங்களை செய்து கொண்டு வருவா. அவர்களிருவருக்கும் தமது பேரானான மகாலிங்கனில் நல்ல விருப்பம்.

பெரிய பரந்தனுக்கு வந்த ஒரு நாள் சின்னம்மா மீனாட்சியிடம் “மீனாட்சி, யாழ்ப்பாணத்தில் நாவலர் பள்ளிக் கூடம் எங்கள் வீட்டிற்கு கிட்ட இருக்குது, அங்கை நல்ல படிப்பு. நாங்கள் அவனை கூட்டிக் கொண்டு போய் அங்கை படிக்க வைக்கிறம், நாங்களும் தனிய தானே இருக்கிறம், எங்களோடை அவனை விடு.” என்று கேட்டா. அதற்கு மீனாட்சி “சின்னம்மா, உதை மட்டும் என்னட்டை கேட்காதீங்கோ. அவனை விட்டிட்டு என்னால் இருக்க முடியாது.” என்று உறுதியாக சொல்லி விட்டாள்.

மகாலிங்கன் நாலாம் வகுப்பிற்கு வந்த போது, பேரம்பலம் ஜே.எஸ்.சி பரீட்சை எழுதி விட்டு, மறுமொழியை எதிர் பார்த்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். மகாலிங்கம் நாலாம், ஐந்தாம் வகுப்புக்களை படிக்கும் போது, மாணவர்களுக்கு கணக்கு பாடத்தில் பெருக்கல் வாய்ப்பாடு பாடமாக்குவது மிகவும் கஷ்டமானதாக இருந்தது.

மகாலிங்கன் வேளைக்கே பாடமாக்கி சொல்லி விடுவான். இப்போது அவன் சும்மா இருப்பதை தவிர்ப்பதற்காக, ஆசிரியர் கரும்பலகையில் பெருக்கல் வாய்ப்பட்டை எழுதி, பிரம்பால் ஒவ்வொன்றையும் தொட்டு தொட்டு பாடமில்லாத  மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கும் பணியை கொடுப்பார்.

இது மகாலிங்கனுக்கு கஷ்டமான பணியாக இருந்தது. அதனால் ஆசிரியருக்கு சம்பவத்திரட்டு புத்தகத்தில் ‘மகாலிங்கன் வயித்து குத்து என்று சொல்லி பாடசாலையின் இடையே சென்றான்’ என்று அடிக்கடி எழுத நேரிட்டது.

இப்போது எட்டாம் வகுப்பு வரை பாடசாலையில் வகுப்புகள் நடத்த அனுமதி வந்து விட்ட போதும், மகாலிங்கனில் மாற்றத்தை கொண்டு வர, வேறு இடத்திற்கு அனுப்பி படிப்பிக்க வேண்டும், என்ற எண்ணம் வைத்தீஸ்வரக்குருக்களுக்கு தோன்றியது. ஒரு நாள் கணபதியார், மீனாட்சி, ஆறுமுகத்தார், விசாலாட்சி நால்வரும் இருக்கும் போது அவர் கணபதி வீட்டிற்கு வந்தார்.

மகாலிங்கனை மற்ற பிள்ளைகளுடன் போய் விளையாடும்படி கூறினார். தன்னைப்பற்றி தான் ஏதோ கதைக்கப் போகிறார் என்று அவனுக்கு விளங்கி விட்டது.

வைத்தீஸ்வரக்குருக்கள் நால்வரையும் பார்த்து “இஞ்சை பாருங்கோ, இந்த ஐந்து வகுப்புகளிலும் ஒவ்வொரு தவணையிலும் மகாலிங்கன் தான் முதலாம் பிள்ளை. அவனோடை போட்டி போட்டு படிக்க கூடிய பிள்ளைகள் இங்கை இல்லை. இருக்கிற பிள்ளைகளுக்கும் மகாலிங்கனை விட தாங்கள் கூட புள்ளிகள் எடுக்கலாம் என்ற நம்பிக்கையும் இல்லை.  இங்கை படித்தால் எட்டாம் வகுப்பு வரைக்கும் அவன் தான் முதலாம் பிள்ளையாய் வருவான். அதாலை தான் கெட்டிக்காரன் என்ற எண்ணம் அவனுக்கு வந்து விடும். அது அவனது வருங்காலத்துக்கு கூடாது. கெட்டிக்கார பிள்ளைகளை மாற விடுறது பாடசாலைக்கு நல்லதில்லை தான்.  ஆனால் மகாலிங்கனின் நன்மைக்காக தான் சொல்லுறன்” என்றார்.

மீனாட்சி உடனே “இல்லை ஐயா. அவன் என்னோடைய இஞ்சை இருந்து படிக்கட்டும்.” என்றாள். விசாலாட்சி “மீனாட்சி, வாத்தியார் சொல்லுறது சரி, எதுக்கும் யோசி. எங்கை விட்டாலும் நீயும் கணபதியும் அடிக்கடி போய் பார்க்கலாம் தானே.” என்று சொன்னா. ஆறுமுகத்தார் “அப்படி என்றால் பேரம்பலம் நின்று படிச்ச மாதிரி மீசாலையிலை நின்று படிக்கட்டும்.” என்றார்.

அப்போது கணபதி, “இல்லை ஐயா, அவனை சின்னம்மாவிட்டை விடுவம். அவன் அங்கை நின்று நாவலர் பள்ளிக்கூடத்திலை படிக்கட்டும். அது நல்ல பள்ளிக்கூடம் என்று எல்லாரும் சொல்கிறார்கள்” என்றான். எல்லாருக்கும் அது தான் சரி என்று பட்டது.

வைத்தீஸ்வரக்குருக்கள் “எனக்கு அங்கை படிப்பிக்கிற வாத்தியார் ஒருத்தரை தெரியும். நான் அவனை கொண்டு போய் சேர்த்து விடுறன்.” என்றார். சின்னம்மாவுடன் என்றதும் மீனாட்சியும் சம்மதித்தாள். தன்னை எங்கை படிக்க விட்டாலும் சரி தான் என்ற சிந்தனையுடன் மகாலிங்கன் வழமை போல தன்னுடன் படிக்கும் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.       

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் - ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன.

https://vanakkamlondon.com/stories/2021/03/103467/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 27

Screenshot-2021-03-09-12-42-51-972-org-m

சைவத்தையும் தமிழையும் பேணுவதற்காக ஆறுமுக நாவலர் வண்ணார்பண்ணையில் ஒரு சைவப்பிரகாச வித்தியாலயத்தை ஆரம்பித்தார்.

காங்கேசன்துறை வீதியும் நாவலர் வீதியும் சந்திக்கும் நாவலர் சந்தியில் பாடசாலை அமைந்திருந்தது. பின்னர் அப்பாடசாலை நாவலர் சைவப்பிரகாச வித்தியாலயம் என்று அழைக்கப்பட்டது. மகாவித்தியாலயமாக தரம் உயர்ந்த போது   யா/வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயம் என்று அதன் பெயர் மாற்றமடைந்தது.

IMG-20210309-125420.jpg

( மனோகரா திரை அரங்கம்)

நாவலர் சந்தியில் பாடசாலைக்கு குறுக்காக ‘மனோகரா’ தியேட்டர் வந்ததால் சிலர் அந்த சந்தியை ‘மனோகரா’ சந்தி என்றும் அழைத்தனர்.

யா/வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம் யா/வைத்தீஸ்வரா கல்லூரி, யா/இந்துக்கல்லூரி என்னும் இரண்டு பெரிய பாடசாலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது.

...…......................................................

ஒரு திங்கட்கிழமை காலை கணபதியாரும் மீனாட்சியும் மகாலிங்கனுடனும் ஆறுமுகத்தாருடனும் யாழ்ப்பாணம் சென்றனர். முதல் முதல் படிக்க போகும் போது மூன்று பேர் போவது சரியல்ல என்றே ஆறுமுகத்தாரும் சேர்ந்து போனார். போனவர்களை காக்க வைக்காமல் நேரத்தோடையே காரைதீவிலிருந்து (காரைநகர்) வைத்தீஸ்வரக்குருக்கள் வந்து காத்திருந்தார்.

அவர் மகாலிங்கனையும் கணபதியாரையும் பாடசாலைக்கு கூட்டி சென்று, தனது நண்பரான ஆசிரியர் மூலம் தலமை ஆசிரியருடன் கதைத்து மகாலிங்கனை நாவலர் பாடசாலையில் ஆறாம் வகுப்பில் சேர்த்து விட்டு, தான் பெரிய பரந்தன் நோக்கி பயணமானார்.

சைவப் பிள்ளைகள் படிக்கும் பாடசாலை என்ற படியால் மகாலிங்கனுக்கு ஆடை அணிதல் பற்றிய பிரச்சனை ஏற்படவில்லை. பிள்ளைகள் மகாலிங்கனைப் போலவே   வேட்டி கட்டி அரைக் கை சேர்ட் போட்டிருந்தார்கள். எல்லோரும் விபூதி அணிந்து வந்தார்கள். மகாலிங்கன் தேவாரங்களை பண்ணோடு பாடுவான், அதனால் கிழமையில் ஒரு நாள் பாடசாலை ஆரம்பிக்கும் போது தேவாரம் படிக்கும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது.

கந்தையர் சாஸ்திரத்தை நன்கு கற்று முடித்தார். நல்லதொரு சாஸ்திரியாராக பெரிய பரந்தன் திரும்ப தயாராக இருந்தார்.

குருவானவர் கந்தையரைப் பார்த்து “தம்பி! உனக்கு இப்ப சாதகம் எழுத மையில் தொட்டெழுதும் பேனைகளும் பயிற்சி கொப்பிகளும் வந்து விட்டன. நீ இலகுவாக சாதகங்களை எழுதலாம். நாங்கள் ஆரம்பத்தில் ஏட்டில் எழுத்தாணியால் எழுதினம். பனை ஓலைகளை பதப்படுத்தி ஏடுகளையும் நாங்களே தயாரிச்சம்.

இப்ப நீங்கள் மயிலிறகாலும் தொட்டெழுதும் பேனையாலும் எழுதுறீங்கள். ஒரு சாதகம் எழுதின எழுத்தாணியை சாதகம் எழுதி முடிந்த கையோடை உடைத்து விட வேணும்.  உங்கள் மனச்சாட்சிப் படி கை ரேகை பார்த்து சாஸ்திரத்தை சொல்ல வேணும், சாதகங்களை எழுத வேணும். கொடுக்கிற காசை வாங்கலாம், இவ்வளவு கொடு என்று வியாபாரம் பேசக்கூடாது. சாஸ்திரம் பணம் தேடும் தொழிலில்லை. அதன் மூலம் மனிதர்களுக்கு ஏற்படப்போகும் நன்மை தீமைகளை கூறி, அவர்களை இறைவனிடம் பக்தி கொள்ள வைக்க வேண்டும். எனக்கு தெரிந்த எல்லாத்தையும் உனக்கு நான் சொல்லி கொடுத்திருக்கிறன். சந்தோசமாக போய் வா.” என்றார்.

85c66e20-5b12-4226-9d58-5cbd9714f5e7-1.j

பெரிய பரந்தன் திரும்பிய கந்தையர் வயல் வேலைகள் இல்லாத நேரங்களில், சாஸ்திரம் சொல்வதற்காக மீசாலை, சாவகச்சேரி, பளை போன்ற ஊர்களுக்கு சென்று விடுவார். இளைஞனாகி பொறுப்பை உணர்ந்து விட்ட கந்தையரை, இப்போது மீனாட்சியும் கட்டுப்படுத்துவதில்லை.

போட்டியில்லாமல் எல்லா பாடங்களிலும் கூடிய புள்ளி பெற்று வந்த மகாலிங்கனுக்கு முதல் முதல் ஏமாற்றம், நாவலர் பாடசாலையில் ஆறாம் வகுப்பில், முதலாம் தவணை பரீட்சையில் ஏற்பட்டது.

கணித பாடத்தில் எல்லாரையும் விட கூடிய புள்ளியைப் பெற்ற மகாலிங்கன், ஏனைய பாடங்களில் இரண்டாவது, மூன்றாவதாக தான் வர முடிந்தது. கூட்டுத்தொகை கூடுதலாக இருந்த படியால் மூன்றாம் பிள்ளையாக வந்தான்.

ஊரில் இருந்தது போல கவனமின்றி இனியும் இருக்க முடியாது என்பதை மகாலிங்கன் புரிந்து கொண்டான். படிப்பில் கூடிய கவனம் எடுக்க தொடங்கினான். இரண்டாம் தவணையில் கணித பாடத்துடன் தமிழ் பாடத்திலும் கூடுதல் புள்ளி எடுத்து இரண்டாம் நிலைக்கு முன்னேறினான்.

இரவு பகல் கவனமாக படித்தால் தான் முதலாம் இடத்தை பிடிக்கலாம் என்று அவனுக்கு விளங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக விளையாட்டு புத்தி குறைந்து, பொறுப்பாக படிக்க வேணும் என்ற எண்ணம் மனதில் நன்கு பதிந்தது. கணபதியும் மீனாட்சியும் மகாலிங்கனில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை கண்டு மனதிற்குள் சந்தோசப்பட்டாலும் வெளியில் காட்ட மாட்டார்கள்.

வைத்தீஸ்வரக்குருக்களின் யோசனை எவ்வளவுக்கு சரியானது என்பதை மீனாட்சியும் விளங்கி கொண்டாள். ஊரில் என்றால் தனக்கு போட்டிக்கு ஒருத்தரும் இல்லை என்ற தைரியத்தில் பொறுப்பில்லாமல் இருந்திருப்பான்.

மகாலிங்கன் ஒரு விடுமுறையில் போது, நுணாவிலிருந்து முத்தர்கணபதிக்கு திருமணம் பேசி வந்தனர். பெண் வீட்டார் நல்ல இடம் என்ற படியால் அவனுக்கு திருமணம் செய்து வைக்க முத்தர் தீர்மானித்தார்.

தனது நண்பரான ஆறுமுகத்தாரின் ஆலோசனையை கேட்டார்.  ஆறுமுகத்தார் “முத்தர்கணபதிக்கும் உரிய வயது வந்து விட்டது. இந்த இடம் நல்ல இடம், திருமணம் செய்து வைப்பது தான் சரி.” என்றார்.

பெரியபரந்தனில் இருந்து ஏழெட்டு குடும்பத்தவர்கள் முத்தர்கணபதியுடன் நுணாவிலுக்கு சென்று நாட்சோறு கொடுக்கும் நிகழ்வை நடத்தி வைத்தனர். முத்தர்கணபதி கோயில் காணிக்கு பக்கத்தில் பிள்ளையார் கோவிலுக்கும் காளி கோயிலுக்கும் இடையில் ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து கட்டி கொடுத்த வீட்டில் மனைவியுடன் குடியேறினார்.

ஏழாம் வகுப்பில் மகாலிங்கன் கணிதம், தமிழ், சைவசமயம் ஆகிய மூன்று பாடங்களில் கூடிய புள்ளியை பெற்றாலும் பெரிய பரந்தனில் எடுத்தது மாதிரி எல்லாப் பாடங்களிலும் கூடிய புள்ளிகளை பெற முடியவில்லை. அதிலும் ஆங்கில பாடத்தில் மிகவும் குறைந்த புள்ளியைப் பெற்றான்.

ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா விடை புத்தகங்களை எல்லாம் படித்து, பாடமாக்கியபடியால் சைவ சமய பாடத்தில் கூடுதல் புள்ளியை எடுக்க முடிந்தது.

முதலில் வன்னியிலிருந்து வந்தவன் என்று மகாலிங்கனுடன் நட்பு பாராட்டாத வகுப்பு தோழர்கள், அவனது உதவி செய்யும் குணத்தினாலும் அவன் நல்லாய் படிப்பவன் என்பதாலும் மெல்ல மெல்ல அவனுடன் நல்லாய் பழகினார்கள்.

சின்னமீனாட்சி உயரமாகவும் மெல்லிய பெண்ணாகவும், அழகாகவும் வளர்ந்திருந்தாள். கணபதியார் தகப்பனிடமும் தாயிடமும் “மீனாட்சிக்கும் வயதாகிக் கொண்டு இருக்குது. அவளுக்கு கலியாணம் செய்து வைத்தால் என்ன?” என்று கேட்டார்.

ஆறுமுகத்தார் “வல்லிபுரத்திற்கு கேட்டாலென்ன?” என்று கேட்டார். விசாலாட்சி “வல்லிபுரத்திற்கு செய்து வைத்தால் நல்லது தான். சொந்தமும் விட்டு போகாது. நீங்கள் கேட்டுப் பாருங்கோ.” என்றாள்.

வல்லிபுரம் ஐந்து வயதிலிருந்தே தகப்பனுடன் மீசாலையிலிருந்து பெரியபரந்தனுக்கு லீவு நாட்களில் வந்து போவான். அவனுக்கு நாட்டுக் கூத்து ஆடுவதில் விருப்பம் அதிகம். மிகவும் சிறிய வயதிலிருந்தே அவன் நாட்டுக் கூத்து ஆடி வருகிறான்.

வல்லிபுரம் இப்போது நாட்டுக்கூத்து பழக்கும் அண்ணாவியாராக இருக்கிறான். வல்லிபுரம் தங்க நகைகளை அணிவதிலும் அதிக விருப்பம் உள்ளவன். வல்லிபுரத்திற்கு சொந்தமாக காணிகள் இருந்தன.

ஆறுமுகத்தாரும் முத்தரும் வல்லிபுரத்தின் தகப்பனிடம் போய் கதைத்தனர்.  அவர் “ஆறுமுகத்தார், உங்கடை பிள்ளையை செய்வதில் எங்களுக்கும் நல்ல விருப்பம்.” என்றார். ஒரு நல்ல நாளில் பல நல்ல காரியங்கள் நடந்த, தியாகர்வயலிலேயே வல்லிபுரத்திற்கும் மீனாட்சிக்கும் திருமணம் நடந்தது. நாட்சோறு கொடுத்தலுக்கு முருகேசரும் சின்னம்மாவும் மகாலிங்கனை கூட்டிக் கொண்டு வந்தனர்.

பேரம்பலத்திற்கு பசுக்களின் மீதும் எருமைகளின் மீதும் மிகவும் விருப்பம் இருந்தது. அதனால் ஆறுமுகத்தார் முழு எருமைகளையும் பசுக்களில் மூன்றிலொரு பங்கையும் அவனுக்கு கொடுத்தார்.

மிகுதியில் ஒரு பங்கை நல்லையனுக்கும் மற்ற பங்கை மகாலிங்கனுக்கும் ஒதுக்கி வைத்து தானே பராமரித்தார். பேரம்பலத்திற்கும் பொறுப்புக்கள் இருக்க வேண்டும் என்றே எருமைகள், பசுக்களை அவனிடம் ஒப்படைத்தார்.

அவரது எதிர்பார்ப்பை போல பேரம்பலமும் அவற்றை நல்லாய் பார்த்துக் கொண்டான். அவரது பசுக்களின் எண்ணிக்கையும் எருமைகளின் தொகையும் விரைவில் அதிகரித்தன.

பேரம்பலம் தமையனான கணபதியாரைப் போல வேட்டையாடுதலிலும் ஆர்வமாக இருந்தான்.

நல்லையன் நல்ல நிறமாக, எல்லோரிலும் அன்பு செலுத்துபவனாக, வளர்ந்து வந்தான். அவன் இப்போது நாலாம் வகுப்புக்கு வந்து விட்டான். ஏனைய மாணவர்களுடன் எவ்வித பிரச்சினைகளிலும் ஈடுபடாது படிப்பில் கவனமாக இருந்தான்.

அவனுக்கு மூத்த தமையன் ஆன கணபதியாரிலும் மீனாட்சியிலும் தான் கூடுதலான விருப்பம் இருந்தது. பாடசாலை இல்லாத நேரங்களில் கணபதியார் வீட்டிலேயே இருப்பான். மீனாட்சி அவனுக்கு விருப்பமான சாப்பாடுகளை செய்து கொடுப்பாள்.

கந்தையர் மீசாலைக்கு சாஸ்திரம் சொல்ல போன இடத்தில் ஒரு பெண்ணை கண்டு விரும்பி விட்டார். தமக்கை மீனாட்சியிடம் “அக்கா, மீசாலையில் எனக்கு ஒரு பெண்ணை பிடித்து விட்டது. அவளுக்கும் விருப்பம் தான். முறைப்படி வந்து தகப்பனிட்டை பொம்பிளை கேட்கட்டாம். நீ தான் அத்தானிடம் சொல்லி எங்களுக்கு உதவி செய்ய வேணும்.” என்று தயங்கி நின்றான்.

அன்று மாலை கணபதியார் வீடு திரும்பிய போது மீனாட்சி கந்தையரின் விஷயத்தை கூறினாள். கணபதியார் தன் சம்மதத்தை தெரிவித்ததோடு தன் தகப்பனிடமும் மாமனிடமும் சொல்லி முறைப்படி பெண் வீட்டிற்கு சென்று திருமணம் பேசி அவனது கலியாணத்தை நடத்தியும் வைத்தார்.

கந்தையர் தியாகர்வயலுக்கு அருகே இருந்த தனது காணியில் வீடு போட்டு இருக்க விரும்ப, ஊர் வழமைப்படி ஊரார் எல்லோருமாகச் சேர்ந்து அவருக்கு வீடு கட்ட உதவினார்கள்.

மகாலிங்கன் பாடசாலையில் நடந்த பேச்சுப்போட்டிகளில் பங்கு பற்றி முதலிடம் பெற்று வந்தான். சரஸ்வதி பூசையின் போது தானே, தனது வகுப்பு தோழர்களுக்கு கூத்து பழக்கி ஆட வைத்தான். சின்னம்மாவுடன் வண்ணார்பண்ணை சிவன் கோவிலில் நடைபெறும் பிரசங்கங்களை கேட்க சென்று வருவான்.

ஆறுமுக நாவலர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து பலர், பிரசங்கம் செய்து சமயத்தை காக்கும் பணியில் ஈடுபட்டனர். மகாலிங்கன் பிரசங்கங்களைக் கேட்டு கேட்டு பல விசயங்களை அறிந்து கொண்டான். அதனால் அவனுக்கு பேசுவதிலும் எழுதுவதிலும் நல்ல திறமை உண்டானது.

எல்லாம் நல்ல படியாய் நடந்து வரும் போது பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மகாலிங்கனுக்கு ஒரு பிரச்சனை வந்தது. அப்போது அவன் பத்தாம் வகுப்பில் முதலாம் தவணையில் படித்துக் கொண்டிருந்தான்.

அவனது தலைமயிர் திடீரென நரைக்க தொடங்கியது. அது இளநரை என்பதை விளங்கிக் கொள்ளாது நண்பர்கள், மகாலிங்கனின் வெள்ளை மயிர்களை தொட்டு தொட்டு கேலி பேசினர்கள். சில பிள்ளைகளுக்கு இளம் வயதில் அவ்வாறு தலைமயிர் நரைப்பது உண்டு என்பது தெரியாது. அதனால் மகாலிங்கனை கிழவன் என்று பகிடி பண்ணினார்கள். இதனால் மகாலிங்கனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.

ஒருவாறு முதலாம் தவணை சோதனையை எழுதி முடித்து விட்டு, இனி இங்கு படிக்க வருவதில்லை என்ற தீர்மானத்துடன் ஊர் போய் சேர்ந்தான்.

இளநரையால் மகாலிங்கன் கவலைப்படுறான் என்பது சின்னம்மாவிற்கு தெரியும். லீவுக்கு வீட்டுக்கு போய் வர எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தா.

வல்லிபுரத்தின் வீடு தியாகர்வயலுக்கும் கணபதியின் வீட்டுக்கும் நடுவில் இருந்தது. கணபதியார் வயலுக்கு போகும் போது ஒரு நாளைக்கு ஒருமுறை என்றாலும் அங்கே சென்று தங்கையின் சுகம் கேட்டு விட்டு தான் வருவார்.

லீவுக்கு வரும் மகாலிங்கன் தியாகர்வயலில் இல்லாவிட்டால் மாமியாரான சின்னமீனாட்சி வீட்டில் தான் நிற்பான். தன்னிலும் வயது குறைந்த நல்லையனை “குஞ்சி, குஞ்சி “என்று கூப்பிட்டு தன்னோடு அழைத்து செல்வான்.

(குஞ்சி–> குஞ்சியப்புவின் சுருக்கம்–> குஞ்சியப்பு என்பது கிராம மக்கள் சிறிய தந்தையாரை கூப்பிட பயன்படுத்தும் சொல்), (லீவு–> leave–> விடுமுறை)

மகாலிங்கன் பெரியபரந்தனில் நல்ல சந்தோசமாக லீவை கழித்தான். பாடசாலை இரண்டாம் தவணைக்காக தொடங்கும் நாள் வந்தது. வழக்கமாக பாடசாலை ஆரம்பிக்கும் நாளுக்கு முதல் நாளே வந்துவிடும் மகாலிங்கன், ஆரம்பிக்கும் தினத்திலும் வரவில்லை.

சின்னம்மாவிற்கு ஏதோ பிரச்சினை என்று விளங்கிவிட்டது. முருகேசரிடம் “நேற்றே வரவேண்டிய மகாலிங்கன் இன்றும் வரவில்லை. இளநரையை கண்டு பயந்துவிட்டான். நான் போய் புத்தி சொல்லி கூட்டி வாறன்.” என்று சொல்லிவிட்டு பெரியபரந்தனுக்கு வெளிக்கிட்டு போனா.

சின்னம்மா போய் சேர்ந்தவுடன் மகாலிங்கனை தேடினா. அவன் தியாகர்வயலால் வரவில்லை. சின்னம்மா வந்து நிற்கிறா என்றவுடன் அவனுக்கு காரணம் விளங்கி விட்டது. சின்னம்மா அவன் வர முதலே பிரச்சினையை கணபதியாருக்கும் மீனாட்சிக்கும் சொல்லி விட்டா.

சின்னம்மா வந்திருக்கிறா என்றதும், பேரம்பலத்தையும் நல்லையனையும் தியாகர்வயலில் விட்டு விட்டு, ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் மகாலிங்கனுடன் கணபதியார் வீட்டிற்கு சென்றனர். மகாலிங்கன் தயங்கி தயங்கி பேரன் பேர்த்திக்கு பின்னால் சென்றான்.

சின்னம்மா அவனைக் கண்டதும் “ஏனப்பன் வரேல்லை, வழக்கமாக முதல் நாளே வந்து விடுவாய். இன்றைக்கும் வாற நோக்கத்தை காணேல்லை.” என்று கேட்டா. அதற்கு மகாலிங்கன் “பொடியள் என்னை கிழவன் என்று பகிடி பண்ணுறாங்கள். நான் இனி அங்கை வரேல்லை” என்றான்.

விசாலாட்சி “பொடியள் சொன்னாப்போலை நீ கிழவனே? இளநரை வாறது உடம்பு வாசியாலை தான். அதுக்காக படிக்காமல் விடேலுமே?” என்று அவனுக்கு உற்சாகமூட்டினா.

ஆறுமுகத்தார் “தம்பி நீ படிக்கோணும் எண்டு தானே யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினது. நீ இப்படி இடையில் குழப்பலாமோ” என்றார். எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு மகாலிங்கன் பதில் சொல்லாமல் தலை குனிந்து நின்றான். அவனுக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்து கொண்ட மீனாட்சி “அவனுக்கு விருப்பமில்லை என்றால் விடுங்கோ. அவன் படிச்சது காணும்” என்றாள்.

எல்லாத்தையும் அவதானித்து கொண்டிருந்த கணபதியார் கிட்ட வந்தார். “தம்பி, உனக்கு விருப்பமில்லை என்றால் விடு. எனக்கு பத்து வயதில் ஐயா இறந்து போனார். படிக்க வேணும் எண்ட என்ரை ஆசையை அடக்கிக் கொண்டு, அம்மாவுடன் பெரியபரந்தனுக்கு வந்திட்டன். நான் தான் படிக்கேல்லை. நீயெண்டாலும் படிக்க வேணும் எண்டு ஆசைப்பட்டனான். நீ படிக்க கூடிய பிள்ளை. உன்னாலை ஏலாதெண்டால் நாங்கள் நெருக்கிறது சரியில்லை. சரி விடு.” என்று தான் படிக்க முடியாமல் போன கவலையுடன் சொன்னார்.

ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் கணபதியாருக்கு படிக்காத கவலை இப்பவும் இருப்பதை நினைத்து கண் கலங்கினார்கள். இவ்வளவு நேரம் அமைதியாக நின்ற மகாலிங்கன் ஒரு நாளும் கலங்காத தகப்பன் கவலைப்படுவதைக் கண்டு ஏங்கி போனான். உடனே அவன் “ஐயா, நான் போய் படிக்கிறன். நீங்கள் கவலைப்படாதீங்கோ” என்று ஓடி வந்து தகப்பனை அணைத்தபடி கண்ணீருடன் கூறினான். 

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் - ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன.

https://vanakkamlondon.com/stories/2021/03/104227/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2020 at 07:12, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இப்போதைய A9 வீதியால் அல்ல. பழைய கண்டி வீதி என்பது இயக்கச்சியால் வேளர் மோட்டை, பிள்ளை மடம், வெளிறு வெட்டி, அடையன் வாய்க்கால், பாணுக்காடு, ஊரியான், முரசு மோட்டை, பழைய வட்டக்கச்சி, கல்மடு, கொக்காவில் என்று தொடர்ந்து செல்லும். முத்தர் முரசுமோட்டையிலிருந்து குறுக்கு வழியால் வந்தார்.

 

On 1/10/2020 at 07:12, புரட்சிகர தமிழ்தேசியன் said:

( யாழ்ப்பாண வீதி இயக்கச்சியில் தென் திசையில் திரும்பி பின் ஆனையிறவு சந்தை ஊடாக வேளார் மோட்டை சென்று முரசுமோட்டை செல்லும் பழைய கண்டி வீதி இது. இப்போதைய A9 வீதி அல்ல.)

கதையை  ஆழமாக வாசிக்கவில்லை, ஆனால் பெரு வீதி ஒன்று கைவிடப்படும் போது, பொருளாதார தாக்கம் வரும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. 

அனால், கதையின் உணர்வு பூர்வத்தை இங்கே நான் குழப்ப முனையவில்லை.

பரந்த நவீன வளர்ச்சி என்று வரும் போது சில சமூக, பொருளாதார வசதிகளை விட்டுக் கொடுத்தே ஆக வேண்டும்.

பழைய கண்டி வீதி கைவிடப்படாது இருந்திருந்தால், வடக்கு அப்படியே, ஒரு சிறு நவீன வளர்ச்சி கூட இல்லாமல் இருந்திருக்கும். இதற்கான இப்போதைய உதாரணம், அம்பாந்தோட்டை. அமைந்தோட்டையில் புகையிரதப் பாதை இருந்திருந்தால், பரந்தன் இரசாயன தொழிற்சாலை அமைந்தோட்டையிலேயே அமைந்து இருக்கும். ஏனெனில், அம்பாந்தோட்டையில் நில மட்டம் கடல் மட்டத்தில் இருந்து 1 மீட்டர் ,  ஆனையிறவில் 2.5 மீட்டர். உப்பு மற்றும் அதனோடு தொடர்பு பட்ட இரசாயன பொருட்களுக்கான மூலப் பொருள் அம்பாந்தோட்டையில் கிடைப்பது ஒப்பீட்டளவில் இலகு.  

பழைய கண்டி வீதி கைவிட வேண்டி வந்தது, புகையிரதப் பாதை அமைத்த போது. 

காரணம், பழைய கண்டி வீதி மழை காலங்களில் வெள்ளத்தில் மூழ்கி விடும்.

இப்போதைய கண்டி வீதியின்(A9) இருபக்கத்திலும் ஆங்கங்கே சிறிய, பெரிய குளங்கள் இருப்பது எல்லாவற்றுக்கும் (புவியியல், பொருளியல், இயற்கை வளமான காடுகள், காலா நிலை போன்றவற்றிற்கு )   சரியாகும், இல்லாவிட்டால் குளங்களை மூட வேண்டிய நிலை வந்து இருக்கும் இதுவரையில்  இல்லாவிட்டாலும்.

மற்றும், கண்டிவீதியின் இருமருங்களும் உள்ள நிலப்பரப்பு, மிக முக்கியமாக அங்கிருக்கும் குளங்களுக்கு மழை நீரேந்தும் (catchment) பகுதி ஆகும், இதை மனித உபயோகம் என்ற பெயரில் குழப்பாமல் இருப்பதே வன்னி, வடக்கு மற்றும் சூழவுள்ள பிரதேசங்களுக்கு  உகந்தது. 

எனவே, A9 அமைக்கப்பட்டு, பழைய கண்டி வீதி கைவிடப்பட்டது, சரியான முடிவாகவே தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 28

IMG-20210320-115412.jpg

செய்தி பத்திரிகைகள் ஐரோப்பியரின் கண்டு பிடிப்பாகும். 16 ஆம் நூற்றாண்டில் வெனிஸ்சில் கையெழுத்து பிரதிகளாக வெளிவந்த பத்திரிகைகள் அரசியல், போர் செய்திகளை தாங்கி இத்தாலியிலும் ஐரோப்பாவிலும் வலம் வந்தன.

1 ஜனவரி 1832 ஆம் ஆண்டு (1st January 1832) கொழும்பு ஜேர்னல் (Colombo Journal) இலங்கையில் முதல் முதலாக வந்தது. பின்னர் 31 மார்கழி 1833 (31st December 1833) தனியார் நிறுவனங்களுக்கு வழி விடுவதற்காக அது நிறுத்தப்பட்டது.

நான் அறிந்த வரையில் சில பத்திரிகைகள் வெளிவந்த ஆண்டுகளையும் என்ன மொழியில் என்பதையும் தினசரி பத்திரிகைகளா? வாராந்த சஞ்சிகைகளா? என்பதை அட்டவணையாக தருகிறேன். தவறுகள் இருந்தால் திருத்தி உதவுக.

01. தினமின (Dinamina)  – சிங்களம் –  தினசரி  –  1909              

02. டெயிலி நியூஸ்(Daily news) – ஆங்கிலம் – தினசரி –  1918                                                          

03. சண்டே ஒப்சேவர் (Sunday observer) ஆங்கிலம் – வாரமலர் –     1928

04. சிலுமின (Silumina) – சிங்களம் – வாரமலர் –    1930                                      

05. வீரகேசரி (Veerakesari) – தமிழ் – தினசரி – 1930                                                                        

06. தினகரன் (Thinakaran) – தமிழ் –  தினசரி – 1932                                                                    

07. உதயன் (Uthayan) – தமிழ் –  தினசரி – 1985                                                                      

08. தினக்குரல் (Thinkkural) – தமிழ் – தினசரி – 1997        

..............................................

மகாலிங்கன் அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை காலமை வெளிக்கிட்டு சின்னம்மாவுடன் வண்ணார்பண்ணை போய் சேர்ந்தான். மறு நாளான புதன்கிழமை காலை பாடசாலைக்கு சென்றான். தாங்கள் பகிடி பண்ணியதால் மகாலிங்கன் படிப்பை குழப்ப முற்பட்டதை அறிந்து, அவனுக்கு தாங்கள் பிழை விட்டு விட்டோமே என்று ஏங்கியிருந்த வகுப்பு தோழர்கள், அவனைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்து முன்பு போல சகஜமாக பழகலானார்கள்.

ஆசிரியர்கள் எதுவுமே நடக்காத மாதிரி சாதரணமாக பாடங்களை கற்பித்தார்கள். இப்படியான நல்ல ஆசிரியர்களிடம் படிக்கும் வாய்ப்பையும் நல்ல வகுப்பு தோழர்களையும் இழக்க இருந்தேனே என்ற எண்ணத்தில் மகாலிங்கன் பழையபடி நன்கு படிக்க தொடங்கினான். மார்கழி மாதம் எஸ்.எஸ்.சி சோதனையை நல்லபடியாக எழுதி விட்டு பெரிய பரந்தன் திரும்பினான்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாணவர்களின் பெறுபேறுகள் வந்து விட்டன. மகாலிங்கன் கணிதம், சைவசமையம் ஆகிய பாடங்களில் விஷேட சித்தியையும் தமிழ், சரித்திரம், சுகாதாரம் ஆகிய பாடங்களில் திறமை சித்தியையும், ஆங்கில பாடத்தில் சாதாரண சித்தியையும் பெற்றான்.

ஆங்கில பாடத்தில் திறமை சித்தி கிடைக்காமை மகாலிங்கனுக்கு கவலையை கொடுத்தது. ஆசிரியர்கள் அவனிடம் “மகாலிங்கம், உனக்கு ஆங்கில பாடத்தை படித்து திறமை சித்தி பெறுவாயென்ற நம்பிக்கையிருந்தால், இந்த வருடம் ஆங்கில பாடத்துக்கு மட்டும் விண்ணப்பித்து பரீட்சை எழுதலாம்.” என்று கூறினார்கள்.

மகாலிங்கனும் சம்மதித்து ஆங்கில பாடத்துக்கு விண்ணப்பித்தான். இரண்டாம் மூன்றாம் முறை பரீட்சை எழுதுபவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து படித்து சோதனை எழுதும் வசதி இருந்தது.

முருகேசரும் சின்னம்மாவும் விசாரித்து, கிளாக்காக கொழும்பில் வேலை செய்து இளைப்பாறிய ஒருவர் ஆங்கில பாடத்தையும் சிங்கள மொழியையும் வீட்டில் வைத்து படிப்பிக்கிறார் என்று கேள்விப்பட்டு, மகாலிங்கனை அவரிடம் சேர்த்து விட்டனர். எஸ்.எஸ்.சி இற்குரிய ஆங்கில பாடத்தையும் சிங்கள மொழியை ஆரம்பத்திலிருந்தும் அவர் மகாலிங்கனுக்கு கற்பித்தார்.

கிளாக்கர் பிள்ளைகளுக்கு மொழிகளை கற்பிப்பதுடன் கொழும்பிலிருந்து வரும் ஆங்கில தேசிய பத்திரிகை ஒன்றுக்கும் தமிழ் தேசிய பத்திரிகை ஒன்றுக்கும் நிருபராகவும் செயற்பட்டார். நிருபர் வேலையில் அதிக பணம் கிடைக்காது, ஒரு ஆத்ம திருப்பதிக்காக அதனை செய்தார். அவரது எழுத்துக்கள் பத்திரிகையில் வரும் போது குழந்தைப் பிள்ளை போல மகிழ்ந்து தனது மாணவர்களுக்கும் வாசித்து காட்டுவார். (நிருபர்–>Reporter)

மகாலிங்கன் தமிழில் நன்கு எழுதுவான். அவனிடம் ஒரு செய்தியைக் கூறி எழுதும் படி செய்து திருத்துவார். மகாலிங்கனிடம் “மகாலிங்கம், செய்திகள் சுருக்கமாக, வாசிப்பவருக்கு எளிதில் விளங்கக் கூடியதாக எழுத வேண்டும். அதே வேளை கவரும் வகையிலும் எழுத வேண்டும்” என்று சொல்லிக் கொடுப்பார். மகாலிங்கனிடம் தமிழில் உள்ள செய்தியை கொடுத்து அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுத வைப்பார்.

பின்னர் அவற்றை வரி வரியாக வாசித்து திருத்துவார். மகாலிங்கன் சிறப்பாக எழுதியிருந்தால் மனமார பாராட்டுவார். அதனால் மகாலிங்கனுக்கு ஆங்கில பாடத்துடன் பத்திரிகைக்கு செய்தி எவ்வாறு எழுத வேண்டும் என்ற அறிவும் வளர்ச்சியடைந்தது.

njnjnjh.jpg

மகாலிங்கன் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பெரிய பரந்தனுக்கு போய் விடுவான். ஆசிரியர் “மகாலிங்கம், நீ ஊருக்கு போகும் போது நேரில் பார்த்த, சம்பந்தப்பட்டவர்கள் சொல்ல கேட்ட, நம்பிக்கையான செய்திகளை ஊரில் நிற்கும் போது சேகரித்து வா. அவற்றை பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பலாம்” என்று சொல்லி அனுப்புவார்.

மாடு மேய்க்கும் போது யானை துரத்திய கதை, தேன் எடுக்கப் போனவரை கரடி விறாண்டிய சம்பவம், பற்றைக்குள்  நாகபாம்பு அடை காத்துக் கொண்டு இருந்த போது பற்றைக்கு அருகால் போனவரை பாம்பு சீறி கலைத்த கதை முதலியவற்றை மகாலிங்கன் சேகரித்து வருவான். மகாலிங்கனைக் கொண்டு அவற்றை எழுதச் செய்து, திருத்தி மகாலிங்கனின் பெயரில் ‘வன்னி செய்திகள்’ என்று பெயரிட்டு ஆசிரியர் அனுப்பி வைத்தார்.

ஆசிரியர் அனுப்பும் செய்திகள் உடனுக்குடன் பேப்பரில் வந்து விடும். மகாலிங்கனின் பெயரில் அனுப்பிய செய்திகள் பல நாட்களாக வரவில்லை. ஆசிரியரும் மகாலிங்கனும் எதிர் பார்காத ஒரு நாள் பத்திரிகையில் மகாலிங்கன் எழுதி அனுப்பிய செய்தி வந்திருந்தது. ஆசிரியர் அதனை மகாலிங்கனுக்கும் ஏனைய மாணவர்களுக்கும் காட்டி மகிழ்ந்தார்.

ஒரு நாள் ஆசிரியரின் விலாசத்திற்கு மகாலிங்கனின் பெயரில் ஒரு பதிவு கடிதம் வந்தது. அதற்குள் ஒரு கடிதமும் மகாலிங்கனின் பெயருக்கு ஒரு காசுக்கட்டளையும் இருந்தன. மகாலிங்கனை இது போன்ற வன்னிச் செய்திகளை தொடர்ந்து எழுதும் படியும், வன்னியின் செய்திகளை கொழும்பு போன்ற நகரங்களில் வாழும் மக்கள் விரும்பி வாசிப்பார்கள் என்று தாங்கள் நம்புவதாகவும் கடிதம் எழுதியிருந்தார்கள்.

ஆசிரியர் மகாலிங்கனை தபால் கந்தோருக்கு கூட்டி சென்று காசுக்கட்டளையை மாற்றி அவனிடம் காசை கொடுத்து “மகாலிங்கம், இதோடை நிறுத்தி விடாதே. படிப்பு முடிந்து ஊருக்கு போனாப்பிறகும் செய்திகளை எழுதி அனுப்பு. எனது செய்திகள் பேப்பரில் வருவதை விட எனது மாணவனின் செய்திகள் வருவது தான் எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.” என்று சொல்லி மகாலிங்கனை ஊக்கப்படுத்தினார்.

மகாலிங்கன் ஆசிரியருக்கு நன்றியைக் கூறி விட்டு, வீட்டை போய் “சின்னம்மா இது என்ரை முதல் உழைப்பு” என்று சொல்லி காசை சின்னம்மாவிடம் கொடுத்தான். சின்னம்மா “அப்பன், நீ இதை மீனாட்சியிடம் தான் கொடுக்க வேணும், அவள் சந்தோசப்படுவாள். இப்ப நான் வைத்திருந்து நீ ஊருக்கு போகும் போது தாறன்” என்று சொல்லி காசை தகர றங்குப் பெட்டிக்குள் வைத்தா.

மகாலிங்கன் ஆங்கிலத்தையும் சிங்களத்தையும் கற்றுக்கொண்டு இருக்கும் போது பெரிய பரந்தனிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. அவனது சிறிய தகப்பனாரான பேரம்பலத்திற்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. மகாலிங்கன் ஆசிரியரிடம் “ஐயா, என்னுடைய குஞ்சியப்புவிற்கு கலியாணம்.  எனக்கு ஒரு கிழமை லீவு தாருங்கள்.” என்று கேட்டான்.

ஆசிரியர் “மகாலிங்கம் தாராளமாக போய் வா. புத்தகங்களை கொண்டு போ. இரவு படுப்பதற்கு முன் கொஞ்ச நேரம் வாசிக்க மறந்து விடாதே.” என்று சொல்லி அனுப்பி வைத்தார். சின்னம்மா “தம்பி, நாங்கள் அங்கை வந்து கிழமை கணக்கில் நிக்க ஏலாது. நாள் சோறு கொடுக்கிற அண்டைக்கு அப்புவோடை வாறன். நீ இப்ப போட்டு வா” என்றா.

மகாலிங்கனுக்கு பெரிய பரந்தனுக்கு போய் சேர்ந்த நாள் தொடக்கம் சரியான வேலை. ஆறுமுகத்தார், கலியாணத்திற்கு பிறகு பேரம்பலம் மனைவியோடு இருப்பதற்காக தனது காணியில் ஒரு வீடு போட எண்ணினார். கணபதி, பேரம்பலம், கந்தையா, முத்தர்கணபதி எல்லோருமாகச் சேர்ந்து வீடு கட்டும் வேலைகளை செய்தனர்.

மகாலிங்கனும் சந்தோசமாக எல்லா வேலைகளையும் செய்தான். நல்லையன் மகாலிங்கனோடையே திரிந்தான். என்ன வேலையிருந்தாலும் மகாலிங்கன் இரவில் வாசிக்கும் பழக்கத்தை விடவில்லை.

தென்மராட்சியில்   பரம்பரை விஷகடி வைத்தியராக இருந்த நவசிவத்தின் பேரனும், பெரிய பரந்தனுக்கு அடிக்கடி வந்து போகும் விஷகடி வைத்தியர் வல்லிபுரத்தின் மகனுமான வேதவனம் குஞ்சுப்பரந்தன் விதானையார் குடும்பத்தில் கலியாணம் செய்து கொண்டார்.

விஷகடி வைத்தியரான வேதவனம் கொல்லனாற்றின் மேற்கு கரையில், குஞ்சுப் பரந்தனில், பூனகரி வீதிக்கு தெற்கு பக்கமாக தங்கள் பரம்பரை காணியில் வீடு போட்டுக் கொண்டு வந்து குடியேறினார். இனிமேல் பாம்பு கடியால் பாதிக்கப்படும் மூன்று கிராம மக்களும் சாவகச்சேரிக்கு ஓடத் தேவையில்லை என்று ஊர் மக்கள் நிம்மதியடைந்தனர்.

பேரம்பலத்தின் நாட்சோறு கொடுக்கும் நிகழ்வின் போது, முத்தர் முன்பு போல ஆரோக்கியமானவராக இல்லை என்பதை அவதானித்த மகாலிங்கன் முத்தர்கணபதியிடம்,

“அண்ணை, என்ன பெரியப்பு இப்படி இருக்கிறார்” என்று கேட்டான். “ஓம் தம்பி, இப்ப ஐயாவுக்கு அடிக்கடி இருமல் காய்ச்சல் வருகுது. நானும் அவரை வைத்தியம் பார்க்க கூட்டி கொண்டு போகாத இடமில்லை. அவையின்ரை மருந்துக்கு கொஞ்ச நாள் சுகமாய் இருப்பார். பிறகு திருப்பி வருத்தம் வந்து விடும்” என்று முத்தர்கணபதி சொல்லி கவலைப்பட்டான்.

கலியாணவீடு முடிய யாழ்ப்பாணத்திற்கு மகாலிங்கன் போய் ஒரு மாதம் முடிவதற்கிடையில் கணபதியார் மகனை தேடி வந்தார். அவரது கவலையான முகத்தைக் பார்த்து ஏதோ நடக்கக் கூடாத சம்பவம் நடந்து விட்டது என்பதை மகாலிங்கன் விளங்கி கொண்டான்.

அவன் தகப்பனிடம் “ஐயா, என்ன நடந்தது” என்று பதறிப்போய் கேட்டான். கணபதியார் “தம்பி முத்தர் அம்மான் எங்களை விட்டிட்டு போய்விட்டார். நான், சின்னம்மாவுக்கும் மாமாக்கும் சொல்லிப் போட்டு, உன்னையும் கூட்டிக் கொண்டு போக வந்தனான்.” என்றார்.

சின்னம்மா “தம்பி, நீ ஐயாவுடன் போ. நான் வாத்தியாரிட்டை சொல்லி விடுறன். நாங்கள் நாளைக்கு எடுக்கும் போது வாறம்” என்றா. தகப்பனுடன் பெரிய பரந்தனுக்கு போன மகாலிங்கனுக்கு துக்கம் தாங்க முடியவில்லை. ஊரில் உள்ள எல்லோரும் எல்லாத்துக்கும் முத்தர் அம்மானிடம் தான் போவார்கள். இனி என்ன செய்வது என்ற ஏக்கம்.

ஆறுமுகத்தாருக்கு துயரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை, முத்தருக்கு பக்கத்திலேயே அரற்றிக் கொண்டு இருந்தார். தம்பையரும், முத்தரும், தானும் முதல் முதல் காடு வெட்ட வந்து பட்ட கஷ்டங்களை திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டே இருந்தார். தனது இரண்டு கூட்டாளிகளும் போய்விட்டார்கள், தன்னை மட்டும் கடவுள் ஏன் விட்டு வைத்திருக்கிறார் என்று கலங்கிப் போனார்.

முத்தர் இறந்து போனதால் தனது மூத்த சகோதரனை இழந்ததைப் போல விசாலாட்சி துடித்துப் போனா. கூட்டாளியை இழந்து தனது கணவர் படும் தாங்கோணாத துயரத்தை  என்ன சொல்லி குறைப்பது என்று விசாலாட்சி தவித்துப்போய் கணவரையே ஏக்கத்துடன் பார்த்தாள்.

எல்லோருமாக செய்ய வேண்டிய சடங்குகளை செய்து, முத்தரை மயானத்திற்கு தூக்கி கொண்டு போக, தலையை மொட்டை போட்டுக் கொண்ட முத்தர்கணபதி அழுதுகொண்டே கொள்ளிவைத்தான். முத்தரின் உடம்பு தான் எரிந்ததே தவிர அவர் தம்பையருடனும் ஆறுமுகத்தாருடனும் வந்து பெரிய பரந்தனை உருவாக்க செய்த அர்ப்பணிப்புகள் ஊர் மக்கள் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெற்றது.

எட்டு செலவு முடிய மகாலிங்கன் மீண்டும் யாழ்ப்பாணம் போய் ஆங்கிலத்தை கவனமாக படித்தான். பரீட்சையும் நெருங்கி கொண்டு வந்தது.

பெரிய பரந்தன் மக்கள் முத்தரின் முப்பத்தொன்று வரை துக்கம் காத்தவர்கள் கோவிலுக்கு பூசை செய்வது யாரென்று தீர்மானிக்க பிள்ளையார் கோவில் முன்றலில் கூடினார்கள். ஆறுமுகத்தாரும் முழு மனமின்றி கூட்டத்திற்கு வந்திருந்தார்.

எல்லோரும் ஆறுமுகத்தார் பூசை செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். ஆறுமுகத்தார் முத்தர்கணபதி பூசை செய்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதினார். முத்தர்கணபதி “ஐயோ மாமா, தலை இருக்க வால் ஆடக்கூடாது. ஐயாவுடன் சேர்ந்து இவ்வளவு நாளும் நீங்கள் தான் பூசை செய்தீர்கள். உங்களால் முடியாத காலத்தில் என்னை விட மூத்தவரான கணபதி அண்ணன் இருக்கிறார். அதற்குள் எனக்கு என்ன அவசரம். தயவு செய்து ஊர் நன்மைக்காக நீங்களே பூசையை செய்யுங்கள். நான் உங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து தருவேன்.” என்று மிகவும் பணிவாக கேட்டு கொண்டான்.

ஆறுமுகத்தாரும் ஏற்றுக்கொண்டு பூசையை செய்யலானார். முத்தர்கணபதியும் ஆறுமுகத்தாருக்கு கூறியவாறு கோவில்களை கூட்டுதல், பூக்களை பறித்தல், மாலைகளை கட்டுதல், தேங்காய் எண்ணையில் எரியும் மண் விளக்குகளை துடைத்து எண்ணை விட்டு திரிகளைப்போடுதல், கற்பூரம் எரிக்கும் மண் சிட்டிகளை கழுவி வைத்தல், தண்ணீர் அள்ளிக் கொண்டு வந்து வைத்தல் என்று எல்லா ஆயத்தங்களையும் செய்து வைப்பான். ஆறுமுகத்தாருக்கு பூசை செய்தல் இலகுவாயிற்று.

அடுத்த வருடம் சோதனை மறு மொழி வந்த போது மகாலிங்கன் ஆங்கில பாடத்தில் திறமைச்சித்தி பெற்றிருந்தான். ஆசிரியருக்கு வீட்டிலிருந்து கை குத்து அரிசி, தேன், நெய் எல்லாம் கொண்டு போய் கொடுத்து, நன்றியை தெரிவித்து கொண்டான்.

ஆசிரியர் மகிழ்ச்சியடைந்து “மகாலிங்கம், ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரைக்கும் பத்திரிகைக்கு செய்திகளை எழுதி அனுப்ப மறவாதே” என்று கூறி அனுப்பி வைத்தார். மகாலிங்கன் பேரனிடமும் சின்னம்மாவிடமும் சொல்லி விடை பெற்றுக்கொண்டு, தனது எதிர்கால வாழ்வு எப்படி அமையப் போகின்றதோ என்ற சிந்தனையுடன் பெரிய பரந்தன் போய்ச் சேர்ந்தான்.

பேரம்பலத்திற்கு பத்திரிகை படிக்கும் பழக்கம் இருந்தது. பரந்தனில் பேப்பர் கடையில் போய் வாங்கி வந்து உடனும் ஒரு முறை வாசித்து விடுவார். மாலை நேரத்தில் வாசிக்க தெரிந்த, வாசிக்க தெரியாத கிராமத்து மக்கள் வந்து கூடுவார்கள். பேரம்பலம் அவர்களுக்கு வாசித்து காட்டுவதுடன் அவற்றின் விபரங்களையும் விளக்கமாக சொல்லுவார்.

பாடசாலைக்கு அடுத்த படியாக பேரம்பலம் தான் கற்கிணறு கட்டினார். பூவலில் தண்ணீர் அள்ளும் மக்களுக்கு அவர் கற்கிணறு கட்டிக்கொண்டது புதினமாக இருந்தது. அவரை தொடர்ந்து வைத்தியரும் வேறு சிலரும் கற்கிணறு கட்டிக்கொண்டாலும் முதலில் கட்டியதால் பேரம்பலத்தின் வளவே கிணத்தடி வளவு என்று அழைக்கப்பட்டது.

தம்பையரின் இழப்பை தாங்க முடியாது ஆறுமுகத்தார் துவண்டபோதெல்லாம் முத்தர் தான் அவரை தேற்றி இயங்க வைத்தவர். இப்போது முத்தரும் போன பிறகு ஆறுமுகத்தார் மனதளவில் உடைந்து போனார். அது அவரது உடல் நிலையையும் பாதித்தது.

மனிதரின் வாழ்க்கை நிரந்தரமற்றது என்பதை நன்கு உணர்ந்த ஆறுமுகத்தார் தனது கடமைகளை சரியாக செய்து முடிக்க எண்ணினார். தான் வெட்டி உரிமையாக்கிய இரண்டு காணிகளில் பேரம்பலம் குடியிருக்கும் காணியை பேரம்பலத்திற்கும் மற்ற காணியை நல்லையனுக்கும் எழுதி வைத்தார். விசாலாட்சியுடன் கதைத்து தம்பையரால் வெட்டப்பட்ட தியாகர் வயலை கணபதியாரின் பெயரில் முறைப்படி எழுதி வைக்கச் செய்தார்.

நல்லையனும் எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி தமையனான பேரம்பலத்துடன் வயல் வேலைகளை செய்யத் தொடங்கினான். ஆறுமுகத்தார் வயல் வேலைகளை பிள்ளைகளிடம் பகிர்ந்து கொடுத்து விட்டு, கோவில் பூசை செய்யும் கடமையை மட்டும் தான் செய்து வந்தார்.

மகாலிங்கன் பேப்பருக்கு செய்தி எழுதி அனுப்புவதுடன், தான் படித்த படிப்பை மூன்று கிராம மக்களுக்கும் உதவிகள் செய்வதில் கழித்தான். காணிகளை பதிவு செய்வதற்கு கந்தோர்களுக்கு அழைத்து செல்வது, வீட்டில் பிறக்கும் பிள்ளைகளின் பிறப்பை உரிய நேரத்தில் பதிந்து கொள்ள விதானையாரிடம் கூட்டி செல்வது, துவக்கு வாங்க விரும்புபவர்களுக்கு அதற்கான அனுமதிப்பத்திரம் பெற விண்ணப்பம் அனுப்புவது போன்ற உதவிகளை செய்தான்.

பேப்பர் படிப்பது மக்களின் அறிவை விசாலமாக்கும் என்பதை மகாலிங்கன் நன்கு அறிந்திருந்தான். சிறிய தகப்பனார் கிணத்தடி வளவில் சிலருக்காவது பேப்பர் படித்து விளக்கம் சொல்வதை மகாலிங்கன் விரும்பினான்.

ஒரு பொதுவான இடத்தில் வாசிகசாலை ஒன்றை கட்டி, வாசிக்கும் பழக்கத்தை விரிவாக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை தோழர்களுடன் கலந்து ஆலோசித்தான். பெரியவர்களுடனும் அதைப் பற்றி கதைத்தான். மகாலிங்கனின் அந்த விருப்பம் நிறைவேற பொறிக்கடவை அம்மன் தான் அருள் செய்ய வேண்டும்.

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் - ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன.

https://vanakkamlondon.com/stories/2021/03/104996/

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 29

billionphotos-1642094_medium2000.jpg

ஶ்ரீ லங்காவில் உள்ள நீதிமன்ற முறைகள் (Structure of the Courts System in Sri Lanka) பின்வருமாறு:

    சுப்ரீம் நீதிமன்றம் (Supreme Court)

    அப்பீல்கள் செய்வதற்கான நீதிமன்றம் (Courts of appeal)

    உயர் நீதிமன்றம் (High Court)

    மாவட்ட நீதி மன்றம் (District Court)

    மாஜிஸ்ரேட் நீதிமன்றம் (Magistrate’s Court)

    பிறைமறி நீதிமன்றம் (Primary Court)

இரண்டு வகையான வழக்குகள் ஶ்ரீ லங்காவின் நீதிமன்ற முறைமைகளின் கட்டமைப்பில் இருந்தன.

1. கிரிமினல் வழக்குகள் (Criminal Cases)

2. சிவில் வழக்குகள் (Civil Cases)

கிரிமினல் சட்டத்திற்கான (Criminal Law) வழக்குகள் மாஜிஸ்ரேட் நீதிமன்றங்களிலும் உயர்நீதிமன்றங்களிலும் விசாரிக்கப்பட்டன.

சிவில் சட்டத்திற்கான வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டன. இவை நான் அங்கை இங்கை தேடி எடுத்து எழுதியது. யாரும் சட்டம் பற்றி தெரிந்தவர்கள், இதில் பிழை கண்டால் திருத்தி உதவுக.

.........……......................................

வண்ணார்பண்ணையால் திரும்பி வந்த மகாலிங்கன், பெரிய பரந்தனுக்கு வந்து தனது நாட்களை வீணாக கழிக்கவில்லை. அவன் வயல்களுக்கு நடுவே பிறந்து, வரம்புகளில் தவழ்ந்து, வயல்வெளிகளில் ஓடி விளையாடியவன். வயல் வேலைகள் அவனது இரத்தத்துடன் கலந்தவை.

அதனால் சேற்றில் இறங்கி வரம்புகளை கட்டுவதற்கும், நெல்லை பலகை அடித்து விதைத்த போது சேற்று மண்ணை மிதித்து, உழக்கி எருமை மாடுகளை கொண்டு பலகை அடித்து, முளை நெல்லை விதைத்தலிலும் கணபதியாருக்கு உதவியாக இருந்தான்.

லாந்தர் விளக்கில் இரவு நேரங்களில் புத்தகங்களை வாசிப்பதை மட்டும்   அவன் நிறுத்தவில்லை. இடைக்கிடை பத்திரிகைகளுக்கு செய்திகளை எழுதி அனுப்பிக் கொண்டிருந்தான்.

ஆறுமுகத்தார் மிகவும் பலவீனமாகவே இருந்தார். அதனால் தகப்பனிடம் “ஐயா, அப்பு மிகவும் பலவீனமாக இருக்கிறார்.  நல்லையா குஞ்சியும் சின்ன ஆள். அதனால் நான் தியாகர்வயலில் அப்புவுடனும் ஆச்சியுடனும் இரவில் தங்கிறன்.” என்று சொன்னான்.

மீனாட்சியும் “அவன் சொல்லுறபடி செய்யிறது தான் சரி.” என்றாள். மகாலிங்கன் பகலில் கணபதியாருடன் வயல் வேலைகளை செய்து விட்டு இரவு தியாகர்வயலுக்கு சென்று விடுவான்.  நல்லையனும் பகலில் பேரம்பலத்துடன் சேர்ந்து வயல் வேலைகளை செய்து விட்டு இரவில் தாய், தகப்பனுடன் சென்று தாங்குவான். ஆறுமுகத்தார் காலையில் வழமை போல எழும்பி காலைக்கு போய் மாடுகளை திறந்து விடவும், பால்கறக்கவும், விறகு வெட்டவும் தண்ணீர் அள்ளவும் பார்ப்பார்.

மகாலிங்கன் “அப்பு, நீங்கள் ஒரு வேலையும் செய்யாதேங்கோ. நான் இருக்கிறன் தானே. நான் எல்லாத்தையும் செய்வன். நீங்கள் ஆறி இருந்தால் காணும்” என்பான்.

விசாலாட்சி “தம்பி, உவருக்கு நல்லாய் சொல்லு. நான் சொன்னா கேக்கிறாரில்லை. எங்கையெண்டாலும் விழுந்து கையை காலை முறித்தால் பேந்தென்ன செய்யிறது” எண்டு சொல்லுவா.

அதற்கு ஆறுமுகத்தார் “தம்பி, அடித்த கையும் காலும் சும்மா இருக்க விடுகுதில்லை.” என்பார்.

மகாலிங்கம் அடிக்கடி கந்தையர் வீட்டிற்கும், வல்லிபுரத்தார் வீட்டிற்கும், முத்தர்கணபதி வீட்டிற்கும் சென்று வருவான். ஒரு நாள் மகாலிங்கன் மாமனான கந்தையர் வீட்டிற்கு சென்றான்.  முற்றத்தில் ஏதோ வேலையை செய்துகொண்டிருந்த மாமி “வா மகாலிங்கம். மாமா சாதகம் எழுதிக்கொண்டிருக்கிறார். இண்டைக்கு எழுதி முடித்து கொடுக்கவேணும் எண்டவர். நீ போய் அவரைப் பார்.” என்றா.

மகாலிங்கன் உள்ளே போக, மாமியும் பின்னால் வந்தா. சாதகத்தை எழுதி முடித்து எழுதிய பேனையின் முனையை குத்தி உடைத்தவாறு கந்தையர் “வா, மகாலிங்கம், வந்து இரு” என்றார். மாமி தேனீர் போட உள்ளே போக ஆயத்தமானா.

“இப்ப தேனீர் வேண்டாம், மாமி” என்று மகாலிங்கன் தடுத்தான். அப்போது கந்தையர் சிரித்துக் கொண்டே தனது மனைவியைப் பார்த்து “மகாலிங்கன் இப்ப பெரிய ஆளாகியிட்டான். இவன் சின்னாளாய் இருக்கேக்கை என்ன செய்தவன் எண்டு உனக்கு தெரியுமோ” என்று சொல்லி சிரித்தார்.

“பிள்ளை அப்பிடி என்ன செய்தவன்” என்று மாமி கேட்டா. வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு “இவனுக்கு அப்ப எட்டு வயசிருக்கும். ஒரு நாள் தன்னை சுட்டதீவு கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போ எண்டு கேட்டான். அக்கா அவன் அவ்வளவு தூரம் நடக்கமாட்டான் எண்டு மறிக்க மறிக்க நானும் கூட்டிக் கொண்டு போட்டன். போகேக்கை என்னோடை ஓடி ஓடி நடந்து தான் வந்தவன். அங்கை சொல்ல சொல்ல கேளாமல் பொடியளோடை ஓடி விளையாடி களைத்துப் போனான். பூசை முடிய நிறைய மோதகம், வடை, புக்கை சாப்பிட்டான். கோவில் பூசை முடிந்து திரும்பி போவம் என்று நான் சொல்ல அவன் வயித்துக்குத்து எண்டு கத்தி துடித்தான். இவனைத் தூக்கி தோளிலை வைத்துக் கொண்டு நடந்து வந்தன்.  அனுங்கியபடியே தோளில் இருந்தான். அக்கா மறுக்க மறுக்க கூட்டிக்கொண்டு வந்தனான். என்ன பேச்சு பேசப்போறாவோ எண்டு பயந்து கொண்டு தான் போனேன். தியாகர்வயலுக்கு கிட்ட வந்தவுடனை தோளிலையிருந்து குதித்து சிரித்துக் கொண்டே ஒரே ஓட்டமாய் ஓடியிட்டான். நான் திகைத்துப் போனேன்” என்று அடக்க முடியாமல் சிரித்தார்.

மகாலிங்கனுக்கும் சிரிப்பு வந்து விட்டது. “அது அப்ப சின்ன வயசில் நடந்தது, மாமி” என்று சொல்லி சிரித்தான். மாமிக்கும் மகாலிங்கனின் குறும்பை கேட்டதும் அடக்க முடியாத சிரிப்பு வந்தது.

பேரம்பலம் ஆறுமுகத்தாரை போல உயரம் பெருப்பமான ஆள். அவர் தலைப்பா கட்டிக்கொண்டு, வேட்டியை மடிச்சுக்கட்டி, இடது தோளில் பன்னிரண்டாம் நம்பர் துவக்கை வைத்து இடக்கையால் பிடிச்சுக்கொண்டு, எருமைகளை காட்டுக்குள் உள்ள நீர்நிலைக்கு கலைத்துக்கொண்டு போவார்.

சில எருமைகள் தனித்தனியாக சென்றன. அவை நன்கு பழகிய எருமைகள். சிலவற்றை சோடி சோடியாக பிணைத்திருப்பார். ஒன்று பழகியதாகவும் மற்ற எருமையை கட்டுப்படுத்தி திரும்ப பட்டிக்கு கொண்டு வரக்கூடியதாகவும் இருக்கும்.

அநேகமான எருமைகளின் கழுத்தில் ‘சிறாப்பை’ கட்டியிருப்பார். (மணி போல மரப்பலகையில் செவ்வகவடிவில் ‘சிறாப்பை’ செய்யப்பட்டிருக்கும். மணியை அடிக்கிற நாக்கு போல சிறாப்பையின் நடுவில் நன்றாக செதுக்கிய மரத்துண்டாலான நாக்கு தொங்கும்.) எருமைகள் நடக்க நடக்க சிறாப்பையிலிருந்து “கடக்”, “கடக்” என்று சத்தம் வரும். சத்தம் கேட்டதும் பார்த்தால் எருமைகளின் பின்னே துவக்குடன் நிமிர்ந்த நடையுடன் பேரம்பலம் செல்வது ஒரு மைல் தூரத்திலிருப்பவர்களுக்கும் தெரியும்.

பேரம்பலம் காட்டினுள் சென்ற சில மணி நேரத்துக்குள் வெடிச்சத்தம் கேட்கும். சத்தத்தை வைத்தே மகாலிங்கன் “முயலோ, கௌதாரிகளோ விழுந்து விட்டது” என்றும், சில நேரங்களில் “பண்டாரம்” என்றும் சொல்லி விடுவான். (‘பண்டாரம்’ என்றால் குறி தப்பிவிட்டது என்பது கருத்து). திரும்பி வரும் போது பேரம்பலத்தின் வலது கையில் இரண்டு முயல்களோ, நான்கு ஐந்து கௌதாரிகளோ அல்லது ஒரு உக்குளானோ இருக்கும். (உக்குளான்–> ஒரு வகை சிறிய மான் போன்று இருக்கும்–> அதனை ‘சருகுமான்’ என்றும் சொல்வார்கள்)

பின்னேரம் பட்டிக்கு எருமைகள் வராவிட்டால் பிணைத்த எருமைகள் பற்றைகளில் சிக்குப்பட்டிருக்கும் என்று தெரிந்து பேரம்பலம் தேடி செல்வார். சிறாப்பை சத்தத்தில் எருமைகளை கண்டு பிடித்து, மீட்டு சாய்த்து வருவார்.

பேரம்பலத்தாரின் மனைவி ஒரு பெரிய பானை நிறைய சோறும் ஒரு பெரிய சட்டி நிறைய இறைச்சி கறியோ, மரை வத்தல் கறியோ காய்ச்சி வைத்து விடுவா. மத்தியான சாப்பாட்டு நேரம் கிணத்தடி வளவால் அல்லது அதற்கு கிட்டவாய் ஆர் போனாலும் பேரம்பலம் கூப்பிட்டு சாப்பாடு கொடுத்து தான் அனுப்புவார். சாப்பிடாவிட்டால் அவருக்கு கோபம் வந்து விடும்.

தைப்பொங்கல், சித்திரை வருடம், தீபாவளிக்கு உறவினர்கள் வீட்டு பிள்ளைகள் எல்லாரும் பேரம்பலம் வீட்டுக்கு போய் சாப்பிட வேணும். யாராவது போகாவிட்டால் வீடு தேடி வந்து விடுவார். அதனால் எங்கு போகாவிட்டாலும் எல்லாரும் அவரிடம் சென்று விடுவார்கள். மகாலிங்கன் முதல் ஆளாய் போய் அவர் வீட்டில் சாப்பிட்டு விடுவான்.

மகாலிங்கன் தகப்பனாரான கணபதியாரிடமே துவக்கு சுட பழகினான். கணபதியார் ஒரு சிறந்த வேட்டைக்காரன். காட்டுக்குள் போகும் போது பற்றைகளின் மறைவில் போக வேண்டும் என்றும், கதைத்துக் கொண்டு போக கூடாது என்றும், எங்கு எந்த மிருகம் இருக்கும் என்றும் கணபதியார் சொல்லி கொடுப்பார். கணபதியார் இன்றும் பறங்கியர் அன்பளிப்பாக குடுத்த அதே பதினாறாம் நம்பர் துவக்கையே பயன் படுத்தினார்.

(கணபதியார் பிற்காலத்தில் தனது பேரப்பிள்ளைகளுக்கும் பறங்கியர் கொடுத்த அதே துவக்கால் சுடப்பழக்கினார். நாட்டில் குழப்ப நிலை உண்டாகி தனியார் எல்லாரும் துவக்குகளை ஒப்படைக்க வேண்டும் என்று அரசு அறிவிக்கும் வரைக்கும் அந்த துவக்கு மூன்று தலைமுறையாக கணபதியார் குடும்பத்தில் இருந்தது.)

வேதவனம் சிறந்த விஷகடி வைத்தியராக இருந்தபடியால் மக்கள் சாவகச்சேரிக்கு அலையும் நிலை மாறிவிட்டது. அவர் எல்லோருடனும் அன்பாக பழகினார். மற்ற பாம்புகள் மக்களை எதேட்சையாக தான் சந்தித்தன. நாகபாம்புகளும் சாரைப்பாம்புகளும் மக்களின் வீடுகளையே சுற்றி வந்தன.

வீடுகளில் நெல் இருந்தபடியால் எலிகளும் வந்தன. பாம்புகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு எலிகளாகும்.  கோழிக்குஞ்சுகளும் கோழி முட்டையும் பாம்புகளுக்கு விருப்பமான உணவுகள் தான். நாகமும் சாரையும் அடிக்கடி மனிதரை காண்பதால் கண்டபடி கடிப்பதில்லை, மிதித்தால் மட்டுமே கடிக்கும். மக்கள் இடைக்கிடை பாம்புக்கடிக்கு உள்ளானார்கள். வேதவனத்தார் பார்வை பார்த்து மருந்து கொடுப்பார். ஒரு கிழமை வரை தனது வீட்டில் வைத்து, பராமரித்து வைத்தியம் செய்வார்.

பேரம்பலத்தாருக்கு பேப்பர் வாசிக்கும் போது அதில் வரும் வழக்குகளின் தீர்ப்பை படிக்க படிக்க, கோட்டுகளுக்கு போய் வழக்குகளை நேரே பார்த்தால் என்ன? என்ற எண்ணம் வந்தது.

அப்போது கிளிநொச்சியில் ஒரு கிராம கோட் இருந்தது. அங்கே சிறிய வழக்குகள் விசாரிக்கப்பட்டன. வழக்கில் லோயர்கள் (lawyer–> நியாயவாதி –> சட்ட நிபுணர்) வழக்காளிகள், எதிர்தரப்பினர், சாட்சிகளிடம் கேட்கும் கேள்விகளையும் அதற்கு அவர்கள் சொல்லும் பதில்களையும் பேரம்பலம் மிகவும் அவதானமாக கேட்பார்.

பின்னர் வீட்டில் வந்து அவரை தேடி வரும் ஊரவர்களுக்கு லோயர்கள் கேள்வி கேட்ட முறையையும் சாட்சிகள் பயந்து பயந்து சொன்ன பதில்களையும் நடித்து காட்டுவார். அவர் தோழர்களிடம் வழக்கின் தீர்ப்பின் முதல் நாள் “பார் இன்று எதிரிக்கு சார்பாய் தான் தீர்ப்பு வரும். சாட்சியை லோயர் மடக்கி மடக்கி கேள்வி கேட்டு குழப்பி விட்டார்” என்பார்.  அவர் சொன்னபடி நடந்துவிட்டால் தோழர்களுக்கு அன்று கள்ளு விநியோகமும் நடக்கும்.

சாவகச்சேரியில் பெரிய கோட் இருந்தது. அங்கை வந்தால் அப்புக்காத்து குமாரசாமி, அப்புக்காத்து நவரத்தினம் வழக்கு பேசுவதை நேரே பார்க்கலாம், அவர்கள் அந்த மாதிரி வழக்கு பேசுவார்கள் என்று அவரது சிநேகிதரான செல்லையர் உசுப்பேத்தி விட்டார்.

பேரம்பலம் எருமைகளையும் மாடுகளையும் காட்டில் மேய விட்டு விட்டு வந்து குளித்து வெளிக்கிட்டு மடித்து கட்டிய வேட்டியுடனும் தலைப்பாக்கட்டுடனும் வெளிக்கிட்டு விடுவார். வழக்கு முடிந்து வந்து மாடுகளை சாய்க்க இருண்டு விடும்.

மகாலிங்கன் ஆறுமுகத்தாரிடம் “நீங்கள் குஞ்சியப்புவை அப்புக்காத்துக்கு படிப்பிச்சிருக்கலாம்” என்று சொல்லுவான். அவர் “எனக்கு உதெல்லாம் தெரியாதடாப்பா” என்பார். அப்புக்காத்து குமாரசாமி பேசிய வழக்குகளையும் அப்புக்காத்து நவரத்தினம் பேசிய வழக்குகளையும் பேரம்பலத்தார், அக்குவேறு ஆணிவேறாக விளங்கப்படுத்த அவரிடம் வழக்கு விபரம் கேட்க வரும் ஆட்கள் தொகை கூடியது.

செல்லையர், பேரம்பலத்தாரின் பாலிய கால நண்பர். அவருக்கும் கோட்டுகளில் நடக்கும் விசாரணைகளை பார்ப்பதில் மிகவும் விருப்பம். வழக்கு நடைபெறும் நாளில் செல்லையர் பேரம்பலத்தாருக்காக கோட் வாசலில் காத்திருப்பார்.

நாட்கள் போகப்போக ஆறுமுகத்தார் தளர்ந்து கொண்டே வந்தார். அவர் பூசை செய்ய வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு வெளிக்கிட, எங்கை நின்றாலும் மகாலிங்கன் ஓடி வந்து விடுவான். அவரை கையைப் பிடித்து கூட்டி செல்வான்.

கோவிலில் முத்தர்கணபதி எல்லா வேலைகளையும் செய்து வைத்திருப்பார். அவர் நடக்கமுடியாமல் கஷ்டப்படுவதைப் பார்க்க மகாலிங்கனின் கண்கள் கலங்கி விடும். அவன் நல்லையனிடம் “குஞ்சி, இனிமேல் அப்புவை வண்டிலில் தான் கொண்டு வரவேண்டும்.” என்று சொல்லி விட்டான்.

மகாலிங்கனும் நல்லையனும் ஆறுமுகத்தாரோடை வண்டிலில் போக, மணி அடிக்கும் சத்தம் கேட்க விசாலாட்சியும் நடந்து வந்து விடுவா.  நடந்து வரும் போது விசாலாட்சிக்கு ஆறுமுகத்தாரைப் பற்றிய கவலை வந்து விடும். மகாலிங்கனை அவர் தனது சொந்த பேரனாகவே நினைத்தார். அவருக்கு அவன் தம்பையரின் பேரன் என்ற நினைப்பே இல்லை.

மகாலிங்கனும் ஆறுமுகத்தாரில் அளவில்லாத அன்பு வைத்திருந்தான். ஆறுமுகத்தாரை நினைக்க விசாலாட்சிக்கு கவலையையும் தாண்டி ஒரு பிரமிப்பு உண்டாகும். தான் திருமணத்தின் முன் கேட்ட இரண்டு நிபந்தனைகளில் ஒன்றைக்கூட அவர் மீறியதில்லை. அதேவேளை தனது பிள்ளைகளுக்கும் எந்த குறையையும் வைக்கவில்லை. பூசை முடிய விசாலாட்சியும் ஆறுமுகத்தாரை அணைத்தபடி வண்டிலிலேயே வருவாள்.

ஒரு நாள் ஆறுமுகத்தார் கணபதியாரையும் பேரம்பலத்தையும் கூட்டிவரும் படி நல்லையனை அனுப்பினார். எல்லாரும் தியாகர்வயலில் வந்து கூடினார்கள். மீனாட்சியும் அரக்க பறக்க ஓடி வந்து விட்டாள். ஓடி வந்த மீனாட்சி, நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு தலைவாசலினுள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்தாள்.

ஆறுமுகத்தார் கவலையுடன் தரையில் அமர்ந்து இருந்தார். விசாலாட்சி சுவரில் சாய்ந்து கொண்டு, தரையில் கணவரையே பார்த்தபடி இருந்தாள். ஒரு பக்கம் கணபதியாரும் பேரம்பலமும் தகப்பனின் கோலத்தை பார்த்து கவலையுடன் நின்றார்கள்.

கணபதியார் ‘ஒரு நாளும் எல்லாரையும் ஒன்றாக கூப்பிடாத ஐயா, இண்டைக்கு என்ன சொல்லப்போறாரோ’ என்று யோசித்துக்கொண்டு நிற்பதை மீனாட்சி ஊகித்துக்கொண்டாள்.

மகாலிங்கனும் நல்லையனும் ஆறுமுகத்தாரைப்பற்றிய யோசனையுடன் அவரையே பார்த்துக் கொண்டு, சற்று முன்னால் நின்றார்கள். ஆறுமுகத்தார் ஒரு முறை செருமிக் கொண்டு “பிள்ளைகள் எனக்கும் வயது போய் விட்டது. தம்பையரும் முத்தரும் அடிக்கடி கனவில் வருகினம். எனக்கு ஒண்டு நடக்கிறதுக்கிடையிலை நான் மகாலிங்கனின் கலியாணத்தை பார்க்கோணும்.” என்றார்.

மகாலிங்கன் “அப்பு உங்களுக்கு ஒண்டும் நடக்காது. எனக்கு ஏன் 19 வயதிலை கலியாணம்” என்று அழுதான். அவனைப் பார்த்து, பேசாதை எண்டு சைகையால் மறித்து விட்டு பேரம்பலத்தைப் பார்த்து “தம்பி பேரம்பலம், எனக்கு ஒரு கடைசி ஆசை இருக்குது. எனக்கு ஒண்டு நடந்தால் என்ரை மூத்த மகன் கணபதி தான் கொள்ளி வைக்க வேணும்” என்றார்.

“ஐயோ ஐயா, அண்ணன் கொள்ளி வைக்கிறது தானே முறை. அதைப் பற்றி இப்ப ஏன் கதைக்கிறியள். உங்களை விட்டிட்டு எங்களாலை இருக்கேலுமே” என்று ஒரு நாளும் ஒன்றுக்கும் கலங்காத பேரம்பலமும் கலங்கி அழுதான். எல்லாரும் அழுது ஓய்ந்து மகாலிங்கனை சம்மதிக்க வைத்தனர்.

அடுத்த புதன் கிழமை கணபதியார் பேரம்பலத்தையும் வல்லிபுரத்தாரையும் சின்னகணபதியையும் கூட்டிக்கொண்டு மீசாலைக்கு போய் மகாலிங்கனுக்கு பொருத்தமான பெண்ணை பார்ப்பதென முடிவு செய்தனர்.

மகாலிங்கனுக்கு சென்ற வருடம் 18 வயது முடியத்தான் பத்திரிகையின் ‘நிருபர்’ என்ற நியமனம் கடிதம் கிடைத்தது. அவன் செய்திகளை சேகரிப்பதிலும் அனுப்புவதிலும் கவனமாக இருந்தான். அப்பு தன்னை கலியாணம் செய்யச் சொன்னதை அவனால் மறுக்க முடியவில்லை. அவர்கள் தனக்கு பொம்பிளை பார்க்க மீசாலைக்கு போனது அவனுக்கு தெரியும். பெரியவர்கள் சரியான பெண்ணை தான் தெரிவு செய்வார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

கணபதியார் ஒரு பெண்ணையும் அவர்கள் வீட்டில் போய் பார்க்க சம்மதிக்கவில்லை. பெண்ணைப் பார்த்து விட்டு அவள் மகாலிங்கனுக்கு பொருத்தமில்லை என்று சொல்லி வேதனைப்படுத்த அவர் விரும்பவில்லை. விசாரித்து குடும்பம் சரி வந்தால், அவளது பெற்றோர் சம்மதிக்கும் பட்சத்தில், தூரத்தில் மறைவாக நின்று பெண்ணை பார்ப்பது தான் முறை என்று நினைத்தார்.

கணபதியாரும், பேரம்பலம் தவிர போன மற்றவர் இருவரும் மீசாலையில் பிறந்தவர்கள். மகாலிங்கன் பெரிய பரந்தனில் பிறந்ததால் ‘வன்னியான்’ என்று சிலர் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். இன்னும் சிலர் தங்கள் மகள் பெரிய பரந்தனுக்கு வரமாட்டாள் என்றும், மகாலிங்கன் மீசாலையில் வந்து இருக்க சம்மதித்தால் பெண் தர சம்மதம் என்றனர்.

பெரிய பரந்தனுக்கு பெண்ணை அனுப்ப சம்மதித்த எல்லார் வீட்டு வளவுகளுக்கும் கிடுகு வேலிகள் இருந்தன. வேலி மறைவில் நின்று கணபதியாரும் மற்றவர்களும், மூன்று பெண்களை பார்த்தனர். அவர்களுக்கு மனத்திருப்தியாக ஒரு பெண்ணும் அமையவில்லை.

கணபதியார் “அவசரப்படாமல் அடுத்த கிழமை வந்து பார்ப்பம்” என்று திரும்பி போக ஆயத்தப்படுத்தினார். பேரம்பலம் “அண்ணை, உதிலை பக்கத்திலை செல்லையா எண்ட என்ரை சினேகிதன் இருக்கிறான். அங்கை ஒருக்கால் போட்டு போவம்” என்று செல்லையா வீட்டுக்கு கூட்டிச் சென்றான்.

மீசாலையில் வேலுப்பிள்ளை என்ற ஒருத்தர் இருந்தார். அவரை எல்லாரும் ‘சவாரிக்கார’ வேலுப்பிள்ளை என்று அழைத்தனர். அவரது மாட்டுப்பட்டியில் மூன்று சோடி நாம்பன்களும் மூன்று சோடி எருதுகளும் நின்றன. வேறொரு கொட்டிலில் இரண்டு பசுக்கள் நின்றன. ஒன்று கன்றுடனும் மற்றது கண்டுதாச்சியாகவும் காணப்பட்டன. ஒன்றில் பால் கறந்து ஓய மற்றதில் பால் கறந்து வீட்டுத்தேவைக்கு எடுக்கலாம்.

மற்றது எல்லாம் நாம்பன்களும் எருதுகளும் தான். எருதுகள் எல்லாம் தவிடு, புண்ணாக்கு, பசும் புல், வைக்கல், கழிவு உழுந்து, கள்ளு மண்டி சாப்பிட்டு ‘ஜம்’ என்று நின்றன.

ஒவ்வொரு நாளும் வேலர் உடம்பு தேய்த்து குளிப்பாட்டுவார். யாழ்ப்பாணத்தில் எந்த மூலையில் மாட்டுவண்டி சவாரிப் போட்டி நடந்தாலும் வேலரின் எருதுகள் பங்கு பற்றும். அவரது எருதுகள் சவாரிப்போட்டியில் முதலாவதாக, தவறினால் இரண்டாவதாக வந்து விடும். அதனால் தான் அவருக்கு ‘சவாரிக்கார வேலர்’ என்ற பட்டம்.

அண்மையில் யாழ்ப்பாணம் முத்தவெளியில் நடந்த போட்டியில் வேலரின் எருதுகள் முதலாம் இடம் வந்து, வேலர் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற மனிதரான திரு. சாம் சபாபதியின் கையால் முதல் பரிசை பெற்றார். அவர் வன்னியில் திரிந்து நல்ல நாம்பன் சோடிகளாக வாங்கி வருவார். அந்த சோடிகளை நன்கு பராமரித்து வண்டில் சவாரி பழக்குவார். அதனால் அவரது நாம்பன் சோடிகள் நல்ல விலைக்கு போகும். சவாரி இல்லாத நாட்களில் மனைவியுடனும் பிள்ளைகளுடனும் தோட்ட வேலை செய்வார். (இளம் ஆண் மாடுகள் நாம்பன்கள் என்றும், நடுத்தரமான வயதுடைய குறி சுடப்பட்ட ஆண் மாடுகள் எருதுகள் என்றும் அழைக்கப்பட்டன.)

வேலருக்கு நான்கு பெண் பிள்ளைகள் இருந்தனர். அவரது மூத்த மகள் சரஸ்வதியை பேரம்பலத்தின் சினேகிதன் செல்லையா கலியாணம் செய்திருந்தார். வேலர் தனது காணியில் ஒரு பகுதியில் ஒரு மண் வீடு கட்டி அவர்களுக்கு கொடுத்திருந்தார். செல்லையா மனைவியுடன் சேர்ந்து தோட்டம் செய்தார். அவருக்கும் பேரம்பலத்தை போல கோட்டுகளில் போய் வழக்குகளை பார்ப்பது ஒரு பொழுது போக்கு.

வேலரின் இரண்டாவது மகள் பொன்னம்மா சங்கத்தானை பாடசாலையில் படிக்கிறாள். அவள் அங்கு ஜே. எஸ். சி சித்தியடைந்து, இப்போது பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறாள். மூன்றாவது மகள் பாலாம்பிகை அல்லாரை பாடசாலையில் படிக்கிறாள். நான்காவது மகள் நல்லம்மாவும் அதே பாடசாலையில் படிக்கிறாள்.

நல்லம்மாவிற்கும் சின்னக்கா மாதிரி சங்கத்தானை பாடசாலைக்கு போய் படிக்க ஆசை. பொன்னம்மா அல்லாரையில் படித்துவிட்டு சில வருடங்களாக, மீசாலையிலிருந்து றெயின் றோட்டு கரையால்  ஒவ்வொரு நாளும் ஐந்து கட்டை நடந்து சங்கத்தானை பாடசாலைக்கு போய் வருகிறாள்.

கணபதியாரும் மற்றவர்களும் செல்லையா வீட்டில் தேநீர் குடித்துக் கொண்டு இருக்கும் போது பாடசாலையால் வந்த பொன்னம்மா “அக்கா நான் வந்திட்டன்” என்று தமக்கையிடம் சொல்லி விட்டு, ஒரு கட்டு புத்தகங்களுடன் தனது வீட்டிற்கு போனாள். தூரத்திற்கு படிக்கப்போகும் தங்கச்சி, பாதுகாப்பாக வந்துவிட்டாள் என்று தெரிந்து கொள்ள சரஸ்வதிக்கு, பொன்னம்மா ஒவ்வொரு நாளும் வந்தவுடன் தகவல் சொல்ல வேண்டும்.

கணபதியாருக்கு அவளைக் கண்டதும் ‘இந்த பிள்ளையை மகாலிங்கனுக்கு கேட்டால் என்ன?’ என்ற எண்ணம் உண்டானது. பொன்னம்மா நடுத்தர உயரத்துடன் நல்ல நிறமாகவும் இருந்தாள். பேரம்பலத்தை தனியே கூட்டிச் சென்று “தம்பி, வேலுப்பிள்ளையற்றை இரண்டாவது மகளை மகாலிங்கனுக்கு பார்த்தாலென்ன” என்று கேட்டார். தமையன் தனிய கூப்பிடவே பேரம்பலத்துக்கு ஓரளவு விசயம் புரிந்து விட்டது. அவனும் அதே மாதிரி தான் யோசித்துக் கொண்டிருந்தான்.

hghghggggg.jpg

அவன் “அண்ணை செல்லையாவிடம் கதைத்து பார்க்கிறன்” என்று செல்லையாவை தனிய கூப்பிட்டு கதைத்து விட்டு, இரண்டு பேருமாக வேலர் வீட்டுக்கு போனார்கள். மருமகன் வேறொருவருடன் வருவதைக் கண்ட வேலர் எழும்பி வெளியே வந்தார்.

செல்லையா “மாமா, இவர் கணபதியாரின்ரை தம்பியார், ஆறுமுகத்தாற்றை மகன். கணபதியாற்றை மகன் எஸ்.எஸ்.சி பாஸ் பண்ணிப்போட்டு தகப்பனோடை கமவேலைகளை செய்யிறான். அவனுக்கு பொன்னம்மாவை கேக்கினம்” என்றான்.

அதற்கு வேலர் “அதுக்கென்ன யோசிப்பம். பிள்ளை இந்த வருசம் எஸ்.எஸ்.சி சோதினை எடுக்கப் போறாள். சோதனை முடிய பார்ப்பம்” என்றார். அதற்கு செல்லையர் “மாமா, ஆறுமுகத்தார் கடுமையான வருத்தமாய் இருக்கிறாராம். அது தான் அவசரப்படுகினம்” என்றான். அதற்கு வேலர் “பிள்ளை சோதனை எழுதாமல் கலியாணத்துக்கு சம்மதிப்பாளோ தெரியாது. எதுக்கும் நான் மகளோடை ஆறுதலாக கதைத்துப் பார்க்கிறன். செல்லையரிட்டை மறுமொழி சொல்லி விடுறன். இப்ப போட்டு வாருங்கோ” என்றார்.

(தான் படித்து ஒரு ஆசிரியையாக வரவேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பொன்னம்மா மகாலிங்கனை கலியாணம் செய்ய சம்மதிப்பாளா?)

தொடரும்..

மகாலிங்கம் பத்மநாபன் - ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன.

https://vanakkamlondon.com/stories/2021/03/105744/

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

@புரட்சிகர தமிழ்தேசியன்

இந்தக்கதை இனி எப்பொழுது தொடரும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2021 at 14:47, பிரபா சிதம்பரநாதன் said:

@புரட்சிகர தமிழ்தேசியன்

இந்தக்கதை இனி எப்பொழுது தொடரும்???

பொன்னம்மா சம்மதித்து மகாலிங்கனை கலியாணம் செய்திருந்தால் இப்ப அவள் நான்கு மாதம் முழுகாமல் இருந்திருப்பாள்........!   😁

Link to comment
Share on other sites

On 28/7/2021 at 08:47, பிரபா சிதம்பரநாதன் said:

@புரட்சிகர தமிழ்தேசியன்

இந்தக்கதை இனி எப்பொழுது தொடரும்???

 

https://vanakkamlondon.com/stories/

இங்கு மிகுதி உள்ளது. 47 ஆம் அங்கம் வரைக்கும் வந்து இன்னும் தொடர்கின்றது.

புரட்சி இங்கு கொண்டு பதிவார் என்று காத்திருந்து விட்டு, அவர் பதியாமையால் அங்கு சென்று வாசிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

 

https://vanakkamlondon.com/stories/

இங்கு மிகுதி உள்ளது. 47 ஆம் அங்கம் வரைக்கும் வந்து இன்னும் தொடர்கின்றது.

புரட்சி இங்கு கொண்டு பதிவார் என்று காத்திருந்து விட்டு, அவர் பதியாமையால் அங்கு சென்று வாசிக்கின்றேன்.

மிக்க நன்றி.. 

சுவராசியமாகவும் அந்தக்கால வன்னிமண்ணையும் மக்களையும் எழுதுவதால் வாசிக்கும் ஆவலை தந்துள்ளது..

எப்பொழுதும் போலவே வாசிக்கும் பொழுது  அந்தக்காலகட்டத்திற்கு போகக்கூடியவகையில் தொடர் சுவராசியமாகப்போகிறது.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2021 at 18:17, பிரபா சிதம்பரநாதன் said:

@புரட்சிகர தமிழ்தேசியன்

இந்தக்கதை இனி எப்பொழுது தொடரும்???

 

21 hours ago, suvy said:

பொன்னம்மா சம்மதித்து மகாலிங்கனை கலியாணம் செய்திருந்தால் இப்ப அவள் நான்கு மாதம் முழுகாமல் இருந்திருப்பாள்........!   😁

 

20 hours ago, நிழலி said:

 

https://vanakkamlondon.com/stories/

இங்கு மிகுதி உள்ளது. 47 ஆம் அங்கம் வரைக்கும் வந்து இன்னும் தொடர்கின்றது.

புரட்சி இங்கு கொண்டு பதிவார் என்று காத்திருந்து விட்டு, அவர் பதியாமையால் அங்கு சென்று வாசிக்கின்றேன்

மன்னிக்கவும் தோழர்களே . பணிச்சுமை காரணமாக இணைக்க இயலவில்லை .. அதுகும் இப்போ முடியும் என்று பார்த்தால் முடிவதா தெரியவில்லை.. 😢

தோழர் நிழலியின் இணைப்பில் தொடர்ச்சியாக வந்து கொண்டு உள்ளது..

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை (கதையல்ல நிஜ வரலாறு)  51 வது அத்தியாயத்துடன் நிறைவு பெற்று விட்டது .......மிகுதியை இணைத்து விட்டால் புதிதாக படிப்பவர்களுக்கு அந்த மூன்று கிராமங்களின் வரலாற்றை அறிந்த திருப்தி இருக்கும்.......!   😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.