Jump to content

எம்பாவாய் - அகரமுதல்வன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எம்பாவாய்

September 5, 2020

அகரமுதல்வன்

இளமஞ்சள் நிறத்தில் சீலை உடுத்தியிருந்தாள். அணையாத காதலின் வாசனை அவளுடலில் இருந்து உபரியாய் கசிந்தது. மெருகேறிய பிருஸ்டத்தின் சிறியதான அசைவு குகை ஓவியம் வண்ணமாய் நகர்வதைப் போலிருந்தது. விரல்கள் ரகசிய வீரர்களைப் போல கூந்தலுக்குள் ஊடுருவி ஈரத்தை உலர்த்துகின்றன. மது சுரக்கும் கூந்தல் அவளுடையது. அதிரகசியமாக வடிவு தழுவும் இந்தப்பெண்ணின் பேர் என்ன என்று அறிய ஆவல் தோன்றிற்று. மூச்சின் குமிழ்களில் காமம் கொதித்தது. களிப்பின் ஜன்னலில் இருந்து ஏகாந்தம் வேகம் கொண்டிருந்தது. இவனால் தாமதிக்கமுடியவில்லை. எழுந்து அவளைப் பின்தொடர்ந்து நடந்தான். அவள் அமர்ந்த கதிரைக்கு பக்கத்தில் இருந்தான். மணவறையில் ஐயர் மந்திரங்களை ஓதிக்கொண்டிருக்கிறார். மணமக்கள் மாலை மாற்றுகின்றனர். திருமணத்திற்கு வந்தவர்கள் அந்த அரங்கில் நிறைந்திருந்தனர். இவன் எந்தத் தயக்கமும் இல்லாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். இடையிடையே தன்னை யாரேனும் பார்க்கிறார்களா என்று இயல்புக்கு திரும்புவான். உடலினுள்ளே பிசுபிசுக்கும் அரூபத்திற்குள் நீலக்கடல் எழுந்தடித்தது. அவள் எழுந்து சென்று நடக்கையில் அவளுக்குப் பின்னால் ஓடிப்போனான். அப்போது அவளை நேருக்கு நேராக பார்த்துக் கதைக்கும் வாய்ப்புக்கிடைத்தது. சாப்பிட்டுக்கொண்டே மெதுவாக கதைக்கத் தொடங்கினான். அவள் இவனின் கண்களில் தன்னுடலை  பார்த்தபடியிருந்தாள். அவளுக்குள் வடிவின் மமதை மூங்கில் காட்டைப் போல உயர்ந்து அசைந்தது. அவளுடைய பேர் டிலானி என்றும் இவனுடைய பேர் ராகுலன் என்றும் இருவரும் தெரிந்துகொண்டு திருமண நிகழ்வில் இருந்து வெளிக்கிட்டனர். டிலானியின் போன் நம்பரைக் கேட்டதும் கொடுத்தாள். இனி எப்போது சந்திக்கலாம் என்று கேட்டதும்,நேரம் கிடைக்கேக்க எப்பவெண்டாலும் சந்திக்கலாம் என்றாள்.

வளசரவாக்கத்தில் அகதிகளாக வசித்து வரும் நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களில் ராகுலனும் ஒருவன். மூன்று சகோதரர்கள் ஐரோப்பாவில் இருக்கின்றனர். ராகுலனும் வெளிநாட்டிற்கு செல்வதற்காக காத்திருந்தான். மூன்று சகோதரர்களும் மாதச்செலவிற்கு அனுப்பிவைக்கும் பணம் அவனுடைய சந்தோசத்திற்கு போதுமானதாயிருந்தது. அவ்வளவு சொகுசான வாழ்க்கையை ஒரு அகதி வாழக்கூடுமென விதியால்கூட நினைத்துப்பார்க்க முடியாது. அத்தனை சொகுசுக்கும் பரிச்சயப்பட்டவன். யாரேனும் நால்வர் கூடிநின்று கதைக்கும் போது போராட்டம் பற்றி உரையாடல் தொடங்கினால் அந்தக் கூட்டத்திலிருந்து விடைபெற்றுவிடுவான். ராகுலனுக்கு மட்டுமல்ல அவனின் குடும்பமும் அப்படித்தான். போராட்டத்தை சவக்கிடங்கு உற்பத்தி செய்யும் வேலை என்று சொல்லுகிறவர்கள். மூன்று சகோதரர்களும் வெளிநாட்டிற்கு போனதும் ராகுலன் தாய் தந்தையோடு கொழும்பில் வசித்துவந்தான்.

ராகுலனுக்கு இலங்கைத்தீவே பிடிப்பில்லாமல் போயிற்று. இப்போதும் அவனுக்குள் ஒரு தனிமை இருட்டிக்கிடக்கிறது. அவன் தனிமையின் துருவுக்குள் தன்னைப் புதைத்து திமிறுகையில் மனம் ஒரு பெண்ணை அணைத்துக்கொள்ள விரும்புகிறது. பிசுபிசுப்பான குற்றமற்ற ஈரத்தை அவன் தனக்கருகில் வைத்துக்கொள்ள ஏங்கினான். கள்ளப்பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டிற்கு சென்று இறங்கும் வரை ஒரு மிருதுவான வெப்பத்தை பரவவிடும் குளிர்மையை கொப்பளிக்கும் பெண்ணுடலை ராகுலன் தேடிக்கொண்டிருக்கிறான். தனக்குள் எக்கியபடியிருக்கும் இச்சையின் கன்றுக்குட்டிக்காய் முலைக்காம்பு தேடுகிறேன் என்பான் ராகுலன்.

டிலானியை நீங்கள் பார்த்திருக்கமுடியும். தமிழ் திரைப்படங்களில் சிறிய பாத்திரங்களில் நடித்திருக்கிறாள். யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய ஊரான தெல்லிப்பழையைச் சேர்ந்தவள். தமிழகத்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமொன்றில் படிக்கவந்திருந்த போது, உதவிப் பேராசிரியர் திருலோகத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டாள். திருமணம் செய்துகொண்டதை இருவரும் தமது வீட்டில் மறைத்து வைத்திருந்தனர். நான்கு வருடமாக ஒன்றாக வாழ்ந்துவந்த திருலோகம் – டிலானி தம்பதிகள் தமது விவாகரத்து குறித்து கதைக்கவும் – பேசவும் தொடங்கினர். டிலானி விவகாரத்து பெற்றுக்கொண்டு சென்னையில் தனியாக வசித்துவருகிறாள். திருலோகத்திற்கு இப்போது இரண்டு பெண் குழந்தைகள். டிலானிக்கு தனிமை பலிபீடம். சருகின் மீது நெளியும் சர்ப்பத்தின் அச்சமும் வேகமும் பதற்றமும் அவளுடன் கூடிக்கிடந்தன. நாட்டிற்கு திரும்பிச்செல்ல வேண்டுமென்று அவளுக்கும் விருப்பமில்லாதிருந்தது.

கே.கே நகரிலுள்ள அம்மன் கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் சென்று கும்பிட்டுவிட்டு தனது தினக்கருமங்களை செய்யத்தொடங்குவாள். அவள் வாடகைக்கு வசித்துவரும் வீட்டின் உரிமையாளர் ஒரு வங்கியில் முகாமையாளராக இருக்கிறார். அவளிடம் சிலோன்காரவுங்க நல்ல மனுஷங்க,ஆனா உங்க ஆளுங்களுக்குள்ள ஒற்றுமைதான் இல்ல என்பார். டிலானிக்கு அது பிடிப்பதில்லை. ஒவ்வொரு மாசமும் வாடகை வாங்குவதற்கு முன்பாக இதைச் சொல்லும் அந்த உரிமையாளரை அவள் சந்திப்பதை தவிர்த்து,வங்கிக்கணக்கில் பணத்தை போட்டுவிடுவாள். டிலானியை அதிகமாக எரிச்சல் படுத்தும் வார்த்தை “சிலோன்காரி”. அவள் இங்குவாழும் மற்றைய ஈழத்தமிழர்களோடு பழகுவது கிடையாது. ஏதாவது கொண்டாட்டங்களுக்கு மட்டும் சென்றுவருவதுண்டு. அங்கும் தன்னையொரு சென்னைப்பெண்ணாகவே நிலைநாட்டும் எத்தனங்களை செய்துகொண்டிருப்பாள் அல்லது திருலோகத்துடன் நடத்திய இல்லறத்தில் கற்றுக்கொண்ட தமிழை ஆள் பார்த்து பேசுவாள். ஓம் என்று தலையசைப்பதற்கு பதிலாக ஆமாம் என்று மட்டும் சொல்லுவாள்.

ஆனால் ராகுலன் கதைக்கத்தொடங்கியதும் கனிந்து பதில் சொன்னாள். அவளின் அணுக்களில் கட்டித்து நின்ற திரட்சியின் பெருக்கு உடைப்பெடுத்தது போலும். தான் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படமொன்றின் படப்பிடிப்பு கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள கேரளத்து வீட்டில் நடந்துகொண்டிருப்பதாகவும் அது முடித்துவிட்டு வந்துவிடுவதாகவும் டிலானி ராகுலனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். அவன் கே.கே நகரிலுள்ள காப்பி டே கடையில் டிலானிக்காக காத்துக்கொண்டிருந்தான்.

புலன்கள் முழுதும் டிலானியின் மீதே பொதியாகி மிதந்தன. ராகுலன் விழுங்கி ருசிக்கும் ஒரு பொழுதிற்காய் காத்திருந்தான். காற்றின் உள்ளே நுழைந்து பிராணமாய் அவனுக்குள் திரும்பும் மூச்சில் அவ்வளவு சூடு தடவப்பட்டிருந்தது. மார்பின் விறைப்பு எழுச்சியுற்று,அவள் இதழ்களில் ஊர்ந்து செல்லும் கற்பனையின் கண்கள் திறக்கத்தொடங்கின. பீறிக்கிளம்பும் ஸ்பரிசத்தின் வேட்கையை அவனால் எதுவும் செய்யமுடியாமலிருந்தது. தனிமை பூமியில் ராகுலனையும் டிலானியையும் சந்திக்க விதித்திருந்தது. உடல்களின் சஞ்சாரத்தை இந்தநாள் வேண்டிக்கொண்டிருந்ததது போல அவனுக்குள் பிரமை. டிலானி படப்பிடிப்பு முடிந்து கிளம்பிவிட்டதாக தொடர்புகொண்டு சொன்னாள்.

வாகனநெரிசல்களைக் கடந்து கே.கே நகரை அண்மிப்பதற்கு இரண்டு மணித்தியாலங்கள் ஆகிவிடும். ஆனாலும் அவன் காத்திருக்கிறேன் என பதில் சொன்னான். அப்படியொரு வீச்சமான வாசம் அவனுடலில் இருந்து வந்தது. அவனால் என்னென்று விளங்கிக்கொள்ள முடியவில்லை. இப்போது அவனுக்குள் ஒரு எரிமலை பொங்கி வழிகிறது. காமத்தை அவன் தனிமையில் உருவேற்றி உணர்கிறான். பிரிந்து வந்த நிலத்தின் கனவுகளுக்குள் அவனொரு பெண் பித்தனைப் போல அலறி ஓடுகிறான். அவனின் கோழைத்தனங்களை ஒரு வேசியிடம் மண்டியிட்டு முன்வைக்கிறான். வேசியின் கடவுள்தனம் அவனை மன்னிக்கிறது. ராகுலனுக்கு அடிக்கடி வரும்கனவில் இந்தக்காட்சிகளே மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருக்கிறது. அப்போது நுகரும் வாசனையே இது.

சின்னஞ்சிறு மீன்கள் நீந்திக்கொண்டிருக்கும் இரண்டு மீன் தொட்டிகள் வீட்டின் முகப்பில் இருந்தன. ராகுலன் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தான். கறுப்பு நிறத் தங்கமீனொன்று தொட்டியின் வலது முனையில் நீண்டநேரம் நீச்சலற்று மிதந்திருந்தது. மயில் தோகைகள் கொண்டு சுவரில் உருவாக்கப்பட்டிருந்த உருவங்களை அவனால் உணரமுடியாதிருந்தது. தனது இருக்கைக்கு பின்னால் இருக்கும் மேசையில் நடனமிடும் நடராஜர் சிலையைப் பார்த்தான். டிலானி  ஷோபாவில் வந்து அமர்ந்துகொண்டே ராகுலனிடம் கதைக்கத் தொடங்கினாள்.

நீங்கள் இந்தியாவிற்கு வந்து எத்தினை வருஷம் ஆகுது?

பத்து வருஷமாச்சு.. நீங்கள்?

நான் பதினாறு வருஷமாச்சு. அம்மா அப்பா வெளிநாட்டில இருக்கினம். நீங்கள் ஊரில எவடம்?

நாங்கள் யாழ்ப்பாணம்,மானிப்பாய். ஆனால் கொழும்பில தான் படிச்சது வளர்ந்ததெல்லாம் ராகுலன் சொன்னான்.

டிலானி தன்னுடைய கடந்தகாலத்தின் சில சம்பவங்களை சொல்லத்தொடங்கினாள். ராகுலன் கேட்டுக்கொண்டிருந்தான். திருலோகத்துடனான தனது மணவாழ்க்கை குறித்து அவள் சொல்லத்தொடங்கி கண்கள் கலங்கி அழுதாள். ராகுலன் அப்படியே அமர்ந்திருந்து கேட்டுக்கொண்டே இருந்தான். விரதமிருக்கும் பக்தன் கடவுளைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல டிலானியை விட்டு கண்களை அசைக்கவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ள சிலர் தம்மைக் குறித்து கொண்டிருக்கும் தப்பான எண்ணங்களை நினைத்து அவமானப்படுவதாக சொன்னாள். அன்றைக்கு திருமணத்திற்கு வந்திருந்த பொழுது எங்கள் ஆக்களில் ஒருவனான கருவாடு,என்னை கலியாணம் செய்துகொள்ளப் போவதாக சொல்கிறான். கருவாடு பற்றி ராகுலனும் அறிந்திருந்தான். இயக்க காசை சுருட்டிக்கொண்டு தமிழகத்திற்கு ஓடிவந்தவன். இன்றைக்கு அவனுக்கு இங்கிருக்கும் சொத்தே கோடிக்கணக்கானது என்று நிறையைப் பேர் சொல்லக்கேட்டிருக்கிறான். பொதுவெளியில் கருவாடு அப்படி நடந்துகொண்டதை இப்போது கேட்கும் போது ராகுலனுக்கு எரிச்சலாகவும் கட்டி அடிக்கவேண்டுமெனவும் தோன்றியது.

டிலானி அழுதுகொண்டே சொன்னாள்,நான் தனியாக இருக்கிற பெம்பிளை. அகதியாக இருக்கிறத விட அது கஷ்டம். என் வாழ்க்கை உன்னதமானது என்று யாரும் எண்ணிவிடக்கூடாது. அவ்வளவு கோழைத்தனமும் வன்முறையும் கொண்ட ஒரு கடவுளைப் போல தனிமை என்னை ஆக்கிவிட்டது. அவ்வளவு வலியின் பெருக்கு என்னுடல். நீங்கள் என்னுடைய போன் நம்பரை வாங்கிக்கொண்டு புன்னகைத்தபடி நன்றி என்று சொன்னபொழுதில் பாறையின் மீது ஊரும் ஈரநண்டின் புத்துணர்ச்சியைக் கண்டேன். என்னுடைய பிருஸ்டத்தை பார்த்துக்கொண்டிருந்த உங்கள் கண்களில் திமிர்கொண்ட ஆணின் ஆன்மாவைப் பார்த்தேன். அது அத்தனை வெளிப்படையாக இருந்தது. போலியற்று புனிதப்பார்வையை என் மீது போர்த்தாமல்  ஆணாக என்னை வெறித்துநின்றதை நான் கண்காணித்துக்கொண்டே இருந்தேன். உனது உடலின் பிரார்த்தனையை நீ எனக்கு முன்னால் கிடத்தி இறைஞ்சி நிற்கிறாய் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இப்போதும் உனது அமெரிக்கன் டூரிஸ்டர் பையின் சிறிய அறையில் ஸ்டோபரி வாசம் வீசும் ஆணுறைகள் இருக்கின்றன. எதற்காக இவ்வளவு நேரமாய் காத்துக்கொண்டிருந்தாய். நீ பயங்கரமானவன். நிலமில்லாத நம்மை நாமே அணைத்து கூடிக்கொள்ளவேண்டும். தனிமையின் புழுதி மூடி நம் திசைகளை புயல் முறித்துப்போட்டுவிட்டதை நான் உணர்ந்திருக்கிறேன்.

கண்கள் செருகி அடிபட்டு கிடக்கும் தெருநாயின் அழுகிய உடலைக் கடந்து செல்லும் இந்த நகரத்தில் அகதியாக அடைக்கலமான நாம் வேறு யாருமில்லை. அந்தத் தெருநாய் தான் என்று நீயும் அறிந்திருப்பாய்.

இப்போது உனது தேவை என்னைப் புணரவேண்டும். என்னுடைய கூந்தலால் உன் நிர்வாணத்தைப் போர்த்தவேண்டும். எனது மேனியை மேலிருந்து பார்க்கவேண்டும். உனது உடலில் கருடன் எழுந்து நிற்கிறான். அவனை எனக்குள் இறக்கி போகம் கொள்ளவேண்டும். அதுதானே உனது தேவை என்று டிலானி கேட்டதும் ராகுலன் அதிர்ந்து இல்லையென்று சொல்லவில்லை. ஆமாம் அதுதான் தேவை என்று விநோதமான குரலில் சொன்னான். பொழுது மூச்சுத்திணறியது. டிலானி அவனை தனது அறைக்குள் கூட்டிச்சென்று கட்டிலில் கிடத்தினாள்.

மஞ்சள் மின்குமிழ் வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்த அறையின் ஜன்னல்கள் சாத்தப்பட்டிருந்தன. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் காற்றில், கட்டிலில் கிடந்த வாரப்பத்திரிக்கையின் பக்கங்கள் நெளிந்தன. சுகந்தத்தின் ஈர வாசனையில் முங்கியபடி அந்த அறையிலேயே சமாதியாகிவிட வேண்டுமென்று ராகுலன் நினைத்தான். மெத்தையின் மீது விரிக்கப்பட்டிருந்த புதிய துணியில் நிறைய முயல்குட்டிகள் சோடிகளாய் வரையப்பட்டிருந்தன.

குளியலறையின் கதைவைத் திறந்து துவாயை எடுத்துத் தருமாறு குரல் கொடுத்தாள் டிலானி. கதை வாசிப்பதை நிறுத்திவிட்டு அவளின் வெள்ளைநிறத் துவாயை எடுத்துக்கொடுத்தான். குளியலறைக் கதவின் திறந்த மெல்லிய இடைவெளியால் தனது கைகளை நீட்டி அவனின் கைகளிலிருந்து துவாயைப் பறித்த அவள் அப்படியே கட்டிலில் வந்தமர்ந்தாள். அவளின் மார்பைமூடியிருந்த அந்தத் துவாயை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உதடுகளோடு உதடுகள் நீந்த முத்தங்களை தொடங்கினாள். ராகுலனுக்கு அவளின் கீழ் உதட்டின் உள்புறத்தில் ஊறும் மினுக்கமான வேகத்தைப்பிடித்திருந்தது. அவளைக் கட்டிக்கொண்டு அவன் வேகம்கொண்டான். அவள்  தனது தலையை பின்நோக்கிச் சரித்து முயக்கமுற்றாள். அவளின் கூந்தல் மின்விசிறிக் காற்றில் முகம்தழுவிக்கொண்டிருந்தது. மலரினும் மெலிதான காமத்தின் கிளைகளில் இருவரும்  லாவகமாக ஏறிக்கொண்டிருந்தனர்.

ராகுலன் வெள்ளைத்துவாயை அவிழ்க்கும் நொடியில் உதடுகள் கழன்று விலகின. அவள் ஒரு நிமிசம் ஒரு நிமிசம் என்று கெஞ்சினாள். முகம்பற்றி மூண்டிருக்கும் இத்தீயை உன் மார்பொத்தி அணைக்கவேண்டும் டிலானி என்றான். சரி அப்படியே இருங்கோ ஒரு நிமிசம், நான் வெளிக்கிட்டிட்டு வாறன், விடுங்கோ என்று கொஞ்சலோடு எழுந்தாள். நீண்ட நேரம் இருவரும் கதைத்துக்கொண்டிருந்தார்கள். இவனின் கண்கள் அவளின் மார்பின் மீதே நங்கூரமிட்டு அசைந்தபடியிருந்தது. தொட்டிமீன்கள் மேலிருந்து வீழ்த்தப்படும் இரைக்காக மேல் நோக்கி நீந்துவதாய் ராகுலனை ஏதோவொரு அலை,ஏதோவொரு உச்சியில் ஏற்றிவிட்டது. அந்த அறையில் பரவி நிற்கும் மங்கலான மஞ்சள் ஒளியின் ஒழுக்கு அவளின் கண்களில் நிரம்பி நின்றிற்று. உடைகள் களையப்பட்ட டிலானியின் தாபஉடலில் எடையற்ற தன்னுடலை கிடத்தினான். பேரமைதி நிலவிய அந்த அறையில் இருவரின் உடலும் ஒலித்தன. வழுக்கும் கிணற்றடிப்பாசியின் மெதுமை உடலில் பரவியது. குகையின் உள்ளிருந்து வெளியேறும் கடலின் சிருஷ்டியாய் இருவுடலும் பெருங்களி கொண்டு இசைவுற்று இசைவுற்று அசைந்தன. பாஷையின் சந்தம் போல் கூடல் வேகம் குறைந்துகூடி கூடிக்குறைந்து குறைந்து கூடி.. கூடிக் கூடி நிகழ்ந்த வண்ணமிருந்தது.

டிலானியின் கண்கள் பனித்திருந்தன. ராகுலனை தனது நெஞ்சோடு அனைத்துக்கொண்டு குழந்தை என்று அவள் சொன்னதும் திகைக்காமல் இயங்கிக்கொண்டிருந்தான். பேரொளி வீசும் ஒரு நாளைப் போல தன்னுடலை புகுத்தியிருந்தான். நீண்ட நேரம் நீடித்த இந்தக் கூடலை டிலானி வேடிக்கையோடு ருசித்தாள். குழந்தை களைத்துப்போய்விட்டது என்று மீண்டும் சொன்னாள். அதியுச்ச ஷணத்தில் தன் மார்புகளை மேலிருந்து இயங்கும் ராகுலனுக்கு தருவித்தாள். சிசுவுக்கு அமுதூட்டும் அந்தத்தாய்மையை ராகுலன் காதலோடு ஏற்றுக்கொண்டான். அவளின் திளைத்த மார்புகளில் அந்த அறையின் மஞ்சள் ஒளி மினுக்கமடைந்து தவளைகளைப் போல குதித்தோடிய படியேயிருந்தது.

என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா ராகுலன்?

உங்களைப் பிடிக்காமல் உங்களோடு ஒன்றாக இருப்பேனா?

சும்மா பொய்சொல்ல வேண்டாம்.

நான் சொல்வதை நீங்கள் பொய் என்று நம்புகிறீர்கள்

உங்களுக்கு கலியாணம் எண்டால் என்னை விட்டிட்டு போயிடுவிங்கள் தானே?

ஓம், உங்களுக்கு நடந்தாலும் நீங்களும் போகத்தானே வேணும்.

நான் இனிமேல் கலியாணம் செய்யமாட்டேன்

நான் இனிமேல் தான் கலியாணம் செய்யவேணும்

அவள் சிரித்தாள். நல்லாய் கதைக்கமட்டும் தெரியுது.

தீவின் நடுவேயிருக்கும் அழகிய வனத்தில் வந்தமரும் வலசைப்பறவைகள் மாதிரி அவளுடலில் அவளுக்கே இதம்           தருகிற இடங்களிலெல்லாம் தனது தீண்டல்களின் சிறகுளை விரித்தான். மண்ணுள்ளே தயாராகும் விதையின் பசுஞ்சுடர் போல அவ்வளவு ஈரமாகி குளிரத்தொடங்கினாள். அவன் தீண்டவே ருசியாகும் தனது எச்சிலை ஊற ஊற விழுங்கிக் கொண்டேயிருந்தாள். காலம் சுமந்துசெல்லுகிற பாரமற்ற போதையின் நிழல்களாக இருவரும் இயங்கத்தொடங்கினர். நீர்ப்பாத்தியின் உள்ளே ஒன்றையொன்று பிடிப்பதைப் போல ஓடிக்கொண்டிருக்கும் பாசிக்கு நிகராக ஒருவரை ஒருவர் உடல்களுக்குள் திரத்தியபடியிருந்தனர். ஒவ்வொரு துளியும்  பிரமாண்டமாய் விழும் பெருமழை காலத்தின் கனிவான ஒலி அந்த அறையில்  அதிரத்தொடங்கியது. ரத்தம் பிளிறுகிற இவ்விரு உடல்களுக்கும் இடையில் சிறிதாய் இருக்கும் இடைவெளியில் ஈரவொளி ஈக்கில் போல ஏறியது. ஓய்தலின்றி கங்குவளையத்தினுள் காற்றுப்புகுவது மாதிரி ராகுலனுக்குள் தன்னைச்செலுத்திக்கொண்டிருந்தாள். தனிமையில் கரைந்த இருவரும் தாபத்தில் எழுந்து வல்லபம் பெற்றனர். இப்படியொரு கூடலை தான் இதுவரைக்கும் அனுபவித்ததில்லை என்று ராகுலன் குளித்தபடிக்கு சொன்னான். டிலானி எனக்கு கூட ஸ்டோபரி பிடிக்காது. ஆனால் இன்று அந்த வாசனைக்கு என்னை அனுப்பி வைத்துவிட்டேன் என்றாள்.

“வன்முறை பொதிந்த உனது மனத்தை நீயே தகர்த்து எறி.காமம் உன்னை ஆசீர்வதித்து ஒரு மனுஷனாக்கட்டும். உன் குழந்தமையை நீ விட்டுவிடாதே, பிறகு கொடியதான கற்பனைகளுக்கு தனிமை இட்டுச்செல்லும். அதனைத் தவிர்”  என்று சொல்லி ராகுலனை வழியனுப்பி வைத்தாள் டிலானி. கே.கே நகர் பிரதான சாலை வழியாக வளசரவாக்கம் நோக்கி நடக்கலானான். இரவும் பலமடைந்திருந்தது. அவனுக்குள் இதுவே நித்யம் ஆகவேண்டுமென்ற பிரார்த்தனை மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது.

பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளவும் கூடிக்கொள்ளவும் செய்தனர். ஒரு பெளர்ணமி நாளில் திருவண்ணாமலைக்கு சேர்ந்து சென்றனர். கிரிவலப்பாதையில் அவளுடைய கைகளை பிடித்துக்கொண்டு நடந்து வந்தான். திருவாசகங்களையும் தேவாரங்களையும் ஓதிக்கொண்டு சிவனடியார்கள் நடந்து சென்றனர். டிலானி அவ்வளவு நெருக்கமாக அவனோடு அந்தப் பாதைமுழுக்கவும் நடந்தாள். பெளர்ணமியின் ஆனந்தமயமான நிழல் அவர்கள் இருவரின் மீதும் பாலித்துக்கொண்டிருந்தது. பச்சிளங்குழந்தையின் உற்சாகத்தோடு அவ்வளவு இலேசாக இந்தப் பூமியில் இரண்டு அகதிகள் நடந்தபடியிருந்தனர்.

இந்தப் பெளர்ணமியின் ஒளியை பூமி எப்போதும் மிச்சம் வைத்திருக்கட்டும் எம்பாவாய்!

***

 

 

http://www.yaavarum.com/எம்பாவாய்/

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"பிலாக்கணம் பூக்கும்  தாழி" படிச்ச நாளில் இருந்து நான் அகரமுதல்வனின் தீவிர ரசிகனாகிவிட்டேன். இந்தக் கதை இன்னும் ஒரு படி மேலே! பகிர்வுக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.