Jump to content

பூப்போலே உன் புன்னகையில்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூப்போலே உன் புன்னகையில்…

குமரன் கிருஷ்ணன் செப்டம்பர் 27, 2020 

spacer.png

மரணத்தை வெல்லும் உரிமம் மானுடத்திற்கு இல்லை. இருப்பினும், மரணத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மாற்றுப்பாதையில், மாற்றுருவில் பயணிக்கும் வித்தையை இயற்கை இவ்வுலகிற்கு வரமாக்கியிருக்கிறது. ஆம்.  கலையின் ஏதேனும் ஒரு வடிவத்தை கற்றறிந்து அதை மற்ற உயிர்களின் உணர்வுகளுக்கு உணவாக அளிக்கும் ஆற்றல் பெற்ற எவரும் காலத்தின் மீதேறி கணக்கற்ற ஆண்டுகள் தங்கள் கலையின் வடிவில் வாழ்வதால் காலனை புறந்தள்ளும் வாய்ப்பு பெற்றவர்கள் ஆவர். எஸ்.பி.பி என்னும் குரலும் அதை வார்த்த அவர் ஜீவனும் அத்தகையதே.

யோசித்துப் பார்க்கிறேன்…காலத்தின் தூசு படிந்த நினைவின் நொடிகளை ஆங்காங்கே துடைத்து பளபளப்பாக்கிப் பார்க்கிறேன்…பெற்றோருடனோ உற்றோருடனோ கூட‌ ஏதோ ஒரு காரணத்தால் பேச இயலாமல் போன தினங்கள் கூட இருந்திருக்கின்றன. எஸ்.பி.பியின் குரல் செவியில் விழாத நாட்களை என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. என் வயதின் ஆரம்ப காலங்கள் துவங்கி அந்தரங்க ஓரங்கள் வரை நிரம்பியிருக்கிறது அவரின் குரல். இளையராஜாவின் இசையில் மேல் நகரும் அவரின் குரலின் துணைகொண்டு என் குழந்தைப்பருவம் வரை என்னால் மீட்டெடுக்க முடிகிறது என்றால் என் நினைவு நங்கூரத்தின் பெரும்பகுதி அவரின் குரலினால் பலப்படுத்தப்பட்டவை என்றே பொருள்.

ஆறுபடை வீடுகளிலும் மொட்டை என்ற அப்பாவின் வேண்டுதலின்படி பிறந்ததாக கருதப்படும் நான், என் மூன்றாவது மொட்டைக்காக நான்காவது அகவையின் ஒரு அதிகாலைப் பொழுதில் அப்போதிருந்த திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்கும் பெரியார் நிலையத்திற்கும் இடைப்பட்ட நுழைவாயிலின் முனையிலிருந்த‌ பெரிய தேநீர்கடை முன், அப்பாவின் அருகே, அம்மாவின் இடுப்பில் அமர்ந்திருந்தேன் – ‍ பழநி செல்லும் பேருந்தின் வருகைக்காக…”குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை” என்பது என் செவி கேட்டதாய் என் நினைவில் நிற்கும் முதல் பாடல். அந்த அதிகாலையே இப்பிறப்பில் நான் ஞாபகம் வைத்திருக்கும் முதல் காலை. என் பெற்றோருடன் நானிருந்த, எனக்குள் இருக்கும் முதல் பிம்பம். மொழி, இசை இவையேதும் அறிமுகமாயிராத ஒரு மழலை, நாற்பதாண்டுகள் கழிந்து ஒரு பொழுதை நினைவில் வைத்திருக்கும் பேற்றினையும், சாதனத்தையும் சாத்தியமாக்கியது அவர் குரல். அப்பாடலில் வரும் “அதுவரையில் நான் அனலில் மெழுகோ அலைகடலில் நான் அலையும் படகோ…”வில் எஸ்.பி.பி தந்த சங்கதியே இன்றும் அந்நினைவை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது என்பதை நானறிவேன்.

spacer.png

 

இவரின் குரலை தமிழ்நாட்டின் இண்டு இடுக்குகளில் கொண்டு சேர்த்ததில் பெரும்பங்கு இலங்கை வானொலிக்கு உண்டு. அதுவரை கேட்டிராத வாத்தியங்களின் இசைக்கோர்வை செவியில் ஊடுருவ, பளிங்கில் நகரும் நீர் போல் அதன் மேல் தவழும் இவரின் குரலில் வந்த “நினைவெல்லாம் நித்யா”வின் “நிழல்கள்” தம் மீது படிய, தமிழகத்து மக்கள், தேனில் ஊறிய பலா தொட்ட நாவினை ஒத்த மகிழ்வில் நாட்களை கடந்த காலமது. ஞாயிறு பிற்பகல் வால்வு ரேடியோவில்  தவறாது ஒலிக்கும் “இது ஒரு பொன்மாலை பொழுது” வீடு நிரம்பிய மனிதர்களுடன் கேட்பதற்கும், வாசலில் “ஐஸ் ஐஸ் பால் ஐஸ்” என்று வெள்ளைநிற சிறு தள்ளுவண்டி வருவதற்கும் ஒரே நேரம் என்றான பல ஞாயிறுகளில், ஐஸ் குச்சியின் நுனியிலிருந்து வழியத்துவங்கும் பாலைப் பருகுவதும், வானம் எனக்கொரு போதி மரம் என்று எஸ்.பி.பி உருகுவதும் ஒன்றிணைந்த‌ அந்த ஞாயிறு நொடிகள்…அவரின் குரலிலேயே சொல்ல வேண்டுமானால், “உயிரே…உறவே…அந்தக் காலங்கள் வாராதோ…”

“நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை”, “சமுத்ர ராஜ குமாரி”, “எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்”, “சிரிச்சா கொல்லிமலை குயிலு”, “பொன்னென்பதோ பூவென்பதோ”, “பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு”, “சின்னப்புறா ஒன்று”, “பூப்போலே உன் புன்னகையில்”, “ஒரு சின்னப் பறவை அன்னையைத் தேடி”, “அன்பு மேகமே இங்கு ஓடி வா”, “தாலாட்டு பிள்ளைக்கொரு தாலாட்டு” போன்ற அற்புதமான பாடல்களை தமிழகத்து வீதிகளில் தவழவிட்டுச் சென்றது இலங்கை வானொலி – ஆயிரக்கணக்கான வீடுகளில் லட்சக்கணக்கான மனங்களின் அதற்கான நினைவுகளையும் சேர்த்தே…

என்னுள்ளே இளைய‌ராஜா வழியே நிகழ்ந்த எஸ்.பி.பியின் ஊடுருவலின் ஆழம் எத்தகையது என்றால், நடுநிலை வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை, “இளைய நிலா”வையும் “இது ஒரு பொன்மாலை”யையும் கேட்காமல் நான் எந்தவொரு தேர்வுக்கும் வீட்டை விட்டுக் கிளம்பியதில்லை. தேர்வுக்குக் கிளம்பும் முன் அம்மா நெற்றியில் இடும் திருநீறும் இந்த இரண்டு பாடல்களும் ஒரே எடை கொண்டவை. நம்பிக்கை ஊட்டுவதும் ஒருமுகப்படுத்துவதும் கடவுளின் தன்மை என்றால் நெற்றியிலும் செவியிலும் அப்போது அவையே நிகழ்ந்தன.

spacer.png

 

“திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகளில் வழியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ” என்று சங்கீத ஜாதி முல்லையை நாமும் பாடிவிட முடியுமா என்று முயன்று பார்த்திராத இளைஞர் கூட்டம் எண்பதுகளில் குறைவு. இளவயதில் ஒரு முறை நண்பர் குழுவுடன் ஒரு “சோதனை” நிகழ்த்தினோம். மதுரை தெருக்களில் எங்கள் மாலை நேர உலாவில் எந்த வகையான பாடல்களை கேட்க நேர்கிறது என்று பார்க்கலாம் என்ற வேடிக்கையான சோதனை. அனைத்து மாசி வீதிகள், அதன் உள்ளடக்கிய தெருக்கள் என்று நாங்கள் நகர நகர எஸ்.பி.பி இல்லாத தெருவே இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். மதுரை முழுவதும் அவர் வெவ்வேறு குரல்களில் வெவ்வேறு பாவனையில் ஒரே சமயத்தில் எங்கும் நிறைந்திருப்பது போலத் தோன்றியது எங்களுக்கு.

எஸ்.பி.பியின் குறுநகை வகைகள் குறித்து தனியே ஒரு புத்தகம் எழுதலாம். வரிகளுக்கு இடையில் சிரிப்பது என்பது பாடும் போது சாத்தியம். ஆனால் இவரோ வார்த்தைகளுக்கிடையில், இன்னும் சொல்லப்போனால் சொற்களுக்கு இடையில் கூட சிரிப்பை புகுத்தி ஆச்சரியமூட்டுபவர். “கம்பன் ஏமாந்தான்” துவங்கி இதை ஒரு “தனி இயக்கமாக” நடத்தி ரசிகர்களிடையே தன் அடையாளம் ஆக்கியவர் இவர். “வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன்; அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் ஏமாந்தேன்…” கேளுங்கள்… வார்த்தைக்குள் சிரிப்பதன் தொடக்கம் அது. வாசமில்லா மலருக்கு வாருங்கள். “பாட்டுகொரு ராகம் ஏற்றி வரும் புலவா உனக்கேன் ஆசை நிலவவள் மேலே” கேளுங்கள்… இரண்டு வார்த்தைகளுக்கு இடையில் எப்படி இது நடக்கிறது என்று நம்மை யோசிக்க வைப்பதன் துவக்கம் இது. “இனிமை நிறைந்த உலகம் இருக்கு” என்பது துள்ளல் நிறைந்த வேகமான பாடல். இதில் கூட “கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம்” என்பதன் முடிவில் ஒலிக்கும் சிரிப்பு அவரால் எந்த தாளக்கட்டிலும் இதை செய்ய இயலும் என்பதை அன்றே நமக்கு உணர்த்தியது. சிரிப்பு என்றால் மகிழ்ச்சி மட்டும் தானா? துயரிலும் விரக்தியிலும் சிரிப்பு வாராதா என்ன? அத்தகைய சிரிப்பின் உணர்வை அற்புதமாக கடத்தியிருப்பார் “மலரே என்னென்ன கோலம்” பாடலில் விரக்தியின் சிரிப்பை சொல்லுக்குள்ளாகவே வைத்து விதவிதமாய் வெளிப்படுத்தியிருப்பார் இவர். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தமானது “உன்னைக் கண்ட பின்பு தான்” என்னும் பாடலில் வரும் “பூப்பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன் இன்று பால் குடித்த பின்புதானே பல் துலக்கினேன்” என்ற வரிகளில் உச்சரிப்புக்குள்ளேயே மெல்லிய சிரிப்புடன் கலந்து நிற்கும் அவரின் குரல். இப்பாடல் முழுவதுமே பாடலின் பொருளுக்கேற்ப ஒரு மெல்லிய சிரிப்பை வரிகளின் கீழ் பரப்பியபடியே செல்லும் அவரின் நளினத்தை மரணம் கலைத்துவிட முடியாது.

அவரின் குறுநகைக்கு ஒரு புத்தகம் என்றால் சங்கதிகளுக்கு மற்றொரு புத்தகம் எழுத வேண்டும். “அவளொரு மேனகை”யில் வரும் “சிவரஞ்சனி…” கேட்ட பின் “மண்ணில் இந்த காதலின்றி”யெல்லாம்  தூசு என்று தோன்றும். ஒற்றை எழுத்தில் ஏற்ற இறக்கம் எப்படி வேண்டுமானாலும் காட்டலாம், எத்தகைய சங்கதியையும் வைத்து கர்நாடக இசையின் அடிப்படை கூட தெரியாத ரசிகனையும் பரவசப்படுத்தலாம் என்று காட்டியவர் இவர். “மூங்கிலிலே பாட்டிசைக்கும்” என்றொரு பாடல். அதில் “கற்பனைக்கு விதை தூவினாள்” என்பதில் “கு” என்னும் எழுத்துக்குள்ளேயே ஒரு குறும்பயணம் போய் வந்திருப்பார். “சின்ன பூங்கிளி சிந்தும் தேன்மொழி” என்றொரு அதிகம் அறியப்படாத ஒரு பாடல். “ஆசை தீர பேச வேண்டும் பூங்காதிலே ஆயுட்காலம் யாவும் உன்னை நீங்காமலே” என்றொரு மிகச் சாதாரண வரி. இதை எஸ்.பி.பி மெருகேற்றியிருக்கும் விதத்தை கவனியுங்கள். “கலைவாணியோ ராணியோ” என்றொரு பாடல். இதில் அவர் “பார்வை” என்ற சொல்லுக்குள் என்னவெல்லாம் செய்திருப்பார் என்பது மிக நுணுக்கமானது. 

spacer.png

 

மொழியின் பொருளை உணர்வில் ஏற்றுவதும் அந்த உணர்வை நம் செவியில் ஊற்றுவதும் அத்தனை எளிதானதல்ல. அதையும் ஆயிரமாயிரம் பாடல்களில் அன்றாட வேலை போல் அசால்டாக செய்து வந்தவர் அவர். “தீர்த்தக்கரையினிலே தெற்கு மூலையிலே”வில் வரும் “நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ”வை பாரதி கேட்டிருந்தால் பரவசமடைந்து ஓடி வந்து எஸ்.பி.பியை ஆரத்தழுவியிருப்பார். “தொலைவு” என்பதன் பொருளை குரலில் காட்ட முடியுமா? இவரால் முடிந்திருக்கிறது. “நினைத்தால் எட்டாத தூரம்” என்னும் “மலரே என்னென்ன கோலம்” கேட்டுப் பாருங்கள். இவர் “எட்டாத தூரம்” என்பதில் புரியும் பிரிவின் தொலைவு. “நீளம்” புரிய வேண்டுமா…”நீளமான கண்களே நீண்டு வந்து தீண்டுதே” என்ற “கீதம் சங்கீதம்” பாடல் கேளுங்கள். “விடியல்” எப்படியிருக்கும் புரிய வேண்டுமா? “அதிகாலை நேரமே” கேட்கலாம். “வண்ணம் கொண்ட வெண்ணிலவே” என்பது அவரே இசையமைத்து பாடிய பிரபலமான பாடல். பிரிவின் உணர்வை மெல்ல மெல்ல ஏற்றும் வரிகள் இரண்டாம் சரணத்தின் இறுதி இரண்டு வரிகளில் அப்படியே சட்டென்று அதிலிருந்து மீண்டு வரும் உணர்வை தோற்றுவிக்கும். அதை அப்படியே பிரதிபலிக்கும் குரல், பாடல் துவக்கத்திலிருந்து “ஜீவன் வந்து சேரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன்” வரை ஒரு உணர்வையும், பின் சட்டென்றும் அதே சமயம் மென்மையாய் மாறும் “தேவி வந்து சேர்ந்து விட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்” என்று மாறியும் அற்புதமாய் வெளிப்படும். “நாணக்குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை” என்று எழுதப்படும் காமம் கூட இவரின் குரல் வழியே சமூகத்தை அடையும் பொழுது ஆபாசமற்ற உடை உடுத்தியிருக்கும். நாம் எப்பேர்ப்பட்ட கொம்பனாக வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லது அத்தகைய நினைப்புடன் திரியலாம். ஆனால் “உச்சி வகுந்தெடுத்து” நம்மை அப்படியே தூக்கி அத்துவானக் காட்டில் போட்டு விட்டு போய்விடும் தன்மை வாய்ந்தது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இங்கு குறிப்பிட்டவை எல்லாம் ஒரு ஆயுள் முழுவதும் தேவைப்படும் சோற்றுக்கு ஒரு சோறு பதம்!.

சிறுநீர் கழிப்பதற்கும் புகைபிடிப்பதற்கும் நேரம் கொடுப்பதற்கென்றே சில பாடல்கள் படங்களில் வருவதுண்டு. அத்தகைய மசாலா பாடல்களில் கூட தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தவர் எஸ்.பி.பி. “அப்பப்பா தித்திக்கும் உன் முத்தம்”, “சிங்காரி சரக்கு நல்ல சரக்கு”, “தேவை இந்த பாவை” என இவர், தொழில் என்பதை தாண்டி அதில் எத்தனை ஈடுபாடும் பக்தியும் கொண்டிருந்தார் என்பதற்கு இத்தகைய பாடல்களில் கூட அவர் எத்தகைய ஜாலம் காட்டியிருக்கிறார் என்பதில் விளங்கும். சிங்காரி சரக்கு பாடுவதற்கும் லிங்காஷ்டகம் உள்ளோடுவதற்கும் அவரிடம் இருந்த அர்ப்பணிப்பு ஒன்றே.

90களில் அவரின் குரல் இன்னும் உச்சமடைந்து ஏற்கெனவே தேனில் ஊறிய பலாவின் மீது சர்க்கரை பாகு ஊற்றியது போல் மாற்றமடைந்து வந்தது. “சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே”, “மயிலாடும் தோப்பில்”, “ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது” என நம்முள் மேலும் மேலும் கெட்டித்துக் கொண்டே வந்தார்…நான்கு வயதில் ஒரு அதிகாலையில் அறிமுகமான ஒரு குரல், என் பால்யத்தில் பதிந்து இளமையுடன் நடந்து வாழ்வின் நடுப்பகுதி வரை நாளும் பொழுதும் உடலின் ஒரு பகுதி போல் உடன் வந்திருக்கிறது. இனியும் வரும்.

இரண்டு தலைமுறைகள்…காலச்சக்கரம் எண்பதுகளிலேயே சுற்றிக் கொண்டிருக்காதா என்று அவர் ஏங்க வைத்த இரண்டு தலைமுறைகள்…எந்த வானொலி நிலையத்தில் அவரின் எந்தப் பாட்டு ஒலிக்கும் என்று காத்திருந்து கேட்ட இரண்டு தலைமுறைகள்…கணக்கற்ற முறை கேட்டு தேய்ந்து போன ஒலிநாடாக்களில் சில பத்திரமாய் உள்ளிருக்கும் பழைய பெட்டிகளுக்குள் ஒட்டிக் கொண்டிருக்கும் அவர் குரல் இரண்டு தலைமுறைகளுடன் நின்று விடாது. ஒரு பொத்தான் விசையில் கைபேசியில் அவரின் குரலை அடையக் கூடிய தொழில்நுட்பம் கைவரப்பெற்ற‌, அர்த்தமற்ற வேகத்தில் சுழலும் புதிய உலகில் சமீபத்தில் தோன்றிய மற்றும் இனி தோன்றப் போகும் அத்தனை புதிய தலைமுறைகளுக்கும் ஆசுவாசம் அளிக்கத் தவறப்போவதில்லை எஸ்.பி.பியின் குரல். 

நெருங்கியவர்கள் மறைவிற்கே “RIP” என்று போட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்கப்போகும் இன்றைய வாழ்வியலில், கோடிக்கணக்கானவர்களின் மனதின் ஓரம் ஏதோ ஒன்றை இழந்ததைப் போன்ற உணர்வு ஒன்றை தன் குரலால் மட்டுமே ஒருவரால் தோற்றுவிக்க முடிந்திருக்கிறதென்றால், அந்த தாக்கத்தின் பெயரே எஸ்.பி.பி.

 

spacer.png

குறிப்பு:

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில அரிய பாடல்களும் அவை இடம்பெற்ற படங்களும்:

  • குறிஞ்சி மலரில் வழிந்த – அழகே உன்னை ஆராதிக்கிறேன்
  • நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை – பாலூட்டி வளர்த்த கிளி
  • சமுத்ர ராஜ குமாரி  – எங்கள் வாத்தியார்
  • எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் – பட்டாக்கத்தி பைரவன் 
  • சிரிச்சா கொல்லிமலை குயிலு – ஜோதி
  • பொன்னென்பதோ பூவென்பதோ – அன்னப்பறவை
  • பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு – இவள் ஒரு சீதை
  • சின்னப்புறா ஒன்று – அன்பே சங்கீதா
  • பூப்போலே உன் புன்னகையில் – கவரிமான்
  • ஒரு சின்னப் பறவை அன்னையைத் தேடி – மதனமாளிகை
  • அன்பு மேகமே இங்கு ஓடி வா – எங்கம்மா சபதம்
  • தாலாட்டு பிள்ளைக்கொரு தாலாட்டு –  அச்சாணி
  • உச்சி வகுந்தெடுத்து – ரோசாப்பூ ரவிக்கைகாரி
  • அவளொரு மேனகை  – நட்சத்திரம்
  • மூங்கிலிலே பாட்டிசைக்கும் – ராகம் தேடும் பல்லவி
  • மலரே என்னென்ன கோலம் – ஆட்டோ ராஜா
  • சின்ன பூங்கிளி சிந்தும் தேன்மொழி – பார்வதி என்னைப் பாரடி
  • சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே – காவல் கீதம்
  • கலைவாணியோ ராணியோ – வில்லுப்பாட்டுக்காரன்
  • உன்னைக் கண்ட பின்புதான் – சிகரம்
  • நாணக்குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை – முத்தமிழே முத்தமிழே – ராமன் அப்துல்லா

 

https://solvanam.com/2020/09/27/பூப்போலே-உன்-புன்னகையில்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  • குறிஞ்சி மலரில் வழிந்த – அழகே உன்னை ஆராதிக்கிறேன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை – பாலூட்டி வளர்த்த கிளி

 

  • சமுத்ர ராஜ குமாரி  – எங்கள் வாத்தியார்

 

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் – பட்டாக்கத்தி பைரவன்

 

  • சிரிச்சா கொல்லிமலை குயிலு – ஜோதி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  • பொன்னென்பதோ பூவென்பதோ – அன்னப்பறவை

  • பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு – இவள் ஒரு சீதை

 

  • சின்னப்புறா ஒன்று – அன்பே சங்கீதா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • பூப்போலே உன் புன்னகையில் – கவரிமான்

 

  • ஒரு சின்னப் பறவை அன்னையைத் தேடி – மதனமாளிகை

 

  • அன்பு மேகமே இங்கு ஓடி வா – எங்கம்மா சபதம்

 

  • தாலாட்டு பிள்ளைக்கொரு தாலாட்டு –  அச்சாணி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  • உச்சி வகுந்தெடுத்து – ரோசாப்பூ ரவிக்கைகாரி

 

 

 

  • அவளொரு மேனகை  – நட்சத்திரம்

 

 

  • மூங்கிலிலே பாட்டிசைக்கும் – ராகம் தேடும் பல்லவி

 

 

  • மலரே என்னென்ன கோலம் – ஆட்டோ ராஜா

 

  • சின்ன பூங்கிளி சிந்தும் தேன்மொழி – பார்வதி என்னைப் பாரடி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே – காவல் கீதம்

 

  • கலைவாணியோ ராணியோ – வில்லுப்பாட்டுக்காரன்

 

 

  • உன்னைக் கண்ட பின்புதான் – சிகரம்

https://youtu.be/R6Q61PMLzBQ

 

 

முத்தமிழே முத்தமிழே  – ராமன் அப்துல்லா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொன்றும் மறக்க முடியாத பாடல்கள். 

கவரிமான், ‍ 8 வயதில் கெயிட்டி தியேட்டரில் பார்த்த படம். இன்னும் இந்தப்படம் மனதில் நிற்கின்றது.

80கள் மறுபடி திரும்பி வாராதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.