Jump to content

தமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை இனியாவது கோட்டா அரசு புரிந்து கொள்ள வேண்டும்: ஒன்றுதிரண்ட தமிழ் மக்களிற்கு நன்றி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம்.

இவ்வாறு 10 தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தின் நிறைவில் இன்று மாலை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கையில் தமிழர் தேசத்தின் தமிழின விடுதலை வரலாறு 70 ஆண்டுகளுக்கும் மேலானது. பல இலட்சம் தமிழ் மக்கள் இனக்கலவரங்களினாலும், போரிலும், போர்க்காலத்திலும், போராட்டங்களிலும் தம் உயிநீத்துள்ளனர். இன்னும் நாம் விடுதலை பெறவில்லை.

இவ் வரலாற்றுக் காலத்திலும் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்தும் ஈமக்கடனியற்றியும் கண்ணீர்விட்டழுதும் ஆறுதல் பெறுவது தமிழ் உறவுகள், தமிழ் மக்களின் பாரம்பரியம். இவை தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகமாகும்.

உலகில் இத்தகைய மனிதாபிமானக் கடமைகள் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் கடப்பாடுகள் மனித குலத்தினாலும் ஐ.நா.சாசனத்தினாலும் உடன்படிக்கைகளினாலும் அங்கீகரிக்கப்பட்ட கடப்பாடாகும்.

உலகம் முழுவதும் இக்கடப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் இலங்கையில் இறந்தவர்கள் நினைவு கூரும் கடப்பாடுகள் அரசுகளினால் மறுக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் வரும் நிலமை தான் இருக்கின்றது.

மனித குலம், தமிழ் உறவுகள் தம் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்டழுது சாந்தி பெறும் இயல் உணர்வுகளைக் கூட, மனிதாபிமானக் கடமைகளைக் கூட இன்றைய கோத்தபாய அரசு மறுத்து வருகிறது.

இன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நீதிமன்றங்களில் எல்லாம் உறவுகளை நினைவு கூருவோருக்கு எமக்கும் பெயரிட்டு எதிராக முறையற்ற வழக்குகளைப் பதிவு செய்து தடையுத்தரவுகளை காவல்துறையினர் வழங்குகின்றனர்.

வடக்கு கிழக்கு முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள், வழக்கறிஞர்களுட்பட நூற்றுக்கணக்கானவர்கள் தடையுத்தரவின் பேரில் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு வருகின்றனர். அரசின், இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயக அடிப்படையுரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்கும்,மனிதாபிமான கடமைகளுக்கும் ஒட்டுமொத்தமாக ஐ.நா. சாசன உடன்படிக்கைகளுக்கும் எதிரானதாகும்.

இதனை நாம் எதிர்க்க வேண்டும். எதிர்த்துப் போராட வேண்டும். மனிதகுலத்திற்குரித்தான, தமிழ் மக்களுக்குரித்தான ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க நாம் ஒன்று திரண்டு ஜனநாயக வழிகளில் போராட வேண்டும்.

இந்நிலமைகள் தான் 1987 செப்டம்பரில் காந்திய வழியில் உண்ணா நோன்பிருந்து 26ஆம் திகதி உயிரிழந்த திலீபனை நினைவு கூருவதிலும் இடம்பெற்றுள்ளது. அவன் தியாகம் மகத்தானது. 1987 செப்டம்பர் 26ல் உயிரிழந்த திலீபன் நினைவு கூருவதற்கு அப்பால் இலட்சக்கணக்கான உயிர்களை இழந்து அர்ப்பணித்த தமிழ் மக்களையும் நினைவு கூர நீதிமன்றத் தடைகளும் ஏற்படுத்தப்படுகின்றன. இதுவே தமிழின அழிவிலிருந்து எஞ்சியுள்ள எம் தமிழ்க் குலம் எதிர்காலத்திலும் எதிர்நோக்கியுள்ள பெரும் பிரச்சனையாகும். சவாலாகும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இப்பொழுது 20வது திருத்தச் சட்டவரைவை நாடாளுமன்றில் நிறைவேற்றும் தீவிரத்தில் உள்ளார். புதிய அரசியலமைப்பில் 20ஆம் திருத்தத்தை உட்படுத்த எண்ணுகிறார். 19ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகம் ஓரளவுக்கிருந்ததையும் அதனை நீக்கும் போது நாடாளுமன்ற ஜனநாயகம் பலவீனப்படுத்தப்படும் சர்வாதிகார பலத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் நாட்டில் இராணுவ மயமான பொலிஸ் அதிகாரமுமான ஆட்சி ஏற்படும்.

தமிழ்த் தேசத்து மக்களின் அரசியல் ஆளும் உரிமை, ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள், மனிதாபிமானக் கடமைகளை இத்தகைய அரசொன்றில் எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்கமுடியாது. பெரும் அடக்குமுறைக்கும் ஒடுக்கு முறைக்கும் தமிழ்த் தேச மக்கள் மூச்சு விடவோ கண்ணீர் விடுவதற்குக் கூட உரிமையற்றவர்களாகி விடுவோம். தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம், தமிழினம் அழிந்து விடும் அபாயத்தையே எடுத்துச் சொல்கிறோம்.

இந்த அபாயத்தை எதிர்கொண்டதால் தமிழ்த் தேசியத்தைக் கொண்டியங்கும் பத்து அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் கடந்த 18ஆம் திகதியன்று ஒன்று கூடி இழந்து போகும் ஜனநாயக அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்கும் படி ஒரு வேண்டுகோளில் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அனுப்பினோம். இதுவரை பதிலில்லை.

அரசின் பொலிஸார் வடக்குக் கிழக்கு முழுவதும் பல நீதிமன்றத் தடைகளையும், நடவடிக்கைகளையும் எடுத்த போது அவற்றைத் தாண்டி கடந்த 26ஆம் திகதி காலை 8.00 மணியளவில் உணவு தவிர்ப்புப் போரட்டத்தை எங்கே நடத்துவது என்பதைத் தீர்மானித்தோம்.

நேற்றுமுன்தினம் சாவகச்சேரியில் கைது செய்யப்படுவோம் என்ற நிலையிலும் முழுநாளும் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்தினோம். ஒற்றுமையினால் புதிய நம்பிக்கையைப் பெற்றோம். வெற்றியடைந்தோம். ஒரு குறுகிய இடைவேளையில் எல்லோரையும் அழைக்க முடியவில்லை.

இருப்பினும் அந்த உத்வேகத்தோடு அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும் ஜனநாயக அடிப்படை உரிமைகளை, மனித உரிமைகள் மற்றும் இறந்தோரை நினைவுகூரும் உரிமையை சட்ட உரித்தை நிலை நாட்டவும் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் இன்று முழுக்கடையடைப்பு ஒன்றை அறிவித்தோம். அதற்கு வடக்குக் கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் பெரும் வெற்றியடைந்துள்ளது.

பத்துத் தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த 19ஆம் திகதியன்று அரசிடம் எழுத்து மூலம் முன்வைத்த கோரிக்கைகளை, இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை ஏற்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம். இலங்கை ஜனநாயக சக்திகளிடமும் மக்களும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் எங்கள் வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

ஒரு குறுகியகால ஒழுங்கில் இடம்பெற்ற உணவு தவிர்ப்புப் போராட்டத்தையும் முழுக் கடையடைப்பு நிகழ்வுகளையும் மக்களிடம், உலகம் முழுவதும் செய்திகளிலும், காணொளி மூலமும் கொண்டு சென்ற பத்திரிகையாளர், ஊடகத்துறையினருக்கு நிச்சயம் எங்கள் நன்றிகள் உண்டு.

இந்தப் போராட்டங்களின் வெற்றிக்காக உழைத்த, பங்களித்த அத்தனை அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், தொழிற்சங்க அமைப்புக்கள், பல நீதிமன்றங்களில் வழக்குகளே இடம்பெறாதளவுக்கு வழக்கறிஞர்கள் பங்களிக்கவில்லை, ஆசிரியர்கள் குறிப்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தீர்க்கமான அறிவிப்பு, மேலாக பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் அறிவிப்பும் பங்களிப்பும், பலதுறைகளின் கல்விச் சமூகம், இன்னும் தென்னிலங்கை ஜனநாயக முற்போக்குச் சக்திகள், முஸ்லீம், மலையக அரசியல் தலைவர்கள், முஸ்லீம் வர்த்தக சமூகத்தினர், வேளாண் துறையினர், கடற்தொழில்துறையினர், போக்குவரத்துத் துறையினர், தனியார் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றியை சமர்ப்பித்து நிற்கின்றோம். இப் போராட்டங்களின் வெற்றி தமிழ் மக்களின் வெற்றியே. தமிழ் மக்கள் நிச்சயம் எழுச்சி கொள்வர் என நம்புகின்றோம்.

மாவை.சோ. சேனாதிராசா தலைவர், இ.த.அ.கட்சி பத்துத் தமிழ்க் கட்சிகளின் சார்பில்

https://www.pagetamil.com/148183/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.