Jump to content

எமது முன்னோர்கள்... சங்ககாலத்தில், உண்ட அசைவ உணவுகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person, text that says 'Deiva'
 
சங்ககாலத்தில், விதம் விதமாக சமைத்த..  அசைவ உணவுகள்.
 
சுட்டகறி(Barbeque) :
தன்னிடம் பாடல்பாடி தமிழை வளர்த்த புலவர்களை கரிகால் பெருவளத்தான் பரிசிலை வாரிவழங்கியது மட்டுமல்லாமல், அசைவ உணவை வழங்கி அவர்கள் வயிற்றையும் நிரப்பியுள்ளார்.
கொழுத்தசெம்மறி ஆட்டின் இறைச்சியை இரும்புகம்பியில் கோர்த்து சுட்டு வற்புறுத்தி உண்ண கொடுத்துள்ளான். இறைச்சியின் சூட்டினை தணிக்க தம் வாயின் இருபக்கமும் ஊதி, அவற்றின் வெம்மையை தணித்து புலவர்கள் உண்டுள்ளனர். பற்களின் முனை மழுங்கும் அளவிற்கு சுடச்சுட விருந்தளித்துள்ளார் செம்பியற்கோ.
இதனை
"காழில் சுட்ட கோல்ஊன் கொழும்குறை
ஊழின் ஊழின் வாய்வெய்து ஒற்றி"
என்ற பொருநராற்றுப்படை பாடல் கூறுகிறது.
செம்மறியாடு மட்டுமின்றி மீன், முயல், உடும்பு, கோழி, பன்றி போன்றவற்றை கம்பியில் கோர்த்து சுட்டு உண்டுள்ளனர்.
 
உப்புகண்டம்:
வேடர்குல பெண்கள் மெண்மையான புல்லரிசியை உலக்கையால் குத்தி, ஆழமான கிணற்றில் ஊரிய உவர்நீரை கொண்டு, அரிசியை உலைவைத்து சமைத்தனர்.இதற்கு தொட்டுகொள்ள உப்புகண்டம் போட்ட ஆட்டிறைச்சியை சமைத்து உண்டனர். உப்புகண்டத்தை வாடூன்(வாடு+ஊன்) என அழைத்துள்ளனர். மீய்ந்து போன இறைச்சியை வீணாக்காமல், மஞ்சள், உப்பு தடவி, கம்பியில் கோர்த்து காயவைத்து, தேவைப்படும் சமயம் ஊன்உணவு சமைத்துள்ளனர்.தம் விருந்தினருக்கும் வாடூனை கொடுத்து உபசரித்துள்ளனர்.
"முரவு வாய்க் குழிசி முரிஅடுப்பு ஏற்றி
வாராது அட்ட, வாடுஊன், புழுக்கல்
என்ற பெரும்பாணாற்றுப்படையின் பாடல் மேற்கண்ட உப்புகண்டம் குறித்து கூறுகிறது.
 
நெய்ச்சோறும் வெள்ளாட்டு கிரேவியும்:
முல்லைநில பெண்கள், தம் இல்லத்திற்கு வரும் உறவினர்களையும், சுற்றத்தார்களையும் உபசரிக்க, நறுக்கிய வெள்ளாட்டின் சதைகளை துண்டாக்கி, நன்கு வதக்கி சுவைமிக்க சமைத்து, குழைய ஆக்கிய நெய்சோற்றுடன் உண்ண கொடுத்துள்ளனர்.
இதனை கூத்தராற்றுப்படை கீழ்க்கண்ட பாடலில் கூறுகிறது!
"பொன் அறைந்தன்ன நுண்நேர் அரிசி
வெண் எறிந்து இயற்றிய மாக்கண் அமலை
தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவீர்"
 
உடும்பு பொரியல்:
பாலைநில எயினர் வீடுகளில் சென்றால், அவ்வீடுகளில் சிகப்புஅரிசி சோற்றுடன், உடும்பு பொரியலையும் உண்ண தருவார்கள், எயினரின் நிலம் இயல்பாக வளமில்லாது இருந்தாலும், தம்வீடு தேடி வருவோரை சிறப்பிக்க மேட்டுநிலத்தில் விளையும் சிகப்பரிசியையும், தாம் வேட்டையாடிய உடும்பினையும் சமைத்து உயர்தரமாய் உபசரித்துள்ளனர். பெரும்பாணாற்றுப்படை இதனை
"களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன,
சுவல் விளை நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி,
ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்
வறைகால் யாத்தது வயின்தொறும் பெருகுவிர்"
என கூறுகிறது.
 
சுட்ட இறால்,ஆமைக்கறி வருவல்:
புகார் நகரில் வசித்த பரதவர், மீனை வேட்டையாடும் தொழிலில் ஈடுபட்டனர். சிலசமயம் களவுதொழிலையும் புரிந்துள்ளனர். கடலில் பிடித்த இறாலையும், வயலில் பிடித்த ஆமையையும் தீயில் வாட்டி உண்டனர். பட்டினப்பாலை இதனை கூறுகிறது.
 
மேலும் பல முன்னோர் உணவுகள் குறித்து காண:
எழுதியவர் : திருச்சி பார்த்தி
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.