Jump to content

பெண்களுக்கு எதிரான வன்முறையின் களமாகும் சமூக வலைத்தளங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு எதிரான வன்முறையின் களமாகும் சமூக வலைத்தளங்கள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2020 ஒக்டோபர் 04

“உலகம் மாறிவிட்டது” என்ற கோஷத்தை, நாம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். “தொழில்நுட்ப ரீதியில் உலகம் வளர்ச்சி அடைந்துள்ளது”, “மனிதன் இன்னும் நாகரிகமுள்ளவனாக மாறிவிட்டான்” போன்றவையும் நாம் அடிக்கடி கேட்பவை!   

ஆனால், பெண்களுக்கு எதிரான வன்முறை, தொடர்ச்சியானதாகவும் நிறுவனமயப்பட்டதாகவும் இருக்கிறது. இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் யாதெனில், பெண்களின் கருத்துரிமைகளுக்கான புதிய களங்களாகக் கருதப்பட்ட சமூக வலைத்தளங்களில், மிகப்பயங்கரமான வன்முறை அரங்கேறுகிறது.   

இது, பாலியல் தாக்குதல்களாகப் பெண்களைக் குறிவைக்கிறது. வன்முறையாளர்கள் பாதுகாப்பாகவும் வன்முறைக்காளாகுவோர் அச்சத்துடனும் வாழுகின்ற ஒரு சூழல் உருவாகியிருக்கிறது; இது தடுக்கப்பட வேண்டும். இதற்கெதிராக அனைவரும் திரண்டு குரல்கொடுப்பதும் இவ்வகையான இழிசெயல்கள் நிறுத்தப்படுவதும் அவசியமாகிறது.  

பெண்கள் பலருக்கான பொதுவெளியாகவும் கருத்துச் சுதந்திரத்தின் களமாகவும் சமூகவலைத்தளங்கள் திகழ்கின்றன. அப்பொதுவெளியிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான தொந்தரவுகளும் தாக்குதல்களும் நிகழ்கின்றன. இது பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் இன்னொரு வடிவமே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  

பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கமும் வக்கிரமும் இன்று நேற்று உருவானதல்ல. பெண்கள் மீதான ஒடுக்குமுறை அவர்களது உயிரியல் அடிப்படையிலானதன்று. மாறாக, அதன் தோற்றத்துக்குப் பொருளியல், சமூகப் பரிமாணங்கள் உள்ளன.   

எந்தக் காலத்திலும், சமூக உற்பத்தியில் பெண்களின் பங்கு, சமூக உற்பத்திச் சக்திகளின் விருத்தியிலும் உற்பத்தி உறவுகளிலும் தங்கியிருந்துள்ளது. எனவே, பெண்கள் மீதான பால் அடிப்படையிலான ஆதிக்கமும் ஒடுக்கலும் முழுச் சமூகத்தினதும் சுரண்டல் அடிப்படையிலான உற்பத்தி உறவுகளில் இருந்து பிரித்து நோக்க இயலாது.   

சமூக உற்பத்தியில், பெண்களுக்கு விதிக்கப்பட்ட இடம், சமூக அமைப்புகளின் மாற்றத்துடன் மாறி வந்துள்ளது. அதிதொன்மையான சமூகம், உற்பத்தி அடிப்படையில் அமைந்திருந்தது. உற்பத்தியின் பயன்கள், சமமாகப் பகிரப்பட்டன. உண்மையில், சமூக உற்பத்தியின் உயர்வில் பெண்களின் பங்கு, ஆண்களினதை விட மேலானதாக இருந்ததெனவும் கூறலாம்.   

சமூகத்தில் பெண்களின் தாழ்வு, தனியார் சொத்துடைமையாலும் குடும்பம் எனும் அமைப்பாலும் நிர்ணயித்த வேலை ஒதுக்கீட்டாலும் உருவானது. வர்க்க அடிப்படையிலான வேலைப் பிரிவினை, எவ்வாறு தொடங்கியது என்றோ, அது எவ்வாறு பெண்கள் மீதான ஆதிக்கத்துக்கு இட்டுச் சென்றது என்றோ திட்டவட்டமாகக் கூற இயலாது.   

எனினும், உற்பத்திச் சாதனங்கள் மீது, (முதலில் மண்ணும் விவசாயக் கருவிகளும் விலங்குகளும்) தனியார் ஆதிக்கத்துக்கு உட்பட்டதோடேயே ஆணாதிக்கம் தொடங்கியது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அதன் பின்பு, அடிமைகளையும் உற்பத்திக் கருவிகளையும் போன்று, பெண்களும் ஆணின் உடைமையாக நேர்ந்தது.   

பெண்களின் சமூக உற்பத்தி மூலம், அவர்களுக்குப் பொருள் மீது, முக்கியமாக உற்பத்திச் சாதனங்கள் மீது, ஆதிக்கம் ஏற்படாதவாறு, சொத்துடைமை ஆண்களின் வசமாக்கபட்டது. இவ்வாறு, பெண்களின் உற்பத்திப் பங்களிப்பு, ஆணுக்குச் சேவையாற்றுவதும் அடுத்த தலைமுறையின் தோற்றமும் பராமரிப்பும் என முதன்மை பெற்றன.   

முதலாளித்துவத்தின் வருகை, பெண்ணை ஓர் உற்பத்திக் கருவியாக மட்டுமன்றி, பன்முகப்பட்ட நுகர்பொருளாகவும் வடிவமைத்தது. இன்றைய உலகமயமாக்கல் சூழலில், பெண்கள் மிகுந்த அடக்குமுறைகளுக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக, நுகர்வுக் கலாசாரம், பெண்களை ‘நவீனமாக்கி’, அவர்களுக்கு விடுதலை அளிப்பது போல தோற்றம்காட்டி, பெண்களை அடிப்படையான நிறுவனமயப்பட்ட அடக்குமுறைகளுக்குள் பேணுகிறது.   

பெண்கள் மீதான ஒடுக்கு முறை என்பதை விரித்து நோக்கின், பல்வேறு தளங்களில் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளையும் அவற்றின் சமூகத் தாக்கங்களையும் காணலாம்.   

தென்னாசியச் சமூக அமைப்புச் சூழலில், பெண்களது வாழ்நிலையை வழிநடத்தும் கருத்தியல் சிந்தனை, நடைமுறைகளில் நிலவுடைமைக் கண்ணோட்டமே முன்னுரிமை வகித்து நிற்கிறது. ஆணாதிக்கச் சிந்தனை என்பதும் மேற்படி நிலவுடைமைக் கருத்தியலின் வழிவந்த ஒன்றேயாகும். அதன் காரணமாகவே, பெண்கள் இன்றும் ஆண்களை விடக் குறைவானவர்களாகக் கொள்ளப்பட்டு, சமத்துவமின்மைக்கு உள்ளாகிறார்கள். இதன் வெளிப்பாடுகளே, சமூக வலைத்தளங்களில் பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் தாக்குதல்களின் அடிப்படையாகும்.   

இலங்கையில், பெண்களுக்கான பொதுவெளிகள் இன்னமும் விரிவடையவுமில்லை; ஜனநாயகப்படவுமில்லை. இதில் கவனிக்க வேண்டிய விடயம்,  உலகின் முதலாவது பெண் பிரதமரைத் தந்த நாடு இலங்கை. இங்குதான், ஒரு பெண் ஜனாதிபதியாக 11 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தார். ஆனால், இலங்கையில் பெண்களுக்கான உரிமைகள் உறுதிசெய்யப்படவில்லை.   

ஏனெனில், வெறுமனே பதவிகளுக்குப் பெண்கள் தெரிவாவது, பிரச்சினைகளுக்குத் தீர்வல்ல. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் வன்முறைகளும் சமூகத்தில் நிறுவனமயப்படுத்தப்பட்ட கருத்தியல் ரீதியான ஒடுக்குமுறைகளைக் களைவதன் மூலமே, பெண்களின் விடுதலை சாத்தியமாகும்.   

இன்று சமூக ஊடகங்களில், பயனர்களாக பலர் இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், இத்தளங்களில் நடப்பதைப் பலர் பார்க்கிறார்கள். அவர்களில் பலர், அதற்கெதிராகக் குரல் கொடுக்காமல் அப்பால் நகர்கிறார்கள். இன்னும் சிலர், அக்கருத்துக்கு ஆதரவு சேர்த்து, வன்முறையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறார்கள். 

இவ்விடத்தில் இரண்டு உதாரணங்களை இங்கு சுட்டிக் காட்டல் தகும்.   
முதலாவது, அண்மைக் காலமாகப் பொதுவெளிகளில் இயங்கும் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக, முகநூலில் நிகழ்த்தப்பட்ட பாலியல் தாக்குதல். மிக மோசமான பாலியல் வசவை, வெளிப்படையாக இவர்களால் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ள முடிகிறது; அதை அச்சமின்றித் தொடரவும் முடிகிறது.   

இது, நாம் வாழும் சமூகம் குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது. நாம் வாழும் உலகு மட்டுமன்றி, மெய்நிகர் வெளிகளும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாதனவாக மாறிவிட்டன என்பது, கவலை தருகிறது.  

இந்தக் கட்டுரையை வாசிப்பவர்களில் பலர், சமூக வலைத்தளங்களில் பயனர்களாக இருப்பவர்கள். நீங்கள், நிச்சயம் பெண்களுக்கு எதிரான வசவுகளை, பாலியல் தொல்லைகளை, சமூக வலைத்தளங்களில் தரிசித்திருப்பீர்கள். ஆனால், அதற்கும் எனக்கும் தொடர்பில்லை என்று, அப்பால் நகர்ந்திருப்பீர்கள். உங்களுக்கு, மார்ட்டின் நெய்மோலரின் ‘அவர்கள் என்னைத் தேடி வந்தபோது’ என்ற கவிதையை நினைவூட்ட விரும்புகிறேன்.   

இரண்டாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்கள், பகடிவதை என்பதன் பெயரால், நிகர்நிலையில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டமையும் அதற்குப் பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கையும் கவனிப்புக்குரியது. பகடிவதையின் பெயரால் இவ்வாறான நடத்தைகள், புதிய கட்டத்தைத் தொட்டுள்ளன. பல்கலைக்கழகங்களோ, “எமது வளாகத்தில் பகடிவதை இல்லை” என்று தொடர்ந்து சாதித்தாலும், சம்பங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. இவ்விரண்டு உதாரணங்களும், எமது சமூகம் அவசரமாகக் கணிப்பில் எடுக்க வேண்டிய சில விடயங்களைக் கோடிட்டுக் காட்டுகின்றன.   

தென்னாசியச் சமூகங்களில் ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நிறுவனமயப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த ஒடுக்குமுறை, பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது.    

பெண் என்பவள் அடித்தோ, விரட்டியோ, துன்புறுத்தியோ ஆணால் அடக்கியாளப்பட வேண்டியவள் என்பதை, திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் சொல்லிக் கொடுக்கின்றன.  வன்முறைக்கு ஆளாகும் பெண், வீட்டிலோ வெளியிலோ அது குறித்து நம்பிக்கையுடன் பேசுவதில்லை. தன்னுடைய குரல் நிராகரிக்கப்படக்கூடும்; தான் அவமானப்படுத்தப்படக்கூடும்; அதை வைத்து, மற்றவர்கள் தவறாக நடக்கக்கூடும் என்கிற காரணங்கள் அதன் பின்னணியில் உள்ளன.   

வன்முறை, அச்சுறுத்தல் என்கிற ஆயுதங்கள், பெண்களை அதே இடத்தில் இருத்தி வைக்கின்றன. இந்த ஆயுதங்களை ஏவுகிறவர்கள், ஆண்களாகவே உள்ளனர். இதன் வடிவங்களும் களங்களும் மாறியுள்ளனவே தவிர வன்முறை தொடர்கிறது.   

இன்றும் பெண்களுக்கு எதிரான எல்லாக் கொடுமைகளுக்கும் பெண்கள் மீதே பழி போடுவது, கட்டுப்பாடுகள் விதிப்பது, என்பதுதான் பொதுப்புத்தி மனநிலை. ஆனால், மேற்கண்ட உண்மைகள் ஒட்டுமொத்த சமூகத்தையே கௌவிக் கொண்டிருக்கும் தீராத நோயின் அறிகுறிகள் என்பதை நாம் மறந்துவிடலாகாது.   

பெண்களின் ஜனநாயக வாழ்வுரிமைகளை மதிக்கும் உணர்வுகள் ஒவ்வொரு மனிதனிலும் உட்பொதிந்திருக்க வேண்டும். ஆணையும் பெண்ணையும் சரிசமமாகப் பார்க்கும் மனோநிலையை பாடசாலைகள், சிறுவயது முதலே உருவாக்க வேண்டும். இதை, ஒரு வளமான எதிர்கால சந்ததியை உருவாக்க விரும்பும் சமூகம் நிச்சயம் செய்யும்.   

இன்று பொதுவெளியில் செயற்படும் கருத்துரைக்கும் போராடும் பெண்கள் அனைவரும், போற்றுதலுக்கு உரியவர்கள். அவர்கள் அனைவருக்குமாகப் போராடுகிறார்கள். அவர்கள் மீதான தாக்குதல், மறைமுகமாக எம்மீதானதும் எம்சமூகத்தின் வளமான எதிர்காலத்தின் மீதானதுமான தாக்குதல் என்பதை, நாம் உணர வேண்டும்; எதிர்வினையாற்ற வேண்டும்.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பெண்களுக்கு-எதிரான-வன்முறையின்-களமாகும்-சமூக-வலைத்தளங்கள்/91-256230

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் சமகால சமூகவெளியை முழுமையாக இன்னும் மேயவில்லை போல் தெரிகின்றது.

பெண்கள் செய்யும் அட்டகாசத்தில் எத்தனை ஆண்கள் தற்கொலை செய்கின்றார்கள், மன உளைச்சலில் தவிக்கின்றார்கள், வாழ்க்க்கையை தொலைத்துவிட்டு மெண்டலாக சுத்தி திரிகின்றார்கள் என்று சோசல் மீடியாவுக்கு சற்று வெளியில் வந்து எட்டிப்பார்த்தால் தெரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கோஷான் த‌ன்னை தானே கோமாளி என்று ப‌ல‌ இட‌த்தில் நிரூபித்து காட்டி விட்டார் நீங்க‌ள் ச‌ரியா சொன்னீங்க‌ள் ஓணாண்டி இத‌ற்கு கோஷானிட‌ம் இருந்து ப‌தில் வ‌ராது.........................கோஷான் தேர்த‌ல் க‌ணிப்பு ச‌ரியா க‌ணிப்பார் என்று யாழிக் சிறு கூட்ட‌ம் இருக்கு...................பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌ல்க‌ள் வ‌ரும் போது இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் ஓட்டு போடும் உரிமை அவைக்கு கிடைச்சிடும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் சீமானுக்கு தான் ஓட்டு போடுவின‌ம் என்று க‌ட‌ந்த‌ ஜ‌ந்து வ‌ருட‌மாய் எதிர் க‌ட்சி ஆட்க‌ளே வெளிப்ப‌டையாய் சொல்லுகின‌ம்.................... அதோட‌ அவ‌ர்க‌ளின் பெற்றோர‌ கூட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட‌ வைக்கின‌ம்.....................இந்த‌ 20 நாளில் அண்ண‌ன் சீமானின் தொண்டை  கிழிஞ்சு போச்சு குர‌லை கேட்க்க‌ முடிய‌ வில்லை தொண்டை எல்லாம் அடைச்சு க‌டும் வெய்யிலுக்கு ம‌த்தியில் ப‌ர‌ப்புர‌ செய்து ச‌ரியா க‌ஸ்ர‌ப் ப‌ட்டு விடார்............................இன்றுட‌ன் சிறிது கால‌ம் ஓய்வெடுக்க‌ட்டும்🙏🥰......................................................................
    • தம்பிகள் தோற்க கொடுக்கும் அட்வான்ஸ் காரணங்கள் இவை. இவை பல தடவை இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன - டாக்டர் காந்தராஜ் பேட்டியை கூட இணைத்தேன் 57இல் திமுக வுக்கு உதயசூரியன் கிடைக்காமல் சுயேற்சைக்கு கிடைத்தது. முதலில் கேட்பவருக்கே சின்னம் எனும் போது நாதக முதலில் கேட்காமல் - குறட்டை விட்டு விட்டு தேர்தல் ஆணையம் மீது பழி போடுகிறார்கள். வாங்கு எந்திரத்தில் அப்படி ஒரு சின்னமும் மங்கலாக தெரியவில்லை என என் நண்பர்கள் பலர் இன்று சொன்னார்கள். இதுவும் தேர்தல் நாளுக்கு முதலே நாதக கட்டி விட்ட புரளி.  
    • இப்படி ஒரு நல்லவர் இலங்கை அரசியலில் இருந்ததை அவர் மறைவுக்கு பின் யாழ்களம் படிந்து அறிகிறேன் அஞ்சலிகள்.
    • நன்றி  "பத்தினி தெய்வோ கண்ணகியை வணங்கி  உத்வேகம் கொள்ளும் இலங்கைத் தீவில்  யுத்தமென்ற ஒரு போர்வையை சாட்டாக்கி  கொத்துக் கொத்தாய் பாலியல் வல்லுறவு எத்தனை ?" "பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு  மண்டபம் அதிர சலங்கை உடைத்து  உண்மை நாட்டினாள் அன்று, இன்றோ   கண்ணீர் அபலையாக்கி வேடிக்கை பார்க்கிறார்கள் ?"  
    • எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம். ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை. தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது. அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது. ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை. ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு. இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே. இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது. இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.