Jump to content

உயர் கல்விக்கான வாய்ப்பை மேம்படுத்துதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உயர் கல்விக்கான வாய்ப்பை மேம்படுத்துதல் - பகுதி 1
================================

மாறிவரும் கல்விச் சூழலும் வளப் பாவனையும்  
----------------------------------------------------------

நடப்பு காலங்களில் தமிழர்களின், குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கின் கல்வி வீழ்ச்சி குறித்த அதிக விவாதிப்புக்கள் உள்ளூர் , மற்றும் புலம் பெயர் சமூகத்தின் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறி நிற்கின்றது. 

கல்வியை ஒரு மூலாதாரமாகப் பற்றிக் கொண்டிருக்கும் ஒரு சமூகமாக பல தலைமுறைகளாக இலங்கைத் தீவில் தமிழ்ச் சமூகம் இயங்கி வந்திருக்கிறது. அதாவது கல்வித் தகமை என்பது அரச தொழில் ஒன்றைப் பெறுவதற்கான உத்தரவாதமாகவே பார்க்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில வருடப் பெறுபேறுகளால், தமிழர்கள் தமிழர்களின் உத்தரவாதக் கட்டமைப்பில் சிதைவு அல்லது வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது என்ற ஒரு பதட்டம் பலரிடம் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

எப்போதும் மேம்போக்கான ஒப்பீடுகளைச் செய்தபடியே வளர்ந்த தமிழ்ச் சமூகத்திற்கு இன்றைய காலத்தில் வடகிழக்கைத் தவிர்த்த இலங்கையின் ஏனைய பகுதிகளுடன், குறிப்பாகத் தென் மாகாணத்துடன் ஒப்பிடுகையில் தாம் தாழ்ந்து போய்விட்டதாக அச்சம் கொள்ளும் மனநிலை மேலோங்கியுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது. 

கிட்டத்தட்ட ஒரு  தலைமுறையாக நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் பாதிப்புகள் வடக்கு கிழக்கின் கல்விச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை. இப்போரின் முடிவின்  பின்னரான கடந்த 11 வருடங்களின் பின்னரும் கல்வியில் ஒரு தேக்க நிலையை வடகிழக்கு பிரதேசங்கள் எதிர்கொண்டிருப்பதற்குரிய பல்வேறு சுட்டிகள் பலராலும் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இவ்வாறு இனங் காணப்பட்ட காரணிகளுக்குத் தீர்வு காணவும், வடகிழக்கின் கல்விச் சூழலை ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கும் உள்ளூர் மற்றும் புலம் பெயர் ஆர்வலர்களும் தொடர்ந்தும் முயற்சி செய்து வருகிறார்கள். தற்போது பிரபலமாகி வரும் இணையவழிக் கல்வி இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். 

ஆனால் துரதிஸ்டவசமாக இவ்வாறான சில செயற்பாடுகள் தவிர்த்து வடகிழக்கில் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் தன்னார்வலர்களால் ஒரு பூரணமான கூட்டுப் பொறிமுறையை உருவாக்க முடியவில்லை.  அதாவது அரச,  தன்னார்வத் தொண்டு மற்றும் அக்கறையுள்ள தனியார் அமைப்புகள் சேர்ந்தியங்கக்கூடிய ஒரு பொறிமுறையை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் கல்வி வளர்ச்சி குறித்த அக்கறையாளர்கள் வெற்றி அடைய முடியவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

வடகிழக்கின் கல்வி வளர்ச்சிக்கு புலம் பெயர் மக்களின் புலமை மற்றும் நிதிப் பங்களிப்பை செய்வற்குரிய ஆர்வம் மிகையாக இருக்கும் சூழலில், இலங்கையின் கல்வித் திட்டத்தோடு சமாந்திரமாக பயணிக்கும் திட்டமிடப்பட்ட கட்டமைப்பின் தேவைப்பாடு ஒன்று அவசியமாகிறது. அந்தக் கட்டமைப்பின் செயல் உருவம் எது என்பதில் யாருக்கும் தெளிவான சிந்தனையும் தெளிவான வரையறைகளும் இல்லை.  

மாறாக தனிநபர்களாகவும் சிறு குழுக்களாகவும் முன்னெடுக்கப்படும்  முயற்சிகள் முறைசாரா (informal) வகையில் தொழிற்படும் சூழலே இப்போது  காணப்படுகிறது. இச் சூழலில் ஒரு சமச்சீரான கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது திண்டாடுகின்ற நிலமையே இன்று வரை காணப்படுகின்றது. 

இதனால் புலம்பெயர் மற்றும் உள்ளூர்  தன்னார்வலர்கள் முதலில் கல்வி வளர்ச்சிக்காய் பொருத்தப்பாடுடைய பொறிமுறையை உருவாக்குவதில் தமது கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. அதன் பின்னரே அந்த பொறிமுறையூடாக கல்வி வளர்ச்சியில் தமது பங்களிப்பைச் செய்வது காத்திரமான பங்களிப்பாக அமையும். 

இன்றும் பல புலம்பெயர் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் பலர் பாடசாலைக் கல்வியை மையப்படுத்திய, பொதுத் தேர்வின் பெறுபேறுகள் அடிப்படையிலான கல்வியின் வளர்ச்சியில் மாத்திரம் அக்கறைப்படுவது குறித்தும் அதிக விமர்சனங்கள் வந்த வண்ணமே இருக்கின்றது. வடக்கு, கிழக்கின் பிரபல பாடசாலைகள் பல தமது பாடசாலைகளை மையப்படுத்தி, பிராந்தியத்தில் சிறந்த ஆசிரியர்களை தமது பாடசாலைகளை நோக்கி நகர்த்துவதிலே அதிக சிரத்தை காட்டுவதை காணக் கூடியதாக உள்ளது.

மறுபுறத்தில், சமச்சீர்க் கல்வி,  சமமான வளப்பகிர்வு என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் இனிவரும் நாட்களில் வடக்கு-கிழக்கு சமூகம் செயற்பட வேண்டிய தேவை உணரப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் காணப்பட்ட பாகுபாட்டுத் தன்மையுடனான வளப்பகிர்வு, இடமாற்றக் கொள்கைகள் போன்றன கற்றல், கற்பித்தல் செயல்பாட்டை பாதித்து வந்ததே இதற்குக் காரணம் என்றால் அது மிகையில்லை.

ஆசிரியர் வளப்பற்றாக்குறை உள்ள பாடசாலைகளில், அவ் வளப் பற்றாக்குறைகள் தீர்க்கப்படும் வரையிலும் மாற்றுத் திட்டங்களை பயன்தரக் கூடிய விதத்தில் அமுல்படுத்துவது அவசியமாகிறது. தற்போது சில தன்னார்வ அமைப்புகள் முன்னெடுக்கும் இணையவழிக் கல்வி, விரிவுரைகள் மற்றும் கையேடுகள் தரவேற்றிய மடிக்கணினி/ Tablet வழங்கும் திட்டம், பாடசாலைக்கு Smart TV வழங்குதல் போன்ற கருத்திட்டங்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.  

மாணவர்களுக்கு சுயகற்றல் கையேடுகள், செயலட்டைகள் வழங்கப்பட்டு மாணவர்கள் தாமாகவே சுய கற்றலுக்குரியவர்களாக ஊக்கப்படுத்துவதும், கையேடுகள், செயலட்டைகளில் உள்ள கேள்விகளுக்கு அதே ஊரில் உள்ள தொண்டர்கள் மூலம் உதவுவதும், தவணையடிப்படையில் பிற பகுதிகளில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து  வினா விடை வகுப்புகளை நடாத்துவதும் அதிக பலனைத் தரக்கூடிய சில வழிமுறைகளாகும். இந்த அணுகுமுறை வன்னியிலும், கிழக்கின் சில பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதையும், அது வரவேற்பு பெற்று வருவதையும் அறிய முடிகிறது.

ஆசிரியர்களையும் வளங்களையும் நோக்கி நீண்ட காத்திருப்புடன் பாடசாலைகள் இருப்பதை விட குறைந்த நிதிவளத்தோடு அதிக பலனைத் தரக்கூடிய முறைகளைக் கையாள்வதன்மூலம் பின்தங்கிய பிரதேசங்களின் கல்வி வளர்ச்சிக்குரிய உடனடித் தீர்வொன்றை விரைந்து உருவாக்க முடியும்.


(தொடரும்......)
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயர் கல்விக்கான வாய்ப்பை மேம்படுத்துதல் - பகுதி 2
=============================

பாடசாலைக் கல்விக்கு அப்பால்!
-------------------------------------------

பாடசாலைக் கல்வி தொடர்பாக, அதிலும் சாதாரண தர மற்றும் உயர்தர பெறுபேறுகளில் அதிக சிரத்தை செலுத்தும் உள்ளூர் சமூகமும் புலம்பெயர் சமூகமும் தனித்து பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியில் தற்போது அதிக கவனஞ் செலுத்துவதை அவதானிக்க முடிகிறது.  முன்னர் பலமான கட்டமைப்புடன் இருந்த ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை பாடசாலைகள் பலவீனமடைந்து விட்டதான பார்வைதான் இவ்வாறு பல கல்வியாளர்கள் அந்த இரண்டு பிரிவுகளைப் பலப்படுத்த முனைவதற்கான காரணம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் அதே அளவிற்கு பாடசாலைக் கல்வியின் பின்னரான உயர் கல்வி குறித்து அதிகம் அக்கறையற்று இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

இலங்கையின் உயர்கல்விச் சூழலைக் கலந்துரையாடும் முன்னர் புலம் பெயர் தேசத்தில் உள்ள கல்வி முறையைக் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பல புலம் பெயர் நாடுகளில் உயர்கல்வியில் பரந்துபட்ட தெரிவுகளும் அது தொடர்பான தகவல்களும் இலகுவாகக் கிடைப்பதும், மாணவர்களுக்கு உயர் கல்வியை இலகுவாகத் தெரிவு செய்யும் சூழலை உருவாகியிருக்கிறது. அந்த நாடுகளில் பல்கலைக் கழகங்களுடன் சமுதாயக் கல்லூரிகளும் இருப்பதால் மாணவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப கல்வி நிறுவனத்தையும் கற்கை நெறிகளையும் தெரிவு செய்ய முடிகிறது. 

இந்த நாடுகளில் மாணவர்கள் தமது கல்வித் தேவைக்காக கல்விக் கடன்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடிகிறது. அதேநேரம் தமது கல்விக் கட்டணத்தின் கணிசமான பகுதியை கோடை விடுமுறை காலத்தில் (Summer Job) தாமே சம்பாதித்தும் கொள்கிறார்கள். சில நாடுகளில் அரசாங்கமே தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கி மாணவர்களுக்கான கோடைகால வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது. சில அரச திணைக்களங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் சில தனியார் நிறுவனங்களும் இவ்வாறான வேலை வாய்ப்பை வழங்குகின்றன. 

இப்போது இலங்கையின் கல்விச் சூழலைப் பார்ப்போம். இலங்கையில்  உள்ள மாணவர்கள் பாரம்பரிய அரச பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி கற்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான இருக்கைகளைக் கைப்பற்றும் இலக்காகக் கொண்டு இயங்கவே பழக்கப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறான கோட்பாடு சந்ததிகளூடாக கடந்த எழுபது வருடங்கள் கடந்து இன்றும் பின்பற்றப்படுவது சற்று அபத்தம் நிறைந்த குறுகிய பார்வை என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. உலகம் சுருங்கி தகவல்களும் விரல் நுனிக்கு வந்துவிட்ட சூழலிலும் மாணவர்களுக்குப் பாரம்பரிய பல்கலைக் கழகத் தெரிவைத் தவிர்த்து மாற்று வழிகள் இல்லையென்று கவலை கொள்ளும் மனநிலையிலிருந்து நாங்கள் விலகி நிற்க வேண்டியவர்களாகிறோம்.. 

போரினால் பின்னடைவடைந்த வடக்குக் கிழக்கோடு ஒப்பிடும்போது, இலங்கையின் ஏனைய பிரதேசங்கள் இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க பாய்ச்சலை நிகழ்த்திச் செல்வது அவதானிக்க முடிகிறது. பல அரசு சாரா பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தென்னிலங்கையில் உருப்பெற்றிருப்பதுடன் ஏற்கனவே இருந்த கல்வி நிறுவனங்களும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அத்தோடு அந்த நிறுவனங்களில் பல்வேறு புதிய கற்கைநெறிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இவ்வாறான சில நிறுவனங்களில் அனுமதி பெற மாணவர்கள் மத்தியில் பெரும் போட்டி நிலவுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால்  பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் மாணவர்கள் இலகுவாக அரச,  அரசு சாராத உயர்கல்வி நிறுவனங்களில் தமக்கான உயர் கல்வியைத் தெரிவு செய்து பெற்றுக் கொள்ள முடிகிறது.. 

இன்றைய சூழலில் ஒப்பீட்டளவில் வடக்குக் கிழக்கில் இத்தகைய வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை அதிகம் இருக்கிறது. வடக்கின் மருத்துவர்களின் தேவையை நிவர்த்தி செய்ய தனியார் மருத்துவக் கல்லூரிகள் வடக்கில் நிறுவப்பட வேண்டும் வடக்கின் சுகாதார பணிப்பாளரே அண்மையில் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் மருத்துவம் மாத்திரமின்றி ஏனைய துறைகளுக்குமான வளாகங்களையும் அரச சார்பற்ற கல்லூரிகளையும் வளர்த்தெடுப்பதன் மூலம் மூலம் வடக்கு-கிழக்கின் மேம்பாட்டிற்குப் பங்களிப்பை வழங்க முடியும். 

தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி !
----------------------------------------------------------

1990களின் நடுக்கூற்றில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களை சர்வதேச கட்டணங்களின் அடிப்படையில் அனுமதித்து அதன் வருமானத்தைக் கொண்டு பல்கலைக் கழகங்களுக்கு சேர்க்கப்படும் உள்ளூர்  மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டபோது அச்செயல்பாட்டிற்கு பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளால் பலத்த எதிர்பு கிளம்பியது. மக்கள் விடுதலை முன்னணி அமைப்பு அதற்கு உச்சபட்ச எதிர்ப்பைக் காட்டியது. 

இலங்கை பூராகவும் தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு இருந்தாலும்  அத்தகைய எதிர்ப்புகள் என்பது முழுச் சமூகத்தினதும் எதிர்ப்பல்ல. மாறாக Medical council, Engineering council மற்றும் பல்கலைக் கழக மாணவர் சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புகளே அவை. வெட்டுப்புள்ளிகள் ஊடாக பல்கலைக் கழகம் செல்பவர்களே அறிவாளிகள், மற்றவர்கள் உயர்கல்வி கற்கத் தகுதியற்றவர்கள் என்ற மனப்பாங்கு மட்டும் இதற்குக் காரணமல்ல. இவ்வாறு வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கினால் அங்கிருந்து பட்டம் பெற்று வருபவர்கள் தொழிற்சந்தையில் தங்களுக்கு போட்டியாளர்களாக வந்துவிடுவார்கள் என்ற பதட்டமும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. 

இத்தகைய அமைப்புக்களின் எதிர்ப்புகளின் மத்தியிலும் தென்பகுதியில் படிப்படியாக தனியார் பல்கலைக் கழகங்கள், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் இணைந்த பல்கலைக் கழகங்கள் படிப்படியாக இலங்கையில் வளர்ச்சியடையத் தொடங்கின. கொழும்பில் ஆரம்பித்த இவ்வாறான கல்வி நிறுவனங்கள் பின்னர் படிப்படியாகச் கிளை பரப்பி இன்று வடக்கு வரைக்கும் தமது கல்வி வியாபாரத்தை விரிவு படுத்தியுள்ளன. இவ்வாறான தனியார் பல்கலைக் கழகங்களும் இணைந்த பல்கலைக் கழகங்களும்  B.A, BBA, B.Tech, BSc (Eng) , BSc ( Computer Science, Bio tech, etc), MD/ MBBS போன்ற பட்டங்களை வழங்குகின்றன. இது தவிர டிப்ளோமா, Post Graduate Diploma, Post Graduate Degree கற்கைநெறிகளையும் வழங்குகின்றன, 

வடக்கு கிழக்கில் ஏற்கனவே இருந்த Technical Colleges, Open University of Sri Lanka வின் கிளைகள்  என்பவற்றுடன் இப்போது University of Vocational Technology, British College of Education, ICBT Campus, Manipal University Campus,  Aquinas College Pvt. Ltd, AAS போன்ற பல தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று தொழிற்படுகின்றன. 

இவற்றுள் சில தனியார் பல்கலைக் கழகங்கள் சில மாணவர்களை மிகக் குறைவாகப் புள்ளிகள் எடுத்தாலும் அவர்களை சித்தியடைந்தவர்களாக காட்டி தமது pass rate இனை அதிக சதவீதத்தில் பேணிக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது. இது தவிர சில கல்வி நிறுவனங்களின் கட்டணங்கள் எல்லா மாணவர்களாலும் செலுத்தப்படக் கூடியதுமல்ல. ஆனாலும் இவர்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், அதிக சதவீதமான பட்டப் படிப்புப் பூர்த்தி வீதம் என்பன இவர்களின் இருப்பையும் வியாபாரத்தையும் உறுதி செய்யும் காரணிகளாக விளங்குகின்றன. இதில் வேடிக்கை என்னவெனில் சில பல்கலைக் கழக விரிவுரையாளர்களே பகுதிநேர மற்றும் வார இறுதி விரிவுரையாளர்களாகவும் தொழிற்படுவதன் மூலம் இவ்வாறான தனியார் பல்கலைக் கழகங்களின் வளர்ச்சியில் பங்காளர்களாக இருப்பது இங்கு கவனிக்கத் தக்கது.

(தொடரும்................. )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயர் கல்விக்கான வாய்ப்பை மேம்படுத்துதல் - பகுதி 3
===============================

மாணவர்களுக்குள்ள உயர்கல்வித் தெரிவுகள் !
-------------------------------------------------------------

உயர்தரம் கற்கும் மாணவர்கள் அனைவரும் தமது முதல் தெரிவான பல்கலை கழக அனுமதியை நோக்கியே தமது குதிரையோட்டத்தை ஆரம்பிக்கின்றனர். அனுமதி பெற்றவர்கள் வெற்றியாளர்களாக அரசின் பல்கலைக் கழகங்களுக்குள் நுழைய வெற்றி பெறாதவர்கள் விடாமுயற்சியுடன் இன்னும் இரண்டு முறையாவது முட்டி மோதிப் போராடிப் பார்க்கிறார்கள். இவ்வாறு போராடி வெற்றிபெறாதவர்களுக்கு எஞ்சியுள்ள சில தெரிவுகளைப் பார்ப்போம்.

1. திறந்த பல்கலைக்கழகம் 
----------------------------------------
உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றும்  அரச பல்கலைக் கழகம் செல்ல முடியாத மாணவர்கள் பல்வேறு கற்கைநெறிகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தை நீண்ட காலமாக (1978 இலிருந்து) இலங்கையின் திறந்த பல்கலைக் கழகம் வழங்கி வருகிறது. ஆனாலும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அதன் இலக்கை இன்றுவரை எட்டவில்லை என்பதுதான் உண்மை. அதனை ஒரு தோல்வி கண்ட பொறிமுறையாகவே கருத வேண்டியுள்ளது.. 

ஒருபுறத்தில் திறந்த பல்கலைக் கழகம் வழங்கும் கற்கை நெறிகளுக்கான வெற்றிடங்கள் முழுமையாக நிரப்பப்படுவதேயில்லை. மறுபுறத்தில் அங்குள்ள சில பேராசிரியர்கள், விரிவுரையாளர்களின் முறையற்ற நடைமுறைகளினால் (Unethical Actions) மாணவர்கள் கல்வியைப் பூர்த்தி செய்து வெளியேறுவோர் வீதம் குறைவாகவே உள்ளது. உதாரணமாக ஒரு வருடத்தில் 3000 மாணவர்களை உள்வாங்கும் வளங்களை கொண்ட இலங்கை திறந்த பல்கலைக்கழக பொறியியல் பீடம் வருடாந்தம் ஒரு வீதம் அல்லது அதற்கும் குறைவானவர்களே பொறியியல் பட்டதாரிகளாக வெளியேறுகிறார்கள். 

இலங்கையின்  பிரதான பல்கலைக்கழகங்களில் பொறியல் பட்டதாரி 121 - 140 credit பாடங்களை பூரணப்படுத்த எதிர்பார்க்கப்படும் அதேவேளை, திறந்த பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவன்  168 - 180 credit பாடங்களை எடுக்க வேண்டியுள்ளது. 

அத்துடன் GPA  rate கணிப்பதில் கூட முறைசார்ந்த பல்கலைகழகத்துடன் ஒப்பிடும் போது உயர்ந்த மதிப்பீடுகளை அநீதியான முறையில் வைத்திருக்கிறார்கள் என்பது திறந்த பல்கலைக் கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களின் முறைப்பாடாக இருக்கிறது. இதனைத் தாண்டியும் வேறு தடைகளும் மாணவர்களுக்கு உள்ளன. 

திறந்த பல்கலைக் கழகத்தில் பொறியியல் கற்கை நெறியை தொடர்ச்சியாக கற்கும் ஒரு மாணவன் தன் கல்வியைப் பூர்த்தி செய்ய ஆறு வருடங்கள் தேவைப்படுகிறது. இதன் ஏனைய பீடங்களிலும் இதுதான் நிலமை. இதனாலேயே பல மாணவர்கள் வெறுப்புற்று இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்று கல்வியைத் தொடர்ந்த சம்பவங்களும் நடந்துள்ளன. அவ்வாறு வெளியேறிய மாணவர்கள் பலர் இலங்கைக்குத் திரும்பி தமது மனித வளத்தை தாம் பிறந்த நாட்டிற்கு பயன்படுத்தவில்லை என்பதுதான் யதார்த்தம். 

2. தொழில்நுட்பக் கல்லூரிகள்
----------------------------------------
தொழில் நுட்ப கல்லூரிகள் இலங்கையில் நீண்ட பாரம்பரியத்திற்குரியவை.. ஆனால் அவற்றின் வளர்ச்சி என்பது காலத்திற்கு ஏற்றதாக இல்லை. இலங்கையில் உள்ள தொழில் நுட்ப கல்லூரிகளில் 1990களில் பட்டப் படிப்புப் பாடநெறிகளை உருவாக்கும் திட்டம் முன்மொழியப்பட்ட போதும் அப்போது எழுந்த எதிர்ப்புகளால் அது கைவிடப்பட்டுள்ளது. இருப்பினும் Higher National Diploma in Accounting (4 years) கடந்த 25 வருட காலப்பகுதிகளில் BBA கற்கை நெறிக்கு சமனாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

அதே போன்று Higher National Diploma in Engineering கற்கை நெறியை Bachelor in Engineering / Bachelor Engineering Technology கற்கை நெறியாக அமுல்படுத்தும் கோரிக்கை கடந்த காலங்களில் எழுந்த கடுமையான எதிர்ப்புகளால் அமுல்படுத்தப்படவில்லை. தொழில்நுட்ப கல்லூரிகளில் வழங்கப்படும் National Certificate in Technology,  மூன்றரை வருட முழுநேர கற்கை நெறியின் பாட விதானங்கள் பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் Bachelor of Engineering க்கு சமனான பாடவிதானங்களை கொண்டிருப்பினும் இன்றுவரை National Certificate in Technology  ஒரு Certificate program ஆகவே உள்ளது (தொழில்நுட்ப கல்லூரிகள் இது தொடர்பாக பல ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தி இருக்கின்றன).

3. தொலை, தொடர் கல்வி நிலையங்கள் 
-----------------------------------------------------
பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகாத மாணவர்களுக்கு உள்ள இன்னொரு தெரிவுதான் இலங்கையின் பிரதான பல்கலைக் கழகங்கள் ஊடாக நடாத்தப்படும் தொலை, தொடர் கல்வி நிலையங்களால் வழங்கப்படும் கற்கைநெறிகள். ஆனால் பல்கலைக் கழகங்கள் அனைத்துப் பாடங்களையும் இவ்வாறு வழங்குவதில்லை. உதாரணமாக யாழ் பல்கலைக் கழகத்தின் திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையம் கலை, வர்த்தகம், வணிக முகாமைத்துவம் ஆகிய துறைகளில் பட்டதாரிக் கற்கைநெறிகளை வழங்குகிறது. இங்கு விஞ்ஞான பட்டதாரி கற்கைநெறி வழங்கப்படுவதில்லை.

4. தனியார் பல்கலைக் கழகங்கள்/சர்வதேச இணைந்த பல்கலைக் கழகங்கள் 
-------------------------------------------------------------------
இலங்கையில் நீண்டகால வரலாறு கொண்ட தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் Aquinas College (1953), Institute of Chartered Accountants of Sri Lanka (1959), National Institute of  Business Management (1968) ஆகியனவாகும். அதன் பின்னர் Institute of Technological Studies 1984 இல் ஆரம்பிக்கப்பட்டது. இவையனைத்தும் இலங்கையின் மேல் மாகாணத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. பின்னர் தொண்ணூறுகளில் ஆரம்பித்த இன்றுவரை பல புதிய தனியார் பல்கலைக் கழகங்களும் சர்வதேச பல்கலைக் கழகங்களின் இணைந்த வளாகங்களும் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டன. 

பின்னர் படிப்படியாக இவை இலங்கையின் வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் தமது கிளைகளைத் திறந்து பல்வேறு கற்கை நெறிகளை வழங்குகின்றன. முன்பே குறிப்பிட்டது போல இவை ஒப்பீட்டளவில் அதிக கட்டணம் அறவிட்டாலும் குறிப்பிட்ட காலப் பகுதியிலேயே படிப்பை முடிக்க முடிவதாலும், சித்தியடையும் வீதம் அதிகமாக இருப்பதாலும் மாணவர்களிடையே பிரபலமடைந்து வருவதாகத் தெரிகிறது.

மறுபுறத்தில் திறந்த பல்கலைக் கழகங்களில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைந்து வருவதாகத் தெரிகிறது. இங்கு நாம் சுட்டிக் காட்ட விரும்புவது தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் வேண்டாம் என்றல்ல. இலங்கை திறந்த பல்கலைக்கழகம், தொழில் நுட்பக் கல்லூரிகள் போன்றவை சிறப்பாகச் செயற்பட்டால் இலங்கையில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் வருடாந்தம் உயர் கல்விக்காக ரஸ்யா, சீனா, இந்தியா  போன்ற  நாடுகளுக்கு புலம்பெயரத் தேவையில்லை. அத்தோடு கல்வி கற்ற சமூகம் தனது பிரதேசத்திலேயே தங்கி தான் சார்ந்த சமூகத்தை வளப்படுத்தவும் சந்தர்ப்பம் உள்ளது.

(தொடரும்................. )

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயர் கல்விக்கான வாய்ப்பை மேம்படுத்துதல் - பகுதி 4 (இறுதிப் பகுதி)
=============================

தேவை மாற்றுச் சிந்தனை !
------------------------------------

கடந்த பகுதிகளில் கலந்துரையாடியது போல, இன்று இலங்கை முழுவதும் மாணவர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்ப ஒரு டிப்ளோமாவையோ பட்டத்தையோ பெற்றுக்கொள்ளக்கூடியதாக பல கற்கைநெறிகள் இருக்கிறது. இருந்தாலும் இலங்கையின் வடக்குக் கிழக்கில் விஞ்ஞான, தொழில் நுட்பத் துறைகள்  நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ளது போல தேவையான விதத்தில் வளர்ச்சியடையவில்லை என்பது கலவைக்குரியது. இந்த நிலைக்கு நிச்சயமாக கடந்த கால யுத்தமோ, அரசு வளங்களைச் சரியாகப் பகிராததோ மட்டுமே காரணமல்ல. 

கடந்த காலங்களில் பேராசிரியர் துரைராஜா உட்பட பல தூரநோக்குடைய கல்விமான்கள் பிரதான பல்கலைக் கழகங்களோடு இணைந்ததாக விஞ்ஞான, தொழில் நுட்பத் துறைகளில் பல கற்கைநெறிகளை அறிமுகப்படுத்த முயன்றபோதெல்லாம் தமிழ் சமூகம், குறிப்பாக மாணவர் சமூகம் அதை எதிர்த்து நின்றதும் அந்தத் துறைகளில் எமது கல்வி கட்டமைப்பு பின்னடைவு அடையப் பிரதான காரணம். 

இன்று இலங்கையில் பல வகையான பாடநெறிகள் இருப்பதோடு வருடாந்தம் ஆயிரக் கணக்கான பட்டதாரிகள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் மறுபுறத்தில், இன்றுவரை  பயிற்றப்பட்ட ஆசிரியர்களில் தொடங்கி சுகாதாரத் துறை போன்ற பல முக்கியமான துறைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை பொதுப் பிரச்சினையாகவே காணப்படுகிறது. இது இன்று நேற்று தொடங்கிய பிரச்சினையில்லை. முப்பது வருடங்களுக்கு மேலாகவே தமக்குத் தேவையான திறன்களோடு போதுமான அளவு பட்டதாரிகளைக் உயர்கல்வி நிறுவனங்கள் உருவாக்குவதில்லை என்பது இலங்கையில் தொழில் வழங்குனர்கள் செய்து வரும் ஒரு முறைப்பாடாகும். 

அண்மையில் எமது குழுவில் ஒருவர் கலந்துகொண்ட, இலங்கையின் வடக்கில் மீன்வளம் மற்றும் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கருத்தரங்கிலும், வர்த்தக நோக்கில் மீன் வளர்ப்பவர்கள் நீரின் தரம், நோய்கள் தொடர்பான தமக்குத் தேவையான பரிசோதனைகளைச் செய்து கொள்ள போதுமான ஆய்வுகூட வசதிகள் வடக்கில் (கிழக்குக்கும் பொருந்தும் என்று நினைக்கிறோம்) இல்லை என்ற விடயம் மீனவளத்துறை சம்பந்தப்பட்ட நிபுணர்களால் சுட்டிக் காட்டப்பட்டது.

பல்கலைக் கழகங்கள் தாம் இயங்கும் பிரதேசங்களின் சமூக, பொருளாதார, சூழலியல் தேவைகள், மற்றும் தொழிற்சந்தையின் எதிர்பார்ப்புகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு தமது பாட விதானங்களில் தேவையான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். புதிய கற்கைநெறிகளையும் அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு புதிய கற்கைநெறிகளை வழங்குவதிலும் அதிக மாணவர்களை அனுமதிப்பதிலும் மிக முக்கிய தடையாக இருப்பது உயர்கல்விக்காக அரசு ஒதுக்கும் நிதியின் அளவேயாகும். 

இலங்கையின் பட்டதாரிகளின் எண்ணிக்கையை அரசு அதிகரிக்க வேண்டுமெனில் அதற்குரிய நிதிவளம் உருவாக்கப்பட வேண்டும். இன்றுள்ள சூழலில் பண வசதி படைத்தவர்கள் பல்கலைக் கழக வெட்டுப்புள்ளி முறையினால் உயர்கல்வி வாய்ப்பினை இழந்தாலும் தனியார் கல்லூரியில் அதிக பணம் செலுத்தி அதே பட்டத்தைப் பெறுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். இன்று இலங்கை முழுவதும் உள்ள தனியார் பல்கலைக் கழகங்களில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கையே இதனை நிரூபிக்கிறது.

இவ்வாறு தனியார் உயர் கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதும் அவற்றின் செல்வாக்கு அதிகரிப்பதும் நீண்டகால அடிப்படையில் சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக மக்கள் மத்தியில் அவர்கள் செய்யும் விளம்பரங்களால் தனியார் பல்கலைக் கழகங்களே சிறந்தது என்று மக்கள் நம்ப வைக்கப்படலாம். தற்போது அங்கு பகுதிநேர விரிவுரையாளராக செயற்படும் பிரதான பல்கலைக் கழகத்தின் சிறந்த விரிவுரையாளர்களை தனியார் பல்கலைக் கழகங்கள் எதிர்காலத்தில் அதிக சம்பளம் கொடுத்து தமது ஊழியர்களாக மாற்றிவிடக் கூடும். இதன்பின் படிப்படியாக தனியார் பல்கலைக் கழகங்கள் உயர்கல்வியில் அதிக செல்வாக்கு செலுத்துவதன் மூலம் காசுள்ளவருக்கே தரமான கல்வி என்ற நிலைக்குள் இலங்கையும் தள்ளப்படலாம். 

இந்த சூழ்நிலையில் அரசாங்கம் முழுமையான தனியார் கல்லூரிகளை அனுமதிப்பதற்குப் பதிலாக அரசு ஐம்பது வீதத்திற்கும் அதிகமான பங்குகளையும் நிர்வாகத்தையும் தன்னிடத்தில் வைத்துக் கொள்ளும் வகையிலான தனியார் கல்லூரிகளை ஆரம்பிப்பது பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையக் கூடும். அங்கு கல்வி கற்க விரும்பும் வருமானம் குறைந்த மாணவர்களுக்கு இதன்போது மாணவர்களுக்கு கல்வி கற்பதற்குக் (வட்டியற்ற) கல்விக் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தலாம்.  இது அரசின் பணச்சுமையைக் குறைக்கவும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர்கல்வி பெற உதவவும் உறுதுணையாக அமையும். 

அத்தோடு வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் போல இலங்கையிலும் பல்கலைக் கழக மாணவர்கள் கல்வி கற்கும்போதே விடுமுறை காலத்திலும் வார இறுதிகளிலும் தாம் சார்ந்த துறையில் பயிற்சி பெறக் கூடிய, வேலை செய்யக்கூடிய வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இதன்மூலம் மாணவர்கள் தமது கல்வியை நிறைவு செய்யும்போதே குறைந்தது இரண்டுவருட வேலை அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். மறுபுறத்தில் வருமான குறைந்த மாணவர்கள் தமது கல்விக் கடனைக் கட்டவும் தமது கல்வி தொடர்பான பிற தேவைக்கான பணத்தை தாமே உழைத்துக் கொள்ளவும் முடியும்.

இதை தவிர பல்கலைக்கழக சமூகம் தாம் சார்ந்த பிரதேச மக்களின் பிரச்சனைகள், சூழலியல் பிரச்சனைகள் என்பவை தொடர்பாக சமுதாயப் பங்குதாரர்களுடன் சேர்ந்து கள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஆய்வுகளுடன் நின்றுவிடாது பிரச்சனைக்குரிய தீர்வுகளை முன்மொழிவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் தமது பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும். வடக்குக் கிழக்கு மற்றும் மலையகத்தின் பாடாசாலைக் கல்வி வளர்ச்சி தொடர்பாக யாழ் பல்கலைக் கழக சமூகம் ஏற்கனவே தம்மால் முடிந்த பங்களிப்பை வழங்குவதை நல்ல உதாரணமாகக் கொள்ளலாம். இதே போன்று ஏனைய பல துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

இனிவரும் நாட்களில் வடக்கு கிழக்கில் உள்ள தொலை, தொடர் கல்வி நிலையங்களும் தொழில்நுட்பக் கல்லூரிகளும் பிரதான பல்கலைக் கழகங்களும் விஞ்ஞான, தொழில்நுட்பத் துறையை அதிகம் வலுப்படுத்த முயற்சி எடுத்தல் வேண்டும். பல்கலைக் கழகங்களின் வளங்களை ஏனைய உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்களும் பயன்படுத்தும் சூழல் உருவாக வேண்டும். எமது சமூகத்தின் வளர்ச்சிக்காக எமது பிரதேசத்தில் உள்ள வளங்களின் உச்சப் பயன்பாட்டை மாணவர்கள் பெறும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்டவர்களின் கடமையாகும். 

இவற்றையெல்லாம் செய்வது கடினமான விடயமாகத் தோன்றினாலும் புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களும் கைகொடுத்தால் நடைமுறைச் சாத்தியமற்ற ஒரு விடயமல்ல. குறிப்பாக தாயகத்தில் உள்ள மக்களின் வளர்ச்சிக்கு பங்களிக்க விரும்புவர்கள் நிறுவன முதலீடுகள் மூலம் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் மட்டுமன்றி மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சி, பகுதிநேர வேலை வாய்ப்புகளையும் வழங்க முடியும். அத்துடன் ஏற்கனவே அங்குள்ள தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமும் இதனைச் செய்ய முடியும்.

முற்றும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.