Jump to content

அரசமைப்புக்கான 20ஆம் திருத்தச் சட்டமூலமும் கட்சித்தாவல்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசமைப்புக்கான 20ஆம் திருத்தச் சட்டமூலமும் கட்சித்தாவல்களும்

-என்.கே. அஷோக்பரன்

அரசமைப்புக்கான 20ஆம் திருத்தச் சட்டமூலம், இலங்கை நாடாளுமன்றத்தில் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி, 156 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 65 பேர் எதிர்த்துள்ளனர். இதில், பிரதானமாக இரண்டு விடயங்கள், பொது வாதப்பிரதிவாதத்தின் பொருளாக மாறியிருக்கின்றன.  முதலாவது, 20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் பாரதூர விளைவுகள்.   இரண்டாவது, கட்சித்தாவல்கள்.   

20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் பாரதூர விளைவுகளைப் பற்றி, பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும் விமர்சனக் கலந்துரையாடல்களும் பாரம்பரிய ஊடகங்களிலும் சமூக ஊடக வௌியிலும் குவிந்து கிடக்கின்றன.   

20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் சுருக்கம் யாதெனில், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துக்கு, 17ஆம், 19ஆம் திருத்தங்களினூடாகக் கொண்டுவரப்பட்ட மட்டுப்பாடுகளைப் பலவீனப்படுத்தியும் இல்லாதொழித்தும், ஜனாதிபதியிடம் மீண்டும் நிறைவேற்றதிகாரத்தைக் குவிப்பதாக அமைகிறது.   

இங்கு, ‘மீண்டும்’ என்ற சொல் கவனிக்கப்பட வேண்டியது. ஜே.ஆர். கொண்டுவந்த இந்த அரசமைப்பில், ஜே.ஆர். தனக்குத்தானே வகுத்தளித்துக்கொண்ட நிறைவேற்றதிகாரங்களை, பெருமளவுக்கு ஒத்த நிறைவேற்று அதிகாரங்களை கோட்டாபய, தனக்குத்தானே தற்போது, வகுத்தளித்துக் கொண்டிருக்கிறார்.   

20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் அறிமுகத்தை, அதிர்ச்சியோடு எதிர்கொள்ள வேண்டியதில்லை. 2019ஆம் ஆண்டு நவம்பரில், கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகத் தெரிவானபோதே, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, இத்தகைய அரசமைப்புத் திருத்தம் வரும் என்பது, வௌ்ளிடைமலையாகவே இருந்தது.

அந்தச் சந்தர்ப்பத்தில், ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுன, தனித்து மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுமா என்பது, நிச்சயமற்று இருந்த நிலையில் கூட, அரசமைப்புத் திருத்தத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றும் நாடாளுமன்றப் பலத்தைப் பெற்றுக்கொள்ளும் என்ற நிச்சயத்தன்மை உருவாகக் காரணம், இலங்கை அரசியலில் சர்வசாதாரணமாகிப் போயுள்ள கட்சித்தாவல் கலாசாரமாகும்.   

கட்சித்தாவுகின்றவர்களை, ஆங்கிலத்தில் turncoat அல்லது renegade என விளிப்பார்கள். Renegade என்றால், தான் சார்ந்திருந்த அமைப்புக்கோ நாட்டுக்கோ கொள்கைக்கோ  நம்பிக்கைக்கோ துரோகமிழைத்து, அதிலிருந்து நீங்கி, மாற்றுத்தரப்பை ஏற்பவரைக் குறிக்கும் சொல்லாகும். 

Turncoat என்ற சொல்லுக்கு இன்னும் சுவாரசியமானதொரு வரலாறு இருக்கிறது. 12ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், பிரித்தானியாவில் இரண்டு சீமான்கள், வில்லியம் மார்ஷலுக்கு அளித்துவந்த விசுவாசத்தைக் கைவிட்டு, ஜோன் மன்னருக்குத் தமது விசுவாசத்தை வழங்கினார்கள். இதன்மூலம், வில்லியம் மார்ஷலின் இலச்சினையை (coat of arms) மாற்றி, ஜோன் மன்னரின் இலச்சினையை ஏற்றதால், ‘Turncoat’ என்ற சொல் உருவானதாக ஒரு கதையுண்டு. 

இதுபோன்ற, 1,000 கட்சித்தாவல்களையும் அரசியல் துரோகங்களையும் உலகம் எங்கிலுமுள்ள வரலாறுகளில், இலக்கியங்களில் நிறைந்தளவில் காணலாம். ‘தக்கன பிழைக்கும்’ என்பது, இயற்கையின் நியதி; எனில், உயிர்கள் இயல்பாகவே பிழைத்துக்கொள்வதற்காகத் தம் இயல்புகளை மாற்றிக்கொள்வதும் நியதியேயாகும். இந்த நெகிழ்ச்சித் தன்மை இயல்பானதாகும். 

ஆனால், இந்த இடத்தில்தான் விழுமியங்களும் ஒழுக்கங்களும் நியதிகளும் சட்டங்களும், மனித வாழ்வை நெறிப்படுத்த உருவாகின. அவை, நெகிழ்ச்சித் தன்மையைத் திடப்படுத்த, சில சட்டகங்களை ஸ்தாபித்தன. ‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்’, ‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்’ போன்ற, உயர் ஒழுக்கக் கோட்பாடுகள், இத்தகைய சட்டகங்களை ஸ்தாபித்தன. 

இதில் மதங்களின் பங்கு முக்கியமானது. ‘சத்தியமேவ ஜயதே நான்றதம், சத்யேன பந்தா விதாதோ தேவயானா’ என்று, முண்டக உபநிஷதம் உரைப்பதும் ‘பொய்யான பேச்சைத் தவிர்க்க’ என்பது, பௌத்தத்தின் எட்டுக் கட்டளைகளில் ஒன்றாக இருப்பதும் ‘பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே’ என்று யூத, கிறிஸ்தவ மதங்கள் சொல்வதும் ‘பொய்யான சொல்லையும் நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்’ என்று குர்ஆன் சொல்வதும் ஆகிய எல்லாம், இந்த ஒழுக்கக்கட்டுப்பாட்டின் பாற்பட்டவையே.   

இந்த ஒழுக்கக் கட்டுக்கோப்பின் வழியாகத்தான், அடையாளபூர்வ சத்தியப்பிரமாணங்கள், வாக்குறுதிகள் முக்கியத்துவம் பெறத்தொடங்கின. ஒருவன், ஓர் ஆட்சியாளனுக்கு விசுவாசமாக இருப்பேன் என்ற சத்தியப்பிரமாணத்தை வழங்கிவிட்டு, அதற்கு முரணாகத் துரோகமிழைத்தால், அது ராஜதுரோகமாகவும் மரணதண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்பட்டது. இது, அரசியல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; சில மதங்களில், அந்த மதத்தைவிட்டு மாறுபவர்களுக்கு, மரணதண்டனையே தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய நவீன காலத்தில், விசுவாசப்பிறழ்வுக்கு, அரசியல் துரோகத்துக்கு மரண தண்டனை வழங்கப்படாவிட்டாலும், சிறைத்தண்டனைகள், இன்னும் பல நாடுகளின் தண்டனைச் சட்டக்கோவையில் இருக்கிறது. பண்பாட்டு, விழுமிய ரீதியாக விசுவாசப்பிறழ்வும் நம்பிக்கைத் துரோகமிழைத்தலும் கீழ்த்தரமான செயற்பாடுகளாகவே கருதப்படுகின்றன.   

நவீன ஜனநாயகத்தின் கட்சி அரசியலைப் பொறுத்தவரையில், கட்சி விசுவாசம், அதன் முக்கிய அம்சங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, கட்சி மைய அரசியல், கட்சிசார் தேர்தல்கள் நடைமுறையில் உள்ள நாடுகளில், இதன் முக்கியத்துவம் அதிகமாகும். 

‘வெஸ்ட்மின்ஸ்டர்’ நாடாளுமன்றப் பாரம்பரியத்தைப் பின்பற்றும் நாடுகளில், நாடாளுமன்றத்தில் ‘கொறோடா’ (Whip) என்ற பதவியுண்டு. ஆளுங்கட்சிக்கு ஒரு கொறோடா பதவி; எதிர்க்கட்சிக்கு ஒரு கொறோடா பதவி உண்டு. இவர்களின் பணி, கட்சிக் கட்டுப்பாட்டை, தம்கட்சி சார்ந்த உறுப்பினர்கள் மீது தக்கவைத்துக் கொள்வதாகும். 

Whip என்ற சொல் whipping என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். Whipping என்பது, சவுக்கால் அடித்து, கட்டுக்கோப்பில் வைத்திருத்தல் என்ற பொருளையுடையது. கொறோடாவின் பணியும், அடையாள ரீதியில் அத்தகையதே என்பதால், Whip என்ற பெயர் வழக்கமானது. கொறோடாவின் உத்தரவை மீறி நடத்தலானது; நாடாளுமன்றக் குழுவிலிருந்தான நீக்கத்துக்கும் தொடர்ந்து கட்சியில் இருந்தான நீக்கத்துக்கும் வழிவகுக்கும்.   

பிரித்தானிய ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ முறையின் வெற்றிகரமான இயக்கத்துக்கு, மரபுகள் மீதான மதிப்பு அடிப்படையானது. ஆனால், அத்தகைய மாண்புகள் சகல இடங்களிலும் சகல சந்தர்ப்பங்களிலும் எதிர்பார்க்கப்பட முடியாதவை. 

இலங்கையின் அரசமைப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதைத் தடுக்கும் ஏற்பாட்டைக் கொண்டிருக்கிறது. அரசமைப்பின் 99(13) சரத்தானது, நாடாளுமன்ற உறுப்பினர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, ஒரு மாதகாலத்தில் அவரது நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகும் என்று வழங்குகிறது.ஆனால், அந்த ஒரு மாதகாலப் பகுதிக்குள், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், அவரின் கட்சி உறுப்பினர் நீக்கத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்துக்கு மனுச்செய்ய முடியும் என்றும், அவரது நீக்கம் செல்லுபடியானது என்று உயர்நீதிமன்ற அமர்வு தீர்மானிக்கும் போது, அது அவ்வாறு தீர்மானிக்கும் தினத்திலிருந்து, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார் என்றும் வழங்குகிறது.   

ஒரு கட்சிக்கு, அதன் உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும், கட்சியிலிருந்து தகுந்த காரணங்களுக்காக நீக்கும் உரிமையுண்டு. ஆனால், அத்தகைய செயற்பாடானது, எதேச்சதிகாரமான முறையில், முன்முடிவுகளின் படியான மனநிலையுடன், இயற்கை நீதிக்கு விரோதமாகச் செய்யப்பட முடியாது.அவ்வாறு செய்யப்படும் போது, அது செல்லுபடியற்ற நீக்கமாக அமையும். 

ஆகவே, இயற்கை நீதியின்படி, தவறிழைத்த உறுப்பினரிடம் விளக்கம் கோருவதும், முறையான ஒழுக்காற்று விசாரணை நடத்துவதும், அதன் முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதுமே பொருத்தமான வழிமுறையாகும். 

இதை முறையாகச் செய்யும் போது, கட்சிகள், கட்சியின் கட்டுக்கோப்புக்குக் குந்தகம் விளைவிக்கும், கொறோடாவின் கட்டளைக்கு உட்பட்டு நடவாத நாடாளுமன்ற உறுப்பினர்களை, கட்சியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க முடியும்.   

இதைச் செய்வதில், இலங்கையின் சமகால அரசியலில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. அதுதான், தற்காலிகமாக உருவாகும் பெயரளவிலான ‘கூட்டணிகள்’. எந்தவித முறையான கட்டமைப்புமின்றி உருவாகும் ‘கூட்டணிகள்’, ஏதோ ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகின்றன. அப்படிப் போட்டியிடுபவர்கள், அந்தக் கட்சியின் உறுப்பினர்களாக இருப்பதில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில், அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம், அந்தக் கட்சிகளுக்கு இருப்பதில்லை; அதன் விளைவாக, அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க முடியாது. பஷீர் சேகுதாவூத் எதிர் பேரியல் அஷ்ரப் வழக்கில், இந்தவிடயம் உயர் நீதிமன்றினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

ஆகவே, பெயரளவிலான கூட்டணிகளை, முறையாகப் பதிவு செய்யாமல், ஏதோ ஒரு கட்சியின் பதாகையின் கீழ் இயக்கும் போது, கட்சிக்கட்டுக்கோப்பை மீறினாலும், கட்சிதாவினாலும் கூட, எதுவும் செய்ய முடியாத நிலையே, யதார்த்தத்தில் காணப்படுகிறது.   

இந்த நிலையின் மாற்றம், முதலில் முறையான கட்சி அமைப்பின் ஸ்தாபிப்பிலிருந்து தொடங்கவேண்டும். அல்லாவிடில், கட்சித்தாவல் என்பது, சர்வசாதாரணமான ஒன்றாகவே தொடரும்.    

 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசமைப்புக்கான-20ஆம்-திருத்தச்-சட்டமூலமும்-கட்சித்தாவல்களும்/91-257494

Link to comment
Share on other sites

முஸ்லிம்களை விற்றுப் பிழைத்தல்

 

மொஹமட் பாதுஷா

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம், இரு பௌத்த உயர்பீடங்களின் எதிர்ப்பறிக்கை, கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, ஆளும் தரப்பின் உள்ளக முரண்பாடுகள், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உறுதிப்படுத்த முடியாத சிக்கல் போன்ற பல்வேறு தடைகளைத் தாண்டி, இச் சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றி இருக்கின்றது. 

கடந்த 22ஆம் திகதி, வாக்கெடுப்புக்கு விடப்பட்ட அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் கிடைத்தன. 148 எம்.பிக்களின் வாக்குகளையே பெற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் ஆளும் தரப்பு இருந்த போதிலும், எதிர்த்தரப்பின் எட்டு எம்.பிக்கள் ஆதரவளித்ததன் காரணமாக, அரசாங்கத்தின் அங்கலாய்ப்பு, அமோகமாக நிறைவேறி இருக்கின்றது. 

தற்போது 223 எம்.பிக்களே நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சூழலில், 19ஆவது திருத்தத்தை முன்னின்று கொண்டு வந்த, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 

மறுபுறத்தில், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளர் டயானா கமகேயும் எதிரணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சி  எம்.பிக்களான நஸீர் அஹமட், எச்.எம்.எம்.ஹரீஸ், ஷாபி ரஹீம், பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக், அ. அரவிந்த்குமார், இர்ஷாக் ரஹ்மான்  ஆகியோர், 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.  

இதன் மூலம் சில விடயங்கள், பட்டவர்த்தனமாகி உள்ளன. அதாவது, கடந்த தேர்தலில், சிறுபான்மை மக்களின் குறிப்பாக, முஸ்லிம்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்ற தோரணையிலேயே பொதுஜன பெரமுன கட்சி செயற்பட்டது. தனிச் சிங்கள ஆட்சியை நிறுவப் போவதாகப் பிரசாரம் செய்தது. ஓரளவுக்கு அதைச் செய்தும் காட்டியது. அதன்பிறகும், “முஸ்லிம் கட்சிகளுடன் கைகோர்க்கும் எண்ணம், ‘மொட்டு’க்குக் கிடையாது” என்றே, ஆளும் தரப்பினர் கூறிவந்தனர்.

ஆனால், ஆறு முஸ்லிம் எம்.பிக்களின் ஆதரவுடனேயே 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் வெற்றி, உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அப்படிப் பார்த்தால், 69 இலட்சம் வாக்குகளுடன் சிங்களப் பெரும்பான்மையைப் பெற்ற பொதுஜன பெரமுனவின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியை, சிறுபான்மைக் கட்சிகளே தீர்மானித்திருக்கின்றன.   

இவ்வாறு, முஸ்லிம் எம்.பிக்கள் ஆதரவளித்தமை, இரண்டு கோணங்களில் பார்க்கப்படுகின்றது. “இந்த ஆட்சியில் நம்பிக்கை வைத்து, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போதுதான், சரியான பாதைக்கு வந்திருக்கின்றார்கள்” என்று, ராஜபக்‌ஷ ஆதரவு முஸ்லிம் கட்சிகளும் ஆதரவாளர்களும் கூறுகின்றனர். 

மறுபக்கத்தில், 19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு வாக்களித்த போது இருந்த நிலைப்பாட்டை, 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளித்ததன் மூலம், தலைகீழாக மாற்றிக் கொண்டு உள்ளமையானது, அதிகபட்ச அதிகாரமுள்ள ஆட்சிக்குத் துணைபோவது மட்டுமன்றி, முஸ்லிம் சமூகம் வழங்கிய ஆணைக்கு மாறுசெய்வதும் ஆகும். 

இதன்மூலம், முஸ்லிம்கள் விமர்சிக்கப்படுவதற்கு ஆறு எம்.பிக்களும் வழிவகுத்துள்ளனர் என்ற கருத்து, கடுந்தொனியில் முன்வைக்கப்படுவதைக் காண முடிகின்றது. 

முஸ்லிம்களில் கணிசமானோர், இத்தீர்மானம் சரியென்ற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கின்றனர். இச்சூழலில், சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சி முஸ்லிம் எம்.பிக்கள் பணத்துக்காகவும் பதவிகளுக்காகவும் விலைபோய்விட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர். முஸ்லிம் கட்சிகள், அர்த்தமற்றதும் தளம்பலானதுமான நிலைப்பாட்டில் இருப்பதாகத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். 

இவ்வாறு, வெளியில் இருந்து முஸ்லிம் எம்.பிக்கள் மீது சொல்லப்படுகின்ற அரசியல் விமர்சனங்கள், சில நாள்களில் ஓய்ந்து விடலாம். முஸ்லிம் காங்கிரஸூம் மக்கள் காங்கிரஸூம் சிலவற்றுக்கு விளக்கமளிக்கலாம், பலதைக் கண்டும் காணாமல் விட்டுவிடலாம். துரதிர்ஷ்டவசமாக, இவ்வாறுதான் தமக்கெதிரான விமர்சனங்களை, எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் காலாகாலமாகக் கடந்து வந்து கொண்டிருக்கின்றனர். 

ஆனால், இங்கிருக்கின்ற பிரச்சினை, முஸ்லிம் சமூகத்தை வைத்து, அரசியல் பிழைப்பு நடத்துவதும் சிங்கள தேசியத்துக்கு எதிரான கேடயமாகப் பயன்படுத்துவதும் தமக்குத் தேவை என்று வருகின்ற வேளையில், தமது சொந்த இலாபங்களின் அடிப்படையில் ‘பல்டி’ அடிப்பதுமே பிரச்சினையாகும். 

இதைத்தான் சமூகத்தைக் காட்டிக் கொடுத்தல் என்று கூறப்படுகின்றது. இது, காலாகாலமாக இடம்பெற்றுக் கொண்டு வருவதையும், இவ்விடத்தில் நினைவில் கொள்ள வேண்டியிருக்கின்றது. 

கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் எம்.பியுமான ரிஷாட் பதியூதின், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பு நாளன்று சபைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். ரிஷாட்டின் கைது தொடர்பாக, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஒருவிதமான மனக் கிலேசமும்  முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே அதிர்ச்சியும் ஏற்பட்டிருந்த சமயத்திலேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இவ்வாக்கெடுப்பில் முஸ்லிம் கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீமும் ரிஷாட் பதியூதீனும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகவே வாக்களித்தனர். ரிஷாட்டோடு சேர்ந்து, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.முஸாரப் எதிராக வாக்களித்திருந்தார். மற்றைய இருவரும் ஆதரவளித்திருந்தனர். இருப்பினும் முஸாரப், இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பான சரத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார். 

இதேசமயம், மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமும் எதிர்த்து வாக்களித்தார். அவருடன் சேர்ந்து 20 இற்கு எதிராக, அக்கட்சியின் ஓர் உறுப்பினர் கூட வாக்களிக்கவில்லை. ‘20 வேண்டாம்’ என்ற சிகப்பு கைப்பட்டியுடன் சபைக்கு வந்திருந்த எம்.எஸ்.தௌபீக் எம்.பி உட்பட, நான்கு உறுப்பினர்களும் ஆதரவளித்திருந்தனர். இது, சபையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நஸீர் எம்.பியிடம், 20 ரூபாய் நாணயத்தாள் ஒன்றைக் கொடுத்து, நையாண்டி செய்ததையும் காண முடிந்தது. 

அரசியலில் எல்லாக் காலத்திலும், ஒரே விதமான நிலைப்பாடுகள் இருப்பதில்லை. 1978ஆம் ஆண்டு, ஜே.ஆர் ஜெயவர்தன இரண்டாம் குடியரசு யாப்பைக் கொண்டு வந்தது முதற்கொண்டு, அதை எதிர்த்துவந்த சுதந்திரக் கட்சிக்காரர்கள்தான், இன்று ஆளும் தரப்பில் இருந்துகொண்டு, ஜனாதிபதிக்கான அதிகாரங்களை அதிகரிக்க வழிகோலும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வந்தனர்.

நிறைவேற்றதிகாரத்தை அறிமுகப்படுத்திய ஐ.தே.கட்சியினரே, 2015இல் 19ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு முன்னின்றனர். 

அந்தவகையில், முஸ்லிம் கட்சிகளினதோ சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களினதோ நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்; ஏதாவது, சுய ‘பேரங்களின்’ அடிப்படையில், பதவிகள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் ஆதரவளித்திருக்கலாம். அன்றேல், முஸ்லிம் கட்சிகள், ராஜபக்‌ஷ ஆட்சியாளர்களுடன் முரண்பட்டுச் செயற்படுவது, நல்லதல்ல என்ற நியாயமான காரணத்தின் அடிப்படையில், ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்திருக்கலாம். 

ஆயினும், இவ்விரு முஸ்லிம் கட்சிகளும் ஒரு கட்சியாக, ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்காமையும் தலைவர்கள் ஒருபுறமும் எம்.பிக்கள் மறுபுறமும் நின்றமையும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. 

கட்சிகளின் கட்டுக்கோப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போயிருக்கின்றது. அவர்கள் தரப்பில், என்னதான் விளக்கமளிக்கப்பட்டாலும் கூட, இதுவொரு நாடாக பாணியில் திட்டமிட்ட அரசியல் நகர்வு என்பதே நிதர்சனமாகும்.  

20ஆவது திருத்தச் சட்டமூலமானது  முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பையும் கொண்டு வரவில்லை. இந்த நாட்டில் வாழும் எல்லா இன மக்களுக்கும், ஒரேவகையான தாக்கத்தையே உண்டுபண்ணும். இவ்வாறான காரணங்களால், அதை ஆதரிக்கலாம். 

அதேபோன்று, இத்திருத்தமானது மீண்டும் நிறைவேற்றதிகாரத்தைப் பலப்படுத்தும் என்ற அடிப்படையிலும் ஏற்கெனவே, 19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவளித்தன என்ற அடிப்படையிலும் 20 இனை எதிர்த்திருக்கலாம். ஆனால், இங்குள்ள பிரச்சினை அதுவல்ல; மாறாக, இதில் முஸ்லிம் சமூகம் பகடைக்காயாக ஆக்கப்பட்டமை ஆகும். 

2015ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும், இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான பிரசாரத்தைச் செய்தன. அவர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகளைக் காட்டி, சிங்கள வாக்குகளைப் பெற்றது போல, இவர்கள், ராஜபக்‌ஷர்களைச் சர்வாதிகாரிகள் போல விமர்சித்தே, முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றனர். 

இதனாலும், பொதுஜன பெரமுனவின் பிரசாரங்களாலும் சிங்கள மக்கள், முஸ்லிம் சமூகத்தை வெறுப்புடன் பார்க்கும் நிலை தோன்றியது. சிங்கள மக்களை, முஸ்லிம்களும் வித்தியாசமாகப் பார்த்தனர்.  இவ்வாறு, சிங்கள - முஸ்லிம் மக்களுக்கு இடையில், முரண்பாட்டை ஏற்படுத்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக வாக்குகளைப் பெற்றுக் கொண்ட மு.கா, ம.கா, எம்.பிக்கள், இப்போது திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டமையே, இங்கு பிரச்சினைக்குரிய விடயமாகும். 

20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்தமையை நியாயப்படுத்த முடியும். ஆனால், மக்களிடையே இனவாத உரைகளை நிகழ்த்தி, மக்களை ராஜபக்‌ஷர்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, இன்று மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு, நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதை சம்பந்தப்பட்ட முஸ்லிம் எம்.பிக்களும் கட்சிகளும் நியாயப்படுத்தவே முடியாது. இதைவிட, ராஜபக்‌ஷர்களும் அவர்களுக்கு நேரடியாக ஆதரவளித்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் எவ்வளவோ மேல்!

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முஸ்லிம்களை-விற்றுப்-பிழைத்தல்/91-257581

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.