Jump to content

க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் காலமானார் - தமிழுக்கு அவரது பங்களிப்பு என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் முன்னோடி பதிப்பாளர்களில் ஒருவரான 'க்ரியா' எஸ். ராமகிருஷ்ணன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கொரோனா தொற்றிலிருந்து அவர் விடுபட்ட நிலையிலும், நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அவர் உயிரிழந்தார்.

சென்னை லயோலா கல்லூரியில் படித்த அவர் ஆரம்பத்தில் விளம்பரத் துறையில் பணியாற்றினார். பிறகு, தமிழில் தரமான தயாரிப்பில் - தொழில்நுட்ப ரீதியாகவும் மொழி ரீதியாகவும் - புத்தகங்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் 1974ஆம் ஆண்டில் நண்பர்களோடு இணைந்து 'க்ரியா' பதிப்பகத்தைத் துவங்கினார்.

சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே. சில குறிப்புகள்', அம்பை எழுதிய 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை', இமயத்தின் 'கோவேறு கழுதைகள்', பூமணியின் 'அஞ்ஞாடி', ந. முத்துச்சாமியின் 'மேற்கத்திக் கொம்பு மாடுகள்' உள்ளிட்ட மிகச் சிறந்த புனைவுகளையும் ஆல்ஃபர் காம்யுவின் 'அந்நியன்', காஃப்காவின் 'விசாரணை', எக்ஸ்பரியின் 'குட்டி இளவரசன்' போன்ற மொழிபெயர்ப்புகளையும் இவரது மேற்பார்வையின் கீழ் க்ரியா வெளியிட்டது.

ஐராவதம் மகாதேவனின் ஆய்வு நூலான Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D. புத்தகத்தை ஹாவர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வெளியிட்டது இவருடைய சாதனைகளில் ஒன்று.

க்ரியா ராமகிருஷ்ணன்

பட மூலாதாரம்,KRIYA RAMAKRISHNAN

க்ரியாவின் தற்கால தமிழகராதி, எஸ். ராமகிருஷ்ணனின் வாழ்நாள் சாதனைகளில் ஒன்று.

தற்கால பொது எழுத்துத் தமிழில் பயன்படுத்தப்படும் சொற்களைத் தொகுத்து, அவற்றுக்குப் பொருள் அளிக்கும் நோக்கில் க்ரியா அகராதி திட்டம் உருவாக்கப்பட்டது.

1985ல் இந்த அகராதிக்கான பணிகள் துவங்கப்பட்டு, 1992ல் முதல் பதிப்பு வெளிவந்தது. 12 முறை மறு அச்சாக்கம் செய்யப்பட்ட பிறகு, விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு 2008ல் வெளியானது. அந்த அகராதியின் மேலும் விரிவாக்கப்பட்ட மூன்றாம் பதிப்பு எஸ். ராமகிருஷ்ணன் மருத்துவமனையில் இருக்கும்போது, அவர் மறைவுக்கு சில நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது.

சென்னையிலுள்ள ஆய்வு நூலகமான ரோஜா முத்தையா ஆய்வு நூலக உருவாக்கத்திலும் எஸ். ராமகிருஷ்ணன் பங்குவகித்தார். கோட்டையூர் ரோஜா முத்தையா செட்டியாரின் நூல் சேகரிப்புகளை வாங்கிக்கொண்ட சிகாகோ பல்கலைக்கழகம், அதனை சென்னையில் வைத்து பராமரிக்க சரியான நபர்களைத் தேடிக்கொண்டிருந்தது.

க்ரியா ராமகிருஷ்ணன்

பட மூலாதாரம்,KRIYA RAMAKRISHNAN

"அந்தத் தருணத்தில் எஸ். ராமகிருஷ்ணன், சங்கரலிங்கம், நாராயணன், தியோடர் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து மொழி அறக்கட்டளையை நடத்திக்கொண்டிருந்தனர். புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான ஏ.கே. ராமானுஜன், இவர்களை அணுகும்படி சிகாகோ பல்கலைக்கழகத்திற்குப் பரிந்துரைத்தார். அதனைப் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது. ரோஜா முத்தையா நூலகத்தின் முதல் தலைவராக சங்கரலிங்கம் பொறுப்பேற்றார். இப்படியாக இந்நூலகத்தின் ஆரம்ப கட்டத்தில் எஸ். ராமகிருஷ்ணனுக்கு முக்கியப் பங்கிருந்தது" என்கிறார் அந்நூலகத்தின் தற்போதைய இயக்குநரான சுந்தர் கணேசன்.

அதை ஆமோதிக்கிறார் ஆய்வாளரும் எழுத்தாளரும் எஸ். ராமகிருஷ்ணனுடன் மொழி அறக்கட்டளையில் செயல்பட்டவருமான தியோடர் பாஸ்கரன். "1989ல் மொழி அறக்கட்டளையை ஆரம்பித்தோம். பதிப்புத் துறையில் தொழில்நுட்ப ரீதியாகவும் மொழி ரீதியாகவும் புதிய புதிய அம்சங்களைக் கொண்டுவர வேண்டுமென நினைத்தார்.

ஆகவே, தமிழ்மொழிக்கு புதிய சாதனங்களை அளிக்கும் நோக்கத்தோடு இந்த அறக்கட்டளை துவங்கப்பட்டது. எல்லோருமே க்ரியா அகராதி குறித்துத்தான் பேசுகிறார்கள். ஆனால், மொழி அறக்கட்டளையில் சார்பில் அவரை நிர்வாக ஆசிரியராகக் கொண்டு, வெளிவந்த தற்காலத் தமிழ் மரபுத் தொடர் அகராதியும் மிக முக்கியமான ஒரு பணி" என்கிறார் தியோடர் பாஸ்கரன்.

அவர் தமிழ் பதிப்புலகின் மிகச் சிறந்த எடிட்டர். புத்தக ஆசிரியரை அருகில் வைத்துக்கொண்டு அவர் பிரதிகளைச் செம்மையாக்கம் செய்வது ஒரு பெரிய துன்புறுத்தலைப் போலத் தோன்றும். ஒவ்வொரு வார்த்தையாக எடுத்துக்கொண்டு, அந்த இடத்தில் அது சரியான பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று விவாதிப்பார் என நினைவுகூர்கிறார் தியோடர் பாஸ்கரன்.

ஃப்ரெஞ்ச் மொழியிலிருந்து வெ. ஸ்ரீராம் மொழிபெயர்ப்பில் நேரடியாக பல படைப்புகளை க்ரியா கொண்டு வந்திருக்கிறது. "ஒரு மொழிபெயர்ப்பு வரும்போது அதில் துல்லியமும் செம்மையும் காக்கப்பட வேண்டுமென்பதில் அவரைப்போல கவனமாக இருந்தவர்கள் யாரும் கிடையாது. 1980ல் ஆல்ஃபர் காம்யூவின் அன்னியன் பதிப்பிக்கப்பட்டபோது, அதன் முதல் மொழிபெயர்ப்பை ஆறு முறை செம்மை செய்தோம். அவருடனான என்னுடைய உறவு 1980ல் துவங்கி இப்போதுவரை நீடித்தது. அவருடைய மறைவு தமிழுக்கு இலக்கிய ரீதியிலும் மொழி ரீதியிலும் பெரிய இழப்பு" என்கிறார் வெ. ஸ்ரீராம்.

தமிழ் குறித்தும் தமிழ்க் கலாசாரம் குறித்தும் பல ஆய்வு நூல்களை எழுதிய இஸ்ரேலியப் பேராசிரியர் டேவிட் ஷுல்மன், எஸ். ராமகிருஷ்ணனின் மறைவு மிகப் பெரிய பேரிழப்பு என்கிறார்.

"உலகம் முழுவதுமே பண்பாடு, அறிவு, கலைரீதியான முயற்சிகள் எல்லாம் ஒரு நூலில்தான் தொங்குகின்றன. அந்த நூல், மிகச் சிறந்த ரசனை, புரிதல், கற்பனை, நிஜத்தில் எதையும் சாதிக்கும் வலிமை கொண்ட சிலரிடம்தான் இருக்கிறது. அந்த சிலரில் எஸ். ராமகிருஷ்ணனும் ஒருவர். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக அவரும் அவருடைய பதிப்பகமான க்ரியாவும் சென்னையில் தமிழ் இலக்கியம் மற்றும் அறிவுசார்ந்த படைப்புகளின் மையமாக இருந்தனர். சிங்கப்பூர், இலங்கை, ஃபிஜி, டொரன்டோ போன்ற பரந்துபட்ட தமிழ் வாசிப்புலகிலும் அவரது தாக்கம் இருந்தது. ராம் உருவாக்கிய க்ரியா தற்காலத் தமிழகராதி, நவீன தெற்காசிய மொழிகளில் தற்போது வெளிவந்துள்ள மிகச் சிறந்த அகராதிகளில் ஒன்று. ராம் எனக்கு நல்ல நண்பர். எனக்கு மட்டுமல்ல, தமிழோடு தொடர்புடைய எல்லோருக்கும் நண்பர். அவருடைய மறைவு, கற்பனைக்கெட்டாத பேரிழப்பு" என்கிறார் டேவிட் ஷுல்மன்.

https://www.bbc.com/tamil/india-54971777

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.ராமகிருஷ்ணன் - வாசகர்கள் சந்திப்பு - YouTube

ஆழ்ந்த இரங்கல்கள்.....தமிழ் புத்தகங்கள் இருக்கும் வீடுகளில் அவரது சில புத்தகங்களாவது அங்கு இடம்பெற்றிருக்கும்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிக் குறிப்பு: ‘க்ரியா‘ ராமகிருஷ்ணன் – தற்காலத் தமிழ் அகராதியை நீண்ட கால உழைப்பில் வரவாக்கிய இலக்கிய ஆளுமை

முருகபூபதி

க்ரியா இராமகிருஷ்ணன் இன்று நவம்பர் 17 ஆம் திகதி, அதிகாலை சென்னையில் கொரோனோ தொற்றின் தாக்கத்திலிருந்து மீளாமலேயே நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.

க்ரியா இராமகிருஷ்ணனின் திடீர் மறைவு தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடத்தை இனி யார் நிரப்புவார்கள்..? என்ற வினா மனதில் நிழலாட இந்த அஞ்சலிக்குறிப்பினை பதிவுசெய்கின்றேன்.

மகாகவி பாரதியின் அந்திமாகாலத்திற்கு முக்கிய காரணமாக விளங்கிய சென்னை  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் பிரகாரத்தில், எழுபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்துடன் இந்த அஞ்சலிக்குறிப்பினை ஆரம்பிக்கின்றேன்.

ஒரு  பெரிய குடும்பம்  அங்கு தரிசனத்துக்கு  சென்றது.   அதில்   பத்துப்பதினைந்து  பேர்   ஆண்கள், பெண்கள் , குழந்தைகள்,  முதியவர்கள்  இருந்தார்கள்.

%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%அதில்  அத்தை   உறவான  ஒரு  பெண்  சற்று  நோய்வாய்ப்பட்டு எப்பொழுதும்  சோர்வாக  இருப்பவர்.   நோஞ்சான்  என்று வைத்துக்கொள்ளுங்கள்.   ஒரு  சிறிய  குழந்தை  வாட்டசாட்டமான அத்துடன்,  கொழு  கொழு என்று  கொழுத்த  குழந்தை. தூக்கினால் சற்று  பாரமான  குழந்தை.

இருவரையும்   அழைத்துக்கொண்டு  அந்தக்கோயிலை  சுற்றிவந்து  தரிசிப்பது  அந்தப் பெரியகுடும்பத்திற்கு  சிரமமாக இருந்திருக்கிறது.   நோய்வாய்ப்பட்ட  அத்தை  ” தன்னிடம்  குழந்தையை    விட்டு விட்டு  போய்வாருங்கள்  நான் பார்த்துக்கொள்கின்றேன்”   என்றார்.   உடனே   மற்றவர்களும்  அதற்கு சம்மதித்து   குழந்தைய ஒரு படுக்கை விரிப்பில்  கிடத்திவிட்டு அத்தையை  பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு  சென்று  விட்டார்கள்.

அத்தைக்கு  உறக்கம்  கண்களை   சுழற்றியிருக்கிறது.  அந்தக்கோயில் தூணில்    சாய்ந்துவிட்டார்.   தரையில்  குழந்தையும்  ஆழ்ந்த  உறக்கம்.

என்ன  நடந்திருக்கும்…?  அந்தக்கோயிலுக்கு  வந்த  பக்தர்கள்   யாரோ  ஏழைப்பெண்  குழந்தையை  தரையில்  கிடத்திவிட்டு  பிச்சைக்கு  காத்திருக்கிறாள்  என்று  நினைத்துக்கொண்டு  தத்தம் கைகளில்    இருந்த  சில்லறைக்காசை  போட்டுவிட்டு போய்விட்டார்கள்.

கோயிலைச் சுற்றிப்பார்க்கச்சென்ற உறவினர்கள்  வந்து  பார்த்து அதிர்ச்சி    அடைந்தனர்.    நடந்திருப்பதை  ஊகித்துக்கொண்டு  தரையில்    கிடந்த  சில்லறைகளை   எடுத்து  கோயில்  உண்டியலில் போட்டுவிட்டு   குழந்தையையும்  தூக்கிக்கொண்டு,  அந்த அத்தையையும்    அழைத்துச்சென்றார்களாம்.

அந்தக்குழந்தை தமிழ் உலகில் ஆளுமைமிக்க செயற்பாட்டாளராக வளர்ந்து தனது 75 வயது பராயத்தில் இன்று நவம்பர் 17 ஆம் திகதி சென்னையில் மறைந்துவிட்டார். அவர்தான்‘க்ரியா’  இராமகிருஷ்ணன்.       அவருடைய  க்ரியா  பதிப்பகம்  1992 இல் பெறுமதி மிக்க  தற்கால  தமிழ்  அகராதி  நூலை தொகுத்த வெளியிட்டபோது, தமிழக தி.மு.க அரசு அதனைக்கண்டுகொள்ளவில்லை.

அதன் பிரதிகளை வாங்குவதற்கான முயற்சியில் தமிழக அரசின் நூலக ஆணையமும் முன்வரவில்லை.

ஆனால், சிங்கப்பூர் அரசு, அதனை தனது நாட்டின் நூலகங்களுக்கு பரிந்துரை செய்து பெற்றுக்கொடுத்தது.

தமிழ்நாவல்கள் பல எழுதிய அன்றைய முதல்வர் மு. கருணாநிதிக்கு தமிழ்நாவல் நூற்றாண்டையும் மற்றவர்கள்தான் குறிப்பாக இலங்கையிலிருந்துதான் நினைவூட்டவேண்டியிருந்தது.

க்ரியா இராமகிருஷ்ணனின் தாய் மொழி சுந்தரத்தெலுங்கு. ஆனால், அவர் தமிழுக்காகவே வாழ்ந்தவர். அவர் தனது  குழந்தைப்பருவத்துக்  கதையைத்தான்  1992 இல் முதல் பதிப்பாக வெளியிட்ட தற்காலத்தமிழ் அகராதியின் தோற்றம் பற்றிக்கூறும்போது சொல்லியிருந்தார்.

இந்த அகராதியின்  முன்னுரையில்  அந்த சுவாரசியமான கதையையும் குறிப்பிட்டு  பலருடைய  ஆதரவுடன் ஒரு  கோயிலுக்கு  அன்று  சிறு  உதவி  கிடைத்தது  போன்று   இந்த அகராதியை   தயாரிக்க  பலரும்  உதவினார்கள்  எனச்சொல்லியிருந்தார்.

இந்தியாவில் சில மாநிலங்களிலிருந்தும் இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, மொரீஷியஸ், முதலான நாடுகளிலிருந்தும் பல அறிஞர்களின் ஆலோசனைகளைப்பெற்றும் இந்த அகராதியை அவர் தொகுத்திருந்தார்.

முதல் பதிப்பின் முன்னுரையை, அவர் நன்றியுரையாகவே இவ்வாறு எழுதியிருந்தார்.

%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%“இந்த அகராதி நிறைவுபெற்றிருக்கும் இந்தத் தருணத்தில் திரும்பிப்பார்க்கும்போது, அந்தக்குழந்தையின் இடத்தில் இந்த அகராதியைப் பார்க்கின்றேன். இந்த அகராதியை யாரோ ஒருவரின் நேர்த்திக்கடனாக நினைத்துக் கேட்கப்படாமலேயே, மனமுவந்து, மகிழ்ச்சி நிறைந்த பங்களிப்பைச் செய்தவர்கள் அநேகர். இவர்களில் ஒருவர் இல்லாதிருந்தாலும் இந்த அகராதி முழுமை அடைந்திருக்காது. இவர்கள் ஒவ்வொருவரையும் நான் கைகூப்பி வணங்குகிறேன்.”

க்ரியா பதிப்பகத்தை இராமகிருஷ்ணன் ஆரம்பித்த காலத்தில் கணினி தொழில்நுட்ப வசதிகள் வளங்கள் இல்லாதிருந்தமையால், நூல்களின் மூலப்பிரதிகளை கையெழுத்திலேயே படித்தபோது, எழுத்தாளர்களின் எழுத்துப்பிழைகளை திருத்தி, செம்மைப்படுத்தும் சிரமங்களையும் சந்தித்தவர்.

குறிப்பாக மொழிபெயர்ப்புகளுக்கான கையெழுத்துப்பிரதிகளை செம்மைப்படுத்தும்போது அவருக்கு உதவியாக இருந்தவர் அவரது நண்பர் கே. நாராயணன் என்பவர்.

மொழிபெயர்ப்புகளில் தற்காலத்தமிழை கையாளுவதில் எதிர்நோக்கப்பட்ட பிரச்சினைகளை உடனுக்குடன் சிறிய சிறிய அட்டைகளில் குறித்துவைத்திருக்கிறார்.

1980 ஆம் ஆண்டுமுதல் இராமகிருஷ்ணன் அயர்ச்சியின்றி உழைத்ததன் பெறுபேறாகத்தான் நாம் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியை பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.

அதன்தேவையை அன்றைய முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அரசு ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்பது பேராச்சரியம்தான்.

மொழியை இனத்தை மதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் சமூகத்திற்கு அவசியமான மக்களுக்கான அரசியல் நடத்தும் காலம் வரும்வரையில் நாம் புலம்பிக்கொண்டிருக்கவேண்டியதுதான்.

இராமகிருஷ்ணன் தமது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் முதல் பதிப்பினை வெளியிட்டபோது, அதனை வாங்கிய தமிழ்நாட்டின் ஒரு அரசியல் பிரமுகர் இலங்கையில் தமக்கு மிகவும் பிடித்தமான ஒருவருக்கு பரிசாக அனுப்பியிருந்தார்.

அந்தப்பரிசினை பெற்றவர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அதனைப்பார்த்த அவர் இந்த பெறுமதியான நூல் ஒவ்வொரு தமிழ் வீடுகளிலும் இருக்கவேண்டியது என்றும் தெரிவித்துள்ளார்.

எமது தமிழ்த்தலைவர்களிடம் இந்த அகராதி சென்றதா என்பதை அவர் கேட்டுத் தெரிந்துகொண்டாரா என்பதும் தெரியவில்லை.

இந்த அகராதியின் முதல் பதிப்பு ஏன் முக்கியத்துவம் பெற்றது..?

தற்காலத் தமிழுக்கென்றே உருவாக்கப்பட்ட முதல் அகராதி.

தற்காலத் தமிழில் சொல்லிலும் பொருளிலும் நிகழ்ந்துவரும் மாற்றங்களை எடுத்துக்காட்டும் முதல் அகராதி.

தற்காலத் தமிழில் உள்ள சொற்களை எடுத்துக்காட்டு வாக்கியங்களோடு விளக்கும் முதல் அகராதி.

இந்திய மொழிகளில் கணிப்பொறியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட முதல் அகராதியும் இதுதான்.

15875 தலைச்சொற்கள். 23883 எடுத்துக்காட்டு வாக்கியங்கள் – தொடர்கள்.

பண்பாட்டுத் தொடர்புடைய சொற்களுக்கான 209 படங்கள்.

திருத்திய இரண்டாம் பதிப்பினயும் வெளியிட்டிருக்கும் இராமகிருஷ்ணன், கடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் நடந்த புத்தகச்சந்தையின்போது, மேலும் புதிய புதிய சொற்பிரயோகங்களையும் உள்ளடக்கி மிகப்பெரிய ஆகராதியையும் வெளியிடவிருக்கும் எண்ணக்கருவை வெளிப்படுத்தியிருந்தவர்.

அந்த முயற்சியின் இறுதித்தருணத்தில் எதிர்பாராதாவகையில் கொரோனோ தொற்றுக்கு ஆளாகியிருந்த அவர் தனது விடா முயற்சியை சாதித்துவிட்டே விடைபெற்றுள்ளார்.

மரணப்படுக்கையில்தான் இருக்கிறேன் என்பது தெரிந்தோ தெரியாமலோ, மேலும் மேலும் செம்மைப்படுத்தப்பட்ட தற்காலத் தமிழ் அகராதியின் மற்றும் ஒரு பதிப்பினை எமக்கு வரவாக்கிவிட்டே விடைபெற்றிருக்கிறார் என்பதை அறியும்போது மனம் உறைந்துவிடுகிறது.

அவரது க்ரியா, பல பெறுமதியான மொழிபெயர்ப்பு நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.

கடந்த மாதமும் எமது மெல்பன் வாசகர் வட்டம் நடத்திய மாதந்த சந்திப்பில் க்ரியா வெளியிட்ட காமெல் தாவுத் எழுதிய பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாக – வெ. ஶ்ரீராம் தமிழுக்கு வரவாக்கிய மெர்சோ: மறுவிசாரணை நாவலைத்தான் விமர்சனத்திற்கு எடுத்துக்கொண்டது.

இந்த நாவலை காமெல் தாவுத் எழுதநேர்ந்தமைக்கு அல்பெர் காம்யுவின் நோபல் பரிசுபெற்ற அந்நியன் நாவல்தான் முக்கிய காரணம். இந்த நாவலுக்கு எதிர்வினையாக வெளியானதுதான் மெர்சோ: மறுவிசாரணை.

இதிலிருந்து க்ரியா இராமகிருஷ்ணனின் பரந்த சிந்தனையையும் நாம் தெரிந்துகொள்கின்றோம்.

அவர் இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளதும் அபிமானத்துக்குரியவர். தற்காலத் தமிழ் அகராதியின் தயாரிப்பில் இலங்கை எழுத்தாளர்களையும் இணைத்துக்கொண்டு, இலங்கை தமிழ்பேச்சுவழக்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.
அவரது இழப்பு ஈடுசெய்யப்படவேண்டியது.

letchumananm@gmail.com

https://thinakkural.lk/article/90084

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரிதான எடிட்டர்

kriya-ramakrishnan  

அது 1986. அப்போது எனக்கு 20 வயது. திருச்சியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். சிகரெட் வாங்குவதற்காகப் பெட்டிக்கடை சென்றபோது அங்கு தொங்கிக்கொண்டிருந்த புத்தகம் என் கவனத்தை ஈர்த்தது. ராமகிருஷ்ணனின் ‘க்ரியா பதிப்பகம்’ வெளிக்கொண்டுவந்திருந்த ழான்-போல் சார்த்ரின் ‘மீள முடியுமா?’ நாடக மொழிபெயர்ப்பு அது.

தமிழில் அந்தத் தரத்தில் அப்படி ஒரு புத்தகத்தை அதுநாள் வரை என் வாழ்வில் பார்த்ததே இல்லை. ‘நாமும் எதாவது எழுதி ஒருநாள் அது புத்தகமாக வரும் என்றால், அது ‘க்ரியா’வின் வெளியீடாகத்தான் வர வேண்டும்’ என்ற எண்ணத்தை அந்தப் புத்தகம் உருவாக்கியது. பிற்பாடு 1991-ல் ‘கோவேறு கழுதைகள்’ கையெழுத்துப் பிரதியோடு ராமகிருஷ்ணனைச் சந்தித்தேன். இந்த முப்பது ஆண்டுகளில் விவரிக்க முடியாத பிணைப்பைக் கொண்ட உறவாக அது மாறியது. என்னுடைய ஆறு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்ட ராமகிருஷ்ணனுக்கும் எனக்கும் இடையிலான உறவை வெறும் பதிப்பாளர் – எழுத்தாளர் என்று குறுக்கிட முடியாது என்பது மட்டும் உறுதி.

 
 
 

மிக அபூர்வமான ஒரு மொழியாளுமை ராமகிருஷ்ணன். மொழி என்பது என்ன, மொழிப் பயன்பாடு எந்த இடத்தில் இலக்கியமாக மாறுகிறது என்பதைத் துல்லியமாக உணர்ந்தவர் அவர். ஒரு எழுத்தாளனுக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவு என்ன, மொழிக்கும் சமூகத்துக்குமான உறவு என்ன, மொழிக்கும் பண்பாட்டுக் கூறுகளுக்குமான உறவு என்ன, மொழியின் வழியாக சமூக, பண்பாட்டுக் கூறுகள், நிலவியல் அடையாளங்கள், வாழ்க்கை நெறிமுறைகள் எவ்விதம் இலக்கியம் வழி ஆவணமாகின்றன என்றெல்லாம் சொல்லி எனக்குள் மொழிப் பொறுப்புணர்வை ஊட்டியவர் ராமகிருஷ்ணன்.

ஒரு படைப்பில் போகிறபோக்கில் நழுவிவிடக் கூடிய மிகச் சிறந்த பகுதியையோ, வீணாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் பலவீனமான பகுதியையோ நாடி பிடிக்கக்கூடிய அரிதான ஆற்றல் ராமகிருஷ்ணனுக்கு இருந்தது. எழுத்தாளர்களுக்கு எடிட்டர் தேவை என்பது தமிழ்ச் சூழலில் தொடர்ந்து மறுதலிக்கப்பட்டுவரும் நிலையில், அவருடைய ‘க்ரியா’ வெளிக்கொண்டுவரும் மொழிபெயர்ப்புகளும், நேரடி ஆக்கங்களும் தொடர்ந்து எடிட்டிங்கின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றிவந்தன. என்னுடைய நூல்களுக்கு ராமகிருஷ்ணனின் எடிட்டிங் பெரும் உதவியாக இருந்திருக்கிறது. ஆனால், இத்தனை படைப்புகளில், தானாக ஒரு சொல்லை ராமகிருஷ்ணன் சேர்த்ததும் இல்லை, நீக்கியதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், எழுத்தாளர்கள் – மொழிபெயர்ப்பாளர்களுடன் அவர் நடத்தும் உரையாடல்தான் இந்த எடிட்டிங்கின் முக்கியமான அங்கமாக இருந்திருக்கிறது. அவர் எழுப்புகிற கேள்விகள், சந்தேகங்கள் படைப்பின் மீது பெருவெளிச்சத்தைப் பாய்ச்சுபவையாக இருந்திருக்கின்றன.

சல்மான் ருஷ்டி தன்னுடைய ‘மிட்நைட்’ஸ் சில்ட்ரன்’ நாவலின் முன்னுரையில், “இந்த நாவல் இவ்வளவு சிறப்பாக வருவதற்கு என்னுடைய எடிட்டரே காரணம்” என்று எழுதியது நினைவுக்குவருகிறது. நானும் அப்படி ஒரு கடிதத்தை என்னுடைய முதல் நாவல் வெளிவந்தபோது ராமகிருஷ்ணனுக்கு அனுப்பினேன் – அதுதான் நான் அவருக்கு அனுப்பிய ஒரே கடிதமும்கூட. அதற்கு ராமகிருஷ்ணன் பதில் எழுதியிருந்தார், “நீங்கள் வைரத்தைக் கொண்டுவந்தீர்கள். அதனால், என்னால் பட்டை தீட்ட முடிந்தது. நீங்கள் ஒரு கரிக்கட்டையைக் கொண்டுவந்திருந்தால் என்னால் எதுவும் செய்திருக்க முடியாது!”

- இமையம், ‘கோவேறு கழுதைகள்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.

 

https://www.hindutamil.in/news/opinion/columns/603345-kriya-ramakrishnan-1.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.