Jump to content

எனக்கு வருத்தம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆண்டு காலம் வேலை இல்லாமல் இருந்த எனக்கு இரண்டு நாள் வேலை அப்பத்தான் கிடைச்சிருந்தது. நானாகத் தேடித் போகாமல் தானாகக் கிடைச்ச வேலை என்பதும் மிகவும் சந்தோசமாக இருக்க முதல் நாள் வேலைக்குப் போய் வந்த சந்தோசத்தில் இருக்க, இரவு முழுதும் வயிற்றில் ஒருவித அவஸ்த்தை. என்னடா இது நாளை காலை வெள்ளண எழும்ப வேணுமே! இரவு தூங்க முடியாமல் இருக்கே என்று கவலைப்பட்டபடியே சாமம் தாண்டி இரண்டு மணிக்குக் கண்ணயர்ந்து காலை ஆறு மணிக்கு எலாம் சத்தம் கேட்டு எழும்பி இரண்டு கறி வைத்து சோறும் போட்டு மனுசனுக்கும் எனக்கும் சாப்பாட்டைக் கட்டி முடித்து குளித்து வெளிக்கிட்டு நானும் வெறும் வயிற்றுடன் போகக் கூடாது என்று தானியங்கள் சேர்ந்த கஞ்சி ஒன்றுடன் வேலைக்குப் போய்ச் சேர மீண்டும் அந்த வயிற்று வலி ஆரம்பித்தது. என்னடா இது வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் நாளே இப்பிடி என்று எண்ணி ஒருவாறு சமாளித்துக்கொண்டு வேலை செய்தால் மதியத்துக்குப் பிறகும் உண்டபின் வலி அதிகரிக்க ஒரு பரசிற்றாமல் போட்டுக்கொண்டு மாலை ஆறு மணிவரை சமாளிச்சு முடிஞ்சு வீட்டுக்கு வந்தால் அப்பத்தான் வேலையால வந்த மனிசன் ஒரு நல்ல டீ போடு என்கிறார்.

வாயில வந்ததை அடக்கிக்கொண்டு பால்த் தேனீர் போட்டுக்கொண்டு போய் அவருக்கும் குடுத்து நானும் இருந்து குடிக்கிறன்.

ஒரு வருஷம் சும்மா இருந்து சாப்பிட்டுட்டு வேலைக்குப் போனது களைப்பாக்கும்

வழமையான மனிசனின் எள்ளல் கதைக்கு எரிச்சல் வந்தாலும் ஏனோ அடக்கிக்கொண்டு சரியான வயிற்று நோ என்கிறேன்.

கடையில ஏதும் வாங்கிச் சாப்பிட்டிருப்பாய்

சொல்லி மனிசன் சிரிக்க வந்த கடுப்பில் நான் கடையில சாப்பிட்டிட்டன். இரவுக்கும் சோறுதான் சாப்பாடு. நான் படுக்கப் போறன் என்றபடி ஏழு மணிக்கே போய்ப் படுத்தாச்சு.

அடுத்தநாள் காலை ஆறு மணிக்கு எழும்பினால் சாடையான தலை சுற்றல். என்னடா இது நல்ல காலம் இன்று வேலை இல்லை என்று எண்ணியபடி பல்விளக்கச் சென்றால் சிறுநீர் ஒரேஞ் நிறத்தில் போகுது. நான் வேலை செய்யும் இடம் கடையுடன் சேர்ந்த அஞ்சல் நிலையம். ஆதலால் ஏதும் சிறுநீர் தொற்று அங்கு ஏற்பட்டிருக்குமோ என்ற எண்ணத்துடன் சரி இண்டைக்கு முழுதும் பாப்பம் என்றபடி மற்ற வேலைகளைப் பார்க்கிறேன். சாப்பிடட பிறகு மீண்டும் மேல் வயிற்றுப்பக்கம் நோ அதிகமாக வயிற்றினுள் வாயுத் தொல்லையோ என்று எண்ணியபடி ன்னிடம் இருந்த Omeprazole என்னும் மாத்திரையைப் போடுகிறேன். அன்று மதியம் சிறிது குணமானதுபோல் இருந்தாலும் சிறுநீரின் நிறம் மாறிக்கொண்டே வர நாளை கட்டாயம் வைத்தியருக்குக் கதைக்கவேண்டும் என்று எண்ணியபடி வேலை ஒன்றும் செய்யாது படுத்தே இருக்கிறேன்.

காலை எட்டு மணிவரை காத்திருந்து வைத்தியருடன் கதைக்கவேண்டும் என்கிறேன். 10 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் வைத்தியர் போன் செய்வார் என்று கூறுகிறார் அங்கிருக்கும் பெண். சரி என்று கூறிவிட்டு காலை உணவாகப் பானை உண்டு சிறிது நேரத்தில் மீண்டும் தலை சுற்றலுடன் வயிற்றையும் பிரட்டுவதுபோலும் இருக்கிறது. அதற்குள்ளும் அந்த மனிசன் இந்த வயதில வயித்தில பிள்ளை எண்டு குண்டைத்தூக்கிப் போட்டுடாதை என்றுவிட்டுப் போக நேரகாலம் தெரியாத எழிய மனிசன் என்று வாய்விட்டே திட்டுகிறேன்.

பிள்ளைகள் எல்லாரும் வீட்டில் என்பதுடன் பெரியவர்கள் என்பதால் மனிசனைத் தவிர ஆலவட்டம் பிடிக்கவேண்டிய தேவை இல்லை என்பதால் போய் மீண்டும் கட்டிலில் படுக்கிறேன். தமிழ் வைத்தியர் ஒரு மணிக்கு போன் செய்கிறார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சிலவேளை யூரின் தொற்றாக இருக்கலாம். எதுக்கும் இண்டைக்கு வந்து டியூப் வாங்கிக்கொண்டு போய் நாளைக்கு காலையில சிறுநீர் எடுத்துக்கொண்டு வந்து தாங்கோ. நானே டெஸ்ட் செய்து பாக்கிறேன் என்கிறார். மகள் அவரிடம் சென்று டியூப் வாங்கி வர அடுத்த நாள் காலை வரை வேறு வழியின்றி எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு மாத்திரை போட்டு சிறிது தணிந்ததாக எண்ணிக்கொண்டு கட்டிலே கதியாகக் கிடக்க, உணவு தேநீர் எல்லாம் கட்டிலுக்கே வர நீண்ட நாட்களின் பின்னர் ஒரு மகிழ்வும் எட்டிப் பார்க்கிறது.  

அடுத்தநாட் காலை சிறுநீரைச் சேகரித்துக் கொடுக்க மகள் கொண்டு சென்று கொடுத்துவிட்டு வருகிறாள். எனக்கோ தலை சுற்றலும் வாந்தி வருவதுபோன்ற நிலையம் வயிற்று நோவும் அதிகரிக்கிறது. மதியம் வரை வைத்தியர் தொடர்புகொள்ளவில்லை. நானே போன் செய்து பார்க்கிறேன். அவர் மாலை மூன்றுக்குத்தான் வருவார். அதன் பின் தொடர்பு கொள்வார் என்கிறார் அங்குள்ள பெண். நான் மீண்டும் படுத்துத் தூங்கிவிடுகிறேன். தொடர்ந்து போன் அடிக்கும் சத்தத்தில் எழுந்தால் வைத்தியர் தான்.

நடந்ததை அவருக்கு விபரித்தவுடன் சிறுநீர் கழிக்கும்போது எரிகிறதா என்கிறார். இல்லை என்றவுடன் நான் வீடியோவில் உங்களை பார்க்கலாமா என்றவுடன் நான் பதைபதைத்து இப்பவோ??? நான் நேற்றுத்தொடக்கம் தலைகூட இழுக்கவில்லை ..... என்கிறேன். சரி நான் ஐந்து நிமிடத்தில் திரும்ப வீடியோ கோலுக்கு வாறன். பவுடர் பூசி லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு ரெடியா இருங்கோ என்றுவிட்டு வைத்துவிட. நான் எழுந்து தலையை மட்டும் இழுத்துவிட்டு மீண்டு கட்டிலில் வசதியாக அமர்ந்துகொள்கிறேன்.

வைத்தியர் மீண்டும் வீடியோ கோலில் வந்து நான் உங்கள் வயிற்றை வீடியோவில் பார்க்கலாமா என்று கேட்கிறார். வீடியோவில் பார்த்து எதைக் கண்டுபிடிக்கப் போகிறார் என்று மனதுக்குள் எண்ணிக்கொள்கிறேன். பிள்ளைகள் யாரையும் கூப்பிடுங்கள் என்கிறார். எதற்கு என்றுநான் கேட்க உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும் என்று கேட்டனான் என்கிறார். எனக்கு ஒன்றும் இல்லை. உங்களுக்கு ஒருமாதிரி இருக்கோ என்று நான் கேட்க இல்லை இல்லை என்று அவசரமாகச் சொல்லிவிட்டு, நான் உங்கள் வயிற்றைப் பார்க்கலாமா என்கிறார். சரியென்று நான் மேலாடையை சிறிது உயர்த்துகிறேன்.

"என்ன உங்கள் வயிறு வீங்கி இருக்கா"

"இல்லையே. எனக்கு கொஞ்சம் வயிறு இருக்குத்தான்"

"நல்லாச் சாப்பிடுவீங்களா"

"இல்லை மூன்றுநேரம் மட்டும் சாப்பிடுவன்"

"உங்களுக்கு எரிச்சல் இல்லை எண்டபடியா நான் உது வேறை வருத்தம் எண்டுதான் யோசிக்கிறன்."

"என்ன வருத்தம்"

"வயிற்றிலே எந்தப்பக்கம் நோ உங்களுக்கு "

"மேல் வயிறும் வலப்பக்கமும் அதிக நோ"

"தொடர்ந்தும் சத்தி, வயிறு நோகுது ஏண்டா உடனடியா கொஸ்பிற்றல் போங்கோ"

"என்ன வருத்தமாய் இருக்கும் எண்டு நீங்கள் சொல்லவேயில்லையே"

"நான் ஒரு கிழமைக்கு அன்டிபயோரிக் எழுதிவிடுறன். பிள்ளையள் வந்து எடுப்பினம் தானே"

"ஓம். நான் பயப்பிட மாட்டன். என்ன வருத்தம் எண்டாலும் சொல்லுங்கோ"

"உங்கள் அறிகுறிகளைப் பார்த்தால் நான் நினைக்கிறன் உங்களுக்கு Bladder Cancer ஆய் இருக்கலாம். பயப்பிடாதேங்கோ"

"நான் பயப்பிடேல்லை"

"ஒரு ஸ்பெஷல் ஸ்கானிங்குக்கு போட்டிருக்கிறன். மூண்டு கிழமைக்குல்ல கூப்பிடுவாங்கள்"

" அதுக்குள்ளே ஒண்டும் சீரியசா நடக்காதே"

" சீச் சீ. அப்பிடி ஏதும் வலி அதிகமானா உடன ஹாஸ்பிட்டல் போயிடுங்கோ"

" சரி "

வைத்தியர் போனை வைத்தவுடன் மனதெல்லாம் எதோ வெறிச்சோடியது போல் இருக்கு. "இந்த உலகத்தில இத்தனை நாள் வாழ்ந்தது போதும்தான். என் நோய் பற்றி மனிசனுக்கோ பிள்ளையளுக்கோ சொல்லக் கூடாது. 2 லட்சம் பவுண்ட்ஸ் என் பேரில் life இன்சூரன்ஸ் இருக்கு. ஒவ்வொருத்தரும் 50 ஆயிரம் படி எடுங்கோ எண்டு எழுதி வைப்பமோ? சீச்சீ மனிசன் எல்லாம் பாத்துக்கொள்ளுவார். என்ன இன்னும் சில நாடுகள் பாக்கவேணும் எண்ட ஆசைதான் நிறைவேறாமல் போகப்போகுது" என்று எண்ணியபடி மகளைக் கூப்பிட்டு மருந்தைப் போய் எடுத்து வரும்படி சொல்லிவிட்டு மீண்டும் கட்டிலில் படுக்கிறேன்.

எனக்கு ஒருநாளும் உடல் சூடாக்கிக் காச்சல் வருவதில்லை. குளிர் காச்சல் தான் வரும். அந்த நேரங்களில் இரண்டு போர்வையை போர்த்துக்கொண்டு படுத்தால் ஒரு மணி நேரத்தில் வேர்த்து ஒழுக மீண்டும் போர்வையை உதறிவிட்டுப் படுக்க வருத்தம் அதோட நின்றுவிடும்.

இன்று சரியான குளிர் குளிர இரண்டு போர்வையுடன் படுத்தால் குளிர் குறைவதாய்க் காணவில்லை. கடைசி மகளைக் கூப்பிட்டு என் முதுகுடன் ஒட்டியபடி படுக்கச் சொல்கிறேன். அவள் அரை மணிநேரம் படுத்தபின் தனக்கு zoom வகுப்பு ஆரம்பிக்கப்போகுது என்று எழ குளிர் சரியாக அதிகரிக்கிறது. இதற்குமுன்னர் இத்தனை அதிகமாக சினோவுக்குள் நடக்கும்போது கூடக் குளிரவில்லை என்பதும் மனதுக்கு நெருடலாக இருக்கிறது. மூத்தவள் இரண்டு பரசிர்ராமலைக் கொண்டுவந்து போட்டுவிட்டுப் படுக்கும்படி கூட அதையும் போட்டுக்கொண்டு அவள் இன்னும் இரண்டு போர்வைகளைக் கொண்டுவந்து  போர்த்துவிட நான்கு போர்வைகளும் பாரமாக இருந்தாலும் குளிர் குறைந்ததுபோல் உணர அப்படியே தூங்கிப்போகிறேன். மூன்றரை மணிநேரம் நல்ல தூக்கம். அத்தனை போர்வை போர்த்தும் எனக்கு இம்முறை வியர்க்கவே இல்லை என்பது மனதில் வந்து கான்சர் வந்தால் இப்பிடித்தான் இருக்குமோ என்று எண்ணுகிறது மனம்.

அம்மா அம்மா என்று மகள் அருட்டத்தான் எழுகிறேன்.

"சாப்பிடேல்லையோ அம்மா"

"சாப்பிடத்தான் வேணும். என்ன சமைச்சியள்"

"இடியப்பம் இருக்கு.

"சரி இரண்டு இடியப்பம் கொண்டு வாங்கோ. மருந்தையும் தாங்கோ"

உண்டு முடியத் தேநீரும் வருது.

"அப்பா வேலையால வந்திட்டாரா"

"ஓம் டிவி பாக்கிறார் "

"பாரன் வேலையால வந்தவர் என்னை ஒன்றுமே கேக்கேல்லை"

"நீங்கள் நித்திரை எண்டதால எழுப்பேல்லை"

மகள் கீழே செல்ல நான் சென்று கையைக் கழுவிவிட்டு மருந்தையும் உண்டுவிட்டுப் படுக்கிறன். உணவு உண்ட பிறகு மீண்டும் வயிற்று நோ ஆரம்பிக்கிறது. எதுக்கு மூன்று வாரங்கள் வரை பொறுக்க வேணும். கான்சர் இருக்கோ இல்லையோ எண்டுறது வேறை என்று எண்ணியபடி இரவு பதினோரு மணிபோல மனுஷனை எழுப்பி எனக்கு ஏலாமல் இருக்கு என்று சொல்ல அவரும் தயாராகி வருகிறார். சாமமென்பதனால் வீதிகள் வெறிச்சோடி இருக்க ஐந்தே நிமிடத்தில் மருத்துவமனைக்குச் சென்று இருவரும் A&E இக்குப் போகிறோம். கோவிட் என்பதனால் உள்ளே எல்லோரையும் அனுமதிக்கமுடியாது என்று வாசலில் கூற, "எதுக்கும் நீங்கள் வீட்டுக்குப் போங்கோ. எப்பிடியும் இரண்டு மணிநேரமாவது செல்லும். முடிஞ்சதும் போன் செய்கிறேன் என்றவுடன் கணவர் திரும்பிச் செல்ல நான் சென்று என் விபரங்களைக் கூறிவிட்டு வரவேற்பில் அமர்ந்துகொள்கிறேன். சாமம் என்றாலும் 20, முப்பதுபேர் இருக்கும் A & E  இல் ஐந்து பேர் மட்டுமே இருக்கின்றனர்.

நான் போனை மட்டும் வைத்திருந்தாலும் அதை வெளியே எடுக்காமல் சும்மா இருக்கிறன். ஒரு அரை மணி நேரத்திலேயே என்னைக் கூப்பிடுகிறார்கள். நான் நடந்ததைக் கூறுகிறேன். முதலில் இரத்தப்பரிசோதனை செய்து பார்ப்போம் என்று கூறி ஆறு டியூப்பில் இரத்தம் எடுத்துவிட்டு என்னை அங்குள்ள ஒரு தற்காலிக இடத்தில் அமர வைக்கிறார்கள். பரிசோதனை முடிவு வர இரண்டுமணிநேரம் ஆகும் என்றுவிட்டுச் செல்கின்றனர். இரவு என்பதனாலும் அதிகப்பேர் இல்லை என்பதனாலும் எனக்கு ஒரு பயம் வருது. போனை எடுத்து முகநூலைப் பார்த்து நேரத்தைப் போக்குவோம் என்றால் உள்ளே போன் வேலை செய்யுதில்லை. கையைத் தலைக்கு முண்டு கொடுத்தபடி எவ்வளவு நேரம் தூங்கினேனோ தெரியாது. யாரோ வந்து எழுப்புகின்றனர்.

ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் பெண்ணும் நிற்கின்றனர். என்னை வா என்று கூட்டிக்கொண்டு சென்று தாங்கள் படித்துக்கொண்டு இருக்கும் மருத்துவர்கள். உன்னை செக் பண்ணலாமா என்று கேட்க ஓம் என்று தலையாட்டுறன். அங்கு சென்றதும் என் நோய் பற்றி அவர்கள் கேள்விகளுக்கு பதில் கூறவே எனக்கு ஏலாமல் இருக்கு. நான் இதில் படுக்கட்டா என்று கேட்க ஓம் என்கின்றனர். நான் படுத்தபடி அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறேன். இன்னொருதடவை இரத்தம் எடுக்கப்போகிறோம் என்கின்றனர். ஏற்கனவே எடுத்ததே. அதன் முடிவு என்ன என்று கேட்க, அதை வேறு ஒரு வைத்தியர் வந்து கூறுவார். அவர் இப்ப பிசியாக இருக்கிறார். இது நாங்கள் வேறு பகுதி என்கின்றனர்.

இவர்கள் வேறு ஆறு டியூப்பில் எடுக்க, என் உருவத்தைப் பார்த்திட்டு எவ்வளவும் எடுக்கலாம் என்று எண்ணுகின்றனரோ என மனதில் எண்ணியபடி இருக்க, நீ இங்கேயே படுத்திரு. மற்ற வைத்தியர் வருவார் என்றபடி போய்விட நான் படுத்து நல்ல நித்திரை கொண்டிட்டன். யாரோ என்னைத் தொட்டு உலுப்பக் கண் விழிக்கிறேன். ஒரு தாதி என்னை எழுப்புகிறார். எழும்பு  உன்னை வேறு இடத்துக்கு அழைத்துப் போகிறேன் என்கிறார். நான் கீழே இறங்க " என்ன ஒன்றுமே விரிக்கவில்லை. இதிலா படுத்திருந்தாய் என்கிறார். அப்போதுதான் பார்த்தால் அது தற்காலிகமாக நோயாளிகளைப் பார்க்குமிடம். வெள்ளைத்தாள்களைத்தான் இழுத்து விரிப்பார்கள். அவர்களும் விரிக்கவில்லை. நானும் அதைக்கவனிக்காமல் தூங்கிவிட்டேன். எத்தனை நோயாளிகள் இதில் வந்து இருந்து, படுத்துச் சென்றார்களோ??? ஆருக்கு கொரோனா இருந்ததோ என்ற எண்ணம் மனதில் ஓடினாலும் அதைப் பற்றி மனம் பெரிதாகக் கவலை கொள்ளாது அவரைப் பின்தொடர்ந்து. இத்தனைக்கும் வின்டர் யக்கற் போட்டபடிதான் எல்லாம். 

அடுத்த பகுதிக்குள் போனால் அது அறைபோல் இருந்தாலும் நோயாளிகள் தங்கும் நிரந்தர அறையில்லை என்று தெரிகிறது. அங்கே ஒடுக்கமான கட்டில்களைப் போட்டு திரைச் சீலைகள் போட்டு மறைத்திருந்தார்கள். இங்கே இரு. மருத்துவர் வந்து பார்ப்பார் என்றுவிட்டுப் போக எத்தனிக்க, எனக்குச் சரியான தாகமாக இருக்கு குடிக்க ஏதும் தேநீர் அல்லது கோப்பி தருகிறாயா என்கிறேன். எனக்கே அப்படிக் கேட்டது ஒருமாதிரி இருந்தாலும் நான்கு ஐந்து மணிநேரம் எதுவும் குடிக்காமல் இருந்தது மட்டுமன்றி அங்கே குளிரவும் ஆரம்பித்துவிட்டது. தண்ணீர் கொண்டு வரவா என்கிறார் அந்தப் பெண். எனக்கு குளிர்கிறது சூடாக எதுவும் குடித்தால் நல்லது என்கிறேன்.

சரி என்றுவிட்டுப் போன பெண்ணை அதன்பின் காணவே இல்லை. கட்டிலில் படுத்தால் திரும்பிப் படுக்க முடியாத சிறிய கட்டில். இங்கு சிலவேளை போன் வேலை செய்கிறதா என்று பாப்போம் என்று போனை எடுத்தால் கணவன் பிள்ளைகளிடம் இருந்து பல போன். சத்தம் கேட்காதவாறு நிறுத்திவைத்திருந்தபடியால்  எனக்குக்கேட்கவில்லை. காலை நான்கு மணி. போன் செய்து விபரத்தைக் கூறுகிறேன். எனக்கு மாற்று ஆடைகள் மற்றும் முக்கியமான பொருட்கள் அதைவிட முக்கியமான போன் சார்ஜர் எல்லாம் கொண்டுவரும்படி கூறுகிறேன்.

மீண்டும் படுத்தாலும் நித்திரையில் கீழே விழுந்துவிடுவேனோ என்ற எண்ண த்தில் தூக்கம் வரவில்லை. முழங்கையில் உள்ளே ஊசி ஒன்றை நிரந்தரமாக ஏற்றிவிட்டிருந்தபடியால் கையையும் வசதியாக வைத்துக்கொள்ள முடியவில்லை. தாதிகள் அங்கும் இங்கும் போய்வந்தாலும் என்னை யாரும் எதுவும் கேட்கவில்லை. காலை ஆறு மணியாகிவிட வேறு புதிய தாதியர்கள் வந்திருப்பதைக் கவனிக்கிறேன். ஒருவரை மறித்தது எனக்குத் தாமாக இருக்கு தேநீர் ஒன்று தர முடியுமா என்கிறேன் மீண்டும். பொறு உன் பைலைப் பார்க்கிறேன் என்றவர், உனக்கு ஸ்கானிங் இருக்கிறபடியால் நீ எதுவும் உண்ணவோ குடிக்கவோ கூடாது என்றுவிட்டுப் போய்விட மீண்டும் போனை எடுத்தால் மகளின் இலக்கத்திலிருந்து எட்டு போன் அழைப்புகள் வந்திருக்க மீண்டும் அவளுக்குப் போன் செய்கிறேன். அம்மா நானும் அப்பாவும் உங்கள் பொருட்களையும் கொண்டு வந்திருந்தோம். அவள் உங்கள் பெயரே அங்கு இல்லை என்கிறாள். ஒருவாறு கதைத்து உங்கள் பாக்கையும் விபரங்களையும் கொடுத்துவிட்டு இப்பதான் வீட்டை வந்தோம் என்கிறாள். 

சரி என்று போனை வைத்துவிட்டு அங்கே நின்ற தாதியை அழைத்து விபரம் சொல்லிக்கொண்டிருக்க இன்னொரு பெண் எனது பொருட்கள் அடங்கிய பையைக் கொண்டு வருகிறார். இந்தக்கட்டிலில் படுக்க முடியாமல் இருக்கு என்கிறேன். இங்கு கட்டில்கள் எல்லாம் நிரம்பியிருக்கு. அதனால் நடக்கவே ஏலாதவர்களுக்குத்தான் முதலிடம். உனக்கு ஸ்கானிங்க் எல்லாம் முடிந்த பிறகுதான் அதுபற்றிமுடிவு செய்வார்கள் என்றுவிட்டுப் போய்விட நான் தூங்காமல் அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்க்கிறேன். 

 

தொடரும் இன்னும்........

  

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க மிகவும் கவலையாக இருக்குது சகோதரி, ஆனாலும் எழுத்தில் உங்களின் வழமையான லொள்ளுக்கு குறைவில்லாமலும் இருக்கு.....எதுவாய் இருந்தாலும் நீங்கள் சீக்கிரம் குணமாகி சந்தோசமாக குடும்பத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்களை கன்டதில் மிக்க மகிழ்ச்சி.இப்ப குணம் அடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நலம்  பெற வேண்டுகின்றேன்

இப்படியான உறவுகளுடனான கதைகளில்  கூட தொடரும் என்று  எழுதுவதை தவிர்க்கவும்:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் குணம் பெற வேண்டுகிறேன்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமேயை கண்டதில் மிக்க மகிழ்ச்சி, எப்படி இருக்கின்றீர்கள், உங்களை காணாமல் யாழ்களம் கழையிழந்துவிட்டது

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நலமுடன் மீண்டு வர வேண்டுதல்கள் அம்மணி. தைரியமுடன் இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கண்டதில் சந்தோசம்.நலமோடு இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தொடரும் கண்டு பிடித்த ஆள் யாரோ தெரிய வில்லை.சரி தொடருங்கோ...

நான் உங்களை பல வழிகளில் தேடினேன் ஒன்றுக்கும் பதில் இல்லை..உண்மையாக எங்கயோ ஊர் சுற்றி பார்க்க போய் விட்டீர்கள் என்று தான் நினைத்தேன்..எது எப்படி இருந்தாலும் மீண்டும் கண்டது சந்தோசம்.. மறுபடியும் சொல்கிறேன் கண்டதையும் ஆக்கி சாப்பிடாதீங்கோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நலமடைய வேண்டுகிறேன் 
இப்போ சுகமாக இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்கா சுகமாகியிருப்பீர்கள் என நம்புகிறேன், நீங்கள் பல்லாண்டு நலமோடு வாழுங்கள்.

Link to comment
Share on other sites

சுமே,  மீண்டும்  உங்களைக் கண்டதும்  மகிழ்ச்சியாக இருக்கின்றது.  நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். 

Link to comment
Share on other sites

உங்களை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி.வாசிக்கும்போதே கண் பனிக்கிறது.இப்போது சுகமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களிற்காக நான் இறைவனை பிரார்த்த்திக்கிறேன்..

Link to comment
Share on other sites

கடவுளின் அருளால்  இப்போது சுகமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களிற்காக நான் இறைவனை பிரார்த்த்திக்கிறேன்..

Link to comment
Share on other sites

சுமே அக்கா உசாராக எழுதுவதால் இப்போது குணமடைந்து விட்டீர்கள் என்ன நினைக்கிறேன். மகிழ்ச்சி. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே நீங்கள் பயந்தது போல் இல்லாமல் பூரண சுகமடைந்து யாழிற்கு வந்து உங்கள் அனுபவங்களைப் பதிர்ந்து உள்ளீர்களென நம்புகின்றேன். நலம் வாழ வாழ்த்துக்கள். இறைவனுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அக்காவை காண்பதில் மகிழ்ச்சி  
நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுமே அக்கா,
வழக்கமான பாணியில் ஏதாவது குண்டக்கா எழுதி இருப்பீர்கள் என்று தான் வாசிக்கத்  தொடங்கினேன் ...
2, 3 பந்தி கடந்ததும் மனது சஞ்சலப்பட , கடவுளே இவை யாவும் கற்பனை என்றே முடியவேண்டும் என்ற வேண்டுதலோடு மிகுதியையும் வாசிக்கிறேன்...
உங்கள் நலனிட்கு இறைவனை வேண்டுகிறேன். 🙏🥺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ அன்டி மீண்டும் கண்டது மகிழ்ச்சி 

நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே ஆன்ரியை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. கஷ்டங்களில் இருந்து மீண்டுவிட்டார் என்று நினைக்கின்றேன். டொக்டரின் கதை மிகவும் பரிச்சயமாக இருக்கின்றது!

Link to comment
Share on other sites

வணக்கம். மற்றய உறவுகள் எழுதியதைப் போலவே  உங்களை தாக்கிய நோயிலிருந்து நீங்கள் மீண்டுவிட்டீர்கள் என்ற நம்பிக்கை உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. வாழ்த்துக்கள். உடல் நலத்தை கவனித்து கொள்ளுங்கள். 🥦🍒🍅🥒🍊🍏

Link to comment
Share on other sites

நோயில் இருந்து சுகமாகி மீண்டும் வந்தது மகிழ்ச்சி சுமோக்கா.

சுகத்தை கவனித்துக்கொள்ளுங்கள். இந்த வருடம் ஏன் தான் வந்ததோ என்று நினைக்குமளவிற்கு கவலையான செய்திகள் தான் அதிகம் வருகின்றது :(

எல்லோரும் நலத்துடன் வாழ இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரி,

உங்களுக்கு முன் நோயாவது பேயாவது!

மீண்டு வந்தது, மீண்டும் கண்டது சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

ஆனாலும் எழுத்தில் உங்களின் வழமையான லொள்ளுக்கு குறைவில்லாமலும் இருக்கு....

அது இரத்தத்திலை ஊறினது....கொத்தாரும் லொள்ளுக்கு குறைஞ்ச ஆள் இல்லைப்போலை கிடக்கு 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை எழுதியிருக்கும் உறவுகள் சுவி அண்ணா, சுவைப்பிரியன்,விசுகு அண்ணா, புரட்சிகரத் தமிழ்த் தேசியன், உடையார், ராசவன்னியன் அண்ணா, குமாரசாமி,யாயினி,மருதங்கேணி ஏராளன், ஜெகதா துரை, நிகே, அபராஜிதன்,இணையவன், கண்மணி அக்கா, தனிக்காட்டு ராஜா,சசிவண்ணம், வாதவூரன், கிருபன், துல் ப்பன், தமிழினி,கோசான் ஆகியோர்க்கு மிக்க நன்றி. நான் நோயிலிருந்து மீண்டுவிட்டேன். 

Just now, குமாரசாமி said:

அது இரத்தத்திலை ஊறினது....கொத்தாரும் லொள்ளுக்கு குறைஞ்ச ஆள் இல்லைப்போலை கிடக்கு 😁

அத்தாரை லொள்ளுக்குக் குறைவில்லை. ஆனாலும் சிலநேரம் எரிச்சல் தான் வரும்.🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.