Jump to content

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 3 பேர் கைது - அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 3 பேர் கைது - அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

6 ஜனவரி 2021, 04:17 GMT
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிதாக கைது செய்யப்பட்டவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான அருளானந்தம்
 
படக்குறிப்பு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிதாக கைது செய்யப்பட்டவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான அருளானந்தம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பொள்ளாசியை சேர்ந்த மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், இவர்கள் மூவரையும் ஜனவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து, காணொளி எடுத்து பணம் பறித்ததாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

இதனையடுத்து சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் என நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றச்சம்பவத்தில் தேடப்பட்டு வந்த மணிவண்ணன் என்பவரும் சரணடைந்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

கடந்த மார்ச் மாதம் கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனால், ஒரு வருடத்திற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சிறையில் இருக்கும் நிலை உருவானது.

இந்த நிலையில், திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜனின் பெற்றோர்கள், குண்டர் சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இதனையடுத்து இருவர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு

அதேநேரத்தில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி இடமிருந்து சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில், பொள்ளாச்சியை சேர்ந்த ஹேரேன் பால் (29 ), பாபு (எ) பைக் பாபு (27) மற்றும் அருளானந்தம் (34 ) ஆகியோர் சிபிஐ போலீசாரால் செவ்வாய்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அருளானந்தம் என்பவர் அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணியை சேர்ந்தவர் என்றும், கைது செய்யப்பட்டவர்கள் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு

பட மூலாதாரம், GETTY IMAGES

அதிமுகவில் இருந்து நீக்கம் 

இந்த நிலையில், கட்சியின் கொள்கை, குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் பொள்ளாச்சி நகர மாணவர் அணிச் செயலாளர் பதவியிலியிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கே. அருளானந்தம் நீக்கி வைக்கப்படுவதாக அதிமுகவின் தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், அவர் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாகவும், கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அதிமுகவை சேர்ந்தவர்கள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-55555803

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.

 
இதுகுறித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கும்பலால் பாதிக்கப்பட்ட பொள்ளாச்சியை சேர்ந்த மாணவி ஒருவர் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பொள்ளாச்சி மாக்கினாம் பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இதுபோன்று பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோவாக எடுத்து பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை உள்ளூர் போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி விசாரித்தால் உண்மையான குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து தமிழக அரசு அந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடங்கினர். முதலில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீடு மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட மற்றவர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அங்கிருந்து லேப்-டாப், செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

அப்போது அதில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் பதிவாகி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே இந்த வழக்கில் இவர்கள் மட்டும் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகித்தனர்.

எனவே கைப்பற்றப்பட்ட செல்போன்களில் அவர்கள் யார்? யாருடன் பேசினர் என்ற விவரங்களை சேகரித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது சம்பவம் நடந்த அன்று மேலும் 3 பேரின் செல்போன் சிக்னல்கள் அந்த இடத்தில் இருப்பதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

செல்போன் நம்பரை கொண்டு விசாரித்த போது அவர்கள் பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த அ.தி.மு.க நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம்(34) மற்றும் பாபு என்கிற மைக் பாபு(27), ஆச்சிப்பட்டியை சேர்ந்த ஹெரன் பால்(29) என்பதும், இவர்கள் திருநாவுக்கரசின் நெருங்கிய நண்பர்கள் என்பதும் தெரியவந்தது.

எனவே இவர்கள் 3 பேருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

அதற்காக நேற்று மாலை பொள்ளாச்சிக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அருளானந்தம், பாபு, ஹெரன்பால் உள்ளிட்ட 3 பேரையும் பிடித்து கோவைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முடிவில் இவர்களுக்கும், இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்கள் 3 பேரையும் இன்று காலை கைது செய்தனர்.

பின்னர் அவர்களை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் போலீசார் 3 பேரையும் கோவை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரில் பாபு, ஹெரன் பால் ஆகியோர் ஏற்கனவே அடிதடி வழக்கில் கைதானவர்கள்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2021/01/06095850/2234258/Tamil-News-Pollachi-abuse-case-3-more-arrested.vpf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.