-
Tell a friend
-
Similar Content
-
By மல்லிகை வாசம்
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பில் அருமையான கிராமிய மணம் கமழும் ஓர் திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் P.விருமாண்டி. ஏற்கெனவே நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை இது. இவ்வாறான பல சம்பவங்கள் நிஜமாகவே நிகழ்ந்திருந்தாலும், இத்திரைப்படத்தின் மையக்கருவை ஒத்த கதையினை வேறெந்தத் திரைப்படத்திலும் இதுவரை நான் பார்த்ததில்லை. தமிழகத்தில் கிராமத்து மக்களின் கடினமான வாழ்க்கைச் சூழலையும், அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விதமான சவால்களையும் இத்திரைப்படம் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
கலகலப்பும், கலக்கமும் நிறைந்த காட்சிகள் மாறிமாறி இத்திரைப்படத்தின் முதற்பாதியை சற்று மசாலாத்தனத்துடன் நிறைத்திருந்தாலும் ரசிக்கும்படியாகவே இருந்தது. பரபரப்பும், சோக உணர்வும் நிறைந்த இரண்டாம் பாதி நம்மைப் படத்துடன் இரண்டறக் கலக்க வைத்தது. இதன் இறுதிக் காட்சிகள் மனதைப் பிழிந்தெடுப்பனவாகவும், நிறைவுக் காட்சி நம்மை அதிர்ச்சியில் உறைய வைப்பதாகவும் அமைந்தன. யதார்த்தத்தை மீறிய ஒரு சில காட்சிகள் இருந்தாலும், மொத்தத்தில் இத்திரைப்படத்தின் தரத்தினை அவை குறைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
இப்படியான நல்ல திரைக்கதைக்கு இசையமைப்பாளர் ஜிப்ரனின் பின்னணி இசை மிக்க பலமாக இருந்தது. கிராமிய வாசத்தை அள்ளித் தெளிப்பதாகவும், காட்சிகளுக்குக் காட்சி நம்மை உள்ளே இழுத்து மனமொன்றி ரசிக்க வைப்பதாகவும் அது இருந்தது. படத்தின் ஓட்டத்துக்கேற்ப இத்திரைப்படத்தின் பாடல்கள் அமைந்திருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லும்படியாக என்னைக் கவரவில்லை. வைரமுத்துவின் வரிகளும், இசையும் அருமையாக அ மைந்திருந்தாலும் ஏதோ ஒரு குறை தெரிந்தது. (புதிய பாடல்களில் எனக்கு ஈடுபாடு குறைந்தமையும், படத்தில் கேட்டதைத் தவிர மற்றப்படி அவற்றைக் கேட்காதமையும் காரணங்களாக இருக்கலாம்.)
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி எனக்குப் பிடித்தமான சினிமா ஜோடிகளில் முக்கியமானதாகும். இத்திரைப்படத்துக்கு இவர்களும் ஓர் கூடுதல் பலம். ஐஸ்வர்யா ராஜேஷ் தான் அதிகமான காட்சிகளில் திரையை நிறைத்துத் திறம்பட நடித்திருக்கிறார்; விஜய் சேதுபதி படத்தின் முதற்பகுதியில் மட்டுமே தோன்றினாலும், நிறைவுக் காட்சிவரை அவர் நினைப்பு எம் மனங்களை நிறைத்தது அவரது நிறைவான நடிப்பும், இயக்குநரின் சாமர்த்தியமும் தான். அதை நான் இங்கு விபரிப்பதை விட நீங்களே திரைப்படத்தில் பார்த்து உணர்வது சிறப்பானதாக இருக்கும்.
என்னைப் பொறுத்தவரை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு 'பொம்பிளை விஜய் சேதுபதி' என்றே கூறுவேன்! மாறுபட்ட கதாபாத்திரங்களைத் துணிச்சலாக ஏற்பதிலும் சரி, அவற்றில் வாழ்ந்து காட்டுவதிலும் சரி இவர்கள் இருவருமே இன்று முன்னிலையில் உள்ளனர் என்பது என் கருத்து. இதே போக்கை இவர்கள் தொடர்ந்தும் பல ஆண்டுகளுக்குக் கடைப்பிடித்தால் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு நடிகர் திலகமும், நடிகையர் திலகமும் கிடைப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்! ஐஸ்வர்யா ராஜேஷின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்றான இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளிவர முடியாமல் OTTயிலேயே வெளியாக வேண்டிய சூழல் கொறோனா தந்த சாபம். இல்லாவிட்டால் இன்னும் பலரால் அவரது நடிப்பும், இத்திரைப்படமும் கொண்டாடப்பட்டிருக்கும்.
இத்திரைப்படத்தில் நடித்த ஏனைய நடிகர், நடிகையர்களும் தத்தம் கதாபாத்திரங்களில் மிகச்சிறப்பாக வாழ்ந்துள்ளனர் என்பது மிகையல்ல. இவை தவிர இப்படத்தின் ஒளிப்பதிவாளர் N.K.ஏகாம்பரம் உட்பட்ட ஏனைய தொழிநுட்பக் கலைஞர்களின் உழைப்பும் சேர்ந்து தரமானதொரு கிராமியத் திரைப்படத்தை நமக்கெல்லாம் தந்துள்ளது.
🎬'க/பெ ரணசிங்கம்' மனதில் பெரும் ரணம் தரும்.🎬
குறிப்பு: இத்திரைப்படத்தை நீங்கள் இரவில் தூங்கச் செல்லமுன் பார்க்கவேண்டாம். நீங்கள் ஓய்வெடுக்கும் நாளுக்கு முதன்நாள் மாலையில் பார்த்துவிட்டு, மன மாறுதலுக்காக இனிய இசையைக் கேட்டோ, வெளியே போய் சற்று நேரம் நடந்துவிட்டோ வந்து உங்கள் பூஜை அறையில் பிரார்த்தனை செய்துவிட்டு உங்கள் மற்றய அலுவல்களைப் பார்க்கலாம்! 😀குடும்பத்துடன் பார்த்தல் நலம். அருவருப்பான, வன்முறையான காட்சிகள் என்று பெரிதாக இல்லை; எனினும் ஆழ்மனதை ஊடுருவக் கூடிய சோகமான ஒரு திரைப்படம் எனலாம்.
-
By மல்லிகை வாசம்
நீண்ட காலத்தின் பின்னர் நேர்த்தியான நகைச்சுவை கலந்த ஓர் காதல் திரைப்படம் பார்த்த உணர்வு. நகைச்சுவைக் காட்சிகள் - குறிப்பாக முதற் பாதியில், நம்மை மறந்து சிரிக்க வைத்ததுடன் படத்தின் ஓட்டத்தைப் பாதிக்காமல் இயல்பாக இழையோடியுள்ளன; பிரதான காமெடி நடிகர்கள் இருந்திருந்தாலும் இவ்வாறு சிறப்பாக அமைந்திருக்குமா என்பது சந்தேகமே. உதாரணத்துக்கு, Toiletery factoryல் ஹீரோ படும் அவஸ்தைகள் நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கின்றன. கூடவே, படத்தின் பின் பாதியில் வரும் சில காட்சிகள், வசனங்கள் முன்பாதியை நினைவூட்டியும், ஹீரோ அவ்வப்போது சொல்லும் ஒரே வசனம் வித்தியாசமான கோணங்களில் நினைத்தும் சிரிக்க வைத்த விந்தை இயக்குனரின் சாமர்த்தியமே. அந்த அளவுக்கு நெஞ்சைக் கிள்ளிச் சிரிக்கவும் கூடவே சிந்திக்கவும் வைத்த காட்சிகள் படத்தின் ஒரு பலம்.
மறுபுறம் காதல், உணர்வுபூர்வமான காட்சிகளும் ஏராளம் உண்டு; குறிப்பாக கௌதம் மேனனின் படத்திற்கான auditionக்காக ஹீரோ அஷோக்செல்வன் நடித்துக் காட்டுவதாக அமைந்த ஒரு close-up காட்சி படக்காட்சியில் மட்டுமல்ல தியேட்டரிலும் கைதட்டல் வாங்குகிறது. இன்னும், மழையில் நனைந்தபடியான காதல் காட்சிகள் அவ்வப்போது வந்தாலும், ஒவ்வொன்றும் இயற்கைக் கவிதை!
படத்தின் வலுவான கதைக்கு, அதைச் சொன்ன விதம் மேலும் வலுச்சேர்க்கிறது. 12B திரைப்படப் பாணியிலான இரு வேறு தேர்வுகளை எடுத்திருந்தால் வரும் விளைவுகளை நேர்த்தியான காட்சிகளால் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளனர். (12B க்கும் இப்படத்துக்கும் கதையளவில் தொடர்பு இல்லை.) நடைமுறைக்கு அப்பாற்பட்ட கற்பனையில் வரும் காட்சிகள் தான் இப்படத்தின் போக்கில் திருப்புமுனையாக அமைந்தாலும், உண்மையிலேயே புதுமையாகவும், கதைக்கு இக்காட்சிகள் தேவை என்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் படி அமைத்ததும் இயக்குனரின் வெற்றியே. இரு வேறு கோணங்களில் உணர்வோட்டங்களைக் காட்சிப்படுத்திய விதம் காதலர்களுக்கு / இளைய தம்பதிகளுக்கு ஓர் செய்முறை விளக்கம் போன்றது. ரசிக மனங்களை மெதுவாகத் தைத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் - முள்ளினால் அல்ல, வெட்டுக் காயத்தை மாற்றத் தையல் போடுவது போன்ற பக்குவத்துடன்!
படத்தின் ஹீரோ ‘தெகிடி’ படப் புகழ் அஷோக்செல்வன்; முதற் படத்திலேயே எம் மனம் கவர்ந்தவர். அவரைப் படங்களில் காணவில்லையே என்று யோசித்ததுண்டு. படத்தில் வருவது போல அவருக்கும் இப்படம் ஒரு second chance; வாய்ப்பை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார். காதல், சோகம், கலகலப்புக் காமெடி என உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்திய காட்சிகள் பல. சில சாதாரண வசனங்களை, காட்சிகளைக்கூட இவரது உடல் மொழியாலும், வசனம் பேசும் முறையாலும் மிகச் சிறப்பாக்குகிறார். என்னைப் பொறுத்தவரை, அஜித்துக்கு அடுத்தபடியாக அம்சமான முகவெட்டு, உடல்வாகுள்ள இளம் நடிகர்.
ஒரு கதாநாயகி ரித்திகாசிங்கின் ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்திருந்தேன். இப்படத்திலும் அவருக்கு வலுவான பாத்திரம்; இங்கும் கலக்கியிருக்கிறார். அவரது முகவெட்டும், கண்களும் உணர்வுகளைத் தனித்துவமாக வெளிப்படுத்தப் பெரிதும் பலம். நிச்சயமாக தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான ஒரு கதாநாயகி தான்! துணிச்சலான, புத்திசாலியான, நகர்ப்புற நாயகி வேடங்களுக்கு இயல்பாகப் பொருந்துகிறார்.
இன்னொரு கதாநாயகி வாணி போஜன் தொலைக்காட்சி நாடக நடிகையாம்; ஆனால் அவரது இயல்பான நடிப்பு மனதைக் கவர்ந்தது.
ரித்திகா சிங்கிற்கு இணையாகக் கலக்கியுள்ளார்.
அடுத்தடுத்த படங்களில் அக்கா, தங்கை வேடம் கொடுக்காமல் இருந்தால் சரி!
இத்திரைப்படத்தில் எனக்கு இன்ப அதிர்ச்சியாக விஜய் சேதுபதியின் நீண்ட cameo role அமைந்தது. திலக்குடன் சேர்ந்து அஷோக்செல்வனைக் கேள்விகேட்டுக் கலாய்க்கும் காட்சிகள் கலகலப்பானவை. மற்றும்படி அவருக்கு இப்படத்தில் அவ்வளவாக வேலை இல்லை.
எம்.எஸ்.பாஸ்கர் குணச்சித்திர வேடத்திலும், ஷா ரா வழமையான திருட்டு முழிகளுடன் நகைச்சுவை வேடத்திலும் ஜொலிக்கின்றனர்.
இசை: மென்மையான காதல் கதைக்கு ஏற்ற ஆர்ப்பாட்டம் இல்லாத பின்னணி இசை meditation music கேட்கும் ஒரு உணர்வைத் தருகிறது. கூடவே, அவ்வப்போது வரும் திகிலான காட்சிகளில் நம்முள்ளும் திகில் உணர்வை ஏற்படுத்துகிறது. திரைக்கதையின் ஓட்டத்துடன் ஒட்டும் வகையில் பாடற்காட்சிகள் அமைந்துள்ளன. சித் ஶ்ரீராமின் பாடல்கள் பொதுவாக அவரது ‘ ஐ ‘ படப் பாடலான ‘என்னோடு நீயிருந்தால்’ பாடற்காட்சியில் விக்ரம் beast ஆக வருவதை நினைவுபடுத்தித் தொலைக்கும். அதனால் அக்குரல் மீது ஒருவித வெறுப்பு இருந்தது. ஆனால், இப்படத்தில் இவ்வாறு தோன்றாது சகிக்கும்படியாக இருந்தது நிம்மதியாக இருந்தது!
சுருக்கமாகக் கூறினால் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் காதலர் தின விருந்தாக ரசிகர்களுக்கு அமையும் என்பது நிச்சயம்.
இங்கே முழுக்கதையையும் எழுதிப் படம் பார்க்கும் அனுபவத்தை நான் குழப்பவிரும்பவில்லை. பார்த்தால் புரியும் - பல்வேறு கோணங்களில் பார்த்து ரசிக்கலாம்; அந்த அளவுக்கு இப்படத்தின் கதையில் நிறைய ‘layers’ உண்டு.
நகர்ப்புற ரசிகர்களுக்கு மட்டுமே பிடிக்கக்கூடிய படம், சற்றே இழுவலான நிறைவுப்பகுதி ஆகியவற்றை இத்திரைப்படத்தின் குறைகளாகச் சொல்லலாம்.
இவ்வாறான தரமான காதல் படங்கள் தற்காலத்தில் அபூர்வம், உண்மைக் காதலைப் போலத் தான்! எனவே, இப்படம் காதலர்களை/பிரிந்த தம்பதிகளை மனம் மாறச் செய்து மீண்டும் சேர வைக்குமா என்ற கேள்விக்கு ‘ இது அவர்களுடைய காதலின் உண்மைத் தன்மையைப் பொறுத்தது; படம் பற்றிய அவர்களின் புரிதலையும் பொறுத்தது. இன்னும் அவர்கள் பார்க்கவிருக்கும் குப்பைப்படங்களை, ரிவி சீரியல்களையும் பொறுத்தது ‘ என்பதே எனது கருத்தாகும்!
இப்படியொரு படம் இனி எப்ப வரும்? ஓ மை கடவுளே!
-
By மல்லிகை வாசம்
இன்றைய தகவல் தொழிநுட்ப உலகில் பொழுதுபோக்கு ஊடகங்கள் மலிந்து கிடக்கின்றன. வேலை / வகுப்பு முடிந்து வீடு வந்து தான் தொலைக்காட்சியில் அல்லது கணினியில் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க வேண்டும் என்ற நிலை மாறி யூடியூப் (YouTube), முகநூல் (Facebook) போன்ற சமூக ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சியாலும், ஸ்மார்ட்போன்களின் (smartphones) உதவியுடனும் நாம் எங்கு சென்றாலும் எந்த நேரத்திலும் விரும்பிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கக் கூடியதாக இருக்கிறது. கடைக்காரர் கொத்துரொட்டி போடும் ஓர் பத்து நிமிட இடைவெளியில் வடிவேலுவின் பழைய பகிடி ஒன்றை யாழில் கள உறவு ஒருவர் பகிர்ந்ததை கைத்தொலைபேசியில் பார்த்துச் சிரிப்பதை ஓரிரு தசாப்தங்களுக்கு முன்னர் நினைத்திருப்போமா?!
இவ்வாறு கேளிக்கை ஊடகங்கள் நம் வாழ்வுடன் இரண்டறக் கலந்த இக்காலத்தில், நாம் முன்பொருகாலத்தில் பொறுமையாக நல்லதோர் திரைப்படத்தை நண்பர்கள், உறவினருடன் கண்டு ரசித்த அனுபவத்தை நம்மில் பலர் மறந்திருப்போம். தற்போதும் கூட சினிமாவுக்குச் சென்றோ அல்லது வீட்டிலிருந்தோ திரைப்படங்களை கண்டு களிக்கிறோமே என்கிறீர்களா? இந்தச் சமூகவலை உலகில் நாம் திரைப்படங்களை ரசிக்கும் அனுபவ உணர்வும் மாறிவிட்டது. உதாரணத்துக்கு நாகேஷ், கவுண்டமணி - செந்தில், வடிவேலு, விவேக் போன்ற சிறந்த நகைச்சுவையாளர்களை ரசித்த நாம் இன்றைய திரைப்படங்களில் வரும் மொக்கையான நகைச்சுவைகளை வேறு வழியின்றி ரசிக்கப்பழகிவிட்டோம். அழுத்தங்கள் நிறைந்த, எந்திரத்தனமான வாழ்க்கைச்சூழல் எதற்கெடுத்தாலும் சிரிக்கப் பழகவேண்டும் என்று கற்றுக்கொடுத்துவிட்டதோ தெரியவில்லை, இன்றைய காலத்தில் இது தான் 'Trend' என்கிறார்கள்.
ஆக, பொழுதுபோக்கிற்குப் பல தெரிவுகள் உள்ள (அத்துடன் குப்பைகளும் நிறைந்த) இன்றைய காலத்தில் நாம் இளைப்பாறி சிறந்த தமிழ்த் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைப் பெறுவது எப்படி? இதற்கு சிறந்த திரைப்படங்களைத் தெரிந்தெடுக்கும் திறன் மட்டுமல்ல பல சந்தர்ப்பங்களில் ஒரு திரைப்பத்தில் நாம் எவற்றை எதிர்பார்க்கின்றோம் / எதிர்பார்க்கலாம் என்ற தெளிவும் நமக்குத் தேவை. இது பற்றி கீழ்வரும் பகுதிகள் விளக்கும்:
படத் தெரிவு
புதிதாக வெளியாகும் திரைப்படங்களைத் திரையில் பார்க்கும் முன்னர் அது வெளியானவுடன் வரும் விமர்சனங்களை முதலில் படிப்பேன் / யூடூபில் (YouTube) பார்ப்பேன். நண்பர்களின் முகநூல் நிலைத்தகவல்கள், செவி வழியான கருத்துக்களைக் கேட்டறிந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட அபிப்பிராயம். ரஜினி, விஜய், அஜித் என அவர்களின் அபிமான நடிகர்களின், அல்லது சங்கர், மணிரத்னம் என தம் மனம் கவர்ந்த இயக்குனர்களின் படத்தை அநேகமாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள் தானே! (இதையே பிடிக்காத திரைக்கலைஞர்களின் திரைப்படமென்றால் எதிராகவும் சொல்வார்கள்).
எனவே, இவ்வாறு பிரபலங்களின் திரைப்படம் பற்றிய அவர்களின் விமர்சனத்தை மூளையின் ஒரு பகுதியில் போட்டுவிட்டு, யூடூபில் நமது 'தலை' 'நீலச்சட்டை' மாறனின் (Tamil Talkies) விமர்சனத்தை பார்ப்பேன். அவரது விமர்சனம் பார்ப்பதே எனக்கு ஒரு கேளிக்கை தான்! ஆனால், அவர் படத்தின் கதையையும் சொல்வார். எனவே அப்பகுதிகள் நீங்கலாக முழு விமர்சனத்தையும் கேட்பேன். நான் பார்த்ததில் மிகவும் நேர்மையான விமர்சனங்கள் என்று மாறனுடையதை அடித்துச் சொல்வேன். அவர் 'வழக்கம் போல ஹீரோ....., 'வழக்கம் போல லூசுத்தனமான ஹீரோயின்', 'வழக்கம் போல கதை...' என்று தொடங்கினாலே அந்தப் படத்தை பார்க்கவேண்டியதில்லை என்று அர்த்தமெடுக்கப் பழகிவிட்டேன்! அவர் சிறந்த படங்கள் என்று கூறியவை என்னை ஏமாற்றியதில்லை. தவிரவும் இந்துவின் கார்த்திக்கும் ஓரளவுக்கு நம்பகமான விமர்சனங்களைக் கொடுக்கிறார். எனவே என்னதான் நல்ல விமர்சனங்கள் நண்பர்கள், முகநூல் மூலம் கேட்டறிந்தாலும் அநேகமான வேளைகளில் இந்த இரு விமர்சகர்களின் தீர்ப்புத் தான் ஒரு புதிய திரைப்படத்தை சினிமாவில் பார்ப்பதா, அல்லது ஆறுதலாக வீட்டில் பார்ப்பதற்கு நல்ல பிரதி வரும் வரை காத்திருப்பதா அல்லது பார்ப்பதே இல்லையா என்ற முடிவை எடுக்கவைக்கும். நல்ல கதை, திரைக்கதை, சிறந்த நடிப்பு, லாஜிக் மீறல்கள் இன்மை என்று மிகத்தரமான திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பவர்கள் இவர்களின் விமர்சனத்துடன், IMDB வலைப்பக்கத்தில் திரைப்படம் பற்றிய மதிப்பீடு, விமர்சனங்களை வாசித்தறியலாம்.
இன்னொரு பக்கம் இன்றைய காலத்தில் குறைந்த பட்ஜெட்டில் உருவான, பிரபலமற்ற நடிகர்கள், இயக்குனர்களின் தரமான திரைப்படங்களுக்கும் வாழ்வு கிடைத்துள்ளது. மசாலா படங்களையே பார்த்துச் சலித்தவர்களுக்கு ஒரு மாறுதலாக வித்தியாசமான கதைக்களம், திரைக்கதை கொண்ட இப்படங்கள் ஆறுதலாக அமையும். உதாரணமாக கடந்த வருடம் வெளியான 'பரியேறும் பெருமாள்', 'மேற்குத் தொடர்ச்சி மலை' போன்ற திரைக்கவியங்களைச் சொல்லலாம். எனினும் பிரபலமற்றவர்களின் திரைப்படம் என்பதால் புலத்தில் உள்ள பலருக்கு இவற்றைத் திரையில் கண்டு களிக்கும் அனுபவம் கிட்டாது என்பது துரதிஷ்டம் தான். பலருக்கு இவ்வாறான திரைப்படங்கள் வெளியானது கூடத் தெரியாமல் இருக்கலாம் அல்லது தெரிய நீண்ட நாளாகலாம். Tamil Talkies மாறன் போன்றோர் இப்படியான தரமான திரைப்படங்களை விமர்சனம் செய்வதால் அவர்களின் YouTube பகுதில் சென்று அறிந்து கொள்ளலாம். (கடந்த காலங்களில் வெளியான புதிய, பழைய திரைப்படங்களுக்கும் இது பொருந்தும்). இவ்வாறான திரைப்படங்களின் எழுச்சி இனிவரும் காலங்களிலும் இருக்கும் என்பது எனது நம்பிக்கை. இது நீண்ட காலத்தில் தமிழ் சினிமாவின் தலைவிதியையே மாற்றுமா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
திரைப்படங்களைத் தெரிவு செய்யும் போது நாம் எந்த நேரத்தில், என்ன மனநிலையில் இருந்து ரசிக்கப்போகிறோம் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். அழுத்தம் நிறைந்த வேலை நாளின் முடிவில் மாலை வீடு வந்தால் நகைச்சுவையான படங்கள், ரஜினி, விஜய் போன்றோரின் மனதை இலேசாக்கும் திரைப்படங்கள், அல்லது நல்ல பாடல்கள், அழகான காட்சிகள் நிறைந்த திரைப்படங்கள் மன அமைதி தரலாம். மாறாக ஓர் திகில், மர்மம் நிறைந்த அனுபவத்தை வார இறுதி இரவொன்றில் அனுபவிக்க விரும்பின் பரபரப்பான / ஆவிகள் சம்பந்தமான திரைப்படங்களைத் தேர்தெடுக்கலாம். எனினும், அபிமான நடிகரின் திரைப்படத்தை சினிமா சென்று முதற் காட்சியில் பார்ப்பதற்கு நேர காலம் தேவையில்லை தானே!
எதிர்பார்ப்பும் / கண்ணோட்டமும்
வாழ்க்கையில் நமக்கு எப்படி நியாயமான எதிர்பார்ப்பு தேவையோ, ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்திலும் நமது எதிர்பார்ப்பு பற்றிய தெளிவு இருத்தல் அவசியமானது. ஒரு ரஜனி படத்திற்குச் சென்று விஜய் சேதுபதி படங்கள் போன்று கதையம்சம் இல்லையே என வருத்தப்படுவதை விட விஜய் சேதுபதியின் எதாவது படத்தை ரசிப்பதே புத்திசாலித்தனமானது (மறுதலையும் உண்மை!). ரோமாபுரியில் இருக்கும்போது ரோமனாக இரு என்பது போலத்தான், இதுவும் ஓர் எழுதப்படாத விதி. இது மிக வெளிப்படையான உதாரணம். மற்றய படங்களை எப்படி பார்ப்பது? இங்கு தான் நீங்கள் என்ன மாதிரியான அனுபவத்தை பெற விரும்புகிறீர்கள், என்ன மன நிலையில் இருக்கிறீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுத் தெளிந்த பின் ஒரு திரைப்படம் பற்றிய தகவல்களை மேலுள்ள பகுதிகளில் கூறியது போல் அறிந்து அது உங்கள் எதிர்பார்ப்புக்கு உகந்ததா என முடிவு செய்ய வேண்டும். பொருத்தமில்லாத திரைப்படத்தை 2,3 மணித்தியாலங்கள் இருந்து பார்ப்பது என்பது இந்தக் காலத்தில் ஓர் வாய்ப்புச் செலவு (opportunity cost) தான்! இதைவிட தரமான பொழுதுகளை உங்கள் குழந்தையுடன் செலவளித்திருக்க முடியுமல்லவா? தரமான திரைப்படங்கள் எனப் பரவலாகச் சொல்லப்படுபவை எல்லாம் நமது எதிர்பார்ப்புக்கு அமையவேண்டிய அவசியமில்லை.தெளிவான எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் திரைப்படத்தை மட்டுமே நல்ல படம் என்கிறோம்.
மேலும், ஒருவரது பார்வை காலத்துக்குக் காலம் மாறுபட மாறுபட ஓர் திரைப்படம் பற்றிய பார்வையும் மாறலாம். அதாவது 10 வருடங்களுக்கு முன்னர் ரஜினி படங்களை ரசித்த ஒருவர் தற்போது கமல் ரசிகராக மாறியிருக்கலாம். அவரது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள், அறிவு முதிர்ச்சி, வயது என்று இன்னும் பல காரணிகள் வாழ்வை புதியதொரு கண்ணோடத்தில் பார்க்கவைப்பதைப் போல, திரைப்படங்கள் மீதான பார்வையையும் மாற்றி இருக்கலாம். இன்னும், ஓர் காலத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்கள் இன்று புறக்கணிக்கப்படலாம். உதாரணமாக 80களில் பிரபலமான மோகனின் 'பயணங்கள் முடிவதில்லை' திரைப்படத்தை இன்று பார்த்தால் 'இதையா அன்று கொண்டாடினார்கள்?' என்று தோன்றும். அப்போது பலருக்குப் தெரியாத படங்கள், இப்போது கொண்டாடப்படுவதும் உண்டு. விஜய் சேதுபதி முதலில் கதாநாயகனான 'தென்மேற்குப் பருவக்காற்று' (2010) திரைப்படம் ஓர் எடுத்துக்காட்டு. எனவே, கால ஓட்டத்தில் ஏற்படும் ரசனை மாற்றங்களையும் கருத்தில் கொள்ளல் வேண்டும்.
சுருங்கச் சொல்லின் , பல்வேறு பொழுதுபோக்கு ஊடகங்கள் நம்மை ஆக்கிரமித்திருக்கும் இக்காலத்தில் தரமான திரைப்படங்களைத் தெரிவு செய்யும் திறனும், அவற்றில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கிறோம் என்ற தெளிவும் நமக்கிருந்தால் நல்ல திரைப்படங்கள் பார்க்கும் அனுபவம் நமக்குக் கிடைக்கும்.
(குறிப்பு: எனது அனுபவத்தில் தோன்றியவற்றை எழுதியுள்ளேன். நான் மேலே குறிப்பிட்ட திரைப்படங்கள், நடிகர்கள், இயக்குனர்கள் பெயர்கள் உதாரணத்திற்காக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. சுருக்கம் கருதி நிறைய உதாரணங்கள் குறிப்பிடவில்லை. உங்கள் அனுபவங்களையும் இங்கு பகிர்ந்துகொள்ளலாம். நன்றி 😊)
-
By மல்லிகை வாசம்
வழக்கம் போல நல்ல கதை / திரைக்கதை, சிறந்த நடிப்பு இவற்றை மட்டுமே எதிர்பார்த்து ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா உள்ளடங்கலான நட்சத்திரங்களின் அணிவகுப்பிலும், பீட்ஸா (Pizza), இறைவி போன்ற வித்தியாசமான திரைப்படங்களை அளித்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் உருவான 'பேட்ட' திரைப்படத்தைக் காணச்சென்றேன்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரஜினியின் பரபரப்பான, மின்னல் வெட்டினால் போன்ற அறிமுகக் காட்சியுடன் ஆரம்பித்த திரைப்படம், ரஜினியின் வழமையான heroism, style, நகைச்சுவை நிறைந்த கலகலப்பான காட்சிகள், ஆடல் பாடல்களுடன் தொடர்ந்தது. இடைவேளைக்குச் சற்று முன்னான சண்டைக்காட்சி வரை இது தான் கதை என நாம் ஒன்றை ஊகிக்கும்போது, அக்காட்சியில் கதையின் போக்கு இன்னொரு கோணத்தில் பயணிக்க ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்துவந்த ஒரு flashback மற்றும் சில உணர்வுபூர்வமான (sentimental) காட்சிகளால் சிறிது தொய்வு போன்ற உணர்வைக் கொடுத்தாலும் படத்தின் மையக்கருவை இக்காட்சிகள் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டின. பின்னர் வந்த திருப்பங்களும், ரஜினியின் styleம், actionம் நிறைந்த விறுவிறுப்பான காட்சிகள் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி போன்றோரின் திரைப் பிரசன்னத்துடன் மேலும் களைகட்டின.
ஹாஸ்டல் வார்டனாக ரஜினி அறிமுகமான காட்சியில் மாணவர்களை கட்டுக்குள் கொண்டுவரும் அந்த authority அவரது வார்த்தைகளிலும், உடல் மொழியிலும் நன்றாகவே வெளிப்படுத்தப்பட்டு, நமக்கும் படம் மீதான ஈர்ப்பை உருவாக்கியது. மேலும், அவரது முத்திரையான ஸ்டைல் மற்றும் நகைச்சுவை தொட்டுக்கொள்வதற்கு ஊறுகாய் போலில்லாமல், மாறாக கறியுடன் சேர்ந்த கறிவேப்பிலை போல ஆங்காங்கே அழகாக அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தது. ஸ்டைல் மன்னனாக மட்டுமன்றி ஓர் இயல்பான நடிகனாகப் பல காட்சிகளில் அவர் தன்னை நிரூபித்துள்ளார். இதற்கு சிம்ரனுடனான மற்றும் தான் அக்கறை எடுக்கும் மாணவனுடனான காட்சிகளும், பின்னர் வந்த விஜய் சேதுபதியுடனான சில உணர்வுபூர்வமான காட்சிகளும் சான்று. ரஜினி 'கற்ற வித்தை எல்லாம் மொத்தமாக' கொட்டுவது 'பேட்ட'யில் என உறுதியாகக் கூறலாம். இளமையான ரஜினியாகவும் இத்திரைப்படத்தில் கண்டோம்; எனினும் முதிர்ந்த ஹாஸ்டல் வார்டன் ரஜினி தான் மனதைக் கவர்கிறார். ❤️
வில்லனாக வரும் விஜய் சேதுபதியின் நடிப்புக்குத் தீனி போடும் படமல்ல இது. எனினும் ரஜினியுடன் அவர் திரையைப் பகிர்ந்துகொள்ளும் தருணங்கள், பல ஆண்டுகளுக்கு ஒரு முறை இரு கிரகங்களை ஒன்றாய் வானில் பார்க்கும் பரவசம். வைத்த கண் வாங்காமல் பார்த்தேன்; மற்றபடி அவருக்குத் தரப்பட்ட வேலையை நிறைவாகச் செய்துள்ளார். ஆர்ப்பாட்டமில்லாத வில்லனாக நவாஸுதீன் சித்திக் செய்யும் குள்ளநரித்தனங்கள் அவர் மீதான வெறுப்பைத் தூண்டினாலும் இறுதியில் முதுமையில் நலிந்து சற்றே பரிதாபப்படத் தான் வைக்கிறார்.
இன்னமும் தோற்றத்தில் 90களில் இருந்தது போலவே இருக்கும் சிம்ரன் ரஜினியுடன் தோன்றும் காட்சிகள் கவிதையான தருணங்கள். இவரைப் போலவே சில காட்சிகளில் வந்தாலும் சசிகுமார், பாபி சிம்ஹா, முனிஸ்கான், இயக்குனர் உதிரிப்பூக்கள் மகேந்திரன், ஆடுகளம் நரேன், மாளவிகா மோஹனன் ஆகியோரும் மனதில் நிறைந்தனர். திரிஷாவுக்கு சொல்லும்படியான காட்சிகள் இல்லை; நமக்கும் அதைப்பற்றி கவலை இல்லை. ஏன் அவருக்குமே இல்லை தானே! (உங்களுக்கு ஏமாற்றமாக இருந்தால் '96'ஐ பார்த்து நிம்மதியடையவும்!) 🤣
அனிருத்தின் பின்னணி இசை படத்தின் ஓட்டத்துக்கேற்ப பரபரப்பையும், பயங்கரத்தையும், ஆங்காங்கே விழாக் கொண்டாட்டம் போன்ற குதூகல உணர்வையும் தருகின்றது. பாடல்கள் காட்சியாக்கப்பட்ட விதம் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம். ரஜினி ரசிகர்களுக்கு 'மரண மாஸ்' பாடல் மரண மாஸாக இருந்தாலும், எனக்குத் துள்ளவைக்கும் 'உல்லாலா' பாடல் 'கில்லி' பட 'கொக்கரக் கொக்கரக்கோ' பாடற் காட்சியின் உணர்வைத் தருகிறது. 'இளமை திரும்புதே' பாடலில் ரஜினியின் மென்மையான உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 'ஜித்து தீம்' விஜய் சேதுபதியின் வில்லத்தனமான காட்சிகளுக்குக் கட்டியம் கூறுகின்றது. 🎶
படத்தின் குறைகளாக வழமை போல நாம் முறையிடும் சண்டைக்காட்சிகள் தான். ரஜினி ஆர்மியை (ரசிகர்களை) குஷிப்படுத்த அவர் One-Man-Army ஆகவே இருக்க வேண்டிய நிலை (படத்தின் பிற்பாதியில் வரும் சில காட்சிகள் விதிவிலக்கு). (இந்தக் குறை ரஜினியின் 'ஸ்ரீ ராகவேந்திரா' திரைப்படத்தில் மட்டுமே இல்லை!) மேலும் சில குறைகளை ரஜினியின் பிரசன்னமும் (presentation) , விறுவிறுப்பான காட்சிகளும் மறக்கடிக்கச் செய்தன.
அப்ப படம் எப்படி?; ரஜினி ரசிகர்களின் ''பாட்ஷா'வுக்கு இணையான ஒரு தலைவர் படம் நீண்ட காலமாக இல்லையே' என்ற குறையை 'பேட்ட' மூலம் கார்த்திக் சுப்புராஜ் நிறைவு செய்திருக்கிறார் என்றே கூற வேண்டும். ரஜினி படங்களின் விதிமுறைகளைப் புரிந்துகொண்ட ஏனையோருக்கும் இது சிறந்த ஒரு பொழுதுபோக்கான திரைப்படமாகும்; நட்சத்திரப் பட்டாளத்துக்காகவே ஒரு முறை பார்க்கலாம். 👏👏👏👍
'பேட்ட' - இது ரஜினியின் கோட்டை / வேட்டை!
😃😁😎
-
By மல்லிகை வாசம்
இந்தியாவில் திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முற்பட்ட காலத்தில் மக்களுக்கு முதன்மையான பொழுது போக்கு ஊடகமாக விளங்கிய, தற்காலத்தில் புறக்கணிக்கப்படும் நாடகக் கலையை சீதக்காதி கௌரவப்படுத்தி இருக்கிறது எனக் கூறலாம். அத்துடன் ஒரு மகா நடிகரான விஜய் சேதுபதி ஓர் முதிர்ந்த நாடகக் கலைஞராக நடித்திருப்பது பொருத்தமானதாக உள்ளது. முக்கியமாக ஔரங்கசீப் மன்னன் கதாபாத்திரத்தில் அவரது கம்பீரமான ஆனால் முதுமையில் தளர்ந்த குரலும், உணர்வுகளைப் பேசும் விழிகளும் சிறப்பு.
இத்திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளை விஜய் சேதுபதியின் நாடகக் காட்சிகள் நிறைப்பது நாடக ரசிகர்கள் அல்லாதோருக்கு சலிப்புணர்வைக் கொடுத்தாலும், இயக்குநரின் துணிச்சல் பாராட்டத்தக்கது. இருப்பினும் இக் காட்சிகளைப் படத்தின் இடையிடயே பகுதிகளாகப் புகுத்தி இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.
நாடகக் கலைக்கு அங்கீகாரம் குறைவாக இருப்பதன் ஏக்கத்தை வயது முதிர்ந்த கலைஞராக விஜய் சேதுபதி தன் உடல்மொழியால் பல இடங்களில் வெளிப்படுத்தியவிதம் அருமை. குறிப்பாக ஓர் மாலையில் நாடகம் முடிந்தது ஆட்டோவில் அவர் வீடு திரும்பும் போது ஊரே shopping, மதுக்கடை என கலகலப்பாக இருப்பதைப் பார்த்து ஏங்கும் காட்சி; இத்தனை கலகலப்பு தனது நாடகக் காட்சியில் இல்லையே என்ற ஏக்கத்தை வார்த்தைகள் இல்லாமல் வெளிபடுத்திய விஜய் சேதுபதியின் நடிப்பும், இயக்குநர் பாலாஜி தரணீதரனின் சிந்தனையும், கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும் நெகிழ்வூட்டின.
இவ்வாறு உணர்வுபூர்வமாக ஆரம்பித்துப் பயணிக்கும் இத்திரைப்படத்தில் பின்னர் வந்த சில நகைச்சுவைக் காட்சிகள் வாய்விட்டுச்சிரிக்க வைத்தாலும் அவற்றின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம் எனத் தோன்றியது. எனினும் இத்திரைப்படத்தின் மையக்கருவை ஏற்றுக்கொள்வோருக்கு நெகிழ்ச்சியான ஈர்ப்பையும், நம்பாதோருக்கு நகைச்சுவையாகவும் இருந்த இடைவேளைக்குப் பின்னரான சில காட்சிகள் படத்துடன் ஒன்ற வைத்தன.
மும்முரமான வாழ்க்கை முறையில் வாழ்வோருக்கும், விறுவிறுப்பான, மசாலா திரைப்பட ரசிகர்களுக்கும் சீதக்காதி சலிப்புணர்வைக் கொடுக்கலாம். எனினும், நாடகக் கலைஞர், ரசிகர்களுக்கு இத்திரைப்படம் பெருவிருந்தாகும். அத்துடன் நம்முடன் வாழ்ந்து மறைந்த, எளிமையான ஆனால் நிறைவான ஓர் வாழ்க்கையை வாழ்ந்து மறைந்த முதியவர்களையும் சிலருக்கு நினைவுபடுத்தலாம்.
-
-
Topics
-
27
By பெருமாள்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By பிழம்பு · பதியப்பட்டது
எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஆளும் கட்சியான அதிமுகவிடம் பாமக தொடர்ந்து வலியுறுத்திவந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட மறுநாளே கூட்டணி உறுதியாகியுள்ளது. வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இருபது சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வந்தார். அதற்காக போராட்டங்களையும் நடத்தினார். அதோடு, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளித்தால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ராமதாஸ் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்னதாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத இடஓதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஒரு தனியார் விடுதியில், அதிமுக-பாமக கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றதை அடுத்து அதிமுக, பாமக தலைவர்கள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், அதிமுக தரப்பில் முதல்வர் மற்றும் அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் மற்றும் அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கெடுத்தனர். 'குறைத்துத்தான் பெற்றிருக்கிறோம்'- அன்புமணி அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை பற்றி மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகள் பாமகவுக்கு அளிக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டபோது, அந்த விவரங்கள் பின்னர்தான் வெளியிடப்படும் என பன்னீர்செல்வம் தெரிவித்தார். பின்னர் பேசிய அன்புமணி ராமதாஸ், ''பாமக, அதிமுக கூட்டணியில் சேர்ந்த சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறோம். எங்கள் கூட்டணி மிகபெரிய வெற்றி பெறும். எங்களுடைய நோக்கம், எங்கள் கோரிக்கை வன்னியர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வேண்டும் என்றோம்.'' ''அரசாங்கம் அதை நிறைவேற்றியுள்ளது. எங்களுடைய கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால், நாங்கள் போட்டியிடும் சட்டமன்ற தொகுதிகளில் கடுமையாக உழைத்து வெற்றி பெற்றுத் தருவோம். தொகுதி எண்ணிக்கையை நாங்கள் குறைத்துத்தான் பெற்றிருக்கிறோம். ஆனால் எங்கள் பலம் குறையாது. எங்கள் கூட்டணி பெரிய வெற்றி பெறும்,''என்றார். 20 ஆண்டுகளுக்கு பின் 20 ஆண்டுகளுக்கு பின்னர் சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி ஏற்பட்டுள்ளது. முன்னதாக 2001 தேர்தலில், அதிமுக பாமகவுக்கு 27 தொகுதிகளை ஒதுக்கியிருந்தது. அதில் 20 தொகுதிகளை பாமக வென்றது. அதன் பின்னர் 2006 மற்றும் 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இணைந்தது. 2006இல் 31 தொகுதியில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வென்றது பாமக. 2011ல் திமுக கூட்டணியில் 30 தொகுதிகளில் போட்டியிட்டாலும், வெறும் மூன்று தொகுதிகளில் மட்டும்தான் பாமக வெற்றி பெற்றது. அதனை அடுத்து, 2016ல் தனித்து நின்று பாமக சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. பாமக தலைவர் ராமதாஸின் மகன் மற்றும் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவரான அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது 2021 சட்டமன்ற தேர்தலில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை பாமக பெற்றுவிட்டதால், வடமாவட்டங்களில் பாமகவின் வாக்குவங்கி அதிமுகவுக்கு கிடைக்கும் என இந்தக் கூட்டணியினரால் எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக - பாமக கூட்டணி உறுதி; பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - BBC News தமிழ் -
By தனிக்காட்டு ராஜா · Posted
அந்த பொடியனும் அவ்வளவு நல்லது கிடையாது போல இருக்கு சரியான குழப்பவாதியாம் சண்டையும் சேட்டையுமாம் , ஆனால் ரொக்கோட் பண்ணி அவன் நல்லவன் ஆகிட்டான் பாடசாலையில் அவ்வளவு நல்ல பெயர் கிடையாது அது மட்டும் அல்ல ரீச்சரும் மிகவும் அடக்கமானவராம் தன் பிள்ளைக்கு ஏற்பட்ட பிரசினைக்கு அவர் பேச எத்தனிக்கும் போது உணர்ச்சிவசப்பட்டுள்ளார் என்பது தெரியவருகிறது -
By ஈழப்பிரியன் · Posted
கொரோனா வந்து சைவத்துக்கு உயிர் கொடுத்துள்ளது. -
By விவசாயி விக் · Posted
திரும்ப திரும்ப சொல்லுறன் சைவம் தான் புதிய உலக நியதி. -
By ஈழப்பிரியன் · Posted
சகல உடற்பயிற்சிகளிலும் நீச்சல் தான் சிறந்தது என்கிறார்கள். இதையே நிரந்தரமாக்கினால் நன்றாக இருக்கும்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.