Jump to content

சிங்களவர்கள் முட்டாள்கள், நாங்கள் கெட்டிக்காரர்கள் என்பது அரசியல் கோட்பாடு அல்ல, அது Fantasy: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

சிங்களவர்கள் முட்டாள்கள், நாங்கள் கெட்டிக்காரர்கள் என்பது அரசியல் கோட்பாடு அல்ல, அது Fantasy: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் – அகழ்

84இல் என்று நினைக்கிறேன். புலிகள் அநுராதபுரத்தில் சாதாரண சிங்கள மக்களைக் கொலை செய்தார்கள் அல்லவா? அதேபோல எல்லைப் பகுதிகளில் எல்லாம் சிங்கள மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். பிக்குகளைக் கொலை செய்த சம்பவங்களும் நடந்தன. இவற்றைப் பற்றி ராஜினியிடம் கேட்டால் அவர் சொல்வார். ‘சண்டை என்றால் மக்கள் இறப்பார்கள்’ என்று. 

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், இங்கிலாந்துக்குப் புலம்பெயர முன்னரே இலங்கையில் எழுத்தாளராக நன்கு அறியப்பட்டவர். முற்போக்கு பாணியில் பல கதைகளை எழுதியிருக்கிறார். பெண்களின் மீதான் ஒடுக்குமுறைகள் உட்பட பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதியவர். உளவியல் நுட்பத்துடன் பல சிறந்த கதைகளையும் எழுதியிருக்கிறார். புலம்பெயர் இலக்கியத்தை, இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் என்ற பெயரைத் தவிர்த்துவிட்டு பேச இயலாது. அவர் நம் முன்னோடிகளில் ஒருவர்.

எழுத்து தவிர்ந்தும், அவரது மனித உரிமை செயற்பாடுகள் இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு பாரிய உதவிகளைச் செய்திருக்கிறது. அகதிகளுக்கான பிரித்தானியச் சட்டங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுவதில் இவருடைய பங்களிப்பு முக்கியமானது. பிரித்தானியாவினால் அகதியாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒவ்வொரு தமிழருக்கும் இராஜேஸ்வரி அன்று பெற்றுக்கொடுத்த நலன்கள் இன்றும் உதவிபுரிகின்றன. அவருடனான நீண்ட நேர்காணல் இது.

rajesh-bala-drawing-copy.jpg?resize=724%

இலக்கிய செயற்பாட்டில் ஈடுபட்ட அளவு, மனித உரிமைகள் அமைப்புகளின் செயற்பாடுகளிலும் ஈடுபட்டவர் நீங்கள். இலக்கியத்திலிருந்து சமூகச் செயற்பாட்டுக்குள் நுழைவதற்கான தாக்கம் எங்கிருந்து நிகழ்ந்தது? 

சிந்தனையின் வெளிப்பாடுதான் செயல்கள். சிந்தனை எவ்வாறு உங்களுக்கு உருவாகின்றது என்பது உங்களின் சூழ்நிலைகளைப் பொறுத்து இருக்கின்றது. ஒரு மனித சிந்தனை எப்படி உருவாகின்றது என்பதற்கு நிறைய கோட்பாடுகள் இருக்கின்றன.

குழந்தை பிறந்த நாளிலிருந்து குழந்தையின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிப்பது குழந்தையின் ஆரம்ப நாட்களும் அந்த குழந்தை வளர்கின்ற சூழ்நிலையும். அது மனநிலை ரீதியானது என்று பிராயிட் சொல்கின்றார். சூழ்நிலை சம்பந்தமானது என்று ‘எரிக் ஹெரிக்சன்’ என்ற குழந்தை உளவியல் நிபுணர் சொல்கின்றார். ஒரு குழந்தைக்கு சூழ்நிலை, பிறந்த இடம், வளர்ந்த இடம், ஆட்களுடனான தொடர்பாடல்  எல்லாவற்றையும் தாண்டி ஒரு சுயமை இருக்கின்றது என்று தியாஜே (Jen Piaget-1936) என்ற அறிஞர் சொல்கின்றார். அதிலிருந்து தான் எமது அறிவு வளர்கின்றது என்று அவர் சொல்கின்றார். நான் தியாஜே கோட்பாட்டை  நம்புகின்றேன்; பிராயிட் கோட்பாட்டைக் கேள்வி கேட்கின்றேன். ஹெரிக்சன் கோட்பாட்டை சரி என்று சொல்கிறேன். ஏனென்றால், நான் வளர்ந்தது மிக மிக கட்டுப்பாடான ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் என் சுயமை வளர்ந்ததற்கு காரணம் சூழ்நிலை என்று சொல்லலாம். சூழ்நிலை சிந்தனையைத் தூண்டியது. என்னுடைய ஆரம்பகால வாசிப்பும், அந்த சூழ்நிலையும் முட்டி மோதின. அப்பா வைத்திருக்கும் தெய்வங்களைப் பற்றி பாடிய புத்தகங்களைப் படித்தேன். எங்கள் கிராமத்தில் பெண்கள் வலிமையான ஆணாதிக்கத்துக்குள் இருந்தார்கள். சமயங்களால் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை தான் அவர்களுடையது. பெரும்பாலான பெண்களுக்கு சுயம் என்பது இல்லை. There is no identity.

ஒருமுறை தம்பிகளோடு விளையாடிவிட்டு அம்மாவிடம் வந்த  நேரத்தில் “இனி ஓடித்திரிகின்ற வயதில்லை. பெரிய பிள்ளையாகப் போகின்றாய்.  சும்மா இரு” என்று அம்மா சொன்னார். அன்று எனக்கு நித்திரை வரவில்லை. பெரிய பிள்ளையாக இருக்க எனக்கு விருப்பமில்லாமல் இருந்தது. பெரிய பிள்ளை ஆனவுடன் என்ன நடக்கும் என்று தெரியும். உடனே கலியாணம் பேசுவார்கள். அப்போதுதான் சிந்தனையைச் செயல் வடிவமாக செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்கு வந்தது என்று நினைக்கின்றேன். படிக்க வேண்டும், இந்த கலியாணம், பிள்ளை குட்டி, சமையல் போன்றவை விருப்பமாக இருந்தாலும் அவைகளைத் தாண்டி இன்னொரு உலகத்தை நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வு வந்தது.

அந்த காலகட்டத்தில் இலங்கையில் எங்களுடைய ஊரில் தமிழரசுக்கட்சி வந்தது. வெளியுலகம் தெரியாத எங்களுக்கு தமிழரசுக்கட்சி மூலம் தமிழர், தமிழ் சுதந்திரம் போன்ற விஷயங்கள் தெரியவந்தன. அவர்கள் பாட்டுக்கள் எல்லாம் பாடவைதார்கள். நாங்கள் கிராமத்து பாடசாலைகளில் கோயில்களில் வெள்ளிக்கிழமை பாடும் தேவாரங்களை மட்டுமே பாடுவோம். மேடைகளில் பாட வைத்தது தமிழரசுக்கட்சி கூட்டங்கள்தான். எனது ஆரம்பச் செயற்பாடுகள் அதில் இருந்து தான் ஆரம்பித்தன. அதாவது ஒடுக்கு முறைக்கு எதிராக, பெண்கள் ஒடுக்கு முறைக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது. நான் இந்தக் கல்யாண வாழக்கைக்குள் போகமல் இருப்பதற்கு படிப்பு முக்கியம் என்று உணர்ந்தேன்.

எனக்கு நிறையத் தம்பிமார்கள். என் தம்பிகள், சின்னம்மாவின் ஆண் குழந்தைகள் எல்லோருடன் சேர்ந்து விளையாடுவோம். அதனால் எனக்கு ஆச்சி திட்டுறதும், அம்மா பேசுவதும் குழப்பமாக இருந்தது. ஏனென்றால், தம்பிமாருடன் மரம் ஏறி இளநீர் குடிப்பது எல்லாம் செய்தேன். ‘பெண்’ என்பது யாரால் தரப்படுகின்ற அடையாளம்? பாரம்பரியத்தால் தரப்படுகின்றது. பெண்களாலேதான் தரப்படுகின்றது. பெண்கள், ஆண்கள் என்று இருப்பது இயற்கை நியதி. ஆனால் அதற்குள்ளே சுயமையற்ற ஒரு உயிராக பெண் இருக்க வேண்டும்  என்பதை நான் சிறு வயதிலேயே கேள்விப்பட்டு விட்டேன்.

நான் மிகவும் அதிஸ்டசாலி, எனக்கு நல்ல அன்பான ஆசிரியர்களும், அன்பான அப்பாவும் இருந்தார்கள். என்னுடைய செயற்பாடுகளுக்கு அப்பா சந்தோஷப்பட்டார். என்னுடைய அப்பாவும் என்னுடைய ஆசிரியர்களும் இல்லாமல் இருந்திருந்தால், அதற்குப் பிறகு யாழ்ப்பாணம் என்ற ஒரு வாசற்படியும் இல்லாமல் இருந்திருந்தால் ஒரு எழுத்தாளராக வந்திருக்க முடியுமா… செயற்ப்பாட்டாளராக வந்திருக்க முடியுமா… என்று எனக்குத் தெரியவில்லை.

என்னுடைய எழுத்திலிருந்துதான் மனித உரிமைக்கான செயற்பாடு புறப்பட்டது. பெண்களுக்கு உரிமையும், விடுதலையும் என்பது மனித உரிமை சார்ந்தது. ஆண்கள், பெண்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் இன்றியமையாதவர்கள். இரண்டு படைப்புக்கள். ஒருவர் அடக்கி வைப்பது மனித உரிமையற்ற விஷயம். அது தான் என்னுடைய தாரக மந்திரம்.

RajesInterview.jpg?resize=1020%2C540&ssl

தமிழரசுக்கட்சியின் வருகையூடாகத்தான் உங்களது செயற்பாடுகள் ஆரம்பித்ததாகச் சொல்கிறீர்கள். ஆனால் இலண்டனுக்கு குடிபெயர்ந்த பின்னர், தமிழ் தேசியவாதிகளுக்கும், உங்களுக்கும் இடையில் முரண்பாடுகள் நிகழத்தொடங்கின அல்லவா?

இலங்கையில் நடந்த கொடுமைகளைத் தாங்க முடியாமல் எழுதத் தொடங்கினேன். 1976-ஆம் ஆண்டிலேயே சீதனக் கொடுமைக்காக எழுதினேன்.  ஓட்டைக்கள் விழுகுகின்றன,  ஒருவன் விலைப்படுகின்றான், மௌன அலர்கள் இப்படியான கதைகள் சீதனக் கொடுமைக்கு எதிராக, சாதிக்கு எதிராக நான் சின்னப் பெண்ணாக இருக்கும்போது எழுதியவை. நான் 19 வயதில் யாழ்ப்பாணம் போனேன்.  அங்கு பார்த்த சாதிக் கொடுமைகளைத் தாங்க முடியாமல் ‘இரத்தினம் அப்பா’ என்ற கதையை எழுதினேன். அது போல இலண்டனுக்கு வந்து இங்கேயும் சீதனம், சாதி என்று தமிழ் சமுதாயம் நாட்டில் இருப்பது போலவே அச்சு அசலாக இருப்பதைப் பார்த்து துயருற்றேன்.

நான் இலங்கையில் இருந்தபோதுபோது தமிழ் தேசியப் பாடல்களைப் பாடியபோதும், லண்டனுக்கு வந்து தமிழ்த் தலைவர்களின் பிரிவினை பற்றிப் பேசும் கூட்டங்களுக்கு செல்லும்போதும், என் கணவர் பாலசுப்பிரமணியம் இந்தப் பிரிவனைவாதங்கள் எங்கள் இனத்தை அழிக்கும் என்று சொன்னார். ஓர் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல் உணர்வு ரீதியாகப் பேசுகிறார்கள் என்று சொல்வார். பாலசுப்பிரமணியம், நான், எங்களைப் போன்ற சில நண்பர்கள் கூட்டங்களுக்குப் போனபோது எங்களை இங்கிருந்த தமிழ்தேசிய தலைவர்கள் துரத்தியும் இருந்தார்கள்.

ஆனாலும் சிங்கள அரசு தமிழர்களுக்குச் செய்த கொடுமைகள் அந்தக் காலத்தில் ஆரம்பிக்கத் தொடங்கிவிட்டன. 1970 இலேயே ஆரம்பிக்கத் தொடங்கி விட்டது. அதேநேரம் தமிழர்கள் அதை எப்படி கையாள்வது என்று தெரியாமல் தமிழ் உணர்வு என்று லண்டனில் ஒரு வியாபாரம் போன்று தொடக்கிவிட்டார்கள். தமிழைப் பற்றி பேசுவது தங்களை முன்னெடுப்பதற்கும், தங்களைப் பெரியவர்களாக காட்டிகொள்ளும் தன்முனைப்பு நிறைந்த விடயமாகியது.

இது பற்றியதுதான் என்னுடைய முதலாவது நாவல், ‘உலகமெல்லாம் வியாபாரிகள்’, லண்டன் தமிழ் முரசில் தொடராக வெளியாகி தமிழ் தேசியவாதிகளுக்கும் எனக்கும் பெரிய பிரச்சினைகளை உருவாக்கியது. நீங்கள் வாழும் கால கட்டத்தை மறைத்துவிட்டு இலக்கியம் படைக்க முடியாது. இலக்கியம் என்பது ஒரு மனிதன் வாழும் சமுதாயத்தின் சரித்திரத்தோடு சம்பந்தப்பட்டது. என் கதைகளில் எல்லாம் அது வந்தது.

1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் எரிந்த உடனே எங்களால் தாங்க முடியவில்லை. நாங்கள் போராட்டம் செய்தோம். நாங்கள் 1971 ஆம் ஆண்டிலிருந்தே இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் செய்த ஒரு முற்போக்கு கூட்டம்.

 1971 ஆம் ஆண்டு ஜே.வி. பி கிளர்ச்சியின்போது அங்கே பொல்லாத கொடுமைகள் செய்யப்பட்டன, ஒரு மூன்று மாதத்தில் 10,000 மேற்பட்ட சிங்கள மாணவர்களும், சாதாரண மக்களும் இலங்கை அரசாலேயே கொலை செய்யப்பட்டார்கள். அதற்கு எல்லாம் நாங்கள் தெருவில் இறங்கி போராட்டம் செய்தோம். செல்வி மன்னம்பேரி என்ற பெண், சிங்கள இராணுவத்தால் கொடுமையாகப் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட  காலங்களில் நாங்கள் மௌனமாக இருக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தை கண்டித்து போராட்டங்கள் செய்தோம். வெளியுலகுக்கு அவற்றை வெளிப்படுத்தினோம்.

என்னுடைய ஈடுபாடு, பெண்கள் அமைப்பு என்ற செயலாக்கத்திற்கு வந்தது, 1982 ஆண்டு நவம்பர் மாதம் என்று நினைக்கின்றேன். காந்தி இராஜசுந்தரம், Dr ஜெயப்பூர் ராஜா, நிர்மலா, நித்தியானந்தன் இப்படி நிறையப் பேர் இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் எல்லாம் மனித உரிமைகள் பற்றி அப்போது வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு ஆதரவான குரலை முதன் முதலில் இங்கிலாந்தில் Human right organisation-Tamil womens league வாயிலாக நான் ஆரம்பித்தேன். தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக இருந்தபடியால் அங்கிருந்தே ஆரம்பித்தேன். கூட்டங்களில் இலங்கையில் நடக்கும் கொடுமைகளை, கைதுகளை குறிப்பிட்டு பேசினேன்.

அந்தக் காலகட்டத்தில் பிரதமர் மார்க்கிரெட் தர்ச்சரால் பிரமாண்டமான மாற்றங்கள் இங்கிலாந்துக்கு வந்து கொண்டிருந்தன. அப்போது பெண்கள் நாங்கள் அரசியலில் துடியாட்டமாக இருந்தோம். நிறைய பெண்கள் தொழிலாளர் கட்சியினால் ஈர்க்கப்பட்டு ஆர்வமாக பங்குபெற வந்தார்கள். பெண்களின் பங்களிப்பு உச்சத்தில் இருந்தது. என்னுடைய இலங்கை பற்றிய விடயத்தை முன்னெடுக்க மிகவும் சந்தோஷமாக அவர்கள் முடிவு செய்தார்கள். நான் இலங்கையில் நடக்கும் தமிழர்களுக்கான அநீதியைப் பற்றி பேசும்போது, அங்கு பெண்கள் உணர்வு பூர்வமாக அழுதார்கள். யாழ் நூலகம் எரிந்தது என்று சொன்னவுடன் தாங்க முடியாமல் தவித்தார்கள். 1982 ஆம் ஆண்டு நிரந்தரமாக இந்த மனித உரிமைவாதிகள் கைது செய்யப்பட்டவுடன் பிரமாண்டமான போராட்டங்களை நாங்கள் தொழிலாளர் கட்சி மூலம் முன்னெடுத்தோம்.

நாலைந்து வெள்ளையின பெண்களும், நானும் தான் முதல் முதலில் இலங்கை தூதரகம் முன்னுக்கு நின்று ஆர்பாட்டம் செய்தோம். அதற்குப் பிறகுதான் தமிழ் ஆட்களுக்கும் தெரிய வந்து, பிறகு தமிழ் பெண்களும் சேர்ந்தார்கள். அந்த நேரம் British special branch வந்து என்னை நேர்முகம் செய்தார்கள். ஏனென்றால் இலங்கையில் கைது செய்யப்பட்டவர்கள், பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள். அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் எடுத்த பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்றபடியால்தான்  கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்காக லண்டனில் குரல் கொடுப்பவர்கள் பற்றிய விசாரனை என்ற பெயரிலேதான் அவர்கள் என்னை விசாரித்தார்கள். அவை பத்திரிகைகளில் பின்னர் வந்தன.

இதனைக் கேள்விப்பட்டு நிறையப் பெண்கள் என்னுடன் இணைந்து போராட வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழே தெரியாது. ஆங்கிலம் படித்த குடும்பத்தைச் சேர்ந்த தமிழர்கள். நாங்கள் எல்லோரும் சேர்ந்து பிரமாண்டமான போராட்டங்களை நடந்தினோம். பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து மாணவர்கள் வந்து இலங்கைப் பிரச்சினை பற்றி எங்களை நேர்காணல் செய்தார்கள். இலங்கைப் பிரச்சினை உலக மயமாக்கப்பட்டது. தமிழ் மக்களுக்காக மட்டுமல்ல, இனவாதத்துக்கு எதிராக, பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக  என்றெல்லாம் மனித உரிமை தொடர்பான விடயங்களாக அவை அமைந்தன. இதனால் பரந்த விதத்தில் black, white, Latino என்று பல அமைப்புக்கள் எங்களுக்கு ஆதரவாக வந்தார்கள். இலங்கைத் தமிழருக்கு இங்கிலாந்தில் மட்டுமல்ல, மேற்கு ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகலாவிய ரீதியில் ஆதரவு வந்தது. அங்கோலாவிலிருந்து ஆதரவு தந்து கடிதம் வந்தது. மங்கோலியாவிலிருந்து ஆதரவு தெரிவித்துக் கடிதம் வந்தது. இலங்கைத் தமிழரின் நிலையை எடுத்துக் காட்டியது என் எழுத்தால் வந்த ஆவேசம். எழுத்து என்பது அறம் சார்ந்திருக்க வேண்டும் என்பதில் நான் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கின்றேன். பெயருக்கும், புகழுக்கும், ஒரு பத்திரிகையின் எதிர்பார்ப்பு ஆகியவற்றை எதிர்பார்த்து நான் எழுதுவதில்லை. இன்று யோசித்துப் பார்க்க அது திருப்தியாக இருக்கிறது.

உங்களது மனித உரிமை செயற்பாடுகள் எந்த வகையில் அகதிகளுக்கு உதவின? அதன் தோற்றம் எப்படி நிகழ்ந்தது?

London Tamil women’s league என்ற பெண்கள் அமைப்பின் மூலம் தான் அந்தக்காலத்தில் இலங்கையிலிருந்து ஓடி வந்த மக்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தேன். தொழிலாளர் கட்சியூடாக நானும் என்னுடைய சிநேகிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான கிரிஸ் ஸ்மித்தும், நண்பர் ஜெரமிக் கோபினும் சேர்ந்து பெண்கள் அமைப்பின் ஊடாக வந்த கோரிக்கைகளுக்கு உதவி செய்தோம்.

அப்போது எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ஈபிஆர்எல்எப் தம்பா, புலிகள் அமைப்பைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, ரெலோ ஜேசன் அப்படியானவர்கள் வந்து ‘அக்கா தயவு செய்து நாங்கள் எல்லோரும் சேர்ந்து அமைப்பு ஒன்று உருவாக்க வேண்டும். ஏனென்றால் தொழிலாளர் கட்சியே சொல்கிறது, எங்களுக்கு சமுதாயம் சார்ந்த அமைப்பு தேவை என்று’ என்றார்கள். அப்போது தான் நாங்கள் எல்லோரும் சேர்ந்து Tamil Refugee organization  ஐ தொடங்கினோம்.

அது ஆரம்பித்ததுமே இலங்கையில் போராடும் ஐந்து குழுக்களுக்கும், அதாவது விடுதலைப்புலிகள், ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், ஈரோஸ் அவர்களுக்கெல்லாம் சேர்ந்த ஒரு பொது சமுதாய அமைப்புத் தலைவியாக ஆகவேண்டி வந்தது. அவர்களுடைய அரசியல் கோட்பாடுகள் எனக்கு அப்போது தெரியாது. ஆனால் ஈபிஆர்எல்எப், ஈரோஸ் இரண்டும் மாணவர் அமைப்பாக இருந்தபோது முற்போக்குவாத அமைப்பாக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.  அவர்களுடைய ஓரிரு கூட்டங்களிலும் நான் பேசியிருக்கின்றேன். ‘ஈரோஸ் இராஜநாயகம்’ வீட்டிலே இலக்கிய சந்திப்புக்களை வைத்திருந்தேன்.

மற்றவர்களுடைய அரசியல் கண்ணோட்டம் எனக்குத் தெரியாது. ஆனால் இவர்களுக்கெல்லாம் தலைவியாக வரவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு வந்தது. நிர்ப்பந்தம் என்று சொல்வது ஏன் என்றால் என்னுடைய ஆரம்ப மனித உரிமை வேலை Labout Party Member ஆகத் தான் ஆரம்பித்தது. ஒரு தமிழ்ப் பெண் தொழிற்கட்சியில் இருக்கின்றபடியால் தொழிற்கட்சி மூலமாகத்தான் இந்தப் போராட்டங்கள் ஆரம்பித்தன. அதைச் சமூக ரீதியாகக் கொண்டு வந்தோம். சட்ட ரீதியாக ஒரு ஸ்தாபனமாக அமைப்பதற்கு தமிழ் அமைப்புக்கள் சேர்ந்து ஒரு குழுவாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அதனாலேயே அவர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு தலைவியானேன். ஐந்து அமைப்புக்களுக்கும் தலைவி. ஆரம்பித்து, கொஞ்ச நாட்களில் பார்த்தால் அவர்களுக்குள் பிரச்சினை தொடங்கியிருந்தது. இலங்கையில் உங்களுக்குள் நடக்கின்ற பிரச்சினையை இங்கே கொண்டு வந்து தமிழ் அகதிகளை பாதிப்புக்குள்ளாக்காதீர்கள் என்று அவர்களுடன் வாதிட்டு வந்தேன்.

‘இது இலங்கை, நான் இந்தியன் ஆர்மியின் அனுமதியுடன் தான் போகனுமா என்னுடைய சொந்தக்காரர் விட்டுக்கு’ என்று கேட்டேன். உங்களுக்கு ஒன்றும் புரியாது. எல்லாமே இந்தியன் ஆர்மியின் கட்டுப்பாட்டில் தான் நடக்கின்றது என்றார்கள். ‘இலங்கையிலிருந்து இலங்கையின் இன்னொரு பகுதிக்கு போவதற்கு ஏன் இந்தியன் ஆர்மியின் அனுமதி’ என்று கேட்டேன்.

பிரித்தானியப் பாராளுமன்றத்தில் இலங்கை அகதிகளுக்கு உதவும் வகையில் சட்டத்தை மாற்றியதில் அல்லது தளர்த்தியதில் உங்களுக்கும், உங்களது அமைப்புக்கும் பெரும்பங்கு இருக்கின்றது. அது எவ்வாறு நிகழ்ந்தது?

அது 1985 ஆம் ஆண்டு இலங்கை அகதிகளுக்கு வழங்கப்படும் விசாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்கள். இது அகதிகளைப் பாதித்தது. குடும்பம் குடும்பமாக தமிழ் மக்கள் அவதிப்பட்டார்கள். இந்த விசா கட்டுப்பாடுகள் பற்றிய விவாதத்தை எழுப்ப தொழிலாளர் கட்சி விரும்பியது. அதற்குள் நானும் இயங்கினேன்.

தொழிற்கட்சி, கடுமையான கட்டுப்பாடுகளை அரசாங்கம் விரும்பிய வகையில் அமுல்படுத்த முடியாத அளவுக்குத் தடுத்து அதைத் தளர்த்தியதால், சில மாற்றங்கள் வந்தன. அது அகதிகளுக்கு சார்பாக இருந்தது. ஏன் என்றால் ஒரு அகதியைக் கொண்டு வருவதென்றால், கொண்டு வரும் விமான நிறுவனத்துக்கு 1000 பவுண்ட் தண்டம் அறவிடுவதாக நிலைமை இருந்தது.

பாராளுமன்றத்தில் விவாதம் நிகழும்போது பார்வையாளர் அரங்கில் நானும் தமிழ்ப் பெண்கள் பலரும் கூடியிருந்தோம். ஆளும் கட்சியைக் சேர்ந்த அமைச்சர்கள் எங்களைக் கோபமாகப் பார்த்தார்கள். எங்களது போராட்டம் அந்தக் காலத்தில் மிக ஆக்ரோஷம் நிறைந்ததாக இருந்தது. இதனை சாதித்தது தமிழ் பெண்கள் அமைப்பு என்றே சொல்வேன்.

Picture1.jpg?resize=944%2C580&ssl=1

சமூக செயற்பாடுகள் தவிர்ந்து, லண்டனில் இயங்கிய ஐந்து இயக்கங்களில் ஏதாவது ஒன்றில்கூட சேர்ந்து இயங்கவில்லையா? 

ஒரு நாளும் இல்லை. ஒரு நாளும் இலங்கை அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்ந்து நான் வேலை செய்யவில்லை. ஆனால், இலங்கை மக்களுக்காக அவர்களுடன் நான் வேலை செய்தேன். இயக்கம் சார்ந்து நான் செயற்படவில்லை. அகதிகளுக்கான அமைப்பு உண்டாக்க வேண்டும் என்று முன்னுக்கு நின்று உதவி செய்தது ஈபிஆர்எல்எப், ஈரோஸ், விடுதலைப்புலிகள் போன்றவர்களே. புளொட் ஆட்கள் பின்னரே வந்தனர். ரெலோவும் அதன் பிறகே வந்தது. ஆனால் முன்னுக்கு நின்று இதை ஒரு மக்கள் தொண்டு நிறுவனமாக ஆக்க வேண்டும் என்றது தம்பா. பின்னர் சத்தியமூர்த்தி. அதுபோல் எல்லா அமைப்புக்களும் வந்தார்கள். ஏன் என்றால் அதில் நிர்ப்பந்தம் இருந்தது. அப்படி இருப்பதால் அங்கே அந்தக் காலத்தில் எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும் என்ற உணர்வு இருந்தது. அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் இலங்கை பேரினவாதத்துக்கு எதிராக தமிழர்க்ள ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று இருந்தது என்ற விம்பம் தான் எனக்கு தரப்பட்டது.

அன்ரன் பாலசிங்கத்துக்கும் உங்களுக்கும் இடையில் தனிப்பட நட்பு இருந்ததே?

அன்ரன் பாலசிங்கம் லண்டன் முரசில் நான் எழுதிய காலத்தில்(1977 அல்லது78) அவராகவே என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டார். அப்போது மகளிர் அமைப்புக்கு தலைவியாக கூட ஆகவில்லை. எழுத்தாளராக மட்டுமே இருந்தேன்.  இந்த தமிழ்த் தேசிய பிற்போக்கு வாதிகள் என்னைக் கண்டபடி திட்டிக்கொண்டிருந்தார்கள் தானே. நான் சாதியை எதிர்க்கின்றேன், சீதனம் வாங்குவதைக் கேவலமாக எழுதுகின்றேன், நீங்கள் ஆண் உறுப்பை விற்கப்போகின்றீர்களா என்று எல்லாம் என்னுடைய கதைகளில் எழுதி விட்டேன். அதெல்லாம் அவர்களுக்கு கோபத்தைக் கிளப்பியிருக்க வேண்டும். என்னைக் கண்டபடி திட்டிக்கொண்டு திரிந்தார்கள். பல இடங்களில் ஆபாசமாக எழுதி வைத்தார்கள்.

நான் தமிழ் மக்களைப் பற்றியும் நிறைய எழுதியிருக்கின்றேன். தமிழ் மக்கள் மீது பேரினவாதத்தால் நடக்கின்ற கொடுமைகளைப் பற்றி எழுதியிருக்கின்றேன். 1974 ஆம் ஆண்டு தரப்படுத்தல் (Standardization) வந்த பிறகு அதைப்பற்றி எல்லாம் லண்டன் முரசில் எழுதியிருக்கிறேன். அப்படி எழுதிய தேம்ஸ்நதிக்கரை என்ற கதையில் முற்போக்கு வாதிகள் எல்லாம் வருகின்றார்கள். படிப்பிற்காக நாலரை வருடங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததை, One of the brilliant aspects எனச் சொல்வேன். பின்னர் திருமணத்துக்குப் பிறகும் பெரும்பாலான காலம் யாழ்ப்பாணத்திலேயே இருந்தபடியால் அங்கு இருந்த அற்புதமான முற்போக்கு சிந்தனை இலங்கையில் எங்கேயும் இருக்கவில்லை என்றே சொல்வேன். கொழும்பில் இருந்தாலும் அங்கிருந்த முற்போக்கு வாதம் British Educated ஆட்களால்தான் வந்தது. N. M. Perera இப்படியான ஆட்கள் British Educated. ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்த முற்போக்கு வாதம் அடித்தளத்திலிருந்து வந்த முற்போக்கு வாதம். டானியலில் இருந்து பெனடிக்ற் பாலா வரை அந்தக் காலத்தில் முற்போக்காக எழுதியவர்கள் அதிகம்பேர். நான் மாணவியாக இருந்த காலத்தில் மல்லிகையில் எழுதியதும் அவ்வாறானது. யாழ்ப்பாணத்திலிருந்து அடித்தளத்திலிருந்து அதர்மத்துக்கு எதிராக வந்த குரல்.

இப்படியான விடயங்கள் என்னுடைய கதைகளில் இருந்தன. அதனைப் படித்த  அன்ரன் பாலசிங்கத்துக்கு நான் யார் என்று பார்க்க வேண்டும் போல் இருந்திருக்க வேண்டும். “தங்கச்சி வாங்கோ” என்று தொலைபேசியில் கூப்பிட்டார். அப்போது அவர் எந்த ஊர், என்ன பெயர் அதெல்லாம் தெரியாது. அவருடைய மனைவி மருத்துவ தாதி என்று மட்டும் யாரோ சொன்னார்கள். அது ஒருவித ஈடுபாட்டைத் தந்தது, because she is a nurse, and I am a nurse. அங்கே போனால் அடேல் இருந்தார். நிறைய மாணவர்கள் இருக்கைகள் இல்லாமல் தரையில் இருந்தார்கள். அந்தக்காலப் பகுதி 1978 என்று நினைக்கிறேன்.

அன்ரன் பாலசிங்கம் எப்போதுமே பிரிவினை (separation) பற்றியே கதைத்தார்.  இலங்கை பிரிவதைத் தடுக்க முடியாது என்றார். நான் கேட்டேன் என்னென்று பிரிய முடியும்? நாங்கள் சிறு நாடு அல்லவா… என்று. அதற்கு அவர் எனக்கு உதாரணம் சொன்னார். இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஸ் பிரிந்தது என்று சொன்னார்.

யாருக்காக இந்த separation வருகின்றது என்றால், இன்றைய இளம் தலைமுறைக்கு விரிவாகக் கொஞ்சம் சொல்ல வேண்டும். British ஆட்சியில் 60% க்கு மேல் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள். சுதந்திரம் வந்ததற்கு பிறகு அதே மாதிரி 70% க்கு மேலான சிங்களவர்களும் தமக்கு அரசாங்க உத்தியோகம் வேண்டும் என்று சொன்னதும், இலங்கை முழுவதும் ஒட்டுமொத்தமாக சம சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்று சொன்னதும் எனக்கு நியாயமாகத் தான் இருந்தது.

இதைத்தான் நான் அவருடன் கதைத்தேன். அவர் ஆங்கிலத்தில் தான் என்னுடன் கதைப்பார். நானும் ஆங்கிலத்தில் தான் கதைப்பேன். How can you expect me to believe? that they are going to promote Tamil course என்று கேட்டேன். ஏன் என்றார். நான் சொன்னேன்; 1949 ஆம் ஆண்டு மலையகத் தமிழர்களை, தமிழர்கள் என்றே பலர் நினைக்கவில்லை. நான் யாழ்ப்பாணத்தில்தான் படித்தேன். அங்கு ஒடுக்கப்பட்ட மக்களை அவர்கள் தமிழராகவே நினைக்க வில்லை. என்னுடைய நண்பர்கள் வீட்டுக்கு எல்லாம் போயிருக்கின்றேன். ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு electricity இல்லை. ஏன் என்று கேட்டால் மற்றப் பக்கத்திலிருப்பவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள். அவர்கள் தமிழர்களாக தெரிவதில்லையா? அந்தப் பெண்கள் இரவில் தனியாக tution சென்று வருவதென்றால் இருட்டில்தான் சென்று வரவேண்டும். அந்தப் பெண்கள் தமிழ்ப் பெண்களாக தெரியவில்லையா?

நான் 1966, 1967 ஆம் ஆண்டு மாணவியாக யாழ்ப்பாணத்தில் இருந்தேன். அந்தக் காலத்தில் சங்கானையில் சாதிக்கொடுமை நடந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் முதுகைப் பிளந்து அனுப்பியிருந்தார்கள் ஆதிக்கக் சாதியினர். அவர்களுடைய வீடுகளை எரித்திருந்தார்கள்! நான் அவர்களுக்கு மருந்துவம் பார்த்திருந்தேன். அவர்கள் தமிழர்கள் இல்லையா?

அன்ரன் பாலசிங்கம் என்னை தங்கச்சி என்றுதான் சொல்வார். He encourages me to talk. He encourages me to argue. He encourages me to tell, what I feel. அவர் இந்தியாவுக்கு போவதற்கு நாங்கள்தான் செலவு செய்தோம். எல்லோருமாக காசு சேர்த்துக் கொடுத்தோம். அந்த அளவுக்கு,  அரசியலுக்கு அப்பால் I feel Anna. அண்ணா என்று தான் சொல்வேன். பாலா அண்ணா என்றுதான் அழைப்பேன்.

எந்தவொரு தமிழ் இயக்கங்களையும் சாராது மனித உரிமைகளுக்காக நீங்கள் போராடிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில், ‘ராஜினி திரணகம’ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இங்கிலாந்தில் பிரசாரங்களைச் செய்து கொண்டிருந்தார். அதே காலத்தில் நீங்கள் அவருடன் தனிப்பட்ட நட்பில் இருந்தீர்கள். அவருடைய அப்போதைய புலி ஆதரவுக் கருத்தியலின் மீது விமர்சனங்களை வைத்திருந்தீர்களா… அது தொடர்பில் உங்கள் இருவருக்கும் இடையில் கருத்து மோதல்கள் உருவாகவில்லையா…? 

84இல் என்று நினைக்கிறேன். புலிகள் அநுராதபுரத்தில் சாதாரண சிங்கள மக்களைக் கொலை செய்தார்கள் அல்லவா? அதேபோல எல்லைப் பகுதிகளில் எல்லாம் சிங்கள மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். பிக்குகளைக் கொலை செய்த சம்பவங்களும் நடந்தன. இவற்றைப் பற்றி ராஜினியிடம் கேட்டால் அவர் சொல்வார். ‘சண்டை என்றால் மக்கள் இறப்பார்கள்’ என்று. 

நான் சொன்னேன்; ‘தேவையில்லாமல் இறப்பது போர் அல்ல. அது Atrocity. போரில் முன்னுக்கு நின்று சண்டை பிடித்து இறப்பது வேறு. இது சிங்களவர் செய்ததைத்தான் நாங்களும் செய்வதைப் போன்றது.  மட்டக்களப்பில் ஆமிக்காரர்கள் செய்த கொடுமைகளை எல்லாம் மக்கள் எனக்கு சொல்வார்கள். காலத்துக்குக் காலம் அங்கு என்ன கொடுமைகள் செய்யப்படுகின்றன எனறு இப்போதும் மக்கள் எனக்குச் சொல்லுகின்றார்கள். ஊர்காவல் படையில் இணைக்கப்பட்டிருந்த சில முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள், யார் யார் புலிகள்? எந்த ஏரியாவில் புலிகள் இருக்கிறார்கள் என்று உண்மையாகவும், பொய்யாகவும் இராணுவத்திடம் தகவல் சொல்ல, பிறகு நடந்த கொடுமைகள் விபரிக்க முடியாதவை! எவ்வளவு பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டார்கள் தெரியுமா? எவ்வளவு ஆண்கள் கொலை செய்யப்பட்டார்கள் தெரியுமா? நினைத்தாலே நடுங்குகிறது. என்னுடைய சின்னம்மாவின் மூன்று பையன்கள் இறந்தனர். என்னுடைய அக்காவினுடைய மகன் இறந்தார். என்னுடைய அக்கா 51 வயதில் அந்தக் கொடுமை தாங்க இயலாமல் செத்துப் போனார். என்னுடைய தம்பி விமல் கைது செய்யப்பட்ட போது, என்னுடைய அம்மா அந்த அதிர்ச்சியில் இறந்தார். என்னுடைய அம்மா இறக்கும் போது 61 வயது. இப்படி ஆயிரக்கணக்கான மக்கள், ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டக்களப்பு முழுவதும் துன்பப்பட்டார்கள். இதையேதான் அப்பாவிச் சிங்கள மக்களுக்கும் நாம் திருப்பிக் கொடுக்கப்போகிறோமா…?  

அப்போது ராஜினி சொன்னார், ‘மாற்றங்கள் வருவது ஒரு சுதந்திரப் போராட்டத்தில் நியதி’ என்று.

நான் அடிக்கடி புலிகள் எல்லோரிடமும் கேட்கின்ற கேள்வி “நீங்கள் எல்லாம் தப்பி வருகின்றீர்கள், ஏன் நீங்கள் நின்று சண்டை பிடிக்க முடியாது? ஏன் ஏழை மக்கள் மட்டும் சண்டை பிடிக்க வேண்டும்?” Continue war என்பது You all must fight together ஆனால், நீங்கள் உங்களுடைய பிள்ளைகளைக் கொண்டு வந்துவிட்டு காசு மட்டும் கொடுக்கின்றீர்கள். நான் யாழ்ப்பாணத்திலிருக்கும் என்னுடைய சொந்தக் காரர்களைக் கூட கேட்டேன். அவர்கள் எல்லோரும் போராட்டத்திற்கு நிறையக் காசு கொடுக்கின்றவர்கள். “உங்களுடைய பிள்ளைகள் Cambridge க்கு போகவேண்டும், இம்பிரியலுக்கு போகவேண்டும். Engineering college க்கு போகவேண்டும். ஏன் அங்கே இருக்கும் இளம் பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு போகின்றீர்கள்? பாடசாலையிலிருந்து பிடித்துக் கொண்டு போகின்றீர்கள் என்று விசனப்படுவேன். போர் என்றால் அப்படித்தான் என்றார்கள்.

போர் என்றால் அப்படித்தான் என்றால், நீங்கள் போய் சண்டை பிடியுங்கள். That is not happening in other countries. If they want to support their country, then go to their country and fight. நீங்கள் இங்கே இருந்து கொண்டு பிரச்சாரம். அங்கே இருப்பவர்கள் அழிகின்றார்கள். இது அதர்மம், இது சுயநலம். இந்தப் போர் ஒரு நாளும் வெற்றியடையாது. இந்த வார்த்தைகளை அடிக்கடி சொல்வேன்.

சிங்களவர்கள் முட்டாள்கள், நாங்கள் கெட்டிக்காரர்கள் என்பது ஓர் அரசியல் கோட்பாடு அல்ல. அது வெறும் Fantasy. இந்த மேற்குலக நாடுகளின் நிலைப்பாடு என்ன? They do not care who get killed. அவர்கள் தங்களுடைய நலனுக்காக யாரையும் கொலை செய்வார்கள். அது தான் நடக்கின்றது. இவற்றை நான் சொன்னால் ‘போர் என்றால் மக்கள் இறப்பார்கள்’ என்ற பதில் தான் ராஜினிடமிருந்து எத்தனையோ தரம் வந்தது. அவர் என்னுடன் City University கூட்டத்துக்கு வந்திருக்கின்றார். நான் மனித உரிமை பற்றி கதைத்தேன். அவர் தனி நாடு ஏன் தேவை? Legitimized struggle for oppressed   என்று பேசினார். 

Picture3.jpg?resize=771%2C565&ssl=1ராஜினி திரணகமவுடன்

 

https://akazhonline.com/?p=3076

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்திய இராணுவம் செய்த கொடுமைகளைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறீர்கள், எழுதி இருக்கிறீர்கள். இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது அங்கு சென்றிருக்கிறீர்களா…? அவர்களுடன் நேரில் பேசி இருகிறீர்களா?

ஓம். அதனை நினைவு கூர்கிறேன். லண்டனிலிருந்து டெல்லிக்கு சென்று அங்கிருந்து புறப்பட்டு சாமம் 2 மணிக்கு சென்னையில் இறங்கிய போது விடுதலைப்புலிகள்தான் என்னை வரவேற்றார்கள். கஸ்ரோ தான் என்னை வரவேற்று “வாங்கோ அக்கா” என்று கூட்டிக்கொண்டு போனார். வீதியில், நான் நடுவில், முன்னுக்கு ஒரு ஓட்டோ, பின்னுக்கு ஒரு கார் என்று போகும் போது ஒரு பொலிஸ் கேட்டார் “என்னப்பா இந்த நடுச் சாமத்தில் ஊர்வலமாக போறீர்கள்?” என்று. “எங்களுடைய அக்கா லண்டனிலிருந்து வந்து இருக்கிறார். அவர் பெரிய எழுத்தாளர்.  அவர் ஆராய்ச்சிக்காக வந்திருக்கின்றார்” என்று காஸ்ரோ சொல்ல, “சரிப்பா போங்க” என்று பெரிய ஆரவாரம்.

அடுத்த நாள் பாலா அண்ணாவைப் பார்க்க அடையார் போனேன். அங்கே போனால் வெளியே இந்தியன் ஆர்மி நிற்கின்றார்கள். பொலிஸ்காரர்கள் நிற்கின்றார்கள். உள்ளுக்குள் விடுதலைப் புலிகள் துப்பாக்கிகளோடு நிற்கின்றார்கள். எனக்குத் தலை சுத்தத் தொடங்கி விட்டது. நான் லண்டனில் பார்த்த பாலா அண்ணா வேறு. லண்டனில் ஒரு கவுன்ஸில் வீட்டில் சாதாரணமாக இருந்தவர். சென்னையில் பார்த்தால் அவருக்கு இவ்வளவு பாதுகாப்பு. உள்ளுக்கு போவதற்கு நிறைய கேள்வி. அவர் ஒரு பெரிய கூட்டத்தோடு இருந்தார். இலங்கைக்கு போவதாகக் சொன்னேன். “கவனமாக இருங்க தங்கச்சி” என்று சொல்லி அனுப்பினார்.

அப்போதுதான் இந்தியன் ஆர்மி இலங்கைக்கு வந்திருந்தார்கள். இந்தியாவில் இருந்தபோது ஆய்வுகளுக்காக நிறைய இடங்களுக்கு போக வேண்டி இருந்தது. அப்போதுதான் அகதி முகாம்களுக்கு எல்லாம் போனேன். நிறைய அகதி முகாம்கள். கோவளத்திலிருந்து மதுரை வரை சுற்றினேன். அகதி முகாம்களில் நிலைமை மிகுந்த துயரை அளித்தது. இனி இல்லை என்ற ஏழ்மை. அகதி முகாம்கள் எல்லாம் பார்த்துவிட்டு வந்து பாலசிங்கம் அண்ணாவை கேட்டேன், ‘இவர்கள் எல்லோரையும் என்ன செய்வது? இலங்கையில் சமாதானம் வந்து விட்டதுதானே, இலங்கையில் resettlement செய்கின்ற வேலைகளை நீங்கள் செய்கின்றீர்களா’ என்று கேட்டேன். அவர் மறுமொழி பேசவில்லை.

‘இலங்கைக்கு போய்விட்டு வாருங்கள், இதைப்பற்றி கதைப்போம்’ என்று சொன்னார். கொழும்புக்கு போனால் அங்கே ஆர்மி ஒன்றும் இல்லை. ஊருக்குப் போனால் எங்கும் இராணுவம். காலையில் எழுந்து பார்த்தால் இந்தியன் ஆர்மி ரோந்து போய்க்கொண்டிருந்தார்கள். அது நான் எதிர்பாராத ஒரு விஷயம். ஏனென்றால் எனக்கு இராணுவ முகாம்கள் எங்கே இருக்கின்றன என்று தெரியாது. ஆர்மி அன்று ரோந்து போனபோதுதான் அவர்களுடைய பிரமாண்டம் எனக்கு தெரிய வந்தது.

இலங்கை ஆர்மி முகாமில் இருக்கின்றது என்று தெரியும். அவர்களை நான் கண்டதில்லை. இந்தியன் ஆமியோ ரோட்டால் ரோந்து போகிறார்கள். நான் யாழ்ப்பாணம் போக வேண்டியிருந்தது. என்னுடைய கடைசி மகனை மாமி பார்க்கவில்லை. மாமிக்கும் பிள்ளையைக் காட்டுகின்றேன் என்று சொல்லி விட்டுத் தான் வந்தேன். இந்தியன் ஆர்மியின் அனுமதி இல்லாமல் நீங்கள் போக முடியாது என்று உறவினர்கள் சொன்னார்கள். ‘இது இலங்கை, நான் இந்தியன் ஆர்மியின் அனுமதியுடன் தான் போகனுமா என்னுடைய சொந்தக்காரர் விட்டுக்கு’ என்று கேட்டேன். உங்களுக்கு ஒன்றும் புரியாது. எல்லாமே இந்தியன் ஆர்மியின் கட்டுப்பாட்டில் தான் நடக்கின்றது என்றார்கள். ‘இலங்கையிலிருந்து இலங்கையின் இன்னொரு பகுதிக்கு போவதற்கு ஏன் இந்தியன் ஆர்மியின் அனுமதி’ என்று கேட்டேன். ‘அப்படித்தான், இந்த இயக்கங்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை பிடிக்கின்றார்கள். ஆளுக்கு ஆள் அடிபடுறாங்கள். அதில் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். நீங்களும் அதுக்குள் அகப்படக்கூடாது’ என்றார்கள். எனக்கு இது எல்லாம் புதிய விடயங்கள். சமாதான காலம் என்றுதான் நான் போனேன். நான் இந்தியன் ஆமியை பார்க்க முகாமுக்குச் சென்றேன். வாயில் காவலரிடம், I want to see your commander in chief என்று சொன்னேன்.

Boss என்று ஏதோ சொன்னார். “I want to see your boss” என்று சொன்னேன். உள்ளுக்குள் விட்டார்.  உள்ளே போவதற்கே ஒரு மைல் நடக்க வேண்டும். அவ்வளவு தூரம். நடந்து போனால் பிரமாண்டமான ஒரு மண்டபத்தில் பட்டைகள் போட்ட சீருடையுடன் நிறைய பேர் இருக்கின்றார்கள். மட்டக்களப்பு commander in chief ஆக இருந்தவர் அருமையான ஒரு புன்னகையுடன் கேட்டார் ‘What can I do for you, medam?’ என்று.

I want to go to Jaffna to see my mother-in-law என்று சொன்னேன். அவர் சொன்னார் ‘I am so sorry, medam. Only the condition can take you. If you belong to an organization. What organization’ என்று கேட்டார். Any liberation groups? ‘I am not member of any liberation group. I am a British. I cannot belong to these liberation groups. I am not. I am a Sri Lankan origin. I want to see my mother-in-law. Is that crime?’ ‘No medam, you don’t understand the situation” என்று சொன்னார். பிறகு அவரைக் கேட்டேன் ‘You supposed to be peace keeping force. Why are you keeping so many stuffs? I am not understanding. I have not ever seen military force in my whole life. Why these many people? why these armories? why, why என்று நிறைய கேட்டேன். எங்களுடைய அரசாங்கம் சொன்னது அமைதியைக் காக்க என்று, அதனாலேயே நாங்கள் வந்து விட்டோம் என்றார்.

நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனேன். ‘ஐயோ! இவ்வளவு துணிவா, உனக்கு நீ ஆர்மிகாரன்களின் camp க்குள் போய் வந்திருக்கின்றாய்’ என்று ஆச்சரியப்பட்டார்கள், நான் சொன்னேன் ‘ஆர்மிகாரன்களும் மனிதர்கள், என்னை பிடித்து சாப்பிடப்போகின்றார்களா?’ என்று. ஆர்மிக்காரர்கள் என்பதன் அர்த்தம் எனக்கு அதன் அப்ப விளங்கவில்லை. இப்பவும் விளங்கவில்லை. சண்டை தொடங்கியதன் பிறகுதான் புரிந்தது,  அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று. யாழ்ப்பாணத்தில் என்ன கொடுமை செய்தார்கள் என்பதெல்லாம், Amnesty International report வரும் போது தான் தெரிந்தது. அன்று பார்த்த Army commanderக்கு பின்னால் இருந்தவர்கள்தான் இந்தக் கொடுமையெல்லாவற்றையும் செய்திருக்க முடியாமா என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. ஏன் என்றால் இலங்கை இராணும் செய்யாத atrocity எல்லாம் இந்தியன் ஆர்மி செய்தது.

‘கோவை ஞானி’ உங்கள் மீது தனிப்பிரியம் கொண்டிருந்தார். உங்களுக்கு அவர் ஓர் ஆசான் என்றும் சொல்லலாம். அவருடனான நினைவுகளை எவ்வாறு தொகுத்துக் கொள்கிறீர்கள்?

கோவை ஞானி ஐயா 1980களில் ‘சிறந்த நாவலாசிரியர்கள்’ என்ற ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் என்னுடைய பெயரும் வந்திருந்தது. அதை எனக்கு பத்மநாப ஐயர் அனுப்பியிருந்தார். நன்றி சொல்லி கோவை ஞானி ஐயாவுக்கு நான் கடிதம் போட்டேன். அதற்குப் பின்னரான காலத்தில் என் தனிப்பட்ட வாழ்க்கையிலும், இலங்கை அரசியலிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன, இவையெல்லாம் 1980-ஆம் ஆண்டின் நடுப்பகுதிகளில் நடக்கின்றது என்று நினைக்கின்றேன். அந்த கால கட்டத்தில் நான் மிகமிகத் தீவிரமாக, நேரமில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தேன். மனித உரிமை விஷயங்கள், தமிழருக்கான உரிமைப் போராட்டம், தமிழருக்காக பேரினவாத கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் என்று பலவற்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

இது ஒரு பக்கம், அடுத்த பக்கம் லண்டன் அரசியலில் தலைகீழாக பிரமாண்டமான மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. அதாவது 1980 ஆம் ஆண்டுகளில் Mrs Margaret Thatcher,  Nelson Mandela ஐ ஒரு பயங்கரவாதி என அறிவிக்கின்றார். ஆபிரிக்க  தலைவரை இங்கே கூப்பிடுகின்றார். நாங்கள் அதற்கு எதிராக போராடுகின்றோம். குறிப்பாக பெண்கள். இங்கிலாந்திலேயே பிரமாண்டமான எதிர் ஊர்வலமாக அது அமைந்தது.

இப்படியான அரசியல் வேலைகளினால் என்னுடைய தமிழ் வாசிப்பு குறைந்துவிட்டது. அப்போது தமிழ் அகதிகள் சார்ந்த வேலைகளுக்காக முழுநேரமும் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். பகுதிநேரமாக வாழ்க்கைச் செலவுக்காக வேலைபார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் என்னால் ஒன்றும் தமிழில் எழுத முடியவில்லை. எதுவும் எழுதுகின்றீர்களா என்று ஐயாவின் கடிதம் அடிக்கடி வரும். நான் ஒரு பெரிய பட்டியல் போடுவேன். என்னென்ன செய்து கொண்டிருக்கின்றேன் என்று. Minors strike நடக்கின்றது, அரசியல் போராட்டங்கள் நடக்கின்றது, அமெரிக்கன் ஏவுகனை வந்திருக்கின்றது, பெண்ணிய போராட்டங்கள் நடக்கின்றது. ஐயாவுக்கு பெரிய சந்தோஷம், இதெல்லாம் கேட்கிறதுக்கு. மிகவும் சந்தோஷம், இதெல்லாம் நடக்கின்றது. இந்த அம்மா இதிலெல்லாம் ஈடுபடுகின்றார்கள் என்று எழுதுவார்.

1987 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு போயிருந்த நேரம் சென்னையிலிருந்து தொலைபேசியில் அழைத்தேன். ‘இந்தியாவில் நிற்கின்றேன் ஐயா. நான் வாஹினி ஸ்ரூடியோவில் நேர்காணல் செய்து கொண்டிருக்கின்றேன்..’ என்று சொன்னேன். அப்போது அவர் நீங்கள் ஏன் ஒரு எழுத்தாளரை நேர்காணல் செய்யக்கூடாது என்று கேட்டார்.  நான் அவருடன் கதைக்கும் போது சொல்லியிருக்கின்றேன். எனக்கு ராஜம் கிருஷ்ணனை பிடிக்கும் என்று. ராஜம் கிருஷ்ணனை நேர்காணல் செய்யக் கூடாதா, ஜெயகாந்தனை நேர்காணல் செய்யக் கூடாதா, இந்திரபார்த்தசாரதியை நேர்காணல் செய்யக்கூடாதா என்று ஒரு பட்டியலைத் தந்தார். ஐயா எனக்கு நேரம் இருக்குமா என்று தெரியவில்லை என்று சொன்னேன். எனக்கு  ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன் இருவரையும்  ரொம்ப பிடிக்கும்.

ஐயாவிடம் போன பிறகு லண்டனில் என்ன செய்கிறீர்கள் என்று நேரடியாகக் கேட்டார். இந்தியப் பெண்களை விட வித்தியாசமான எழுத்தாளர் என்றும் சொன்னார். ஏன் என்று கேட்டேன். இந்தியப் பெண்களுக்கு தயக்கம் இருக்கின்றது எழுதுவதற்கு. அது உங்களிடம் இல்லை என்றார். நான் சொன்னேன் இலங்கையில் இருந்து கொண்டே தயக்கமில்லாமல் எழுதினேன். சாதிய கொடுமைகள் பற்றி எல்லாம் எழுதியிருக்கிறேன், லண்டனுக்கு வந்த பிறகு சுதந்திரமான பேச்சு இருக்கின்றதால் இன்னும் கூட எழுதுகின்றேன். ஆனால் எனக்கு தமிழில் எழுத இப்போதைக்கு நேரமில்லை என்று சொன்னேன். உங்களைப் போல் இருக்கின்ற பெண் எழுத்தாளர்கள் குறைவு, முடியுமானவரை எழுதுங்கள் என்று ஐயா சொன்னார். அது 1987 ஆம் ஆண்டு. அந்த ஆண்டில் நிறைய போராளிகளை லண்டனில் சந்தித்திருக்கின்றேன். ஓடி வந்த போராளிகள். ரெலோ உடைந்து பலர் அகதிகளாக வந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது ஐயா சொன்னது ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது. நிகழ்காலத்தில் தைரியமாக எழுதக்கூடியவர்களில் நீங்கள் ஒருவர். நேற்று நடந்ததைக் கற்பனையாக எழுதி அதை Mythology  ஆக்கத் தேவையில்லை. இன்று நடப்பதை எழுதி சரித்திரமாக்குவது தான் ஒரு எழுத்தாளனுக்கு தேவையானது என்ற மாதிரியான கருத்தை அவர் சொல்லுவார்.

புலம்பெயர்ந்தவர்கள் நிறையப் பிரிவுகள் தொடங்கினார்கள். அப்போது எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனால் படிப்பு, என்னுடைய தலையை அமத்திக்கொண்டிருந்து. சினிமா துறையில் வேலை தேடிக்கொண்டிருந்த அசதி ஒரு பக்கம் இருந்தது. ஆனாலும், தமிழ் மக்களின் உணர்வுகளைச் சார்ந்து தாங்கிக் கொண்டு வருகின்ற எழுத்துக்கள் நிறைய வரவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அவ்வளவுக்கு இலங்கையில் மாற்றங்கள். அது என்னுடைய எழுத்துக்களில் வரத் தொடங்கி விட்டது. ஐயாவுக்கும் அதைச் சொன்னேன். ஐயாவுக்கும் மகிழ்ச்சி. ஒவ்வொரு கதைகளையும் அனுப்பி வைப்பேன். சிலவேளைகளில். அவர் தேடிப் படிப்பார். அப்படித்தான் ஐயாவின் உறவு வந்தது. ஐயா இல்லை என்றால் 1985 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழில் எழுதியிருக்க மாட்டேன்.

ஐயா என்னை எழுதச் சொல்லி தூண்டிக்கொண்டிருந்தார். அதன் நீட்சியாக நான் சொன்னேன், நான் ஒரு சிறுகதைப் போட்டி தொடங்கப் போகிறேன், உதவி செய்வீர்களா என்று கேட்டேன். என்ன உதவி என்று கேட்டார். நான் பெண்கள் எழுதுவதற்கு ஊக்குவிப்பதற்கு பொருளாதார உதவி செய்வேன். ஆனால் இந்தியா வந்து கதைகளை வாங்கி, அதைத் தெரிவு செய்து, தேர்ந்து எடுக்க எல்லாம் என்னால் செய்ய முடியாது. அதற்கு ஒரு கூட்டம் வேண்டும், ஒரு குழு வேண்டும் என்று சொன்னேன். அவர் அதெல்லாம் ஏற்பாடு செய்தார். நான் செய்த வேலை அதை ஆரம்பித்தது. பெரும்பாலான வருடங்கள், முதலாவது வருடம், இரண்டாவது வருடம் எல்லாம் விழாவுக்கு போயிருக்கின்றேன். ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு வருடங்களும் போயிருக்கின்றேன். போய் அந்தப் பெண்களுக்கு பரிசு கொடுப்பது, ஊக்குவிப்பது, கூட்டங்களில் பேசுவது  எல்லாம் செய்திருக்கின்றேன். அதனால் 1998 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரை  நான் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு ஐயாவுடன் கொள்வேன். என்ன செய்கின்றீர்கள் ஐயா? ஐயாவுக்கு உடல் நலமில்லை. கண் தெரியாது. அம்மாவும் இறந்து விட்டார்கள். தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தால் நீங்கள் என்ன எழுதுகின்றீர்கள் என்று தான் கேட்பார். எழுதுவதைப் பற்றித் தான் சொல்லுவார். சில விஷயங்கள் சிலரால் தான் எழுத முடியும் என்று சொல்லுவார். அப்போது அவர் தமிழ் இணையம் ஆரம்பித்திருந்தார்.

ஐயா எனக்கு ஓர் ஆசானாக இருந்ததற்கு காரணம் என்ன என்றால், அவர் ஒரு இடது சாரி. சாதி, மதத்துக்கு எதிரானவர். சமத்துவத்துக்குச் சார்பாக நின்று போராடுபவர். ஆனாலும் எனக்கு அவருக்கும் கருத்து வேறுபாடுகளும் வரத் தொடங்கின. ஏன் என்றால் அவர் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர். விடுதலைப் புலிகள் என்பவர்களின் ஒரு பக்க கதையைத் தான் நீங்கள் கேட்கின்றீர்கள் என்று சொல்லிவிட்டு, அவர்கள் இயக்கங்கள் என்ற பெயரில் மற்ற இயக்கங்களை அழித்து ஒழித்தது மனித உரிமைக்கு அப்பாற் பட்டு செய்த விஷயங்களை அவருக்கு சொன்னேன். ஆனால், நாங்கள் அதைப்பற்றி நிறைய கதைக்கவில்லை. அவர் இறக்கும் வரைக்கும் தமிழ் தேசிய வாதத்தை நம்பியவர் என்று நினைக்கின்றேன். அதற்காக எதிர்க் கருத்துக்களை அவர் தீர்க்க நினைப்பவர் அல்ல.

ஒருமுறை ஒரு வாசகர் என்னிடம் கோவை ஞானி ஐயாவை ஜெயமோகன் தன் ஆசானாக கருதுவதாகச் சொன்னார். அப்படியா என்று வியந்தேன். அது உண்மையா என்று கேட்க விரும்பி ஐயா வீட்டுக்குப் போய் கதவைத் தட்டினேன். ஐயா தனியாகத் தான் இருந்தார். கேட்டேன். ஐயா சொன்னார், அபிப்பிராய பேதம் இருக்கலாம், ஆனால் அறிவாற்றலை மதிக்க வேண்டும் என்று. நான் சொன்னேன் அது என்னுடைய கோட்பாடு கூட என்று. எனக்கு என்னை விட வித்தியாசமாக எழுதுபவர்களிடம் திணிக்க நினைக்கின்ற மனம் இல்லை. Even I read the many voice. Everyone has the right to write ✍️ . அதை ஏற்றுக்கொள்ளுவதும், ஏற்றுக்கொள்ளாததும் வாசகர்களின் பொறுப்பு. அப்படி ஐயா பல விதமான மனிதர்களையும் ஈர்க்கக்கூடிய ஒரு பெருந்தன்மையான மனிதர். பெரும்பாலான மனிதர்களால் மதிக்கப்பட்ட ஒரு மனிதர்.

அசோகமித்திரன், சுஜாதா, வாஸந்தி ஆகியோர் உங்களுடைய எழுத்துச் செயற்பாட்டால் உங்களுடன் நட்பானவர்கள். அவர்களுடனான சிநேகிதம் உங்களில் என்ன வகையான செல்வாக்கைச் செலுத்தியது?

இவர்கள் அத்தனைபேரும் சென்னை இலக்கிய ஆளுமைகளில் ஒரு சிலர். சென்னையிலிருந்த  இலங்கை எழுத்தாளர் செ.கணேசலிங்கம் அவர்கள் எனது சில புத்தகங்களை வெளியிட்டார். எனது புத்தக வெளியீடுகளுக்கு வந்து எனது புத்தகங்களை விமர்சனம் செய்யச் சொல்லி மேற்கண்டவர்களுக்கு எழுதினேன. அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். எனது புத்தக விழாக்களுக்கு மேற்குறிப்பட்ட எழுத்தாளர்களை செ.கணேசலிங்கம் அவர்களிடம் சொல்லி அழைக்கச் சொன்னபோது அவர் அதைச் செய்தார். அதைத் தொடர்ந்து அவர்களுடனான எனது தொடர்பு எழுத்தாளர்களிடையே வரும் நட்பாக மாறியது.

வாஸந்தி அவர்கள் அக்கால கட்டத்தில் இந்தியா டுடே கெளரவ ஆசிரியராக இருந்தார். என்னிடம் படைப்பகள் கேட்டார். அவரின் பத்திரிகைக்கு ‘மிஸ்ட்டர் டெய்லர் அன்ட் மிஸிஸ் குமார்’ என்ற கதை ,‘இன்னும் ஒரு கிளி’, ‘மிஸ் ஜேன் நாதன்’, ‘அப்பாவின் சினேகிதி’ போன்ற சிறுகதைகளை எழுதினேன். அதைத் தொடர்ந்து இந்தியா டுடே பத்திரிகையில் ஒரு பக்க எழுத்து விருந்தினராக (கொலமிஸ்ட்) சிலவருடங்கள் எழுதினேன். வாஸந்தி இன்றும் எனது சினேகிதி.

2019ம் ஆண்டு லண்டனுக்கு வந்தபோது அவருக்குப் ஒரு கூட்டமும் ஒழுங்கு செய்தோம். இந்தியா போயிருக்கும் காலத்தில் அவருடன் செலவழித்த சில நாட்கள் மிகவும் இனிமையானவை. அவரின் வீட்டருகே மியுசிக் அக்கடமி இருந்தது. இனிமையான இசை மனதைக் கொள்ளை கொள்ளும். அவரின் மொட்டை மாடியில் உலகத்திலுள்ள பலவிதமான பூச்செடிகளும் பூத்துக் குலுங்கும். ஓரு நாள் இரவு நீண்ட நேரமாக இருவரும் அவரது மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்தோம். அன்று முழநிலவு. அந்த நேரம் முழு நிலவில் கடல் பொங்கிக் குதூகலிப்பதைப் பார்க்க ஆசையாக இருக்கிறது என்றேன். அப்போது அவருடைய கணவர், ‘என்ன இவ்வளவு நேரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்’ என்ற தோரணையில் எங்களை எட்டிப் பார்த்தார். வாஸந்தி என்னுடைய விருப்பத்தை அவரிடம் சொன்னார். அவர் எங்களை மெரினா பீச்சக்கு அழைத்துச் சென்றார். கிட்டத்தட்ட நடுநிசியான அந்த நேரத்தில் கடற்கரையில் அமைதி. நிலவைக்கண்ட சந்தோசத்தில கடல் பொங்கிப் பூரித்துக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் உலகத்தில் எந்தத் துன்மமுற்ற குழந்தைகள் மாதிரி, எங்கள் ஆசைதீர அலைகளுடன் ஓடிப்பிடித்துச் சந்தோசப்பட்டோம். அவரின் கணவர் காரில் இருந்தபடி எங்கள் நள்ளிரவு கேளிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தார். எனது அருமையான நினைவுகள் அவை. இன்னொரு தரம் திரும்பி வராதவை. எழுத்தும், நல்லெண்ணமும் சிலரைக் குழந்தைகளாக்குவதற்கு அந்தச் சந்தர்ப்பம் ஒரு சாட்சியாகும். என்றும் என் மனதில் மறையாது குடியிருக்கும் பல நல்ல நண்பர்களில் அவர்களும் அடங்குவர்.

திரு.அசோகமித்திரனைச் சிலதடவைகள் சந்தித்திருக்கிறேன். பழகுவதற்கு மிகவும் அன்பான, பண்பான, கௌரவமான மனிதர் அவர். ஓருநாள் அவரை அழைத்துக் கொண்டு தி.நகருக்குச் சென்றேன். அவரின் கதைகளில் ‘பிரளயம்’ என்ற வார்த்தை அவ்வப்போது வரும். அன்று தி.நகரின் சன நெருக்கம் அவர் சொல்லும் ‘பிரளயமாக’ என்னைத் திடுக்கிடப் பண்ணியது. எப்படித் தெருவைக்கடப்பது என்ற பயம் என்னைப் படாதபாடு படுத்தியது. சட்டென்று வந்த லாறிக்குப் பயந்து அவரின் கையைப் பிடித்துக்கொண்டேன். பகிரங்கமான இடத்தில் அன்னிய பெண் ஒருத்தி தனது கையை இறுக்கப் பிடித்த அதிர்ச்சி அவரின் முகத்தில் தெரிந்தது. மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். லண்டனிலிருந்து வந்திருக்கிறீர்கள், அங்கு இப்படிக் கண்டபாட்டுக்கு வண்டிகள் ஓட்டமாட்டார்கள் என்று நினைக்கிறேன்’ என்று சமாளித்தார். அவருடைய எழுத்துக்கள் மட்டுமல்ல அவரின் பண்பான, அன்பான சினேகிதமும் என்னால் மறக்கமுடியாதவை.

திரு. சுஜாதா அவர்கள் எனக்கு மிகவும் வேண்டிய நண்பர்களில் ஒருத்தர். எனது புத்தகங்களை விரிவாக விமர்சனம் செய்த ஆளுமைகளில் ஒருத்தர். ஓரு எழுத்தாளன் என்ற உறவோடு ஆரம்பித்த அவரின் உறவு அவரின் மகன் லண்டனில் வேலை செய்து கொண்டிருந்த போது, அந்த மகனின் குடும்பம் எனது வீட்டுக்கு வந்து போகுமளவுக்கு வளர்ந்திருந்தது. எனது திரைப்படத் துறையில் நான் பெரிதாக ஒன்றும் செய்யமுடியவில்லை என்ற துக்கம் அவருக்கு இருந்தது. எனது தனிப்பட்ட வாழ்க்கைச் சுமையால் ஒரு படத்தயாரிப்பாளராக என்னால் வரமுடியவில்லை என்ற எனது துன்பத்தை அவருடன் பகிர்ந்து கொள்வேன். அவர், டைரக்டர் ராஜீவ் மேனனனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆனாலும், எனது வாழ்க்கை நெருக்கடிகளால் என்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. இலங்கை வைத்தியர்களின் வேண்டுகோளின்படி ‘சுகாதாரக்கல்வி’ பற்றிய இருபுத்தகங்களை எழுதும்போது சுஜாதாவும் எழுத்தாளர், மாலனும் மிகவும் காத்திரமான பல அறிவுரைகளை வழங்கினார்கள். இவர்களுக்கு நான் எப்போதும் நன்றியாயிருப்பேன்.

பாலு மகேந்திரா எனது அன்பான ‘சகோதரராக’ நான் கணிப்பிடும் ஒரு ஆளுமை. என்னைப்போல் அவரும் கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர். என்னைப்போல் அவரும் ஒரு திரைப்படப் பட்டதாரி. அத்துடன் இலக்கியத்தில் மிகவும் பற்றுள்ளவர். லண்டன் திரைப்படக் கல்லூரியையை மையமாக வைத்து நான் எழுதிய அரசியல், இலங்கையில் இந்திய இராணுவத்தினரின் கொடுமை, லண்டனில் திரைப்படத்துறை, லண்டனில் ஆங்கில-இலங்கை சார்ந்த மாணவர்களுக்கிடையே வந்த காதல் வாழ்க்கை, போன்ற விடயங்களை வைத்து அவனும் சில மனிதர்களும் என்ற நாவலை நான் எழுத மிகவும் தூண்டுதலாகவிருந்தவர். அந்த புத்தக அறிமுகத்திற்குப் பல ஆளுமைகளான, அசோகமித்திரன், வாஸந்தி, கணேசலிங்கம் போன்றவர்கள் வந்து அந்த நாவல், திரைப்படத்துறையை ஆழமாகப் பார்க்கும் ஒரு ‘முத்திரை’ நாவலாகப் பார்க்கப்படவேண்டும் என்று பேசியபோது பெருமைப்பட்டவர். அவரும் திரைப்படத் துறை மாணவராகவிருந்தபடியால் அந்த நாவல் என்ன மாதிரியான யதார்த்தங்களைக் கொண்டுவருகின்றது என்ற தெரிந்துகொண்டவர்.

திருமதி. ராஜம் கிருஷ்ணன் எனது மதிப்புக்குரிய எழுத்தாளப் பெண்மணி. எனது சிறுவயதில் தமிழ் இலக்கிய உலகில், அவரின் பிராமண வர்க்கம் சாராத மக்களின் ‘யதார்த்த’ விடயங்களை எழுதியவர். அவரை 1987ல் சந்தித்தேன். அவரின் வீட்டில் ஆடும் ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு அவர் தந்த இனிப்புகளைச் சாப்பிட்டுக் கொண்டு இருவரின் இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது மறக்கமுடியாத இனிய ஞாபகங்களில் ஒன்று. 1994ம் ஆண்டு ‘எண்பதுகளில் தமிழ் நாவல்கள்’ என்ற இலக்கிய ஆய்வுப் புத்தகத்தை கோவை ஞானி அய்யா அவர்கள் எழுதும்போது அவர் குறிப்பிட்ட முற்போக்குப் பெண் எழுத்தாளர்களாக, ராஜம் கிருஷ்ணன், காவேரி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சிவகாமி, போன்றவர்களை அடையாளம் காட்டி எழுதியிருந்தார். ஆனால் ராஜம் கிருஷ்ணன் பற்றிப் பெரிதாகப் பெண்ணியவாதிகள் பேசாதது துக்கமான விடயமே.

திரு.மாலன் அவர்கள், எனது நல்ல நண்பர்ளில் ஒருத்தர். 1981ம் ஆண்டு யாழ்ப்பாணம் நூலகம் எரிந்தபோது முதல்முதல் குரல் எழுப்பிய இந்திய எழுத்தாளர் இவர். அதுத்துடன் இவர் ஆசிரியராக இருந்த பத்திரிகைகளில் இலங்கை எழுத்தாளர்களுக்கு இடம் கொடுத்தார். சன் டிவியிலிருக்கும்போது என்னைப் போன்ற எழுத்தாளர்களைப் பேட்டி கண்டார். தினமணி ஆசிரியராகவிருந்தபோது ஒரு இதழை இலங்கை எழுத்தாளர் படைப்புக்களுக்கு அர்ப்பணித்தார். அத்துடன் புலம் பெயர் எழுத்தாளர்களின் படைப்புக்களை ‘கண்களுக்கப்பால் இதயத்திறகு அருகில்’ என்ற தொகுதியில் கொண்டுவந்தார். அண்மையில் புலம் பெயர் கவிஞர்களின் படைப்பை வெளியிட்டிருக்கிறார். அதற்கு நன்றிக்கடனாக, கொங்கு நாடு அறிவியல் விஞ்ஞானக் கல்லூரியைச்சேர்ந்த த. பிரியா அவர்கள் எனது எட்டு நாவல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டத்திற்கு எழுதிய ஆய்வு நூலை லண்டனில் வெளியிட அவரை அழைத்திருந்தேன்.

I’m not a post man என்பார் காஃப்காஉங்களது கதைகளில் இருக்கும் முற்போக்கு கூறுகள் சிலசமயம் பலவந்தமாகக் கருத்துகளை சொல்வது போல் அமைந்துவிடுகின்றன, என்பதை ஒரு விமர்சனமாக முன்வைத்தால் உங்களுடைய பதில் எவ்வாறு இருக்கும்?

இருக்கலாம், ஆனால் நான் எந்த விடயத்தையும் பலவந்தமாகப் ‘புகுத்துவது’ கிடையாது. அதாவது எனக்குத் தெரியாத விடயங்களை நான் எழுதுவது மிகவும் அருமை. என்னுடைய எழுத்தைப் படிப்பவர்கள், நான் ஏதோ ‘கருத்தை’ புகுத்துவதாகக் கருதினால் நான் என்ன சொல்ல முடியும்? நான் லண்டனுக்கு வந்த காலத்திலிருந்து எனது பெரும்பான்மையான காலம் தமிழர்கள் அல்லாதவர்களுடன், படித்த, வேலை செய்த, போராடிய, சினேகிதமாக இருந்தகால கட்டமாகும். அந்த மாதிரியான வாழ்க்கைச் சூழலில் தெரிந்து கொண்ட, புரிந்து கொண்ட, ஏற்றுக் கொண்ட, கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிற பல விடயங்களுள்ளன. அவற்றை எழுதுகிறேன். அவை எல்லாம் தமிழ் வாசகர்களுக்குத் ‘திணிப்பதாக’ இருக்கவேண்டும் என்று எழுதுப்படவில்லை. ஏனென்றால் நான், அரசியல், சமய, தேசியப் பிரசாரம் செய்பவரல்ல. எனது தாரக மந்திரம், அன்பும் அறமும் சாந்த ‘மனித உரிமை’, சமத்துவம் என்பதுதான். இவைக்கு அப்பாற்பட்ட உலகத்தில்தான் பெரும்பாலான மனிதர்கள் வாழ்கிறார்கள். ஒவ்வொருத்தரும் தாங்கள் வாழும் சூழ்நிலையிலிருந்துதான் மற்றவர்களையும் உலகையும் கணிப்பிடுகிறார்கள். பெரும்பாலான எழுத்தாளர்கள், முக்கியமான விடயங்களைப் பட்டும் படாமலும் எழுதுகிறார்கள். நான் சிலவேளைகளில் அந்தத் ‘தந்திரம்’ தெரியாமல் அப்பட்டமாக எழுதிவிடுகிறேன்.

நீங்கள் தமிழ்க் கடவுள் முருகனைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறீர்கள். அந்தப் பின்னணியில் கேட்கிறேன். இலங்கையில் சமஸ்கிரத மயமாதல் நடந்துகொண்டிருக்கிறதா… ஏனெனில் சிறு தெய்வ வழிபாடுகள் அங்கு அருகி வருகின்றன..

சமயம் என்பது பணம் சேர்க்கும் மிகவும் பிரமாண்டமான ஓர் ஒழுங்கு முறையாகும். Religion is a vast corporation. It has many of money-making ideologies as well as brain washing techniques. பெருந்தெய்வங்களைக் கொண்டாடும் சமூக அமைப்புக்களால் இன்றைய உலகக் கட்டுமானங்கள் ஒழுங்கு படுத்தப் பட்டிருக்கினறன. சிறு தெய்வ வழிபாடு பற்றி நான் அண்மையில் தென்னாட்டுப் பல்கலைக்கழகமொன்றுக்குக் கொடுத்த சொற்பொழிவின் ஒருபகுதியை இங்கு குறிப்பிடுவதால் ஒன்றிரண்டு விடயங்களைச் சொல்லலாம் என்று கருதுகிறேன்.

ஆரிய உள்ளீடு தமிழகத்தில் வந்ததால் சிறு தெய்வங்கள் ‘தீண்டத்தகாத’ கடவுளர்கள் ஆனார்கள். அத்துடன், சில சிறு தெய்வ வழிபாட்டுத் தெய்வங்கள் பெரு தெய்வங்களாக உருமாற்றம் செய்யப் பட்டார்கள். பல்லாயிர ஆண்டுகள் பெயரும் புகமும் பெற்று வாழ்ந்த நாகரிகத்தையுடைய தமிழ் இனம், ஆரியரின் வருகையால் பெருமாற்றங்களைக் கண்டது. தமிழர்கள், அவர்கள் செய்யும் தொழில் முறையில் சாதிரீதியாகப் பிரிக்கப்பட்டார்கள். பெரிய சாதிக் கடவுளர்கள் புதிதாக உருவாக்கப்பட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவிருந்தார்கள். வழிபாட்டு முறைகள் பிராமணத்தின் முறையில் நகர்த்தப்பட்டன. அர்ச்சனை, விசேட பூஜைகள் என்று புதிய ‘வழிபாட்டு’ முறைகள் உருவெடுத்தன.

சங்க காலத்தில் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ‘இயற்கை வழிபாடுகள்’ அதாவது, குறிஞ்சிக் கடவுள் முருகன், முல்லைக் கடவுள் திருமால் அல்லது மாயோன், பாலைக் கடவுள் கொற்றவை அல்லது காளி, மருத நிலக்கடவுளாக வேந்தன் அல்லது இந்திரன் அல்லது வாயு, நெய்தல் நிலக் கடவுளாக வருணன் அல்லது கடலோன் என்ற பெயர்களில் திராவிடத் தமிழர் இயற்கையைப் போற்றி வணங்கினார்கள். இந்தக் கடவுள்களும் ஆரிய மயமடுத்தப் பட்டார்கள்

சிறு தெய்வ வழிபாட்டின் வரலாற்றுப் பின்னணி ஒரு நோக்கு என்ற கட்டுரையை எழுதிய திரு மா. நாகராஜா அவர்களின் கூற்றின்படி, ‘மனித குல வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே அமைந்துள்ளது. சமுதாயத்தில் இரு வர்க்கங்கள் எப்போதும் பிளவுண்டு ஒன்றையொன்று எதிர்த்தும், சார்ந்தும், வரலாற்றை நகர்த்திச் சென்றுள்ளன. ஆன்மீகம் சார்ந்த சமயங்களும், இந்த இரு பிரிவினர்களுக்கு உரிய முறையில் வளர்ச்சியடைந்துள்ளன’ என்று கூறுகிறார்.

அவர் கூற்றிலிருந்து, ‘மக்கள் மயப் படுத்தப்பட்ட சிறு வழிபாடுகளும் எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்தபின்னரும் அந்த வழிபாட்டில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால் இன்னும் நீடித்துக்கொண்டு செல்கிறது என்பது தெரியும். அத்துடன், ‘வடமராட்சியில் சிறு தெய்வழிபாடு, சில அறிமுகக்குறிபபுகள்’ என்ற கட்டுரையை எழுதிய திரு.பா.இரகுவரன் தனது கட்டுரையில் காட்டிய , ‘அலெக்ஷணெடர் கோத்திரோவ்’ என்பவரின் மேற்கோளையும் சொல்லலாம்.

‘மனித சமூகங்களில், காணப்படும் வழிபாட்டு முறைகள் இதனுடன் தொடர்புடைய சடங்குககள், புராண ஐதீகக் கதைகள், கிராமியக் கதைகள், மற்றும் கற்பனைக் கதைகள் என்பவற்றில் இருந்து பொய்களை நீக்கி வடித்தெடுப்போமானால், காலத்தை மறைத்து நிற்கும் திரையூடே உண்மையான சமூக வரலாற்றைப் புரிந்து கொள்ளலாம்’.

இலங்கையில் இன்று சிறுதெய்வங்களும் பெருதெய்வங்களாக்கடுகிறார்கள். இந்துத்துவா கருத்தோட்டம் பல இடங்களில் பரவுகிறது. இவை எல்லாம் பணம் சேர்க்கும் அடிப்படையிலானவை. துரதிர்ஸ்டவசமாக இலங்கையில், பெருங்கடவுளர்களுக்குத் தேர் இழுக்க இராணுவத்தை அழைக்கும் நிலையில் தமிழர் சாதி ரீதியான வாழ்க்கைமுறையைத் தொடர்கிறார்கள்.

‘Escape from genocide’ என்ற ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறீர்கள். இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என்ற கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

1971ம் ஆண்டு ஜே.வி.பி ஆயதப்போராட்டம் தொடங்கியதும் இலங்கை அரசு இந்திய அரசுடன் சேர்ந்துகொண்டு மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 10,000 இளம் ஆண்களையும் பெண்களையும் கொன்று குவித்தார்கள். 1972ல் ஆத்திரத்தில் இருந்த சிங்கள் மக்களைத் திருப்திப்படுத்த ‘சிலோன்’ என்ற காலனித்துவப் பெயர் ஸ்ரீலங்காவாக மாறியது. பேரினவாதம் தமிழரை ஒழிப்பதை எதிர்த்துப் போராட, 1974ம் ஆண்டிலிருந்து, லண்டனிலிருந்த தமிழ்மாணவர்கள் ஆயதப்போராட்டத்தை முன்னெடுக்கச் சிந்தித்தார்கள். லண்டனில் படித்துக்கொண்டிருந்த முற்போக்கு மாணவர்கள், பாலஸ்தீனத்திற்குப் போய்ப் பயிற்சி பெறமுயன்றார்கள். 1977ல் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவார்த்தனா, முழுக்க முழுக்க மேற்கத்திய நாடுகளின் பொம்மையாக அரசு நடத்தினார்.

முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்ரேலை, மத்திய தரைக் கடற்பிரதேசத்தில் எப்படியும் வல்லமையுள்ள நாடாக உருவாக்க அமெரிக்கா உதவிக்கொண்டிருந்தது. அதே நேரம் அவர்களின் கைப் பொம்மையான ஜே.ஆர் ஜெயவார்த்தனாவுக்குத் தமிழ்ப் போராளிகளால் பிரச்சினை வருவதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. இலங்கைகக்கு அவர்கள் தாராளமான விதத்தில் பயிற்சிகளும் ஆயுதங்களும் கொடுத்தார்கள். அதை அறிந்த இந்தியா, இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கப் பயிற்சி கொடுத்தது.

இலங்கைத் தமிழரின் வரலாற்றையே ஒட்டுமொத்தமாக அழிக்கும் வேலையை யு.என்பி அரசு தொடங்கியது. ஓரு இனத்தை அழிப்பதற்கு முதற் கண்ணாக அவர்களின் மொழியை அழிப்பது எதிரியின் நோக்கத்தின் பிரதானமாகவிருக்கும். அதன் எதிரொலியாக 1981ம் ஆண்டு யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப் பட்டது. அதையுணர்ந்துகொண்ட மனித உரிமைவாதிகள் இலங்கை அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பினோம். 1983ம் ஆண்டு கலவரம் இலங்கையரசின் இன ஒழிப்புத் திட்டத்தை அப்பட்டமாக உலகுக்குக் காட்டியது. அதையொட்டியே நான் 1986ம் ஆண்டு ‘எஸ்கேப் புறம் ஜெனசைட்’ என்ற டாக்யுமென்டரியை எடுத்து மேற்கு ஐரொப்பிய மனித உரிமை நிறுவனங்களுக்குக் காட்டினேன்.

இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்தில் நீங்களும் சில எழுத்தாளர்களும் மகிந்த அரசின் அழைப்பில் அல்லது அவர்களுடைய அனுசணையில் இலங்கைக்குச் சென்றிருந்தீர்கள். தடுப்பு முகாம்களுக்கும் போனீர்கள். யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு புலிகளிடம் கோரிக்கை வைத்தீர்கள். யுத்த முனையில் செத்துக்கொண்டிருந்த அப்பாவி மக்களின் படுகொலைகளுக்கு – கூட்டுப்பொறுப்பை ஏற்றே ஆக வேண்டிய மகிந்த அரசின் அனுசரணையில் அந்த விஜயத்தை மேற்கொண்டதைப்பற்றி என்றைக்காவது குற்ற உணர்ச்சியை உணர்ந்திருக்கிறீர்களா?

Picture2-1.jpg?resize=193%2C391&ssl=1

இலங்கையில் போராளிகள் மாவிலாற்றை அடைத்ததால் அதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டின் ஆரம்பத்தில் போர் தொடங்கியிருந்தது. இந்தியாவால் கொண்டு வரப்பட்ட 13ம் திருத்த சட்டத்தை தமிழர்கள் ஏற்றுக் கொண்டால் போர் தொடராமல் தடுக்கலாம் என்ற எண்ணத்தில், 13ம் அமென்டமென்ட் பற்றித் தமிழத் தலைமைகளுடன் பேச எங்களை, ‘ஒரு நல்லுணர்வு தூதுக்குழுவாக’ அழைத்தார்கள்.

ஓரு நாட்டில் பிரச்சினை வந்தால் அந்நாட்டைச் சேர்ந்த ‘நல்லுணர்வாளர்கள்’ தங்கள் நாட்டின் அழைப்பின் நிமித்தம் செல்வது பல இடங்களில் நடக்கும் விடயமாகும். அப்படியே லண்டன், நோர்வே போன்ற நாடுகளிலிருந்தும் இலங்கை செல்வதற்கு லண்டனிலுள்ள ஆர்.ஜெயதேவன் தலைமையில் தூதுக் குழுவாகச் செல்வதாக முடிவு செய்யப்பட்டது. 12.2.2008ல் பிரித்தானிய வெளியுறவு அமைச்சிடம் நாங்கள் சென்று இலங்கை அரசாங்கம் எங்களை அழைத்த விடயம் பற்றிய விளக்கத்தைக் கொடுத்தோம். அவர்களின் அனுமதியுடன், 16.2.2008ல் நாங்கள் இலங்கைக்குச் சென்று இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர்கள், யாழ்ப்பாண பிஷப் போன்ற மதகுருமார் அத்தனைபேரையும் சந்தித்து 13வது அமென்ட்மென்ட் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய அவசியத்தை உணர்த்தினோம்.

அரச தரப்பில் திஸா விதாரண, தமிழ்த் தலைவர்களில் ஆனந்தசங்கரி போன்றவர்களையும், எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அத்துடன் திரு கரு ஜெயசூரியா, ஜேவிபி தலைவர் திரு அமரசிங்க போன்றோரையும் சந்தித்து எங்களின் இலங்கை விடயம் பற்றிச் சொன்னோம். நாங்கள் சந்தித்த அத்தனைபேரும் எங்கள் நல்லெண்ண விஜயத்தைப் பாராட்டினார்கள்.

21.2.2008 அன்று தமிழ்த்தேசியக் கூட்டணித் தலைவர் திரு சம்பந்தரைச் சந்திக்கப் பாராளுமன்றம் சென்று மணித்தியாலங்கள் காத்திருந்தோம். அவர் எங்களைச் சந்திக்கவில்லை. 13ம் ‘அமென்ட்மென்ட்’ முன்னெடுக்கப் படவில்லை. போர் தொடர்ந்தது. பலர் அழிந்தார்கள். தமிழ்த் தலைமைக்குத் தூரநோக்குக் கிடையாது என்பது புரிந்தது.

இந்த ‘நல்லெண்ண விடயம்’ பிரித்தானிய பிரஜை என்ற முறையில் பிரித்தானிய அரசின் அனுமதியுடன் நாங்கள் சென்ற பிரயாணம். ஓரு நாட்டிலிருந்து ‘நல்லெண்ணத் தூதுவர்களை’ இன்னொரு நாடு அழைத்தால் அந்தப் பிரயாணச் செலவை அவர்களே ஏற்றுக் கொள்வார்கள். இது அகில உலக சம்பிரதாயம். நான் தமிழ் அகதிகளின் தலைவியாயிருக்கும்போது, எனது முழுநேர நேர வேலையை (ஜி.எல்.சி.ஒபிஸர்) இராஜிநாமா செய்து விட்டு தமிழ் மக்களுக்காகப் பணி புரிந்தவள். என்னுடன் வேலை செய்தவர்களுக்கு எனது நேர்மை தெரியும். தமிழர் பெயரில் பணம் சேர்த்து கோடிகளைத் தேடிய கேடிகளுக்கு எங்களைப் போன்றவர்களின் நேர்மையோ மனித நேயமோ புரியாது. நான் வாழும் எனது பிரித்தானிய நாட்டு அனுமதியுடன், நான் பிறந்த நாட்டின் ‘நல்லெண்ண தூதுவராகச் சென்று’ போர் தொடராமல் ஒரு நல்வழி கிடைக்குமா என்ற பேச்சுவார்த்தைக்குச் சென்றோம். இலங்கையில் உள்ள தமிழர் தரப்பில் அதுபற்றிய அக்கறையோ பொதுமக்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற இரக்க உணர்வோ இருந்ததாகத் தெரியவில்லை என்பது அவர்கள் எங்களைச் சந்திக்க மறுத்ததிலிருந்து புரிந்தது.

புலிகளை மிகக் கடுமையாக எதிர்த்தவர் நீங்கள். அதற்கு நீங்கள் முன் வைக்கின்ற காரணங்கள் அத்தனையும், எல்லா இலங்கை அரசுகளுக்கும் பொருந்தக் கூடியவையே. ஆனால் அதேயளவு மூர்க்கமான எதிர்ப்பை நீங்கள் இலங்கை அரசுக்குக் காட்டியதில்லை. இன்றைக்கும் லண்டன் இலங்கை தூதரகத்தில் கொண்டாடப்படும் இலங்கைச் சுதந்திர தின விழாக்களில் பங்கு பற்றுகிறீர்கள் அல்லவா?

இலங்கை அரசை எப்படி எதிர்த்தேன் என்பதை பிரித்தானிய ஆங்கிலப் பத்திரிகைகள், பிபிசி நேர்காணல்கள் பதிந்திருக்கின்றன. பிரித்தானியா ஆதரிக்கும் இலங்கை அரசைச் சாடும் என்னை ‘பிரித்தானிய விசேட படை’ விசாரணை செய்தது பற்றிய விடயங்கள் பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டன. ‘நியு ஸ்ரேட்ஸ்மன்’ என்ற பத்திரிகை மட்டுமல்லாது பல பத்திரிகைகளில் 1982-83ம் ஆண்டுகளில் இச்செய்திகள் வந்து கொண்டிருந்தன. நேரமிருந்தால் ஆய்வு செய்துபாருங்கள்.

புலிகளைக் கடுமையாக எதிர்த்ததற்குக் காரணம், அவர்கள் இயக்க முரண்பாடுகள் என்ற பெயரில் தமிழர்களுக்குச் செய்த கொடுமைகள் மன்னிக்க முடியாதவை என்பதாலேயே. ஈ.பி.டி.ஆர்.எல்.எவ்வுக்கு எதிரான கந்தன் கருணைக் கொலைகள், ஆரிய குளம் சந்தியில் டெலோ போராளிகளை டயர்போட்டு உயிருடன் எரித்த (6.4 1986) கொடுமை, துணுக்காயில் ஹிட்லரும் நினைக்காத அளவு டோச்சர் காம்புகளை அமைத்துச் செய்த கொடுமைகள், மகேஸ்வரி, ராஜனி திரணகம, ஊடகவியலாளர் ரேலங்கி, செல்வி போன்ற பெண்களைக் கொலை செய்தது போன்ற செயல்களை எப்படி அங்கீகரிப்பது? குறிப்பாக கருணா தலைமையில் மட்டக்களப்பு போராளிகள் பிரிந்தபோது 10.௦4.2004ல் வாகரைக் காட்டில் புலிகள் செய்த படுகொலைகள், கிழக்குப் பெண் போராளிகளைப் பாலியல் வன்முறை செய்து கொலை செய்து, உடல்களைக் கண்டதுண்டமாக்கிக் காட்டு மிருகங்களுக்க எறிந்தார்கள் என்றெல்லாம் மற்றவர்கள் சொல்லும்போது தாங்கமுடியாதிருக்கிறது. அத்துடன் பிரிந்த கிழக்கிலங்கை ஆண் போராளிகளை உயிருடன் பெட்ரோல் டாங்கில் போட்டு வெடிக்க வைத்தார்கள் என்று கேள்விப்படும்போது ஆத்திரம் வராமல் இருக்குமா? எதிரி செய்யம்போது அவன் எதிரி என்றே செய்கிறான். ஆனால் ஒரே மொழி பேசும் மக்கள் இப்படி மிருகமாக நடந்து கொள்ளும்போது என்னவென்று நாங்கள் மனித உரிமைவாதிகள் முன் தலையுயர்த்தி நிற்கலாம்?

இலங்கை அரசுடன் எனக்கு எந்தவிதமான சொந்த நலம் பற்றிய உறவும் கிடையாது. நான் நெல்சன் மன்டேலாவின் அரசியல் போராட்டத்தில் நீண்டகாலம் ஈடுபட்டவள். தென் ஆபிரிக்கப்போர் முடிந்து சமாதானம் வந்ததும் ‘மறக்கவும் மன்னிக்கவும் பழகினாற்தான் நாங்கள் எங்கள் நாட்டில் முன்னேற்றத்தைக் காணலாம்’ என்றார் அவர். நான் மனித உரிமைவாதி. மூர்க்கமும் வக்கிரமும் அழிவுப் பாதைக்குக் கொண்டுசெல்லும். இலங்கையிலுள்ள பெரும்பாலான தமிழர்கள் ஒற்றுமையாய் வாழ முயற்சிக்கிறார்கள். வெளிநாட்டில் இருக்கும் தமிழ்த் தேசியவாதிகள், இலங்கைத் தமிழரைத் தங்கள் பணம் சேர்க்கும் முயற்சியின் மூலதனமாக்கி அவர்களின் ‘பிரச்சினையைக்’ காட்டி இங்கு நன்றாக வாழ்கிறார்கள்.

பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்கு நூற்றுக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் வருகிறார்கள். ஆடல்கள் பாடல்கள் செய்கிறார்கள். இலங்கைத் தூதுவராலயத்திற்குப் பினவழியால் போகும் பிரமுகர்கள் பலர் இருக்கிறார்கள். நான் சுதந்திர தினத்திற்குப் போவதுபற்றி வெட்கப் படவில்லை. அந்நியரிடமிருந்து எங்கள் நாடு சுதந்திரமடைந்தது பற்றி நாங்கள் சந்தோசப் படவேண்டும். இப்படி என்னை மட்டம் தட்டுவதற்கு, என்னிலுள்ள பொறாமையே காரணமே.

இலங்கைக்கு நான் ‘நல்லெண்ணத் தூதுவராக’ 2008ம் ஆண்டு மாசிமாதம் சென்றேன். ஆனால் எனக்கு எதிராக 1995ம் ஆண்டுகளுக்கப் பின்னரே ஒரு கூட்டம் சேறடிக்கத் தொடங்கிவிட்டது.

இந்தியாவில் எனது எழுத்துக்குள்ள மதிப்பு அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாதிருக்கிறது. அத்தடன் இலங்கையில் சமாதானம் பற்றிய கருத்தரங்குகளுக்கு ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி 2011ல் என்னை அழைத்ததை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையில் சமாதானம் பற்றி கருத்தாடலுக்குச் சென்று, 2012ம் ஆண்டு 4 கிழமைகள் பல கருத்தாடல்களில் பங்குகொண்டேன். 1980குளில் எனது தமிழ் மக்களுக்காக எப்படிப் பாடு பட்டேனோ அதே மாதிரி இன்று இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அமைதிக்கும் நனமைக்குமாக என்னால் முடிந்ததைச் செய்கிறேன். எனது பொது வேலையையும் எழுத்தையும் முடிச்சுப் போட்டுப் பொறாமையில் குதிக்கிறார்கள்.

இலங்கையிலும், இந்தியாவிலும் பல மாணவர்கள் எனது படைப்புக்களை ஆய்வு செய்வது அவர்களால் தாங்கமுடியாதிருக்கிறது. இங்கிலாந்துப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் உரையாற்றியிருக்கிறேன். பிறிஸ்டல், அபர்டின், சிட்டி யூனிவர்சிட்டி,சசக்ஸ் யூனிவர்சிட்டி மட்டுமல்லாது சுவிட்சர்லாந்து போர்ன் யூனிவர்சிட்டி, இந்தியாவில், சென்னை, மதுரை, பாரதி, அழகப்பா, கொங்குநாடு, சிவகாசி, திண்டுக்கல், தஞ்சாவூர் ,எத்திராஜ், அத்துடன் இன்னும் பல பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவாற்றியிருக்கிறேன். இன்னும் செய்து கொண்டிருக்கிறேன்.

என்னடைய சிறுகதைகள், இதுவரை உலகம் பரந்த விதத்தில், இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், நோர்வேய, ஜேர்மனி, நெதர்லாந்து, கனடா,சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலிய போன்ற நாடுகளில் கிட்டத்தட்ட முப்பது பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. எட்டு நாவல்களும், ஏழு சிறுகதைத் தொகுதிகளும், இரண்டு மருத்துவ நூல்களும், முருகக் கடவுள் பற்றிய ஆய்வுப் புத்தகமுமாக இதுவரை பதினெட்டு படைப்புக்கள் எழுதியிருக்கிறேன். இரண்டு சாகித்திய அக்கடெமி அவார்ட்ஸ் தொடக்கம் இந்தியாவிலும் இலங்கையிலும் பலவிமான பரிசுகள் பெற்றிருக்கிறேன்.

ஆனால் 2000ம் ஆண்டு சென்னையில் நடாத்தப்பட்ட ‘தமிழ் இனி’ என்ற விழாவில் வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டேன். வேண்டுமென்றே பிராந்திய வெறிபடித்த ஒருசிறு கூட்டம் இப்படியான இழிவு வேலைகளைச் செய்கிறது. அதற்கு என்னை இலங்கை அரசுடன் சேர்த்துச் சேறடிக்கிறார்கள். 2000ம் ஆண்டு தமிழ் இனி நடக்கும்போது நான் எனது வேலையில் முழுமூச்சாக இருந்தேன். இலங்கை அரசுக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் இலங்கையில் யு.என்.பி அரசுவந்தால் ஒன்றாய்ச்சோர்ந்து மகிழும்போது இவர்கள் கண்களைக் குருடாகக்கிக் கொள்கிறார்களா எனக்குத் தெரியாது.

 

அனோஜன் பாலகிருஷ்ணன் 

 

தமிழில் இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க சிறுகதை ஆசிரியர். இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. இலக்கிய விமர்சன, மதிப்பீடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார். தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார்.

 

https://akazhonline.com/?p=3076

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நீங்கள் வெளியிட்ட நீண்ட கட்டுரை படித்து பலதும் தெரிந்து கொண்டேன் நன்றி.

10 hours ago, கிருபன் said:

இலங்கை பிரிவதைத் தடுக்க முடியாது என்றார். நான் கேட்டேன் என்னென்று பிரிய முடியும்? நாங்கள் சிறு நாடு அல்லவா… என்று. அதற்கு அவர் எனக்கு உதாரணம் சொன்னார். இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஸ் பிரிந்தது என்று சொன்னார்.

இந்தியாவிலிருந்து பிரிந்த பாக்கிஸ்தானும் பாக்கிஸ்தானிலிருந்து பிரிந்த பங்களாதேசும் தமிழீழத்தை விட மிக பெரிய நாடுகள் அல்லவா🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் மோடையன் என இன்னும் நம்பும் சில இனவாத தமிழ்ர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்தியாவிலிருந்து பிரிந்த பாக்கிஸ்தானும் பாக்கிஸ்தானிலிருந்து பிரிந்த பங்களாதேசும் தமிழீழத்தை விட மிக பெரிய நாடுகள் அல்லவா🤔

இந்தியா பாகிஸ்தானின் இருந்து கிழக்கிலும் மேற்கிலும் வரும் அச்சுறுத்தலைத் தடுக்க பங்களாதேஷ் பிரிவினைக்கு உதவியது. அதே போல சிறிலங்கா அந்த நேரத்தில் இந்தியாவின் கட்டுக்குள் இல்லாமல் மேற்குநாடுகள் பக்கம் சாய்ந்திருந்ததனால், இந்தியா தமிழீழப் பிரிவினைக்கு உதவலாம் என்ற அர்த்தத்தில் அன்ரன் பாலசிங்கம் அவ்வாறு சொல்லியிருக்கலாம்.

இப்போது இந்தியா மேற்குநாடுகள் பக்கம் சாய்ந்துவிட்டது. இலங்கை சீனாவுடன் சேர்ந்துவிட்டது. எனவே இந்தியாவுக்கு அதன் தென்பிராந்தியத்தில் இருக்கும் அச்சுறுத்தலைத் தடுக்க இலங்கை விடயங்களில் தலையீடு செய்யும். அரசியல் பலமில்லாத தமிழர்கள் வெறும் பகடைக்காயாக இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மிலேச்ச இராணுவம் இலங்கைக்கு வர வழிவகுத்த்தில் பல்வேறு தமிழ் இயக்கங்ளின் ஒற்றுமையின்மையே காரணம். சிங்கள இராணுவத்தை விட கடும் அட்டுழியங்களை இந்திய ராணுவம் இலங்கை மக்களுக்கு செய்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"84இல் என்று நினைக்கிறேன். புலிகள் அநுராதபுரத்தில் சாதாரண சிங்கள மக்களைக் கொலை செய்தார்கள் அல்லவா? அதேபோல எல்லைப் பகுதிகளில் எல்லாம் சிங்கள மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். பிக்குகளைக் கொலை செய்த சம்பவங்களும் நடந்தன. இவற்றைப் பற்றி ராஜினியிடம் கேட்டால் அவர் சொல்வார். ‘சண்டை என்றால் மக்கள் இறப்பார்கள்’ என்று. 

நான் சொன்னேன்; ‘தேவையில்லாமல் இறப்பது போர் அல்ல. அது Atrocity. போரில் முன்னுக்கு நின்று சண்டை பிடித்து இறப்பது வேறு. இது சிங்களவர் செய்ததைத்தான் நாங்களும் செய்வதைப் போன்றது.  மட்டக்களப்பில் ஆமிக்காரர்கள் செய்த கொடுமைகளை எல்லாம் மக்கள் எனக்கு சொல்வார்கள். காலத்துக்குக் காலம் அங்கு என்ன கொடுமைகள் செய்யப்படுகின்றன எனறு இப்போதும் மக்கள் எனக்குச் சொல்லுகின்றார்கள். ஊர்காவல் படையில் இணைக்கப்பட்டிருந்த சில முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள், யார் யார் புலிகள்? எந்த ஏரியாவில் புலிகள் இருக்கிறார்கள் என்று உண்மையாகவும், பொய்யாகவும் இராணுவத்திடம் தகவல் சொல்ல, பிறகு நடந்த கொடுமைகள் விபரிக்க முடியாதவை! எவ்வளவு பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டார்கள் தெரியுமா? எவ்வளவு ஆண்கள் கொலை செய்யப்பட்டார்கள் தெரியுமா? நினைத்தாலே நடுங்குகிறது. என்னுடைய சின்னம்மாவின் மூன்று பையன்கள் இறந்தனர். என்னுடைய அக்காவினுடைய மகன் இறந்தார். என்னுடைய அக்கா 51 வயதில் அந்தக் கொடுமை தாங்க இயலாமல் செத்துப் போனார். என்னுடைய தம்பி விமல் கைது செய்யப்பட்ட போது, என்னுடைய அம்மா அந்த அதிர்ச்சியில் இறந்தார். என்னுடைய அம்மா இறக்கும் போது 61 வயது. இப்படி ஆயிரக்கணக்கான மக்கள், ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டக்களப்பு முழுவதும் துன்பப்பட்டார்கள். இதையேதான் அப்பாவிச் சிங்கள மக்களுக்கும் நாம் திருப்பிக் கொடுக்கப்போகிறோமா…?"

எல்லாம் முடிய எல்லோரும் இறந்த பின்னர் 
நான்தான் அர்ச்சுனனுக்கு தேர் செய்தேன் என்று 
அப்ப அப்ப நிறைய பேர் கிளம்பி கொண்டே இருப்பார்கள்.
உங்கள் கூத்துக்களை ஆளில்லா மேடைகளில் அரங்கேற்றுவதில் 
எந்த ஆட்சேபனையும் இல்லை 

சந்தடி சாக்கில் இந்த ஆட்டுக்குள் மாட்டை விடுற வேலையை 
கைவிட்டு தெரியாதவைகளை அறிந்துவிட்டு பேசுங்கள். 

நெடுந்தீவு குமுதினி படகை சிங்கள காடைகள் மறித்து 
அனைவரையும் வெட்டியதுக்கு பழிவாங்க 
வெலியோயா சிங்கள கிராம பகுதிக்குள் புகுந்து 30 வரையான 
சிங்கள மக்களை சுட்டு கொன்றார்கள். அதுக்கு உத்தரவு கொடுத்தவர் 
புலிகளின் அப்போதைய திருகோணமலை பொறுப்பாளர் புலேந்திரன் (அம்மான்)
அவர்கள். அதை உடனடியாகவே புலிகள் கண்டித்து இருந்தார்கள் 
புலேந்திரன் அவர்கள் பதவி நீக்கம் செய்து யாழுக்கு அனுப்பபட்டார் 
அதில் பங்கு கொண்ட அனைவரும் ஆயுதங்கள் களையப்பட்டு 
சமையல் பணியில் அமர்த்த பட்டார்கள். 

பின்பு ஓயாத அலைகள் 2இன் போது  இராணுவ வழங்கு பாதையை 
குறிவைத்து புலிகள் ஆட்லறி தாக்குதல் செய்தார்கள் அது சிங்கள எல்லை 
கிராமங்களில் சென்று வெடித்து அந்த கிராம மக்கள் இடம்பெயர்ந்து சென்றார்கள் 
அந்த சண்டை முடிந்ததும் அவர்கள் திரும்பி சென்று விட்டார்கள். 

நாம்தான் ஷத்தாத் மனித நேயர்கள் என்ற பட்டங்களை 
உங்களுடனே வைத்து கொள்ளுங்கள் அதில் யாருக்கும் 
எந்த வில்லங்கமும் இல்லை. 

 

 

Link to comment
Share on other sites

7 minutes ago, Maruthankerny said:

 

சந்தடி சாக்கில் இந்த ஆட்டுக்குள் மாட்டை விடுற வேலையை 
கைவிட்டு தெரியாதவைகளை அறிந்துவிட்டு பேசுங்கள். 

http://www.sinhaya.com/Sinhaya.com/Massacres_by_LTTE.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

லங்காபுவத் பக்கம் போனால் இன்னும் நிறைய கிடைக்குமே ?

இது என்ன எல்லாத்தையும் கூட்டினாலும் 
ஒரு ஆயிரம் கூட சேரவில்லை.

பச்ச பயங்கரவாதிகள் எனும்போது ஒரு லட்ஷமாவது வேண்டாமா?
லங்காபுவத் போங்கள் 

Link to comment
Share on other sites

1 hour ago, கற்பகதரு said:

 

1 hour ago, Maruthankerny said:

லங்காபுவத் பக்கம் போனால் இன்னும் நிறைய கிடைக்குமே ?

இது என்ன எல்லாத்தையும் கூட்டினாலும் 
ஒரு ஆயிரம் கூட சேரவில்லை.

பச்ச பயங்கரவாதிகள் எனும்போது ஒரு லட்ஷமாவது வேண்டாமா?
லங்காபுவத் போங்கள் 

உங்கள் நீங்களே திருப்திப்படுத்திக்கொள்ள இது உதவும். ஏதோ சந்தோசமாக இருந்தால் அதுவும் நல்லதுதான். ஆனால், உலகம் உண்மைகளை அறியும். உங்களுக்கு அதுபற்றிய அக்கறை அதிகம் இல்லாவிட்டால் கவலைப்படத்தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/1/2021 at 08:56, கற்பகதரு said:

 

உங்கள் நீங்களே திருப்திப்படுத்திக்கொள்ள இது உதவும். ஏதோ சந்தோசமாக இருந்தால் அதுவும் நல்லதுதான். ஆனால், உலகம் உண்மைகளை அறியும். உங்களுக்கு அதுபற்றிய அக்கறை அதிகம் இல்லாவிட்டால் கவலைப்படத்தேவையில்லை.

இப்படி நீங்கள்  எழுதுவதும் ஒருவகை உள் திருப்தி படுத்தல் தான் உலகம் மாறி விட்டது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தரப்பில் இருந்தவர்களுடைய மனிதாபிமானத்தை ஜூட் கேள்வி கேட்கக் கூடாது.  

ஒரு ரூபாய் கணக்கில் தவறு விட்டவனுக்கும் சிங்கள மக்களை பழிவாங்கலாகக் கொலை செய்தவனுக்கும் ஒரே மாதிரியான தண்டனையை வழங்கியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு நகர்ந்து விட வேணும்!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Justin said:

தமிழர் தரப்பில் இருந்தவர்களுடைய மனிதாபிமானத்தை ஜூட் கேள்வி கேட்கக் கூடாது.  

ஒரு ரூபாய் கணக்கில் தவறு விட்டவனுக்கும் சிங்கள மக்களை பழிவாங்கலாகக் கொலை செய்தவனுக்கும் ஒரே மாதிரியான தண்டனையை வழங்கியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு நகர்ந்து விட வேணும்!😎

பொது மக்களின் கொலைகளை யாரும் எந்த சந்தர்ப்பத்திலும் நியாயம் கற்பிக்க முடியாது. 👍

ஆனால் ..

நீங்கள் முன்னிலைப்படுத்தும் நிலைப்பாடானது உலகெல்லாவற்றிற்கும் பொதுவானதா அல்லது தேவைக்குத் தகுந்தவாறு மாறுபடுமா.. ?

ஏனென்றால் யுத்தத்தின்போதான பொதுமக்களின் மரணம் என்பது நானறிந்த வகையில், உலகெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டாலும் நடைமுறையில் ☹️ தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

பொது மக்களின் கொலைகளை யாரும் எந்த சந்தர்ப்பத்திலும் நியாயம் கற்பிக்க முடியாது. 👍

ஆனால் ..

நீங்கள் முன்னிலைப்படுத்தும் நிலைப்பாடானது உலகெல்லாவற்றிற்கும் பொதுவானதா அல்லது தேவைக்குத் தகுந்தவாறு மாறுபடுமா.. ?

ஏனென்றால் யுத்தத்தின்போதான பொதுமக்களின் மரணம் என்பது நானறிந்த வகையில், உலகெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டாலும் நடைமுறையில் ☹️ தானே

பொது மக்களைக் கொல்வது சாதாரண நடைமுறையென்றால் அதை நேராகச் சொல்லும் நேர்மை இருக்க வேண்டும். ஏன், சமையலறைத் தண்டனை கொடுத்ததால் தலைமையின் பணிப்பில் நடக்கவில்லை என்ற வெள்ளையடித்தல்? 

சமையலறை, பதுங்கு குழி என்பன நிதி மோசடி செய்யும் ஆட்களுக்குக் கிடைத்த சாதாரண தண்டனை என்பது அனைவருக்கும் தெரிந்த தகவல்!

அதையே சுட்டிக் காட்டினேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

பொது மக்களைக் கொல்வது சாதாரண நடைமுறையென்றால் அதை நேராகச் சொல்லும் நேர்மை இருக்க வேண்டும். ஏன், சமையலறைத் தண்டனை கொடுத்ததால் தலைமையின் பணிப்பில் நடக்கவில்லை என்ற வெள்ளையடித்தல்? 

சமையலறை, பதுங்கு குழி என்பன நிதி மோசடி செய்யும் ஆட்களுக்குக் கிடைத்த சாதாரண தண்டனை என்பது அனைவருக்கும் தெரிந்த தகவல்!

அதையே சுட்டிக் காட்டினேன்!

உண்மையில்  போராட்ட காலத்தில் நடைபெற்ற நீதிக்கு அப்பாற்பட்ட படுகொலைகள் தொடர்பாக,  சகல தரப்பினரையும் பக்கச் சார்பற்ற வகையில் பொறுப்புக்குட்படுத்தும் ஆய்வு மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அப்படி ஆய்வு மேற்கொள்ளப்படும்போது ஆயுதப் போராட்டத்திற்கான தேவை எப்படி எழுந்தது என்பதும் காரணத்திற் கொள்ளப்படும்.

அதற்குப் பின்னர் என்ன நடைபெற்றது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே..

எனவே முதலாவது குற்றவாளி சிங்களம் என்பதும் அதற்கடுத்தது இந்தியா என்பதும் வெளிவரும்....😂

இறுதியாகத்தான் எமது தமிழர் தரப்பு வரும். 

எனவே

யாராவது இந்த விசாரணையை வரவேற்பார்களா... ☹️

நிலமை இப்படி இருக்கும்போது 

எங்கள் தரப்பை மட்டும்(சிலர்) நாங்கள் முற்போக்காளர்கள் என்ற போர்வையில் குத்திக் கிழிப்பதும் சிங்களத்திற்கும் இந்தியா மேற்குலகுக்கும் முண்டு கொடுப்பதும் சரியான நிலைப்பாடுதானா.. 

சமன் செய்து சீர் தூக்கும் கோல் என்பது பக்கச்சார்பற்றதாக இருக்க வேண்டும்.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவா தானே அந்த பிரா ஆன்ரி. இன்னும் இருக்கிறாவா. எதுக்கும் முதலில் பிரா போடலாமோ போடக் கூடாதான்னு.. முடிவெடுங்கோ ஆன்ரி. அதற்கு அப்புறம் புலிகள் மீது உங்கள் மனித எருமையோட்டத்தைக் காட்டலாம்.

புலிகள் நியூட்டனின் 3 ம் விதிக்கு அமைய துலங்கியதற்கு எல்லாம்.. மனித உரிமை மீறல் என்றால்.. தாக்கத்தைக் கொடுத்தவனை எப்படி மன்னிக்க முடியுது. தாக்கம் ஒன்றில்லாமல்.. மறுதாக்கம் அமையாது. முதலில் இந்த எளிமையை உந்த ஆன்ரிகள்.. புளிச்சுப் போன.. பழங்கதைகளுக்குள் ஊறிக்கிடந்து எழுதுவதோடு உணர்ந்தால் நல்லது.

Link to comment
Share on other sites

26 minutes ago, nedukkalapoovan said:

இவா தானே அந்த பிரா ஆன்ரி. இன்னும் இருக்கிறாவா. எதுக்கும் முதலில் பிரா போடலாமோ போடக் கூடாதான்னு.. முடிவெடுங்கோ ஆன்ரி. அதற்கு அப்புறம் புலிகள் மீது உங்கள் மனித எருமையோட்டத்தைக் காட்டலாம்.

புலிகள் நியூட்டனின் 3 ம் விதிக்கு அமைய துலங்கியதற்கு எல்லாம்.. மனித உரிமை மீறல் என்றால்.. தாக்கத்தைக் கொடுத்தவனை எப்படி மன்னிக்க முடியுது. தாக்கம் ஒன்றில்லாமல்.. மறுதாக்கம் அமையாது. முதலில் இந்த எளிமையை உந்த ஆன்ரிகள்.. புளிச்சுப் போன.. பழங்கதைகளுக்குள் ஊறிக்கிடந்து எழுதுவதோடு உணர்ந்தால் நல்லது.

மக்களுக்கு தாக்கத்தை கொடுக்கும் எவரையும் மன்னிக்க முடியாது. அதே வேளை தம்மால் பதில் சொல்ல முடியவில்லை என்ற ஆத்திரத்தில்  அவர்கள் மீது பெண்கள் என்பதற்காக பாலியல் தாக்குதலை தொடுக்கும் அநாகரிகத்தையும் மன்னிக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, tulpen said:

மக்களுக்கு தாக்கத்தை கொடுக்கும் எவரையும் மன்னிக்க முடியாது. அதே வேளை தம்மால் பதில் சொல்ல முடியவில்லை என்ற ஆத்திரத்தில்  அவர்கள் மீது பெண்கள் என்பதற்காக பாலியல் தாக்குதலை தொடுக்கும் அநாகரிகத்தையும் மன்னிக்க முடியாது. 

ஆமாம் ஆமாம்.. நீங்கள் எல்லாம் ஜேசு நாதரின் வாரிசுகள். மற்றவர்கள் எல்லாம்.. எல்லாம் அசுத்தம். நீங்கள் சுத்தம். இப்படியான சிந்தனையோட்டத்தில் தான் நீங்களும் இங்கு சிலரும்..இப்போ புதிய வேடம் போட்டிருக்கிறார்கள். 

புலிகளின் ஒவ்வொரு தாக்கமும்.. மறுதாக்கமாக இருந்ததே யதார்த்தம். 

இந்த அம்மையார் முள்ளிவாய்க்காலில் மக்கள் இறந்து கொண்டிருக்க.. லண்டனில் பிரா மாநாடு போட்டவர் தானே. அப்ப எல்லாம் மக்கள் எருமைகளாகத் தெரிந்தார்களோ..??!

பெண் என்பதற்காக பிரா மாநாடு பற்றிப் பேசினால்.. அது அநாகரிகமா..??! அப்போ பிரா விற்பது வாங்குவது அநாகரிகச் செயலா..?! கொடுமை.. இப்படித்தான் உங்களுக்கு உகந்ததாக கருத்தியலை வளைச்சு வைச்சு அதற்குள் வட்டமடிக்க நினைக்கிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

ஆமாம் ஆமாம்.. நீங்கள் எல்லாம் ஜேசு நாதரின் வாரிசுகள். மற்றவர்கள் எல்லாம்.. எல்லாம் அசுத்தம். நீங்கள் சுத்தம். இப்படியான சிந்தனையோட்டத்தில் தான் நீங்களும் இங்கு சிலரும்..இப்போ புதிய வேடம் போட்டிருக்கிறார்கள். 

புலிகளின் ஒவ்வொரு தாக்கமும்.. மறுதாக்கமாக இருந்ததே யதார்த்தம். 

இந்த அம்மையார் முள்ளிவாய்க்காலில் மக்கள் இறந்து கொண்டிருக்க.. லண்டனில் பிரா மாநாடு போட்டவர் தானே. அப்ப எல்லாம் மக்கள் எருமைகளாகத் தெரிந்தார்களோ..??!

பெண் என்பதற்காக பிரா மாநாடு பற்றிப் பேசினால்.. அது அநாகரிகமா..??! அப்போ பிரா விற்பது வாங்குவது அநாகரிகச் செயலா..?! கொடுமை.. இப்படித்தான் உங்களுக்கு உகந்ததாக கருத்தியலை வளைச்சு வைச்சு அதற்குள் வட்டமடிக்க நினைக்கிறீர்கள். 

விடுங்க நெடுக்  இந்த அம்மாவை பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை கூகிளில் கூட பெரிதாக இல்லை ஆனால் தனக்கு தானே மனித உரிமை ஆர்வலர் என்று பெயர் போட்டு விளம்பரம் தேடும் ஒருவர் காலி பெருங்காய டப்பாக்களை பற்றி கதைப்பது அவர்களை  தலையில் தூக்கி வைத்து ஆடும் புதிய வேடதாரிகளுக்கு உவப்பாக இருக்கும் .

Link to comment
Share on other sites

13 minutes ago, nedukkalapoovan said:

ஆமாம் ஆமாம்.. நீங்கள் எல்லாம் ஜேசு நாதரின் வாரிசுகள். மற்றவர்கள் எல்லாம்.. எல்லாம் அசுத்தம். நீங்கள் சுத்தம். இப்படியான சிந்தனையோட்டத்தில் தான் நீங்களும் இங்கு சிலரும்..இப்போ புதிய வேடம் போட்டிருக்கிறார்கள். 

புலிகளின் ஒவ்வொரு தாக்கமும்.. மறுதாக்கமாக இருந்ததே யதார்த்தம். 

இந்த அம்மையார் முள்ளிவாய்க்காலில் மக்கள் இறந்து கொண்டிருக்க.. லண்டனில் பிரா மாநாடு போட்டவர் தானே. அப்ப எல்லாம் மக்கள் எருமைகளாகத் தெரிந்தார்களோ..??!

பெண் என்பதற்காக பிரா மாநாடு பற்றிப் பேசினால்.. அது அநாகரிகமா..??! அப்போ பிரா விற்பது வாங்குவது அநாகரிகச் செயலா..?! கொடுமை.. இப்படித்தான் உங்களுக்கு உகந்ததாக கருத்தியலை வளைச்சு வைச்சு அதற்குள் வட்டமடிக்க நினைக்கிறீர்கள். 

இவ்வளவு கோப‍ப்படுபவர்களால் மக்களை முள்ளிவாய்க்காலுக்கு அழைத்து சென்று எதிரியின் கோர தாக்கதலுக்கு பலியாடுகளாக பலி கொடுக்கும் முடிவை எடுத்த மடைத்தனமான முடிவை  மேற்கொண்டவர்கள் மீது சும்மா பொய்கோபம் கூட காட்ட தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

உண்மையில்  போராட்ட காலத்தில் நடைபெற்ற நீதிக்கு அப்பாற்பட்ட படுகொலைகள் தொடர்பாக,  சகல தரப்பினரையும் பக்கச் சார்பற்ற வகையில் பொறுப்புக்குட்படுத்தும் ஆய்வு மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அப்படி ஆய்வு மேற்கொள்ளப்படும்போது ஆயுதப் போராட்டத்திற்கான தேவை எப்படி எழுந்தது என்பதும் காரணத்திற் கொள்ளப்படும்.

அதற்குப் பின்னர் என்ன நடைபெற்றது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே..

எனவே முதலாவது குற்றவாளி சிங்களம் என்பதும் அதற்கடுத்தது இந்தியா என்பதும் வெளிவரும்....😂

இருதியாகத்தான் எமது தமிழர் தரப்பு வரும். 

எனவே

யாராவது இந்த விசாரணையை வரவேற்பார்களா... ☹️

நிலமை இப்படி இருக்கும்போது 

எங்கள் தரப்பை மட்டும்(சிலர்) நாங்கள் முற்போக்காளர்கள் என்ற போர்வையில் குத்திக் கிழிப்பதும் சிங்களத்திற்கும் இந்தியா மேற்குலகுக்கும் முண்டு கொடுப்பதும் சரியான நிலைப்பாடுதானா.. 

சமன் செய்து சீர் தூக்கும் கோல் என்பது பக்கச்சார்பற்றதாக இருக்க வேண்டும்.

 

 

 

 

கருத்தின் முன்பகுதியோடு முரண்பாடில்லை!

ஒரு தரப்பை மட்டும் யாரும் குற்றம் சொல்வதை நான் காணவில்லை. 

தமிழர் தரப்பின் மீது குற்றம் சொன்னால் சிங்களத் தரப்பு சுற்றவாளியாகி விடுகிறது என்ற தவறான புரிதல் இருப்போருக்கு அப்படித் தெரிகிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

கருத்தின் முன்பகுதியோடு முரண்பாடில்லை!

ஒரு தரப்பை மட்டும் யாரும் குற்றம் சொல்வதை நான் காணவில்லை. 

தமிழர் தரப்பின் மீது குற்றம் சொன்னால் சிங்களத் தரப்பு சுற்றவாளியாகி விடுகிறது என்ற தவறான புரிதல் இருப்போருக்கு அப்படித் தெரிகிறது.  

நான் உங்களைச் சுட்டி இதனை எழுதவில்லை. தவறான புரிதலிருந்தால் பொறுத்தருள்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

நான் உங்களைச் சுட்டி இதனை எழுதவில்லை. தவறான புரிதலிருந்தால் பொறுத்தருள்க.

கவலை வேண்டாம். நான் என்னைக் குறித்து அதை எழுதவில்லை கப்ரன்!

ராஜேஸ்வரியையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சிங்கள ராணுவத்தின், இந்திய ராணுவத்தின் பெண்கள் மீதான அட்டூழியங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.

ஆனால், தமிழர் தரப்பை நியாயமாகச் சுட்டிக் காட்டும் போது அவர் "பிரா" குறூப் என்கிற கீழ்தரமான விபரிப்புக்குள்ளாகும் அளவுக்கு கோபம் வரும் தமிழர்கள், நீங்கள் மேலே குறிப்பிட்ட ஒருமித்த விசாரணையை எப்படி வரவேற்பர் என்று கற்பனை செய்து பாருங்கள்!😂

Link to comment
Share on other sites

On 18/1/2021 at 03:56, கற்பகதரு said:

 

உங்கள் நீங்களே திருப்திப்படுத்திக்கொள்ள இது உதவும். ஏதோ சந்தோசமாக இருந்தால் அதுவும் நல்லதுதான். ஆனால், உலகம் உண்மைகளை அறியும். உங்களுக்கு அதுபற்றிய அக்கறை அதிகம் இல்லாவிட்டால் கவலைப்படத்தேவையில்லை.

கேள்விகள் கேட்க தானே ஜெனிவாவில் ஒரு விசாரணையை வையுங்கள் என்று தமிழர் தரப்பு மன்றாடுகிறது. உலகம் எவ்வளவு அறிந்து வைத்ததையும் அறிய ஆவலாக உள்ளோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.