Jump to content

குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி?

spacer.png

ராஜன் குறை

கடந்த வாரம் துக்ளக் ஆண்டு விழாவில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசிய சில கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றன. நீதிபதிகள் யார் காலையோ பிடித்து பதவிகளைப் பெறுகிறார்கள் என்று பேசியது ஒரு சர்ச்சை. வீடு பற்றி எரியும்போது சாக்கடை நீரையும் பயன்படுத்தி தீயை அணைக்கலாம் என்று ஒரு உவமையைச் சொல்லி, சிறையிலிருந்து விடுதலையாகும் சசிகலாவையும் அ.இ.அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருப்பது சசிகலா மற்றும் அ.இ.அ.தி.மு.க-வை சாக்கடை நீரென்று குறிப்பிட்டதாகக் கருதி இன்னொரு சர்ச்சை. இந்தச் சர்ச்சைகளைக் குறித்து அதிகம் பேசும்போது அவர் பேச்சினை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் போக வாய்ப்பு இருக்கிறது.

குருமூர்த்தி ஆர்.எஸ்.எஸ்-காரர். பார்ப்பனீய சிந்தனை கொண்டவர். பாஜக ஆதரவாளர். அதனால் தி.மு.க-வை எதிர்க்கிறார் என்பது அனைவரும் அறிந்ததுதான். மேலும் அவர் தி.மு.க-வுடன், அ.இ.அ.தி.மு.க-வை ஒப்பிட்டு அ.இ.அ.தி.மு.க, தி.மு.க-வை விட நல்ல கட்சி என்று பாராட்டுவதும் புதியதல்ல. அ.இ.அ.தி.மு.க அரசையே வழிநடத்துவது பாஜக-தான். ஓ.பி.எஸ்ஸை தர்மயுத்தம் செய்யச்சொல்லி தான் தூண்டிவிட்டதாக குருமூர்த்தியே கூறியதும் நாம் அறிந்ததுதான். தேர்தல் என்று வந்துவிட்டால் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால் சசிகலா அணி வாக்குகள் சிதறக் கூடாது என்ற அக்கறையில் இப்போது அதே சசிகலாவைக் கட்சியில் இணைக்கலாம் என்று சொல்வதும் ஒரு அரசியல் கணக்குதான். இப்படி மேலோட்டமாக நாம் இந்த கூற்றுக்களை எடுத்துக்கொள்ளும்போது அவற்றின் அடிப்படையாக விளங்கும் கருத்தியல் மோதலைக் காணாமல் விட்டுவிடக் கூடாது. அதைப் புரிந்துகொள்ள தி.மு.க குறித்து அவர் கூறும் குற்றச்சாட்டுகள், அதை எதிர்ப்பதற்கு அவர் கூறும் காரணங்களை ஆராய்வது அவசியம். அப்படியென்ன தி.மு.க-வுடன் அவருக்கு பிரச்சினை? வீடு பற்றி எரிகிறது என்று உவமை சொல்லும் அளவு இப்போது என்ன நடந்துவிட்டது? பத்தாண்டுகளாக தி.மு.க ஆட்சியிலேயே இல்லையே? மத்தியில் ஏழாண்டுகளாக பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி, மாநிலத்தில் பத்தாண்டுகளாக அ.இ.அ.தி.மு.க ஆட்சி. ஒரு எதிர்க்கட்சியாகப் போட்டியிடும் தி.மு.க-வைத் தோற்கடிப்பதை எரியும் வீட்டில் நெருப்பை அணைப்பதாக உருவகம் செய்யுமளவு ஏன் பதற்றமடைய வேண்டும்? அதை விளக்குவதற்காக அவர் தி.மு.க மீது சொல்லும் சில குற்றச்சாட்டுகளைப் பரிசீலிப்போம்.

தி.மு.க பிரிவினை அரசியல் செய்கிறதா? 

தி.மு.க மறைமுகமாகவும், நேர்முகமாகவும் பிரிவினையை ஆதரிக்கும் கட்சி என்கிறார் குருமூர்த்தி. தி.மு.க திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு 58 ஆண்டுகள் ஆகிறது. அப்படி திராவிட நாடு கோரிக்கையை எழுப்பிய காலத்திலேயே உண்மையான அதிகாரப் பகிர்வுகளுடன் கூட்டாட்சி ஏற்பட்டால் அதில் பங்கேற்போம் எனப் பலமுறை கூறியுள்ளார் அறிஞர் அண்ணா. அமெரிக்க அரசியல்வாதி வெண்டல் வில்க்கி என்பவர் கூறிய உலகக் கூட்டாட்சி குடியரசிலும் பங்கேற்க தயார் என்றே கூறியுள்ளார். எத்தகைய சுயாட்சி உரிமைகளுடன் கூடிய கூட்டாட்சி என்பதுதான் தி.மு.க எழுப்பிய முக்கிய கேள்வியே தவிர, பிரிவினை அல்ல. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்ட பிறகு தி.மு.க தேசிய அரசியலில் அனைத்து கட்சிகளுடனும் நல்லுறவை பேணி வந்துள்ளது. நடுவண் அரசின் எல்லா துறைகளிலும், அங்கங்களிலும் தமிழர்கள் கணிசமாக பங்காற்றுகிறார்கள். செயற்கைக்கோள்களைச் செலுத்துவது, விண்வெளி ஆராய்ச்சி என்றால் அப்துல் கலாம் முதல் இஸ்ரோ சிவன் வரை பலர் பங்காற்றியுள்ளார்கள். ராணுவத்தில் எத்தனையோ பேர் பங்காற்றுகிறார்கள், உயிரிழக்கிறார்கள். மத்திய அரசிலேயே வாஜ்பேயி பிரதமராக இருந்த அரசு உட்பட பதினைந்து ஆண்டுகள் தி.மு.க அங்கம் வகித்துள்ளது. இந்தியாவின் நலன்களை மட்டுமல்ல, மூன்றாம் உலக நாடுகளின் நலன்களையும் W.T.O என்ற உலக வர்த்தக அமைப்பில் தன் திறன்மிக்க வாதங்களால் பாதுகாத்தார் தி.மு.க தலைவர் முரசொலி மாறன். இருபதாண்டுகள் தூங்கியெழுந்த ரிப் வான் விங்கிள் என்ற பாத்திரம் போல ஐம்பதாண்டுகளாகத் தூங்குகிறாரா குருமூர்த்தி? கடந்த ஐம்பதாண்டுக் கால இந்திய வரலாற்றில் தி.மு.க-வின் பங்களிப்பு என்பது கணிசமானதல்லவா? இன்றைக்கும் பாஜக-வுக்கு எதிராக இந்தியா முழுவதிலும் எதிர்க்கட்சிகளை, மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் ஈடுபட்டுள்ளதே தி.மு.க? அதனால்தானே உத்தவ் தாக்கரே பதவியேற்புக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலினே நேரில் செல்கிறார்... கலைஞர் சிலை திறப்புக்கு அகில இந்திய தலைவர்களை அழைக்கிறார்... எங்கிருந்து வருகிறது இந்தப் பிரிவினை அரசியல் குற்றச்சாட்டு?

தி.மு.க இந்து மதத்துக்கு எதிரானதா? 

திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை இந்து மதம் என்று கூறப்படக்கூடிய வழிபாட்டு முறைகள், சடங்குகளுக்கு ஏதாவது தடையோ, தீங்குகளோ இழைத்துள்ளதா? எந்த கோயிலாவது பராமரிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாக புகார் உள்ளதா? ஜெயலலிதாதான் இந்து மத நம்பிக்கைகளில், வழிபாட்டில் தலையிட்டார். கிராம கோயில்களில் ஆடு, கோழிகளை பலி கொடுக்கக் கூடாது என்று சட்டம் கொண்டுவந்தார். அதன்மூலம் பெரும்பான்மையான பக்தர்களின் மனங்களைப் புண்படுத்தி, அவர்கள் பெருந்துயர் கொள்வதற்கு காரணமானார். பின்னர் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அவரே இந்த தடைச் சட்டத்தை விலக்கிக் கொண்டார். திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அதுபோல மத வழிபாட்டு விஷயங்களில் தலையிட்டதில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் இந்து மதத்தில் புகுந்துவிட்ட பல சமூக விரோத சிந்தனைகளை மட்டுமே விமர்சித்து வந்தது. பார்ப்பனர்கள் பிறரை விட உயர்பிறப்பினர் போன்ற மூட நம்பிக்கைகளைக் கேள்விக்கு உட்படுத்தியது. பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் பார்ப்பனீய ஆரிய சிந்தனையை எதிர்த்து “இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ?” என்று கேட்ட சித்தர் வழியில் நின்று ஆன்மிக வாழ்வை மேம்படுத்தியது. நாகரிக உலகில் பலரும் படிப்பதற்கும் கேட்பதற்கும் சங்கடப் படக்கூடிய புராணக் கதைகளைக் கேள்விக்கு உட்படுத்தியது. அதன் மூலம் முதிர்ச்சியடைந்த, பண்பட்ட மதமாக இந்து மதம் விளங்க வழிகோலியது. திருமூலரின் மிக நுட்பமான இறையியல் சிந்தனையை, “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற கோட்பாட்டை தங்களது இறைநம்பிக்கை தொடர்பான கோட்பாடாக அறிவித்ததன் மூலம் ஆழமான ஆன்மிகப் பார்வைக்கு வித்திட்டது. மனித குலத்தின் சாரம், அதன் ஆன்மா என்பது ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்பதும் அது தன்னிலும் செயல்படும் ஆற்றலாக ஒற்றை ஆற்றலையே உருவகிக்க முடியும் என்று கூறியதன் மூலம் மத நல்லிணக்கத்துக்கும், குறுகிய வேறுபாடுகளைக் கடந்த ஆன்மிகப் பார்வைக்கும் வழி வகுத்தது. தி.மு.க தலைவர்கள் பலர் தனிப்பட்ட முறையில் நாத்திகர்களாக இருந்தாலும் அவர்கள் நாத்திகத்தை அரசியல் கொள்கையாகப் பேசியது இல்லை. செக்யூலரிசம் என்ற மதச்சார்பின்மையைத்தான் அரசியலில் கடைப்பிடித்தார்கள். அதேபோல சிறுபான்மை மதங்களை சார்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்படக் கூடாது என்பதால் அவர்கள் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாப்பதில் அக்கறை செலுத்தினார்கள். எந்த ஒரு பண்பட்ட மனிதரும் சிறுபான்மையினர் நலன்கள் பெரும்பான்மையினரின் நலன்களுக்கு எதிரானது என்று நினைக்க மாட்டார்.

 

தி.மு.க பார்ப்பனர்களுக்கு எதிரானதா?

பார்ப்பனர்கள் பிறரைவிட உயர் பிறப்பாளர்கள் என்று கூறும் பார்ப்பனீய சிந்தனைகளையையும், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அவர்களே மேலாதிக்கம் செலுத்திய நிலையையும் விமர்சித்து சமூகத்தை மக்களாட்சிக்கும், அதிகாரப் பகிர்வுக்கும் இட்டுச்சென்றதைத் தவிர பார்ப்பனர்களுக்கு எந்த ஒரு சிறு தீங்காவது தி.மு.க-வால் ஏற்பட்டதாகச் சொல்லமுடியுமா? பார்ப்பனர்கள் பிறரது பழக்க, வழக்கங்களை இழித்துரைத்த அளவுக்குப் பார்ப்பனர்களை பிறர் இழித்துப் பேசியதாக சொல்ல முடியுமா? பிற சமூகங்களுக்கும் அனைத்து துறைகளிலும் போதிய இடம் கிடைக்க வழி செய்ததை, பார்ப்பனர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டதாகக் கூற முடியுமா? ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனிதத் தலங்களில், ஆலயங்களில் சடங்குகளை செய்விக்கும் பார்ப்பனர்களின் தொழிலுக்கு எந்த இடையூறாவது ஏற்பட்டுள்ளதா? தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் பார்ப்பன சமூகத்திற்கு உரிய பங்கு கிடைக்கவில்லை என்று கூற முடியுமா? இட ஒதுக்கீட்டையே தங்களுக்கு எதிரானதாகப் பார்க்கும் சமூக விரோத பார்ப்பனீய நோக்கினை கைவிட்டுவிட்டால் அந்த சமூகத்திற்கு எந்தவொரு பாதிப்பும் தமிழகத்தில் ஏற்பட்டதாகக் கூற முடியுமா? சோ ராமசாமியும், குருமூர்த்தியும் எந்தவொரு தடையும் சிக்கலும் இல்லாமல் தி.மு.க-வைத் தொடர்ந்து விமர்சித்து இயங்குவது சாத்தியமாகத்தானே இருக்கிறது? ஏன் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த ஜெயலலிதா முதல்வராகவே பதவி வகித்தாரே?

தி.மு.க பார்ப்பனர்கள் கட்சியில் உறுப்பினராக சேர்வதை தடை செய்யவில்லை. பிரபல வக்கீல் ராமன் என்பவர் கட்சியில் இணைந்து பணியாற்றியுள்ளார். அண்ணா உள்ளிட்ட தலைவர்களுக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். ராஜாஜி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி கண்டார்; தி.மு.க-வுடன் இணைந்து இந்தியை மட்டும் ஆட்சிமொழியாக்குவதை எதிர்த்து அறுபதுகளில் போராடினார். கலைஞர் தன் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் மதத்தில் புரட்சி செய்த மகான் என்று ராமானுஜரின் வாழ்க்கையைத் தொடராக தானே கதை வசனம் எழுதி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார். மக்களாட்சிக்கும், அதிகாரப் பகிர்வுக்கும் ஆதரவாக இருப்பது வேறு; பார்ப்பனர்களுக்கு எதிராக இருப்பது வேறு. தி.மு.க சாமான்யர்களுக்கும் அதிகாரப் பகிர்வினை சாத்தியமாக்கிய கட்சி.

தி.மு.க எதிர்ப்பின் மர்மம்

இப்படி இல்லாத காரணங்களை குருமூர்த்தி புனைந்துரைப்பது எதனால் என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும். தி.மு.க ஊழல் கட்சி, அதனால் ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்று விடுதலையாகும் சசிகலாவுடன் சேர்ந்து அதை எதிர்க்கிறேன் என்றால் குழந்தை கூட சிரித்துவிடும். பாரதீய ஜனதா கட்சிக்குத் தமிழகத்தில் வளர வேண்டும் என்றால் அதற்கு தி.மு.க, அ.இ.அ.தி.மு.க இரண்டையும்தான் எதிர்க்க வேண்டும். எதனால் தி.மு.க-வை மட்டும் வீட்டை எரிக்கும் நெருப்பாகக் கருதி பதற்றமாக எதிர்க்க வேண்டும்? அப்படியென்ன பிரச்சினை குருமூர்த்திக்கு அந்த கட்சியுடன்?

இதற்கான உண்மையான விடை திராவிடம் என்ற சொல்லில்தான் இருக்கிறது. அண்ணாவின் “ஆரிய மாயை” நூலில் இருக்கிறது. இந்திய தேசியத்தை ஒற்றை கலாச்சார மூலம் கொண்டதாக உறுதிப்படுத்துவதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் லட்சியம். அது கங்கை சமவெளியில் உருவான வேதங்களை அடிப்படையாகக் கொண்ட ஆரிய மரபு. அப்படி நிறுவுவதில் ஒரு பிரச்சினை என்னவென்றால் ஆரியர் வருகைக்கு முன்னரே இந்திய நிலத்தில் ஒரு பண்பாடு இருந்தது என்ற கருத்தாக்கம்தான். அந்தக் கருத்தாக்கத்துக்கு வலுவான துணையாக இருப்பது சமஸ்கிருத மொழிக்கும், ஆரிய பண்பாட்டுக்கும் மாற்றாகக் கருதப்படும் தமிழ் மொழியும், திராவிட பண்பாடும்தான். மொழிகளும், பண்பாடுகளும். மனித இனங்களும் ஒன்றோடொன்று கலக்காமல் இருப்பதில்லை என்றாலும், ஒட்டு மொத்த இந்திய பண்பாடும், அதன் மூலமும் ஆரிய வேதகால பண்பாடுதான் என்று சொல்லமுடியாதபடி செய்வது திராவிடம் என்ற சொல்தான். அதற்கேற்றாற்போல தமிழகத்தில் வழங்கிய ஜைனம், பெளத்தம், சைவம், வைணவம் எல்லாமே தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளவையாக விளங்குகின்றன. தமிழகம் தொடர்ந்து தனித்துவ மிக்க சிந்தனை போக்குகளை உருவாக்கி வந்துள்ளது. அது ஒற்றை இந்திய அடையாளத்தைக் கட்டமைக்க பெரியதொரு தடையாக உள்ளது.

குருமூர்த்தியின் எதிர்ப்பை, “நெருப்பை அணைக்கும்” பதற்றத்தை நாம் ஒற்றை இந்திய அடையாளத்தைக் கட்டமைக்க முயலும் பாசிசத்துக்கும், கலாச்சார பன்மையின் ஊற்றாக விளங்கும் திராவிடக் கருத்தியலுக்கும் இடையிலான போராட்டமாகவே பார்க்க வேண்டும். ஒரு எதிர்க்கட்சியை நெருப்பெனப் பார்த்து ஆளும் கட்சிக்காரர் பதறுவதற்கு அந்த எதிர்க்கட்சியின் கருத்தியல் வலிமைதானே காரணமாக இருக்க முடியும்.

கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி

 

 

https://minnambalam.com/politics/2021/01/18/17/Understanding-Gurumoorthy-Speech

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி?
புரிந்துகொள்ளாமல் இருப்பதன் அவசியம் பற்றி புரிந்துகொள்வதன் மூலம் 🤫

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.