Jump to content

மொபைல் தொடர்பாடல் வரலாறு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மொபைல் தொடர்பாடல் வரலாறு – பகுதி 1 (0G & 1G)

கோரா

 

bell-1.png?resize=600%2C450&ssl=1

முகவுரை :

எங்கெங்கு காணினும் சக்தியடா  தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா
அங்குத் தங்கும் வெளியினில் கோடியண்டம்  அந்தத்
தாயின் கைப்பந்தென ஓடுமடா

இதை எழுதியவர் மகாகவி பாரதியாரா அல்லது பாவேந்தர் பாரதிதாசனா என்று உறுதிபடுத்திக் கூற முடியாவிட்டாலும் எழுதியவர், கோடி அண்டங்கள் மற்றும் ஏழு நிறங்களின் கலவையான சூரிய ஒளியையும் குறிப்பிடுகிறார் என நான் எண்ணுவதுண்டு. அவர் குறிப்பிடப்பட்டுள்ள சக்தியும் இயற்பியலாளர்கள் கூறும் மின்காந்தக் கதிர் வீச்சு ஆற்றலும் (electromagnetic radiation energy) ஒன்றே எனத் தெரிகிறது.

CNX_Psych_05_02_Spectrum.jpg?resize=600%

 

 

மின்காந்தக் கதிரியக்கம் (Electromagnetic Radiation)

பழைய இயற்பியலின்படி, ஒத்திசைவாக (Resonance) அலைவுறும் மின்புலங்கள் (electric field) மற்றும் காந்தப் புலங்களின் வழியாக ஒளி வேகத்தில் பரவெளியில் செலுத்தப்படும் சக்தியே மின்காந்தக் கதிரியக்கம் எனப்படுகிறது. தற்காலத்தியக் குவாண்டம் கோட்பாட்டின்படி, மின்காந்தக் கதிரியக்கம் என்பது சக்திச் சொட்டுகளாக (Quanta) ஓடும் போட்டான்கள் (photons) எனக் கருதப்படுகிறது. உண்மையில் கிட்டத்தட்ட 0.01 விழுக்காடு பொருண்மை / சக்தி, மின்காந்தக் கதிர்வீச்சாகவே நிகழ்கிறது. நம்மைச் சுற்றிலும் எப்போதும் இந்தக் கதிரியக்கம் வெவ்வேறு வடிவங்களில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இவற்றின் வீரியங்கள், மிகக் குறைந்த ஆற்றல் முதல் மிக அதிக ஆற்றல் வரையில் வேறுபட்டிருக்கும்.

மின்காந்த நிறமாலை (Electromagnetic Spectrum)

மின்காந்த நிற மாலை என்பது எல்லா விதமான மின்கதிரியக்கங்களின் அலைவெண்கள் மற்றும் அவற்றிற்குரிய அலை நீளங்கள் மற்றும் போட்டான் ஆற்றல்கள் ஆகியவற்றின் வீச்சு (range) ஆகும். இது அலைவெண்கள் 1 Hz முதல் 1025 Hz-க்கும் மேலான மின்காந்த அலைகளை அடக்கியிருக்கிறது. அதையே அலை நீளத்தில் குறிப்பிடுவதென்றால் ஆயிரக்கணக்கான கி.மீ -யில் தொடங்கி அணுக்கரு அளவின் பின்னம் (fraction) வரையெனக் குறிப்பிடலாம். இந்த அலைவெண் (frequency) வீச்சு ஏழு தனித்த பட்டைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பட்டைக்கும் வெவ்வேறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. மிகக் குறைவான அலைவெண், மிகக் குறைவான சக்தி, மிக அதிக அலைநீளம்கொண்ட அலைப்பட்டையில் தொடங்கி மிக அதிக அலைவெண், மிக அதிக சக்தி, மிகக் குறைந்த அலைநீளம் வரை வரிசைப்படுத்திய பட்டியலைக் கீழே காணலாம்.

  1. ரேடியோ அலைகள் (Radio Waves) — 3 x 109க்குக் கீழுள்ள அலைவெண்கள்
  2. நுண்ணலைகள் (Micro waves) — 3 x 109 முதல் 3 x 1011 வரை
  3. அகச்சிவப்புக் கதிர்கள் (Infrared Rays) — 3 x 1011முதல் 4 x 1014 வரை
  4. கண்ணுக்குத் தெரியும் ஒளி (Visible Light) — 4 x 1014 முதல் 7.5 x 1014 வரை
  5. புறஊதாக் கதிர்கள் (Ultra Violet Rays) —- 7.5 x 1014 முதல் 3 x 1016 வரை
  6. எக்ஸ் கதிர்கள் (X Rays) — 3 x 1016 முதல் 3 x 1019 வரை
  7. காமாக் கதிர்கள் (Gama Rays) — 3 x 1019 க்கும் மேல்

அலைகள் உற்பத்தியாகும் விதத்திலும் பிற பொருட்களுடன் இடைவினை புரிவதிலும் மற்றும் நடைமுறைப் பயன்பாட்டிலும் ஒவ்வொரு பட்டையும் வெவ்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கின்றன. பூமியின் வளிமண்டலம், மின்காந்தக் கதிரியக்கத்தில் பெரும்பாலானவற்றைப் பூமியின் தரைக்கு வந்துசேர முடியாமல் தடுத்துவிடுகிறது. ரேடியோ அலைகள், கண்ணுக்குப் புலப்படும் ஒளி மற்றும் சில புற ஊதாக் கதிர்கள் மட்டுமே கடல் மட்டம் வரை வந்துசேருகின்றன.

பயனுள்ள ரேடியோ நிறமாலை

ரேடியோ அலைகள், மின்காந்த நிறமாலையின் மிக அகண்ட பகுதி மற்றும் கீழ்ப் பகுதியும் ஆகும். ரேடியோ நிறமாலை அலைவெண் 3 GHz (Giga Hz)க்குக் கீழுள்ள எல்லா அலைவெண்களையும் அடக்கியுள்ளது. ஆனால் மிகவும் கீழுள்ள அலைவெண்களை (1Hz முதல் 30 Hz வரை) ரேடியோ தொடர்பாடலுக்குப் பயன்படுத்த இயலாது. அதற்கு மிகப் பெரிய வான் அலைவாங்கி (antenna) தேவைப்படும். அதன் மூலம் கிடைக்கும் அலை அகலம் (Band Width) மிகச் சொற்பமே. 30kHz-க்குக்கீழ் ஒலிப் பண்பேற்றம் (audio modulation) செய்யவியலாது. அதுவே கீழ்வரம்பு. ரேடியோ நிற மாலையின் உயர் அலைவெண்களில் 30 GHz-க்கு மேற்பட்டவை பெரும்பாலும் வளிமண்டல வாயுக்களால் உட்கிரகிக்கப்பட்டுவிடும். தொடர்பாடலுக்குப் பயன்படாது.

ரேடியோ பட்டைகள் (Radio Bands)

ரேடியோ பட்டை என்பது ரேடியோ நிறமாலை அலைவெண்களின் தொடரில் ஒரு சிறு துண்டுப் பகுதி. அதன் அலைப் பாதைகள் (channels) ஒரே நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் அல்லது ஒதுக்கீடு செய்யப்படும். ரேடியோ குறுக்கீட்டைத் (Interference) தவிர்க்கவும் ரேடியோ நிறமாலையின் திறன்மிகு பயன்பாட்டை உறுதிசெய்யவும் ஒரே மாதிரி சேவைகளுக்கான அலைக் கற்றைகள் ஒரு பட்டையில் ஒதுக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு பட்டைக்கும் அதை எப்படிப் பயன்படுத்துவது மற்றும் பகிர்வது என ஆணையிடுகிற பட்டைத் திட்டத்தைப் பன்னாட்டுத் தொலைத்தொடர்புக் கூட்டமைப்பு (ITU) வெளியிட்டுள்ளது. அதில் அலைநீள வரிசையில் ஒவ்வொன்றும் முந்தையதைவிடப் பத்து (10n) மடங்காக இருக்கின்ற 12 பட்டைகளாகப் பிரிக்கப்பட்டு, அதன் பயன்பாடுகளும் விவரிக்கப்பட்டுள்ளன. ரேடியோ அலைகளின் உற்பத்தி மற்றும் பரப்புகை, பன்னாட்டுத் தொலைத்தொடர்புக் கூட்டமைப்பின் வழிகாட்டுதலின்படி இயற்றப்பட்ட உள்நாட்டு சட்டங்களால் கண்டிப்பாக முறைப்படுத்தப்படுகின்றன.

ரேடியோ நிறமாலைப் பற்றாக்குறையும் மேலாண்மையும்

தற்போதைய தொழில்நுட்ப அடிப்படையில் அலைவெண் 30 kHz முதல் 30GHz வரையுள்ள ரேடியோ நிறமாலையே தொடர்பாடலுக்குப் பயன்படுத்த உகந்ததாக உள்ளது. இதுவே அமோகம் எனத் தோன்றினாலும் உண்மையில் கிடைக்கும் அலைப்பாதைகள் (channels) போதாதனவாகவே இருந்துவருகின்றன. அதன் காரணங்கள்: அரசாங்கம் ஒரு சேவையில் போட்டியை உருவாக்கக் கொண்டவரும் அதிக எண்ணிக்கை செய்குநர்கள் (operators) மற்றும் தொழில்நுட்பங்கள், குறிப்பிட்ட சில அலைப்பட்டைகளையே பயன்படுத்தும் தனியுரிம (Proprietary) உபகரணங்கள் மற்றும் சிந்தனையற்ற (mindless) பழைய ஒதுக்கீடுகள். நிறமாலையின் பயன்பாட்டை உச்ச நிலைக்குக் கொண்டுசெல்ல (maximise) நிறமாலை மேலாண்மை தேவைப்படுகிறது. அமெரிக்காவில் FCC-யும் (Federal Communications Commission), இந்தியாவில் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் WPC (Wireless Planning & Coordination wing)-யும் ரேடியோ நிறமாலை ஒதுக்கீடு மற்றும் மேலாண்மைப் பொறுப்பை ஏற்றுள்ளன.

ரேடியோ தொடர்பாடல் அடிப்படைத் தொழில்நுட்பம்

ரேடியோ தொடர்பாடலின் அடிப்படைத் தொழில்நுட்பம் வருமாறு: வானலை அனுப்பியுடன் (antenna) இணைத்த மின் ஒத்ததிர்வு சுற்றில் (electric resonance circuit) மின்னூட்டத்தை (charge) வேண்டிய அலைவெண்ணில் அலைவுறச் (oscillate) செய்தால், அங்கு தேவையான மின்காந்த அலைகள் உற்பத்தியாகும். அவை மின்காந்த வானலை அனுப்பி மூலம் விண்ணில் பரவும். மறுமுனையில் அதே அலைவெண்ணுக்கு இசைவிக்கப்பட்ட (tune) அலைவி மின்சுற்றின் (oscillator circuit) இசைவியில் (tuner) இணைத்த வானலை ஏற்பியால் அதே மின்காந்த அலைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். ஒரு முனையில் குறிகைகளைத் (signals) தகுந்தவாறு மின்காந்த அலைகளின்மேல் பதியவைத்து அனுப்பி மறுமுனையில் அதே குறிகைகளை மீட்டெடுப்பதை ரேடியோ தொடர்பாடல் என்கிறோம்.

மின்காந்த அலைகள் கண்டுபிடிப்பு:

ஜேம்ஸ் கிளெர்க் மேக்ஸ்வெல் 1865-ல் கண்ணுக்குப் புலப்படாத மின்காந்த அலைகளின் இருப்பை முன்னுரைத்தார். மேலும் மின் மற்றும் காந்தப் புலங்களுக்கு (fields) இடையிலான தொடர்பைக்காட்டும் ஒருங்கிணைந்த சமன்பாடுகளை உருவாக்கினார். இந்த சமன்பாடுகளே மேக்ஸ்வெல் சமன்பாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. மேக்ஸ்வெல் கோட்பாட்டுப்படி மின்புலமும் காந்தப் புலமும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அலைந்தால் (oscillate) மட்டுமே அது மின்காந்த அலையைத் தோற்றுவிக்கும். அறிவியலின் வழக்கமான பாதை, புலப்பாட்டில் (phenomenon )தொடங்கி கோட்பாட்டை அடைவதுதான். ஆனால் மின்காந்த அலைகளைப் பொருத்தவரை, முதலில் உருவானது மேக்ஸ்வெல் கோட்பாடு. 1888-ல் அவற்றின் இருப்பைச் சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தியவர் ஹெய்ன்ரிச் ஹெர்ட்ஸ். (Heinrich Hertz.) பிந்தைய பரிசோதனைகள்மூலம் ரேடியோ அலைகள் ஒளிவேகத்தில் பரவுவதையும் கண்டுபிடித்தார். ஆனாலும் அவர் தன் கண்டுபிடிப்புக்கு நடைமுறைப் பயன்பாடுகள் ஏதுமில்லை என்று தவறாகக் கணித்துவிட்டார். பரிசுத்த (pure) கோட்பாட்டாளரான அவர் நினைவாக 1960-ல் அலை வேகத்தைக் குறிக்கும், விநாடிக்கு எத்தனை சுழற்சிகள் என்ற அளவைக்கு ஹெர்ட்ஸ் (Hertz) என்று பெயரிடப்பட்டது.

மார்க்கோனியின் கம்பியில்லாத் தந்தி:

1895-96-ல் மார்க்கோனி முதலாவது நடைமுறைப் பயன்பாட்டுக்குரிய ரேடியோ பரப்பி மற்றும் ஏற்பிகளை உருவாக்கித் தன் கம்பியில்லாத் தந்திக்காகக் காப்புரிமம் பெற்றார். இங்கிலிஷ் கால்வாயைக் கடக்கும் கப்பல்களுடன் மோர்ஸ் கோடைப் பயன்படுத்திக் கம்பியில்லாத் தந்தித் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு ரேடியோ பரப்புகை அமைப்பை வெற்றிகரமாகச் செய்துகாட்டினார். இந்த அமைப்புக்குத் தேவையான அனுப்பி (transmitter) மற்றும் ஏற்பி (Receiver) அவரால் கண்டுபிடிக்கப்பட்டவை.1920 வரை, கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் கப்பல்களுடன் தொடர்புகொள்ளவே ரேடியோ பயன்பட்டு வந்தது. இரண்டாம் உலகப் போரின்போது, கையடக்க ரேடியோ ஏற்பிகள் பெருமளவில் தயாரிக்கப்பட்டுப் போர்க்களத்தில் தொடர்பாடலுக்குப் பயன்படுத்தப்பட்டன. அதன் பயன்பாடு வெளிச்சத்துக்கு வந்ததால், பின்னர் படைத்துறை சாராதவர்களும் ரேடியோக்களைத் தனிப்பட்ட பயன்பாடுகளுக்காக வாங்கினர். பயனர்களின் பேராதரவே மொபைல் ஃபோன் வருகைக்கு காரணமாகியது.

ரேடியோவின் தந்தை‘ (Father of Radio) யார்? – சர்ச்சை

ரேடியோ தொடர்பாடலில் பெருஞ்சாதனைகள் புரிந்த மார்க்கோனி முறையான பொறியியல் அல்லது இயற்பியல் பட்டம் பெறாதவர். அறிவியலர் என்பதைவிட அரைகுறைப் (tinkering) பொறியாளர் என்றால் பொருந்தும். நோபல் பரிசு ஏற்புரையில் தன் கண்டுபிடிப்பு எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றியெல்லாம் தனக்கு எதுவும் தெரியாது என்று மனம் திறந்து பேசினார். நோபல் பரிசு பெற்றிருந்தாலும் அவரை ‘ரேடியோவின் தந்தை’ எனக் கூறிவிட முடியாது. அதற்கு உரிமை கோருவோர் பலர் உண்டு. கீழ்கண்டவற்றைப் படித்தால் புரியும் .

  • 1895-ல் ரஷ்ய இயற்பியலாளரான அலெக்சாண்டர் போபோவ் இரு கட்டங்களுக்கு இடையே ரேடியோ தகவலைப் பரப்பிக் காட்டினார்.
  • அதே ஆண்டில் இந்தியாவின் ஜெகதீஷ் சந்திர போஸ் என்னும் இயற்பியலாளர், ரேடியோ அலைகள் மூலம் மணி ஒலிக்கவும் வெடி வெடிக்கவும் செய்துகாட்டினார்.
  • 1891-93-ல் Nikolai Tesla என்பவர்தான் முதன் முதலாக ரேடியோ தொடர்பு அமைப்புகள் பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டார். பின்னர் 1897-ல் அதிக அலைவெண் மற்றும் அதிக மின்னழுத்தம் உண்டாக்கும் சுருளைக் (coil) கண்டுபிடித்து, அதற்கு டெஸ்லா காயில் என்று பெயரிட்டார். அது ரேடியோ குறிகைகளை அனுப்பவும் பெறவும்கூடிய சாதனம் என்று காப்புரிமம் கோரி விண்ணப்பம் செய்திருந்தார்.
  • 1897-ல் இத்தாலியைச் சேர்ந்த மார்க்கோனி, தாம் உருவாக்கிய கம்பியில்லாத் தந்தி அமைப்புக்கு இங்கிலாந்து நாட்டில் காப்புரிமம் பெற்றார். 1899-ல் லண்டனில் இருந்து செயல்படும் மார்க்கோனி தந்திக் கம்பெனியை நிறுவினார். 1901 டிசம்பரில் அட்லான்டிக் கடல் கடந்து போகும் (இங்கிலாந்தின் கார்ன்வாலில் இருந்து நியூ பௌந்துலாண்டில் அமைந்திருந்த படைத்தளத்துக்கு) முதல் ரேடியோ தகவலை அனுப்பினார். ரேடியோ தொடர்பாடலில் ஆற்றிய பணிகளுக்காக இவருக்கும் கார்ல் பிரான் என்னும் இயற்பியலாளருக்கும் 1909-ஆம் ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசு கார்ல் பகிர்ந்தளிக்கப்பட்டது.
  • 1901-ல் இவ்வகை சாதனத்திற்கான காப்புரிமம் மார்க்கோனிக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து டெஸ்லா நீதிமன்றத்தில் வழக்காடினார். தன்னுடைய 17 காப்புரிமம் பெற்ற கருவிகளைப் பயன்படுத்தியே மார்க்கோனி ஆய்வுகளை மேற்கொண்டார் என்பதே அவர் முறையீடு. மார்க்கோனியின் மேல்முறையீட்டின் காரணமாகப் பல ஆண்டுகளுக்கு வழக்கு தொடர்ந்தது. 1943-ல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் மார்க்கோனியின் உரிமத்தைச் செல்லாததாக்கி (டெஸ்லாவுக்கு ஆதரவான) தீர்ப்பை அளித்தபோது டெஸ்லாவோ மார்க்கோனியோ உயிருடன் இல்லை.

தொடக்கக் கால மொபைல் தொலைபேசி அமைப்புகள்:

மேற்கு ஜெர்மனி, UK, ஸ்வீடன் ஆகிய நாடுகளும் மொபைல் தொலைபேசி சேவையைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும் அனைத்து நாடுகளுக்கும் முன்பாக அமெரிக்காவின் Saint Louis நகரில் Bell Labs என்ற அமெரிக்கக் கம்பெனி அறிமுகப்படுத்திய, வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் மொபைல் தொலைபேசி சேவைகள் பற்றிய குறிப்புகள் மட்டுமே கீழே தரப்பட்டுள்ளன. இவை முதல் தலைமுறையில் தொடங்கி ஆறாவது தலைமுறைக்கு விரைந்து கொண்டிருக்கும் செல்லுலார் சகாப்தத்தின் முன்னோடிகள் என்பதால் பூஜ்யத் தலைமுறைக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன.

0G – மொபைல் தொலைபேசி சேவை (Mobile Telephone Service)

1946 ஜூன் மாதம் Bell Labs செயின்ட் லூயிஸ் நகரில் அறிமுகப்படுத்திய வாகன மொபைல் தொலைபேசி அமைப்பே, மொபைல் சேவை சகாப்தத்தின் ஆரம்பம் எனக் கூறலாம். 1948க்குள், AT&T (American Telephones & Telegraphs) இதே போன்ற சேவையை அமெரிக்காவின் 100 பெருநகரங்களில் தொடங்கியது. மொபைல் பயனாளிகளுக்குத் தரைவழித் தொலைபேசிகளுடன் தொடர்புகொள்ளும் வசதியும் தரப்பட்டது. இவை அனைத்தும் Trunked Mobile Systemவகையாகும். இந்த அமைப்பில் ஒதுக்கப்பட்ட அலைக்கற்றையின் அலைவெண்களைப் பல சிறு அலைவெண்கள் அகல பாதைகளாகப் பிரித்து பயன்படுத்தப்படும். மொபைல் கருவிகளுக்கு ரேடியோ குறிகைகளை அனுப்ப நகரின் மையத்தில் உயரமான இடத்தில் ஒரேயொரு உயர் ஆற்றல் ஆன்டெனாகொண்ட BTS (Base Transmitter / Receiver Station ) அமைத்து அங்கே இணைப்புகளை உண்டாக்க ஓர் ஆபரேட்டர் நியமிக்கப்படுவார்.

மொபைல் தொலைபேசிகள் வழக்கமாக மகிழுந்து (car) அல்லது சுமையுந்து (truck)களில் வைக்கப்படும். ஓரிரு கைப்பெட்டி (briefcase) மாடல்களும் புழக்கத்தில் இருந்தன.பொதுவாக வாகனங்களின் டிக்கியில் அனுப்பி – ஏற்பி (transceiver அதாவது transmitter cum receiver) வைக்கப்பட்டிருக்கும். அதனுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி, டயல், காட்சியகம் (display) ஆகியன தலையில் அணிந்து கொள்ளக்கூடிய தலையணி (head gear) வடிவில் ஓட்டுனரின் அருகில் வைக்கப்படும்.

கைப்பேசி உட்பட்ட மொபைல் கருவி ஒவ்வொன்றும் 36 கிலோ எடையுள்ளவை. இந்த தொலைபேசி அமைப்பு, 20-30 மைல்கள் ஆற்றல் எல்லை, 40 அலைப்பாதைகள் (150 Mhz அல்லது 450 Mhz ரேடியோ அலைப்பட்டையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 khz அகலப் பாதைகளாகப் பிரிக்கப்பட்ட 120 khz அலைக்கற்றை), ஒரு சமயம் ஒருவர் மட்டுமே பேசக்கூடிய இருவழி இணைப்பு (semi-duplex) ஆகிய கட்டுப்பாடுகள் கொண்டிருந்ததால் அதன் மூலம் சில பயனர்களுக்கு மட்டுமே சேவையளிக்க முடிந்தது. மேலும் அதே அலைப்பாதைகள் வெவ்வேறு நகரங்களில் மறு பயன்பாட்டுக்கு வேண்டியிருந்ததால் அவ்விரு நகரத் தொலைபேசி அமைப்புகளிடையே குறைந்தது 50 மைல்கள் இடைவெளி இருக்கவேண்டும். நியூயார்க்கில் பயன்படுத்தும் அலைப்பாதைகளை பிலடெல்பியாவில்தான் மறுசுழற்சி செய்யமுடியும். 40 அலைப்பாதைகள் கொண்ட அமைப்பில் நியூயார்க் நகர மற்றும் புறநகர்ப் பயனர்கள் ஒரே நேரத்தில் 40 அழைப்புகளுக்கு மேல் பயன்படுத்தமுடியாது.

குறைபாடுகள்கொண்ட விலையுயர்ந்த சேவையாக இது இருந்தபோதிலும் பயனாளிகள் இடப்பெயர்வு வசதிக்காக (mobility) எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். அதனால் சேவைக்கான கோரிக்கைகள் மிகுந்து அலைப்பாதைகளின் பற்றாக்குறை உணரப்பட்டது. ஆற்றல் எல்லை மற்றும் அலைப்பாதைகள் விடயத்தில் கடுமையான குறைபாடுகள்கொண்ட இந்தச் சேவைக்கு மாற்றாக, 1964-ல் AT&T தானியங்கி மேம்பட்ட (Improved) மொபைல் தொலைபேசி அமைப்பைக் கொண்டுவந்தது.

மேம்பட்ட மொபைல் தொலைபேசி அமைப்பு (IMTS)

IMTS (Improved Mobile Telephone System) அல்லது தானியங்கி மொபைல் தொலைபேசி அமைப்பு AMTS (Automated Mobile Telephone System) என்ற பெயரால் அழைக்கப்படும் AT&-யின் 1964 மொபைல் தொலைபேசி அமைப்பு, ஆபரேட்டர் உதவியின்றி நேரடி டயலிங்கில் அலைப்பாதையையும் விரும்பிய எண்ணையும் தேர்ந்தெடுத்து இருவரும் பேசக்கூடிய இருவழி இணைப்புத் தரும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டிருந்தது.

இதில் மொபைல் தொலைபேசிப் பயனாளி, தான் விரும்பும் தொலைபேசி எண்ணை டயல் செய்து முடித்துப்பின், ‘அனுப்பு’ (send) பொத்தானை அழுத்துவார். அவருடைய ஏற்பி எல்லா அலைப்பாதைகளையும் வரிசைக்கிரமமாக ஆராய்ந்து ஓர் ஓய்ந்திருக்கும் அலைப்பாதையைத் தேர்ந்தெடுக்கும். முதல் சுற்றில் எதுவும் கிடைக்காது போனால், ஓய்ந்திருக்கும் அலைப்பாதை கிடைக்கும் வரை சுற்றுகள் தொடரும். சில அமைப்புகளில் தேடல் சுற்றுகள் கட்டுப்படுத்தப்படும். அப்போது குறிப்பிட்ட சுற்றுகள் கடந்தபின், அழைப்பு முயற்சிகள் தற்காலிகமாக முடக்கப்படும். ஆனால் தரைவழித் தொலைபேசிகளிலிருந்து மொபைலுக்கு வரும் அழைப்புகளுக்கு உடனே அலைப்பாதை கிடைக்காவிட்டால் பல சுற்றுகளில் தேடும் வசதி மறுக்கப்பட்டு அழைப்பு முடக்கப்படும். மொத்தத்தில் தானியங்கி அமைப்பினால் சேவையின் தரத்தில் சிறிதளவே மேம்படுத்த முடிந்ததென்றும் தேவைக்கேற்ற அளவில் அலைப்பாதைகள் இல்லாதவரை சேவை மேம்பட வழியில்லை என்ற முடிவுக்கு வர நேரிட்டது. இருப்பினும் முதல் தலைமுறை மொபைல் அமைப்பு வரும்வரை IMTS சேவை தொடர்ந்தது.

செல்லுலார் கருத்துப்படிவ உதயம்

பூஜ்யத் தலைமுறையின் முதல் ஆளியக்கி (manual ) மொபைல் தொலைபேசி அமைப்பின் பலகீனங்களான குறை திறன் (low capacity மற்றும் அலைவெண் மீள்பயன்பாடு ஆகியன புலப்பட்டவுடனேயே, 1947-ல் பெல் லேப்ஸ் தன் செல்லுலார் கருத்துப் படிவத்தை முன்வைத்தது. ஒற்றை உயர் திறன் அனுப்பிக்குப் பதிலாகச் சேவைப் பரப்பை பயனர் செறிவுக்கேற்ப 2 கிமீ முதல் 50 கிமீ வரை விட்டம் (diameter) கொண்ட சிறுசிறு பகுதிகளாகப் (cells ) பிரித்து அவை ஒவ்வொன்றுக்கும் பயன்பாட்டுக்குத் தக்கவாறு மொத்த அலைக்கற்றையின் சிறு பகுதியை வழங்கி, செல் ஒவ்வொன்றுக்கும் முழுமையாகத் தழுவக்கூடிய (coverage) ஒரு தாழ் திறன் (low power) அனுப்பி என்ற விகிதத்தில் அதிக எண்ணிக்கையில் தாழ் திறன் அனுப்பிகளை நிறுவுவதும், அலைவெண் குறுக்கீடுகளைத் (interference ) தவிர்க்கக்கூடிய வகையில் மீள்பயன்பாடுகளை அமைத்துக்கொள்வதும் செல்லுலார் கருத்துப் படிவத்தின் முக்கிய கருத்துரைகள்.

மொபைல் அமைப்பில் செல் (cell) என்பது அடிப்படை நிலப்பரப்பு. ஒவ்வொரு செல்லுக்கும் ஓர் அறுகோணம் குறியீடாய் அமையும். ஒவ்வொரு செல்லிலும் ஒரு குறை திறன் அனுப்பியைக்கொண்ட தரை நிலையம் (base station) அமைக்கப்படும். பயனர் செறிவைக் கருதி அதிக செல்களை உண்டாக்குவதற்கு செல்பிரிப்பு (cell splitting) என்று பெயர் . மேலும் பயனர் செல்களுக்கிடையே இடம்பெயரும்போது, பயன்பாட்டில் உள்ள அழைப்பை அடுத்த செல்லுக்கு மாற்றும் வசதியையும் செல்லுலார் அமைப்பு கொண்டிருக்கவேண்டும். இது hand off (கை மாற்றம்) எனப்படுகிறது. செல்லுலார் அமைப்பின் அலைவெண் மீள்பயன்பாடு உத்தியால் மேம்பட்ட ஆற்றலெல்லை, மேம்பட்ட அலைக்கற்றை பயன்பாடு மற்றும் அனுப்பிகளின் திறன் குறைப்பு ஆகிய அனுகூலங்கள் கிட்டும். அனைத்து மொபைல் தொலைபேசி நிறுவனங்களும் செல்லுலார் மொபைல் தொலைபேசி அமைப்புக்கு ஆதரவாக இருந்தபோதிலும் அதை நடைமுறைப்படுத்தத் தேவையான தொழில்நுட்பம் 1970-ல்தான் கிடைத்தது.

மொபைல் தலைமுறைகள்

செல்லுலார் கருத்துப்படிவம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முந்திய மொபைல் தொலைபேசி அமைப்புகள் அனைத்தும் பூஜ்யத் தலைமுறையைச் சேர்ந்தவை எனவும் பின்னர் செல்லுலார் தொழில்நுட்பத்துடன் பயன்பாட்டுக்கு வந்தவை அவற்றின் தொழில்நுட்ப மேம்பாட்டைக் குறிப்பிடும் வகையில் 1G, 2G…. 5G என்றழைக்கப்படுகின்றன எனவும் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். (G குறிப்பது Generation, அதாவது தலமுறை).

உலகின் முதல் 1G செல்லுலார் அமைப்பு 1979-ல் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் NTT (Nippon Telegraph and Telephone) கம்பெனியால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்த ஒவ்வொரு தசாப்தத்திலும் (decade) தொடர்ந்துகொண்டிருக்கும் மேம்பாடுகள் முறையே 2G (1990), 3G (2000), 4G (2010) என்று பெயரிடப்பட்டன. செல்லுலார் மொபைல் தொடர்பாடலில் முன்னிலை வகிக்கும் நாடுகள் அனைத்தும் 2020-ல் 5G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளன. பத்தாண்டுகால இலக்கை நோக்கித் தளராது ஜுர வேகத்தில் பயணிக்கும் தொழில்நுட்ப மேம்பாடுகளைத் தலைமுறை மாற்றங்கள் எனக் கருதுவதில் தவறேது? மேலும் ஒவ்வொரு தலைமுறையும் கணினி மென்பொருள் புதுப்பிப்பு போலல்லாமல் தனித்த அடையாளம்கொண்ட மேம்பாடாக வெளிவருவது அதன் தனிச் சிறப்பு. வரும் பத்திகளில் ஒவ்வொரு தலைமுறை பற்றியும் சற்று ஆழமாக நோக்குவோம்.

1G செல்லுலார் ஒப்புமை (analog) தொலைபேசி அமைப்பு

பூஜ்யம் G-யில் மொபைல் தொலைபேசி என்றாலே “ஆட்டோமொபைல் தொலைபேசி” என்றுதான் பொருள். 1G-யிலும் பெருவாரியான மொபைல் தொலைபேசிகள் வாகனங்களில் பொருத்தப்பட்டன. 1G-யின் ஆரம்ப காலத்தில் ‘இடம்மாற்றக்கூடியது’ (Portable) என்னும் விருப்பத் தெரிவும் இருந்தது. அது பள்ளிப் பை வடிவில் உடலின் குறுக்காக அணிந்து தோளில் சுமந்து செல்லக்கூடிய தோல் அல்லது கித்தான் பை (satchel) மாடல். பின்னர் வந்த கையடக்க அலைபேசிகள் அவற்றிற்கு மாற்றாக (replacement) ஆயின.

Dyna TAC- முதல் கையடக்க அலைபேசி:

1983-ல் மோட்ரோலா (motorola) கம்பெனி வடிவமைத்த DynaTAC 8000xதான் முதல் முழுமையான கையடக்க அலைபேசி. இதுவே அலைபேசி பரிணாமத்தைத் தொடக்கிவைத்தது. பெயரளவில்தான் இது கையடக்க அலைபேசி. உண்மையில் அது 1கிலோ எடை, 30 செமீ நீளம், 9 செமீ தடிமன் கொண்டிருந்தது. தோராயமாக முழுச் செங்கல் அளவில் ஒரு சிறு பெட்டியில் (brief case) எடுத்துச்செல்லத் தக்கதாக இருந்தது. விலை 4,000 டாலர்கள். தொடர்ச்சியாக 30நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதிக்கும் அளவிலேயே அதன் மின்கலனின் ஆற்றல் இருந்தது. மின்கலன் முழுதாக மின்னூட்டம்பெற 10 மணி நேரம் பிடித்தது.

1989-ல் மோட்ரோலா DynaTAC வரிசையில் 9800X (MicroTAC) என்னும் சட்டைப் பையில் மடக்கி வைக்கக்கூடிய சுண்டு (flip) மாடலைக் கொண்டுவந்தது. அதுவே 1990களின் தரநிலை ஆனது.

சொந்த (personal) போன் மகத்துவம்

கார் ஃபோன், அலுவலக ஃபோன், வீட்டு ஃபோன் போன்று இடம்சார்ந்து குறிப்பிடவேண்டிய தேவை இல்லாத சொந்த அலைபேசி வைத்திருப்பது வணிக சமூகத்தின் தகுதி நிலைக்குறியீடு (status symbol) எனக் கருதப்பட்டதால் இதன் தேவை மிகவும் அதிகரித்து நீண்ட காத்திருப்புப் பட்டியலும் உருவானது. 1G வந்தபின்னர் உலகளாவிய அலைபேசி சந்தை ஆண்டுக்கு 30%முதல் 50% அளவுக்கு வளர்ந்துகொண்டிருந்தது. 1990 முடிவில் உலகின் மொபைல் பயனர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 மில்லியன் ஆகி விட்டது. மேம்பட்ட அலைபேசிக் கருவிகள் வந்துவிட்டபடியால் மொபைல் பயன்பாட்டுக்கு ஒப்புமை அமைப்பின் ஒவ்வாமையை நன்கறிந்த பயனர்களும்கூட தொடர்ந்து ஆதரவு அளித்துவந்தார்கள். சொந்த அலைபேசிப் பயன்பாட்டின் உற்சாகமே, பயனர்களின் தயக்கமற்ற ஆதரவுக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.

1G செல்லுலார் மொபைல் தரநிலைகள் (Standards)

இந்த1980-90 தசாப்தத்தில் கீழ்க்கண்ட ஒப்புமை செல்லுலார் மொபைல் தரநிலைகள் பெருமளவில் நிறுவப்பட்டன. அவை அலைக்கற்றைப் பயன்பாடு போன்ற பல அம்சங்களில் வேறுபட்டிருந்தன.

  • NMT 450 – நார்டிக் மொபைல் தொலைபேசி அமைப்பு. (1981 துவக்கம்; 450Mhz அலைவெண் பட்டையில் இயக்கப்பட்டது.) இந்தத் தரநிலை டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நார்டிக் நாடுகள் மற்றும் ஆஸ்ட்ரியா, ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாண்ட்ஸ், ஐஸ்லேண்ட், துருக்கி, ஹங்கேரி போன்ற ஐரோப்பிய நாடுகளில் நிறுவப்பட்டன.
  • AMPS – Advanced மொபைல் ஃபோன் சிஸ்டம். (1983 துவக்கம்; 800/900 Mhz அலைவெண் பட்டையில் இயக்கப்பட்டது.) இது பெல் லேப்ஸ் உருவாக்கிய தரநிலை. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் நிறுவப்பட்டன.
  • TACS-Total Access Communication சிஸ்டம். AMPS-ன் வடிவமைப்பில் ஐரோப்பிய அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு உகந்த வகையில் சிறு மாற்றம் செய்யப்பட்ட அமைப்பு. நிறுவப்பட்ட நாடுகள்: UK மற்றும் அயர்லேண்ட், ஸ்பெயின், ஆஸ்ட்ரியா ஆகிய ஐரோப்பிய நாடுகள், குவைத், UAE, பஹ்ரைன் ஆகிய மத்தியக் கிழக்கு நாடுகள், ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, சீனா ஆகிய தூர கிழக்கு நாடுகள்.
  • NTT System-முதல் செல்லுலார் அமைப்பு. 1979-ல் 800 Mhz அலைவெண் பட்டையில் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1988-ல் ஓர் அதிக ஆற்றல் அளவுகொண்ட தரநிலை அறிமுகமானது.

வெவ்வேறு தரநிலைகள் பயன்பாட்டில் இருந்ததால் உலகளாவிய இடப்பெயர்வு வசதி கிடைக்கவில்லை. நாடுவிட்டு நாடு பயணிப்போர் தேவைக்கேற்றபடி இரட்டை அலைப்பட்டை (dual-band) அலைபேசிகளை வாங்கிப் பயன்படுத்திக் கொண்டார்கள். பரந்தகன்ற இடங்களில் சுற்றித் திரியும்போதும் தொடர்பாடல் வசதி அளிக்கிற (roaming), மோட்ரோலா மலிவுக் கையடக்க அலைபேசிகள் சராசரிப் பயனர்களைக் கவர்ந்ததால் மொபைல் தொலைபேசி சேவைகள் இதுவரைக் கண்டிராத பெருவளர்ச்சி கண்டது. 1990-களில் அதிக ஆற்றலும் நல்ல செயல்திறனும் கொண்ட இலக்கமுறை அமைப்புகளின் வருகைக்குப் பின்னரும் ஒப்புமை வகை அமைப்புகள் செல்லுலார் சந்தையில் ஆதிக்கம் செலுத்திவந்தன. இதனால் சில ஆண்டுகள் இலக்கமுறை அமைப்புகள் ஒப்புமை அமைப்புகளுடன் சேர்ந்தியங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனினும் புதிய கட்டுமானங்கள் அனைத்தும் இலக்கமுறை அமைப்புகளாக இருந்தன.

ஒப்புமை முறை  இலக்க முறை: ஒப்பீடு

1G-யில் பயன்படுத்தப்பட்ட ரேடியோ குறிகைகள் அனைத்தும் ஒப்புமைக் குறிகைகள். இதில் குரல் பேச்சு அலைவெண் பண்பேற்றம் (frequency modulation) செய்யப்படுகிறது; அலைவெண் பண்பேற்றத்தின் பொதுவான பிரச்னையே, குறுக்கீடுகளுக்கு (interference) எளிதில் இலக்காகிவிடும் தன்மைதான். அதனால் ஒப்புமைக் குறிகைகள் வளிமண்டலத்தில் சிதைவுற்றுப் பேச்சின் தன்மை கெடும் வாய்ப்புகள் நிறையவே உண்டு. மேலும் ஒப்புமைக் குறிகைகளை மறையாக்கம் (encryption) செய்ய இயலாது. அதனால் எளிதாக ரேடியோ ரிசீவர் மூலம் பேச்சை ஒட்டுக்கேட்க முடியும்.

1G-யின் குறிப்பிடத்தக்க குறைபாடுகள்

பேச மட்டுமே பயன்படுவது, உரையாடலின்போது அதிக அளவில் இணைப்புகள் முறிதல், அதிகப் பருமன்கொண்ட அலைபேசிகள், அதிக மின்கலப் பயன்பாடு, மோசமான குரல் நயம், குறைவான அழைப்புத்திறன் (55 calls per cell), உரையாடலின் ரகசியக் காப்புக்கு உத்திரவாதமின்மை ஆகியவை 1G-யின் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் ஆகும். இவை அனைத்துமே ஒப்புமை முறையின் குறைபாடுகள். இலக்கமுறைத் தொழில்நுட்பத்தில் முற்றிலுமாகக் களையப்படக்கூடியவை.

தொழில்நுட்பச் சொற்கள்:

Resonanace – ஒத்திசைவு: மின்சுற்றில் ஏற்படும் ஒரு நிகழ்வு; அதன்படி ஒரு குறிப்பிட்ட அலைவெண்ணில் மின்சுற்றின் வெளிப்பாடு உச்சத்தை அடையும்.

Quntam theory: அணு மற்றும் துகள் மட்டத்தில் வஸ்து (matter) மற்றும் சக்தியின் இயல்பும் நடத்தையும் எவ்வாறிருக்கும் என்பதை விளக்கும் கோட்பாடு.

Quantum: இயல்பான உதிரிகளை அடக்கிய பொட்டலம் / பொதி / சொட்டு.
(உதா.: பூந்திப் பொட்டலம்.) மின்காந்த சக்தி, எக்ஸ் கதிர், gamma கதிர் ஆகியவற்றின் அடிப்படை அலகு.

Photon: துகள் வடிவ ஒளிப்பொட்டலம் ஃபோட்டான் என்று அழைக்கப்படுகிறது.

Spectrum: ரேடியோ குறிகைகள் பயணம் செய்யக்கூடிய கண்ணுக்குப் புலப்படாத ரேடியோ அலைவரிசைகள். (அலைப்பாதைகள்.)

Band: பட்டை; ஒளி 7 நிறங்களின் தொகுப்பு என்பதுபோல், ரேடியோ அலையும் தனிப் பண்புகள்கொண்ட பட்டைகளைக் கொண்டது.

Hertz: ஒரு வினாடியில் ஏற்படும் சுழற்சிகள்.

Tera: 1012.

Oscillator: குறிப்பிட்ட அதிர்வெண்கொண்ட அலைகளை உற்பத்தி செய்யும் மின்னணுவியல் கருவி அல்லது அலைப்பான் சுற்று.

Oscillate: அலைதல்.

Communication: தொடர்பாடல்.

Antenna :வானலை அனுப்பி / ஏற்பி.

AT&T: முந்தைய American Telephone and Telegraph Company.

Bell Labs: பழைய AT&Tயின் புகழ்பெற்ற ஆராய்ச்சிப் பிரிவு.

BTS: Base Transceiver Station, ஒரு செல்லில் உள்ள அலைபேசிகளுக்கும் மொபைல் பிணையத்துக்கும் (நெட்ஒர்க்) தொடர்பு ஏற்படுத்திக்கொடுக்கும் உபகரணங்களின் தொகுப்பு. கோபுரம் (டவர்), வானலை அனுப்பி / ஏற்பி, மின்னணுவியல் உபகரணம், மின் வழங்கி, மின்கலம் மற்றும் அவசர நிமித்தப் பயன்பட்டுக்கான மின்திறனாக்கி. (Generator.)

Trunked Radio System: இதில் நகரின் நடுப்பகுதியில் ஒரு ரேடியோ டவர் மற்றும் ரேடியோ உபகரணங்கள் அடங்கிய அடிப்படை ரேடியோ நிலையம் அமைக்கப்பட்டிருக்கும். மொபைல் ஃபோன் பயனர்கள் ஆபரேட்டர் மூலமாகவோ அல்லது FDMA / TDMA உபகரணங்கள் மூலமாகவோ வேறு மொபைல் ஃபோனுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வார்கள். இந்த அமைப்புக்கு ஓர் அலைவெண் வரிசை ஒதுக்கப்படும். அது எல்லாப் பயனர்களின் மொபைல் கருவியாலும் பகிர்ந்து கொள்ளப்படும்.

FDMA/TDMA: Frequency Division Multiple Access / Time Division Multiple Access:பல பயனர்கள், பயன்படுத்தக்கூடிய அலைக்கற்றையைத் திறமைமிக்க முறையில் பகிர்ந்து கொள்வதற்கான தொழில்நுட்பம்.

தகவல் குறிப்புகள்:

en.wikipedia.org › wiki › Maxwell’s_equations

  • Spectrum Managament

https://en.wikipedia.org/wiki/Frequency_allocation

  • Mobile and Personal Communication System and Services by Raj Panda

2000 IEEE Communication Society, Sponsor

  • Electro Magnetic Spectrum- Introduction- Imagine The Universe

https://imagine.gsfc.nasa.gov/science/toolbox/emspectrum1.html

 

 

https://solvanam.com/2021/01/24/மொபைல்-தொடர்பாடல்-வரலாற/

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மொபைல் தொடர்பாடல் வரலாறு-2G

பகுதி 2 

கோரா

1G-ஒப்புமை (analog) மொபைல் தொலைபேசி அமைப்புகள்  கார்களிலும் வாகனங்களிலும் தொலைபேசிகளைப்  பொருத்திக் கொள்ள விரும்பிய மேட்டுக்குடி மக்களையே  வருவாய் இலக்குகளாகக்  கொண்டிருந்தன. ஆனால் அவ்வகை மொபைல் தொலை பேசியின் இடம்-பெயர்வு லாவகம் பாமரரையும் கவர்ந்தது.  மேலும் 1980களின்  இறுதியில் மோட்டரோலா வடிவமைத்த, மலிவான, இலகு ரக, சட்டைப்பையில் மடக்கி வைக்கக் கூடிய ( foldable)  சுண்டு (flip) மாடல்  மைக்ரோடேக் (MicroTac) அலைபேசி அனைவரையும் கிறங்க வைத்தது. வீட்டினுள்ளும் வீதிகளிலும் வாகனங்களிலும் வெளியூரிலும் எந்த சூழலிலும் தொடர்புக்கு வசதி செய்யும் சொந்த ஃ போனாக அது உணரப் பட்டதாலும், மின்கலன் துய்ப்பு குறைந்து பயன்பாட்டுக் காலம் கூடி, செலவுகள் அனைவர்க்கும் கட்டுபிடியாகும் அளவில்  இருந்ததாலும்  மொபைல் சேவையின் கவர்ச்சி  பன்மடங்கு அதிகரித்தது.  புதிய செல்களை அமைத்தும், இருக்கும் செல்களைப்  பிரித்தும் (cell splitting) அல்லது பாகம் செய்தும்(sectorization )  கொள்கையளவில் செல்லுலார்  தொலைபேசி அமைப்புகளை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் விரிவாக்கம் செய்ய முடிந்தது. இந்தக் காரணங்களால்  உலக 1G மொபைல் பயனர்களின் எண்ணிக்கை 1990 இறுதியில் 20 மில்லியனைக் கடந்தது. ஒப்புமை தொழில் நுட்பத்தின் போதாமைகளோ குறைபாடுகளோ அவர்களின் பேரார்வத்தைக் குறைக்கவில்லை.

ஒரு முறை ஒத்திவைக்கப் பட்ட இலக்கமாக்கல் (Digitising) : 

 ஒப்புமை முறை (analog), இலக்க முறை (digital) ஆகிய இரு மொபைல் தொலைபேசி அமைப்புகளிலும், ரேடியோ கோபுரத்திற்கும் தொலை பேசி அமைப்பின் பிற உபகரணங்களுக்கும் இடையே இலக்கமுறை சமிக்ஞைகளே பயன்படுத்தப் படுகின்றன.  முக்கிய வேறுபாடு, அலைபேசிக்கும் ரேடியோ கோபுரத்திற்கும் இடையே நிகழும் குரல் சமிக்ஞைப் பரிவர்த்தனைகளில் மட்டுமே; 1G யில் ஒப்புமை குறிகைகளும், 2G யில் இலக்கமுறை குறிகைகளும் குரல் சமிக்ஞைப் பரிவர்த்தனைக்குப்   பயன்படுத்தப் படுகின்றன. 

1970களிலேயே  முழு இலக்கமுறை மொபைல் அமைப்பின் சாத்தியக்  கூறுகள்  மற்றும் அனுகூலங்கள் குறித்த ஆரம்ப கட்ட விவாதங்கள் மேற்கொள்ளப் பட்டன. அந்த காலகட்டத்தில் இலக்க முறை ரேடியோ போன்கள் ராணுவத்தில் பயன்படுத்தப் பட்டுவந்தன. ராணுவப் பயன்பாட்டிற்கான அலைபேசிகள் ரேடியோ குறுக்கீடுகள் நிறைந்த சூழலிலும் தெளிவான வலுவான குறிகைகளை ஏற்கக் கூடியதாகவும், மறையாக்கம் (encryption) மூலமாக ரேடியோ பாதைகளில் ஒட்டுக் கேட்பை  அனுமதிக்காத பாதுகாப்பு கொண்டதாகவும், முறைகேடான அணுகலைத் தவிர்க்கக் கூடிய வலிய சான்றுறுதி மற்றும் சரிபார்ப்பு(authentication) செயல்முறைகள் கொண்டதாகவும் வடிவமைக்கப் பட்டன. 

ஆனால் ஒருங்கிணைசுற்றுகள் (integrated circuits ), நுண் செயலிகள் (microprocessors ) போன்ற அதி  நவீன மின்னணுவியல் கூறுகள் கிடைக்காத நிலையில்,  தனித்த(discrete) கூறுகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப் பட்ட  ராணுவப் பயன்பாட்டு போன்கள் பருமனாகவும் அதிக மின் சக்தி நுகர்வனவாகவும் அதிகவிலை கொண்டதாகவும்   இருந்தன. மின்னணுவியல் வளர்ச்சி மூலம் கிடைக்கப் போகின்ற சிற்றளவாக்கம்(miniaturisation), குறைந்த மின்சக்தி நுகர்வு மற்றும் குறைந்த மின்கலன் பயன்பாடு ஆகியவை இலக்கமாக்கல் வெற்றிக்கு இன்றியமையாதவை எனத் தொழில்நுட்ப வல்லுநர்களால்   கருதப் பட்டதால், இலக்கமாக்கல் திட்டம்,  2G தலைமுறைக்கு ஒத்தி  வைக்கப்பட்டது. அவர்கள் எண்ணியவாறே 1980களின் இறுதியில்  மின்னணுவியல் கூறுகள் பெருவளர்ச்சி அடைந்து அதுவே இலக்கமாக்கலின் உந்து சக்தி ஆனது.  

spacer.png
 

மொபைல் இலக்கமுறையாக்கலின் (digitalization ) உந்து சக்திகள்:

  1. மொபைல் அமைப்புகளின் உயர் ஆற்றல் அளவு
  2. கையடக்க  அலைபேசியின்  விலையில் பெரும் சரிவு
  3. மின் சக்தித் தேவை குறைந்ததால் மின்கலம் ஆயுள் நீடிப்பு 
  4. மலிவு விலை இருவழிக் குறிமுறை மாற்றி ( codec-coderdecoder)
  5. அலைபேசியில்  ஒருங்கிணைச் சுற்றுகள்  மற்றும் நுண்செயலிப் பயன்பாடு 
  6. இலக்கமுறை குறிகை செயலாக்கச் சிப்  (Digital Signal Processing chip) வருகை 

குரல் செயலாக்க (Voice processing ) தொழில் நுட்ப DSP சிப்களின் பயன்பட்டால் குரல் அலைப்பாதைகளின் அலைநீளத் தேவைகள் ⅓ ஆகக் குறைந்தன. அதனால் ஒதுக்கப்பட்ட அலைக் கற்றையில் மும்மடங்கு அலைப் பாதைகளை உருவாக்க முடிந்தது.   

2G- இரண்டாம் தலை முறை மொபைல் தொடர்பாடல்(1990- 1999) அறிமுகம் : 

இலக்கமாக்கலை  செல்லுலார் நெட்ஒர்கிங்கிற்கு வெற்றிகரமாகக் கொண்டுவந்த கால கட்டத்தை 2G என்கிறோம். இதுவே மொபைல் தொடர்பாடலின் புரட்சிகரமான மைல்கல்லாகக்  கருதப் படுகிறது. 

ஏனெனில் செல்லுலார் தொடர்பாடலில் இதுவரை சிறிய அளவில் பயன்படுத்தப் பட்டுவந்த ஒப்புமை முறை  முழுதாக, இனி எப்போதைக்குமாக, இலக்கமுறைக்கு மாறியது. இலக்கமுறையின் இரைச்சல் நீக்கல் வழிகளால் பிழைகள் திருத்தப்பட்டு  குரல் நயம் வெகுவாக உயர்ந்தது. ஒரே அளவு அலைவெண் கற்றையில் அதிக பயனர்களுக்கு இடமளிக்க முடிந்ததால் மொபைல் தொலைபேசிக் கம்பெனிகளும் பயனடைந்தன. இலக்க முறை செல்லுலார் அமைப்புகளால், மொபைல் தொடர்பாடல் நம்பகமானதாக மற்றும் பாதுகாப்பானதாக ஆனதோடு  தர அளவுப்பாடு (standardization) முயற்சிகளால்  விலையும் வெகுவாக சரிந்தது. 

ஆனால் அலைக்கற்றை விலை, டவர் சாதனங்கள் விலைகளைச் சரிகட்டி லாபம் ஈட்ட, அதிக எண்ணிக்கையில் பயனர் ஆதாரம் தேவைப்பட்டது. பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தின்(ITU ) தீவிர சீராக்க முயற்சிகளால், அது பரிந்துரைத்த ரேடியோ அலைக்கற்றைப் பயன்பாட்டைப்  பெருவாரியான உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன. அத்துடன் எல்லா ஐரோப்பிய நாடுகளும் ஒரே சீராக பயன் படுத்தக் கூடிய ஒற்றை மிகு திறன் இலக்கமுறை செல்லுலார் TDMA தொழில் நுட்ப தர நிலையை தமக்காக உருவாக்கிக் கொள்வதும் அதன் மூலம் அனைத்து யூரோப் திரிகையை(roaming ) உறுதி செய்வதும்,  அப்போது பயன்பாட்டில் இருந்த அனைத்து ஒப்புமை முறை அமைப்புகளை   மூடிவிடுவதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. 

spacer.png

அதன் செயல் வடிவமாக யூரோப்புக்கான GSM தர நிலை (standard) உருவானது. ஐரோப்பிய நாடுகளில்  TDMA அடிப்படையில் உருவான GSM அமைப்புகள் 1991-ல் வணிகப் பயன்பாட்டைத் துவங்கின.  வட அமெரிக்காவின் அன்றைய 1G (ஒப்புமை முறை ) அமைப்புகள், AMPS (Advanced Mobile Phone System ) மற்றும் NAMPS (Narrowband version of AMPS) என்னும் தர நிலைகளில் நாடெங்கும்  செயல் பட்டுவந்தன .  அமைப்புக்கிடை இயக்கத்துக்காக உருவாக்கப்பட்ட IS-41 standard மூலமாக பயனர்களுக்கு  பெரும் பரப்பு திரிகை (wide area roaming) வசதியும் கிடைத்துவந்தது  . யூரோப்  போலன்றி, வட அமெரிக்க AMPS/NAMPS பயன்பாடு இன்னும் பத்தாண்டுகள் (2000 ஆண்டு வரை ) நீடிக்கும் என்று முடிவெடுத்து விட்ட நிலையில், வட அமெரிக்காவுக்கான இலக்கமுறை செல்லுலார் தரநிலைகள், மிகு திறன்கொண்டதாகவும், AMPS/NAMPS அமைப்புகளுடன் இணக்கமாக இயங்கக் கூடியதாகவும் இருப்பதோடு இருவேறு தொழில் நுட்பங்களைப் (TDMA அல்லது CDMA) பயன்படுத்தும் இலக்க முறை தர நிலைகளாகவும் இருக்கவேண்டும் என்று Telecommunications Industries Association (TIA) 1988-ல் உறுதிபடக் கூறியது.  

அமெரிக்காவில் TDMA அடிப்படையில் உருவான D-AMPS தரநிலை 1992-விலும், CDMA  அடிப்படையில் உருவான IS-95A தரநிலை 1995யிலும் வணிகப் பயன்பாட்டைத் துவக்கின. உலக நாடுகள் TDMA அல்லது CDMA தொழில் நுட்பங்களில் ஏதோ ஒன்றைத் தழுவின.  தர நிலைகளுக்கிடையே இணக்கம் இல்லாது போனதால், உலகம் சுற்றும் பயனர்கள் தம் தேவைக்கேற்ப இரு அலைப்பட்டை அல்லது  மூன்று அலைப்பட்டை மொபைல்களைப்  பயன்படுத்தி வந்தனர். அதையும் தொல்லையாகக் கருதாமல்  ஒரு இனிய குழப்பமாகவே கருதினர்.  

உலக வாசிகள் அனைவரும் சொந்த அலைபேசி மூலம் எந்த நேரத்திலும்  எந்த உலகளாவிய அலைபேசி அல்லது தரைவகை தொலைபேசிக்கு  மொபைல் தொடர்பாடல் கொள்ளும் அளவுக்கு  எங்கும் நிறைந்து மாபெரும் வளர்ச்சி கண்டதும் தரை வழித் தொலைபேசிக்கு  நிகராக செல்லுலார் நெட்ஒர்க்கின்  தகவல் பரிமாற்ற சேவை (data service) எழுந்ததும் இந்த தசாப்தத்தில் தான். 

spacer.png

 

பல் அணுகு (Multiple Access ) தொழில் நுட்பங்கள்: 

மொபைல் பிணையங்களில் (networks ) பரப்பு ஊடகப் (transmission medium ) பயன்பாட்டை உச்ச நிலைக்கு கொண்டு செல்லும் உத்தியே பல் அணுகுத் தொழில் நுட்பம் என்று அழைக்கப் படுகிறது. இதன் மூலம் மொபைல் பயனர்கள் ஒதுக்கீடு செய்யப் பட்ட அலைக்கற்றையை மிக அதிகப் பயனுள்ள முறையில் பகிர்கிறார்கள். 

ரேடியோ நிற மாலை பெருமதிப்புள்ள அரிதான இயற்கை வளம்.  பெரு நிலப் பரப்பில் மொபைல் அழைப்புகளின் செறிவை மேம்படுத்த முறையான பகிர்தல் அவசியம். எனவே இதன் பயன்பாட்டில்  பல் அணுகு உத்திகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. தற்போதைய  இலக்கமுறை செல்லுலார் மொபைல் அமைப்புகளில் இரண்டு  வகையான பல் அணுகு உத்திகள் பயன் படுத்தப் பட்டு  வருகின்றன.

  • காலப் பங்கீடு பல் அணுகு  (Time Division Multiple Access-TDMA )-இதில் ஒரு அலைவெண் பல மொபைல் சாதனங்களால் பகிரப் படுகிறது . அதற்காக ஒவ்வொரு ரேடியோ அலைப்பாதையும் பல நேர ஒதுக்கீடுகளாகப் (time slots) பிரிக்கப் படுகிறது. ஒவ்வொரு பயனருக்கும் வேண்டுகோள் அடிப்படையில் அலைவெண் /நேர ஒதுக்கீடு சேர்க்கை விநியோகிக்கப் படுகிறது.
  • குறிமுறைப் பிரிவு பல் அணுகு (Code Division Multiple Access )-இது பரவல் நிறமாலை (spread spectrum) உத்தியைப் பயன்படுத்துகிறது. ஒரு பரவல் குறிமுறையைப் (PNCode–Pseudo-random Noise Code) பயன் படுத்தி அதிக பயனர்களால் அலைக்கற்றையின் பெருந்தொகுதி பகிரப் படுகிறது. வெவ்வேறு பயனர்களிடம் இருந்து வரும் எல்லா PN-code பண்பேற்றம் செய்யப்பட்டக் குறிகைகளும் முழு CDMA அலைப்பாதையின் மீது பரப்புகை செய்யப் படுவதால் இந்த தொழில் நுட்பம் மிக ஆற்றலுடையதாகக் கருதப் படுகிறது.   

1991-ல் பயன்பாட்டுக்கு வந்த ஐரோப்பிய இலக்கமுறை  செல்லுலார் அமைப்பான GSM, வழக்காறு சார்ந்த TDMA உத்தியைத்  தேர்ந்தெடுத்துக் கொண்டது.  அமெரிக்காவைப் பொருத்தவரை, புதிதாக வடிவமைக்கப் படுகின்ற செல்லுலார் இலக்கமுறை அமைப்புகள் பழைய ஒப்புமை முறை அமைப்புகளை விட 10 மடங்கு அதிக அழைப்புகள் கையாளும் திறன் கொண்டதாக இருக்கவேண்டுமென்பது CTIA (Cellular Telecommunications Industry Association) உறுதிசெய்துள்ள இலக்குகளில் ஒன்று. 

TDMA தொழில் நுட்ப இலக்கமுறை அமைப்புகளால் 3 மடங்கு அதிக திறன் மட்டுமே கொடுக்க முடிந்தது. 1990-ல் Qualcomm என்னும் அமெரிக்க கம்பெனி ஒப்புமை முறை அமைப்பை விட 20 மடங்கு அழைப்புகள் கையாளும் திறன் கொண்ட CDMA அடிப்படையில் உருவான செல்லுலார் அமைப்பை உருவாக்கி செயல் விளக்கம் அளித்தது.  

1992-ல் CTIA மற்றும் TIA வின் வேண்டுகோளின் படி, Qualcomm  தர நிலைப் படுத்துதலைத் தொடங்கியது. இவ்வாறு CDMA தொழில் நுட்ப அடிப்படையில் உருவான IS-95 தர நிலை அமைப்பு, 1995-ல் சீராய்வு மற்றும் மேம்படுதலுக்குப் பின் IS-95A என்ற மறு பதிப்பாக வெளியிடப் பட்டது.1999-ல் வெளியான IS-95B, CDMA மொபைல் போன்களில் 115kbps தரவு பரிமாற்ற வசதியை உருவாக்கியது. 

2G இலக்கமுறை செல்லுலார் தர நிலைகள்(standards):

2G இலக்க முறை  செல்லுலார் தர நிலைகளைப் பொருத்தவரை,  ஒவ்வொரு பெரிய பொருளாதாரமும் தனித்தனி தர நிலைகளை உருவாக்கிக் கொண்டன.  உலகின் பெரும்பாலான மொபைல் செல்லுலார் இலக்கமுறை 2G அமைப்புகள் கீழ்க்கண்ட  தரநிலைகளில் ஒன்றைப் பயன்படுத்துகின்றன:

  • ஐரோப்பாவின் GSM 900, GSM1800; TDMA தொழில்நுட்பம்
  • வட அமெரிக்காவின் IS-95A CDMA  சிஸ்டம் ; CDMA தொழில் நுட்பம்
  • வட அமெரிக்காவின் IS-136(D-AMPS) சிஸ்டம் ;TDMA தொழில் நுட்பம்
  •  ஜப்பானின் PDC (Personal Digital Cellular) சிஸ்டம் ; TDMA தொழில் நுட்பம்

தர நிலை  உருவாக்கலின் அணுகுமுறைகளும்  மைல்கற்களும் பின்  வரும் பத்திகளில் விவரிக்கப் படுகின்றன.

spacer.png

GSM தர நிலை- ஐரோப்பிய நாடுகளின் கூட்டு சாதனை:  

1980களின் ஆரம்பத்தில் (அதாவது 1G ஆரம்பத்தில்) பற்பல ஐரோப்பிய மொபைல் டெலிபோன் கம்பெனிகள் NMT 450, TACS தர நிலை ஒப்புமுறை மொபைல் அமைப்புகளை நிறுவிக் கொண்டிருந்தன. அடுத்த (2G) தலைமுறையில் ஐரோப்பிய மொபைல் அமைப்புகள் அனைத்தும் இலக்கமுறை அமைப்புகளாக மாற்ற வேண்டும் என்று கொள்கை அளவில் முடிவு எடுத்து அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின. அவற்றின் விவரங்கள்:

1982-ல்  CEPT (Confederation of European Post and Telecommunications), அனைத்து ஐரோப்பிய (PAN -European ) மொபைல் நுட்பத்தை வடிவமைக்க Groupe Speciale Mobile (GSM) என்ற உட்குழுவை  அமைத்தது. ஐரோப்பிய நாடுகளில் அப்போது நிறுவப்பட்டிருந்த ஒப்புமை வகை மொபைல் அமைப்புகள்  வெவ்வேறு அலைப் பட்டைகளில்  இணக்கமற்றும் பிற  குறைபாடுகளோடும்  இயங்கிக் கொண்டிருந்தன. ஒப்புமை முறை  அமைப்பை இலக்க முறைக்கு மாற்றுவதோடு ரேடியோ அணுக்கத் தொழில் நுட்பம் மற்றும் அலைவரிசை ஒருமைப்பாட்டைக் கொண்டுவந்து  ஒரே சீரான அனைத்து ஐரோப்பிய அமைப்பை வடிவமைப்பது உட்குழுவுக்கு நியமித்த பணிகள்.

>1984-பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள்,GSM-க்கான இணை உருவாக்க ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.

>1985-ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய ஆணையம் (EC ), GSM திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்தது .  

>1986- ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் GSM திட்டத்தில் கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தார்கள். 900MHz அலைப்பட்டையை GSM திட்டத்துக்கு முன்பதிவு செய்யலாம் என்ற எண்ணத்தை யூரோப்பிய ஆணையம் எடுத்துரைத்தது. EC-யின் தொலைத்தொடர்பு ஆராய்வுக் குழு அதற்கு ஒப்புதல் அளித்தது.

GSM தரநிலைகள் உருவாக்கப் பணிகளுக்கு ஆதரவளிக்கவும் ஆராய்ச்சித் தரவுகளைப் பரிமாறிக் கொள்ளவும் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, U. K ஆகிய நாடுகள் நான்கு தரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

யூரோப் ஒன்றிய உறுப்பு நாடுகளில் தயாரிக்கப் பட்ட வெவ்வேறு இலக்கமுறை ரேடியோ பரப்புகைத் திட்டங்கள் மற்றும் வெவ்வேறு பேச்சு இருவழி குறிமுறை மாற்றி (codec-கோடர் டிகோடர்)கள் அவர்களாலேயே சோதனை செய்யப்பட்டு சோதனை முடிவுகள் ஒப்பீட்டு சீர் தூக்கலுக்காக (comparative evaluation ) பாரிஸ் நகரிலுள்ள CEPT-GSM மையத்துக்கு அனுப்பப் பட்டன.

குழுவின்  பரிந்துரைகளை பதிப்பிக்கவும் மற்றும் இற்றைப்படுத்தவும் (update) நிலையான மையக் குழு அமைக்கப் பட்டது.

>1987- முன்மாதிரிகள்(prototype) மதிப்பிடப் பட்டபின் முக்கிய ரேடியோ பரப்புகை உத்திகள் தேர்வு செய்யப்பட்டன.

பிப்ரவரி மாதத்தில் GSM தர நிலையின் அடிப்படைக் கூறளவுகள் (parameters) ஒப்புதல் பெற்றன.

செப்டம்பரில் GSM நிறுவல் (deployment) உறுதியளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப் பட்டு 13 உறுப்பு நாடுகளின் 15 உறுப்பினர்களால் கோபென்ஹகேன்-ல் கையெழுத்திடப்பட்டது.

>1988 உள்கட்டமைப்பு ஒப்பந்தப் புள்ளி கோருதலுக்குத் தேவையான GSM விரிவான விவரக் கூற்றின் (detailed specification) முதல் தொகுதி நிறைவடைந்தது.

ஒரே நேரத்தில் 10 GSM நெட் ஒர்க் ஆபரேட்டர்கள் நெட்ஒர்க் ஒப்பந்த அழைப்புகளை வெளியிட்டனர். அவை அனைத்தும் பின்னர் அதே ஆண்டிலேயே முடிவு செய்யப் பட்டன.

>மொபைல் சிறப்புக் குழு, GSM தர நிலையை ஒரு பன்னாட்டு ஒப்புதல் பெற்ற இலக்கமுறை செல்லுலார் தொலை பேசி தர நிலையென அறிவித்தது.

>1990-ல் GSM 900 முதல் நிலை  (phase1) விவரக் கூற்றுகள் (specifications)

 நிலைப்படுத்தப் பட்டன(frozen).

> 1991-ல் GSM தரநிலையை 1800MHz அலைவெண் பட்டைக்கு  இசைவாக்கும் பணிகள் துவங்கின. புதிய GSM தரநிலை  DCS 1800 எனப் பெயரிடப் பட்டது. 

1991-முதல் 2G GSM செல்லுலார் மொபைல் (நிலை 1) சோதனை ஓட்டம்.

டிசம்பர் 1991-ல் உலகின் முதல் 2G  GSM செல்லுலார் மொபைல் அமைப்பு பின்லாந்தில் (Finland) வணிகப் பயன்பாட்டுக்கு வந்து விட்டது.  

>1992-ல்  ஐரோப்பாவின் பெரிய மொபைல் தொலைபேசிக் கம்பெனிகள் அனைத்தும் GSM 900-ன் வணிகப் பயன்பாட்டைத் துவங்கி விட்டன.

>1993-ல் முதல் 1800 MHz GSM மொபைல் அமைப்பு (DCS 1800), UK யில் வணிகப் பயன்பாட்டுக்கு வந்தது. அதே ஆண்டில் ஆஸ்திரேலியா முதல் GSM நெட்ஒர்க் பயன்பாட்டுக்கு வந்தது. இதுவே யூரோப் புக்கு வெளியே பயன்பாட்டுக்கு வந்த முதல் GSM நெட்ஒர்க்.

>1995-ல் fax ,SMS மற்றும் தரவு சேவைகள் வணிகப் பயன்பாடு துவங்கின.

வட அமெரிக்காவின் முதல் 1900MHz GSM நெட்ஒர்க் பயன்பாட்டுக்கு வந்தது. உலகளாவிய GSM பயனர்கள் 10மில்லியனைத் தாண்டியது.

>1996-ல்  ப்ரீபெய்டு GSM SIM அட்டைகள் அறிமுகப் படுத்தப் பட்டன   

>1998-ல் உலகளாவிய மொபைல் பயனர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைக் கடந்தது. 

spacer.png

 

அமெரிக்க  2 G தரநிலைகள் உருவாக்கம் : 

1988-ல் வட அமெரிக்காவின் TIA(Telecommunications Industry Association ) குழு

இயற்றிய அணுகுமுறை ஆவணம் இலக்கமுறை பண்பேற்றம் (modulation) இலக்கமுறை குரல் சுருக்கம் (compression) ஆகியவற்றை இணைத்த TDMA தொழில் நுட்பத்தை பரிந்துரைத்தது. அத்துடன் CTIA(Cellular Telecommunications Industry Association ) குழு செயல்திறன் தேவைகளைப்   பரிந்துரைத்தது. 

அவையாவன: புதிய அமைப்பு முன்னோடியான ஒப்புமை முறை AMPS அமைப்பை விட 10 மடங்கு கொள்திறன் கொண்டதாகவும், ஒப்புமை அமைப்புடன் இணக்கமாக செயல் படக் கூடியதாகவும், ஒப்புமையில் இருந்து இலக்கமுறைக்கு நிலை பெயர்வு எளிதானதாகவும் இருக்கவேண்டும். மற்றும்  அலைபேசி பழுது பார்ப்பு காலம் குறைவாகவும், இரட்டைப் பயன்பாடு (analog -digital use) அலைபேசிகள் எனில் அவை குறைந்த விலை கொண்டதாகவும் இருக்கவேண்டும். மோசடிப்பயன்பாட்டிலிருந்தும் ஒட்டுக்கேட்பிலிருந்தும் பாதுகாப்பு, சிறந்த குரல் பரப்புகை ஆகியனவும் அவசியம் . பல புதிய மற்றும் மேம்பட்ட சேவைகள் தொடங்கப் பட வேண்டும். 

புதிய இலக்கமுறை தர நிலைகளின் (standards) நோக்கம், ஒதுக்கீடு செய்யப்பட்ட அலைக்கற்றையின் கொள்திறனை உயர்த்துவது மற்றும் பல்வேறு புதிய சேவைகளை உருவாக்கி செயல் திறனை மேம்படுத்துவது. அது மட்டுமல்லாமல் இணக்கம் இல்லாத நான்கு தர நிலைகளுடன் (AMPS, NAMPS, TDMA, CDMA ஆகியவை ) இணைந்து செயலாற்றவும் வேண்டும். மேலும் தீவிர அமைப்புக் கோளாறுகள் (System failures) நேரும் போது AMPS-ல் பின் சார்தலுக்காக (fall back), இரட்டைப் பாணி (dualmode) அலைபேசி வடிவமைக்கப் படவேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள  ஆர்வம் நிரம்பிய அணுகு முறையைக் கருத்தில் கொண்டு  அமெரிக்காவில் கீழ்காணும் இரு இலக்கமுறை தர நிலைகள் உருவாயின.       

  1. TIA-IS-136 : TDMA தொழில் நுட்ப அடிப்படையில் முதலில்  அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தரநிலை IS-54. அது TDMA அடிப்படையில் உருவான இலக்கமுறை செல்லுலார் தரநிலை, ஒப்புமை முறை அமைப்புகள் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்த சூழலில் அவற்றுடன் இணக்கமாக செயல்படவேண்டிய விதத்தில் dual mode அலைபேசி மற்றும் அமைப்புகளுக்கிடை (inter system) இயக்கம் (ரோமிங்) தேவைகளைக்   கருத்தில் கொண்டு உருவாக்கப் பட்ட தர நிலை. இந்த தரநிலை செல்லுலார் மொபைல் அமைப்புகள் வட /தென்அமெரிக்காவில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள AMPS (ஒப்புமை) அமைப்புகளுடன் இணைந்து செயல்படுமாறு நடைமுறைப் படுத்தப்பட்டன. பின்னர் இது 1992-ல்  இரட்டைப் பாணி (dual mode) IS-54B தரநிலையாக மேம்படுத்தப் பட்டு, D-AMPS என்ற பெயரில் 1993-ல் வட அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, பிரேசில், கென்யா, இஸ்ரேல் மற்றும் சில நாடுகளில் வணிகப் பயன்பாட்டைத் தொடங்கியது. 1994 இறுதியில், IS-54B, இலக்கமுறை கட்டுப்பாட்டுப் பாதை (DCC-Digital Control Channel) நிறுவல் மற்றும் குறுஞ்செய்தி, circuit-switched  தரவு வசதிகள் ஆகியவற்றால் செழுமைப்படுத்தப் பட்டபின் TIA-IS -136 என்ற பெயரில் அழைக்கப் பட்டது.  தர நிலையின்  மேம்பாடுகளின் அடிப்படையில் வட அமெரிக்க TDMA மொபைல் அமைப்புகள் IS-136 என்றோ D-AMPS (Digital AMPS)என்றோ குறிப்பிடப் படுகின்றன.
  1. அமெரிக்காவின்  TDMA  தர நிலைகளுடன் ஆற்றல் அளவு மற்றும் விலையில்  போட்டியிடும் விதமாக, CDMA தொழில் நுட்ப அடிப்படையில்   IS-95 தர  நிலையை 1993 யிலும், அதன் மதிப்பு கூட்டிய, சரிபார்க்கப்பட்ட பதிப்பான IS -95A தரநிலையை 1995 யிலும் Qualcomm கம்பெனி மூலம் TIA உருவாக்கிக் கொண்டது.  இது வட/ தென் அமெரிக்கா மற்றும் ஜப்பான், கொரியா, சீனா ஆகிய நாடுகளில் வணிக ரீதியான பயன்பாட்டில் இருந்தது.

ஜப்பானின் 2G  PDC (Personal Digital செல்லுலார் ) தரநிலை  :

ஏப்ரல் 1991-ல் ஜப்பான் ரேடியோ அமைப்புகளின்  Research and Development சென்டர்,   தனி நபர் இலக்கமுறை செல்லுலார்  என்ற தரநிலையை சுய  பயன்பாட்டுக்காகவே  உருவாக்கிச் செயற்படுத்தினர். TDMA அடிப்படையில் அமைந்த அது, வட அமெரிக்காவின் D-AMPS தரநிலையுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் கொண்டிருந்தது. வளி இடைமுகத்தைப் (Air Interface) பொறுத்தவரை PDC தரநிலை சில முக்கிய பண்புக் கூறுகளில் GSM -ஐ விட உயர்ந்திருந்தது என டிசைனர்கள் கருதுகிறார்கள். ஆனால் PDC அமைப்புகள் 2000க்குள் செயல் திறன் அளவில் முழு நிறைவு நிலையை (saturation) அடைந்து விடும் எனக் கருதப் பட்டதால், முன்கூட்டியே  அடுத்த தலை முறை (3G)  வருகையை விரைவு படுத்த  ITU -விடம் வேண்டுகோள் விடுக்கப் பட்டது.

 

spacer.png

 

GSM, CDMA அமைப்புகளின் முக்கிய தனித்துவங்கள் 

GSM-ல் பயனர் தகவல்கள் SIM(Subscriber Identification Module ) அட்டையில் பதிவு செய்யப் பட்டுள்ளன .அலைபேசியை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சிம் அட்டையை கழற்றி புது அலைபேசியில் சிம் அமரும் ஸ்லாட்டில் பொருத்திப் பயன் படுத்திக் கொள்ளலாம். சிம் பயன்பாடு மட்டுமல்லாமல்,  GSM அமைப்பில்  சாதனங்களின் அடையாள அட்டவணை (Equipment Identity Register ) பராமரிக்கப் பட்டு, அதன் மூலம்  அலைபேசிகளில் பொறிக்கப் பட்டுள்ள தனிப்பட்ட IMEI (International Mobile Equipment Identity ) சரி பார்க்கப் படுகின்றன. வகை ஒப்புதல் (type approval) பெறாத, பழுதான அல்லது திருடப்பட்ட அலைபேசிகளுக்கு சேவை மறுக்கப் படுகிறது. 

CDMA அமைப்பில் அலைபேசியில்  சிம் அட்டை பயன்பாடு இல்லை. CDMA, அலைபேசி சார்ந்த தரநிலை. இதில் ஒவ்வொரு அலைபேசியும்  போன் நம்பர் இணைந்ததாகவே வழங்கப் படுகிறது.  அலைபேசியை மாற்றவேண்டுமானால் பிணைய இயக்குநர் மூலம்   பழைய அலைபேசியை செயலிழக்க செய்து புதிய அலைபேசியை செயற்படுத்திக் கொள்ள வேண்டும். 

குறுஞ்செய்தி சேவை (Short Message Service -SMS):

GSM தொழில் நுட்பம்  இலக்கமுறைப் பரப்புகை  மூலம் அலைபேசிக்  குரல் பேச்சுகளை  மேம்படுத்துவதற்காகவே கொண்டுவரப்பட்டது. எனவே பேச்சொலி தரமுயர்ந்து இருப்பதில் வியப்பேதும் இல்லை.  2G க்குள் முதன்முதலாக தொடங்கப்பட்ட தரவுச் சேவையான குறுஞ்செய்தி சேவை,வெளி சாதனங்களின் பயன்பாடு ஏதும் இல்லாமல், தனித்துவமான யோசனையால் உருவான கில்லர்(killer) பயன்பாடு. அலைபேசி அழைப்புகளின் கட்டுப்பாட்டுக் குறிகைகள்(control signal ) செல்லும் சமிக்ஞைத்  தடவழிகளை (signaling paths), சமிக்ஞை செய்திகள் இல்லாத நேரங்களில் குறுஞ்செய்தி அனுப்பப்  பயன்படுத்திக் கொள்வது தான் அந்த ஏற்பாடு. 1992-ல் முதல் குறுஞ்செய்தி அனுப்பப் பட்டது. தொழில் நுட்பக் காரணங்களால்  குறுஞ்செய்தியும் 160 க்குள் எண்ணெழுத்துகள்(alphanumeric characters ) கொண்டதாக    இருக்கவேண்டும் என  விதிக்கப் பட்டது. குறுஞ்செய்தி சேவை  பயனர்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றது. 

வட அமெரிக்க IS-136 TDMA தர நிலைக்கு மேம்படுத்தப் பட்ட மொபைல் அமைப்புகளில் 1994- இறுதியில் குறுஞ்செய்தி சேவை தொடங்கியது.

மேம்படுத்தப்பட்ட IS-95A CDMA தரநிலை அமைப்புகளில் குறுஞ்செய்தி சேவை 1995-ல் தொடங்கியது.

GSM நிலை 2 (phase 2) :

GSM தர நிலையின் மூல வடிவம், தரவு சேவை அதிக பட்சம் 9.6 kbps  வேகத்தில் இயங்குமாறு வடிவமைக்கப் பட்டிருந்தது. தரவுகள் TDMA நேர ஒதுக்கீடுகளில் (time slot) அனுப்பப் பட்டன. அதைக் கொண்டு மின்னஞ்சல் மற்றும் சில இன்டர்நெட் சேவைகளை மட்டுமே அணுக முடிந்தது. அடுத்த சில ஆண்டுகளில் திறன் உயர்த்தவும்  மதிப்புக்கூட்டு சேவைகளை வழங்கவும் GSM தர நிலையில் பற்பல மேம்பாடுகள் செய்யப் பட்டன.  அழைப்புக் கட்டண  அறிவிப்பு, அழைப்பு விடுத்தவர்  போன் நம்பர் கண்டறிதல் மற்றும் அடைத்த பயனர் குழு (CUG-Closed User Group ) ஆகியவை GSM இரண்டாம் நிலையில் அறிமுகப் படுத்தப்பட்ட  அலைபேசி சேவைகள். மேலும்   900MHz அலைப்பட்டை நிறை செறிவு(saturation) அடைந்துவிட்ட GSM அமைப்புகளுக்கு 1800MHz அலைப்பட்டையில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப் பட்டது. பயனர்கள் dual-band அலைபேசிகளைப் பயன்படுத்தினார்கள்.

GSM நிலை 2+ (GSM Phase 2+) :

புதிய தரவு சேவைகளை அறிமுகப் படுத்துவதற்காகவும்,  குரல் நயம் மேம்படவும் GSM நிலை 2+, அப்போதைய GSM தரநிலைக்கு 90க்கும் அதிகமான மேம்பாடுகளைப் பரிந்துரைத்தது.  அவற்றில் முக்கியமானவை:

  1. தரை வழித் தொலை பேசியின் குரல் நயத்துக்கு நிகராக அலைபேசிப் பேச்சு மேம்பாடு: 13kbps இருவழிக் குறிமுறை மாற்றிகளுக்கு பதிலாக 6.5 kbps மாற்றிகளைப் பயன்படுத்துதலின் மூலம் செல்லுலார் ஆபரேட்டர்கள் தம் தேவைக்கேற்ப பேச்சு மேம்பாட்டையோ  அல்லது அமைப்பின் ஆற்றல் அளவில் உயர்வையோ  தெரிவு செய்து கொள்ளலாம்
  2. மேம்பட்ட தரவு சேவைகள்: GSM அமைப்பில் எளிய மென்பொருள் புதுப்பிப்புகள் மூலம் உருவாக்கக் கூடிய அதிவேக தரவு சேவைகளாக HSCSD (High Speed Circuit Switched Data) மற்றும் GPRS(General Packet Radio Service) ஆகியவை  நிலை 2+ ல் முன்மொழியப் பட்டிருந்தன. 

2G என்றாலே முழுக்க முழுக்க இலக்கமுறை எனக் கருதுவது இயல்பு. 1990-1999 தசாப்தத்தின் இறுதியில் அநேகமாக எல்லார் கைக்கும் அலைபேசி வந்து விட்டது.  1996-ல் தரை வழித் தொலைபேசிகளில் பயனர் அணுக்க (dialup ) இணைய சேவையின் வணிகப் பயன்பாட்டை இணையச் சேவையாளர்கள்(Internet Service Providers) துவங்கினர். 2004-ல்  தொலை பேசி இணைப்பில் ADSL  இணக்கியைப் (modem) பொருத்தி  இணையத்துடன் அதிவேக(2 Mbps)  அகலப் பட்டை (Broadband) அணுக்க வசதியும் ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. ஆனால் முழுதும் இலக்கமுறை குறிகைகளால் இயங்கும்  GSM அமைப்பில் அதிக பட்சம்  9.6 kbps வேகத்தில்தான்  தரவுகளை அனுப்ப முடிந்தது. பயனர்கள் அலைபேசியில்   Dial-up வேகத்திலாவது இன்டர்நெட் அணுக்கம் தேவையெனக் கருதினர். GSM நிலை 2+-ல்  மேற்கொள்ளப்பட்ட படிப்படியான மேம்பாடுகள், தரவு பரப்புகை வேகத்தை  கிட்டத்தட்ட 3G யைத் தொடும் அளவுக்கு கொண்டு சென்றன. அவையாவன: .

spacer.png

HSCSD (High Speed Circuit Switched Data):

 அதிவேக circuit-Switched தரவு சேவை என்ற GSM நிலை 2+ மேம்பாட்டில், செயல் திறன் மிக்க குறியிடல் உத்திகளைப் பயன்படுத்தி ஒரு நேர ஒதுக்கீட்டில் 14.4 kbps வேக தரவு மாற்றல் செய்யவும்,  நான்கு 14.4 kbps அலைப்பாதைகளை ஒருங்கிணைத்து 57.6 kbps வேக தரவு மாற்றல் செய்யவும் ஏற்பாடு செய்யப் பட்டது. இது தரை வழித் தொலைபேசியின் dial-up க்கு நிகரானது.

2.5G

GSM phase2+ல் செயல் படுத்தப் பட்ட மேம்பாடு இது. இதில்  circuit-switched ஆடியோ தளத்துடன் packet-switched தளமும் இணைந்து செயல்படுவதால்  இது 2G யின் நீட்சியாக, அதாவது 2G க்கும் 3G க்கும் இடைப்பட்ட மொபைல் சேவையாகக் கருதப்பட்டு  2.5 G எனப் பெயரிடப் பட்டது. நடைமுறையில் உள்ள GSM உள்கட்டமைப்பின் மேலடுக்கில் packet மென்பொருள் கட்டுமானம் அமைந்திருப்பதால் இது GPRS (General Packet Radio Service) எனப்படுகிறது. GSM TDMA கட்டமைப்பில் 1 முதல் 8 நேர ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி முறையே 14.4 kbps முதல் 115.2 kbps வரை தரவு பரப்புகை வேகங்களில் GPRS செயல் படுகிறது. அலைக்கற்றைப் பயன்பாட்டைப் பொருத்தவரை HSCSD யை விட   GPRS அதிக திறனுள்ள தரவு சேவை. இதுவே 3G படிமலர்ச்சிக்கான சரியான பாதையும் கூட.

2.75G

EDGE பிணையங்களுக்கு (Enhanced Data Rate ffor GSM Evolution), GPRS பிணையங்களே வழி வகுத்தன. இது 3G ரேடியோ தொழில் நுட்பத்துக்கு சற்று முந்திய பதிப்பு. EGPRS என்றும் 2.75G என்ற பெயரிலும் அறியப் படுகிறது. EDGE தொழில் நுட்பம் முதன் முதலாக 2003-ல் அமெரிக்க GSM பிணையங்களில் AT&T டெலிபோன் கம்பெனியால் பயன்படுத்தப் பட்டது. EDGE தொழில் நுட்பம் மூலமாக தரவு வேகங்கள் 384 kbps வரை எளிதில் எட்டிவிட முடியும். இந்த தரவு வேக அதிகரிப்பு GPRS- ல் கிடைத்ததை விட கணிசமானதாக (கிட்டத்தட்ட  3G ஆரம்ப அளவாக) இருந்ததால் 2.9G எனவும் சொல்லப் பட்டது. அத்துடன் EDGE பிணையம் நடைமுறையில் உள்ள GSM விவரக் கூற்றுகளின் வரையறைக்குள்ளேயே அறிமுகமாகி இருந்ததால், பின்னோக்கிய இணக்கமும் (backward compatibility) கொண்டிருந்தது.

 CDMA அமைப்புகளில் தரவு வேகம் 

CDMA தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் இரு மொபைல் தர நிலைகளான IS-95A &IS-95B முறையே 14.4 kbps & 115 kbps ஆகிய மிதமான தரவு வேகங்களைக் கொடுத்தன. 2.5G ,2.75G, 2.9G ஆகிய படிநிலைகள் , CDMA -வின் படிமலர்ச்சிப் (evolutionary ) பாதையில்  இடம் பெறவில்லை.   

spacer.png

 

முடிவுரை:

கடந்த  நூறு ஆண்டுகளில், பயனரின் உற்பத்தித் திறன் பெருக்கம், பயனர் அபிமானம், அதிவேக அற்புத படிமலர்ச்சி (evolution ) ஆகிய காரணிகளால் உயர்வாக வருணிக்கப் படும் மொபைல் தொடர்பாடல் தொழில் நுட்பத்துக்கு நிகரான வளர்ச்சி கண்ட பிற தொழில் நுட்பங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  2G, குறிப்பாக GSM, மக்களின் பேராதரவைப் பெற்றது. 2001-ல் முதல் 3G அமைப்பு  பயன்பாட்டுக்கு வந்து விட்ட பின்னரும் கூட, 2G இணைப்புகள் பெருகி வந்தன. 2005 யில் இணைப்புகள்  2 பில்லியனைக் கடந்தன. 1946-ல் ஆரம்பித்த மொபைல் போன் இயக்கத்தில் பயனர் கவனம் மொபைல் தரவு சேவை பக்கம் திரும்பியது அண்மைய 10-15 ஆண்டுகளுக்குள்  தான்.  2G-க்கு அடுத்து வந்த தலைமுறைகளிலும் பயனர்களின் நாட்டம் Mbps, Gbps என்ற அதிவேக தரவு சேவையாகத் தான் இருந்து வருகிறது.  இன்றும் 2G மொபைல் அமைப்புகள் சாதாரணர்களின்  அடிப்படை மொபைல் தொடர்பாடல் தேவைகளை நிறைவு செய்து வருவதால் இந்தியாவில் இன்னும் பல ஆண்டுகள் நிலைத்திருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தொழில் நுட்பச் சொற்கள் :

Encryption:தகவலை ஒரு ரகசிய குறிமுறையில் (code) மாற்றி அதன் மூலம் தகவலின் உண்மையான அர்த்தம் விளங்காமல் செய்வது.

Authentication :பயனரின் அடையாளம் கண்டறியும் செயல் முறை

Integrated circuit: தோசைத் துண்டு அளவில் சிலிகான் என்னும் அலோகப் பொருளால் உருவான பல்லாயிரக் கணக்கான டிரான்சிஸ்டர், ரெசிஸ்டர் மற்றும் கேபாசிட்டர்களை உள்ளடக்கி அம்பிலிஃபயிர், டைமர், மைக்ரோப்ரோசசர் போன்ற மின்னணுவியல் சுற்றுகளாக செயல்பட வல்ல ஒரு ஒருங்கிணை சுற்று சில்லு.

Microprocessor: டிஜிட்டல் கம்ப்யூட்டரின் மையச் செயலகமாக செயல்படத் தேவையான எண்கணிதம், தர்க்கம், கட்டுப்பாடு செயலாற்றிகளின் மின்சுற்றுக் கூட்டமைப்பாக இருக்கும் ஒரு வகை குட்டி மின்னணுவியல் சாதனம்.

1MHz: 1Mega cycles per second -1 வினாடியில் ஒரு மில்லியன் சுற்றுகள்

Kbps: kilo bits per second- 1 விநாடியில் ஆயிரம் இரும இலக்கம் (bit) என்ற வேக தரவு மாற்றம். இரும இலக்கங்கள் = 0&1

Mbps: Mega bits per second 

Gbps: Giga bits per sec (Giga=10^9)

Codec : coder-decoder-ன் சுருக்கம். குறியாக்கி-குறிஅவிழ்ப்பி என்று பொருள்படும்.  இது ஒரு வினைச்சரம். ஆடியோ அல்லது வீடியோ போன்ற வடிவங்களில் உள்ள தரவுகளைத் தொடர் துடிப்புகளாக இலக்க வடிவத்தில் தகவலாகக் குறியாக்கம் செய்வதற்கும் குறியாக்கம் செய்யப்பட்ட தரவுகளை குறிவிலக்கம் செய்வதற்கும் இந்த வினைச்சரம் பயன்படுத்தப் படுகிறது.

Circuit switching: பிணையங்களின் முனைகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்திய பின்னர் தரவுகளை அனுப்புதல்

Packet Switching : பிணையங்களில் தரவுகள் பொதிகளாக்கப் பட்ட பின்னரே அனுப்ப ஆரம்பித்தல். தொடர்பு ஏற்படுத்தாமல் தரவு மாற்றல் வழி.

Digital Signal Processing (DSP😞 மெய்யுலகின் ஒப்புமை குறிகைகளை (எ. கா : பேச்சொலி) இலக்கமுறைக்கு மாற்றி பகுப்பாய்வது. குறிகைகள் நம்பர்களாக சுருங்கிவிட்டபின் அவற்றின் கூறுகளை பிரித்து வைப்பதும் திறமையாகக் கையாள்வதும் எளிதாகி விடும். டிஜிட்டல் ப்ரோசசிங் சிப் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக சிறப்பு கவனம் செலுத்தி தயாரிக்கப் படும் நுண் செயலி சிப்.

 இது  இலக்க முறை தொலை தொடர்புக் கூறுகள் உருவாக்கம், வடிவமைப்பு  தயாரிப்பு மற்றும் தொழில் நுட்ப உதவிகள் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கும் ஒரு அமெரிக்க   . CDMA2000, TD-SCDMA மற்றும் WCDMA ஆகிய மொபைல் தொடர்பாடல் தர நிலைகள் ஆகியவை இந்த கம்பெனியின் அறிவுசார் சொத்துக்கள். அதற்கான காப்புரிமம் பெற்றுள்ளது.

***

 

https://solvanam.com/2021/04/10/மொபைல்-தொடர்பாடல்-வரலாற-2/

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள கட்டுரை. ஒரு காலத்தில் படித்ததை வேலை செய்ததை நினைவூட்டி இருக்கிறீர்கள் கிருபன்.

TDMA, FDMA, CDMA உடன் SDMA(Space Division Multiple (Access) உம் பயன்படுத்தப்படும்.

அலைகற்றையின் Fourier Series, Double Integrals வகுப்புகளில் தூங்கி வழிந்ததும். வேணுமென்றே புரியாத மாதிரி பக்கத்து இருக்கை ஐய்யர் பொண்ணு அர்ச்சனாவிடம் வழிந்ததும் ஒரு காலம்.

இடுகைக்கு மிக்க நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, முதல்வன் said:

மிகவும் பயனுள்ள கட்டுரை. ஒரு காலத்தில் படித்ததை வேலை செய்ததை நினைவூட்டி இருக்கிறீர்கள் கிருபன்.

TDMA, FDMA, CDMA உடன் SDMA(Space Division Multiple (Access) உம் பயன்படுத்தப்படும்.

அலைகற்றையின் Fourier Series, Double Integrals வகுப்புகளில் தூங்கி வழிந்ததும். வேணுமென்றே புரியாத மாதிரி பக்கத்து இருக்கை ஐய்யர் பொண்ணு அர்ச்சனாவிடம் வழிந்ததும் ஒரு காலம்.

இடுகைக்கு மிக்க நன்றி

கட்டுரையை தமிழில் நன்றாகவே எழுதியிருக்கின்றார்.

Fourier Series, Double Integrals - இவற்றைப் படிக்கும் தூங்கி வழிந்தால் என்னதான் மண்டையில் ஏறும்!

எனக்கு  Communications & Digital Signal Processing எல்லாம் வெறும் maths தான்! எந்த மாதிரியான சவாலான கேள்வியாக இருந்தாலும் கணிதம் என்றால் இலகுவாக இருக்கும்! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாம் வெக்ரரிண்ட ஆட்கள், நாங்கள் குணசிங்கம், கமலசிங்கத்திண்ட ஆட்கள். வேறுபாடு இருக்கத்தானே செய்யும்.

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மொபைல்  தொடர்பாடல் வரலாறு- பகுதி 3- 3G

அத்தியாயம் -1: 3G தொழில் நுட்ப உருவாக்கம்

1.1 பின்புலம்:

1.1.1. 2G யின் போதாமைகள் 

மொபைல் உரையாடலும் இணைய (இன்டர்நெட்) அணுக்கமும் மக்களின் நன்மதிப்பைப்  பெற்று விட்ட நிலையில் அது மொபைல் இன்டர்நெட் சேவையாக ஒருங்கிணைய நேர்ந்தது காலத்தின் கட்டாயம். 2G அமைப்பு, உரையாடலுக்கு உகந்ததாக வடிவமைக்கப் பட்டிருந்தது. 2G யின் தொடக்க நிலை மின்னஞ்சல் மற்றும் இணையம்-சார் சேவைகளால் மக்கள் பெரும் பயனடைந்துவிடவில்லை. ஏனெனில் 2G காலகட்ட  அலைபேசிகள் சிறிய காட்சித் திரை, நெருக்கமான விசைப் பலகை மற்றும் குறை திறன் மின்கலம் ஆகியவற்றையே கொண்டிருந்தன. அவை தொலை பேசி உரையாடல் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புதல் போன்ற பயன்பாடுகளுக்காகவே  வடிவமைக்கப் பட்டவை.  

தரவு சேவைகள் 9.6 kbps என்ற அதிகபட்ச வேகத்திலேயே இயங்க முடிந்தது. இடைநிலைத் தொழில் நுட்பங்களான 2.5G (1995)மற்றும் 2.75G (1997) முறையே அதிக பட்சம் 115.2kbps, 384kbps தரவு வேகங்களைக் கொடுக்க முடிந்தது. 1999-ல் வெளிப்பட்ட ப்ளாக்பெர்ரி (BlackBerry) மொபைல் கருவிகள், மின்னஞ்சல் சேவைக்கு உகந்ததாக வடிவமைக்கப் பட்டிருந்ததால் மிக மேன்மையான அலுவல் கருவியாகக் கருதப் பட்டு பெரு வணிக நிர்வாகிகள் கைகளில் தவழ்ந்தன. இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.

ஆனால் உரையாடல் மற்றும் மித வேக தரவு சேவைகளுக்கு 2G-யே போதுமானது எனக் கருதப் பட்ட போதிலும், பெரும்பாலான பயனர்களிடயே அதிவேக தரவு சேவைகள் மற்றும் பல்லூடக சேவைகளை நோக்கிய கருத்தியல் நகர்வு (paradigm shift) உருவாகிவிட்டது. பல்லூடக பயன்பாட்டுக்கான 3G மொபைல் அமைப்புகள், 2Mbps வேக தரவுப் பயன்பாட்டுக்கு உகந்த திறன் பேசிகள் (smart phones) ஆகியவற்றின் வருகைக்கு பயனர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

spacer.png

1.1.2 திறன் பேசி வருகை:

ஐ.பி.எம் ( IBM), 1994-ல், தொடுதிரை(touch screen), மின்னஞ்சல், ஃபேக்ஸ், குறிப்புகள் மற்றும் நாள் காட்டி வசதிகளுடன் அறிமுகப் படுத்திய சைமன் சொந்த தகவல் தொடர்பாளர் ( Simon Personal Communicator ) தான் உலகின் முதல் திறன் பேசி எனலாம். (ஸ்மார்ட் போன் என்ற பெயரே 1997-ல் தான் பயன்பாட்டுக்கு வந்தது). இது காலம் கனியும் முன்பே சந்தைக்கு வந்து விட்டபடியால் 6 மாதங்கள் மட்டுமே நிலைத்தது. ஆனாலும் அதுவே பிற்கால திறன்பேசிகளின் பெருமைக்குரிய முன்னோடி.

1996-ல் நோக்கியா-9000 தொடர்பாடல் சாதனங்கள் (communicator) வரிசை தொடங்கியது. அதுவே 1999 ஆண்டின் Blackberry வணிகப் பயன்பாட்டு திறன் பேசி உருவாக்கத்துக்கும் முன்னோடி ஆகியது. ப்ளாக்பெர்ரி வரிசை திறன்பேசிகள் சிலகாலம் (2001-2007) சந்தைத் தலைமையை (market leader) அடைந்து, பின்னர் ஆப்பிள் ஐபோன் வருகைக்குப் (2007) பின் பயனர் ஆதரவு குறைந்து நின்று போனது. சிலர் நினைப்பது போல, உண்மையில் திறன் பேசிகளின் வருகை 3G-க்காக காத்திருக்கவில்லை. EDGE (2.75G) பிணையங்களைக் கொண்டே ஆரம்பமாகி விட்டது.

ஆப்பிள் கம்பெனியின் முதல் iphone-ல் பயன்படுத்தப் பட்ட EDGE தொழில் நுட்பம், 3G வருகையின் பின்னரும் தொடர்ந்து கொண்டிருந்தது. இன்றைய திறன் பேசிகள் எல்லா விதத்திலும் மேம்பாடு அடைந்து மொபைல் தொழில் நுட்ப வளர்ச்சிக்குகந்த வளர்ச்சி கொண்டுள்ளன.

அதிக நினைவகக் கொள்திறன், அதிவேக இணைய அணுக்கம் மற்றும் தரவிறக்கம், HD கேமரா, நாட்கணக்கில் நீடிக்கும் மின்கலம், இசை மற்றும் ஒலிக் காட்சித் தாரைகள் (streaming) ,ஒரே நேரத்தில் பற்பல செயலிகளைப் பயன்படுத்தும் வசதி, புவி தடங்காட்டி (GPS ) ஆகியவை இன்றைய திறன் பேசிகளின் சிறப்புக் கூறுகளாகக் கருதப் படுகின்றன சிறப்புக் கூறுகள் மற்றும் விலை அடிப்படையில் அவை மட்டம் (Low -End ), நடுத்தரம் (Mid-Range) மற்றும் உயர் தரம் (High-End) என வகைப்படுத்தப் படுகின்றன. அதிக மக்கள் விரும்பும் ஆப்பிள் -ஐபோன், விண்டோஸ் போன், கூகிள்- ஆன்ட்ராய்டு போன், மற்றும் அமேசான் ஃ பையர்போன் திறன்பேசிகள் வருகை 3G உதயத்தை துரிதப் படுத்தியது எனலாம்.

1.1.3.பன்னாட்டுத் திரிகை (international roaming) தேவைகள் :

முதல் இரு மொபைல் தலைமுறை (1G&2G) காலத்தில், ITU (International Telecommunication Union ) எனப்படும் அனைத்துலக தொலைத்தொடர்பு ஒன்றியம் அலைக்கற்றை ஒதுக்கீடு தவிர பிற தொழில் நுட்பம் சார்ந்த விடயங்களில் அரசு மற்றும் தனியார் மொபைல் செய்குநர்களின் முன்னெடுப்புக்கு, முழு ஆதரவு அளித்திருந்தது.

அத்தகைய அணுகுமுறை காரணமாக, 1G/2G மொபைல் அமைப்புகள், தேசிய அல்லது பிராந்திய தர நிலைகளின் அடிப்படையில், தேசிய அல்லது பிராந்திய ஒழுங்காற்று மற்றும் இயக்க (regulatory & operating) சூழலுக்குத் தகுந்த வகையில் உருவாக்கப் பட்டன. அவற்றால் அந்தந்த நாட்டின் ரேடியோ சூழலுக்குள், அல்லது குறிப்பிட்ட தரநிலை மொபைல் அமைப்புகள் இயங்கும் பிராந்தியங்களுக்குள் மட்டுமே இடப் பெயர்வு வசதி (mobility) அளிக்க முடிந்தது.

சிலர் பன்னாட்டுத் திரிகைக்காக பல அலைபேசிகளையும் சிம் கார்டுகளையும் பயன்படுத்தி வந்தார்கள். இவ்வகைத் தொந்தரவுகள் நீங்கவேண்டுமெனில், அனைத்துலக தொலைத்தொடர்பு ஒன்றியத்தின்(ITU) முன்னெடுப்பில், பன்னாட்டுத் திரிகை வசதி அளிக்கும் அடுத்த தலைமுறை (3G) மொபைல் அமைப்புத் தரநிலை உருவாக வேண்டும் எனக் கருதினார்கள்.

1.2. பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU )-அறிமுகம்

இன்டர்நேஷனல் டெலிகம்யூனிகேஷன் யூனியன் (ITU) என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பத் துறைகளில் நிபுணத்துவம் கொண்ட ஒரு முகமை. அது ஏற்றுள்ள முக்கிய பொறுப்புகள்:

  • அரிய வளங்களான ரேடியோ அலைக்கற்றைகளின் நியாயமான உலகளாவிய பகிர்தலை ஊக்குவித்தல்
  • செயற்கைக் கோள் சுற்றுப்பாதைகளை ஒதுக்கிக் கொடுத்து அனைத்துலக ஒத்துழைப்பை எளிதாக்குதல்
  • உலகம் முழுதும் சமச்சீர் தொழில்நுட்பத் தரநிலைகள் உருவாகவும் ஒருங்கிணைக்கவும் உதவுதல்
  • வளரும் நாடுகளின் தொலைத்தொடர்பு கட்டமைப்பை மேம்படுத்தப் பாடுபடல்

1.2.1. ITU –வின் முக்கிய உட்பிரிவுகள்:

ITU தலைமையகம் ஜெனீவாவில் அமைந்துள்ளது. அதன் தலைமைப் பொறுப்பு ஏற்றிருப்பவர் பொதுச்செயலாளர் (Secretary General ). தலைமை செயலகம் மற்றும் ITU Council (சபை ) ஆகிய அமைப்புகளைத் தவிர, ITU -வில் மூன்று முக்கிய தொழில்நுட்பத் துறைகள் உள்ளன: T , R, D துறைகள் .ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. துறைகள் சார்ந்த நடைமுறை மற்றும் தொழில் நுட்ப வினாக்களுக்கு விளக்கம் அளிப்பது ITU-வின் தலையாய கடமை.

  • ITU-R(ரேடியோ தொடர்பாடல் பிரிவு)-இப்பிரிவு ரேடியோ அமைப்புகளின் பொறுப்பை ஏற்றுள்ளது அதாவது ரேடியோ பரப்புகை தொழில்நுட்பத் தேர்வு, ரேடியோ இடைமுகம் (Radio Interface), அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் செயற்கைக் கோள் நிர்வாகம்
  • ITU-T (தொலைத் தொடர்பு தரப்படுத்துதல் பிரிவு)- அனைத்துப் பிணையக் கூறுகளுக்கான (network elements ) தொழில் நுட்ப மற்றும் தொலை தொடர்பாடல் தர நிலைகளை உருவாக்குதல்
  • ITU-D (தொலைத்தொடர்பு விரிவாக்கம்) வளரும் நாடுகளுக்கு தொழில் நுட்ப மற்றும் பிணைய விரிவாக்க உதவி.

1.3. ITU- 3G உருவாக்க முன்னெடுப்புகள்

1.3.1.FPLMTS (Future Public Land Mobile Telecommunication System)

அதிவேக கம்பியில்லா பிணையங்கள் உருவாக்குவதற்காக ITU 1986-ல் தரநிலையாக்க செயல்முறைகளை ஆரம்பித்து வைத்தது. அதற்காக நியமிக்கப் பட்ட FPLMTS என்னும் செயற்குழு ஆரம்ப கட்ட தரநிலை தொகுப்புகளை உருவாக்கியது. 1980களில் ITU தொடங்கிய இந்த ஆய்வுத் திட்டத்தின் நோக்கம் கிட்டத்தட்ட 2000 ஆண்டில் அநேகமாக 2000 MHz அலைவெண் பட்டையில் செயல்படக்கூடிய ஒரு மொபைல் அமைப்பை உருவாக்கி உலக மொபைல் சமூகத்துக்கு வழங்குவது.

ஆனால் 1990 களில் GSM மற்றும் பிற 2G தொழில் நுட்ப அமைப்புகள் உலகெங்கும் மிகவும் ஊக்கமுடன் நிறுவப் பட்டு வந்ததால் அடுத்த தலைமுறை மொபைல் அமைப்பு உருவாக்கத்துக்கான தூண்டுகோல் எதுவும் இருக்கவில்லை. எனவே 1990களின் தொடக்கம் வரை FPLMTS உருவாக்க வேலைகள் தேக்கமடைந்திருந்தன. FPLMTS என்னும் acronym சந்தைப் படுத்த உகந்ததாக இல்லாததோடு எந்த மொழியிலும் உச்சரிக்க முடியாததாகவும் இருந்தபடியால், இன்டர்நேஷனல் மொபைல் டெலிகம்யூனிகேஷன்ஸ்-2000 (IMT-2000) என்று பெயர் மாற்றப்பட்டது.

1992-ல் ITU நியமித்த செயற்குழு(working group), புதிய தரநிலையின் முதல் தொகுப்பை தயாரித்து வெளியிட்டது. ஆரம்பத்தில் ஒரே ஒரு உலகளாவிய தர நிலை உருவாக்கும் நோக்கத்தில் அமைக்கப் பட்ட செயற்குழு, அது இயலாத காரியம் என்றுணர்ந்து, ஒரு தரநிலைகள் குடும்ப வரையறுப்புக்கு ஒத்துப் போக நேர்ந்தது. இன்றைய

இரு 2G செல்லுலார் மொபைல் தொழில் நுட்பங்களுக்கு இடையே -அதாவது TDMA (Time Division Multiple Access) மற்றும் CDMA (Code Division Multiple Access ) -அடிப்படை வேறுபாடுகள் இருப்பதால் அவை ஒன்றுடன் மற்றொன்று இணைந்து இயங்க முடியாமல் இருக்கின்றன.

3G பயன்பாட்டுக்காக இரு தொழில் நுட்பங்களும் ஒரே பன்னாட்டு தர நிலைக்கு மேம்படுத்தப் பட்டால் உலகளாவிய மொபைல் தொடர்பாடலாக இணையும் என்பது ITU-வின் உள்ளார்ந்த நம்பிக்கை. ஆனால் இம்முறை இந்த ITU -2000 முன்னெடுப்பில் அத்தகைய இணைவுக்கு வாய்ப்பில்லை. எனினும் TDMA தொழில் நுட்பத்தின் வளர்ச்சிப்பாதை GPRS மற்றும் EDGE தொழில் நுட்பங்களின் இணைப்பில் WCDMA (UMTS) ஆக மலரப் போவதாலும் யூரோப் மற்றும் ஆசிய நாடுகளில் முழுதும் இந்த தொழில் நுட்பம் மட்டுமே ( உலக நெட்ஒர்க்களில் 80%) பயன்பாட்டில் இருக்கப் போகின்றது என்பதாலும் ITU -வின் நோக்கம் 80% நிறைவேறும் எனத் தெரிகிறது.

1.3.2 IMT-2000 அலைக்கற்றை ஒதுக்கீடு :

1992-ல் ITU -வால் அலைவெண் பட்டைகள் 1885-2025MHz மற்றும் 2110-2200 MHz அடையாளம் காணப்பட்டு உலகளாவிய IMT -2000 நிலப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப் பட்டன.மேலும் 1980-2010 மற்றும் 2170-2200 MHz அலைவெண் பட்டை IMT2000-ன் செயற்கைக் கோள் கூறு பயன்பாட்டுக்கு ஒதுக்கப் பட்டது.

1999-World Radio Conference (WRC99)- IMT-2000-ன் மேம்பட்ட மொபைல் தொடர்பாடல் பயன்பாட்டுக்காக அலைக்கற்றை மற்றும் ஒழுங்காற்று பிரச்னைகளைக் கையாண்டு வந்தது. 2005-2010 ஆண்டு சந்தைத் தேவைக்கேற்ப கூடுதல் அலைப்பட்டைகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தருவதே அதன் நோக்கம்.

1.3.3. IMT-2000 வரையறுப்பு :

lMTS 2000 என்பது இரண்டாம் தலைமுறை மொபைல் நெட்ஒர்க் -களின் குறைபாடுகளை விஞ்சி மேம்பட பன்னாட்டு தரநிலை உருவாக்க நிறுவனங்களிடையே தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்த புதிய மூன்றாம் தலைமுறை மொபைல் நெட்ஒர்க்.

1.3.4.IMTS-2000 சிறப்பு இயல்புகள்:
  • உயர்தர இணங்கு தன்மை
  • எல்லா செயல்படு நிலைகளிலும் செலவு குறைப்பு
  • அனைத்துலக வடிவமைப்புகளில் பொதுத்தன்மை
  • WARC-1992 ஒதுக்கீடு செய்த ரேடியோ அலைப்பட்டைகளுக்குள், IMTS-2000 தரை மற்றும் செயற்கைக் கோள் கூறுகள் வினையாற்ற ஏற்பாடு செய்தல்.
1.3.5.IMTS 2000 குடும்ப தொழில் நுட்பங்கள்:

IMT- Direct Spread (IMT-DS, UMTS/UTRA-FDD-யூரோப் அமைப்பில் இதன் பெயர்)

IMT-Multi கேரியர் (IMT-MC, CDMA2000- அமெரிக்க அமைப்பில் இதன் பெயர் )

IMT-Time Code(IMTS-TC, சீன அமைப்பு -யூரோப் அமைப்பின் சிறு மாறுபாடு -TD-SCDMA குறும் பட்டை TDD)

IMT-Single Carrier(IMT-SC; EDGE என்ற பெயரில் அறியப்படுகிறது)

IMT Frequency Time(IMT-FT; DECT என்ற பெயரில் அறியப் படுகிறது)

IMT OFDMA TDD WMAN;மொபைல் WiMAX என்ற பெயரில் அறியப் படுகிறது)

1.3.6. IMT2000 தொலைநோக்கு(Vision) :
  • உலகளாவிய பொது அலைப் பட்டை பயன்பாடு (1.8-2.2 GHz band)
  • பன்முக ரேடியோ சூழல்: செல்லுலார், கார்ட்லெஸ், செயற்கைக் கோள் மற்றும் LANs (குறும் பரப்புப் பிணையங்கள்)
  • விரிந்த வீச்சு தொலைத்தொடர்பு சேவைகள் (குரல், தரவு, பல்லூடகம், இணையம் )
  • திறமைமிகு அலைக்கற்றைப் பயன்பாடு
  • இருப்புநிலை (stationary) மொபைல் தரவு வேகம் 2 Mbps, நடைப்பயிற்சி நிலை 384 kbps, கார் பயணத்தில் 144kbps .
  • சேவையளிப்பு மற்றும் தரவு போக்குவரத்தில் அதிக மதிநுட்ப பிணையப் (Intelligent Network) பயன்பாடு
  • உலகளாவிய தடையற்ற திரிகை
  • மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் செயல் திறன்
  • செயற்கைக்கோள் மற்றும் புவிக்குரிய அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு
1.3.7.பிராந்திய தரநிலை உருவாக்க நிறுவனங்கள்:

Europe:ETSI(European Telecommunications Standards Institute)

US : TIA (Telecommunications Industries Association & T1P1(Technical Sub -Committee of ANSI accredited Committee T1-Telecommunications )

Japan : ARIB (Association of Radio and Business ) & TTC (Telecommunications Technologies Committee)

China: RITT(Research Institute of Telecommunications Transmission)

Korea: TTA (Telecommunications Technologies Association)

1.3.8 IMTS-2000 செய்முறை (process) :

ITU-R, ஒற்றைத் தரநிலையை உருவாக்குவதற்காக , அனைத்து பிராந்திய தர நிலை உருவாக்க அமைப்புகளையும் தத்தம் ரேடியோ பரப்புகை தொழில் நுட்பங்கள் குறித்த கருத்துருக்களை அனுப்பும்படி வேண்டுகோள் விடுத்தது. அதன் விளைவாக 1996-ல் இருந்து 1998 வரை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் பிராந்திய தரநிலை உருவாக்க அமைப்புகள் கருத்துரு சமர்ப்பித்தலுக்கான வேலைகளை மேற்கொண்டன. மொத்தம் 17 வெவ்வேறு கருத்துருக்கள் சமர்ப்பக்கப் பட்டன. இவற்றில் 11 நிலம் சார்ந்த(terrestrial ) அமைப்புகள்; மற்ற ஆறும் செயற்கைக்கோள் சார்ந்த அமைப்புகள். இவை அனைத்தும் 1998-க்குள் மதிப்பிடப் பட்டன. ஆனாலும் 1999 முன் பகுதியில் ஏதோ ஒரு வடிவத்தில் கருத்தொருமிப்பு உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 1999 இறுதியில் கருத்தொருமிப்பு ஏற்பட்ட உடன், ரேடியோ பரப்புகை தொழில் நுட்ப விவரக் குறிப்பீடு (specification ) வெளியிடப் பட்டது.

1.4. IMTS-2000- பிராந்திய முன்னெடுப்புகள் :

1.4.1 யூரோப் முன்னெடுப்புகள்:
1.4.2.நோக்கம்:

யூரோப் நாடுகளின் மூன்றாவது தலை முறை மொபைல் அமைப்புகளின் தரநிலையாக இருக்கக் கூடியதாகவும் IMTS-2000 அமைப்புகள் குடும்பத்தில் (family of systems ) ஒரு உறுப்பினர் தரநிலையாக்க வடிவெடுக்கக் தக்கதாகவும் அமையப் போகிற UMTS (யுனிவெர்சல் மொபைல் டெலிபோன் சிஸ்டம் ) உருவாக்குதல்

1.4.3. முன்னெடுப்பு நிறுவனம்:

ஐரோப்பிய தொலைத்தொடர்பு தரநிலைகள் பயிலகம் (European Telecommunication Standards Institute -ETSI ). முன்பு (2G) GSM உருவாக்கத்திற்கு பொறுப்பேற்றிருந்த ETSI-யின் ஸ்பெஷல் மொபைல் குரூப் டெக்னிக்கல் கமிட்டியே UMTS உருவாக்க வேலைகளில் ஈடுபடுத்தப் பட்டது. தற்போதைய (2G ) GSM அமைப்பிலிருந்து யூனிவர்சல் மொபைல் டெலி கம்யூனிகேஷன்ஸ் சிஸ்டம் (UMTS ) அமைப்புக்கு சேவை மாற்றம் செய்வதை எளிதாக்கும் UMTS தரநிலையை உருவாக்கித் தருதல் அதன் குவியமாக இருக்கும்.

1.4.4. முன்னெடுப்புகள் (காலவரிசையில்😞
  • 1991-95 -ஐரோப்பிய ஒன்றியம் நியமித்த ஆராய்ச்சித் திட்டம், அகலப்பட்டை (Wideband)Code Division Multiple Access (WCDMA) மற்றும் Time Division Multiple Access(TDMA) அடிப்படையில் அமைந்த ரேடியோ ட்ரான்ஸ்மிஷன் தொழில் நுட்பங்களை (Radio Transmission Technology) ஆராய்ந்து 3G அமைப்புக்குப் பொருத்தமானவை என அறிவித்தது. இதன் அடிப்படையில் 1998-ல் தொழில் நுட்பம் முடிவு செய்யப் பட்டது.

பிப்ரவரி 1995-UMTS சிறப்புப் பணிக்குழு (Task Force) அமைக்கப் பட்டது. பணிக்குழு UMTS வழித்தடம்(Road to UMTS) அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்தது. டிசம்பர் 1996 – ஸ்விட்ஸ்ர்லண்ட், ஸுரிச் நகரில் நடைபெற்ற யூரோப் நாடுகளின் மாநாட்டில் UMTS forum (மன்றம்) உருவாக்கப் பட்டது. அதற்கு முன்பே திட்டமிடப்பட்டிருந்த யூரோப்பியன் WCDMA தரநிலைக்கு 1996-ல் UMTS என்று பெயரிடப் பட்டது.

  • ஜூன் 1997- UMTS ஃ போரம், ‘UMTS-க்குரிய ஒரு ஒழுங்காற்றுக் கட்டமைப்பு’ என்று தலைப்பிட்ட முதல் அறிக்கையைத் தயாரித்தது.
  • அக்டோபர் 1997- ERC (European Research Council ), UMTS-ன் மைய அலைப்பட்டையைத் தீர்மானித்தது.
  • ஜனவரி 1998-பாரிஸ்-ல் நடந்த ETSI சிறப்பு மொபைல் குழு அமர்வில், W-CDMA, TD-CDMA ஆகிய இரு முன்மொழிவுகளும் இணைந்த UMTS ரேடியோ இடைமுகம் (interface) விவரக் குறிப்பு முடிவு செய்யப்பட்டது.
  • June1998 அனைத்து ரேடியோ இடை முக முன்மொழிவுகளும் ITU-R இடம் ஒப்படைக்கப் பட்டன.
  • 4,December 1998 -டென்மார்க், கோபென்ஹகேன் நகரில் ETSI-மொபைல் குழு, TIP1, ARIB TTC, TTA ஆகிய அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டமைப்பான 3G Partnership Project (3GPP) உருவாக்கப் பட்டது.
  • 7,8 டிசம்பர் -பிரான்ஸ், சோபியா ஆன்ட்டிபொலிஸ் நகரில் 3GPP-யின் முதல் தொழில் நுட்ப விவரக் குறிப்பு குழுக்கள் அமர்வு நடை பெற்றது.
  • 14 டிசம்பர் 1998 ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவை எடுத்த முடிவின் படி, 2002 ஜனவரி ஒன்றாம் தேதிக்குள் UMTS சேவைகளை ஒருங்கிணைந்த மற்றும் முற்போக்கான வழியில் அறிமுகம் செய்ய எல்லா உறுப்பினர் நாடுகளும் உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.
  • பிப்ரவரி 1999- பின்லாந்து நோக்கியாவின் சோதனை UMTS பிணையத்தின் WCDMA கருவியில் இருந்து WCDMA base station மற்றும் நோக்கியா மொபைல் switching center வழியாக PSTN எண்ணுக்கு வெற்றிகரமாக அழைப்பு விடுக்கப் பட்டது.
  • 16,மார்ச் 1999 -பின்லாந்து அரசு உலகின் முதல் 3G மொபைல் தொழில் நுட்ப உரிமங்களை வழங்கியது. அவை Sonera, Radiolinja, Telia, Suomen Kolmegee ஆகிய நான்கு மொபைல் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டன.
  • March1999-பிரேசில் நாட்டு Fortaleza நகரத்தில் நடந்த அமர்வில் ITU, மூன்றாம் தலைமுறை மொபைல் அமைப்புகளுக்கான ரேடியோ இடைமுகங்கள் இசைவாணை (approval) அளித்தது.
  • 27,28ஏப்ரல் 1999-ல் NTT DoCoMo-வின் WCDMA-3G உள்கட்டமைப்பு பேரம் லூசென்ட், எரிக்சன் மற்றும் NEC கம்பெனிகளுடன் நிறைவு அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
  • December 1999-ETSI தரநிலையாக்கம் பிரிவு தயாரித்து வந்த UMTS ரிலீஸ் 1999 FDD மற்றும் TDD-க்கான விவரக் குறிப்பீடுகள் முடிவடைந்தன.
  • 29,March 2000- Siemens உலகின் முதல் 3G UMTS சோதனை அழைப்பை TD-CDMA (TDD) பிணையம் வழியாக அனுப்பி வெற்றிகண்டது.
  • ஏப்ரல் 2000-வேர்ல்ட் ரேடியோ Conference (WRC-2000), UMTS/IMTS-2000 அலைப்பட்டை நீட்டிப்பை முடிவு செய்தது.
  • ஜூலை 2000- GSM விவரக் குறிப்பீடுகளை அவற்றின் தொடரும் பராமரிப்பு மற்றும் முன்னேற்ற செயல்பாடுகளை ETSI ஸ்பெஷல் மொபைல் குரூப், 3G பார்ட்னர்ஷிப் ப்ரோஜெக்ட் (3GPP) கையில் ஒப்படைத்தது.
  • 1, ஜனவரி 2001- இந்த தேதியில் யூரோப்-ல் எந்த 3G UMTS பிணையமும் வணிகப் பயன்பாட்டு நிலையை எட்டவில்லை.
  • March2001- 3GPP, UMTS ரிலீஸ் 4 விவரக் குறிப்பீடுகளுக்கு இசைவாணை அளித்தது.
  • 1, டிசம்பர் 2001-நார்வேயில் முதல் வணிகப் பயன்பாட்டு UMTS பிணையம் Telenor கம்பெனியால் தொடங்கப் பட்டது.
1.4.5.வட அமெரிக்க முன்னெடுப்புகள்:

ITU-R முன்மொழிவுகளுக்காக விடுத்த அழைப்புகளுக்கு இணங்கி 3G தரநிலையாக்கத்திற்கான முன்மொழிவுகள் அமெரிக்காவின் Telelommunications Industries Assocition (TIA) மற்றும் Technical Subcommittee of Standards Committee(T1P1)-களால் சமர்ப்பிக்கப் பட்டன. இந்த நிறுவனங்கள் GSM சம்பந்தப்பட்ட செயல்பாடுகளை கவனிப்பதோடு, ETSI-யின் ஸ்பெஷல் மொபைல் குரூப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளவை. இருப்பினும் அமெரிக்கா எந்த ஒரு குறிப்பிட்ட 3G மொபைல் அமைப்பு தரநிலையையும் திட்டமிடவில்லை. மாறாக தற்போது செயல்பாட்டில் உள்ள செல்லுலர் மற்றும் PCS அமைப்புகள் 3G-யை நோக்கி படி மலர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப் பட்டது. அத்துடன் cdma2000 மற்றும் UWC136 அமைப்புகள் IMT-2000-த்தின் RTT வேட்பாளராக முன்மொழிவுகளை அனுப்பி இருந்தன.அமெரிக்காவின் முதல் 3G நெட்ஒர்க் (CDMA2000) ஜனவரி 28,2002-ல் Verizon கம்பெனியால் ஆரம்பிக்கப் பட்டது.

1.4.6.. ஆசிய முன்னெடுப்புகள்:

ஆசியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான மூன்றாம் தலை முறை மொபைல் செயல்பாடுகள் ஜப்பான், கொரியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளில் மட்டுமே தொடங்கப்பட்டன. அவை முறையே ஜப்பானின் ARIB(Association of Radio Industry &Business) மற்றும் TTC ( Telecommunications Technology Committee ),கொரியாவின் TTA (Telecommunication Technologies Association ), சீனாவின் RITT (Research Institute of Telecommunications Transmission ) ஆகிய அமைப்புகளால் கையாளப் பட்டு வந்தன.

ஜப்பான் முன்னெடுப்புகள்:

விரைவில், 2001க்குள், மூன்றாம் தலைமுறை அமைப்பு உருவாக்கும் முனைப்புடன் இருந்த ஜப்பான், IMTS-2000 தர நிலையாக்க செயல்பாடுகளின் இயக்கி மற்றும் தீவிர ஆதரவாளராக செயல்பட்டது. W-CDMA தொழில் நுட்பம் மற்றும் அத்துடன் கவனமாக சீரமைக்கப் பட்டிருந்த ETSI-யின் UTRA (UMTS Terrestrial Radio Access) என்கிற ரேடியோ ட்ரான்ஸ்மிஷன் டெக்னாலஜி (RTT)யையும் ARIB ஏற்றுக் கொண்டது. வளர்ச்சி அடைந்த GSM அணுக்கம் மற்றும் பிணைய இடைமுக செயலாக்கங்களை பயன்படுத்திக் கொள்ள விரும்பிய TTC, ETSI ஸ்பெஷல் மொபைல் குரூப்-உடன் நெருக்கமாக செயலாற்றியது. 1998, செப்டம்பரில் டோக்கியோ அருகில் இருக்கும் நோக்கியாவின் R&D நிறுவனத்தில் நோக்கியா WCDMA டெர்மினலில் இருந்து டொகோமோ சோதனை நெட்ஒர்க்கிற்கு முதல் அழைப்பு வெற்றிகரமாக நிறைவேறியது. ஜூன் 2001-ல்,NTT DOCOMO 3G சேவையின் சோதனை ஓட்டத்தை ( முதல் மொபைல் இன்டர்நெட் சேவை) துவங்கியது. செப்டம்பர் 25,2001ல் NTT DoCoMo மூன்று 3G போன் மாடல்கள் வணிகப் பயன்பாட்டுக்காக கைவசம் இருப்பதாக அறிவித்தது.

பின்னர், முன்பே அறிவித்திருந்தபடி, அக்டோபர் 2001 முதல் தேதியில் ஜப்பானின் NTT DOCOMO வணிகப் பயன்பாட்டுக்குரிய முதல் WCDMA 3G மொபைல் நெட்ஒர்க்கைத் தொடங்கியது.

கொரியா:

IMT-2000 செயலாக்கத்திற்காக ITU விடுத்திருந்த முன்மொழிவு வேண்டுகோளுக்கு (request for propasal) இணங்கி கொரியா இரண்டு RTT முன்மொழிவுகளை (குளோபல் CDMA I, குளோபல் CDMA II) அனுப்பியது.

1, அக்டோபர் 2000-ல் கொரியாவின் SK Telecom முதல் வணிக பயன்பாட்டு cadma2000 நெட்ஒர்க்கை தொடங்கியது. அது CDMA20001xEV-DO (Evolution Data Only) என்ற வகை mobile அமைப்பு.

சீனா :

சீனாவும் ITU-வின் IMTS-2000 தரநிலையாக்கப் பணிகளில் தன்னை சுறுசுறுப்பாக ஈடுபடுத்திக் கொண்டது. ITU-R வேண்டுகோளுக்கிணங்கி ஒரு TDMA/CDMA கலப்பு ரேடியோ ட்ரான்ஸ்மிஷன் டெக்னாலஜி முன்மொழிவை அனுப்பியது. பின்னர் சீமென்ஸ் கம்பெனி உதவியுடன் TD-SCDMA என்னும் தரநிலையை தன் சொந்த பயன்பாட்டிற்காக உருவாக்கிக் கொண்டது.சீனாவின் முதல் 3G அமைப்பு 1 october 2009-ல் தொடங்கியது.

1.4.7. பிற முன்னெடுப்புகள்(3GPP):

1998-ல் UMTS உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த வெவ்வேறு தர நிலை மேம்பாட்டு நிறுவனங்கள்(ETSI SMG, T1P1, ARIB, TTC மற்றும் TTA) ஒருங்கிணைந்து 3G பார்ட்னர் ஷிப் ப்ரோக்ராம்-ஐ உருவாக்கினார்கள். அதை உறுதி செய்யும் 3rd ஜெனெரேஷன் பார்ட்னர்ஷிப் ப்ரோஜெக்ட் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. ஆரம்பத்தில் GSM உள்ளகத்தின் (core) பரிணாம வளர்ச்சியில் எழுந்த 3G அமைப்புகளின் தொழில்நுட்ப விவரக் குறிப்பீடுகள் மற்றும் அறிக்கைகள் மற்றும் அவற்றின் பலனாய் உருவாகும் ரேடியோ அணுக்க டெக்னாலஜிகள், FDD(Frequency Division Duplex ) மற்றும் TDD (Time Division Duplex) எனப்படும் இரு UMTS தொழில்நுட்ப வடிவங்கள் ஆகியனவற்றைத் தயாரிப்பதற்காகவே 3GPP உருவாக்கப்பட்டது. இதன் பயனாக UMTS தரநிலை உருவாக்கப் பணிகள் அதிவேகமாக முன்னேறின.

1999-ல் Release99 என்ற பெயரில் 3GPP யின் முதல் வெளியீடு வெளிவந்தது. பின்னர் தர நிலைக்கான கூடுதல் மாற்றங்கள் மற்றும் சேர்க்கைகள் குறித்த வெளியீடுகள் குறித்த காலங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. அவை High Speed Downlink Packet Access (HSDPA), High Speed Uplink Packet Access (HSUPA) மற்றும் Long Term Evolution (LTE) ஆகிய முக்கிய சேர்க்கைகளையும் உள்ளடக்கி இருந்தன. 3GPP யின் வெற்றியே, பின்னர் அது GSM, GPRS, and EDGE தொழில்நுட்ப விவரக் குறிப்பீடுகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு வேலைகளைத் தானாக முன்வந்து எடுத்துக்கொண்டதிற்கான காரணம். அண்மையில் அது 3G LTE மற்றும் முன்னேற்றமடைந்த LTE (LTE Advanced) தொழில் நுட்ப விவரக் குறிப்பீடுகள் மற்றும் அறிக்கைகள் உருவாக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இதேபோல் CDMA2000 செல்லுலர் தொலைத்தொடர்பு அமைப்புக்கான தரநிலைகள் மற்றும் அறிக்கைகளின் நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை 3GPP2 (மூன்றாவது தலைமுறை பார்ட்னர்ஷிப் ப்ரோஜெக்ட் ) என்னும் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் பங்கேற்ற அமைப்புகள் ஜப்பானின் ARIB/TTC, அமெரிக்காவின் TIA, கொரியாவின் TTA மற்றும் China Communications Standards Association.

1.4.8.3G வளர்ச்சிப் பாதை:

2004- 3.5 G-3GPP தரவு வேக அதிகரிப்புக்காக HSDPA மற்றும் HSUPA என்னும் இரு தொழில் நுட்ப மேம்பாடுகளை அறிமுகப் படுத்தியது. மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க்கள் 3.5 G எனக் கருதப் பட்டன. 3.5G நெட்ஒர்க் 14.4 Mbps(இறக்கம் ) 5.8 Mbps (ஏற்றம் ) வரை தரவு வேகம் அளிக்க வல்லது.

2007-3.75G – 3GPP அடுத்த தொழில் நுட்ப மேம்பாடு High Speed Packet Access plus (HSPA+) என்பதாகும். தரவு வேகம் 42Mbps வரை தர வல்லது.

அடுத்த பரிணாம வளர்ச்சி 3.9G எனக் குறிப்பிடப் படுகிறது . இதையே LTE (Long Term Evolution ) என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இதை 4G LTE அல்லது மேம்பட்ட 4G என்று குறிப்பிடுவது தவறு,ஏனெனில் இது 4G யின் தொழில்நுட்ப திட்ட அளவுகளை எட்டவில்லை.

1.4.9. 3G தொழில் நுட்பப் பந்தய இறுதி முடிவுகள்:

1.UMTS/WCDMA: முதலில் யூரோப் நாடுகளில் சேவையைத் தொடங்கி உலகெங்கும் பரவிப் பெரு வெற்றியடைந்த GSM (2G)-யின் வாரிசு என்று சொல்லக்கூடிய அகலப் பட்டை CDMA தொழில் நுட்பம் கொண்ட (WCDMA) அனைவர்க்குமான மொபைல் டெலிபோன் அமைப்பு (UMTS),

2.CDMA2000: இத்திட்டம் IS-95 என்னும் இடைக்கால தரநிலைப் படி CDMA தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்ட முதல் மொபைல் அமைப்பான cdmaOne (2G) அமைப்பின் 3G வாரிசாக இருக்கிறது

3. TD-SCDMA – இது சீனாவின் Time Division Synchronous CDMA திட்டம். GSM/UMTS தொழில் நுட்பத்தின் அநேக ஆதாரக் கொள்கைகளை ஏற்றிருந்தாலும் சீனாவால் TDD (Time Division Duplex)-ல் மேம்படுத்தப்பட்டு பெரும்பாலும் உள்நாட்டில் அமர்த்தப் பட்டுள்ளது.

4.பொதுவாக 2.75G என்று குறிப்பிடப்பட்டாலும், GSM(2G) பரிணமிப்பான EDGE-ம் IMTS-2000 வரையறுத்த 3G தரநிலைக்கு ஒத்துப் போகிறது.

மேற்காணும் முக்கிய IMTS-2000 அமைப்புகளில், மிக விரிந்த பரப்பில் அமர்த்தப் பட்ட 3G அமைப்பு UMTS தான் என்று வரலாறு காட்டுகிறது. பன்னாட்டுத் திரிகை வசதி அளிப்பதோடு, தன் போட்டியாளர்களை விட அதிக அளவில் பயன் முறைகளை உருவாக்கிக் கொள்ளும் சாத்தியங்களைத் தரும்படியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் மாபெரும் வெற்றியடைந்த GSM டெக்னாலஜி வழிவந்திருப்பதால் இதன் பெரிய அளவு பயன்படுத்தலுக்கு ஏற்ற மிகப் பெரிய அடித்தளம் ஏற்கனவே அமைந்திருந்தது.

1.4.10. 3G அலைக்கற்றை ஏலம்:

யூரோப்பிய நாடுகளில் 3G உரிமங்களுக்கு அலைக்கற்றையை ஏல முறையில் விற்றதுவே தொலைத்தொடர்பு தொழிலையே பாதித்த முக்கிய விபரீத சம்பவங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது. 2000களின் ஆரம்பத்தில் யூரோப் முழுதும் 3G அலைக்கற்றை ஏலமுறை விற்பனை ஆரம்பிக்கப் பட்டது. அலைக்கற்றை விலை இயக்குனர்களால் (operators) தாங்க முடியாத அளவில் இருக்கும் என்று கருதப் பட்டதால் இதற்கு முன்பே இதே போன்ற 3G அலைக்கற்றை ஏல விற்பனை அமெரிக்காவில் கைவிடப் பட்டிருந்தது. இருப்பினும் யூரோப் அரசாங்கங்கள், குறிப்பாக U. K மற்றும் ஜெர்மனி, அலைக்கற்றை விற்பனை, அரசாங்கத்தின் எதிர்பாராத ஆதாயக் குவிப்புக்கு உதவும் நல்வாய்ப்பாகக் கருதித் தயங்காமல் முன்னேறினார்கள். 3G அலைக்கற்றை ஏலம் சீலிட்ட ஏலம் கேட்பு அடிப்படையில் அளிக்கப் பட்டது. 3G அலைக்கற்றை உரிமம் கிடைத்தால் மட்டுமே செல்லுலார் இயக்கங்களை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்றுணர்ந்த செல்லுலார் இயக்குனர்கள், அதிக விலைக்கு ஏலம் கோரியதால் அலைக்கற்றை விலை உயர்ந்தது. இதனால் நெட்ஒர்க் இயக்குனர்கள் இடர் ஏற்று, U. K யில் 22.5 பில்லியன் மற்றும் ஜெர்மனியில் 30 பில்லியன் BP(British pounds) என்ற அளவுகளில் கடன் பெற்று பெரும் கடனாளிகள் ஆனார்கள். அதாவது 3G ஒரு மாபெரும் வெற்றி என்று நினைத்துக் கொண்டாலும் கடன்களைக் கட்டித் தீர்க்க பல ஆண்டுகள் ஆகும் என்ற அளவில் இயக்குனர்களுக்கு கடன் சுமை ஏறி இருந்தது.

அலைக்கற்றைக்காக முடக்கும் கடனில் வீழ்ந்தது மட்டுமல்லாமல், நெட்ஒர்க் ஆபரேட்டர்ஸ் 3G கட்டமைப்பு மற்றும் அதைப் பயன்படுத்தல் ஆகியவற்றிலும் முதலீடு செய்ய வேண்டி இருந்தது. அதனால் நெட்ஒர்க் ஆபரேட்டர்கள் 3G வளர்ச்சிகள் விரைவு ப டுத்தப் படுவதைக் காண பேரார்வம் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அவர்களின் முதலீடு மற்றும் வட்டித் தொகையை ஓரளவு ஈடு செய்யும் அளவுக்கு ஆதாயம் பார்க்க முடியும். ஆனால் 3G திறன்பேசிகள் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதங்கள் பெரும் தடைகளாக இருந்தன.உலகின் பிற நாடுகளில் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஏலங்கள் குறைவான விலை கேட்புகளையே எதிர் கொண்டன. Europe-ல் நெட்ஒர்க் ஆபரேட்டர்கள் சக்திக்கு மீறிய தொகையை அலைக்கற்றை வாங்குவதில் செலவிட நேர்ந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஏலங்கள் மிகக் குறைவான தொகையே வசூலிக்க முடிந்தது. பிற நாடுகள் அனைவரும் ஏற்கக் கூடிய பிசினஸ் மாடல்களைப் பயன்படுத்தினார்கள். உதாரணமாக, ஹாங்காங்-ல் லாபப் பகிர்வு அணுகுமுறை பின்பற்றப்பட்டது. இதனால் மற்றெங்கும் ஏலங்களில் மிகப் பெரிய முன்பணங்கட்டல் தவிர்க்கப் பட்டது.

1.4.11. UMTS முதல் மூன்று 3G செயலாக்கங்கள் :
  • 2001-அக்டோபர் .NTT DoCoMo உலகின் முதல் வணிகப் பயன்பாட்டு 3G மொபைல் நெட்ஒர்க்கைத் துவங்கியது.
  • 2001-டிசம்பர் – யூரோப்பின் முதல் வணிகப் பயன்பாட்டு 3G நெட்ஒர்க் Telenor கம்பெனி -யால் நார்வேயில் துவங்கப் பட்டது. ஆனால் UMTS திறன்பேசிகள் 2002 இறுதிவரை கிடைக்க வாய்ப்பில்லை.
  • 2003 மார்ச் – 3-ஆம் தேதி (03-03-03) UK-ஆபரேட்டர் 3 UK-யின் முதல் 3G சேவையைத் தொடங்கியது .

2003 இறுதிக்குள் அனைத்து முக்கிய நாடுகளிலும் 3G தொடங்கி விட்ட போதிலும் 2007-ல் 3G அமைப்பில் பயன்படுத்தக் கூடிய அலைபேசிகள் வர ஆரம்பித்தன. இதே போல் 2009-ல் தொடங்கிய 4Gயின் 4G-ரெடி போன் கிடைக்க 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. இருப்பினும் 4G,2013-லேயே பயனர் எண்ணிக்கையில் 3 G யை முந்திவிட்டது.

அத்தியாயம் 2. 3G செயல்படுத்துகை

2.1. 3G யின் ஏற்பு நிலை (adoptability)

3G மொபைல் போன் அமைப்பு அனைத்துலக ஒப்பளவில் பிற தலை முறை போன் அமைப்புகளை விட குறைவான பின்பற்றுவோரையே கொண்டிருந்தது.

சில நாடுகளில் 3G நெட்ஒர்க்கள் பயன்படுத்தும் ரேடியோ அலைவெண்களும் 2G அலைவெண்களும் வெவ்வேறாக இருந்தன அந்த நாடுகளின் மொபைல் ஆப்பரேட்டர்கள் முற்றிலும் புதிதான நெட்ஒர்க் கட்டமைப்பு உருவாக்க வேண்டி இருந்தது. அதிக தரவு வேகம் பெற புதிய அலைக்கற்றைகள் தேவைப்பட்டன. ஏல முறையில் புதிய அலைக்கற்றைக்கான உரிமம் பெறுவதற்கு பெருஞ்செலவிட நேர்ந்தது. மேலும் UMTS தொழில் நுட்ப செயல்படுத்தலுக்காக, பரப்புகை வன்பொருட்களின் மேம்படுத்தலிலும் அதிக அளவில் புதிய பரப்புகை கோபுரங்கள் எழுப்புதலிலும் கால தாமதமும் பெரும் செலவும் நேரிடும் அபாயம் இருந்தது. இது போன்ற பிரச்சனை மற்றும் சங்கடங்களால்.

பல ஆபரேட்டர்கள் பின்வாங்க நேர்ந்தது; சிலர் செலவைக் குறைப்பதற்காக மேம்படுத்தப்பட்ட செயலாற்றல் தருவித்துக் கொள்வதைத் தள்ளிப் போட்டனர் குளோபல் மொபைல் சப்ளையர் அஸோஸியேஷன் (GMSA ) புள்ளி விவரத்தின்படி, டிசம்பர் 2007-ல் 40 நாடுகளில் 190 3G நெட்ஒர்க்கள் செயல்பட்டன, மேலும் 71 நாடுகளில் 154 மேம்படுத்தப்பட்ட 3G (3.5G) செயல் பட்டன.

2.2 .குறைவான 3G ஏற்பின் காரணங்கள் :

  • அதிக பட்ச விலையில் 3G சேவை மற்றும் சாதனங்கள்
  • பல்லூடக சேவைகளில் போதாமை
  • செயல் எல்லை மற்றும் செயல்திறன் குறைபாடுகள்
  • நியாயமற்ற அலைக்கற்றை ஏலம் கேட்பு
  • அலைபேசி மானியம் ஏற்படுத்தும் நெட்ஒர்க் பாதிப்புகள்

அத்தியாயம் .3 .3G அந்திமம் :

3G(UMTS,HSPA,EVDO ) தொழில் நுட்ப அடிப்படையில் அமைந்த தொடர்பாடல் சாதனங்களை இயக்கத் தேவையான செல்லுலார் உள்கட்டமைப்பை மொபைல் நெட்ஒர்க் ஆபரேட்டர் சில காரணங்களுக்காக செயலிழக்கச் செய்வது 3G அஸ்தமனம் (sunsetting) எனக் கூறப்படுகிறது. 3G யைப் பொறுத்தவரை முழுமுதிர்வுக்கு யாருமே காத்திருக்க விரும்பவில்லை. . இதற்கான பொதுவான காரணங்கள்:

  • 3G நெட்ஒர்க்குகள், அதே அலைக்கற்றைகளைப் பயன்படுத்தும் 4G மற்றும் 5G நெட்ஒர்க்குகளைவிட குறைவான வேகமும் செயல்திறனும் கொண்டவை. LTE (Long Term Evolution ) தொழில் நுட்ப அடிப்படையைக் கொண்ட 4G மற்றும் 5G நெட்வொர்க்குகள் தொலை நோக்குப் பார்வையுடன் கட்டமைக்கப் பட்டுள்ளன. அடுத்த 10 ஆண்டுகள் நீடிக்கக் கூடியவை.
  • நெட்ஒர்க் ஆபரேட்டர்கள் 3G நெட்ஒர்க்கை விட்டு இடம் பெயர்வதன் காரணம், 3G அலைக்கற்றையை லாபகரமாக 4G /5G நெட்ஒர்க்கில் மறு பயன்பாடு செய்வதற்காகத் தான்.
  • 4G/5G யில் மறுபயன்பாடு செய்வதால் நெட்ஒர்க் இயக்கச்செலவு குறைவதோடு அலைக்கற்றை அதிகரிப்புக்கு ஏற்ப அதிக மொபைல் சாதனங்களை இணைத்துக்கொள்ள முடியும்.

3G மூடல்:அமெரிக்க நிகழ் நிலை அறிக்கை:

  • அமெரிக்காவின் Verizon தன்னுடைய 3G CDMA அமைப்புகளை இவ்வாண்டு(2022) கடைசிக்குள் மூடிவிடும்.
  • AT&T தன் 3G நெட்ஒர்க் களை பிப்ரவரி 2022க்குள் மூடிவிடும்.
  • T-மொபைல் தன் 3G நெட்ஒர்க் களை ஏப்ரல் 2022க்குள் மூடிவிடும்.
  • Sprint-ன் கடைசி 3G நெட்ஒர்க் April 2019-ல் வணிகப் பயன்பாட்டுக்கு வந்தது. இருந்த போதிலும் அனைத்து Sprint நெட்ஒர்க்களையும் December 2022க்குள் மூடப் பட்டுவிடும்.

இந்தியா உட்பட்ட அனைத்து நாடுகளின் முடிவும் இதுவே. 2G தவிர பிற அனைத்து நெட்ஒர்க்களையும் 4G/5G ஆக மாற்றும் திட்டம் இந்த ஓராண்டு காலத்தில் நிறைவேறும்.

***

 

 

https://solvanam.com/2022/02/13/மொபைல்-தொடர்பாடல்-வரலாற-3/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்
    • சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎 இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
    • நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்... நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.