Jump to content

துஷ்பிரயோகத்தின் சாட்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி

by vithaiFebruary 8, 2021

spacer.png

 

சமூகத்தில் அதிகாரம் மிக்கவர்கள் சிறுவர்களதும் குழந்தைகளதும் மேல் நிகழ்த்தும் துஷ்பிரயோகங்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிராகப் பேசுவதென்பது நமது காலத்திலும் மிகவும் நெருக்கடியானதே. அவர்களை வெளிப்படுத்தும் போதும் அவர்கள் செய்த துஷ்பிரயோகங்களைச் சொல்லும் போதும், பாதிக்கப்பட்டவரை விசாரணை செய்யவே நமது சமூகம் உடனடியாக முனைகிறது. அதிகாரத்திலிருப்பவர்களை நோக்கிக் கேள்வி கேட்க முடியாத சமூக அமைப்பாக நாம் அப்படித் தான் அடிப்படையிலிருந்து மாற்றப்படுகிறோம்.

எனக்கு நேர்ந்த ஓரு துஷ்பிரயோகம் பற்றி இங்கே சொல்கிறேன். நான் 2003 ஆம் ஆண்டு, தரம் ஐந்து படித்துக் கொண்டிருந்தேன், சென். ஜோன்ஸ் பொஸ்கோ கல்லூரியில். புலமைப்பரிசில் பரீட்சைக்கான தனியார் வகுப்புகள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தன. அப்போது நான் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்திற்கு அருகில் உள்ள சிவன் அம்மன் கோயில் வீதியில் இருந்த ‘அன்பொளி’ எனும் தனியார் வகுப்பிற்குப் பெற்றோரால் அனுப்பப்பட்டேன். இப்பொழுதும் பிரபலமாய் இருக்கும் அந்தத் தனியார் கல்வி நிலையத்தின் ஆசிரியரின் பெயர் அன்பழகன், தற்போதும், பாடசாலையிலும் தனியார் வகுப்புகளிலும் கற்பிக்கிறார். அவருடைய கற்பித்தல் செயற்பாடுகளும் கடுமையான ஒழுங்குகளும் பிரபல்யமானவை. மாவட்ட மட்டத்தில் அதிக புள்ளிகள் பெறும் மாணவர்கள் பெரும்பாலும் அங்கு தான் படிப்பார்கள். பொதுவாக சென். ஜோன்ஸ், யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை, பொஸ்கோ ஆகிய பிரபல பாடசாலைகளின் மாணவர்கள் அங்கு வருவதுண்டு. பரீட்சை வைத்து அதிக புள்ளிகள் எடுப்பவர்களுக்குப் புதிய ஐம்பது ரூபாய், நூறு ரூபாய்த் தாள்களை ஒரு அஞ்சலுறையில் வைத்து வழங்குவார். புள்ளிகள் குறைவாய் எடுத்தால் சுவரைப் பார்க்க வைத்து விட்டுப் பிரம்பால் அடித்து விளாசுவார். ஒரு தடவை நான் வகுப்பிற்கான கட்டணத்தைச் செலுத்த தாமதமானமையால் என்னை வகுப்பிற்குள் நிர்வாகத்தினர் ஏற்கவில்லை, என்னுடைய அண்ணனொருவர் தான் என்னை வகுப்பிற்கு இறக்க வந்தவர், நான் அழுதுகொண்டு நடந்தும் ஓடியும், வந்த பாதையால் திரும்பிக்கொண்டிருந்தேன். வழியில் கண்ட என் அண்ணன், என்ன நடந்தது என்று விசாரித்துவிட்டு என்னைத் திரும்பக் கூட்டிக் கொண்டு போனார், நிர்வாகத்தினருடன் முரண்பட்டு தூசணங்களால் அவர்களைப் பேசி விட்டார். அதனால் கோபமடைந்த நிர்வாகத்தினர் எனது பெற்றோரை அழைத்து வரச் சொல்லி விட்டார்கள், நான் அம்மாவை அழைத்துச் சென்றேன். அம்மாவையும் பேசிய அவர்கள், அண்ணன் மன்னிப்புக் கேட்டால் தான் என்னை வகுப்பிற்குள் விடுவதாகச் சொன்னார்கள். பிறகு அண்ணனையும் வரவைத்த பின்னரே நான் அங்கு தொடர்ந்து படிக்கச் சென்றேன்.

இப்படியொரு பின்னணியில், ஒரு நாள் நான் வகுப்பிற்குப் போகப் பிந்தி விட்டது. அன்று பரீட்சை நடந்து கொண்டிருந்தது. நான் உள்ளே சென்று அமர்ந்ததும் கொஞ்ச நேரத்தில் அன்பழகன் வந்தார், சுற்றியும் வகுப்பு நண்பர்கள் பரீட்சை எழுதிக் கொண்டிருந்தார்கள், “ஏன் லேட்?” என்று கேட்டார். நான் “சைக்கிள் காத்துப் போய் விட்டது” என்றேன். அருகில் அமர்ந்த அவர் என்னுடைய ஆணுறுப்பைப் பிடித்துக் கசக்கத் தொடங்கி விட்டார். அப்போது எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வியர்த்து வழிந்தது. சிறுநீர் முட்டியது. கொஞ்ச நேரமிருந்து அப்படிச் செய்தவர் பிறகு சென்று விட்டார். அவர் அப்படிச் செய்துகொண்டிருந்த போது, அவரது கையைத் தட்டி விட்டு நான் அவரை அடிப்பதாகவும், கத்தி மற்றவர்களையும் பார்க்க வைப்பதாகவும் மனதிற்குள் கற்பனை செய்தேன். ஆனால் அவர் மிகச் சாதாரணமாக அத்தனை மாணவர்களும் அருகிருக்க, துஷ்பிரயோகம் செய்தார். அப்போது பத்து வயதான எனக்கு அது கடும் மனபயத்தை உண்டாக்கியது. அன்று வேக வேகமாக வீடு திரும்பியது இன்றும் நினைவிருக்கிறது. பின்னொரு நாளும் வகுப்பிற்கு அருகில் வைத்து அப்படிச் செய்தார்.

இதனை நான் யாரிடமும் சொல்லவில்லை. அவருடைய தண்டனைகள், பெற்றோர் இதைப் பற்றியெல்லாம் என்னிடம் எதுவும் கேட்காமை, முன்னர் அவர்கள் வகுப்பில் மன்னிப்புக் கேட்டது, அவர் ஒரு பெரிய ஆள் என்று என் மனதிலிருந்த பிம்பம் எல்லாம் சேர்ந்து அதை அப்போதே என்னால் வெளிப்படுத்த முடியாமல் ஆக்கியது. யாரும் இத்தகைய பாலியல் துஷ்பிரயோகங்களைப் பற்றிப் பொதுவில் பேசுவது குறைவு. அல்லது அந்த நேரத்தில் சிறுவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பதில்லை, “இண்டைக்கு என்ன படிச்சனி?” என்று கேட்கும் பெற்றோர்கள், உனக்குப் பிடிக்காத மாதிரி யாரும் உன்னைத் தொட்டார்களா? யாராவது உன்னை அடித்தார்களா? என்று கேட்பதில்லை. “நல்லாய் அடியுங்கோ, நாங்கள் ஒன்றும் கேட்க மாட்டோம்” என்பது பெற்றோரின் தரப்பு. அப்படியேதாவது கேட்டிருந்தால் நிச்சயமாக நான் அன்றே சொல்லியிருப்பேன். இந்த இடங்களில் தான் ‘நல்ல தொடுகை’ எது ‘கெட்ட தொடுகை’ எது என்பதனை சின்ன வயதிலிருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். குழந்தைகள் சொல்வதைக் கரிசனையுடன் கேட்க வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமாகப் ‘பாலியற் கல்வி’ எவ்வளவு முக்கியம் என்பதை உணர வேண்டும். அது பெற்றோருக்கும் சமூகத்திற்கும் கூடத் தேவையானதே. சிறு குழந்தைகளைப் பொறுத்தவரையில் பெற்றோருக்குக் ‘குழந்தை வளர்ப்பை’ ஒரு கல்வியாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோருக்குக் குழந்தைகளைப் பற்றி, அவர்களின் உலகைப் பற்றி அறிவே இருப்பதில்லை என்பது துயரமான உண்மை.

சில வருடங்கள் கழித்து, நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சாதாரணதரம் படித்துக் கொண்டிருந்த நேரம், பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்த போது, நான் எனக்கு இப்படியொன்று நடந்தது என்பதை முதன் முதலில் என் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அப்போது என்னுடனிருந்த சில நண்பர்கள் தங்களுக்கும் அவர் அப்படிச் செய்ததாகச் சொன்னார்கள். ஒரு நண்பனோ, “உங்களுக்காவது ஐந்தாம் ஆண்டில், நான் எட்டாம் வகுப்புப் படிக்கும் போது” என்றான். ஒரு நாள் அவனது வீட்டுக்கு அருகில் அவனைக் கண்டிருக்கிறார். அவனை விசாரிப்பது போல் கதைத்து வீட்டிற்குள் சென்றிருக்கிறார், அவனுடைய அம்மா தேநீர் போடச் சென்ற நேரம், இவனுக்கு ஆணுறுப்பைக் கசக்கியிருக்கிறார். தன்னால் அதைத் தடுக்க முடியவில்லை என்று அவன் கவலையாகச் சொன்னான். இன்னொரு நண்பன் தனக்கு இப்படி நடந்திருந்தால் அவரை அடித்திருப்பேன் என்றான். அதன் பின்னர் தான் அப்போது எங்களுடன் படித்த வேறு சில மாணவர்களையும் கேட்டேன். அவர்களில் சிலரும் தங்களுக்கும் அவர் அப்படிச் செய்திருக்கிறார் என்று சொன்னார்கள். அதன் பின்னர் அதை அப்படியே விட்டு விட்டேன்.

இப்படியானவர்கள் தற்பாலீர்ப்பின் மேல் உள்ள சமூக மனநிலையினை வடிவமைப்பதில் பங்காற்றுகின்றனர். துஷ்பிரயோகத்திற்கும் தற்பாலீர்ப்புக்கும் இடையில் நமது சமூகத்திற்கு வித்தியாசம் கிடையாது. இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிறார்கள், இப்படியான துஷ்பிரயோக அனுபவங்கள் தற்பாலீர்ப்பாளர்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள் என்ற தோற்றத்திற்குக் கொண்டு வந்து சேர்க்கிறது. அதைப் பிரித்துப் பார்க்க நம் சமூகம் பழக வேண்டும்.

விதை குழுமம் சார்ந்து, அமைப்பு ரீதியாகச் சிறுவர்களோடும் குழந்தைகளோடும் செயற்படத் தொடங்கிய பின்னர் அவர்களுடைய உளவியலையும் நெருக்கடிகளையும் நெருக்கமாக உணரும் போது, துஷ்பிரயோகங்களுக்கும் தண்டனைக்கும் உள்ள உறவுகளை விளங்கி கொண்டேன். ஏனென்றால் இங்கு சிறுவருக்கோ குழந்தைகளுக்கென்றோ தனியே குரல் இல்லை. அவர்களை யாரும் மதிப்பதில்லை. அவர்கள் மறைமுகமாகத் தமக்கு நேரும் சம்பவங்களை வெளிப்படுத்தவே செய்கிறார்கள், ஆனால் நாம் அவற்றை நேரடியாகவே விளங்கிக் கொள்கிறோம். அழுது கொண்டு வரும் பிள்ளையை, அதற்கு மேலும் அழ வைப்பதே பெரும்பாலான வளர்ந்தவர்கள் தான். அதே பெரியவர்கள் தான் குழந்தைகளதும் சிறுவர்களதும் சமூகக் குரலும் கூட. பின்னர் சிறுவர்கள் எப்படித் தங்களை வெளிப்படுத்துவார்கள் என்று நம்ப முடியும். குறித்த ஆசிரியர், யாழ்ப்பாணத்தில் இப்போதும் பிரபல ஆசிரியர், ஆனால் யாரும் ஏன் இதை வெளிப்படுத்தவில்லை? அவர் இன்று வரை இதற்காக ஏதாவதொரு வகையில் தண்டிக்கப்பட்டிருக்கிறாரா? இப்படிச் செய்பவர் என்பதைச் சமூகம் அறிந்திருக்கிறதா? அறிந்தவர்கள் ஏன் பேசவில்லை? இது உருவாக்கும் கூட்டு உளவியலை நாம் விளங்கி கொள்ள வேண்டும், அதற்காகத் தான் அவரின் பெயரிட்டு இந்தக் குறிப்பை எழுதுகிறேன். இத்தனைக்கும் நிறைய வசதி படைத்தவர்களினதும் கல்வி மட்டங்களில் வேலை செய்பவர்களின் பிள்ளைகளுமே அதிகமாக அவரிடம் கற்பவர்கள்.

முதலாவது, இப்படியான விசயங்கள் ஆண் குழந்தைகளுக்கு நடக்கும் பொழுது அவர்கள் அதனை வெளிப்படுத்துவதில்லை, ஏதோவொரு வயதிற்குப் பின்னர் அதைப் பற்றிப் பேசினாலும் அதைச் சாதாரணமாக எடுக்கும் போக்கே பெரும்பாலும் நிலவுகின்றது. அதற்கு மேலும் யாராவது வெளிப்படுத்த விரும்பும் போது, நம் சமூகம் உருவாக்கியிருக்கும் “ஆண்மை” பற்றிய கருத்தால், இது தனக்கு நேர்ந்த அவமானமாக, அல்லது வெளியில் சொல்ல வெட்கப்படும் ஒன்றாக ஆகிவிடுகிறது. பொதுவாகவே துஷ்பிரயோகத்திற்கு உட் படுத்தப்பட்டவர்களை, அவர்களே ஏதோ குற்றம் செய்தவர்கள் என்பது போல் சித்தரிப்பவர்களும் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். மறுவளமாக அதனைச் செய்தவர் மேல் எந்தவொரு விரலையும் நீட்டுவதில்லை, சாதாரணமானவர்களுக்கே இப்படியென்றால், நான் மேலே குறிப்பிட்ட உதாரணத்தைப் பாருங்கள், அவர் ஊரின் மிகவும் பிரபலமான தனியார் வகுப்பின் ஆசிரியர். அப்படியொரு அதிகாரத்திலிருப்பவர் ஒரு துஷ்பிரயோகம் செய்யும் போது எல்லா வழிகளிலும் அதனை மூடி மறைக்கவே பலர் முயல்வார்கள். அவர்கள் தான் இவர் என்ன தான் செய்தாலும் காப்பாற்றி விட்டு, துஷ்பிரயோகம் செய்ய அவர்களுக்கு நம்பிக்கையைத் தரும் ஆட்கள். இப்படியானவற்றை அறிந்தும் மவுனமாக இருப்பவர்கள் மற்றும் சாதாரணமாகக் கடந்து விடுபவர்கள் தான் இன்னும் ஆபத்தானவர்கள்.

பொதுவாகவே பாலியல் துஷ்பிரயோகங்களை வெளிப்படுத்துவதில் உள்ள பிரச்சினை, பாதிக்கப்பட்டவர் தன்னை வெளிப்படுத்த விரும்புவதில்லை என்பது தான், மேலும் சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர் அதனை விரும்புவதில்லை. இப்போது கூடப் பலர் அதனை மறைக்கவே விரும்புவார்கள், ஆனால் நான் ஏன் இதைப் பேசுகிறேன் என்றால், இந்தத் தயக்கங்கள் தான் இப்படியான பல வகையான ஆசிரியர்கள் நிகழ்த்தும் துஷ்பிரயோகங்களை அவர்கள் செய்வதற்குரிய துணிச்சலைக் கொடுக்கிறது, நான் பதினாறு வருடங்கள் கழித்து இதனை எழுதுகிறேன், இவ்வளவு நாளாய் நானும் இதனை ஒரு வெளிப்படுத்த வேண்டிய ஒரு பிரச்சினை என்பதை உணரவில்லை. ஆனால் நாளையும் இப்படியானவர்கள் வேலைக்குச் செல்வார்கள், அங்கும் யாரோ என்னைப் போலொரு குழந்தை அமர்ந்திருக்கப் போகிறது? அதற்கும் அப்படி நிகழாதென்பதற்கு என்ன நிச்சயம்? ஆகவே இந்த முறை
பாதிக்கப்பட்டவர் முன் வைத்த கூற்றிலிருந்து பின் வாங்கப் போவதில்லை. நானே சாட்சி என்பது மட்டும் தான் இப்போதைக்கு இதை வெளிப்படுத்தும் போது எனக்கிருக்கும் ஒரே துணிச்சல். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாரும் இதனை வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கினால் அதுவொரு முக்கியமான எதிர்வினை. எங்களை விட்டுவிடலாம். அது கடந்த காலம் என்று நாங்கள் நினைக்கலாம், நாங்கள் இவரைப் பற்றி மட்டுமல்ல, இப்படியாகப் பல வகைகளில் மாணவர்களைத் துஷ்பிரயோகம் செய்பவர்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதன் மூலமாகவே இன்றுள்ள மிச்சக் குழந்தைகளைக் காப்பாற்றலாம், அதற்காக மட்டுமாவது பேசுங்கள். உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பருக்கோ இத்தகைய அல்லது இதை விடப் பாரதூரமான துஷ்பிரயோகங்கள் நிகழ்ந்திருந்தால் வெளியில் எழுதுங்கள், பேசுங்கள். அதுவே இத்தகையவர்களைச் சமூகத்திற்கு வெளிப்படுத்த உதவும். இன்று துஷ்பிரயோகம் செய்யும் ஒவ்வொரு துறையினரும் என்றாவது தாம் செய்தது வெளியில் வந்தால் என்னவாகும் என்ற அச்சம் உருவாக வேண்டும். அதற்கு நாம் கருத்துச் சொன்னால் மட்டும் போதாது, ஆட்களை வெளிப்படுத்துவதே இதை உறுதியாக்கும்.

ஒரு ஆணாய் எனக்கிருந்த மனத் தடைகளை மீறி இதைச் சொல்வதற்கு, சமூகத்தில் இயங்குவதும், பொது வெளியில் செயற்படுவதும் அளித்த அனுபவங்களே முதற் காரணம். நாம் நமது அனுபவங்களை முன் வைப்பது மிகவும் அவசியம் இல்லையென்றால், நமது சமூகம் இவற்றை இப்படியே தொடரும். ஆனால் நாம் அப்படியே அதைத் தொடர விரும்புகிறோமா? நமது குழந்தைகளை சிறுவர்களை பெண்களை அவர்கள் மேல் நிகழ்த்தப்படும் துஷ்பிரயோகங்களை வெளிப்படையாகச் சொல்லும் துணிச்சலை வழங்குவதற்கு நாம் என்ன செய்வது? அதன் முதற் படி, துணிச்சலுள்ளவர்கள் அதனை முதலில் வெளிப்படுத்துவது, தனியர்களான மனிதர்கள் அமைப்பாய்த் திரள்வது, அதுவே அவர்களைப் பலம் உள்ளவர்கள் ஆக்கும், அதிகாரங்களை எதிர்க்கும் மனோபலத்தையும் சமூக பலத்தையும் வழங்கும்.

-கிரிசாந்

குறிப்பு

* இப்படியானவற்றை வெளிப்படுத்தும் போது குறித்த நபரை மாத்திரமின்றி அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கும் மன நெருக்கடிகளும் சமூக அவமானங்களும் நேரிடும். அவர்களையிட்டு நான் வருந்துகிறேன். ஆனால் அவர்கள் இதை நான் வெளிப்படுத்துவதற்கான எனது நியாயங்களை விளங்கிக் கொள்ள வேண்டும். ஏதேனுமொரு வகையான துஷ்பிரயோகத்தினை உங்களது குழந்தைகளுக்கு நீங்கள் அனுமதிப்பீர்களா? இல்லையல்லவா? சிறுவயதில் எனக்கு நேர்ந்தது என்னைக் கடுமையாகப் பாதித்திருந்தது. நீங்கள் அந்தச் சிறுவனின் இடத்திலிருந்து இதைப் பாருங்கள் என்பதே எனது வேண்டுகோள்.
 

https://vithaikulumam.com/2021/02/08/20210207/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துஷ்பிரயோக சாட்சி : வெளிப்படுத்துகையின் சமூகத் தேவை

by vithaiFebruary 9, 2021
11.jpg

அடிப்படைச் சமூகக் கட்டமைப்புக்களான குடும்பம், பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களில் அதிகாரப் படிநிலைகளில் மேலுள்ளவர்களினால், உறவினர்களினால், ஆசிரியர்களினால் சிறுவர்களும் குழந்தைகளும் அன்றாடம் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகிய வண்ணம்தான் உள்ளார்கள். எம்மில் அதிகமானவர்கள் துஷ்பிரயோகம் சார்ந்த அனுபவங்களைக் கொண்டிருப்போம். எமது பெற்றோரது காலத்திலிருந்து எமது சிறுவர் பராயம் வரை இவ் அனுபவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இத் தொடர்ச்சி நிலைக்கு நாம் உருவாக்கியுள்ள சமூகக் கட்டமைப்பும், அது சார்ந்து நாம் கொண்டுள்ள புரிதல்களும் முக்கிய பங்குவகிக்கின்றன.

நம்மில் எத்தனை பேர் எமது துஷ்பிரயோகம்சார் அனுபவங்களைப் பற்றியும், அது எமது சிறுவர்பராயத்தில் மனதளவில் ஏற்படுத்திய பாதிப்புக்கள் பற்றியும் பொதுவெளிகளில் பேசியிருக்கின்றோம்? “இதைப் பற்றிப் பேசி இனி என்னவாகப் போகின்றது” எனும் எமது மனப்பாங்கே துஷ்பிரயோகம் செய்பவர்களுக்குத் தைரியத்தை வழங்குகின்றது. இவ் அலட்சியத் தன்மையினாலும், இத் துஷ்பிரயோகங்களின் தொடர்ச்சி நிலையினாலும் எமது எதிர்காலச் சந்ததியினரே அதிகளவில் பாதிக்கப்படப் போகின்றார்கள்.

சமகாலத்தில் மிக அரிதாக வெளிப்படுத்தப்படும் துஷ்பிரயோகச் சாட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களைக் குற்றஞ்சாட்டல் (Victim blaming) மூலம் சமூகக் கட்டமைப்புக்களால் ஒடுக்கப்படுகின்றன. “நீ எதிர்ப்புத் தெரிவிக்காததால் தானே அவர் அவ்வாறு செய்தார்” என ஒரு சிறுவரைப் பார்த்துக் கேட்டல் எவ்வளவு அபத்தம்! எமது சமூகத்தில் பாலியல் துஷ்பிரயோகங்கள் சார்ந்த அடிப்படைப் புரிந்துணர்வு நிலை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அவற்றைப் பற்றிப் பேசாதிருப்பதன் மூலம் அவ்வாறான விடயங்கள் நடப்பதைத் தடுக்க முடியும் என்பதனை நம்பவைத்துள்ளது நமது சமூகக் கட்டமைப்பு. இந்த ஒடுக்குமுறை குடும்பங்களிலிருந்தே ஆரம்பிக்கின்றது. பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டில் அக்கறைகாட்டும் பெற்றோர்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலீர்ப்பு சார்ந்த புரிந்துணர்வாக்கத்தில் அதிகளவில் கவனம் செலுத்துவதில்லை. சிறுவர்களிடம் இவைசார்ந்த உரையாடல்களை பெற்றோரைத் தவிர யாராலும் இலகுவாக ஆரம்பிக்க முடியாது. சிறுவர்கள் பெற்றோர்களிடம் காட்டும் வெளிப்படைத் தன்மையினை நாம் வேறு எவரிடமும் எதிர்பார்க்க முடியாது.

எனது அனுபவம் சார்ந்த துஷ்பிரயோக சாட்சி ஒன்றினை முன்வைக்கின்றேன். 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எனது பத்தாவது வயதில் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகிக்கொண்டிருந்தேன். பிள்ளைகளின் படிப்பில் அதிக அக்கறையுள்ளவர்கள் என்ற வகையில் எனது பெற்றோர் பாடசாலைக் கல்வி போதாது என்று தனியார் கல்வி நிலையம் ஒன்றில் என்னைச் சேர்த்துவிட்டார்கள். ‘வளர்மதி’ எனும் பெயர் கொண்ட அந்தக் கல்வி நிலையம் சாவகச்சேரியில் அமைந்திருந்தது. அன்று முதல் இன்றுவரை யாழ்ப்பாணத்தில் புலமைப்பரிசில் பரீட்சை வகுப்புக்களில் பிரபலமாக இருக்கின்ற ஆசிரியர் அன்பழகன் அவர்கள் அங்கு படிப்பித்துக்கொண்டிருந்தார். அடிக்கடி பரீட்சைகள் வைத்து 150 புள்ளிகளுக்கு மேல் பெறும் பிள்ளைகளுக்குப் பரிசில்களும், அதற்குக் கீழே புள்ளிகள் பெறும் பிள்ளைகளுக்குத் தண்டனைகளும் வழங்கப்படும். அவரது தண்டனை வழங்கும் முறைகளினாலேயே அவரையும், அக் கல்வி நிலையத்தையும் அந்தக் காலகட்டங்களில் அதிகளவில் வெறுத்தேன். எனினும் எனது பெற்றோரின் கட்டாயத்தின் பெயரில் தொடர்ந்து அங்கு செல்லவேண்டியதாயிருந்தது.

ஒருமுறை நடந்த பரீட்சையில் முதன்முறையாக நான் 150 இற்குக் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். அன்றைய தினம் பரீட்சை வினாத்தாளினைப் பெற்றுக்கொண்ட பின்னர், எப்படியும் இன்று அடிவாங்கியாக வேண்டும் என்று அறிந்து பதற்றமாக அமர்ந்திருந்தேன். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்ட பின்னர், நான் எதிர்பார்த்தது போல் எனக்கும் குறைய மதிப்பெண்கள் பெற்ற மற்றைய பிள்ளைகளுக்கும் அடிகள் விழுந்தன. முதன்முதலில் அங்கு அடிவாங்கிய நான் வலி மற்றும் கவலை தாங்கமுடியாமல் அழ ஆரம்பித்துவிட்டேன். வகுப்பு முடிவடையும் நேரத்தில் வீட்டை ஓடிச் சென்று அம்மாவைக் கட்டியணைத்து அழலாம் என்ற எண்ணத்துடன் அழுகையினை வலிந்து அடக்கிக் கொண்டேன். நான் அழுததைக் கவனித்த அன்பழகன் அவர்கள் வகுப்பு முடிவடைந்து வெளியேற எத்தனித்த என்னைப் போகவிடாது கைகளைப் பிடித்துக்கொண்டார். அனைத்து மாணவர்களும் வெளியேறிய பின்னர் தான் அடித்தது வலித்ததா என்றும், இனி அடிக்க மாட்டேன் என்றும் செல்லமாக விசாரிக்க ஆரம்பித்தார். விசாரித்துக் கொண்டிருக்கும் போதே மெதுவாக காற்சட்டையுடன் சேர்த்து எனது ஆண்குறியினைக் கசக்க ஆரம்பித்தார். அதற்கு முதல் எந்தவகையிலும் பாலியல் தொடுகையொன்றினை உணர்ந்திராத எனது உடல் நடுங்க ஆரம்பித்தது. பதற்றத்தில் வியர்த்து ஒழுகியது. ஓர் அசௌகரியமான மனநிலையில் நெளிந்துகொண்டிருந்த என்னைச் சிறிது நேரத்தில் விடுவித்துவிட்டார்.

எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அப்போது அவர் அடித்த அடியின் வலி முற்றாக மறக்கடிக்கப்பட்டிருந்தது. நான் தவறிழைத்து விட்டேன் என்பதைப் போல உணர்ந்தேன். இதைப்பற்றி அம்மாவிடம் சொல்லக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டேன். யாரிடமும் சொன்னால் என்னைப் பற்றித் தவறாக நினைப்பார்கள், ஏசுவார்கள் என்று நினைத்தேன். பதற்றத்துடன் அன்று வீடு நோக்கி ஓடிச்சென்ற என்னை எனக்கு இப்போதும் நினைவில் உள்ளது. வீடுபோய்ச் சேர்ந்து அழுதபோது, எனது அழுகைக்கான காரணம் என் புத்தகப்பையில் இருந்த மதிப்பெண்கள் குறைவாகப் இடப்பெற்ற அந்தப் பரீட்சை வினாத்தாளே என்று என்னிடம் எதுவுமே கேட்காமலே எனது அம்மா ஊகித்துக்கொண்டார். “அடுத்த தடவைகள் அதிக மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளலாம்” என்றார். ‘கட்டாயம் எடுத்தாக வேண்டும்; மறுபடியும் அடிவாங்கிச் சிக்கிக்கொள்ள முடியாது’ என்று யோசித்துக்கொண்டேன்.

பிறப்பிலேயே கேட்கும் திறன் குறைவாகக் கொண்ட நான் வகுப்பறைகளில் அதிகளவில் முன் ஆசனங்களிலேயே அமர்ந்துகொள்வேன். ஆனால் அச் சம்பவத்தின் பின் அன்பழகன் அவர்களின் வகுப்பறையில் முன் ஆசனங்களில் அமர்வதை வலிந்து தவிர்த்துக் கொண்டேன். அது அவரிடமிருந்து என்னைத் தூர வைத்துக்கொள்ளும் என்று பலமாக நம்பினேன்.

அந்தக் காலகட்டத்தில் அச் சம்பவம் எனக்கு வளர்ந்த ஆண்கள் மீதான பயத்தினை உருவாக்கியது. அனைவரது நெருங்குகையினையும், தொடுகைகளையும் சந்தேகிக்க ஆரம்பித்தேன். அவற்றிலிருந்து ஒருவகையான பதற்றத்துடன் விலகியே இருக்க எத்தனித்தேன். இவற்றையெல்லாம் வலிந்து மறக்கடிக்க எனக்கு அண்ணளவாக மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன.

இவைபோன்ற துஷ்பிரயோகங்கள் ஒரு பிள்ளையின் மனநிலையில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும்? இக் கேள்விக்கான பதிலினையும் துஷ்பிரயோகங்கள் சார்ந்த புரிந்துணரவினையும் சாட்சி வெளிப்படுத்துகைகளின் மூலமும், பாலியல் கல்விமுறைமையின் மூலமும் அடைய முடியும். இப் புரிந்துணர்வாக்கம் பிள்ளைகள் பெற்றோர்களிடம் வெளிப்படையாகப் பேசும் சந்தர்ப்பங்களினை உருவாக்கும். இச் சமூகத்தில் தொடர்ச்சியாக துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஓர் பயத்தினையும் உருவாக்கும்.

ஒரு சமூக செயற்பாட்டாளராய் என்னால் இச் சம்பவம் நடைபெற்று 15 வருடங்களின் பின்னரே அதனைப் பற்றி பேசக்கூடிய தைரியத்தைப் பெற முடிந்திருக்கின்றது. ஆனால் இவை போன்ற துஷ்பிரயோக சாட்சி வெளிப்படுத்துகைகள் எதிர்காலத்தில் பாதிக்கப்படுபவர்களின் குரல்களையும் எதிர்ப்புக்களையும் உடனடியாகவோ அல்லது விரைவாகவோ பதிவுசெய்யக்கூடிய வெளிகளை உருவாக்கும் என நம்புகின்றேன். இங்கு துஷ்பிரயோகம் செய்தவர்களைத் தண்டித்தல் என்பது முக்கிய நோக்கமல்ல. என்னைப் போல் 15 வருடங்களுக்குப் பின்னரோ அல்லது அதிகளவான கால இடைவெளிக்குப் பின்னரோ பாதிக்கப்பட்டவர்கள் தமது எதிர்ப்பினைப் பதிவுசெய்வார்கள் என்பதனை நாம் உறுதிப்படுத்துகின்றோம். அதுவே எமது வெற்றியும் சமூகத் தேவையும் ஆகும்.

அத்துடன் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் சமூகத்தில் தவறான புரிந்துணர்வுகளின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கின்றன. எம்மில் அதிகமானவர்களுக்கு தற்பாலீர்ப்பிற்கும் துஷ்பிரயோகங்களுக்குமான வேறுபாடு புரிவதில்லை. தனது பாலினத்தைச் சேர்ந்த நபர்கள் மீது பாலீர்ப்புக்கொள்ளும் நபர்களினை நாம் தற்பாலீர்ப்புள்ளோர் என அழைக்கின்றோம். அனைத்து சமூகங்களிலும் நல்லவர்களும் இருக்கின்றார்கள்; தவறான விடயங்கள் செய்பவர்களும் இருக்கின்றார்கள். அது தற்பாலீர்ப்புள்ளோர் சமூகமாயினும் சரி; எதிர்பாலீர்ப்புள்ளோர் சமூகமாயினும் சரி. இத் துஷ்பிரயோக சாட்சி வெளிப்படுத்துகைகள் எல்லா சமூகங்களிலும் துஷ்பிரயோகம் தவறு என்பதனையும், அவை சார்ந்த சமூகப் புரிந்துணர்வினையும் ஏற்படுத்துகின்றது.

16 வயதிற்கு மேற்பட்ட இரு ஆண்களோ அல்லது இரு பெண்களோ பாலீர்ப்புக்கொண்டு காதலித்தல் என்பது அன்பினை அடிப்படையாகக் கொண்டது. தற்பாலீர்ப்பு அடிப்படை மனித உரிமை என்பதுடன், தற்போது இலங்கையில் சட்டவிரோதமானதாகக் காணப்படுகின்றது. அதனைச் சட்டபூர்வமானதாக மாற்ற பல சமூக செயற்பாட்டு அமைப்புக்கள் போராடிக்கொண்டிருக்கின்றன. இந் நிலையில் இவைபோன்ற துஷ்பிரயோக சம்பவங்கள் சமூகத்தில் தற்பாலீர்ப்பு சார்ந்து ஓர் எதிர்மறையான புரிந்துணர்வினை உருவாக்குகின்றன. ஆகவே துஷ்பிரயோக சாட்சி வெளிப்படுத்துகைகளில் துஷ்பிரயோகம் மற்றும் தற்பாலீர்ப்பு சார்ந்து சரியான கருத்துக்கள் முன்வைக்கப்பட வேண்டும்.

ஆகவே துஷ்பிரயோகங்களற்ற சமாதானமான சமூகவெளி ஒன்றினை எமது எதிர்காலச் சந்ததிக்கு வழங்குவதற்காய் ஒன்றிணைவோம். எமது சமூகத்தில் பாலீர்ப்பு சார்ந்த சரியான புரிந்துணர்வினை உருவாக்குவோம். துஷ்பிரயோகங்களுக்கு எதிராகக் குரல்கொடுப்போம். துஷ்பிரயோக சாட்சி வெளிப்படுத்துகைக்கான சமூகத் தேவையினை உணர்வோம்.

கஸ்ரோ துரை

 

https://vithaikulumam.com/2021/02/09/20210209/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு மனத்தை வருத்தும் கட்டுரை ...இவ்வளவு நாளும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகளுக்கு தான் வலி அதிகம் என்று நினைத்தேன் ...இன்று தான் பெண்களுக்கு இருக்கும் அதே வலி ஆண்களுக்கும் இருக்கும் என்று புரிந்து கொண்டேன்...யாழில் நெடுக்கர் மட்டும் ஆண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பற்றி சொல்லி வந்தார் ...இணைப்பிற்கு நன்றி கிருபன்.
ஒரே ஆசிரிரியர் இவ்வளவு காலமாய் தொடர்ந்து மாணவர்களை வன்புணர்வு செய்து வந்து இருக்கின்றார் என்றால் எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் ...இப்பவாவது அவருக்கு எதிராய் எழுத தொடங்கியதே வரவேற்க தக்க மாற்றம்.
இப்படியானவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி : 03

by vithaiFebruary 10, 2021
12klass-600.jpg

பாலியல் துன்புறுத்தல் என்டா பெரும்பாலும் எல்லாரும் பொம்பிளைப் பிள்ளைகளைப் பற்றித்தான் கதைக்கிறது. ஆனா ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் உண்மை. அதாலை வாற வடு காலத்துக்கும் நிலைச்சு நிக்கும் என்டு நம்புறன். அந்தப் பாதிப்பு உடன் விளைவுகளைக் காட்டாட்டியும் எதிர்காலத்திலை வளர்ந்து வரும் போது நிச்சயம் பாதிப்புகள் வெளிவரும் என்டு அனுபவம் மூலமாய் உணர்ந்து கொண்டன்.

எனக்கு நினைவு தெரிஞ்சு முதல் முதலாய் துஷ்பிரயோகம் செய்தது ஒரு சங்கக்கடை மனேஜர் தான். அப்ப வயசு பத்துக்கும் குறைவு தான். அம்மா சங்கக்கடைக்கு ஏதோ வாங்கச்சொல்லி அனுப்பி விட்டவா. நானும் போனான். அங்கை கன பேர் நின்டவை அந்த சங்கக்கடை மனேஜர் எல்லாரையும் விட்டுட்டு தான் எனக்கு சாமான் தந்தவர். அப்பிடியே கிட்டக்கூப்பிட்டு ரொபி ஒன்டு தந்து மடியிலை கூப்பிட்டு இருத்தி வச்சு ஆணுறுப்பை போட்டு கசக்கினவர். அப்பேக்கை என்னாலை அதை விளங்கிக்கொள்ள ஏலாமல் இருந்தது. சாதாரண ஒரு விசயமாய்தான் எடுத்துக்கொண்டன். அது பிழையான விசயம் என்டு கூட என்னாலை புரிஞ்சு கொள்ளுறதுக்கு வயசு இல்லை.

அதுக்குப் பிறகு ஸ்கொலர்சிப் படிக்க அன்பழகன் சேரிட்டை போய்ச்சேர்ந்தன். வகுப்பிலை எப்பவுமே முதலாவதாய்த்தான் வருவன். ஒவ்வொரு முறையும் பரீட்சை வச்சு முதல் பத்துக்குள்ளை வாற ஆக்களுக்கு காசு தருவார். நான் எப்பிடியும் கூடுதலாய் முதல் மூண்டுக்குள்ளை நிப்பன். அவர் அப்ப என்னைக்கூப்பிட்டு மடியிலை வச்சு அடிக்கடி ஆணுறுப்பை கசக்கினது நினைவிலை இருக்குது. அதோடை என்னை Jaffna Hindu Primaryலை வந்து சேரச்சொல்லிக் கேட்டவர். எங்கடை வீட்டை ஒத்துக்கொள்ளாததாலை நான் சேரேலை. அப்பேக்கை அவர் வச்சிருந்த Sony Ericson Phoneலை தன்னட்டை படிச்ச பொடியன் ஒருத்தன் தன்ரை வீட்டை அடிக்கடி வாறவன் என்டு ரெண்டு பேரும் படுத்திருந்த போட்டோ காட்டி, சேர்ந்து படுக்கிறனாங்கள் நீயும் வந்தா சேர்ந்து படுக்கலாம் என்டு சொன்னது இப்பவும் நினைவிலை இருக்குது.

இதையெல்லாம் வீட்டை சொல்லனும் என்டு கூட எனக்கு போதுமான அளவு அறிவில்லை. இந்த நடவடிக்கைகள் ஏதோ ஒரு விதத்திலை என்னயறியாமலேயே மனதிலை குழப்பத்தை ஏற்படுத்த தொடங்கிட்டுது. படிக்க ஏலாமல் சரியாய் கஷ்டப்பட்டன். எல்லாரையும் கண்டு பயப்பிடத் தொடங்கினன். முக்கியமாய் ஆம்பிளைகளை. கன ஆக்கள் நிக்கிற இடத்துக்கு போனா உடம்பு பயத்திலை நடுங்கத்தொடங்கும், வேர்க்கத் தொடங்கும், வீட்டை உள்ள சாமானுகளை உடைக்கத் தொடங்கினன். கத்தினன். ஏதோ தாங்க ஏலாத விரக்தி மனதிலை. அதற்கு பிறகு ஒரு மனோதத்துவ டொக்டராய்ப் பாத்தது. பிறகு ஒரு கிட்டத்தட்ட 4,5 மாதத்துக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு வந்து திரும்ப படிக்கத்தொடங்கினான். அதுக்கு பிறகு கொஞ்சமாய் மறக்கத் தொடங்கினான். பிறகும் அப்பிடி கனக்க சம்பவங்கள் நடக்கத் தொடங்கினது.

அப்பைக்கே ஏழாம் ஆண்டு படிச்சன் பக்கத்து வீட்டிலை ஒரு அண்ணா இருந்தவர் அவர் எங்கடை வீட்டிலை அம்மா, அப்பா வெளிய போனாப்பிறகு வந்து ஆணுறுப்பைப்பிடிச்சு கசக்கிறதும் ஆணுறுப்பை வாயிலை வைக்கிறதும் தன்னுடைய ஆணுறுப்பிலை கை வைக்கச்சொல்லி கட்டாயப்படுத்துறதுமாய் அடிக்கடி நடக்கத் தொடங்கினது. அப்ப கொஞ்சம் விசயம் விளங்கினாலும் வீட்டிலை சொல்லிறதுக்கு சரியான பயம். அதாலை அம்மா அப்பா வெளியை வெளிக்கிடும் போது நானும் எங்கையும் வெளிக்கிட்டுடுவன் இல்லாட்டி வீட்டுக்கை ஒளிஞ்சு சத்தம் போடாமல் இருப்பன். அதுக்கு பிறகு ரியூசன் போய் வாறனான். அப்ப ஒரு அண்ணா என்னோடை வந்து தன்ரை பாட்டிலை கதைக்கத் தொடங்கினார் எனக்குப் பின்னாலையே வருவார். என்னோடை வீடு மட்டும் வருவார், நடந்து வந்தா ஏத்திக்கொண்டு வருவார். ஒரு நாள் ஒரு சந்தியிலை நிப்பாட்டி வைச்சு செக்ஸ் படம் காட்டினார், காட்டிட்டு என்ரை ஆணுறுப்பை பிடிச்சு கசக்கினார், புதுவருச நாளுக்கு படுக்க வரச்சொல்லி கேட்டார் நான் முடிஞ்ச வரை தவிர்த்துக் கொண்டு வந்தன். ஒரு கட்டத்திலை தாங்க ஏலாமால் வீட்டை அப்பாட்டை சொல்லிட்டன். அப்பா போய் அந்த அண்ணாக்குப் பேசினாப்பிறகு அவர் வாறது இல்லை.

என்னைப் போலவே கன பொடியள் அந்த அண்ணாவாலை கஷ்டப்பட்டவை. இந்த விசயம் பள்ளிக்கூடத்திலை தெரிஞ்சிட்டு பள்ளிக்கூட வாத்தியார் என்னைக் கூட்டிக்கொண்டு போய் எனக்கு கவுன்சிலிங் பண்ணினார். எனக்கு விளங்கவே இல்லை “தப்பு செய்யது அந்த அண்ணா, ஆனா ஏன் என்னைப்பிடிச்சு எல்லாரும் அட்வைஸ் பண்ணினம் என்டு”. அதை விட பள்ளிக்கூடத்திலை சேர்மாரெல்லாம் நான் ஏதாவது வேலை ஒழுங்காய்ச் செய்யாட்டி என்னைப்பாத்து “அவனுக்கு குனிஞ்சு குடுக்கத் தெரியுது சொன்ன வேலைகள் தான் செய்ய ஏலாமல் இருக்குது” என்டு நக்கல் கதைக்க தொடங்கிட்டினம். வீட்டிலை தலையணிக்கை முகத்தை புதைச்சு வைச்சு அழுறதையும், கையிலை பிளேட்டாலை வெட்டுறதையும், அயர்ன் பொக்ஸாலை சூடு வைக்கிறதைத்தவிர எனக்கு வேற வழி தெரியலை. அதுக்குப்பிறகும் கனக்க நடந்தது ஆனா இப்பிடிப்பட்ட நக்கல் வார்த்தைகளாலை சொல்லுறதுக்கு தைரியம் வரலை. உறவு முறைப் பெரியப்பா, நெருங்கிய உறவினர் ஒரு ஆள், O/Lலை தமிழ் படிப்பிடிச்ச சேர் என்டு பாலியல் துன்புறுத்தல் ஏகப்பட்ட விதத்திலை அனுபவிக்கதொடங்கினான். போகப்போக மனதிலை விரக்தி கூடத்தொடங்கிட்டுது. படிக்க கஷ்டப்பட்டன். வீட்டுக்கு வெளிய வெளிக்கிட பயப்பிட்டன், ஆம்பிளைகளை கண்டா பயப்பிட்டன். ஆம்பிளைகள் தொட்டாலே கோபம் வரும். அப்பாவோடை கூட என்னாலை கதைக்க ஏலாமல் இருந்தது. அப்பா பாசத்திலை தொட்டாக்கூட வெறுப்பு வரத்தொடங்கிட்டுது.

மனோகரன் செல்லத்துரை

https://vithaikulumam.com/2021/02/10/20210210/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி 04

by vithaiFebruary 11, 2021
149642685_122204779730512_32026485521597

அப்போ ஒன்பதாம் ஆண்டு படிக்கேக்க ஒரு நாள் நண்பன் வீட்ட போய்ட்டு வரும்போது கோயில் ஒண்டுல தண்ணி குடிக்க இறங்கினேன். குடிச்சிட்டு சைக்கிளை மிதிக்க போக ஒரு அண்ணா கையை பிடிச்சார். என்னை பற்றி விசாரிச்சு கொண்டு என்னை தொட தொடங்கினார். எனக்கு நடுங்க தொடங்கிட்டுது. பொய் பொய்யா சொன்னேன். அவரும் கேள்விக்கு மேல கேள்வி கேட்டு சைக்கிளோட என்னை பிடிச்சு வைச்சுருந்து ஆணுறுப்பை கசக்கினார். KKS வீதில வாகனம், ஆள் நடமாட்டம் அதிகமா இருந்த ஒரு பின்னேரத்துல தான் நடந்துச்சு. சனம் உதவி பண்ணுமெண்டு பார்த்தா யாரும் வரேல. சைக்கிளும் நானுமாய் ஒரு ஒழுங்கைக்குள்ள திருப்பி அவரை இழுத்துட்டு நடக்கிறேன். ஒரு 15 மீட்டர்க்கு இழுத்து சைக்கிள்ளை ஏறி போராடித்தான் அவரை கழட்டி விடமுடிஞ்சது. வீட்ட போனதும். அந்த உடுப்பை பல தடவை தோய்ச்சேன். அதே காற்சட்டை திரும்ப போட பயம், ஆனா வெளிய சொல்ல முடியாத சூழ்நிலைல ஒரு சில மாதங்கள் மனதுக்குள்ள போராடினேன். வீட்டுல சொன்னா என்னில தான் பிழை போடுவாங்க எண்டு தெரியும். வீட்ல ஏற்கனவே கண்டிப்பாங்க இதையும் சொல்லி அடிவாங்க விரும்பல. இதேவேளை ஒரு நாள் எங்கட வீட்டுக்காரர் வெளிய போச்சீனம். நான் போக மறுத்து தனிய இருந்தன். அப்பா வந்து பயமுறுத்தினார் “தனிய இருந்தா வீட்ட யாரும் வருவாங்கள். ஏதும் செஞ்சுட்டு வெட்டிப்போட்டுட்டு போய்டுவாங்கள்” எண்டு. அதுக்குபிறகு தினமும் தனிய இருக்குறபோதெல்லாம் கட்டிலுக்கு கீழ போய் வெளிய இருந்து ரெண்டு உடுப்பு பெட்டியாலை கட்டில் கீழ்ப்பக்கக்தை அடைச்சிட்டு உள்ளுக்கு பயந்தபடி இருப்பேன்.

O/L முடிச்ச லீவுல எனக்கு மனஉளைச்சல் அதிகமா இருந்துச்சு. 2 நெருங்கிய நண்பர்கள் என்னுடன் தனிய பேசும்போது “மனநோயாளி” னு என்னை அழைச்சாங்க. நண்பர்கள் என்னை “போக்கு”னு கூப்ட ஆரம்பிச்சாங்க. ஏதாவது பிரச்சனை எண்டா நான் அதிகதூரம் எங்கயாச்சும் போக ஆரம்பிச்சிருந்தேன். ஒருநாள் அதிக தொலைவுல உள்ள ஒரு கோயில்க்கு போய்ட்டு அங்க இருந்து திரும்பும் போது ஒரு வயதானவர் தன்னை 4km கழிச்சு வாற சந்தில இறக்கசொன்னார். சரினு ஏத்திட்டுபோனேன். அவர் அதே போல தொட தொடங்கினார். வீதியில சனமும் இல்லை. வேகமா மிதிச்சு போனேன். அவர்ட கையை தட்டி விட்டேன். தொடர்ந்து செய்தார். அதை பற்றி அவரிட்ட சொல்லவே பயமா இருந்துச்சு. இப்டியே இதுக்கு பிறகு என்னோட பயம் அதிகமாகி உடம்புல மறைவான இடங்கள்ல பிளேட்டால அறுத்துக்க ஆரம்பிச்சேன். இதுக்கு பிறகும் நான்கு தடவை இதே போல நடந்துச்சு. என்னில் தான் பிழைனு நம்ப ஆரம்பிச்சேன். அதோட மற்றவங்களுக்கு சொல்ல முடியாத இன்னொரு பிரச்சனை எனக்குதொடங்கிச்சு. எனக்கு பெண்கள் மீது ஈர்ப்பு இருந்ததில்லை. ஆண்கள் மேல அது இருப்பது போல தோணிச்சு. போகப்போக அது உறுதியாகிடுச்சு. நான் அந்த ‘ஆணுறுப்பை கசக்கிய நபர்கள்’ போல ஆகிடுவேனோ எண்டு பயம். அவங்க மேல வெறுப்பு கூடிச்சு. என்னை நானே துன்புறுத்தினேன். அப்ப A/L காலம் தானே வீட்ட ‘வகுப்பு’ எண்டு பொய் சொல்லிட்டு சாப்டாமலே வெளிக்கிடுவேன். நல்லா மெலிஞ்சு எலும்பும் தோலுமாகினேன். என்னை மாதிரி ஆட்கள் கெட்டவனாய் மாறாம இருக்க இதெல்லாம் தேவை எண்டு தோணிச்சு.

அதேவேளை என்னை பெண்ணை போல இருக்கிறாய், 9, அலி எண்டு எல்லாம் சிறுவயதுல இருந்து கிண்டல் பண்ணி இருக்காங்க. அதால தான் எனக்கு துஸ்பிரயோகம் நடக்குது எண்டு கருதினேன். என்னுடைய என்னென்ன செய்கைகளை வச்சு அப்டி சொன்னாங்களோ அதை எல்லாம் மாற்ற தொடங்கினேன். சைக்கிள் மிதிக்குறது, நடக்கிறது, மற்றவங்களோட கதைக்குறது எல்லாம் ரோபோ போல அசைவுகளை குறைச்சு இயங்க பழகினேன்.

A/L exam முடிய இந்த பிளேட் ஆல கீறுறது போன்றவிசயங்கள் அதிகமாகிச்சு, தெரிஞ்ச உளவியலாளரை வீட்டுக்குதெரியாம சந்திச்சேன். அப்ப தான் ‘gay’ சம்பந்தமான அறிவு உண்டாகிச்சு. “அது சாதாரணமான விசயம் தான், அப்டி இருக்கிறவங்க எல்லாரும் துஸ்பிரயோகம் பண்றவங்களாய் மாறமாட்டாங்க” எண்டு அந்த உளவியலாளர் கூறினார். பிறகு கம்பஸ். புகைவண்டில போகணும். புகைவண்டில ஒருத்தர் கிட்ட மாட்டிகிட்டேன். 10 மணிநேர பயணம். எதிர்த்து ஏதும் செய்யாமல் மௌனமாகிட்டேன். இன்றைக்கும் அதை பற்றி யோசிச்சால் குழம்பிய உணர்வுகள் தான் வருது. பிறகு ஒரு உளவியல் நிறுவனத்தின் உதவியை நாடினேன். கடந்த ஒருவருடம் என்னை காயப்படுத்துறதை குறைச்சுக்கொண்டேன்.

பிரகாஷ் ரமணன்

 

https://vithaikulumam.com/2021/02/11/20210211/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி 05

by vithaiFebruary 12, 2021
15505964940varta-blog-issue66-csa-qa-col

என்னை நானே பரிசோதனைக்கு எடுத்துக் கொள்கிறேன்

எனக்கு 12 வயதாக இருக்கும் போது குடும்பத்திற்கு புதிதாக சித்தப்பா எனும் முறையிலான ஒருவர் நுழைந்தார். அவர் எனக்கு இன்னொரு தகப்பன் ஸ்தானத்தை ஏற்க வேண்டியவர் எனும் வகையில் நினைத்திருந்தேன்.

எனக்கும் எனது சகோதரனுக்குமிடையில் ஏற்பட்ட ஒரு பேனைச் சண்டையில் சகோதரனது கையில் பேனை ஒன்றால் குத்திவிட்டு அப்பா அடிப்பார் எனும் பயத்தில் வெளியே ஓடிவந்து விட்டேன். இருட்டுக்குள் நான் வெளியே நிற்பதால் பாம்பு பூச்சிகடிக்கும் என்று அம்மா என்னை உள்ளே அழைத்து வரும் படி அந்த சித்தப்பாவினை அனுப்பியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். வெளியில் வந்த அந்நபரிடம் சகோதரன் செய்தது பிழை எனக் கூறிக்கொண்டிருந்தேன். தனது கன்னத்தில் முத்தமிட்டால் எனக்கு அடி விழுவதிலிருந்து காப்பாற்றுவதாகவும் இல்லை என்றால் காப்பாற்ற மாட்டேன் எனவும் கூறினார். கன்னத்தில் முத்தம் கொடுத்தால் மட்டுமே தப்பிக்க முடியும், அடி விழுவதிலிருந்து காப்பாற்ற முடியும் என அவர் நீண்ட நேரம் விளக்கமளித்துக் கொண்டிருந்தார். அது வரை எனக்கு இது மாதிரியான சூழல் ஏற்பட்டதில்லை. நான் சித்தப்பா தானே என்னைப் பிடிக்கும் எண்டு சொன்னனி தானே எனக் கூறிக் கொண்டிருந்தார். எனது சித்தியார் வழமையாக தன் மீதும் தன் கணவர் மீதும் எல்லோருக்கும் நன்மதிப்பு இருப்பதாகக் காட்டிக் கொள்வார் அதன் படி அவர் எல்லாக் குழந்தைகளையும் இந்தச் சித்தப்பா பிடிக்குமா அந்தச் சித்தப்பா பிடிக்குமா எனக் கேட்பார். உண்மையில் யாரைப் பிடிக்குமோ அவரைக் கூறமுடியாத நிலமை இருக்கும் ஏனெனில் அதை அடிக்கடி சுட்டிக்காட்டி மற்றப் பிள்ளைகளுடன் ஒப்பிட்டு ஓரங்கட்டுவார். அதனால் அனேகமாக அவருக்கு ஏற்றாற் போல் கூற வேண்டியிருந்தது. அது மட்டுமல்லாமல் வெளியில் அந் நபர் எல்லோருடனும் அன்பாகப் பழகுபவராகத் தான் எனக்கும் தெரிந்தார்.

இத் துஷ்பிரயோகத்தை எவ்வாறு நிகழ்ந்தது என விபரிக்கத்தொடங்கிய போது முகமெல்லாம் எரியத் தொடங்கி, தொண்டை அடைத்துக் கொண்டிருந்தது. இதற்கு மேல் என்ன செய்வது எனத் தெரியாது அழத்தொடங்கி விட்டேன். விரும்பினால் மட்டுமே இவற்றை எழுதும் படி கூறியிருந்த எனது துணைவர் எழுதவேண்டாம் என என்னைத் தேற்றத் தொடங்கினார். இத்தனை வருடமாகியும் இவை பற்றிய புரிதல்கள் எனக்கு வந்த பின்னர் கூட அதை மீள நினைக்கும் போது தவிர்க்க இயலாத அளவில் மனக்காயம் இருக்கிறது என்பதை சிறிது நேரத்தின் பின்னர் தான் உணரத்தொடங்கினேன். இது பெண் பிள்ளைகளின் ஆளுமையைப் பாதிக்கக் கூடியது, பெண்கள் இன்னுமொரு படி மேலே செல்வதற்கு இது தடையேற்படுத்தக்கூடியது. இப்போது எழுதுவதே தாமதம் தான்.
இதுவே கடைசி அழுகையாக இருக்கட்டும்.

*

குனிந்து தனது கன்னத்தைக் கொண்டு வர நானும் அவர் சித்தப்பா தான் என நினைத்து வேறு வழியில்லாது எனது கன்னத்தால் வேண்டா வெறுப்பாக முட்டி விட்டு வீட்டுக்குள் விரைவாக ஓடிவிட்டேன். அது ஒரு மோசமும் அருவருப்புமான தொடுகை. அவ்வேளை இதுக்கு மேல் நிற்பதை விட அப்பாவிடம் அடி வாங்கலாம் என நினைத்தேன். அன்று நான் பயந்தது போல் அடி விழவில்லை. ஆனால் இந்த சித்தப்பா எனக் கூறும் உறவினரின் இந்த நடத்தை மூலம் தான் நான் மன அழுத்தத்தால் குழப்பிப்போயிருந்தேன். நான் கன்னத்தால் முட்டியதை நினைத்து எனது கற்பு போய்விட்டது என்றெல்லாம் நினைத்தேன். பார்க்கும் சினிமாவும், கேட்கும் பாடல்களும், வாசிக்கும் கதைகளும், அற நூல்களும் என்னைக் குற்ற உணர்வுக்குள்ளாக்கியது. அது நான் குற்ற உணர்வு கொள்ளவேண்டிய விடயம் இல்லை என்பதை எனக்கு சமூகம் வழங்கவில்லை. அக்காலகட்டங்களில் எனக்கு யாருமே அதை விளங்க வைக்கவில்லை. தமிழ் சினிமாவில் வன்புணர்வுக் காட்சிக்குப் பின் அப்பெண் ‘கற்பிழந்தவள்’ எனக் கருதி தற்கொலை செய்வதைக் காட்டுவது போல் நானும் சாக வேண்டுமா என நினைப்பேன். ‘கற்பழித்தல்’ என்பது என்ன என்று கூட எனக்குத் தெரியாது, அது என்ன என்று எனக்கு இருபது வயதிற்குப் பின்னர் தான் தெரியவந்தது. அது பற்றி பிள்ளைகள் தெரிந்திருக்காதிருப்பது நல்ல பிள்ளை ஒன்றுக்கான பண்பாக இருந்தது. நானும் நல்ல பிள்ளையாகவே இருக்க விரும்பினேன். பாலுறவு என்பது என்ன என்று தெரியாத ஒரு பெண் பிள்ளை எப்படி ‘கற்பு’ என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.

இந்த இடத்தில் தான் பாலியல் கல்வி அவசியம் என இனங்கண்டு கொள்கிறேன். பாலியல் கல்வி என்பது என்ன நோக்கத்திற்கானது என்பதை விளங்கிக்கொள்ளாதவர்கள் தான் அனேகமானோர். அவர்கள் பாலியல் கல்வியை நிராகரிப்பர். அத்துடன் அதன் மூலம் தம்மால் அடக்குமுறைகளைப் புரியமுடியாது போகும் என்றாலும் நிராகரிக்கத்தான் செய்வார்கள். சமூகத்தில் சிறுவர்களுக்கு பாலியல் சார் துஷ்பிரயோகங்கள் ஒடுக்குதல்கள் எல்லாம் நிகழ்ந்த படி தான் இருக்கின்றன. ஆனால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு பாலியல் அறிவு கிடையாது. இவற்றை எவ்வாறு அணுகுவது, தவிர்ப்பது போன்ற கலந்துரையாடல் குடும்பத்திலும் சமூகத்திலும் நிகழவேண்டும், இதற்கு சமூகத்தில் ஏற்கனவே பிரபலமாக உள்ள, “பாதிக்கப்பட்டவரை குற்றம் செலுத்தும் போக்கினை” கைவிட வேண்டும்.

சமூகத்தில் கிடைத்த தகவல்களின் படி எல்லாக் கதைகளுமே ‘கற்பு’ பெண்களுக்கு மட்டுமே உள்ளது என்று கூறுகின்றன. பாலியல் வன்முறையே நிகழ்ந்தாலும் அது அப்பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரமான ஒரு விபத்து, அதைப் புரிந்தவனுக்கே சகல தண்டனையையும் கொடுக்கவேண்டும், அதன் மூலம் அப்பெண்ணின் ஒழுக்கத்திலோ, கற்பிலோ, புனிதத்திலோ எந்தக் குறைபாடும் ஏற்படுவதில்லை எனும் புரிதல் துளியளவும் இல்லாத சமூகத்தில் தான் நான் வளர்ந்தேன். ‘கற்பு’ எனும் சொல்லை பெறுமதியான ஒரு சொல்லாக நான் கருதக் கூடாது என்கிறேன். காரணம் அதன் அர்த்தம் பக்கச்சார்பானது. கற்பு பற்றி எல்லோரும் அறிந்த சாதாரண உதாரணம் ஒன்று கோவலன் கண்ணகியை விட்டு மாதவியுடன் வாழ்ந்த போது கண்ணகி கணவனையே( கோவலன்) நினைத்து வாழவேண்டும், பின்னர் கோவலன் மாதவியை விட்டு மீண்டும் கண்ணகியிடம் வந்த போது கண்ணகி ஏற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த கட்டம் மாதவி கோவலனை நினைத்து வாழவேண்டும். இப்படிப் பெண்கள் இருந்தால் அவர்கள் கற்புடை மகளிர். இது ஒரு சமத்துவமான அறமா? இது தான் தமிழரின் அறமா? இதில் கண்ணகியா மாதவியா சிறந்த கற்புடைய பெண் என பாடசாலை தொடங்கி சமூக மட்டங்களில் பட்டிமன்றங்கள் எல்லாம் அடிமுட்டாள்த்தனமாக வைப்பார்கள். தமிழ்ப் பண்பாடு என இவற்றைக் காவிக்கொண்டு திரிவதுடன் சமூகத்தில் பெருங்கதையாடலாக( பெரும்பான்மையினரிடமுள்ள/ஆதிக்கமுள்ள கதைகள்) இவை இருப்பதால் எல்லா மக்களிடமும் இக் கதையாடல்கள் இலகுவாக அனைத்து ஊடகங்களுடாகவும் சென்றடைகின்றன. கலை வடிவங்கள், தொலைக்காட்சி, விளம்பரங்கள், கோயில்,மதம், சடங்குகள், நிகழ்வுகள், கல்வி நிறுவனங்கள் போன்ற ஊடகங்களைக் கூறலாம். இந்தக் கருத்தாடல் மீண்டும் மீண்டும் இவ் ஊடகங்களாலும் எமது அன்றாட சாதாரண உரையாடல்களூடாகவும் கூட பயிற்சி செய்யப்பட்டு வருகிறது.

*

அந்நபர் வெற்றிலை பாக்குடன் புகையிலை போட்டிருந்ததால் தலை சுற்றுவதாகக் கூறிக்கொண்டிருந்தார். புகையிலை, மதுபானம் எல்லாம் போதைப் பொருட்கள் அவற்றைப் பயன்படுத்துவது பெருங்குற்றமாக எனக்குப் போதிக்கப்பட்டமையால் அவற்றைப் பயன்படுத்தியதால் தான் அவர் அவ்வாறு நடந்திருக்கிறார் என நினைத்து அவரை மன்னிக்கலாம் எனும் முடிவிற்கு வந்தேன். ஏனெனில் அதுவரை நான் அறிந்து பெரியோர்கள் எப்போதும் சிறுவர்களை மன்னித்ததில்லை. தண்டனை தான் வழங்குவார்கள். அதனால் சிறுவர்கள் தான் மன்னிக்க வேண்டும் என்பது எனது நிர்ப்பந்தம்.

ஆதரவாக எந்தப் பெரியோரையும் நான் பார்த்ததில்லை. சிறுபிள்ளைகளுக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுப்பதிலேயே அவர்களது முழுக்கவனமும் இருக்கும். சில பெரியோர்கள் சிறுவர்களுடன் அன்பாக இருந்திருக்கிறார்கள் ஆனால் ஆதிக்கம் காட்டும் பெரியோர்களோ இவர்களை மதிப்பதில்லை. இவர்கள் அதிகாரமற்றவர்களாக இருந்தமையால் இவர்களை அணுகுவதில் நம்பிக்கைத்தன்மை குறைவாக இருந்தது.

எல்லோருடனும் நன்றாகப்பேசக்கூடியவர், குடிப்பழக்கமற்றவர் என அந்நபர் மீது எங்கள் குடும்பத்தினர் அனைவருக்குமே நன்மதிப்பும் உண்டு. குறித்த நபர் எல்லோரும் இருக்கையில் என்னுடன் சாதாரணமாகத்தான் நடந்து கொள்வார். இந்த விடயத்தை விளங்கிக் கொள்ளவே எனக்கு சில காலம் எடுத்தது. யாரும் இல்லாத நேரத்தில் தான் அசெளகரியப்படும் படி முதுகைத் தடவுவார். இந்நபர் முதுகைத் தடவுகிறார் என நான் யாருக்கு கூறினாலும் நான் கூறுவதைக் கண்டித்து அது பாசம் எனக்கூறி ஏளனம் தான் செய்வார்கள் என்பது எனக்கு நன்றாக அந்த வயதிலேயே தெரியும். இவற்றை அவ் வயதில் எப்படி எதிர்கொள்வது என்பது தான் பெரும் குழப்பமாகவும் மன வருத்தமாகவும் இருக்கும். யாருக்கும் சொல்லி அழமுடியாத அழுத்தமாக அது எனக்குள் இருக்கும். கூட்டமாக இருக்கும் போது அருகில் செல்வதற்குப் பயமிருக்காது ஆனால் சிறிய நேர அளவில் கூட தனியே அந் நபருடன் இருப்பதைத் தவிர்ப்பேன். இதுபற்றி அதுவரை வெளியில் நான் சொல்லவில்லை இனிமேலாவது இவற்றைத் தவிர்த்தால் மன்னித்துவிடத் தயாராகத் தான் இருந்தேன். அந் நபர் ஒரு நாள் திருந்துவார் என நானும் என்னை சமாதானப்படுத்தியிருந்தேன். கூட்டமாக இருக்கும் போது அந் நபர் திருந்திவிட்டாரா என்பதை என்னால் உணரமுடியவில்லை. அந்நபருக்கு அருகில் இருக்கும் தருணங்களை என்னால் முடிந்த அளவில் தவிர்த்து வந்தேன். பின்னர் சில வருடங்களின் பின் குறித்த நபர் கிடைத்த இடைவெளியில் ஆட்களுக்குள் நின்ற என்னை ஏதோ வேலை கூறுவது போல் அழைத்து தனது போனிலுள்ள படத்தைக் காண்பித்து நடிகையின் நிர்வாணப்படம் எனக் கூறினார். நான் நன்றாகவே வளர்ந்துவிட்டேன் என்பது அப்போது எனக்குப்பட்டது. “போ விசர் நாயே” எண்டு முகத்துக்கு நேரே பேசி விட்டு வெளிக்கிட்டு உடன வீட்ட வந்துவிட்டேன். என்னால் அன்று கூறமுடிந்தது அவ்வளவு தான். அது போதாது தான். ஆனால் அவ்வளவு தைரியம் எனக்கு 16,17 வயதில் தான் வந்தது. அது வரை காலமும் என்னுடைய எதிர்ப்பு வடிவம் முறாய்த்துப் பார்ப்பது மட்டும் தான்.

தமிழ் பெண்ணிற்குரியவை எனக் கூறும் எல்லாப் பண்பாட்டு ஒழுக்கங்களையும் நான் கடைப்பிடித்துக் கொண்டு தான் இருந்தேன். ( அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு) இது எதனாலும் அந்த அச்சத்திலிருந்து என்னைக் காப்பாற்ற முடியவில்லை. கண்ணகி போல் முறாய்த்து பார்வையால் எரிக்க முடியாது என்பது எனக்கு சிறுவயதில் விளங்கவில்லை. ஆண்களுக்கு மட்டுமே நன்மை தரக் கூடிய இந்தக்கதைகளை பண்பாடு என எனக்குப் போதித்து என் வாயை அடைத்துவிட்டார்கள். இதைப் போதிக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பண்பாட்டுக்காவலர்களுக்கு பண்பாட்டை எவ்வாறு அணுகுவது என்பது கூடத் தெரியாது. அனேகம் சினிமாவைப் பார்த்து தான் அவற்றை உள்வாங்குகிறார்கள். இவர்களது கையில் எத்தனை குழந்தைகள் வன்முறைக்கு உள்ளாகின்றன. அவற்றைப் பண்பாடு எனும் பெயரில் நியாயப்படுத்துகிறார்கள். சங்க இலக்கியங்களையும் பின் வந்த இலக்கியங்களையும் பண்பாட்டினைக் கட்டமைப்பதற்கான கருவியாக எடுக்கும் போது அவற்றிலிருந்து தெரிவு செய்தவற்றைத் தான் எடுத்துள்ளார்கள். எனவே எல்லோரையும் சமத்துவமாக அணுகும் விழுமியங்களை பண்பாடு என தெரிவு செய்வதை பண்பாட்டு ஆர்வலர்கள் இனி கவனம் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

இது ஒரே ஒரு நபர் பற்றிய மிகச்சுருக்கமான கதை தான். இன்னும் இருக்கின்றன. இந்தக் கதைகளை நான் சிலரிடம் கூறியிருக்கிறேன். அவர்களில் பலர் தமக்கும் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் நிகழ்ந்ததாகக் கூறியுள்ளனர். பலருக்கு நிகழ்வதால் இதை சாதாரணமாக கடந்து போகும் போக்கே இங்கு நிகழ்கிறது. ஆனால் குழந்தையாக அதை எதிர்கொள்ளல் என்பதும் இன்று வளர்ந்தவர்களாக இவற்றை எதிர்கொள்வதும் ஒன்றல்ல. இதை ஒரு துஷ்பிரயோகம் என்பதை உறவினர்களில் சிலர் ஏற்றுக்கொண்டதாக நான் உணரவில்லை, அவ்விடத்தில் அவர்கள் மௌனமாக இருந்தார்கள். இந்த மௌனம் வன்முறையை ஆதரிப்பதற்கு துணை போகும் மௌனம். அதற்கு இன்னும் பல காரணங்கள் உண்டு. “சின்னப்பிள்ளயளின்ர பிரச்சனையை பெரியாட்கள் பெரிசு படுத்தக்கூடாது”. இந்த வசனத்தின் தீவிரம் தான் இந்த மௌனத்துக்கான ஒரு காரணம். சொந்தம் விட்டுப் போயிடும் இதுகளைப் பெரிசு படுத்தக்கூடாது என அதை மூடி மறைத்து துஷ்பிரயோகம் செய்தவருடன் வழமை போல் பழகுபவர்களும் உண்டு. இது அவர்களது இயலாமையின் வெளிப்பாடு. உண்மையில் சிறுவர்களை தமது ஆதிக்கத்தின் மூலம் கையாளும் சமூகம், குடும்பம், பாடசாலை போன்றவை அவர்களது பிரச்சினைகளை மட்டும் அலட்சியம் செய்வதற்குக் காரணம் சுயநலமாகத் தான் இருக்க முடியும். அதில் தமது நலன்களைத் தான் ஆதிக்கமுள்ள ஒவ்வொரு நபரும் கருத்திலெடுப்பர்.

அடுத்தது “இதை வெளியில் சொல்வதால் பாதிக்கப்பட்ட பிள்ளைக்குத்தான் மீள மீள
அவதூறு”எனக் கூறுவர். இந்த துஷ்பிரயோகத்தால் எனக்கு அவதூறு என நான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். எனக்கு இது அவமானமும் அல்ல. துஷ்பிரயோகம் செய்து விட்டு இதுவரை காலமும் கனவானாக வாழும் அந்நபருக்கு அவமானம் எனக் கூறிக்கொள்ளுங்கள்.
அடுத்து “வெளியே கூறுவதால் குடும்ப மானம் போய்விடும்” எனக் கூறுவோற்கு_ சிறுவர்களை மதித்து அவர்களுடன் சமமாக உரையாடத்தெரியாத, சிறுவர்களுக்குப் போதிப்பதை தாமே கடைப்பிடிக்கத்தெரியாத, சிறுவர்களிற்கு நிகழும் துஷ்பிரயோகங்களை மூடி மறைப்பவர்களுக்கு ஏற்கனவே மானம் என்பது இல்லை என்றே கருதிக்கொள்ளுங்கள். இவ்வகை கௌரவம் பார்க்கும் நபர்கள் தான் எம்மிடையே அதிகம் பேர்.

இதை வெளியில் கூறியது ஒரு கலாசார சீர்கேடு, குடும்பமானத்தை அழித்தல் எனக் கூறிக்கொண்டு வருவார்கள். ஒரு கட்டத்தில் தமது இயலாமையில் எனது நடத்தைகள் பிழை எனக் கூறவும் செய்வார்கள். ஏனெனில் இவ்வாறான உண்மைகளைப் பெண்கள் வெளிப்படுத்தும் போது இது போல் தான் செய்வார்கள். யார் எல்லாம் இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பார்கள் எனக் கேட்டால் இந்த வன்முறைகளை செய்துகொண்டிருப்பவர்கள், பண்பாட்டுப் புரிதலற்றவர்கள், சமத்துவத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் ஏற்றுக்கொள்ளாதவர்கள், வன்முறைகளுக்கு முகவர்களாக இருப்பவர்கள், மானம் என்றால் என்ன எனத் தெரியாதவர்கள்.

  • பிரிந்தா

 

https://vithaikulumam.com/2021/02/12/துஷ்பிரயோகத்தின்-சாட்சி/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

துஷ்பிரயோகத்தின் சாட்சி 06

by vithaiFebruary 13, 2021
149070587_2797870450452815_7755436599343

பொதுப்பிரச்சனைகள் தாண்டி பெரும்பாலான குடும்ப அமைப்புக்களில் சமூகத்தால் குழந்தைகளுக்கு இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள், வன்முறைகளை வெளியே கடத்தாமலிருப்பதன் முக்கிய காரணம் வெளியே தெரிந்தால் சமூகம் என்ன சொல்லும்?, கௌரவம் என்னாகிவிடும்? வளர்ப்பு பற்றி கேள்வி கேட்கப்படுமே என்பது தான். பரீட்சையையும் பெறுபேறுகளையும் நோக்கமாகக் கொண்ட தற்போதைய கல்வி முறைமையில் கற்றலில் இருக்கின்ற அழுத்தங்களைத் தாண்டி உடல்ரீதியாக, மனரீதியாக பாதிக்கப்படுகின்ற குழந்தைகளை தொடர்ச்சியாக மனச்சிக்கலுக்குள்ளாக்கும் வழிகளும் இவ்வாறான கட்டுப்பாடெனச் சொல்லிக்கொள்கின்ற சமூகவாதிகளால் ஏதோவொரு தருணத்தில் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது.

துஷ்பிரயோகங்கள் ஒவ்வொரு வடிவங்களாக, வெவ்வேறு தளங்களில் சாதாரண விடயமாக கடந்திடும் தன்மையாகவும், அதை உணர்கின்ற போதும் இது தவறான விடையமா என ஊகிக்க முடியாததுமான வயதுகளில் உறவினர், தெரிந்தவர், ஆசிரியர்களால் துஷ்பிரயோகிக்கப்பட்டிருப்போம்.

இது தவறான பாலியல்த் தொடுகை என வகைப்படுத்தி அறிய முடியாத வயதில் இடம்பெற்ற சம்பவங்களை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இவை உடல்ரீதியாக இடம்பெற்ற துஷ்பிரயோகங்கள். இவை தவிர மனரீதியாக பாதிக்கப்பட்ட விடையங்களுமுள்ளன. இவ் உண்மைச்சம்பவங்களை வெளிப்படுத்துவதற்கான நோக்கம் இவ்வாறான வடிவங்களில் நமது பிள்ளைகளுக்கும் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றிருக்க, இடம்பெற வாய்ப்புண்டு. அவற்றை இயல்பாக பரஸ்பரம் வெளிப்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியாக இச்சம்பவங்கள் இடம்பெறாமலிருப்பதற்கும், பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச்செல்லக் கூடாதென்பதற்காகவுமாகும்.

”தவறான பாலியல்த்தொடுகை” எண்டு இப்ப என்னால உணரக்கூடியதா இருந்த, என்னைப் பாதிச்ச இப்பவும் அந்த சம்பவங்களை, சம்பவ இடங்களை, அவையள எதிரில காணேக்குள்ள தொற்றிக்கொள்ளுற ஒருவிதமான பதட்டம், இயல்பாய் இருக்க முடியாம, வெறுப்பு மாதிரியான மனநிலையை உருவாக்கிற சம்பவங்களை இஞ்ச சொல்லுறன்.

2003, 2004 காலப்பகுதியில வயது 8,9 இருக்கும். அம்மப்பாவோடு கன்டர் வாகனத்தில் டிரைவராக இருந்த ஒரு அண்ணா வாறவர். ‘நல்ல குண்டம்மா, வடிவான பிள்ளை’ என்று கன்னத்தைக் கிள்ளுவார். எனக்கு நிறைய புழுகா இருக்கும். எப்ப எண்டாலும் வீட்ட வரேக்குள்ள தூக்கிக் கொண்டு திரிவார். ஒரு நாள் இரவு வாகனத்தில இருத்தி கொஞ்சத்தூரம் ஓடிக் காட்டிற்று வீட்ட தூக்கிக்கொண்டு வரேக்குள்ள தன்ர இடுப்புக்குக் கீழ என்ர உடம்பை இறுக்கி அழுத்திக் கொண்டு தன்னோட அணைச்சுக்கொண்டு வந்தார். அவர் அப்பிடி செய்தது முதல் தூக்கி வைச்சிருக்கேக்கையும் கொஞ்சேக்குள்ளையும் இருந்ததை விட வித்தியாசமா, சினமா இருந்தது. இப்பவும் அவர் அப்பிடி செய்த இடம் தாண்டி போகேக்குள்ள அப்பேக்குள்ள இருந்த இருட்டும், அவர் அப்பிடிச் செய்த ஞாபகமும் ஒவ்வொரு முறையும் வரும். ஒரு மாதிரி இருக்கும். அவரால பிறகு ஏதும் நடந்திருக்குமோ, அவர் யார் எண்டு ஞாபகமும் இல்லை. ஆனால் அவர் அப்பிடிச் செய்தது பிடிக்கேல்லை.

இதேமாதிரி அந்த வயசு மட்டில தான் நடந்திருக்கும் எண்டு நினைக்கிறன். எங்கட சொந்தக்கார அண்ணா ஒராள், என்னை எண்டா அவருக்கு நல்ல விருப்பம் எண்டு சொல்லுவார். செல்லம் காட்டுவார். அவை கரவெட்டித்திடல்ல ( வன்னி) இருந்தவை. நாங்கள் 2002 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து குடத்தனைக்கு வந்த பிறகு ஒருநாள் வந்து தங்கினவர். எல்லாரோடையும் கதைச்சுக்கொண்டு இருக்கேக்க நான் மடியில இருந்தனான். அப்பிடியே நித்திரையாகிட்டன். சாமத்தில திடுக்கிட்டு முழிக்கேக்குள்ள அவர் ஆணுறுப்பை என்ர கையால பிடிக்க வைச்சு தன்ர கையால அமத்திக்கொண்டு இருந்தவர். என்னை அப்பிடிச் செய்யச் சொல்லி அரியண்டப்படுத்திக் கொண்டு இருந்தவர். எனக்கு எங்க படுத்திருக்கிறன், யார் பக்கத்தில இருக்கிறன் எண்டு அவரின்ர குரல்ல தான் விளங்கினது. எனக்கு நித்திரை கொள்ளோணும் போலயே இருந்தது. நான் கைய எடுக்க எடுக்க திருப்ப திருப்ப அப்பிடியே செய்து கொண்டு இருந்தவர். சிணுங்கி சிணுங்கி அம்மாவ கூப்பிட்டு, பிறகு ஒருமாதிரி வெளியில போயிருக்கிறன். எப்பிடி எண்டு ஞாபகத்தில இல்ல. போய் விடியும் மட்டும் மாமரத்துக்குக் கீழ தனிய படுத்திருந்தனான். பயமா இருந்தது. போர்வை ஒண்டும் இல்லை. சரியா குளிர்ந்தது. இறுக்கிக் கண்ணை மூடிக்கொண்டு அப்பிடியே நித்திரையாகிட்டன். விடிய அம்மம்மா பேசினவா. உள்ள படுத்திருக்கலாம் எப்ப குளிருக்குள்ள வெளியில வந்து படுத்த எண்டு. ஒருதருக்கும் ஒண்டும் சொல்லேல்ல. என்னை பேசுவினம் எண்டு பயமா இருந்தது. 15 வருசத்துக்கு பிறகு அவரை காணேக்குள்ள பயமாவும், பதட்டமாவும் இயல்பா இருக்கவும் ஏலாம இருந்த. நிறையக் காலத்துக்குப் பிறகு கண்டதால என்ர சின்ன சின்ன வயசுக் கதைகள் எல்லாம் சொல்லி எல்லாரும் சிரிச்சு சந்தோசப்பட எனக்கு கோவம் மட்டும் தான் வந்தது. அந்த விளையாட்டு, குறும்புகளை கேட்டு சந்தோசப்பட ஏலாம எரிச்சலா இருந்தது. பழைய நினைவுகள் எப்பவுமே சந்தோஷத்தை தாறதும் இல்ல. பதட்டத்தையும் பயத்தையும் கூட தரும்.

அடுத்த சம்பவம், சுனாமிக்குப் பிறகு வீடுகள் எல்லாம் அழிஞ்சதால அந்த ஊரில இருந்த எல்லாரையும் தங்க வைக்குறதுக்கான இடைத்தங்கல் முகாம் எங்கடை ஊரில், எங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருந்தது. அப்பேக்க எங்கட வீட்டில சின்ன கொத்துரட்டிக்கடை ஒண்டு செய்தனாங்கள். எனக்கு 10,11 வயசு. கொத்து வித்து வாற காசெல்லாம் என்னட்டை அப்பா தருவார். தாற காசு, வாங்குற காசு எல்லாம் எழுதி வைப்பன். பெரிய ஆளெண்ட நினைப்பில சரி பிழை பாத்துக்கொண்டு திரிவன். பக்கத்தில இருந்த இடைத்தங்கல் முகாமில இருந்த 30, 35 வயது அண்ணா ஒராள். மாமா எண்டு சொல்லுறனான். அடிக்கடி கொத்துரட்டி வாங்க கடைக்கு வாறவர். அப்பாவோடயும் நல்ல மாதிரி. ஒருநாள் என்னை மடில தூக்கி வைச்சு தன்ர ஆணுறுப்பால குத்தினவர். எழும்பிப் போக வெளிக்கிட வெளிக்கிட இறுக்கிப்பிடிச்சு மடியிலயே வைச்சிருந்து அப்பிடியே திருப்பத்திருப்பச் செய்து கொண்டு இருந்தவர். அந்தரமா இருந்தது. பிறகு அவரைக் கண்டா ஓடிடுவன். பக்கத்தில போகமாட்டன். ‘மாமா கூப்பிட ஏன் போகாயாம். நல்ல பழக்கம். பெரியாக்களுக்கு மரியாதை குடுக்கிறேல்ல. எண்டு சொல்லுவினம். நான் ஏதோ மாதிரி பக்கத்திலையே போகாம ஓடி ஒழிச்சிடுவன். சில வேளை எனக்கு தெரியாம பின்னால ஓடி வந்து தூக்கி இறுக்கி நசிச்சு கொஞ்சுவார். அவற்றை எச்சில் பிரளும். அரியண்டமா இருக்கும். வளந்த பிறகு அவரைக் கண்டா தெரியாத மாதிரி, கவனிக்காத மாதிரி போய்டுவன். இப்ப அவர் இஞ்ச இல்ல.

இந்த சம்பவங்கள் எல்லாம் ஒரு தடவை நடந்ததா தான் ஞாபகம் இருக்கு. முதல்தரம் எண்டதால ஆக பயந்திருப்பனோ தெரியா.

மற்றதும் அதே வயது இருக்கேக்குள்ள எண்டு நினைக்கிறன். பத்து, பதினொரு வயதிருக்கும். எங்கட வீட்டுக்குப் பக்கத்தில ஒரு மரக்கோயில். அண்டைக்கு வெள்ளிக்கிழமை. பூசை நடக்கிறதுக்கான ஆயத்தம் நடந்துகொண்டு இருந்தது. அந்த ஏற்பாடு எல்லாம் முடிய நிறைய நேரம் ஆகுமெண்டு சொன்னவை. அங்க அப்பாவோட அடிக்கடி வீட்டுக்கு வாற சித்தப்பா முறை அண்ணா ‘பூசைக்கு நிறைய நேரம் இருக்கு தானே, வாவன், எங்கட வீட்ட போய் கொஞ்ச நேரம் இருந்திட்டு வருவம்’ என்று கூட்டிக்கொண்டு போனார். அவர்ட வீட்டுக்காரர் எல்லாம் கோயில்ல இருந்தவை. அவருக்கு அப்பேக்குள்ள 24,25 வயதிருக்கும். என்னை கூட்டிக்கொண்டு போனவர். நான் வீட்டு அறைக்குள்ள வாசல்ப்பக்கமா இருந்தனான். அவர் வாசலில் இருந்து வெளிய பாத்துக் கொண்டு தன்ர ஆணுறுப்பை என்னை பிடிக்கச்சொல்லித் தந்தவர். அப்பேக்க நான் கத்திரிக்கோலால பேப்பர் வெட்டி விளையாடிக் கொண்டு இருந்தனான். ஒரு கையால வெட்டி விளையாட கஸ்ரமா இருந்தது. அவர் செய்யச் சொன்னதை செய்யவும் பிடிக்கேல்ல. அண்டைக்கு தான் வெளிச்சத்தில முதல் தடவை பாத்தனான். பயமாவும், சத்தி வாற மாதிரியும், வேர்த்துக்கொண்டும் வந்தது. எப்ப கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போவார் எண்டு இருந்தது.

பிறகு வீட்ட வரேக்க அண்டைக்கு செய்தது எப்பிடி இருந்து? ஆக்களில்லாத நேரம் சொல்லுறன். அங்க போய் அப்பிடி விளையாட்டு விளையாடுவம் நல்லா இருக்கும் எண்டு சொன்னவர். வாற நேரமெல்லாம் என்ர பின்பக்கமா கைய விட்டு தடவுவார். பக்கத்தில வந்து படுத்திருந்து கதை கேட்டு அரியண்டப்படுத்திக் கொண்டு இருப்பார். பிறகு வீட்டுக்காறரோட ஏதோ சண்டை பிடிச்சதால வீட்டுப்பக்கம் வாறேல்ல. என்னை கதை கேட்டா அப்பா பேசுவார் கதைக்க மாட்டன் எண்டு சொல்லீட்டு ஓடிடுவன்.

இதோட சம்மந்தப்பட்டவையால பிறகு நடந்திச்சோ, இல்ல அது மட்டும் தானோ நினைவில இல்ல. பிறகு யாரும் கொஞ்சினா, தூக்கி வைச்சிருந்தா எனக்கு பயம். சின்னனில நல்ல வாயாடி, ஏதாவது கதைச்சு விளையாடி, துறு துறு எண்டு இருப்பன் எண்டு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கன். இந்த சம்பவங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா தனிய இருக்க தொடங்கீட்டன். என்ர பாட்டில இருந்து விளையாடுவன். நிறைய கதைக்க மாட்டன். யாரும் தெரிஞ்சாக்கள் வீட்ட வரேக்க கதைகேட்டு பதில் செல்லாம இருந்தா, கூப்பிட்டு பக்கத்தில போகாம இருந்தா அம்மாக்கள் பேசுவினம். ஏன் உம்மெண்டு நீட்டிக் கொண்டு இருக்கிறாய் எண்டு. ஆக்களுக்கு மரியாத குடுத்துப் பழகு எண்டு. நல்லா கத்திப் பேசோணும் போல இருக்கும். ஆக தாங்கேலாட்டி அழுதிடுவன். போக மாட்டன்.

இந்த தனிமையும், அமைதியும் இயல்பாவே இருக்கத் தொடங்கீட்டு. இந்த விசயங்களால இப்ப யாரும் சின்னாக்கள் யாரிட்டையும் போக பயப்பிட்டாலோ, விருப்பமில்லாம இருந்தாலோ கொஞ்சம் கவனமா கவனிச்சுப் பாப்பன். எனக்கு இப்படியான துஷ்பிரயோகம் செய்த ஒராள் பக்கத்தில தான் இருக்கிறார். அவை வீட்டுக்கு எனக்குத்தெரிஞ்ச பிள்ளையளை அவர் கூடாது எண்டு சொல்லி போக விடுறேல்ல. நடந்த விசயம் தைரியமா சொல்லேலாம இருந்த. பாதிக்கப்பட்ட என்னை கூடாம நினைச்சிடுவினம் எண்டு. எந்த வழிமுறைல இதை கையாளுற எண்டும் அந்த சந்தர்ப்பத்தில தெரியேல்ல.

ஏதோவொரு வடிவத்தில் இவ்வாறான துஷ்பிரயோகங்கள், எதிர்ப்பாலினத்தவர் மீதோ, தன்பாலினத்தவர் மீதோ இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. எனக்கு நடந்த அனுபவங்களின் படி பெரியவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இயல்பாக ஒருவரோடு பழகிய பிள்ளை திடீரென மாற்றத்தை காட்டுகின்றது, பின்வாங்குகின்றது எனில் அதற்கான காரணத்தை அறிய முற்பட வேண்டும். அதை விடுத்து மரியாதையையும், பிள்ளையின் ஒழுக்கத்தை இவை இவைதான் என திணிப்பதும் ஒருவகையில் பாதிக்கப்பட்ட குழந்தையின் மனநிலையில் இன்னும் கூடியளவு பாதிப்பைச் செலுத்துகின்ற விடையங்கள் தான்.

பாடசாலைக்காலத்தில் ஆசிரியர் ஒருவரால் எனக்கு நிகழ்ந்த, அவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவிகள் பகிர்ந்து கொண்ட சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றேன்.

நான் படித்தது தரம் ஒன்றிலிருந்து சாதாரண தரம் வரை 150 மாணவர்களை மாத்திரம் கொண்ட கலவன் பாடசாலை. 2007, 2008 ல் அப்போது தரம் ஏழு அல்லது எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருப்பேன் என நினைக்கின்றேன். அப்போது கணித பாடம் கற்பித்த ஆண் ஆசிரியர் ஒருவர் பாடத்தில் இருக்கின்ற சந்தேகங்கள் தொடர்பாக கேட்பதற்காக அவரது மேசைக்கு செல்கின்ற போது ”இஞ்ச பக்கத்தில வாம்மா.. என்னம்மா டவுட்? என்ற வினவல்களோடு முதுகில் இருந்து பின்புறமாக தடவிய படி கேட்பார். மயிர்க்கொட்டி ஊருகின்ற, மழைக்கால கறுப்பு அட்டைகள் பார்க்கின்ற போது வருகின்ற இந்த அருவருப்பும் வெறுப்பும் இயல்பாகவே தொற்றிக்கொள்ளும். ஒருபக்கம் நெளிந்து எதேச்சையாக கொஞ்சம் விலகிப்போகும் தன்மையோடு அவற்றைத் தவிர்க்கப் பார்த்திருக்கின்றேன். இருந்தாலும் வகுப்பில் முதலாம் பிள்ளை கணக்குப்பாடத்தில் பிழை வந்தால் மார்க்ஸ் குறைஞ்சிடும் என்ற மனநிலையோடு சந்தேகங்கள் வரும்போது பழைய தோரணையில்த்தான் விளங்கப்படுத்தப்படும் என்பதை மறந்து அருகே போகின்ற போது ஞாபகம் வர திக்குமுக்காடுவதுமாக இருக்கும். அவர் அதே பாணியில் தொடர்வார். கூச்சத்தன்மையாக, அருவருப்பாக உணரும் போது கேக்காம விட்டிருக்கலாமோ, எப்ப இவர் விளங்கப்படுத்தி முடிப்பார் என்ற மாதிரி இருக்கும். கணக்கு விளங்காம செய்யவும் ஏலாது. செய்யாட்டி பக்கத்தில விளங்கப்படுத்தக் கூப்பிடுவார் எண்ற பயம். சில வேளைகளில் சந்தேகங்களோடேயே இருந்திருக்கன். பிறகு பின்னேர ரியூசனில அதை கவனமா படிக்க முயற்சி எடுத்திருக்கன். இந்த விசயங்கள் தந்த பதட்டமும், பயமும் அடுத்த பாடவேளைகளில ஒழுங்கா கவனிக்கேலாமலும் இருந்திருக்கு. கொஞ்சம் வளர வளர ஒதுங்கிப்போனது ஞாபகம். அவருக்கு ஆறு விரல். எந்த நேரமும் நகம் கடிச்சுத் துப்பிக்கொண்டு கண்வெட்டாம பாத்துக்கொண்டு இருப்பார். முகத்துக்கு நேர பாக்கேலாம இருக்கும். இப்ப யார் நகம் கடிச்சாலும் அவர்ட ஞாபகம் வரும். என்ன நோக்கமா இருக்கும் எண்டு ஒரு வித குழப்பமா இருக்கும். இப்ப வரைக்கும் யாரைக்கேட்டாலும் அவர் நல்ல சேர்.

இந்த விடயங்களை வீட்டில் வெளிப்படுத்துவதற்கான சூழல் இல்லை. காரணம் அந்த ஆசிரியருக்கு ஒவ்வொரு மாணவர்கள் வீட்டிலும், பாடசாலையிலும், சமூகத்திலும் அவரால் தோற்றுவிக்கப்பட்டிருந்த நன்மதிப்பு. ஒரு வேளை வெளியில் சொல்வதற்கான மனநிலை வந்திருந்தாலும் யாருக்கு சாதகமான, எந்த மனநிலையில் அவை விசாரிக்கப்பட்டிருக்கும் என்பது ஊகிக்கக்கூடியதே.

சில நாட்களுக்கு முதல் எனக்கு நடந்த இந்த விடயம் பற்றி நண்பர்களுக்கிடையில் உரையாடும் போது அவர் எனக்கு மட்டும் இல்ல தொடர்ச்சியாக எல்லாருக்குமே செய்திருக்கார் என்றும், அவர்களும் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும், இன்னொரு தரப்பு அதை மென்மையாக விளங்கப்படுத்துவதற்கான வழிமுறையாக புரிந்து கொண்டிருந்ததையும் அறியக்கூடியதாக இருந்தது. இந்த முரண்களை பிரித்து விளங்கிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.

இவ் ஆசிரியர் தொடர்பான விபரங்களை முழுமையாக வெளிப்படுத்தாமைக்கான காரணம், தனியார் வகுப்பொன்றில் குறித்த பிரபல கணிதபாட ஆசிரியர் பணி புரியும் போது அங்கும் ‘மென்மையாக’ விளங்கப்படுத்த முனைந்திருக்கின்றார். பெற்றோருக்கு இவ் விடயம் சென்ற பிற்பாடு அவர் சட்டரீதியாக எச்சரிக்கப்பட்டிருந்தமையும் தெரியக்கிடைத்தது. இந்தத் துஷ்பிரயோகங்களை வெளிப்படுத்துவதற்கான காலச்சூழல் தற்போது கிடைத்திருக்கின்றது. ஆயினும் தொடர்ச்சியாக அவதானிக்கக் கிடைக்கும் தருணத்தில் இவ்வாறானவர்களின் விபரங்களை வெளிப்படுத்துவதற்கு தயங்கப்போவதும் இல்லை

இவற்றைச் சாதாரண விடயமாக கடந்து போகும் மனநிலையில் தற்போது இருக்கமுடியாமலிருக்கின்றது. இவ்வாறான மனநிலையுடையவர்களை வெளிப்படுத்தாமல்ப் போனால் இதுபோன்ற பலர் நற்பெயரோடு சமூகத்திற்குள் துஷ்பிரயோகங்கள், வன்முறைகளைக் கடத்திக்கொண்டே இருப்பார்கள்.

குழந்தைகளோடு சந்தோசங்களை பகிர்ந்து கொள்வதில் காட்டுகின்ற ஆர்வத்தை, அவர்கள் தாம் அறிந்தவற்றின் அனுபவங்களின் வழியாகச் சொல்லும் ஒவ்வொரு கதைக்குள்ளும் மறைந்திருக்கும் அறியப்படாத துயரங்களையும் அணுகிப்பாருங்கள். நாங்களிருக்கின்றோம் என்கின்ற தோழமையோடு இயல்பாக உடனிருங்கள்.

பாரதூரமான அளவு பாதிக்கப்படுகின்ற போது பொது வெளிகளில் பொங்குகின்ற நாம் அடிப்படையில் எங்கிருந்து இவை ஆரம்பிக்கின்றது? எவ்வாறு அவற்றை சரியான முறையில் கையாள்வது? இவற்றிற்கான கலந்துரையாடல்களின் முக்கியத்துவம் என்ன? என்பது பற்றி சிந்தித்திருக்கின்றோமா? தொடர்ச்சியாக உரையாடுவோம்.

ரஜிதா இராசரத்தினம்

https://vithaikulumam.com/2021/02/13/துஷ்பிரயோகத்தின்-சாட்ச-2/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி 07 – நவாலியூர் தாமா

by vithaiFebruary 14, 2021
spacer.png

சிறுவயது பாலியல் வன்முறையின் விளைவுகள்

ஆனி மாதம் 5ஆம் திகதி உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு செய்த ஓவியப் போட்டியில் நான் பங்கேற்று யாழ் மாவட்ட முதல் பரிசை பெற்றேன். ஈழப் போரின் மத்தியில் நான் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பரிசை பெற்றது மிகவும் பெருமையான விடயம். ஆனால் அப்பெருமையினுள் அவமானமும் சோகமும் கலந்துள்ளது. எனது பெருமை மீது உரிமை கொள்ள என்னுள் ஒரு தயக்கம் இருந்தது.

நான் அவ் ஓவிய போட்டியில் பங்கேற்பதற்காக ஒரு சித்திர ஆசிரியரிடம் பயிற்சி பெற்றேன். தினமும் பயிற்சி நேரத்தில் அவர் எனது மார்பு முளையை கிள்ளுவார். மிகவும் எரிச்சலாக இருக்கும். பயமாகவும், ஆத்திரமாகவும் இருந்தது. ஆனால் அவமானம் காரணமாக அதை யாரிடமும் கூற முடியவில்லை. என் மீது பழிபோடுவார்கள். என்னை திட்டுவார்கள் என்ற பயம் என்னை மௌனமாக வைத்திருந்தது.

நான் சிறுமியாக இருந்த போது மனம் திறந்து யாருடனும் என் உணர்ச்சிகளையோ, அனுபவங்களயோ பகிர முடியவில்லை. நான் புறக்கணிக்கப்பட்டவளாக
கருதினேன். என்னை, எனது விருப்பத்தை, எனது கஷ்டத்தை ஏற்று கொள்ள யாரும் இல்லை என நான் நம்பினேன். எனவே எனது ஆசிரியரால் நான் அனுபவித்த துன்பத்தை நான் மூடி மறைத்தேன். நான் எனது முதல் பரிசு சான்றிதழை பார்த்த போதெல்லாம் எனக்கு ஆத்திரமும் கோபமும் வந்தது. எனது ஒவிய அங்கீகாரத்தை வெறுத்தேன்.

எனக்கு என் மார்பகம் மீது வெறுப்பாக இருந்தது. என்னால் ஆடைகளை கழற்றி
நிர்வாணமாக என்னை பார்க்க முடியவில்லை. எனது உடலை ஆடைகளால் முடி மறைத்தேன். எனது உடலை நான் ஒர் எதிரியாக தான் பார்த்தேன். அதே நேரம்
யாராவது எனது மார்பகத்தை முத்தமிட மாட்டார்களா என்ற ஏக்கமும் எனக்குள்
இருந்தது. என்னால் எனது மார்பகத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. எனது
மார்பகங்கள் எனக்கு வலியாகவும் ஒரு பாரமாகவும் இருந்தது. எப்போது எனக்கு மார்பு புற்று நோய் வரும்? எப்போது எனது மார்பகத்தை அகற்றுவார்கள் என
காத்திருந்தேன்.

சிறுவயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான வயது வந்தோருக்கான சிகிச்சையை டொறொன்டோ நகரில் gate house என்ற நிறுவனத்தில் பெற்றேன். நான் (survivors) பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து பிழைத்து கொண்ட மற்ற குழுவினருடன் எனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன். இச் சிகிச்சை முறை ஒவ்வொரு கட்டமாக நடைபெற்றது. அத்துடன் தனியாக சிகிச்சை நிபுணர் எனது பாதிப்பின் மீது அக்கறை காட்டினார். சிகிச்சை மூலம் அனுதாபத்தையும் இரக்கத்தையும் பெற்று கொண்டேன். எனது அவமானத்தை சுய கௌரவமாக மாற்றினேன்.

எனது ஆசிரியர் தான் குற்றவாளி, அவர் என்ன தான் அவமானப்பட வேண்டும். ஒரு போதும் பாதிக்கப்பட்டவர் அவமானப் படக்கூடாது என்பதை உறுதியாக புரிந்து கொண்டேன். நான் இன்று எனது முதல் பரிசை குறித்து பெருமைப்படுகிறேன். தவறு சித்திரம் வரைய சென்றது அல்ல தவறு ஆசிரியரின் நடத்தை என நேர் நோக்கமாக சிந்திக்கிறேன் . குழந்தை பருவத்தில் பாலியல் தொல்லைக்குள்ளானதால் குழந்தையான என்னை நான் கடிந்து கொண்டேன். என் மீது பழியை போட்டேன். இன்று ஓர் பெண்ணாக பாதிக்கப்பட்ட என் குழந்தை பருவத்திடம் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு பொறுப்பு எனது ஆசிரியர் என கூறுகிறேன்.

சிறுவயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான வயது வந்தவர்கள் நாம், குழந்தை பருவத்தில் எவ்வாறு குற்ற உணர்வுடன் வயது முதிர்ந்தவர்களை குற்றம்
சுமத்த முடியாது குழப்பத்துடன் வாழ்ந்தோமோ, அதே வாழ்வை, வயது முதிர்ந்தவர்களாக வாழ வாய்ப்பு உண்டு. மூடி மறைத்து வாழ்வோமானால் உள்ளுக்குள் அது கோறையாக நம்மை அரித்து கொண்டு இருக்கும். இன்று சிறுவயது பாலியல் துஷ்பிரயோகத்தை பலர் பகிரங்கமாக பகிருகின்றனர். அதை சமுதாயம் ஏற்று கொள்கிறது. பலருக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

அண்மையில் நான் நன்கு அறிந்த பெண், பாலியல் துஷ்பிரயோகம் செய்த தனது தந்தையை சட்டத்துக்கு முன் நிறுத்தி சிறைத் தண்டனையை தந்தைக்கு வழங்கியுள்ளார். அவரது சிறு வயது பாலியல் துஷ்பிரயோக கதையை broken at six என்ற YouTubeஇல் ஆங்கிலத்தில் கேட்கலாம். இன்று சிறுவயதில் பாலியல் தொல்லைக்குட்பட்ட வயது வந்தவர்களுக்கு பல சேவைகள், சிகிச்சை முறைகள் உண்டு. இழந்த குழந்தை பருவத்தை மீண்டும் கட்டியெழுப்பி ஆரோக்கியமான வாழ்வை வாழ சந்தர்ப்பம் கிடைக்கிறது. நான் பாலியல் துஷ்பிரயோக வடுவை குணமாக்கி இன்று ஆரோக்கியமாக தன்னம்பிக்கையுடன் வாழ்வதையிட்டு பெருமைப்படுகிறேன். பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவது நமது கடமை. அதற்காக ஒன்று பட்டு செயல்படுவோம்.

நவாலியூர் தாமா

 

 

https://vithaikulumam.com/2021/02/14/20210214/

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி -08 -மீராபாரதி

by vithaiMarch 1, 2021
hate-america-1-960x704.jpg

மனமும் உடலும் பாலியல் என்றால் என்னவென்று அறியாத உணராத நான்கு வயதில் பாலியற் செயற்பாடுகளை கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சிறுவர் விளையாட்டாக மேற்கொள்வேன். இவற்றை எங்கிருந்து எப்படிக் கற்றேன் என்பது நினைவில் இல்லை. எனது ஐந்து வயதில் பக்கத்து வீட்டு சின்னப் பெண் குழந்தையுடன் “அம்மணமாக” (நிர்வாணமாக) அம்மா அப்பா விளையாடினேன். ஆனால் என்னுடன் விளையாடிய சக குழந்தைகள் என் அம்மாவிடம் நான் “கெட்ட” விளையாட்டுக்கள் விளையாடுவதாக ஒவ்வொரு முறையும் முறையிட்டு (கோள் சொல்லி) விடுவார்கள். இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் அம்மாவிடம் நான் அடி வாங்கத் தவறியதில்லை. இதேபோல் அப்பாவிடமும் பல நேரங்களில் பல்வேறு காரணங்களுக்காக அடி வாங்கியிருக்கின்றேன். இவ்வாறு நான் பெரியவனாக வளரும் வரை மட்டுமல்ல வளர்ந்த பின்பும் கூட ஏதாவது காரணங்களிற்காக அடிகள் வாங்கியிருக்கின்றேன். இந்த அடிகள் தந்த வலிகளினதும் வடுக்களினதும் விளைவாக நான் பயந்தவனாக, பொது இடங்களில் மட்டுமல்ல தனித்தும் பெண்களுடன் பேசவோ விளையாடவோ தயங்கியவனாக வளர ஆரம்பித்தேன். இதன் காரணமாக எனது இருபத்தைந்து வயது வரை வீட்டில் அப்பாவிடம் மட்டுமல்ல அம்மாவிடமும் காதல் என்ற சொல்லை சாதாரணமாகக் கூடப் பயன்படுத்த முடியாதளவிற்குப் பயம் இருந்தது. இந்தப் பண்புகள் எனது படைப்பாற்றலுக்கும் விளையாட்டுத்தனத்திற்கும் சுய தேடலுக்கும் முட்டுக்கட்டை போட்டு என்னைக் கட்டிப் போட்டன என்றால் மிகையல்ல. இதனால் எனது இயற்கையான இயல்பு ஒடுங்கி மறைந்து போனது. என் மீது செயற்கையான இயல்புகள் ஒரு முகமூடியாக வந்து அமர்ந்து கொண்டன. சமூகம் விரும்புகின்ற, எதிர்பார்க்கின்ற இயந்திர மனிதராக வளர ஆரம்பித்தேன் நான்.

எனக்கு ஆறு வயது இருக்கும் பொழுது பக்கத்து வீட்டுற்கு ஒருவர் வந்திருந்தார். அவர் என்னை வீட்டின் முன்பக்கம் அழைப்பார். அங்கு ஒருவரும் இருக்க மாட்டார்கள். அவர் எனது கையை எடுத்து தனது ஆண்குறியைப் பிடிக்கச் சொல்லுவார். நானும் எந்த மறுப்பும் இல்லாமல் பிடித்துக் கொண்டிருப்பேன். இவ்வாறு செய்வது தவறு என அப்பொழுது எனக்குத் தெரியாது. இப்படிப் பல நாட்கள் தொடர்ந்தன. இதற்காக எனக்கு இனிப்புகள் தருவார். அந்த இனிப்புகளுக்காக நான் என்ன செய்கின்றேன் என்பதை அறியாது செய்தேன். இதேபோல் பதின்மூன்று வயதிலும் ஒரு சம்பவம் நடந்தது. அப்பொழுது எனக்குத் திரைப்படங்கள் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. நாம் வாழ்ந்த அறை திரையரங்கு ஒன்றுடன் இணைந்திருந்தது. அங்கு வேலை செய்தவர் என் ஆர்வத்தை அறிந்து திரைப்படங்களைப் பார்க்க அழைப்பார். படம் காண்பிக்கும் அறைக்கும் அழைத்துச் சென்று படம் எவ்வாறு திரையிடப்படுகின்றது என்பதைக் காண்பிப்பார். இவை எனக்கு மகிழ்ச்சியளிக்கும். பின் மேல்மாடத்திற்கு (பல்கனிக்கு) அழைத்துச் செல்வார். அங்கு ஒருவரும் இருக்க மாட்டார்கள். இருட்டாக இருக்கும். அவர் என்னைக் குனிந்து இருக்கச் சொல்லிவிட்டு பின்னால் நின்று என்னவோ செய்வார். பின் துடைத்துவிடுவார். இவை இன்று நினைப்பதற்கு அருவருப்பாக இருந்தபோதும் அன்று என்னை ஒன்றும் செய்யவில்லை. ஆகவே யாரிடமும் சொல்லவில்லை. அல்லது ஏதோ ஒரு இனம் புரியாத பயம் தடுத்தது. ஏன்? இவற்றைப் பற்றி எல்லாம் வீட்டில் இன்றுவரை கூறவில்லை. ஏனெனில் இவ்வாறான விடயங்களை உரையாடும் ஒரு சூழல் இருக்கவில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களை உருவாக்கவில்லை. ஆகவே இதை வாசிக்கும் பொழுதே அறிந்து கொள்வார்கள். இவை சிறுவர்கள் மீதான பாலியல் தூஸ்பிரயோகங்கள் என்பதை வளர்ந்த பின்பே அறிந்து கொண்டேன்.

எனது பதினைந்தாவது வயதில் (1983ம் ஆண்டு) நடைபெற்ற தமிழ் மக்கள் மீதான சிங்களப் பேரினவாத தாக்குதல்களின் விளைவாக யாழ் சென்று குருநகர் அகதிகள் முகாமில் நாம் தங்கியிருந்தோம். அந்தக் காலத்தில் தான் எனது உடல் காமத்தை உணரத் தொடங்கியது. எனக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. அப்பொழுது அங்கிருந்த ஒரு அகதி நண்பன் இந்த வேளைகளில் தனது ஆண்குறியைத் தானே ஆட்டியதாக, அதாவது கைதுய்மை (கையில் போடுவது) செய்வதாகக், கூறினான். அவன் கூறியதைக் கேட்டு நானும் செய்து பார்க்க விரும்பினேன். அது ஒரு பகல் வேளை. முதன் முதலாக சுய இன்பம் காண்பதில் ஈடுபட்டேன். ஆண் குறி பெரியதாகி சிறிது நேரத்தில் வெள்ளைத் திரவம் வெளியேறியது. உடலுக்கு இதமாகவும் மனதிற்குத் திருப்தியாகவும் இருந்தது. ஆனால் அதன்பின் குறி சின்னதாக மாறவில்லை. பெரிதாகவே இருந்தது. பயந்து போனேன். நீண்ட நேரங்கள் குறியுடன் மல்லுக் கட்டி ஒருவாறு சின்னதாகிய பின் பயந்து பயந்து அறைக்கு வெளியே வந்தேன். “அம்மா நான் பெரியவனாகி விட்டேன்” என கூறமுடியவில்லை. ஆனால் இதற்கு முதல் வருடம் தங்கை பெரியவளாகி இருந்தால். அதை சிறியளவில் நண்பர்கள் உறவினர்களை அழைத்துக் கொண்டாடினார்கள். ஏன் எனக்கு மட்டும் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. தங்கைகளைப் போல எனக்கும் உடலில் மாற்றங்கள் வந்தன. ஆனால் அதை அப்பாவிடமோ அம்மாவிடமோ சொல்லாமல் விட்டது ஏன்? தயக்கம் ஏன்? அவர்களும் என்னிடம் கேட்காமல் விட்டது ஏன்? ஆண்களுக்குள் நடைபெறும் மாற்றங்கள் முக்கியத்துவமானவை இல்லையா?

மீராபாரதி

’பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம்: ஒரு ஆண் நிலை நோக்கு’ நூலில் வெளியான குறிப்பு.
 

 

https://vithaikulumam.com/2021/03/01/2021-03-01/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி – 09 -நவாலியூர் தாமா

by vithaiMarch 5, 20210108
09-960x968.jpg

நான் சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் துஷ்பிரயோகத்துக்கு சிகிச்சை பெற சென்ற போது தான் 18 வயதுக்குள் நடைபெற்ற எல்லா துஷ்பிரயோகங்களும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என அறிந்தேன். 16 வயதில் நான், எனது வயதுக்கு மீறிய உயரம் கொண்டவளாயிருந்தேன். வயது வந்த நபர் போல் குடும்ப பொறுப்புகள் பலவற்றைச் சுமந்தேன். 1995 ஆம் ஆண்டு யாழ் இடம்பெயர்வில் தம்பியையும் வீட்டுச் சாமான்களையும் பொறுப்புடன் சுமந்து சென்றேன். என்னையும் விட நான்கு வயது கூடிய பெரியம்மா மகளை விட உயரமாகவும் அவருக்கு சமனாகவும் வாழ்ந்தேன். என் 16 வயதில் நடந்த பாலியல் துஷ்பிரயோகமும் சிறுவர் துஷ்பிரயோகம் என்பதை 39 வயதில் அறிந்து கொண்டேன்.

பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் என்னைக் கட்டிப் பிடித்தபோது நான் அமைதியாக இருந்தேன். நான் தடுத்து நிறுத்தவில்லை. ஆகவே இது துஷ்பிரயோகமா? என்று எனது சிகிச்சை நிபுணரிடம் கேட்டபோது, அவர் “பலர் வன்முறை நடக்கும் போது உறைந்து போகின்றனர். இது சாதாரண விடயம். மௌனம் சம்மதத்துக்கு அடையாளம் இல்லை. அனுமதியின்றி யார் எதை செய்தாலும் குற்றம் தான். பல தடவைகள் பயத்தின் காரணமாக குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தை அனுமதிக்கிறது. ஆகவே குழந்தை மீது யார் கை வைத்தாலும் அது தண்டனைக்குரிய குற்றம். அதை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது” என்று பதிலளித்தார்.

என்னைப் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய நபர் என்னை விட 7 வயது கூடிய உறவு முறையானவர். நான் மிகவும் அமைதியானவர். ஒரு முறை எதேச்சையாக அவரது காதலியின் படத்தை கண்டுவிட்டேன். அவர் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றதும் நானும் யாரிடமும் சொல்லவில்லை. அதன் பிறகு அவர் ஒருநாள் மாலைநேரம் நடக்கக் கூப்பிட்டார். எனக்கு மறுப்பு சொல்ல அக்காலத்தில் தெரியாது. அத்துடன் உறவினர்களுடன் நட்பாக பழகியதால் துணிந்து சென்றேன். திடீரென்று அவர் கைகள் என் உடலில். வலைக்குள் சிக்கிய மான் போல் என்ன செய்வதென்று தெரியாது அமைதியாகிவிட்டேன்.

இன்று Thai massage சிகிச்சையை முறையாக பெற்றிருப்பதால், அன்றைய அனுபவத்தை ஒரு நல்ல மசாஜ் இலவசமாக கிடைத்தது என்று விபரிக்க முடிகிறது. ஆனால் அன்று அதை ஒரு மசாஜ் என்று பெருமையாக எண்ண முடியவில்லை. மாறாக அருவருப்பும், ஆத்திரமும், பயமும் என்னை ஆக்கிரமித்தது. என் உடல் மீது எனக்கு வெறுப்பாக இருந்தது.

உறைந்து போன என்னை மனம் திறந்து பேச வைத்தது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானவர்களுக்கான சிகிச்சை. இன்றும் அன்று உடுத்த உடையும், அவர் கைகள் பட்ட இடமும் ஞாபகத்தில் உண்டு. Body keeps the score. என்ற புத்தகத்தைப் படித்தபோது எமது உடல் அதில் ஏற்பட்ட பாதிப்புக்களை எவ்வாறு காலாகாலமாக சேமித்து வைத்துள்ளது என்பதை புரிந்து கொண்டேன். எவ்வாறு அந்தப் பாதிப்புக்கள் ஒரு நோயாக உருவாகிறது என்பதை அறிந்து கொண்டேன். எனது உணர்ச்சிகள் யாவும் எனது உடம்பில் மறைந்து காணப்படுகிறது. சிகிச்சையின் போது அவற்றை இனங்கண்டு ஆரோக்கியமான முறையில் பராமரித்து குணப்படுத்த முடிந்தது. நினைவுகளை ஒருநாளும் அழிக்க முடியாது. ஆனால் அந்த நினைவுகளுடன் ஒன்றித்து வாழப்பழகும் போது நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

அவர் செய்தது பிழை என்று அன்று எனக்கு தெரிந்தாலும் அது பிழை என கூற தைரியம் இருக்கவில்லை. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகள் என குற்றம் சுமத்தும் சமுதாயத்தில் ஓர் ஆணை குற்றம் சுமத்த என்னால் முடியவில்லை. பெண் மீது குற்றம் கண்டுபிடிக்கும் என் சமுதாயத்தின் முன் ஒரு குற்றவாளியாக நிற்கப் பயந்தேன். தப்பைத் தண்டிக்காது ஒர் ஆண் தப்பு செய்வதற்கு காரணம் ஒரு பெண் என பழி சுமத்தும் இச் சமுதாயத்துக்குப் பயந்து வாழ்ந்தேன். பதின்வயதில் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டேன். எனது மனச்சோர்வுக்கு ஈழப் போரும் ஒரு காரணமாக அமைகிறது.

என்னை ஆண் தொட்டுவிடுவானா என்ற மனப் பயம் என்றும் எனக்கு இருந்தது. உறவினர்களை ஒதுக்கிவிட்டு வாழ்க்கையை ஆரம்பித்தேன். என்னை அவர்கள் குற்றவாளியாக பார்க்கக்கூடாது என்ற காரணத்துக்காக மௌனத்தைப் பேணினேன். ஒரு காலத்தில் என் வாழ்வை சீர் குலைத்தோர் அழிந்து போகவேணும் என மனமாரப் பிரார்த்தித்தேன். அவர்கள் குழந்தைகள் என்னை மாதிரி கஷ்டப்படணும் எனவும் விரும்பினேன். ஆனால் இன்று பௌத்த தியானங்களில் ஈடுபடும் நான் எதிரியை நேசிக்கப் பழகிக் கொண்டுள்ளேன். அத்துடன் வரலாற்றில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி, வன்முறையையும், துஷ்பிரயோகங்களையும் தொடர்கதையாக வளர்த்துள்ளனர். ஆகவே எனக்கு நிகழ்ந்த துஷ்பிரயோகத்தைக் குணப்படுத்தி, நல்லதை நினைத்து, இளம் சந்ததியினரை விழிப்புணர்வூட்டி பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்கிறேன்.

அநியாயம் செய்தவர்களின் அடையாளத்தைப் பாதுகாப்பது எனது கடமை இல்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். குடும்பத்தினரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானேன் என்று கூறும்போது குடும்ப மானம் கப்பல் ஏறிப் பறப்பதற்கு பொறுப்பு நான் இல்லை. தப்பு செய்யும்போது தப்பு செய்த நபரால் தான் குடும்பமானம் கப்பல் ஏறிப்பறந்து விட்டது. நிஜத்தை வெளிப்படுத்தும்போது எந்த ஒரு பாதிப்பும் யாருக்கும் இல்லை என்பதில் உறுதியாக உள்ளேன்.

குடும்பமானத்துக்காக அமைதியாக இருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று பாலியல் துஷ்பிரயோக உண்மையை பகிரங்கமாகப் பேசக்கூடிய ஒரு சமுதாயம் உருவாகிவிட்டது. அதைமதித்து ஏற்றுக் கொள்ளும் சமுதாயமும் உருவாகிறது. மிகுந்த துணிவுடனும் உரிமையுடனும் எனது வாழ்க்கை வரலாற்றையும் அதில் எனக்கு நிகழ்ந்த துஷ்பிரயோகங்களையும் கூறுவதில் பெருமிதம் அடைகிறேன்.
 

https://vithaikulumam.com/2021/03/05/20210304/

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி -10- நவாலியூர் தாமா

by vithaiApril 6, 2021
spacer.png

என் அம்மாவின் சிறிய தந்தை பார்வை அற்றவர். அவர் வாத்தியக் கருவிகளை (மவுத் ஓகன், மெலோடிக்கா, எக்கோடியன், வயலின்) மிகவும் திறமையாக வாசிக்கக்கூடியவர். நெசவு ஆலையில் கைத்தறியுடன் நெசவு தொழிலில் ஈடுபட்டுவந்தார். கதிரைகளையும் பின்னுவார். ஒரு மனிதரின் கையைப் பிடித்து அந்நபரின் குரலைக் கேட்காமலே அவர் யார் என அடையாளம் சொல்லக்கூடியவர். பார்வை அற்ற அவரிடம் இப்படியாக நிறையத் திறமைகள் இருந்தன.

எனது பெரிய தாயுடன் வாழ்ந்துவந்த அவர் எனக்குப் பத்து வயதானபோது எமது வீட்டில் எம்முடன் வாழத் தொடங்கினார். அவர் சுயமாக தனது தேவைகளை தானே பூர்த்தி செய்தவர். யாரையும் எதற்கும் எதிர்பார்க்கவில்லை. கிணற்றில் தானே தண்ணீர் அள்ளிக் குளித்தார். தனது ஆடையை தானே துவைத்தார். தன்னாற்றல் மிக்க ஒருவராகக் காணப்பட்டார்
நமது குடும்பம் கிறீஸ்தவ மதத்தை பின்பற்றினாலும் அவர் சுவாமி இராமகிருஷ்ணரின் பக்தன். வானொலியூடாக ஆன்மிக சொற்பொழிவுகளைக் கேட்பார். புத்தகத்தை வாசிப்பதற்கு அவர் மற்றவர்களை எதிர்பார்த்து காத்தருந்தார். அவருக்கு நான் சுவாமி விவேகானந்தரின் புத்தகங்களை வாசித்தேன். பைபிளை மட்டும் கிறீஸ்தவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும் என்ற போதும் மனித நேயம் காரணமாக அவருக்கு வாசித்தது இன்றும் எனது ஆன்மீக வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கிறது.

எனது மாதவிடாய் சக்கரம் பதினொரு வயதில் ஆரம்பித்ததால் பத்து வயதில் என் மார்புகள் விருத்தியடைய தொடங்கிவிட்டன. பார்வையற்றவருக்கு அருகில் செல்லும்போது அவர் என் மார்பபை இறுக்கிப் பிடிப்பார். எனக்கு அந்தரமாகவும், வெறுப்பாகவும் இருந்தது. அவருக்குக் கண் தெரியாததால் அவ்வாறு அவர் செய்வது பிழை என்று என்னால் நினைக்க முடியவில்லை. எனக்கு அவர் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தை இறுக்கி பிடித்தது வேண்டும் என்று செய்வதாகத் தோன்றினாலும், பார்வை அற்றவர் தெரியாது தவறுதலாகச் செய்வதை பிழை என நினைப்பது தப்பாகப்பட்டது. எனக்கு நடப்பது என்ன என தெரியாது குழம்பி இருந்தேன். அதேநேரம் அருவருப்பாக இருந்தது. அவருக்குக் கிட்ட போகப் பயமாகவும் இருந்தது. நான் பார்வை அற்றவரை குற்றம் சாட்டினால் அதற்கு தண்டனையைப் பெறுவேன் என்ற பயத்தில் அமைதியாக இருந்தேன். அதே நேரம் மார்பை அவர் தெரியாது தொடுவதை பொருட்படுத்த வேண்டாம் என்றே குடும்பத்தினர் கூறுவர் என நினைத்தேன். அத்துடன் யாரும் எனக்கு ஆதரவு தரமாட்டார்கள் என்ற காரணத்தாலும் அமைதியாகவே என்றும் இருந்தேன்.
2020 ஆம் ஆண்டு நான் ஒரு ஸ்பானிஷ் பெண்ணைச் சந்தித்தேன். அவர் தனது பார்வையற்ற தந்தையால் சிறுவயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக கூறினார். என்னால் அவர் கூறியதை நம்ப முடியவில்லை. எவ்வாறு பார்வை அற்ற நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யமுடியும்? எவ்வாறு பார்வையற்ற நபரால் உடல் உறுப்புக்களை அடையாளம் காணமுடியும்? இப்படியான கேள்விகளே எனக்குள் எழுந்தன. அவர் எழுதிய சுயசரிதைப் புத்தகத்தை வாசித்தபோதுதான் அவர் எவ்வாறு பார்வையற்ற தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம் அடைந்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

பார்வை அற்ற நபருக்கும் பாலியல் உணர்ச்சிகள் உள்ளன. அவர்களும் தமது பாலியல் துஷ்பிரயோகம் செய்யலாம் என்பதை அறிந்து கொண்டேன். எனக்கு ஏற்பட்டது பாலியல் துஷ்பிரயோகம் என்பதையும் ஏற்று கொண்டேன். எமது உடம்பை நாம் விரும்பும் நபர் எமது அனுமதியின்றி தொடுவதும் கூட பாலியல் துஷ்பிரயோகம் தான்.

குறிப்பு
சிறுவர் மீது நிகழ்த்தப்படும் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் விதைக் குழுமம் சிறுவயதில் பாலியல் துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டவர்களின் சாட்சியங்களைப் பதிவுசெய்து வந்தது. பாதிக்கப்பட்டவர்கள் துணிந்து அவை குறித்துப் பேசவேண்டும் என்பதே விதை குழுமத்தின் நோக்கமாக இருக்கின்றது. இதுவரை 10 சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றை முன்வைத்து தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் விதை குழுமம் தொடர்ந்து செயற்படும்.

 

https://vithaikulumam.com/2021/04/06/20210405/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.