Jump to content

கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -2)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும்,…..நெடுந்தீவின் அடிப்படை அடையாளங்கள் இன்னும் மாறாது அப்படியேயிருந்தன !

கற்களால் அடுக்குப்பட்ட  பயிர் வேலிகள், எவரோ தாட்டு விட்டுப் கிழங்கு பிடுங்க மறந்து போன பனம் பாத்திகளிலிருந்து முளைத்த  பனங்கூடல்கள், மாட்டு வண்டித் தடங்கள் என்பன இன்னும் இருந்தன!

முள்ளிவாய்க்காலில் மரணித்துப் போனவர்களில், விகிதாசார அடிப்படையில் பார்த்தால், நெடுந்தீவு தான் அதிக விலை கொடுத்தாக இருக்கும் என்பது சந்திரனின் அனுமானமாக இருந்தது! ஸ்ரீ மாவோ அம்மையார்  கொண்டு வந்த  மரவள்ளி  வளர்க்கும் திட்டத்தினாலும் , முத்தையன்கட்டுப் பிரதேசத்தில் இலவசக்  காணி பகிர்ந்தளிப்புத் திட்டத்தினாலும் கவரப்பட்டு அங்கு சென்றவர்களில்  பலரும் , அவர்களது சந்ததியினரில் சிலரும் அவர்களுக்குள் அடங்குவர்!  குறிப்பாக, இசைப்பிரியா போன்றவர்களின்  இழப்பு அவனை மிகவும் பாதித்திருந்தது! 

தம்பி, இஞ்சையோ  நிக்கிறியள் என்று கேட்ட படியே, குறிகாட்டுவானில் வள்ளத்துக்கு வரும்படி கூப்பிட்ட அந்தப் பெரியவர் அருகில் வந்தார்!   வந்தவர், எங்க தங்கப் போறீங்கள் தம்பி என்று கேட்டார் ! மகா வித்தியாலயத்துக்குப் பக்கத்தில , எங்கையாவது ஒரு ஹோட்டல்ல நிக்கலாம் எண்டு யோசிக்கிறன்! தம்பி, இப்ப வெளிநாட்டுக் காசு புழக்கத்துக்கு வந்த பிறகு எல்லாம் அவையின்ர ஹோட்டல்களாய்த் தான் இருக்குது! தம்பிக்குக் கனநாள் நிக்கிற பிளானோ? அந்தப் பெரியவரது பேச்சின்  சாராம்சம்  அவனுக்குள் ஓடி வெளிப்பதற்கு அவனுக்குக் கொஞ்சக் கால அவகாசம் தேவைப் பட்டது!  அவையின்ர என்றால்…...ம்ம்ம்….இன்னும் நெடுந்தீவு மாறவேயில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்! அது சரி…..இவருக்கு எப்படித் தெரிந்தது , நான் அவையின்ர ஆக்களில் ஒருவன் இல்லையென்று…! அவன் யோசிக்கும் போதே பெரியவர் தொடர்ந்தார்! 

தம்பி, நெழுவினிப்  பிள்ளையார் கோவிலடிக்குப் பக்கத்தில ஒரு வீடு இருக்குது! வீட்டுக்காரர் எல்லாரும் வெளிநாட்டிலை தான் இருக்கினம்! இப்ப வீடு சும்மாதான் கிடக்குது! உங்களுக்கு விருப்பமெண்டால் தாராளமாக அங்கு நிற்கலாம்! வேணுமெண்டால் என்னிட்ட ஒரு மோட்டச்  சைக்கிளும் இருக்குது! உங்களுக்குத் தேவையான இடத்தில நான் கொண்டுபோய்  இறக்கி விடுவன் என்றும் கூறினார்! சரி பெரியவர், எவ்வளவு காசு எண்டும் பேசுவமே என்று சந்திரன் சொல்லவும், என்னடா தம்பி….மீன் கரைஞ்சா எங்க போகப்போகுது….ஆணத்துக்கை தானே கிடக்கப் போகுது!  நீங்களாய்ப் பாத்துத் தாறதைத் தாங்கோவன் எண்டு சொல்லவும் சந்திரனுக்கு கொஞ்சம் உதறலெடுக்கத் தொடங்கியது! ஒரு வேளை பெரியவர் தன்னைப் பற்றி ஏதாவது மணந்து கிணந்து இருப்பாரோ? இருந்தாலும் குறுக்கால வந்த தெய்வத்தையும் திருப்பி அனுப்ப மனம் வரவில்லை! பெரியவரே, நான் நீங்கள் சொல்லுற இடத்தில நிக்கிறன்! ஆனால் ஒரு கொண்டிசன்! எனக்கு உங்கட பழைய சைக்கிள் ஏதாவது இருந்தால் அதைத் தந்தால் போதும்! சாப்பாட்டுக்கு கிட்டடியில கடையள் ஏதாவது இருக்கும் தானே...என்று கேட்கவும்….என்ன தம்பி நீர், நாங்கள் என்னத்துக்கு இருக்கிறம்? நீர் என்ன விருப்பம் எண்டு சொல்லும் , நான் செய்விச்சுத் தாறன் எண்டு சொல்ல சந்திரனும் சம்மதித்தான்! இருந்தாலும் , பெரியவரை ஒரு முறை ரெஸ்ற் பண்ணிப் பார்க்கவேணும் என்று நினைத்தவனாக, ஐயா….ஒருக்கால் ஈச்சங்காட்டுப் பக்கம் போகவேணும், கொண்டு போய் விடுவீங்களோ எண்டு கேட்கவும் , பெரியவர் திடுக்கிட்டவர்  போலச் சந்திரனைப் பார்த்தார்! தம்பிக்கு இடங்கள் தெரியுமோ என்று மிகவும் ஆச்சரியமாகக் கேட்கவும்….இவனுக்கு கொஞ்சம் மனதில் நிம்மதி வந்தது! இல்லை ஐயா, எனது நண்பனொருவன் தன்னுடைய பழைய வீடடைப் பார்த்து வரும்படி சொல்லியிருந்தான்! ஈச்சங்காட்டில எவடம்?  விளாத்தி மரத்துக்கு கிட்டவாக! சரி, எதுக்கும் இதை வைச்சிருங்கோ எண்டு சொல்லி கொஞ்சக் காசை அவரிடம் கொடுக்க,  அவர் என்ன தம்பி இப்பவே எண்டு சொல்லிக் சிரிக்கப் பெரியவருக்கு கடவாய்ப்பற்கள் ஒன்று கூட இல்லை என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது! உடனேயே அங்கே நின்ற பெடியன் ஒருவனைக் கூப்பிட்டுத் தம்பி இந்த ஐயாவைக் கொண்டு போய் ஈச்சங்காட்டிலே இறக்கி விடு என்று கூற…..அவனும் பின்னால் திரும்பிப் பார்த்து விட்டுத் தான் தான் அந்த ஐயா என்று உறுதி படுத்திய பின்னர் மோட்டார் சைக்கிளில் லாவகமாக ஏறி அமர்ந்து கொண்டான்!

ஈச்சங்காட்டில் ஒரு ஈச்ச மரங்களையும் இப்போது காணவில்லை! விளாத்தி மரத்தடியில் வீடு இருந்த இடம் வெறிச்சோடிப்போய்க் கிடந்தது! அந்த விளாத்தி மரம் மட்டும் இன்னும் அப்படியே நின்றது! தனது மூதாதைகளின் மூச்சுக்காற்றை இந்த மரமும் சுவாசித்திருக்கும் என்ற நினைவே...அவனுக்கு இதமாக இருந்தது!  இங்கு தான் இந்தக் கதையின் கதாநாயகியை அடிக்கடி சந்திரன் இரகசியமாகச் சந்திப்பதுண்டு! இவன் கதைகள் சொல்லும்போது விழிகளை அகல விரித்தபடியே...அவள் கேட்டுக் கொண்டிருப்பாள்!

இந்த விளாம்பழங்களை யானை எப்படிச் சாப்பிடும் எண்டு உனக்குத் தெரியுமா? இல்லை என்று அவள் தலையாட்ட ‘ஒரு சின்ன ஓட்டை மட்டும் போட்டுவிட்டு, அதன் உள்ளடையை அப்படியே உறிஞ்சி எடுத்து விடும்! அப்போ விதைகளை என்ன செய்யும்? அதை அப்படியே பழத்துக்குள் விட்டு விடும்! அவள் , அது உனக்கெப்படித் தெரியும்? சாப்பிட்ட பழத்தை யானை ஒருமுறை குலுக்கிப் பார்க்கும்! அப்போது அருகில் நிற்பவர்களுக்குக் கிலுக்கட்டி கிலுக்குவது போல ஒரு சத்தம் கேட்கும்!  இதிலிருந்து உனக்கு என்ன தெரிகின்றது?  

அவளின் பதில் உடனடியாகவே வந்தது!

யானை தனது அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு….விதைகளைச் சாப்பிடாமல் அப்படியே விட்டு விடுகிறது…! அடுத்து வரும் மழைக்கு விளாம்பழத்தின் கோது உடைய விளாத்தி மரங்கள் முளைக்கும்!

இப்படியான பதில்கள் தான்...சந்திரனுக்கு அவளிடம் ஒரு விதமான ஈர்ப்பை உருவாக்கியிருக்க வேண்டும்!

அவளை முதலில் சந்தித்த சம்பவம் இன்னும் தெளிவாகவே அவனது நினைவில் இருந்தது!

வீட்டில் விருந்தினர்கள் வந்திறங்கியிருந்தார்கள்!  பொழுது பின்னேரமாகி விட்டிருந்தது! சந்திரனின் தாயார் சந்திரனிடம் கொஞ்சம் காசைக் கொடுத்துத் தம்பி, கடற்கரைக்குப் போய் மீன் ஏதாவது வாங்கிக் கொண்டு வா என்று கூற….அம்மா உங்களுக்கென்ன விசரே, இந்த நேரத்தில கடற்கரையிலே ஒரு வள்ளமும் வராது என்று பின்னடிக்க அம்மாவும், ஆராவது வீச்சு வலைக்காரர் நிப்பாங்கள், போய்ப்பார் என்று சொல்லத் தயக்கத்துடன் கடலுக்குப் போனவனுக்கு ஆச்சரியமாக இருந்தது! அவன் அம்மா சொன்ன மாதிரியே ஒரு வீச்சு வலைக்காரன் நின்று கொண்டிருந்தான்! அவனது இடுப்பில் தொங்கிய பறியும் காற்றில் அசையவில்லை! ம்ம்ம்...பறிக்குள்ள என்னவோ பாரமான சாமான் என்னவோ கிடக்குது! பிரச்சனை என்னவென்றால், அவன் கரைக்கு வரும் வரை பார்த்துக் கொண்டிருந்தால், கரையில் கன சனம் நிண்டு...மீனுக்கு விலையைக் கூட்டிப்  போடும்!  கடல் கொஞ்சம் வத்தாக இருந்ததால்...மீன் காரனிடம் நடந்தே போக முடிவு செய்தான்! மீன் காரனுக்கு கிட்டப் போனதும் அவனது அதிஸ்ட்டத்தை நினைத்து...தனது  முதுகில் தட்டித் தன்னைத் தானே பாராட்டியும் கொண்டான்! ஆம், அந்த மீன் பறிக்குள் ஒரு பால் சுறாவும் இருந்தது! பால் சுறா, அதுவும் ஆண் சுறா எல்லாருக்கும் பிடிக்குமென அவனுக்குத் தெரியும்! பின்னேரமானதால் ….குழல் புட்டும் அவித்து சுறா வறையும் வைக்க அந்த மாதிரி இருக்கும்! விலையும் சரியாக இருக்கவே...வாலைப் பிடித்த படி...அந்தப் பால் சுறாவைத்...தண்ணீருக்குள் விட்ட படி இழுத்துக் கொண்டு கரைக்கு நடந்து வந்தான்! அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன! ,முதலாவது சுறா பழுது படாமல் இருக்கும்! இரண்டாவது…..தமிழர்களுக்கே ,,தனித்துவமான குணமான...ஆற்றையும் கண்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கமும் தான்!  

கரைக்கு ஒரு இருபதடி தூரம் கூட இருக்காது! ‘கிளிக்’ என்றொரு சத்தம் கேட்டது!

தண்ணீரில் ஒரு வட்டம் போட்டுவிட்டுப்  பால் சுறா, அவைனப் பார்த்துக் கண்ணை ஒரு முறை அடித்து நன்றி சொல்லி விட்டுப் போயே விட்டது!

இப்போது அவனிடம் காசுமில்லை! கறிக்குச் சுறாவுமில்லை!

கண்ணீரும் கட்டுப்படுத்த முடியாமல்…...வரத் தொடங்கியது!

அப்போது ‘கிளுக்” என்று யாரோ கரையில் நின்று சிரிப்பதும் தெளிவாகச் சந்திரனுக்குக் கேட்டது!

 

அடுத்த பகுதியில் தொடரும்….!

 

  • Like 21
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் குழல் புட்டும் பால் சுறா வறையும் சாப்பிட்டு எத்தனை காலமாகிவிட்டது, ஞாபகங்களை கிளறிவிட்டீர்கள்😪, நன்றாக போகின்றது தொடருங்கள்

Edited by உடையார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் காரைநகர் nrtb யில் வேலை செய்யும் பொழுது இரவு வேலை முடிந்து காலையில் போகும்போது பொன்னாலை பாலத்தில் இரண்டு மூன்று பேராக இறங்கி அங்கு வலை போடுபவரை அழைத்து பறியில் இருக்கும் மீன்களை (எல்லாம் கலந்து இருக்கும்) வாங்கி தெருவில் கொட்டி பிரித்து எடுத்து கொண்டு போகிறனாங்கள். அது ஒரு கனாக்காலம்.......நீங்கள் தொடருங்கள்......சிரிக்கிறது தேவதையாகத்தான் இருக்கும்.....!  😂  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

ஆம், அந்த மீன் பறிக்குள் ஒரு பால் சுறாவும் இருந்தது! பால் சுறா, அதுவும் ஆண் சுறா எல்லாருக்கும் பிடிக்குமென அவனுக்குத் தெரியும்! பின்னேரமானதால் ….குழல் புட்டும் அவித்து சுறா வறையும் வைக்க அந்த மாதிரி இருக்கும்!

சுறா கறி அல்லது வறை மிகவும் சுவையானது.

பிள்ளைகள் பிறந்திருந்த நேரங்களில் பால் சுரப்பதற்காக நிறைய சுறைவறை கொடுப்பார்கள்.
மனைவியை விட நான் கூடுதலாக சாப்பிட்டுவிடுவேன்.

இப்போ இடைஇடையே செய்து சாப்பிட்டாலும் துருவிய தேங்காய்ப்பூ பெயருக்கு போடுவதால் வறையே சுவை இல்லாமல் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒரு  சிரிப்புக்கு எத்தனை ராட்சியங்கள்  வீழ்ந்து போகின?

நாம் எம்மாத்திரம்??

தொடருங்கள் அண்ணா

பழையதை நிபப்பது  தானே  இனி  எம் வாழ்வில் வசந்தம்??😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அவனிடம் காசுமில்லை! கறிக்குச் சுறாவுமில்லை!    

கையறு நிலை ...கை கொடுக்க வந்த சிரிப்பு ...தொடருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு சமூக கதை. தொடருங்கள் புங்கை....👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயல்பான நடையில் மண் மணக்க நல்ல கதையோட்டம். 'அடுத்த பகுதியில் முடியும்' என்று பகுதி 1 ல் அறிவித்ததும் முடிக்க வேண்டாமே எனத் தோன்றியது. இப்போது 'தொடரும்' என்று போட்டதும் ஆறுதல். இதை நீங்கள் தொடராகவே எழுதலாமோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கதையில் எனது ஊர் வாசனை அடிப்பதோடு பால்சுறாவும் குழல் புட்டும் வந்து இனிக்கிரது.

தொடருங்கள் அருமை இனிமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு வாசிக்கும் பொழுது மனக்கண்ணில் தீவுப்பகுதிகள் வந்து போகின்றது....உங்கன்ட கதையில் சுறாவும் புட்டும்  என்று வாசித்தவுடனே அதை சாப்பிட வேணும் என்ற ஆசை வந்திட்டுது....உடனே நம்ம சிட்னி யாழ்ப்பாண(பென்டில் கில்) டவுனில் போய் வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டு விட்டோம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2021 at 22:59, உடையார் said:

புங்கையூரன் குழல் புட்டும் பால் சுறா வறையும் சாப்பிட்டு எத்தனை காலமாகிவிட்டது, ஞாபகங்களை கிளறிவிட்டீர்கள்😪, நன்றாக போகின்றது தொடருங்கள்

வணக்கம் உடையார்!

குழல் புட்டும் சுறா வறையும் யாருக்குத் தான் பிடிக்காது?

உங்கட கடல் பக்கம் பால் சுறா கிடைக்குமா? சிட்னிப் பக்கம் பெரிய சுறாவின் சின்னக் குட்டிகளை அதிக விலைக்கு விற்பார்கள்!

சில வேளைகளில் ஆசைக்காக வாங்கினாலும்...சுறா உணவுச் சங்கிலியின் அதி உச்சத்தில் உள்ள படியால்...அதிக மேக்கூரி ( இரசம்) இருக்குமெனப் பயமுண்டு..! 

வரவுக்கும், கருத்துக்கும் நன்றி....!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2021 at 23:38, suvy said:

நான் காரைநகர் nrtb யில் வேலை செய்யும் பொழுது இரவு வேலை முடிந்து காலையில் போகும்போது பொன்னாலை பாலத்தில் இரண்டு மூன்று பேராக இறங்கி அங்கு வலை போடுபவரை அழைத்து பறியில் இருக்கும் மீன்களை (எல்லாம் கலந்து இருக்கும்) வாங்கி தெருவில் கொட்டி பிரித்து எடுத்து கொண்டு போகிறனாங்கள். அது ஒரு கனாக்காலம்.......நீங்கள் தொடருங்கள்......சிரிக்கிறது தேவதையாகத்தான் இருக்கும்.....!  😂  

பொன்னாலைப் பக்கம் கறையான் பிட்டி ஒன்று ஒரு இடமிருந்தது! வீட்டுக்கு வீடு கள்ளுக் கொட்டல்கள் வைத்திருப்பார்கள்!

ஒரு பனங் குத்தியில் இருக்க வைத்து...பெரிய சிரட்டைகளில் ஊத்தித் தருவார்கள்! அப்போது ஆட்டிறைச்சி, மீன் பொரியல் போன்றவற்றை கொறிப்பதற்குத் தருவார்கள்! அந்த மீன்கள் நிச்சயம் பொன்னலை மீன்களாகத் தான் இருந்திருக்கும்!

நாங்கள் அனேகமாக, யாழ்ப்பாணத்திலிருந்து ஊருக்குப் போகும் போது, பண்ணைப் பாலத்தில் 'போக்குகள்" (தண்ணீர் ஒரு பக்கமிருந்து மற்றப் பக்கம் போகும் குழாய்கள்) மீது குந்தியிருந்து தூண்டில் போட்டுக்கொண்டிருப்பார்கள்! அவர்களிடமும் எல்லா வகையான மீன்களும் கலந்திருக்கும்! நீங்கள் சொன்னது போல...அது ஒரு கனாக் காலம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2021 at 00:29, ஈழப்பிரியன் said:

சுறா கறி அல்லது வறை மிகவும் சுவையானது.

பிள்ளைகள் பிறந்திருந்த நேரங்களில் பால் சுரப்பதற்காக நிறைய சுறைவறை கொடுப்பார்கள்.
மனைவியை விட நான் கூடுதலாக சாப்பிட்டுவிடுவேன்.

இப்போ இடைஇடையே செய்து சாப்பிட்டாலும் துருவிய தேங்காய்ப்பூ பெயருக்கு போடுவதால் வறையே சுவை இல்லாமல் இருக்கும்.

உண்மை தான் ஈழப்பிரியன்!

நான் சொல்லும் பால் சுறா நீங்கள் வசிக்குமிடத்தில் இருக்குமோ தெரியாது! இந்த வகைச் சுறா ஒரு நாளும் மிகப் பெரிதாக வளர மாட்டாது!

அவுஸில் புதிதாக வந்த நேரம்..இங்குள்ள கடற்கரைகளில்...சுறா கவனம் என்று எச்சரிக்கை போட்டிருப்பார்கள்!

சீரியசாக ஒரு நாளும் எடுப்பதில்லை! பின்னர் ஒரு நாள் ஒரு சுறாவைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது!

சூரன் வாகனம் என்று....ஊரில் ஒரு வாகனம் கோவில்களில் கொண்டு திரிவார்களே தெரியுமா?

அந்த வாகனத்தின் கண்களைப் போலவே..மிகவும் பெரிதான கண்கள்!

அதன் பின்னர் ஆழமான கடல்களில் இறங்குவதே...இல்லை!😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க மிச்ச கதைய காணல  சுறாவோடு ஆள் காணாமல் போய்ட்டாரா தெரியல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2021 at 01:47, விசுகு said:

இந்த ஒரு  சிரிப்புக்கு எத்தனை ராட்சியங்கள்  வீழ்ந்து போகின?

நாம் எம்மாத்திரம்??

தொடருங்கள் அண்ணா

பழையதை நிபப்பது  தானே  இனி  எம் வாழ்வில் வசந்தம்??😍

வணக்கம், விசுகர்!

பழையதை நினைப்பது தான் இனி எமது வாழ்வில் வசந்தம்!

அப்படியெல்லாம் இல்லை என்று தான் நினைக்கிறேன்!

எனது கருத்துப் படி வாழ்வு என்பது அந்த நிமிடத்தில் வாழப்பட வேண்டும்!  நாளை..நாளை என்று பின்போட்டுக்கொண்டு போனால், ஒரு நாளும் அந்த நாளை வரப்போவதில்லை!

இதை உங்கள் வீட்டுக்குக்கிட்ட வசித்த ஆசிரியை ஒருவர் தான் எனக்குக் கூறி விளங்கப் படுத்தினார்! அவர் இங்கு விடுமுறையில் வந்திருந்த போது, பல இடங்களுக்கு அழைத்துக் கொண்டு சென்றேன்!

பணமிருக்கின்றது, வசதியுமிருக்கின்றது. எனினும் உடம்பில் அதை அனுபவிக்கும் வலுவில்லையே தம்பி..!

எதையும் உடம்பில் வலுவிருக்கும் போதே அனுபவித்து விட வேண்டும்!

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி, விசுகர்!

On 5/3/2021 at 02:36, நிலாமதி said:

 

 

அவனிடம் காசுமில்லை! கறிக்குச் சுறாவுமில்லை!    

கையறு நிலை ...கை கொடுக்க வந்த சிரிப்பு ...தொடருங்கோ

நன்றி....நிலாக்கா!

உடனுக்குடன் பதிலெழுதத் தான் முயற்சிக்கிறேன்! நேரம் வெகு விரைவாக ஓடி விடுகின்றது!

On 5/3/2021 at 09:41, சுப.சோமசுந்தரம் said:

இயல்பான நடையில் மண் மணக்க நல்ல கதையோட்டம். 'அடுத்த பகுதியில் முடியும்' என்று பகுதி 1 ல் அறிவித்ததும் முடிக்க வேண்டாமே எனத் தோன்றியது. இப்போது 'தொடரும்' என்று போட்டதும் ஆறுதல். இதை நீங்கள் தொடராகவே எழுதலாமோ ?

வணக்கம் திரு. சு.ப. சோமசுந்தரம்!

நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் தொடர எண்ணியிருக்கின்றேன்!

மிக்க நன்றி..!  

On 6/3/2021 at 07:41, பசுவூர்க்கோபி said:

உங்களின் கதையில் எனது ஊர் வாசனை அடிப்பதோடு பால்சுறாவும் குழல் புட்டும் வந்து இனிக்கிரது.

தொடருங்கள் அருமை இனிமை.

நன்றி...பசுவூர்க்கோபி. தொடருகின்றேன்!

On 5/3/2021 at 07:51, குமாரசாமி said:

நல்லதொரு சமூக கதை. தொடருங்கள் புங்கை....👍🏽

வணக்கம், குமாரசாமி அண்ணை!

தொடருகின்றேன். நன்றி..!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/3/2021 at 16:05, putthan said:

அருமையான பதிவு வாசிக்கும் பொழுது மனக்கண்ணில் தீவுப்பகுதிகள் வந்து போகின்றது....உங்கன்ட கதையில் சுறாவும் புட்டும்  என்று வாசித்தவுடனே அதை சாப்பிட வேணும் என்ற ஆசை வந்திட்டுது....உடனே நம்ம சிட்னி யாழ்ப்பாண(பென்டில் கில்) டவுனில் போய் வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டு விட்டோம்..

யாழ்கவிக்கும் கொஞ்சம் கொடுத்திருக்கலாமே, புத்தன்..!😄

புத்தன், கனநாளைக்குப் பிறகு யாழில எழுதிற படியால், கொஞ்சம் சுறாவையும் புட்டையும் கொடுத்து சமாதானப் படுத்த நினைத்தேன்!

அண்டைக்கு ஒருநாள்  ரூங்கப்பியிலையும் ஒரு மீன்  கடையொன்டைக் கண்டனான்!

ஒருக்கா அங்கையும் வாங்கிப் பாக்க வேணும்!

வரவுக்கும் கருத்துக்கும் ,நன்றி..!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2021 at 13:46, புங்கையூரன் said:

யாழ்கவிக்கும் கொஞ்சம் கொடுத்திருக்கலாமே, புத்தன்..!😄

புத்தன், கனநாளைக்குப் பிறகு யாழில எழுதிற படியால், கொஞ்சம் சுறாவையும் புட்டையும் கொடுத்து சமாதானப் படுத்த நினைத்தேன்!

அண்டைக்கு ஒருநாள்  ரூங்கப்பியிலையும் ஒரு மீன்  கடையொன்டைக் கண்டனான்!

ஒருக்கா அங்கையும் வாங்கிப் பாக்க வேணும்!

வரவுக்கும் கருத்துக்கும் ,நன்றி..!

யாழ்கவி சைவப்பிரியர் ....

ரூங்காபி மீன் கடையில் இறாலை உடைத்தும் கொடுப்பார்கள்,
பென்டில் கில்லில் புதுசா மீன் கடையும் இறைச்சி கடையும் வந்திருக்கிறது (பணம் இல்லாமல் அவர்களுக்கு நான் விளம்பரம் செய்கின்றேன்...)😃

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்முன்னே காட்சிகள் விரிய உங்கள் ஊரும் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2021 at 07:53, புங்கையூரன் said:

தண்ணீரில் ஒரு வட்டம் போட்டுவிட்டுப்  பால் சுறா, அவைனப் பார்த்துக் கண்ணை ஒரு முறை அடித்து நன்றி சொல்லி விட்டுப் போயே விட்டது!

இப்படித்தான் வாழ்க்கையிலும்!! கிடைக்கும் என்று நினைப்பது எல்லாம் எப்போதும் கிடைக்காது!

தீவுப்பகுதி, குறிப்பாக நெடுந்தீவை பார்க்க வாய்ப்பு இந்தப் பிறப்பில் கிடைக்கும் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.