Jump to content

பரீட்சைகளையும் பட்டங்களையும் கடந்த கல்வி மறுசீரமைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

பரீட்சைகளையும் பட்டங்களையும் கடந்த கல்வி மறுசீரமைப்பு

-என்.கே. அஷோக்பரன்

மூலைக்கு மூலை, ‘உங்கள் பிள்ளைகளைப் பட்டதாரியாக்குங்கள்’ என்று விளம்பரங்கள் நிறைந்து வழியும் காலகட்டத்தில், ‘பட்டப்படிப்பு’ என்பது சமூக அந்தஸ்தின் முக்கிய குறிகாட்டியாக மாறியுள்ளது. 

இந்நிலையில், எப்படியாவது எமது பிள்ளையும் ஒரு பட்டத்தைப் பெற்றுவிட வேண்டும் என்ற பெற்றோரின் அவாவின் விளைவாக, அதிகளவிலான பட்டதாரிகள் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கல்வியின் இலக்கு, அறிவு என்பதற்குப் பதிலாக பட்டம் என்ற நிலையில்தான் கல்வித்துறை இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறது. 

எங்கு கேள்வி இருக்கிறதோ அங்கு, அதற்குரிய நிரம்பலை, வணிகம் வழங்குவது என்பது இயல்பானது. இந்தப் பட்டப்படிப்புக்கான அதீத கேள்வியை, நிரம்பல் செய்யவே, மூலைக்கு மூலை கல்வி வழங்கும் ‘தொழில் நிலையம்’கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவு, வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நிற்க!

இலங்கையில் மிகப்பெரிய வரங்களில் ஒன்று, ‘இலவசக் கல்வி’. இது எவ்வளவு பெரிய வரம் என்பதை உணர்ந்துகொள்ள, அயல்நாடான இந்தியாவின் கல்விக் கட்டமைப்புடன் ஒப்பு நோக்கினாலே போதும். ஆனால், இலங்கையின் இலவசக் கல்வியின் கல்வித் திட்டமும் முறைமையும் காலாவதியாகிப்போனதொரு நோக்கத்தில்தான் இன்றும் வேர்கொண்டுள்ளது. 

இலங்கையின் இன்றைய பாடசாலைக் கல்வியின் ஆரம்பம், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இங்கு உருவான ஆங்கில வழிக் கல்வி வழங்கும் பாடசாலைகள் ஆகும். குறிப்பாக, மிஷனரி பாடசாலைகளும் அவற்றுக்குப் போட்டியாக உருவான ஆங்கிலக்கல்வி வழங்கும் பௌத்தம், இந்து ஆகிய பாடசாலைகளும் ஆகும். 

பிரித்தானிய கொலனித்துவ காலகட்ட்தில் உருவான இந்தப் பாடசாலைகளின் நோக்கம், சுதேசிகளுக்குச் சமயம் கற்பித்தல், அடிப்படை ஆங்கில அறிவைப் புகட்டுதல், அடிப்படை கணித அறிவை ஏற்படுத்தல் ஆகியனவாகும். இதனூடாக, பிரித்தானியர் இங்கு ஆட்சியைக் கொண்டு நடத்துவதற்குத் தேவையான அடிப்படை ஆளணியை உருவாக்குதல் ஆகும்.  இதைச் சுருக்கமாக, ‘எழுதுவினைஞர்களை உருவாக்கும் கல்வி முறை’ என்பார்கள். 

இந்தப் பாடசாலைக் கல்வி மட்டுமே, அன்றைய காலத்தில், அரச உத்தியோகமொன்றைப் பெற்றுக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. வெகு சிலர், பிரித்தானியப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று, மேற்படிப்பை மேற்கொண்டார்கள். மேலும் சிலர், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைப் பெற்றுக்கொண்டார்கள். 

இத்தகைய மேற்படிப்பை மேற்கொண்டவர்கள், தத்தம் துறைகளில் தொழில்நிபுணர்களாகவும் பல்கலைக்கழக ஆசான்களாகவும் அரச நிர்வாகத்துறை உத்தியோகத்தர்களாகவும் ஆனார்கள். இதன் பாலாக, இவர்களின் சமூக அந்தஸ்து அதிகரித்தது. 

தொழில்நிபுணர்களுக்கான தேவை அதிகமாகவும், வழங்கல் குறைவாகவும் இருந்த காலகட்டத்தில், இவர்கள் பெருஞ்செல்வம் ஈட்டத்தக்கவர்களாக மாறினார்கள். இது, பட்டப்படிப்பு என்பது உயர் சமூக அந்தஸ்தையும் பொருளாதார வளங்களையும் வழங்கவல்லது என்ற எண்ணத்தைப் பரவலாக ஏற்படுத்தியது. இதுதான் ‘பட்டம்’ பெற வேண்டும் என்ற அவாவின் அடிப்படை. 

தான் பெறமுடியாத பட்டத்தை, எப்படியாவது தன் பிள்ளை பெற்றுவிட வேண்டும் என்றும், தான் பெற்றதை விட, அதிக பட்டங்களைத் தன் பிள்ளை பெற்றுவிட வேண்டும் என்றும், தான் பட்டம் பெற்ற பல்கலைக்கழகத்தைவிட, உயர் அங்கிகாரமுள்ள பல்கலைக்கழகத்தில் தன் பிள்ளை பட்டம் பெற்று விட வேண்டும் என்றும் கருதுவதால், பட்டத்துக்காக எவ்வளவு பணத்தையும் கொட்டியிறைக்க, பெற்றோர் தயாராக இருக்கிறார்கள். இந்த இடத்தில்தான், எமது கல்விமுறையின் பிரச்சினை தொடங்குகிறது. 

தனது பிள்ளை கல்வியறிவு பெறுவது என்பதை விட, பட்டம் பெறுவதுதான் இங்கு முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் இருக்கிறது. ஆகவே, இங்கு பாடசாலைக் கல்வியின் நோக்கமும், இதை மையமாக வைத்தே முன்னெடுக்கப்படுகிறது. 

அரச பாடசாலைகளில், முதலாம் வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் பெரும்பான்மை மாணவர்களுக்கு, எப்படியாவது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகள் எடுத்து, தற்போது கற்பதைவிட தரங்கூடிய பாடசாலைக்குப் போய்விட வேண்டும் என்ற அழுத்தம்; ஆறாம் ஆண்டிலிருந்து 11ஆம் ஆண்டு வரை எப்படியாவது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அதியுயர் புள்ளிகள் பெற்றுவிட வேண்டும் என்ற அழுத்தம்; அதன் பிறகு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அதியுயர் புள்ளிகள் பெற்று, அதிக மதிப்புள்ளதாகக் கருதப்படும் பல்கலைக்கழகக் கல்வியொன்றைக் கற்பதற்கு, எப்படியாவது அரச பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; அல்லது, குறைந்த பட்சம் ஏதாவதொரு துறையைக் கற்பதற்கேனும் அரச பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தம்; இவ்வாறான அழுத்தங்கள், ஆண்டு ஒன்றிலிருந்து பல்கலைக்கழகக் கல்வி வரை தொடர்கின்றன. 

ஆனால், அண்மைய தரவுகளின்படி உயர்தரப் பரீட்சைக்கு முகங்கொடுக்கும் கிட்டத்தட்ட 280,000 பரீட்சார்த்திகளில், வெறுமனே கிட்டத்தட்ட 180,000 பரீட்சார்த்திகளே பல்கலைக்கழகம் செல்லும் தகுதியைப் பெறுகிறார்கள். ஆனால், இதில் ஏறத்தாழ 30,000 பேர் மட்டுமே பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

பல்கலைக்கழகம் செல்லும் தகுதி பெற்றவர்களில் 16.6% ஆனவர்களுக்கு மட்டுமே, அரச பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கிறது. அரச பல்கலைக்கழகம் செல்லும் 30,000 பேரைத் தவிர்த்த ஏனையவர்கள் பட்டப்படிப்பைப் பெற்றுக்கொள்ள, மாற்று வழிகளை நாட வேண்டியதாக உள்ளது.

இத்தனை கடும் போட்டிப் பரீட்சைகளில் மிகத்திறமையானவர்களை உள்ளீர்ப்பதாக அமையும் அரச பல்கலைக்கழகங்கள், உண்மையில் அவர்களது திறன்களை மேம்படுத்தி, தரமானவர்களை உருவாக்குகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. 

பல்கலைக்கழக அனுமதிக்கான போட்டி என்பது, குறிப்பாக உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி தொடர்பிலான போட்டி என்பது, மிக அதிகமானது. ஆனால், அந்தப் போட்டியை அந்தப் பல்கலைக்கழகத்தின் ஊடாக உருவாக்கப்படும் மாணவர்களின் தரம் நியாயப்படுத்துவதாக அமைகிறது. உதாரணத்துக்கு, சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொண்டால், அதற்கு அனுமதி பெற அதியுயர் புள்ளிகள் அவசியமாகிறது. ஆனால், அதன் மூலம் அது உள்ளீர்க்கும் திறமைகளை, அது அதிகமாக வளர்த்தெடுப்பதன் விளைவாக, உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் 11ஆவது இடத்தில் இருக்கிறது. 

ஆனால், இலங்கைப் பல்கலைக்கழகங்களின் நிலை இதுவல்ல. இது, பல கேள்விகளை எழுப்புகிறது. 

முதலாவது, இலங்கையின் மிகச் சிறந்த அறிவுத்திறமையை தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் இலங்கைப் பல்கலைக்கழகங்கள் ஏன் சர்வதேச ரீதியில் சோபிப்பதில்லை? 

இரண்டாவதாக, உண்மையில் உயர்தரப்பரீட்சை என்பது சிறந்த வடிகட்டல் முறைதானா? 

முதலாவது கேள்விக்கான பதில் நீண்டது. ஏனெனில், இலங்கைப் பல்கலைக்கழகங்கள் எதிர்நோக்கும் சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல!பல்கலைக்கழகங்களுக்கான நிதியொதுக்கீடு முதல் பல்கலைக்கழகங்களின் நிர்வாகம், ஆட்சேர்ப்பு, பல்கலைக்கழக ஆசிரியர்கள், கற்றல்-கற்பித்தல் முறை, ஆராய்ச்சி, பரீட்சை முறை, வளங்கள் என எல்லா இடங்களிலும் எக்கச்சக்க சிக்கல்கள் இருக்கின்றன.

இன்றும் ‘சீனியர்’களின் குறிப்புகளை அச்சுப்பிரதியெடுத்து, பரீட்சை எழுதுவதே பல்கலைக்கழகத்தின் கலாசாரமாக இருக்கிறது. பல்கலைக்கழகம் செல்லும் ஒரு மாணவன், நான்கு வருடங்களில் ஒருமுறை கூட நூலகத்துக்குச் செல்லாமலேயே, பட்டம் பெற்றுப் பல்கலைக்கழகத்திலிருந்து வௌியேறக் கூடியதாக இருக்குமானால், அந்தக் கல்வி முறையில் பெருங்குறை இருக்கிறது.  

ஆனால், இது இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்குப் புதியதொன்றல்ல என்பது இலங்கைப் பல்கலைக்கழகங்களைப் பற்றித் தெரிந்த அனைவரும் அறிந்ததே. ஆகவே, இங்கு அடிப்படைப் பிரச்சினை, பல்கலைக்கழகம் என்பது, அறிவை விருத்தி செய்யும் வளாகமாக இல்லாது, பட்டம் வழங்கும் நிறுவனமாக மாறியுள்ளதாகும்; பல்கலைக்கழகம் ஆராய்ச்சிக்கூடமாக இல்லாது, அங்கிகாரம் வழங்கும் நிலையமாகச் சுருங்கியுள்ளது. இது கல்வியின் நோக்கத்தைச் சுருக்கி உள்ளதுடன், மனித வாழ்வின் கணிசமாக காலத்தை வீணடிப்பதாக மாறுகிறது. 

இன்று மேலைத்தேய நாடுகளில் கூட, குறிப்பாக அமெரிக்காவில், பல்கலைக்கழகக் கல்வி தேவைதானா? அங்கு செலவழிக்கும் பணத்துக்கு உரிய பயன் கிடைக்கிறதா என்ற கேள்விகள் பரவலாக எழுப்பப்படுகின்றன. தொழில்நுட்ப நிறுவனங்கள், தற்போது பல்கலைக்கழக பட்டங்களை ஆட்சேர்ப்புக்கான அடிப்படையாகக் கொள்வதைக் கைவிட்டு வரும் போக்கையும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த இடத்தில்தான், கல்வி மறுசீரமைப்புப் பற்றி நாம் மிகக்கூர்மையாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. 

இங்கு, கல்வி மறுசீரமைப்பு என்பது, நிறுவனம்சார் மாற்றங்கள் மட்டுமல்ல, கல்வி பற்றிய எமது சிந்தனைசார் மாற்றங்களும் தான் உள்ளடங்கி இருக்கின்றன. எமது பாடசாலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி ஆகிய முறைமைகள் பற்றி, நிறையக் கேள்விகள் எழுகின்றன. அவற்றை நாம், மீள்பரிசீலனை செய்ய வேண்டிய காலம் உருவாகியிருக்கிறது. 

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பரீட்சைகளையும்-பட்டங்களையும்-கடந்த-கல்வி-மறுசீரமைப்பு/91-268970

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பரீட்சைகளையும் பட்டங்களையும் கடந்த கல்வி மறுசீரமைப்பு

-என்.கே. அஷோக்பரன்

(கடந்தவாரத் தொடர்ச்சி)

பல்கலைக்கழக கல்வியின் நோக்கமானது வெவ்வேறு நபர்களைப் பொறுத்தவரையில் வெவ்வேறானதாக அமையலாம். இன்றையச் சூழலில் பலரைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழகக் கல்வி என்பது சிறந்த தொழில்வாய்ப்பொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான திறவுகோலாகக் கருதப்படுகிறது. இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே பெரும்பாலும் இந்தக் கனவுதான் திணிக்கப்பட்டு வருகிறது. எப்படியாவது உயர்தரப் பரீட்சையில் மிகச் சிறந்த புள்ளிகள் பெற்று, பல்கலைக்கழக அனுமதி பெற்றுவிட வேண்டும், பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டத்தைப் பெற்று நல்லதொரு தொழிலைப் பெற்றுவிட வேண்டும். 

இந்தப் பந்தயத்தில்தான் பெருமளவிலான இலங்கை மாணவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கைப் பல்கலைக்கழகங்களும், இந்த நோக்கத்தை ஈடுசெய்யும் வகையில் தம்மை திரிபடையச் செய்திருந்தன என்றால் கூட அது மிகையல்ல. இதனால், ஆய்வுக்கற்கை என்பதன் முக்கியத்துவம் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ஒப்பீட்டளவில் குறைவாகவே நிகழ்கிறது. இலங்கைப் பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரவரிசையில் பின்னடைவைச் சந்திக்க இது முக்கிய காரணம். சிலர் இதற்கு வளப் பிரச்சினைகளை மட்டும் காரணமாகச் சொல்லலாம். ஆனால் அது மட்டுமே காரணம் என்பது ஏற்பதற்குரியதொன்றல்ல. கல்வி பற்றிய எம்முடைய சிந்தனையே ஆய்வுக்கற்கையை நோக்கியதாக இல்லை. மாறாக ஒரு பட்டத்தைப் பெறுதல், அதை வைத்துக்கொண்டு நல்ல வேலையைத் தேடிப்பெறுதல் என்பதாக இருக்கிறது. 

ஒரு வகையில் பார்த்தால், இது ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த “எழுதுவினைஞர்களை” உருவாக்கும் கல்விமுறையின் தொடர்ச்சியாகக் கூட கருதலாம். இங்கு கல்வி, குறிப்பாக உயர்கல்வி என்பது “தொழிற்பயிற்சி” என்று சுருங்கியே நோக்கப்படுகிறது. ஆகவேதான் பாரம்பரிய தொழிற்றுறைகளுக்கான மிகச்சிறந்த பயிற்சியை இலங்கைப் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வழங்குகின்றன. இதனால் பாரம்பரிய தொழிற்றுறைகளைப் பொறுத்தவரையில், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தொழிலாளர் உற்பத்திக்கு நல்ல கேள்வி காணப்பட்டு வந்தது. இன்றும் கணிசமானளவு காணப்படுகிறது. ஆனால் இதன் மறுபக்கம் யாதெனில், இலங்கைப் பல்கலைக்கழகங்கள் ஆய்வுகளையும் புத்தாக்கங்களையும், சமகாலத்திற்கு அவசியமான திறன்களையும் மேம்படுத்துவதில் பின்தங்கிப்போயுள்ளன. அறிவின் பரவலுக்கு இலங்கைப் பல்கலைக்கழகங்கள் வழிவகுத்தாலும், அறிவுப் பரப்பின் விரிவாக்கத்தில் அவை பங்குவகிப்பதில்லை. 

அந்தவகையில் பார்த்தால், அவை பல்கலைக்கழகங்களாக அல்லாது வெறும் பயிற்சி நிலையங்களாகச் (tutories) சுருங்கிப்போயுள்ளன என்பதுதான் யதார்த்தம். அரச பல்கலைக்கழகங்களின் நிலையே இவ்வாறு இருக்கையில், இங்குள்ள தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் நிலை இதைவிட மோசமானது. சில தனியார் உயர் கல்வி நிலையங்கள் இதற்கு விதிவிலக்காக இருக்க பகீரதப்பிரயத்தனப்பட்டாலும், எப்படியாவது ஒரு பட்டம் பெற்று விட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்ட சமூகத்திற்கு தமது சேவையை வழங்கும் நிறுவனங்கள், கேள்விக்கேற்ற நிரம்பலை வழங்கினால் மட்டுமே இலாபம் உழைக்க முடியும் என்ற யதார்த்தத்தை எதிர்கொள்கின்றன.

இங்கு பலரும் கல்வியின் தனியார் மயமாக்கத்தைக் கண்டிக்கிறார்கள். “பட்டக்கடைகள்” என்று தனியார் கல்வி நிறுவனங்களை விமர்சிக்கிறார்கள். தனியார் கல்வி வேண்டாம் என்கிறார்கள். ஆனால் இங்கு பிரச்சினை தனியார் கல்வியில் அல்ல. இங்கு அடிப்படைப் பிரச்சினை கல்வி பற்றிய எமது பிரக்ஞையில் இருக்கிறது. கல்வி என்பதை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதில் தான் அடிப்படை பிரச்சினை இருக்கிறது. இங்கு கேள்வி அறிவை விரிவாக்கும் கல்விக்கானதாக இருக்கும் போது, அதனை வழங்கவே நிறுவனங்கள் போட்டி போட வேண்டிய சூழல் ஏற்படும். மாறாக இங்கு கேள்வி என்பது பட்டங்களுக்கானதாக இருக்கிறது. ஆகவே பட்டங்களுக்கான கேள்வியை நிரம்பல் செய்ய இங்கு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. நிற்க.

கல்வி பற்றிய எம்முடைய பார்வை கொலனித்துவ காலத்தைத் தாண்டாமல் இன்னும் அதனுள் தேங்கியிருப்பதுதான் “பட்டம்” மீதான இந்த ஆழ ஊன்றிய அவாவுக்குக் காரணம் எனலாம். இன்னும் பட்டம்பெறுதலை சமூக அந்தஸ்த்தின் உரைகல்லாக, பொருளாதார மேம்பாட்டின் திறவுகோலாகப் பார்க்கின்றமையால், சமூகச் சிந்தனையில் பட்டம் பெறுதலே கல்வியாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 21ஆம் நூற்றாண்டின் யதார்த்தம் வேறானதாக இருக்கிறது. இன்று வணிக முகாமைத்துவப் பட்டமொன்றைப் பெற ஏறத்தாழ பதினைந்து இலட்சம் ரூபாய்களை முதலீடாகப் போட்ட ஒருவன், மூன்று வருடங்களை “படித்து” அந்தப் பட்டத்தைப் பெற்று அவன் பெறக்கூடிய தொழில் வாய்ப்பின் அடிப்படைச் சம்பளம் ஏறத்தாழ நாற்பதாயிரம் ரூபாயாக இருக்கிறது.

 மறுபுறத்தில் தொழிற்பயிற்சி நிலையத்தில், தளபாட உற்பத்தியில் தொழிற்பயிற்சியை பெற்றுக்கொண்டால், அடிப்படை மற்றும் உயர் பயிற்சி என இரண்டு வருடங்கள் செலவாகும். பயிற்சிக்காலத்தில் பயிற்சிக்காக மாதாந்த சன்மானமாக சிறுதொகை வழங்கப்படும். தளபாட உற்பத்தியாளர்கள் நாட்சம்பளத்திற்கு வேலை செய்தாலும் கூட, ஒரு நாட்சம்பளம் ஏறத்தாழ 2,000 முதல் 2,500 ரூபாய் அளவில் இருக்கிறது. மாதச்சம்பளம் ஏறத்தாழ நாற்பதாயிரம் முதல் ஐம்பதாயிரம் ரூபாய். ஒருவேளை பத்து இலட்சம் ரூபாய் முதலீட்டுடன், குறித்த நபர் சொந்த புத்தாக்க தளபாட உற்பத்தியில் ஈடுபட்டால், மாத வருமானங்கள் குறைந்தபட்சம் ஒரு இலட்சத்துக்கும் மேலாக அமையும். ஆகவே “பட்டம்” பெறுதல் பொருளாதாரத்துக்கான திறவுகோல் என்பதெல்லாம் காலத்துக்கு ஒவ்வாத கருத்து. “பட்டம்” இருக்கிறதோ, இல்லையோ, குறித்த துறையில் தன்கருமத்தைச் சிறப்பாக முன்னெடுப்பவர்கள், சந்தையின் கேள்விக்கு உகந்த வழங்கலை மேற்கொள்பவர்கள் இங்கு வெற்றி பெறுவார்கள். புத்தாக்கம் என்பதுதான் இன்று வளர்ச்சியின் தாரக மந்திரமாக இருக்கிறது.

படித்துவிட்டால், பட்டம் பெற்றுவிட்டால், அரச உத்தியோகம், அல்லது ஏதாவதொரு நிறுவனத்தில் வேலை பெற்றுக்கொண்டுவிட்டால் அத்தோடு பிரச்சினை முடிந்தது என்ற கொலனித்துவ கால சிந்தனை பழசாகிப்போய்விட்டது. ஆகவே கல்வி பற்றிய எமது சிந்தனையில், பிரக்ஞையில் நாம் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இங்கு வாழ்க்கைக்கு அவசியமானது பட்டங்கள் அல்ல. அறிவு. அறிவுதான் மேம்பாட்டிற்கான திறவுகோல். அந்த அறிவின் பரப்பையும் ஆழத்தையும் விரிவாக்குவதாகக் கல்வி இருக்க வேண்டும். வெறும் அறிவு என்பதுகூட போதாது. 

அந்த அறிவை பயன்படுத்தக் கூடிய திறன்களும் கூடவே வளர்க்கப்பட வேண்டும். ஆகவே கல்வி என்பது அறிவு மற்றும் திறன்களின் வளர்ச்சியாகப் பார்க்கப்பட வேண்டும். கணினி என்றால் என்ன என்று கணினியின் வரைவிலக்கணத்தைச் சொல்லித்தரும் கல்வி வெறும் ஏட்டுச்சுரைக்காயைப் போன்றது. அத்தகைய கல்வியை மாற்றி, கணினி மொழியைப் பாலர் வகுப்பிலேயே கற்றுக்கொடுக்கும் கல்விமுறைக்கு நாம் மாற வேண்டும். ஆசிரியர் சொல்வதைத் திருப்பிச் சொல்லும் “கிளிப்பிள்ளை” பயிற்சிக் கல்வியை மாற்றி, மாணவர்கள் தைரியமாகக் கேள்விகேட்டும் கேள்விகளூடாக அறிவை விரிவுசெய்யும் கல்வி முறைக்கு நாம் மாற வேண்டும். ஆய்வுக்கல்விக்கான அடிப்படைப் பயிற்சிகள் பாடசாலைக் கல்விமுறையிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்.

 தாய்மொழியையும் மதத்தையும் கற்பிப்பதிலுள்ள ஆர்வம், கணிதம், விஞ்ஞானம், கணினி மொழி குறியீட்டு வரைபு, தர்க்கவியல், பொருளியல், நிதியியல், அடிப்படை அரசியல் மற்றும் அடிப்படைச் சட்டம் ஆகியவற்றைக் கற்பிப்பதிலும் காட்டப்பட வேண்டும். இங்கு கற்பித்தல் என்பது வெறும் சொல்வதும், கேட்பதுமல்ல. அது பயிற்சி சார்ந்ததாக, ஆய்வு சார்ந்ததாக இருக்க வேண்டும். பொருளாதாரம் மற்றும் நிதி அறிவு நிறைந்த ஒரு சந்ததி உருவாகும்போது அது அந்த நாட்டுக்கும், அதன் எதிர்காலத்துக்கும் பெரும் வரமாக அமையும். கணிதம், விஞ்ஞானத்துறையை ஆய்வு ரீதியில் அணுகும் சந்ததி உருவாகும் போது, புத்தாக்க அதிசயங்கள் நிறைய நிகழும். வாழ்வு வளம்பெறும். ஆகவே கல்வி நிலையங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பவை பயிற்சி நிலையங்களாக அல்லாமல் அறிவாராய்ச்சிக் கூடங்களாக மாறவேண்டும்.  

எமது எதிர்காலம் ஏதோ ஒரு நிறுவனம் வழங்கும் பட்டங்களுக்குள் இல்லை. இதற்கு பல இலட்சக்கணக்கான சாதனையாளர்களை நாம் உதாரணம் காட்டலாம். அவர்களிடம் பட்டங்கள் இருக்கவில்லை ஆனால் அறிவும், திறன்களும், உழைப்பும், அதன்பாலான அனுபவமும், தேடலும் இருந்தது. கல்வி என்பது இவற்றை ஊக்குவிப்பதாக அமைவதே. அத்தகைய கல்விமுறையை எதிர்காலச் சந்ததிக்கு வழங்க வேண்டிய கடமை எமக்குண்டு. தொடர்ந்தும் மிகவும் பிற்போக்குத்தனமாக கொலனித்துவகால சமூக அந்தஸ்துசார் மனநிலையில் இயங்கிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தக்கன பிழைக்கும் என்பது உலக நீதியெனில், காலத்திற்கேற்றவாறு மாறுதலே வெற்றியின் சூத்திரமாகும். அழிதலை வெற்றி பெறுதல் என சிலாகித்துக்கொள்ளலாம். ஆனால் சிவப்பைப் பச்சை என்று சொல்லுவதால் சிவப்பு பச்சையாகிவிடுவதில்லை. 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பரீட்சைகளையும்-பட்டங்களையும்-கடந்த-கல்வி-மறுசீரமைப்பு/91-269358

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.