Jump to content

யாழ். மாநகர மேயர் மணிவண்ணன் கைது - அதிகாரத்தின் குரூர கரங்களுடன் உணரவேண்டிய அரிதாரத்தின் அரூப கரங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரத்தின் குரூர கரங்களுடன் உணரவேண்டிய அரிதாரத்தின் அரூப கரங்கள்!

அதிகாரத்தின் குரூர கரங்களுடன் உணரவேண்டிய அரிதாரத்தின் அரூப கரங்கள்!

 — தெய்வீகன் — 

தமிழர்களுக்கு இனிப் பிரச்சினையே இருக்காது என்று, விடுதலைப்புலிகளுக்கு எதிரான வெற்றியை அறைகூவிய சிங்கள அரசுக்கு, தமிழர்களது ஆயுதப்போராட்டம் அழித்தொழிக்கப்பட்டு பன்னிரெண்டு வருடங்கள் முடிவடைந்துவிட்ட பின்னரும்கூட, தமிழ் தேசிய அரசியலின் வழியாக மாதமொரு தலையிடி இருந்துகொண்டுதானிருக்கிறது.  

அதற்கு எதிராக கோத்தபாய அரசு திமிறிக்கொண்ட மிகப்பிந்திய உதாரணம், யாழ். மாநகர மேயர் மணிவண்ணன் கைதும் அதற்கு சர்வ உலகமும் வெளிக்காண்பித்த எதிர்ப்பும் ஆகும்.  

தனக்கு எதிராக அழுத்தங்கள் வருமென்று எதிர்பார்க்காமல், முன்னர் மொக்குத்தனமாக நடந்துகொண்டு அடிவாங்கிய சிங்கள அரசு – இப்போதெல்லாம் விளைவுகளை தெரிந்துகொண்டே உளப்பூர்வமாக தமிழர்களைச் சீண்ட முடிவெடுத்துவிட்டது. அவ்வாறான சீண்டல்கள், தான் குறிவைக்கும் தரப்புக்களுக்கு ஒரு இறுக்கமாக செய்தியாக அமைந்துவிட்டால் போதும் என்றளவில் சிங்கள அரசு தற்போது காய்களை நகர்த்துகிறது. 

இந்த இறுமாப்பும் தடித்தனமும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு எங்கிருந்து முளைக்கிறது என்று பார்த்தால், அவர்களது ஆட்சிமுறை என்பது பின்வருமாறுதான் நடைபெறுகிறது. 

அதாவது, அதீத சிங்களப் பெரும்பலத்தோடு ஆட்சிபீடமேறியிருக்கும் கோத்தாபய அரசைப் பொறுத்தவரையில், இன்று நான்கு தரப்பானவர்கள் இலங்கையில் குடியிருக்கிறார்கள்.  

ஒன்று, பிரபாகரனின் தலைமையோடும் தத்துவத்தோடும் இன்னமும் பின்னிப்பிணைகொண்டு புலம்பெயர் சமூகத்தையும் தமிழகத்தையும் முதுகில் கொழுவிக்கொண்டிருக்கும் இயங்கும் ‘பயங்கரவாத சமூகம்’. 

இரண்டாவது, சஹ்ரான் தலைமையோடும் தத்துவங்களோடும் மத்திய கிழக்கின் மத அடிப்படைவாதங்களையும் மூக்குமுட்டக் குடித்துவிட்டு, அதிகாரத்துக்குள் மூக்கை நுழைத்து வாலாட்டப்பார்க்கும் ‘தீவிரவாத சமூகம்’.  

மூன்றாவது, உலகின் மிக உன்னதமான மக்கள் சமூகமான – பௌத்தத்தை பின்பற்றும் – மனிதாபிமானத்தின் மறுவடிவங்களான சிங்களவர்கள்.  

நான்காவது, மேன்மையான சிங்கள சமூகத்தையும்விட ஒருபடி மேல் அனைத்தையும் ரட்சிக்கவல்ல பௌத்த மத பீடத்தவர்கள். அவர்கள் இன்றி இவ்வுலகில் அணுவும் அசையாது என்று அடர்த்தியான நம்பிக்கை கொள்ளப்பட வேண்டியவர்கள். 

இந்த நான்கு தரப்பினரையும் தாங்கள் வைக்கவேண்டிய இடத்தில் வைத்துக்கொண்டுதான், தற்போதைய கோத்தாபய அரசு சகல முடிவுகளுக்கும் பேனாவை திறக்கிறது.  

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட அண்மைய தீர்மானமானது சிறிலங்காவுக்கு எந்த விதத்திலும் பங்கம் விளைவிக்காது என்ற உண்மையை, அண்மையில் பிறந்த குழந்தைகூடச் சொல்லும். அவ்வளவுக்கு சிறிலங்காவினை அரசியல் ரீதியாக அசைத்துவிட முடியாதபடி, சீன அத்திவாரத்தில் கட்டிமுடித்து கனகாலமாகிவிட்டது.  

ஆனால், மனிதாபிமானம் – போர்க்குற்றம் என்றுகொண்டு சர்வதேச அளவில் சிறிலங்காவின் பெயருக்கு களங்கும் ஏற்படுத்திக்கொண்டிருப்பது கோத்தா அரசுக்கு தொடர்ந்து சினமாக இருக்கிறது. ‘எல்லாவற்றையும் மறந்துவிட்டு வாருங்கள், நான் புதிய சிறிலங்காவை காட்டுகிறேன்’ – என்று ஜனாதிபதி கோத்தபாய அல்லும் பகலும் அத தெரணில் அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கும்போது, புலம்பெயர்ந்தவர்கள் ஏன் தொடர்ந்து சப்பாத்துக்குள் கல் போல கடுப்பைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அரச தரப்புக்கு சதா சர்வதேச சிக்கலாகவே இருக்கிறது.  

இதற்குத்தான் ஜெனிவா விவகாரம் முடிவடைந்த கையோடு, புலம்பெயர்ந்த அமைப்புக்கள், புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்கள் என்று, சிறிலங்காவுக்குள் தடைசெய்யப்பட்டவர்கள் எனப்பட்ட புதிய இணைப்போடு ஒரு அறிவிப்பு விடுக்கப்பட்டது.  

அடுத்ததாக, புலி என்ற சொல்லுக்கும் அதிகாரப்பகிர்வு என்று கேட்பவர்களுக்கும் நாட்டுக்குள் என்ன கிடைக்கும் என்பதை ஒட்டுமொத்தமாக காட்டுவதற்கு – ஒரு தரமான சம்பவமாக – மணிவண்ணனின் கைது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  

இவ்வாறு நடைபெறுவது இது முதல் தடவையொன்றுமில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.  

அதாவது, ‘புலி என்ற சொல் சிறிலங்கா இராணுவம் என்ற சொல்லினால் பிரதியீடு செய்யப்பட்டாயிற்று. இவ்வளவு காலமும் நீங்கள் புலிகளுக்கு கொடுத்த மரியாதையை சிறிலங்கா இராணுவத்துக்கு கொடுக்கவேண்டும்’ – என்பதைத்தான் தமிழர்களிடம் சிங்கள அரசு எதிர்பார்க்கிறது.  

இது கோத்தா ஆட்சியில் அல்ல, கடந்த 2016 இல் ‘காமடியர்கள்’ மைத்திரி – ரணில் காலத்திலேயே ஆரம்பமான ஒன்றுதான். கிழக்கு முதல்வருக்கும் கடற்படை அதிகாரிக்கும் இடையில் இடம்பெற்ற முறுகலில், முதல்வரின் பக்கம் நியாயமிருப்பதை மொத்த நாடும் வலியுறுத்தியும்கூட, அவரை படையினரிடம் மன்னிப்புக்கோரச் சொல்லி வற்புறுத்திக்கொண்டிருந்தது மைத்திரி அரசு. போதாக்குறைக்கு, விடயத்தை மந்திரி சபையில் வைத்து பேசுமளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது.  

இப்போது கோத்தா ஆட்சியில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இன்னும் கொஞ்சம் முலாம் பூசப்பட்ட அதே அதிகாரப்போக்கு.  

அதாவது, புலிகளின் நாமத்தை இந்த நாட்டுக்குள் மருந்துக்கும் அனுமதிக்கமாட்டோம் என்பது.  

நகரில் துப்புவதை தடுப்பதற்கு ஆட்களை நியமிப்பதாக இருந்தால்கூட, அந்த அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. வழங்கப்போவதாகவுமில்லை. (இதனை இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், வடக்கு – கிழக்கு பூர்வீக நிலம், மாகாண சபை ஆட்சி இவையெல்லாவற்றையும் தமிழர்கள் புலம்பெயர்ந்தவர்களோடு சேர்ந்து போதுமானளவுக்கு கனவு காணலாமே தவிர, நடைமுறையில், தமிழர்களின் நகரசபை ஆட்சிகூட சிங்கள தேசத்தின் ஏகாதிபத்திய பிடிக்குள்தான் இருந்துகொண்டிருக்கிறது) 

இந்த நடைமுறைகளை நாட்டிலுள்ள தமிழர்கள் எனப்படுகின்ற பிரபாகர விசுவாசிகளான பயங்கரவாத சமூகத்தினர் மாத்திரம் உணர்ந்துகொண்டால் போதாது. அவர்களுக்கு ஜல்லியடிக்கும் புலம்பெயர்ந்தவர்கள், தமிழகத்தவர்கள் மற்றும் வெளிநாட்டு அரசுகள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்று கோத்தா அரசு, ஜெனிவாவின் மூலம் தனக்கு கரி பூசியவர்களுக்கு திரும்பி சேறு வீசியிருக்கிறது.  

இந்த நிலைதான் இலங்கையில் இன்னும் தொடரவும் போகிறது. அதாவது,தன்னைச் சீண்டும்போதெல்லாம், தான் அடிமைகளாக வைத்திருக்கும் மக்களை சீண்டுவதை தான் தொடரப்போவதாக சிறிலங்கா அரசு கிட்டத்தட்ட பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறது.  

நாடு பொருளாதார ரீதியில் படுகுழியில் சென்றுகொண்டிருக்கும் இந்தவேளையில்கூட, மணிவண்ணன் விவகாரத்தை பாதுகாப்பு கமிட்டியைக் கூட்டி பேசுகிறது. வருடம் ஆரம்பித்து நான்கு மாதங்களில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் வீதி விபத்தில் இறந்திருக்கிறார்கள். போருக்காக படையில் சேர்ந்து வயிறு பெருத்த படையினரை, இந்த வீதிப்பாதுகாப்பு – மக்கள் வழிப்புணர்வு போன்ற விடயங்களில் கொண்டுபோய் நிறுத்தலாம் என்ற முன்னேற்றகரமான சிந்தனை எதுவுமின்றி, மணிவண்ணனை விசாரிப்பதற்கும் பிரபாகரனின் படம் வைத்திருப்பவர்களை பிடிப்பதற்கும்,புலனாய்வுத்துறையினரை வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் அனுப்பி, கலைத்து விளையாடுகிறது.  

ஆனால், இந்த அடக்குமுறைகளை சுமந்திரன் போன்றவர்கள் சட்டத்தினால் உடைத்து, நுட்பமாக கையாளுவதுதான் இப்போதைய ஒற்றை வழிமுறையாக இருக்கமுடியும். பொதுமக்கள் தங்களுக்கான உரிமையை தொடர்ந்து வலியுறுத்துவது, நீண்ட தொடர்ச்சியான அறப்போராட்டமாக முடியும். 

ஆனால், இவை இரண்டுமின்றி, மக்களுக்கு அதைத் தருவோம், இதைப்பிடுங்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதியளித்துவிட்டு, எல்லா பிரச்சினைகளுக்கும் காலையில் எழுந்து அறிக்கை மாத்திரம் விட்டுக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள், இந்த மாதிரியான அடக்குமுறை – ஆட்சிச் – சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கான பெருஞ்சாபங்களாக காணப்படுகின்றனர். 

கட்சியில் பிடுங்குப்பாடு, கதிரைகளில் மூட்டைப்பூச்சிப் பிரச்சினை என்றவுடன் குறுக்கும் மறுக்கும் ஓடியோடி கூட்டம் போடுபவர்கள், வீதிக்கு வருபவர்கள், பத்திரிகைகளில் ஓடிப்போய் தங்கள் தரப்பினை கவி பாடுபவர்கள் – மக்கள் பிரச்சினைக்கு – மணிவண்ணன் பிரச்சினைக்கு – வாக்கெடுத்த பொறுப்புள்ளவர்களாக வீதிக்கே வராமல் அறிக்கைகளில் கோத்தாபயவை பார்த்து “கூ” அடிக்கிறார்கள்.  

மணிவண்ணன் விவகாரத்தின் ஊடாக, சிங்கள ஆட்சித்தரப்பு சொல்லவருகின்ற செய்தி கிட்டத்தட்ட எல்லோருக்கும் மங்கலாக முன்னமே தெரிந்த ஒன்றுதான். ஆனால், அதனை திரும்ப திரும்ப வலியுறுத்திக் கூறும்போது, அதன் வலி அதிகமாக உணரப்படுகிறது.  

ஆனால், மணிவண்ணன் விவகாரத்தின் ஊடாக தமிழர் தரப்பு உணர்ந்துகொள்ளவேண்டிய அதி முக்கிய செய்தி, தங்களுக்கானவர்களை அவர்கள் இனிமேல் தரம்பிரித்து அடையாளம் கண்டுகொள்ளவேண்டும் என்பதே.  

தங்களுக்கானவர்களாக அடையாளம் காட்டியபடி முன்வருபவர்கள், எவ்வளவு தூரம் ஓடுவார்கள்? எவ்வளவு பாரம் தாங்குவார்கள் என்பதை தமிழ் மக்கள் இனியாவது புதிதாக அடையாளம் கண்டுவிடவேண்டும். 

அதிகாரத்தின் குரூர கரங்களை மாத்திரமல்ல, அரிதாரங்களின் அரூப கரங்கள் குறித்தும் மக்கள் விழிப்புடனிருக்கவேண்டும். 

https://arangamnews.com/?p=4671

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.