Jump to content

ஆயர் இராயப்பு யோசேப்பும், தமிழ்த் தேசியமும் – எழில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆயர் இராயப்பு யோசேப்பும், தமிழ்த் தேசியமும் – எழில்

 
image-2.png
 56 Views

பின் முள்ளிவாய்க்கால் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஆயர் இராயப்பு யோசேப் அவர்களினால் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டது என்று கூறினால் மிகையாகாது. வேற்றுமைகளை அல்லது வேறுபாடுகளைக் கடந்து ஈழத்தமிழினத்தை விடுதலை மையப்புள்ளியில் ஒருங்கிணைக்கக் கூடிய தலைமைத்துவத்தை மறைந்த ஆயர் கொண்டிருந்தார். ஆயரை வெறுமனே சமயத் தலைவராக மட்டும் பிரதிபலிக்க முற்படுவது அவரது தமிழினத்துக்கான தூர தரிசனத்தை சமய வில்லைகளுக் கூடாக மட்டும் பார்ப்பதான வரையறைகளைக் கொண்டிருக்கின்றது. தமிழ்த்தேசியம் ஒருபோதும் மதவரையறைகளுக்குட்பட்டது அல்ல, மத வரையறைகளைக் கடந்து ஈழத்தழிழினத்தை, ‘ஈழத்தமிழ்த்தன்மை’யின் அடிப்படையில் அடக்முறைக்கெதிராக அணிதிரட்டுகின்ற இயங்கு சக்தியாக இருக்கின்றது.

ஆயரின் சர்ச்சைத் தன்மை

எல்சல்வடோரில் பேராயர் ஒஸ்கார் றொமேரோ பற்றிய பொதுச் சொல்லாடல் அவருடைய திருப்புமுனையிலிருந்து, அரசியல் தலைமைத்துவத்தைக் கொடுக்க முனைந்ததிலிருந்து, முற்போக்கான பேராயராக பிரதிபலிக்கப்படுகின்றார். எல்சல்வடோர் விவசாயிகளை, அடித்தட்டு மக்களைப் பொறுத்தவரையில் பேராயர் வேறும் மதத் தலைவரல்ல, மதங்களைக் கடந்து, அடக்குமுறைக்குட்பட்ட மக்களை விடுதலையை நோக்கி அணிதிரட்டிய ஒரு தலைவராகவே நோக்கப்படுகின்றார். மறைந்த முன்னாள் ஆயரின் சர்ச்சைத் தன்மை பற்றிய கட்டமைப்பு பற்றி சுருக்கமாக நோக்கினால் ஆயரும் அவருக்குரிய பேசுபொருளும் சர்ச்சைக்குரியவைகள் அல்ல, ஆனால் அவை சர்ச்சைக்குரியவைகளாக கட்டமைக்கப்பட்டன. எல்சல்வடோரைப் பொறுத்தவரையில் அரச அடக்குமுறைக்கு எதிராகப்  போராடுகின்ற குருக்களை அந்த அரசு சர்ச்சைக்குரியவர்களாக சித்தரிக்க முயன்றது. ஆனால் இது சர்ச்சைக்குரிய குருக்கள் பற்றியது அல்ல. அடக்குமுறையும் அதற்கேற்றதான எதிர்ப்பும், மக்களின் அரசியல் அணிதிரட்டலும் தொடர்பானது. அரச அடக்குமுறை இருக்கும் வரை அடக்குமுறைக்கு எதிரான விடுதலை வேட்கை இருந்துகொண்டே இருக்கப்போகின்றது.

அரசின் அடக்குமுறையை சவாலுக்குட்படுத்தி நீதியை நிலைநாட்டுவதற்கு பதிலாக தனது குற்றத்தை அரசு இடம்பெயர்த்தி சர்ச்சைக்குரியவர்களாக சித்தரிப்பவர்கள் மீது பழியைச் சுமத்துகின்றது. ஆயர் இராயப்பு யோசேப்பின் கூற்றுகளில் சர்ச்சைக்குரியவைகள் என்று எதுவும் இல்லை. அரச அடக்குமுறைக்கெதிராக மக்களை அணிதிரட்டுவது சர்ச்சையல்ல, அரச அடக்குமுறை அசாதாரணமானது. அடக்குமுறைக்கெதிரான எதிர்ப்பு சாதாரணமானது. இதில் சர்ச்சை எனப்படுவது அசாதாரணமான அரச ஒடுக்குமுறையே தவிர அடக்குமுறைக்கெதிரான எதிர்ப்பு அணிதிரட்டல் அல்ல. அரசு தன்னுடைய அடக்குமுறையை  நியாயப்படுத்துவதற்காக சர்ச்சைக்குரிய பலிக்கடாக்களை கட்டமைக்கின்றது. இவ்வாறான பலிக்கடா கட்டமைப்பு ஒரு சமூக- அரசியல் கட்டமைப்பு. சிறீலங்கா அரசு இவ்வாறான கட்டமைப்பை வெற்றிகரமானதாக முன்னெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவியாக அமைவது சிங்கள பௌத்த இருப்பிற்கெதிரான அச்சுறுத்தல். அவ்வாறான ஒரு அச்சுறுத்தலாகத்தான் ஆயரைச் சிங்கள-பௌத்த ஊடகங்களின் துணையோடு அரச இயந்திரம் ஆயருக்கெதிரான பரப்புரையை தென்னிலங்கையில் முன்னெடுத்தது. அதன் விளைவாக ஆயரை சிங்கள பௌத்த இருப்பிற்கெதிரானவராகக் கட்டமைத்தது. ஓரு இனம் அரச அடக்குமுறையால் பாதிக்கப்படுகின்றது அதற்கெதிராக குரல் கொடுப்பது என்பது பொது அறம் சார்ந்தது. சர்ச்சைக்குரியது அல்ல.

ஆயரின் தமிழினத்திற்கான கூட்டுரிமைக் கோரிக்கை

ஆயர் தனது பொதுப்பணியை அரசு அடக்குமுறை சமூக-அரசியல் சூழ்நிலையில் தான் ஆரம்பிக்கின்றார். அவருடைய பட்டறிவும், அவர் சார்ந்த இனத்தின் கட்டமைப்பும் வெவ்வேறாக இருந்ததில்லை. அடக்குமுறைக்குட்பட்ட மக்களின் அடக்குமுறைக்கெதிரான பயணத்தில் அவர் தன்னை ஒருபோதும் அந்நியப்படுத்தியதில்லை. ஒரு இனத்தின் உரிமை மீறப்படுகின்றது, மறுக்கப்படுகின்றது என்பதைத் தனிநபர் சார் உரிமைமீறல் சொல்லாடல் வில்லைகளுக்குட்பட்டு பார்க்க முனைவது உண்மையை மறைத்தலும், மறுத்தலும் ஆகும். தனிநபரின் உரிமை மறுப்பும், மீறலும் தனி நபர் என்பதற்காகச் செய்யப்பட்டது அல்ல, தனிநபர் ஒரு இனக்குழும அடையாளத்தைக் கொண்டவர் என்பதால், இனக்குழும அடையாளத்தைக்கொண்டு கட்டமைக்கப்படுகின்ற இனப்பாகுபாடு ஏலவே திட்டமிடப்பட்டு வினைத்திறனோடு செயன்முறைப்படுத்தப்படுவது. அரச அடக்குமுறைக்கெதிரான ஆயரின் தமிழின கூட்டுரிமைக்கோரிக்கையை இனத்தின் சார்பாக அவர் முன்வைத்தது வரலாற்றுக்கு முரணானது அல்ல. அந்த கூட்டுரிமைக்கோரிக்கை அரசியல் தீர்வு தொடர்பிலும் சரி தமிழினப் படுகொலைக்கான நீதி கோருவதிலும் சரி தமிழினத்தின் கூட்டுரிமையை முன் நிறுத்தியே குரல் கொடுத்தார்.

சிறீலங்காவில் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என தனது நியாயப்பிரச்சாரத்தை உள்ளுரிலும், சர்வதேசத்திலும் மேற்கொண்டார். பின்முள்ளிவாய்க்கால் அரசியல் வரலாற்றில் சிறீலங்காவில் வேறு எந்த ஆயராலும் முன்வைக்கப்படாத கோரிக்கையாக அது இருந்த போதிலும் மறைந்த ஆயர் தமிழினக் கோரிக்கையை முன்வைத்து, உலக விசாரணையில் எந்தவிதமான நம்பிக்கையும் தமிழர்களுக்கு இல்லை என்பது மட்டுமல்ல, சிறீலங்கா நீதித்துறை நிறுவனம் தமிழர்களுக்கு நீதியை ஒருபோதும் வழங்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டார். உள்ளக விசாரணையை விசாரிக்கையில் குற்றவாளிகளிடமே நீதி கோருதலின் அபத்தத்தைப் பற்றித் தனது சந்திப்புக்களில் விளக்கத்தைக் கொடுத்தார். LLRCY  நிராகரித்து வெளியேறியது சிறீலங்கா அரசின் உள்ளகப் பொறிமுறையின் அறத்தையும் சட்ட வலுத்தன்மையையும் சிக்கலுக்குட்படுத்தியது.

இனப்படுகொலைக்கான நீதி வேண்டிய சர்வதேச விசாரணையில் சிறீலங்கா அரசு, தமிழினத்தை அதனுடைய இன அடையாளத்தை மையப்படுத்தியே இன அழிவை மேற்கொள்கின்றது. ஆகவே சிறீலங்கா அரசின் இனப்படுகொலை உள்நோக்கம் விசாரிக்கப்படுவது அவசியம் எனக்குறிப்பிட்டதோடு தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற சிறீலங்கா அரசின் உள்நோக்கம் வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டிருப்பதையும் எடுத்துரைத்து, தமிழினத்துக்குரிய அரசியல் தீர்வாக திம்பு கோட்பாட்டின் அடிப்படையிலமைந்த (தாயகம், தேசியம், சுயநிர்ணயம்) தீர்வை முன்வைத்தார். வடக்கு- கிழக்கு நில, ஆட்புலக் கட்டுறுதியின் இணைப்பு தமிழின அரசியல் தீர்வில் மிக அவசியமானதென குறிப்பிட்டதோடு அல்லாமல் தமிழர்கள் ஒரு தேசத்துக்குரியவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர்களின் சுயாட்சி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதில் அவருடைய தெளிவு பல உரைகளில் வெளிவந்தது. முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் சாட்சியாக இருந்து, உண்மையை எடுத்துரைத்து, நீதிகோரியது அவரது பொதுப்பணியின் சூழமைவு சார்ந்த புரிதலை வெளிக்காட்டியது. அவருடைய எழுத்துக்களில் விடுதலை இறையியலின் தீவிரத் தன்மை வெளிப்படாவிட்டாலும் கூட, அவருடைய வாழ்தல், விடுதலை இறையியலின் அடிப்படையான (TRAXIS)  முன்னிலைப்படுத்தியது.

ஒஸ்கார் றொமேறோவினுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனைபோன்றதொரு திருப்புமுனை குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்தது என இதுவரைக்கும் யாரும் குறிப்பிடவில்லை, ஆனால் அந்த திருப்புமுனை வரலாற்றில் வாழ்தலினூடு ஏற்பட்டது என நம்புகின்றேன். சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளூடான பயணமும், அனுபவமும் தனிநபர் சார்ந்த பயணம் அல்ல ஒரு கூட்டுப்பயணம். ஓரு இனத்தினுடைய கூட்டு அனுபவப்பயணமே அவரை மக்கள் இயக்க அரசியலின் தலைமைத்துவத்தை ஏற்கவேண்டிய காலகட்டாயத்திற்குள் அவரை நிர்ப்பந்தித்தது எனலாம்.

மாற்று அரசியல் பிரதிநிதித்துவமும் மக்கள் இயக்க அரசியலின் தலைமைத்துவமும்

பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு சமாந்தரமாக மாற்று அரசியல் பிரதிநிதித்துவம் வடக்கு- கிழக்கில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். சிவில் சமூக அமைப்புக்ளை உருவாக்கி வலுப்படுத்தியதோடு அவற்றை ஒருங்கிணைப்பதில் மிக முக்கிய பங்காற்றினார். தமிழ்த்தேசியசபை தொடர்பிலான முன்னெடுப்புக்களுக்கு ஆர்வம் காட்டி அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளைத் தொடக்கி வைத்தது வரலாற்றில் நினைவிருக்கும். வடக்கு- கிழக்கில் சிவில் சமூக அமைப்புக்களையும், தமிழ்த்தேசிய கட்சிகளையும் ஒருங்கிணைத்து அவ்வாறான சந்திப்புக்களுக்கு வரையறையின்றி காலத்தையும் வளங்களையும் முதலீடு செய்ததை அதில் பங்குபற்றிய அனைவரும் அறிவர்.

ஆயர் மறைந்த பின்னர் வெளிவந்த இரங்கல் உரைகளும், அவர் தொடர்பான எழுத்துக்களும் அவருடைய தமிழினத்துக்கான தீர்க்க தரிசன நோக்கை மத வரையறைகளுக்குட்பட்டே பார்க்க விரும்பின. தமிழ்த்தேசியம் மத வரையறைகளைக் கடந்தது என்பதை தமிழ்த்தேசியத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவர்கள் அறிவார்கள் எனும் ஆழ்ந்த நம்பிக்கை ஆயருக்கு இருந்தது. அந்த நம்பிக்கையின் புரிதலில் தான் ஆயரின் முன்னெடுப்புக்கள் அமைந்திருந்தன.

மாற்று அரசியல் பிரதிநிதித்துவத்தை முன்னெடுப்பதற்குரிய காரணங்கள் அவருக்கு இருந்தன. ஒற்றையாட்சிப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் அவருக்கிருந்த அதிருப்தியும், ஒற்றையாட்சிக்குள் தமிழினத்துக்கான நீதி கிடைக்கப்போதில்லை என்ற மன உறுதியும் அவரை மாற்று அரசியல் பிரதிநிதித்துவத்தை, பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு சமாந்தரமாக கட்டமைக்க முற்பட்டதில் இருந்து தெளிவாகின்றது. ஆயர் கட்டமைக்க முன்னெடுத்த மாற்று அரசியல் பிரதிநித்துவம் தமிழ்த்தேசிய வெளிக்குள்ளே மட்டுமே கட்டமைக்க முடியும் என நம்பியதால் தான் மத வரையறைகளைக் கடந்து மாற்றுப் பிரதிநிதித்துவத்திற்காக எல்லோரையும் ஒன்றிணைக்க முற்பட்டதை வரலாறு சொல்லும்.

மக்கள் சக்தியின் இயங்குதலில் நம்பிக்கை கொண்ட ஆயர், தமிழ்த்தேசியம் நாளாந்த இயங்கு தளத்தின் இயக்கமாக்கப்பட வேண்டும் என விரும்பியதால் தான, தமிழ் மக்களைப் பாதிக்கும் எல்லா அரச நெருக்கீடுகளையும் கண்டித்து வந்தார். குறிப்பாக, செறிவாக இராணுவ மயமாக்கப்படும் வடக்கு- கிழக்கு சிங்கள-பௌத்த மயமாக்கம், அதன் விளைவான நில அபகரிப்பு, வரலாற்றுத் திரிபு, அரசியல் கைதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என பட்டியல் நீண்டுகொண்டே போனது. சிறீலங்கா அரசு ஆயுதமற்ற போரை  வடக்கு- கிழக்கில் ஒவ்வொரு வாசலண்டையும்  திணித்தது. அப்போரின் பரிமாணங்கள் வெவ்வேறு வடிவில் உருப்பெற்றன, தொல்லியல், வனஇலாகா, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, தமிழினப்படுகொலை மறுப்பு, தமிழின படுகொலைக்கான நீதி மறுப்பு, உண்மை மறுப்பு. எண்ணிக்கை தொடர்பில் 2008 ஒக்ரோபர் தொடக்கம் 2009 மே வரைக்கும் விளக்கப்பட முடியாது புதிராகிப்போன 146,479 என முன்மொழிந்த போது இதுவரைக்கும் அந்த எண்ணிக்கையை சிறீலங்கா அரசு மறுத்ததாகவோ, நிராகரித்தாகவோ எந்த உத்தியோகபூர்வ அறிவித்தலையும் வெளியிடவில்லை.

ஆயரினுடைய தலைமைத்துவத்தை வெறுமனே மதம்சார்ந்து கட்டமைப்பது அவருடைய மக்கள் இயக்க அரசியல் தலைமைத்துவத்தை வலுவிழக்கச் செய்வதாகும் அல்லது தலைமைத்துவம் தொடர்பான அறத்தை சவாலுக்குட்படுத்துவதாகும். அவருடைய மக்கள் இயக்க அரசியல் தலைமைத்துவம் மாற்று அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான அற ஒழுக்கத்தையும், அற நியாயத்தையும்  சட்ட வலுவையும் வழங்கியது. அவ்வாறான தலைமைத்துவத்திற்கூடாக அவருக்கிருந்த அரசியல் செயலாண்மை முகவர் தன்மையை (Political Agency) இடம்பெயர்த்துவதாகவே அரசியல் தலைமைத்துவத்தை சிக்கலுக்குட்படுத்தல் இட்டுச்செல்கின்றது. அரசியல் செயலாண்மை முகவர் தன்மையை இடம்பெயர்த்தல் அவருடைய அரசியல் பிரதிநிதித்துவத்தையும் கேள்விக்குட்படுத்துகின்றது. அல்லது அவரை மத வரையறைகளுக்குட்படுத்தல் அவருடைய அரசியல் பிரதிநிதித்துவப்படுத்தலை சிதைக்கின்றது. ஆயர் குறிப்பிட்ட மதவரையறைகளுக்குள் நின்று தமிழினத்தின் அரசியல் கோரிக்கைகளைப் பிரதிபலித்து பிரநிதித்துவப்படுத்தவில்லை. மாறாக ஒட்டுமொத்த அரசியல் கோரிக்கைகளை மாற்று அரசியல் பிரதிநிதித்துவ வெளிக்கூடாக தமிழினத்தின் பிரதிநிதியாக நின்று வெளிப்படுத்தியவர்.

ஆயரும் தமிழ்த்தேசியமும்

2009 ற்கு பின்னரான தமிழ்த்தேசிய வெளியின் அரசியல் வரலாற்றுப் பின்புலம் மாற்றமடைந்த சூழமைவில் தமிழ்த்தேசிய அரசியலின் புரிதல் பற்றிய கேள்விகள் பொதுவெளியில் எதிர்மறையாக எழுப்பப்பட்டது. தமிழ்த்தேசிய வெளியை சிதைப்பதற்கான உத்தியாக அது கையாளப்பட்ட போதும் அவ் உத்திகள் தமிழ்த்தேசிய அணுகுமுறைகள் சார்ந்ததே தவிர தமிழ்த்தேசியத்தின் அடிப்படைகளை ஒருபோதும் கூறுபோட்டதில்லை. வரலாற்றில் தமிழ்த்தேசியம் பல்வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியது, அந்த அணுகுமுறைகளைச் சுய விமர்சனத்திற்குட்படுத்தல் தமிழ்த்தேசியத்தின் அடிப்படைத்தன்மைக்கு வலுச்சேர்க்குமே தவிர அடிப்படைத்தன்மையிலிருந்து விலகப்போவதில்லை. தமிழ்த்தேசியம் பிரத்தியேக அல்லது தவிர்த்தல் தன்மையை( மற்றவர்களின் இருப்பைத் தவிர்த்து அல்லது நிராகரித்து தமிழ்த் தேசியம் கட்டமைக்கப்படவில்லை) கொண்டதல்ல என்பதற்கு உதாரணமாக வடக்கிலிருந்த முஸ்ஸிம்களை வெளியேற்றியதை தவறென்று சுட்டிக்காட்டினார், அதேபோல் வடக்கு- கிழக்கில் பாரம்பரியமாக முஸ்ஸிம்கள் இருந்த இடத்தில் அவர்கள் மீள் திரும்ப வேண்டும் என்பதற்காக உழைத்த அதே நேரத்தில் முஸ்ஸிம்களின் நில ஆக்கிரமிப்பை கண்டிக்கவும் தவறவில்லை. வடக்கு- கிழக்கில் பாரம்பரியமாக இருந்த சிங்கள மக்களை வரவேற்றார். ஆனால் வடக்கு- கிழக்கு சிங்கள மயப்படுத்தலை தவிர்த்தார். தமிழ்த்தேசியத் தன்மை இன்னொரு குழுமத்தின்  கூட்டுரிமையை மறுப்பதாகவோ, நிராகரிப்பதாகவோ இல்லை என்பதோடு மட்டுமல்ல அவற்றை வலுவூட்டுவதாகவும் அமைந்திருந்தது.

தமிழ்த்தேசியத்தை பிரச்சினைக்குரிய அடிப்படைக் காரணியாக அரசியல் கட்டமைப்புச் செய்ய முற்பட்ட போது தமிழ்த்தேசியம் அடக்குமுறைக்கெதிர்வினையாக எழுச்சி பெற்றதே எனவும் தமிழ்த்தேசியம் சிங்கள-பௌத்த மக்களுக்கெதிரானதும் அல்ல, முஸ்ஸிம் மக்களுக்கும் எதிரானது அல்ல, சிங்கள-பௌத்த அடக்குமுறைக்கெதிரானது. ஆனால் சிறீலங்காவின் தேசிய ஊடகங்கள் அவ்வுண்மைகளை மழுங்கடித்து மறைந்த ஆயரை சிங்கள, முஸ்ஸிம் மக்களினங்களுக்கு எதிராக கட்டமைத்ததை வரலாறு ஒருபோதும் மறக்காது. உண்மை, நீதி மறுக்கப்படும் போது குரல் கொடுத்ததை விடுதலைப்புலிகளும் ஏற்றுக்கொள்வர். விடுதலைப்புலிகள் தொடர்பில் அவர்களுடைய அணுமுறை தொடர்பான விமர்சனத்தை முன்வைத்து அவர் எழுதிய கடிதங்கள் சாட்சியம் கூறும். தீவிரவாதியாக, பயங்கரவாதியாகச் சித்தரித்து மக்களிடமிருந்து ஆயரை அந்நியப்படுத்துவதற்கான முயற்சியை சிறீலங்கா அரசு மேற்கொண்டிருந்ததை மக்கள் அனைவரும் அறிவர்.

பல்சமய உரையாடல் முன்னெடுப்புக்கள் மூலம் ஏனைய இன, மதங்களுக்கிடையே தமிழின ஆதரவு அலையை திரட்டுவதன் மூலம் தமிழின அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வை முன்னெடுக்க முடியும் என நம்பினார். பல தெற்கு முற்போக்கு சக்திகளுடனான உரையாடல்களிலிருந்து, முற்போக்குச் சிந்தனையுள்ள சக்திகளின் கூட்டிணைவு தமிழின விடுதலைக்கு இன்றியமையாதது எனக்கூறி வந்ததும் அவற்றை ஒருங்கிணைத்துத் தமிழின அழிப்பு பற்றியும், தமிழின அரசியல் தீர்வு பற்றியும் கலந்துரையாடல்களை ஒருங்கிணைத்தார். ஆயரின் தமிழினப் படுகொலைக் கோரிக்கையை சர்ச்சைக்குரியதாக்கி அதிலிருந்து அரசியல் இலாபம் தேட முற்பட்டவர்களை அறிந்திருந்தும், தமிழினப் படுகொலைக் கோரிக்கையையும் சர்வதேச விசாரணையூடு மாத்திரமே நீதி கிடைக்க முடியும் என்பதிலே உறுதியாய் இருந்தமை விமர்சனத்திற்குரியதாய் இருந்தும் இறுதிவரைக்கும் தனது முடிவிலே உறுதியாய் இருந்தமை அவரைக் காணச் சென்ற பலருக்கு தெரிந்திருக்கும்.

தமிழ்த்தேசிய அடிப்படைப்பண்புகளை வலுப்படுத்திக்கொண்டே தமிழின விடுதலையை அடைய முடியும் என கருத்தாய் இருந்தது மட்டுமல்லாமல், வடக்கு- கிழக்கு ஒன்றிணைந்த தாயகம் பற்றிய கனவை பல்வேறு ஒருங்கிணைக்கும் முயற்சிகளுக்கூடாக செயற்படுத்த முயன்றார். ஓருங்கிணைக்கப்பட்ட தேசத்திலிருந்து  தமிழின அரசியல் தீர்வு அணுகப்பட வேண்டும் எனவும், ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு முற்றாகச் சாத்தியமற்றது என இடித்துரைத்து, சமஸ்டி முறையினூடான அவசியத்தை முன்வைத்தார். ஒற்றையாட்சி சனநாயக முறைமையின் ஒவ்வாத்தன்மையையும், அதன் தோல்வியையும், கொழும்பு மையத்தில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளதையும் பெரும்பான்மைவாத சனநாயகத் தன்மைமையையும் சிக்கலுக்குட்படுத்தி சிறீலங்கா பல் தேசிய சனநாயக முறைமையை நோக்கி நகர வேண்டிதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

 ‘ஈழத்தமிழ் தன்மைதான் தமிழின அடையாள கட்டமைப்புக்கு அடிப்படை நாதமாக உள்ளதென நம்பிக்கை கொண்டு அந்த அடையாள அடிப்டைத் தன்மை வலுவிழந்துவிடாது தக்க வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதால் அவரை அடையாள அரசியல் செய்கின்றார் என பழி சுமத்தப்பட்டதும் நினைவில் இருக்கும்.

ஆயரைத் தமிழ்த்தேசியத்தில் இருந்து அந்நியப்படுத்த வேண்டும் என்ற சிறீலங்கா அரசின் செயற்றிட்டத்துக்கான ஒரு உதாரணத்தை மட்டும் கொடுக்கலாம் என்று நினைக்கின்றேன். ஆயரின் உடல் ஆயர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது ஆயரில்லத்துக்கு வெளியே சிவப்பு, மஞ்சள் வர்ணத்தில் வீதி அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவருடைய இறுதி ஊர்வலமான திங்கட்கிழமை இராணுவ வாகனத்தில் வந்த இராணுவத்தினரால் அவை அகற்றப்பட்டதற்குப் பலர் சாட்சி.  அவருக்காக வழங்கப்பட்ட இரங்கல் உரைகள் பெரும்பாலுமே அவரைத் தமிழ்த்தேசியத்திலிருந்து அந்நியப்படுத்தி குறிப்பிட்ட மதத்தலைவராக கட்டமைக்கப்பட்ட சொல்லாடல் பயன்படுத்தல்களையும், அவர் முதன்மையாக முன்வைத்த ஈழத்தமிழ்த் தன்மை அடையாளத்தை முன்வைத்து சிங்கள அரசு மேற்கொண்ட தமிழின அழிப்புக்கோரிக்கை ஒரேயொரு தடவை மட்டும் உச்சிரக்கப்பட்டதையும் தமிழ்த்தேசிய நீக்க அரசியலினுடைய பிரதிபலிப்பாகவே கொள்ள வேண்டியிருக்கும்.

அரசியல் கதாநாயகத் தன்மையை கட்டவிழ்த்தல்

2009ற்குப் பின்னர் அரசியல் கதாநாயக தன்மை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தோடு  ஒன்றிக் கட்டமைக்கப்பட்டு, பிரதிநிதியைச் சுற்றித் தொண்டர், பின்பற்றுபவர் வட்டத்தை உருவாக்குகின்ற தன்மை தோற்றம் பெறுவதை அவதானிக்கலாம். தலைமைத்துவத்திற்கும் கதாநாயகத் தன்மை உருவாக்குகின்ற கதாநாயகர்களில் தங்கியிருக்கின்ற தொண்டர் தன்மைக்குமிடையே பாரிய வெளி இருக்கின்றதை அறிகின்ற போது கதாநாயகர்கள் தலைவர்களாக இருக்க முடியாது. என்பதை தீர்மானிக்கலாம். அதேவேளை தலைமைத்துவம் தொண்டர்களை உருவாக்க முடியாது. அரசியல் கதாநாயகத் தன்மையில் மேலோங்கியிருப்பது ‘விரைவான பழுது நீக்கும் தன்மை’ (Quick repair).

அது பெரும்பாலும் மீட்பர் மனப்பான்மையில் கட்டமைக்கப்பட்டதாய் அமைந்திருக்கும். மீட்பர் மனப்பாங்கு அடிப்படையில் காலனித்துவ தன்மை கொண்டது. மேலிருந்து கீழ் நோக்கிய அணுகுமுறையில் மக்களுக்கும் கதாநாயகனுக்குமிடையிலான அந்நியத் தன்மை அவர்களை கதாநாயகர்களாகக் கட்டமைக்கின்றது. அரசியல் கதாநாயகத் தன்மை, தமிழ்த் தேசியத்துடன் முரண்பாட்டைக் கொண்டிருக்கின்றது. விடுதலைப்போராட்டத்தில் நீண்ட கால அர்ப்பணிப்பு அவசியமாகின்றது, கதாநாயகத் தன்மையில் அப்படியில்லை. தமிழ்த்தேசிய வெளியில் அரசியல் கதாநாயகர்களின் உடனடிப் பழுது நீக்கும் முறைமை செல்லுபடியற்றது. ஆயர் நீண்ட கால அர்ப்பணிப்புடனான தலைமைத்துவத்தில் நம்பிக்கை கொண்டவராதலால் தான் அரசியல் கதாநாயகத் தன்மையை கட்டவிழ்க்க முற்பட்டார்.

 

https://www.ilakku.org/?p=47294

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.