Jump to content

ஏன் பௌத்தம் தழுவினேன்?”: அம்பேத்கரின் உரை


Recommended Posts

”ஏன் பௌத்தம் தழுவினேன்?”: அம்பேத்கரின் உரை

 

1956 -ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி நவ இந்தியாவின் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தினமாகும். ஏனென்றால் இந்த தினத்தில்தான் டாக்டர் அம்பேத்கரும் அவருடைய 5,00,000 ஆதரவாளர்களும் திரிசரணத்தையும் பஞ்ச சீலத்தையும் பாராயணம் செய்து பகிரங்கமாக புத்த மதத்தை தழுவினர். மகாராஷ்டிரா பிரதேசத்தைச் சேர்ந்த நாகபுரி நகரில் 14 ஏக்கர் காலி நிலத்தில் இந்த மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தாம் மதம் மாறியது சம்பந்தமான சொற்பொழிவை  1956 அக்டோபர் 15 ஆம் தேதி நிகழ்த்தினார்.

எனது பௌத்த சகோதரர்களே,

எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்திருப்பவர்களே, நேற்றும், இன்று காலையும் மதமாற்ற சடங்கு நடைபெற்ற இடத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வது சிந்தனையாளர்களுக்கு அநேகமாகக் கடினமாக இருக்கக் கூடும். அவர்களது அபிப்பிராயத்திலும் எனது அபிப்பிராயத்திலும் நேற்று நடைபெற்ற மதமாற்ற நிகழ்ச்சி இன்றும், இன்று நடைபெற்ற நிகழ்ச்சி நேற்றும் நடைபெற்றிருக்க வேண்டும். இந்தப் பொறுப்பை நாங்கள் ஏன் ஏற்றுக்  கொண்டோம். இதற்கு அவசியம் என்ன, இதன் விளைவு யாது என்பதைத் தெரிந்து கொள்வது இன்றியமையாதது. இதைப் புரிந்து கொண்டால்தான் எங்கள் பணியின் அடித்தளம், அஸ்திவாரம் வலுவாக இருக்கும். இந்தப் புரிதல் நிகழ்ச்சி ஏற்கனவே நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் சில விஷயங்கள் நிச்சய மற்று இருப்பதால் இவ்வாறு இயல்பாகவே நடைபெறுகிறது. இந்த சமயச் சடங்கைப் பொறுத்தவரையில் என்ன நடைபெற வேண்டுமோ அது நடைபெற்றுள்ளது. எனினும் நாட்கள் மாறிவிட்டதால் எதுவும் கெட்டு போய் விடவில்லை.

 

பலர் பின்வரும் கேள்வியை என்னிடம் கேட்டனர்: இந்த வைபவம் நடைபெறுவதற்கு நாகபுரியை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? இந்த விழா ஏன் வேறு ஏதேனும் ஊரில் நடைபெறவில்லை? ஆர்.எஸ்.எஸ்.ஸின் (ராஷ்ட்ரிய சுவயம் சேவக் சங்) ஒரு பெரிய பட்டாளம் நாகபுரியில் இருப்பதால் அவர்களைத் திக்கு முக்காடச் செய்யவே இந்த விழா இந்நகரில் ஏற்பாடு செய்யப்பட்டதாக சிலர் கூறுகின்றனர் இது உண்மை அல்ல. இந்தக் காரணத்துக்காக இந்த விழா நாகபுரியில் நடைபெறவில்லை. எங்கள் பணி பிரம்மாண்டமானது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் அதற்கு மிக முக்கிய மானது.  எனது மூக்கை சொரிந்து கொண்டு சகுனம் சரியாக இல்லை என்று கூற எனக்கு நேரம் கிடையாது.

இந்த இடத்தைத் தெரிந்தெடுத்தற்கான காரணம் வேறு. இந்தியாவில் புத்த மதத்தைப் பற்றிப் பிரசாரம் செய்தவர்கள் நாகா மக்களே என்பதை பௌத்த வரலாற்றைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்வார்கள். நாகர்கள் ஆரியர்களின் உக்கிரமான பகைவர்கள்; ஆரியர்களுக்கும் ஆரியல்லாதவர்களுக்கும் இடையே பல உக்கிரமான போர்கள் நடைபெற்றுள்ளன. நாகர்களை ஆரியர்கள் சுட்டெரித்த நிகழ்ச்சிகளை புராணங்களில் படிக்கலாம். அகஸ்தியரால் ஒரே ஒரு நாகரை மட்டும் காப்பாற்ற முடிந்தது. அவரது வழித் தோன்றியவர்களே நாங்கள்.

மிகக் குரூரமான அடக்குமுறை, ஒடுக்குமுறையைச் சகித்துக்கொண்டு வந்த நாகா மக்களுக்கு இதிலிருந்து, மீள ஒரு மாமனிதர் தேவைப்பட்டார். அந்த மாமனிதரை அவர்கள் கௌதம புத்தரில் கண்டனர். எனவே, அவர்கள் மகான் புத்தரின் போதனைகளை இந்தியா முழுவதிலும் பரப்பினர். அப்படிப்பட்ட நாகர்கள் நாங்கள். நாகா மக்களின் பிரதான உறைவிடம் நாகபுரியிலும் அதனைத் சுற்றிலுமே அமைந்திருந்தது. அதனால் தான் இந்த நகரம் நாகபுரி என்று அழைக்கப்படுகிறது. நாகர்களின் நகரம் என்று இதற்குப் பொருள். இந்த இடத்திலிருந்து சுமார் 27 மைல் தொலைவில் ஒரு குன்று இருக்கிறது. நாகர்ஜன் குன்று என்பது அதன் பெயர். இதற்கு அருகில் ஓடும் நதியின் பெயர் நாகா நதி என்பதாகும். இங்கு வசிக்கும் மக்கள் காரணமாகவே இந்த நதி இப் பெயரைப் பெற்றது. நாகா மக்கள் வாழும் பிரதேசத்தின் வழியாகப் பிரவகித்துச் செல்லும் நதி நாகா நதியாகும்.

 

இந்த இடத்தை அதாவது நாகபுரியைத் தேர்ந்தெடுத்ததற் கான பிரதான காரணம் இதுதான். இதைத் தவிர வேறு எவரை யும் சினம் கொள்ளச் செய்யும் நோக்கம் ஏதும் எனக்கு அறவே இல்லை. அதுவும் ஆர்.எஸ்.எஸ். பிரச்சினை என் மனதில் துளிகூட இடம் பெறவில்லை. இந்த ரீதியில் எவரும் இதனை அர்த்தப் படுத்திக் கொள்ளக்கூடாது.

எதிர்த்தரப்பினருக்கு இது விஷயத்தில் வேறு காரணங்கள் இருக்கக் கூடும். எதிர்ப்பைக் காட்டுவதற்காக இந்த இடம் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். இந்தப் பணியைத் தொடங்கியதற்காகப் பலர் என்னை குறை கூறியுள்ளனர். பத்திரிகைகளும் என்னைத் தாக்கி எழுதியுள்ளன. சிலருடைய விமர்சனம் மிகவும் கடுமையாக உள்ளது. பரிதாபத்துக்குரிய தீண்டப்படாத என் சகோதரர்களை நான் தவறான பாதையில் இட்டுச் செல்லுகிறேன் என்பது அவர்களது கருத்து. இன்று தீண்டப்படாதவர்களாக உள்ளவர்கள் என்றென்றும் தீண்டப்படாதவர்களாக இருப்பார்கள் என்றும் தற்போது பெற்றுள்ள உரிமைகளை அவர்கள் இழப்பார்கள் என்றும் கூறி அவர்கள் எங்கள் மக்களை தவறான பாதையில் இட்டுச் சென்று வருகின்றனர்; வழக்கமான பாதையையே பின்பற்றுங்கள் என்று எங்களில் கல்வியறிவில்லாதவர்களுக்குப் போதனை செய்து வருகின்றனர். இளைஞர்கள், முதியவர்களில் சிலரை வழி தவறச் செய்யக் கூடும். மக்களின் உள்ளங்களில் ஏதேனும் ஐயங்கள் ஏற்படு மானால் அந்த ஐயங்களை அகற்றுவது நமது கடமையாகும். இவ்வாறு அவர்களது ஐயங்களை அகற்றுவது நமது இயக்கத்தின் அடித்தளத்தை, அஸ்திவாரத்தைப் பலப்படுத்தும், வலுப்படுத்தும்.

இறைச்சி உண்ணக்கூடாது என்ற ஓர் இயக்கம் கடந்த காலத்தில் நம் மத்தியில் இருந்து வந்தது. தீண்டத்தக்கவர்கள் இதனைத் தங்கள் தலையில் விழக்கூடிய ஓர் இடிபோல் கருதினர். உயிரோடிருக்கும் எருமையின் பாலை அவர்கள் குடிக்கலாம். எருமை இறந்த பிறகு அதன் உடலை நம் தோள்களில் நாம் சுமந்து செல்ல வேண்டும் என்பது விசித்திரமான பழக்கம் அல்லவா. இறந்து போன உங்கள் தாயை சுமந்து செல்ல எங்களை ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று அவர்களை நாம் கேட்கிறோம். இறந்துபோன எருமை அவர்கள் நமக்குத் தருவது போல் காலமான தங்கள் தாயை அவர்கள் நமக்குத் தர வேண்டும். சிறிது காலத்திற்கு முன்னர் யாரோ ஒருவர் ‘கேசரி’யில் பின்வருமாறு எழுதினார்; சில கிராமங்களில் ஆண்டுதோறும் 50 கால்நடைகள் இறக்கின்றன; அவற்றின் இறைச்சி ஒருபுறமிருக்க அவற்றின் தோல், கொம்புகள், எலும்புகள், வால்கள் முதலியவற்றின் விற்பனையிலிருந்து 500 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். இதனை அவர்கள் இழக்கப் போகிறார்களா? உண்மையில் இத்தகை பிரச்சாரத்துக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் என்ன? இத்தகைய பிரச்சாரத் துக்கு நமது சாகேப் (தலைவர்) பதிலளிக்கவில்லை என்றால் அவர் வேறு என்னதான் செய்யப் போகிறார் என்று நமது மக்கள் கேட்கின்றனர்.

 

ஒரு சமயம் ஒரு கூட்டத்தில் பேசுவதற்காக சங்கம்னருக்குச் சென்றிருந்தேன். அங்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அச்சமயம் ‘கேசரி’பத்திரிகையிலிருந்து ஒரு நிருபர் அங்கு வந்திருந்தார். அவர் எனக்கு ஒரு துண்டு காகிதம் அனுப்பி அதில் பின்வருமாறு கேட்டிருந்தார்: இறந்து போன பிராணிகளைச் சுமந்து செல்ல வேண்டாம் என்று உங்கள் மக்களுக்கு நீங்கள் ஆலோசனை கூறி வருகிறீர்கள். பாவம், அவர்கள் எவ்வளவு பரிதாபத்துக்குரியவர்கள்! அவர்களது பெண்களுக்கு உடுக்க சேலை இல்லை; அணிய ரவிக்கை இல்லை, உண்ண உணவில்லை, வீடு வாசல் நிலம்புலம் இல்லை. இவ்வாறு இருக்கும் போது தோல், இறைச்சி, சாணம் முதலியவற்றிலிருந்து வருடம் 500 ரூபாய் வருமானம் கிடைப்பதை விட்டு விட்டு வரும்படி நீங்கள் அவர்களுக்குப் பரிந்துரைக்கிறீர்கள். இது உங்கள் மக்களுக்குப் பெரும் இழப்பு இல்லையா?’’

நான் கேட்டேன்: ‘’உங்கள் கேள்விக்கு நான் எங்கு பதிலளிக்க வேண்டும்? இங்கே இந்த நடைக்கூடத்தில் பதிலளிக்கட்டுமா, அல்லது கூட்டத்தில் பதிலளிக்ககட்டுமா? மக்கள் மத்தியில் பதிலளிப்பதுதான் சாலச் சிறந்தது’’. அந்த நபரிடம் நான் மேலும் கேட்டேன்: ‘’இது மட்டும்தானா அல்லது வேறு ஏதேனும் கேட்க நீங்கள் விரும்புகிறீர்களா?’’அவர் சொன்னார்: ‘’இதற்குப் பதிலளித்தால் போதும் அவ்வளவு தான்’’. அந்த நபரை நான் கேட்டேன். ‘’உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? நீங்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்?’’அவர் கூறினார்: ‘’எனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள்’’. நான் சொன்னேன்: அப்படியானால் உங்கள் குடும்பம் பெரிது. எனவே நீங்களும் உங்கள் உறவினர்களும் கிராமத்தில் இறந்து போன எல்லா விலங்குகளையும்  சுமந்து சென்று 500 ரூபாய் சம்பாதிக்கலாம் இல்லையா? இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தோடு வருடம் 500 ரூபாய் வருமானம் கிடைக்க நான் ஏற்பாடு செய்கிறேன். என்னுடைய மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம் கிடைக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். அப்படியிருக்கும் போது நீங்கள் ஏன் இந்த அனுகூலத்தைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? ஏன் இதை நீங்கள் செய்யக்கூடாது? இதனை நாம் செய்தால் நாம் பயனடைவோம். இதனை நீங்கள் செய்தால் இது உங்களுக்கு அனுகூலமாக இருக்காதா? செத்த பிராணிகளை சுமந்து செல்லுங்கள்’’என்று கூறினேன்.

 

நேற்று ஒரு பிராமண இளைஞன் என்னிடம் வந்தான்; அவன் கேட்டான்; ‘நாடாளுமன்றத்திலும் மாகாண சட்ட மன்றங்களிலும் உங்களுக்கு தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள் ளன. அவற்றை ஏன் துறக்கிறீர்கள்?’நான் சொன்னேன்: ‘ நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் உள்ள இடங்களை நிரப்புகிறீர்கள். பணித்துறைகளிலுள்ள காலி இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த இடங்களுக்கு எத்தனை எத்தனையோ, பிராமணர்களும் ஏனையோரும் விண்ணப்பித்து வருகிறார்கள். பணித்துறைகளில் நடப்பது போல் பிராமணர்களாகிய நீங்கள் மஹர்களாகி இந்த ஒதுக்கப்பட்ட இடங்களை ஏன் நிரப்பக்கூடாது?’’.

நாங்கள் அடைந்துள்ள இழப்புக்காக நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்பது தான் அவர்களிடம் நான் கேட்கும் கேள்வி. மனித ஜீவன்களுக்கு அருமையிலும் அருமையானது விலைமதிப்பற்ற சுயமரியாதையே தவிர பொருளாதார ஆதாயமோ அனுகூலமோ அல்ல. நற்பண்பும் நற்குணமும் படைத்த ஒரு பெண்மணி ஒழுக்கக்கேடால் என்ன பலன் கிடைக்கும் என்பதை நன்கு அறிவார். எங்கள் பம்பாயில் விலைமாதர்கள் வசிக்கும் ஒரு வட்டாரம் உள்ளது. இங்குள்ள பெண்கள் காலை 8 மணிக்கு எழுந்திருக்கிறார்கள்; அருகிலுள்ள உணவு விடுதியில் காலை சிற்றுண்டி கொண்டு வரும்படி பணிக்கிறார்கள் (பெண்கள் பேசும் குரலில் இங்கு டாக்டர் அம்பேத்கர் பேசுகிறார்) ‘’ஓ சுலைமான் ஒரு தட்டுக் கொத்துக் கறியும் (கீமா) ரொட்டியும் கொண்டுவா. அவ்வாறே சுலைமான் தேநீர், கேக்கோடு கொத்துக்கறியைக் கொண்டு வருகிறார். ஆனால், என் தாழ்த்தப்பட்ட சகோதரிகளுக்குச் சாதாரண ரொட்டியும் சட்னியும் கூடக் கிடைப்பதில்லை. அப்படியிருந்தும் அவர்கள் அன்பும் பண்புமிக்க விழுமிய வாழ்க்கை நடத்துகிறார்கள்.

நாங்கள் தன்மானத்துக்காகவும் சுயமரியாதைக்காகவும் போராடி வருகிறோம். மனிதனை முழுநிறைவான நிலைக்கு இட்டுச் செல்ல நாங்கள் தயாராகி வருகிறோம். அதன் பொருட்டு எத்தகைய தியாகமும் செய்ய சித்தமாக இருக்கி« றாம். இந்தப் பத்திரிகையாளர்கள் (அவர்களைச் சுட்டிக்காட்டி, கடந்த நாற்பது ஆண்டுகளாக என்னை அதலகுதலப்படுத்தி வருகிறார்கள். இன்றைய நாள் வரை அவர்கள் என்னைப் பற்றி எவ்வளவு இழித்தும் பழித்தும் பேசி வருகிறார்கள் தெரியுமா! இப்போதாவது இதைப்பற்றிச் சிந்திக்கும் படி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்; இந்தச் சிறுபிள்ளைத்தனத்தைக் கைவிட்டு விவேகத்துடன் நடந்து கொள்ளும்படி அவர்களை வேண்டிக் கொள்கிறேன்.

 

புத்த மதத்துக்கு மாறிய பிறகும் கூட எனக்குரிய அரசியல் உரிமைகளை நான் பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. (அம்பேத்கர் வாழ்க என்று இடிமுழக்கம் போன்ற கோஷங்கள் ஒலிக்கின்றன). என் மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை என்னால் கூற இயலாது. தற்போதைய நிலைமையில் நாம் அதிகம் போராட வேண்டும். பௌத்தத் தைத் தழுவியதால் சிரமங்கள் இருக்கவே செய்யும். அவற்றை எவ்வாறு தவிர்க்க வேண்டும், எத்தகைய முயற்சிகளையும், வாதங்களையும் நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி நான் முற்றிலும் சிந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேன். எனது பையில் நிறைய தீர்வுகள் இருக்கின்றன. அவை என்ன என்பதை நான் நன்கு அறிவேன். நான் பெற்ற இந்த உரிமைகள் மக்களுக்காகப் பெற்றவையாகும் இந்த உரிமைகள் பெற்ற ஒருவர் அவற்றை நிச்சயம் பாதுகாக்கவே செய்வார். இந்த உரிமைகளையும் வசதிகளையும் பெற்றவனாக நான் இருந்தால், அவற்றை மீண்டும் பெறும் நம்பிக்கை எனக்கு உண்டு. ஆதலால், இப்போது நீங்கள் என்  மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும். எதிர்ப்பிரசாரத்தில் அணுவளவும் உண்மை இல்லை.

ஒரு விஷயம் குறித்து நான் வியப்படைகிறேன். எங்கு பார்த்தாலும் பரந்த அளவில் விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால். நான் ஏன் புத்த மதத்தைத் தழுவினேன் என்று எவருமே என்னிடம் கேட்கவில்லை. வேறு மதத்தைத் தழுவாமல் இந்த மதத்தை மட்டும் நான் ஏன் தழுவினேன்? எந்த மதமாற்ற இயக்கத்திலும் இது மிக முக்கியமான அடிப்படையான கேள்வியாகும். மதம் மாறும்போது எந்த மதத்துக்கு மாறவேண்டும், அதனை ஏன் தழுவ வேண்டும் என்பதை அடிப்படையான கேள்வியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 1935 இல் இயோலில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இந்து மதத்தை நிராகரிக்கும், புறக்கணிக்கும் இயக்கத்தை நாங்கள் தொடங்கினோம். நீண்ட நாட்களுக்கு முன்பே நான் ஒரு பிரதிக்கினை எடுத்திருந்தேன். நான் ஓர் இந்துவாகப் பிறந்தாலும் ஓர் இந்துவாகச் சாகமாட்டேன் என்பது தான் அந்தப் பிரதிக்கினை. அதனை நான் நேற்று நிறைவேற்றிக் காட்டினேன். இதற்காக நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். மிகவும் இரும்பூதெய்துகிறேன். நரகத்திலிருந்து விடுபட்டதாக உணர்கிறேன். கண்ணை மூடிக் கொண்டு என்னைப் பின்பற்றுபவர்களை, பௌத்தத்தைத் தழுவ விரும்புபவர்களை நான் விரும்பவில்லை. பௌத்தத்தைத் தழுவ விரும்புபவர்கள் நன்கு தெரிந்து, புரிந்து, உணர்ந்து அதனை ஏற்க வேண்டும். அவர்களது மனச்சான்று அந்த மதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

மனித குலம் முன்னேறுவதற்கு மதம் முற்றிலும் இன்றியமையாதது. காரல் மார்க்ஸைப் படித்த பிறகு சமய மறுப்பாளர் குழு ஒன்று உருவாயிற்று என்பதை நான் அறிவேன். சமயம், மதம் பயனற்றது, வீணானது என்பது அவர்களது கருத்து. அவர்கள் மதத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை அதனை மதிப்பதில்லை. காலையில் அவர்கள் காலையுணவு உண்பார்கள். அதில் ரொட்டி, பாலேடு, வெண்ணெய், கோழி இறைச்சி முதலியவை இருக்கும்; பின்னர் மதியம் முழுச் சாப்பாடு, ஆழ்த்த தூக்கம்; அடுத்துத் திரைப்படங்கள் பார்த்தல், இத்யாதி. இதுதான் அவர்களது வாழ்க்கைக் கோட்பாடு. இவைதான் நடைமுறைத் திட்டம். என்னுடைய கருத்து – என் தந்தை ஏழையிலும் ஏழை; இத்தகைய உயர் இன்ப வாழ்க்கையை நான் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாது. என்னுடைய வாழ்க்கை போன்ற மிகவும் சிரம வாழ்க்கையை எவரும் ஒருபோதும் வாழ்ந்திருக்க முடியாது. எனவே சுகபோகங்கள் இல்லை என்றால் ஒரு மனிதனுடைய வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக, மிகுந்த இன்னல் நிறைந்ததாக இருக்கும் என்ற உணர்வு எனக்கு இருந்தது. பொருளாதார உயர்வுக்கான, மேம்பாட்டுக்கான இயக்கம் எவ்வளவு அவசியம் என்பது எனக்குத் தெரியும். அத்தகைய இயக்கத்துக்கு நான் எதிரி அல்ல. மனிதன் பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டும்.

ஆனால், இந்த விஷயத்தில் ஒரு முக்கியமான தனித் தன்மையைக் காண்கிறேன். எருமைக்கும் காளைக்கும் மனிதனுக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. காளைக்கும் எருதுக்கும் தினமும் தீவனம் தேவைப்படுகிறது. மனிதனுக்கும் உணவு தேவை. ஆனால் இவை இரண்டுக்கும் இடையே ஒரு வேறுபாடு இருக்கிறது. எருமைக்கும் காளைக்கும் மனம் என்று ஒன்று இல்லை; மனிதனுக்கு உடலும் அத்துடன் மனமும் இருக்கிறது. எனவே இவை இரண்டைப் பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும். மனம் வளர்க்கப்பட வேண்டும். அது பண்படுத்தப்பட வேண்டும். அது பண்படுத்தப்படுவதற்கு உள்ளாக வேண்டும். உணவைத் தவிர, மனிதனுக்கும் பண்பட்ட மனதுக்கும் இடையே எந்த ஒட்டும் உறவும் இல்லை என்று வாதிக்கும் நாட்டுடனோ, மக்களுடனோ எத்தகைய சம்பந்தமும் வைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. ஏனைய மக்களுடன் மனிதன் உறவு வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஆரோக்கியமான உடலும் அதே போன்று ஆரோக்கியமான பண்பட்ட மனமும் இருப்பது அவசியம். இல்லையென்றால் மனித குலம் முன்னேறிவிட்டதாகக் கூற முடியாது.

 

மனிதனது உடல் அல்லது உள்ளம் அதாவது மனம் ஏன் அவல நிலையில் உள்ளது? அவனது உடல் நோய்வாய்ப் பட்டதாக இருப்பதோ அல்லது அவனது மனம் உற்சாகமற்று இருப்பதோ இதற்கான காரணங்களாகும். மனதில் உற்சாகம் இல்லையென்றால் முன்னேற்றம் சாத்தியமில்லை. அவனுக்கு இந்த உற்சாகம் ஏன் இருப்பதில்லை? முன்னேறுவதற்கு எத்தகைய வாய்ப்பும் இல்லாதிருப்பதோ அல்லது அவனுக்கு நம்பிக்கை இல்லாதிருப்பதோ முதல் காரணமாகும். இவ்வாறிருக்கும்போது அவன் எவ்வாறு உற்சாகமானவனாக இருக்க முடியும்? அவன் சீர்குலைந்தவனாக இருக்கிறான். தனது உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்போது அவன் உற்சாகமடைகிறான். இல்லை என்றால் என்ன நடக்கும்? ஒரு பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் பின்வருமாறு கூப்பாடு போடுகிறார்: ‘ஏய், யார் இவன்? இவன் ஒரு மஹர். இந்தக் கேடுகெட்ட மஹர் பரீட்சையில் முதல் வகுப்பு பெறுவானா? அவன் ஏன் முதல் வகுப்பு பெற விரும்புகிறான்? அவன் மூன்றாம் வகுப்பு பெற்றால் போதாதா? முதல் வகுப்பு பெறுவது பிராமணனுக்குள்ள தகுதி’. இப்போதுள்ள சந்தர்ப்ப சூழ்நிலைமைகளில் இந்தப் பையன் எவ்வாறு உற்சாகம் பெறுவான்? எவ்வாறு முன்னேறுவான்? உற்சாகத்துக்கான ஆணி வேர் மனதில் பொதிந்துள்ளது, எவனது உள்ளமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றனவோ, எவன் தைரியசாலியாக இருக்கிறானோ, துன்ப துயரங்கள் மலை போல் அலைமோதினாலும் அவற்றை எல்லாம் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும் என்று எவன் திட நம்பிக்கை கொண்டிருக்கிறானோ அவனிடம்தான் உற்சாகம் கரை புரண்டோடும்; அவன் தான் அருஞ்செயல் புரிவான். இத்தகைய விசித்திரமான சித்தாந்தம் இந்து மதத்தில் நிலை கொண்டுள்ளது; இது ஒருபோதும் உற்சாகத்தைத் தோற்றுவிக்காது. சந்தர்ப்ப சூழ்நிலைமைகள்தான் மனிதனை உற்சாக மற்றவனாக ஆக்குகின்றன என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உறுதிசெய்யப்பட்டு வந்திருக்கிறது. இத்தகையவர்கள் தோற்றுவிக்கப்படும்போது அவர்கள் அதிகப்பட்சம் எழுத்தர் பணியை மேற்கொண்டு தங்கள் வயிற்றை நிரப்புகின்றனர். வேறு என்ன நடைபெறும்? இந்த எழுத்தர்களைப் பாதுகாப்பதற்கு ஒரு பெரிய எழுத்தர் தேவைப்படுகிறார்.

 

REPORT THIS AD

மனிதனது ஆர்வத்துக்கு, உற்சாகத்துக்கு அடித்தளமாக இருப்பது மனம். ஆலைகளின் உரிமையாளர்களைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். அவர்கள் தங்கள் ஆலைகளில் நிர்வாகிகளை நியமிக்கிறார்கள். அங்கு நடைபெற வேண்டிய பணிகளை அவர்கள் தங்கள் நிர்வாகிகளைக் கொண்டு செய்து கொள்கிறார்கள். ஆலைகளின் உரிமையாளர்கள் கெட்ட பழக்க வழக்கங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களது மனங்கள் பண்பட்ட முறையில் வளர்க்கப்படுவதில்லை. எங்கள் மனங்களில் உணர்ச்சி ஆர்வத்தைத் தோற்றுவிக்க நாங்கள் ஓர் இயக்கத்தைத் தொடங்கினோம். அப்போதுதான் எங்கள் படிப்பு ஆரம்பமாகும், இடுப்புத் துணியைக் கட்டிக் கொண்டு தான் நான் என் படிப்பைத் தொடங்கினேன். பள்ளிக் கூடத்தில் குடிப்பதற்குத் தண்ணீர் கூட எனக்கு கிடைக்கவில்லை. பள்ளிக் கூடத்தில் தண்ணீர் இல்லாமலேயே பல நாட்களைக் கழித்தேன். பம்பாயில் எல்பின்ஸ்டன் கல்லூரியில் கூட இதே நிலைமைதான் நிலவியது. சூழல் இவ்வாறு இருக்குமானால் எத்தகைய நிலைமை தோற்றுவிக்கப்படும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? எழுத்தர்கள்தான் உருவாக்கப்படுவார்கள்.

டில்லி நிர்வாகக் கவுன்சிலில் நான் இடம் பெற்றிருந்தபோது லின்லித்கோ பிரபுதான் வைசிராயாக இருந்தார். அவரிடம் நான் இவ்வாறு கூறினேன்: ‘’வழக்கமான செலவினத்தோடு, முஸ்லீம்களின் கல்விக்காக நீங்கள் அலிகார் பல்கலைக்கழகத்துக்கு மூன்று லட்ச ரூபாய் செலவிடுகிறீர்கள்’’. ஆனால் நாங்கள் இந்துக்களும் அல்ல, முஸ்லீம்களும் அல்ல. எங்களுக்கு நீங்கள் ஏதேனும் செய்ய நினைத்தால் அவர்களுக்குச் செய்வதை விட ஆயிரம் மடங்கு அதிகம் செய்ய வேண்டும். அது வேண்டாம், முஸ்லீமுகளுக்குச் செய்யப்படும் அளவாவது குறைந்த பட்சம் எங்களுக்குச் செய்யுங்கள். இதற்கு லின்லித்கோ பிரபு பின்வருமாறு கூறினார். ‘நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்களோ அதை எழுதிக் கொடுங்கள்’. அவ்வாறே நான் ஓர் அறிக்கை தயாரித்தேன். அந்த அறிக்கை இன்னும் என்னிடமே உள்ளது. ஐரோப்பியர்கள் மிகவும் பரிவிரக்கம் கொண்டவர்கள். எனது யோசனையை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் எந்த நோக்கத்துக்காக செலவிட வேண்டும் என்ற பிரச்சினை எழுந்தது. நமது சிறுமிகள் கல்வி கற்றவர்கள் அல்ல. எனவே அவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்பாடு செய்து தரப்படவேண்டும். அவர்களுக்கு உணவு வசதி செய்து தரவேண்டும். இதன் பொருட்டு பணம் செலவிடப்பட வேண்டும். நமது பெண்களுக்குக் கல்வி வசதி செய்து தந்து, அவர்கள் படித்தவர்களானால் பல்வேறு உணவு வகைகளைத் தயாரிப்பதற்கு என்ன வசதி இருக்கிறது? அவர்கள் கல்வி கற்பதன் இறுதிப் பலன் என்ன? அரசாங்கம் இதர துறைகளுக்குப் பணம் செலவிடுகிறது; கல்விக்கு செலவிடாமல் நிறுத்திக் கொள்கிறது. எனவே, ஒரு நாள் லின்லித்கோ பிரபுவிடம் சென்றேன்; கல்விக்காக அரசாங்கம் பணம் செலவிடுகிறது. அவரிடம் நான் பின்வருமாறு கூறினேன்; ‘’நீங்கள் கோபப்படவில்லை என்றால் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நான் ஐம்பது பட்டதாரிகளுக்கு இணையானவன். இல்லையா?’’இதை அவர் ஒப்புக் கொண்டார். அவரிடம் மீண்டும் கேட்டேன். ‘’இதற்கு என்ன காரணம்?’’அவர் சொன்னார்: ‘’அந்தக் காரணம் எங்களுக்குத் தெரியாது. நான் சொன்னேன்:’’நான் ரொம்பவும் படித் திருக்கிறேன். நான் நினைத்தால் அரச சிம்மாசனத்திலேயே உட்கார முடியும். இத்தகையவர்கள்தான் எனக்கு வேண்டும். ஏனென்றால் இங்கிருந்து ஒட்டுமொத்தமாக நமது கண்காணிப்பையும் நாம் மேற்கொள்ள முடியும். நமது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், இத்தகைய கூரிய நோக்கு கொண்ட மனிதர்கள் படைக்கப்பட வேண்டும். ஒரு சாதாரண எழுத்தர் என்ன செய்ய முடியும்? நான் கூறியதை அந்தக் கணத்திலேயே லின்லித்கோ பிரபு ஏற்றுக் கொண்டார். மேற்படிப்புக்காகப் பதினாறு பேர் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டனர். சில மண் பானைகள் வானலில் பாதி வேக வைத்துச் சுடப்படுவதும், சில பானைகள் முற்றிலும் வேக வைத்து சுடப்படுவதும் உண்டல்லவா, இதே போல் அந்தப் பதினாறு பேர்களில் சிலர் பாதி வேக வைத்துச் சுடப்பட்டவர்களாயும், சிலர் முழுவதுமாக வேக வைத்துச் சுடப்பட்டவர்களாயும் இருந்தனர். இது வேறுபட்ட விஷயம்! பின்னாளில் சி.ராஜ கோபாலாச்சாரி இந்த மேற்கல்வி திட்டத்தையே ரத்து செய்துவிட்டார்.

 

இந்த நாட்டில் இத்தகையதோர் நிலைமை நிலவவே செய்கிறது; இது வரவிருக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டு காலத்துக்கு நம்மை உற்சாக மற்றவர்களாக ஆக்கவே செய்யும். இப்படிப்பட்டதோர் நிலைமை நிலவும் வரை நமது முன்னேற்றத்தில் நமக்கு ஆர்வம் இருக்காது. இந்து மதத்தில் நாம் இருக்கும் வரை இது விஷயத்தில் நம்மால் எதுவும் செய்ய இயலாது. மனுஸ்மிருதியில் சதுர்வருணம் இடம் பெற் றுள்ளது. இந்த சதுர்வருண அமைப்பு முறை மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது. சூத்திரர்கள் குற்றேவல் பணிகளை மட்டுமே செய்ய வேண்டும் என்று மனு ஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட வர்களுக்கு ஏன் கல்வி வேண்டும்? பிராமணன் கல்வி கற்க வேண்டும், க்ஷத்திரியன் ஆயுதமேந்த வேண்டும், வைசியன் வாணிகம் செய்ய வேண்டும், சூத்திரன் குற்றேவல் புரிய வேண்டும். இவ்வகையில் யார் பயனடைவார்கள்? பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் ஓரளவு பயனடைவார்கள். ஆனால் சூத்திரர்கள் விஷயம் என்ன? இந்த மூன்று வருணத்தாரைத் தவிர இதர சாதியினரிடம் உற்சாகம் இருக்குமா? இந்த சதுர்வருண அமைப்பு முறை தற்செயலானதல்ல. இது ஒரு வழக்கமல்ல; இது சமய அமைப்பு.

இந்து மதத்தில் சமத்துவத்துக்கு இடமில்லை. ஒரு சமயம் நான் திரு. காந்தியிடம் சென்றிருந்தேன். அப்போது அவர், ‘நான் சதுர்வருண அமைப்பில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்’’என்று சொன்னார். நான் கேட்டேன்: ‘’உங்களைப் போன்ற மகாத்மாக்கள் ‘சதுர்வருணத்தை’நம்புகிறீர்களா? அது சரி இந்த சதுர்வருணம் என்பது என்ன? அது எவ்வாறு அமைந்திருக்கிறது? (இப்போது டாக்டர் அம்பேத்கர் தனது உள்ளங்கையைத் தட்டையாக வைத்துக் கொண்டு விரல்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்துக் காட்டினார்). சதுர்வருணம் உயரமாக இருக்கிறதா அல்லது தட்டையாக இருக்கிறதா. சதுர்வருணம் எங்கிருந்து தொடங்குகிறது, எங்கு முடிவடைகிறது? காந்திஜி இதற்கு பதிலளிக்கவில்லை. என்ன பதிலளிக்க முடியும்? எங்களைப் பாடழிவு செய்தவர்களும் இந்து மதத்தால் அழிந்தொழிய வேண்டும். இந்து மதத்தை அவசியமின்றி நான் குற்றம் சாட்டவில்லை. இந்து மதத்தால் எவரும் வாழ்வு வளம் பெற மாட்டார்கள். அந்த மதமே ஒரு சீரழிந்த மதமாகும்.

 

நமது நாடு ஏன் அந்நியர் ஆட்சியின் கீழ் வந்தது? 1945 வரை ஐரோப்பா போர்களில் மூழ்கிப்போயிருந்தது. எத்தனை படை வீரர்கள் கொல்லப்பட்டார்களோ அத்தனைப் படை வீரர்கள் ராணுவத்துக்குப் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். நாம் போரில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அச்சமயம் யாராலும் கூற முடியவில்லை. நமது நாட்டில் எல்லாமே அறவே மாறுபட்டதாக, வேறுபட்டதாக இருந்தது. க்ஷத்திரியர்கள் கொல்லப்பட்டால் அவ்வளவுதான். நாம் ஒழிந்தோம். ஆயுதங்கள் பெற்றிருக்கும் உரிமை நமக்கு இருந்திருந்தால் இந்த நாடு அடிமைப்பட்டிருக்காது. எவராலும் இந்த நாட்டை வெல்ல முடியாது.

இந்து மதத்தில் இருப்பதன் மூலம் எவரும் எவ்வகையிலும் வளமுற இயலாது, நலமுற முடியாது. இந்து மதத்தில் அடுக்கமைவு முறை நடைமுறையில் இருந்து வருவதால் உயர் வருணத்தவர்களும் சாதியினரும் தான் நலமுறுகின்றனர், வளம் பெறுகின்றனர், ஆனால் மற்றவர்களின் நிலை என்ன? கதி என்ன? ஒரு பிராமணப் பெண் குழந்தை பெற்ற கணமே அவருடைய கண்கள் உயர்நீதிமன்ற நீதிபதி பதவி எங்கு காலியாக இருக்கிறது என்று சல்லடைப் போட்டு துளாவுகின்றன. இதற்கு மாறாக, நமது தோட்டிப் பெண் ஒரு குழந்தையை ஈணும் போது எங்கு தோட்டி வேலை காலியாக இருக்கிறது என்று தான் அவருடைய கண்கள் தேடுகின்றன. இத்தகைய ஒரு விசித்திரமான, வேதனையான அமைப்பு முறை நிலவுவதற்கு இந்து மதத்தின் வருண – அமைப்பு முறையே காரணம். இதிலிருந்து எந்த முன்னேற்றத்தை நாம் காண முடியும்? புத்த மதத்தில் தான் வாழ்வு வளத்தையும் நலத்தையும் எய்த முடியும்.

புத்த மதத்தில் 75 சதவீத பிக்குகள் பிராமணர்கள், 25 சதவீதத்தினர் சூத்திரர்களும் ஏனையோரும். ஆனால் பகவான் புத்தர் சொன்னார்: ‘’ஓ பிக்குகளே நீங்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் சாதிகளிலிருந்தும் வந்திருக்கிறீர்கள். நதிகள் அவற்றின் மாகாணங்களில் பெருக்கெடுத்துச் செல்லும் போது தனியாகவே அவ்வாறு செல்கின்றன. ஆனால் அவை கடலில் கலந்துவிடும்போது தமது தனித்தன்மையை இழந்து விடுகின்றன; ஆறும் கடலும் ஒன்றாகி விடுகின்றன. பௌத்த சங்கம் ஒரு மகா சமுத்திரம் போன்றது. இந்த சங்கத்தில் அனைவரும் சமத்துவமானவர்கள். நதிகள் சமுத்திரத்தில் கலந்து விடும் போது எது கங்கையின் நீர், எது மகாநதியின் நீர் என்று இனம் காண முடியாது. இதே போன்று தான் நாம் புத்த சங்கத்தில் சேர்ந்துவிடும்போது நாம் நமது சாதியை இழந்து விடுகின்றோம். அனைவரும் சரிசமத்துவமாகிவிடுகிறோம். இத் தகைய சமத்துவத்தை ஒரேயொரு மாமனிதர்தான் போதித்தார். அந்த மாமனிதர்தான், மேதை தான் புத்தர் பிரான் (பலத்த கரகோஷம்).

 

‘மதம் மாறுவதற்கு ஏன் நீங்கள் இவ்வளவு காலத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள்? இத்தனை காலமாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இது முக்கியமான கேள்வி. ஒரு மதத்தின் மீது பற்று கொள்ளச் செய்வது எளிதான காரியமன்று. இது தனியொரு மனிதனின் பணியல்ல. மதத்தைப் பற்றிச் சிந்திக்கும் எவரும் இதைத் தெரிந்து கொள்ளவே செய்வர். என்னைப் போன்று இவ்வளவு பொறுப்பேற்றிருப்பவர் உலகில் யாரும் இல்லை. எனக்கு நீண்ட நெடுங்கால வாழ்க்கை கிடைக்குமானால், திட்டமிட்ட என் பணியை நிச்சயம் நிறைவேற்றுவேன். (டாக்டர் பாபாசாகெப் அம்பேத்கர் நீண்ட நெடுங்காலம் வாழ்க என்ற கோஷங்கள்   எண்திக்கும் எதிரொலிக்கின்றன.)

மஹர் ஒரு பௌத்தராவதால் அப்படி என்ன நடத்துவிடப் போகிறது என்று சிலர் கூறுவார்கள். அப்படிச் சொல்லாதீர்கள் என்று அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இது அவர்களுக்கு ஆபத்தானது. மேல் தட்டில் உள்ளவர்களும் செல்வந்தர்களும் மதத்தின் அவசியம் பற்றி உணர மாட்டார்கள். இவர்களில்  அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு வசிப்பதற்கு மாடமாளிகைகள் இருக்கின்றன; அவர்களுக்கு சேவை செய்வதற்கு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள்; அவர்களுக்குப் பணமும் பந்தாவும், செல்வமும் செல்வாக்கும் அந்தஸ்தும் மரியாதையும் இருக்கின்றன. இவ்வகையைச் சேர்ந்தவர்கள் மதத்தைப் பற்றி நினைப்பதற்கோ அல்லது அது குறித்து கவலைப்படுவதற்கோ அவசியமில்லை.

மதம் ஏழைகளுக்கு அவசியமானது. மதம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவசியமானது. ஒரு மனிதன் நம்பிக்கையை ஆதாரமாக கொண்டு தான் வாழ்கிறான். வாழ்க்கையின் ஆணிவேர், அடிவேர் நம்பிக்கையில்தான் பொதிந்துள்ளது. இந்த நம்பிக்கை இழக்கப்படுமானால் வாழ்க்கை என்ன ஆவது? மதம் நம்பிக்கையை அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு ஒரு செய்தியைக் கூறுகிறது – பயப்படாதீர்கள், வாழ்க்கை நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கும், இது உறுதி என்று – இதனால் தான் ஏழைகளும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களும் மதத்தை அரவணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

கிறிஸ்துவ மதம் ஐரோப்பாவில் பிரவேசித்தபோது ரோமாபுரியும் அதன் அண்டை நாடுகளும் மிகவும் அவல நிலையில் இருந்தன. மக்களுக்குப் போதிய உணவு கிடைக்க வில்லை. அச்சமயம் ஏழை எளிய மக்களுக்கு கிச்சடி வழங்கப் பட்டன. யார் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக மாறி னார்கள்? ஏழை எளிய மக்களும் அடித்தட்டு வர்க்க மக்களும் கிறித்தவர்களானார்கள். கிறிஸ்துவ மதம் பிச்சைக்காரர்களின் மதம் என்று நிப்பன் கூறினார். ஆனால் இதே கிறிஸ்துவ மதம் ஐரோப்பாவிலுள்ள அனைவரது மதமாக எப்படி ஆயிற்று என்ற கேள்விக்குப் பதிலளிக்க அவர் உயிரோடில்லை. அவர் உயிரோடு இருந்திருந்தால் இதற்கு அவர் பதிலளிக்க வேண்டியிருந்திருக்கும்.

புத்தமதம் என்பது மஹர்கள் மங்கர்களின் மதம் என்று சிலர் கூறுவார்கள். பிராமணர்கள் கௌதமரை ‘போ கௌதம்’என்று அழைப்பார்கள். ‘போ கௌதம்’என்றால் ‘அரே கௌதம்’என்று பொருள். இவ்வாறாக பிராமணர்கள் புத்தர் பெருமானை நையாண்டி செய்தார்கள். ராமர், கிருஷ்ணன், சங்கரர் போன்றோரின் உருவச் சிலைகளை அயல்நாடுகளில் விற்பனைக்கு வைத்தால் எத்தனை சிலைகள் விற்பனையாகும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அதே சமயம் புத்தர் பிரானின் சிலைகளை விற்பனைக்கு வைத்தால் ஒரு சிலை கூட எஞ்சியிருக்காது (பலத்த கரவொலி) இந்தியா இருக்கட்டும், வெளிநாடுகளில் சென்று பாருங்கள். உலகிற்குத் தெரிந்த பெயர் புத்தர் பிரானின் பெயராகத்தான் இருக்கும். இவ்வாறு இருக்கும்போது இந்த மதத்தைப் பரப்புவதை யாரால் எப்படி தடுக்க முடியும்!

நாங்கள் எங்கள் பாதையில் செல்லுகிறோம், நீங்கள் உங்கள் பாதையில் செல்லுங்கள். நாங்கள் ஒரு புதிய பாதையைக் கண்டுபிடித்துக் கொள்வோம். இது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. இது மேம்பாட்டுக்கும் முன்னேற்றத்துக்கும் இட்டுச் செல்லும் பாதை. இது புதிய பாதை அல்ல. இந்தப் பாதை எங்கிருந்தும் இரவல் பெறப் பட்டதல்ல. இது இங்கிருந்து பெறப்பட்டதே. இது முழுக்க முழுக்க இந்தியப் பாதை. புத்த மதம் இந்தியாவில் 2000 ஆண்டு களாக நிலைத்திருந்து வருகிறது. உண்மையைக் கூறுவதானால் பௌத்தத்தை ஏன் முன்னரே தழுவாமல் போய் விட்டோம் என்று வருந்துகிறோம். புத்தர் பிரான் போதித்த கோட்பாடுகள், சித்தாந்தங்கள் அமரத்துவம் வாய்ந்தவை. ஆனால் புத்தர் இப்படியெல்லாம் உரிமை கொண்டாடவில்லை. காலம் மாறுபடுவதற்கு ஏற்ப மாற்றம் செய்வதற்கு வழிவகை செய்யப் பட்டுள்ளது. இத்தகைய தாராளப் போக்கை வேறு எந்த மதத்திலும் காண முடியாது.

 

புத்தமதம் சிதைவுறுவதற்கு பிரதான காரணம் முஸ்லீம்களின் படையெடுப்புகளேயாகும். முஸ்லீம்கள் தங்கள் படையெடுப்புகளின் போது புத்தர் பிரானின் உருவச் சிலைகளை அழித்து சிதைத்தனர். இதுவே புத்த மதத்தின் மீது தொடுக்கப்பட்ட முதல் தாக்குதலாகும். இந்தப் படையெடுப்பு களுக்கு அஞ்சி புத்தபிக்குகள் தப்பிச் சென்றனர். சிலர் திபேத் துக்குச் சென்றனர். சிலர் சீனாவுக்கு சென்றனர். சிலர் வேறு எங்கோ சென்றனர். எந்த ஒரு மதத்தையும் பாதுகாப்பதற்குப் பொது மக்கள் ஆதரவு தேவை. வடமேற்கு எல்லைப்புறத்தில் ஒரு கிரேக்க மன்னர் ஆண்டு வந்தார். அவர் பெயர் மிலிந்தா. இந்த மன்னர் எப்போதும் விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். விவாதங்களில் பங்கேற்பது அவருக்குத் தனி மகிழ்ச்சி அளித்து வந்தது. வாதிடும் திறமையுள்ளவர்கள் என்னிடம் வந்து வாதிக்கலாம் என்று இந்துக்களிடம் அவர் கூறுவது வழக்கம். அவர் வாதத்தில் பலரை வாயடைக்கச் செய்துவிட்டார்.

ஒரு சமயம் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுடன் வாதிக்கலாம் என்று அவர் எண்ணினார். எனவே, புத்த மதத்தைச் சேர்ந்த வாதத் திறமையுள்ள எவரையேனும் அழைத்து வரும்படி கூறினார். எனவே பௌத்தர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளும்படி நாகசேனனை கேட்டுக் கொண்டனர். நாகசேனன் ஒரு படித்த மேதை பிராமணர். நாகசேனனுக்கும் மிலிந்தாவுக்கும் இடையே என்ன விவாதம் நடைபெற்றது என்பது ஒரு நூலின் மூலம் உலகுக்குத் தெரிய வந்துள்ளது. ‘மிலிந்த பன்ஹா’என்பது அந்த நூலின் பெயர். மிலிந்தா ஒரு கேள்வி கேட்டார். மதம் ஏன் சிதைந்து வருகிறது? நாகசேனன் இதற்குப் பதிலளித்து மூன்று காரணங்களை கூறினார்.

முதல் காரணம்: ஒரு குறிப்பிட்ட மதம் போதிய பக்கு வமடையாததாக இருப்பதாகும். அந்த மதத்தின் அடிப்படை சித்தாந்தங்கள் ஆழமானவையாக இருப்பதில்லை. அது ஒரு லௌகிக மதமாகிறது. இத்தகைய மதம் குறுகிற காலமே நிலைத்து நிற்க முடியும்.

 

இரண்டாவது காரணம்: நன்கு படித்த பிரசாரகர்கள் ஒரு மதத்தில் இல்லையென்றால் அந்த மதம் சீணிக்கிறது என்பதாகும். நன்கு கற்றுணர்ந்தவர்கள் மதத்தின் தத்துவத்தை திறத்தோடு தாகத்தோடு போதிக்க வேண்டும். எதிர்த்தரப் பினருடன் வாதிடுவதற்கு போதகர்கள் தயாராக இல்லை யென்றால் அப்போது அந்த மதம் சிதைகிறது.

மூன்றாவது காரணம்: மதமும், மத சித்தாந்தங்களும் படித்தவர்களுக்கு மட்டுமே இருந்து வருவதாகும். சாமானிய மக்களுக்கு கோவில்களும் புண்ணிய ஸ்தலங்களும் உள்ளன. அவர்கள் அங்கு சென்று இயற்கை கடந்த தெய்வீக சக்தியை வணங்கி ஆராதிக்கின்றனர்.

நாம் புத்த மதத்தைத் தழுவும் போது இந்தக் காரணங் களை எல்லாம் மனத்திற்கொள்ள வேண்டும். பௌத்த மத சித்தாங்கள் லௌகிகமானவை என்று எவரும் கூற முடியாது. 2500 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்று புத்த மதத்தின் அனைத்து சித்தாந்தங்களையும் உலகம் முழுவதும் போற்றுகிறது. அமெரிக்காவில் 2000 பௌத்த நிறுவனங்கள் உள்ளன. 3 லட்ச ரூபாய் செலவில் இங்கிலாந்தில் ஒரு புத்தர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ஜெர்மனியிலும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பௌத்த அமைப்புகள் உள்ளன. புத்தரின் கோட்பாடுகள், சித்தாந்தங்கள் சாகாவரம் பெற்றவை. எனினும் இது கடவுளின் மதம் என்று புத்தர் உரிமை கொண்டாடவில்லை. தம்முடைய தந்தை ஒரு சாதாரண மனிதர் என்றும் அவ்வாறே தானும் சாதாரணமானவர் என்றும் புத்தர் கூறினார். உங்களுக்கு விருப்பமிருந்தால் இந்த மதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த மதம் உங்கள் பகுத்தறிவுக்கு ஒத்ததாக இருந்தால் இதனை ஏற்றுக் கொள்ளுங்கள். இத்தகைய பெருந்தகையை வேறு எந்த மதத்திலும் அனுமதிக்கப்படவில்லை.

புத்த மதத்தின் மூல அடித்தளம் எது? புத்தரின் மதத்துக்கும் ஏனைய மதங்களுக்கும் இடையே மிகப்பெரும் வேறுபாடு உள்ளது. மற்ற மதங்கள் மனிதனை கடவுளுடன் சம்பந்தப்படுத்துவதால் அவற்றில் மாற்றங்கள் செய்வது சாத்தியமில்லை. கடவுள் இயற்கையைப் படைத்தார் என்று இதர மதங்கள் போதிக்கின்றன. கடவுள் அனைத்து வானத் தையும் காற்றையும் சந்திரனையும் சூரியனையும் மற்றும் இதர பலவற்றையும் படைத்தார். நாம் செய்வதற்கு கடவுள் எவற்றையும் விட்டு வைக்கவில்லை. எனவே நாம் கடவுளை வழிபட வேண்டும் என்று அவை கூறுகின்றன. மரணத்திற்கு பிறகு கடவுளின் தீர்ப்பு நாள் ஒன்று உள்ளது. அனைத்தும் அந்த தீர்ப்பையே பொறுத்துள்ளது என்று கிறித்துவ மதம் கூறுகிறது. ஆனால் புத்த மதத்தில் ஆண்டவனுக்கோ, ஆன்மாவுக்கோ இடம் ஏதும் இல்லை. உலகெங்கும் துயரம் நிலவுகிறது. 90 சதவீத மக்கள் துயரத்தில் சிக்கி அவதிப்படுகின்றனர்.  அல்லலுறுகின்றனர் என்று புத்தர் கூறினார். இந்த அழுத்தப்பட்ட, பரிதாபத்துக்குரிய மக்களை துயரத்திலிருந்து விடுவிப்பதே புத்த மதத்தின் தலையாய பணியாகும். புத்தர் கூறியவற்றிலிருந்து மாறுபட்ட எதையும் கார்ல் மார்க்ஸ் கூறிவிடவில்லை. புத்தர் குறுக்குமறுக்காக சுற்றி வளைத்து எதையும் சொல்லவில்லை.

 

சகோதரர்களே, நான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டேன். எல்லா அம்சங்களிலும் இந்த புத்த மதம் முழு நிறைவானது. எத்தகைய இழுக்கும் வழுவுமற்றது. அதே சமயம் இந்து மதத் கோட்பாடுகளோ எத்தகைய ஆர்வத்தையும் உத்வேகத்தையும் தோற்றுவிக்க முடியாதவை. பட்டம் பெற்ற அல்லது படித்த ஒரு நபரை நேற்றுவரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எங்கள் சமூகம் உருவாக்கவில்லை. இங்கு ஒரு விஷயத்தை தயக்க மயக்க மின்றிக் கூற விரும்புகிறேன். நான் படித்த பள்ளிக் கூடத்தில் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யும் ஒரு பெண்மணி இருந்தார். அவர் மராத்தா. அவர் என்னைத் தொடமாட்டார். வயதான வர்களை மாமா என்று அழைக்கும்படி என் தாய் என்னிடம் கூறுவார். அவ்வாறே தபால்காரரை மாமா என்று அழைப்பேன் (பலத்த சி£ப்பு). என் குழந்தைப் பருவத்தில் பள்ளியில் படிக்கும்போது ஒரு நாள் எனக்கு மிகவும் தாகமாக இருந்தது. இதை எனது வகுப்பு ஆசிரியரிடம் கூறினேன். ஆசிரியர் என் பாதுகாப்புக்காக பணியாளரை அழைத்தார். என்னை குழாய் இருக்குமிடத்துக்கு அழைத்துச் செல்லும்படி அவனிடம் கூறினார். குழாய் இருக்குமிடத்துக்கு நாங்கள் சென்றோம். பணியாள் குழாயைத் திறந்தான் நான் தண்ணீர் குடிதேன். பொதுவாகப் பள்ளிக் கூடத்தில் நான் குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காது. பின்னாளில் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவ்வகையான பணியில் என்னால் நீடித்திருக்க முடியவில்லை. அப்போது எனக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது. என் சகோதரர்களின் நல்வாழ்வுக்கான, நலனுக்கான பணியை யார் மேற்கொள்வது என்பதே அந்தப் பிரச்சினை. எனவே, நான் பார்த்து வந்த உத்தியோக பந்தத் திலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன்.

ஒரு தனிநபர் என்ற முறையில் இந்த நாட்டில் நான் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை (கரகோஷம்). வைசியர், க்ஷத்ரியர், பிராமணர் ஆகியோரைப் பற்றி உங்கள் மனதில் உள்ள கருத்துக்கள் எவ்வாறு சரிந்து விழுந்து அழிக்கப்படும் என்பதே இப்போதைய உண்மையான பிரச்சினை. எனவே இந்த மதத்தைப் பற்றிய விவரங்களை எல்லா அம்சங்களிலும் உங்களுக்குத் தருவது எனது கடமையாகும். இது சம்பந்தமாக பல நூல்களை எழுதி, உங்களது ஐயங்களையும் ஊசலாட்டங் களையும் போக்குவேன். இந்தப் பிரச்சினையில் நீங்கள் முழு அளவுக்குத் தெளிவும் விளக்கமும் பெற எல்லா உதவிகளையும் செய்வேன். குறைந்தபட்சம் தற்போதைக்கு என் மீது நம்பிக்கை வையுங்கள்.

 

ஆனால் அதே சமயம் உங்களது பொறுப்பும் மிகப் பெரியது. மற்றவர்கள் உங்களை மதித்துப் போற்றும் வகையில் உங்களது நடத்தை இருக்க வேண்டும். மதம் என்பது நமது கழுத்தைச் சுற்றிக்கட்டப்பட்டுள்ள ஒரு பிணம் என்று நினைக் காதீர்கள். புத்தமதத்தைப் பொருத்த வரையில் நமது இந்திய நாடு அதற்கு அந்நியமல்ல. எனவே புத்த மதத்தை மிகச் சிறந்த முறையில் பின்பற்ற நாம் உறுதி பூண வேண்டும். மஹர் மக்கள் புத்த மதத்துக்கு அவக்கேட்டைக் கொண்டு வந்துவிட்டார்கள் என்ற பழிச்சொல்லுக்கு நாம் ஆளாகக் கூடாது; இது விஷயத்தில் நாம் உருக்கு உறுதியோடு இருக்க வேண்டும். இதனை நாம் சாதித்தோமானால் நம் தேசமும் நாமும் ஆக்க வளமுறுவோம்; செழித்தோங்குவோம்; அதுமட்டுமல்ல உலகம் முழுவதற்குமே இந்த நற்பேறு கிட்டும். நீதி நிலைநாட்டப் பட்டாலொழிய உலகம் சமாதானம் நிலவாது.

இந்தப் புதிய பாதை மகத்தான பொறுப்புகள் நிறைந்தது. நாம் சில உறுதிகளைப் பூண்டுள்ளோம். சில விருப்பங்களை வெளியிட்டுள்ளோம் என்பதை இளம் மக்கள் மனதில் கொள்ள வேண்டும். அவர்கள் சுயநலப் போக்கு கொண்ட சோம்பேறி களாகி விடக்கூடாது. இந்த நோக்கத்துக்காக நமது வருவாயில் குறைந்தபட்சம் 20ல் ஒரு பங்கையாவது வழங்குவது எனத் தீர்மானிக்க வேண்டும். என்னுடன் உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல விரும்புகிறேன். ஆரம்பத்தில் ததாகட் ஒரு சில நபர்களுக்கு தீக்சை தந்தார். இந்த மதத்தை பரப்ப முழு மூச்சோடு பாடுபடுங்கள் என்று அவர்களை வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து யாஷாவும் அவருடைய நாற்பது நண்பர்களும் புத்த மதத்தை தழுவினர். யாஷா பெரிய செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த மதம் எப்படி இருக்கிறது என்பதை மகான் புத்தர் அவர்களிடம் பின்வருமாறு எடுத்துரைத்தார்: இந்த மதம் பகுஜன் ஹிதே, பகுஜன் சுகே, லோகானுகம்பே, தம்மா அதி கல்யாணம், மதிய கல்யாணமா பர்யவாசன் கல்யாணம். ததகாதா அப்போதைய நிலைமை களுக்கு ஏற்ப தமது மதத்தை எப்படிப் போதிப்பது என்பதைத் தீர்மானித்தார். இப்போது இதற்கான செயல் திட்டத்தை நாம் வகுக்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒவ்வொருவரும் மற்றவருக்கு தீட்சை அளிக்க வேண்டும். ஒவ்வொரு பௌத்தருக்கும் தீட்சை அளிக்கும் உரிமை உண்டு என நான் பிரகடனம் செய்கிறேன்!

 

நன்றி: அம்பேத்கர் டாட் இன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.