Jump to content

அஞ்சலி: கி.ராஜநாராயணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலி: கி.ராஜநாராயணன்

May 18, 2021

kira-1-300x156.jpg

கி.ரா மறைந்ததாக இணையத்தில் செய்தி. சமஸ் உட்பட பலர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் உள்ளம் ஏற்க மறுக்கிறது. சென்ற சில மாதங்களாகவே உடல்நலம் குன்றித்தன இருந்தார். தசைகளின் இயக்கமும் குறைந்து வந்தது. ஆனாலும் பெரியவர், சாவே இல்லாதவர் என்று நம்பத்தான் உள்ளம் விரும்புகிறது.

நோய்க்காலம், எவரும் சென்று சந்திக்கவேண்டாம் என்று நண்பர்களிடம் சொல்வேன். எனக்கே சந்திக்கவேண்டுமென ஆசையிருந்தது. ஆனால் கி.ரா இளையவர்கள், வாசகர்கள் சந்திக்க வருவதை விரும்பினார். உற்சாகமாகி நினைவுகளை பெருகவிட்டு பேசிக்கொண்டிருப்பார்.

அவருடைய விருப்பப்படி கோபல்லகிராமம் மலையாள மொழியாக்கத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தோம். இப்போது இச்செய்தி.

வணங்குகிறோம்

 

 

 

https://www.jeyamohan.in/147137/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ki.Rajanarayanan - Home | Facebook

ஆழ்ந்த இரங்கல்கள்........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா. காலமானார்

ki-ra-passed-away  

வட்டார இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’, ‘தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்’, ‘தலைசிறந்த கதைசொல்லி’, ‘கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்’ என்றெல்லாம் போற்றப்படும் கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் வயது முதிர்வு காரணமாக புதுச்சேரியில் இன்று காலமானார். அவருக்கு வயது 99.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1923ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி பிறந்தவர் கி.ராஜநாராயணன். கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.

7ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த கி.ரா. விவசாயம் பார்த்து வந்தார். 35 வயதுக்குப் பின்னரே எழுத்தாளர் ஆனார். ‘மாயமான்’ என்ற முதல் சிறுகதை 1958-ல் ‘சரஸ்வதி’ இதழில் வெளியானது. வாசகர்களிடம் அது பெரும் வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து பல சிறுகதைகள் எழுதினார்.

கரிசல் பூமி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்களை இவரது எழுத்துகள் விவரித்தன. சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக் கதை, கடிதம் என்று தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்தார். வாய்மொழிக் கதை சொல்லும் மரபின் கூறுகளை தனது படைப்பின் அடிப்படை அம்சங்களாகக் கொண்டிருந்தார். வட்டார வாய்மொழி மரபு, செவ்விலக்கியக் கூறுகள், நேரடியான இதழியல் நடை ஆகிய மூன்று கூறுகளையும் கலந்து, தனக்கென தனி நடையை உருவாக்கிக்கொண்டவர்.

பிரபல இதழ்களில் இவரது கதைகள் தொடர்ந்து வெளிவந்தன. 2007இல் இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு 944 பக்கங்கள் கொண்ட ‘நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம்’ என்ற படைப்பாக வெளியானது. 2009இல் மட்டும் இவரது 30 புத்தகங்கள் வெளிவந்தன. இவரது சில கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சிறுகதைத் தொகுப்புகள், 2 குறுநாவல்கள், 6 கட்டுரைத் தொகுதிகள், 3 நாவல்கள் எழுதியுள்ளார். ‘கோமதி’, ‘கண்ணீர்’, ‘கரிசல் கதைகள்’, ‘கி.ரா.பக்கங்கள்’, ‘கிராமியக் கதைகள்’, ‘கொத்தைபருத்தி’, ‘புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள்’, ‘கோபல்ல கிராமம்’, ‘புதுமைப் பித்தன்’, ‘மாமலை ஜீவா’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

1621282340751.jpg

‘கிடை’ என்ற இவரது குறுநாவல் ‘ஒருத்தி’ என்ற திரைப்படமானது. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார். நல்ல இசைஞானம் கொண்டவர். நண்பர்களுக்கு நீண்ட கடிதங்கள் எழுதுவார். அவர்கள் எழுதும் பதில் கடிதங்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பார்.

கரிசல் வட்டார அகராதியை உருவாக்கி, வட்டார மொழிக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி என்ற பெருமை பெற்றார். ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக இவருக்கு 1991-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது, கனடா இலக்கியத் தோட்டம் வழங்கிய தமிழ் இலக்கியச் சாதனை-2016 சிறப்பு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

கி.ரா.வின் மனைவி கணவதி அம்மையார் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். கி.ராஜநாராயணன் அவருடைய எழுத்தாக்கங்களுக்கும் படைப்புகளுக்குமான உரிமை டிசம்பர் 26, 2020 முதல் மூவரைச் சேரும் என்று எழுதி வைத்துள்ளார். 1) சங்கர் (எ) புதுவை இளவேனில், 2) திவாகரன், 3) பிரபாகர். முதலாமவர் அவரது வாசகர், மற்ற இருவர் அவரது மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் ‘மிச்சக் கதைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பை கி.ரா. கொண்டுவந்தார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக கி.ரா. இன்று காலமானார்.

லாஸ்பேட்டை அரசுக் குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்படும் கி.ரா.வின் உடல் இன்று (18-ம் தேதி) மாலை கருவடிக்குப்பம் சுடுகாட்டிற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

https://www.hindutamil.in/news/tamilnadu/671894-ki-ra-passed-away-1.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கி.ரா.வுக்கு அரசு மரியாதை! தமிழக முதல்வர் அறிவிப்பு!

spacer.png

கரிசல் இலக்கியத்தின் தந்தை, வட்டார வழக்குக் கதைகளின் நாயகன் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நேற்று (மே 17) இரவு தனது 99 ஆவது வயதில் காலமானார். பள்ளிப் படிப்பைத் தாண்டாவிட்டாலும் தன் படைப்புகள் மூலம் இலக்கிய சிகரங்களில் உலவிய கி.ரா, புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் கௌரவப் பேராசிரியராக திகழ்ந்தவர். எனவே அவர் புதுச்சேரியிலேயே வசித்து வந்தார்.

கி.ராவின் மறைவை அடுத்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

 

“கி.ரா என்று எழுத்துலகில் அன்போடு அழைக்கப்பெறும் திரு. கி.இராஜநாராயணன் அவர்களது மறைவு கரிசல் மண்ணின் கதைகளுக்கு ஓர் முற்றுப்புள்ளி. தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லியான அவரை இழந்து நிற்கிறோம். தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள். யார் ஆறுதல் சொல்வார்? இந்த மண் உள்ளவரை; அதில் கரிசல் இலக்கியம் உள்ளவரை; ஏன், தமிழ் உள்ளவரை நமது உள்ளங்களில் அவரது புகழ் வாழும்!

அந்தோ! அந்தக் கரிசல் குயில் கூவுவதை நிறுத்திக் கொண்டதே!

அவர் மறையவில்லை; எழுத்துகளாய் உயிர் வாழ்கிறார். நம் உயிரில் கலந்து வாழ்கிறார். வாழ்க அவரது புகழ்! அவரது குடும்பத்தினருக்கும், சக படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும், தமிழர்களுக்கும் என் நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சாகித்ய அகாடமி விருதுபெற்று தமிழ் இலக்கியத்தின் பேராளுமையாய்ப் பெருவாழ்வு வாழ்ந்த கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா. அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஏற்கனவே புதுச்சேரியில் வசித்து மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு அப்போதைய புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி அரசு மரியாதை அளித்து இறுதி நிகழ்வுகளை நடத்தச் செய்தார். முதன் முதலில் தமிழ் எழுத்தாளரின் மரணத்துக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது அதுதான். இந்நிலையில் தமிழ்நாட்டில் முதன் முதலில் ஓர் எழுத்தாளருக்கு அரசு மரியாதை அளிக்கப்படுவது இப்போது கி.ராவுக்கு அளிக்கப்படும் மரியாதைதான்.

 

https://minnambalam.com/politics/2021/05/18/42/govt-honour-to-writer-ki.ra-tamilnadu-cm-annnounce

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.