Jump to content

படர்கல் மலை – ஓர் பயண அனுபவம் – மட்டு. திவா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படர்கல் மலை – ஓர் பயண அனுபவம் – மட்டு. திவா

 
Capture-13-696x461.jpg
 77 Views

என்ன வளம் இல்லை எம் ஊரில் என நினைக்க தோன்றியது இந்த நாளில். எதிர்பாராத விதமாக ஒரு பயணம் அதுவும் படர்கல் மலை நோக்கியதாக அமையும் என நினைக்கவில்லை.

மட்டக்களப்பில் இருந்து செங்கலடி வழியாக பதுளை வீதியில் செல்லும் போது இலுப்படிச்சேனை சந்தி வரும். அதிலிருந்து மாவடியோடை பக்கமாக செல்லும் போது மாவடியோடை அணைக்கட்டு வரும். அதைத் தாண்டி குடும்பிமலை பாதையால் செல்லும் போது கல்வான் ஆறு குறுக்கறுக்கும். அவ் இடத்தில் பாதை இரண்டாக பிரிக்கிறது. நேராக சென்றால் குடும்பிமலை, நாம் வலப்பக்கமாக திரும்பிச் கூளாவடி, நவுண்டிலியாமடுக் குளம், புழுட்டுமானோடை மலை போன்றவற்றினை கடந்து, புளுட்டுமானோடை குளத்தினை அடைந்து, குளம் வழியாக நேரே திம்புலாகல மலையை பார்த்தபடி செல்லும் வீதியால் போகும் போது பாதையில் இடைவழியில் எம்மை மறிக்கும் மலைத் தொடர் தான் இந்த படர்கல் மலை.

இது மட்டக்களப்பில் இருந்து அண்ணளவாக 45 km க்கு அப்பால் உள்ள இடம். இந்த படர்கல் மலைக்கு வந்து சேர குறைந்தது 2 மணி நேரம் தேவைப்படும். இரண்டு மணி நேரமும் மோட்டார் சைக்கிள் பயணமே வெறுத்து விடும். இலுப்படிச்சேனை சந்தியில் இருந்து படர்கல் மலை வரைக்கும் அவ்வளவுமே மோசமான பாதை தான்.

முதல் நாள் மழை பெய்யவில்லை போல. நாம் காலையில் பயணிக்கும் போது சில சில இடங்களில் தான் நீர் தேங்கி நின்றது. வெயிலும் அவ்வளவாக இல்லை மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு சிறந்த காலநிலை தான். நானும் வேறு இரு மோட்டார் சைக்கிள்களில் எமது குழுவினருமாக மொத்தம் ஐந்து பேர் 3 மோட்டார் சைக்கிள்களில் காலை 10 மணியளவில் பயணத்தை ஆரம்பித்தோம்.

கையில் 3 லீட்டர் தண்ணீரும் 5 பயத்தம் உருண்டையும் தான் 5 பேருக்கும் இரவு வரையான சாப்பாடு.  மட்டக்களப்பில் இருந்து இலுப்படிச்சேனை சந்தி வரை சிறப்பான காப்பெட் வீதி. இலுப்படிச்சேனை சந்தியில் இருந்து குமுக்கட்டு பாலம் வரை தார் வீதி. ஆனால் இந்த வீதி முழுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் வேகம் 30 km/h இனை விட அதிகமாக செல்ல இயலாது. குமுக்கட்டு பாலம் தாண்டியதும் கல்வான் ஆற்று பாலம் வரை எல்லாமே கிறவல் வீதி, அதற்கு பிறகு எல்லாமே களிமண் வீதிதான்.

இங்கு நான் வீதியை பற்றி குறிப்பிட காரணம் இந்த அனைத்து வீதியிலும் செல்ல கூடிய வாகனத்தை தான் நீங்கள் இங்கே கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு தான். கார் மற்றும் ஸ்கூட்டி வகை மோட்டார்  சைக்கிள் போன்றவற்றில் பயணிப்பது இந்த இடத்துக்கு உகந்ததல்ல.

இலுப்படிச்சேனை  சந்தியில் இருந்து செல்லும் போது குசலான மலையின் ஒரு பக்க தோற்றத்தை கண்டு களிக்கலாம். இங்கிருந்து குசலான மலையை பார்ப்பது மலையின் முன் தோற்றத்தை விட மிகவும் அழகாகவும் இருக்கும்.

அதனை தாண்டி செல்லும் போது குமுக்கட்டு ஆறு பாதையை குறுக்கறுக்கும். அதனை தாண்டி செல்ல அமைக்கப்பட்டிருக்கும் குமுக்கட்டு பாலம் போகும் வழியில் ஒரு 10 நிமிடமாவது தரித்து நின்று புகைப்படங்கள் எடுத்து செல்ல கூடியதாக ஒரு அணைக்கட்டு வடிவில் வான்கதவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.  பார்க்கும் போதே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். நாமும் அந்த பாலமருகே இருந்த காட்டுத் தேங்காய் மரத்தடியில் சற்று இளைப்பாறிவிட்டு தான் பயணத்தை தொடர்ந்தோம்.

தொடர்ந்து செல்லும் போது கூழாவடி பிள்ளையார் கோவில் வரும். இதுவும் நாம் செல்லும் வழியில் வணங்கி விட்டு போகும் களுதாவளை பிள்ளையார், பிள்ளையாரடி பிள்ளையார் போல தான் இந்த வழியாக செல்லும் அனைவரும் இங்கே சற்று நேரம் தரித்து நின்று வணங்கி செல்வது வழமை.

இந்த கூழா மரத்தின் கீழ் பிள்ளையாருடன் முருகன் மற்றும் நாகதம்பிரானுக்கும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. பழமையான நாக வழிபாட்டு தடையங்கள் சுற்றிப் பார்க்கும் போது கண்ணில் பட்டது. இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும் இந்த கூழா மரத்தடி காணப்படுகிறது.  எமது குழுவும் கோவிலடியில் வணங்கிவிட்டு குடிப்பதற்கு சற்று நீரை நிரப்பிக் கொண்டு தொடர்ந்து மேற்கு பக்கமாக பயணத்தை தொடர்ந்தோம்.

-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0

இலாவணை ஆறு குறுக்கே இருந்தது. நாம் சென்றது மழை காலம் தான். என்றாலும் அவ்வளவாக மழை பெய்யத் தொடங்கவில்லை. அதனால் அந்த ஆற்றில் நீர் வற்றிய நிலையே காணப்பட்டதனால் அதன் மேல் உள்ள பலத்தினால் நம்மால் இலகுவாக கடந்து செல்லக் கூடியதாக இருந்தது.

தொடர்ந்து செல்கையில் காணும் காட்சிகள் நம்மை வியக்க வைத்தன. முதல் தடவையாக இந்த இடத்துக்கு வருபவர்கள் அனைவரும் வியக்க தான் செய்வார்கள். அப்படி ஒரு அழகு. சுற்றிலும் மலைகள், ஆறுகள் , வயல்வெளிகள், உழவடிக்க தயாராகும் மக்களும், உழவு இயந்திரங்களும் ஒரு தொகை, மாடுகளும் ஆடுகளும் அதனை மேய்பவர்களும் ஒரு பக்கம், விறகு வெட்டி நகர் பகுதிக்கு கொண்டு செல்லும் விறகு வெட்டிகள் ஒரு பக்கம் என இயற்கையும் சுறுசுறுப்பும் கலந்த ஒரு பார்வை நமது பயணத்துக்கு மேலும் உறுதுணையாக இருந்தது.

எம்மைச் சுற்றி கார்மலை, புறாக்குஞ்சு மலை, வெள்ளைக் கல்லு மலை, இரைச்சலாறு மலை, புளுட்டுமானோடை மலை, கொட்டடி மலை, கெவர்மலை (டோரா போரா), படிவெட்டின மலை, கித்துள் மலை, குருட்டு மலை, தலப்பாக்கட்டு மலை, கதிரமலை  (கெமுனு புர) போன்ற மலைகளையும் பார்க்கக் கூடியதாக இருக்கும். (ஒவ்வொரு மலையையும் பற்றிய இன்னும் ஒரு பதிவில் தனி தனியாக பார்ப்போம்)

தொடர்ந்து பயணித்தால் வீதி ஓரமாக பாதி வற்றிய நிலையில் நவுண்டிலியாமடு குளம் காணப்பட்டது. நன்னீர் மீன்பிடி மற்றும் விவசாயத்துக்கு பிரதான நீர் முதலாக இது இந்த பகுதியில் காணப்பட்டது. இந்தக் குளக் கட்டில் மோட்டார் சைக்கிளை ஏற்றி புகைப்படங்களும் எடுத்து 5 நிமிடம் இளைப்பாறிவிட்டு புளுட்டுமானோடை மலையை நோக்கி நீளும் சாலையில் பயணம் தொடர்ந்தது.

-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0

தூரம் செல்லச் செல்ல ஆள் நடமாட்டம் குறையத் தொடங்கியது. சுற்றிவர எமது மோட்டார் சைக்கிள் சத்தத்தைத் தவிர சில்லூறு மற்றும் தேவாங்குகளின் இரைச்சல் மட்டுமே இருந்தது. இதிலிருந்து அடர்ந்த வனம் தொடங்கியது. காவல் தெய்வமாக குமாரர் வேல் மற்றும் அரிவாளுடன் புளுட்டுமானோடை மலை அடிவாரத்தில் இருக்கிறார்.

மலையடிவாரத்தில் வாடி வைத்திருப்பவர்களும் காட்டுக்கு விறகு வெட்டவோ கடுபுளியம் பழம் ஆய செல்பவர்கள் என அனைவரும் பயபக்தியாக வணங்கிச் செல்லும் தெய்வம் இது. நாமும் வணங்கியபடியே இந்த இடத்தை கடந்து சென்றோம். மரங்கள் வழியில் முறிக்கப்பட்டு கிடந்தன. ஆள் நடமாட்டம் ஒன்று கூட இல்லை. மயான அமைதி நிலவ தொடங்கியதும் நாமும் கதைத்துக் கொள்ளவில்லை சுற்றியுள்ள இடங்களில் இருந்து எதுவும் சத்தங்கள் வருகிறதா என அவதானித்துக் கொண்டே புளுட்டுமானோடை குளத்தை வந்தடைந்தோம்.

புளுட்டுமானோடை குளத்துடன் மாவடியோடை தொடக்கம் நாம் வந்த பாதை முடிவடைகிறது. இனி பாதை எனும் பெயரில் ஒன்றும் இல்லை கால் போன போக்கில் போக வேண்டிய திசையை நோக்கி செல்ல வேண்டியது தான். புளுட்டுமானோடை குளம் மிகவும் அழகானது. ஒரு எருமை மாட்டுப்பட்டி குளத்தருகே மேய்ந்து கொண்டிருந்தது.

-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0

குளத்தருகே இருந்து புளுட்டுமானோடை மலையை காணும் காட்சி பிரமிக்கத் தக்கதாக இருந்தது.. எவ்வளவு பெரிய மலை! குளத்தடியில் இருந்து சில புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். இங்கிருந்தே மண் மலையையும் கெவர் மலையின் உச்சியையும் ( டோரா போரா) காணக் கூடியதாக இருக்கும்.

குளம் வற்றி இருந்தமையினால் குளத்தின் நடுவே ஒற்றையடிப்பாதை மேற்கு நோக்கிச் செல்கிறது. அந்தப் பாதையால் தொடர்ந்து பயணம் செய்து அண்ணளவாக 15 தொடக்கம் 20 நிமிடங்களில் எமது இலக்கான படர் மலை அடிவாரத்தை வந்தடைந்தோம்.

வரும் வழியில் இரு சிற்றாறுகள் குறுக்கறுத்தன. எனினும் அவற்றில் நீரோட்டம் அதிகமாக இல்லாமையால் தொடர்ந்தும் மோட்டார் சைக்கிளிலேயே நம்மால் பயணம் செய்து அடிவாரம் வரை வர முடிந்தது.

தொடரும்…

 

 

https://www.ilakku.org/?p=50660

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பயணப் பதிவு, தொடருங்கள்.......!  👍

பகிர்வுக்கு நன்றி உடையார்.....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படர்கல் மலை – ஓர் பயண அனுபவம் – பகுதி – 2 – மட்டு.திவா

 
Capture-18-696x347.jpg
 58 Views

இலுப்படிச்சேனை சந்தியில் வாங்கிக் கொண்டு வந்த பயத்தம் உருண்டைகளைச் சாப்பிட்டு, நீரையும் குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளையும் பாதுகாப்பாக வைத்துவிட்டு அடிவாரத்தில் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு மலை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

இவ்வளவு நாளும் போய்த் திரிந்த காடுகளை விட இது சற்று அடர்த்தியாகவும், பரந்து விரிந்து அருகில் இருப்பவர்களைக் கூட இலகுவில் கண்டுபிடிக்க இயலாத அளவு வளைந்து நெளிந்து செல்லும் ஒற்றையடிப் பாதைகளை கொண்டதாகவும் காணப்பட்டது.

முன்னர் போன இடங்களில் 4 மணிக்கு முதல் யானை வராது. பயமில்லாமல் காட்டு வழியே போய் வரலாம் என ஊர் மக்கள் சொல்வார்கள். ஆனால் இந்தக் காடுகள் அப்படியல்ல. யானை முழு நேரமும் சுற்றிக்கொண்டிருக்கும் சூரிய வெளிச்சம் அரிதாக மண்ணில் படும் அடர்ந்த காடுகள். யானைக்கு மேலதிகமாக பயங்கரமான ஆளைக் கொல்லும் சிறுத்தைகளும் இந்த இடத்தில் நடமாடித் இருக்கின்றன.

சற்று தூரம் உள்ளே சென்றதும் ஒற்றையடிப்பாதை இல்லாமல் போய்விட்டது. இனி மலை இருக்கும் திசையைத் தெரிந்தவர்களால் மட்டும்தான் போகக் கூடியதாக இருக்கும். வழிமாறிச் சென்றால் திரும்பி அடிவாரத்திற்கு வரவும் முடியாமல் போய்விடும்.

நம்முடைய குழுவில் இருந்த வடிவேல் ஐயாவுக்கு கடுபுளியம்பழம் ஆய அடிக்கடி வருவதால் இந்த இடங்களும் வழிகளும் பழகிப் போயிருந்தது. காலில் செருப்பு கூட போட மாட்டார். ஒரு தண்ணீர் போத்தலை கமக்கட்டில் சொருகிக்கொண்டு சேட் பொக்கேற்றில் ஒரு கட்டு வீடியும் நெருப்பெட்டியும் சிறிய தொலைபேசியும் வைத்துக் கொண்டு சாரணை மடித்துக் கட்டிய படி மிக வேகமாக நடக்கத் தொடங்கி விடுவார்.

எம் ஒருவரிடமும் பசிக்கு எந்த ஒரு சாப்பாடும் கையில் இல்லை. சற்று நேரத்தில் திரும்பி விடலாம் என்ற நம்பிக்கையில் வந்துவிட்டோம் ஆனால் நேர தாமதமாகும் போல் தெரிகிறது சரி நடப்பது நடக்கட்டும் வந்த வேலை முடியாமல் திரும்புவது சாத்தியமற்றது. கதைத்துக் கொண்டே செல்லும் வழியில் பெரிய மலை போன்ற ஒரு பாழடைந்த செங்கற்களால் ஆன தூபி ஒன்று தெரிந்தது.

போகும் வழி தான் என்பதால் தூபியையும் சற்று சுற்றிவளைத்து பார்த்து விட்டுச் செல்வோம் என முடிவெடுத்து அருகே சென்றபோது காத்திருந்தது மிகப் பெரிய அதிர்ச்சி. அந்தத் தூபியானது புதையல் போட்டி காரர்களால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டிருந்தது. தூபியின் நடுவே மிகப்பெரிய துளையிட்டு அதன் அடியில் இருந்து எதையோ எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்தது. தூபியின் அருகே ஒரு செவ்வக வடிவான பீடக்கல் ஒன்றும் இருந்தது.

-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%AA%E0

நேரம் நண்பகல் 12.30 ஐ தாண்டி போய்க்கொண்டிருந்தது. அப்போதும் சூரிய வெளிச்சம் அவ்வளவாக காட்டுக்குள் ஊடுருவ முடியாமல் பின்னேரம் 5 மணி போலக் காட்சியளித்தது. தொடர்ந்து அண்ணளவாக அரை மணி நேரம் பயணத்தின் பின்னர் எமது இலக்கான படர்கல் மலையை வந்தடைந்தோம்.

வரும் வழியிலேயே மலையின் பிரம்மாண்டத்தோடு தூரத்திலேயே சில கற்புருவ வெட்டுக்களும் தெரிந்தன. அப்போது கல்வெட்டுகள் எதையாவது இன்று பார்த்துவிடலாம் என்று மனதில் நம்பிக்கை வந்தது. நுழைவாயிலை நெருங்கியதும் பெரிய மரம் ஒன்று சரிந்து கிடந்தது அதில் மழைக்காடுகளில் இருப்பது போல் பாசியும் வளர்ந்திருந்தது.

நுழைவாயிலில் படிகள் அமைக்கப்பட்டு இருந்தது அவை தற்போது சிதைவடைந்து காணப்பட்டதாலும் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்ததாலும் சற்று அவதானமாகவே நடக்க வேண்டியிருந்தது. மரங்களின் கிளைகள் பின்னால் வருபவர்களது முகத்தில் அடிக்கும் என்பதால் சற்று இடைவெளி விட்டே நடந்து வந்து கொண்டிருந்தோம்.

முதலாவதாக ஒரு பெரிய குகை எம்மை வரவேற்றது. அண்ணளவாக 20 தொடக்கம் 30 பேர் தங்கக் கூடிய குகை. அதில் சிறப்பான முறையில் கற்புருவம் வெட்டப்பட்டிருந்தது.    குகையினுள் மழை நீரானது வடியாமலும், கல்வெட்டுகளுக்கு நீரால் பாதிப்பு (பாசி பிடித்தல், நீரால் அடிப்படைதல்) ஏற்படாமலும் இருக்கவே கற்புருவமானது வெட்டப்படுகிறது. கற்புருவத்தின் கீழ் பிராமிக் கல்வெட்டு ஒன்றும் இருந்து. இதில் “இந்தக் குகை மகாதீச மன்னனின் மகனால் பெளத்த சங்கத்தினருக்கு வழங்கப்பட்ட தானம்” என எழுதப்பட்டிருந்தது.

நாக வழிபாடும் சிவ வழிபாடும் காணப்பட்ட காலத்தில் பெளத்தம் தலைதூக்கத் தொடங்கியது. தமிழர்களும் புத்த மதத்தை தழுவிக் கொண்டனர். தமிழ் பௌத்தம் உருவாக்கப்பட்ட அல்லது வளர்ச்சி அடையத் தொடங்கிய காலகட்டம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

தொடர்ந்து நடக்கையில் அருகே அதைவிட சற்று சிறிய உயரமான குகை ஒன்று கண்ணில் பட்டது அதிலும் இதேபோன்று சிறப்பாக செதுக்கப்பட்ட கற்புருவங்களும் பிராமிக் கல்வெட்டுகளும் காணப்பட்டது. இந்த  நுழைவாயில் ஒரு கோட்டை வாசலை போல் இருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

--1024x683.jpgசிறப்பாக வெட்டப்பட்ட படிகளும் வானுயர்ந்த மலைகளுடனுமாக கோட்டையானது மிகவும் கம்பீரமாக காணப்பட்டதால் இதனுள் செல்லும்போதே ஒரு பயங்கலந்த ஒரு சந்தோஷத்தை மனதினுள் அனுபவிக்க கூடியதாகவும் இருக்கும். அனைவரும் அறிந்த  சிகிரியா மலையில் குகைகளில் இருந்து  மேலே பார்க்கும் போது எவ்வளவு பிரமிப்புகள் இருக்குமோ அதேபோல இந்த குகையை கடந்து அடுத்த பகுதிக்கு அந்த படிக்கட்டினால் நாம் நடந்து செல்லும் போது உணர முடிந்தது. அந்தப்படிகளில் இடைக்கிடையே சில நேர்த்தியான முறையில் இருந்த குழிக்கல் பொருத்துக்களையும் அவதானிக்க முடிந்தது.

ஐந்து நிமிடப் பயணத்தில் பின் மீண்டும் ஒரு மிகப்பெரிய குகையை அடைந்தோம் அங்கே 47 அடி நீளமான சயன நிலை புத்தர் சிலை ஒன்று உடைக்கப்பட்டுக் கிடப்பதை பார்க்க கூடியதாக இருந்தது. இது  ஒரு மிகப் பெரிய குகையாக இருந்ததோடு மனித நடமாட்டம் மிகக்குறைவென்பதாலும் காட்டு விலங்குகள் தங்கள் இருப்பிடமாக அவற்றை மாற்றி விட்டன.

அந்த குகையின் அடியில் காணப்படும் மண்ணானது தூசு போல இருக்கும். காலினை எடுத்து ஒரு அடி வைத்தாலும் புதைமணல் போன்று 5-7 சென்டிமீட்டர் உள்ளே செல்லும், பின்பு உறுதியான நிலம் வந்துவிடும். இந்த நிலத்தில் தான் புலி உறங்குமாம். இந்த குகை தான் படர்கல் மலை காடுகளில் வாழும் கொடிய புலிகளின் இருப்பிடமாம் என காட்டுக்கு வெளியே வந்து சில நாட்களின் பின் அறியக்கூடியதாக இருந்தது. முன்னரே இந்த கதை தெரிந்திருந்தால் சிலவேளை இந்த குகை பக்கமும் வந்திருக்க மாட்டோம்.

-1-1-1024x768.jpg

புத்தர் சிலையின் பின்னால் பாரிய இருளாக இருந்தது அருகே சென்று டார்ச் வெளிச்சம் அடித்து பார்க்கும் போது அங்கே இருட்டு போல் பிரம்மையை உண்டாக்கிய ஆயிரக்கணக்கான வெளவால்கள் எம்மை நோக்கியும், அங்குமிங்கும் எழுந்தமானமாக பறக்கத் தொடங்கி அந்த இடத்தையே அமைதி குலையைச் செய்துவிட்டன.

சரி சற்று குகைக்கு வெளியே வருவோம் என நினைத்து வெளியே வந்து குகை விளிம்பை அண்ணார்ந்து பார்க்கையில் வியப்புக்கு மேலானதொரு வியப்பு இந்த குகையில் தான் இதுவரை பார்த்ததிலேயே மிக நீளமான பிராமி கல்வெட்டு நேர்த்தியான கற்புருவத்துடன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. காமிராவின் படப்பிடிப்பு எல்லைக்குள் அந்த கல்வெட்டினை அடக்க முடியவில்லை எனவே 4 படங்களாக அந்த கல்வெட்டினை பிரித்து புகைப்படம் எடுத்தோம் எனவே எவ்வளவு நீளமாக இருக்கும் என யூகித்து பாருங்கள்.

-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0

இந்தக் கல்வெட்டை ஆராயும் போது சுவஸ்திகா சின்னம் இருப்பதை அவதானித்ததாக வரலாற்று ஆய்வாளர் திருச்செல்வம் ஐயா குறிப்பிட்டிருந்தார். அதில் சுவஸ்திகா சின்னம் இருப்பின் இந்தக்குகை தமிழர்களுடையதா அல்லது பெளத்தர்களுடையதா என நான் சொல்ல தேவையில்லை.

அந்த கல்வெட்டு “சிற்றரசன் யுவராஜன் நாகனுடைய மகனின் மகனின் மகன் பெளத்த சங்கத்துக்கு தானம் பண்ணியது” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் எமக்கு ஒன்று மட்டும் தெளிவாகிறது இந்தக் குகைகளை தமிழர்கள் மூன்று தலைமுறைகளாகவோ அதற்க்கு மேலதிகமாகவோ தம் வாழிடமாகவோ அல்லது கோட்டையாகவோ பயன்படுத்தியிருக்க வேண்டும்.

 

 

https://www.ilakku.org/?p=51086

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்லின் மேல் தெளிவாக தெரியும்படி எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக்களை கல்லின் காய்ந்துபோன பாசிபடிந்த மேற்பரப்பை ஒப்பிடும்போது எழுத்துகள் புதிதாக அண்மைகாலத்தில் செதுக்கப்பட்டதுபோல் தெரிகிறது. தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் வழிபாட்டிடங்களையும் ஆக்கிரமிக்கும் சிறிலங்காவின் வனவள மற்றும் தொல்லியல் திணைக்களங்களின் திட்டங்களில் ஒன்றாகவே இதையும் பார்க்கலாம். 

சுவஸ்திகா சின்னம் இருப்பதால் அந்த குகை தமிழருடையதா அல்லது பௌத்தர்களுடையதா என்ற கேள்வியை கட்டுரை ஆசிரியர் எழுப்புகிறார். இந்த சின்னத்தை உலகின் பல இனங்கள் பயன்படுத்தியதாக சரித்திரத்தில் ஆதாரம் உண்டு. பிராமி எழுத்துக்களை வேண்டுமேன்றே திட்டமிட்டமுறையில் பாறையில் பொறித்துவிட்டு தமிழரின் பல்வேறு புராதன வழிபாட்டு இஸ்தலங்களையும் பூர்வீக நிலங்களையும் எமது முன்னோர்கள் பௌத்த சங்கத்திற்கு தானமாக வழங்கிவிட்டனர் என்ற போலியான தொல்லியல் தகவலை வெழியே சொல்லவேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது என்பது எனது அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

படர்கல் மலை – ஓர் பயண அனுபவம் – மட்டு.திவா

 
Capture-13-696x407.jpg
 106 Views

இதனைத் தாண்டி இரண்டாவது நுழைவாயில் மீண்டும் மேலே அடுத்த குகையை நோக்கி அழைத்துச் செல்கிறது. ஆனால் சென்று பார்க்க எமக்கு நேரம் போதாது. நேரம் 3 மணியைத் தாண்டியிருக்கும். காட்டினுள் வெளிச்சம் வேகமாக மறையத் தொடங்கிவிடும். மழை மேகங்களும் இன்னும் வேகமாக இருளினை பரப்பிக் கொண்டிருந்தன.

மீண்டும் படர்கல் மலை காட்டு நுழைவாயிலை நோக்கியதாக மிகவும் வேகமாகவும், அவதானத்துடனும் நடக்கத் தொடங்குகிறோம். மிகவும் களைப்பாக இருக்கிறது. காட்டிலே நேற்றுப் பெய்த மழை நீர் ஓடி வரும் ஓடை ஒன்றில் இருந்து விலங்குகளாகவே மாறி நீரை அருந்தத் தொடங்கினோம். தாகம் தீர்ந்தது. புத்துணர்ச்சி வந்தது.

.%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-10

படர்கல் மலைத் தொடரின் இன்னொரு மலை எமக்கு அழகிய நீர் வீழ்ச்சியைக் கண்ணுக்கு இனிதாக காட்டிக் கொண்டு இருக்கையில், யானையின் வாசனையை இலகுவில் அறிந்து கொள்ளும் ஜெகன் அண்ணா பக்கத்தில் யானை வந்து கொண்டிருப்பதைப் பற்றிய எச்சரிக்கையை எமக்குத் தந்தார். குழுவும் நேரத்தை விரயம் செய்யாது காட்டை விட்டு வெளியேற, முன்பை விட வேகமாக நடக்கத் தொடங்கியது. நிகோசன் அண்ணாவும், நானும் நடந்தவற்றை எல்லாம் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டு பாதுகாப்பாக மோட்டார் சைக்கிள் இருக்கும், காட்டின் வாகனம் செலுத்தக் கூடிய பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.

புளுட்டுமானோடை காடுகளை தாண்டினால் தான் மக்கள் நடமாடும் பிரதேசம் வரும். மழைச்சாரல் லேசாக விழுவதை உணரக் கூடியதாக இருந்தது. அரைமணி நேர மழை கூட ஏற்கனவே பெய்த மழையால் நீரை உறிஞ்சி வைத்திருக்கும்  காடுகளில் வெள்ளப் பெருக்கை உண்டாக்கும்.

-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0

புளுட்டுமானோடைக் குளத்தினை அடைவதற்கிடையில் 2 சிற்றோடைகளைக் கடந்தாக வேண்டும். காட்டு வெள்ளம் வரத் தொடங்கினால், எம்மால் இங்கிருந்து நகர முடியாமல் போய்விடும். தொலைபேசிக்கு சிக்னல் கூட வராது. இரவுக்குச் சாப்பிடக் கூட ஒன்றும் இல்லை. எண்ணற்ற யோசனைகளுடன் வேகமாக ஒற்றையடிப் பாதையில் பயணம் செய்து புளுட்டுமானோடைக் குளத்தினை வெற்றிகரமாக வந்தடைந்தோம். இங்கிருந்து மழை உரக்கத் தொடங்கியது.

எனது மோட்டார் சைக்கிளுக்கு மழையைக் கண்டால் கொஞ்சம் பயம். உடனடியாக எஞ்சின் தொழிற்படுவதை நிறுத்தத் தொடங்கிவிடும். அன்றைய நாளும் அதே நிலைமை தான். புளுட்டுமானோடைக் குளத்தினருகே உள்ள வாடியில் மழைக்கு ஒதுங்கினோம். எம்முடன் வந்த திருச்செல்வம் ஐயாவும், ஜெகன் அண்ணாவும் குளத்தருகில் இருந்த கோவிலில் ஒதுங்கி நின்றனர். நாம் முன்னே உள்ள வாடியில் இருப்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால் அவர்களுடன் இருந்த தொடர்பு எமக்கு இல்லாமல் போனது.

நெடு நேரமாக அவர்களைக் காணவில்லை என்பதால், சென்று பார்ப்போம் எனத் திரும்பிச் செல்லும் போது எனது மோட்டார் சைக்கிள் முழுமையாக செயலிழந்தது. அவர்களும் நாங்கள் போய் விட்டோம் என நினைத்து, எம்மைத் தேடியபடி காட்டை விட்டு வெளியேறும் வழியினை நோக்கிச் செல்லத் தொடங்கி விட்டனர்.

தெய்வாதீனமாக 10 நிமிடத்தில் எனது மோட்டார் சைக்கிளை நிகோசன் அண்ணாவின் உதவியுடன் சரி செய்துவிட்டு. வேகமாக மற்றைய இருவரும் இந்தப் பாதையால் தான் எம்மைத் தேடி சென்றிருப்பார்கள் எனக் கணித்துக் கொண்டு புறப்பட்டோம். எப்படியோ நாங்கள் போன வேகத்தில்  புளுட்டுமானோடை காட்டின் நுழை வாயிலான குமாரத்தன் கோவிலுக்கு அருகில் வைத்து அவர்களைக் கண்டு பிடித்து விட்டோம்.

-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-1024x683.jp

புளுட்டுமானோடை குளத்தினை நாம் நெருங்கும் போது, பெய்யத் தொடங்கிய அடை மழை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருந்தது. நாம் வரும் போது இருந்த பாதைகளை எம்மால் இப்பொழுது அவதானிக்க முடியவில்லை. வயல் வேறு பாதை வேறென பிரித்தறிய முடியாமல் ஏதோ ஒரு குத்துமதிப்பாக 20 Km/h எனும் வேகத்தைக் கூட எட்டமுடியாமல் பயணம் செய்து கொண்டிருந்தோம். நேரம் என்னவோ 5.15 மணி  மட்டில் தான் இருக்கும். ஆனால் எம் முன்னால் இருந்த இருட்டின் அளவு 7 மணியைத் தாண்டி இருக்கும் போல  என நினைக்கத் தூண்டியது.

6 மணி மட்டில் காட்டுப் பாதைகளைக் கடந்து, குசலானமலை அருகே வரும் போது, மீண்டும் எனது மோட்டார் சைக்கிளின் எஞ்சினில் நீர் புகுந்ததால், உடனடியாகத் தொழிற்பாட்டை நிறுத்தியது. எவ்வளவோ முயற்சி செய்தும் திரும்ப எஞ்சினைத் தொழிற்பட வைக்க முடியாமையால், அருகில் இருந்த ஓலை வேயப்பட்ட – கைவிடப்பட்ட வாடி ஒன்றினுள் வந்து ஒதுங்கி, அனைவரும் அடுத்த திட்டத்தைத் தீட்டத் தொடங்கினோம்.

வாடியில் இருந்த சிறு கயிறுகளை எல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு  பெரிய கயிறு ஒன்றை உருவாக்கினோம். அதை வைத்துக் கட்டி மோட்டார் சைக்கிளை இழுத்துக் கொண்டே வீடு வரை செல்வது தான் திட்டம். ஆனால் இந்த இடத்திலிருந்து வீடு வரையான தூரம் அண்ணளவாக 30 கிலோ மீற்றர் இருக்கும். அதிகம் யோசிக்க நேரமில்லை. கிடைத்தவற்றை வைத்து நிகோசன் அண்ணாவின் மோட்டார் சைக்கிளில் எனது மோட்டார் சைக்கிளைக் கட்டிக் கொண்டு இழுத்துக் கொண்டு போனோம்.

இலுப்படிச்சேனைச் சந்தியில் இருந்து மாவடியோடைக்கு வரும் பாதையில் பயணித்தவருக்கு மட்டும் தான் விளங்கும் இது வாகனப் போக்குவரத்துக்கு எவ்வளவு கடினமான பாதை என்று. நாம் மோட்டார் சைக்கிள்களை இணைத்துக் கட்டிய கயிறு மிகவும் மெல்லியது. எனவே அதிகமான அழுத்தம் கொடுத்தால் அறுந்துவிடும்.

அப்படி இரண்டு தடவைகள் அறுந்து விட்டன. அடுத்த தடவை அறுவதற்கு இடம் கொடுக்காது, பள்ளங்கள் வரும் வேளையில் கயிறுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் இருக்க நான் காலாலே உந்தி இழுப்பதற்கு இலகுவான வகையில் விசையை பிரயோகிக்கத் தொடங்கினேன். இந்த முறை எமக்கு மிகவும் கை கொடுத்ததெனச் சொல்லலாம்.

அநேகமாக இந்தப் பாதை ஒவ்வொரு 5 மீட்டருக்கு ஒரு முறை பெரிய பள்ளத்தைக் கொண்டிருக்கும். அனைத்தும் இந்த கனரக வாகனங்களால் ஏற்பட்ட பள்ளங்கள் தான் என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட  முனைகிறேன். அதனால் நான் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு வாத்து போல வீதியில் நீந்திக்கொண்டு போனேன். இந்த நாள் வாழ்நாளில் ஒரு மறக்க முடியாத ஒரு நாள் ஆகிப் போனதுக்கான முக்கிய காரணங்களில் இந்த வாத்து நீச்சலும் ஒன்று எனலாம்.

-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0

அப்படியே ஒரு மாதிரியாக இலுப்படிச்சேனை வரை வந்து விட்டோம். வழிகாட்டியாக வந்த வடிவேல் அய்யாவின் மருமகளின் கடையில் பிஸ்கேட் உம் வாங்கிச் சாப்பிட்டு, தேநீரும் அருந்திவிட்டு செங்கலடி வரை மோட்டார் சைக்கிளை இழுத்துக்கொண்டே போய், நண்பன் ரேணுவின் வீட்டில் நாளை காலை வந்து எடுக்கிறேன் எனக் கூறிவிட்டு நான் வெளியே வரவும், நிகோசன் அண்ணா வடிவேல் ஐயாவை அவரது வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டு வரவும் நேரம் சரியாக இருந்தது.

ஏற்கனவே நேரம் 8 மணியைத் தட்டிக் கொண்டு இருந்தது, திருச்செல்வம் ஐயாவிடமும் , ஜெகன் அண்ணாவிடமும் விடைபெற்றுக்கொண்டு இரவுச் சாப்பாடாக கொத்துரொட்டிப் பார்சலும் கட்டிக்கொண்டு 8.30 மணி அளவில் நான் மட்டக்களப்பில் உள்ள எனது வீட்டினை வந்தடைந்தேன்.

நிகோசன் அண்ணா இன்னும் 39 கிலோமீற்றர் பயணிக்க வேண்டி இருந்தமையால், அவரும் தாமதிக்காமல் கிளம்பி விட்டார். அன்றைய நாளின் கதைகளை அம்மாவிடம் கூறி, சாப்பிட்டு முடிக்கும் போது நேரம் இரவு 10 மணியைத் தாண்டியிருந்தது. இடரின் போதும் என் கூடவே இருந்த நண்பன்  நிகோசன் அண்ணாவையும், குழுவினரையும் மறக்கவே முடியாது.

பாதுகாப்பாக வீடுவரை வந்ததையிட்டு இருந்த மகிழ்ச்சியில் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போனது. வீட்டிலேயே கிணற்றுத் தவளை போல இருப்பவர்களுக்கு இப்படி ஒரு பயண அனுபவத்தை மற்றவர்களுடன் சொல்லி மகிழக்கூடக் கதை இருக்காது. இந்த வயது கடந்தால் எந்த வயதில் செல்ல இயலும்? அடுத்த பயணத்தில் சந்திக்கிறேன்.

முற்றும்.

நன்றி.

-மட்டுநகர் திவா

 

https://www.ilakku.org/?p=52670

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.